<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d6955529389241309188\x26blogName\x3d%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86.%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://thozharmaniyarasan.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com/\x26vt\x3d-8408640130511538487', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

"தமிழ்த்தேசியம் சாத்தியம் இல்லையா?" தினமணி கட்டுரைக்கு எதிர்வினை--தோழர் பெ. மணியரசன்.

Thursday, February 28, 2019

====================================
தமிழ்த்தேசியம் சாத்தியம் இல்லையா?
தினமணி கட்டுரைக்கு எதிர்வினை
==========================
==========
தோழர் பெ. மணியரசன்,

தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
==========================
==========

தி.மு.க. செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருட்டிணன் அவர்கள், “தினமணி” இதழில் (27.02.2019) “தமிழ்(த்) தேசியமும் வந்தேறிகளும்!” என்ற தலைப்பில் நடுப்பக்கக் கட்டுரை எழுதியுள்ளார். திராவிட முகாமில் பெரியார், அண்ணா, முரசொலி மாறன் உள்ளிட்டோர் வரை தேசிய இனம், தேசம் என்பவற்றிற்கு சரியான விளக்கம் தரவில்லை. தி.மு.க.வைச் சேர்ந்த கு.ச. ஆனந்தன் மட்டுமே தமது “மலர்க மாநில சுயாட்சி” நூலில் சரியான விளக்கம் தந்திருந்தார்.

இப்போது வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருட்டிணன் தேசிய இனம், தேசம் ஆகியவற்றிற்கு சரியான வரையறை தந்துள்ளார். அடுத்து, தேசம் (Nation) என்பதற்கும் நாடு (Country) என்பதற்கும் இடையே உள்ள வேறுபாடுகளையும் சரியாகக் கூறியுள்ளார். பாராட்டுகள்!

ஆனால், தமிழ்த்தேசியம் என்பதை சமூக அறிவியல்படி ஏற்றுக் கொள்ளும் இராதாகிருட்டிணன் தருக்க அடிப்படையில் மறுக்கிறார்.

“தமிழ்த்தேசியத்தில் சில நியாயங்கள் இருந்தாலும் உலகமயமாக்கல், உலக மக்களிடையே செயற்கையான பிணைப்புகள் என்பது தடையாக அமைந்துவிட்டது. உலகமே ஒரு கிராமம் என்ற கருத்து நம்மை வேறு திசையை நோக்கி அழைத்துச் செல்கிறது. ஒரு தேசிய இனத்தின் கலாச்சாரம், அதன் நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், எல்லாம் இந்த உலகமயமாக்கலுக்குள் புகுந்துவிட்டன”.

உலகமயத்துக்குப் பின் புதிய நாடுகள்
-----------------------------------------------------------
தேசியத் தனித்தன்மைகளை உலகமயம் உள்வாங்கி விட்டது என்ற இராதாகிருட்டிணனின் மேற்படி கூற்று தன் முரண்பாடு கொண்டுள்ளது. உலகமயமும் தகவல் தொழில்நுட்பப் புரட்சியும் 1990 முதல் தீவிரமான செயல்பாட்டிற்கு வந்தன. அந்த 1990லிருந்து எத்தனை புதிய நாடுகள் பிறந்தன என்பதை இன்னொரு பக்கம் ஆண்டு வாரியாக அடுக்கி இருக்கிறார். இன்னொருபக்கம், 1991இல் சோவியத் ஒன்றியம் 15 நாடுகளாகப் பிரிந்தது. செக்கஸ்லோவியா இரண்டு நாடானது. யூகோஸ்லாவியா அடுத்தடுத்து பிரிந்து 6 நாடுகள் ஆனது (1999). கிழக்குத் திமோர் (1999), எரித்திரியா (1993) தனி நாடுகளாக உருவாயின. கொசோவா 2008 - இல் தனி நாடானது. தெற்கு சூடான் 2011-இல் தனிநாடானது.

பிரித்தானியாவிலிருந்து பிரிந்து போக ஸ்காட்லாந்து தனிநாடு கோரியது; அதற்கான கருத்து வாக்கெடுப்பை பிரித்தானிய அரசு நடத்தியது. கொஞ்ச வாக்கு வேறுபாட்டில் ஸ்காட்லாந்து வெற்றி வாய்ப்பை இழந்தது.

ஸ்பெயினிலிருந்து பிரிந்து போக கட்டலோனியா அரசு தானே முன்வந்து 2017இல் கருத்து வாக்கெடுப்பு நடத்தியது. மிகப் பெரும்பான்மை மக்கள் தனி நாட்டிற்கு ஆதரவாக வாக்களித்தனர். ஆனால் ஸ்பெயின் இன ஒடுக்குமுறை அரசு அக்கருத்து வாக்கெடுப்பை சட்டவிரோதச் செயலாக அறிவித்தது. கட்டலோனியா விடுதலை தள்ளிப் போனது.

வட அமெரிக்காவில் கூட டெக்சாஸ், கலிபோர்னியா போன்ற மாநிலங்களில் தனிநாட்டுக் கோரிக்கைகள் உள்ளன.

1990களில் தொடங்கிய உலகமயமும் தகவல் தொழில்நுட்பப் புரட்சியும் மேற்கண்ட தேசங்களின் விடுதலையை - விடுதலைக் கோரிக்கையைத் தடுக்கவில்லை! பின்னர், எந்தக் கணக்கில், இராதாகிருட்டிணன் உலகமயம் தனிநாட்டுக் கோரிக்கையைத் தடுத்துவிட்டது என்கிறார்?

“ஒரு தேசிய இனத்தின் கலாச்சாரம், அதன் நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் எல்லாம் உலகமய மாக்கலுக்குள் புகுந்து விட்டன” என்ற தமது கூற்றுக்கு இராதாகிருட்டிணன் சான்றுகள் தரவில்லை. மாறாக, உலகமயக் காலத்தில் தனிநாடுகள் பல உருவானதற்குத் தான் சான்றுகள் தந்துள்ளார்.

மேற்குலகில் இன அரசியல்
-------------------------------------------
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி உலகத்தை ஒரு கிராமம் ஆக்கி விட்டது என்கிறார் இராதாகிருட்டிணன். உண்மையில் நடந்ததென்ன? தகவல் தொழில்நுட்பப் புரட்சி ஒரு “கிராமத்தை” உலகமாக்கிவிட்டது. ஒவ்வொரு சிறிய மற்றும் பெரிய தனித்தன்மைகளும் தங்கள் அடையாளத்தை நிலைநாட்டிக் கொள்ள வாய்ப்பளித்துள்ளது தகவல் தொழில்நுட்பப் புரட்சி! வெளிநாடுகளில் பணிபுரியும் தமிழர்களிடம்தான் தமிழ்த்தேசிய உணர்ச்சி அண்மைக்காலமாக அதிக அளவில் வளர்ந்துள்ளது.

தகவல் தொழில்நுட்பத் துறையில் அதிகம் வளர்ந்துள்ள வட அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளில் இன்றைய நிலை என்ன? வட அமெரிக்காவில், அயல் இனத்தார் - அதாவது வெளிநாட்டினர் நுழைவைத் தடுக்கும் இன அரசியல் செல்வாக்குப் பெற்றுள்ளது.

வெள்ளை மேலாதிக்க இனவாதத்தின் பிரதிநிதியாகத் தான் வட அமெரிக்கர்கள் - டிரம்பைக் குடியரசுத் தலைவராகத் தேர்வு செய்தார்கள்! மெக்சிகோ எல்லை நெடுக வட அமெரிக்கா, உயரமான மதில் சுவரை எழுப்பி, மெக்சிகோவிலிருந்து யாரும் உள்ளே நுழை யாதபடி தடுக்கப் போகிறது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேற வேண்டும் என்று அந்நாட்டு மக்களில் பெரும்பாலோர் வாக்களித்துள்ளனர்.

இவையெல்லாம் இனத் தற்காப்பு அரசியல்தான். இவற்றையெல்லாம் இராதாகிருட்டிணன் வசதியாக மறந்து விடுகிறாரா அல்லது மறைத்து விடுகிறாரா?

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியானது சிறிய எண்ணிக்கையில் உள்ள இனங்களைக் கூட தற்சார்புள்ளவையாக மாற்றியுள்ளது. ஏற்கெனவே ஒரு கோடிக்குக் கீழ், மக்கள் தொகை கொண்ட நாடுகள் 100க்கும் மேல் உள்ளன. ஐ.நா. மன்றம் 1945இல் உருவாக்கப்பட்ட போது, அதில் உறுப்பு வகித்த நாடுகளின் எண்ணிக்கை 51. இப்பொழுது ஐ.நா.வில் உறுப்பு வகிக்கும் நாடுகள் 193. இன்னும் 100 நாடுகளாவது எதிர்காலத்தில் ஐ.நா. மன்றத்தில் சேரும்!

இந்தியாவிலும் பாக்கித்தானிலும் பல தேசிய இனங்கள் விடுதலைக்குப் போராடிக் கொண்டிருக்கின்றன. சீனாவில் திபெத்திய, உய்கூர் தேசிய இனங்கள் விடுதலைக்குப் போராடிக் கொண்டிருக்கின்றன.

தமிழ்நாட்டின் மக்கள் தொகை 8 கோடி! பிரிட்டன், பிரான்சு நாடுகளின் மக்கள் தொகையை விட அதிகம்! தமிழ் மொழி உலகின் மூத்த மொழி! உலகெங்கும் இந்தியா உட்பட பல நாடுகளில் வாழும் தமிழர்களின் மக்கள் தொகை 12 கோடி!

பழங்காலத்தில் இருந்தே இந்தியா இருக்கிறதா?
----------------------------------------------------------------------------
“ஆங்கிலேயர்களின் ஆட்சிக்குப் பிறகுதான் இந்தியாவை ஒருங்கிணைந்த நிலப்பரப்பாக இந்திய மக்கள் பார்த்தார்கள் என்று கூறுவார்கள். இப்படிக் கூறுவதை முழுமையாக ஒத்துக் கொள்ள முடியாது என்பதை மேற் குறிப்பிட்ட சான்றுகள் வெளிப்படுத்துகின்றன” என்கிறார் இராதாகிருட்டிணன்.

இதற்கான சான்றுகளாக அவர் காட்டுவது, குமரி முனையிலிருந்து இமயமலை வரை தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்று கூறும் சங்க இலக்கியப் பாடல்கள் ஆகும்!

இந்தியா என்று பிற்காலத்தில் மேற்கத்தியரால் பெயரிடப்பட்ட இந்தத் துணைக் கண்டம் முழுவதும் வாழ்ந்தவர்கள் - ஆண்டவர்கள் தமிழர்கள் என்பதற்கான வரலாற்றுச் சான்றுகள், மொழியியல் சான்றுகள் ஏராளமாக உள்ளன. சிந்துவெளி நாகரிகம் (கி.மு 3000 - கி.மு 2500) தமிழர் நாகரிகம். இன்றைய தில்லி, இராசஸ்தான், குசராத், பஞ்சாப், பாக்கித்தான் பஞ்சாப், சிந்து பகுதிகள்தாம் சிந்துவெளி! இங்குதான் அரப்பாவும், மொகஞ்சோதாராவும் லோத்தலும் உள்ளன.

ஆரிய மேலாதிக்கவாதத்தை மறுத்த அம்பேத்கர் இந்தியா முழுவதும் வாழ்ந்தவர்கள் தமிழர்கள் என்று கூறினார்.

இன்றைய இந்தியா என்பது பல்வேறு இனங்களையும் அவர்களின் அரசுகளையும் வீழ்த்தி பீரங்கி முனையில் வெள்ளையர்கள் உருவாக்கியது என்ற வரலாற்று உண்மையை காங்கிரசுக்காரரான நீலம் சஞ்சீவரெட்டியே கூறியுள்ளார்.

இந்தியா என்பது ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியின் முரடர்களான இராபர்ட் கிளைவ் போன்றவர்களின் துப்பாக்கி முனையால் உருவாக்கப்பட்டது என்பதை அண்ணா கூறியுள்ளார். “வடவர் நம்மவரும் இல்லை; அவர்கள் நல்லவர்களும் இல்லை” என்று அண்ணா கூறினார். அதற்காகவே தனிநாடு கேட்பதாகக் கூறினார். அண்ணா, தனிநாட்டுக் கோரிக்கையை - திராவிட நாட்டுக் கோரிக்கையைக் கைவிட்டது சட்டத் தடை காரணமாகத்தான்! இந்தியத்தேசிய ஏற்பால் அன்று.

தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிட்ட பின்னும், 1967இல் முதலமைச்சர் ஆன பிறகும் கூட, அண்ணா சொன்னார் : “தடைச் சட்டத்தின் காரணமாகத் தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிட்டோம்; ஆனால் தனிநாட்டிற்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன”.

கே.எஸ். இராதாகிருட்டிணன் இவற்றையெல்லாம் வசதியாக மறந்துவிட்டு, பல்லாயிரம் ஆண்டுகளாக இந்தியா ஒன்றாக இருந்தது என்பதுபோல் கூறுகிறார். வடமொழி இதிகாசங்கள்; புராணங்கள் கூட இந்தத் துணைக் கண்டத்தில் 56 வெவ்வேறு தேசங்கள் இருந்தன என்று கூறுகின்றன.

தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிட்ட தி.மு.க.வினர் இப்போது அண்ணாவையும் கைவிட்டுவிட்டனர். கலைஞர் கருணாநிதிதான் இப்போது அவர்களின் தத்துவத் தலைவர். கலைஞரோ “நான் இனத்தால் திராவிடன், மொழியால் தமிழன், நாட்டால் இந்தியன்” என்று கூறி எல்லாப் பந்தியிலும் இடம் தேடும் சந்தர்ப்பவாத “இனக் கோட்பாட்டைக்” கூறினார்.

இந்திய அரசமைப்புச் சட்டம் கூட இந்தியாவை ஒரு தேசம் என்று கூறவில்லை. இந்தியாவை அரசுகளின் ஒன்றியம் என்கிறது. அது “இந்தியன்” என்றொரு தேசிய இனம் இருப்பதாகக் கூறவில்லை. இந்தியக் குடிமக்கள் இருப்பதாக மட்டுமே கூறுகிறது. ஆனால் கலைஞர் கருணாநிதி “இந்தியன்” என்ற இனத்தை ஏற்றுக் கொண்டார்.

எசமானனை விஞ்சிய எசமான விசுவாசம் என்பார்கள். அதுபோல் இருக்கிறது இராதாகிருட்டிணனின் தமிழ்த் தேசிய மறுப்பு!

ஆந்திராவில் “தெலுகு தேசம்” என்றும் தெலங்கானாவில் “தெலங்கானா தேசியக் கட்சி” (தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி) என்றும் தங்கள் சொந்தத் தேசிய இனத்தின் பெயரில் கட்சி வைத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் தமிழர்களுக்குத் தொடர்பில்லாத திராவிடப் பெயரில் கட்சி நடத்துகிறார்கள்.

“வந்தேறிகள்” பற்றி
------------------------------
“மற்றொரு பிரச்சினை, தமிழ்த்தேசியம் பேசுபவர் களால் பரவலாக முன்வைக்கப்படும் “வந்தேறிகள்” என்கிற குற்றச்சாட்டு. தன்னுடைய மூதாதையர்கள் தமிழகத்தில் பிறந்து, இதைத் தாயகமாகக் கொண்டு, அவர்களின் வழிவழியாக வந்து, தமிழ் மண்ணை நேசித்து, இந்த மண்ணுக்காக நேர்மையாகப் போராடும் நல்லுள்ளங்களை “வந்தேறிகள்” என்று காயப்படுத்துவது எந்தவிதத்திலும் நியாயமல்ல” என்று இராதாகிருட்டிணன் கூறுகிறார். அவரின் வேதனை ஞாயமானது!

தமிழ்த்தேசியம் பேசும் எல்லோரும் மேற்கண்ட “வந்தேறிகள்” வாதத்தை வைக்கவில்லை; ஒரு சாரார் மட்டுமே வைக்கிறார்கள் என்ற உண்மையை இராதாகிருட்டிணன் போன்றவர்கள் பார்க்க வேண்டும். உள்ளதை உள்ளபடி பார்க்க வேண்டும்.

வரலாற்று வழியில் 400 - 500 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டிற்கு வந்து இங்கேயே வழிவழியாக வாழக்கூடிய பிறமொழி பேசும் மக்கள் வந்தேறிகளோ, அயலாரோ அல்லர். அவர்கள் மண்ணின் மக்கள்! மரபு வழித் தமிழர்களுக்குள்ள அத்தனை உரிமைகளும் அவர்களுக்கும் உண்டு என்கிறது எமது தமிழ்த்தேசியப் பேரியக்கம்! தமிழ்நாட்டின் ஆட்சி மொழி, கல்வி மொழி தமிழ் என்பது தமிழ்த்தேசியத்தின் மொழிக் கொள்கை!

1990லிருந்து தமிழ்த்தேசியத்தை முன்வைத்தும், அதற்காக சிறை உள்ளிட்ட அரசு அடக்குமுறைகளை ஏற்றும் தொடர்ந்து தமிழ்த்தேசியத்தைப் பரப்பி வரும் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் நிலைபாடு இதுதான்!

யார் வெளியார்?
--------------------------
யார் வெளியார், யார் மண்ணின் மக்கள் என்பதற்கான ஒரு வரம்பைத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் வைத்துள்ளது.

இன்றையத் தமிழ்நாடு இந்திய அரசமைப்புச் சட்டப்படி 1956 நவம்பர் 1-இல் தமிழர் தாயகமாக வடிவமைக்கப்பட்டது. இந்த 1956 நவம்பர் 1-க்கு முன் தமிழ்நாட்டில் வாழ்ந்தவர்களும் அவர்களின் வாரிசுகளும் மண்ணின் மக்கள். அதற்குப் பின் வந்தவர்கள், “வெளி யார்” என்பது தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் வரை யறுப்பு. இந்த “வெளியார்” தமிழ்நாட்டுக் குடியுரிமை பெறத் தகுதி அற்றோர். இவர்களைப் படிப்படியாக வெளியேற்ற வேண்டும்.

புதிதாக அன்றாடம் வந்து குவியும் வெளி மாநிலத்தவர்களுக்கு, வாக்காளர் அட்டையோ, குடும்ப அட்டையோ வழங்கக் கூடாது. வெளியார் வெள்ளத் தைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

கர்நாடகம், குசராத், மராட்டியம், மேற்குவங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் வெளி மாநிலத்தவர்களுக்கு மாநில அரசு, நடுவண் அரசு, தனியார் துறை ஆகியவற்றில் வரம்பின்றி வேலை தரக்கூடாது என்று அரசு ஆணைகளும் சட்டங்களும் இருக்கின்றன. வெளி மாநிலத்தவர்கள் வேளாண் நிலங்களை வாங்க கர்நாடகத்தில் தடைச்சட்டம் இருக்கிறது. நாகாலாந்து, மிசோரம், அருணாச்சலப்பிரதேசம் ஆகியவற்றில் வெளி மாநிலத்தவர் தங்குவதற்கு மாநில அரசின் அனுமதி பெற வேண்டும் என்பதற்கு உள் அனுமதிச் சட்டம் (Inner Line Permit) இருக்கிறது.

தமிழ்த்தேசியம் பேசுவோரில் சிலர், குறிப்பாகத் தெலுங்கை மரபுவழித் தாய்மொழியாகக் கொண்டவர் களுக்கு எதிராகப் பேசி வருகிறார்கள். இவ்வாறு பேசுவது தவறு என்று நான் பலமுறை கூறியுள்ளேன். இப்போதும் கூறுகிறேன். அதேவேளை வரலாற்றுச் செய்திகளைக் கணக்கில் கொள்ள வேண்டும்.

ஆந்திரத் தெலுங்கர்களின் ஆதிக்கத்திலிருந்த நீதிக்கட்சி ஆட்சியில், ஆந்திராவும் அடங்கிய அன்றைய சென்னை மாகாணத்தில் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டோர்க்கே அரசியல் மற்றும் அரசு பதவிகளில் முன்னுரிமை தரப்பட்டது. முதலமைச்சர் பதவியும் அவர்களுக்கே தரப்பட்டது.

1937இல் நீதிக்கட்சி போய்விட்ட பின்னும் அதன் தொடர்ச்சியாக, இந்திய விடுதலைக்குப் பின்னும் தமிழ் நாட்டின் முதலமைச்சர்களாகத் தெலுங்கை மரபுவழித் தாய்மொழியாகக் கொண்டவர்களும், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டாவர்களும் முதலமைச்சர் ஆகிறார்கள்.

அதேவேளை, ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் தமிழர்கள் ஏராளமாக வாழ்ந்தாலும் அவர்கள் முதலமைச்சர்களாக அல்ல, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களாகக்கூட வர முடியவில்லை. தமிழ்ப் பகுதிகளில் கேரளத்தில், கர்நாடகத்தில் யாராவது தமிழர் சட்டமன்ற உறுப்பினராக வந்தாலும், அவர்கள் அங்கு மக்கள் தலைவர்களாக வர முடிவதில்லை. தொழிற்சங்கங்களுக்குக் கூட அம்மாநிலங்களில் மாநிலத் தலைவராகத் தமிழர்கள் வர முடிவதில்லை.

இந்த முரண்பாடு, இன்றையத் தமிழ் இளைஞர்களில் ஒரு சாராரிடம், சீற்றத்தை ஏற்படுத்தியிருக்கலாம். இதைப் புரிந்து கொண்டு அந்த இளைஞர்களை அமைதிப்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் தமிழர்கள் தலைவர்களாக, முதலமைச்சராக வருவதற்குத் தடைச் சட்டம் எதுவுமில்லை. வாருங்கள் என்றுகூறி அமைதிப்படுத்த வேண்டும்.

காலம் காலமாக இம்மண்ணில் வாழும் மக்களை “வந்தேறிகள்”, “அயலார்” என்று பேசுவோரை, அவ்வாறு கொச்சைப்படுத்தாதீர்கள் என அறிவுரை கூற வேண்டும்; உரிமையோடு கண்டிக்க வேண்டும்.

தெலுங்கை மரபுவழித் தாய்மொழியாகக் கொண்ட மக்களில் பலர்க்கு இன்று தெலுங்கு மொழி பேசத் தெரியாது; எழுதத் தெரியாது. அவர்கள் நடைமுறையில் தமிழைத்தான் தங்கள் தாய்மொழியாகக் கொண்டுள்ளார்கள். தமிழ் மொழிக் காப்புப் போராட்டத்தில் (1965இல்), தமிழீழ விடுதலை ஆதரவுப் போராட்டங்களில் மரபுவழியாகத் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட ஏராளமான மக்கள் கலந்து கொண்டார்கள்; ஈகம் செய்தார்கள். நாளைக்கும் செய்வார்கள். அவர்களில் தமிழ் மொழி வளர்ச்சிக்கு அறிவார்ந்த பணியாற்றிய தமிழறிஞர்கள் பலர்!

எந்தச் சிறுபான்மை மொழி பேசும் மக்களும் தங்கள் தாய்மொழியில் பேசக்கூடாது என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஒருபோதும் சொன்னதில்லை; சொல்லாது! அது அவர்களின் அடிப்படை உரிமை!

கே.எஸ். இராதாகிருட்டிணன், பொத்தாம் பொதுவில் தமிழ்த்தேசியம் பேசுவோர் எல்லாம், பிறமொழி பேசும் மண்ணின் மக்களை வந்தேறிகள் என்று பேசுவது போல் கூறியிருப்பது சரியன்று. வெளிநாடுகளில் எல்லாம் தமிழர்கள் அமைச்சர்களாக, நாடாளுமன்ற உறுப்பினர்களாக, மேயர்களாக, ஏன் பிரதமர் பொறுப்பில் கூட இருக்கிறார்கள் என்று கூறுகிறார். ஆனால் அவர் ஏற்றுக் கொண்டுள்ள திராவிட மாநிலங்களான ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம், கேரளம் ஆகியவற்றில் தமிழர்கள் ஒரு தடவைகூட முதலமைச்சராக வந்ததில்லை. அமைச்சர்களாக, நாடாளுமன்ற உறுப்பினர்களாக வர முடியவில்லை என்பதையும் இராதாகிருட்டிணன் திறனாய்வாகக் கூற வேண்டும்.

தமிழர்களைத் தாக்கும் “திராவிட” மாநிலங்கள்
--------------------------------------------------------------------------
காவிரிச் சிக்கல் என்றால் கர்நாடகத்தில் கன்னடர்கள் அப்பாவித் தமிழர்களைக் கொலை செய்கிறார்கள்; தமிழர்களின் வணிக நிறுவனங்களை, வீடுகளை எரித்துச் சாம்பலாக்கினார்கள். 1991 டிசம்பரில் தமிழினப் படுகொலைகளைச் செய்தார்கள் கன்னடர்கள். அப்போது காலம் காலமாகக் கர்நாடகத்தில் வாழ்ந்து வந்த இரண்டு இலட்சம் தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு ஏதிலிகளாக ஓடி வந்தார்கள். 2016இல் கூட கர்நாடகத்தில் தமிழர்களைத் தாக்கிப் படம் பிடித்துப் போட்டார்கள் கன்னடர்கள். கே.பி.என். என்ற தமிழர் நிறுவனப் பேருந்துகளை - 200க்கு மேல் எரித்துச் சாம்பலாக்கினார்கள்.

முல்லைப் பெரியாறு அணைச்சிக்கல் என்றால் மலையாளிகள் அப்பாவித் தமிழர்களைத் தாக்குகிறார்கள்; தமிழ்நாடு எண் பொறித்த ஊர்திகளை உடைக்கிறார்கள். அய்யப்பசாமி கோயிலுக்குப் போன தமிழ்நாட்டுப் பக்தர்களைத் தாக்கினார்கள்; தேநீர்க் கடைக்குப் போன தமிழ்நாட்டுத் தமிழர் ஒருவர் மீது வெந்நீர் ஊற்றினார்கள். வெந்து செத்தார் அவர்!

பேருந்தில் பயணம் செய்த 20 அப்பாவித் தமிழர்களை வலுவந்தமாக இறக்கி, செம்மரம் கடத்தியதாகப் பொய்க்குற்றம் சுமத்தி அவர்களைக் கட்டி வைத்து உறுப்புகளை அறுத்துப் பின்னர் சுட்டுக் கொன்றனர் ஆந்திரக் காவல்துறையினர். இந்திய மனித உரிமை ஆணையம் ஆந்திர அரசு மீது குற்றம்சாட்டியது. ஆனால், ஆந்திர அரசு ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை!

இந்தியத்தேசியம் பேசும் “திராவிட மாநிலங்கள்” தமிழர்கள்பால் எவ்வாறு நடந்து கொள்கின்றன என்பதை இராதாகிருட்டிணன் போன்றவர்கள் கணக்கில் எடுக்க வேண்டும். தி.மு.க., அ.தி.மு.க., தி.க. போன்ற திராவிடக் கட்சிகள் அத்திராவிட மாநிலங்களுக்குச் சென்று தமிழ் இன எதிர்ப்பையும், தமிழர்களைத் தாக்குவதையும் கைவிடுங்கள் என்று பரப்புரை செய்ய வேண்டும்.

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தைப் பொறுத்தவரை - வரலாற்று வழியில் பல நூறு ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாடு வந்து வழிவழியாய் வாழ்ந்து வரும் தெலுங்கு, கன்னடம், உருது, சௌராட்டிரம், மராத்தி போன்ற மொழிகளைப் பேசும் மக்களை சம உரிமையுள்ள மண்ணின் மக்களாகவே, உடன்பிறப்புகளாகவே பார்க் கிறது. இதில், தவறு செய்யும் தமிழ் இளைஞர்களுக்கு அறிவுரை சொல்லி வருகிறது பேரியக்கம்!

===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
===============================
பேச: 7667077075, 9840848594
===============================
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
===============================
ஊடகம்: www.kannottam.com
===============================
இணையம்: www.tamizhdesiyam.com
===============================

Labels: ,

" மண்ணின் மக்கள் பாவலர் வையம்பட்டி முத்துச்சாமி! "--தோழர் பெ. மணியரசன் புகழ் வணக்கம்

Wednesday, February 27, 2019
====================================
மண்ணின் மக்கள் பாவலர்
வையம்பட்டி முத்துச்சாமி!
==========================
==========
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்

தோழர் பெ. மணியரசன் புகழ் வணக்கம்!
==========================
==========

பாவலர் வையம்பட்டி முத்துச்சாமி அவாகள் இன்று (27.02.2019) விடியற்காலை 2.30 மணியளவில் ஓசூரில் தமது இல்லத்தில் காலமானார் என்ற செய்தி பெருந்துயரம் தந்தது. நோய்வாய்ப்பட்டு மருத்துவம் பார்த்து நலமாகி வந்த நிலையில், அவர் அந்நோயினால் காலமானது மிகத் துயரமாக உள்ளது. மணப்பாறை அருகே உள்ள அவர் ஊரான வையம்பட்டி அவர் பெயராகிப் போனது!

மக்கள் பாவலர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் போல் தானே முளைத்து எழுந்த மண்ணின் கவிஞர் வையம்பட்டி முத்துச்சாமி. வையம்பட்டியும் மக்கள் பாவலர்! அவர் இயற்றிய பாடல்களை அவரே பாடவும் செய்வார். அவர் பாடல்களை பல்வேறு இசைக் குழுவினர் பாடி வருகிறார்கள். திரைப்படங்களிலும் அவர் பாடல்கள் வந்துள்ளன.

மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சியிலும் அதன் கலை இலக்கிய அமைப்பிலும் செயல்பட்டு வந்த முத்துச்சாமி அவர்கள், ஓசூர் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள் தலைமைச் செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் கோ. மாரிமுத்து, பொதுக்குழு உறுப்பினர் தோழர் ப. செம்பரிதி உள்ளிட்ட தோழர்களுடன் நெருக்கமாகப் பழகி வந்தார். அங்கு தமிழ்த்தேசியப் பேரியக்க மேடைகளிலும் அவர் தமது பாடல்களைப் பாடியுள்ளார்.

தமிழ்க் கலை இலக்கியப் பேரவை ஒசூர் பொறுப்பாளர் தோழர் ப. செம்பரிதி அவர்களும், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்களும் பெருமுயற்சி செய்து நன்கொடை திரட்டி கடந்த 22.04.2018 ஓசூரில் சிறப்பான விழா நடத்தி, பாவலர் வையம்பட்டி முத்துச்சாமிக்கு 1,25,000 ரூபாய் நிதி வழங்கினர்.

என் மீதும் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அவர்கள் மீதும் மிகுந்த அன்பு வைத்திருந்தார். நாங்கள் மிகுந்த பாசத்துடன் அவருடன் தோழமை கொண்டிருந்தோம்.

சமகால மக்கள் சிக்கல்களை மையப்படுத்தி தான் நாட்டுப் புறப்பாடல்கள் இயற்றி வந்தார்.

பெண் குழந்தை கருவிலும், பிறந்த பின்னும் கொலை செய்யப்படுவதை எண்ணித் துடித்து வையம்பட்டியார் எழுதிய பாடல் மிகவும் புகழ் பெற்றது.

“பொண்ணு பொறக்குமா ஆணு பொறக்குமா
பத்து மாசமா போராட்டம்
பொண்ணா பொறந்தா கொன்னுடுவேன்னு
புருசன் செய்யுறான் ஆர்ப்பாட்டம்..”

என்று தொடங்கும் பாடல் கவிதை நயமும் இசை நயமும் மிக்கது.

ஊர்ப்புறங்களில் உள்ள சாதி உணர்வுகளை – சாதிக் கொடுமைகளைக் கண்டித்து அவர் இயற்றிய பாடல்களில் “எங்கள் ஊர் அழகு” என்ற தலைப்பிலான பாடல் மிகவும் அழகு!

“கண்ணை உருத்தும்படி எங்கள் ஊர்
கள்ளிச்செடி ஓர் அழகு
உள்ளம் கசங்குபடி ஊமத்தம்பூ ஓர் அழகு”

என்று ஊரின் ஒவ்வொரு அழகையும் வர்ணித்து வரும் பாவலர் முத்துச்சாமி, இறுதியில் ஈட்டி பாய்ச்சுவது போல் ஒரு கேள்வி கேட்பார் : “இதில் சாதி எந்த அழகு?”.

மண்ணின் மணத்தோடு, வையம்பட்டி முத்துச்சாமி அவர்கள் எழுதி, பாடிய பாடல்கள் வழி அவர் நிரந்தரமாக வாழ்ந்து கொண்டிருப்பார்!

பாவலர் முத்துச்சாமி அவர்களின் மறைவுக்குத் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில், ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

https://www.kannottam.com/2019/02/blog-post_27.html

===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
===============================
பேச: 7667077075, 9840848594
===============================
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
===============================
ஊடகம்: www.kannottam.com
===============================
இணையம்: www.tamizhdesiyam.com
===============================

Labels:

மண்ணின் மக்கள் பாவலர் வையம்பட்டி முத்துச்சாமி! பெ. மணியரசன் புகழ் வணக்கம்!



மண்ணின் மக்கள் பாவலர் 
வையம்பட்டி முத்துச்சாமி!


தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
தோழர் பெ. மணியரசன் புகழ் வணக்கம்!


பாவலர் வையம்பட்டி முத்துச்சாமி அவாகள் இன்று (27.02.2019) விடியற்காலை 2.30 மணியளவில் ஓசூரில் தமது இல்லத்தில் காலமானார் என்ற செய்தி பெருந்துயரம் தந்தது. நோய்வாய்ப்பட்டு மருத்துவம் பார்த்து நலமாகி வந்த நிலையில், அவர் அந்நோயினால் காலமானது மிகத் துயரமாக உள்ளது. மணப்பாறை அருகே உள்ள அவர் ஊரான வையம்பட்டி அவர் பெயராகிப் போனது! 

மக்கள் பாவலர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் போல் தானே முளைத்து எழுந்த மண்ணின் கவிஞர் வையம்பட்டி முத்துச்சாமி. வையம்பட்டியும் மக்கள் பாவலர்! அவர் இயற்றிய பாடல்களை அவரே பாடவும் செய்வார். அவர் பாடல்களை பல்வேறு இசைக் குழுவினர் பாடி வருகிறார்கள். திரைப்படங்களிலும் அவர் பாடல்கள் வந்துள்ளன. 

மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சியிலும் அதன் கலை இலக்கிய அமைப்பிலும் செயல்பட்டு வந்த முத்துச்சாமி அவர்கள், ஓசூர் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள் தலைமைச் செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் கோ. மாரிமுத்து, பொதுக்குழு உறுப்பினர் தோழர் ப. செம்பரிதி உள்ளிட்ட தோழர்களுடன் நெருக்கமாகப் பழகி வந்தார். அங்கு தமிழ்த்தேசியப் பேரியக்க மேடைகளிலும் அவர் தமது பாடல்களைப் பாடியுள்ளார். 

தமிழ்க் கலை இலக்கியப் பேரவை ஒசூர் பொறுப்பாளர் தோழர் ப. செம்பரிதி அவர்களும், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்களும் பெருமுயற்சி செய்து நன்கொடை திரட்டி கடந்த 22.04.2018 ஓசூரில் சிறப்பான விழா நடத்தி, பாவலர் வையம்பட்டி முத்துச்சாமிக்கு 1,25,000 ரூபாய் நிதி வழங்கினர். 

என் மீதும் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அவர்கள் மீதும் மிகுந்த அன்பு வைத்திருந்தார். நாங்கள் மிகுந்த பாசத்துடன் அவருடன் தோழமை கொண்டிருந்தோம்.

சமகால மக்கள் சிக்கல்களை மையப்படுத்தி தான் நாட்டுப் புறப்பாடல்கள் இயற்றி வந்தார். 

பெண் குழந்தை கருவிலும், பிறந்த பின்னும் கொலை செய்யப்படுவதை எண்ணித் துடித்து வையம்பட்டியார் எழுதிய பாடல் மிகவும் புகழ் பெற்றது.

“பொண்ணு பொறக்குமா ஆணு பொறக்குமா
பத்து மாசமா போராட்டம்
பொண்ணா பொறந்தா கொன்னுடுவேன்னு
புருசன் செய்யுறான் ஆர்ப்பாட்டம்..”

என்று தொடங்கும் பாடல் கவிதை நயமும் இசை நயமும் மிக்கது. 

ஊர்ப்புறங்களில் உள்ள சாதி உணர்வுகளை – சாதிக் கொடுமைகளைக் கண்டித்து அவர் இயற்றிய பாடல்களில் “எங்கள் ஊர் அழகு” என்ற தலைப்பிலான பாடல் மிகவும் அழகு!

“கண்ணை உருத்தும்படி எங்கள் ஊர்
கள்ளிச்செடி ஓர் அழகு
உள்ளம் கசங்குபடி ஊமத்தம்பூ ஓர் அழகு”

என்று ஊரின் ஒவ்வொரு அழகையும் வர்ணித்து வரும் பாவலர் முத்துச்சாமி, இறுதியில் ஈட்டி பாய்ச்சுவது போல் ஒரு கேள்வி கேட்பார் : “இதில் சாதி எந்த அழகு?”.

மண்ணின் மணத்தோடு, வையம்பட்டி முத்துச்சாமி அவர்கள் எழுதி, பாடிய பாடல்கள் வழி அவர் நிரந்தரமாக வாழ்ந்து கொண்டிருப்பார்! 

பாவலர் முத்துச்சாமி அவர்களின் மறைவுக்குத் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில், ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

Labels:

தமிழ்நாடு அரசே, ஓ.என்.ஜி.சி.யின் மக்கள் விரோதச் செயல்களுக்குத் துணை போகாதே! பேராசிரியர் செயராமன் உள்ளிட்டோரை விடுதலை செய்! பெ. மணியரசன் அறிக்கை!

Saturday, February 2, 2019


தமிழ்நாடு அரசே, ஓ.என்.ஜி.சி.யின் மக்கள் 
விரோதச் செயல்களுக்குத் துணை போகாதே!
பேராசிரியர் செயராமன்
உள்ளிட்டோரை விடுதலை செய்!

காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் 
தோழர் பெ. மணியரசன் அறிக்கை!


கதிராமங்கலத்தில், துர்க்கை அம்மன் கோயில் அருகே உள்ள எண்ணெய்க் குழாயில் “பராமரிப்புப் பணி” பார்க்க வருவதாகச் சொல்லிக் கொண்டு, நேற்று (01.02.2019)இந்திய எண்ணெய் மற்றும் எரிவளிக் கழகத்தின் (ஓ.என்.ஜி.சி.) ஊர்திகளும், ஊழியர்களும் காவல்துறையினர் புடைசூழ ஊருக்குள் வந்தபோது, மக்களுக்கு பழையபடி பீதி ஏற்பட்டுள்ளது.
கடந்த இரண்டாண்டுகளாக ஓ.என்.ஜி.சி.யை வெளியேற்றக் கோரி ஊர் மக்கள் ஒன்று திரண்டு போராடி வருகிறார்கள். காவல்துறையின் அடக்குமுறைகளுக்கும், சிறை அடைப்புகளுக்கும் அடிக்கடி உள்ளாகி அச்சத்தில் உள்ளார்கள்.
கதிராமங்கலத்தில் எண்ணெய் – எரிவளிக் குழாய்கள் புதைக்கப்பட்டு, ஓ.என்.ஜி.சி. பயன்படுத்திய வேதிப்பொருட்களால் நிலத்தடி நீர் மாசுபட்டு, குடிநீருக்கும், பாசனத்திற்கும் தகுதியில்லாததாக மாறியிருக்கிறது. குழாய்கள் அவ்வப்போது வெடித்து தீப்பிடித்தும், வெள்ளம்போல் எண்ணெய் வழிந்தோடியும் ஏற்கெனவே பாதிப்புகள் உண்டாகியிருக்கின்றன. இந்நிலையில், மீத்தேன் – நிலக்கரி போன்றவற்றை எடுக்க புதிய குழாய்கள் இறக்க ஓ.என்.ஜி.சி. பல இடங்களில் முயன்று வருகிறது. இதற்கு “ஐட்ரோகார்பன்” என்று மாறுவேடப் பெயர் சூட்டியிருக்கிறது.
பலவகையிலும் பாதிக்கப்பட்டுள்ள கதிராமங்கலம் மக்கள், ஊரைவிட்டு ஓ.என்.ஜி.சி. வெளியேற வேண்டுமென்றும், நிலமும் நிலத்தடி நீரும் நஞ்சாவதால் எண்ணெய் – எரிவளி எடுக்கக் கூடாதென்றும, சற்றொப்ப இரண்டு ஆண்டுகளாகப் போராடி வருகிறார்கள். கடந்த 2018 ஏப்ரல் மாதம், இராணுவத்தினரை அழைத்து வந்து அவர்களின் பயிற்சியின் ஒரு பகுதியாக கதிராமங்கலத்தை சுற்றிக் காட்டிப் பயிற்சி கொடுத்தது மக்களிடம் மேலும் பீதியை அதிகப்படுத்தியது.
இந்நிலையில், நேற்று (01.02.2019) முன்னறிவிப்பு எதுவுமில்லாமல் வருவாய்த் துறையினரின் தகவல் ஏதுமில்லாமல், ஓ.என்.ஜி.சி. நிர்வாகம் காவல்துறையினரை ஊருக்குள் நிறுத்தி வைத்துக் கொண்டு, ஊர்திகளில் ஊழியர்களை அனுப்பியது மக்களிடையே பேரச்சத்தை ஏற்படுத்தியது.
அச்சமடைந்த மக்கள் ஒன்றுகூடி, உண்மை விவரங்களைச் சொல்லுங்கள் எனக் கேட்டிருக்கிறார்கள். இதுகுறித்து விவரம் அறிந்து கொள்ள மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த. செயராமன் அவர்களை அழைத்துள்ளார்கள். இந்நிலையில் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி காவல்துறையினர் பேராசிரியர் த. செயராமன் அவர்களையும், உள்ளூர் பிரமுகர் திரு. ராஜூ அவர்களையும் கைது செய்து உண்மைக்குப் புறம்பான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளார்கள். இவர்கள் இப்பொழுது திருச்சி நடுவண் சிறையில் உள்ளார்கள்.
பேராசிரியர் செயராமன் துணைவியார் திருவாட்டி சித்ரா, கதிராமங்கலம் போராட்டக் குழுத் தலைவியர் கலையரசி, செயந்தி ஆகிய மூன்று பேரையும் வழக்கில் சேர்த்துள்ளார்கள். இந்த ஐந்து பேரும் ஓ.என்.ஜி.சி. ஊழியர்களைக் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியதாக இ.த.ச. 506(2) பிரிவின்கீழ் குற்றம்சாட்டியிருக்கிறார்கள். பிணை மறுப்புப் பிரிவுகளைப் போட்டி ருக்கிறார்கள். காவல்துறையின் இந்த அணுகுமுறை கண்டனத்திற்குரியது! ஓ.என்.ஜி.சி.யின் மக்கள் விரோதச் செயல்களுக்கு தமிழ்நாடு காவல்துறை அடியாள் போல் செயல்படக்கூடாது!
தமிழ்நாடு முதல்வர், இச்சிக்கலில் தலையிட்டு பேராசிரியர் செயராமன் உள்ளிட்டோர் மீது போட்டுள்ள பொய் வழக்கை உடனடியாகக் கைவிடச் செய்ய வேண்டுமென்றும், சிறையில் உள்ளோரை விடுதலை செய்ய வேண்டுமென்றும், காவிரிப்படுகையிலிருந்து ஓ.என்.ஜி.சி.யை வெளியேற்றி “பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக” காவிரிப்படுகையை அறிவிக்க வேண்டுமென்றும் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

Labels:


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்