<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d6955529389241309188\x26blogName\x3d%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86.%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://thozharmaniyarasan.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com/\x26vt\x3d-8408640130511538487', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

"மதக்கலவரத்தைத் தூண்டும் பா.ச.க.வினர் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!"-- தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் கோரிக்கை!.

Wednesday, January 26, 2022

 


மதக்கலவரத்தைத் தூண்டும் பா.ச.க.வினர் மீது
தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!
=====================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
பெ. மணியரசன் கோரிக்கை!
=====================================


தஞ்சை மாவட்டம் - மைக்கேல்பட்டி தூய இருதய ஆண்டவர் மேனிலைப்பள்ளியின் மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு, இறந்துபோன செய்தியை வைத்து, தமிழ்நாட்டில் மதக் கலவரத்தைத் தூண்டுவதற்கு பாரதிய ஜனதா கட்சியினர் மேலிருந்து கீழ்வரை தீவிரம் காட்டுகிறார்கள். அந்த மாணவியின் தற்கொலையில் மதமாற்றத்திற்கான காரணம் இல்லை என்று தஞ்சை மாவட்டக் காவல்துறையும், பள்ளிக் கல்வித்துறை ஆய்வறிக்கையும் தெளிவாகக் கூறி விட்டன. அப்பள்ளியின் பெரும்பான்மை மாணவர்கள் இந்துக்கள். அவர்கள் யாரும் இதுபோன்ற மதமாற்றப் புகாரை இதுவரை தெரிவிக்கவில்லை.

ஆனாலும், இந்து மாணவியை கிறித்துவ மதத்திற்கு மாற்ற பள்ளி நிர்வாகப் பொறுப்பாளர்கள் வலியுறுத்தினார்கள், அதனால் அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார் என இட்டுக்கட்டி, அந்த வதந்தியைத் தீவிரப்படுத்தும் போராட்டங்களை பா.ச.க. நடத்தி வருகிறது.

தமிழ்நாட்டளவில் அந்த வதந்தி எடுபடாத நிலையில், அனைத்திந்திய சிக்கலாக அதை மாற்றுவதற்கு பா.ச.க. தலைமை புதிதாக ஒரு அனைத்திந்திய விசாரணைக் குழுவை போட்டிருக்கிறது.

அன்றாடம், பா.ச.க. தலைவர்கள் மதப் பகைமையைத் தூண்டக்கூடிய அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்கள். குசராத்து போல, உத்தரப்பிரதேசத்தைப் போல தமிழ் நாட்டிலும் வதந்திகளை வைத்து, செயற்கைக் காரணங்களால் மதக் கலவரத்தைத் தூண்டி பா.ச.க.வை வளர்க்க வேண்டும் என்பது அவர்களின் திட்டம் எனத் தெரிகிறது.

எனவே, இனியும் காத்திருக்காமல் தமிழ்நாடு அரசு போர்க்கால வேகத்தில் செயல்பட வேண்டும். பொய்ச் செய்திகளைப் பரப்பி மதக் கலவரத்தைத் தூண்டுவோர் மீது சட்டப்படியான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

====================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
====================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
==================================== 

Labels:

"இந்தி எதிர்ப்பில், திராவிட-ஆங்கிலத் திணிப்பு!"-- தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ.மணியரசன் மொழிப் போர் ஈகியர் நாள் சிறப்புக் கட்டுரை!

Tuesday, January 25, 2022


இந்தி எதிர்ப்பில்,

திராவிட-ஆங்கிலத் திணிப்பு!
=======================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ.மணியரசன் மொழிப் போர் ஈகியர் நாள் சிறப்புக் கட்டுரை!
==========================


வடவர்கள் தமிழ்நாட்டிலும் இந்தி பேசாத மற்ற மாநிலங்களிலும் இந்தியை ஒரே ஆட்சி மொழியாகத் திணித்திடத் திட்டம் தீட்டி, செயல்படத் தொடங்கி 100 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. தமிழ்நாட்டில் இந்தித் திணிப்பு எதிர்ப்பு தொடங்கியும் 100 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.

குசராத்தி மொழி இலக்கியக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு விழா மலரில் 1909-இல் கட்டுரை எழுதிய காந்தி ஆங்கில மொழியை நீக்கி. இந்துஸ்தானியை அனைத்திந்திய மொழியாக ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அக்காலத்தில், “ஒவ்வொரு பண்பட்ட இந்தியனுக்கும் தன்மாகாண மொழியுடன் ஒரு செம்மொழியும் (சமற்கிருதம்) இந்தியும் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்” என்றார். (M.K Gandhi, Hindi and English in South - 1909)

சென்னையில் 1918-ஆம் ஆண்டு தென்னிந்திய இந்தி பரப்பல் மன்றத்தை (தட்சிண பாரத் இந்தி பிரச்சார சபா) காந்தி தொடங்கி வைத்துப் பேசும் போது “பேராவலுடனும் துணிவுடனும் தென்னிந்தியாவில் இந்தியை பரப்புவதற்காக இம்மன்றத்தைத் தொடங்குகிறோம்” என்றார்.

இந்தி பரப்பல் மன்றத்தைச் சென்னையில் “துணிச்சலாகத்” தொடங்குகிறோம் என்று ஏன் சொன்னார் காந்தி? தமிழர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சமற்கிருதத்திணிப்பை எதிர்த்து வருகிறார்கள். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து காங்கிரசு மாநாடு இந்தித் திணிப்புத் தீர்மானங்கள் போட்டு வருவதைத் தமிழ்நாட்டு அறிஞர்கள் எதிர்த்து வருகிறார்கள் என்பதையும், காந்தியும் வடநாட்டினரும் அறிவர்.

இந்தித் திணிப்பு என்பது மொழிச் சிக்கல் மட்டும் அன்று; அதன் தோற்று வாய் இனச்சிக்கல்! இந்தி மண்டலத்தினரும் சமற்கிருத மொழிக் குடும்பத்தினரும் தங்களை ஆளும் இனமாக அப்போதே கருதிக் கொண்டனர். வடவர்களுக்குத் தலைமை தாங்கியோர் ஆரிய பிராமணர்களும் ஆரிய வைசியரும் ஆவர்! இன்றும் அவர்களே இந்திய அரசியல், பொருளியல், பண்பியல் அனைத்திலும் ஆதிக்கம் செய்கிறார்கள்.

இந்தித் திணிப்பை 20 ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்திலிருந்து எதிர்த்த தமிழறிஞர்களும் தமிழின உணர்வாளர்களும் தமிழ் மொழி மற்றும் தமிழினம் இரண்டின் தற்காப்பிற்காகவே இந்தியை எதிர்த்தனர். தமிழறிஞர்களின் இந்தி எதிர்ப்பு ஒன்று கூடல்களில் உருவான முழக்கம் தான் “தமிழ்நாடு தமிழர்க்கே!”

1937 வாக்கில் இந்தி எதிர்ப்பில் தமிழறிஞர்களோடு இணைந்து கொண்ட பெரியார்”தமிழ்நாடு தமிழர்க்கே” முழக்கத்தை 1938-இல் முழுமையாக ஏற்று, அம் முழக்கத்தை ஒவ்வொருவரும் கையில் பச்சை குத்திக் கொள்ளச் சொன்னார், அம்முழக்கத்தைக் கல்லில் வெட்டி வீட்டுச் சுவரில் பதிக்கச் சொன்னார்.

ஆனால் அவரே 1939-இல் தமிழர் என்று சொல்லக்கூடாது; திராவிடர் என்று தான் சொல்ல வேண்டும் என்றார். திராவிடத் திணிப்பைத் தீவிரப்படுத்தி தமிழர் என்ற இயற்கையான இனப் பெயரை மறைத்தார். அப்போது எழுந்து வந்த தமிழின – தமிழ்மொழி உணர்ச்சியைத் திராவிடமாக்கிச் சீர்குலைத்தார் பெரியார்.

தி.க.விலிருந்து பிரிந்து தி.மு.க.வைத் தொடங்கிய அண்ணாவும் அவரின் முதல் வரிசைத் தம்பிகளும் பெரியாரின் “திராவிட” இனத்தை அப்படியே ஏற்றுக் கொண்டதுடன், ஆங்கில ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்டு இந்தி எதிர்ப்பு பேசினர். அவர்களின் தலைவர் பெரியார், தமிழைப் படிக்காதே ஆங்கிலத்தைப் படி, வீட்டில் ஆங்கிலத்திலேயே பேசு என்றார்.

இந்தியாவின் இணைப்பு மொழி இந்தி என்றனர் காங்கிரசார். இல்லை, ஆங்கிலமே இந்தியாவின் இணைப்பு மொழி என்றனர் தி.மு.க.வினர்! இந்தி எதிர்ப்பில் முதல் வரிசையில் நின்ற நாவலர் சோமசுந்தர பாரதியார் “பல மொழிகள், பல இனங்கள் கொண்ட சோவியத் ஒன்றியத்தில் இணைப்பு மொழி இல்லை. அந்தந்த இன மொழியும் ஆட்சி மொழி, எனவே இந்தி அல்லது ஆங்கிலத்தை இணைப்பு மொழியாக்கினால் தமிழ் மொழியை அழித்து விடும்” என்று எதிர்த்தார்.

பிரான்சில் பிரஞ்சு ஆட்சிமொழி கல்வி மொழி. ஆனால் ஆங்கிலம் உள்ளிட்ட வேறு மொழிகளையும் கற்கிறார்கள். சுவிட்சர்லாந்தில் நான்கு மொழிகள் பேசும் தேசிய இனங்கள் வாழ்கின்றன. அங்கு இணைப்பு மொழி என்று எதுவும் இல்லை. நான்கு மொழிகளும் ஆட்சி மொழிகளே!

இப்போது நாம் மும்மொழிக் கொள்கை மோசடிக் கொள்கை; இரு மொழிக் கொள்கை ஏமாற்றுக் கொள்கை; ஒரு மொழிக் கொள்கையே உரிமைக் கொள்கை என்கிறோம். தமிழ்நாட்டில் தமிழே ஆட்சி மொழி, தமிழே கல்வி மொழி (பாடமொழி மற்றும் பயிற்று பொழி)! விரும்புவோர் ஆங்கிலம் உட்பட வேறு எந்த மொழியையும் கற்க உரிமை உண்டு! இதுவே இறையாண்மையுள்ள தமிழ்த்தேசிய மொழிக் கொள்கை!

திராவிடத் தலைவர்கள் இந்தியை எதிர்த்துக் கொண்டே ஒரு பக்கம் தமிழர் என்ற இனப்பெயரை எதிர்த்தார்கள்; மறுபக்கம் ஆங்கில ஆதிக்கத்தை ஏற்கத் தமிழர்கள் உளவியலைப் பக்குவப் படுத்தினார்கள்.

அரசமைப்புச் சட்டப்படி 1965 சனவரி 26 லிருந்து ஆங்கிலம் நீக்கப்பட்டு இந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சி மொழி ஆகும் என்ற நிலை இருந்தது. இந்த இந்தித் திணிப்பை எதிர்த்துத் தொடங்கியதே 1965 மொழிப்போர்.

மொழி உரிமைக்காக உலகில் வேறு எந்த நாட்டிலும் நடக்காத அளவிற்கு 1965 சனவரி 25 முதல் மார்ச்சு 15 வரை 50 நாள் இந்தி எதிர்ப்புப் பெரும் போராட்டம் மக்கள் போராட்டமாக வளர்ந்தது.

பக்தவத்சலத்தை முதலமைச்சராகக் கொண்ட காங்கிரசு ஆட்சி – அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர் இராசேந்திரன் தொடங்கி 300க்கும் மேற்பட்டோரை சுட்டுக் கொன்றது. கேரளம், கர்னாடகம், ஆந்திரம், மராட்டியம் ஆகிய மாநிலங்களிலிருந்து 4000 காவல்துறையினரையும், இந்தியப் படையிலிருந்து 5000 வீரர்களையும் வரவழைத்துக் காங்கிரசுக் கட்சி காட்டுமிராண்டி ஆட்சி நடத்தி மக்களைச் சுட்டுக்கொன்றது.

உருதுத் திணிப்பை எதிர்த்து 1950களில் கிழக்குப் பாக்கித்தானில் மாணவர் போராட்டம் கிளர்ந் தெழுந்தது. மேற்குப் பாக்கித்தான் ஆட்சியாளர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி டாக்கா பல்கலைக் கழக மாணவர்கள் நான்கு பேரைக் கொன்றார்கள்.

கிழக்கு, மேற்குப் பாக்கித்தான்கள் முசுலிம் தாயகங்கள்தான்! மத அடிப்படையில்தான் இந்தியாவிலிருந்து 1947-இல் பிரிந்தார்கள். ஆனால் தங்களின் வங்க மொழியையும் வங்காளித் தேசிய இனத்தையும் மேற்குப் பாக்கித்தானியர் அடிமைப் படுத்தினார்கள் என்பதை உணர்ந்து கொண்ட வங்காளிகள் இன உரிமைப் போராட்டதைத் தொடர்ந்தனர். 1971-இல் விடுதலை பெற்று வங்களாதேசம் அமைத்தனர். வங்காளி மொழியை ஆட்சி மொழி ஆக்கினர். ஐ.நா. மன்றத்தில் அமர்ந்தனர். தங்கள் தாய் மொழி காக்க, உயிரீந்த 4 மாணவர்களைச் சுட்டிக் காட்டி உலகத் தாய் மொழி நாளாகத் தங்களது ஈக நாளான பிப்ரவரி 21-ஐ ஐ.நா. மன்றம் ஏற்கச் செய்தனர்.

தமிழர்களின் இந்தி எதிர்ப்பு 1930-களில் பெரும் போராட்டமாக வளர்ந்து நடராசன், தாளமுத்து இருவர் உயிரீகம் செய்தனர். 1965-இல் 300 பேர்க்கும் மேல் சுட்டுக் கொல்லப்பட்டனர். நம்முடைய மொழிப் போர் ஈக நாள் அல்லவா உலகத் தாய்மொழி நாளாக ஆகியிருக்க வேண்டும்.

நம் தமிழர்களின் பலவீனங்களை நாம் உள்ளதை உள்ளபடி அறிந்து கொள்ள வேண்டும்.

இந்திக்காரர்களுக்குத் தமிழர்களைக் கொத்தடிமைகளாக மாற்றிக் கொண்டிருக்கும் காங்கிரசைத் தமிழர்கள் இன்றும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். காங்கிரசின் அடாவடித் தம்பியான பா.ச.க.வை தமிழர்கள் ஏற்றுக் கொண்டு விட்டார்கள்.

ஆந்திரத் தெலுங்கர், கர்நாடகக் கன்னடர், கேரள மலையாளிகள் முதலியோரைத் தமிழர்களுடன் இணைத்துக் கொண்டு தனிநாடு கேட்ட திராவிடத் திரிபுவாதக் கட்சிகளான தி.க., தி.மு.க. முதலியவற்றைப் பெருங் கட்சிகளாக வளர்த்தார்கள் தமிழர்கள்.

தமிழ் இன அடிப்படையில் கட்சிகள் தொடங்கிய தமிழர்கள், விடா முயற்சியும், உழைப்பும் இன்றி, உறுதியான இலட்சியமும் இன்றி, தங்கள் கட்சியை மக்கள் திரள் அமைப்பாக மாற்றும் தனித்திறமை இன்றி, கடைசியில் திராவிடத் திரிபுவாத மாயையில் கலந்தார்கள். கங்காணிப் பதவிகளைப் பெற்றார்கள்.
திராவிட வாதிகள், “அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு” என்றார்கள். பின்னர், இந்திய தேசப் பாதுகாப்புக்காகத் “திராவிட நாடு” விடுதலைக் கொள்கையை விட்டு விட்டோம் என்றார்கள்.

“வடவர் நம்மவரும் இல்லை. நல்லவரும் இல்லை” என்றார்கள். ஆரிய பிராமண – ஆரிய வைசிய இந்திய ஏகாதிபத்தியக் கட்சிகளான காங்கிரசு, பா.ச.க.வுடன் நிரந்தரமாகக் கூட்டணி சேர்ந்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் பரூக் அப்துல்லாக்களை, மெஹ்பூபாக்களைத் திராவிடக் கட்சிகள் தொடர்ந்து உற்பத்தி செய்து வருகின்றன.

இந்திய ஏகாதிபத்தியம் அனுமதிக்கும் தனிநபர் கங்காணிப் பதவிகளைக் காமுற்று, தமிழர்களின் தாய்மொழியை, தமிழ் இனத்தின் உரிமைப் போராட்டத்தைக் காவு கொடுத்து வருகிறார்கள்!

“இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்” என்பார்கள்; இந்தித் திணிப்பாளர்கள் தரும் குற்றேவல் பதவிகளுக்காக, சிற்றதிகார வெறிக்காக, இந்தித் திணிப்பாளர்களுடன் நிரந்தரக் கூட்டணி வைத்துக் கொண்டார்கள்.

தமிழ்நாட்டை விட்டு, இந்தியை நிரந்தரமாக நீக்கு என்பதற்கு மாறாக, நேருவின் உறுதி மொழியை செயல்படுத்து என்று பிச்சை கேட்கிறார்கள். நேருவின் உறுதி மொழி என்பது மெல்ல மெல்ல இந்தியைத் திணிப்பது.

தமிழ்நாட்டில் இப்போது பல்லாயிரக் கணக்கான தனியார் பள்ளிகளில், சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் இந்தி மொழி கற்பிக்கப்படுகிறது. அவ்வாறான பள்ளிகளில் மாணவர்கள் தமிழில் பேசினால் தண்டத் தொகை வசூலித்தல் உள்ளிட்ட தண்டனைகள் இன்று உள்ளன. திராவிடத் தலைவர்கள், திராவிட வாதிகள் பலர் இந்தி கற்பிக்கும் பள்ளிகள் நடத்துகிறார்கள்.

இந்திய ஏகாதிபத்தியம் அனுமதிக்கும் சிற்றதிகாரத்தை – கங்காணி முதலமைச்சர் பதவியை அடையும் ஆசைக்குத் தமிழ் இன உணர்வாளர்கள் பலியாகக் கூடாது. அவ்வாறான தனிநபர் பலவீனம் தமிழ் இனத்தை மீள முடியாத அடிமைப் புதை சேற்றில் தள்ளிவிடும்.

தமிழனே-தமிழச்சியே, உன் தாய்மொழி காக்கப் போராடி 1939-இல் சிறையில் மாண்ட தமிழர்கள் – 1964 தொடங்கி தீக்குளித்தும் நஞ்சுண்டும் மாய்ந்த தமிழர்கள், 1965-இல் இந்திய ஏகாதிபத்தியத்தின் தமிழ் நாட்டுக் கையாட்களால் சுட்டுக் கொல்லப்பட்ட 300க்கும் மேற்பட்ட வீரத் தமிழர்கள், 1938லிருந்து சிறை சென்ற ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் எல்லோரையும் எண்ணிப்பார்!

உன் நெஞ்சில் கனல் எரிகிறதா? அந்தக் கனலில் உறுதி எடு! உன் பாட்டன் திருவள்ளுவப் பேராசான் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் உனக்காகவும் உன் பிறங்கடையர்க்காகவும் (வாரிசுகளுக்காகவும்) எழுதி வைத்துள்ள திருக்குறளை எண்ணி உறுதி எடு! “முயலை வீழ்த்தி விட்டேன் என்று வெற்று வீரம் பேசாதே! யானையை வீழ்த்த அம்பு விட்டேன் அது இப்போது தப்பிவிட்டது; அடுத்து அதை வீழ்த்துவேன் என்று உறுதி எடு” என்றான் உன் பாட்டன்!

இந்திய ஏகாதிபத்தியத்தின் விலங்கறுப்பேன்; இந்தியை நிரந்தரமாக விரட்டுவேன்; இறையாண்மையுள்ள தமிழ்த்தேசம் படைப்பேன்! அப்போது அரியணையில் அன்னைத் தமிழ் வீற்றிருப்பாள்; ஆட்சி செய்வாள்!

ஒரு காலத்தில் உலகாண்ட தமிழர், இறையாண்மையுடன் தமிழ்நாட்டை ஆள்வர்! இந்திய ஏகாதிபத்தியம் போடும் கங்காணிப் பதவிகள் என்ற கானல் நீர், இனத்தின் தாகம் தீர்க்காது என்ற உண்மையை உரத்துப் பேசு!

ஆதிக்க இந்தி எதிர்ப்புப் போரில் நம் முன்னோர் முன் மொழிந்த “தமிழ்நாடு தமிழருக்கே” முழக்கத்தை உரத்து முழங்கு! அதற்குப் புத்துயிர் கொடு!

====================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
====================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
==================================== 

Labels: , , ,

"பாரதியாரைப் போல் அண்ணாமலை பார்ப்பனியத்தை எதிர்ப்பாரா..?"----தமிழ்த்தேசியப் பேரிக்கத் தலைவர் ஐயா பெ.மணியரசன் சிறப்புக் கட்டுரை!

Friday, January 21, 2022


 =========================================
பாரதியாரைப் போல் அண்ணாமலை பார்ப்பனியத்தை எதிர்ப்பாரா?
=========================================
தமிழ்த்தேசியப் பேரிக்கத் தலைவர் ஐயா பெ.மணியரசன் சிறப்புக் கட்டுரை!
=========================================
குடியரசு நாளான 26.1.2022 அன்று புது தில்லியில் நடைபெறவுள்ள வரலாற்றுப் படங்கள் கொண்ட ஊர்தி அணி வகுப்பில் தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் ஊர்திகளுக்கு அனுமதி மறுத்துள்ளது இந்திய அரசின் தெரிவுக் குழு. இது குறித்துத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைமை அமைச்சர் நரேந்திர மோடிக்கு மடல் எழுதி, தமிழ்நாட்டு ஊர்திகளை சேர்த்துக் கொள்ள வேண்டுகோள் வைத்தார். ஆனால் அதற்கு மறுப்புத் தெரிவித்துவிட்டார் இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்!

அனுமதி மறுக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் ஊர்தியில் வரையப்பட்டிருந்த படங்கள் வீரமங்கை வேலுநாச்சியார், விடுதலைப்போராட்ட வீரர் – வெள்ளையருக்கு எதிராகக் கப்பலோட்டிய தமிழர், சிறையிலே செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார், இந்திய விடுதலைப் போராட்டப் பெரும் பாவலர் பாரதியார் ஆகியோரைப் பற்றிய சித்தரிப்புகளே!

ஊர்தி மறுப்புச் சிக்கலில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும், தி.மு.க.வையும் சாடி அறிக்கை வெளியிட்டுள்ள அண்ணாமலை, மேற்படி மூன்று படங்களையும் கொண்ட தமிழ்நாட்டு ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு வருத்தம் தெரிவிக்கவில்லை. அவர் அறிக்கையில் கூறுகிறார்:

“மகாகவி சுப்பிரமணிய பாரதி தலை சிறந்த தேசியவாதி; தீவிரமான ஆன்மிகப் பற்று மிக்கவர். அவர் கண்ட கனவு அகண்ட பாரதம். அதுவே பா.ச.க.வின் தாரக மந்திரம். இந்த ஒவ்வாமையால்தான் நீங்கள் (தி.மு.க.வினர்) பாரதியை விட பாரதிதாசனை அதிகம் கொண்டாடினீர்கள். மகாகவி சுப்பிரமணிய பாரதியார் தி.மு.க.வின் கொள்கைகளுக்கு எதிரானவர். இப்போது தி.மு.க. அரசு நடைமுறைப்படுத்தும் இனவாதம், மதவாதம், தேசிய எதிர்ப்பு, மொழிப்பிரிவினை, ஊழல் போன்ற கொள்கைகளை எல்லாம் அவர் எதிர்த்து நின்றார்”.

இளம் மாணவர்கள் அண்ணாமலை அறிக்கையைப் படித்தால் பாரதியார் வாழ்ந்த காலத்திலேயே தி.மு.க. செயல்பட்ட கட்சி என்பது போன்ற பொய்த் தோற்றம் ஏற்படும். பொய்த் தோற்றங்களைக் கற்பித்து ஆரியத்துவா ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்வது, ஆரியவாதிகளின் பன்னெடுங்கால உத்தி. ஆரியப்படையின் இக்காலக் காலாட்படையினரான அண்ணாமலை போன்றோர் ஆர்.எஸ்.எஸ். தங்களுக்குக் கற்பித்ததைத் தமிழர்களுக்குக் கற்பிக்க முயல்கிறார்கள்.

=========================
பாவேந்தரைத் தாக்குவது ஏன்?
========================

இச்சிக்கலில் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களை கால் நீட்டி வம்புக்கு இழுக்கிறார் அண்ணாமலை.

பாவேந்தர் மீது ஆரியத்துவா வாதிகளுக்கு ஆத்திரம் வருவது ஏன்? ஆரியத்தின்-பிராமணியத்தின் வர்ணசாதி உயர்வு தாழ்வுக் கதையாடல்களையும், பிராமணர்கள் தமிழர்களை சூத்திரர்கள் என்றும் பஞ்சமர் என்றும் இழிவு படுத்தியதையும், தமிழை நீசபாஷை என்று தூற்றியதையும், சமற்கிருத ஆதிக்கத்தைத் திணித்த்தையும், தமிழன்னையை மறுத்துப் பாரதமாதா பசனையைப் பரப்பியதையும் கடுமையாக எதிர்த்துக் கவிதைகள் படைத்தார் பாவேந்தர்!

அதே வேளை பாரதியாரைத் தம் ஆசானாக மதித்தார் பாவேந்தர்.
பைந்தமிழ்த் தேர்ப்பாகன் அவனொரு
செந்தமிழ்த் தேனீ, சிந்துக்குத் தந்தை…
நீடுதுயில் நீக்கப்பாடி வந்த நிலா
காடு கமழும் கற்பூரச் சொற்கோ…
படரும் சாதிப் படைக்கு மருந்து
மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன்

என்றெல்லாம் இறுதிவரைப் பாரதியாரைப் புகழ்ந்தார் பாவேந்தர். பிராமணர்களின் வர்ண-சாதி ஆதிக்கத்தை பாவேந்தருக்கு முன்னமே எதிர்த்தவர் பாரதியார்! இதோ அவரின் பாடல் வரிகள்!

“சுதந்திரப் பள்ளு” என்ற தலைப்பில் “பள்ளர் களியாட்டம்” என்ற உள் தலைப்பில் பராதியார் பாடினார்:

பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே – வெள்ளை
பரங்கியைத் துரை என்ற காலமும் போச்சே…

“மறவன்பாட்டு” என்ற தலைப்பில் பின்வருமாறு பாடினார்:

இன்னாளிலே பொய்மைப் பார்ப்பார் – இவர்
ஏது செய்துங் காசு பெறப் பார்ப்பார்…
பேராசைக் காரனடா பார்ப்பான் – ஆனால்
பெரிய துரை எனில் வேர்ப்பான்
பிள்ளைக்குப் பூணூலாம் என்பான் – நம்மைப்
பிச்சுப் பணங்கொடெனத் தின்பான்
நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு
நாளெல்லாம் மற்றிதிலே உழைப்பு
பாயும் கடிநாய்ப் போலீசுக்காரப்
பார்ப்பானுக்கு உண்டிதிலே பீசு!

என்றெல்லாம் பிராமணர்களின் கொடுமைகளைத் தோலுரித்தார் பாரதியார்.

===========================================
பாரதியாரைப் போல் பார்ப்பனியத்தை எதிர்ப்பார்களா?
==========================================

பாரதியாரின் இக்கவிதைகளை மேடையிலே மேற்கோள் காட்டிப் பேசி, பாரதியார்க்குப் புகழ் சேர்ப்பாரா அண்ணாமலை? அப்படிப்பட்ட நேர்மைப் பயிற்சியை அவருக்கு ஆர்.எஸ்.எஸ். தந்துள்ளதா?

பாரதியார் பிராமண வகுப்பிலே பிறந்தவர். ஆனால் பிராமணியத்தை மறுத்தவர்; எதிர்த்தவர். தமது மார்பிலே புரண்ட பூணூலை அறுத்து எறிந்தவர்! “பறையர்” வகுப்பில் பிறந்த கனகலிங்கம் என்ற இளைஞரைத் தம் வீட்டில் வளர்த்தவர். தமது பூணூலை அறுத்து மறுத்த பாரதியார், பறையர் பூணூல் அணியக் கூடாது என்ற பிராமண ஆதிக்கத்தைத் தகர்க்க, கனகலிங்கத்திற்குப் பூணூல் அணிவித்தார்!

வங்காள மறுமலர்ச்சிக்கு வித்திட்டவரும் பூணூலை விட்டெறிந்த சீர்திருத்தருமான இராசாராம் மோகன் ராயின் மரண காலத்தில் அவர் மார்பில் பூணூல் புரண்டது தவறு என்று சாடினார் பாரதியார்.

“ஸ்ரீபுத்த பெருமான், சங்கராச்சாரியார், கிறிஸ்து ஏசு முதலியவர்களைப் போல அத்தகைய உயர்ந்த நிலைமையில் ராம் மோஹனர் இருக்கவில்லை. ஜாதி, சமயக் கட்டுகளையெல்லாம் அவர் அறுத்து, வெளியேறிய போதிலும் மரண காலத்தில் அவர் மார்பின் மீது பிராமணர்கள் போடுகிற முப்புரி நூல் தவழ்ந்து கொண்டிருந்ததாம். ஐயோ பாவம்! இத்தேச ரக்ஷணையின் பொருட்டு முழு வீரன் ஒருனை அனுப்ப ஈசனுக்குக் கருணை பிறக்க வில்லை.”

-பாரதியார், “சக்கரவர்த்தினி,” 1906, ஆகஸ்ட்டு மாத இதழில் “ராஜாராம் மோஹன ராயர்” என்ற கட்டுரை.

பா.ச.க. தலைவர் அண்ணாமலை, பாரதியாரை ஒரேயடியாகப் புகழ்ந்து தள்ளுகிறார். பிராமணர்களின் பூணூல் பற்றி பாவேந்தர் பாரதிதாசன் பிற்காலத்தில் சாடியதை அவர்க்கு முன்பே பாரதியார் சாடியுள்ளார். பிராமணர்கள் பூணூல் அணிய வேண்டாம் என்று இப்போது வேண்டுகோள் வைக்க அண்ணாமலை அணியமா? அப்படி ஒரு வேண்டுகோள் வைத்தால் அண்ணாமலை அடுத்த நொடியே பா.ச.க.வை விட்டு வெளியேற்றப்படுவார்!

பாரதியாரை ஓகோ என்று புகழ்கின்ற பா.ச.க.வினர், ஆர்.எஸ்.எஸ். வகையினர். அவரின் பார்ப்பனிய எதிர்ப்புக் கருத்துகளை என்றைக்காவது பேசியதுண்டா? இல்லை! மறைக்கின்றனர்.

பிராமணர்கள் உருவாக்கிய வர்ணாசிரமமும் சாதிகளும் இந்தியாவில்தான் இருக்கின்றன மற்ற நாடுகளில் இல்லை என்று ஆங்கிலக் கட்டுரை ஒன்றில் பாரதியார் குறிப்பிடுகிறார்.

“தேசிய உணர்வில்லாமல் அரசியல் விடுதலை சாத்தியமில்லை. சாதிமுறை நடைமுறையிலிருக்கும் ஓரிடத்தில் தேசிய உணர்வு ஏற்பட முடியாது. ஓரு பிராமண இடைத்தரகனை விட ஒரு பறைய வகுப்பைச் சேர்ந்த வள்ளலைத் தாழ்வாக வைக்கும் விநோதமான அமைப்பு, இந்த சாதி அமைப்பு! தேவையான எல்லாத் தகுதிகளையும் உடைய ஒரு சக்கிலியப் பையன், இங்கிலாந்தில் பிரதம அமைச்சராகவதற்கு அந்நாட்டின் எந்தப் பகுதியிலாவது தடை ஏற்படும் என்ற சந்தேகம் அங்கு உண்டோ? ஆனால் சமஸ்கிருத வேதங்களில் எல்லையற்ற ஞானமும், குறை சொல்ல முடியாத குணங்களும், பக்தி உணர்வும் பொருந்திய ஒரு சூத்திரன் (பஞ்சமனைக் கூட விட்டு விடுங்கள்) சிருங்கேரி பீடத்தில் அமர ஆசைப்படலாம் என்று நினைப்பதே இந்தியாவில் ராஜ துரோகம் இல்லையா? கிரேட் பிரிட்டன் எங்கே? இந்தியா எங்கே? அந்தோ பரிதாபம்!”

-பாரதியாரின் கூற்று 1904 டிசம்பர் The Hindu, Ramasamy Parthasarathy “A Hundred years of The Hindu, Kasturi & Sons Ltd. Madras (1978) Page 77, தமிழாக்கம்: பேரா.அ.மார்க்ஸ், நூல்: பாரதி ஒரு சமூகவியல் பார்வை.

பாரதியாரை வரிக்கு வரி பின் பற்றுவது போல் பாசாங்கு செய்து கொள்ளும் பிராமண அறிவாளிகளும் அண்ணாமலை போன்ற பிராமண அடிவருடிகளும் பாரதியாரின் வர்ண-சாதி எதிர்ப்பை, பிராமணிய எதிர்ப்பை வெளிப்படுத்திப் பேசியதுண்டா? இல்லை. அப்பகுதியை தந்திரமாக மறைத்துவிடுவார்கள். புதுச்சேரியில் இருந்து மாமியார் ஊரான கடையத்திற்குப் போன பாரதியாரை அக்ரகாரத்தில் மாமியார் வீட்டில் நுழையவிடாமல் பிராமணர்கள் தடுத்து வைத்தனர். அக்ரகாரத்திற்கு வெளியே ஒரு பிள்ளையார் கோயிலில்தான் தங்கினார். பாரதியார் பாடிய வேதச் சிறப்புகள், பாரதப் பெருமைகள் முதலியவற்றைப் பற்றியே பேசி பாரதியாரின் இன்னொரு பக்கத்தை பிராமணவாதிகள் மறைத்து வருகிறார்கள்.

ஆங்கிலேயர் உருவாக்கிய இந்தியாவில் பாரதி காலத்தில் பாக்கித்தானும் இருந்தது. அதையும் சேர்த்து தான் பாரதம் என்றார் பாரதி! ஆனால் ஆர்.எஸ்.எஸ்.ஸின் இப்போதைய அகண்ட பாரதக் கோரிக்கை ஆப்கானித்தானத்திலிருந்து இந்தோனேசியா வரை விரிந்து கிடக்கிறது! இந்த அகண்ட பாரதத்தைப் பாரதி அன்றே சொன்னார் என்று அண்ணாமலை அளக்கிறார்.

“ஜெய் ஸ்ரீராம், ஜெய் ஸ்ரீஹனுமான், பாரத் மாத்தாகீ ஜே” அணிவகுப்பில் உள்ள “சூத்திர” அண்ணாமலை போன்றவர்கள் பாரதியாரின் தமிழ் மொழி வாழ்த்தை, தமிழ்நாட்டு வாழ்த்தை முதன்மைப்படுத்துவார்களா?
===========================
பாரதியாரின் தமிழ்ப் பற்று
==========================

“யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம், யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல், வள்ளுவர் போல், இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை,” போன்ற வரிகள் பா.ச.க. மேடையில் ஒலிப்பதுண்டா?

வானமளந்த தனைத்தும் அளந்திடும்
வண்மொழி வாழியவே!
ஏழ்கடல் வைப்பினும் தன் மணம் வீசி
இசை கொண்டு வாழியவே!
எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி
என்றென்றும் வாழியவே!“
என்றார் பாரதியார். இக்கொள்கையை பா.ச.க. ஏற்றுக் கொள்ளுமா?
“விதியே, விதியே தமிழச் சாதியை
என்செய நினைத்தாய் எனக்கு உரையாயோ?”

என்று கேட்டார் பாரதியார் “சாதி” என்ற சொல்லைத் தேசிய இனம் என்ற பொருளில் பயன்படுத்தினார். தமிழினம் என்பதைத் தமிழச் சாதி என்றார்.

“செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே – ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே” என்றார் பாரதியார்.

===============================
அண்டிக் கெடுத்து அழிக்கும் உத்தி
==============================

இந்தியா முழுவதும் வாழும் பிராமணர்களுக்கென்று, தனித் தாயகம் இல்லை;’ தனித் தாய்மொழி இல்லை. அவர்களின் “புனித” மொழியான சமற்கிருதம் யாருக்கும் தாய் மொழி இல்லை; அம்மொழிக்கும் சொந்தத் தாயகம் இல்லை.

நேரே நிமிர்ந்து தற்சார்பாய் வளர முடியாத கொடி ஏதாவதொரு மரத்தில் படர்ந்து வளர்வதைப் போன்ற நிலை பிராமணர்களுக்கும் சமற்கிருதத்திற்கும்! ஆனால் இந்த பிராமண, சமற்கிருதக் கொடிகள் வளர்த்த மரத்தையே மூடி மறைத்து, அதன் வளர்ச்சியைத் தடுத்துவிடும் சில நச்சுக் கொடிகள் போன்றவை!

பாரதியாரும், விவேகானந்தரும் பல முற்போக்குக் கருத்துகளை வழங்கினர். ஆனால் அவர்களிடம் ஆரியப் பெருமிதம் – சமற்கிருத வேதப் பெருமைகள் இருந்தன. அவற்றை வைத்துக் கொண்டு அவர்களை முற்றிலும் ஆரியத்துவாவாதிகளாகச் சித்தரிக்கின்றனர் ஆரியப் பிராமண அறிவாளிகள்!

தனக்கு எதிரான எதையும் பிராமணியம் தனதாக்கிக் கொள்ள முயலும். அது முடியாமல் போனால் எதிர்க்கும்!

தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளை ஆக்கிரமித்து அவை சமற்கிருதத்தை அண்டிப் பிழைக்கும் நிலைக்கு மாற்றினர்.

தமிழ் மொழியிடமும் தமிழரிடமும் அவர்களின் சூழ்ச்சி முழுமையான வெற்றியை பெற முடியவில்லை. தமிழை நீச பாக்ஷை என்றார்கள். தமிழரைத் தீண்டத் தகாதவர் என்றார்கள். இவையெல்லாம் பிராமணர்களுக்கும் சமற்கிருதத்திற்கும் எதிரான இயக்கங்களைத் தமிழர்களிடம் உருவாக்கின. அண்ணாமலையின் முன்னோர்களையும் தாய் மொழியையும் தான் ஆரியப் பிராமணர்கள் – அடிமைப்படுத்த முயன்றார்கள். அவர்களால் முழு வெற்றி பெற முடியவில்லை.

ஆரியத்தின் அடிவருடியாய் இருந்து அதனால் கிடைக்கும் – ஆரியத்திற்குக் கீழ்ப்படிதலுள்ள பதவிகளைத் துய்ப்பதற்காகப் பாவேந்தரை இழிவுபடுத்துகிறார் அண்ணாமலை! பாவேந்தரைப் போற்றுவதே குற்றம் என்கிறார்!
தி.மு.க. ஆட்சி வைத்துள்ள மனோன்மணியம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்தில் நமக்கு மாறுபட்ட கருத்துண்டு. ஆனால் அதை எதிர்க்கும் அண்ணாமலை, “பல்லுயிரும் பல உலகும்” என்று தொடங்கி

“கன்னடமும் களி தெலுங்கும் கவின் மலையாளமும்
துளுவும் உன்னுதரத்தே உதித் தெழுந்து
ஒன்று பல ஆயிடினும்”

என்ற சுந்தரனாரின் பாடல் வரிகளை நீக்கியது ஏன் என்று இதே அறிக்கையில் கேட்கிறார். அவர் சுட்டிக் காட்டிய வரிக்குக் கீழே “ஆரியம் போல் உலக வழக்கு அழிந்து ஒழிந்து சிதையா” என்ற வரியையும் தி.மு.க. ஆட்சி சேர்க்காததை ஏன் சுட்டிக் காட்டவில்லை? அறியாமையா? ஆரியத்தில் கற்ற தந்திரமா?

வீரமங்கை வேலுநாச்சியார், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி., பெரும்பாவலர் பாரதியார் ஆகியோரைச் சித்தரிக்கும் தமிழ்நாட்டு ஊர்தியைப் புறக்கணித்தது தவறு என்று, புதுதில்லியிடம் பேசி, மீண்டும் அவற்றைச் சேர்த்திடச் செய்யும் முயற்சியில் பா.ச.க.வின் அண்ணாமலை வகையறாக்கள் ஈடுபடவில்லை. தமிழர் வரலாற்றுக்கு இரண்டகம் செய்து, அடிமைப் பதவியை தக்கவைத்துக் கொள்ள ஆசைப்படுகிறார்கள்.

புதுதில்லியில் வேலுநாச்சியார்க்கும், வ.உ.சிக்கும், பாரதியார்கும் இழைக்கப்பட்ட தன்மானத்தகர்ப்பு ஒவ்வொரு தமிழர் நெஞ்சிலும் புலிக்கு ஏற்பட்ட காயம் போல் பதிந்திருக்க வேண்டும்.

====================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
====================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
====================================

Labels:


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்