<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d6955529389241309188\x26blogName\x3d%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86.%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://thozharmaniyarasan.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com/\x26vt\x3d-8408640130511538487', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

"பக்திப் பரவச அரசியல் – 1" -- தோழர் பெ.மணியரசன் கட்டுரை.

Wednesday, January 16, 2013

"பக்திப் பரவச அரசியல் – 1" 
-- தோழர் பெ.மணியரசன் கட்டுரை.

சனநாயகம் தனது இடதுகையில் சாட்டையை வைத்திருக்கிறது; வலது கையில் மகுடியை வைத்திருக்கிறது. கொடிய நஞ்சு கொண்ட பாம்பு கூட மகுடி வாசிப்புக்கு மயங்குகிறது என்கிறார்கள். மக்களோ மகுடி வாசிப்புக்கு நாட்டிய மாடுகிறார்கள்.
அரசும் மகுடி வாசிக்கிறது; அரசியலாரும் மகுடி வாசிக்கிறார்கள். ஆளுங் கட்சியும் மகுடி வாசிக்கிறது; எதிர்க்கட்சிகளும் மகுடி வாசிக் கின்றன. மக்கள் மனநிலையைத் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வதே இவர் களின் நோக்கம்.
அரசுகளின் மகுடி வாசிப்பு அரசர் காலத் திலும் உண்டு என்றாலும், அது மிகவும் குறைவான அளவில் இருந்தது; அப்போது சாட்டையின் ஆதிக்கம் மேலோங்கியிருந்தது. ஆனால் சனநாயகக் காலத்தில் மகுடி வாசிப்பிற்குக் கூடுதல் முகாமை தருகின்றன அரசுகள். அரசியல் கட்சிகளோ மகுடி வாசிப்பில் ஒன்றையொன்று விஞ்ச போட்டி போடு கின்றன. மக்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கும் மக் களைச் சுரண்டுவதற்கும் சனநாயகத்தில் சாட் டையைவிட மகுடியே சிறந்த வழி. கட்டளை இடுவதை விட கவர்ச்சியாகப் பேசிக் கவிழ்ப்பது சிறந்தது. பணிய வைப்பதை விட பின்பற்றச் செய்வது மேலானது.
“மக்களுக்காக, மக்களைக் கொண்டு மக்களே உருவாக்கிக்கொள்வது சனநாயகம்” என்றார் ஆபிரகாம் லிங்கன். ஆனால், அது மெய்நடப்பில், அரசியல் தலைவர்களும் முதலாளிகளும் தங்களுக்காக மக்களைக் கொண்டு, தாங்களே உருவாக்கிக் கொள்வதாக இருக்கிறது.
முதலாளிய அரசியல் தலைவர்களும் முதலாளி களும் மக்களின் மனதைக் கட்டுப்படுத்தும் கலையில் வல்லவர்களாக இருக்கிறார்கள். கட்டுப் படுத்தப்பட்ட மனநிலையை (Conditioned Mind) மக்கள் திரளிடம் உருவாக்குவதே அவர்களின் முதல் திட்டம். அதன் பிறகு அம்மக்கள், தாங்கள் சொல்வதற்கெல்லாம் தலையாட்டுவார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். தொலைக் காட்சியில், வானொலியில் ஒரு குறிப்பிட்ட எண்ணில் அந்தந்த நிறுவனத்திற்குத் தனித்தனியே அலைவரிசை ஒதுக்குகிறார்கள். அந்த எண்ணில் அந்த நிறுவனத்தின் ஒளி-ஒலி பரப்புதான் வரும். அது போல் கட்சிகளால் கட்டுப் படுத்தப்பட்ட மனதில் அந்தக் கட்சிக்கு ஆதரவான கருத்துகள் மட்டும்தான் உருவாகும்.
கட்டுப்பட்ட மனநிலைகொண்ட ஒரு மக்கள் கூட்டத்தை உருவாக்கிக் கொள்ள அவர்கள் பல்வேறு உத்திகளைக் கையாள்கிறார்கள்.
பழைய காலங்களில், மிகப்பெரிய இலட்சியங் களையும் திட்டங்களையும் மக்களிடம் சொல்லி அவர்களை ஈர்த்தார்கள். காங்கிரசுக் கட்சியை எடுத்துக் கொண்டால், இந்தியாவின் விடுத லையை வெள்ளையரிடமிருந்து வாங்கித் தந்த கட்சி, அவ்விடுதலையை நிலைநாட்டவும் நிகரமைச் சமூகம் படைக்கவும் காங்கிரசை ஆதரியுங்கள் என்று கேட்டுக்கொண்டார்கள்.
தி.மு.க.வோ திராவிட நாட்டு விடுதலைக் கோரியது, விடுதலைக்குப்பின் திராவிடநாட்டில் நிகரமைச் சமூக அமைப்பை உருவாக்குவோம் என்றது.
இம்முழக்கங்களையெல்லாம் காங்கிரசும் தி.மு.க.வும் போலியாகவே வைக்கின்றன. என் பதைக் காலம் அம்பலப்படுத்தியபின் இப் பொழுது இக்கட்சிகள் பெரிய இலட்சியங்களை முன்வைப்பதில்லை. இன்னொரு கட்சி ஆபத்தானது. அக்கட்சியின் அபாயத்திலிருந்து மக்களைக் காக்க எங்கள் கட்சியே சரியானது என்று மிக மிகச் சிறிய முழக்கம் வைக்கிறார்கள். நடை முறையில் காங்கிரசுக்கும் பா.ச.க.வுக்கும், தி.மு.க. வுக்கும் அ.இ.அதி.முக. வுக்கும் இடையே இலட்சிய வேறுபாடு என்று சொல்லத்தக்க எந்தப் பெரிய வேறுபாடும் இல்லை.
நேரு குடும்பத்தால் தலைமை தாங்கப்படுகிறது என்ற பழம் பெருமையைக் காங்கிரசும், திராவிட இயக்கத்தின் அசல் வாரிசு என்ற பழம்பெருமையை தி.மு.க.வும் பேசிக்கொண்டு ஒரு மக்கள் கூட்டத்தைத் தம்பக்கம் தக்கவைக் கின்றன. மக்களிடம் உள்ள பழம் பெருமை போற்றும் மனப்பான்மை, பழைய கதாநாயகர்களின் வாரிசுகளை ஆதரிக்கும் உளவியல் ஆகியவற்றை இவ்விரு கட்சிகளும் பயன்படுத்திக் கொள்கின்றன. மன்னர் மகன் மன்னர் என்று ஏற்றுக் கொண்ட பழைய உளவியலின் மிச்ச சொச்சம் இந்தப் பழம்பெருமை பாராட்டும் போக்காகும்.
மன்னர் மகன் குருடனாக இருந்தாலும், கோழையாக இருந்தாலும் கொடுங்கோலனாக இருந்தாலும் ஏற்றுக்கொண்ட பழங்கால மனநிலையின் மிச்ச மீதங்கள் உலகில் பல நாடுகளில் இன்றும் இருக்கின்றன. பிரித் தானியாவில், இன்னும் மன்னராட்சியை ஏன் மக்கள் ஏற்றுக் கொண்டுள் ளார்கள்? தங்கள் நாட்டின் பழம் பெருமைக்கான அடையாளச் சின்னம் என்று மன்னராட்சியை ஏற்றுக் கொண் டுள்ளார்கள். இந்தியாவில், தமிழ்நாட்டில் வெள் ளையராட்சி யால் மன்னராட்சி இல்லாமற் போயிற்று. ஆனாலும் மன்ன ராட்சிப் பரம்பரையை ஏற்கும் மனநிலையின் தொடர்ச்சியாகவே தான், காங்கிரசையும் ராகுல் காந்தி யையும் ஒரு சார் மக்கள் ஏற் கிறார்கள். தி.மு.க. வையும் மு.க. ஸ்டாலினையும் மற்றொரு சார் மக்கள் ஏற்கிறார்கள்.
எம்.ஜி.ஆரின் வாரிசாக செயலலிதாவை இன்னொரு சார் மக்கள் ஏற்றுக் கொண்டதும் இதே மனநிலைதான். எம்.ஜி.ஆர் தி.மு.க. வின் ஊழல் ஆட்சியை ஒழித்து, அண்ணாவின் திராவிடப் பரம்பரை ஆட்சியை நிலைநாட்டு வதாகக் கூறி கட்சி அமைத்தார். ஆட்சியைப் பிடித்தார்.
இம்மூன்று கட்சிகளும் கொண்டாடிக் கொள்ளும் பழம்பெருமைகட்கும், இக்கட்சிகளின் இன்றையத் தலை மையின் செயல்பாட்டிற்கும் ஏதேனும் தொடர்ச்சி உண்டா? இல்லை. வெள்ளையரை வெளி யேற்றி, “இந்தியர்கள் தங்களைத் தாங்களே” ஆளும் மாற்றத்தை உருவாக்கியதாகக் கூறிக் கொள் கிறது காங்கிரசு. ஆனால் இதே காங்கிரசுதான், வெள்ளையர் உள்ளிட்ட மேற்கத்திய மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் இந் தியாவில் தொழில் நிறு வனங்கள் தொடங்கி இந்தியப் பொருளிய லையும், இந்திய இயற்கை வளங்களையும் சூறையாட வழிவகுக்கிறது.
வருந்தி வருந்தி அந்நிறுவ னங்களை வரவழைக்கிறது, இந்தியாவின் இறையாண் மையை வெளிநாட்டினரிடம் அடமானம் வைக்கிறது.
தி.மு.க. கூறிக்கொள்ளும் திராவிடப் பாரம்பரியம் எங்கே இருக்கிறது? ஆரிய இந்தியா வின் அடிவருடியாகி, ஆரியப் பார்ப் பனியக் கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து பதவி களைப் பெற்று வருகிறது தி.மு.க. ஊழலை ஒழிப்ப தற்காகத் தொடங்கப்பட்ட அ.இ. அ.தி.மு.க. ஊழல் புரிவதில் தி.மு.க.வோடு போட்டி போடும் கட்சியாக மாறிப்போனது. ஆனால் இன்றும், அன்றைய இலட்சியங் களுக்காகத் திரண்ட அல்லது திரட்டப் பட்ட ஒரு சார் மக்கள் கூட்டம் இக்கட்சிகளில் இருக்கின்றது.
“கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன்” என்ற பழங்காலப் பெண்ணடிமை மனநிலை, கல்லானாலும் கட்சி புல்லானாலும் தலைவர் என்று அரசியல் அடிமைத்தனமாக நீள்கிறது. மன்னராட்சி வழி பாடு, மக்களாட்சியிலும் தொடர்கிறது.
இப்பொழுது இக்கட்சிகள் தங்கள் வசம் ஒரு மக்கள் கூட் டத்தைக் தக்க வைத்துக் கொள்ள பெரிய இலட்சியங்கள் தேவை இல்லை என்று கருது கின்றன. எதிர்க் கட்சி ஆட்சிக்கு வந்தால் வரப்போகும் தீங்குகளை வர்ணிப் பதே போதும், தங்கள் மக்கள் திரளைத் தங்கள் முகாமில் தக்க வைத்துக் கொள்ளமுடியும் என்று மதிப்பீடு செய்கின்றன.
பாரதீய சனதாக் கட்சி, இந்துத் துவப்பழம் பெருமைகளைக்கூறி, தன் முகாமில் ஒரு மக்கள் கூட்டத்தைத் தக்கவைத்துக் கொள்கிறது. அக்கட்சி கூறிக் கொள்ளும் இந்துத்துவ ஆன்மிக ஒழுக்கத்திற்கும் அக்கட்சித் தலைவர்கள் மற்றும் பிரமுகர்களின் நடை முறைக்கும் ஒரு தொடர்பு மில்லை. அத்தனை ஒழுக்கக் கேடுகளும் மலிந்துள்ள கட்சி அது. ஆனாலும் அக்கட்சி முகாமில் உள்ள மக்களுக்கு அந்த ஒழுக்கக் கேடுகள் கருதத்தக்க முரண்பாடுகள் அல்ல;
இந்துத்துவா பற்றிய உரை யாடல் களே அவர்களுக்குப் போதும்!
பொதுவுடைமை, நிகரமை, புரட்சி என்று பேசி போராட்டங்கள் நடத்தி, ரசிய, சீனப் பெருமிதங்களின் கீழ், தங்கள் அமைப்பைக் கட்டமைத்த கம்யூனிஸ்ட்டுக் கட்சிகளுக்கு அந்தத் தத்துவம் இன்று வழி காட்டியில்லை. ரசிய சீனப் பெருமிதங்களும் இன்றில்லை. சில தொகுதிகளின் வெற்றிக்காக தேர்தலுக்குத் தேர்தல் மாறி மாறி பெரியக் கட்சிகளுடன் கூட்டணி சேர்கின்றன. வலுவுள்ள ஒரு சில மாநிலங்களில் ஆட்சி அதிகாரக் கவர்ச்சி காட்டுகின்றன. இருந்த போதிலும் பழைய தத்துவ விசுவாசத்தையும் பெருமிதங்களையும் நினைத்துப் பெருமைபடும் ஒரு சார் மக்கள் கூட்டம் கம்யூனிஸ்ட்டுக் கட்சிகளை ஆதரிக் கின்றன.
இலட்சிய வலிமையோ, கொள்கை வலிமையோ ஒழுக்க வலிமையோ இல்லாத பெரிய கட்சிகள், முழுக்க முழுக்க பழம் பெருமையை மட்டும் சார்ந்து நீண்ட காலம் நிற்க முடியாது. தங்கள் தலைவர்களுக்கு எல்லாதிறமைகளும் இருப்பதாகவும், எதிரிகளை வெல்லும் ஆற்றல் இருப்பதாகவும் சித்தரித்து தலைவர்க்கு புதிய படிமங்களை உருவாக்குகின்றனர்.
சராசரிப் பெண்களைப் போல் காதல் திருமணம் செய்து கொண்டு இந்தியாவில் குடும்பம் நடத்த வந்த இத்தாலியப் பெண்ணான சோனியாவை, இந்தியாவைக் காக்க வந்த அன்னையாக, பராசக்தியாகக் காங்கிரசார் புனைந்து கொண்டார்கள். அவருடைய மகனை நேரு குடும்பத்து இளவரசராகக் கற்பிதம் செய்து கொள்ளுமாறு மக்களைத் தூண்டுகிறார்கள்.
1970களில் ஆட்சியில் இருந்த கருணாநிதியை சோழப் பேரரசர்களின் குறிப்பாக இராச இராசச் சோழனின் இருபதாம் நூற்றாண்டு வாரிசாக கற்பிதம் செய்து கொள்ளுமாறு மக்களைத் தி.மு.க. தூண்டியது. அதிகார நிழலில் வசதிகளோடு தங்கியிருந்த அறிவாளிகள், தமிழறிஞர்கள், பாவலர்கள் பலர் கருணாநிதியை சோழப் பேரரசனாகவே உருவகித்துப் பட்டிமன்றங்கள், பாவரங்கங்கள், கருத்தரங்கங்கள் நடத்தினர்; கட்டுரைகள் தீட்டினர்.
கருணாநிதிக்கு அகவை அதிகமாக அதிகமாக அவரது புகழ்ச்சிப் படிமத்தை பேரரசர் என்ற வடிவத்திலிருந்து பேரரறிஞர் என்ற வடிவத்திற்கு உருமாற்றினார்கள்; “முத்தமிழ் அறிஞராக”, “வாழும் வள்ளுவராக“ வர்ணித்தனர். வர்தரித்திருந்த மன்னர் மகுடத்தை அவர் மகன் ஸ்டாலினுக்கு வழங்கினர். அவர் தளபதி ஸ்டாலின் ஆனார்.
ஏற்கெனவே, காங்கிரசிடம், தி.மு.க.விடம் கட்டுப்படுத் தப்பட்ட மனநிலை கொண்ட ஒரு மக்கள் கூட்டம் இருக்கிறது. அது, முறையே சோனியாவை பாரதமாதாவாகவும் ராகுலை இளவரசராகவும், கருணாநிதியை வாழும் வள்ளுவராகவும், ஸ்டாலினைப் புதிய இளவரசராகவும் எளிதில் ஏற்றுக் கொள்கிறது. ஒரு பெருங்கூட்டம் இவ்வாறு இவர்களை ஏற்றுக்கொள் வதைப் பார்த்து, அம்முகாமிற்குள் புதிதாகச் சிறு கூட்டங்கள் சேர்ந்து கொள்கின்றன. பெருங்கூட்டத்தில் சேர்ந்து கொள்வதும், மந்தையைப் பின்பற்றிச் செல்வதும் பாதுகாப் புணர்ச்சியின் வெளிப்பாடுகள்.
கடவுளை மறுக்கும் கருணாநிதி இராசராசச்சோழனாகவும் திருவள்ளுவராகவும் மறுபடியும் மறுபடியும் புதுப்புது அவதாரங்கள் எடுப்பதைப் பார்த்த அ.இ.அ.தி.மு.க. முகாம் தெய்வ பக்தியுள்ள செயலலிதாவை இதய தெய்வம் என்ற நிலையிலிருந்து “மனித தெய்வம்”, “தெய்வத்தின் தெய்வம்”, என்ற நிலைகளுக்கு “ உயர்த்தியது”.
தமிழக அரசியல் விளையாட்டுகளை ஆர்வத்துடன் வேடிக்கைப் பார்ப்பதில் ஈடுபட்டு, பின்னர் தாமே ஓர் அரசியல் விளையாட்டைத் தொடங்கினார் விசயகாந்த். அக்கட்சியினர், தங்கள் தலைவரை “வாழும் வள்ளலாரே” என்று அழைக்கின்றனர். வாழும் வள்ளுவருக்குப் போட்டியாக வாழும் வள்ளலார்! அசல் வள்ளுவரை அசல் வள்ளலார் குருவாக ஏற்றுக் கொண்டார். இங்கோ “அரசியல் வள்ளுவரை” வீழ்த்த “அரசியல் வள்ளலார்” புறப்பட்டார்.
வள்ளுவரும் வள்ளலாரும் தமிழினத்தின் அறிவுச் சிகரங்கள்! சமூக நீதியின் தலைவர்கள் அறவொழுக்கத்தின் திசைகாட்டிகள்!. அவர்களை எவ்வளவு கொச்சைப்படுத்தி விட்டனர். தி.மு.க.வினரும் தே.மு.தி.க. வினரும்! ஆசை வெட்கமறியாது.
தி.மு.க., அ.இ.அ.தி.மு.க., தே.மு.தி.மு.க கட்சிகளில் உள்ள ஒரு சார் மக்கள் கூட்டம் கருணாநிதியை வள்ளுவராக, செயலலிதாவைத் தெய்வமாக, விசயகாந்தை வள்ளலாராக உருவகப் படுத்துவதைக்கண்டு முகம் சுழிக்கவில்லை. முகமலர்ச்சி யோடு வரவேற்கிறார்கள்.
அக்கட்சிகளிடம் இருப்பதும் மக்கள் சக்திதான்! அவர்களில் உழவர்கள் தொழிலாளர்கள், தொழில்முனைவோர், படித்தவர்கள், ஆராய்ச்சியாளர்கள், பெண்கள் எனப் பலவகையினரும் இருக்கின்றனர் இவர்களெல்லாம் மக்கள் சக்திதான்!
இவர்கள் அனைவரும் ஏற்கெனவே கட்டுப்படுத்தப்பட்ட மனநிலையில் உள்ளவர்கள். கருணாநிதி வள்ளுவரல்ல, செயலலிதா தெய்வமன்று, விசயகாந்து வள்ளலார் அல்லர் என்ற உண்மைகள் இவர்களின் அறிவுக்கு ஏற்கெனவே தெரியும். ஆனாலும் அவர்களோடு ஒப்பிட்டுத் தங்கள் தலைவர்களைப் புகழ்வது பொருத்தம்தான் என்று, கட்டுப் படுத்தப்பட்ட இவர்களின் மனம் ஏற்றுக்கொள்கிறது.
மேலே பட்டியலிடப்பட்ட மக்கள் பிரிவுகளில் பலர் தன்னலம் கருதி, தங்களின் தேவைகளை நிறை வேற்றிக் கொள்வதற்காக மேற்படி கட்சிகளில் இருக்கிறார்கள்.
மனநோய் வந்த பெண்கள் மந்திரவாதிகளின் முன் தங்களுக்குப் பேய் பிடித்திருப்பது போல் ஆடுவதில்லையா, அப்படித்தான் கட்சித் தலைவர்களின் விருப்பத்திற்கேற்ப இந்த மக்கள் சக்தி பேயாட்டம் போடுகிறது. கட்டுப் படுத்தப்பட்ட மனநிலை ஒருவகை மன நோய்தான்!
ஒருவரைத் தலைவராக மக்கள் ஏற்றுக் கொள்வது தவறன்று. அத்தலைவர் எந்தத் தவறு செய்தாலும் எத்தனை எத்தனை தில்லுமுல்லு செய்தாலும் அவற்றையெல்லாம் பொறுத்துக் கொண்டு, அத்தலைவருக்குப் போற்றி பாடுவதுதான் கட்டுப்படுத்தப் பட்ட மனநிலையின் செயல்பாடு!
மக்களின் இறையாண்மை எப்போதும் மக்களிடம் இருக்க வேண்டும். மக்கள் தங்கள் இறையாண்மையை, ஒரு தலைவரிடம் நிரந்தரமாக ஒப்படைத்து விடக்கூடாது. சரியான திசையில் செல்லும்வரைத் தலைவரைப் போற்றலாம, தவறான திசையில் தலைவர் சென்றால் அவரைத் திருத்தும் விழிப்புணர்ச்சியும் ஆற்றலும் அவருடன் உள்ள மக்களுக்கு இருக்க வேண்டும். அவர் திருந்தவில்லையெனில், அவரைத் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கவோ, அல்லது அவரை விட்டு விலகவோ மக்களுக்குத் தெளிவும் துணிவும் இருக்க வேண்டும். இதைத் தான் “இறையாண்மை எப்போதும் மக்களிடம் இருக்க வேண்டும்“ என்று கூறுகிறோம்.
மந்திரவாதிகளால் வசியப் படுத்தப்பட்ட மனநோய்ப் பெண்கள் அம்மந்திரவாதிகளின் சொல்படி பேயாட்டம் போடு வதுபோல், கட்சித் தலைமையால் வசியப்படுத்தப்பட்ட மக்கள், கட்சித் தலைமை சொல்கிற படியெல்லாம் ஆடுகிறார்கள். எடுத்துக் காட்டாக ஒன்றிரண்டைக் கூறலாம்.
இந்தியாவில் சிறுவணிகத்தில் 51 விழுக்காடு அளவுக்கு வெளிநாட்டினர் முதலீடு செய்து சில்லரை வணிக நிறுவனங்களை வெளிநாட்டினரே நடத்தலாம் என்று இந்திய அரசு ஆணை இயற்றியது,
இது உள்நாட்டுச் சில்லரை வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் மண்ணின் மக்களின் வாழ்வுரிமையைப் பறித்துவிடும்; அவர்களை அழித்துவிடும் என்று இந்தியா வெங்கும் எதிர்ப்புக் குரல் எழுந்தது. தி.மு.க. தலைவர் கருணாநிதியும் சில்லரை வணிகத்தில் வெளிநாட்டினர் வருவதை எதிர்த்தார். அவரைப் பின்பற்றி தி.மு.க வினரும் ஆனால் நடுவண் அமைச்சர் ஒருவர் கருணாநிதியைச் சந்தித்துக் கமுக்கம் பேசிய பின் வெளிநாட்டினர் சில்லரை வணிகத்தில் வருவதை கருணாநிதி ஆதரித்தார். உடனே திமுக வினரும் அதை ஆதரித்தனர். நாடாளுமன்றத்தில் இச்சிக்கலில் வாக்கெடுப்பு நடக்கும் போது தோல்வி ஏற்பட்டால் காங்கிரசுக் கூட்டணி அரசு கவிழ்ந்து, மதவாத பா.ச.க. தலைமையில் கூட்டணி அரசு உருவாகிவிடுமென்பதால் சில்லரை வணிகத்தில் வெளி நாட்டினர் நுழைவதை ஆதரித்ததாக கருணாநிதி காரணம் கூறிக்கொண்டார். கருணாநிதியின் குட்டிக் காரணத்தை திமுகவிலுள்ள சிறு வணிகர்கள் கூட எதிர்க்கவில்லை. இதுதான் கட்டுப்படுத்தப்பட்ட மன நிலையின் செயல்பாடு.
மதவாதக் கட்சி ஆட்சிக்கு வர வாய்ப்பளிக்கக் கூடாது என்று இப்பொழுது சொல்லும் கருணாநிதி 1998 லிருந்து 2004 வரை பா.ச.க. ஆட்சிக்கு முட்டுக் கொடுத்தவர்தான் பா.ச.க. அமைச்சரவையில் திமுகவினரும் பங்கேற்றவர்கள்தாம். ”பா.ச.க. தீண்டத்தகாத கட்சியன்று” என்று முரசொலிமாறன் 1998 வாக்கில் கூறினார் முரசொலிமாறன். அப்போது பாசக மதவாதக் கட்சி இல்லையா? இவ்வளவும் தி.மு.க.வை ஆதரிக்கும் மக்கள் கூட்டத்திற்குத் தெரியாதா? தெரியும்; கட்டுப்படுத்தப்பட்ட மனநிலையில் உள்ள அவர்கள் கருணாநிதி சாட்டையை சொடுக் குவதற்கேற்ப ஆடுகிறார்கள்.
“நினைத்ததை முடிக்கும் புரட்சித்தலைவி” என்றும் ”கேட்டதை எல்லாம் கொடுக்கும் மனிதத்தெய்வம்” என்றும் செயலலிதாவை ஆராதிக்கிறது அ.இ.அ.தி.மு.க. மக்கள் கூட்டம். நடப்பு சாகுபடி பருவத்திற்குக் கர்நாடகத்திடமிருந்து தமிழ் நாட்டிற்குரிய காவிரி நீரை செயலலிதாவால் பெற முடிய வில்லை. ஐந்து லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடியில் பெரும் பகுதி பாழானது. 16 இலட்சம் சம்பா சாகுபடியில் பெரும்பகுதி அழிந்தது. உச்ச நீதிமன்றத்தில் அடுத் தடுத்து வழக்குப் போட்டதைத் தவிர அதற்குமேல் செயலலிதா “அலட்டிக் கொள்ளவில்லை”. எந்த அரசியல் உத்தியும் வகுத்து நடுவண் அரசுக்கும், கர்நாடக அரசுக்கும் நெருக்கடி கொடுக்க வில்லை. காவிரி நீர் மறுக்கப் பட்டதால் காய்ந்து கருகிப்போன நெற் பயிர்களைப் பார்த்துப் பத்து உழவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள்.
“அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, காவிரி நீரைப் பெற முடிவெடுத்து பிரதமரைச் சந்தித்து நெருக்குதல் செய்ய வேண்டும்; சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, காவிரி நீரைத் தடுக்கும் கர்நாடகத்திற்கு நெய்வேலி மின்சாரத்தை அனுப்பாமல் அதைத் தமிழ்நாட்டிற்குத் திருப்பி விடவேண்டும் என்று இந்திய அரசைக் கோரித் தீர்மானம் போடவேண்டும்; காவிரி நீர் உரிமையை நிலை நாட்டித் தராத நடுவண் அரசு காவிரிப் படுகையில் கிடைக்கும் தமிழகப் பெட்ரோலியத்தை எடுக்கக்கூடாது என்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்” இவ் வாறான கோரிக்கைகளைத் தமிழக அரசிடம் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியும், பல்வேறு அமைப்புகளின் கூட்டமைப்பான காவிரி உரிமை மீட்புக்குழுவும் வைத்தன. செயலலிதா ஏற்கவில்லை. இவற்றை ஏற்காவிட்டாலும் காவிரி நீரைப் பெறுவதற்கான மாற்று உத்திகளை வகுக்கவும் இல்லை. காவிரி உரிமையை மீட்க மக்கள் எழுச்சியை உருவா0க்கவும் இல்லை.
செயலலிதாவைத் தெய்வ மாகக் கொண்டாடும் இலட்சக் கணக்கான உழவர்கள் காவிரிப் பாசன மாவட்டங்களில் வாழ்கிறார்கள் ஆனால் அவர்கள் செயலலிதாவிடம் காவிரி தொடர்பாக் கோரிக்கை எதையும் வைக்கவில்லை. அதுமட்டு மன்று, குதிரை கீழே தள்ளியது மட்டு மன்றி, குழியும் பறித்தது என்பது போல், அ.இ.அ.தி.மு.க அமைச்சர்களும், பிரமுகர்களும் “காவிரி நீர் பெற்று பயிரையும் உயிரையும் காப் பாற்றிய புரட்சித் தலைவி இதயதெய்வம் அம்மா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்” என்று ஏடுகளில் விளம்பரம் கொடுத்தார்கள். இந்தப் பொய் விளம்பரங்களை அ.இ.அதி.மு.க. உழவர்களும் மக்களும் எதிர்க்க வில்லை ஏன்?
அ.இ.அதி.மு.க. தலைமையால் வசியம் செய்யப்பட்ட மக்கள் அவர்கள். அவர்களின் மனநிலை கட்டுப்படுத்தப் பட்டுள்ளது. அவர்களால் செயலலிதாவின் மனம் கோணும்படி சிந்திக்கவே முடியாது.
சொந்த வாழ்க்கை பாதிக்கப் படும்போதும் அழியும் போதும் அ.இ.அ.தி.மு.க.வில் உள்ள உழவர்களுக்குச் சீற்றம் வராதா? வரும். அந்தச் சீற்றத்தை கருணாநிதிக்கு எதிராகத் திருப்பிவிடும் தந்திரம், நடுவண் அரசுக்கு எதிராக திருப்பிவிடும் ஆற்றல் செயலலிதாவுக்கு இருக்கிறது.
காவிரி உரிமைச் சிக்கலில் கடந்த காலங்களில் கருணாநிதி செய்த தவறுகளைக் கண்டிக்கவும் நடுநிலை தவறிய நடுவண் அரசின் வஞ்சகத்தை எதிர்க்கவும் வேண்டும். ஆனால் செயல்படாத செயலலிதாவைச் செயல்படவைக்க அ.இ.அ.தி.மு.க.வினர் எதையும் செய்யவில்லை. மாறாகக் காவிரி நீரைப் பெற்றுத் தந்ததாக அவர்கள் தங்கள் அம்மாவுக்குப் போற்றி பாடுகிறார்கள்.
தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட மறுத்த பிரதமரும், உச்ச நீதிமன்றமும் ஞாயம் வழங்கியது போல் காட்டிக் கொள்ள மிகக் குறைவான நீரைத் திறந்தவிடும்படி கூறிய போது, ஓரிரு நாட்களுக்கு சிறு அளவுத் தண்ணீரை கர்நாடகம் திறந்து விட்டது. உடனே, “வெற்றி, வெற்றி, அம்மா காவிரி நீர் பெற்று விட்டார்“ என்று காவிரிப் பாசன மாவட்டங்களில் அ.இ.அ.தி.மு.க.வினர் வீதிகளில் இனிப்பு வழங்கிக் கும்மாளம் போட்டனர். அதற்கு மட்டும் “விழிப்புணர்ச்சி” எங்கிருந்து வந்தது? அப்போது தண்ணீர் திறந்துவிடச் சொன்ன பிரதமரையோ, உச்சநீதி மன்றத் தையோ பாராட்டாமல் அம்மாவின் சாதனையாக மட்டும் கூறிக் கொண்டது எவ்வளவு பெரிய தந்திரம்!
இக்கட்சிகளின் கட்ட மைப்பிற்கு எடுத்துக்காட்டாக அ.தி.மு.க. கட்டமைப்புச் சொன்னால் உண் மை எளிதில் விளங்கும்: அடித் தளத்தில் வசியம் செய்யப்பட்ட மக்கள் கூட்டம், அதற்கும் மேலே அம்மக்களை அப்படியே பரா மரிக்கும் களத்தரர்களான இடைநிலைப் பிரமுகர்கள் கூட்டம், அவர்களுக்கு மேலே, அற்புதங் களை விளைவிக்கும் அம்மா! இது பக்திப் பரவசக் கட்டமைப்பு அம்மாவுக்காக மண் சோறு தின்பார்கள், கோயில் திருச்சுற்று களில் புரண்டு புரண்டு அங்கப் பிரதட்சணம் செய்வார்கள்.
இது அடிமைகளின் கட்ட மைப்பு அன்று. அவரவர்குரிய பயனை எதிர்ப்பார்த்துச் சேர்ந்துள்ள பயனாளிகளின் கட்டமைப்பு. அற்புதங்களை விளைவிக்கும் அம்மாவுக்குக் கீழே, அவரைத் தாங்கி நிற்கும் இடைத்தரகர் களுக்கு எவ்வளவோ வருமா னங்கள், குட்டிகுட்டிக் அதிகா ரங்கள் குவிந்து கிடக்கின்றன. இடைத் தரகர்களுக்குக் கீழே உள்ள மக்களுக்கும் இலவசங்கள் காத்திருக்கின்றன. வேறுசில “பிரசாதங்களும்” அவ்வபோது கிடைக்கும்.
இந்தப் பக்தி பரவச அடுக்கு முறை தி.மு.க.விலும் உண்டு, காங்கிரசிலும் உண்டு, மற்ற பல கட்சிகளிலும் உண்டு. சடங்கு முறைகள் வெவ்வேறாக இருக்கும். ஆத்திகச் சடங்குகளில் பல பிரிவுகள் இருப்பது போல், நாத்திகச் சடங்குகளில் பல பிரிவுகள் இருப்பது போல் ஆதாய அரசியல் கட்சிகளில் உள்ளோர் தங்கள் பக்தியைக் காட்ட பல வடிவங்கள் உள்ளன. ஆனால் இக்கட்சிகள் அனைத்தும் பயனா ளிகளின் பக்திப் பரவசக் கட்டமைப்பே!

(இக்கட்டுரை, தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2013 ஜனவரி 16 இதழில் வெளியானது.)

Labels:

"பெண்கள் தற்காப்புக்கு கத்தி வைத்துக் கொள்ள வேண்டும்" -- தோழர் பெ.மணியரசன் பேச்சு.

Monday, January 7, 2013

"பெண்கள் தற்காப்புக்கு கத்தி வைத்துக் கொள்ள வேண்டும்" 
-- தோழர் பெ.மணியரசன் பேச்சு.

உலகத் தமிழக் கழகத்தின் சார்பில் வட சென்னை திரு.வி.க.நகரில் பேருந்து நிலையம் அருகில் 0.6.01.2013 அன்று, “திருக்குறள்மணி” புலவர் இறைக்குருவனார், திருவாட்டி தாமரை பெருஞ்சித்திரனார் ஆகியோர்க்கு நினைவேந்தல் - படத்திறப்புக் கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு உலகத் தமிழக் கழகத்தின் தலைவர் முனைவர் ந.அரண முறுவல் தலைமை தாங்கினார். சென்னை மாவட்ட உ.த.க. அமைப்புத் தலைவர், அன்றில் திரு பா. இறை யெழிலன் வரவேற்புரை நிகழ்த்தினார். பேராசிரியர் ம.இலெ.தங்கப்பா அவர்கள் தாமரை அம்மா படத்தையும், புலவர் கு.அண்டிரன் இறைக்குருவனார் படத்தையும் திறந்து வைத்து உரையாற்றினர்.

நிறைவாக தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் உரையாற்றினார். 
“1916இல் மறைமலை அடிகள் தொடங்கிய தனித்தமிழ் இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றியவர்கள் பாவாணர் அவர் களும் பாவலலேறு பெருஞ்சித்திரனார் அவர் களும் ஆவர். பாவாணர், பெருஞ்சித்திரனார் ஆகியோரின் கொள்கைத் தொடர்ச்சியாகவும் இயக்கத் தொடர்ச்சியாகவும் செயல்பட்டவர் இறைக்குருவனார் ஆவார். ஒரு சிறந்த தமிழ்க் குடும்பத்திற்கு எடுத்துக் காட்டான குடும்பம் பெருஞ்சித்திரனார் குடும்பம். அக்குடும் பத்தின் சிறந்த தலைவியாக, அனைவர்க்கும் அம்மா வாகவும் விளங்கியவர் தாமரை அம்மா அவர்கள். பாவலரேறு தாமரை அம்மா குடும்பம் தமிழ்நாட்டின், தமிழ் இனத்தின் தலைக் குடும்பம் ஆகும்.
அக்குடும்பத்தில் சாதி இல்லை; சமற்கிருதம் இல்லை, பேச்சில் ஆங்கிலம் இல்லை, தமிழினம் உண்டு, தனித்தமிழ் உண்டு, தமிழ்த் தேச விடு தலைத் கொள்கை உண்டு. திருக்குறள் மணி இறைக்குருவனார்க்கும், தாமரை அம்மாள் அவர்களுக்கும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பேச்சு வேறு செயல் வேறு என்றில்லாத குடும் பம் பெருஞ்சித்திரனார் குடும்பம். சாதியை மறுத்தார்கள். தமிழ்த் தேசியம் சாதியை மறுக்கிறது. சாதி ஒழித்தல் ஒன்று நல்ல தமிழ் வளர்த்தல் மற்றொன்று. இதில் பாதியை நாடு மறந்தால் மறுபாதி துலங்கு வதில்லையாம் என்றார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.
அதேபோல் பெண்ணுரிமையை மதிக்கும் கொள்கை தமிழ்த் தேசியம். தாமரையம்மா பெருங்குடும்பத்தில் பெண்கள் தமிழ்த் தேசிய அரசியலில் முன்னணியில் இருக்கிறார்கள்.
இப்பொழுது பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் பெருகி வருகின்றன. பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்க தமிழின உணர் வுள்ள ஆண்கள் முன்னணியில் நிற்க வேண்டும். தமிழ்நாட்டில் ஒவ்வொரு பெண்ணும் எப் போதும் கத்தி வைத்துக் கொள்ள வேண்டும். தங்களிடம் வன்முறை செய்ய வரும் ஆளை முந்திக் கொண்டு கத்தியால் குத்த வேண்டும். தற்காப்புக்காக வன்முறையில் ஈடுபடலாம் இந்திய அரசமைப்புச் சட்டம் உரிமை வழங்குகிறது.
எனவே, தயங்காமல் பெண்கள் கத்தி வைத்துக் கொள்ள வேண்டும். பாலியல் வன்முறை செய்ய வரும் ஆணைக் குத்திச் சாய்த்து விட்டு தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். முரடன் கையில் சிக்கிச் சாவதை விட அவனைக் குத்திச் சாய்த்துவிட்டு தப்பிக்கலாம் அல்லது அப்போரில் மடியநேர்ந்தாலும் வீரத்தோடு மடியலாம். அவ்வாறு பெண்கள் போராடும் போது பக்கத்தில் உள்ள ஆண்கள், அந்த முரடர்களைத் தாக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
கூட்டத்தில், திரளான தமிழின உணர் வாளர்களும், பல்வேறு தமிழறிஞர்களும் கலந்து கொண்டனர்.

Labels: ,

"பாலியல் வன்முறைகள் நீங்கி உண்மையான சமத்துவ சமூகம் எப்போது உருவாகும் "--தோழர் பெ.மணியரசன் கட்டுரை.

Tuesday, January 1, 2013

"பாலியல் வன்முறைகள் நீங்கி உண்மையான சமத்துவ சமூகம் எப்போது உருவாகும் "
--தோழர் பெ.மணியரசன் கட்டுரை.

தில்லியில் 16.12.2012 அன்று இரவு 23 அகவை இளம் பெண்ணும் அவருடைய ஆண் நண்பரும் தனியார் பேருந்தொன்றில் பயணம் செய்தபோது அவ்விளம்பெண்ணை பேருந்துக்குள் இருந்த ஓட்டுநரின் நண்பர்கள் ஆறுபேர் பாலியல் வன்முறை செய்து நாசப்படுத்திவிட்டனர். அப்பெண் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார். அவருடைய ஆண் நண்பரைத் தாக்கிக் கீழே தள்ளி விட்டுள்ளனர் அக்கொடியவர்கள்.
புதுதில்லியில் ஏகாதிபத்திய அரச பீடங்கள் அமைந்திருக்கும் படகுக்குழாம் பகுதி, குடியரசுத் தலைவர் மாளிகைக்கு முன் உள்ள திறந்த வெளி ஆகியவை கடந்த டிசம்பர் 22,23,24 நாள்களில் போர்க்களம் ஆயின. நீதிகேட்டு வீதிக்கு வந்தனர் மக்கள். இவர்களில் இளம் ஆண்களும் இளம் பெண்களும் அதிகம். போராடிய மக்கள் மீது காவல்துறையினர் கண்ணீர்புகைக்குண்டுகள் வீசினர். தண்ணீரைப் பீய்ச்சி அடித்தனர். தடியடி நடத்தினர். போராடிய இளைஞர்கள் காவல்துறையினரைத் திருப்பித் தாக்கினர். அதில் ஓர் உதவி ஆய்வாளர் உயிர் இழந்தார்.
நாடாளுமன்றம் நடந்து கொண்டிருந்தது. நரிகள் போட்டி போட்டுக் கொண்டு ஊளையிட்டன. நாட்டின் ஒழுக்கக் கேடுகளுக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்புமில்லாததுபோல், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆவேசப்பட்டனர். நாட்டின் அலங்கோலங்களின் மூல ஊற்று நாடாளுமன்றம்தான் என்பதை அவர்கள் தங்களின் பகட்டு ஆவேசத்தால் திரை போட்டு மறைத்தனர்.
தில்லிப் போராட்டம் தீவிரமடைந்து கொண்டிருந்த போது, 20.12.2012 அன்று காலை தூத்துக்குடி மாவட்டம் நாசரேத், தாதன்குளம் தொடர்வண்டி நிலையம் அருகே, கிளாக்குளம் கிராமத்திலிருந்து பள்ளி செல்ல நடந்து வந்த 7ஆம் வகுப்பு மாணவி 13 அகவை நிரம்பாத, பருவமடையாத சிறுமியைச் சீரழித்துக் கொலை செய்தான் ஒரு காமக் கொடூரன். புனிதா என்ற இச்சிறுமியின் கொடூரக் கொலை குலைநடுங்க வைத்தது அடங்குவதற்குள் விழுப்புரம் அருகே ஒரு பாலியல் வன்முறை, அதற்கு முன் காரைக்கால் அருகே பாலியல் வன்முறை.
பேத்தியை வல்லுறவு கொண்ட தாத்தா, பெற்ற மகளை வன்புணர்வு செய்த தகப்பன், சித்தப்பன் மகளை வன்கொடுமை செய்த பெரியப்பன் மகன் என காமக் கொடூரன்களின் கண்மண் தெரியாத வெறியாட்டங்கள் நீள்கின்றன; தொடர்கின்றன.
காதலுக்கு நான்கு கண்கள்
கள்வனுக்கு இரண்டு கண்கள்
காமுகனின் உருவத்திலே
கண்ணுமில்லை காதுமில்லை என்ற மருதகாசியின் பாடல்தான் நினைவுக்கு வருகிறது. நம் முன்னோர்கள் “காமத்துக்குக் கண் இல்லை“ என்று ஒரு பழமொழியை உருவாக்கியுள்ளார்கள்.
கல்வி வளர்ச்சி அதிகரித்து வரும் இக்காலத்தில் காமக் கொடூரங்களும் அதிகரித்து வருவது ஏன்? பொருளியல் வளர்ச்சி முன்பிருந்ததைவிட அதிகரித்து வரும் நிலையில் திருட்டும் கொள்ளையும் அதிகரித்துவருவது ஏன்?
ஒழுக்கத்தை விதைக்காத கல்விப் பெருக்கமும், அறத்தைச் சாராத பொருள்வளர்ச்சியும் காட்டு மிராண்டிக் காலத்தைவிடக் கொடுமைகளைக் கூடுதலாக்கும்.
காமக் கொடூரன்களின் கைவரிசைகள் பெருகுவதற்கு பெண்ணடிமைத் தனத்தின் – ஆணாதிக்கத்தின் சூழல்தான் காரணம் என்று பொதுவாகக் கூறுகிறார்கள். இக்கூற்றில் உண்மை இருக்கிறது. ஆனால் இது மட்டுமே முழுக் காரணம் அன்று.
உலகில் அதிக விகிதத்தில் பாலியல் வன்முறைகள் நடக்கும் நாடு அமெரிக்காதான் (யு.எஸ்.ஏ.). இந்தியாவில் இருப்பதைவிடப் பெண்ணுரிமை அதிகமுள்ள நாடு அமெரிக்கா. அதே போல் திருட்டும் கொள்ளையும் அதிக விகிதத்தில் நடக்கும் நாடு அதே அமெரிக்காதான். உலகில் மிகப்பெரிய பணக்கார நாடும் அதுதான்.
2011 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் நடந்த பாலியல் வல்லுறவுகளுக்காகப் பதியப்பட்ட வழக்குகள் 83,425. குத்து, வெட்டு, துப்பாக்கிச்சூடு போன்ற வன்முறைக் குற்றங்களுக்காகப் பதியப்பட்ட வழக்குகள் 12,03,564. கொலை வழக்குகள் 14,612. கொள்ளை வழக்குகள் 3,54,396. மோட்டார் வாகனத் திருட்டு வழக்குகள் 7,15,373. இப்படி இன்னும் நீள்கிறது பட்டியல்.
2011 ஆம் ஆண்டு அமெரிக்க நாட்டின் சிறைக்கைதிகள் எண்ணிக்கை 20,19,234. அமெரிக்க நாட்டின் மக்கள் தொகை 2011 இல் 31,15,91,917. இந்தியாவின் மக்கள் தொகை 121,01,43,422. இந்திய நாடெங்கும் 2011 இல் சிறைக்கைதிகள் எண்ணிக்கை 3,13,635.
அமெரிக்கா கிட்டத்தட்ட 100 விழுக்காடு கல்வி வளர்ச்சி பெற்ற நாடு. பொருளியல் வளர்ச்சியில் இந்தியாவை விட எத்தனையோ மடங்கு உயரத்தில் இருக்கிறது. அவை போலவே பெண்ணுரிமையும் இந்தியாவை விட மிக அதிகமாக அங்குள்ளது. பிறகு அங்கு ஏன் பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைகள் அதிகமாக உள்ளன?
அறிவு வளர்ச்சி இருக்கிறது. உரிமைகள் பல இருக்கின்றன. பொருள் வளர்ச்சி இருக்கிறது. ஆனால் மன வளர்ச்சி இல்லை. அதனால் அங்கு ஒழுக்கமும் வளரவில்லை. அறமும் வளரவில்லை.
மன வளர்ச்சி என்பது சாரத்தில் மனதைக் கட்டுப் படுத்தி ஒழுங்குபடுத்திக் கொள்ளும் ஆற்றல்தான். பள்ளத்தை நோக்கி வெள்ளம் பாய்வது போல் மனம் எப்போதும் அற்ப மகிழ்ச்சிகளை நோக்கித் தாவுகிறது. எளிய செய்திகளையே விரும்பி ஏற்கிறது. சுற்றுப் பாதையில் போவதைவிடக் குறுக்கு வழியில் சென்று இலக்கைத் தவற விடுகிறது.
இப்படிப்பட்ட மனதைக் கட்டுப்படுத்துவது என்பது எப்படி? மனநிறைவுதான் மனதைக் கட்டுப்படுத்த சிறந்த வழி. மனதில் பற்றாக் குறைகள் நிறைந்திருக்கும்போது மனநிறைவு எப்படி ஏற்படும்? பற்றாக்குறை என்பது எது எதில் பற்றாக்குறை?
மனித நுகர்வில் ஏற்படும் பற்றாக்குறைகள்தான் முதன்மையான பற்றாக்குறைகள். நுகர்வில் முதன்மையானவை இரண்டு. ஒன்று பொருள் நுகர்வு. இரண்டு பாலியல் நுகர்வு. இவ்விரண்டையும் சார்ந்தே மனித மனநிலை பெரிதும் இயங்குகிறது.
இயற்கையைப் பொறுத்தவரை, பொருள் நுகர்வுக்கும் பாலியல் நுகர்வுக்கும் பற்றாக்குறை வைக்கவில்லை. உண்ணவும் உடுத்தவும் உறைந்திடவும் போதிய பொருள்களை இயற்கை வழங்குகிறது. அதைப் போலவே ஆணையும் பெண்ணையும் பொதுவாக சம எண்ணிக்கையில் உருவாக்குகிறது. பிறகு ஏன் இவ்விரண்டிலும் பற்றாக்குறை?
சமூகம் முழுவதும் பகிர்ந்து கொள்ள வேண்டிய பொருள்களைப் பேராசை கொண்ட தனி மனிதர்கள் தங்களுக்கென்று மிகையாக வளைத்துக் கொள்கிறார்கள்.
இதனால் சமூகத்தில் பெரும்பாலோர் பொருள் பற்றாக் குறையினால் அதாவது வறுமையினால் துன்பப்படுகிறார்கள். மனிதர்களால் உருவாக்கப்பட்ட இந்த ஏற்றத் தாழ்வை – ஒரு தரப்புப் பற்றாக்குறையை நீக்கிச் சமன் செய்து, அனைவரும் பகிர்ந்து வாழும் சமூக அமைப்பை உருவாக்க வந்ததுதான் நிகரமை (சோசலிச)த் தத்துவம். வர்க்கப் போராட்டம், வர்க்கப் புரட்சி என்பவை எல்லாம் நிகரமை இலக்கு நோக்கியவையே!
பாலியல் பற்றாக்குறை எப்படி ஏற்படுகிறது? பெண் பற்றாக்குறையினால் அல்லது ஆண் பற்றாக்குறையினால் ஏற்படுவதன்று பாலியல் பற்றாக்குறை.
பாலியல் வேட்கை உடல் சார்ந்தது மட்டுமன்று. மனம் சார்ந்ததும் ஆகும். பாலியல் வேட்கைக்கு உடல் அடிப்படையானது. ஆனால் மனம் முகாமையானது. உடல் மனதைத் தூண்டுவதும் மனம் உடலைத் தூண்டுவதும் சேர்ந்தும் நடக்கும்; ஒன்றுக்குப் பின் ஒன்றும் நடக்கும். அதாவது உடல் தேவை மனதைத் தூண்டுவதும் மன வேட்கை உடலைத் தூண்டிவிடுவதும் உண்டு.
பாலியல் பற்றாக்குறையில் பெரும்பங்கு வகிப்பது மனதில் ஏற்படும் பற்றாக்குறையே! அதாவது மனம் நிறைவு பெறாமையே! இணையராகிவிட்ட ஆணுக்கும் பெண்ணுக்கும் உடல் பொருத்தமின்மை அல்லது உறுப்புக் குறைபாடு காரணமாகப் பாலியல் பற்றாக்குறை ஏற்படுவதும் உண்டு. கலவிக் கலை பற்றிய புரிதல் இன்மையும் பாலியல் பற்றாக்குறைக்கு மற்றுமொரு காரணம் ஆகும். இவை அனைத்தையும் விட மனதால் ஏற்படும் பற்றாக்குறையே அதிகம்.
பாலியல் இன்பத்தை மனம் கற்பனை செய்து, கற்பனைசெய்து பாலியல் வேட்கையைப் பெருக்கிக் கொள்கிறது. பொருள் நுகர்வைக் கற்பனையில் அனுபவிப்பதை விட சுவைப்பதை விட பாலியல் நுகர்வைக் கற்பனையில் அனுபவிப்பதும் சுவைப்பதும் அதிகம். அதனால்தான் கனவில் பாலுறவுக் காட்சிகள் தோன்றுவதும் அதனால் இளம் ஆண்களுக்கு விந்து வெளிப்படுவதும் பெண்களுக்கு திரவக் கசிவுகள் ஏற்படுவதும் நடக்கிறது.
இந்த மானசீக – கற்பனை வயப்பட்ட பாலியல் வேட்கைகளில் ஆண்களும் பெண்களும் எளிதில் சிக்கித் தவிக்கிறார்கள். இதனால் நிறைவேறாத ஆசைகள் அடிமனதில் நிரம்பிக் கிடக்கின்றன.
கற்பனைப் பாலியல் நுகர்வுக்கும் நிறைவேறாத ஆசைகளுக்கும் தீனி போடுவதன் மூலம் வாசகர்களை, பார்வையாளர்களை ஈர்த்துத் தமது தொழிலை, வணிகத்தை வளர்த்துக் கொள்கிறார்கள் பல எழுத்தாளர்கள், கலைப்படைப்பாளிகள், விளம்பரதாரர்கள் மற்றும் பல நிறுவனத்தினர்.
திரைப்படத்திலோ, விளம்பரப்படத்திலோ, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலோ, கதைகளிலோ, ஏடுகளிலோ ஆணும் பெண்ணும் பாலுறவுச் சொற்களைப் பரிமாறிக் கொள்ளும்போதும் பாலுறவுக்கான உடல் மொழிகளைப் பகிர்ந்து கொள்ளும் போதும் அக்காட்சியைப் படிக்கும் அல்லது பார்க்கும் ஆண் அல்லது பெண் அந்தக் கதாபாத்திரத்துடன் தன்னை இணைத்துக் கொண்டு சுகம் காண்கிறார்கள். துக்கக் காட்சியிலும் தன்னை இணைத்துக் கொண்டு அழுகிறார்கள். இதுதான் மானசீக வாழ்க்கை அல்லது கற்பனை வாழ்க்கை என்று கூறப்படுகிறது. இந்தக் கற்பனை வாழ்க்கை விலங்குகளுக்குக் கிடையாது. எனவே அவற்றிடையே பாலியல் வக்கிரங்கள் கிடையாது. இயற்கையோடியைந்த பாலியல் ஒழுக்கம் அவற்றிடையே நிலவுகிறது. விலங்குகளிடையே பாலியல் வல்லுறவு என்பது கிடையாது.
விலங்குகளுக்கு இல்லாத அளவில் மனவளர்ச்சி மனிதர்களுக்கு இருப்பதில் நன்மையும் உண்டு. தீமையும் உண்டு. எப்போதுமே தீமைகளை மனம் எளிதில் பற்றிக் கொள்ளும். கற்பனைப் பாலியல் துய்ப்புகளை மிகைபடத் தூண்டிவிட்டு, ஆண்களையும் பெண்களையும் தங்கள் வசம் ஈர்ப்பதில், சமூகப் பொறுப்பில்லாத வணிக நோக்கு எழுத்தாளர்கள், கலைப்படைப்பாளிகள், தொழில்-வணிக முதலாளிகள் முதலியோர் இடையறாது ஈடுபட்டு வருகின்றனர்.
விளம்பரப் படங்கள் கூடப் பாலியல் உணர்வைத் தூண்டி விட்டுத்தான் தமது பொருளை விளம்பரம் செய்கின்றன. ஓர் ஊர்தி நிறுவன விளம்பரத்தில், இளம் ஓட்டுனர் இளம் பெண்ணைப் பார்த்து “பட்டன் திறந்திருக்கும்மா“ என்று சொல்வார். அப்பெண்ணின் மார்பகங்கள் காட்டப்படாமலே சொல்லின் மூலம் மார்பகங்களைக் கற்பனை செய்ய வைத்துக் கவனத்தை ஈர்க்கிறது அவ்விளம்பரம்.
மறைபொருளாகச் சொற்களின் மூலம் வெளிப்படுத்தப்படும் இந்த விளம்பரக் காட்சியே பாலுணர்வைத் தூண்டுகிறது. கால்பங்கு, அரைப்பங்கு, முக்கால்பங்கு என உடலுறவுக் காட்சிகளைக் காட்டும் திரைப்படங்கள், விளம்பரங்கள், கதைகள் மற்றும் கட்டுரைச் சித்தரிப்புகள் எந்த அளவு தீவிரப் பாலுணர்வைத் தூண்டும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். சிறுவர்களுக்கான தொலைக்காட்சித் தொடர்களும் பாலுணர்ச்சியைத் தூண்டும்படிதான் அமைக்கப்படுகின்றன. தெருக்களில், சாலைகளில் திரும்பிய பக்கமெல்லாம் பாலுணர்வைத் தூண்டும் படங்கள், விளம்பரங்கள்!
எந்நேரமும் காமப் பசியோடும் காம ஏக்கத்தோடும் மனம் அலைபாயும்படி மனிதர்களை ஆட்டிப் படைக்கிறார்கள் தன்னல வெறியர்கள்.
“எத்தனை பெண் படைத்தான்
எல்லோர்க்கும் கண் கொடுத்தான்
அத்தனை கண்களிலும்
ஆசை என்னும் விஷம் கொடுத்தான்“
என்று கண்ணதாசன் எழுதினார்.
பாலியல் பற்றாக்குறையை – பாலியல் வறுமையை ஒவ்வொருவர்க்கும் செயற்கையாக உருவாக்கி விடுகிறார்கள் தன்னலப் படைப்பாளிகளும், தன்னலத் தொழில்-வணிக நிறுவனங்களும்!
புயல் காற்றில் சிக்கிக் கொண்ட மனிதர்களில் பலவீனமானவர்கள் விழுந்து விடுகிறார்கள். வலிவுள்ளவர்கள் தப்பி விடுகிறார்கள். அதுபோல காமச் சூறாவளி சுற்றிச் சுழன்றடிக்கும் சூழ்நிலையில் மனதைக் கட்டுப்படுத்தி, ஒழுங்கு படுத்தும் பண்பு, பழக்கவழக்கம், பயிற்சி உள்ளவர்கள் தப்பிவிடுகிறார்கள். அவ்வாறில்லாதவர்கள் சீரழிகிறார்கள். மற்றவர்களைச் சீரழிக்கிறார்கள்.
சமூக உறுப்பினர்கள் அனைவர்க்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டிய பொருளைப் பேராசைக்காரர்கள் தங்களுக்கு மட்டுமே குவித்துக் கொண்டு மற்றவர்களைப் பற்றாக்குறையில்-வறுமையில் தள்ளுவது போல் தன்னல வெறிப் பேராசைக்காரர்கள் மற்றவர்களுக்குப் பாலுணர்ச்சியை மிகைபடத் தூண்டிவிட்டு அவர்களை செயற்கையான பாலியல் பற்றாக்குறையில் தள்ளிவிட்டு சீரழிக்கிறார்கள்.
சிலரின் மிகைப் பொருள்குவிப்பால் பலர் வறுமையுறுகின்றனர்; அப்பலரில் சிலர் ஒழுக்கச் சிதைவுகளுக்குள்ளாகி திருடுவதிலும் கொள்ளையடிப்பதிலும் இறங்குகின்றனர். அதேபோல் பாலியல் பற்றாக்குறைக்கும்-வறுமைக்கும் உள்ளானோரில் சிலர் ஒழுக்கச் சிதைவுகளுக்கு உள்ளாகி பெண்களை வல்லுறவு கொள்வதுடன் கொலையும் செய்கின்றனர்.
இந்த பாலியல் குற்றங்களை ஆணாதிக்கத்தின் வெளிப்பாடாக மட்டும் ஒற்றைப் பரிமாணத்தில் குறுக்கிவிடக் கூடாது. ஆணாதிக்கம், சமூகம் தழுவிய அளவில் தன்னல வெறியர்களால் தூண்டிவிடப்படும் பாலியல் வெறி, மதுப்பழக்கம் போன்றவை பாலியல் குற்றங்களின் தூண்டுவிசைகளாக இருக்கின்றன. பெண்களிடமும் பாலியல் வெறி தூண்டிவிடப்படுகின்றது. அதற்காகப் பெண்கள் தங்களுக்குத் தொடர்பில்லாத ஆண்களை வல்லுறவு கொள்வதில்லை. பாலியல் வெறிக்கு உள்ளான பெண்களில் சிலர் மனக்கட்டுப்பாட்டை இழந்து வரம்பற்ற பாலுறவை நாடுகிறார்கள். அதற்கு வன்முறையை நாடாமல் ஆண்களைக் கவர்தல் என்ற உத்தியைக் கையாள்கிறார்கள்.
பாலியல் வன்முறை புரியும் ஆண்களைத் தண்டிக்க வேண்டும். அதற்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று கோருவது உணர்ச்சி வசப்பட்ட வெளிப்பாடே தவிர உரிமையின்பாற்பட்டதன்று. வழக்குகளை விரைந்து முடித்தல், காவல்துறையினர் பாலியல் வன்முறைக் குற்ற வழக்குகளை உரிய அக்கறையோடும் கவனத்தோடும் நடத்துதல், தனி நீதிமன்றங்கள் அமைத்தல் என்ற வழிகளில்தாம் பாலியல் குற்றங்களுக்குத் தண்டனை வழங்க வேண்டும். குற்றம் புரியாத அப்பாவிகளை இவ்வழக்குகளில் சிக்கவைக்கக் கூடாது என்பதிலும் கவனம் வேண்டும்.
பாலியல் குற்றம் புரிந்த ஆண்களின் ஆண்மையை அகற்றுதல் அதாவது காயடித்தல் – அதற்கான ஊசி போடுதல் போன்ற தண்டனைகளையும் சிலர் முன் மொழிகின்றனர். இவ்வாறான தண்டனைகள் மனித நேயம், மனித உரிமை ஆகிய துறைகளில் சனநாயகத் தன்மை இல்லாத எதேச்சாதிகாரக் காலங்களில் வழங்கப்பட்டவை. கண்ணுக்குக் கண் பறிக்கும் தண்டனைகளும், மரண தண்டனைகளும் கூடாது என்ற மனித நேயமும் மனித உரிமைக் கோட்பாடும் வளர்ந்து வரும் இக்காலத்தில் பாலியல் குற்றங்களுக்குக் காயடித்தல் அல்லது மரண தண்டனை வழங்குதல் ஏற்கக் கூடியதன்று. தவிரவும் கொடுந்தண்டனைகள் குற்றங்களை நூற்றுக்கு நூறு தடுத்துவிடுவதில்லை. “தாங்கள் தப்பித்துக் கொள்வோம்“ என்ற துணிச்சலிலும், விளைவுகளைச் சீர்தூக்கிப் பார்க்காத கண நேர வெறியிலும்தாம் பெரும்பாலும் குற்றங்கள் நடக்கின்றன.
தங்கள் சொந்த இலாபத்திற்காகத் தன்னல வெறியோடு சமூகத்தில் காம வெறியைத் தூண்டி விடும் கயவர்களுக்கு என்ன தண்டனை வழங்குவது? இதைப் பற்றியும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். ஏதோ ஒரு வகையில் இவர்களும் தண்டனைக்குள்ளாக வேண்டும். இவர்களின் செயல்பாடுகளுக்கும் கட்டுப்பாடுகள் வேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக மக்களிடம் தன்கட்டுப்பாட்டுணர்ச்சியை வளர்க்க வேண்டும். பெரும்பாலான மக்கள் குற்றமிழைக்காதவர்களாக இருப்பதற்குக் காரணம் அவர்கள் தண்டனைக்கு அஞ்சுவதால் அன்று. பொது ஒழுக்கம் பேணுவதில் அவர்களுக்குள்ள மனப்பக்குவமும் அவர்களிடம் உள்ள பண்பு நிலையுமே காரணங்களாகும்.
எதிலுமே மிகைப்பற்று கூடாது. இயல்பான பற்று இயற்கைவிதி; மிகைப்பற்று மன நோய். மிகைப்பற்று காலப்போக்கில் வெறியாக மாறுகிறது. வெறியானது குற்றச் செயல்புரியத் தூண்டுகிறது.
இயல்பான தேவைகளை அடைய முயல வேண்டும். அது தவறன்று. அம்முயற்சி பிறரின் உரிமையைப் பறிப்பதாக அமையக்கூடாது. செயற்கையாகத் தூண்டிவிடப்பட்ட தேவைகள் மனதில் எழுந்தால் அவற்றை மறக்கவும் புறந்தள்ளவும் மனதைப் பயிற்றுவிக்க வேண்டும்.
ஆசைப்பட்டதையெல்லாம் அடைய வேண்டும் என்று பின்நவீனத்துவ வாதிகளில் சிலரும் பெருநிறுவனச் (கார்ப்பரேட்) சாமியார்களில் சிலரும் கூறிவருகின்றனர். ஒழுக்கச் சிதைவின்றியோ அல்லது நேர்மையான வழியிலோ அல்லது பிறரது உரிமைகளையும் இன்பங்களையும் பறிக்காமலோ ஒருவர் ஆசைப்பட்டதையெல்லாம் அடைய முடியாது. “எல்லாவற்றுக்கும் ஆசைப்படு“ என்றும் அவர்கள் கூறுகிறார்கள். இது நுகர்வு வெறி தவிர வேறன்று. இந்நுகர்வு வெறி பிறர்க்கு உரிமையாய் உள்ள நுகர்வுகளைப் பறிப்பதிலோ அல்லது சிதைப்பதிலோ போய் முடியும்.
இலாப வேட்டை நடத்திக் கொண்டிருக்கும் உலகமயக் கோட்பாடு தனியார்மய – தாராளமயக் கோட்பாடு தனிநபர் நுகர்வு வெறியைப் பல்வேறு “சுதந்திரங்களின்“ பெயரால் கட்டமைக்கிறது. பெற்றோர்க்கும் பிள்ளைகளுக்கும் இடையே உள்ள உறவுப்பிணைப்பை மட்டுமின்றி கணவனுக்கும் மனைவிக்குமிடையே உள்ள உறவுப் பிணைப்பைக் கூட உலகமயமும் தாராள மயமும் “தனிமனித சுதந்திரத்தின்“ பெயரால் அறுத்தெரிகிறது. சமூகத்தின் அடிப்படை அலகு குடும்பம் அன்று, தனிமனிதரே என்பதுதான் உலகமயப் பண்பாடு. சமூக மனிதர்களை உதிரிகளாக்கி விடுகிறது.
பெரும்பெரும் முதலாளிய நிறுவனங்களின், வணிக நிறுவனங்களின் பொருள்கள் அனைத்தையும் வாங்கிக் குவிக்கும் வாடிக்கையாளர்கள் உலகமயத்திற்குத் தேவை. உலகமயத்தைப் பொறுத்தவரை தாய், தந்தை, மகன், மகள், அண்ணன், தம்பி, கணவன், மனைவி, தமிழன், தமிழச்சி என்பது முக்கியமல்ல. இவர்கள் அனைவரும் நுகர்வாளர்கள். எனவே இவர்கள் அனைவரும் அவர்களின் வாடிக்கையாளர்கள்!
வாடிக்கையாளர் மனநிலையை உருவாக்குவதும் வளர்ப்பதும்தான் முதலாளிய நிறுவனங்களின் இலட்சியம்! பற்பல பெயர்களில் சிறப்பு விற்பனை நாள்களை அந்நிறுவனங்கள் உருவாக்குகின்றன. ஆடித்தள்ளுபடி, அட்சய திரிதி என்று ஆண்டு முழுவதம் சிறப்பு நாள்களை அறிவித்து விற்பனை நாட்களை உருவாக்கிக் கொள்கின்றன நம் நாட்டு நிறுவனங்கள். வெளி நாட்டு நிறுவனங்களோ “காதலர் நாள்“ போன்று பல விற்பனை நாள்களை உருவாக்கிக் கொள்கின்றன.
கணக்குப் பார்த்தால் 365 நாள்களும் காதலர் நாள்கள்தாம். “காதலர் நாள்“ என்று குறிப்பிட்ட நாளை வரையறுத்துக் கொண்டாடச் செய்வதில் பன்னாட்டு நிறுவனங்களின் பண்டவிற்பனை உத்தி அடங்கியுள்ளது. அந்நாளில் தமிழ்நாட்டு இளம் ஆண்களும் பெண்களும் குறிப்பாக மாணவர்கள் சாலைகளில், தொடர்வண்டிகளில், பூங்காக்களில், கடற்கரைகளில் கட்டிப் பிடித்துக் கொண்டு திரிவதும், முத்தம் கொடுத்துக் கொள்வதும் பரவி வருகிறது. சுவை மிகுந்த தின்பண்டங்களை பிறர் சாப்பிடும்போது, அதைப் பார்ப்பவர்களுக்கு நாக்கில் எச்சில் ஊறும், பாலியல் நுகர்வைப் பகிரங்கமாகச் செய்யும் போது பிறருக்கு ஏற்படும் தூண்டுணர்ச்சி, தின்பண்டங்கள் உண்பதைப் பார்ப்பதால் ஏற்படுவதை விடப் பன்மடங்கு அதிகமாகும்.
மேலை நாட்டுப் பண்பாடு நமக்கு அப்படியே ஒத்துவராது. அவர்கள் திருமணம் செய்து கொள்ளாமலே சேர்ந்து வாழ்வார்கள். குழந்தையும் பெற்றுக் கொள்வார்கள். பின்னர் ”பிடிக்கவில்லை” என்று கூறிப் பிரிந்து விடுவார்கள். திருமணம் செய்து கொள்பவர்களும் அடிக்கடி மணமுறிவு செய்து கொள்கிறார்கள். இப்பண்பாட்டால் அந்நாடுகளில் பரவலான மக்கள் மன அமைதியற்று வாழ்கிறார்கள்.
தமிழ்நாட்டுக் குடும்ப உறவில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் இருக்கின்றன. கணவன் – மனைவி சமத்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். குடும்பத்தில் சனநாயகத் தன்மை வேண்டும். பெண்ணுரிமை நிலைநாட்டப்பட வேண்டும். மணமுறிவு உரிமை வேண்டும். அதே வேளை மணமுறிவு உரிமையை வேறு வழியில்லாத நிலையில் கடைசியாகப் பயன்படுத்தும் மனமுதிர்ச்சி வேண்டும். மேலை நாடுகளைப் போல் நம் நாட்டில் குடும்பங்களை அழித்துக் கொண்டு மன அமைதியின்மையையும் உதிரித் தன்மையையும் விலைக்கு வாங்கக் கூடாது.
மேலை நாட்டு ஆண்களையும் பெண்களையும் பின்பற்றி நம் நாட்டு இளைஞர்கள் அரை குறை ஆடை உடுத்த வேண்டியதில்லை. ஆண்கள் “பர்மிடாஸ்“ என்று முழங்காலுக்கு மேல் கால்சட்டை அணிந்து கொண்டு வீதிகளில் செல்வது நாகரிகக் குறைவானது, கண்ணியக் குறைவானது. அதே போல் பெண்கள் மார்பகப் பிளவு தெரிவது போலும் பாதி உடல் தெரிவது போலும் இரவிக்கை அணிந்து செல்வதும் கண்ணியக் குறைவானது. ஆண்களும் பெண்களும் முழுக்கால் சட்டை அணிந்து கொள்வதோ, பெண்கள் சுடிதார் அணிந்து கொள்வதோ தவறன்று.
பிறர், குறிப்பாக எதிர்ப்பாலினர் தம்மைப் பொருட்படுத்தி நோக்கும்படி தாம் அழகாக ஒப்பனை செய்து கொள்ள வேண்டும் என்று விரும்புவது சராசரி ஆண்களின் மற்றும் பெண்களின் உளவியலாகும். அது உறுப்புக் கவர்ச்சி காட்டுவதாக மிகைபடக் கூடாது.
மனித மூளையும் மனமும் எண்ணங்கள் அற்ற வெற்றிடமாக ஒரு நொடி கூட இருப்பதில்லை. ஏதாவது எண்ணங்கள் இருந்து கொண்டே இருக்கும். அந்த எண்ணங்கள் பிறர்க்குத் துன்பம் தராததாக, நல்ல பண்பு சார்ந்ததாக, உயர்ந்த இலட்சியம் சார்ந்ததாக இருந்தால் திருட்டு, கொள்ளை, பாலியல் வன்முறை போன்றவை அதிகம் நடக்காது.
சனநாயகக் காலத்தில் சமூகத்தை நல்வழிப்படுத்தும் எண்ணங்கள் சிறந்த அரசியல் இலட்சியங்கள் வழியாகவே வருகின்றன. அரசியல் தலைமைகளிலிருந்து வரும் சமூக மேம்பாட்டுக் கருத்துகள் பெரும் மக்கள் திரளை எளிதில் கவ்வுகின்றன. இப்போது உயர்ந்த இலட்சியமில்லாத அரசியல், ஒட்டுண்ணி முதலாளிய அரசியலாகச் சீரழிந்துள்ளது. இவ்வரசியல் சமூகச் சீரழிவுகள் அனைத்திற்கும் முன்னோடியாக உள்ளது. தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் தேர்தல் சீரழிவு அரசியல் சமூக அறத்தை, மனித மதிப்பீட்டைச் சீர்குலைத்துச் சிதைத்து விட்டது. தில்லிப் பாலியல் வன்முறைக்காக தேர்தல் கட்சிகள் விடும் கண்ணீர் முதலைக் கண்ணீர். அக்கட்சிகளில் பாலியல் குற்றமிழைத்தவர்கள் எத்தனை பேர் வேட்பாளர்களாக, சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களாக ஆனார்கள் என்பது தேர்தல் ஆணையப் புள்ளிவிவரத்தில் தெரிய வந்துள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, தமிழர் அறத்தின் அடித்தளத்தில் கட்டியெழுப்பப்படும் தமிழ்த் தேசிய இலட்சிய அரசியல், தமிழ் மக்களிடம் ஆணாதிக்கத்தை நீக்கி பெண்களின் உரிமையை நிலைநாட்டி உண்மையான சமத்துவ சமூகத்தை உருவாக்கும் வல்லமை படைத்தது.

Labels: ,


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்