<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d6955529389241309188\x26blogName\x3d%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86.%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://thozharmaniyarasan.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com/\x26vt\x3d-8408640130511538487', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

கருணாஸ் கைது : அ.தி.மு.க. அரசின் வர்ணாசிரம (அ)தர்மம்! பெ. மணியரசன்

Monday, September 24, 2018


கருணாஸ் கைது :
அ.தி.மு.க. அரசின் வர்ணாசிரம (அ)தர்மம்!

தோழர் பெ. மணியரசன்
தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்.


கடந்த செப்டம்பர் 16 (2018) அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஓர் ஆர்ப்பாட்டத்தில் “முக்குலத்தோர் புலிப்படை” தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான திரு. கருணாஸ், வரம்பு மீறி பேசியதற்காக 20.09.2018 அன்று 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, 23.09.2018 அன்று அவரைக் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்துள்ளார்கள். 

இவ்வழக்கில், இ.த.ச.வின் 307 - கொலை முயற்சி பிரிவை சேர்ப்பதற்கு எவ்வளவு குரூர மனம் படைத்திருக்க வேண்டும்! நல்லவேளை, எழும்பூர் நடுவர் மன்ற நீதிபதி அப்பிரிவை நீக்கிவிட்டார். 

ஆனால், பெண்களை இழிவுபடுத்திப் பேசிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் முன்பிணை வழங்க மறுத்த நிலையில் - மாதக் கணக்கில் பா.ச.க.வின் எஸ்.வி. சேகரை தமிழ்நாடு காவல்துறை தளைப்படுத்தாமல், ஒதுங்கிக் கொண்டதுடன் அவருக்கு பாதுகாப்பும் கொடுத்தது. 

அடுத்து, பா.ச.க.வின் எச். இராசா அதே செப்டம்பர் 16 அன்று, புதுக்கோட்டை மாவட்டத்தில் பிள்ளையார் ஊர்வலத்தையொட்டி உயர் நீதிமன்றத்தை மிகக்கேவலமாக இழிவுபடுத்தியும், காவல் துறையினர் அனைவரும் பாதிரியார்களிடமும் முசுலீம்களிடமும் இலஞ்சம் வாங்குபவர்கள் என்று கேவலப்படுத்தியும் பேசியதுடன், உயர் நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட வீதி வழியே பிள்ளையார் ஊர்வலத்தை நடத்தி முடித்தார். அதன் மீது தமிழ்நாடு காவல்துறை வழக்குப்பதிவு செய்தும், இதுவரை இராசாவை தளைப்படுத்தவில்லை! 

இந்து அறநிலையத்துறையில் பணியாற்றும் பெண்களின் கற்பு குறித்து இழிவாகப் பேசியதற்காக, அவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் புகார் கொடுக்கப்பட்டு வழக்குகள் பதிவாகியிருக்கின்றன. ஆனால், எந்த வழக்கின் மீதும் இராசாவைக் கைது செய்யவில்லை. அவர் கலந்து கொள்ளும் பொது நிகழ்ச்சிகளுக்கு காவல்துறை கடுமையான பாதுகாப்பு கொடுத்து வருகிறது. 

பிராமணர்கள் குற்றம் செய்தாலும், அவர்களுக்குத் தண்டனை வழங்கக் கூடாது என்ற மனநிலையில் பா.ச.க. நடுவண் ஆட்சியும், அதற்கு கங்காணி வேலை பார்க்கும் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியும் இருக்கின்றன என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. 

“பூணூல் புனிதர்கள்” பூரித்துப் போகும் அளவுக்கு, சட்டத்தை வர்ணாசிரம தர்ம அடிப்படையில் செயல்படுத்துகிறது அ.தி.மு.க. ஆட்சி! எடப்பாடி அரசின், வர்ணாசிரம (அ)தர்மச் செயல்பாட்டை தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். 

கருணாஸ் அத்துமீறி பேசியவற்றை நாம் ஆதரிக்கவில்லை. அதேவேளை, குற்றவியல் சட்டம் எச். இராசாவுக்குப் பொருந்தாது, “சூத்திர” வகுப்பைச் சேர்ந்த கருணாசுக்கும் அவர் உதவியாளருக்கும்தான் பொருந்தும் என்பதுபோல் தமிழ்நாடு அரசின் செயல்பாடு உள்ளது. தமிழர்கள் தங்களது தன்மானத்தையும், உரிமைகளையும் காக்க மிகவும் விழிப்புடன் செயல்பட வேண்டிய காலமிது! 

Labels:


"தமிழ்த்தேசியர்கள் இனவெறியர்களா..??"

 தமிழ்த்தேசியப் பேரியக்கம் தலைவர்
ஐயா பெ.மணியரசன் சிறப்புக் கட்டுரை!

"தமிழ்த்தேசியம் வளர வளர அதில் திரிபுகளும் வந்து குறுக்கிடுகின்றன. எந்தக் கோட்பாட்டிலும் கொள்கை யிலும் திரிபுகள் வரத்தான் செய்யும். அவற்றை எதிர் கொண்டு சரியான திசையில் அதைச் செலுத்துவது அக்கோட்பாட்டை சரியாக முன்னெடுப்போரின் பணியா கும்!

காரல் மார்க்ஸ் வாழ்ந்த காலத்திலேயே மார்க்சியத்தில் திரிபுகள் குறுக்கிட்டன. காரல் மார்க்ஸ் இலண்டனில் வாழ்ந்த காலத்தில் ஜெர்மனியில் இருந்த ஒரு சோசலிஸ்ட்டுக் குழுவினருடன் கடிதப் போக்குவரத்து வைத்திருந்தார். அக்கழுவினர் தங்களை மார்க்சியவாதிகள் என்று கூறிக்கொண்டனர். ஆனால் ஒரு குறிப்பிட்ட வரையறுப்பில் காரல் மார்க்ஸ் நிலைபாட்டை மறுத்து ஜெர்மன் சோசலிஸ்ட்டுகள் மார்க்சுக்கு எழுதினர். அவர்களின் தருக்கத்தை மறுத்த காரல் மார்க்ஸ், நீங்கள்தான் மார்க்சியவாதிகள் என்றால் நான் மார்க்சியவாதி இல்லை என்று விடை எழுதினார்!
எது தமிழ்த்தேசியம்?
---------------------------------
இப்போது தமிழ்த்தேசியத்திற்கு, சிலர் வெவ்வேறு விளக்கங்கள் கூறுகின்றனர்.

“தமிழ்த்தேசியம்’’ என்பதற்கான வரைவிலக்கணம் ஒன்றாகத்தான் இருக்க முடியும். தமிழ்த்தேசியத்திற்கானப் போராட்டத்தின் ஊடாகச் செயல்படுத்த வேண்டிய சமூகத் திட்டங்கள் ஒவ்வொரு அமைப்பிற்கும் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால் தமிழ்த்தேசியம் என்பதன் அடிப்படை வரைய றுப்பு ஒன்றுதான்.
#தமிழ்த்தேசியம் என்றால் என்ன?
எமது தேசிய மொழி தமிழ்,
எமது தேசிய இனம் தமிழர்,
எமது தேசம் தமிழ்த்தேசம்,
இறையாண்மையுள்ள தமிழ்த்தேசம் எமது இலக்கு!

இந்த வரையறுப்பில் மாறுபடும் ஒருவர் தமிழ்த் தேசியராக இருக்க முடியாது!
தங்களின் தேசிய இனம் இந்தியர், திராவிடர் என்று சொல்லிக் கொள்வோர் தமிழராக இருக்கலாம்; தமிழ்த்தேசியராக இருக்க முடியாது!
தமிழர் என்பது பிறப்பு அடிப்படையில் உள்ள அடையாளம்! தமிழ்த்தேசியர் என்பது தமிழ்த்தேசம் சார்ந்தது. தமிழ்த்தேசத்திற்கு அதாவது தமிழ்நாட்டிற்கு உரிய மக்கள் எல்லாம் தமிழ்த்தேசியராக இருக்கத் தகுதியும் உரிமையும் படைத்தவர்கள். ஆனால் அவர்கள் தமிழ்த்தேசியராக இருக்கிறார்களா இல்லையா என்பது அவரவர் நிலைபாட்டைப் பொறுத்தது.
ஒருவர் தமிழ்த்தேசியத்தை மறுத்து இந்தியத் தேசியத்தை ஏற்றுக் கொண்டு, இந்தியத்தேசியராகச் செயல்பட்டால் அவர் தமிழ்த்தேசியர் அல்லர். ஆனால் பிறப்பு அடிப்படையில் அவர் தமிழராக இருக்கலாம்; பிறப்பு அடிப்படையில் பிரபாகரன் தமிழர்; காட்டிக் கொடுத்த கருணாவும் தமிழர்தான். அதை நாம் மாற்ற முடியாது. பிரபாகரன் தமிழீழத்தேசியர், கருணா சிங்களத் தேசியத்தை ஏற்றுக் கொண்டவர்!
மரபினம் - தேசிய இனம்
---------------------------------------
திராவிடர் என்று தங்களைக் கூறிக்கொள்வோர் இரண்டுங்கெட்டானாக இருக்கிறார்கள். இந்தியன் என்பதற்காவது செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு நாடும் - திணிக்கப்பட்ட ஒரு மொழியும் கூறப்படுகிறது. திராவிடர் என்பதற்கு வரலாற்றில் எக்காலத்திலும் ஒரு நாடு கிடையாது; அதற்கான ஒரு பொது மொழி யும் கிடையாது. திராவிடர் என்ற பெயரில் மரபினமும் (Race) கிடையாது; தேசிய இனமும் (Nationality) கிடையாது. ஆதலால்தான் திராவிடர் என்பதை இரண்டுங்கெட்டான் என்கிறோம். திராவிடத்தையும் திராவிட இனத்தையும் இன்றும் வலியுறுத்துவோர் ஒன்று குழப்பவாதிகளாக இருக்க வேண்டும் அல்லது வேறு ஏதோ உள்நோக்கம் கொண்டோராக இருக்க வேண்டும்.

தெலுங்கு, கன்னடம், உருது, சௌராட்டிரம், மராத்தி பேசும் மக்கள் முந்நூறு நானூறு ஆண்டு களாகத் தமிழ்நாட்டைத் தாயகமாகக் கொண்டு இங்கு வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் யார்? அவர்கள் தமிழ்த்தேச மக்கள், தமிழ் மக்கள்! அவர்களுக்கு வேறு தாயகம் கிடையாது. அவர்கள் மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் வேறு தாயகங்களில் வாழலாம். ஆனால் இங்கு வாழும் மக்கள் தமிழ் மக்கள். அவர்கள் தங்களைத் தமிழராகக் கருதிக் கொள்ள முழு உரிமை உண்டு!
“மரபினம்” என்பதற்கும் தேசிய இனம் என்பதற்கும் சிறு வேறுபாடு உண்டு! இனக்குழு என்ற பழங்குடி நிலையிலிருந்து வளர்ச்சி பெற்று மொழியும் மக்கள் பெருக்கமும் கொண்டவர்கள் மரபினம். வெவ்வேறு மரபு இனக்குழுக்களைச் சேர்ந்தவர்கள், பழங்குடிகள் வரலாற்று வழியில் ஒருங்கிணைந்து ஒரு தேசிய இனம் ஆகின்றனர். இவ்வாறு உருவான தேசிய இனத்திற்கு “தமிழர்” என்ற பெயர் மட்டும் எப்படி வருகிறது?
தன்னியல்புப்படுத்தல் (Assimilation)
------------------------------------------------------
மரபு வழிப்பட்ட தமிழ் மொழித் தாயகமாகவும், மரபு வழிப்பட்ட தமிழர்களை மிகப் பெரும்பான்மை மக்களாகவும் கொண்டிருப்பதால் இது தமிழ்த்தேசம் ஆகிறது. வரலாற்று வழியில் இங்கு வந்து வாழ்ந்து இணைந்துவிட்ட பிறமொழி பேசும் மக்களும் தமிழ்த்தேசிய இன மக்கள் ஆகின்றனர்.

பிறமொழி பேசுவோர் எவ்வாறு தமிழ் மக்களாக - தமிழர்களாக உருவளர்ச்சி பெறுகின்றனர்? தங்களின் நிரந்தரத் தாயகமாகத் தமிழ்நாட்டை அவர்கள் ஏற்று வாழ்கின்றனர்; தங்களின் பொது மொழியாக, பேச்சு மொழியாக, கல்வி மொழியாக, ஆட்சி மொழியாகத் தமிழை ஏற்றுச் செயல்படுகின்றனர். வரலாற்று வழிப் பட்ட இந்த இயல்வளர்ச்சி (Process), பிறமொழி யைத் தாய் மொழியாகக் கொண்ட அம்மக்களைத் தமிழ் மக்களாக தன்னியல்புப்படுத்தி (Assimilation) விடுகிறது.
உலக நாடுகளில் தேசிய இன உருவாக்கம் இப்படித் தான் அமைந்துள்ளது; தேசங்கள் இவ்வாறான கட்டுமானத்தைத்தான் பெற்றுள்ளன. அந்த வரலாற்று விதிக்குத் தமிழ்நாடு விதிவிலக்கன்று!
தமிழர் - தமிழ்த்தேசிய இன மக்கள் - தமிழ் மண்ணின் மக்கள் என்பதற்கு நாம் ஒரு வரையறை வைக்க வேண்டியுள்ளது. மொழிவழித் தாயகமாக தமிழ்நாடு அமைக்கப்பட்ட 1956 நவம்பர் 1-க்குப் பிறகு தமிழ்நாட்டில் குடியேறிய பிற மொழியாளர் அனைவரும் வெளியார் என்று வரையறுக்கிறோம். அதற்கு முன் தமிழ்நாட்டைத் தாயகமாகக் கொண்ட பிறமொழி பேசும் மக்கள் தமிழ் மக்களே!
தமிழ் மொழியிலிருந்து பிரிந்தவைதாம் தெலுங்கு, கன்னட மொழிகள். அந்த வகையில் “தமிழர்” என்ற மரபிலிருந்து பிரிந்தவர்கள்தாம் தெலுங்கர், கன்னடர் என்ற ஓர் உறவும் கூடுதலாக இருக்கிறது. அந்த மரபினத்தின் பெயர் “தமிழர்” என்பதுதான்; “திராவிடம்” என்பது அன்று! “திராவிடர்” என்று ஒரு மரபினம் இருந்ததற்கான வரலாற்றுச் சான்று எதுவுமில்லை. மனுதர்மம் மற்றும் வட மொழி ஆரியப் புராணங்கள் மட்டுமே “திராவிட” என்று உச்சரித்துள்ளன.
தெலுங்கர் எதிர்ப்பின் பின்னணி
-------------------------------------------------
தமிழின உணர்வாளர்களில் ஒரு சாராரிடம் தெலுங்கர் எதிர்ப்பு இருக்கிறது. அவர்களின் தெலுங்கர் எதிர்ப்பை நாம் ஏற்க வேண்டியதில்லை. ஆனால் அவர்களுக்கு அவ்வாறான எதிர்ப்புணர்ச்சி ஏற்படக் காரணங்கள் யாவை என்று ஆராய வேண்டும். காரணங்களே இல்லாமல், இந்த எதிர்ப்புணர்ச்சி உருவாகவில்லை!

சற்றொப்ப நானூறு ஆண்டுகளாக தெலுங்கு மன்னர்கள் தமிழ்நாட்டைப் பிடித்து அதன் பெரும் பகுதியை ஆட்சி செய்தார்கள். அதனால் பெரும் பெரும் நிலக்கிழார்களாகவும், சமீன்தார்களாகவும் பாளையப் பட்டு ஆட்சியாளர்களாகவும் தெலுங்கர்கள் உருவா னார்கள்.
விசய நகரத் தளபதிகள் மற்றும் நாயக்க மன்னர்கள் ஆட்சியில் தமிழ்நாட்டில் தமிழ் மொழி பின்னுக்குத் தள்ளப்பட்டு தெலுங்கும் சமற்கிருதமும் கோலோச் சின. அதன் தொடர்ச்சியாகத்தான் இன்றும் தமிழிசைப் புறக்கணிக்கப்பட்டு, தெலுங்கிசை தமிழ்நாட்டுக் “கச்சேரிகளை” ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது.
திருவையாற்றில் நடக்கும் தியாகராசர் இசை விழாவில் தண்டபாணி தேசிகர் தெலுங்கில் பாடாமல் தமிழில் பாடினார் என்பதற்காக - அவர் பாடி முடித்த பின் அம்மேடையைக் கழுவித் “தூய்மை”ப்படுத்தி னார்கள் பிராமணர்கள்! பெங்களூருவில் இசை நிகழ்ச்சியில் எம்.எஸ். சுப்புலட்சுமி தமிழிலும் பாடினார் என்பதற்காகக் கன்னடர்கள் கல்லெறிந்தார்கள்.
தெலுங்கு பேசுவோரில் உள்ள மேல் சாதியாரும் பிராமணர்களும் தமிழ்நாட்டின் ஆளும் வர்க்கமாக _- ஆளும் “இனமாக” விளங்கினார்கள்.
பிரித்தானியக் காலனி ஆட்சி தமிழ்நாட்டில் ஏற்பட்டபோது, அது உருவாக்கிய மாகாணப் பிரிவினையில், இன்றுள்ள முழு ஆந்திரப்பிரதேசமும் சென்னை மாகாணத்தில் இணைக்கப்பட்டது. தமிழர் எண்ணிக்கைக்குச் சமமாகத் தெலுங்கர் எண்ணிக் கையும் இருந்தது.
இந்தப் பின்னணியில் தெலுங்கரான பி.ட்டி. தியாகராயர் தலைமையில் நீதிக்கட்சி சென்னையில் தொடங்கப்பட்டது. ஆந்திரத்தின் சமீன்தார்கள், நிலக்கிழார்கள்தான் நீதிக்கட்சியில் மேலாதிக்கம் செலுத்தினர். பிரித்தானிய அரசு நடத்திய சட்டப் பேரவைத் தேர்தலில் நீதிக்கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
சுப்பராயலு ரெட்டியார் என்ற தெலுங்கர் சென்னை மாகாணத்தில் 1920இல் நீதிக்கட்சி ஆட்சியின் முதல் முதலமைச்சர் ஆனார். அடுத்து, பனகல் அரசர், முனுசாமி நாயுடு, பொப்பிலி அரசர் என்று நீதிக்கட்சி முதலமைச்சர்கள் தெலுங்கர்கள்!
ஆந்திரம் பிரியாத நிலையில் 1946 - 1947இல் ஆந்திராவைச் சேர்ந்த காங்கிரசுக்காரர் தங்குத்தி பிரகாசம் முதலமைச்சர்! விடுதலை பெற்ற இந்தியாவில் சென்னை மாகாணத்தின் காங்கிரசு முதல் அமைச்சர்களாக - தமிழ்நாட்டைச் சேர்ந்த தெலுங்கு பேசும் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார், ராஜபாளையம் குமாரசாமி ராஜா!
தி.க.வினரும் தி.மு.க.வினரும் தமிழர் இன அடையாளத்தை மறைக்கும் வகையில், “திராவிடர்” என்ற ஆரியச்சார்பான ஓர் இன அடையாளத்தைத் தமிழர்கள் மேல் சுமத்தினார்கள். இன்றுவரை முழுமையாகத் தமிழர் இன அடையாளத்தை மீட்க முடியாமல், திராவிடச் சேற்றில் சிக்கிக் கொண்டுள் ளோம்.
தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகிய நான்கு மாநிலங்களும் சேர்ந்தது திராவிட நாடு என்று தி.க., தி.மு.க. தலைவர்கள் பேசினார்கள்; எழுதினார்கள்! ஆனால் ஆந்திர, கர்நாடக, கேரள மாநிலங்களில் “திராவிடர்” என்ற பேச்சே கிடையாது! அந்தக் கூச்சல் தமிழ் மண்ணில் மட்டுமே ஒலிக்கிறது. ஆந்திர நடிகர் “தெலுங்கு தேசம்” என்றுதான் கட்சி தொடங்கினார்.
புதிதாகத் தமிழ்நாட்டில் கட்சி தொடங்கிய நடிகர் விசயகாந்தோ, திராவிடப் பெயரைத் தம் கட்சிக்கு வைத்தார். விசயகாந்த் தாய்மொழி தெலுங்கு என்பதால் நாம் அவரை அயலாராகப் பார்க்கவில்லை. ஆனால் அவர் உளவியல் எப்படிச் செயல்படுகிறது, தெலுங்கு தேசம் தொடங்கிய நடிகர் என்.டி. இராமாராவ் உளவியல் எப்படிச் செயல்பட்டது என்று தமிழ் இளைஞர்கள் ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள். தெலுங்கு தேசம் என்ற பெயர் ஆந்திரத் தெலுங்கான மாநிலங்களுக்கு மிகப் பொருத்தமான பெயர் என்பதில் நமக்கு மாறுபாடில்லை. ஆனால் தமிழ்நாட்டிற்குப் பொருத்தமற்ற - தமிழை மறைக்கக் கூடிய திராவிடப் பெயரை மீண்டும் மீண்டும் சூட்டுகிறார்களே என்ற வருத்தமான மனநிலை நமக்கு உருவாகிறது.
தெலுங்கர், மலையாளி, கன்னடர் என்று அயல் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டில் தொடர்ந்து முதலமைச்சர்களாக வருகிறார்கள். இப்பொழுது கூட கன்னட நாட்டு ரஜினிகாந்த் முதலமைச்சராக முன் வருகிறார். ஆனால் ஆந்திர, கர்நாடக, கேரள மாநிலங்களில் மாநில அளவிலான அரசியல் தலைவராக, முதலமைச்சராக ஏன் ஒரு தொழிற்சங்கத் தலைவராகக் கூட தமிழர்கள் வரமுடியவில்லையே எனத் தமிழ் இளைஞர்கள் எண்ணிப் பார்க்கிறார்கள்.
இன்றும் தமிழ்நாட்டில் திராவிடத்தை அதிகமாக வலியுறுத்துவோர் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள்தாம் என்ற கருத்து நிலவுகிறது.
கடந்த ஆண்டு தெலுங்கு மாநிலங்கள் மாநாடு சென்னையில் நடந்தது. அதில் தமிழ்நாடும் தெலுங்கு மாநிலம் என்றும், தமிழ்நாட்டில் தெலுங்கை இரண்டாவது ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றினர். வெங்கையா நாயுடுவின் சிறப்புரையுடன், தமிழிசையின் துரோக உரையுடன் இம்மாநாடு நடைபெற்றது. அதில், தெலுங்கு மொழியை வளர்ப்பவர்களுக்கு வாக்களியுங்கள் என்று வேண்டுகோள் விட்டார் வெங்கையா நாயுடு! அப்போது தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க இருந்தது. இம்மாநாட்டிற்கு முந்தைய ஆண்டில் தெலுங்கு மாநாட்டைச் சென்னையில் நடத்தினார்கள். அதிலும் வெங்கையா கலந்து கொண்டார்.
தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் வாழும் தெலுங்கு மக்கள் முந்நூறு நானூறு ஆண்டுகளாக இம் மண்ணில் வாழ்ந்து, இம்மண்ணின் மக்களாகி, தமிழைத் தங்களின் இன்னொரு தாய்மொழியாகவே நேசிக்கும் உளவியல் கொண்டுள்ளார்கள். ஆனால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் வணிகம் செய்ய வந்து குடியேறியவர்கள், அதிகாரியாக வந்து குடியேறியவர்கள், வேலை நிமித்தம் வந்து குடியேறியவர்கள், தமிழ்நாட்டையும் ஆந்திரத்தையும் இரட்டைத் தாயகமாகக் கொண்டவர்கள். அவர்களில் பலர் இன்னும் அதே உளவியலில் இருக்கிறார்கள்.
மொழிவழி மாநிலப் பிரிவினையின்போது, சென்னையை ஆந்திராவுடன் சேர்க்க வேண்டும் என்று குரல் கொடுத்த “சென்னைவாசிகள்” இவர்கள்தாம்!
இப்போது இந்திய ஏகாதிபத்தியவாதிகள் - தமிழ்நாட்டில் தமிழ் இன விழிப்புணர்ச்சியும் எழுச்சியும் வளர்ந்து விடாமல் தடுப்பதற்காகத் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழ் மக்களைப் பிரித்துவிடும் சூழ்ச்சியில் - தமிழ்த் தேசியத்திற்கு எதிராகத் திருப்பிவிடும் பெரு முயற்சியில் இறங்கியுள்ளார்கள். அதற்கான பொறுப்பாளர்களாக வெங்கையா நாயுடு, நிர்மலா சீத்தாராமன் ஆகியோரை அமர்த்தியுள்ளார்கள். அவ்வப்போது ஆந்திராவைச் சேர்ந்தவர் களை ஆளுநராகவும் அனுப்புகிறார்கள். பிறந்த இனத்திற்கு இரண்டகம் செய்து பதவி பெறும் துரோகிகளாகப் பொன். இராதாகிருட்டிணன், தமிழிசை சௌந்திரராசன் போன்றோர் செயல்படுகிறார்கள்.
இந்தப் பின்னணியில்தான் தமிழ்த்தேசியத்தை ஏற்றுள்ள இளைஞர்களில் ஒருசாரார் தெலுங்கர் - எதிர்ப்பை முதன்மைப்படுத்துகிறார்கள் என்ற நடப்பைப் புரிந்து கொள்ள வேண்டும்.
இது ஒரு பக்கம் இருக்க, தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கு பேசும் மக்கள் தமிழ் மொழிக்கும் தமிழ் இனத்திற்கும் வலுச்சேர்க்க நல்கிட்ட அறிவுத்துறைப் பங்களிப்பையும், இயக்க வழிப்பட்ட பங்களிப்பையும் பார்க்க வேண்டும். தமிழ் அறிஞர்களாக, 1965 இந்தி எதிர்ப்புப் போராட்ட வீரர்களாக, ஈழ விடுதலைப் போராட்டத்தில் மெய்யுணர்வோடு பங்கேற்றவர்களாக, அதற்காகத் தன்னையே எரித்துக் கொண்டவர்களாக, இன்று தமிழ்வழிக் கல்விப் போராட்டத்தில் களத்தில் நிற்பவர்களாக, தமிழ்த்தேசியத்தின் செயல்வீரர்களாக, தெலுங்கை மரபுவழித் தாய்மொழி யாகக் கொண்டவர்கள் நம் முன்னே நிற்கிறார்கள். அவர்கள் எல்லாம் “தந்திரமாகச்” செயல்படுகிறார்கள், போலியாகச் செயல்படுகிறார்கள் என்று கூறினால் அது முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க முயலும் செயலாக அமையும்! அவர்கள் உண்மை யாகவே செயல்படுகிறார்கள்.
தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட மக்கள், தெலுங்கைத் தமிழ்நாட்டின் ஆட்சி மொழியாக்கவோ, கல்வி மொழியாக்கவோ கோரவில்லை. அவ்வாறு கோரும்படி இந்திய ஏகாதிபத்தியவாதிகளும் சென்னைப் பகுதியில் குடியேறி வாழும் தெலுங்கு வணிகர்களும், அதிகாரப் பிரிவினரும் அம்மக்களைத் தூண்டுகிறார்கள்.
நம்முடைய அணுகுமுறை அந்தத் தூண்டுதலுக்குத் தூபம் போட்டதாக அமையக் கூடாது!
தெலுங்கை மரபுவழித் தாய்மொழியாகக் கொண்ட மக்கள் தங்களுக்கிடையே தாய்மொழியில் பேசிக் கொள்வதை நாம் எதிர்க்கக் கூடாது. அதை அவர்களின் தகுதிக் குறைவாகக் கருதக் கூடாது. தாய் மொழியில் பேசாதே என்று சொல்வது மிகக் கொடிய மனித உரிமைப் பறிப்பாகும்!
நடைமுறை உண்மை என்னவெனில், தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர்களில் பலர்க்குத் தெலுங்கே தெரியாது என்பதுதான்! நயினா, அவ்வா என்ற சொற்களைத் தவிர வேறு தெலுங்குச் சொற்கள் அவர்களுக்குத் தெரியாது. குடும்பங்களில் அவர்கள் தமிழில்தான் பேசிக் கொள்கிறார்கள். இந்த வளர்ச்சிதான் தன்னியல்புப்படுத்தும் (Assimilation) வளர்ச்சி!
நம் இளைஞர்களில் சிலர் குறுக்கிட்டு அவர்களைத் தமிழர்கள் அல்லர் என்று கூறினால், அவர்கள் தெலுங்கைத் தேடும் நிலை உருவாகும்! தமிழிலிருந்து பிரிந்தது தெலுங்கு; அவர்கள் தங்களின் மூலத் தாய்மொழிக்குத் திரும்புவது சரியானதுதான்! அதேவேளை தெலுங்கில் பேசக் கூடாது, தெலுங்கைப் படிக்கக் கூடாது என்று யாரும் அவர்களைக் கட்டாயப் படுத்தக் கூடாது!
தமிழ்த்தேசியர் இனவெறியரா?
-------------------------------------------------
தமிழ்த்தேசியத்தைத் தலையெடுக்காமல் நசுக்கத் திட்டமிடும் இந்திய ஏகாதிபத்தியவாதிகள் தங்களின் துணைப் படையாகத் தமிழ் மண்ணில் ஆள்பிடிக்க அலைகிறார்கள்; இருபத்து நான்கு மணி நேரமும் அதுபற்றியே சிந்திக்கிறார்கள். தமிழ்த்தேசிய எழுச்சி கண்டு கிலி பிடித்து கிடக்கிறார்கள். அவர்கள் தமிழ்த் தேசிய இளைஞர்கள் சிலர் உணர்ச்சிவசப்பட்டு பிறமொழி பேசுவோர் மீது வைக்கும் சில விமர்சனங் களை முதன்மைப்படுத்தி அதுதான் தமிழ்த்தேசியம் என்பதுபோல் சித்தரிக்கிறார்கள்.

“தமிழ்த்தேசியம்’’ என்பது பிறமொழி பேசுவோரைப் பகைவராகப் பார்க்கும் தமிழ் இன வெறியர்களின் சொற்கோவை என்று அடையாளப்படுத்த, இந்திய ஏகாதிபத்தியவாதிகள் அவசரம் காட்டுகிறார்கள். ஏடுகளில் ஊடகங்களில் அவர்களின் செவ்வி அவ்வாறாக இருக்கிறது.
சட்டப்படி அமைக்கப்பட்ட தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பைச் செயல்படுத்த மறுத்து, உச்ச நீதிமன்றக் கட்டளையையும் எதிர்த்து, அனைத்துக் கட்சிகளும் ஒரே முடிவில் தீர்மானம் போட்டு - தமிழ்நாட்டுக்குரிய காவிரித் தண்ணீரைத் தடுத்துக் கொண்டுள்ள கர்நாடகக் காங்கிரசு, பா.ச.க., ஜனதா தளத் தலைவர் களும் கன்னட மக்களும் பரந்த மனம் கொண்ட இந்தியத்தேசியவாதிகள்! தமிழ்த்தேசியர்கள் இனவெறியர்கள்! என்னே முரண்பாடு!
பெங்களூரில் நிறுத்தப்பட்டிருந்த தமிழர்களின் 250 சொகுசுப் பேருந்துகள், சரக்குந்துகள் ஆகியவற்றை எரித்து சாம்பலாக்கியவர்கள் பரந்த இந்தியத்தேசிய வாதிகள் - தமிழர்கள் இனவெறியர்கள்!
1991 டிசம்பர் - 1992 சனவரியில் காவிரிக் கலவரம் நடத்தி கர்நாடகத்தில் ஏராளமான தமிழர்களை இனப் படுகொலை செய்து, ஆயிரக்கணக்கான தமிழர் வணிக நிறுவனங்களையும், வீடுகளையும் சூறையாடி எரித்துச் சாம்பலாக்கியவர்கள் பரந்த மனம் படைத்த இந்தியத் தேசியவாதிகள்! அவர்களெல்லாம் இனவெறியர்கள் அல்லர்!
முல்லைப்பெரியாறு அணையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்துக் கலகம் நடத்தி, தமிழர்களைத் தாக்கிய மலையாளிகள் இனவெறியர் அல்லர்! அவர்கள் எல்லாம் மார்க்சிய சர்வதேசியவாதிகள் - இந்தியத்தேசியவாதிகள்!
பேருந்தில் பயணம் செய்த 20 தமிழர்களைக் கடத்திக் கொண்டு போய் சித்திரவதை செய்து, கட்டி வைத்துச் சுட்டுக் கொன்ற ஆந்திரத் தெலுங்கு தேச ஆட்சியாளர்களும் தெலுங்கர்களும் இனவெறியர் அல்லர்!
கடந்த காலங்களில் தமிழ்நாட்டிலேயே தமிழர்கள் ஓரங்கட்டப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட உண்மைகளால், உணர்ச்சிவசப்பட்டு, பக்குவக் குறைவாக பிறமொழி பேசுவோர், தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகக் கூடாது என்று பேசிய இளைஞர்கள் மட்டும் தமிழின வெறியர்கள்; வீழ்த்தப்பட வேண்டியவர்கள் என்கிறார்கள். அந்த இளைஞர்களுக்கும் அறிவுரை சொல்லி, தமிழர் அறத்தின்பால் அவர்களை நிறுத்தி, பிறமொழி பேசும் மக்களும் நம் தமிழ் மக்கள்தாம் அவர்களுக்கும் சம உரிமை உண்டு என்று நாங்கள் பேசி வருகிறோம். ஆனால் அந்த இளைஞர்களைத் தாக்குவதாக சொல்லிக் கொண்டு ஒட்டுமொத்தத் தமிழ்த்தேசியத்தையே இனவெறிக் கூச்சல் என்று சித்தரிக்கும் நயவஞ்சகர்களை -- உட்புகுந்து குழப்பும் இந்தியத்தேசிய முகவர்களை சரியாகத் தமிழ் மக்கள் அடையாளம் காண வேண்டும்!
இந்திய ஏகாதிபத்தியவாதிகள் - ஆரியப் பிராமணிய மேலாதிக்கவாதிகள் முதலியவர்களே தமிழ்த் தேசியத்தின் பகை ஆற்றல்கள் என்பதை அனைத்துப் பிரிவுத் தமிழ் மக்களும் அடையாளம் காண வேண்டும்.
வரலாற்று வழியில் தமிழ்நாடு வந்து, தமிழ்நாட்டைத் தாயகமாகக் கொண்டு வாழும் தெலுங்கு, கன்னடம், உருது, மராத்தி, சௌராட்டிரம் பேசும் மக்களும் தமிழ் மக்களே, தமிழ்த்தேசிய மக்களே! இந்தப் புரிதல் இளந்தமிழர்களுக்கு வேண்டும். இந்த உணர்வை இம்மொழிகள் பேசும் தமிழ் உணர்வாளர்கள் இம்மக்களிடையே வளர்க்க வேண்டும்!"

Labels:

வீரவணக்கம் “கி.த.ப.” பெ.மணியரசன் இரங்கல்!

Thursday, September 20, 2018


வீரவணக்கம் “கி.த.ப.”

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
ஐயா பெ.மணியரசன் இரங்கல்!


“கி.த.ப.” என்ற கிளர்ச்சிக் குரல் ஓய்ந்து விட்டது என்ற செய்தி அதிர்ச்சி தருகிறது. இன்று (20.09.2018) சென்னை உயர் நீதிமன்றம் சென்றபோது, மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்த புலவர் கி.த. பச்சையப்பனார் மாரடைப்பால் மறைந்துவிட்டார் என்ற செய்தி ஈட்டியாய் பாய்ந்தது! 

ஏற்கெனவே உடல் நலமற்று ஓய்விலிருந்த கி.த.ப. அவர்களை கடந்த 25.08.2018 அன்றுதான் சென்னை புதுவண்ணையில் அவரது இல்லத்தில் சந்தித்து, நானும் தோழர்கள் க. அருணபாரதி, ம. இலட்சுமி ஆகியோரும் சந்தித்து உடல்நலம் உசாவி, சமகால நிகழ்வுகள் குறித்து உரையாடித் திரும்பினோம். 

இதற்குள் இப்படி ஒரு முடிவு வரும் என்று எள்ளளவும் கருதவில்லை; பேரிழப்பு – பெரும் துன்பம்! 

தமிழ்வழிக் கல்வி போராட்டமா, பொதுக்கூட்டமா – அங்கிருப்பார் கி.த.ப.! எத்தனை தடவை அவருடன் சேர்ந்து போராடி தளைப்பட்டு, மண்டபங்களில் அடைக்கப்பட்டோம்! 

தமிழீழ விடுதலை ஆதரவு போராட்டமா, ஏழு தமிழர் விடுதலைப் போராட்டமா – கி.த.ப. அங்கிருப்பார்! தமிழ், தமிழர், மனித உரிமை, சனநாயகக் காப்புப் போராட்டங்கள் அனைத்திலும் கி.த.ப. இருப்பார். இத்தனைக்கும் அவர் பணி ஓய்வு பெற்ற மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்! 

பதின்ம அகவை இளைஞர் போல் சுறுசுறுப்பானவர்! 

தூயதமிழில்தான் பேசுவார்; எழுதுவார்! மாணவப் பருவத்தில் புதுவை விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றவர். மார்க்சியத் தத்துவ ஈர்ப்பில் பொதுவுடைமை இயக்கத்தில் சேர்ந்தவர். நான் சந்திக்கும்போது மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சியில் இருந்தார். 

மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சியின் அனைத்திந்தியத் தலைமையும், தமிழ்நாட்டுத் தலைமையும் மண்ணுக்கேற்ற வகையில் மார்க்சியத்தை வளர்த்துச் செயல்படுத்தாமல் – வெளிநாட்டு அனுபவங்களையே வழிகாட்டும் நெறியாகக் கொண்ட அவலத்தை அறிந்து, அக்கட்சியிலிருந்து வெளியேற 1985 சூன் மாதம், தஞ்சை மாவட்டம் கல்லணை பயணியர் விடுதியில் நாங்கள் சிலபேர் கூடி விவாதித்தபோது, அதில் கலந்து கொண்டவர் கி.த.ப. 

“தமிழர் கண்ணோட்டம்” - இதழின் மெய்ப்புத் திருத்த, புது வண்ணையிலிருந்து பகல் உணவையும் எடுத்துக் கொண்டு தியாகராயர் நகர் முத்துரங்கம் சாலை அலுவலகம் வந்துவிடுவார் கி.த.ப. ஆண்டுக்கணக்கில் அப்பணி செய்தார். 

தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கத்தின் முகாமையான தூண்களில் ஒருவராகச் செயல்பட்டார்! 

தமிழ்நாடு தமிழாசிரியர் கழகத்தின் நிறுவனர்களில் முகாமையானவர் கி.த.ப. அதன் தலைவராக பல ஆண்டுகள் செயல்பட்டார். பணியில் இருக்கும்போதும் சரி, பின்னரும் சரி, அமைச்சராக இருந்தாலும் அதிகாரியாக இருந்தாலும் உள்ளதை உள்ளபடி எடுத்துரைக்கும் ஆற்றல் பெற்றவர் கி.த.ப. 

தமிழ்த்தேசியப் பேரியக்கச் செயல்பாட்டாளர்களின் தனிப்பட்ட தேவைகளுக்கும் உதவி செய்தார் கி.த.ப.

சிறந்த தமிழ்த்தேசியராகச் செயல்பட்டவர் புலவர் கி.த.ப.!

கி.த.ப. அவர்களுக்கு இறுதி வணக்கம் தெரிவிக்க மனம் இடம் கொடுக்கவில்லை. வேறு வழியில்லை; வீரவணக்கம் கி.த.ப.!

“தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை!
தமிழ்த்தொண்டன் பாரதிதான் செத்ததுண்டோ”
- பாவேந்தர். 

Labels:

தமிழ்நாடு அரசே! எச். இராசாவைக் கைது செய்! வர்ணாசிரமவாதிகளின் கலவரத்துக்குத் துணை போகாதே! பெ. மணியரசன் கோரிக்கை!

Monday, September 17, 2018

தமிழ்நாடு அரசே! 
எச். இராசாவைக் கைது செய்!
வர்ணாசிரமவாதிகளின்
கலவரத்துக்குத் துணை போகாதே!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
தோழர் பெ. மணியரசன் கோரிக்கை!

கடந்த 15.09.2018 அன்று புதுக்கோட்டை மாவட்டம் – மெய்யபுரம் கிராமத்தில் பிள்ளையார் ஊர்வலத்தை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் கட்டளைக்குப் புறம்பாக, தடைசெய்யப்பட்ட தெருக்கள் வழியாக அழைத்துச் செல்லக்கூடாது என்று காவல்துறையினர் கூறியபோது, அங்கிருந்த பா.ச.க. செயலாளர் எச். இராசா உயர்நீதிமன்றத்தை மிகவும் கேவலமான சொற்களால் கொச்சைப்படுத்தி பேசியது காணொலியாக ஓடிக் கொண்டுள்ளது.
காவல்துறையினர் அனைவரும் கிறித்துவர்களிடமும் முசுலிம்களிடமும் கையூட்டு (இலஞ்சம்) வாங்குபவர்கள், நான் உங்களுக்கு இலஞ்சம் தருகிறேன் கேளுங்கள் என்று இழிவுபடுத்திப் பேசிவிட்டு, காவல்துறையினர் கட்டளையை மீறி, தடை செய்யப்பட்ட தெருவில் பிள்ளையார் ஊர்வலத்தை அழைத்துச் சென்றுள்ளார்.
எச். இராசாவின் இந்தக் குற்றச்செயல்களுக்கு காணொலிக் காட்சிகள் சாட்சியமாக உள்ளன. காவல்துறையினரிடமும் இக்காணொலிப் பதிவு இருக்கும்.
அன்று இரவே எச். இராசா தளைப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பார் என்று நாகரிகச் சமூகம் எதிர்பார்த்தது. ஆனால், எச். இராசா மீது நடவடிக்கை எடுப்பது பற்றி அமைச்சர் செயகுமார், சட்ட வல்லுநர்களைக் கலந்து ஆராய்வோம் என்று 16.09.2018 அன்று ஊடகங்களிடம் கூறியது பேரதிர்ச்சியை உண்டாக்கியது.
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக மக்கள் மீது அக்கறையுள்ள தமிழ்நாட்டுத் தலைவர்கள் தூத்துக்குடி சென்றால் கைது, எட்டுவழிச் சாலை பகுதியில் உழவர்களைச் சந்தித்தால் கைது, பொதுக்கூட்டம் – ஊர்வலம் – ஆர்ப்பாட்டம் அனைத்துக்கும் தடை என்று இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கும் உரிமைகளைப் பறித்து, எதேச்சாதிகாரத்தை செயல்படுத்தி வருகிறது எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அரசு! ஆனால், எச். இராசா காவல்துறை அதிகாரிகளைக் கையால் தள்ளிவிட்டு, சொல்லால் குத்திக் கிழித்துவிட்டு, உயர் நீதிமன்றத்தையும் கீழ்த்தரமாக இழிவுபடுத்திவிட்டு, தடை செய்யப்பட்ட பாதையில் ஊர்வலம் நடத்திய குற்றச்செயல் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்காதது ஏன்? இதில் சட்ட வல்லுநர்களைக் கலந்து “ஆராய்ச்சி” செய்ய வேண்டிய அளவிற்கு சட்டச்சிக்கல் உள்ளதா அல்லது வர்ணாசிரம மேலாதிக்கச் சிக்கல் இருக்கிறதா அல்லது எடப்பாடி அரசின் இருப்புக்கான சிக்கல் இருக்கிறதா?
உயர் நீதிமன்றம் தானே முன்வந்து. எச். இராசா மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று அமைச்சர் செயகுமார் கூறினார். சிக்கலை உயர் நீதிமன்றத்தின் பக்கம் தள்ளிவிட்டு ஒதுங்கிக் கொள்ளலாம் என்று அ.தி.மு.க. அரசு கருதுவது தெரிகிறது.
எடப்பாடி அரசு தமிழ் மக்களின் சனநாயக உரிமைகளைப் பறித்து பா.ச.க. தலைமைக்குத் தனது விசுவாசத்தை வெளிப்படுத்தி வந்தது. அடுத்தகட்டமாக சென்னை உயர் நீதிமன்றத்தின் மாண்பை எச். இராசாவின் காலடியில் வீழ்த்தியும், தனது சொந்தக் காவல்துறையின் சட்டப்படியான அதிகாரத்தையும் தன்மானத்தையும் எச். இராசாவின் ஆரியத்துவாவுக்குக் கீழ்ப்படுத்தியும் தனது விசுவாசத்தை வெளிக் காட்டியுள்ளது.
கடைசியாக சில பிரிவுகளில் எச். இராசா மீது வழக்குப் பதிவு செய்துள்ளது காவல்துறை. இது “சட்ட வல்லுநர்களின்” ஆலோசனைப்படி நடந்திருக்கும். ஆனால், “இலஞ்சம் கொடுக்கிறேன், வாங்கிக் கொள்” என்று காவல்துறை அதிகாரிகளிடம் பேசிய குற்றத்துக்கு எச். இராசா மீது குற்றப்பிரிவு போடப்படவில்லை!
உயர் நீதிமன்றத்தையும் காவல்துறையினரையும் எச். இராசா பேசியது போல் யார் பேசினாலும் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை! ஒரு வாதத்திற்காக இப்படிக் கற்பனை செய்து பாருங்கள். தமிழின உரிமை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவற்றிற்காகப் போராடும் தலைவர்கள் எச். இராசா போல் பேசியிருந்தால், தடையை மீறியிருந்தால் எடப்பாடி அரசு என்னெ்னன செய்திருக்கும்!
ஏற்கெனவே பா.ச.க.வைச் சேர்ந்த எஸ்.வி. சேகர் மீது நீதிமன்றப் பிடி ஆணை இருந்தும், அவரைத் தளைப்படுத்த மறுத்தது எடப்பாடி அரசு!
எடப்பாடி ஆட்சி காட்டும் விசுவாசத்தினால் துணிச்சல் பெற்ற ஆரியத்துவா – வர்ணாசிரம வகுப்புவாதிகள் மேலும் துணிச்சல் பெற்று, இன்று பெரியார் சிலையை சென்னையிலும் திருப்பூரிலும் அவமரியாதை செய்திருக்கிறார்கள். பெரியார் மீது தமிழ்த்தேசியர்கள் வைக்கும் திறனாய்வு நமது உள் விவகாரம்! ஆரியத்துவா வர்ணாசிரம வகுப்புவாதிகள் பெரியாரை இழிவுபடுத்துவதை தமிழ்த்தேசியர்கள் அனுமதிக்க மாட்டோம்!
வர்ணாசிரம வகுப்புவாதிகள் தமிழ்நாட்டைக் கலவர மண்ணாக மாற்றி, குருதி குடிக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள் என்று புரிகிறது. இந்து மதத்தில் உள்ள தமிழர்கள் இந்த வர்ணாசிரம வகுப்புவாதிகளின் சூழ்ச்சிக்குப் பலியாகக் கூடாது.
தமிழை அர்ச்சனை மொழியாக்கிடத் தடை போடுகின்ற – அனைத்துச் சாதித் தமிழர்களும் அர்ச்சகர் ஆவதை எதிர்க்கின்ற – சிவன் கோவில் கருவறை முன் தேவாரம், திருவாசகம் பாடுவதை எதிர்க்கின்ற - ஈழத்தின் இந்துக் கோயில்கள் சிங்கள பௌத்த வெறியர்களால் இடிக்கப்படும்போதெல்லாம் கண்டிக்காத இந்த வர்ணாசிரமவாதிகளின் தூண்டுதலுக்கு தமிழ் மக்கள் பலியாகக் கூடாது!
பா.ச.க.வுக்கு விசுவாசம் காட்டுவது மட்டுமே தனது ஆட்சிக்கான பாதுகாப்பு என்று எடப்பாடி அமைச்சரவை கருதினால், பா.ச.க.வினர் திட்டமிடும் பெரும் கலகத்தில் உங்கள் ஆட்சி வீழ்ந்துவிடும்; தமிழர்கள் பேரழிவிற்கு உள்ளாவார்கள் என்ற உண்மையை உணர்ந்து உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் எச். இராசாவை சிறையிலடைக்க வேண்டும் என்றும், ஆர்.எஸ்.எஸ். பா.ச.க. திட்டமிடும் கலகத்தைத் தடுத்து நிறுத்த எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டுமென்றும் தமிழ்நாடு முதலமைச்சரை தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

Labels:

கர்நாடக இசையில் ஏசுவைப் பாடக்கூடாது - ஆரியத்துவாவாதிகள் அச்சுறுத்துல் தோழர் பெ. மணியரசன்

Sunday, September 16, 2018


"கர்நாடக இசையில் ஏசுவைப் பாடக்கூடாது"
- ஆரியத்துவாவாதிகள் அச்சுறுத்துல்!

தோழர் பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம். 


தமிழ்நாட்டு இசை விழாக்களில் தெலுங்குக் கீர்த்தனமா - தமிழிசை பாடக் கூடாதா என்று தமிழுணர்வாளர்கள் கேட்டால், பிராமண இரசிகர்களும் சபாக்காரர்களும் இசைக்கு மொழி ஏது? அதில் போய் மொழி வேறுபாடு பார்க்கக் கூடாது என்று கூறுகின்றனர். ஆனால் அவர்கள் தெலுங்கில் பாட வேண்டும், தமிழில் பாடக் கூடாது என்ற மொழி இன வேறுபாட்டுக் கொள்கையாளர்கள் என்பது நாடறிந்த செய்தி! 

இசைக்கு மொழி இல்லை என்ற அவர்களில் ஒரு சாரார் இசைக்கு மதம் உண்டு என்று கச்சைகட்டிக் கிளம்பியுள்ளார்கள். 

கடந்த 25.08.2018 அன்று சென்னை சேத்துப்பட்டில் “இயேசுவின் சங்கம சங்கீதம்” என்ற தலைப்பில் கர்நாடக இசைப் பாடகர் ஓ.எஸ். அருண் பாடுவதாக ஏற்பாடாகி இருந்தது. அது பற்றிய விளம்பரம் முகநூல் போன்ற வற்றில் வெளியானது. உடனே, இந்து இயக்கங்கள் என்று சொல்லிக் கொண்டு செயல்படும் ஆரிய ஆதிக்க - சமற்கிருத விசுவாசிகளின் அமைப்புகள் கலகக்குரல் எழுப்பின. 

இந்து மதத்தில் இறைவனை வணங்குவதற்கு எழுதப் பட்ட கர்நாடக இசைப் பாடல்களைக் கிறித்துவ விழாவில் பாடுவது தியாகராசருக்குச் செய்யும் துரோகம் என்று கண்டனம் முழங்கினர். வெளி நாடுகளில் இருந்தும் ஆரியத்துவா ஆதரவாளர்கள் பாடகர் அருணுடன் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு தரக்குறைவாகத் திட்டியுள்ளனர். 

மனப்பாதிப்பு ஏற்பட்டு, “நான் அந்நிகழ்ச்சிக்குப் போகவில்லை” என்கிறார் ஓ.எஸ். அருண். (குமுதம் ரிப்போர்ட்டர், 24.08.2018).

ஓ.எஸ். அருண் கூறுவது போலவே பிரபல பாடகி நித்திய ஸ்ரீ மகாதேவனும் - இசை அனைவர்க்கும் பொது வானது, எந்த மதக் கடவுளையும் இசையில் பாடலாம் என்கிறார். 

கர்நாடக இசையில் மட்டுமின்றி இசைத் துறையில் புரட்சி செய்து கொண்டிருக்கும் டி.எம். கிருஷ்ணா வலைத்தளத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார். 

“கர்நாடக சங்கீத இசைக் கலைஞர்கள் மீதான திட்டுகளையும் மிரட்டல்களையும் பார்த்து நான் முடிவெடுத்திருக்கிறேன். 

“இனி ஒவ்வொரு மாதமும் அல்லாவைப் பற்றியோ ஏசுவைப் பற்றியோ ஒரு பாடல் பாடப் போகிறேன்” என்று கூறியுள்ளார். 

டி.எம். கிருஷ்ணாவுக்கு நம் பாராட்டுகள்! பிராமண வகுப்பில் பிறந்து, கர்நாடக இசையில் ஆட்சி செய்யும் அக்ரகார வர்ணாசிரமப் பார்வையை உதறி எறிந்துவிட்டு, தலித் மக்கள் தெருக்களில் போய் பாடியவர் டி.எம். கிருஷ்ணா. இசைத்துறையில் சமத்துவக் குரல் கொடுத்து வருகிறார். கானாப் பாடல்களும் இசையே என்கிறார். 

“இந்துக் கடவுள்களுக்காக இயற்றப்பட்ட சங்கீதக் கீர்த்தனங்களைத் திருடிப் பாடுவதைத் தான் எதிர்க்கிறோம்” என்கிறார் வேத விஞ்ஞான ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் பால கவுதமன். (மேற்படி ரிப்போர்ட்டர் இதழ்). 

இதில் திருட்டு எங்கிருந்து வந்தது? உலகம் முழுக்க ஏழு சுரங்களுக்குள் மாற்றி மாற்றி அவரவர் இரசனைக் கேற்ப மெட்டமைத்துக் கொள்கிறார்கள். தியாகராச கீர்த்தனையில் கூறப்பட்ட இராமர் பற்றிய வர்ணனையை - அதாவது சாகித்தியத்தை அப்படியே நகலெடுத்து இயேசுவுக்குப் பொருத்திப் பாடினால் அது “காப்பி” அல்லது அவர்கள் “மொழியில்” திருட்டு! 

கர்நாடக இசை என்றாலே இந்துமத இசை என்று புதுக்கரடி விடுகிறார்கள் இவர்கள்! 

கர்நாடக இசையில் ஏசுவையும், அல்லாவையும் பாடுவதைத் தடுக்க இவர்கள் யார்? ஆரியர்கள் ஆப்கானிஸ்தானம் வழியாக - கைபர் போலன் கணவாய் களைக் கடந்து இந்தியத் துணைக் கண்டத்துள் நுழையும் போது கொண்டு வந்ததா கர்நாடக இசை! கர்நாடக இசை என்பது தமிழிசை! 

தமிழிசைக்கு முதல் முதலாக அறிவார்ந்த இலக்கண நூல் எழுதியவர் ஆபிரகாம் பண்டிதர் என்ற தமிழர்! மதத்தால் இவர் கிறித்துவர்! கர்நாடக இசையில் தமிழில் பாடுவதற்கென்று சமரசக் கீர்த்தனைகள் 19ஆம் நூற்றாண்டில் எழுதியவர். கிறித்தவரான மாயூரம் வேதநாயகம் பிள்ளை! இப்பொழுது கர்நாடக இசையில் ஆழமான ஆய்வுகள் வழங்கி வருபவர் ஐயா மம்மது அவர்கள்! 

இசை வேந்தர் சின்ன மௌலானா சாகிப் அவர்கள் நாதஸ்வரத்தில் கர்நாடக இசை மழை பொழிந்தவர். இவர் இசுலாமியர்! கிறித்தவரான ஏசுதாஸ் இந்துக் கடவுள்களைப் போற்றிப்பாடலாம்; ஆனால் பிராமண இசைக் கலைஞர்கள் ஏசுவைப் பற்றியும் அல்லாவைப் பற்றியும் பாடக் கூடாது என்பதுதான் அவர்கள் விதிக்கும் விதி! 

வர்ணாசிரம ஆதிக்கம் இந்துப் போர்வையைப் போத்திக் கொண்டு வருகிறது. முக்காட்டை நீக்கிப் பார்த்தால் உள்ளே தெரிவது ஆரியப் பிராமண முகம்! வர்ணாசிரமப் பாகுபாட்டு முகம்! அதற்கு இந்நிகழ்ச்சியும் ஒரு சான்று! 

பா.ச.க. ஆட்சி வந்தபின் ஆரியத்துவா அட்டூழியங்கள் பெருகி விட்டன. 

வடநாட்டில் நடப்பதுபோல் தமிழ்நாட்டிலும் தமிழர்களிடையே இந்துமத வெறியைக் கிளப்பி, கலகங்கள் செய்ய ஆரியத்துவாவாதிகள் தூண்டுகின்றனர். இந்து மதத்தில் உள்ள தமிழர்களே ஆரியத்துவா சதிக்குப் பலியாகி விடாதீர்கள். 

இந்த ஆரிய பிராமண ஆதிக்கவாதிகள் தாம் நம் சைவ, வைணக் கோயில்களிலும் திருமூலர் பாடல்கள், தேவாரம், திருவாசகம், ஆழ்வார்களின் பாசுரங்கள் போன்ற ஆன்மிகப் பாடல்களைப் பாட விடாமல் தடுத்தவர்கள். தமிழ் வழிபாட்டு முறையை (அர்ச் சனையை) நீக்கி சமற்கிருத வழிபாட்டு முறையை கொண்டு வந்தவர்கள்! சிதம்பரம் நடராசர் கோயிலில் தேவாரம் பாடத் தீட்சிதர்கள் போட்ட தடை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்தான் நீக்கப்பட்டது. 

“கணையாழி” - 2018 செப்டம்பர் இதழில் கடைசிப் பக்கம் பகுதியில் இந்திரா பார்த்தசாரதி அவர்கள் மேற்படி இந்துத்துவா வெறியர்களின் மிரட்டல்களைக் கண்டித்த துடன் டி.எம். கிருஷ்ணாவுக்குப் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். இந்திரா பார்த்த சாரதி அவர்களுக்கு நம் பாராட்டுகள்! 

இந்து மதத்தில் உள்ள தமிழர்களே ஆரியப் பிரா மணியத்தின் முகமூடியான இந்துத்துவா ஒப்பனையில் ஏமாந்து போகாதீர்கள்! ஆரியத்துவாவைச் சுமந்து வரும் அரசியல் குதிரை இந்தியத்தேசியம் என்பதை இனங் காணுங்கள்!

Labels:

காந்தி கொலை வழக்கில் வாழ்நாள் தண்டனை பெற்ற கோபால் கோட்சே 14 ஆண்டுகளில் விடுதலை - தமிழ்நாடு ஆளுநர் ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும்! பெ. மணியரசன் அறிக்கை!

Monday, September 10, 2018

காந்தி கொலை வழக்கில் வாழ்நாள் தண்டனை 
பெற்ற கோபால் கோட்சே 14 ஆண்டுகளில் 
விடுதலை - தமிழ்நாடு ஆளுநர் ஏழு 
தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும்!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
தோழர் பெ. மணியரசன் அறிக்கை!


பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுதலை செய்வதென்று தமிழ்நாடு அமைச்சரவை நேற்று (09.09.2018) முடிவு செய்து, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியிருப்பது பாராட்டிற்குரிய செயல்!

தமிழ்நாடு ஆளுநர் சட்ட வல்லுநர் கருத்துகளைக் கேட்பது ஒரு பக்கம்; இருந்தாலும், காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியாக வாழ்நாள் தண்டனை பெற்ற கோபால் கோட்சேயை பதினான்கு ஆண்டு சிறைத் தண்டனை முடிந்த நிலையில், அன்றைய மகாராட்டிர காங்கிரசு ஆட்சி விடுதலை செய்தது என்ற முன்னெடுத்துக்காட்டை எண்ணிப் பார்க்க வேண்டும். ஏனெனில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் மகாராட்டிரத்தைச் சேர்ந்தவர்!

இந்திய அரசமைப்புச் சட்ட உறுப்பு – 161 இன்படி, சிறையாளிகளின் தண்டனைக் குறைப்பு மற்றும் விடுதலை உள்ளிட்டவற்றில் மாநில அரசுக்கு தங்குதடையற்ற அதிகாரம் இருக்கிறது என்பதை தொடர்ச்சியாக பல்வேறு உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் உறுதி செய்துள்ளன.

மாரூராம் எதிர் இந்திய ஒன்றிய அரசு வழக்கில், 1981இல் தீர்ப்பு வழங்கிய நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் ஆயம், இரண்டு செய்திகளைத் தெளிவுபடுத்தியுள்ளது. ஒன்று, மாநில அரசுக்கு 161இன்படி உள்ள அதிகாரம் தங்குதடையற்றது, அது நடுவண் அரசின் அனுமதிக்கோ ஆய்வுக்கோ உட்பட்டதல்ல என்பது. இரண்டு, அந்த 161-ஐப் பயன்படுத்தி ஒரு தடவை தண்டனைக் குறைப்பு செய்தால், இரண்டாம் தடவை தண்டனைக் குறைப்போ விடுதலையோ செய்யக்கூடாது என்ற அரசுத் தரப்பு வாதத்தை ஏற்க மறுத்து, அரசமைப்புச் சட்டம் ஒரு தடவைதான் தண்டனைக் குறைப்பு செய்ய வேண்டுமென வரம்பு விதிக்கவில்லை என்று தெளிவுபடுத்தியது. மாரூராம் வழக்கில் ஏற்கெனவே மரண தண்டனைக் குறைக்கப்பட்டு வாழ்நாள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அதே மாநில அரசு விரும்பினால் அவரை விடுதலை செய்யவும் அதிகாரமிருக்கிறது என்று தீர்ப்பளித்தது.

இப்பொழுது பேரறிவாளன் வழக்கில் ஏற்கெனவே மரண தண்டனை நீக்கப்பட்ட நிலையில், மறுபடியும் அவர்களை மாநில அரசு விடுதலை செய்ய முடியுமா என்றால், முடியும் என்பதைத்தான் மேற்படி கிருஷ்ணய்யர் தீர்ப்பு உறுதி செய்கிறது.

2014இல், அன்றைய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு மாநில அரசுக்கு 161இன் கீழ் உள்ள அதிகாரத்தை பாதிக்கும் வகையில் எந்தக் கருத்தும் கூறவில்லை; தீர்ப்பும் வழங்கவில்லை! நீதிபதி சதாசிவம் அமர்வின் பரிந்துரைப்படி இவ்வழக்கிற்காக அமைக்கப்பட்ட நீதிபதி கலிபுல்லா தலைமையிலான அரசமைப்பு ஆயம் 2015 திசம்பர் 2இல் வழங்கிய தீர்ப்பில் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி நடுவண் அரசின் காவல் துறை போட்ட வழக்கில் மாநில அரசு தண்டனைக் குறைப்போ விடுதலையோ செய்ய வேண்டுமானால் நடுவண் அரசின் ஒப்புதலைப் பெற வேண்டுமெனக் கூறியது. அதேவேளை, மாநில அரசுக்கு தண்டனைக் குறைப்பு அல்லது விடுதலை செய்யும் அதிகாரம் 161இன்கீழ் உள்ள அதிகாரம் தங்கு தடையற்றது (Unfettered) என்று கூறியது.

இப்பொழுது, நீதிபதி இரஞ்சன் கோகாய் தலைமையில் நீதிபதிகள் நவீன் சின்கா, கே.எம்.ஜோசப் ஆகியோரைக் கொண்ட அமர்வு, பேரறிவாளன் மனு மீது அளித்த தீர்ப்பில், மாநில அரசு 161இன் கீழ் முடிவெடுக்க (அதாவது விடுதலை செய்ய) தடை ஏதுமில்லை என்று 07.09.2018 அன்று தீர்ப்பளித்துள்ளது. அத்துடன் மேற்படி ஏழு தமிழர்கள் மீதான குற்றச்சாட்டு ஐயம் திரிபற நிரூபிக்கப்படவில்லை என்பது இவ்வழக்கில் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற அமர்வுக்குத் தலைமை தாங்கிய கே.டி. தாமஸ் அவர்களின் கூற்றிலிருந்தே அறியலாம்.

தமிழ்நாடு அரசின் அமைச்சரவை பரிந்துரையின் மீது ஒன்றிய அரசின் கருத்துக் கேட்க வேண்டிய நிலை இல்லை! ஆளுநர் இந்திய அரசின் கருத்துக்கேட்பு நடைமுறையில் இறங்கக் கூடாது.

மேலே எடுத்துக்காட்டப்பட்டுள்ள கோபால் கோட்சே விடுதலை, உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் ஆகியவற்றின் அடிப்படையிலும், ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் கருத்துகளையும் கணக்கில் எடுத்தும், தமிழ்நாடு ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோகித் அவர்கள், இராசீவ் கொலை வழக்கில் இருபத்தேழு ஆண்டுகளாகச் சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை எந்தக் காலத்தாழ்வுமின்றி உடனே விடுதலை செய்யுமாறு தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

Labels:

தமிழ்நாட்டில் ஐட்ரோகார்பன் திட்டத்தை அனுமதியோம்! பெ. மணியரசன் கண்டனம்!

Wednesday, September 5, 2018


தமிழ்நாட்டில் ஐட்ரோகார்பன் 
திட்டத்தை அனுமதியோம்! 

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
தோழர் பெ. மணியரசன் கண்டனம்!


நடுவண் அரசின் ஐட்ரோகார்பன் இயக்குநரகத்தின் கூட்டம் நாளைக்கு (06.09.2018) பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் புதுதில்லியில் நடைபெறப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், ஏற்கெனவே தமிழ்நாட்டில் பெட்ரோலியம், மீத்தேன் உள்ளிட்ட ஐட்ரோகார்பன் எடுப்பதற்கு ஏலமெடுத்துள்ள நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. 

அதன்படி முதல் கட்டமாக, மரக்காணத்திலிருந்து கடலூர் வரை உள்ள வட்டாரத்தையும், பரங்கிப்பேட்டையிலிருந்து வேளாங்கண்ணி வரையுள்ள இன்னொரு வட்டாரத்தையும் வேதாந்தா நிறுவனத்திற்குக் கொடுக்கிறார்கள். குள்ளஞ்சாவடியிலிருந்து தரங்கம்பாடி வரையுள்ள வட்டாரத்தை ஓ.என்.ஜி.சி.க்குக் கொடுக்கிறார்கள். இங்கு குறிப்பிடப்படும் ஒரு வட்டாரத்தில் நூற்றுக்கணக்கான குழாய்களை இறக்கி அவர்கள் ஐட்ரோகார்பன் எடுத்துக் கொள்ளலாம். 

மேலே குறிப்பிட்ட பகுதிகள் அனைத்தும் விவசாய நிலங்கள் நிறைந்துள்ள வேளாண் மண்டலமாகும். இந்த ஐட்ரோகார்பன் திட்டம் செயல்பட்டால், முழுமையாக வேளாண்மை அழிந்துவிடும். கிராமங்கள் காலி செய்யப்படும். நிலத்தடி நீர் மாசுபடும். ஆறுகள் மற்றும் கால்வாய்களின் நீரோட்டங்கள் தடுக்கப்படும் அல்லது திசைமாற்றப்படும். மக்கள் வேறு வழியின்றி வெளியேற வேண்டிய நிலை உருவாகும். ஒட்டுமொத்தத்தில், பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வரும் தமிழ் மக்களின் தாய் மண்ணும் வாழ்வுரிமையும் பறிக்கப்படும்! 

நரேந்திர மோடி ஆட்சியில் இந்தியப் பொருளாதாரம் முற்றிலும் தகர்ந்து வீழ்ந்துவிட்டது. ரூபாய் மதிப்பு படு வீழ்ச்சி அடைந்து, பாதாளம் நோக்கிப் போய்க் கொண்டுள்ளது. பெட்ரோலியப் பொருட்களின் விலை அன்றாடம் உயர்ந்து கொண்டுள்ளது. ஏற்கெனவே, பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பொருளாதாரம் நசிந்து, மக்களின் வாங்கும் சக்தி குறைந்துள்ளது. இவற்றையெல்லாம் ஈடுகட்ட, தமிழர் வாழ்வைச் சூறையாடி, தமிழ்நாட்டுக் கனிமங்களை எடுத்து, அயல் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து, வெளிநாட்டு செலாவணி ஈட்ட மோடி அரசு முயல்கிறது. 

தூத்துக்குடி வட்டாரத்தில் மக்களின் வாழ்க்கையை நாசமாக்கி – 13 மனித உயிர்களைப் பலி கொண்ட வேதாந்தா நிறுவனத்திற்கு பரிசளிப்பதுபோல், தமிழ்நாட்டின் காவிரி மண்டலத்தை மோடி அரசு காவு கொடுக்கிறது! 

ஏற்கெனவே, வரிகள் மற்றும் கட்டணங்கள் வழியாக இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் அதிகமாக இந்திய அரசுக்கு பணம் கொடுக்கும் மாநிலமாக இருக்கிறது. ஓராண்டுக்கு 2 இலட்சம் கோடி ரூபாய்க்கு மேல் தமிழ்நாட்டிலிருந்து வரிப்பணமும், இதரக் கட்டணங்களும் தில்லிக்குப் போகிறது. அதற்குரிய முறையில், தில்லியிலிருந்து தமிழ்நாட்டுக்குப் பணம் வருவதில்லை; திட்டங்களும் வருவதில்லை! நாம் அனுப்பும் பணத்திற்கும், அங்கிருந்து வரும் தொகைக்கும் இடையே மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடு இருக்கிறது! 

தமிழ்நாட்டு மண்ணின் வளத்தை அழித்து – மக்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் ஐட்ரோகார்பன் திட்டம் பற்றி, தமிழ்நாடு அரசு தனது நிலைபாட்டை அறிவிக்க வேண்டும். இத்திட்டத்தை எதிர்க்க வேண்டும். 

பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் மட்டும் போராடுவார்கள் என்ற நிலையை மாற்றி, ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் இத்திட்டங்களை எதிர்த்துப் போராட வேண்டும். கணக்குப் பார்த்தால், தமிழ்நாட்டின் எந்தப் பகுதியையும் இந்திய அரசு விட்டுவைக்கவில்லை. தூத்துக்குடியில் போராட்டம், சேலம் பகுதியில் எட்டுவழிச்சாலை பாதிப்பால் போராட்டம் என்று தமிழ்நாடு முழுக்க நடுவண் அரசு கை வைத்து மக்களின் வாழ்வுரிமையையும், மண்ணுரிமையையும் பறித்து வருகிறது. எனவே, ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக ஒட்டுமொத்தத் தமிழ் மக்களும் போராட வேண்டிய தேவை உள்ளது! நாம் நடத்தும் போராட்டம், மக்கள் திரள் நடத்தும் அறப்போராட்டம் - வன்முறையற்ற போராட்டம்! 

இந்திய அரசு மக்களின் குரலுக்கு செவி சாய்த்து, ஐட்ரோ கார்பன் திட்டங்களை முற்றிலுமாகக் கைவிட வேண்டும். தமிழ்நாடு அரசு, மேற்படி திட்டங்களை தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டோம் என்று நடுவண் அரசுக்குத் தெரிவிக்க வேண்டும். இக்கோரிக்கைகள் ஏற்கப்படவில்லையெனில், நாம் போராட்டக் களத்தில் இறங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கு அனைத்து மக்களும் வர வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். 

Labels:

மாணவி சோபியா சிறையிலடைப்பு : தமிழிசையின் அதிகார வெறியை வன்மையாகக் கண்டிக்கிறேன்! பெ. மணியரசன் கண்டனம்!

Tuesday, September 4, 2018



மாணவி சோபியா சிறையிலடைப்பு :
தமிழிசையின் அதிகார வெறியை
வன்மையாகக் கண்டிக்கிறேன்! 

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
தோழர் பெ. மணியரசன் கண்டனம்!


முனைவர் பட்ட ஆய்வை கனடாவில் முடித்துவிட்டு, சொந்த ஊர் தூத்துக்குடிக்கு திரும்பிய மாணவி சோபியா சென்னையிலிருந்து தூத்துக்குடி வந்த வானூர்தியில் பயணம் செய்திருக்கிறார். அதே வானூர்தியில் பயணம் செய்த பா.ச.க. தலைவர் தமிழிசை சௌந்தரராசன் அவர்களைப் பார்த்ததும், மனம் கொதித்து “பாசிச பா.ச.க. ஆட்சி ஒழிக!” என்று முழக்கமிட்டிருக்கிறார். 

இதற்காக வானூர்தியிலிருந்து இறங்கி கீழே வந்தவுடன் வரவேற்பறையில் அம்மாணவியிடம் சண்டைக்குப் போயிருக்கிறார் தமிழிசை! அந்தக் காட்சி காணொலியாக ஓடிக் கொண்டுள்ளது. காவல்துறையினரும் மற்றவர்களும் எவ்வளவோ கெஞ்சிக் கேட்டும், தடுத்தும் தமிழிசை அவர்கள், நிற்காமல் மேலும் மேலும் அந்த மாணவியை நோக்கி வலிந்து செல்கிறார். ஆனால், மற்றவர்கள் அவரை தடுத்து விட்டார்கள். அப்போது, அவர் காவல்துறையினரிடம் தன்னை தாக்க வந்ததாகவும், தன் உயிருக்கே ஆபத்து என்றும் தேசியப் பாதுகாப்புக்கு ஆபத்து என்றும் புகார் கொடுக்கிறார். இந்த மாணவிக்குப் பின்னால் ஏதோ ஒரு “தீவிரவாத” அமைப்பு இருக்கிறது என்றும் ஆதாரமில்லாமல் கூறுகிறார். 

இந்தப் பொய்ப் புகாரை ஏற்று காவல்துறையினர், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு – 290 (பொது இடத்தில் அரசு, அரசு சார்ந்த உயர் அதிகாரிகளுக்கு எதிராக மக்களைக் கிளர்ந்து எழச் செய்யும் வகையில் பேசுதல்), 505 (1)(b) – காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்தல் மற்றும் 75 (1)(c) (மாநகரக் காவல் சட்டம்) – அரசதிகாரியின் கேள்விக்கு விடை கூறாதது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சோபியாவை சிறையில் அடைத்துள்ளார்கள். இவற்றில் 505 - பிணை மறுப்புப் பிரிவாகும். 

அதேவேளை, அம்மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்ததுடன், அவரை இழிவுபடுத்திப் பேசி அவமானப்படுத்தியதுடன் தாக்க முயன்ற பா.ச.க.வினர் மீது, அம்மாணவியின் தந்தை காவல்துறையிடம் கொடுத்த புகாரை பதிவு செய்யாதது கண்டனத்திற்குரியது. 

விமானத்தில் பயணம் செய்யும்போது, ஓர் அரசியல் தலைவருக்கு எதிராக முழக்கம் போட வேண்டியதில்லை என்பது சரிதான்! ஆனால், தூத்துக்குடியில் 13 உயிர்கள் பலியாவதற்குக் காரணமான பா.ச.க. ஆட்சி, அதன் மாநிலத் தலைவர் தமிழிசை என்ற முறையில், அந்த மண்ணின் மகளுக்கு அடக்க முடியாத சீற்றம் ஏற்பட்டிருக்கலாம். 

பா.ச.க.வின் பல்வேறு சர்வாதிகார நடவடிக்கைகளின் உச்சமாக மனித உரிமை இயக்கங்களின் தலைவர்களாக விளங்கும் மக்கள் செல்வாக்கு பெற்ற பாவலர் வரவர ராவ், சுதா பரத்வாஜ் உள்ளிட்டோரைக் கைது செய்து சிறையில் அடைத்த கொடுமை – உலகெங்கும் வாழும் மனித உரிமை ஆர்வலர்களின் நெஞ்சத்தில் ஈட்டியாய்ப் பாய்ந்துள்ளது.

இச்சூழ்நிலையில், அம்மாணவி தமிழிசையைப் பார்த்தவுடன் பொங்கியெழுந்த ஆவேசத்தில் முழக்கமிட்டிருக்கலாம். காந்தியத்தில் நம்பிக்கையும், அரசியலில் பக்குவமும் தமிழிசைக்கு இருந்திருந்தால், வானூர்தியை விட்டு இறங்கியவுடன் அப்பெண்ணை அன்பாக அருகே அழைத்து, “என்னம்மா உனக்குக் கோபம்?” என்று கேட்டு, அம்மாணவியை ஆற்றுப் படுத்துவதற்கு முயன்றிருக்கலாம். 

இரண்டாவதாக பா.ச.க.வின் எதேச்சாதிகார நடவடிக்கைகள் மீது மக்கள் கொண்டுள்ள எதிர்ப்பின் அடையாளம் என்று இதைப் புரிந்து கொண்டு, தன் கட்சியின் தலைமைக்கு இதை எடுத்துரைத்து, தன் கட்சி தற்சோதனை செய்து கொள்ள கேட்டுக் கொண்டிருக்கலாம்! 

அந்த அறவழியை விடுத்து, அதிகார வெறியோடு அந்த இளம்பெண் மீது பாய்வதும், அவர் மீது பொய் வழக்குப் போட வைப்பதும் நாகரிகச் சமூகம் செரித்துக் கொள்ள முடியாத செயலாகும்!

கண்ணுக்குத் தெரிந்த ஒரு பொய்ப் புகாரை பதிவு செய்து, அப்பெண்ணை சிறையில் அடைக்க காவல்துறைக்கு ஆணையிட்ட மேலதிகாரி யார், அரசியல் தலைவர் யார் என்பதைத் தெரிந்து கொண்டு, அவர்கள் மீது தமிழ்நாடு முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழிசை சௌந்தரராசன் அவர்களுடைய அதிகார ஆணவத்தையும், பழிவாங்கும் சினத்தையும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். 

Labels:

பேரூர் மூத்த ஆதினகர்த்தர் சாந்தலிங்க இராமசாமி அடிகளார் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்! பெ. மணியரசன் இரங்கல் !

Monday, September 3, 2018

பேரூர் மூத்த ஆதினகர்த்தர் சாந்தலிங்க 
இராமசாமி அடிகளார் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்!

தமிழ்த்தேசியப் பேரியக்க தலைவர் பெ. மணியரசன் இரங்கல் !

பேரூர் மூத்த ஆதினகர்த்தர் தவத்திரு. சாந்தலிங்க இராமசாமி அடிகளார் அவர்கள் இயற்கை எய்திய செய்தி அறிந்து மிகவும் வேதனையுற்றேன். தமிழ்ச் சைவ சமயத்தில் நின்று தெய்வத்தொண்டு, செந்தமிழ்த் தொண்டு, கல்வித் தொண்டு மற்றும் பல மக்கள் தொண்டுகள் ஆற்றிய மாத்தமிழர் ஐயா அவர்கள். ஆன்மிகத்திலும் தமிழர் வாழ்வியலிலும் ஆக்கிரமித்துள்ள ஆரிய மொழி மற்றும் பண்பாட்டு ஆதிக்கங்களை நீக்கி மரபுவழிபட்ட தமிழர் பண்பாட்டை மீட்க அரும்பாடு பட்டவர் ஆவார்கள்.

ஆதினத்தின் பொறுப்பில் அருந்தமிழ் கல்லூரி நடந்து வருகிறது. கொங்குச் சீமையில் ஏரளாமாகத் தமிழ் வழிக் குடமுழுக்குகள் நடத்தினார்கள். நம்முடைய தமிழ் மக்களும் அடிகளாரின் ஆன்மிக வழிப்பட்ட தமிழ்த்தொண்டுக்கு வரவேற்பும் வாய்ப்பும் கொடுத்தார்கள்.

ஐயா அவர்களுடைய சிறந்த சாதனைகளில் ஒன்று தகுதியான இளையபட்டம் அவர்களைத் தேர்வு செய்தது ஆகும். இளையபட்டம் அவர்கள் மூத்த ஆதினகர்த்தர் சாந்தலிங்க இராமசாமி அடிகளாரின் ஆன்மிக மற்றும் தமிழ்ப் பணிகளை விரிவடைய செய்து வளர்த்தவருகிறார்கள்.

மூத்த ஆதினகர்த்தர் ஐயா அவர்களை பேரூர் ஆதினத்தில் ஒரு முறை நேரில் சந்தித்து அவர்களுடைய பணிகளைப் பாராட்டும் வாய்ப்பு பெற்றேன். ஐயா அவர்கள் இயல்பாக கலந்துரையாடி எமது தமிழ்த்தேசிய பணிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். நாங்கள் உணவு அருந்தி செல்ல வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். அவ்வாறே உணவு அருந்தி வந்தோம். இளையபட்டம் அவர்களுடன் அப்போதுதான் அறிமுகமானேன். இளையபட்டம் அவர்கள் தமிழ்மொழிக்காக எடுத்து வரும் எல்லாச் செயல்பாடுகளையும் தொடர்ந்து பாராட்டி வருவதுடன் அச்செயல்பாடுகளுக்கு இயன்ற வரை ஆதரவு அளித்துவருகிறேன். 

பேரூர் மூத்த ஆதினகர்த்தர் பெருமைமிகு சாந்தலிங்க இராமசாமி அடிகளார் மறைவுக்குத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். தவத்திரு இளையபட்டம் அவர்களுக்கும் அன்பர்களுக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறேன். 

Labels:


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்