<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/6955529389241309188?origin\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

"இடதுசாரித் தோழர்களே என்ன செய்யப் போகிறீர்கள்...?--- பெ. மணியரசன் தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்

Wednesday, March 26, 2025


இடதுசாரித் தோழர்களே

என்ன செய்யப் போகிறீர்கள்?
===================================
பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்
27.3.2025
==============≠=============


இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சி (மார்க்சிஸ்ட்டு), இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) போன்ற இடதுசாரிக் கட்சிகளில், சமூக மாற்றத்தை - நிகரமை (சோஷலிச) சமூகம் நிறுவுதலை இலட்சியமாகக் கொண்டு இணைந்திருக்கும், இயங்கிக் கொண்டிருக்கும் தோழர்களுக்காக இந்தக் கட்டுரையை எழுதுகிறேன்.
1960 - 70 களில் இந்தக் கட்சிகளுக்கு தேசிய சனநாயகப் புரட்சி, மக்கள் சனநாயகப் புரட்சி, புதிய சனநாயகப் புரட்சி நடத்தி - இந்தியாவுக்கேற்ற வகையில் நிகரமை (சோஷலிச) சமூகத்தை அமைப்பது என்ற இலட்சியம் இருந்தது. புரட்சியின் மூலம் இந்தியப் பெருமுதலாளிகளை, தரகு முதலாளிகளை, நிலக்கிழார்களை வீழ்த்துவது, அதிகாரத்தில் இருந்து வெளியேற்றுவது என்ற இலட்சியம் இருந்தது. இதன் பொருள் அவ்வகை வர்க்கங்களின் கட்சிகளை வீழ்த்தி வெல்வது - அதாவது புரட்சி செய்வது!
இந்த இலட்சியங்களை - இதற்கான நடைமுறை உத்திகளை - இறுதிப் போராட்ட வடிவங்களை இக்கட்சிகள் தங்களின் கட்சித் திட்டம் (Party Programme) மற்றும் கொள்கை அறிக்கை முதலிய நூல்களில் அச்சிட்டு வெளியிட்டன.
இப்போது உங்களின் இறுதி இலக்கு என்ன?
இப்போதும் அவையெல்லாம் உங்கள் கட்சிகளின் வேலைத் திட்டங்களாக - புரட்சித் திட்டங்களாக நீடிக்கின்றனவா தோழர்களே?
இந்தியாவில் இப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் சி.பி.எம், சி.பி.ஐ, எம்.எல் உள்ளிட்ட எந்த மார்க்சிய கட்சியாலும் அனைத்திந்தியப் புரட்சியை முன்னெடுக்க முடியாது என்ற உண்மையையாவது ஏற்றுக் கொண்டுள்ளீர்களா தோழர்களே? மாவோயிஸ்ட்டுக் கட்சிகள் சில இடங்களில் மலைவாழ் பழங்குடிகளிடையே வேரூன்றி, அப்பகுதியில் மட்டும் ஒருவகை நிர்வாகம் நடத்துவதை உத்தியாகக் கொண்டு ஆயுதப் போர் நடத்துகின்றன. அதுபற்றி இங்கு நான் பேசவில்லை. அது நம்முடைய செயல்பாட்டில் இல்லை!
பெருமுதலாளிய - நிலப்பிரபுத்துவ இந்திய அரசையும், அதன் பாளையப்பட்டுகளாக உள்ள மாநில அரசுகளையும் புரட்சி நடத்தி வீழ்த்தி, வெளியேற்றி, கம்யூனிஸ்ட்டுக் கட்சிகள் - பாட்டாளி வர்க்க மக்கள் சனநாயக ஆட்சியை இன்றில்லாவிட்டாலும், என்றாவது நிறுவ முடியும் என்று நினைக்கிறீர்களா, அல்லது தேர்தல் மூலமாகவே அப்படிப்பட்ட அனைத்திந்தியப் பாட்டாளி வர்க்க - சனநாயகப் புரட்சி அரசை இந்தியாவில் நிறுவிட முடியும் என்று நம்புகிறீர்களா தோழர்களே?
பாசகவுடன் பக்கச்சேர்மானம்,
காங்கிரசுடன் கைகோப்பு:

இப்போது கேரளாவைத் தவிர வேறெங்கும் தேர்தல் கூட்டணி மூலம் மாநில ஆட்சியைப் பிடிக்கும் நிலையில் கம்யூனிஸ்ட்டுகள் இல்லை. அவ்வளவு ஏன்? ஏற்பிசைவு பெற்ற எதிர்க்கடக்சியாக வரும் வலிமை கூட மேற்கு வங்கம் உட்பட எங்கும் இல்லை! சற்றொப்ப 85 ஆண்டுகளாக தொடர்ந்து இங்கு கம்யூனிஸ்ட்டு கட்சி செயல்படுகிறது.
அடுத்து, இந்தியப் பெருமுதலாளிகள் - பெருநிலக்கிழார்களின் எதேச்சாதிகார கட்சியாகவும், தேசிய இன மாநிலங்களின் உரிமை பறிப்புக் கட்சியாகவும் ஊழலின் உறைவிடமாகவும் விளங்கும் காங்கிரசுடன் இப்போது கூட்டணி வைத்துக்கொண்டு, பாசிச பாசக எதிர்ப்பை முன்வைக்கின்றன கம்யூனிஸ்ட்டுக் கட்சிகளும் இயக்கங்களும்.
இதற்குமுன் சிபிஐ, சிபிஎம் கட்சிகள் பா.சக கூட்டணியை ஆதரித்தன. அந்த அணியில் இருந்தன. இதனால், வி.பி.சிங் தலைமை அமைச்சரானார்.
இப்போது தமிழ்நாட்டில் சிபிஐ சிபிஎம், மா.லெ அமைப்புகள் பாசக பாசிசத்தை எதிர்ப்பதற்காக காங்கிரசு - திமுக கூட்டணியை ஆதரிக்கின்றன; “இண்டியா” கூட்டணியில் உறுப்பு வகிக்கின்றன.
மாமூல் நிலையைப் பாதுகாக்க - இடதுசாரி கட்சிகள் தி.மு.க. வுடன் அல்லது அ.தி.மு.க. வுடன் கூட்டணி சேர்கின்றன. ஆனால், அக்கழகங்கள் மாறிமாறி காங்கிரசு அல்லது பாசகவுடன் கூட்டணி சேர்கின்றன.
ஆளும் வர்க்க கட்சிகளான காங்கிரசும், பா.ச.க. வும் – தங்கள் தங்கள் ஆட்சியில் மேலும் பிற்போக்காக அரசை மாற்றி மாற்றி – புதிய மாமூல் நிலையைத் திணிக்கின்றன. அந்தப் புதிய “மாமூலை“ப் பாதுகாக்கவே, கம்யூனிஸ்ட்டுக் கட்சிகள் முழக்கம் கொடுக்கின்றன. பாசிச எதிர்ப்பு பேசுகின்றன! உண்மையான பொருளில், எந்த மாமூல் நிலையையும் கம்யூனிஸ்ட்டுகளால் பாதுகாக்க முடியவில்லை. மேலும்மேலும் ஏற்படும் சீரழிவுகளைத் தடுக்க முடியவில்லை.
பொதுவுடைமைத் தோழர்களே, இப்போது உங்களின் புரட்சி முழக்கம் என்ன? நிரந்தரமாக சனநாயகக் காப்பு முழக்கம்தானா? நிரந்தரமாகப் பாட்டாளிவர்க்கப் புரட்சியின் பகைக் கட்சிகளின் தலைமையில் கூட்டணி சேர்வதுதானா?
புரட்சிக்கான முன்தயாரிப்பு தற்காலிக ஏற்பாடே என்றும், ஒப்பீட்டளவில் குறைந்த அபாயமுடைய பகைவர்க்கக் கட்சியுடன் கூட்டணி சேர்வது தேவை என்றும் கூறி, “மாமூல்” பாதுகாப்பு முழக்கத்தை நிரந்தரமாக்கிக் கொள்வீர்களா? இந்தியப் பெருமுதலாளிய - ஏகபோக முதலாளிய சமூக அமைப்பின் மாமூல் நிலையை (Status Quo) நிரந்தரமாகக் கொள்வதுதான் உங்கள் புரட்சி முழக்கமா?
இப்போது இந்திய சமூக மாற்றத்திற்கான உங்களது மார்க்சிய - லெனினிய முழக்கமென்ன?
காரல் மார்க்சும், எங்கெல்சும் 1848-இல் எழுதி வெளியிட்ட கம்யூனிஸ்ட்டு கட்சி அறிக்கையில் (Manifesto of the Communist Party) கடைசி பத்தியில் மிக முக்கியமான வாசகம் ஒன்று உள்ளது:
“கம்யூனிஸ்ட்டுகள் தங்கள் நோக்கங்களையும் இலட்சியங்களையும் மறைத்துப் பேசுவதை இழிவாகக் கருதுகிறார்கள்”
ஃபிடல் காஸ்ட்ரோ கூறினார்: “உங்கள் இலட்சியம் என்ன என்பதை உங்கள் அணிகளுக்கும், அதேபோல் உங்கள் பகைவர்களுக்கும் தெளிவாகத் தெரிவியுங்கள்; மறைக்காதீர்கள்!”
இடதுசாரி தோழர்களே! என்ன செய்யப் போகிறீர்கள்?

===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
================================= 

Labels: , , , ,

0கருத்துக்கள்:

Post a Comment

<< முகப்பு பக்கம்


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்