<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d6955529389241309188\x26blogName\x3d%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86.%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://thozharmaniyarasan.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com/\x26vt\x3d-8408640130511538487', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

" "மாறு வேடத்தில் வந்த மீத்தேன் திருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர்! " -- தோழர் பெ. மணியரசன்.

Tuesday, February 28, 2017
========================================
"மாறு வேடத்தில் வந்த மீத்தேன் திருடனை
நெடுவாசல் மக்கள் பிடித்தனர்!"
========================================
தோழர் பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை!
========================================

“காவிரியின் பால் சுரக்கும் அமுதக் கிண்ணம்” என்று பாவலர் தணிகைச்செல்வன் தஞ்சை மாவட்டத்தை ஒரு கவிதையில் பாராட்டியுள்ளார். “நெடுவாசல்” என்ற ஊரைப் பார்த்த போது இந்த வரிதான் நினைவுக்கு வந்தது.
“நெடுவாசல்” - தமிழர் தற்காப்பு எழுச்சியின் மற்று மொரு முகவரி! மற்றுமொரு மையம்! இந்தியாவுக்கே தெரிந்த பெயராயிற்று ‘நெடுவாசல்’!

நான் 23.02.2017 பிற்பகல், தோழர்களோடு நெடுவாசல் சென்றேன். தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமை செயற்குழு உறுப்பினர் நா. வைகறை, தஞ்சை இலெ. இராமசாமி, பட்டுக்கோட்டை இராசேந்திரன், நாடக வினோத் ஆகியோர் சென்றோம்.
அங்கு ஏற்கெ னவே களப்பணியில் செயல்பட்டுக் கொண்டிருந்த புதுக்கோட்டை மிசா. மாரிமுத்து, செறுவாவிடுதி சரவணன், நெடுவாசல் பசுமை இராமநாதன் ஆகியோருடன் நாங்கள் இணைந்து கொண்டோம்.
காவிரியின் கிளை ஆறான புதாறு பாய்ந்து வளம் பெருக்கிய ஊர் நெடுவாசல்! அவ்வூர் மட்டுமல்ல, அவ்வூரைச் சுற்றியுள்ள பல ஊர்களும் பசுந்தோப்பு களுக்குள்தான் குடி கொண்டுள்ளன. ஆற்றுநீரை வன்னெஞ்சக் கன்னடர்கள் தடுத்தாலும் ஊற்றுநீர், நெடுவாசல் வட்டாரத்தை ஊட்டி வளர்க்கிறது!
அந்த ஊற்று நீரையும் நஞ்சாக்கிட இந்திய அரசு, எரிவளிக் (எரிவாயு) குழாய்களை மண்ணுக்குள் இறக்குகிறது. ஏற்கெனவே திருவாரூர் நாகை மாவட்டங்களில் பெட்ரோலியம் எடுப்பதற்கும் எரிவளி எடுப்பதற்கும் இந்திய அரசு இறக்கிய குழாய்கள் மண்ணைப் புண்ணாக்கி, நிலத்தடி நீரை நஞ்சாக்கி, விளை நிலங்களை வேதிப்பொருட்களின் களமாக்கி, வேளாண்மை, குடிநீர் அனைத்தையும் பாழாக்கி வாழ்வுரிமையை பறித்தன. அடுத்து மீத்தேன் எரிவளி எடுக்க அம்மாவட்டங்களில் கீழைப் பேராற்றல் கழகம் (Great Eastern Energy Corporation Limited - GEECL) என்ற தனியார் நிறுவனத்தை இந்திய அரசு களமிறக்கியது.
வேளாண் அறிவியலாளர் நம்மாழ்வார் அவர்கள் அந்த மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட ஊர்களுக்குச் சென்று மக்களுக்கு விளக்கம் கூறி, மீத்தேன் ஆழக்குழாய்களைப் பிடுங்கி எறியும் போராட்டத்தைத் தொடக்கி வைத்தார். அவரின் மறைவுக்குப் பிறகு மீத்தேன் எதிர்ப்புப் போராட்ட அமைப்புகள் பல உருவாகி மக்களை எழுச்சி பெறச் செய்து மீத்தேன் தடுப்புப் போராட்டங்களை நடத்தி வருகின்றன. மாபெரும் மக்கள் எழுச்சியின் முன் மீத்தேன் நச்சுக்குழாய் பதிப்பை தொடர முடியவில்லை.
கீழைப் பேராற்றல் கழகம் அலுவலகத்தைக் காலிசெய்துவிட்டு காவிரி மண்டலத்தை விட்டு வெளியேறியது. மீத்தேன் எடுப்புத் திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளதாக இந்திய அரசு அறிவித்தது.
ஆனால் இப்போது “ஹைட்ரோ கார்பன்” எடுக்கும் திட்டம் என்று சொல்லிக் கொண்டு நெடுவாசல் பகுதியில் இந்திய அரசின் எண்ணெய் இயற்கை எரி வளிக் கழகம் (ஓ.என்.ஜி.சி) குழாய்கள் பதிக்க வந்தது.
பக்கத்து மாவட்டங்களில் மண்ணைப் புண்ணாக்கி வாழ்வுரிமை பறித்த திட்டம்தான் இங்கு வேறு பெயரில் வருகிறது என்பதைப் புரிந்து கொண்ட நெடுவாசல் பகுதி மக்கள் அத்திட்டத்தை எதிர்த்து வருகின்றனர். 
புதுக்கோட்டை மாவட்ட மாணவர்கள் இளைஞர்கள், பொது மக்கள் அனைவரும் “எண்ணை எரிவளிக் கழகமே வெளியேறு, எங்கள் மண்ணில் நச்சுக் குழாய்களை இறக்காதே” என்று முழங்கி வருகின்றனர். நெடுவாசல் வந்த இந்திய அரசின் எண்ணெய் எரி வளிக் கழக அதிகாரிகளை மக்கள் சூழ்ந்து முற்றுகை இட்டனர். பின்னர் அவர்களை வெளியேற்றினர்.

நெடுவாசல், அதை ஒட்டிய கருக்காகுறிச்சி உள்ளிட்ட சுற்றுவட்ட ஊர்களில் பல இடங்களில் பல்லாயிரக்க ணக்கான அடி ஆழத்திற்குக் குழாய்கள் இறக்கி நச்சு எரிவளி எடுப்பது இந்திய அரசின் திட்டம்! இதை 15.02.2017 அன்று இந்தியப் பெட்ரோலியத் துறை அமைச்சர் தருமேந்திர பிரதான் அறிவித்தார்.
“மீத்தேன் எடுக்கவில்லை; ஹைட்ரோ கார்பன் எரிவளி எடுக்கிறோம்” என்றார் அமைச்சர்.
நெடுவாசல் பகுதியைச் சேர்ந்த கல்வி கற்ற இளைஞர்கள் சென்னை உட்பட பல நகரங்களில் தொழில்நுட்பத்துறை உட்பட பல துறைகளில் பணியில் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் ஊரில் வேறு பெயரில் மீத்தேன் நச்சுக் குழாய்த் துளைகள் போடப் போகிறார்கள் என்பதை உணர்ந்து தங்கள் ஊர் மக்களை எச்சரித்தார்கள். சூழலியல் அமைப்பு களும் மீத்தேன் எதிர்ப்பு அமைப்புகளும் எச்சரித்தன.
நெடுவாசல் மக்கள் கொந்தளித்தனர். தமிழ்நாடெங் குமிருந்து தமிழர் மரபு காப்போர், சூழலியலார், தமிழ்த்தேசியர்கள், பல்வேறு அரசியல் இயக்கங்களைச் சேர்ந்தோர், மாணவர்கள், இளைஞர்கள் _- நச்சு எரிவளித் திட்டத்தை எதிர்த்து நெடுவாசலில் குவிந்த வண்ணமுள்ளனர்.
சங்ககாலத் தமிழர் சூழலியல் பார்வை, அறநெறி, தற்காப்பு வீர உணர்ச்சி ஆகியவை இக்காலத் தமிழர் வழியாக வெளிப்படுகின்றன. நம்மாழ்வார் தொடங்கி வைத்த மீத்தேன் எதிர்ப்பு, இயற்கை வேளாண்மைச் செயலாக்கம் எல்லாம் சங்ககாலத் தமிழர் வாழ்வியல் தொடர்ச்சிதான்!
சல்லிக்கட்டு உரிமை கோரிப் போராடிய மாண வர்கள், இளைஞர்கள் - ஆண்களும் பெண்களும் எழுப் பிய “தமிழன்டா” முழக்கமும் சங்ககாலத் தொடர்ச்சி தான்!
தமிழ்த்தேசியம் என்பது வெறும் இனவாதம் அன்று; சரியான மாற்று வாழ்வியல்!

மாறுவேடத்தில் மாட்டிக் கொண்டார்
-----------------------------------------------------------
மீத்தேனின் உடன்பிறப்புகளில் ஒன்றைத்தான் எடுக்கத் திட்டமிட்டுள்ளார்கள். “மீத்தேன்” என்ற பெயர் ஏற்கெனவே அம்பலப்பட்டு, அசிங்கப்பட்டு, விரட்டப்பட்ட ஒரு திட்டம் என்பதால், மாறுவேடம் புனைந்து Hydro Carbon - ஐட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் என்று இத்திட்டத்தை இந்திய அரசு அறிவித்தது.

ஐட்ரோ கார்பன் Hydro Carbon - என்பது மண் ணின் ஆழத்திற்குள் நீர்மமும் கரிமமும் கலந்து உருவாகக்கூடிய வேதிக்கலவைகளின் பொதுப் பெயர்!
பெட்ரோலியம் எடுப்பதற்காகவோ அல்லது இயற்கை எரிவளி (Natural Gas) எடுப்பதற்காகவோ பல்லாயிரம் அடிக்குக் கீழே குழாய் இறக்கும் போது, காற்று (வளி) வெளி வருகிறது. இவ்விரண்டின் கலவை விகிதத்தைப் பொறுத்து ஒவ்வொன்றும் ஒரு தனிப் பெயர் பெறுகிறது.

மீத்தேன் என்பது CH4 அதாவது 1 பங்கு கரிமமும் நான்கு பங்கு நீர்மமும் கொண்டது. C2H4 அதாவது இருபங்கு கரிமமும் ஆறுபங்கு நீர்மமும் சேர்ந்தால் அது ஈத்தேன் (Ethane). மீத்தேனின் உடன்பிறப்புகள்தான் ஈத்தேன், பென்டேன், புரோபேன், ஷேல் மீத்தேன், இயற்கை எரிவளி முதலியவை. இவற்றை எடுக்கும் முறை ஒன்றுதான்!
சிலவற்றை 500 அடி முதல் 5,000 அடிவரை குழாய் இறக்கி எடுப்பர். வேறு சிலவற்றை 5,000 முதல் 10,000 அடி வரை குழாய் இறக்கி எடுப்பர். நிலக்கரிப் படிவப் பாறைகளுக்கிடையே தங்கியுள்ள மீத்தேனை எடுக்கவும், வண்டல் பாறைகளுக்கிடையே தங்கியுள்ள ஷேல் மீத்தேனை எடுக்கவும், அல்லது வேறு வகை எரிவளியை எடுக்கவும் பயன்படும் தொழில்நுட்பம் ஒன்றே!
ஆயிரக்கணக்கான அடி ஆழத்தில் நிலத்திற்குள் படுக்கை வசத்தில் குழாய்களை நீட்டி, 600க்கும் மேற் பட்ட வேதிப்பொருள்கள் கலந்த நீரை நீரியல் விரிசல் முறையில் செலுத்துவது என்பதுதான் அந்தத் தொழில்நுட்பம்!
அறுநூறு வகை வேதிப்பொருள்கள் கலந்த அந்த நஞ்சு நீர் நிலத்தடி நீரை நஞ்சாக்கும்; மேல்தளத்தில் நிலத்தை நஞ்சாக்கும்; அந்நிலத்தின் மீது ஓடிவரும் அல்லது பெய்யும் மழை நீரை நஞ்சாக்கும்.
இந்த பாதிப்பைத்தான் நாகை, திருவாரூர் மாவட்டங்களில் நரிமணம், அடியக்க மங்கலம், களப்பால், கடமங்குடி, புலிவலம், கருப்பூர் முதலிய பல ஊர்களில் இன்று பார்க்கிறோம்.
நமக்குப் பெட்ரோலியம்
எரிவளி எப்படிக் கிடைக்கும்?
----------------------------------------------
பெட்ரோலியம், எரிவளி (மீத்தேன்) முதலியவற்றை கடலிலும் பாலை நிலப் பகுதியிலும்தான் எடுக்க வேண்டும், வேளாண் நிலங்களில், காலம் காலமாக மக்கள் குடியிருக்கும் ஊர்களில் இவை கிடைத்தாலும் எடுக்கக் கூடாது.

கனிமங்களும், உலோகங்களும் மக்கள் வாழ்க்கை யைச் செழுமைப்படுத்த மட்டும்தான் பயன்பட வேண்டும். மக்கள் வாழ்க்கையைப் பலியிட்டு, கனிமங் களை, உலோகங்களை எடுக்கக் கூடாது.
“சென்னை நகருக்குக் கீழே கோடிக்கணக்கான டன் அளவிற்குத் தங்கம் இருக்கிறது; பிளாட்டினம் இருக் கிறது’’ என்று கண்டுபிடிக்கப்பட்டால், உடனே சென்னை நகரைக் காலி செய்து விட்டு, தங்கம், பிளாட்டினம் எடுக்கச் சுரங்கங்கள் தோண்டுவார்களா? மாட்டார்கள்! 
ஏன்? சென்னையில் உள்நாட்டு, வெளிநாட்டுப் பெருமுதலாளிகளின் நிறுவனங்கள் இருக்கின்றன. பெரிய பெரிய முதலாளிகள், பெரிய பெரிய அதிகாரிகள், பெரிய பெரிய அரசியல் தலைவர்கள், ஆட்சித் தலைவர்கள், பெரிய பெரிய நடிகர்கள் என முக்கியப் பெரும்புள்ளிகள் இருக் கிறார்கள். அவர்களுக்கு வேலை செய்ய ஆட்கள் தேவை. எனவே சென்னையைக் காலிச் செய்ய மாட்டார்கள்!

ஆனால் நெடுவாசல் போன்ற எத்தனை சிற்றூர்கள் அழிந்தாலும் ஆட்சியாளர்கள், அதிகாரிகள், பெருநிறுவனங்களின் முதலாளிகள் கவலைப்படுவ தில்லை. ஆரியச் சாணக்கியன் தொடங்கி இன்றைய ஐரோப்பிய - அமெரிக்க ஏகபோக முதலாளியப் பொருளியல் வல்லுநர்கள் வரை “ஒரு நாட்டைக் காப்பாற்ற ஓர் ஆட்சியைக் காப்பாற்ற பல ஊர்களை, பல நகரங்களை அழிக்கலாம்” என்ற கொள்கை உடையவர்கள்தாம்! அதை வெளிப்படையாகவே ஊடகங்களில் சொன்னார், பா.ச.க. தலைவர் இல. கணேசன்!
நமது தமிழ்த்தேசியமோ, சென்னை நகரத்தையும் அழிக்கக்கூடாது சிற்றூரையும் அழிக்கக்கூடாது; அதற்கேற்ற வாழ்வியல் முறைகளை, தொழில் உற்பத்தி முறைகளை வகுத்துக் கொள்ள வேண்டும் என்கிறது!
நுகர்வு வெறியை இலாப வெறியை முற்றிலுமாகக் கைவிட வேண்டும். நுகர்வும், இலாபமும் ஒரு வரம்புக்குள் இருக்க வேண்டும்.

வளர்ச்சித் திட்டங்களைத் தடுக்கலாமா?
---------------------------------------------------------------
விளைநிலங்களில் பெட்ரோலியம் எடுப்பது, எரிவளி எடுப்பது எல்லாம் வளர்ச்சித் திட்டங்கள் அல்லவா? அவற்றைத் தடுக்கலாமா? என்று ஆட்சியாளர்கள் வினா எழுப்புகிறார்கள்.

நெடுவாசல் அதை ஒட்டியுள்ள கருக்காக்குறிச்சி ஆகிய இரு ஊர்களுக்குள்ளும் சென்று சுற்றிப் பார்த்தோம். மக்களிடம் பேசினோம்.
இந்தப் பகுதி மிக மிக வளமான பகுதி; இயற்கை தன் செல்வத்தை வாரி வழங்கும் பகுதி. இங்கிருந்து பலாப்பழம், மாம்பழம், தேங்காய், எலுமிச்சை, பூக்கள் என ஏராளமாக ஏற்றுமதி ஆகின்றன. அத்தனை மரங்களும், செடி கொடிகளும் தழைத்துக் கிடக்கின்றன.
இங்குள்ள பசுமை இராமநாதன் தோப்பைப் பார்த் தோம். அதில் இலட்சக்கணக்கான மரங்கள் இருக்கின்றன.

சந்தனமரம், செம்மரம், தேக்கு, பர்மாத் தேக்கு, சீனாத் தேக்கு, ஆப்பிரிக்கா தேக்கு, குமிழ்த் தேக்கு, ரோஸ் உட், வேங்கை இன்னும் இன்னும் பல்வேறு வகை அரிய மரங்கள், விலை மிதிப்பு மிக்க மரங்கள் இருக்கின்றன; ஒரு மரம் இலட்சக்கணக்கான ரூபாய்க்கு விலை போகக் கூடிய தரங்களும் இருக்கின்றன, அம்மரங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன.
இவை மட்டுமல்ல நெல், நிலக்கடலை எனப் பல பயிர்கள் சாகுபடியாகின்றன. நிலத்தடி நீர் நிறைய இருக்கிறது. ஒரு வீட்டில் தண்ணீர் வாங்கிக் குடித்தேன் அவ்வளவு தெளிவான, குளிரான, தூய நீர்!
இவையெல்லாம் இவ்வூர்களின் மக்களை வாழ வைக்கின்றன. வெளியூர்களில் வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கும் பயன்படுகின்றன.
இவற்றை மேலும் வளர்த்து, விரிவுப்படுத்துவது வளர்ச்சித் திட்டமா? இவற்றை அழித்து, பெங்களூர்ப் பணமுதலை மல்லிகார்ச்சுனப்பா நிறுவனமான “ஜெம்” நிறுவனம் கொழுக்க, நச்சு நீர் உற்பத்தி செய்யும் ஐட்ரோ கார்பன் எடுக்க அனுமதிப்பது வளர்ச்சித் திட்டமா?
ஜே.எம். மல்லிகார்ச்சுனப்பா சித்தேசுவரா, பா.ச.க. நாடாளுமன்ற உறுப்பினராக இருமுறை இருந்தவர். 2009 -_ 2010 ஆண்டுகளில் கர்நாடக மாநில பா.ச.க துணைத் தலைவராக இருந்தவர். 2004லிருந்து 2014ஆம் ஆண்டுவரை, இவர் தான் பா.ச.க. நாடாளுமன்றக் குழுவின் பொருளாளர்! பா.ச.க.வின் பணச்சுரங்கம்! 2016 - சூலையில் இவர் இறந்துவிட்டாலும், இவரது “ஜெம்” நிறுவனம் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது.
தற்போது நெடுவாசலில் கொண்டுவரப்படவுள்ள ஐட்ரோ கார்பன் திட்டத்திற்காக நெடுவாசலில் 4,000 அடிக்குத் துளையிட்டு சோதனை நடத்த, கடந்த 2009ஆம் ஆண்டு அனுமதி வழங்கியது காங்கிரசு - தி.மு.க. கூட்டணி ஆட்சி! காங்கிரசு முன்வைத்த அத்திட்டத்தையே தற்போது பா.ச.க. செயல்படுத்தத் துடிக்கிறது.
இந்திய அரசில், காங்கிரசுக் கூட்டணி ஆண்ட போதும், இப்போது பா.ச.க. கூட்டணி ஆளுகின்ற போதும் அதன் ஒரே “வளர்ச்சிக் கொள்கை’’ ஏகபோக முதலாளிகளின் பெரு நிறுவனங்கள் கொழுக்க, வேளாண்மையைப் பலியிட்டு, உழவர்களை நிலத்தை விட்டு வெளியேற்றும் திட்டம்தான்!
சப்பான் நாட்டில் இரும்பு கிடைக்கவில்லை. வெளிநாட்டில் இரும்பு வாங்கித்தான் தொழில் வளர்ச்சி கண்டார்கள். நமக்குப் பெட்ரோலியம், எரிவளி எடுப்பது மக்கள் வாழ்வுரிமையைப் பறிக்கும் என்றால் நம்நாட்டில் கிடைக்கும் வேறு வளங்களைப் பயன்படுத்தி தேவையானவற்றை வெளிநாடுகளில் வாங்கிக் கொள்ள வேண்டும்.
நெடுவாசல் மட்டுமல்ல, விளைநிலங்களில் எங்கு நச்சுக் குழாய் இறக்கினாலும் தடுப்போம், விரட்டியடிப்போம்!

Labels: ,

“திராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா? வழிமாற்றியதா?” -- சென்னையில் நடைபெற்ற நூல் அறிமுக விழா!

Monday, February 27, 2017
=================================
தோழர் பெ. மணியரசன் எழுதிய...
=================================
“திராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை
வளர்த்ததா? வழிமாற்றியதா?”
=================================
சென்னையில் நடைபெற்ற நூல் அறிமுக விழா!
=================================

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அவர்கள் எழுதிய “திராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா? வழிமாற்றியதா?” - நூலின் அறிமுக விழா, சென்னையில் சிறப்புற நடைபெற்றது.
நேற்று (பிப்ரவரி 26) ஞாயிறு மாலை, சென்னை எழும்பூர் இக்சா அரங்கில் நடைபெற்று நிகழ்வுக்கு, தூயதமிழ்க்காவலர் கு.மு. அண்ணல் தங்கோ அவர்களின் பெயரன் திரு. செ. அருட்செல்வன் தலைமை தாங்கி உரையாற்றினார். முன்னதாக, தமிழர் கண்ணோட்டம் ஆசிரியர் குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி வரவேற்றார்.
சென்னை மாநிலக் கல்லூரி மேனாள் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் பி. யோகீசுவரன் நூலை வெளியிட, தென்மொழி ஆசிரியர் முனைவர் மா. பூங்குன்றன் முதல்படி பெற்றுக் கொண்டார். பின்னர், மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரி மேனாள் முதல்வர் முனைவர் த. மணி, ஊடகவியலாளர் திரு. கார்ட்டூனிஸ்ட் பாலா ஆகியோர் நூலை திறனாய்வு செய்து உரையாற்றினார். தமிழர் நலம் பேரியக்கத் தலைவர் இயக்குநர் மு. களஞ்சியம் சிறப்புரை நிகழ்த்தினார்.
நிறைவில், நூலாசிரியரும், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவருமான தோழர் பெ. மணியரசன் ஏற்புரை நிகழ்த்தினார். தமிழ்த்தேசியப் பேரியக்கச் செயல்பாட்டாளர் தோழர் செ. ஏந்தல் நன்றி கூறினார்.
அரங்கம் நிரம்பிய கூட்டமாக நடைபெற்ற இந்நிகழ்வில், தமிழின உணர்வாளர்களும், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.

Labels:

" அ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் இவர்கள்தான் தமிழர்களின் பிரதிநிதிகளா? " -- தோழர் பெ. மணியரசன் அறிக்கை!

Sunday, February 19, 2017
==============================================
அ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் 
இவர்கள்தான் தமிழர்களின் பிரதிநிதிகளா?
==============================================
தோழர் பெ. மணியரசன் அறிக்கை!
==============================================


தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று (18.02.2017) நடந்த நிகழ்வுகள், அ.இ.அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் சனநாயகத்தைப் பயன்படுத்திக் கொண்டு செயல்படும், தன்னலவாத – அராஜகக் கட்சிகள் என்பது மீண்டும் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. 

புதிய முதலமைச்சர் தேர்வு என்பது சனநாயக முறைப்படி இல்லாமல், சசிகலா ஆள்கடத்தல் கும்பலின் அராஜகத்தின் வெற்றியாக முடிந்துள்ளது. சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு பெரும்பான்மை இருக்கிறதா என்பதை அறிய, முதன்மை எதிர்க்கட்சி இரகசிய வாக்கெடுப்பு கோரிய போது, அ.இ.அ.தி.மு.க. உண்மையான சனநாயக அமைப்பாக இருந்திருந்தால், இரகசிய வாக்கெடுப்பை ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும். 

இரகசிய வாக்கெடுப்பின் மூலம் சனநாயக வழியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள், தலையை எண்ணும் முறையில் வெற்றி பெறுவது என்ன சனநாயகம்? தலைகளைக் கடத்திப் பல நாள் பதுக்கி வைத்திருந்து, சட்டப்பேரவைக்கு மந்தையாய் ஓட்டி வந்து – தன்னை வாங்கியவர்களின் கண்காணிப்பின் கீழ் கை தூக்கச் சொல்லியிருக்கிறார்கள். இது அ.தி.மு.க. பாணி சனநாயகம்! 

தி.மு.க. பாணி சனநாயகம் எப்படி இருந்தது? சட்டப்பேரவைக்குள் தகராறு செய்ய வேண்டும் என்ற திட்டத்துடன் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் வந்திருக்கிறார்கள். அதனால்தான், தங்களுடைய எதிர்ப்பை சனநாயக முறையில் வெளிப்படுத்துவதற்கு மாறாக, நாற்காலிகளைத் தூக்கி எறிவது, குப்பைக் கூடைகளைத் தூக்கி எறிவது, பேரவைத் தலைவரைப் பிடித்து இழுத்துத் தள்ளுவது, அவருடைய நாற்காலியில் தி.மு.க. உறுப்பினர்கள் போய் குந்திக் கொள்வது என்ற அராஜகங்களை தி.மு.க. அரங்கேற்றியது!

தி.மு.க. நடத்திய இந்த கலாட்டா எந்த வகையிலும், சனநாயக வழிமுறையாக இருக்காது. ஆனால், இந்த கலாட்டாவை ஸ்டாலின், சட்டப்பேரவைக்குள் நாங்கள் அறப்போராட்டம் நடத்தினோம் என்கிறார். தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வால் கொச்சைப்படுத்தப்படாத சொல்லாக இதுவரை “அறம்” இருந்தது. அதையும் கொச்சைப்படுத்தத் தொடங்கி விட்டார்கள். 

அ.இ.அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் பதவிப் போட்டியில் காட்டும் வேகத்தை, தமிழ்நாட்டு உரிமைகளைக் காப்பதில் ஒரு விழுக்காடுகூட காட்டவில்லை! அ.இ.அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் தங்களைத் திருத்திக் கொள்ளப் போவதில்லை. 

தமிழ்நாட்டு இன – மொழி – பண்பாட்டு உரிமைகளுக்கு கருத்துருவாக்கம் செய்ய, களப்போராட்டம் நடத்த முன் வந்திருக்கும் இளைஞர்கள் – மாணவர்கள் சரியான தமிழ்த்தேசிய மாற்று அரசியலை முன்னெடுத்து மக்களுக்கு நம்பிக்கை ஊட்ட வேண்டும். அ.இ.அ.தி.மு.க. – தி.மு.க. கட்சிகளை முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும் என்ற படிப்பினையைத்தான் தமிழர்களுக்கு, நேற்றைய சட்டப்பேரவை அராஜகங்கள் மீண்டும் நினைவூட்டியுள்ளன.

Labels: ,

"அ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் இவர்கள்தான் தமிழர்களின் பிரதிநிதிகளா?" --தோழர் பெ. மணியரசன் அறிக்கை!

==============================================
அ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம்
இவர்கள்தான் தமிழர்களின் பிரதிநிதிகளா?
==============================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
தோழர் பெ. மணியரசன் அறிக்கை!
==============================================
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று (18.02.2017) நடந்த நிகழ்வுகள், அ.இ.அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் சனநாயகத்தைப் பயன்படுத்திக் கொண்டு செயல்படும், தன்னலவாத – அராஜகக் கட்சிகள் என்பது மீண்டும் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. 

புதிய முதலமைச்சர் தேர்வு என்பது சனநாயக முறைப்படி இல்லாமல், சசிகலா ஆள்கடத்தல் கும்பலின் அராஜகத்தின் வெற்றியாக முடிந்துள்ளது. சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு பெரும்பான்மை இருக்கிறதா என்பதை அறிய, முதன்மை எதிர்க்கட்சி இரகசிய வாக்கெடுப்பு கோரிய போது, அ.இ.அ.தி.மு.க. உண்மையான சனநாயக அமைப்பாக இருந்திருந்தால், இரகசிய வாக்கெடுப்பை ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும். 

இரகசிய வாக்கெடுப்பின் மூலம் சனநாயக வழியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள், தலையை எண்ணும் முறையில் வெற்றி பெறுவது என்ன சனநாயகம்? தலைகளைக் கடத்திப் பல நாள் பதுக்கி வைத்திருந்து, சட்டப்பேரவைக்கு மந்தையாய் ஓட்டி வந்து – தன்னை வாங்கியவர்களின் கண்காணிப்பின் கீழ் கை தூக்கச் சொல்லியிருக்கிறார்கள். இது அ.தி.மு.க. பாணி சனநாயகம்! 

தி.மு.க. பாணி சனநாயகம் எப்படி இருந்தது? சட்டப்பேரவைக்குள் தகராறு செய்ய வேண்டும் என்ற திட்டத்துடன் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் வந்திருக்கிறார்கள். அதனால்தான், தங்களுடைய எதிர்ப்பை சனநாயக முறையில் வெளிப்படுத்துவதற்கு மாறாக, நாற்காலிகளைத் தூக்கி எறிவது, குப்பைக் கூடைகளைத் தூக்கி எறிவது, பேரவைத் தலைவரைப் பிடித்து இழுத்துத் தள்ளுவது, அவருடைய நாற்காலியில் தி.மு.க. உறுப்பினர்கள் போய் குந்திக் கொள்வது என்ற அராஜகங்களை தி.மு.க. அரங்கேற்றியது!

தி.மு.க. நடத்திய இந்த கலாட்டா எந்த வகையிலும், சனநாயக வழிமுறையாக இருக்காது. ஆனால், இந்த கலாட்டாவை ஸ்டாலின், சட்டப்பேரவைக்குள் நாங்கள் அறப்போராட்டம் நடத்தினோம் என்கிறார். தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வால் கொச்சைப்படுத்தப்படாத சொல்லாக இதுவரை “அறம்” இருந்தது. அதையும் கொச்சைப்படுத்தத் தொடங்கி விட்டார்கள்.
அ.இ.அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் பதவிப் போட்டியில் காட்டும் வேகத்தை, தமிழ்நாட்டு உரிமைகளைக் காப்பதில் ஒரு விழுக்காடுகூட காட்டவில்லை! அ.இ.அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் தங்களைத் திருத்திக் கொள்ளப் போவதில்லை. 

தமிழ்நாட்டு இன – மொழி – பண்பாட்டு உரிமைகளுக்கு கருத்துருவாக்கம் செய்ய, களப்போராட்டம் நடத்த முன் வந்திருக்கும் இளைஞர்கள் – மாணவர்கள் சரியான தமிழ்த்தேசிய மாற்று அரசியலை முன்னெடுத்து மக்களுக்கு நம்பிக்கை ஊட்ட வேண்டும். அ.இ.அ.தி.மு.க. – தி.மு.க. கட்சிகளை முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும் என்ற படிப்பினையைத்தான் தமிழர்களுக்கு, நேற்றைய சட்டப்பேரவை அராஜகங்கள் மீண்டும் நினைவூட்டியுள்ளன.

Labels: ,

"“நீங்கள் பின்பற்ற மட்டுமே பிறந்தவர்கள் இல்லை, வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள்!” -- மாணவர்களிடையே தோழர் பெ. மணியரசன் பேச்சு!

Saturday, February 18, 2017
===========================================
“நீங்கள் பின்பற்ற மட்டுமே பிறந்தவர்கள் இல்லை,
வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள்!”
===========================================
கோவை குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களிடையே
தோழர் பெ. மணியரசன் பேச்சு!
===========================================

கோவை குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியின் “தமிழ் மன்றம்” சார்பில், பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் பங்கேற்புடன் நேற்றும்(17.02.2017) இன்றும்(18.02.2017) இருநாட்களாக நடந்து வந்த “தமிழ் அறிவுத் திருவிழா – 2017” இன்று நிறைவு பெற்றது.
கல்லூரியின் தமிழ் மன்றம் சார்பில் நடைபெற்ற இவ்விழாவில், நேற்று கோவையைச் சுற்றியுள்ள பல்வேறு அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கவிதை, பேச்சு, கட்டுரை உள்ளிட்ட பல்வேறு திறனறிதல் போட்டிகள் நடைபெற்றன.
இரண்டாம் நாளான இன்று (18.02.2017), தமிழ்நாடு தழுவிய அளவில் பல்வேறு கல்லூரி மாணவ மாணவியர் பங்கேற்ற கவியரங்கம், பேச்சு, விவாதம், நாடகம், நடனம் உள்ளிட்ட திறனறிதல் போட்டிகள் நடந்தன. மாலை விழாவில் நிறைவரங்கம் நடைபெற்றது.
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் நிறைவரங்கில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, கருத்துரையாற்றியதோடு, போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கிப் பாராட்டினார். தமிழ் மன்றப் பொறுப்பாளர் பேராசிரியர் திரு. ப. சிவக்குமார், முன்னாள் மாணவரும், தொழில் முனைவோருமான திரு. சந்திப் நாகராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
சிறப்புரையாற்றிய தோழர் பெ. மணியரசன் பின்வருமாறு பேசினார்:
“தமிழ் மன்றம் நடத்தும் இவ்வாண்டு விழாவிற்குத் “தமிழ் அறிவுத் திருவிழா” என்று பெயர் சூட்டியிருக்கிறீர்கள். பாராட்டிற்குரிய தலைப்பு! விழா தொடங்கும் முன் போட்ட காணொலிக் காட்சியில், முத்தமிழ் நிகழ்ச்சி எனப் போட்டிருந்தீர்கள்.
தமிழ் மொழி என்றாலே அறிவு மொழி என்றுதான் பொருள். தமிழினம் ஒர் அறிவியல் சமூகம்! இயல், இசை, நாடகம் என்ற மூன்றையும் குறிக்கும் வகையில் முத்தமிழ் என்று நாம் சொல்கிறோம்.
இயல், இசை, நாடகம் என்ற இம்மூன்றும் உலகத்தின் பல மொழிகளிலும் இருக்கின்றன. ஆனாலும், அவை மூன்று ஆங்கிலம், மூன்று பிரஞ்சு, மூன்று டச்சு என்று போட்டுக் கொள்வதில்லை! தமிழர்கள் மட்டும் ஏன் முத்தமிழ் எனப் போட்டார்கள்? எதையும் நுணுகி ஆராய்ந்து வகுத்துத் தொகுக்கின்ற அறிவியல் முறை நம் முன்னோர்களிடம் இருந்தது.
இயல், இசை, நாடகம் மூன்றுக்கும் மூன்று வகை இலக்கணங்களைச் சொன்னார்கள். அதற்குள்ளும் இரண்டு வாழ்வியல் பிரிவுகள் பிரித்தார்கள். ஒன்று, அக இலக்கியம். இன்னொன்று, புற இலக்கியம்.
உலகில் பல மொழிகளில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அக இலக்கியம் என்ற தனிப் பிரிவு கிடையாது. இந்தியத் துணைக் கண்டத்தில், காவியங்களும் பல்வேறு இலக்கியங்களும் நிறைந்த மொழி என சமற்கிருதத்தைச் சொல்கிறார்கள். அந்த சமற்கிருதத்தில் நம்முடைய அகநானூறு, குறுந்தொகை, கலித்தொகை போன்ற அக இலக்கியம் கிடையாது. ஒரு அகத்துறையும் கிடையாது.
தமிழர்கள் எல்லாவற்றையும் ஆய்வு செய்து தொகுக்கக்கூடியவர்கள். ஒரு கருத்தோ ஒரு கோட்பாடோ சொன்னால், அதற்கு வரைவிலக்கணம் சொல்லக்கூடிய தருக்கவியல் பாங்கு தமிழர்களிடமே இருந்தது. மாணவர்களாகிய நீங்கள்கூட, யாராவது ஒரு கோட்பாட்டையோ புதிய கருத்தையோ சொன்னால் அதற்கு வரைவிலக்கணம் சொல்லுங்கள் என்று கேளுங்கள்.
இரண்டாயித்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பாக தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன் என்ற புகழ் பெற்ற பாண்டிய மன்னனுக்கு குட புலவியனார் என்ற புலவர் அறிவுரை கூறினார். மன்னவர்களைப் பொய்யாகப் புகழ்ந்து பாடுபவர்கள் அல்லர் நம் சங்கப்புலவர்கள்! இப்பொழுது உள்ளது போல் கவிஞர்கள், தமிழறிஞர்கள் அந்த காலத்தில், ஆட்சியாளர்களின் முதுகு சொரிந்து வாழவில்லை!
அந்த வகையில்தான் குடபுலவியனார் பாண்டிய நெடுஞ்செழியனைப் பார்த்து சொன்னார்: “உன் போர்க்கள வெற்றிகள், உனக்கு நிலைத்த புகழைத் தராது. மக்கள் உயிரைப் பாதுகாக்கும் செயல்கள்தான், உனக்குப் புகழைத் தரும். இறந்த பின்னும் உன் புகழை நிலை நிறுத்தும்” என்று சொல்ல வந்த குடபுலவியனார், சில வரையறுப்புகளைச் சொன்னார்.
“உயிர் என்பது உணவின் பிண்டம். அதாவது, உணவினால் இயங்குவது. உணவு என்பது நீரும் நிலமும் சேர்ந்தது. நிலத்தோடு நீரை இணைத்தவர்தான் உணவைக் கொடுத்து, உயிரைக் காத்தவர் ஆவார். எனவே, நீ ஏரி, குளங்களைப் பெருக்கி மக்களைக் காப்பாற்றினால், இம்மண்ணில் உன் புகழ் தங்கும். இல்லையேல் தங்காது” என்றார். இந்தப் பாட்டில், உயிர் என்றால் என்ன, உணவு என்றால் என்ன என்று வரைவிலக்கணம் தருகிறார்.
மாணவர்களாகிய நீங்கள் மற்றவர்கள் பேச்சை, பின்பற்றுவதற்கு மட்டுமே பிறந்தவர்கள் இல்லை! வழிகாட்டுவதற்குரிய உரிமையும், தகுதியும் படைத்தவர்கள் நீங்கள்! (கைதட்டல்) எனவே சீரழிந்து கிடக்கும் தமிழ்ச் சமூகத்தைத் தலை நிமிர்த்த, வழிகாட்ட வாருங்கள்!
உங்களிடம் புதிதாகத் தோன்றும் கருத்துகளை கூச்சப்படாமல், தயங்காமல், தாழ்வு மனப்பான்மை இல்லாமல் வெளிப்படுத்துங்கள். தவறாகச் சொல்லி விடுமோ என்று அச்சப்படாதீர்கள். ஒருவேளை, தவறாகப் போய்விட்டால், திருத்திக் கொள்ளலாம். அடுத்த தடவை சரியான கருத்தை வெளியிட முடியும்!
ஆங்கில அறிஞர் எமர்சன் “தன்னம்பிக்கை” என்ற தலைப்பிலே ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில், “உங்கள் சிந்தனையில் தோன்றும் புதிய கருத்துகளை தயங்காமல் வெளிப்படுத்துங்கள். தாழ்வு மனப்பான்மை காரணமாக அல்லது கூச்சம் – வெட்கம் ஆகியவற்றின் காரணமாக அதை வெளியே சொல்லாமல் இருந்தால், ஒரு சில ஆண்டுகள் கழித்து அதே கருத்தை இன்னொருவர் சொல்வார். அப்போது உங்கள் நிலை என்ன? இக்கருத்தை முதலில் சிந்தித்த நீங்கள், இன்னொருவர் சொன்ன பிறகு அதை ஏற்க வேண்டிய நிலைக்கு உள்ளாவீர்கள். அந்தக் கருத்து, அவருடையதாக இருக்கும்! எனவே, உங்களிடம் தோன்றும் சிந்தனைகளை அச்சப்படாமல் வெளிப்படுத்துங்கள்” என்றார். அதையேதான், உங்களிடத்தில் நான் சொல்கிறேன்.


முன்முயற்சி (Initiative) எடுப்பவர்களாக நீங்கள் இருக்க வேண்டும். சமூகத்தில் உள்ள முக்கியமான சிக்கலே முன்முயற்சி எடுப்போர் மிகமிகக் குறைவாக இருப்பதுதான்! சாலையில் ஒருவர் விழுந்து கிடந்தால், “அய்யோ விழுந்து கிடக்கிறாரே” என்று சொல்லிக் கொண்டே பலர் போய்க் கொண்டிருப்பர். அவர்களுக்கு இரக்க குணம் இல்லாமல் இல்லை! முன்முயற்சி எடுப்பதில் தயக்கம் இருக்கிறது. சிலருக்கு வெட்கம் அல்லது கூச்சம்கூட இருக்கும். பத்து நிமிடம் கழித்து அதே சாலையில் இருசக்கர வண்டியில் வந்த ஒருவர், வண்டியை நிறுத்திவிட்டு கீழே விழுந்து கிடப்பவரைத் தூக்குவார். உடனடியாகப் பலரும் அங்கே ஓடி வந்துவிடுவார்கள். ஒருவர் சோடா வாங்கிக் கொடுப்பார். இன்னொருவர் தண்ணீரை முகத்தில் தெளிப்பார். மற்றொருவர் விழுந்து கிடக்கும் அவரது இரு சக்கர வண்டியைத் தூக்கி நிறுத்துவார். இந்தச் செயல்கள் பத்து நிமிடங்களாக அவர் விழுந்து கிடந்தபோது, ஏன் நடக்கவில்லை? முன்முயற்சி எடுப்பதில் உள்ள குறைபாடுதான்! முன்முயற்சி எடுப்பவர் வந்தவுடன் மக்கள் கூடிக் கொண்டார்கள்.
நீங்கள் முன்முயற்சி எடுப்பவராக இருங்கள்! புதிய வரலாற்றை உங்களால் உருவாக்க முடியும்! நீங்கள் முன்முயற்சி எடுத்தால், தமிழ்ச்சமூகம் உங்களோடு சேர்ந்து கொள்ளும்! (கைதட்டல்)
அந்தக் காலத்தில், ஒற்றையடிப் பாதையில் பயணம் போன ஒருவர், அப்பாதையில் கிடந்த முள் கொத்தைக் கவனிக்காமல் மிதித்துவிட்டார். அது குத்தி விட்டது! அவர் உடனே நின்று காலிலிருந்த முள்ளை நீக்கிவிட்டுப் பயணத்தைத் தொடர்ந்தார். ஆனால், அந்த முள் கொத்து பாதையில் அதே இடத்தில் கிடந்தது. அரைமணி நேரம் கழித்து, இன்னொருவர் அந்தப் பாதையில் வந்தார். அவர் முள் கொத்தைக் கவனித்துவிட்டார். காலில் குத்திக் கொள்ளாமல் ஒதுங்கிப் போய்விட்டார். அரைமணி நேரம் கழித்து, மூன்றாவதாக ஒரு நபர் வந்தார். அவர் முள் கொத்தைப் பார்த்தார். அவர் அதை எடுத்து அருகிலிருந்த வேலியில் போட்டு விட்டுப் பயணத்தைத் தொடர்ந்தார். அந்த மூன்றாவது நபராக நீங்கள் இருங்கள்! (கைதட்டல்)”.
இவ்வாறு தோழர் பெ. மணியரசன் பேசினார். நிறைவில், தமிழ் மன்றப் பொருளாளர் மாணவர் கௌரி சங்கர் நன்றி நவின்றார்.

Labels: ,

“நீங்கள் பின்பற்ற மட்டுமே பிறந்தவர்கள் இல்லை, வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள்!” -- கல்லூரி மாணவர்களிடையே தோழர் பெ. மணியரசன் பேச்சு!

===========================================
“நீங்கள் பின்பற்ற மட்டுமே பிறந்தவர்கள் இல்லை,
வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள்!”
===========================================
கோவை குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களிடையே
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
தோழர் பெ. மணியரசன் பேச்சு!
===========================================
கோவை குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியின் “தமிழ் மன்றம்” சார்பில், பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் பங்கேற்புடன் நேற்றும்(17.02.2017) இன்றும்(18.02.2017) இருநாட்களாக நடந்து வந்த “தமிழ் அறிவுத் திருவிழா – 2017” இன்று நிறைவு பெற்றது.
கல்லூரியின் தமிழ் மன்றம் சார்பில் நடைபெற்ற இவ்விழாவில், நேற்று கோவையைச் சுற்றியுள்ள பல்வேறு அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கவிதை, பேச்சு, கட்டுரை உள்ளிட்ட பல்வேறு திறனறிதல் போட்டிகள் நடைபெற்றன. 

இரண்டாம் நாளான இன்று (18.02.2017), தமிழ்நாடு தழுவிய அளவில் பல்வேறு கல்லூரி மாணவ மாணவியர் பங்கேற்ற கவியரங்கம், பேச்சு, விவாதம், நாடகம், நடனம் உள்ளிட்ட திறனறிதல் போட்டிகள் நடந்தன. மாலை விழாவில் நிறைவரங்கம் நடைபெற்றது.
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் நிறைவரங்கில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, கருத்துரையாற்றியதோடு, போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கிப் பாராட்டினார். தமிழ் மன்றப் பொறுப்பாளர் பேராசிரியர் திரு. ப. சிவக்குமார், முன்னாள் மாணவரும், தொழில் முனைவோருமான திரு. சந்திப் நாகராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 

சிறப்புரையாற்றிய தோழர் பெ. மணியரசன் பின்வருமாறு பேசினார்:

“தமிழ் மன்றம் நடத்தும் இவ்வாண்டு விழாவிற்குத் “தமிழ் அறிவுத் திருவிழா” என்று பெயர் சூட்டியிருக்கிறீர்கள். பாராட்டிற்குரிய தலைப்பு! விழா தொடங்கும் முன் போட்ட காணொலிக் காட்சியில், முத்தமிழ் நிகழ்ச்சி எனப் போட்டிருந்தீர்கள். 

தமிழ் மொழி என்றாலே அறிவு மொழி என்றுதான் பொருள். தமிழினம் ஒர் அறிவியல் சமூகம்! இயல், இசை, நாடகம் என்ற மூன்றையும் குறிக்கும் வகையில் முத்தமிழ் என்று நாம் சொல்கிறோம். 

இயல், இசை, நாடகம் என்ற இம்மூன்றும் உலகத்தின் பல மொழிகளிலும் இருக்கின்றன. ஆனாலும், அவை மூன்று ஆங்கிலம், மூன்று பிரஞ்சு, மூன்று டச்சு என்று போட்டுக் கொள்வதில்லை! தமிழர்கள் மட்டும் ஏன் முத்தமிழ் எனப் போட்டார்கள்? எதையும் நுணுகி ஆராய்ந்து வகுத்துத் தொகுக்கின்ற அறிவியல் முறை நம் முன்னோர்களிடம் இருந்தது. 

இயல், இசை, நாடகம் மூன்றுக்கும் மூன்று வகை இலக்கணங்களைச் சொன்னார்கள். அதற்குள்ளும் இரண்டு வாழ்வியல் பிரிவுகள் பிரித்தார்கள். ஒன்று, அக இலக்கியம். இன்னொன்று, புற இலக்கியம்.
உலகில் பல மொழிகளில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அக இலக்கியம் என்ற தனிப் பிரிவு கிடையாது. இந்தியத் துணைக் கண்டத்தில், காவியங்களும் பல்வேறு இலக்கியங்களும் நிறைந்த மொழி என சமற்கிருதத்தைச் சொல்கிறார்கள். அந்த சமற்கிருதத்தில் நம்முடைய அகநானூறு, குறுந்தொகை, கலித்தொகை போன்ற அக இலக்கியம் கிடையாது. ஒரு அகத்துறையும் கிடையாது. 

தமிழர்கள் எல்லாவற்றையும் ஆய்வு செய்து தொகுக்கக்கூடியவர்கள். ஒரு கருத்தோ ஒரு கோட்பாடோ சொன்னால், அதற்கு வரைவிலக்கணம் சொல்லக்கூடிய தருக்கவியல் பாங்கு தமிழர்களிடமே இருந்தது. மாணவர்களாகிய நீங்கள்கூட, யாராவது ஒரு கோட்பாட்டையோ புதிய கருத்தையோ சொன்னால் அதற்கு வரைவிலக்கணம் சொல்லுங்கள் என்று கேளுங்கள். 

இரண்டாயித்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பாக தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன் என்ற புகழ் பெற்ற பாண்டிய மன்னனுக்கு குட புலவியனார் என்ற புலவர் அறிவுரை கூறினார். மன்னவர்களைப் பொய்யாகப் புகழ்ந்து பாடுபவர்கள் அல்லர் நம் சங்கப்புலவர்கள்! இப்பொழுது உள்ளது போல் கவிஞர்கள், தமிழறிஞர்கள் அந்த காலத்தில், ஆட்சியாளர்களின் முதுகு சொரிந்து வாழவில்லை! 

அந்த வகையில்தான் குடபுலவியனார் பாண்டிய நெடுஞ்செழியனைப் பார்த்து சொன்னார்: “உன் போர்க்கள வெற்றிகள், உனக்கு நிலைத்த புகழைத் தராது. மக்கள் உயிரைப் பாதுகாக்கும் செயல்கள்தான், உனக்குப் புகழைத் தரும். இறந்த பின்னும் உன் புகழை நிலை நிறுத்தும்” என்று சொல்ல வந்த குடபுலவியனார், சில வரையறுப்புகளைச் சொன்னார். 

“உயிர் என்பது உணவின் பிண்டம். அதாவது, உணவினால் இயங்குவது. உணவு என்பது நீரும் நிலமும் சேர்ந்தது. நிலத்தோடு நீரை இணைத்தவர்தான் உணவைக் கொடுத்து, உயிரைக் காத்தவர் ஆவார். எனவே, நீ ஏரி, குளங்களைப் பெருக்கி மக்களைக் காப்பாற்றினால், இம்மண்ணில் உன் புகழ் தங்கும். இல்லையேல் தங்காது” என்றார். இந்தப் பாட்டில், உயிர் என்றால் என்ன, உணவு என்றால் என்ன என்று வரைவிலக்கணம் தருகிறார். 

மாணவர்களாகிய நீங்கள் மற்றவர்கள் பேச்சை, பின்பற்றுவதற்கு மட்டுமே பிறந்தவர்கள் இல்லை! வழிகாட்டுவதற்குரிய உரிமையும், தகுதியும் படைத்தவர்கள் நீங்கள்! (கைதட்டல்) எனவே சீரழிந்து கிடக்கும் தமிழ்ச் சமூகத்தைத் தலை நிமிர்த்த, வழிகாட்ட வாருங்கள்!
உங்களிடம் புதிதாகத் தோன்றும் கருத்துகளை கூச்சப்படாமல், தயங்காமல், தாழ்வு மனப்பான்மை இல்லாமல் வெளிப்படுத்துங்கள். தவறாகச் சொல்லி விடுமோ என்று அச்சப்படாதீர்கள். ஒருவேளை, தவறாகப் போய்விட்டால், திருத்திக் கொள்ளலாம். அடுத்த தடவை சரியான கருத்தை வெளியிட முடியும்!

ஆங்கில அறிஞர் எமர்சன் “தன்னம்பிக்கை” என்ற தலைப்பிலே ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில், “உங்கள் சிந்தனையில் தோன்றும் புதிய கருத்துகளை தயங்காமல் வெளிப்படுத்துங்கள். தாழ்வு மனப்பான்மை காரணமாக அல்லது கூச்சம் – வெட்கம் ஆகியவற்றின் காரணமாக அதை வெளியே சொல்லாமல் இருந்தால், ஒரு சில ஆண்டுகள் கழித்து அதே கருத்தை இன்னொருவர் சொல்வார். அப்போது உங்கள் நிலை என்ன? இக்கருத்தை முதலில் சிந்தித்த நீங்கள், இன்னொருவர் சொன்ன பிறகு அதை ஏற்க வேண்டிய நிலைக்கு உள்ளாவீர்கள். அந்தக் கருத்து, அவருடையதாக இருக்கும்! எனவே, உங்களிடம் தோன்றும் சிந்தனைகளை அச்சப்படாமல் வெளிப்படுத்துங்கள்” என்றார். அதையேதான், உங்களிடத்தில் நான் சொல்கிறேன். 

முன்முயற்சி (Initiative) எடுப்பவர்களாக நீங்கள் இருக்க வேண்டும். சமூகத்தில் உள்ள முக்கியமான சிக்கலே முன்முயற்சி எடுப்போர் மிகமிகக் குறைவாக இருப்பதுதான்! சாலையில் ஒருவர் விழுந்து கிடந்தால், “அய்யோ விழுந்து கிடக்கிறாரே” என்று சொல்லிக் கொண்டே பலர் போய்க் கொண்டிருப்பர். அவர்களுக்கு இரக்க குணம் இல்லாமல் இல்லை! முன்முயற்சி எடுப்பதில் தயக்கம் இருக்கிறது. சிலருக்கு வெட்கம் அல்லது கூச்சம்கூட இருக்கும். பத்து நிமிடம் கழித்து அதே சாலையில் இருசக்கர வண்டியில் வந்த ஒருவர், வண்டியை நிறுத்திவிட்டு கீழே விழுந்து கிடப்பவரைத் தூக்குவார். உடனடியாகப் பலரும் அங்கே ஓடி வந்துவிடுவார்கள். ஒருவர் சோடா வாங்கிக் கொடுப்பார். இன்னொருவர் தண்ணீரை முகத்தில் தெளிப்பார். மற்றொருவர் விழுந்து கிடக்கும் அவரது இரு சக்கர வண்டியைத் தூக்கி நிறுத்துவார். இந்தச் செயல்கள் பத்து நிமிடங்களாக அவர் விழுந்து கிடந்தபோது, ஏன் நடக்கவில்லை? முன்முயற்சி எடுப்பதில் உள்ள குறைபாடுதான்! முன்முயற்சி எடுப்பவர் வந்தவுடன் மக்கள் கூடிக் கொண்டார்கள்.

நீங்கள் முன்முயற்சி எடுப்பவராக இருங்கள்! புதிய வரலாற்றை உங்களால் உருவாக்க முடியும்! நீங்கள் முன்முயற்சி எடுத்தால், தமிழ்ச்சமூகம் உங்களோடு சேர்ந்து கொள்ளும்! (கைதட்டல்)
அந்தக் காலத்தில், ஒற்றையடிப் பாதையில் பயணம் போன ஒருவர், அப்பாதையில் கிடந்த முள் கொத்தைக் கவனிக்காமல் மிதித்துவிட்டார். அது குத்தி விட்டது! அவர் உடனே நின்று காலிலிருந்த முள்ளை நீக்கிவிட்டுப் பயணத்தைத் தொடர்ந்தார். ஆனால், அந்த முள் கொத்து பாதையில் அதே இடத்தில் கிடந்தது. அரைமணி நேரம் கழித்து, இன்னொருவர் அந்தப் பாதையில் வந்தார். அவர் முள் கொத்தைக் கவனித்துவிட்டார். காலில் குத்திக் கொள்ளாமல் ஒதுங்கிப் போய்விட்டார். அரைமணி நேரம் கழித்து, மூன்றாவதாக ஒரு நபர் வந்தார். அவர் முள் கொத்தைப் பார்த்தார். அவர் அதை எடுத்து அருகிலிருந்த வேலியில் போட்டு விட்டுப் பயணத்தைத் தொடர்ந்தார். அந்த மூன்றாவது நபராக நீங்கள் இருங்கள்! (கைதட்டல்)”.

இவ்வாறு தோழர் பெ. மணியரசன் பேசினார். நிறைவில், தமிழ் மன்றப் பொருளாளர் மாணவர் கௌரி சங்கர் நன்றி நவின்றார்.

Labels:

"பவானியில் கேரள அரசு தடுப்பணை கட்டுவதை நிறுத்தவில்லையெனில், கோவை – திருப்பூர் – ஈரோடு மாவட்ட மலையாளிகளை கேரள அரசு திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும்” -- தோழர் பெ. மணியரசன் பேட்டி!

Friday, February 17, 2017
======================================
"பவானியில் கேரள அரசு தடுப்பணை
கட்டுவதை நிறுத்தவில்லையெனில்,
கோவை – திருப்பூர் – ஈரோடு மாவட்ட
மலையாளிகளை கேரள அரசு
திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும்”
======================================
கேரள தடுப்பணையை பார்வையிட்ட
பின் கோவையில் - தமிழ்த்தேசியப்
பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் பேட்டி!
======================================
“பவானியில் கேரள அரசு தடுப்பணை கட்டுவதை நிறுத்தவில்லையென்றால், கோவை – திருப்பூர் – ஈரோடு மாவட்டங்களில் வாழும் மலையாளிகளை கேரள அரசு திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும்” என தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கோவையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டு நீர் கூட வரக்கூடாது என்ற முடிவோடு, பவானி ஆற்றில் கேரள அரசு கட்டி ஆறு தடுப்பணைகள் கட்டி வருகிறது. கேரள மாநிலம் – தேக்குவட்டையில் கட்டப்பட்டு வந்த தடுப்பணையை, இன்று (17.02.2017) காலை தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் தலைமையிலான குழுவினர் நேரில் சென்று பார்த்து வந்தனர்.
தமிழ்த்தேசியப் பேரியக்க கோவை மாநகர்ச் செயலாளர் தோழர் விளவை இராசேந்தின், பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி, எழுத்தாளர் வான்முகில், தமிழக இளைஞர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் மாவீரன் உள்ளிட்ட தோழர்கள் இக்குழுவில் இடம்பெற்றிருந்தனர். 

அதன்பின் கோவை செய்தியாளர் மன்றத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்த தோழர் பெ. மணியரசன் பின்வருமாறு தெரிவித்தார்: 

“இன்று காலை கேரள மாநிலம் – அட்டப்பாடி அருகில் தேக்குவட்டையில் கேரள அரசால் தடுப்பணை கட்டப்பட்டு வரும் இடத்தை பார்வையிட்டோம். அங்கு தொடர்ந்து கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அங்கிருந்த ஊர் மக்கள் மற்றும் கட்டுமானப் பணியாளர்களை கேட்டபோது, பவானி ஆற்றில் இன்னும் ஐந்து இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். 

ஏற்கெனவே அங்கு பொறிக்காரி மடுவு என்ற 100 அடி ஆழமான இயற்கையான நீர்த்தேக்கம் இருப்பதாகவும், அதை வைத்து அம்மக்கள் தங்கள் குடிநீர் தேவைகளை நிறைவு செய்து கொள்வதாகவும் அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.

ஆனால் கேரள அரசு, இப்பகுதி மக்களின் குடிநீர் மற்றும் பாசன நீருக்காகவே தடுப்பணைகள் கட்டுகிறோம் என்று கூறுகிறது. உண்மையில், பல கிலோ மீட்டர்களுக்கு அப்பாலுள்ள கேரளப் பகுதிகளுக்கு பவானி நீரைக் கொண்டு செல்லும் முயற்சியாகவே, இந்தத் தடுப்பணைகளைக் கட்டி வருகிறது. இந்தத் தடுப்பணைகளில் தேங்கும் தண்ணீரை பெரிய அளவிலான பம்புகள் வைத்து கொண்டு செல்லத் திட்டமிடுகிறது. 

ஆற்று நீரைக் கொண்டு பாரம்பர்யமாக வேளாண்மை நடைபெற்று வந்த பகுதிகளுக்குத்தான் Riparian Right என்ற பாசன உரிமை பொருந்துமே தவிர, புதிதாகப் பாசன விரிவாக்கம் நடைபெறும் பகுதிகளுக்கு இது பொருந்தாது.
ஏற்கெனவே காவிரித் தீர்ப்பாயம், காவிரி ஆற்றில் தடுப்பணைகளைக் கட்டுவதற்கு முன், அத்தண்ணீரைப் பாரம்பர்யமாக பாசன நீராகப் பயன்படுத்தி வரும் கடைமடை மாநிலத்தின் அனுமதியைப் பெற வேண்டும் எனக் கூறுகிறது. இதை மீறும் வகையில்தான் ஏற்கெனவே ஆந்திர அரசு, பாலாற்றில் பல தடுப்பணைகளைக் கட்டி, தமிழ்நாட்டிற்கு ஒருசொட்டு நீர் கூட வரவிடாமல் தடுத்துள்ளது. கடைசியை அணையையும் புல்லூரில் கட்டிவிட்டது. 

தற்போது, கேரள அரசு அதேபோல் பவானி ஆற்றில் சட்ட விரோதத் தடுப்பணைகள் கட்டி, தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டுத் தண்ணீர்கூட வரவிடாமல் தடுக்க முற்பட்டுள்ளது. இதன் காரணமாக, கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் சற்றொப்ப 3 இலட்சம் ஏக்கர் சாகுபடி முற்றிலுமாக பாதிக்கப்படும். இம்மூன்று மாவட்டங்களிலுள்ள 1 கோடி மக்களின் குடிநீர் பறிக்கப்படும். ஒட்டுமொத்தமாக இம்மூன்று மாவட்ட மக்களின் வாழ்வுரிமை பறிக்கப்படும் அபாயமுள்ளது. 

கேரளத்திற்குத் தண்ணீர் வளம் ஏராளமாக உள்ளது. கேரளத்தில் அரபிக்கடலில் ஆண்டுக்கு 2,000 ஆ.மி.க. தண்ணீர் கடலில் கலக்கிறது என்று கணக்கிட்டிருக்கிறார்கள். அவர்கள் முயன்றால் பவானி நீரைத் தடுக்காமல், பிற பகுதி தண்ணீரைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆனால், தமிழ்நாட்டுக்கு அந்த வாய்ப்பில்லை. 

எனவே, கேரள அரசு பவானியின் குறுக்கே ஆறு தடுப்பணைகள் கட்டும் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். 

தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போட்டுதோடு ஒதுங்கிக் கொள்ளாமல், கேரள அரசுக்கும் – இந்திய அரசுக்கும் அரசியல் அழுத்தம் கொடுத்து, இத்தடுப்பணைகள் கட்டும் பணியை நிறுத்த வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர், இக்கோரிக்கைக்காக கேரள முதல்வரையும், இந்தியத் தலைமை அமைச்சரையும் நேரில் சந்தித்து அழுத்தம் கொடுக்க வேண்டும்.
காவிரித் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை மீறி கர்நாடக அரசு காவிரியில் அணைகள் கட்டுவதையும், ஆந்திர அரசு பாலாற்றில் அணைகள் கட்டுவதையும் இந்திய அரசு இதுவரை தடுக்கவில்லை. காவிரிச் சிக்கலில் உச்ச நீதிமன்றம், தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்புகளை செயல்படுத்தும் சட்டக்கடமையையும் இந்திய அரசு நிறைவேற்றவில்லை. தொடர்ந்து, தமிழினத்திற்கு எதிரான இனப்பாகுபாட்டு அணுகுமுறையை இந்திய அரசு கடைபிடித்து வருகிறது. இந்தச் சிக்கலிலும் இது தொடர்கிறது. 

இந்திய அரசும், கேரள அரசும் நடவடிக்கை எடுத்து பவானி ஆற்றில் அணை கட்டும் திட்டத்தைக் கைவிடச் செய்யவில்லையென்றால், தங்கள் வாழ்வுரிமையைக் காப்பாற்றிக் கொள்ள அறப்போர் நடத்துவரைத் தவிர தமிழர்களுக்கு வேறு வழியில்லை! 

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் மலையாளிகள் பல இலட்சம் பேர் வாழ்கிறார்கள்; தொழில் செய்கிறார்கள்; வேலை பார்க்கிறார்கள். அவர்களுக்கும் குடிநீர், குடும்ப நீர், தொழில் துறைக்கான நீர் பவானியிலிருந்துதான் கிடைக்கிறது. 

காவிரி உரிமைச் சிக்கலில் தீர்ப்பாயம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றின் ஆணைகளை செயல்படுத்தக் கர்நாடகம் மறுத்து வருவதன் மூலம், தமிழ்நாட்டில் 25 இலட்சம் ஏக்கர் நிலம் சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இருபது மாவட்டங்களுக்குக் குடிநீர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில், இந்திய அரசு இனப்பாகுபாடு பார்த்து, கர்நாடகத்தின் சட்டவிரோதச் செயல்களுக்குத் துணை நிற்கிறது; தீர்ப்பாயம் மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை செயல்படுத்தித் தமிழ்நாட்டு வாழ்வுரிமையைக் காக்க அது முன்வரவில்லை.

முல்லைப் பெரியாறு அணை வழக்கில் சிற்றணையைச் செப்பனிட்டு முழுக் கொள்ளளவான 152 அடி தண்ணீரைத் தமிழ்நாடு தேக்கிக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், சிற்றணைக்குக் கட்டுமானப் பொருள் எதையும் தமிழ்நாடு பொதுப்பணித்துறை கொண்டு செல்ல கேரள வனத்துறை அனுமதிக்கவில்லை. அதுமட்டுமின்றி, அணைக்கு அன்றாடம் நம் அதிகாரிகள் உரிமையுடன் சென்று வர முடியவில்லை. இதில், இந்திய அரசு தலையிட்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்த முன்வரவில்லை. இதிலும் இந்திய அரசு தமிழர்களுக்கு எதிரான இனப்பாகுபாடு அரசியல் நடத்துகிறது.
தமிழர்களுக்கு எதிரான இந்திய அரசின் இந்த இனப்பாகுபாடு பா.ச.க. ஆட்சியில் மட்டுமில்லை, காங்கிரசு ஆட்சியிலும் செயல்பட்டது.
எனவே, இந்திய அரசமைப்புச் சட்டம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றின் வழியாகத் தமிழர்களுக்குக் கிடைக்க வேண்டிய நீதி மறுக்கப்படும்போது, வாழ்வுரிமை பறிக்கப்படும்போது, தமிழர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று சிந்தித்தோம்.

பவானியில் புதிய அணைகள் கட்டும் திட்டத்தைக் கேரள அரசு கைவிடவில்லையென்றால், பவானித் தண்ணீரைப் பயன்படுத்தும் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையில் வாழும் மலையாளிகளைக் கேரள அரசு திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் கேட்டுக் கொள்கிறது. அவ்வாறு அழைத்துக் கொள்ள கேரள அரசு மறுத்தால், தமிழர்கள் இம்மூன்று மாவட்டங்களில் வாழும் மலையாளிகளின் வீட்டு வாசலுக்குச் சென்று கேரளாவுக்குத் திரும்பிச் செல்லுமாறு அறவழியில் அவர்களைக் கேட்டுக் கொள்ளும் மக்கள் இயக்கத்தைத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் நடத்தும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்”.

இவ்வாறு தோழர் பெ. மணியரசன் பேசினார்.
தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், தோழர்கள் திருவள்ளுவன், ஸ்டீபன்ராஜ், இராசேசுக்குமார், திருப்பூர் சிவக்குமார் உள்ளிட்ட பேரியக்கத் தோழர்கள் உடனிருந்தனர்.

Labels:

"காவிரியில் கர்நாடகம் புதிய அணை கட்டுவதைத் தடுத்திட இந்திய அரசுக்கு எதிராக தமிழர் ஒத்துழையாமை இயக்கம்!" -- தோழர் பெ. மணியரசன் வேண்டுகோள்!

Thursday, February 16, 2017
====================================
காவிரியில் கர்நாடகம் புதிய அணை
கட்டுவதைத் தடுத்திட
இந்திய அரசுக்கு எதிராக
தமிழர் ஒத்துழையாமை இயக்கம்!
====================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
தோழர் பெ. மணியரசன் வேண்டுகோள்!
====================================
காவிரியில் கசிவு நீர்கூட தமிழ்நாட்டுக்கு வராமல் தடுப்பதற்கு மேக்கேத்தாட்டுப் பகுதியில் புதிய அணை கட்டும் திட்டத்திற்கு, ரூபாய் 5,912 கோடி கர்நாடக அமைச்சரவை ஒதுக்கீடு செய்துள்ளது என்று அம்மாநில சட்டத்துறை அமைச்சர் டி.பி. செயச்சந்திரா தெரிவித்துள்ளார். இந்தப் புதிய அணையின் மொத்தக் கொள்ளளவு 66.50 ஆ.மி.க. (TMC) என்றும், இதன் மின் உற்பத்தித் திறன் 400 மெகா வாட் என்றும் செயச்சந்திரா கூறியுள்ளார். 

வீணாகக் கடலில் சென்று கலக்கும் தண்ணீரைத் தேக்கிப் பயன்படுத்துவதற்காகவே புதிய அணை கட்டப் போவதாக அமைச்சர் செயச்சந்திரா கூறியுள்ளார். காவிரியில் கடலில் கலக்கும் அளவுக்கு தண்ணீர் பெருக்கு ஆண்டுதோறும் வருவது போலவும், அதைப் பயன்படுத்துவதற்கு புதிய அணை கட்டுவது போலவும் கர்நாடகம் கயிறு திரிக்கிறது. 

கடந்த 2005ஆம் ஆண்டு, மேட்டூர் அணை நிரம்பி சிறிதளவு தண்ணீர் கடலுக்குப் போனது. அதன் பிறகு, எட்டாண்டுகள் கழித்து 2013இல் மேட்டூர் அணை நிரம்பி சற்றொப்ப 20 ஆ.மி.க. அளவு தண்ணீர் கடலுக்குப் போனது. அதிலிருந்து இன்றுவரை தமிழ்நாட்டுக்குரிய தண்ணீரைக் கர்நாடகம் தடுத்துப் பயன்படுத்தி, தமிழ்நாட்டை வறட்சியாக்கும் வன்கொடுமைதான் தொடர்ந்து கொண்டுள்ளது. கடலுக்கு மிச்ச நீர் போனது என்ற பேச்சுக்கே இடமில்லை!
இவ்வாண்டு, வேளாண்மைப் பொய்த்து, கருகிய பயிரைப் பார்த்து இருநூறுக்கும் மேற்பட்ட உழவர்கள் காவிரி டெல்டா மாவட்டங்களில் தற்கொலை செய்து கொண்டார்கள் அல்லது மாரடைப்பால் இறந்தார்கள்.
இன்னொரு இமாலயப் பொய்யைக் கர்நாடக அமைச்சர் கூறியுள்ளார். தமிழ்நாட்டிற்குரிய 192 ஆ.மி.க. தண்ணீரைக் கொடுத்தது போக, மிச்சமுள்ள நீரைத் தேக்கத்தான் புதிய அணை என்பதே அந்தப் பொய்! 

காவிரித் தீர்ப்பாயம் 1991 சூன் 25இல் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பு, 05.02.2007 அன்று அளித்த இறுதித் தீர்ப்பு, உச்ச நீதிமன்றம் வழங்கிய ஆணைகள் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு போதும், கர்நாடகம் தமிழ்நாட்டிற்குக் காவிரி நீர் திறந்ததில்லை! நயவஞ்சகத்தை நஞ்சாகக் கொடும்பில் அடக்கிக் கொண்டு, நாக்கில் தேன் தடவி கர்நாடக அமைச்சர் தமிழ்நாட்டிற்குரிய தண்ணீரைத் திறந்துவிடுவோம் என்கிறார். 

ஆனாலும், கர்நாடக அமைச்சரின் வஞ்சகப் பேச்சில் வழுக்கிக் கொண்டு உண்மை வெளிவந்துவிட்டது! 

“கர்நாடகத்திலுள்ள நான்கு அணைகளில் நீர் நிரம்பிவிட்டால் மிச்ச நீரை தமிழ்நாட்டிற்குத்தான் திறந்துவிட வேண்டிய நிலை உள்ளது. கிருட்டிணராஜசாகர், கபினி அணைகளை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்பு இல்லை. எனவே, புதிய அணை கட்ட முடிவெடுத்தோம்” என்கிறார் செயச்சந்திரா. (“Karnataka ends up releasing excess water to Tamil Nadu from its four reservoirs. And there is no scope for expanding the KRS and the Kabini reservoirs. Hence, it is important to take up this project” he stated, Feb 16 - 2017, Deccan Herald News Service).

இப்பொழுது தமிழ்நாடு அரசும் தமிழ்நாட்டு மக்களும், தமிழ் மக்களின் வாழ்வுரிமையைக் காக்க என்ன செய்யப் போகிறோம் என்பதுதான் கேள்வி!
இதுவரை இந்திய அரசு, அது காங்கிரசு ஆட்சியாக இருந்தாலும், பா.ச.க. ஆட்சியாக இருந்தாலும் காவிரிச் சிக்கலில் காவிரித் தீர்ப்பாய முடிவுகளையோ, உச்ச நீதிமன்ற ஆணைகளையோ செயல்படுத்தாமல் இனப்பாகுபாடு காட்டி அவற்றை முடக்கிப்போட்டது. கர்நாடகத்தின் தமிழர் எதிர்ப்பு வெறிச் செயலுக்கு இந்திய அரசு துணை போனது. 

தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியாளர்களும், அ.தி.மு.க. ஆட்சியாளர்களும் இந்திய அரசோடு கூட்டணி கொண்டோ அல்லது நல்லுறவு வைத்துக் கொண்டோ செயல்பட்ட போதிலும், காவிரி உரிமையில் சட்டத்தையும் நீதியையும் நிலைநாட்ட அவர்களால் இதுவரை முடியவில்லை. இனி என்ன செய்யப் போகிறோம்? 

காவிரிச் சிக்கல் டெல்டா மாவட்டங்களின் உழவர் சிக்கல் என்று சுருக்கக்கூடாது. தமிழ் நாட்டில் சென்னையிலிருந்து, இராமேசுவரம் தீவு வரை, புதுவை – காரைக்கால் உட்பட இருபது மாவட்டங்களுக்குக் குடிநீர் அளிக்கிறது காவிரி! வேளாண்மை இழப்பு ஒரு பக்கம், குடிநீரே இன்றி தவிக்கும் நிலை இன்னொரு பக்கம். தமிழ்நாட்டைக் காலி செய்து விட்டு வெளியேறப் போகிறோமா, அல்லது அனைத்து மக்களும் அறப்போராட்டம் நடத்தி, காவிரி உரிமையை மீட்கப் போகிறோமா என்பதே நம்முன் உள்ள கேள்வி! 

கர்நாடகத்தின் சட்டவிரோதச் செயல்களை – இனவெறிச் செயல்களைத் தடுக்கும் சட்டக்கடமை இந்திய அரசுக்கு இருக்கிறது. அதற்கான ஆற்றலை இந்திய அரசமைப்புச் சட்டம் நடுவணரசுக்கு வழங்கியுள்ளது. ஆனால், அதுபோல் இந்திய அரசு செயல்படாமல் தமிழர்களை வஞ்சித்து, இனப்பாகுபாடு காட்டுகிறது. 

சட்டப்படி செயல்படும் வகையில் இந்திய அரசுக்கு நெருக்குதல் கொடுக்கும் மாபெரும் மக்கள் திரள் அறப்போராட்டங்களை தமிழர்கள் நடத்தியாக வேண்டும். இந்திய அரசுக்கு எதிராக தமிழ்நாடு தழுவிய தமிழர் ஒத்துழையாமைப் போராட்டம் தொடங்க வேண்டும்.
ஒத்துழையாமை இயக்கத்தின் கோரிக்கைகள் :
---------------------------------------------------------------------------
1. இந்திய அரசு, காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைத்திட வேண்டும்.
2. மேக்கேத்தாட்டில் கர்நாடகம் அணை கட்டுவது சட்டவிரோதம் என்று இந்திய அரசு, கர்நாடக அரசுக்கு அரசமைப்புச் சட்ட உறுப்பு 355இன் கீழ் கட்டளைக் கடிதம் அனுப்ப வேண்டும்.
சட்டப்படியான இவ்விரு கோரிக்கைகளையும் இந்திய அரசு நிறைவேற்றும்வரை, இந்திய அரசுக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம் நடத்த வேண்டும். 

“நீதி தவறிய கொடிய அரசுடன் ஒத்துழைப்பது பாவச்செயல்” என்று கூறி காந்தியடிகள் 1920இல் காலனி ஆட்சிக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம் நடத்தினார். இனப்பாகுபாட்டுடன் தமிழர்களை வஞ்சிக்கும் இந்திய அரசுக்கு எதிராக, காந்தியடிகள் காட்டிய வழியில், தமிழர் ஒத்துழையாமை இயக்கம் நடத்த வேண்டும். 

• தமிழ்நாட்டிற்கு வரும் இந்திய அமைச்சர்கள் அனைவருக்கும் கருப்புக்கொடி காட்டுவோம். அவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளைப் புறக்கணிப்போம்.
• இந்திய அரசு கொடுக்கும் விருதுகளைத் தமிழர்கள் வாங்க மறுப்போம். 

• காவிரியில் நீதியை நிலைநாட்டும் வரை தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் பணியாற்றும் தமிழர்கள் உள்ளிருப்பு வேலை நிறுத்தம் செய்ய வேண்டுகோள் விடுப்போம். 

• கர்நாடகப் பொன்னி அரிசி மற்றும் கர்நாடக உற்பத்திப் பொருட்களை வாங்க மறுப்போம். அவை தமிழ்நாட்டிற்குள் வராமல் தடுப்போம். 

• நெய்வேலியிலிருந்து கர்நாடகம் செல்லும் மின்சாரத்தைத் தடுத்து நிறுத்துவோம். 

தமிழ்நாட்டில் அனைத்து மக்களின் அறப்போராட்டமாக, இந்தத் தமிழர் ஒத்துழையாமை இயக்கத்தை செயல்படுத்துவோம். தமிழர் உரிமை மீட்போம்!

Labels:

" மயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணிக்கு வீரவணக்கம்! "

Wednesday, February 15, 2017
============================
மயிலாடுதுறை மாணவ ஈகி
சாரங்கபாணிக்கு வீரவணக்கம்!
============================
1965இல் - இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின் போது, தமிழ் மொழி காக்க தீக்குளித்த மயிலாடுதுறை மாணவத் தழல் ஈகி சாரங்கபாணி நினைவு நாளான இன்று, அவரது நினைவுத் தூணுக்கு, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் தலைமையிலான பேரியக்கத் தோழர்கள் வீரவணக்கம் செலுத்தினர்.
“தமிழன்னைக்கு எனது உயிரை துறக்கிறேன்” - இப்படி இறுதியாகக் கூறி தனது இறுதி மூச்சையடக்கியவன் மாணவ ஈகி சாரங்கபாணி. அப்போது அவனுக்கு வயது 20. மயிலாடுதுறையில் உள்ள முடிகொண்டான் ஆற்றங்கரையில் உள்ள மருதவஞ்சேரியில் 1945ஆம் ஆண்டு பிறந்தவர். மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரியில் வணிகவியல் இளங்கலை. முதலாமாண்டு படித்து வந்தவர்.
தமிழ்மொழி காக்க தன்னுடலில் மண்ணெண்ணெயை ஊற்றி உயிர் துறப்போம் என்று முடிவுக்கு வந்தான். அப்போது மற்றவர் நம்மை காப்பாற்றி விட்டால் என்ன செய்வது? என்று யோசித்தான்.
ஒரு மரத்தின் கீழ் நின்று உடல் நனையும்படி மண்ணெண்ணெயை ஊற்றினான். பிறகு தான் கொண்டு வந்திருந்த கயிற்றைக் தன்காலில் கட்டினான். கயிற்றின் மறுபகுதியை மரத்தில் கட்டினான். பிறகு தலை கீழாக தொங்கிக் கொண்டு இந்தி ஒழிக! தமிழ் வாழ்க! என்று முழக்கமிட்டு தனது உடலுக்கு தீ வைத்தான். உடல் முழுக்க எரிந்தது. சிறிது நேரத்திலேயே மரணம் அவனை முத்தமிட்டு அணைத்துக் கொண்டது.
சாரங்கபாணியின் தாயார் மண்ணில் உருண்டு என் மகனின் சாவிற்கு காரணமானவர்கள் நாசமாய் போகட்டும் என்று அழுது புலம்பினார். அதன் பிறகு நடந்த தேர்தலில் பேராயக்கட்சி தோற்று நாசமான கதை அறிவோம்.
42 ஆண்டுகள் கழித்து 2007ஆம் ஆண்டு தமிழக அரசின் சார்பில் மயிலாடுதுறை ஏ.வி.சி.கல்லூரி வளாகம் அருகில் சாரங்கபாணி நினைவுத்தூண் எழுப்பப்பட்டுள்ளது.
பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. விடுதலைச்சுடர், மயிலாடுதுறை அமைப்பாளர் தோழர் கு. பெரியசாமி, பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் க. தீந்தமிழன், தோழர்கள் ச. செந்தமிழன், நாடக வினோத், விக்னேசு உள்ளிட்ட பேரியக்கத் தோழர்களும் மாணவர்களும் இன்று அந் நினைவுத் தூணுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.
தழல் ஈகி சாரங்கபாணிக்கு வீரவணக்கம்!

Labels:

"முதலமைச்சர் பதவியை முடிவு செய்வதில் ஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன்? " தோழர் பெ. மணியரசன் அறிக்கை!



முதலமைச்சர் பதவியை முடிவு செய்வதில்
ஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன்?
========================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
தோழர் பெ. மணியரசன் அறிக்கை!



தமிழ்நாடு ஆளுநர் திரு வித்தியாசாகர் ராவ் இதுவரை தமிழ்நாடு முதலமைச்சர் தேர்வு அல்லது பதவியேற்புக்கான அறிவிப்பைச் செய்யாதிருப்பது, அவர் தமது பதவியை சட்ட விரோதச் செயல்களுக்குப் பயன்படுத்துகிறாரோ என்ற ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது. 

செயலலிதா – சசிகலாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் சில நாட்களில் தீர்ப்பு வர இருந்ததால், நேற்று (14.02.2017) வரை, தமிழ்நாடு முதல்வர் தேர்வு அல்லது பதவியேற்புக்கான அறிவிப்பை வெளியிடாமல் ஆளுநர் காலம் தாழ்த்தியதில் காரணம் இருந்தது. 

ஆனால், நேற்று காலை 10.40 மணியளவில் உச்ச நீதிமன்றம் அவ்வழக்கில் தீர்ப்புச் சொல்லி, சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தபிறகு, இன்று (15.02.2017) மாலை வரை முதல்வர் பதவி குறித்து முடிவு எதுவும் எடுக்காமல் ஆளுநர் மவுனம் காப்பது, அவருக்கு ஏதோ உள்நோக்கம் இருக்கிறது என்பதையே வெளிப்படுத்துகிறது. 

தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வில் பதவிச் சண்டையைப் பயன்படுத்தி, பா.ச.க. இங்கு வீங்கிப் பெருக்க வேண்டும் என கனவு காண்கிறது. இவ்வாறான பா.ச.க.வின் அரசியல் சதி நோக்கத்திற்கு கட்டுப்பட்டு நடப்பவர்தான் ஆளுநர் திரு வித்தியாசாகர் ராவ் என்றால், அவர் தனது மதிப்பைத் தானே கெடுத்துக் கொண்டவர் ஆவார். 

அரசமைப்புச் சட்டப்படியும், உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளின்படியும் தமிழ்நாட்டில் நிலவுகின்ற முதலமைச்சர் பதவிச் சிக்கலுக்கு தீர்வு காண ஆளுநருக்கு மூன்று வழிகள் இருக்கின்றன. 

1. முதல்வர் பதவிக்குப் போட்டியிடும் இருவரில் ஒருவரை சட்டப்பேரவைக் கூட்டத்தில், உறுப்பினர்களின் பெரும்பான்மை வாக்குகள் அடிப்படையில் தேர்வு செய்வது. அடுத்த சில நாட்களில் இதற்காக சட்டப்பேரவைக் கூட்டத்தைக் கூட்டுவதற்குரிய அறிவிப்பை உடனடியாக வெளியிடுவது. 

2. பெரும்பான்மை சட்டப்பேரவை உறுப்பினர்களால் வெளியில் தேர்வு செய்யப்பட்டு அவ் உறுப்பினர்களின் ஒப்புதல் கையொப்பத்துடன் ஆட்சி அமைக்க அனுமதி கோரி, ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ள திரு எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆட்சி அமைக்க உடனயாக வாய்ப்பளிப்பது. அவர் தமது பெரும்பான்மையை சட்டப்பேரவையில் மெய்ப்பிக்க கெடு விதிப்பது. 

3. இப்போது முதலமைச்சராக உள்ள திரு ஓ. பன்னீர்ச்செல்வத்திற்கு தமது பெரும்பான்மையை சட்டப்பேரவையில் நிறுவிட முதல் வாய்ப்பளிப்பது. அவருக்குப் பெரும்பான்மை இல்லையேல் அடுத்த வாய்ப்பை திரு எடப்பாடி பழனிச்சாமிக்கு அளிப்பது. 

இவ்வாறான முறைகளில் ஒன்றை உடனடியாக ஆளுநர் தேர்வு செய்து, ஒரு நிமிடமும் காலம் தாழ்த்தாமல் அறிவிப்பு வெளியிட வேண்டும். 

அ.இ.அ.தி.மு.க. சண்டையை இருபக்கமும் இருந்து கொண்டு, பா.ச.க. ஊதிப் பெருக்கி குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டு வரும் சதித் திட்டத்திற்கு ஆளுநர் இடம் கொடுக்கக் கூடாது என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். 

Labels:

"அரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் இளங்கோவடிகள் கூற்று இன்றும் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது!" தோழர் பெ. மணியரசன் அறிக்கை!

Tuesday, February 14, 2017

அரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் 

இளங்கோவடிகள் கூற்று
இன்றும் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது!
=========================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
தோழர் பெ. மணியரசன் அறிக்கை!

அரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ்ச் சான்றோர் இளங்கோவடிகள் கூறிய கூற்று, இன்று (14.02.2017) மீண்டும் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. 

சொத்துக் கொள்ளை வழக்கில் சசிகலா உள்ளிட்ட நான்கு பேருக்கு ஏற்கெனவே நீதிபதி குன்கா வழங்கிய தண்டனையை இன்று உச்ச நீதிமன்றம் உறுதி செய்து அளித்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது! 

நீதிபதி குன்கா அளித்த தீர்ப்பு அப்படியே செல்லும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருப்பதன் பொருள், செயலலிதாவும் குற்றவாளிதான் என்பதாகும். 

தமிழ்நாட்டில் சர்வாதிகார அரசியல் - குடும்ப அரசியல் – கொள்ளை அரசியல் முடிவுக்கு வந்து, உண்மையான சனநாயக அரசியல், அறம் சார்ந்த அரசியல் மலர அனைவரும் உறுதியெடுத்துக் கொண்டால், இத்தீர்ப்பின் பலன் ஒட்டுமொத்தத் தமிழினத்திற்கும் சிறந்த புதிய வாய்ப்புகளைத் திறந்து விடும். 

Labels:

"முதல்வர் ஓ. பன்னீர்ச்செல்வம் அரசு நிர்வாகத்தை முடக்கக்கூடாது! " தோழர் பெ. மணியரசன் அறிக்கை!

Saturday, February 11, 2017

==================================
முதல்வர் ஓ. பன்னீர்ச்செல்வம்
அரசு நிர்வாகத்தை முடக்கக்கூடாது!
==================================
தோழர் பெ. மணியரசன் அறிக்கை! 

அ.இ.அ.தி.மு.க. கட்சிக்குள் நடக்கும் அதிகாரப் போட்டியில், தமிழ்நாடு அரசு நிர்வாகம் முற்றிலும் முடங்கிப் போய் இருக்கிறது. 

முதலமைச்சர் ஓ. பன்னீர்ச்செல்வம் தன் வீட்டில், தனக்கு ஆதரவுப் பரப்புரையை நடத்திக் கொண்டிருக்கிறார். ஆதரவாளர்களை சேர்க்கும் பணியிலேயே 24 மணி நேரமும் இருக்கிறார். “புதிய முதல்வர்” என்று அ.தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர்களால் தீர்மானிக்கப்பட்ட சசிகலா, சட்டப்பேரவை உறுப்பினர்களை தலைநகருக்கு வெளியே கொண்டு போய் அடைத்து வைத்திருக்கிறார். அவரும் தனக்கு ஆதரவாளர்களை திரட்டும் வேலையிலேயே இருக்கிறார். 

இதனால், அரசு நிர்வாகம் செயல்படாமல் – பல தரப்பு மக்களும் துயரத்தில் வீழ்த்தப்பட்டு இருக்கிறார்கள். அன்றாடம் நடக்க வேண்டிய அலுவலகப் பணிகள், ஏற்கெனவே காலம் கடந்துவிட்ட வறட்சி நிவாரணப் பணிகள் நடைபெறாமல் தேங்கிக் கிடக்கின்றன. 

தமிழ்நாட்டின் ஆளுங்கட்சி அரசு எந்திரத்தை முடக்கிவிட்ட நிலையில், இதுதான் நல் வாய்ப்பு என்று கருதி கேரளம், பவானியில் ஆறு தடுப்பணைகள் கட்டும் பணிகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. ஆந்திர அரசு, பாலாற்றில் மேலும் புதிய தடுப்பணைகளைக் கட்டிக் கொண்டிருக்கிறது. சென்னைக்கு வர வேண்டிய கிருஷ்ணா குடிநீரையும் ஆந்திர அரசு குறைத்துவிட்டது. 

மிக முக்கியமாக, உச்ச நீதிமன்றத்தில் காவிரி வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. கர்நாடகத்தின் வல்லடி வழக்குகளை எதிர் கொள்ளக்கூடிய தயாரிப்புப் பணியை, நம் தரப்பில் வழக்காடும் வழக்கறிஞர்களுக்கு எடுத்துரைப்பதற்கு தமிழ்நாடு அரசு கவனம் செலுத்தவில்லை. 

ஓ.பி.எஸ். வீடும், போயஸ் தோட்டமும் சர்க்கஸ் கூடாரங்கள் போல் ஆகி, தொலைக்காட்சிகளின் நிரந்தர நேரடி ஒளிபரப்பில் இருக்கின்றன. 

“காபந்து முதலமைச்சர்” என்பவர் அரசு ஏற்கெனவே எடுத்த முடிவுகளை செயல்படுத்த கடமைப்பட்டவர். உடனடித் தேவைகளுக்காக முடிவுகள் எடுக்க வேண்டிய அதிகாரம் உள்ளவர். அரசமைப்புச் சட்டத்தில், “காபந்து அரசு” என்றோ, “காபந்து முதலமைச்சர்” என்றோ ஒரு வகையினம் கிடையவே கிடையாது.

ஓர் அமைச்சரவை பதவி விலகினாலோ அல்லது அதன் பதவிக்காலம் முடிந்தாலோ, அந்த இடைப்பட்ட காலத்தில், மக்களுக்கு அரசு செய்ய வேண்டிய கடமைகள் நின்று போகாமல் தொடர்வதற்காகவே, “காபந்து அமைச்சரவை” ஏற்பாடு உள்ளது. 

எனவே, இப்பொழுது ஓ. பன்னீர்ச்செல்வம் அவர்கள்தான் முதலமைச்சர்! அவர், உடனடியாகத் தலைமைச் செயலகம் சென்று தன் கடமைகளை நிறைவேற்ற வேண்டும். சசிகலா அவர்கள் தமிழ்நாடு அரசு நிர்வாகம் செயல்படாமல் முடங்குகின்ற வகையில், எந்தச் செயலிலும் ஈடுபடக் கூடாது. 

எனவே, இந்திய அரசமைப்புச் சட்டம் விதித்துள்ள அரசுக் கடமைகள் முடங்கி மக்கள் துன்புறாத வகையில், ஓ.பி.எஸ். செயல்பட வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். 

Labels:

"சசிகலா – பன்னீர்ச்செல்வம் : இருவரில் யாருக்கு உங்கள் வாக்கு ?" தோழர் பெ. மணியரசன் கட்டுரை

Friday, February 10, 2017

===================================
சசிகலா – பன்னீர்ச்செல்வம் : 
இருவரில் யாருக்கு உங்கள் வாக்கு?
===================================
தோழர் பெ. மணியரசன் கட்டுரை.

முன்னாள் முதலமைச்சர் செல்வி செயலலிதா சாவில் மர்மம் இருக்கிறது என்று அவர் கட்சிக்காரர்களும் பேசுகிறார்கள்; தமிழ்நாட்டில் அது ஒரு பொதுக் குற்றச்சாட்டாகவும் பேசப்படுகிறது. 

அடுத்து, அவருடைய சாவிற்குப் பிறகு கட்சித் தலைமை – ஆட்சித் தலைமை ஆகியவற்றைக் கைப்பற்ற நடக்கும் உட்கட்சிப் போட்டி, மிகக் கொடூரமாகவும் கீழ்த்தரமாகவும் நடந்து கொண்டுள்ளது. 

இந்த இரு அணிகளில் ஒன்றிற்குத் தலைமை தாங்கும் சசிகலாவும், இன்னொன்றிற்குத் தலைமை தாங்கும் ஓ. பன்னீர்ச்செல்வமும் மேற்கண்ட கொடூரங்களுக்கும் கேவலங்களுக்கும் உடனடிக் காரணங்களாகத் தெரியலாம். ஆனால், உள்ளதை உள்ளபடி பார்த்தால் – இவற்றிற்கெல்லாம் மூல காரணம் செயலலிதா தான்! 

செயலலிதாவின் அகவாழ்க்கை – அரசியல் வாழ்க்கை இரண்டுமே மர்மமானவை! அவர் வாழ்ந்த போயஸ் தோட்ட வேதா இல்லம், ஒரு மாளிகை! ஆனால், அது ஒரு மர்மக் குகையாகவே செயல்பட்டது. 

தமிழ்நாட்டில் அ.இ.அ.தி.மு.க.வின் “நிரந்தரப்” பொதுச் செயலாளராக இருந்த செயலலிதா மக்கள் செல்வாக்குமிக்கத் தலைவராகவும் முதலமைச்சராகவும் இருந்தார். அவர் மறைவுக்குப் பின் இவ்விரு பதவிகளுக்கும் போட்டி இடுபவர்கள் யார்? சசிகலாவும், ஓ. பன்னீர்ச்செல்வமும்!

சசிகலா அ.இ.அ.தி.மு.க.வில் எந்தப் பொறுப்பில் இருந்தார்? அக்கட்சியின் வெளியே தெரிந்த பொறுப்பு எதிலும், செயல்பாடுகள் எதிலும் அவர் இல்லை. ஆனால் அவரும் அவர் குடும்பங்களின் உறுப்பினர்களும் பரிந்துரைத்தவர்கள்தான் – அதிக அளவில் செயலலிதாவால் ஏற்கப்பட்டு, சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக – அமைச்சர்களாக இருக்கிறார்கள். 

அ.இ.அ.தி.மு.க.வில் தலைமைச் செயற்குழு, ஆட்சி மன்றக்குழு, அவைத்தலைவர், பொருளாளர் போன்ற அமைப்புப் பொறுப்பாளர்கள் செயலலிதா மற்றும் சசிகலாவின் எடுபிடிகளாகவும், அவர்களின் காலில் விழுந்து கும்பிடும் அண்டிப் பிழைப்போராகவும் இருந்திருக்கிறார்கள்.

எனவே, செயலலிதா மறைவுக்குப் பின் சசிகலாவிடம் செயலலிதாவின் அனைத்துச் சொத்துகளும், அ.இ.அ.தி.மு.க.வின் அனைத்து நிதி மற்றும் சொத்துகளும் இருக்கின்றன. ஆகவே, செயலலிதாவிடம் அண்டி வாழ்ந்த அதே அற்பர்கள் தங்களின் ”அரசியல்” வாழ்வின் தொடர்ச்சியாக இப்போது, சசிகலாவின் காலில் விழுந்து கும்பிட்டு இலாபமடைகிறார்கள். 

இதே ஓ. பன்னீர்ச்செல்வமும் சசிகலா காலில் விழுந்து கும்பிட்டு, பொதுச் செயலாளர் பொறுப்பேற்க பிரார்த்தனை செய்தவர்தான்!

ஒருவேளை அன்று அவர் சசிகலாவின் காலில் விழுந்தது, ஒரு நடிப்பே தவிர அது உண்மையாக அல்ல என்றால், அந்த நடிப்பு காலில் விழுந்ததைவிடக் குற்றச் செயலாகும்!

அ.இ.அ.தி.மு.க.வின் அவைத்தலைவர் மதுசூதனன் இப்போது அணிமாறி, ஓ.பி.எஸ். பக்கம் நிற்கிறார். இவர் சின்னம்மாவை பொதுச்செயலாளர், முதலமைச்சர் பொறுப்புகள் ஏற்கக் கெஞ்சி, அவர் காலில் விழுந்த காட்சி தொலைக்காட்சிகளில் ஓடிக் கொண்டுள்ளது. 

செயலலிதா, தமிழ்நாட்டிற்கு விட்டுச் சென்றுள்ள தலைவர்களைப் பாருங்கள்! சசிகலா, ஓ. பன்னீர்ச்செல்வம், மதுசூதனன் போன்றவர்கள்தான்! அ.இ.அ.தி.மு.க.வில் எவரும் ஒன்றிய அளவில்கூட தலைவராக உருவாகிவிடக் கூடாது என்று கவனமாக கட்டுப்படுத்தி வைத்தவர், செயலலிதா. அவர் கட்சியில் அவருக்கு அடுத்தநிலைத் தலைவர் ஒருவர் உருவாக வாய்ப்பே இல்லை! 

நேரு இறந்த பிறகு சாஸ்திரி தலைமை அமைச்சர் ஆனார். சாஸ்திரி இறந்த பிறகு இந்திராவுக்கும் மொரார்ஜிக்கும் இடையேதான் போட்டி! நீண்ட அரசியல் அனுபவமும் கற்றறிந்த தகுதியும் உள்ளவர்கள் அவ்விருவரும்! சசிகலா, ஓ.பி.எஸ்., மதுசூதனன் போன்றவர்கள் அல்லர் அவர்கள். 

காரணம், அவர்களுக்குத் தலைமை தாங்கியவர் பண்டித நேரு, காமராசர், சாஸ்திரி போன்றவர்கள்! 

முதலமைச்சராக இருக்கும்போதே அண்ணா இறந்தார். அவருக்குப்பின் ஆட்சித் தலைமைக்கும் கழகத் தலைமைக்குமான போட்டி கருணாநிதி – நெடுஞ்செழியன் இடையே ஏற்பட்டது. இருவரும் கழகத்தைக் கட்டி எழுப்பிடப் பாடுபட்டவர்கள். மக்களுக்காகச் சிறை சென்றவர்கள். இருவரும் கற்றறிந்த தகுதி உள்ளவர்கள்! 

சசிகலா – ஓ.பி.எஸ். பாணி அரசியல் வாரிசுப் போட்டி எப்பொழுது தமிழ்நாட்டில் தலைகாட்டியது? எம்.ஜி.ஆர். மறைந்த போது – எம்.ஜி.ஆர். மனைவி சானகி – எம்.ஜி.ஆர்ரோடு கதாநாயகியாக நடித்தவர் செயலலிதா என்ற உரிமையில் அப்போட்டி முன் வைக்கப்பட்டது. அதற்கும் ஒரு முன்னோடி உண்டு! 

கருணாநிதி தமிழ்நாட்டுத் தேர்தல் அரசியலில் குடும்ப வாரிசுரிமையைத் தொடக்கி வைத்தார். தி.மு.க.வில் திரைத்துறையிலும் அரசியலிலும் எம்.ஜி.ஆருக்குப் போட்டியாக – தம் மகன் மு.க. முத்துவை நுழைத்தார். 

1970களின் தொடக்கத்தில் ஆட்சியில் இருந்தபோது, தன் மகன் மு.க. முத்துவ – தனக்குப் பிறகான தலைவராக உருவாக்கிட, கட்சி அமைப்பையும் அரசு எந்திரத்தையும் பயன்படுத்தினார். பிறகு தம் மகன் மு.க. ஸ்டாலினை நிலை நிறுத்தினார். 

கருணாநிதியினால் தி.மு.க.வில் தொடக்கி வைக்கப்பட்ட குடும்ப அரசியல், எம்.ஜி.ஆருக்குப் பின் செயலலிதா – செயலலிதாவுக்குப் பின் சசிகலா, தீபா என்று வளர்ந்து கொண்டுள்ளது.

அ.இ.அ.தி.மு.க.வுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் தலைமை தாங்க தீபாவுக்கு என்ன தகுதி இருக்கிறது? அன்றாடம் தீபாவைச் சந்தித்துக் கும்பிட்டு தலைமை தாங்க வருமாறு அழைக்கும் தமிழர்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்டால், அவர்கள் என்ன சொல்வார்கள்?

“தகுதி இருக்கிறதா இல்லையா என்பது அடுத்த செய்தி. தீபாவுக்கு உரிமை இருக்கிறது. செயலலிதாவின் அசல் இரத்தத்துடன் தொடர்புடையது தீபா இரத்தம் – செயலலிதா குடும்பத்தைச் சேர்ந்த பெண்” என்பார்கள்!

“அக்காவோடு முப்பதாண்டுகள் வாழ்ந்தேன். அவரைக் கண்போல் காத்தேன்” என்பதைச் சொல்லி, கழகத்திற்கும் தமிழ்நாடு அரசுக்கும் தலைமை தாங்கும் உரிமையை சசிகலா கோரும்போது, அப்பதவிகளை செயலலிதாவின் உண்மையான இரத்தத்தின் இரத்தத்திற்குக் கொடுக்கக் கூடாதா?” என்பது அவர்களின் வாதம்!

தமிழ்நாட்டின் முதற்பெரும்கட்சியின் அரசியலில் தலைமை தாங்க சசிகலா, ஓ. பன்னீர்ச்செல்வம், தீபா ஆகியோர் முன்னிறுத்தப்படுவது சனநாயகத்தின் வீழ்ச்சி இல்லையா? தமிழர் நாயகரிகத்திற்கேற்பட்ட இழிவில்லையா? இதை அருவருக்காமல் – இவர்களில் ஒருவரை ஆதரிப்பது கடைந்தெடுத்த தன்னலமில்லையா? 

ஓ.பி.எஸ். பின்னால் பா.ச.க. இருக்கிறது; இந்துத்துவா இருக்கிறது; எனவே சசிகலாவை ஆதரிக்கிறோம் என்று சொல்பவர்களும், 

சசிகலாவின் பின்னால் ஏற்கெனவே அடையாளம் காணப்பட்ட அவரின் உறவினர்கள் என்ற குற்றக்கும்பல் இருக்கிறது; எனவே ஓ.பி.எசை ஆதரிக்கிறோம் என்று சொல்பவர்களும் தன்னலம் சார்ந்த சந்தர்ப்பவாதிகளாக இருப்பார்கள் – அல்லது தன்னம்பிக்கை அற்றவர்களாக இருப்பார்கள். 

சனநாயக நெறிகள், தமிழர் தன்மானம், தமிழர் அறம் ஆகியவற்றைத் தன்னால் முடிந்த அளவு சீரழித்துவிட்டார் செயலலிதா! அந்தச் சீரழிவின் இன்றையச் சின்னங்கள்தான் ஓ.பி.எசும் சசிகலாவும்! 

பா.ச.க.விடம் எளிதாக விலைபோகக் கூடியவர் ஓ.பி.எஸ்; கறாராகப் பேரம் பேசி விலை போகக் கூடியவர் சசிகலா! 

பா.ச.க., காங்கிரசு, இந்திய ஏகாதிபத்தியம் ஆகியவற்றிடம் ஏற்கெனவே விலை போனவர் கருணாநிதி! 

இவர்களிடையே ஒருவரைத் தேர்ந்தெடுப்பவர் – இப்பொழுது நிலவும் சீரழிவு அரசியலைத் தொடர்வதற்குத் தானும் ஒரு தூண் நடுபவராகவே இருப்பார்!

தவறானவர்களில் ஒருவரை நீக்கி இன்னொருவரைக் கொண்டு வரக்கூடாது. சரியான மாற்றை உருவாக்க வேண்டும். சரியான மாற்று என்பது ஒற்றைச் சர்வாதிகாரத் தலைவர் இல்லை! தமிழ்ச்சமூகத்தில் உருவாகும் விழிப்புணர்ச்சியின் வெளிப்பாடாக உருவாகி வளரும் புதிய இளைஞர்கள், மாணவர்கள், மாணவிகள்! 

நாளைக்கே இந்த மாற்று உருவாகி விடுமா என்று சிலர் கேட்பார்கள். நாளைக்கே பதவிக்கு வந்து சசிகலாவோ, ஓ.பி.எசோ, ஸ்டாலினோ எதைச் சாதிக்கப் போகிறார்கள்? கருணாநிதியும் செயலலிதாவும் எதைச் சாதித்தார்கள்? காவிரி, கச்சத்தீவு, கடல் உரிமை, முல்லைப் பெரியாறு, பாலாறு, பவானி, தமிழ் மொழி எனப் பறிபோன உரிமைகளில் எதை மீட்டர்கள்? ஈழத்தமிழர்கள் அழியாமல் காத்தார்களா? ஏழத்தமிழர்களைத்தான் விடுதலை செய்தார்களா? 

தலைமை இல்லாத மாணவர்கள், இளைஞர்கள் போராடி சல்லிக்கட்டு உரிமையை மீட்டார்கள். நம்மாழ்வார் தொடங்கி வைத்த மீத்தேன் எதிர்ப்புப் போராட்டம் கட்சிகளுக்கு அப்பாற்பட்டவர்களின் போராட்டங்களாய் விரிவடைந்து முதற்கட்ட வெற்றி பெற்றுள்ளது. கெய்ல் குழாய்ப் பதிப்பும் அப்படித்தான் தடுத்து நிறுத்தப்பட்டது. இவ்வாண்டு பொங்கல் விழாவுக்கான பொது விடுமுறையும் நடுவணரசு நிறுவனங்களில் பணியாற்றும் தமிழர்களின் போராட்டங்களாலும், பொது மக்களின் ஆவேசத்தாலும் பெறப்பட்டது. 

இன்றைக்கு சீரழிவின் சில சின்னங்களில் ஒன்று தனியாகவோ, அல்லது சில சின்னங்களின் கூட்டாகவே தலைமை தாங்கட்டும். 

எதிர்காலத்தில் தமிழர் வாழ்வுரிமை, தமிழ் மொழி உரிமை, தமிழர் தாயக உரிமை ஆகியவற்றை மீட்கவும், 

சனநாயக நெறிகள், தமிழர் தன்மானம், தமிழர் அறம் ஆகிய பண்புகளைக் கொண்ட ஆற்றல்கள் தனித்தனியே இருந்தாலும், அமைப்பாக இருந்தாலும் அந்தத் திசையில் முன்னேறிப் பயணிப்போம்; ஒருங்கிணைவோம்!

தமிழ்நாட்டில் உறுதியாக சரியான மாற்று உருவாகும்! மாற்றம் உறுதியாகும்!

Labels:


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்