<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/6955529389241309188?origin\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

*போப்பாண்டவர் பிரான்சிஸ் அவர்களின் அறச்சீற்றம், ஆன்மிகர்களுக்கு வழிகாட்டி!* --- பெ. மணியரசன் தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

Friday, May 2, 2025


 *போப்பாண்டவர் பிரான்சிஸ் அவர்களின்

அறச்சீற்றம், ஆன்மிகர்களுக்கு வழிகாட்டி!*
==========================================
பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
நாள் : 2.5.2025 
===================================
ஆன்மிகச் சான்றோர்கள் அரசியலுக்கும் சமூக அறத்திற்கும் சிறந்த பங்களிக்க முடியும் என்பதை மெய்ப்பித்து, அண்மையில், 21.4.2025 அன்று மறைவெய்தியுள்ளார் போப்பாண்டவர் என்ற பொறுப்பில் இருந்த போப் பிரான்சிஸ் அவர்கள்.

ஐரோப்பாவிற்கு வெளியில் இருந்தும், - தென்னமெரிக்காவின் பின்தங்கிய நாடான அர்ஜென்டினாவிலிருந்தும் ரோமாபுரி - வத்திக்கான் அரசுத் தலைவராக வரமுடியும் என்பதை அவர் நிலைநாட்டியுள்ளார். பன்னிரண்டு ஆண்டுகள் செல்வாக்குடன் தொடர்ந்து அப்பதவியில் இருந்துள்ளார்.

உலக அமைதி - நீதி - ஏழைகளுக்கான குரல் என்ற இம் மூன்றும் போப்பரசர் பிரான்சிஸ் அவர்களின் இலட்சியங்கள்!

கட்டற்ற லாப வேட்டை நடத்தும் தனியார் தொழில் - வணிகங்களை அவர் சாடினார். அனைத்து மனிதர்களுக்கும் ஞாயமான ஊதியமும் கண்ணியமான வாழ்க்கையும் கிடைக்க வேண்டும் என்றார்.

எந்த அக்கறையும் இல்லாமல் இயற்கை வளத்தைச் சீரழிப்பதை - இதனால் ஏற்படும் சுற்றுச் சூழல் பாதிப்பைக் கடுமையாக - வெளிப்படையாகச் சாடினார். சுற்றுச் சூழலுக்கு இழைக்கப்படும் தீங்கு ஒரு சமூக அநீதியே என்றார். இது குறித்து அவர் அவரது பதவிக்கே உரியதான வெளிப்படைக் கடிதம் ஒன்றை (Encyclical) 2015-ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார். அது நூல்வடிவில் லாடேட்டா சி (Laudato Si) என அறியப்படுகிறது.

போப் பிரான்சிஸ் மத நல்லிணக்கத்திற்கு உழைத்தவர் என்று புகழப்படுகிறார். பல்வேறு மாற்று மதங்கள், கிறித்துவத்துக்குள்ளேயே இருக்கும் உட்பிரிவுகள், (Denominations) கடவுள் நம்பிக்கை அற்றோர் அமைப்புகள் ஆகியவற்றின் தலைவர்களிடையே, பேச்சு வார்த்தைகள் மற்றும் குறைபாடுகளைத் திருத்துதல் வடிவில் சமரசம் ஏற்பட உழைத்தார்.

உலகெங்கும் உள்ள ஏழைகள், இன்னும் குறிப்பாக உள்நாட்டு நிலைமைகளால் ஏதிலிகள் ஆனோர் - புலம் பெயர்ந்தோர் முதலியவர்களின் குரலாய் விளங்கினார் போப் பிரான்சிஸ். பன்னாட்டு சிக்கல்களில் கருத்துக் கூறத் தயங்காதவர்!

அதிகாரமற்றவர்களின் குரலாய் விளங்கிய போப் பிரான்சிஸ் அவர்களின் இறுதிச் சடங்கில் உலக நாடுகளில் அதிகாரம் மிக்க பதவிகளில் உள்ள குடியரசுத் தலைவர்கள், தலைமை அமைச்சர்கள், அமைச்சரிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

எந்த மதம் அல்லது சமயமாக இருந்தாலும், அவற்றின் பொறுப்பில் உள்ளோர் சமூக அக்கறையோடு செயல்பட வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள சைவ ஆதினங்களும் வைணவ ஜீயர்களும், கிறித்துவ, இசுலாமிய பீடங்களும் சமூகச் சிக்கலில் நடுநிலை, அறம் சார்ந்து கருத்துகள் கூற வேண்டும். காலஞ்சென்ற குன்றக்குடி அடிகளார், அவ்வாறு சமூகவியல் - மொழி - தமிழ்இனம் சார்ந்து கருத்துகள் கூறினார். ஆட்சியில் இருப்பவர்களின் மனம் கோணாமல் செயல்பட வேண்டும் என்று சமயத் தலைமை பீடங்கள் சுருங்கிக் கொண்டால், அரசியல் சீரழிவுகள், அட்டூழியங்கள் பெருகும்!

நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம்” என்று உரத்துப் பேசினார் 7-ஆம் நூற்றாண்டில் திருநாவுக்கரசர். “கருணை இல்லா ஆட்சி கடுகி ஒழிக” என்றார் இராமரலிங்க வள்ளலார் 19-ஆம் நூற்றாண்டில்!

வத்திக்கான் அரசுத் தலைவர் போப் பிரான்சிஸ் அவர்களுக்கு வீர வணக்கம்!

===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam

ஊடகம் : www.kannottam.com

இணையம் : www.tamizhdesiyam.com

சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam

காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

==============================

Labels: , ,

"மே நாள்: சிந்தனைப் புரட்சிக்குத் திசை காட்டட்டும்" --- ஐயா பெ. மணியரசன் தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

Wednesday, April 30, 2025


மே நாள்:
சிந்தனைப் புரட்சிக்குத்
திசை காட்டட்டும்
=====================================================
ஐயா பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
===================================

மே நாள் என்பது தொழிலாளர் நாள் மட்டுமல்ல - சாரத்தில் மனிதத்தின் நாள்! உழைக்கும் விலங்குகளுக்குக் கூட ஓய்வு கொடுத்த - பணவேட்டையாடிகள் - உழைக்கும் மனிதர்களுக்கு ஓய்வு கொடுக்க மறுத்தார்கள்!

ஓய்வு கோராத எந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டபின் - உழைப்பாளர்களுக்குக் கூடுதலாக ஓய்வு கிடைத்திருக்க வேண்டும்! மனித மனத்தில் தெய்வமும் உண்டு சாத்தானும் உண்டு என்பர்! அதாவது, மனித உள்ளத்தில் அறமும் உண்டு, அறக்கேடும் உண்டு. களைத்துப் போகாத எந்திரங்களைப் போலவே மனிதர்களும் உழைக்க வேண்டும் என்று கட்டளை இட்டார்கள். ஒரு நாளில் பதினெட்டு மணி நேரம்கூட வேலை வாங்கினார்கள்!

தீங்குகள் தொடரும்போது தீர்வுகள் வெடித்தெழும்! உழைப்புக்கு மனித நேயமுள்ள நேரவரம்பு கோரினார்கள் தொழிலாளர்கள்! பலநாடுகளில் இக்கோரிக்கை தன்னெழுச்சியாய்ப் பற்றிப் படர்ந்தது.

பன்னாட்டு தொழிலாளர் பேராயம் (The International Workers’ Congress) மாநாடு 1889-இல் பாரீசில் நடந்தபோது, தொழிலாளர்கள், நிகரமையர்கள் (Socialists) மார்சியக் கட்சியினர் முதலியோரைக் கொண்ட இரண்டாவது பன்னாட்டு மையத்தை (அகிலத்தை) அமைத்தனர். அது தொழிலாளர்களின் வேலை நேரம் ஒரு நாளைக்கு எட்டு மணிநேரமாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை வடித்து. அதற்காக பன்னாட்டளவில் மாபெரும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவது என்று முடிவு செய்தது. அப்போது, மே மாதம் முதல் நாளில் இந்த ஆர்ப்பாட்டங்களை நடத்தலாம் என்று முடிவு செய்தார்கள். மே 1 ஐத் தேர்ந்தடுத்த காரணம் இதுதான்:

அமெரிக்கக் கூட்டரசுத் தொழிலாளர்கள் (American Federation of Labour) என்ற யு.ஏஸ்.ஏ நாட்டுத் தொழிலாளர் அமைப்பு ஏற்கெனவே 1886 மே 1-ஆம் நாளில் தொடங்கி, தொடர்ந்து வட அமெரிக்க சிகாகோவில் ஹே மார்க்கெட் பகுதியில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வந்தது.

4.5.1886 அன்று அமெரிக்க அரசின் காவல் துறையினர் ஆர்பாட்டக்கார்கள் பலரை அடித்து படுகாயப்படுத்தி கலைத்தனர். அப்போராட்டத்தின் அமைப்பாளர்களாக விளங்கிய 3 தொழிலாளர் தலைவர்கள் உட்பட 8 பேரை சிறையிலடைத்து தூக்கில் போட்டார்கள். அந்த 3 தலைவர்களின் பெயர்களும் இன்றும் ஒளிவீசி உலகெங்கும் பரவுகின்றது. அவர்கள், ஆகஸ்ட் ஸபைஸ், ஆல்பர்ட் பார்சன், சாமுவேல் ஃபீல்டென்! அதன்பிறகு உலகெங்கும் 8 மணி நேர வேலை கோரும் போராட்டம் மேலும் வீச்சுப் பெற்றது.

எனவே, அந்த 1886 மே 1-ஆம் நாளைத் தொழிலாளர் உரிமைப் போராட்ட நாளாக 1889-இல் பாரிசில் கூடிய பன்னாட்டுப் பேராயம் அறிவித்தது.
இந்த மே 1 உழைப்பாளர் நாளை இந்தியாவில் முதல் முதலாகக் கொண்டாடிய இடம் சென்னை கடற்கரை! முன்னெடுத்தவர் தென்னாட்டின் முதல் பொதுவுடைமையாளர் - சிந்தனைச்சிற்பி சிங்காரவேலர்! சென்னையில் மெரினா கடற்கரையில் காலையிலும் திருவான்மியூர் கடற்கரையில் மாலையிலும் கொண்டாடினர். எம்.பி.எஸ். வேலாயுதம், சுப்பிரமணிய சிவா போன்ற துடிப்பு மிக்க விடுதலைப் போராட்ட வீரர்கள் இந்த மே நாள் கூட்டங்களில் உரையாற்றினர்.

இந்த இடத்தில் இன்னொரு முதன்மை நிகழ்வையும் நினைத்துப் பார்க்க வேண்டும். இந்தியாவிலேயே, வெற்றிகரமான தொழிலாளர் வேலை நிறுத்தம் நடத்தி, சம்பள உயர்வும், வேலை நேரக் குறைப்பும் முதல்முதலாக சாதித்த இடம் தூத்துக்குடி! முன்னெடுத்துத் தலைமை தாங்கியவர் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார்! ஆண்டு 1906! தொழிற்சாலை கோரல் மில்ஸ் நூற்பாலை.

அடுத்து முதல் முதலாக முறைப்படி ஒருங்கிணைக்கப்பட்ட தொழிற்சங்கம் நிறுவப்பட்ட மண்ணும் இ்நதியாவிலேயே தமிழ் மண்ணே! சென்னை பின்னி ஆலைத் தொழிலாளர்களை மையப்படுத்தி இச்சங்கம் தொடங்கப்பட்டது. “சென்னை தொழிலாளர் சங்கம் (Madras Labour Union)! ஆண்டு 1918. இதன் முகாமையான நிறுவனர்கள் நடேச முதலியார் (நீதிக்கட்சி மூலவர்களில் ஒருவர்), திரு.வி. கலியாண சுந்தரனார்! சர்க்கரைச் செட்டியார் ஆகியோர்!

உழைக்கும் மக்களுக்கான முதல் புரட்சி - நிகரமைப் புரட்சி 1917 இரசியப் புரட்சி! அதை வரவேற்று, பூரித்து மனித சமத்துவம் - சனநாயகம் இரண்டையும் முதன்மைப்படுத்தி கவிதை யாத்தவர் பெரும் பாவலர் பாரதியார்!

“ஆகாவென்று எழுந்தது பார் யுகப்புரட்சி!
கொடுங்கோலன் அலறி வீழந்தான்!”

“குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு
மேன்மையுறக் குடிமை நீதி”

என்று இரசியப் புரட்சியை பாடிப் பரவசப்பாட்டார் பாரதியார்!

பாவேந்தர் பாரதிதாசன் பிற்காலத்தில்

“ஆர்த்திடும் எந்திரக் கூட்டங்களே உங்கள்
ஆதி அந்தம் சொல்லவோ நீங்கள்
ஊர்த்தொழிலாளர் உழைத்த உழைப்பினில்
உதித்ததும் மெய்யல்லவோ?”

“கூழுக்குப் பற்பலர் வாடவும் சிற்சிலர்
கொள்ளையடிப்பதும் நீதியோ - புலி
வாழ்வதுதான் எந்தத் தேதியோ?” என்று கேட்டார்.

“எல்லார்க்கும் எல்லாமும் என்றிருப்பதான
இடம் நோக்கி நகர்கின்றது இந்த வையம்” என்றார்!

இன்று தமிழ்நாட்டின் நிலை என்ன?

‘மே நாளுக்கு விடுமுறை அறிவித்தது கலைஞர் ஆட்சி, மே நாள் பூங்கா அமைத்தது எங்கள் ஆட்சியில்தான்‘ என்று பெருமை பேசிக் கொண்டுள்ள தி.மு.க. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் “தொழிலாளர்களின் வேலை நேரம் 8 மணி என்பதை 12 மணி என்று, - 50 % உயர்த்தி, சட்டம் செய்தார். அரிவாள் - சுத்தியல் கொடி போட்டுக் கொண்டு, உதய சூரியனுக்கு விசுவாசம் காட்டி, சில தொகுதிகள் பெறும் கம்யூனிஸ்ட்டுக் கட்சிகள் உட்பட பல்வேறு தொழிலாளர் அமைப்புகளும் மனித உரிமையாளர்களும் எதிர்ப்புத் தெரிவித்தவுடன், அச்சட்டத்தைக் கைவிட்டதாக அறிவித்தார்.

ஆனால், நடைமுறையில் தொழிற்சாலை முதலாளிகள் தொழிலாளர்களிடம் 12 மணி நேரம் வேலை வாங்குவதைத் தி.மு.க. ஆட்சி உறுதிப்படுத்துகிறது. கடந்த ஆண்டு சென்னை - காஞ்சிக் கிடையே செயல்படும் தென்கொரிய சாம்சங் தொழிற்சாலைத் தொழிலாளர்கள், தாங்கள் 11 மணி முதல் 12 மணிநேரம் வரை வேலை வாங்கப்படுவதாகவும், தங்களுக்கு தொழிற்சங்கம் வைத்துக் கொள்ளும் உரிமை மறுக்கப்படுவதாகவும் கூறி, 8 மணிநேரம் வேலை; தொழிற்சங்கம் வைத்துக் கொள்ள உரிமை கோரி சனநாயக வடிவில் போராடினர். அதை சி.பி.எம். தொழிற்சங்கம் வெளியிலிருந்து வழிநடத்தியது. தி.மு.க. ஸ்டாலின் ஆட்சி முழுக்கமுழுக்க சாம்சங் முதலாளிகளையே ஆதரித்து 8 மணி நேர வேலைக்கு ஆதரவு கொடுக்கவில்லை.

“தொழிலாளர்களுக்கு உற்ற தோழன் தி.மு.க.வே” என்று தி.மு.க. ஒரு காலத்தில் முழங்கியது. அப்போது அண்ணா சொன்னார், “மாஸ்கோவிற்குப் போவேன், மாலங்கோவைப் பார்ப்பேன், நான்தான் உண்மையான கம்யூனிஸ்ட் என்பேன். இரசியா எங்களை ஆதரிக்கும்” என்றார். காங்கிரசு பேசுது சனநாயக சோசலிசம். அது முதலாளிகளின் சோசலிசம். கழகம் பேசுவது விஞ்ஞான சோசலிசம், காரல் மார்க்சின் சோசலிசம். என்று பேசினார் எழுதினார். எந்த முழக்கத்திற்கு மக்களிடம் ஆதரவு சந்தை அதிகமாக இருக்கிறதோ அதைக் களவாடிமக்களிடம் முழங்குவது தி.மு.க.வின் பரம்பரை உத்தி! கருணாநிதியும் இதையேதான் செய்தார்.

கம்யூனிஸ்ட்டுகளும் தி.மு.க.வின் வாக்குச் சந்தை உத்திக்கு 50 விழுக்காடு வந்துவிட்டார்கள். குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நாடாளுமன்ற, சட்ட மன்ற, உள்ளாட்சித் தேர்தல்களை உதயசூரியனுக்குக் கீழ் இணைந்து சந்திக்க வேண்டிய நிலையில் இருக்கும் சி.பி.எம். கட்சி, சாம்சங் தொழிலாளர்களுக்கு இரண்டகம் செய்து, ஆலை நிர்வாகத்துடன் ஒத்துழைத்து, மு.க. ஸ்டாலினுக்குச் “சலாம்” போட்டது!

தமிழ்நாட்டில் வெளிநாடுகளுக்குச் சென்று விருந்து வைத்து முதலாளிகளை அழைத்து வருவதில் எடப்பாடி பழனிச்சாமிக்கும் (அ.தி.மு.க.) மு.க. ஸ்டாலினுக்கும் (தி.மு.க.) இடையே “ஆரோக்கியமான” போட்டி நடந்து கொண்டிருக்கிறது.

தொழிற்சாலைகளிலும் அரசு அலுவலகங்களிலும் அடிமாட்டுக் கூலிக்கு தற்காலிக, ஒப்பந்த தொழிலாளிகளையே - ஊழியர்களையே இந்திய - தமிழ்நாடு ஆட்சியாளர்களும் முதலாளிகளும் அமர்த்துகிறார்கள். தொழிற்சங்கங்கள் அந்த வரம்புக்குள் செயல்பட்டுக்கொண்டுள்ளன.

இந்த ஆண்டு (2025 மே 1) மே நாளுக்குத் தமிழ்நாட்டு நாளேடுகள் சிறப்புக் கட்டுரைகள் எதுவும் வெளியிடவில்லை.

நூற்றாண்டைக் கொண்டாடும் இந்திய கம்யூனிஸ்ட்டுகள் - எண்பத்தைந்து ஆண்டுகளாகத் தொடர்சியாகச் செயல்பட்டுவரும் கம்யூனிஸ்ட்டுக் கட்சிகள், வேறெந்த அமைப்பையும் விட அதிகமாக ஈகம் செய்துள்ளன; மக்களுக்ககாகப் போராடியுள்ளன. ஆனால், அக்கட்சிகளுக்கு உரிய வளர்ச்சி இல்லை. எனவே, இந்திய ஏகாதிபத்தியவாத கட்சியான காங்கிரசு, பதவி - பணம் - விளம்பர வேட்டைக் கட்சிகளாக உள்ள தி.மு.க.- அ.தி.மு.க. போன்ற கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து சிறுத்துப் போகின்றன!

காரல்மார்க்ஸ், லெனின் போன்றவர்கள் மாமேதைகள்தாம்; ஆனால் அகநிலை விருப்பத்திற்கு அதிகமாக உள்ளாகிக் கற்பனை முடிவுகளையும் தங்கள் ஆய்வில் கலந்தார்கள். ஒரே ஒரு எடுத்துக்காட்டை மட்டும் இங்கு பார்க்கலாம்.

தொழிலாளிகள் வர்க்கம் - இயல்பிலேயே புரட்சிகரமானது. அதுவே தலைமை தாங்கி நிகரமை (சோசலிச) புரட்சியை நடத்தும் என்று வரையறுத்துக் கூறினார்கள். (இதில் லெனினுக்கு சிறு வேறுபாடு உண்டு). ஆனால், உலகில் எங்காவது தொழிலாளி வர்க்கம் நிகரமைப் புரட்சியையோ, நாட்டு விடுதலைப் புரட்சியையோ, சனநாயகப் பாதுகாப்பு அல்லது சனநாயக மீட்புப் புரட்சியையோ முன்னெடுத்தது உண்டா? இல்லை! பல வர்க்கங்களில் உள்ள சனநாயக ஆற்றல்கள், புரட்சியாளர்கள் முன்னெடுத்துத் தலைமை தாங்கித்தான் - உழவர்கள் தொழிலாளர்கள், மற்றுமுள்ள மக்கள் பிரிவினர் ஆதரவைப் பெற்று நிகரமைப் புரட்சியோ, அல்லது மக்கள் சனநாயகப் புரட்சியோ, நாட்டு விடுதலைப் புரட்சியோ நடந்துள்ளன. எடுத்துக் காட்டு இரசியா, சீனா, வியட்நாம் போன்ற நாடுகளின் புரட்சிகள்).

தமிழ்நாட்டை எடுத்துக் கொள்வோம். தமிழினச் சிக்கலை முன்னெடுத்த தி.க., தி.மு.க. போன்ற கட்சிகள்தாம் கிடுகிடுவென வளர்ந்தன. (ஈ.வெ.ரா - சூதாகத் திராவிடத்தை திணித்தாலும், தமிழிர்கள் அதைத் “தமிழர் ஆரியர்”, “தமிழ்நாடு எதிர் இந்திய ஏகாதிபத்தியவாதம்” என்றே புரிந்து கொண்டனர்.)

இந்தியா என்பது ஒரு தேசமல்ல; பல தேசங்களைக் கொண்ட ஒரு நிர்வாகம் என்ற சமூக - அரசியல் உண்மையைக் கூட மறுத்து, ஆரிய-இந்தி ஏகாதிபத்தியவாதிகளான காங்கிரசுத் தலைவர்கள் திணித்த “இந்திய தேசியத்தை” இன்றுவரை ஏற்றுக் கொண்டுள்ளவர்கள் இங்குள்ள கம்யூனிஸ்ட்டுகள்! பல தேசிய இன நாடுகள் கூட்டரசுகள் ஒரே நாட்டில் வாழ லெனின் வழிகாட்டினார். அதை ஏற்க மறுத்தவர்கள் இந்திய கம்யூனிஸ்ட்டுகள்!

அரசியல் சீரழிவு அனைத்துச் சீரழிவுகளையும் மக்களிடம் விதைக்கும். அதனால்தான், “அரசன் எவ்வழி மக்கள் அவ்வழி“ என்றனர் நம் முன்னோர். தி.மு.க.-அ.தி.மு.க. உள்ளிட்ட பல கட்சிகளுக்கு மக்களுக்கான இலட்சியம் எதுவும் இல்லை! பதவி-பணம்-விளம்பரம் இம் மூன்றுமே இவற்றின் இலட்சியம்! சீரழிந்த ஊழல் தலைவர்கள் மக்களிடமும் சீரழிவை - ஊழலை விதைத்து வளர்ப்பர். அப்போதுதான் அவர்கள் தலைமையும், அவர்கள் குடும்பத்தார் தலைமையும் நீடிக்க முடியும், தொடர முடியும்!

தமிழ்த்தேசியர்கள், மே நாளைப் போற்ற வேண்டும். உழைப்பாளர் உரிமைகளை மீட்க வேண்டும், பாதுகாக்க வேண்டும். ஆனால், இங்கு ஏற்கெனவே உள்ள கம்யூனிஸ்ட்டுக் கட்சிகளைப் பின்பற்றக் கூடாது. மனித சமநிலைக்கு முன்னுரிமை கொடுப்போம். உழைக்கும் மக்கள் உரிமைக்கு முதலிடம் கொடுப்போம்.

அனைவர்க்கும் மே நாள் வாழ்த்துகள்!
===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam


ஊடகம் : www.kannottam.com

இணையம் : www.tamizhdesiyam.com

சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam

காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

==============================


 

Labels: , ,

"இன வரையறுப்பில் லெனினுக்கு மாறாக* *இடதுசாரிகள் “இந்தியத் தேசியம்”, ஏற்கலாமா...?" ==================== பெ. மணியரசன் தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்

Saturday, March 29, 2025

*இன வரையறுப்பில் லெனினுக்கு மாறாக*

*இடதுசாரிகள் “இந்தியத் தேசியம்” ஏற்கலாமா?*
====================
பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்
30-3-2025.
========================


இடதுசாரித் தோழர்களே,
உங்கள் கட்சிகள், உங்களின் இந்திய மற்றும் தமிழ்நாட்டுத் தலைவர்கள் - மார்க்சியத்தின் அடிப்படையில் இந்தியாவின் தனித்தன்மை என்று எதையாவது அல்லது எவற்றையாவது அடையாளம் காட்டியுள்ளார்களா?

இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சி (சிபிஐ), ‘இந்திய ஆளும் முதலாளி வர்க்கத்தில் தேசிய முதலாளிகள் பிரிவு உள்ளது. அது முற்போக்கானது; அதை ஆதரித்து ஊக்கப்படுத்த வேண்டும்‘ என்றது. அதற்காக ஆளும் காங்கிரசுக் கட்சியை - பின்னர் இந்திரா காங்கிரசை - ஆதரித்தது சி.பி.ஐ! சி.பி.எம் கட்சியோ, இந்திய ஆளும் வர்க்கம் பெருமுதலாளி வர்க்கம்! அதில் முற்போக்குக் கூறுகள் எதுவும் இல்லை.

இந்தப் பெருமுதலாளிய இந்திய அரசை வீழ்த்தி வெல்வதுதான் இந்தியப் புரட்சியின் சாரம் என்றது. இப்போது மேற்படி காங்கிரசுக் கட்சியின் வர்க்கத் தன்மை குறித்து சி.பி.எம் கட்சியிடம் மாற்றம் வந்துள்ளதா, இல்லையா என்பது தெரியவில்லை. ஆனால், காங்கிரசுடன் அக்கட்சி கூட்டணி வைத்துள்ளது.

மார்க்சிய - லெனினிய (நக்சல்பாரி) கம்யூனிஸ்ட்டுக் கட்சி இந்திய அரசை ஆளும் முதலாளி வர்க்கத்தினர் தேசிய முதலாளிகளும் அல்லர்; பெரு முதலாளிகளும் அல்லர்; அவர்கள் வெளிநாட்டு ஏகாதிபத்திய முதலாளிகளுக்கான தரகு முதலாளிகள் என்றனர்.

இந்த மூன்று பிரிவு கம்யூனிஸ்ட்டுக் கட்சிகளும் முதன்மையாகத் தீர்க்கப்பட வேண்டிய உண்மையான, இந்தியாவின் தனித்தன்மையாய் உள்ள சமூக முரண்பாடுகளைக் கண்டறியவில்லை; அவற்றை முதன்மைப்படுத்தவில்லை. இந்தியாவில் இரண்டு தனித்தன்மைகள் இருக்கின்றன. அவற்றின் ஊடாகத்தான் வர்க்கம் செயல்படுகிறது.
1. பல இனங்கள் 2. வர்ணசாதிப் பிரிவினைகள்.

வளர்ச்சியடைந்த வரலாறும், வளர்ச்சியடைந்த தாய்மொழியும், வரலாற்று வழியில் அமைந்த தாயகமும் கொண்டுள்ள பல இனங்கள் இந்தியாவில் இருக்கின்றன. இவை தனித்தனி தேசங்களாக - நாடுகளாகச் செயல்படத் தகுதி படைத்தவை! தமிழ்நாடு, வங்காளம், மகாராட்டிரம் போன்ற வளர்ச்சியடைந்த பல தேசங்களும் தமிழர், வங்காளி, மராட்டியர் போன்ற வளர்ந்த பல தேசிய இனங்களும் இந்தியாவில் இருக்கின்றன. இவை வரலாற்று வழியில், உலகின் மற்ற இனங்களைப்போல் தங்கள் தேசங்களை அமைத்துக் கொள்ள முடியாதவாறு தடுத்து, ஐரோப்பிய வணிக வேட்டை நவீனக் காட்டுமிராண்டிகள் புதிதாக ஒரு நாட்டை உருவாக்கி இந்த இனங்களை அதற்குள் அடைத்தனர்.

வெள்ளைக்காரர்களின் பீரங்கிகள், துப்பாக்கிகள், தூக்குக் கயிறுகள், சிறைச்சாலைகள்தாம் இந்தியாவை உருவாக்கின. “இந்தியா” என்று புதிய பெயரில் ஒரு நிர்வாகக் கட்டமைப்பை “நாடு” என்ற பெயரில் உருவாக்கியவர்கள் அந்த வணிக வேட்டையாடிகளே!

பிரித்தானியப் பீரங்கிகளின் வல்லுறவுக்குப் பிறந்ததே இந்தியா! இந்தியாவின் உண்மையான தந்தைமார் ஆங்கிலேயப் படைத்தளபதியான இராபர்ட் கிளைவும் முதல் கவர்னர் ஜெனரலான வாரன் ஹேஸ்டிங்கும்தான்!

ஐரோப்பிய ஆதிக்கவாதிகள் தங்கள் வணிக வேட்டைக்காக - பொருளியல் சுரண்டலுக்காக, செயற்கையாகப் புனைந்துகொண்ட ஒரு நிர்வாகக் கட்டமைப்புதான் இந்தியா! இதில் இயற்கையான பல தேசங்கள் இருக்கி்ன்றன. இந்த உண்மையைக் கம்யூனிஸ்ட்டுக் கட்சிகளும், கம்யூனிச சிந்தனையாளர்களும் வெளிப்படையாகப் பேசுவதில்லையே ஏன்? ஒற்றைத் தேசிய இனத்தாயகத்தில் நடைபெற வேண்டிய புரட்சி போலவே, இந்தியப் புரட்சிபற்றி பல்வேறு பிரிவு கம்யூனிஸ்ட்டுகளும் பேசுவது ஏன்? இனங்களின் இயற்கைக்கு முரணாக இந்தியாவை ஒரு “தேசம்” என்று சொல்லுவது தவறாயிற்றே என்று நினைத்தீர்களா தோழர்களே?

*இந்தியா ஒரு தேசமா ?*
====================

இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் - ஒற்றை இந்தியவாதச் சிந்தனையாளர்களே! ஆனால் அவர்கள் கூட இந்தியாவைத் “தேசம்” என்று வர்ணிக்க அப்போது கூச்சப்பட்டார்கள். அதனால்தான் 1950 சனவரி 26-இல் செயலுக்கு வந்த இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முதல் உறுப்பில் (Article - 1) “இந்தியா அதாவது பாரதம் அரசுகளின் ஒன்றியம்” என்றார்கள். (India, that is, Bharat shall be a Union of States).

ஆனால் அதே இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில், (Preamble) இந்தியாவை “தேசம்” (Nation) என்று போகிற போக்கில் வர்ணித்துக் கொண்டார்கள். இன்றும் மேற்படி 1-ஆம் உறுப்பி்ல் உள்ள “ஒன்றிய” என்ற வரையறையைத் “தேசம்” என்று மாற்றவில்லை. ஆனால், ஆரியத்துவா புராணங்களில் கூறப்படும் “பாரத்” என்ற பெயரை அப்போதே இந்தியாவுக்குச் சூட்டினர். இப்போது பெரும்பாலும் காங்கிரசு மற்றும் பா.ச.க. கட்சியினர் ஆரிய இந்திய ஏகாதிபத்திய அடையாளமாகப் “பாரத்” என்ற பெயரையே பயன்படுத்துகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள காங்கிரசு பா.ச.க. உள்ளிட்ட மற்றவர்களும், சூதறியாத் தமிழர்களும் இந்தியாவைப் “பாரத்” என்றே பயன்படுத்துகின்றனர்.

2001 வாக்கில் புதுதில்லி சென்றிருந்தபோது, அங்கு இந்திய கம்யூனிஸ்ட்டுக் கட்சி அலுவலகத்தில் இருந்த பெயர்ப்பலகையில் “பாரதீய கம்யூனிஸ்ட் பார்ட்டி என்று இந்தியில் எழுதப்பட்டிருந்ததைப் பார்த்தேன்.

*தமிழ்நாடா? தமிழ் மாநிலமா?*
==========. ================

தமிழ்நாட்டில் சி.பி.எம் கட்சி, தனது தமிழ்நாடு மாநிலக் குழுவை - தமிழ் மாநிலக் குழு என்றே அண்மைக்காலம் வரை அழைத்து வந்தது; எழுதிவந்தது. கட்சி அலுவலகப் பெயர்ப்பலகையிலும் முன்னர் அப்படியே எழுதிவந்தது. இப்போதுள்ள தமிழ்நாடு ஆளுநர் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்த இரவி தமிழ்நாடு என்பதை மாற்றி “தமிழகம்” என அழைக்க வேண்டும் என்று கூறினார் அல்லவா! அவரையும் விஞ்சக் கூடிய ஆரியத்துவா ஏக பாரதக் கண்ணோட்டத்தில் சி.பி.எம் கட்சி தமிழ்மாநிலம் என்றே நீண்டகாலமாக எழுதி வந்தது; பேசிவந்தது. எனவே, அவர்கட்குப் பாரதம் இனிக்கும்.

நடந்த உண்மைகளைச் சுட்டிக்காட்டினால், “சென்னை மாகாணத்தைத் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்ய நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தவர்கள் கம்யூனிஸ்ட்டுகள் என்பார்கள். அது சரி! ஆனால், பாரதியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சி என்பது ஆரியச் சார்பு இல்லையா? இந்திய அரசமைப்புச் சட்டம் இயற்றும் பணியில் அரசமைப்புப் பேரவை ஈடுபட்டிருந்தபோது, இந்து மகா சபையும், ஆர்.எஸ்எஸ் சும் இந்தியா என்று பெயர் சூட்டக் கூடாது, பாரத் என்றே பெயர் சூட்ட வேண்டும் என்று போராடினார்கள்! அதன்பிறகுதான் “இந்தியா அதாவது பாரதம்” என்று இரு பெயர் இந்திய நாட்டுக்கு வைக்கப்பட்டது. அந்த பாரதத்தை ஏன் கம்யூனிஸ்ட்டுகள் பயன்படுத்த வேண்டும்? தமிழ்மாநிலம் என்று தமிழ்நாட்டை அண்மைக்காலம் வரை சிபிஎம் அழைத்து வந்தது ஏன்?

*இந்தியன் என்ற இனம் உண்டா ?*
=================================

இடது சாரித் தோழர்களே! பல்தேசிய இன இந்தியாவை, ஒற்றை-இனத் தேசிய இந்தியாவாக காங்கிரசு, பா.ச.க. ஆரியத்துவாவாதிகள் மாற்றிக் கொண்டிருப்பதை உணர்கிறீர்களா? இந்த ஆரிய மயமாக்கலைத் தடுக்க உங்கள் கட்சிக்குள்ளாவது குரல் கொடுக்கிறீர்களா?
அடுத்து, இந்திய அரசமைப்புச் சட்டம் “இந்தியன்” என்று ஓர் இனம் இருப்பதாகக் கூறவில்லை. “இந்தியாவின் குடிமக்கள்” (Citizen of India) என்று மட்டுமே கூறுகிறது. அதைச் சட்டை செய்யாமல், இந்திய ஆட்சியாளர்கள் “இந்தியன்” என்பதை எல்லா வடிவங்களிலும், படிவங்களிலும் திணிக்கிறார்கள். கம்யூனிஸ்ட்டுக் கட்சிகள் இதை ஏன் எதிர்க்கவில்லை? தமிழர், தெலுங்கர், கன்னடர், மராத்தி, வங்காளி என்ற இயற்கையான தேசிய இனங்களைப் புறக்கணித்து, மறைத்து, இல்லாத “இந்தியனை” த் திணிக்கிறார்கள் இந்திய ஏகாதிபத்தியவாதிகள்! ஏகாதிபத்திய எதிர்ப்பும் லெனினியமும் பேசும் கம்யூனிஸ்ட்டுகள் “இந்தியன்” ஆக்கிரமிப்பை எதிர்க்கவில்லையே ஏன்? படிவங்களில் “இந்தியக் குடி” என்று போட்டால் போதும் என்று ஏன் கூறவில்லை?
இப்போது “இந்தியன்” என்ற சொல்லும் அக்ரகாரத்தில் நாறிப்போன சொல்லாகிவிட்டதாம்! “பாரத்தீயன்” என்றுதான் சொல்ல வேண்டும் என்று ஆரியத்துவாவாதிகள் கூறுகிறார்கள்!
தமிழன் என்று சொன்னால் பிரிவினைவாதி என்கிறார்கள்!
இதெல்லாம் மார்க்சிய - லெனினியத்திற்கு சரியா தோழர்களே?
இந்தியா ஒரு தேசமல்ல, இந்தியன் என்று ஒரு தேசிய இனமில்லை என்ற சமூக அறிவியல் உண்மையை மார்க்சிய-லெனினிய வெளிச்சத்தில் நீங்கள் எல்லாம் சொல்லக்கூடாதா தோழர்களே?

*தேசிய இன சிக்கலுக்கு
*தீர்வு கண்டார் லெனின்!*
====================
இரசியாவில் நடந்து வெற்றிபெற்ற கம்யூனிஸ்ட்டுப் புரட்சிக்கு தத்துவத் தலைவராக - களத்தலைவராக விளங்கியவர் வி.ஐ. லெனின். இரசியாவை ஆண்ட ஜார் மன்னர்கள் ஆக்கிரமிப்புப் போர் நடத்தி அண்டை அயல் நாடுகளை - வெவ்வேறு தேசிய இனங்களை, இரசியாவுடன் இணைத்து வைத்திருந்தார்கள்.
இரசியப் புரட்சி வெற்றிபெற்று, ஜார் மன்னரைப் பதவி நீக்கம் செய்தபின், “தேசிய இனங்களின் கூட்டரசாக இரசியாவை மாற்றி அமைப்போம். ஒவ்வொரு மொழி - இன மண்டலமும் அந்தந்த மொழி - இனத் தேசமாக ஏற்கப்படும். அப்படிப்பட்ட தேசங்களின் கூட்டரசு அமைப்போம். ஒட்டு மொத்த நாட்டிற்கும் இப்போதுள்ள இரசியா என்ற பெயர் இரசியக் குடியரசின் பெயராக மட்டும் இருக்கும். ஒட்டு மொத்த நாட்டிற்கும் - எந்த இன - மொழி அடையாளமும் இன்றி, சோவியத் சோஷலிசக் குடியரசுகளின் ஒன்றியம் (Union of Soviet Socialist Republics - USSR) என்று பெயர் மாற்றுவோம் இவ்வாறு இணைந்துள்ள குடியரசுகளில் ஒன்று பிரிந்து தனிநாடு அமைத்துக்கொள்ள அந்த இன நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேறிறினால், பிரிந்துபோக அனுமதி உண்டு” என்று லெனினும் இரசியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சித் தலைவர்களும் உறுதி கொடுத்தனர்.

சோவியத் ஒன்றியத்தில் இணைந்துள்ள தேசிய இனங்கள் பிரிந்துபோக விரும்பினால் பிரிந்து போகும் உரிமை உண்டு என்று அரசமைப்புச் சட்டத்தில் எழுதினார்கள். பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமை (Right to Self Determination with the right to secede) என்ற தேசிய இனங்களுக்கான அடிப்படை உரிமையை சோவியத் ஒன்றிய அரசமைப்புச் சட்டத்தில் சேர்த்தார்கள். அஜர்பைஜான், பைலோ ரஷ்யா, உக்ரைன், எஸ்தோனியா, லாட்வியா என 15 தேசிய இனங்களின் கூட்டமைப்புதான் சோவியத் ஒன்றியம்.

*உங்களுக்கு வழிகாட்டி லெனினா? நேருவா?*
==============

அந்த சோவியத் ஒன்றியத்திற்கு ஒற்றை ஆட்சி மொழி - அலுவல்மொழி இல்லை! பதினைந்து தேசிய இனங்களின் தாய்மொழிகளும் ஆட்சி மொழிகளே! சுப்ரீம் சோவியத் நாடாளுமன்றத்தில் இந்த 15 மொழிகளிலும் பேசலாம். இத்தனைக்கும் இரசிய மொழி பேசுவோர் சோவியத் நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 44 விழுக்காட்டினர்! ஆனாலும் அது இணைப்பு மொழியாகவோ, ஒற்றை ஆட்சி மொழியாகவோ ஆகக் கூடாது என்று இனச் சமநிலை காத்தார் இரசிய இனத்தில் பிறந்த லெனின்! ஆனால் இங்கு, இந்திய தேசிய காங்கிரசில் அப்படி ஒரு சமநிலை - சனநாயகத் தலைவர் இல்லை. இந்திய தேசியக் காங்கிரசு அனைத்திந்திய அளவில் பரவி வளர்ந்த தொடக்க காலத்திலேயே அதன் தலைமையை ஆரிய பிராமண- ஆரிய வைசிய - இந்தி ஏகாதிபத்தியவாதிகள் கைப்பற்றிக் கொண்டனர்.

காங்கிரசில் லெனின் இல்லையே என்று நான் கவலைப்படவில்லை. இந்திய கம்யூனிஸ்ட்டுக் கட்சியில், சி.பி.எம், எம்.எல் கட்சிகளில் லெனின் இல்லையே என்ற வருத்தம் இருக்கிறது. லெனின் அளவுக்கு கம்யூனிசக் கருத்தியல் வளர்ச்சி கொண்ட அறிஞர் இந்தியக் கம்யூனிஸ்ட்டு கட்சிகளில் உருவாகாவிட்டாலும், பல்தேசிய இன இந்தியாவில் லெனினது கூட்டரசுக் கொள்கையை - மொழிக் கொள்கையை - இனத் தன்னுரிமைக் கொள்கையை முன்வைக்கக் கூடிய ஒரு தலைவர் கூட உருவாகவில்லையே!

“அனைத்திந்தியம்” பேசும் கம்யூனிஸ்ட்டுக் கட்சிகளின் தலைவர்கள், காங்கிரசு, பா.ச.க. கட்சிகளின் தலைவர்களுடன் இந்திய தேசிய - பாரத தேசிய ஒருமை வாதத்தில் போட்டி போடுகின்றனர். “நாங்கள்தான் உண்மையான இந்தியத் தேசியவாதி” என்கின்றனர். சாரத்தில் இது ஆரிய - பிராமண பாரத தேசியவாதம்தானே!

மொழி - இன – தாயகங்களுக்கு, பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமை லெனின் வழங்கியதால்தான் சோவியத் ஒன்றியம் 15 நாடுகளாகப் பிரிந்து போய்விட்டது என்று தோழர்கள் கூறக்கூடும். சோவியத் ஒன்றியம் 1917 முதல் 1991 வரை, 72 ஆண்டுகள் நீடித்ததற்குக் காரணமே லெனின் ”மாநிலங்களுக்கு” வழங்கிய தன்னுரிமையே!

“இரசிய இனத்திற்கு எப்போதுமே “மகாருஷயர்” என்ற இன ஆணவம் உண்டு. அது கூடாது” என்றார் “மகா ருஷிய” இனத்தில் பிறந்த லெனின். ஆனால் ஜார்ஜிய இனத்தில் பிறந்த ஸ்டாலின் தமது ஆட்சியில், இரசிய மொழி மேலாதிக்கம், இரசிய இனப் பெருமிதங்களை வளர்த்து தன்னை மகா ருஷியராகவே காட்டிக் கொண்டார். அவருக்குப் பிறகு வந்த குருசேவ், பிரஷ்னேவ் ஆட்சிக் காலங்களில், இரசிய இன - மொழி ஆதிக்கம் மேலோங்கியது. ஜார்ஜிய குடியரசின் கம்யூனிஸ்ட்டுக் கட்சிச் செயலாளராக (மாநிலச் செயலாளராக) - இரசிய குடியரசைச் சேர்ந்த ரசிய மொழிக்காரரை அமர்த்தினார்கள். இப்படி எத்தனையோ வடிவங்களில் இரசிய ஆதிக்கம்! கோர்பச்சேவ் ஆட்சிக் காலத்தில் தங்குதடையற்ற கருத்துரிமை வழங்கப்பட்டபோது, அடக்குமுறைக்கு அஞ்சி அடக்கிவைத்திருந்த விடுதலை உணர்ச்சி எல்லாக் குடியரசுகளிலும் வெடித்தது; 15 நாடுகளும் பிரிந்தன. அது தவறல்லவே!

இந்தியாவையும் பாக்கித்தானையும் எடுத்துக் கொள்ளுங்கள். இவ்விரு நாட்டிலும் பல்வேறு தேசிய இனங்கள் ஆயுதந்தாங்கிய விடுதலைப்போர் நடத்திக் கொண்டுள்ளன. இந்த ஆயுதப் போராளிகளை ஒடுக்கவே இவ்விரு நாடுகளின் இராணுவமும் முதன்மை கொடுக்க வேண்டியதுள்ளது.

பாக்கித்தானிலிருந்து பிரிந்து 1971-இல் போர்க்களத்தில் கிழக்குப் பாக்கித்தான் உருவானது; வங்காள தேசம் ஆனது!

இவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டுமானால், இந்தியாவில் தேசிய இனங்களுக்குத் தன்னுரிமை வழங்க வேண்டும் தோழர்களே!

1946-வாக்கில் காந்தியடிகளை நேர்காணல் எடுத்த வெளிநாட்டுச் செய்தியாளர் “பல நாடுகளாக இருக்க வேண்டிய பல மொழி – இனங்களை, விடுதலை பெற்ற இந்தியாவில் சனநாயக வழியில் எப்படி ஒற்றுமையாக வைத்திருக்க முடியும் என்று கேட்டார். அதற்கு விடையளித்த காந்தியடிகள், “இவையெல்லாம் தனிநாடுகளாக இருந்தால் என்னென்ன உரிமைகளை அனுபவிக்குமோ அவ்வளவு உரிமைகளையும் இந்தியாவுக்குள் அனுபவிக்க உரிமை வழங்கப்படும். ஆனால், பிரிந்து மட்டும் போகக் கூடாது என்ற நிபந்தனை இருக்கும்” என்றார்.

இவற்றை யெல்லாம் எண்ணிப்பாருங்கள் தோழர்களே!

*"ஆர்.எஸ்.எஸ்" பா.ச.க பாசிசத்தின் இனம் எது ?*
==========================

இடதுசாரித் தோழர்களே, எனது இந்த வினாவிற்கு அல்லது ஐயத்திற்கு விடை சொல்லுங்கள்! ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாசக வை பாசிச அமைப்பு - நவபாசிச அமைப்பு என்று வரையறை செய்துள்ளீர்கள். இதில் எனக்கு மறுப்பில்லை.
பாசிசம் என்பது எப்போதும் குருதி உறவுள்ள ஓர் இனத்தின் அடித்தளத்தில் நின்று கொண்டு மற்ற அண்டை அயல் இனங்களை ஆதிக்கம் செய்யும்! இட்லர் செர்மானிய ஆரிய இன வெறியை வெளிப்படையாகப் பேசினார். ஆரிய இனம் உலகை ஆளப்பிறந்த இனம் என்றார். ஆரிய இனம் என்பது உண்டா என்ற ஆராய்ச்சியில் இறங்க வேண்டாம். அவர்கள் குருதிவழிப்பட்ட ஒரு தனி இனத்தை அப்பெயரால் அழைத்துக் கொள்கிறார்கள். மற்ற இனங்கள் அடிமைப்படுத்தப்பட வேண்டிய அயல் இனங்கள் என்று கருதுகின்றார்கள். அதுதான் இங்கு தர்க்கத்தின் சாரம்.
அதேபோல் இத்தாலியின் முசோலினி “ஸ்பாகியோ விட்டேல் (வாழும் இடம்)” என்ற தலைப்பில் இத்தாலி இன வாதத்தை முன்வைத்து “இத்தாலி பாசிசம்” என்ற பெயரிலேயே கொள்கைப் பிரகடனம் செய்தார். “யூகோஸ்லாவியாவின் காட்டுமிராண்டித் தனமான, தாழ்ந்த மக்களைக் கீழ்ப்படுத்தி ஆதிக்கம் செய்வதற்கு, வளர்ச்சியும் வலிமையும் கொண்ட இத்தாலி இனத்திற்கு உரிமை உண்டு. இது “இயற்கைச் சட்டம்” என்றார் முசோலினி!
ஆர்.எஸ்.எஸ்., பா.ச.க. அமைப்புகளின் பாசிசத்தின் ,"இன அரசியல்" என்ன என்று இதுவரை இடதுசாரிக் கட்சிகள் வெளிப்படையாகச் சொல்லாதது ஏன்?
“ஆரிய இனம்” என்ற மரபினம் வரலாற்றில் உண்டா, சமூக அறிவியல் வழிப்பட்ட இன இயல் ஆய்வுப்படி உண்டா என்று சிலர் எதிர்க்கேள்வி கேட்கக் கூடும். கைபர், போலன் கணவாய் வழியாக சிந்து சமவெளிக்குள் புகுந்தவர்கள் தங்களை ஆரியர்கள் என்று சொல்லிக் கொண்டார்கள். எந்த அடிப்படையில் சொல்லிக் கொண்டார்கள் என்ற ஆராய்ச்சி நமக்கு முக்கியமில்லை. அவர்கள் தங்களை உயர் இனம் என்றும் மற்றவர்களை இழிவுபடுத்தியும் செயல்பட்டனர். இன்றும் அந்த மனநிலையிலேயே 100 க்கு 90 விழுக்காடு பிராமணர்கள் வாழ்கிறார்கள்.
அந்த ஆரியர்களின் புனித மொழி சமற்கிருதம்! அந்த விளங்காத மொழியோ யாருக்கும் தாய்மொழியாய் இல்லை. புலம் பெயர்ந்த இந்தியாவில் ஆரியர்களின் தாயகமாக - தலைமையக இருப்பது வட இந்தியாவே; கங்கை, யமுனை பகுதிகளே! அவர்கள் உருவாக்கியதே வர்ணாசிரமப் பிரிவினைகள்் அதன்வழி உயர்வு தாழ்வுகள்; தீண்டாமை முதலியவை!
அவர்களின் வர்ணாசிரம தர்மத்தின்படி பிராமணர் - சத்திரியர் - வைசியர் என்ற மூன்று பிரிவுகள் ஆரியரில் உண்டு!
சூத்திரர் என்பவர்கள் அயலார்; கலப்பினத்தார்; இவர்களுக்குள் உள்ள ஓர் அடித்தட்டு பஞ்சமர்!
இந்த ஆரியத்தின் தத்துவத் தலைவராக விளங்கியவர் விநாயக தாமோதர சாவர்க்கர். ஆங்கிலேய ஆட்சியாளர்கள் முசுலிம், கிறித்தவர், பௌத்தர், சமணர் போன்ற மதங்கள் அல்லாத - , பலதெய்வ வழிபாடு கொண்ட மக்களைக் குறிக்க “இந்து” என்ற ஒரு மதப் பெயரை 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் அறிமுகப்படுத்தினார் .
இவர்களே இந்து பொது பெயரில் அழைக்கபட்ட மக்களே மிக பெரும்பான்மைனர் .சாவர்கர் அதை சுவீகரித்துக் கொண்டு அதன் தலைமை பிராமணர்களுக்குரியது என்ற தோரணையில் பரப்புரை செய்தார். அவர் 1922-இல் எழுதிய நூலில் "இந்துத்துவா " என்ற மத அரசியல் சொல்லை பயன்படுத்தினார்.

அடித்தது யோகம் என்று ஆனந்தக் கூத்தாடி, இந்து என்ற மதப்பெயரை ஏற்றுக் கொண்டு - அதன் தலைவர்களாக ஆரிய பிராமணர்கள் தங்களை அறிவித்துக் கொண்டார்கள். பல தெய்வ வழிபாட்டை வழக்கமாகக் கொண்டிருந்த பல ஆன்மிகப் பிரிவினரை ஒரே இந்து மதமாக ஆங்கிலேய அரசு அறிவித்ததால் நாம் பிழைத்துக் கொண்டோம் என்று கொண்டாடினார் காஞ்சி சங்கராச்சாரி யார் சந்திர சேகரேந்திரர். ("தெய்வத்தின் குரல்" முதல்பாகம்).

1922-இல் “இந்துத்துவா” என்று இந்துமத சித்தாந்தத்திற்குப் பெயர் சூட்டிய சாவர்க்கர் மராட்டிய உயர்வகுப்பு சித்பவன பிராமணர்!
எனவே, “இந்துத்துவா” என்ற சொல்லைப் பயன்படுத்தினால் அந்தந்த தலைப்பின் கீழ் வரக்கூடிய பெருந்திரளான பிராமணரல்லாத பட்டியல் வகுப்பினர், பிற்படுத்தப்பட்டோர், பிராமணரல்லாத முன்னேறிய வகுப்பினர் உள்ளிட்ட எல்லோரையும் தன் தலைமையின் கீழ் கொண்டுவர முடியும் என்று தந்திரம் செய்தது அக்ரகாரம்!

இப்போது இடதுசாரிகள் “இந்துத்துவா எதிர்ப்பு” என்ற சொற்கோவையைப் பயன்படுத்தினால், அவர்கள் நேசிக்கும் உழைக்கும் வர்க்கத் தமிழர்களையும் ஒருவகையில் பகைத்துக் கொள்வதாகும்; அது பாசகவிற்கும், ஆர்.எஸ்.எஸ் சுக்கும் பலனளிக்கும். இந்து மதத்தில் உள்ள உழைக்கும் மக்கள் இந்துத்துவா எதிர்ப்பை தங்கள் மத எதிர்ப்பாக கருத வாய்ப்பு உண்டு.
எனவேதான், அசலான பொருளிலும், ஆரிய - பிராமணியத்தை அடையாளப்படுத்தும் வகையிலும் ஆர்.எஸ்.எஸ். - பா.ச.க. கூறும் இந்துத்துவா என்பது ஆரிய-பிராமணியத்தின் முகமூடி என்கிறோம்!

தமிழ்நாட்டில் சொந்த இனத்தேசியமும் அதற்கான மொழியும் இல்லாத திராவிட வாதிகள் இந்துமத எதிர்ப்பு பேசுவார்கள் - இந்துத்துவா மிதவாதக் கட்சியான காங்கிரசுடனும் அதன் தீவிர வாதக் கட்சியான பாசகவுடனும் கூட்டணி சேர்வார்கள்! இதில் இடதுசாரிகளின் தனித்தன்மை என்ன?

தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஆர்.எஸ்.எஸ். பாசக அமைப்புகளை ஆரியத்துவா அமைப்புகள் என்றும் அவர்கள் முன்வைப்பது ஆரியத்துவா ஆதிக்க ஆன்மிகம் என்றும் உண்மையான பொருளில் அழைக்கிறது.
எனவே பாசக பாசிசம்
ஆரியத்துவா பாசிசம் ஆகும். அரசியலின் தாயகம் - தலைமை பீடம் இரண்டுமே வட இந்தியா! அதன் இதய பாகம் இந்தி மாநிலங்கள்! இம்மாநிலங்களில் உள்ள உழைக்கும் மக்கள், பட்டியல் வகுப்பு மக்கள் அனைவரும் இந்தி ஆதிக்க வெறியர்களே! தமிழ்நாடு உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியைத் திணிப்போரே! அவர்களுக்கான அரசே இந்திய அரசு!

தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட்டுக் கட்சிகளில் உள்ள - கம்யூனிஸ்ட்டுக் கட்சிகளை ஆதரிக்கின்ற, இடதுசாரித் தோழர்களே,
‘தேசிய இனங்களின் தன்னுரிமையை ஏற்காதவர்கள் - ஆதரிக்காதவர்கள் கம்யூனிஸ்ட்டுகளாக இருக்க முடியாது என்பது மட்டுமல்ல, சனநாயகவாதிகளாகக் கூட இருக்க முடியாது‘ என்று லெனின் கூறியதையும் எண்ணிப் பாருங்கள்!
.............

===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
==============================

Labels: , , , ,


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்