<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d6955529389241309188\x26blogName\x3d%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86.%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://thozharmaniyarasan.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com/\x26vt\x3d-8408640130511538487', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

தமிழ்நாடு மின்வாரியத்தில் வெளியாருக்கு வேலை : அ.தி.மு.க. ஆட்சியின் இனத்துரோகம்! பெ. மணியரசன் கண்டனம்!

Thursday, May 30, 2019


தமிழ்நாடு மின்வாரியத்தில்
வெளியாருக்கு வேலை :
அ.தி.மு.க. ஆட்சியின் இனத்துரோகம்!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
தோழர் பெ. மணியரசன் கண்டனம்!


தொடர்ந்து தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர்கள் தொகை தொகையாகக் குடியேறிக் கொண்டுள்ளார்கள். தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு, இந்திக்காரர்களுக்கும் வெளி மாநிலத்தவருக்குமே 100 விழுக்காடு – 95 விழுக்காடு என வேலை தருகிறார்கள். தமிழர்கள் தங்கள் தாயகத்திலேயே வாழ்வுரிமை இழந்து அகதியாகும் அபாயம் அதிகரித்து வருகிறது. 

இந்த அநீதியை எதிர்த்து நடுவண் அரசுப் பணிகளில் 90 விழுக்காடு தமிழர்களுக்கு வேலை தர வேண்டுமென்று நாம் போராடி வருகிறோம். கடந்த 03.05.2019 அன்று திருச்சி பொன்மலை இரயில்வே பணிமனையில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் முன்னெடுத்த போராட்டமும்,#தமிழக வேலைதமிழருக்கே#TamilnaduJobsForTamils சமூக வலைத்தளப் பரப்புரையும் அனைத்திந்திய அளவில் இதுகுறித்த விழிப்புணர்ச்சியை உண்டாக்கியது. 

இந்தக் கொடுமைகள் ஒருபுறம் இருக்க, தமிழ்நாடு அரசே இந்திக்காரர்களையும், வெளி மாநிலத்தவர்களையும் வேலையில் அமர்த்தியிருக்கும் தமிழினத்துரோகம் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தமிழ்நாடு மின்வாரியத்தில் காலியாக உள்ள 300 - “உதவிப் பொறியாளர்” (Assitant Engineers) பணிக்குத் தேர்வானவர்கள் பட்டியல் நேற்று (29.05.2019) வெளியானது. அதில் 39 பேர் ஆந்திரா, கேரளா, உ.பி., பீகார், கர்நாடகம், ராஜஸ்தான், தில்லி, சத்தீசுகர் ஆகிய வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். பணியமர்த்தல் ஆணையில் அவர்களது முகவரியும் இருக்கிறது. இதில் 25 பேர் ஆந்திரத்தெலுங்கர்கள். இவர்களை வடசென்னை, குந்தா (நீலகிரி), காடம்பாறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் பணியில் அமர்த்தி ஆணை வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு மாத ஊதியம் 50,000 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வானோரின் பட்டியலை வெளியிட்டுள்ள மின்வாரியத் தலைமைப் பொறியாளர் அசோக் குமார், தேர்வானோரில் தமிழ் தெரியாதவர்கள் இருப்பின் அவர்கள் உடனடியாகத் தமிழ்த் தேர்வுக்குத் தயாராக வேண்டுமென்று குறிப்பிட்டுள்ளார். தமிழ் தெரியாத வெளி மாநிலத்தவர்கள் எனத் தெரிந்தே இவர்களை பணியில் அமர்த்தியுள்ளது தமிழ்நாடு அரசு! (Letter No. 036904/G.13/ G.131/2019, dated 29.05.2019.)
கடந்த 2016ஆம் ஆண்டு (01.09.2016), தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் முன்மொழிந்து நிறைவேற்றப்பட்ட “தமிழ்நாடு அரசுப் பணியாளர் முறைப்படுத்தல் சட்ட”த்தின்படி, வெளி மாநிலத்தவர் மட்டுமின்றி பாக்கித்தான், நேப்பாளம், வங்கதேசம், மியான்மர், தான்சானியா, எத்தியோப்பியா உள்ளிட்ட 14 நாடுகளிலிருந்து இந்தியாவுக்குப் புலம் பெயர்ந்தோரும் தமிழ்நாடு அரசுப் பணியில் சேரலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்தியாவின் பிற மாநிலங்களில் மண்ணின் மக்களுக்கே அரசு மற்றும் தனியார் வேலைகள் என சட்டங்கள் உள்ள நிலையில், வெளிநாட்டவர் கூட அரசுப் பணியில் சேரலாம் என்ற சட்டத்தை தமிழ்நாடு அரசு நிறைவேற்றியது. இச்சட்டம் காரணமாகவே, தமிழ்நாடு அரசுப் பணியில் வெளி மாநிலத்தவர் மற்றும் வெளி நாட்டவர் சேர வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

இந்தியாவிலேயே அதிகளவிலான பொறியாளர்களைக் கொண்ட தமிழ்நாட்டில், சற்றொப்ப 1 கோடி பேர் வேலையில்லாமல் தவித்து வரும் நிலையில், தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் செயல்படும் தமிழ்நாடு அரசு – அரசுப் பணிகளில் வெளி மாநிலத்தவரை பணியமர்த்துவது, தமிழ் மக்களுக்கு இழைக்கும் இனத்துரோகமாகும்! 

இந்திய அரசமைப்புச் சட்டப்படி உருவாக்கப்பட்டுள்ள மொழிவழி மாநிலமாகிய தமிழ்நாட்டில், தமிழர்களைப் புறக்கணித்து சகட்டுமேனிக்கு வெளி மாநிலத்தவர்களையும், வெளி நாட்டவர்களையும் வேலைக்குச் சேர்ப்பது சட்டவிரோதச் செயலாகும். மற்ற மாநிலங்களில் மாநில அரசு மற்றும் தனியார் துறைகளில் 100க்கு 100 மண்ணின் மக்களுக்கே வேலை எனச் சட்டங்கள் இயற்றிச் செயல்படுத்தி வருகிறார்கள். அதுபோன்ற சட்டம் தமிழ்நாட்டில் இயற்றப்பட வேண்டும். 

தமிழ்நாடு அரசுப் பணிகளில் 100% வேலைகளை தமிழர்களுக்கே வழங்க வேண்டும். தமிழ் நாட்டிலுள்ள நடுவண் அரசுப் பணிகளிலும், தனியார் துறையிலும் 90% பணிகளை தமிழர் களுக்கே வழங்க வேண்டும், 10% மேல் பணியிலுள்ள வெளி மாநிலத்தவரை உடனடியாக வெளியேற்ற வேண்டும். 

தமிழ்நாடு மின் வாரியத்தின் உதவிப் பொறியாளருக்கான பணியமர்த்தல் பட்டியலில் உள்ள 39 வெளி மாநிலத்தவரை உடனடியாக நீக்க வேண்டும். நேற்று (29.05.2019) தேர்வானவர்களில் 5 பேருக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நேரில் பணிய மர்த்தல் ஆணை வழங்கியுள்ளார். அந்த ஐந்து பேரில் வெளி மாநிலத்தவர் இருந்தால், உடனடியாக அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும். வேலை ஆணை கொடுத்திருந்தால் அதை இரத்து செய்ய வேண்டும். 

இல்லையேல், தமிழ்த்தேசியப் பேரியக்கம் அரசமைப்புச் சட்டப்படி மண்ணின் மக்களுக்கு வேலை கோரியும், வெளி மாநிலத்தவர்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை இரத்து செய்ய வலியுறுத்தியும் விரிவான போராட்டங்களை முன்னெடுக்கும் எனத் தெரிவித்துக் கொள்கிறேன். 

Labels:

வடநாட்டு அரசியல் எதிர்ப்பு தொடர்கிறது..! பெ. மணியரசன்.

Wednesday, May 29, 2019


வடநாட்டு அரசியல் எதிர்ப்பு தொடர்கிறது..!

ஐயா பெ. மணியரசன்,
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.


நரேந்திர மோடியே எதிர்பார்க்காத அதிகப் பெருபான்மையை மக்களவைத் தேர்தலில் பா.ச.க.வுக்கு வடநாடு வழங்கியிருக்கிறது! வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாக கருத்துக் கணிப்பு நடத்தியவர்களே எதிர்பார்க்காத படுதோல்வியை காங்கிரசுக்கு வழங்கியிருக்கிறது வடநாடு!
காங்கிரசுக்கு 100க்கும் மேற்பட்ட தொகுதிகள் கிடைக்கும் என்று தான் கருத்துக் கணிப்புகள் கூறின. ஆனால் அதற்கு 52 இடங்கள் தான் கொடுத்துள்ளார்கள். அதில் கேரளம் - 15, தமிழ்நாடு - 9, தெலங்கானா - 3, கர்நாடகம் - 1, மொத்தம் - 28.
வாக்குப் பதிவு எந்திரத்தில் ஆட்சியாளர்கள் மோசடி செய்தார்கள் என்ற குற்றச்சாட்டைக் காங்கிரசுத் தலைமை கூறவில்லை.
நடைமுறை உண்மையைப் பொறுத்த வரை காங்கிரசுக்கும், பா.ச.க.வுக்கும் இடையே அடிப்படை வேறுபாடு எதுவுமில்லை. இந்தித்திணிப்பு, சமற்கிருதத் திணிப்பு, மாநில உரிமைப் பறிப்பு, பெருங்குழும வேட்டைக்காரர்களுக்கு வேட்டை நாய் போல் செயல்படுவது, ஆரிய - வேதகாலம் - இந்து மதவாதம் ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்தியத்தேசியம் என்ற கற்பனைக் கட்டமைப்பை வலுப்படுத்துவது முதலியவற்றில் காங்கிரசும், பா.ச.க.வும் ஒரே கொள்கை உடையவை. இவை குறித்து பா.ச.க. தீவிரமாகப் பேசும்; வன்முறைகளில் கூடுதலாக ஈடுபடும். ஆரவாரமின்றி இவை அனைத்தையும் காங்கிரசு செயல்படுத்தும்!
இந்த இரண்டு கட்சிகளின் அனைத்திந்தியத் தலைமையை ஏற்றும் இவற்றுடன் கூட்டணி சேர்ந்தும் தமிழ்நாட்டு உரிமைகளைக் காவு கொடுத்து பணம், பதவி பார்க்கும் கங்காணிக் கழகங்கள் தி.மு.க.வும் அ.இ.அ.தி.மு.க.வும் என்பது சமகாலத் தமிழர்கள் அறிந்த வரலாறு.
இந்தக் கங்காணிக் கழகங்களைத் தமிழர்கள் தூக்கிச் சுமப்பதற்கான அடிப்படைக் காரணம், வட இந்தியத் தலைமையையும், வர்ணாசிரமவாத ஆன்மிகத்தையும் ஏற்காத தமிழர் மரபு தான்!
இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில் 1920களில் காங்கிரசுக் கட்சி தீவிர இந்தித் திணிப்பில் ஈடுபட்டது. சென்னையில் 1919இல் தென்னிந்திய இந்திப் பரப்புக் கழகத்தைக் காந்தி தொடங்கி வைத்தார். அப்போதிருந்து இந்தியையும் ஆரிய வேதகாலப் பெருமை பேசிய காங்கிரசையும் எதிர்த்து வருகிறார்கள் தமிழர்கள். தமிழறிஞர்களும் தமிழ் இன - மொழி உணர்வாளர்களும் தான் காங்கிரசின் ஆரிய - இந்தி ஆதிக்கக் கருத்துகளை 1920களில் இருந்து எதிர்த்து வந்தார்கள்.
இதன் தொடர்ச்சியாகத்தான் 1937இல் மாநில முதல்வரான இராசாசி இந்தியைத் திணித்த போது 1938இல் மாபெரும் இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழ்நாட்டில் நடந்தது. தமிழறிஞர்கள் தொடங்கிய இந்தி எதிர்ப்பு இயக்கத்தில் பெரியார் பங்கேற்ற பின் அப்போராட்டம் வெகுமக்கள் போராட்டமாக வீச்சுப் பெற்றது. அப்போராட்டத்தில் தான் “தமிழ்நாடு தமிழருக்கே” என்ற முழக்கம் எழுந்தது.
வெள்ளை ஏகாதிபத்தியமிடமிருந்து விடுதலை பெறுவதற்காக அனைத்திந்திய அளவில் காந்தி தலைமையில் காங்கிரசு பேரியக்கமாக விளங்கிய அக்காலத்தில் - அதற்கு மாற்றாக தமிழ்நாட்டில் பெரியார் தலைமையில் திராவிடர் கழகம் இயங்க முடிந்தது. அதற்கு அடிப்படைக் காரணம் ஆரிய - வேதகால ஆதிக்க எதிர்ப்பு தமிழர்களிடம் மரபு வழியாக இருந்ததுதான்!
இந்தியா விடுதலை பெற்ற பின் 1952இல் நடந்த முதல் பொதுத் தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கிரசுக்குத் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. அகாசுகா கூட்டணி அமைத்துதான் இராசாசி தலைமையில் காங்கிரசு ஆட்சி அமைக்கப்பட்டது. 1967இல் காங்கிரசை வீழ்த்தி தி.மு.க ஆட்சியைக் கைப்பற்றியது.
அப்போதிருந்து தி.மு.க. அல்லது அ.இ.அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்துதான் காங்கிரசோ அல்லது பா.ச.க.வோ சில இடங்களைப் பெற முடிகிறது.
இனக்கவர்ச்சி காட்டி தமிழர்களிடம் செல்வாக்கு பெற்ற தி.மு.க. திரைக்கவர்ச்சி காட்டி அரசியல் நடத்தியது. திரைப்பட நாயகர்கள் அரசியல் கடை விரிப்பது தொடங்கியது. ஊழல், வாரிசு அரசியல், எதேச்சாதிகாரத் தலைமை முதலியவற்றில் இந்தியாவில் முதல் வரிசைக் கட்சிகளாக தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் சீரழிந்தன. ஆனாலும் ஆலை இல்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை என்பது போல் தமிழ்நாட்டு உரிமைகளுக்கு தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகள்தான் என்றும், காங்கிரசு, பா.ச.க.வைவிட தமிழ்நாட்டுக்குரியவை என்றும் தமிழர்கள் கருதுகிறார்கள். அந்த உளவியலில்தான் தமிழர்கள் இத்தேர்தலில் தி.மு.க. தலைமையிலுள்ள காங்கிரசு, கம்யூனிஸ்ட்டுகள், வி.சி.க. அணிக்கு பெருவாரியாக வாக்களித்து 39க்கு 38 மக்களவை உறுப்பினர்களைத் தேர்வு செய்துள்ளார்கள்.
தமிழ்நாட்டில் தி.மு.க. - அ.தி.மு.க.வுக்கு மாற்றாக தமிழ்த்தேசியத்தை முன்வைத்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி கருதத்தக்க அளவில் வாக்குகள் வாங்கி இருக்கிறது. 3.87 விழுக்காடு வாங்கியிருப்பது வளர்முகம் ஆகும். நாம் தமிழர் கட்சியின் தலைமையிலிருந்து கிளைவரை இலட்சியத் தெளிவு - இலட்சிய உறுதி - எடுத்துக்காட்டான செயல்பாடுகள் ஆகியவை வலுவாக வேர்விட வேண்டும்.
காமவெறி போன்று பதவிவெறியும் கண்ணை மறைக்கும்; கவனம் மிகமிகத் தேவை!
பா.ச.க.வின் பெருவெற்றியைக் கண்டு அஞ்சத் தேவை இல்லை. மொழி உரிமை, இன உரிமை, மண்ணுரிமை, வாழ்வுரிமை முதலியவற்றிற்காக நாம் நடத்திவரும் போராட்டத்தை மேலும் உறுதியுடன், வலிமையுடன், ஒருங்கிணைப்புடன் தொடர்ந்து நடத்த வேண்டும். காங்கிரசு வென்றிருந்தாலும் இது தான் நம் நிலைமை!

Labels:

காவிரி ஆணையத்தில் தமிழ்நாடு சரியாக வாதிட்டதா? முதல்வர் அறிக்கை வெளியிட வேண்டும் பெ.மணியரசன் அறிக்கை

Tuesday, May 28, 2019

காவிரி ஆணையத்தில்
தமிழ்நாடு சரியாக வாதிட்டதா?
முதல்வர் அறிக்கை வெளியிட வேண்டும்

காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை

இன்று (28.5.2019) புதுதில்லியில் நடுவண் நீர்வளத்துறை தலைமை அதிகாரி திரு. மசூத் உசேன் அவர்கள் தலைமையில் நடந்த காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் எடுத்த முடிவினைத் தமிழ்நாடு பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் திரு. பிரபாகரன் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறும் போது,

வரும் சூன் மாதம் தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய 9.2. டி.எம்.சி தண்ணீரைக் கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என்று ஆணையிட்டியிருப்பதாக அறிவித்தார்.
கடந்த டிசம்பரிலிருந்து மே (2019) வரை 19.5 டி.எம்.சி தண்ணீரைக் கர்நாடகம் திறந்து விட்டிருக்க வேண்டும். டிசம்பர் 7.3. டி.எம்.சி, சனவரி 3.00 டி.எம்.சி., பிப்ரவரி - மார்ச்சு, ஏப்ரல் - மே மாதங்களுக்குத் தலா 2.3 டி.எம்.சி திறந்திருக்க வேண்டும். இந்த பாக்கித் தண்ணீரைத் தமிழ்நாட்டு அதிகாரிகள் கேட்டதாகத் தெரியவில்லை. திரு.பிரபாகரன் அவர்கள் செய்தியாளர்களிடம் இதுபற்றிக் கூறவில்லை.
தண்ணீர் ஆண்டு என்பது சூன் மாதம் தொடங்கி மே மாதம் முடிகிறது. 2018 – 2019க்கான தண்ணீர் ஆண்டில் டிசம்பர் முதல் மே மாதம் வரையில் தமிழ்நாடு பெற வேண்டிய தண்ணீரை ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாடு தரப்பு ஏன் கேட்கவில்லை? கேட்டோம் என்றோ அல்லது கேட்கவில்லை என்றால் அதற்குரிய காரணத்தையோ தமிழ்நாடு அரசு வெளியிடவேண்டும்.
சூன் மாதம் நான்கு தவணைகளில் திறந்துவிட வேண்டிய தண்ணீர் பற்றி கர்நாடகத் தரப்புக் கருத்துக் கூறும்போது, பருவமழை நன்றாக இருந்தால் திறந்துவிடுகிறோம் என்று சமாளிப்பாகக் கூறியுள்ளார்கள். 9.2 டி.எம்.சி தண்ணீர் திறந்துவிடக் கர்நாடகம் ஒப்புக்கொண்டதாக இதை எடுத்துக் கொள்ளமுடியாது. கடந்த கால அனுபவங்கள் மிகவும் கசப்பானவை.
காவிரி மேலாண்மை ஆணையத்திற்கும் மற்றும் ஒழுங்காற்றுக்குழுவிற்கும் முழு நேரப்பணியாகக் கொண்ட அதிகாரிகளை அமர்த்த வேண்டும் என்றும், காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் தலைமையகம் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி பெங்களூரில் நிறுவப்படவேண்டும் என்றும் தமிழ்நாட்டுத் தரப்பு அதிகாரிகள் ஆணையக் கூட்டத்தில் வலியுறுத்தினார்களா என்பது பற்றி பிரபாகரன் செய்தியாளர்களிடம் கூறவில்லை.
இக்குறைபாடுகள் பற்றி பொதுப்பணித்துறைக்கும் பொறுப்பு வகிக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மக்களின் சந்தேகங்களை போக்க தெளிவான அறிக்கை வெளியிட வேண்டும். இனியாவது கடந்த டிசம்பரிலிருந்து திறந்துவிட வேண்டிய தண்ணீரை கர்நாடகம் திறந்துவிடுபடி ஆணையிட வேண்டுமென்று மேலாண்மை ஆணையத்திடம் தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும் என்றும் காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.


Labels:

ஸ்டெர்லைட் போராட்ட தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்த அனுமதி மறுப்பது அநாகரிகம்! பெ. மணியரசன் கண்டனம்!

Tuesday, May 21, 2019


ஸ்டெர்லைட் போராட்ட தியாகிகளுக்கு
வீரவணக்கம் செலுத்த 
அனுமதி மறுப்பது அநாகரிகம்!


தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
தோழர் பெ. மணியரசன் கண்டனம்!

உயிர்க்கொல்லி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, அவ்வாலையினால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி சுற்றுவட்டார மக்கள் கடந்த ஆண்டு (22.05.2018) பேரணியாகச் சென்றபோது, தமிழ்நாடு அரசின் காவல்துறை திட்டமிட்டு வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டது. முன்கூட்டியே தீர்மானித்தபடி துப்பாக்கிச் சூடு நடத்தி, 15 பேரைக் கொன்றது. நூற்றுக்கணக்கான பேர்களை படுகாயப்படுத்தியது. இந்தப் படுகொலை நடந்த மறுநாளே தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் நாங்கள் தூத்துக்குடி மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் சொன்னோம். அத்துடன் உயிரிழந்தோர் இல்லத்திற்கும் சென்று ஆறுதல் கூறினோம். 

இன்று (22.05.2019), ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டியக்கம் சார்பில் முதலாமாண்டு இரங்கல் நிகழ்ச்சி நடத்துவதற்கு தூத்துக்குடியில் காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளைக்குச் சென்று கூட்டம் நடத்த அனுமதி பெற்றுள்ளனர். உயர் நீதிமன்றமும் 500 பேர் மட்டுமே கலந்து கொள்ளலாம் என வரம்பு விதித்துள்ளது. 

முள்ளிவாய்க்காலில் சிங்கள இனவெறி அரசால் படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களுக்கு இரங்கல் தெரிவிக்க அனுமதி மறுத்த இராசபக்சேவின் ஈவிரக்கமற்ற கொடுங்கோன்மையைத்தான் தமிழ்நாடு அரசின் இச்செயல் நினைவூட்டுகிறது. தூத்துக்குடி இரங்கல் கூட்டத்தில் பங்கேற்கவிருந்த அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் சுப. உதயகுமார் அவர்களை நாகர்கோவிலிலுள்ள அவரது வீட்டுக்குச் சென்று காவல்துறையினர் கைது செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. 

மனித உயிரிழப்புகளுக்கு துக்கம் கடைபிடிக்கக்கூட அனுமதி மறுக்கும் தமிழ்நாடு அரசின் மனிதநேயமற்றச் செயலையும், அநாகரிகத்தையும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். 

தங்கள் மக்களின் வாழ்வுரிமையைக் காக்க அறப்போராட்டம் நடத்தி உயிரீகம் செய்த வீரர்களுக்கும் – வீராங்கனைகளுக்கும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் வீரவணக்கம் செலுத்திக் கொள்கிறது! 

Labels:

திராவிடம் - தமிழர்களைச் சீரழித்தது போதும்! பெ. மணியரசன்

Monday, May 20, 2019


திராவிடம் - தமிழர்களைச் சீரழித்தது போதும்!

தோழர் பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.


திராவிடத்தின் சிந்தனைச் சிற்பிகள் திராவிடத்திற்குப் புத்துயிர் ஊட்ட புதிய உளிகளோடு கிளம்பியுள்ளார்கள். சொந்தத் தத்துவமோ, சொந்த சித்தாந்தமோ இல்லாதவை திராவிடக் கழகங்கள். அதனால் அவர்கள் தங்கள் தலைவர்களை சாக்ரடீஸ், இங்கர்சால் என்று அயல்நாட்டுத் தலைவர்கள் பெயரில் அழைத்துக் கொள்கிறார்கள்.
திராவிடத்திற்கென்று என்றுமே தனித்துவமான தத்துவமோ, சித்தாந்தாமோ இருந்ததில்லை! அதில் கொஞ்சம் – இதில் கொஞ்சம் எடுத்துக் கொள்வார்கள். தமிழறிஞர்கள் முன்வைத்த தமிழ் இன - மொழி கருத்துகள், மேற்கத்திய நாத்திகவாதம், காங்கிரசார் - கம்யூனிஸ்ட்டுகள் சொல்லும் கொள்கைகள் முதலியவற்றில் கொஞ்சம் கொஞ்சம் எடுத்துப் பஞ்சாமிர்தத் தத்துவம் பேசுவார்கள். “மாஸ்கோவுக்குப் போவேன், மாலங்கோவைப் பார்ப்பேன்; நான்தான் உண்மையான கம்யூனிஸ்ட் என்பேன்” என்று பேசினார் அண்ணா.
திராவிடத்தின் சிந்தனைச் சிற்பிகளே, உங்கள் கழகங்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குச் செய்த சாதனைகள் என்ன? உங்கள் திராவிடக் கட்சிகள் உருவாகவில்லை என்றால் தமிழர்கள் – உங்கள் பெரியார் சொன்னதுபோல் காட்டுமிராண்டிகளாக – நாடோடிக் கூட்டமாக அலைந்து திரிந்திருப்பார்களா? உங்களுக்கு அறைகூவல் (சவால்) விடுக்கிறோம். எந்தக் காலத்தில் – எந்த நூற்றாண்டில் தமிழர்களைவிட வட இந்தியர்கள் முன்னேறி இருந்தார்கள்? எதில் முன்னேறி இருந்தார்கள்?
எந்தக் காலத்தில் தமிழர்கள் 
பின்தங்கியிருந்தார்கள்?
---------------------------------------------
கடந்த ஐயாயிரம் ஆண்டு வரலாற்றை எடுத்துக் கொண்டு விவாதிப்போம்! எந்தக் காலத்தில் உ.பி., ம.பி., பீகார், இராசஸ்தான்காரர்களை விடத் தமிழர்கள் எதில் பின் தங்கி இருந்தார்கள்? வங்காளிகளும், மராத்தியரும் தமிழர்களைவிட முன்னேறி இருந்தார்களா?

சங்க காலத்திலும் அதற்கு முன்னரும் நடந்த மன்னராட்சியில் தமிழர்கள்தாம், தமிழ்நாடுதான் பொருளாதாரத்தில், குறிப்பாக வணிகத்தில் – கல்வியில் – கலைகளில் முன்னேறி இருந்தனர். பூம்புகார், கொற்கை, முசிறி இவையெல்லாம் தமிழர் வணிகத்தின் பன்னாட்டுத் துறைமுகங்கள். நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன் வேட்டையாடப் போன தமிழன் கூடத் தன் பெயரை கோடரி போன்ற வேட்டைக் கருவிகளில் தமிழில் பொறித்து வைத்திருந்தான். தமிழ்நாட்டில் கல்வி அவ்வளவு வளர்ச்சி பெற்றிருந்தது என்று ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் கூறுகிறார். (செம்பியன் கண்டியூர் கற்கோடரியில் பெயர் பொறித்திருந்ததைப் பார்த்த போது).
திராவிடத் தலைவர்கள் அவதாரம் எடுக்கவில்லையென்றால் தமிழர்கள் படித்திருக்க மாட்டார்கள்; மாடு மேய்த்துக் கொண்டிருப்பார்கள் என்று தமிழ் இனத்தை ஏகடியம் பேசுகின்றீர்கள். ஆடுமாடு மேய்த்த தமிழனும், தமிழச்சியும் கல்வி கற்று விட்டுத்தான் அந்த வேலையைச் செய்தார்கள். படிக்காத காட்டுமிராண்டிச் சமூகத்தில்தான் 3,500 ஆண்டுகளுக்கு முன் பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும் எழுதப்பட்டனவா?
படிக்காத தமிழ்ச்சமூகம்தான் மூன்று தமிழ்ச் சங்கங்களை உருவாக்கி, அதில் புலவர்கள் படைப்புகளை அரங்கேற்ற வேண்டும் என்று ஏற்பாடு செய்ததா? எண்ணற்ற பெண்பாற் புலவர்களை உருவாக்கியதா?
படிக்காத காட்டுமிராண்டித் தமிழ்ச்சமூகம்தான் ஆதிச்சநல்லூர் – கீழடி – அரப்பா வரையிலான ஐயாயிரம் ஆண்டு நாகரிகச் சின்னங்களை வைத்திருக்கிறதா?
ஆங்கிலேய ஆட்சி வருவதற்கு முன்பே இரும்பு உருக்குத் தொழில் இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் சிறப்பாக இருந்தது என்று மேற்கத்திய ஆய்வாளர்கள் எழுதுகிறார்கள். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலும் வட இந்தியாவைவிட பெருளாதாரத்திலும் கல்வியிலும் தமிழ்நாடுதான் முன்னேறி இருந்தது.
இந்திய விடுதலைக்குப் பின் நடந்த காங்கிரசு ஆட்சியிலும், வட இந்திய மாநிலங்களை விடத் தமிழ்நாடுதான் கல்வியில் முன்னணியில் இருந்தது. படித்தோர் எண்ணிக்கை (Literacy Rate) வட இந்தியாவை விடத் தமிழ்நாட்டில்தான் அதிகம்!
மன்னராட்சியிலேயே 2,000 ஆண்டுகளுக்கு முன் கல்லணை கட்டிய இனம் தமிழினம்! பொறியியல் துறையின் மிகப்பெரிய சாதனையாக 1,000 ஆண்டுகளுக்கு முன் தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய இனம் தமிழினம்! வெள்ளைக்காரன்தான் மேட்டூர் அணை, முல்லைப் பெரியாறு அணை போன்றவற்றைக் கட்டினான். பிறகு காங்கிரசு ஆட்சியில் பவானி சாகர் உள்ளிட்ட பல அணைகள் கட்டப்பட்டன.
பெரிய ரெயில்வே தொழிலகங்களைத் தமிழ்நாட்டில் வெள்ளைக்காரன் நிறுவினான். காங்கிரசு ஆட்சியில் ஆவடி, திருச்சி படைக்கலத் தொழிற்சாலைகள், பி.எச்.இ.எல்., நெய்வேலி தொழிற்சாலைகள் கட்டப்பட்டன. திராவிட ஆட்சிகளும் வேறு சில திட்டங்களை நிறைவேற்றின. ஓர் ஆட்சியின் அடிப்படை அது!
பாழாய்க் கிடந்த – நாடோடிக் கும்பலைக் கொண்டிருந்த தமிழ்நாட்டில் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் கல்வியைக் கொண்டு வந்தன; தொழிற்சாலைகளைக் கொண்டு வந்தன என்பன போன்ற கட்டுக்கதைகளை இனியாவது நிறுத்திக் கொள்ளுங்கள் – திராவிடச் சிற்பிகளே!
சுரண்ட வந்த வெள்ளைக்காரன்கூட ஆட்சி நிர்வாகம் அமைத்த பின், கல்வி – வேலை – தொழில் – வேளாண்மை – பொதுநலம் எனப் பல துறைகளில் பல முன்னேற்றங்களை உண்டாக்கினான். வெள்ளைக்காரனுக்கு மாறாக சோழர் – பாண்டியர் ஆட்சியின் நீட்சியாக சனநாயக மலர்ச்சி ஏற்பட்டு தமிழர் ஆட்சி தொடர்ந்திருந்தால், 16ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் ஏற்பட்ட முன்னேற்றங்களை விட அதிக முன்னேற்றத்தைத் தமிழ்நாடு அடைந்திருக்கும்! ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இராசேந்திரச்சோழன் வைத்திருந்த கப்பற்படைக்கு நிகராக உலகத்தில் எந்த ஆட்சியும் வைத்திருக்கவில்லை என்பதை நினைவில் வையுங்கள்.
இந்தியாவின் காலனி
----------------------------------- 
அன்று இங்கிலாந்தின் காலனியாக இருந்தது தமிழ்நாடு; இன்று இந்தியாவின் காலனியாக இருக்கின்றது தமிழ்நாடு! இந்த வரையறுப்பை இன்றைக்கு சொல்ல தி.க. தயாரா? தி.மு.க. தயாரா? இந்திய ஏகாதிபத்தியக் காலனியத்தை எதிர்த்துப் போராடத் திட்டம் வெளியிடத் தயாரா? உங்கள் பெரியார்தான் சொன்னார், 1947 ஆகத்து விடுதலை தமிழ்நாட்டிற்கு இல்லையென்று! அப்படிச் சொன்னவர்தான் பின்னர், காங்கிரசுக்குக் காவடி தூக்கினார்.

தமிழ்நாடும் தமிழரும் அடிமையாய் உள்ளார்கள் – மெய்யான விடுதலை பெற வேண்டும் என்ற உண்மையை தொடக்கக் காலத்தில் சொன்னதால்தானே தி.க.வையும் தி.மு.க.வையும் தமிழர்கள் ஏற்றார்கள்; காங்கிரசைக் கைவிட்டார்கள். தனிநாடு பேசித்தானே தி.க.வும், தி.மு.க.வும் தமிழ்நாட்டில் வளர்ந்தன. வளர்ந்த பின் தி.க.வும், தி.மு.க.வும் செய்ததென்ன? பச்சைத்துரோகம்! தமிழினத்துக்குத் துரோகம் செய்து, தில்லிக்குக் காவடி தூக்கின!
1954லிருந்து இந்திய ஏகாதிபத்தியக் கட்சியான காங்கிரசுக்கு பிரச்சார பீரங்கியானார் பெரியார். 1967இல் காங்கிரசு தோற்று தி.மு.க. தமிழ்நாடு ஆட்சியைப் பிடிக்கும் வரை காங்கிரசுக்கு – சட்டமன்றத்துக்கும், நாடாளுமன்றத்துக்கும் ஓட்டுக் கேட்டு ஊர் ஊராகப் போனவர் பெரியார். “தமிழ்நாடு தமிழர்க்கே” என்று தமது ஏட்டில் எழுதிக் கொள்வார் – அவ்வப்போது தமிழ்நாடு தனியாக வேண்டும் என்று கூறிக் கொள்வார் – ஆனால் காங்கிரசின் பிரச்சார பீரங்கியாக முழங்கி வருவார். அக்கட்சிக்கு ஓட்டு கேட்பார். எப்படிப்பட்ட “விடுதலை வீரர்” பெரியார்!
அண்ணாவை வீழ்த்துவதே பெரியாரின் நோக்கம்
யாரைத் தோற்கடிக்க, காங்கிரசுக்கு ஓட்டுக் கேட்டார் பெரியார்? தி.மு.க.வைத் தோற்கடிக்க! திராவிட சித்தாந்தத்தின் சிறப்பே சிறப்பு! திராவிடச் சிந்தனைச் சிற்பிகள் சொல்லுவார்கள் – காமராசருக்காக – காங்கிரசுக்கு ஓட்டுக் கேட்டார் பெரியார் என்று! அதன் பொருள் என்ன? அண்ணாவைத் தோற்கடிக்கத் தானே காமராசருக்கு ஓட்டுக் கேட்டார் பெரியார்? என்னே திராவிடத் தந்தை, என்னே திராவிட மகன்! என்னே திராவிடத் தத்துவ ஆற்றல்!

தனிநபர் பகை அரசியல்
------------------------------------- 
எப்போதுமே தனிநபர் பகைதான் திராவிட அரசியலில் முதன்மை வகிக்கும்! அண்ணாவையும், தி.மு.க.வையும் ஒழித்துக் கட்டுவதற்காக காங்கிரசை ஆதரித்தார் பெரியார். வேறென்ன?

அண்ணாவும் அவர் தம்பிகளும் தி.மு.க.விலிருந்து ஏன் பிரிந்தார்கள்? பெரியார் மணியம்மையாரை தம் 70 ஆம் அகவையில் இரண்டாம் திருமணம் செய்து கொண்டதுதான் தி.மு.க. பிரிந்ததற்கான முதன்மைக் காரணம்! இக்காரணத்தைத்தான் தி.மு.க.வினர் வெளியே சொன்னார்கள்.
கருணாநிதிக்கும் எம்.ஜி.ஆருக்கும் ஏற்பட்ட தனிநபர் பகையில் தி.மு.க.விலிருந்து அ.தி.மு.க. உருவானது. அ.தி.மு.க.வுக்கு செயலலிதா தலைமை உருவான பின் கருணாநிதிக்கும் அம்மையாருக்குமான தனிநபர் பகை அசிங்கமானது; அநாகரிகத்தின் உச்சத்தைத் தொட்டது.
கருணாநிதி முதல்வராக இருந்தால் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தும் செயலலிதா சட்டப்பேரவைக்குப் போவதில்லை. தி.மு.க.வினர் தன்னை இழிவுபடுத்திவிடுவார்கள் என்ற அச்சத்தின் காரணமாக! அப்படி ஒரு நிகழ்வு 1989இல் நடந்தது. செயலலிதா முதல்வராக இருந்தால் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தும் கருணாநிதி சட்டப்பேரவைக்குப் போவதில்லை. ஏன்? அ.இ.அ.தி.மு.க.வினர் தன்னை இழிவுபடுத்தி விடுவார்கள் என்று அஞ்சி அவர் போவதில்லை. திராவிடம் வளர்த்த பண்பைப் பாருங்கள் – நாகரிகத்தைப் பாருங்கள் – சனநாயகத்தைப் பாருங்கள்! “கடமை – கண்ணியம் – கட்டுப்பாடு” காக்கும் திராவிடப் பாரம்பரியத்தைப் பாருங்கள்!
சட்டப்பேரவையில் முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவரும் ஒன்றாக உட்கார முடியாத கேவலம் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலாவது உண்டா? தமிழ்நாட்டின் நாகரிகத்திற்கும் தமிழர்களின் பண்பிற்கும் கேடு உண்டாக்கிய கட்சிகள் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும்!
கருணாநிதிக்கும் வைகோவுக்கும் ஏற்பட்ட தனிப்பட்ட பகையினால்தான் ம.தி.மு.க. உருவானது. எந்தப் புதிய தத்துவத்திற்காக – இலட்சியத்திற்காக ம.தி.மு.க. உருவானது? எதுவுமில்லை!
வைகோ மீது கருணாநிதி சாட்டிய குற்றச்சாட்டு சாதாரணமானதல்ல. “விடுதலைப்புலிகளோடு சேர்ந்து கொண்டு வைகோ என்னைக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டினார்” என்று கூறினார் கலைஞர். நடுவண் அரசின் உளவுத்துறை ஆதாரங்கள் இருக்கின்றன என்றார்.
கருணாநிதி இந்தக் கொலைக் குற்றச்சாட்டை தமது “பிதாமகர்” பெரியார் வழியைப் பின்பற்றித்தான் வைத்தார். திராவிடர் கழகத்தில் பிளவு உண்டானபோது அண்ணா தன்னைக் கொலை செய்யத் திட்டம் தீட்டுகிறார் என்று, தமது ஏட்டில் பெரியார் எழுதினார். அண்ணா பெரியாரை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அந்தத் தந்தையின் பாணியைத்தான் தனையன் கருணாநிதி பின்பற்றினார்! திராவிடத்தின் தந்தை மகன் பாசம் – அண்ணன் தம்பி பாசம், அடடா.. அடடா..!
ஏன் வந்தது திராவிடம்?
--------------------------------------
திராவிடக் கட்சி என்பது 1944-இல் பிறக்கும்போதே போலியாகப் பிறந்த கட்சி என்பதற்கு “திராவிடர் கழகம்” என்ற பெயரே சான்று!

தமிழர்களுக்காக மட்டுமின்றி, தெலுங்கர் – கன்னடர் – மலையாளி ஆகியோருக்காகவும் தமிழ்நாட்டில் கட்சி தொடங்கியவர் பெரியார். தமிழர் என்று சொன்னால், தெலுங்கர் – கன்னடர் – மலையாளி ஆகியோர் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள், எனவேதான் “திராவிடர்” என்று சொல்கிறேன் என்றார் பெரியார். ஆனால், ஆந்திர – கர்நாடக – கேரள மாநிலங்களிலுள்ள தெலுங்கர் – கன்னடர் – மலையாளிகள் தங்கள் மண்ணில் திராவிடர் கழகத்தை ஏற்கவில்லை.
அந்த உண்மை தெரிந்த பின்னும் 1949இல் தி.க.விலிருந்து பிரிந்து தி.மு.க.வை உருவாக்கியபோது, அண்ணாவும் மற்ற தலைவர்களும் தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகிய நான்கு மாநிலங்களையும் இந்தியாவிலிருந்து விடுதலை செய்வதற்காகப் புதிய கழகம் உருவாக்கப்படுகிறது என்றார்கள். எவ்வளவு பெரிய பொய்!
தி.மு.க.வுக்கு மற்ற மூன்று மாநிலங்களில் தமிழர்களைத் தவிர பிறரிடம் கிளைகள் இல்லை; அத்துடன் அம்மாநிலங்களில் தனிநாட்டுக் கோரிக்கை எவராலும் வைக்கப்படவில்லை. உண்மையான தனிநாட்டு விடுதலை வீரர்களாக இருந்தால் – இப்படித் தொடர்பில்லாத மற்ற தேசிய இனங்களுக்கும் சேர்த்து விடுதலைக் கோரிக்கையை வைப்பார்களா? பிறக்கும்போதே போலித்தனம்! “நாங்கள் உண்மையான விடுதலை கோரவில்லை” என்று தில்லி ஏகாதிபத்தியத்திற்கு உணர்த்தும் உத்தி!
தி.க.வும் தி.மு.க.வும் தமிழர்களுக்குச் செய்த துரோகங்களின் சிகரம் எது? “தமிழர்” என்ற வரலாற்று வழிப்பட்ட நம் இனப்பெயரை நீக்கி நமக்கு “திராவிடர்” என்று புதிதாக ஒரு இனப்பெயரைச் சூட்டியதுதான் மன்னிக்க முடியாத துரோகம்! ஓர் இனத்தின் இயற்கையான பெயரை மாற்ற இவர்களுகளுக்கென்ன அதிகாரம் இருக்கிறது? அப்படித்தான் இவர்களுக்கென்ன வரலாற்று அறிவு இருந்தது? திராவிடம் என்பதற்கு சமற்கிருதச் சான்றுகளைத்தான் அண்ணா காட்டினார்.
அடுத்து, தமிழர் மானிடவியலைக் கற்காத – அரைகுறை தமிழ்ப் பண்டிதர் கால்டுவெல் “திராவிடர்” என்று கூறியதை சான்று காட்டினார்கள். “சாண் ஏறினால் முழம் சறுக்குபவர் கால்டுவெல்” என்றார் பாவாணர்.
திராவிடர் என்பதில் பிராமணர் இல்லையா?
“திராவிட“ என்பது ஆரியப் பிராமணர்கள் உருவாக்கிய சொல். வடக்கே இருந்து தெற்கே புலம் பெயர்ந்து சென்ற பிராமணர்களைக் குறிக்கப் பிராமணர்களால் உருவாக்கப்பட்ட சொல். இன்றைக்கும் பல பிராமண சங்கங்கள் “திராவிட” அடையாளத்தோடு செயல்பட்டு வருகின்றன. எடுத்துக்காட்டு – புதூரு திராவிட பிராமண சங்கம், சவுத் கனரா திராவிட பிராமண சங்கம் (http://www.skdbassociation.com).

குசராத், மராட்டியம், ஆந்திரம், கர்நாடகம், தமிழ்நாடு ஆகிய ஐந்து மாநிலங்களுக்குப் புலம் பெயர்ந்து சென்ற பிராமணர்களைக் குறிக்க “பஞ்சதிராவிடர்கள்” என்றார்கள். (பஞ்ச – ஐந்து. அப்போது மலையாள மொழி உருவாகவில்லை). வடக்கே கங்கைச் சமவெளி நோக்கி இமயமலைவரை சென்ற பிராமணர்களுக்கு “கௌட பிராமணர்கள்” என்று பெயர் சூட்டினர். தமிழர்களைக் குறிக்க “திராவிடர்” என்ற சொல்லை அவர்கள் உருவாக்கவில்லை.
கால்டுவெல் “திராவிட” என்ற சொல்லை மனுஸ்மிரிதி மற்றும் குமாரிலபட்டரின் “தந்த்ர வார்த்திகா” ஆகிய சமற்கிருத நூல்களிலிருந்து எடுத்ததாகக் குறிப்பிடுகிறார் (திராவிட அல்லது தென்னிந்திய மொழிகளின் ஒப்பிலக்கணம்). சங்க இலக்கியம், காப்பிய இலக்கியம், பக்திக்கால இலக்கியம், சித்தர் இலக்கியம் எதிலும் தமிழில் “திராவிட” என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை. அக்காலத்தில் தமிழர்கள் தங்களைத் திராவிடர்கள் என்று கூறிக்கொள்வதை இழிவாகக் கருதினார்கள்.
தமிழர் இன அடையாளத்தை மறைப்பதற்காகத் திட்டமிட்டு பெரியாரால் பரப்பப்பட்ட சொல் திராவிடம். “தமிழ் காட்டுமிராண்டி மொழி, தமிழ்ப் படிக்காதீர்கள்; ஆங்கிலத்தைப் படியுங்கள், வீட்டில் மனைவியிடம் வேலைக்காரியிடம் கூட ஆங்கிலத்திலேயே பேசிப் பழகுங்கள்” என்று 1968 – 1969 இல் கூட திரும்பத் திரும்ப எழுதியவர், பேசியவர் பெரியார்.
தமிழ் இனத்தின் மீது - தமிழ் மொழி மீது அவ்வளவு பெரிய காழ்ப்புணர்ச்சி ஏற்படும்படி தமிழர்கள் என்ன குற்றம் செய்தார்கள்? பெரியாருக்கு என்ன அநீதி இழைத்தார்கள்?
பெரியாரின் தாய்மொழி கன்னடம் என்பதற்காக அவரைத் தமிழர்கள் அயலாராகக் கருதவில்லை. நாம் பெரியாரை விமர்சிப்பது, அவர் அயல் இனத்தார் என்ற பொருளில் அன்று! சம உரிமையுள்ள தமிழ்நாட்டு மண்ணின் மகன் பெரியார் என்ற புரிதல்தான் தமிழ்த்தேசியப் பேரியக்கத்திற்கு இருக்கிறது.
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரலாற்று வழியில் தமிழ்நாட்டில் குடியேறி வாழ்ந்து வரும் தெலுங்கு – கன்னடம் – சௌராட்டிரம் – உருது – மராத்தி போன்ற மொழிகள் பேசும் அனைவரையும் சம உரிமையுள்ள மண்ணின் மக்களாகவே நாங்கள் வரையறுக்கிறோம். ஆனால், பெரியாருக்குத்தான் தன் இனம் குறித்து ஏதோவொரு ஐயுறவு ஏற்பட்டு “தமிழர்” என்ற இனப்பெயரை நீக்கி, “திராவிடர்” என்ற ஆரியப்பெயரைத் திணித்தார்.
“திராவிடர்” என்று சொன்னால் அதில் பிராமணர்கள் சேர மாட்டார்கள் என்று ஒரு கட்டுக்கதையை பெரியார் உருவாக்கினார். தி.மு.க.வில் பிராமணர்கள் பலர் இருக்கிறார்கள். அ.தி.மு.க.வுக்கு கன்னடப் பிராமணப் பெண் தலைவி ஆனார். அந்த செயலலிதாவுக்கு “சமூகநீதி காத்த வீராங்கனை” பட்டம் கொடுத்தார் ஆசிரியர் வீரமணி.
பிராமணிய எதிர்ப்பு மரபு
--------------------------------------
சங்க காலத்திலிருந்து பிராமணியத்தை எதிர்த்து வரும் இனம் தமிழினம். ஆரியர்களை அடக்கி அவர்கள் தலையில் கல்லை ஏற்றி வந்த தமிழன் கதை கூறும் நூல் சிலப்பதிகாரம். பக்திக்காலம் - சித்தர்கள் காலம் தொட்டு வள்ளலார் காலம் – மறைமலையடிகள் காலம் வரை பிராமணிய எதிர்ப்பும், சமற்கிருத எதிர்ப்பும் தமிழினத்தின் குருதியில் கலந்தது. தமிழினத்திற்கு மரபு வழியில் ஆரிய - பிராமணிய எதிர்ப்பு தொடர்ந்து இருந்துவந்த காரணத்தால்தான், பெரியாரின் பிராமண ஆதிக்க எதிர்ப்பு இங்கு மக்களைத் திரட்டித் தந்தது.

தமிழ்நாட்டில் வெகுமக்கள் ஆதரவோடு நடந்த பிராமணிய எதிர்ப்புப் போராட்டம் போல் இந்தியத் துணைக் கண்டத்தில் வேறு எந்த மாநிலத்தில் நடந்தது? அந்த மாநிலங்களிலெல்லாம் வர்ணாசிரம தர்மம் இல்லையா? பிராமண ஆதிக்கம் இல்லையா? ஏகலைவன் கட்டை விரல் வாங்கிய கதை, தவமிருந்த சம்பூகன் தலை வெட்டிய கதை எல்லாம் வடநாட்டில்தானே நடந்தது! ஏன் அம்மாநிலங்களில் தமிழ்நாட்டைப் போல் பிராமண எதிர்ப்பு வெகுமக்கள் ஆதரவைப் பெறவில்லை?
“யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்றும், “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்றும் 2,500 ஆண்டுகளுக்கு மேல் மனித சமத்துவம் பேசி வரும் இனம் – தமிழினம்! ஆரியத்தின் வர்ணாசிரம தர்மத்தை எதிர்த்துவரும் இனம் – தமிழினம்!
“பேர் கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை அர்ச்சித்தால், போர் கொண்ட மன்னர்க்கு பொல்லாத நோயாம்” என்று திருமூலர் பாடினார். அவரேதான் “என்னை நன்றாய் இறைவன் படைத்தனன், தன்னை நன்றாய் தமிழ் செய்யுமாறே” என்றார். ”வேதாகமங்கள் என்று வீண்வாதம் ஆடுகின்றீர்! வேதாகமங்களின் விளைவறியீர்! சூதாகச் சொன்னவலால், உண்மைநிலை தோன்ற உரைக்கவில்லை” என்றார் வள்ளலார். பல தெய்வ சிலை வணக்கத்தை மறுத்து, அனைவருக்கும் பொதுவான ஒளி வணக்கத்தை அறிமுகப்படுத்தினார். சாதி – மதம், ஆண் – பெண் வேறுபாடின்றி அனைவரும் உறுப்பு வகிக்கக் கூடிய “சமரச சுத்த சன்மார்க்க சங்கம்” என்ற பொதுநிலைக் கழகத்தை 1865இல் தொடங்கி நடத்தியவர் வள்ளலார். இது எங்கள் மரபு!
இந்த மரபு பெரியாருக்கு வாய்ப்பளித்தது. பிராமண ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடினார். அதற்கு நன்றி பாராட்டுகிறோம்! அதற்காக, எங்கள் இனத்தின் பெயரை நீக்குவதற்கு அவருக்கு என்ன உரிமை இருக்கிறது? எங்கள் தாய்மொழியைக் காட்டுமிராண்டி மொழி என்றும், எங்கள் இனத்திற்கு நாகரிக வரலாறு இல்லை என்றும், எங்கள் இனத்தில் சரியான அறிவாளி யாருமே இல்லை என்றும் பேசி தமிழினத்தை இழிவுபடுத்தியதைத் தமிழர்கள் சகித்துக் கொள்ள வேண்டுமா? தமிழை “நீச பாஷை” என்றார்கள் பிராமணர்கள்; தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்றார் பெரியார். இவருடைய பிராமண எதிர்ப்பு, பாதிக் கிணறு தாண்டுவதாக இருக்கிறதே!
திராவிடத்துக்குப் புத்துயிரூட்டப் புறப்பட்டிருக்கும் சிந்தனைச் சிற்பிகளே, அதற்காகத் தமிழ்த்தேசியத்தைத் தாக்காதீர்கள். தமிழ்த்தேசியத்தை இழிவுபடுத்தாதீர்கள். தமிழர்களாகப் பிறந்த நீங்கள் தமிழ்த்தேசியத்தை இழிவுபடுத்துவது, கொச்சைப்படுத்துவது நீங்கள் குடித்த தாய்ப்பாலுக்குத் துரோகம் செய்வது போன்ற வேலை! “மகன் செத்தாலும் பரவாயில்லை, மருமகள் தாலியறுக்க வேண்டும்” என்று கொடுமைக்கார மாமனார் – மாமியார் நினைத்ததாக ஒரு பழமொழி உண்டு. அப்படி, தமிழ்த்தேசியத்தை அழிப்பதற்காக நீங்கள் பிறந்த தமிழினத்திற்கு துரோகம் செய்யாதீர்கள்.
இனப்பெயர் நாமாகத் தேர்வுசெய்வதன்று. வரலாற்று வழியில் – மரபு வழியில் இயற்கையாக உருவாவது. ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னும் நம் இனப்பெயர் தமிழர் தான். இன்றும் நம் தேசிய இனப்பெயர் தமிழர்தான். மரபு இனப்பெயரும் (Race) தேசிய இனப்பெயரும் (Nationality) ஒன்றாக இருப்பது உலகத்தில் சில இனங்களுக்கு மட்டுமே இருக்கிறது. அதில் மூத்த இனம் தமிழினம்! அந்தப் பெயரை “திராவிடர்” என மாற்றிப் பிறந்த இனத்துக்குத் துரோகம் செய்யாதீர்கள்.
கொள்ளுப்பேரன் தலைமைதான்
திராவிட விசுவாசமா?
----------------------------------------------------
திராவிடச் சிந்தனைச் சிற்பிகளே, கருணாநிதி தலைமையை ஏற்றுக் கொண்டு, அவர் மகன் தலைமையை ஏற்றுக் கொண்டு, அவர் பேரன் தலைமையை ஏற்றுக் கொண்டு, அதன் பின் கலைஞரின் கொள்ளுப்பேரன் தலைமையை ஏற்றுக்கொள்வதுதான் “திராவிட விசுவாசம்” என்று கருத்தியல் உருவாக்கி - இனப்பற்றை “கலைஞர் வாரிசுகள் பற்று” என்று கொச்சைப்படுத்திக் கொள்ளாதீர்கள்!

தமிழ் இழப்பு – உரிமைகள் பறிப்பு
----------------------------------------------------
தமிழ்நாட்டில் 50 ஆண்டுகாலத் திராவிட ஆட்சி தமிழ்மொழிக் கல்வியே இல்லாத நிலையை உருவாக்கும் திசைநோக்கிச் செல்கிறது. அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் இல்லை; தனியார் பள்ளிகளில் தமிழ் இல்லை. அண்டை மாநிலங்களில் இப்படியான நிலை இல்லை. கேரளத்தைப் பாருங்கள். அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் நிரம்பி இருக்கிறார்கள்; மலையாளம் கற்கிறார்கள்.

ஐம்பது ஆண்டுகாலத் திராவிட ஆட்சியில்தான் கச்சதீவை இழந்தோம்; கடலில் மீன்பிடி உரிமை இழந்தோம்; காவிரி, பாலாறு, தென்பெண்ணை ஆகிய ஆறுகளை இழந்தோம். கல்வி உரிமை மாநிலத்திடமிருந்து நடுவண் அதிகாரத்திற்கு போனது. மாநில அரசு வணிக வரி வசூலிக்கும் உரிமையை இழந்தோம். ஜி.எஸ்.டி வந்தது. மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க்கும் உரிமைகளைத் தமிழ்நாடு இழந்தது. தில்லியின் நீட் தேர்வு வந்தது.
ஐட்ரோகார்பன் வந்து வேளாண் நிலங்களை அழிக்கிறது. ஸ்டெர்லைட் ஆலை மனித உயிர்களைப் பறிக்கிறது. அடுக்கடுக்காய் அணு உலைகள், நியூட்ரினோ ஆலை, எட்டுவழிச் சாலை, வேளாண் நிலங்களின் குறுக்கே கெயில் குழாய்கள், உயர் மின் அழுத்த கோபுரங்கள் - எத்தனை சீரழிவுகள்; எத்தனை வகையில் வாழ்வுரிமைப் பறிப்புகள்!
வெளி மாநிலத்தார் குவிப்பு
------------------------------------------- 
தமிழர்களுக்கான தாயகமாகத் தமிழ்நாடு இன்னும் எத்தனை ஆண்டுகள் நீடிக்கும் என்ற பேரச்சம் ஏற்பட்டுள்ளது. பார்க்கும் இடமெல்லாம் வெள்ளமென இந்திக்காரர்கள் கூட்டம் – வெளி மாநிலத்தார் கும்பல்! தமிழ்நாட்டின் இந்திய அரசு நிறுவனங்களில், அலுவலகங்களில் இந்திக்காரர்களையும் வெளி மாநிலத்தவர்களையும் மிக அதிக அளவில் வேலையில் சேர்கிறார்கள். சொந்தத் தாயகத்திலேயே தமிழர்களுக்கு எதிராக இன ஒதுக்கல் கொள்கையை இந்திய அரசு செயல்படுத்துகிறது.

மேற்கண்ட அத்தனை உரிமைப் பறிப்புகளையும் தாயகப் பறிப்புகளையும் செய்யும் காங்கிரசு, பா.ச.க.வுடன்தான் திராவிடக் கட்சிகள் எப்போதும் கூட்டணி!
திராவிட அரசியல் என்பது இரண்டு சக்கரங்கள் மீது இயங்குகிறது. ஒரு சக்கரம் - தலைவர்கள் ஆதாயம், இன்னொரு சக்கரம் திராவிடத் தலைவர்களிடையே பகை! பயணம் முழுவதும் ஊழலோ – ஊழல்!
தமிழ்த்தேசியர்களே,
தேர்தல் என்பது ஒரு சனநாயக வழிமுறை! அதேவேளை, அதற்கான எல்லைகளை இந்திய அரசு வரையறுத்து வைத்துள்ளது. தேர்தல் மூலம் – தமிழ்நாட்டு ஆட்சியைப் பிடித்து தமிழ்நாட்டு உரிமைகளை மீட்டுவிடலாம் என்று எண்ணாதீர்கள்! அவ்வளவு எளிதாக இந்திய ஏகாதிபத்தியம் - தான் பறித்த உரிமைகளை விட்டுக் கொடுக்காது. இந்திய ஏகாதிபத்தியத்தின் இருபெரும் கட்சிகள் பா.ச.க.வும் காங்கிரசும்! இவை “பாரதமாதா”வின் பிள்ளைகள்; தமிழன்னையின் பகைவர்கள்.
தமிழ்த்தேசிய உரிமைகள் மீட்பு – கோடிக்கணக்கான தமிழர்களின் எழுச்சியில்தான் கைகூடும்! அதற்குத் தமிழ்த்தேசியம் என்றால் என்ன, இழந்த உரிமைகள் எவை, அவற்றை எப்படி மீட்பது, அதற்கான வெகுமக்கள் போராட்ட உத்திகள் யாவை என்பவற்றையெல்லாம் தலைவர்களும், முன்னணிச் செயல்பாட்டாளர்களும் கற்றறிய வேண்டும். அவற்றை மக்களின் குரலாக மாற்ற வேண்டும்.
தத்துவம், அரசியல், பொருளியல், பண்பியல், சூழலியல் என அனைத்துத் துறையிலும் தமிழ்த்தேசிய உரிமைப் போராட்டங்கள், வெகுமக்கள் போராட்டங்களாக – சனநாயகப் போராட்டங்களாக வீச்சுப் பெற வேண்டும்!

Labels:


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்