<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d6955529389241309188\x26blogName\x3d%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86.%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://thozharmaniyarasan.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com/\x26vt\x3d-8408640130511538487', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

"குறுவை நெல் கொள்முதல் ஈரப்பதம் 20% ஆக்க வேண்டும்! சிப்பத்திற்கு 40 ரூபாய் கையூட்டு வாங்குவதைத் தடை செய்ய வேண்டும்! "---- முதலமைச்சருக்குக் காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் கோரிக்கை!

Friday, September 22, 2023


குறுவை நெல் கொள்முதல் ஈரப்பதம் 20% ஆக்க வேண்டும்!

சிப்பத்திற்கு 40 ரூபாய் கையூட்டு வாங்குவதைத் தடை செய்ய வேண்டும்!
=============================================================
முதலமைச்சருக்குக் காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர்
பெ. மணியரசன் கோரிக்கை!


நெல்லை உற்பத்தி செய்வதிலிருந்து அதை விற்பது வரை, ஒரு வேண்டாத வேலையை உழவர்கள் செய்வது போலவே இந்திய அரசும் தமிழ்நாடு அரசும் நடந்து கொள்கின்றன. நெல்லுக்கு இலாப விலை நிர்ணயிக்கக் கூடாது, கட்டுப்படியான விலைதான் நிர்ணயிக்க வேண்டும் என்று இந்திய அரசு வரம்பு வைத்திருக்கிறது. அந்தக் கட்டுபடியான விலையையும் வேளாண் அறிஞர் எம்.எஸ். சுவாமிநாதன் வகுத்தளித்த விலை நிர்ணய அடிப்படையில் இந்திய அரசு தீர்மானிப்பதில்லை. இதனால் தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் பொருள்களின் சந்தை விலைஉயர்வு விகிதத்தற்குச் சமமாக நெல்விலை உயர்த்தப்படுவதில்லை.

அடிமாட்டு விலைக்கு நிரணயிக்கப்பட்ட நெல்லையும் ஆட்சியாளர்கள் உரிய அக்கறையுடன், நேர்மையாக, இலஞ்சஊழல் இல்லாமல் கொள்முதல் செய்வதில்லை.
நேரடி நெல் கொள்முதல் நிலையைங்கள் சிலவற்றைத் தஞ்சை, திருவையாறு பூதலூர் ஒன்றியங்களில் காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் நான், காவிரி உரிமைமீட்புக்குழு பொருளாளர் த. மணிமொழியன், செயற்குழு உறுப்பினர்கள் துரை. இரமேசு, பொறியாளர் தி. செந்தில்வேலன், பூதலுர் சுந்தரவடிவேலு, பா. தட்சிணாமூர்த்தி ஆகியோர் அண்மையில் பார்வையிட்டோம். நெல்லை விற்பனை செய்த உழவர்கள், கொள்முதல் செய்யும் ஊழியர்கள், கொள்முதல் நிலையத்திலேயே வந்து நெல்லை வாங்கிச் செல்லும் தனியார் வணிகர்கள் என்று பலரையும் சந்தித்தோம்.

ஈரப்பதம் 20 % என மாற்றுக!
==========================
பதினேழு விழுக்காடுவரை ஈரப்பதம் உள்ள நெல்லை மட்டுமே கொள்முதல் செய்கிறார்கள். அங்கு வாங்க மறுத்து குவிக்கப்பட்டிருந்த நெல்லை அள்ளிப் பார்த்தோம். ஈரநெல்லாக இல்லை. கோடைக்கால சம்பா நெல்போல்தான் இருந்தது. ஆனால், அதில் 19 விழுக்காடு ஈரப்பதம் இருப்பதாக வாங்க மறுத்துள்ளனர். குறுவை நெல்லில் கொஞ்சம் கூடுதலாக ஈரப்பதம் இருப்பது இயற்கைதான். அதனால் ஆட்சியாளர்கள் குறுவை நெல் அறுவடை முடியும் தருவாயில் 20 விழுக்காடு வரை ஈரப்பதம் உள்ள நெல்லைக் கொள்முதல் செய்யத் தளர்வு ஏற்படுத்துவது கடந்த ஆண்டுகளில் நடந்து வந்துள்ளது. அத் தளர்வை இப்போதே ஏற்படுத்தி, 20 விழுக்காடு வரை ஈரப்பதம் உள்ள நெல்லைக் கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசும் இந்திய அரசும் உதவ வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தொடரும் துயர வாழ்க்கையில் உழலும் உழவர்களுக்கு உழவர்கள் கை கொடுத்து உதவியதாக இருக்கும்.

நெல் விற்கக் கையூட்டு
======================
அடுத்து ஆட்சியாளர்கள் – அதிகாரிகள் ஆகியோரின் மறைமுக அனுமதியோடு நடக்கும் ஓர் அநீதி, 40 கிலோ கொண்ட ஒரு சிப்பம் நெல்லை விற்றால் அதற்கு உழவர்கள் நுகர்பொருள் வாணிபக் கழகத்தினர்க்கு 40 ரூபாய் இலஞ்சம் கொடுக்க வேண்டும் என்பதாகும்.

இவ்வாறு ஏன் வாங்குகிறீர்கள் என்று ஊழியர்களிடம் கேட்டபோது அவர்கள், மூட்டை தூக்கும் தொழிலாளிக்கு ஒரு மூட்டை நெல்லுக்கு நிர்ணயித்துள்ள கூலி குறைவு. வெறும் 10 ரூபாய்தான். அதை ஈடுகட்டினால்தான் தொழிலாளிகள் வருவார்கள். அடுத்து கொள்முதல் நிலையத்திற்கு நெல் மூட்டைகளை ஏற்ற வரும் தனியார் சரக்குந்துகளுக்கு ஒரு வண்டிக்கு நான்காயிரம் ரூபாய் நாங்கள் கொடுத்தால்தான் அவர்கள் மூட்டைகளை ஏற்றுவர்கள். அவர்களின் சரக்குந்து, நெல்மூட்டைகளை இறக்கும் சேமிப்புக் கிடங்குகளில், மூன்று நாள்வரை கூட காத்திருக்க வேண்டி வரும். ஓட்டுநர் உள்ளிட்டோர் உணவுச் செலவு கூடுதல் சம்பளம் போன்றவற்றை நாங்கள் கொடுத்தால்தான் சரங்குந்துகள் எங்கள் கொள்முதல் நிலையத்திற்கு வந்து ஏற்றிச் செல்லும். நாங்கள்தான் சரக்குந்துகளை ஏற்பாடு செய்ய வேண்டியதிருக்கிறது என்றார்கள் ஊழியர்கள்.

மேற்கண்டவாறு ஊழியர்கள் சந்திக்கும் சிக்கல்களுக்குத் தீர்வுகண்டு இலஞ்ச ஊழல் இல்லாத கொள்முதல் நிர்வாகத்தைத் தமிழ்நாடு அரசு உருவாக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தனியார் வேட்டை
==================
அரசுக் கொள்முதல் நிலையத்தில் மேற்கண்ட சுமைகளச் சுமக்காமல், காலதாமதம் ஆகாமல் நெல்லை விற்பதற்கு உழவர்கள் தனியார் வணிகர்களை நாடுகிறார்கள். தனியார் வணிகர்களும் கொள்முதல் நிலையங்களுக்கே வந்து அரசு நிர்ணயித்த விலையைவிடக் குறைவாகக் கொடுத்து வாங்கிச் செல்கிறார்கள். 1 மூட்டை நெல்லின் எடை 63 கிலோ என்று கூடுதலாக நிர்ணயித்து அவர்கள் வாங்கிச் செல்கிறார்கள். உடனடிப் பணத்தேவை, நெல்லைச் சேமிக்க முடியாத நிலை ஆகியவை காரணமாக அரசு விலைக்கும் குறைவாக – அதிக எடையுடன் நெல்லை விவசாயிகள் விற்கிறார்கள். அப்படி நெல்லை வாங்குவோர் பிளாஸ்டிக் நார் சாக்குகளில் நெல் பிடிக்கிறார்கள். சணல் சாக்குகளைத்தான் பயன்படுத்த வேண்டும்.

தலைமை அமைச்சர் நரேந்திர மோடி அவர்களும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களும் உலகநாடுகளுக்கெல்லாம் சென்று பெரும்பெருந் தொழில் முதலாளிகளை இங்கு அழைத்து வந்து அவர்கள் தொழில் தொடங்க பல்வேறு சலுகைகள் செய்கிறார்கள். உயிர்காக்கும் உணவு உற்பத்தி செய்யும் உழவர்களுக்கு அவர்கள் நீதிவழங்கக் கூடாதா? உழவர்களையும் கவனியுங்கள்!

நெல் கொள்முதல் நிலையங்கள்
=================================
நெல் உற்பத்தி செய்யும் பல்வேறு கிராமங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் இல்லை. இருக்கும் இடங்களிலும் இரவல் முறையில், பல்வேறு ஊர்களில் சேமிப்புக் கிடங்குகளிலோ மற்ற இடங்களிலோ இருக்கின்றன. உழவர்கள் நெல் கொள்முதல் நிலையம் கோரும் ஊர்களில், 40 சென்ட் நிலம் வாங்கித் தாருங்கள் என்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் உழவர்களையே கேட்கிறார்கள். நிலத்தின் விலை மிகமிக உயரத்தில் இருக்கிறது. உழவர்கள் வாங்கித்தர வாய்ப்பில்லை. அப்படி உழவர்களிடம் அரசு கேட்பதும் முறைஇல்லை. அரசு புறம்போக்கு நிலங்கள் உள்ள பூதலூர், கோயில்பத்து போன்ற கிராமங்களில் கூட நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்குச் சொந்தமாக கொள்முதல் நிலையங்கள் இல்லை என்பது வேதனை அளிக்கும் செய்தியாகும்.

தமிழ்நாடு அரசு நெல்கொள்முதல் செய்யவில்லை. இந்திய அரசுக்குக் கொள்முதல் செய்யும் முகவராக இருக்கிறது என்பதைக் காரணம் காட்டி, தமிழ்நாடு அரசு மேற்படி குறைகளைக் களைய நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடியாது. வெறுந் தரகர் அல்ல தமிழ்நாடு அரசு! மக்கள் குறைகளைக் களைய வேண்டிய பொறுப்பு தமிழ்நாடு அரசுக்கு இருக்கிறது. எனவே, குறைகளைக் களைய நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைக் கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

......

=============================================================
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
==========================
பேச: 98419 49462, 94432 74002
==========================
Fb.com/KaveriUrimai
www.kaveriurimai.com
==========================

Labels: , ,

"காவிரி உரிமையை திமுகவும் அதிமுகவும் காக்காது! மக்கள் களம் இறங்கி மீட்க வேண்டும்!" --- "ஐயா" பெ. மணியரசன், ஒருங்கிணைப்பாளர், காவிரி உரிமை மீட்புக் குழு.

Thursday, September 14, 2023


காவிரி உரிமையை திமுகவும் அதிமுகவும் காக்காது!

மக்கள் களம் இறங்கி மீட்க வேண்டும்!

========================================
"ஐயா" பெ. மணியரசன்,
ஒருங்கிணைப்பாளர், காவிரி உரிமை மீட்புக் குழு.
========================================

கர்நாடகம் சட்டவிரோதமாக தமிழ்நாட்டுக்குரிய காவிரி நீரைத் தடுத்து வைத்துக் கொண்டதால், மூன்றரை இலட்சம் ஏக்கர் குறுவைப் பயிர் காய்ந்து அழிந்துவிட்டது. மிச்சம் உள்ள இரண்டு இலட்சம் குறுவைப பயிரைப் பாதுகாக்க வேண்டியுள்ளது. அத்துடன் 12 இலட்சம் ஏக்கரில் ஒரு போக சம்பா சாகுபடி தொடங்க வேண்டியுள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 44 அடிக்குக் கீழே வந்துவிட்டது. கர்நாடக அரசோ கொஞ்ச நஞ்சம் திறந்துவிட்ட தண்ணீரையும் முற்றிலுமாக மதகை மூடித் தடுத்துவிட்டது.

இந்நிலையில், 12.9.2023 அன்று கூடிய காவிரி ஒழுங்காற்றுக் குழு ஒரு நொடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் அடுத்த 15 நாட்களுக்கு தொடர்ந்து காவிரியில் கர்நாடகம் தமிழ்நாட்டுக்குத் திறந்துவிட வேண்டும் என்று கட்டளை இட்டுள்ளது. இதனை செயல்படுத்த முடியாது என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவும், நீர்வளத்துறை அமைச்சர் டி.கே. சிவகுமாரும் வெளிப்படையாக செய்தியாளர்களிடம் 13.9.2023 அன்று அறிவித்துவிட்டார்கள்.

இது குறித்து தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களிடம் 13.9.2023 அன்று செய்தியாளர்கள் கேட்டபோது, உச்ச நீதிமன்றத்தில் 21.9.2023 அன்று முறையிட்டு உரிய தண்ணீர் கோருவோம் என்று கூறியுள்ளார். உச்ச நீதிமன்றமோ, காயும் பயிரின் உயிர்காக்கும் அவசரத் தேவையைக் கருத்தில் கொள்ளாமல், தமிழ்நாடு அரசு 12.8.2023 அன்று தாக்கல் செய்த காவிரி நீர் கோரும் மனுவை 25.8.2023 அன்று விசாரணைக்கு எடுத்து, முடிவேதும் சொல்லாமல் வாய்தா போட்டுக் கொண்டே வருகிறது. 39 நாள் கழித்து 21.9.2023 அன்று தீர்ப்பு வருமா என்பது ஐயம்.

இப்பொழுதும், உச்ச நீதிமன்றத்தை எதிர்பார்த்துக் காத்திருப்போம் என்று தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் சொல்வது, வேளாண்மைக்கும் குடிநீருக்கும் காவிரியை நம்பியுள்ள மூன்றரைக் கோடி மக்களை வஞ்சிக்கும் செயலாகும்.

கர்நாடகத்தில், கடந்த ஆகஸ்ட்டில் இருந்து இன்றுவரை இரண்டு முறை அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ஆட்சியாளர்கள் கூட்டி, தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டுத் தண்ணீர்கூடத் தரக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்கள். 13.9.2023 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, “தமிழ்நாட்டின் திமுகவோடு காங்கிரஸ் கட்சி அரசியல் கூட்டணி சேர்ந்திருப்பது வேறு செய்தி. காவிரி நீர் சிக்கலில், கூட்டணி அரசியல் தலையிட அனுமதிக்க மாட்டோம். தாயகம், தண்ணீர், மொழி, எல்லை ஆகியவற்றில் அரசியல் மோதல் எதுவும் கர்நாடகத்துக்குள் எப்போதும் வராது. நாங்கள் ஒன்றுபட்டு இருக்கிறோம். தலைமை அமைச்சர் நரேந்திர மோடியைச் சந்தித்து எங்களது நிலைபாட்டை வலியுறுத்துவோம்” என்று கூறினார்.

செய்தியாளர்கள் இதைச் சுட்டிக்காட்டி தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டுவீர்களா என்று துரைமுருகனிடம் கேட்டபோது, இப்போது அதெல்லாம் தேவையில்லை. 21.9.2023 அன்று உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு அதுபற்றி யோசிக்கலாம் என்று கூறியுள்ளார்.

மேட்டூர் அணையில் 13.9.2023-ஆம் நாள் அளவின்படி 14.27 டிஎம்சி தண்ணீர்தான் உள்ளது. மேட்டூர் அணையில் நிரந்தரமாக தேக்கி வைக்கப்பட வேண்டிய நீர் இருப்பு குறைந்தபட்சம் 7 டிஎம்சியாவது இருக்க வேண்டும். கர்நாடகம் தண்ணீர் திறந்துவிடுவதை முற்றிலும் நிறுத்திவிட்ட இந்நிலை தொடர்ந்தால், இன்னும் சில நாட்களில் மேட்டூர் அணையை மூடவேண்டி வரும். அதன்பிறகு குறுவை பாதிப்பு மட்டும் அல்ல, ஒரு போக சம்பா, தாளடி முதலிய நெல் சாகுபடிகளும், கரும்பு, வாழை, பருத்தி, பயறு வகைகள் போன்ற சாகுபடிகளும் முற்றிலும் பாதிக்கப்படும். அடுத்து, 22 மாவட்டங்களில் குடிநீர்ச் சிக்கலும் ஏற்படும்.

இவ்வளவு அபாயம் இருக்கும் பொழுது, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அசட்டையாக, அலட்சியமாக காவிரிச் சிக்கல் குறித்து பேசிக் கொண்டுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களோ காவிரிச் சிக்கலைப் பேசுவதைத் தவிர்த்து ஒதுங்கிக் கொள்கிறார்.

இதுவரை ஜூன் 1-லிருந்து கர்நாடகம் தமிழ்நாட்டிற்கு 99 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட்டிருக்க வேண்டும். ஆனால், அது திறந்துவிட்டிருப்பதோ 37 டிஎம்சி மட்டுமே. இவ்வளவு அவலம், சோகம் நடந்து கொண்டிருக்கும்போது, தமிழ்நாடு முதலமைச்சர், நீர்வளத்துறை அமைச்சர் மனங்களில் கொஞ்சம் கூட பதற்றம் இல்லை. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அன்றாடம் அனைத்திந்திய அரசியலை அலசிக் கொண்டிருக்கிறார். இண்டியா கூட்டணியின் பிரச்சார பீரங்கியாகப் பேசி வருகிறார். தமிழ்நாட்டிற்குரிய காவிரி நீர்பற்றிப் பேசினால், அனைத்திந்தியத் தலைவராக வளர்த்துவரும் தனது பிம்பம் பாதிக்கப்படுமோ என்று அச்சப்படுகிறார் போலும். அண்மையில் தஞ்சை - திருவாரூர் - நாகை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் பல்வேறு நிகழ்வுகளில் 2 நாள் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் காவிரி தண்ணீர் பற்றி எதுவும் பேசவில்லை.

ஆனால் இண்டியா கூட்டணிக்குத் தலைமை தாங்கும் காங்கிரசின் கர்நாடக ஆட்சி, அரசியல் கூட்டணி பற்றிக் கவலைப்படபாமல், சட்டப்படியான தமிழ்நாட்டுக்குரிய தண்ணீரைத் தடுத்து கன்னட இனவாத அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறது. 12.9.2023 அன்று ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அதன் தலைவர் வினீத் குப்தா ஒரு நொடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் கர்நாடகம் தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறோம் என்று கூறியுள்ளார். ”இது பரிந்துரை (recommendation) அல்ல, கட்டளை (direction)” என்று தெளிவாகக் கூறியுள்ளார் (The Hindu, 13.9.2023). காவிரி ஒழுங்காற்றுக் குழு கூறியுள்ளது கட்டளை அல்ல, வெறும் பரிந்துரைதான் என்று 13.9.2023 அன்று திரித்துப் பேசியிருக்கிறார் கர்நாடக காங்கிரஸ் முதலமைச்சர். இதற்குக் கூட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டாமா?

உச்ச நீதிமன்றத்தை மட்டுமே நாடுவோம் என்று திமுக ஆட்சியாளர்கள் அடம்பிடிப்பதன் சூட்சுமம் என்ன? உச்ச நீதிமன்றம் 16.2.2018 அன்று வழங்கிய காவிரிச் வழக்கு இறுதித் தீர்ப்பில், காவிரி மேலாண்மை ஆணையத்துக்குள்ள அதிகாரத்தைக் கூறிவிட்டு, காவிரி மேலாண்மை ஆணையத்தின் கட்டளையை, தொடர்புடைய ஏதாவது ஒரு மாநிலம் செயல்படுத்தவில்லை என்றால், அதைச் செயல்படுத்துமாறு ஆணையம் இந்திய அரசைக் கோர வேண்டும், இந்திய அரசு அதைச் செயல்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளது. (உச்ச நீதிமன்றத் தீர்ப்பு செயலாக்கப் பகுதி VIII) காவிரி ஆணையத்தின் தலைவராக உள்ள சௌமித்ர குமார் ஹல்தர் நடுநிலை தவறிய மனிதர் என்று காவிரி உரிமை மீட்புக் குழு பலதடவை குற்றம் சாட்டியுள்ளது. அவர் தனது உத்தரவைக் கர்நாடகம் மீறும்போது அதைச் செயல்படுத்திட இந்திய அரசின் அதிகாரத்தை நாட வேண்டும். ஆனால் அவர் நாட மாட்டார். அதே வேளை, தமிழ்நாடு முதலமைச்சரும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்துவிட இந்திய அரசு போர்க்கால அடிப்படையில் தலையிட வேண்டும் என்று உரியவாறு ஏன் வலியுறுத்தக் கூடாது? பொது மக்கள் மனு கொடுப்பது போல் தலைமை அமைச்சர் நரேந்திர மோடியிடம் தமிழ்நாடு முதலமைச்சரும் நீர்வளத்துறை அமைச்சரும் சம்பிரதாயத்துக்கு மனு கொடுத்து விட்டு ஒதுங்கிக் கொண்டது ஏன்?

நரேந்திர மோடி இதில் தலையிடாமல் ஒதுங்கிக் கொண்டிருக்கும் போது, தமிழ்நாட்டில் அனைத்துக்கட்சிக் கூட்டத்தை நடத்தி, அதில் வலிமையான தீர்மானம் நிறைவேற்றி, தலைமை அமைச்சர் தலையிட வேண்டும் என்று கோரியிருக்கவேண்டும். அனைத்துக் கட்சி குழுவினரை புதுதில்லி அழைத்துச் சென்று தலைமை அமைச்சரைச் சந்தித்துப் பேசியிருக்க வேண்டும். இவற்றையெல்லாம் செய்யவில்லையே ஏன்? தண்ணீரைத் திறந்துவிடாமல் வைத்திருக்கும் கர்நாடக முதலமைச்சர், தில்லி சென்று தலைமை அமைச்சரைச் சந்திப்போம் என்கிறார்.

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, 13.9.2023 அன்று பெங்களூரில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது பருவமழை பொய்த்து கர்நாட அணைகளில் போதிய தண்ணீர் இல்லாத போது அந்நிலையில் காவிரி நீரை எப்படிப் பகிர்ந்து கொள்வது என்பதற்கு வழிகாட்டல் நெறிமுறைகள் வகுக்கப்படவில்லை என்று தவறான செய்தியை வெளியிட்டார். அதற்குக் கூட தமிழ்நாடு முதலமைச்சர் பதில் சொல்லவில்லை. காவிரிச் சிக்கலில் உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்பில் வால்யூம் V பக்கம் 212 (Vol. V Page 212 Point 28) பின்வருமாறு கூறுகிறது:

“பருவமழை தவறி பற்றாக்குறை ஏற்படும் ஆண்டில், வழக்கமான நீர்ப்பெருக்கம் குறைந்து போயிருந்தால் அதை விகிதாச்சார அடிப்படையில் கேரளம், கர்நாடகம், தமிழ்நாடு, மற்றும் புதுச்சேரி ஒன்றியப் பகுதி ஆகியவற்றுக்கு காவிரி ஒழுங்கு முறை ஆணையம் பகிர்ந்து தர வேண்டும்”.

அதாவது மேற்படி நான்கு மாநிலங்களிலும், பல வழிகளில், ஓர் ஆண்டின் சராசரி நீர்ப்பெருக்கம் 740 டிஎம்சி என்று காவிரித் தீர்ப்பாயம் கூறியதை உச்ச நீதிமன்றம் அப்படியே ஏற்றுக்கொண்டது. இதில் கர்நாடகம், தமிழ்நாடு உள்ளிட்ட நான்கு மாநிலங்களின் சராசரி நீர்ப்பெருக்கம், முதலியவை குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த சராசரியை விட கர்நாடக நீர்ப்பெருக்கம் குறைந்திருந்தால், அது எத்தனை விழுக்காட்டு விகிதம் குறைந்திருக்கிதோ அத்தனை விழுக்காட்டு விகிதத்திற்கு ஏற்ப தமிழ்நாட்டுக்குத் திறந்து விட வேண்டிய தண்ணீரைக் குறைத்துக் கொண்டு திறந்துவிட வேண்டும். இவ்வாறு உச்சநீதிமன்றத் தீர்ப்பு வழிகாட்டியிருக்கும்போது பற்றாக்குறை கால பகிர்வு விகிதம் தீர்ப்பில் சொல்லப்படவில்லை என்று முற்றிலும் தவறான செய்தியை கர்நாடக முதல்வர் சொல்கிறார். அதற்குக் கூட தமிழ்நாட்டு முதல்வர் ஏன் எதிர்வினை ஆற்றவில்லை?

தமிழ்நாட்டு மக்களை மயக்கி, வசப்படுத்திக் கொள்ளலாம் என்ற நிலையில் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக முன்னாள் ஆளுங்கட்சியும் இந்நாள் எதிர்க்கட்சியுமான அஇஅதிமுக காவிரிச் சிக்கலில் பெருமளவுக்கு தமிழ்நாட்டு உழவர்களும், மக்களும் வஞ்சிக்கப்பட்டிருக்கும்போது அதை எதிர்த்து ஏன் போராடவில்லை? காவிரியை மையப்படுத்தி கடுமையான விவாதங்களைக் கூட அரசியல் அரங்கில் அஇஅதிமுக எழுப்பவில்லையே!

தமிழ்நாட்டு மக்களும் உழவர்களும் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியும், ஆண்ட கட்சியும் தமிழ்நாட்டு மக்களை எளிதாக வசப்படுத்திக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றன. கர்நாடகத்திலோ, போதிய தண்ணீர் அவர்களது அணைகளில் இருந்தபோதும், மிகமிக அற்ப சொற்பமாக 5 ஆயிரம் கன அடிதண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று ஆணையமும், ஒழுங்காற்றுக் குழுவும் சொன்னதை எதிர்த்து உழவர்களும், மக்களும் பரவலாக பற்பல வடிவங்களில் போராடி வருகிறார்கள். நாமோ சிற்சில அடையாளப் போராட்டங்களை அங்கங்கே நடத்துவதோடு நின்று கொள்கிறோம். பெரும் பெரும் அரசியல் கட்சிகள் இவற்றைக் கையிலெடுப்பதில்லை.

காவிரியில் நாம் இழந்திருப்பது ஏராளம். 1984 வரை ஓராண்டுக்கு சராசரியாக 362 டிஎம்சி தண்ணீர் கர்நாடகத்திலிருந்து தமிழ்நாடு பெற்று வந்தது என்று பொதுப்பணித்துறையின் அதிகாரப்பூர்வ ஆவணம் கூறுகிறது. இப்போது வெறும் 177.25 டிஎம்சி தண்ணீரையும் திறந்துவிட மறுக்கிறார்கள். ஏன்? தமிழ்நாட்டு அரசியலின் தகுதியை கன்னடர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்கள்தான் சரியாகப் புரிந்து கொள்ளாமல் இருக்கிறோம். ஆட்சியாளர்களையும், ஆகப் பெரும் கட்சிகளையும் எதிர்பார்க்காமல் நம்முடைய வாழ்வுரிமை, வேளாண்மை, குடிநீர் ஆகியவற்றைக் காப்பாற்ற நாம் போராட வேண்டும். பெருந்திரள் களப் போராட்டங்கள் தமிழ்நாடெங்கும் பரவினால் ஒழிய கர்நாடகமும் இந்திய அரசும் நீதிக்குத் தலைவணங்காது. நாம் நமது வாழ்வுரிமையைக் காக்கக் களம் இறங்க வேண்டும்.

==========================
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
==========================
பேச: 98419 49462, 94432 74002
==========================
Fb.com/KaveriUrimai
www.kaveriurimai.com
==========================

Labels: , , ,

"நீதித்துறை - காவல்துறையின் நீட்சியல்ல! - "ஐயா" பெ. மணியரசன் தலைவர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்

Saturday, September 2, 2023


 நீதித்துறை - காவல்துறையின் நீட்சியல்ல!

- "ஐயா" பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த் தேசியப் பேரியக்கம் 
============================================================

இந்தியாவில், தன்னாட்சி அதிகாரம் பறிக்கப்படாமல் இன்றும் ஓரளவு செயல்படுவது நீதித்துறை மட்டுமே! இதற்கு முதன்மையான காரணங்கள், உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகளின் பணியமர்த்தம் உச்ச நீதிமன்ற நீதிபதிகளால் – அதன் கொலிஜியத்தால் இறுதி செய்யப்படும் வாய்ப்பு இருப்பதும், இந்நீதிபதிகளின் பணிநீக்கம், நாடாளுமன்ற வாக்கெடுப்பால் முடிவு செய்யப்படுவதும்தான்!

கொலிஜியம் என்பது உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையில் அவருடன் சேர்த்து ஐந்து உச்சநீதிமன்ற நீதிபதிகளைக் கொண்டது.
உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு மட்டுமே உண்டு. நாடாளு மன்றத்தின் இரு அவைகளிலும் தனித்தனியே ஒழுங்கு நடவடிக்கைத் தீர்மானம் நிறைவேற வேண்டும்.

ஒவ்வொரு அவையின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இரு பங்கினர்க்குக் குறையாமல் அவையில் பங்கேற்று வாக்களிக்க வேண்டும். அத் தீர்மானம் ஒவ்வொரு அவையிலும் பெரும்பான்மை பெற வேண்டும்.

மாவட்டங்களில் உள்ள கீழமை நீதிமன்றங்களின் நீதிபதிகளை அந்தந்த மாநில உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியின் பரிந்துரையுடன் மாநில அரசு (ஆளுநர்) அமர்த்த வேண்டும்.
இவ்வாறான நிபந்தனைகள் இருப்பதால் ஓரளவு தற்சார்புடன் நீதித்துறையால் செயல்பட முடியும்.

உச்ச நீதிமன்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் பணியமர்த்தம் குடியரசுத் தலைவரால் செய்யப்பட வேண்டும். இதனால் இந்நீதிபதிகள் தேர்வில் இந்திய அமைச்சரவையால் உச்ச நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்க முடிகிறது. நீதிபதிகள் தேர்வில் கொலிஜியத்திற்கும் இந்திய ஆளுங்கட்சியின் அமைச்சரவைக்கும் இடையே சமரசம் ஏற்பட்டு, அமைச்சரவை கூறும் நபர்களையும் நீதிபதிகளாக அமர்த்த வேண்டியுள்ளது.

அதுபோல் இந்திய அமைச்சரவையால், நடைமுறையில் ஆளுங்கட்சியால் பரிந்துரைக்கப்படும் நீதிபதிகள் கொலிஜியத்தில் இடம் பெறும் போது, இந்திய ஆட்சியாளர்களின் பரிந்துரையால் நீதிபதிகள் ஆவோர் எண்ணிக்கையும் கணிசமாக இருக்கும். அந்த வழியில் நீதிபதிகள் ஆனோர் விருப்பமும் ஆட்சியாளர்களின் விருப்பமும் ஒன்றாக இருக்கிறது. நீதிபதிகள் பணி அமர்த்தலில் ஆட்சியாளர்கள் விருப்பமே மேலோங்கி வருகிறது.

உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் ஆகியவற்றின் தன்னாட்சியைப் பறித்து, நிதிபதிகளை அமர்த்தும் அதிகாரத்தை நாடாளுமன்றத்திற்கு உட்பட்டதாக மாற்றிட பாசக ஆட்சி முயன்று வருகிறது.
இந்திய அரசு என்பது சாரத்தில் ஆரிய பிராமண-ஆரிய வைசிய –இந்தி இன ஆதிக்க அரசு! இந்த வர்ண-வர்க்கப் பிரிவுகளுக்கான பெருங்கட்சிகள் காங்கிரசு மற்றும் பாசக!
இப்பொழுது உச்ச நீதிமன்றத்தில் சற்றொப்ப 90 விழுக்காட்டினர் பிராமண வகுப்பைச் சேர்ந்த நீதிபதிகள் என்கின்றனர் விவரமறிந்தோர். எனவே, உயர்நீதிமன்ற நீதிபதிகள் பணி அமர்தத்திலும் இந்தத் தாக்கம் இருக்கிறது.

இந்த நிலையிலும், ஒப்பீட்டளவில் ஆட்சியாளர்களின் கைப்பாவையாக முழுதும் மாறிவிடாத் துறையாக நீதித்துறை இருக்கிறது. தேர்தல் ஆணையம் போன்றவை தன்னாட்சி அமைப்புகளாக இருந்தாலும், அதன் ஆணையர்களை அமர்த்துவது இந்திய அமைச்சரவை என்பதால், அவை இந்திய ஆளுங்கட்சியின் கைப்பவையாக மாறிவிட்டது.

கீழமை நீதிமன்றங்களும் காவல் துறையும்
======================================

நீதித்துறையில் தற்சார்புத் தன்னாட்சி ஒப்பீட்டளவில் கூடுதலாக இருந்தாலும், கீழமை நீதிமன்றங்கள் – மாவட்ட அமர்வு மற்றும் குற்றவியல் – நடுவர் நீதிமன்றங்கள் காவல் துறையின் கைப்பாவைபோல் ஆகிவிடுவது பெருந்துயரமாக உள்ளது. ஒரு குற்றவியல் வழக்கை இருபது ஆண்டுகளுக்குக் கூட முடிக்காமல் இந் நடுவர் நீதிமன்றங்கள், அமர்வு நீதிமன்றங்கள் நடத்திக் கொண்டுள்ளன.

வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் காவல்துறையினர் பின்னர் அவ்வழக்கைக் கண்டுகொள்வதே இல்லை. அரசியல் கட்சிகள், மக்கள் இயக்கங்கள் நடத்தும் சனநாயகப் போராட்டங்களில் பங்குபெறுவோர் மீது வழக்குப் பதிவு செய்து, கைது செய்து சிறையில் அடைக்கின்றனர். அவர்கள் பிணையில் வெளி வருகின்றனர்.

பல ஆண்டுகளாக வாய்தாக்களுக்காக நீதிமன்றம் போய்க் கொண்டிருக்கிறார்கள். வழக்கு விசாரணை ½ சென்டிமீட்டர் கூட நகராது.
காரணம் என்ன? காவல் துறையினர் குற்ற அறிக்கை (charge sheet) தயாரிப்பதற்கு எல்லையற்ற காலம் எடுத்துக் கொள்வது.

குற்ற அறிக்கை தாக்கல் செய்த பின்னர், விசாரணைக்கு வராமலிருப்பது. குறிப்பாக வழக்குப் பதிவு செய்த காவல் அதிகாரி இடமாற்றம் அல்லது பதவி உயர்வு பெற்று வேறு காவல்நிலையங்களில் பணியில் சேர்ந்திருப்பார்.

அவர் பதிவு செய்த வழக்கில் சாட்சியம் அளிக்க நீதிமன்றம் அழைத்தாலும் அவர் வரமாட்டார்.
பத்து வாய்தாவுக்கு அவர் வரவில்லை என்றாலும் அவர்மீது பிடி ஆணை (வாரண்ட்) போடாது நீதிமன்றம்! குற்றம் சாட்டப்பட்டவர் ஒவ்வொரு வாய்தாவிற்கும் சென்று கூண்டில் ஏறி நின்று, நீதிபதிக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு வந்துவிட வேண்டும்.

அவர் போக முடியவில்லை என்றால் அவருக்கான வழக்கறிஞர் போய் நின்று ”யுவர் ஆனர்”, மை லாட்” என்று பேசி, குற்றம் சாட்டப்பட்டவர் வரமுடியாத சூழ்நிலையைக் கூறி வாரண்ட் வராமல் தடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்படி எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு வழக்கு தொடரலாம்? கணக்கே இல்லை!
ஈரோடு வழக்கு
ஈரோடு குற்றவியல் நீதிமன்றத்தில் என்மீது நடக்கும் வழக்கு 2005 லிருந்து 18 ஆண்டுகளாக நடந்து கொண்டுள்ளது. நான் செய்த குற்றம் என்ன? தமிழ்நாட்டில் மண்ணின் மக்கள் தொகையைச் சிறுபான்மை ஆக்கும் அளவிற்கு வெளிமாநிலத்தார் வெள்ளம் பெருகிக் கொண்டுள்ளது.

இங்குள்ள இந்திய அரசு நிறுவனங்களில் இந்திக் காரர்களையே பெரிதும் வேலைக்கு அமர்த்துகிறது இந்திய அரசு. தொழில், வணிகம், வேலை அனைத்தும் வெளிமாநிலத்தார் கைக்குப் போய்விட்டது.

”வெளியாரை வெளியேற்றுவோம்” என்ற தலைப்பில் காவல் துறையிடம் அனுமதி வாங்கி 21.5.2005 அன்று ஈரோட்டில் பேரணியும், ஈரோடு கருங்கல் பாளையத்தில் திறந்தவெளி மாநாடும் நடத்தினோம். அப்போது கட்சியின் பொதுச் செயலாளர் என்ற முறையில் இந்நிகழ்வுக்குத் தலைமைப் பொறுப்பு நான் என்ற முடிவுக்கு வந்தது காவல்துறை. அம்மாநாட்டில், நான் பேசியதை வைத்து என் மீது வழக்குப் போட்டார்கள்.

யாரும் எனக்கெதிராக ஈரோடு காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவில்லை. ஆட்சியாளர்களின் அறிவுறுத்தலை ஏற்று, கருங்கல்பாளையம் காவல் நிலைய அதிகாரிகள் என் மீது வழக்குப் பதிவு செய்தனர். இன்று வரை ஈரோடு நிதிமன்றத்திற்குச் சென்று வருகிறேன்.
என்மீது ஏற்றப்பட்ட பெருஞ்சுமையைக் குறைக்கும் வகையில் மக்கள் உரிமை சட்டக் காவலர் மூத்த வழக்கறிஞர் பவானி, ப.பா. மோகன் அவர்கள் இவ்வழக்கை நடத்தி வருகிறார்கள்.

அவரின் இளம் வழக்கறிஞர்கள் நான் போக இயலாத வாய்தாக்களுக்கு எனக்காக மனுப்போட்டு வருகின்றனர்.
ஏன் 18 ஆண்டுகளுக்கு மேல் இவ்வழக்கு தொடர்கிறது? இது நாதியற்ற வழக்கு! வழக்குக்குப் புகார் கொடுத்தவர் காவல் நிலைய ஆய்வாளர். அவர் பதவி உயர்வுகள் பெற்று பல இடங்களுக்கு மாற்றலாகி விட்டார்.

வழக்கு விசாரணைக்கு அவர் வருவதில்லை. நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியும் பல ஆண்டுகள் சாட்சியம் அளிக்க அவர் வராத நிலையில் வழக்கைத் தள்ளுபடி செய்திருக்க வேண்டும். நீதிமன்றம் அவ்வாறு செய்யவில்லை. வேறு சாட்சிகளும் பலவாய்தாக்கள் வரவில்லை. பின்னர் வந்தவர்களும் இந்த வழக்கு பற்றியும் பெ. மணியரசன் பற்றியும் எங்களுக்குத் தெரியாது என்று கூறிவிட்டனர். ஆனால் இன்னும் வழக்கு முடியவில்லை. ஏன்?

1. வழக்குப் போட்ட காவல் துறை அதிகாரி நீதிமன்றம் வராதது. 2. சாட்சிகள் வராதது. 3. இந்த “வராமைகள்“ மீது நீதிமன்றம் தனக்குரிய சட்டப்படி நடவடிக்கை எடுக்காதது ஆகிய மூன்றுமே இன்னும் வழக்கு முடியாததற்குக் காரணங்கள். இவற்றை அனுமதிப்பது நடுநிலை தவறாத நீதி நடைமுறையா?
இந்த வழக்கில் என்மீது சாற்றப்பட்ட குற்றமே தவறானது. மதங்களுக்கிடையே மோதல் உண்டாகும்படி நான் பேசியதாகக் முதல் தகவல் அறிக்கை (FIR) மற்றும் குற்ற அறிக்கை (charge sheet) ஆகியவற்றில் உள்ளது. ஆனால் அதற்கான சான்று என் பேச்சில் இருந்து குற்ற அறிக்கையில் காட்டப்படவில்லை. இன மோதல் எனப்போட வேண்டிய இடத்தில் மத மோதல் என்று தவறாகப் போட்டுள்ளார்கள் என்றார் நீதிபதி. அப்போழுதாவது என்மீது உள்ள வழக்கைத் தள்ளுபடி செய்திருக்கலாம்.

குற்றவியல் நீதிமன்ற நீதிபதியே அத் தவறைத் திருத்திச் சரி செய்து கொள்கிறார். புதிய குற்ற அறிக்கையைத் தயாரிக்கிறார்.
இவ்வாறு பல ஆண்டுகளாக என்மீது நிலுவையில் உள்ள வேறு வழக்குகள்: சென்னை சைதாப்பேட்டை நீதி மன்றத்தில் ஒன்று; சென்னை எழும்பூர் நீதிமன்றங்களில் இரண்டு; சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் (அல்லிகுளம்) ஒன்று; நான் ஏற்கெனவே அலைந்து முடிந்த தஞ்சை, திருவையாறு, எழும்பூர், திருவொற்றியூர், ஈரோடு நீதிமன்ற வழக்குகள் எனப் பல! வழக்கறிஞர்கள் தஞ்சை அ. இராமமூர்த்தி, சென்னை சி. விஜயகுமார், ப.பா.மோகன், சைதாப்பேட்டை வாசுதேவன், எழும்பூர் கதிர்க்குமரன் (இரவிக்குமார்) போன்றவர்களின் கட்டணமில்லாப் பேருதவியால் என் வழக்குகள் நடக்கின்றன.

இலட்சியத்திற்காகச் சிறை செல்லவும் வழக்குகளை ஏற்கவும் துணிந்து வந்த எனக்கு இவை பெருஞ்சுமைகள் அல்ல. சாதாரணத் தோழர்கள், மக்கள் – இவர்களின் கதி என்ன? நீதிமன்ற நடைமுறைகளில் உள்ள அலட்சியத்தால், குற்றவியல் நீதிமுறை (Criminal Justice System) கடைபிடிக்கப்படாமல் புறக்கணிக்கப்படுகிறது.

இதனால் இலட்சோபலட்சம் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்!
தஞ்சை நீதிமன்றம்
இந்தச் சட்டப் புறக்கணிப்பால், குற்றவியல் நீதிமுறைப் புறக்கணிப்பால் இப்போது தஞ்சை காவல் துறையாலும் நீதிமன்றத்தாலும் பாதிக்கப்பட்டு அல்லலுறும் சற்றொப்ப 100 தோழர்கள் குறித்து ஒரு செய்தி இதோ:
தமிழ்நாட்டுத் தொழில் வணிகம் ஆகியவற்றில் வெளிநாட்டினரும், வெளி மாநிலத்தவரும் மேலாதிக்கம் செய்கின்றனர். மண்ணின் மக்களாகிய தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு ஓரம் கட்டப்படுகின்றனர் என்ற அவலத்தை எடுத்துக்காட்டி அயலார் வணிக நிறுவனங்களின் முன் அடையாள மறியல் போராட்டம் நடத்துதென்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் முடிவு செய்தது.

தஞ்சைக் கீழ அலங்கத்தில் உள்ள மலையாள நிறுவனமான ஆலுகாஸ் நகைமாளிகை முன் 9.3.2011 அன்று மக்கள் திரள் மறியல் போராட்டம் நடைபெற்றது. 140 பேர் தளைப்படுத்தப்பட்டனர். அவர்களில் பெண்கள், சிறுவர் ஆகிய 16 பேர் விடுவிக்கப்பட்டு 124 பேர் திருச்சி நடுவண் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சிலநாள் கழித்து அனைவரும் பிணையில் எடுக்கப்பட்டனர். பிணையின்போது அடுத்த நீதிமன்ற அழைப்பாணை வரும்போது நீதிமன்றத்தில் நேர்நிற்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது.
இவ்வழக்கில் சிறை சென்று பிணையில் வந்தவர்கள் தஞ்சை மாவட்டம், திருவாரூர் மாவட்டம், புதுக்கோட்டை மாவட்டம், கடலூர் மாவட்டம், கிருட்டிணகிரி மாவட்டம், கோவை மாவட்டம் இராமநாதபுரம் எனப் பல மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.
சில ஆண்டுகள் கழித்து, தஞ்சை நகரத்தில் உள்ள ஆறு தோழர்களுக்கு மட்டும் நீதிமன்ற அழைப்பாணை (சம்மன்) காவல்துறையினரால் கொடுக்கப்பட்டது.

வெளி மாவட்டங்களைச் சேர்ந்த தோழர்களுக்குக் காவல் துறை அழைப்பாணை கொடுக்கவில்லை. எனவே, அவர்கள் நீதிமன்றம் போகவில்லை. அழைப்பாணை பெற்றுக் கொண்ட இந்த 6 தோழர்கள் மட்டும் நீதிமன்றம் சென்று நேர்நின்று, வழக்கு நடத்தி விடுதலை பெற்றுவிட்டார்கள். மற்ற தோழர்கள், தங்கள் மீதான வழக்கைக் காவல்துறை கைவிட்டுவிட்டது என்று கருதிக் கொண்டார்கள்.

அந்த மற்றவர்களை 2023-ஆம் ஆண்டில் அண்மையில்தான் காவல் துறையினர் அந்தந்த மாவட்டங்களுக்குப் போய் உங்கள் பேரில் ஆலுக்காஸ் வழக்கில் நீதிமன்ற பிடி ஆணை (வாரண்ட்) இருக்கிறது. நீதிமன்றத்திற்கு வாருங்கள் என்று வாய்மொழியாகக் கூறிவருகிறார்கள்.

அதை ஏற்றுத் தோழர்கள் தவணை, தவணையாகத் தஞ்சாவூர்க் குற்றவியல் நீதிமன்றம் -1 இன் நீதிபதி இளவரசி அவர்கள் முன் நேர்நின்றார்கள். இவர்களின் வழக்கறிஞர் இ.ரெ. சிவராசு அவர்கள். இவர்கள் அனைவர்க்கும் நீதிமன்ற அழைப்பாணை கொடுக்கப்படவில்லை.

கொடுத்தார்கள் என்பதற்கு நீதிமன்றத்தில் சான்று இருக்கிறதா என்று பாருங்கள். இவர்களுக்குத் தங்கள் மீது ஆலுக்காஸ் வழக்கு தொடர்கிறது என்றே தெரியாது. வழக்கும் வாய்தாவும் தெரிந்து தலைமறைவாகிவிட்டவர்கள் அல்லர் இவர்கள். காவல் துறையின் குறைபாடு. மற்றும் இதைக் கண்காணிக்கத் தவறிய நீதிமன்றத்தின் குறைபாடு ஆகியவைதான் இவர்கள் நீமன்றம் வராமல் இருந்ததற்கான காரணங்கள். இனி தொடர்ந்து வருவார்கள். எனவே, கடந்த பல ஆண்டுகளாக இவர்கள் நீதிமன்றத்தையும், காவல் துறையினரையும் ஏமாற்றித் தலைமறைவாக இருந்ததாகக் கருதக் கூடாது. இவர்களுக்கு உடனடியாக நிபந்தனையற்ற பிணை வழங்க வேண்டும் என்று வாதுரை செய்தார்.

ஆனால், நிதிபதி வழக்கறிஞரின் இந்த வாதத்தில் உள்ள உண்மையைப் பரிசீலிக்காமல், ஒவ்வாருவரும் ஓர் ஆயிரம் ரூபாய் தண்டத்தொகை செலுத்த வேண்டும், வாரம் ஒரு முறை திங்கட்கிழமை வந்து இதே நீதிமன்றத்தில் கையொப்பமிட வேண்டும் என்றும் நிபந்தகைள் விதித்துப் பிணை வழங்கினார். செய்தி தெரிந்தவுடன் தாங்களாக முன்வந்து நேர்நின்ற நேர்மையாளர்களுக்கு நீதிபதி இளவரசி வழங்கிய “பரிசு“ இது!
நீதிமன்ற அழைப்பாணைகளைக் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் கொடுத்து, கையொப்பம் வாங்காத காவல்துறையினர், அழைப்பாணை கொடுக்கப்பட்டதை உறுதி செய்ய மறுத்து கெடுபிடியாகத் தண்டனை விதித்த நீதிபதி ஆகியோர் சட்டத்தின் வினாக்களுக்குப் பதில் சொல்ல வேண்டாமா? வாயில்லாப் பூச்சிகளாய் அகப்பட்டுக் கொண்ட அப்பாவிகளைச் சட்ட விதிமுறைகளைத் தவறாகப் பயன்படுத்தித் தண்டிக்கலாமா?
நீதிபதி இளவரசி அவர்களின் எதேச்சாதிகார மனப்பான்மைக்கு ஒரே ஓர் எடுத்துகாட்டு: இவ்வழக்கில் மேற்கண்டவாறு நின்றவர்களில் கடலூர் மாவட்டம், கிருட்டிணகிரி மாவட்டம், ஆகியவற்றைச் சேர்ந்த தோழர்கள் நேர்நிற்கும்போது சிதம்பரம் முனைவர் பட்ட ஆய்வு மாணவர் ஒருவர், “அம்மா நான் படிக்க வேண்டியிருப்பதால் எனக்கு சிதம்பரம் நீதிமன்றத்தில் கையெழுத்துப் போடும்படி நிபந்தனை விதித்து உதவுங்கள்” என்று கேட்டுவிட்டார்.

அவருக்கான வழக்கறிஞர் இருக்கும்போது அம்மாணவர் பேசி இருக்கக் கூடாது. அதைச் சுட்டிக்காட்டிக் கண்டித்துவிட்டு, விட்டிருக்கலாம். அப்படிப் பேசியதைக் கண்டித்த நீதிபதி இளவரசி, நீங்கள் அனைவரும் முப்பது வாரங்களுக்குத் தஞ்சையில் இந் நீதிமன்றத்தில் கையெழுத்துப் போட வேண்டும் என்று ஆணை இட்டார். அவர்களும் மற்றவர்களும் வாராவாரம் வந்து கொண்டிருக்கிறார்கள். காவல் துறையினரின் தவறும், நீதித் துறையினரின் கவனக் குறைவு மற்றும், அலட்சியமும் சேர்ந்துதான், 12 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் நீதிமன்றத்திற்கு வரவழைக்கப்பட்டு அலைகிறார்கள். அது போதாதென்று வாராவாரம் தஞ்சை நீதிமன்றத்தில் கையெழுத்துப் போடும் உள்தண்டனை கொடுப்பது குற்றவியல் நீதிமுறையா? கொலைக் குற்றவாளிக்குக் கூடக் குற்றவியல் நடைமுறைச் சட்டம் நீதிவழங்குகிறது!

எங்கள் தோழர்களுக்கு அழைப்பாணை வழங்கப்பட்டு, அதை வாங்கிக் கொண்டு நீதிமன்றம் வராமல் இருந்தார்கள் என்று நீதித்துறையும் காவல்துறையும் நிலை நாட்ட முடியுமா? அப்படி மெய்பிக்க முடியாதபோது எங்கள் தோழர்கள் மீது கருணை காட்டியிருக்கலாம்.

பன்னிரெண்டு ஆண்டிற்குப் பிறகு அழைக்கப்பட்டு, தாமாகவே வந்து நேர்நின்றவர்களுக்கு நிபந்தனை விதிப்பதில் தமது விருப்புரிமை(discretion)யைப் பயன்படுத்தி அடிப்படையில் ஞாயம் வழங்கியிருக்க முடியாதா? இதுதான் குற்றவியல் நீதியைச் செயல்படுத்தும் முறையா? நாங்கள் நீதிக்குத் தலைவணங்கும் மரபினர்! நீதிக்குத் தலைவணங்குவோம்; ஆனால் நீதித்துறைக்குத் தலை கனத்துப் போகும்போது, மக்களால் தாங்க முடியவில்லையே!
பாவேந்தர் பாடினார்:
சிரம் அறுத்தல் மன்னருக்குச் சிறு பொழுது போக்கு
மக்களுக்கோ உயிரின் வாதை!
... ... ...
மண்டப வழக்குகளால் பாதிக்கப்பட்ட இளையோர்
=================================

இன்னொரு அநீதியும் நடக்கிறது. இப்பொழுதெல்லாம் சாதாரண ஆர்ப்பாட்டம் நடத்தினாலே, கைது செய்து மண்டபத்தில், வழக்குப் பதிவு செய்து கையெழுத்து வாங்கிக் கொண்டு மாலையில் விடுவிக்கிறார்கள்.

மண்டபத்திலிருந்து வெளியேறுபவர்களுக்குத் தங்கள் மீது குற்ற வழக்குப் போட்டுள்ளார்கள் என்ற செய்தியே தெரியாது. அவர்களில் இளையோர்க்கு எங்காவது வேலைக்கு நேர்காணல் நடந்தால், அவர்கள் பெயரில் வழக்கு நிலுவையில் இருக்கும், வேலை பெறும் தகுதியை இழப்பர். எப்படி? காவல் துறையினர் மண்டபத்தில் பதிவு செய்த பெயர்கள் மீது குற்ற எண், தண்டனைப் பிரிவுகள் எல்லாம் சேர்த்து வழக்குப் பதிவு செய்து கணிப் பொறியில் ஏற்றிவிடுகிறார்கள். அந்தக் கணிப்பொறி இவர்கள் மீது வழக்கு நிலுவையில் உள்ளது என்று காட்டுகிறது. அவர்களுக்கு வேலைகிடைக்காது; அவர்களுக்கு வெளிநாடு செல்லும் கடவுச் சீட்டும் கிடைக்காது!
காவிரித் தண்ணீர் வேண்டும் என்று கைகோத்துச் சாலை ஓரமாக மனிதச் சங்கிலி நடத்திய எத்தனை எத்தனை இளைஞர்கள் இப்படிப் பாதிக்கப்பட்டு வாழ்விழந்து தவிக்கிறார்கள்! இன்னும் எத்தனையோ கட்சிகள் மற்றும் அமைப்புகளின் சனநாயகப் போராட்டங்களில் பங்கேற்றதற்காக, மேற்கண்டவாறு பாதிக்கப்பட்டோர் ஏராளம்!

அண்மையில், மேற்கண்டவாறு வேலை பாதிக்கப்பட்ட ஓர் இளைஞர், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அவர்களின் முன் ஒரு வழக்கு தாக்கல் செய்தார். நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஒரு நல்ல தீர்ப்பு வழங்கினார். “சனநாயக நாட்டில் கோரிக்கைகள் வைத்து ஆர்ப்பாட்டம் நடத்துவது, சனநாயக வடிவில் போராட்டம் நடத்துவதெல்லாம் அரசமைப்புச் சட்டம் வழங்கும் உரிமைகள். அவற்றில் பங்கேற்றதற்காக வழக்குப் போடுவதும், அவ்வழக்கைக் காரணம் காட்டி வேலை பெறும் உரிமையை மறுப்பதும் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று தீர்ப்பு வழங்கி, அந்த இளையவருக்கு வேலை கிடைக்க நீதி வழங்கினார்.

தமிழ்நாடு அரசு தலையிட வேண்டும்
தமிழ்நாடு அரசு, கால்துறைக்கு இப்படியெல்லாம் வழக்குப் பதியக் கூடாது என்று ஆணையிட வேண்டும். மண்டபத்தில் கையெழுத்து வாங்கி உடனே கணிப்பொறியில் குற்றவாளிப் பெயர்பட்டியலை ஏற்றும் கெட்ட பழக்கத்தைக் கால்துறையைக் கைவிடச் செய்ய வேண்டும்.

நீதிமன்றம் சாட்சி சொல்ல அழைக்கும்போது உடனடியாகக் காவல் துறையினர் போவதற்கும், சாட்சிகளைக் காலம் தாழ்த்தாமல் நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்வதற்கும் உரிய ஏற்பாடுகளைத் தமிழ்நாடு அரசு செய்ய வேண்டும். குறிப்பாக, காவல் துறையினரின் எண்ணிக்கையை அதிகமாக்குவதும், காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்புவதும் மிகமிகத் தேவை.

அதுபோல், 15 ஆண்டு 20 ஆண்டு என்று நீளும் வழக்குகளைக் குறிப்பிட்ட கால எல்லைக்குள் முடிக்க புதிய சட்ட ஏற்பாட்டினைத் தமிழ்நாடு அரசும் இந்திய அரசும் செய்ய வேண்டும்.
இதை ஒழுங்குபடுத்தினால் நீதித்துறைக்கும், காவல்துறைக்கும் இப்போதுள்ள வழக்குச் சுமைகளில் 50 விழுக்காடு குறைந்து விடும்.

மனித உரிமையும் நிலைநாட்டப்படும்!
நீதித்துறைதான் இன்று இந்தியாவில் மக்களுக்கான கடைசி நம்பிக்கை! அதன் தன்னாட்சி அதிகாரம் நீதிக்காகவும் மக்களுக்காகவும் செயல்பட வேண்டும். தன் ஆணவத்திற்கும், மந்தப் போக்கிற்கும் அல்ல!
நீதித்துறை - காவல் துறையின் நீட்சி ஆகிவிடக் கூடாது!

================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
================================= 

Labels: , ,


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்