<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d6955529389241309188\x26blogName\x3d%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86.%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://thozharmaniyarasan.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com/\x26vt\x3d-8408640130511538487', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

"தில்லி முற்றுகை: மக்கள் போரின் மகத்துவம்!" - ஐயா பெ. மணியரசன் அவர்களின் உரை!

Sunday, November 29, 2020

"தில்லி முற்றுகை:

மக்கள் போரின் மகத்துவம்!" 



தில்லியில் புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக பஞ்சாப் உழவர்கள் நடத்திகொண்டிருக்கும் தொடர் போராட்டம் பற்றி..

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
ஐயா பெ. மணியரசன் அவர்களின் உரை!




கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Labels: , ,

கரூர் பசுபதீசுவரர் கோயில் குடமுழுக்கைத் தமிழ்வழியில் நடத்த வேண்டும்! - ஐயா பெ. மணியரசன் கோரிக்கை!

Saturday, November 28, 2020



கரூர் பசுபதீசுவரர் கோயில்
குடமுழுக்கைத் தமிழ்வழியில்
நடத்த வேண்டும்!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
ஐயா பெ. மணியரசன் கோரிக்கை!

கரூர் பசுபதீசுவரர் கோயில் மற்றும் அவ்வளாகத்தில் உள்ள கருவூரார் கோயில் உள்ளிட்ட திருக்கோயில்களுக்கு 04.12.2020 காலை திருக்குடமுழுக்கு நடைபெற இருப்பதாக திருப்பணிக் குழுவினர் அறிவித்துள்ளார்கள். கொரோனாவால் தள்ளிப்போன இக்குடமுழுக்கை இப்போது நடத்துவதை வரவேற்கிறோம்.
அதே வேளை தென்னாடுடைய சிவனார்க்கும், அம்மைக்கும், செந்தமிழில் திருவிசைப்பா பாடிய கருவூரார்க்கும் கருவறையிலும் கோபுரத்திலும் தமிழ் மந்திரங்கள் ஓதி இக்குடமுழுக்கு நடைபெற வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறையினர்க்கும் தமிழ்நாட்டு ஆட்சியாளர்க்கும் குட முழுக்குத் திருப்பணிக் குழுவார்க்கும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கனிவுடன் வேண்டுகோள் வைக்கிறேன்.
கடந்த 05.02.2020 அன்று தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கைத் தமிழ் மந்திரங்கள் ஓதி நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கும் இந்து சமய அறநிலையத்துறைக்கும் தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு சார்பில் வேண்டுகோள் வைத்தோம். அத்துடன் மதுரை உயர்நீதிமன்றத்தில் இவ்வேண்டுகோளை செயல்படுத்த வலியுறுத்தி வழக்கும் தொடுத்தோம். தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் என் பெயரில் அவ்வழக்கு தொடுக்கப்பட்டது. இதே கோரிக்கைக்காக மற்ற நண்பர்களும் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.
மதுரை உயர்நீதிமன்றத்தில், தமிழ்நாடு அரசு தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு தமிழிலும் சமற்கிருதத்திலும் நடத்தப்படும் என்று உறுதியளித்தது. அதே போல் தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு தமிழிலும் நடந்தது. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் தொடர்பாக நடந்த வழக்கில் 2015 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம், சமற்கிருத மொழியில்தான் கருவறையில் பூசை நடைபெற வேண்டும் என்று எந்த ஆகமும் கூறவில்லை எனத் தீர்ப்புரையில் குறிப்பிட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் அலுவல் மொழியாகத் தமிழ் இருக்கிறது. தமிழில் கருவறை அர்ச்சனை செய்வதற்குரிய தமிழ் மந்திரங்களைத் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை அச்சிட்டு வெளியிட்டுள்ளது. அரசு அர்ச்சகர்களுக்கு தமிழ் வழிப் பூசைக்கான பயிற்சி கொடுத்துப் பட்டயமும் வழங்கியுள்ளது.
எனவே அருள் கூர்ந்து கரூர் பசுபதீசுவரர் – கருவூரார் கோயில் குடமுழுக்கையும் கருவறைப் பூசையையும் தகுதிமிக்கத் தமிழ் ஓதுவாமூர்த்திகளைக் கொண்டு தமிழ் மந்திரங்களைச் சொல்லி தமிழ் வழியில் நடத்த வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைக் கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


 


 

Labels: , ,

"மாவீரர் நாள் 2020" - ஐயா பெ. மணியரசன் அவர்களின் உரை!

Friday, November 27, 2020

"மாவீரர் நாள் 2020" 



தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
ஐயா பெ. மணியரசன் அவர்களின் உரை!




கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Labels: ,

மண்ணின் மக்கள் வேலைத் துண்டறிக்கை கொடுத்த பேரியக்கத் தோழர்களிடம் பா.ச.க. வினர் தகராறு! நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஐயா பெ.மணியரசன் அறிக்கை!

Saturday, November 21, 2020


மண்ணின் மக்கள் வேலைத் துண்டறிக்கை
கொடுத்த பேரியக்கத் தோழர்களிடம் பா.ச.க. வினர் தகராறு! நடவடிக்கை எடுக்க வேண்டும்


தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
பெ.மணியரசன் அறிக்கை!


மற்ற மாநிலங்களைப் போல் தமிழ்நாட்டிலும் மண்ணின் மக்கள் வேலை உரிமைச் சட்டம் இயற்றப்பட வேண்டும். தொழில், வணிகம் ஆகியவற்றில் தமிழர்கள் முன்னுரிமைப் பெற்று முன்னேற வேண்டும் என்ற மக்கள் நல நோக்கத்துடன், “தமிழ்நாட்டுத் தொழில் வணிகம் வேலைகள் தமிழர்களுக்கே”, என்ற முழக்கத்துடன் தமிழ்த்தேசியப் பேரியக்கம் கடந்த 01.11.2020 முதல் வெளியாரைப் புறக்கணிக்கக் கோரும் ஒத்துழையாமைப் பரப்புரை செய்து வருகிறது. தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் இப்பரப்புரை கொரோனா முடக்க விதிகளைக் கடைபிடித்து மூவர், நால்வர்க்கு மேல் சேர்ந்து செல்லாமல் நடந்து வருகிறது.

கோயம்புத்தூர் இராமகிருஷ்ணா பகுதி பொன்னையா ராசபுரத்தில் 20.11.2020 வெள்ளிக்கிழமை இரவு 08.30 மணி அளவில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர் கு. ராஜேஷ்குமார் மற்றும் தோழர் செல்வராசு இருவரும் அங்கு கடைகளில் மேற்படி ஒத்துழையாமை துண்டறிக்கை கொடுத்துள்ளார்கள். அப்போது அங்கு வந்த பாரதிய சனதாக் கட்சியின் கோவை ஆர்.எஸ்.புரம் மண்டலப் பொறுப்பாளர் இரத்தினம் என்பவர் “இந்துக்களுக்கு எதிரான பிரச்சாரம் செய்கிறாய்; நோட்டீஸ் கொடுக்கக் கூடாது என்று மேற்படி இரண்டு தோழர்களையும் தடுத்துள்ளார். அத்துடன் கைப்பேசியில் பேசி சற்றொப்ப 25 பேர் அளவுக்கு பா.ச.க.வை சார்ந்தவர்களை அழைத்து எல்லோருமாகச் சேர்ந்து ராஜேஷ்குமாரையும், செல்வராசையும் மிரட்டியுள்ளனர்.

அத்துடன், கோயம்புத்தூரில் வெரைட்டி ஹால் B – 3 காவல் நிலையத்திற்கும் கைப்பேசியில் தவறான தகவல்கள் சொல்லிக் காவலர்களையும் அந்த இடத்திற்கு வரச் செய்து விட்டார் இரத்தினம்.
உடனே அங்கு வந்த காவல் துறையினர் தோழர்கள் கு. ராஜேஷ்குமாரையும் செல்வராசையும் B – 3 காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விட்டார்கள். இரவு 12 மணி வரை விசாரணை என்ற பெயரில் காவல் நிலையத்தில் அவர்களை வைத்திருந்துவிட்டு, “காவல் நிலைய அனுமதி வாங்காமல், இனிமேல் துண்டறிக்கைகள் கொடுக்க மாட்டேன்” என்று காவல் துறையினர் எழுதிய தாளில் கையெழுத்து வாங்கிக் கொண்டு இருவரையும் விடுவித்துள்ளார்கள். பாரதிய சனதா கட்சியைச் சேர்ந்த இதே இரத்தினம் கடந்த 01.11.2020 அன்று எங்கள் அமைப்புத் தோழர்கள் கோவை காந்திப் பூங்காப் பகுதியில் காலை 11 மணியளவில் இதே துண்டறிக்கையை மக்களிடம் கொடுத்துக் கொண்டிருந்த போது, சற்றொப்ப பத்து பேரை அழைத்துக் கொண்டு வந்து துண்டறிக்கை கொடுப்பதைத் தடுத்து தகராறு செய்துள்ளனர். அப்போது அந்தப்பகுதியில் வந்த காவல்துறையினர் தலையிட்டு சிக்கல் வராமல் தடுத்துள்ளனர்.

பா.ச.க. வைச் சேர்ந்த மேற்படி இரத்தினத்தினமும் மற்றவர்களும் பேரியக்கத் தோழர்கள் துண்டறிக்கைக் கொடுப்பதை, தடுப்பது சட்ட விரோத செயல்; வன்முறைச் செயல்! இந்திய அரசமைப்புச் சட்டம் அமைப்புகளுக்கும் தனி நபருக்கும் வழங்கும் கருத்துரிமையை வன்முறை மூலம் தடுக்கும் செயல் அத்துண்டறிக்கையின் மீது அவர்களுக்கு மாற்றுக் கருத்து இருந்தால், காவல்துறையினரிடம் எழுத்து வடிவில் அவர்கள் புகார் தெரிவித்திருக்கலாம். அந்த சனநாயகப் பாதையை பின்பற்றாமல் கும்பல் சேர்நது வன்முறையாகத் தடுக்கும் மேற்படி இரத்தினம் மற்றும் அவரோடு வந்தவர்கள் மீது காவல்துறை தலைமை உ்டனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேற்படி பா.ச.க., பொறுப்பாளர் இரத்தினம்¬¬ மற்றும் அவரின் ஆட்கள் விருப்பப்படி சட்டத்திற்கு புறம்பாகச் செயல்பட்டு, ராசேசுகுமாரையும், செல்வராசையும் காவல் நிலைத்திற்கு அழைத்துச் சென்று சட்டத்திற்குப் புறம்பாக எழுதிவாங்கிக் கொண்டு வெளியில் விட்டதற்குப் பொறுப்பான மேற்படி B – 3 காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் காவல் துறையினர் மீது தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு காவல் துறைத் தலைமையும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


 

Labels: , , ,

"தமிழர் கடைகளில் பொருட்கள் வாங்குவோம்! எச். இராசாவுக்கு பதிலடி" “தமிழ் கேள்வி” இணைய ஊடகத்துக்கு, - ஐயா பெ. மணியரசன் அவர்களின் நேர்காணல்..!

Friday, November 20, 2020

"தமிழர் கடைகளில் பொருட்கள் வாங்குவோம்!

எச். இராசாவுக்கு பதிலடி" 


“தமிழ் கேள்வி” இணைய ஊடகத்துக்கு,

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
ஐயா பெ. மணியரசன் அவர்களின் நேர்காணல்..!




கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Labels: , ,

"தமிழரசன் புகழை எவராலும் அழிக்க முடியாது!" - ஐயா பெ. மணியரசன் அவர்களின் உரை!

"தமிழரசன் புகழை எவராலும் அழிக்க முடியாது!"


  தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
ஐயா பெ. மணியரசன் அவர்களின்  உரை!



கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Labels: ,

"முதல்வரே கவர்னரிடம் அடித்துப்பேசுங்கள்! எழுவர் விடுதலையை உறுதிபடுத்துங்கள்!" - பதூசு அம்மாள் அவர்களின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வில் - ஐயா பெ. மணியரசன் நினைவேந்தல் உரை!

Thursday, November 19, 2020

"முதல்வரே கவர்னரிடம் அடித்துப்பேசுங்கள்! எழுவர் விடுதலையை உறுதிபடுத்துங்கள்!"


தமிழ்த்தேசியப் போராளி தோழர் தமிழரசன் அவர்களின் தாயார் வீரத்தாய் பதூசு அம்மாள் அவர்களின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வில்  தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் நினைவேந்தல் உரை!



கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Labels: ,

உச்ச நீதிமன்றம் கண்டித்தும் பேரறிவாளன் விடுதலையை மறுத்தால் தமிழின வெறுப்பு - தமிழினத் துரோகம்! ஐயா பெ. மணியரசன்

Monday, November 16, 2020



உச்ச நீதிமன்றம் கண்டித்தும்
பேரறிவாளன் விடுதலையை மறுத்தால்
தமிழின வெறுப்பு - தமிழினத் துரோகம்!

பெ. மணியரசன்
தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

நீட் தேர்வு நீக்கம், மருத்துவ மேற்படிப்பில் நடுவண் அரசுத் தொகுப்பிற்குக் கொடுக்கும் தமிழ்நாட்டு இடங்களில் இடஒதுக்கீடு போன்றவற்றில் உச்ச நீதிமன்றம் தங்கள் கைகளைக் கட்டிப் போட்டது; நாங்கள் என்ன செய்ய முடியும் என்று கூறிக் கொள்ளும் தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள், ஏழு தமிழர் விடுதலைக்கு உச்ச நீதிமன்றம் பச்சைக்கொடி காட்டிப் பல ஆண்டுகள் ஆன பின்னும் செயல்படாமல் இருப்பது ஏன் என்ற கேள்வி, பரவலாகத் தமிழ்நாட்டில் எழுந்துள்ளது.

அன்றையத் தலைமை நீதிபதி சதாசிவம் அவர்கள் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு ஆயம் 18.02.2014 அன்று அளித்த தீர்ப்பில், சிறையாளிகளின் தண்டனைக் குறைப்பு, விடுதலை ஆகியவற்றில் மாநில அரசுக்கு அரசமைப்புச் சட்ட உறுப்பு 161 வழங்கும் அதிகாரம் தங்கு தடையற்றது; நிபந்தனை இல்லாதது என்று கூறியது. அந்த அரசமைப்பு ஆயம் ஏழு தமிழர் விடுதலைக்கு அன்றைய முதலமைச்சர் செயலலிதா போட்ட ஆணையை எதிர்த்து அமைக்கப்பட்டது ஆகும்.

செயலலிதா நேரடியாகப் போட்ட விடுதலை ஆணையை செல்லாது என்று கூறிய நீதிபதி சதாசிவம் ஆயம், அரசமைப்புச் சட்ட உறுப்பு 161-இன் கீழ் மாநில அமைச்சரவை பரிந்துரை நிறைவேற்றி ஆளுநர் கையொப்பம் பெற்று, தனது மாநிலத்தில் உள்ள எந்தக் கைதிக்கும் தண்டனைக் குறைப்பு வழங்கலாம்; விடுதலை செய்யலாம் என்று தனது தீர்ப்பில் கூறியது.

உச்ச நீதிமன்றம் அவ்வாறு கதவு திறந்து விட்டும் அன்றைய முதல்வர் செயலலிதா தனது அமைச்சரவையில் ஏழு தமிழர் விடுதலைக்குப் பரிந்துரை நிறைவேற்றி ஆளுநர்க்கு அனுப்பவில்லை.

அதன்பிறகு, அப்போதைய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எச்.எல். தத்து தலைமையில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு ஆயம் அமைக்கப்பட்டது. அது தண்டனைக் கைதிகள் விடுதலை பற்றி ஆய்வு செய்து 2015 ஆகத்தில் தீர்ப்பு வழங்கியது. இந்த ஆயமும், அரசமைப்புச் சட்டக் கூறு 161-இன் கீழ், மாநில அரசு ஆளுநர் வழியாக எந்தக் கைதியையும் விடுதலை செய்யலாம்; நடுவண் அரசின் புலனாய்வுத்துறை நடத்திய வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களையும் விடுதலை செய்யலாம் என்று தனது தீர்ப்பில் கூறியது. அத்துடன் இதில் அரசமைப்புச் சட்ட உறுப்பு 161 – மாநில அரசுக்கு வழங்கியுள்ள அதிகாரம் தங்கு தடையற்றது (Unfettered) என்றும் கூறியது.

2015 ஆகத்து மாதம் வந்த இந்தத் தீர்ப்பைப் பயன்படுத்தி, ஏழு தமிழர்களை விடுதலை செய்ய அன்றைய முதலமைச்சர் செயலலிதா எதுவும் செய்யவில்லை.

இந்தப் பின்னணியில் தம்பி பேரறிவாளன் தன்னை விடுதலை செய்வதற்குரிய காரணங்களைக் கூறியும், தான் அப்பாவி என்பதற்கு, இராசீவ் கொலை வழக்கை விசாரித்த காவல் கண்காணிப்பாளர் தியாகராசன் பணி ஓய்வுக்குப் பின் – தான் செய்த தவறை வெளிப்படுத்தியதைச் சுட்டிக்காட்டியும், இவ்வழக்கின் மேல் முறையீட்டில் உச்ச நீதிமன்ற அமர்வுக்குத் தலைமை தாங்கி தீர்ப்பு எழுதிய நீதிபதி கே.டி. தாமசு பணி ஓய்வுக்குப் பின், இராசீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள் அனைவரும் குற்றவாளிகள் என்பது – ஐயமற – தெள்ளத் தெளிவாக மெய்ப்பிக்கப்படவில்லை, எனவே அரசு அவர்களுக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யலாம் என்று கூறி வந்ததையும் சுட்டிக்காட்டி – தன்னை விடுதலை செய்யுமாறு தமிழ்நாடு ஆளுநர்க்கு 2015 டிசம்பர் 30 அன்று விண்ணப்பித்தார்.

பேரறிவாளனின் இந்த மனுவைக் கிடப்பில் போட்டுவிட்டார் ஆளுநர். இந்த விண்ணப்பத்தின் மீது தமிழ்நாடு ஆளுநர் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உச்ச நீதிமன்ற ஆயங்களின் தீர்ப்புகளைச் சுட்டிக்காட்டியும் தம்பி பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார்.

பேரறிவாளனின் இந்த முறையீட்டை உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி நவீன் சின்கா, நீதிபதி கே.எம். சோசப் ஆகியோர் அமர்வு விசாரித்து, 06.09.2018 அன்று தீர்ப்பளித்தது. அரசமைப்புச் சட்ட உறுப்பு 161-இன்படி, கைதிகளுக்குத் தண்டனைக் குறைப்பு – விடுதலை ஆகியவற்றை செயல்படுத்த மாநில அரசுக்குத் தங்கு தடையற்ற அதிகாரம் இருக்கிறது என்று அத்தீர்ப்பு கூறியது.

அதன்பிறகு, 09.09.2018 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தனது அமைச்சரவையைக் கூட்டி, மேற்படி இராசீவ் வழக்கில் 26 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் ஏழு தமிழர்களையும் விடுதலை செய்யத் தீர்மானித்து, அப்பரிந்துரையை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களுக்கு அனுப்பி வைத்தது. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, “ஆய்வு செய்வதாகக்” கூறிக் கொண்டு அமைச்சரவையின் பரிந்துரையைத் திட்டமிட்டுக் கிடப்பில் போட்டு விட்டார் ஆளுநர்.

தம்பி பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தை அணுகினார். கடந்த 20.01.2020 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இவ்வளவு காலமாக ஆளுநர் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது சரியல்ல, அவர் என்ன செய்கிறார் என்று கேட்டுச் சொல்லுங்கள் என்று தமிழ்நாடு அரசுக்கு ஆணையிட்டது. கடந்த 03.11.2020 அன்று உச்ச நீதிமன்ற நீதிபதி எல். நாகேசுவரராவ் தலைமையில் நீதிபதிகள் அஜய் ரஸ்த்தோகி, ஏமந்த குப்தா ஆகியோரைக் கொண்ட அமர்வு, ஆளுநர் தாமதம் செய்வதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தது.

பன்னாட்டுச் சதி பற்றி விசாரணை இன்னும் முடியவில்லை; அதனால் இவர்களை விடுதலை செய்ய முடியாது என்று இந்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் கே.எம். நடராசு கூறினார். உடனடியாக நீதிபதி நாகேசுவரராவ், “இவ்வழக்கில் சிறையில் உள்ளவர்கள் தண்டிக்கப்பட்டு சிறையில் இருக்கிறார்கள். பன்னாட்டுச் சதி வழக்கில் இவர்களைச் சேர்க்க முடியாது. இருபது ஆண்டுகளாகப் பன்னாட்டுச் சதியைக் கண்டறிய முடியவில்லையா?” என்று கண்டனக் குரலில் கூறினார்.

ஆளுநர் விடுதலை செய்யக் கையொப்பமிடவில்லை என்றால், உச்ச நீதிமன்றம் அரசமைப்புச் சட்ட உறுப்பு 142 –இன் கீழ் தானே முன்வந்து விடுதலை செய்யும் என்றார் நீதிபதி நாகேசுவரராவ். விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்று எச்சரித்து வழக்கை 23.11.2020-க்குத் தள்ளி வைத்துள்ளார்கள்.

உச்ச நீதிமன்றத்தின் இந்தக் கடும் எச்சரிக்கை மற்றும் கண்டிப்புக்குப் பின்னும் ஆளுநர் அமைதி காப்பதும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அமைதி காப்பதும், அசைய மறுப்பதும் என்ன செய்தியை வெளிப்படுத்துகின்றன?

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கத்தினால் கத்திக் கொள்ளட்டும். நான் மோடி – அமித்சாவின் கட்டளை இல்லாமல் அசையவே மாட்டேன் என்று ஆளுநர் பன்வாரிலால் வெளிப்படையாகச் சொல்லாமல் அனைவர்க்கும் உணர்த்துகிறார்.

தமிழ்நாடு முதலமைச்சரோ, கணக்குக் காட்ட - என் கடமையை முடித்து விட்டேன்; இதற்கு மேல் இதில் தலையிட்டு தில்லி ஆட்சியாளர்களின் எதிர்ப்பைத் தேடிக் கொள்ள நான் விரும்பவில்லை என்று எடப்பாடி சொல்லாமல் சொல்கிறாரா?

மோடி – அமித்சா – பன்வாரிலால் மூவருக்கும் தமிழினத்திற்கு எதிரான வெறுப்புணர்வு இருக்கிறது. பழிவாங்கும் உள்மன உந்துதல் இருக்கிறது. அதனால்தான் அரசமைப்புச் சட்டம் வழங்கும் நீதி, உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மற்றும் வழிகாட்டல் – தமிழர்களுக்குப் பொருந்தாது; இன ஒதுக்கலுக்கு உள்ளாக வேண்டிய இனம் இது என்று அவர்கள் கருதலாம். ஆனால், எடப்பாடி அவர்களோடு ஒத்துப் போவது இனத்துரோகம் அல்லவா!

காந்தியடிகளைச் சுட்டுக் கொன்ற வழக்கில் வாழ்நாள் தண்டனை பெற்ற கோபால் கேட்சேயை (நாதுராம் கோட்சேயின் தம்பியை) 14 ஆண்டுகளில் விடுதலை செய்தது மராட்டிய காங்கிரசு ஆட்சி! கோபால் கோட்சே மராட்டியர்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை உடனடியாக நேரில் சந்தித்து, முதல் கட்டமாக தம்பி பேரறிவாளனை விடுதலை செய்யக் கையெழுத்துப் பெற வேண்டும். ஆளுநர் பன்வாரிலால் கையெழுத்துப் போட மறுத்தால் அவருக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் உடனடியாக தமிழ்நாடு அரசு மனுப் போட்டு – நடவடிக்கை கோர வேண்டும்.

முதல் கட்டமாகப் பேரறிவாளனை விடுதலை செய்ய இதுபோன்ற அல்லது அதற்குரிய வேறு வழியைக் கையாண்டு தமிழ்நாடு முதல்வர் தீர்வு காண வேண்டும். அதன்பிறகு அதே வழியில் எஞ்சிய ஆறு பேரையும் விடுதலை செய்ய வேண்டும்.

வெளிப்படையாக – பேரறிவாளன் விடுதலைக்குக் கருத்துத் தெரிவித்தும், ஆளுநரின் இரண்டாண்டு தாமதத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பேரறிவாளனை விடுதலை செய்யவில்லை என்றால், கட்சி கடந்து தமிழின உணர்வாளர்கள் – நடுநிலையாளர்கள் – மனித உரிமை ஆர்வலர்கள் என்ன கணிப்பார்கள் என்பதையும் அவர் எண்ணிப் பார்க்க வேண்டும்!


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


 


 

Labels: , ,

ஓங்கி வரும் உள் மோதல்கள்-2 இந்துத்துவா பேசிய சிவசேனையின் இன அரசியல்! - ஐயா பெ. மணியரசன்,

Saturday, November 14, 2020



ஓங்கி வரும் உள் மோதல்கள்-2

இந்துத்துவா பேசிய சிவசேனையின்
இன அரசியல்!

ஐயா பெ. மணியரசன்,
தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்

“ஒற்றை அதிகார பாசிசத்தை -  இந்தியாவின் உள் மோதல்கள் உடைக்கும்” என்ற தலைப்பில் 11.11.2020 அன்று ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தோம்.”

இந்தியத் தேசியம் பேசுவோரிடையே உள்ள மோதல்களையும், இந்துத்துவா பேசுவோரிடையே உள்ள மோதல்களையும் சுட்டிக் காட்டியிருந்தோம். இந்த உள் மோதல்களில் பெரும்பான்மையாய் உள்ளவை இன அடிப்படையிலான மோதல்களே!

இந்துத்துவா அரசியல் பேசுவதில் பாசகவும் சிவசேனையும் பங்காளிக் கட்சிகள். ஆனால் பாசக -  ஆரியத்துவா அடிப்படையிலும், சிவசேனை மராத்திய இன அடிப்படையிலும் செயல்படும் கட்சிகள். இப்போது, மராட்டிய முதலமைச்சர் பதவியில் சிக்கல் ஏற்பட்டு – பாசக – சிவசேனைக் கூட்டணி உடைந்து விட்டது. தேசியவாதக் காங்கிரசு – காங்கிரசுக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து – அக்கூட்டணி அமைச்சரவையின் முதலமைச்சராக சிவசேனைக் கட்சித் தலைவர் உத்தவ் தாக்ரே உள்ளார்.

பாசகவையும் தலைமை அமைச்சர் மோடியையும் கடுமையாக விமர்சித்து வருகிறது சிவசேனை.

மும்பை அலிபாக்கைச் சேர்ந்த கட்டட வடிவமைப்பாளர் அன்வய் நாயக் தற்கொலைக்குத் தூண்டுதலாக இருந்தவர் ரிபப்ளிக் தொலைக்காட்சி முதலாளி அருணாப் கோசுவாமி என்ற குற்றச்சாட்டில் வழக்குப் பதிவாகியுள்ளது. அவ்வழக்கில் அண்மையில் அருணாப் தளைப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரைச் சிறையில் அடைத்தது உத்தவ் தாக்ரே அரசு.

அந்த ஆத்திரத்தில், உத்தவ் தாக்ரே மனைவி, மேற்படி அன்வய் நாயக்கிடம் நிலம் வாங்கிய போது குறைந்த விலை கொடுத்து  ஏமாற்றிவிட்டார். அதனால் அன்வய் தற்கொலை செய்து கொண்டார் என்று பாசகவின் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் கிரீட் சோமையா குற்றம் சாட்டியுள்ளார்.

இக்குற்றச் சாட்டை மறுத்த சிவசேனையின் மாநிலங்களவை உறுப்பினரும், அக்கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளருமான சஞ்சய் ரெளத் பாசக தலைமையை இன அடிப்படையில் கண்டனம் செய்தார்.

“பாசக ஒரு சேட்ஜி கட்சி, கிரீட் சோமையா ஒரு வணிகர். கட்டட வடிவமைப்பாளரின் மனைவி கணவனை இழந்து அழுது கொண்டிருக்கிறார். அவருக்கும் அவர்கள் மகளுக்கும் நீதி கிடைக்க பாசக எதுவும் பேசவில்லை. அந்த வழக்கைத் திசை திருப்பவே சர்ச்சைகளைக் கிளப்பி வருகிறது” என்றார் ரெளத்.(தினமணி, 14.11.2020)

ஒட்டு  மொத்த பாசகவை சேட்ஜி கட்சி என்கிறார் சிவசேனை செய்தித் தொடர்பாளர். சேட்ஜி என்பது குசராத்தி வணிகர்களைக் குறிக்கும். மோடியும் அமித்சாவும் குசராத்தைச் சேர்ந்தவர்கள். மராத்தி X குசராத்தி இன முரண்பாட்டைச் சுட்டிக் காட்டுகிறார் சிவசேனைத் கட்சியின் தலைமைச் செய்தித் தொடர்பாளர்.
கடந்த 2019 – இல், மராட்டிய மாநிலத்தின் தேசியவாதக் காங்கிரசுக் கட்சி நிறுவகத் தலைவர் சரத்பவார் மீது இந்திய அரசின் அமலாக்கத்துறை – ஊழல் விசாரணை நடத்தப் போவதாக  அறிவித்தது. அப்போது சரத்பவார் “வீர சிவாஜி மரபிலே வந்த மராட்டியன் ஒரு போதும் புது தில்லிக்குத் தலைவணங்க மாட்டான்” என்று செய்தியாளர்களிடம் கூறினார். இச்செய்தி ஏடுகளில் வந்தது.

இப்போது சிவசேனைத் தலைவர்களில் ஒருவர், அதே மராட்டியப் பெருமிதத்தோடு, குசராத்தி இனத்தைச் சேர்ந்த பாசக தலைவர்களைக் கண்டிக்கிறார்!

இந்தியத் தேசியத்தின் உள் மோதல்கள் ஒவ்வொரு வடிவில் வெளிவந்து கொண்டுள்ளன.
------------------------
=====================================================
“உச்ச நீதி மன்றத்தில் பாசக கொடியைப் பறக்க விடலாம்” – சிரிப்பு நடிகர் விமர்சனம்
==========================================
அருணாப் கோசுவாமி, தளைப்பட்ட பின் நேரடியாக மும்பை உயர்நீதிமன்றத்தில் பிணை மனு போட்டார்கள். கீழ்நீதி மன்றத்தை அணுகு மாறு கூறி, அது பிணை மனுவைத் தள்ளுபடி செய்தது.

மாவட்ட நீதி மன்றத்தில் பிணை மனு போட்டார்கள். ஆனால் அது விசாரிக்கும் முன்பாகவே உச்சநீதி மன்றத்திலும் பிணை மனு போட்டார்கள். உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், இந்திரா முகர்ஜி ஆகியோர் அமர்வு உடனடியாகப் பிணை கொடுத்தது.

உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பைப் பலரும் விமர்சிக்கிறார்கள். ஓராண்டுக்கும் மேலாக காசுமீர் உரிமைப் பறிப்பு வழக்கை – அதில் சிறையில் உள்ளோர் பிணை வழக்கை – பீமா கொரேகான் – வழக்கில் – மோடியைக் கொலை செய்யச் சதித் திட்டம் தீட்டினார்கள் என்று பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள், மூத்த வழக்கறிஞர்கள், மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் போன்ற முதியவர்களின் பிணை மனுவைப் பல மாதங்களாக விசாரிக்காமல் கிடப்பில் போட்டு வைக்கும் உச்சநீதி மன்றம் பாசகவின் பரப்புரை வம்பர் அருணாப் கோசுவாமி பிணை மனுவை, கீழ் நீதிமன்றத்தில் அப்பிணை மனு விசாரணையில் இருக்கும் நிலையில் மரபுகளைக் கைவிட்டு, உடனடியாகப் பிணை வழங்கியதை பலரும் விமர்சிக்கின்றனர்.

இந்தித் திரைப்பட சிரிப்பு நடிகர் குணால் கம்ரா, காரசாரமாக விமர்சித்துவிட்டார். உச்சநீதிமன்றக் கட்டடத்தின் உச்சியில் பாசக கொடியை ஏற்றிவையுங்கள் என்று சுட்டுரையில் கூறிவிட்டார். அதே போல் நீதிபதி சந்திசூட்  பற்றியும் விமர்சித்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் நடிகர் குணால் கம்ரா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவு செய்ய உள்ளார்கள். இந்திய அரசின் சட்டத்தலைவர் கே.கே.வேணுகோபால்  அவர்களும் அவமதிப்பு வழக்குப் பதிவு செய்ய தமது ஒப்புதலைத் தெரிவித்துள்ளார்.

நடிகர் குணால் கம்ரா – இந்தியத் தேசியத்தை ஏற்றுக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


 


 

Labels: , ,

பா.ச.க.வின் திட்டம் : அ.தி.மு.க.வை ஓரங்கட்டுவது தி.மு.க.வை எதிர்க்கட்சியாக்குவது! - ஐயா பெ. மணியரசன்,

Wednesday, November 11, 2020


பா.ச.க.வின் திட்டம் :
அ.தி.மு.க.வை ஓரங்கட்டுவது
தி.மு.க.வை எதிர்க்கட்சியாக்குவது!

ஐயா பெ. மணியரசன்,
தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்

தமிழ்நாட்டில், தி.மு.க. எதிர்ப்பை முதன்மைப்படுத்தி, அன்றாடம் தி.மு.க.வுக்கு எதிராகக் கடுமையாகப் பேசி வருகிறது பா.ச.க.
மேம்போக்காகப் பார்ப்பவர்களுக்கு, ஆரியத்துவா பா.ச.க.வுக்குத் திராவிடத் தி.மு.க. மீது அவ்வளவு வெறுப்பு என்று தோன்றும். ஆனால், பா.ச.க.வின் உண்மைத் திட்டம் தி.மு.க. ஒழிப்பல்ல; அ.தி.மு.க.வை ஓரங்கட்டுவதுதான்!
தமிழ்நாட்டு அரசியல், அ.இ.அ.தி.மு.க. எதிர் தி.மு.க. என்று இருமுனை முகாம்களாக இருப்பதை மாற்ற வேண்டும் என்பதே பா.ச.க.வின் உடனடித் திட்டம். இதைப் பா.ச.க. எதிர் தி.மு.க. என்று மாற்ற வேண்டும் என்பது அதன் போர் உத்தி!
எதிர்க்கட்சி என்ற நிலையில் தி.மு.க. இருக்க வேண்டும்; ஆளுங்கட்சியாகவோ அல்லது முதன்மை எதிர்க்கட்சியாகவோ அ.இ.அ.தி.மு.க. இருக்கக் கூடாது என்பதே பா.ச.க.வின் வேலைத் திட்டம். அ.இ.அ.தி.மு.க.வுக்கு வலிமையான தலைமை இல்லை என்பதால் அதை ஓரங்கட்ட முடியும் என்று பா.ச.க. கருதுகிறது.
இதற்காகத்தான் 24 மணி நேரமும் தி.மு.க. எதிர்ப்புப் பரப்புரை செய்கிறது பா.ச.க. தமிழ்நாட்டு மக்கள் 24 மணி நேரமும் முதலிடத்தில் வைத்துப் பா.ச.க.வையும் தி.மு.க.வையும் பேச வேண்டும். பா.ச.க. கதாநாயகன், தி.மு.க. வில்லன் என்பது போல் மக்களிடையே விவாதங்களைக் கிளப்ப வேண்டும். ஆரியத்துவா கையாளும் உளவியல் போர் முறை இது!
ஆளும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி என்று சொல்லிக் கொண்டே, எடப்பாடி தலைமையை இடது காலால் எத்தி விடுகிறார் பா.ச.க. தலைவர் எல். முருகன்!
“பா.ச.க. கைகாட்டும் நபர்தான் அடுத்த தமிழ்நாட்டு முதலமைச்சர்; பா.ச.க. பங்கேற்கும் கூட்டணியே ஆட்சி அமைக்கும்!”, “டிசம்பர் வாக்கில் தமிழ்நாட்டு அரசியலில் பெரும் மாற்றம் ஏற்படும்!”.
இவையெல்லாம் பா.ச.க.வின் தமிழ்நாட்டுத் தலைவர் எல். முருகன் பேசியவை!
எடப்பாடி – ஓ.பி.எஸ். தலைமை பா.ச.க.வின் அடாவடித்தனங்களுககு உரியவாறு எதிர்வினை ஆற்றாமல் பம்மிப் பதுங்குகிறது. ஏன்? பதவியைப் பயன்படுத்திப் பதுக்கி வைத்திருப்பது அவ்வளவு! மோடி ஏவிவிட்டால் தில்லியின் பல்வேறு துறையினர் அ.இ.அ.தி.மு.க. தலைவர்களின் - உறவினர்களின் – நண்பர்களின் வீடுகளும் அலுவலகங்களும் முற்றுகை இடப்படும்! ஆட்சிக்கும் ஆபத்து ஏற்படும்.
தி.மு.க. எதிர்க்கட்சியாக இருப்பதால் ஆரியத்துவாவுக்கோ, பா.ச.க.வுக்கோ ஆபத்து ஒன்றுமில்லை. பழைய நட்புக் கழகம்; தி.மு.க.வின் - அதன் திராவிட ஊதுகுழல்களின் – திராவிடப் பரப்புரைகள், தமிழ்த்தேசிய வளர்ச்சியை – தமிழர் இன உணர்ச்சியைத் தடுக்கப் பயன்படும்; கூப்பிட்டால் கூட்டணிக்கு வந்துவிடும்; இந்தியத்தேசிய ஏகபோகத்தின் கையடக்கப் பதிப்பு தி.மு.க.; இவையெல்லாம் பா.ச.க.வின் கணிப்பு!
எனவே, தி.மு.க.விற்கு எதிர்வகை விளம்பரம் (Negative Propaganda) கொடுப்பதற்காக பா.ச.க.வினர் எந்நேரமும் தி.மு.க. எதிர்ப்புப் பேசுகின்றனர். அ.இ.அ.தி.மு.க.வை எளிதாகக் கலைத்துப் போடலாம் என்றும் கணக்குப் போட்டுள்ளார்கள்.
பா.ச.க. – ஆரியத்துவா பாசிசக் கட்சி! பா.ச.க. பாசிசத்தை எதிர்ப்பதற்குத் தி.மு.க. அணியை வலுப்படுத்த வேண்டும் என்று பலர் பேசுகின்றனர்.
வலிக்காமல் வாக்குச்சாவடி மூலம் பாசிசத்தை வீழ்த்திவிடலாம் என்பவர்களின் மனக் கணக்கு இது! நோகாமல் நொங்கெடுக்க நினைப்பவர்கள் இவர்கள்!
தமிழ்த்தேசியம் பேசுவோரிலும் ஒருசாரார் “வாக்குச்சாவடிப் புரட்சி”யில் பெரு நம்பிக்கை வைத்துள்ளார்கள்.
வாக்குச்சாவடி வேண்டாம் என்பது நமது வாதமல்ல; வாக்குச் சாவடியை முதன்மைப்படுத்தாதீர்கள்; வாக்குச்சாவடி மூலம் தமிழ்த்தேசியம் வெற்றி பெறும் என்று எண்ணாதீர்கள்!
“எந்த அடக்குமுறை வந்தாலும் எதிர்கொண்டு, ஆரியத்துவா பாசிசத்தை முறியடிக்க முன்னேறுவோம்; இலட்சக்கணக்கான தமிழர்களின் நெஞ்சில் தமிழ்த்தேசிய உரமேற்றி எந்த நெருக்கடியையும் சமாளிக்கும் உளவியலை உருவாக்குவோம்” என்பவற்றைத் தமிழ்த்தேசியர்கள் முதற்பெரும் கடமையாக ஏற்க வேண்டும்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


 

Labels: , ,

ஒற்றை அதிகார பாசிசத்தை இந்தியாவின் உள்மோதல்கள் உடைக்கும் - ஐயா பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை!

Tuesday, November 10, 2020



ஒற்றை அதிகார பாசிசத்தை
இந்தியாவின் உள்மோதல்கள் உடைக்கும்

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
ஐயா பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை!

பல தேசங்களைக் கொண்ட இந்தியாவை ஒரே தேசம் என்று கூறுவது; பல மொழிகளைக் கொண்ட இந்தியாவை இந்திமொழி இந்தியாவாக மாற்றுவது; பல மதங்களைக் கொண்ட இந்தியாவை இந்துத்துவா நாடாகத் திரிப்பது; இப்படி எத்தனையோ ஆரியத்துவா மாய்மாலங்கள்!
ஒரே தேசம், ஒரே பண்பாடு, ஒரே இனம், ஒரே மதம் என்று பேசும் பாசகவினரே நடைமுறையில் இம்முழக்கங்களை ஏற்கவில்லை.
பாசக அரசியலின் மண்ணின் மக்கள் சட்டம்
------------------------------------------------------------
இந்தி மாநிலமான அரியானாவில் பாசகவின் மாநில அரசு, மண்ணின் மக்களுக்கே வேலை சட்டமுன் வடிவை (மசோதாவை) சட்டப்பேரவையில் நிறைவேற்றியது. அரியானாவில் தனியார் துறையில் 50 ஆயிரம் ரூபாய் வரை மாதச் சம்பளம் உள்ள வேலைகளில் 75 விழுக்காடு வேலைகளை அரியான மக்களுக்கே வழங்க வேண்டும். அண்டையில் உள்ள இந்தி மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கோ தொலைவில் உள்ள வேற்று மொழி மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கோ 25 விழுக்காட்டிற்குள்தான் தனியார் தொழிற்சாலைகளும் பட்டறைகளும் நிறுவனங்களும் வேலை தரவேண்டும் என்கிறது பாசக அரசின் சட்ட முன்வடிவு.
அரியான பாசக முதலமைச்சர் மனோகர்லால் கட்டார் ஒரே தேசம், ஒரே இந்துத்துவா கொள்கையை நடைமுறையில் ஏற்கவில்லையே ஏன்?
மத்தியப் பிரதேச பாசக முதலமைச்சர் சிவராஜ்சிங் செளகான், மண்ணின் மக்களுக்கே வேலை என்று கடந்த ஆகத்து மாதம் (2020) முழங்கினார். அதற்கான சட்ட ஏற்பாடுகளையும் செய்துள்ளார். ஒரே இந்துத்துவா தேசத்தில் ஏன் இந்த மாநிலத் தன்னலம்?
“ஊருக்குத் தானடி உபதேசம்; அது உனக்கும் எனக்கும் இல்லையடி” என்ற கதையாக அல்லவா இருக்கிறது பாசகவின் பாரதத் தேசியம்!
குசராத்தில் காங்கிரசு ஆட்சி 1995இல் மண்ணின் மக்களுக்கே மாநில அரசு, தனியார் துறை, நடுவண் அரசு மூன்றிலும் வேலை என்று அரசாணை வெளியிட்டது. இன்று இந்தியத் தலைமை அமைச்சராக இருந்து கொண்டு, ஒரே தேசம், ஒரே குடும்ப அட்டை, ஒரே பண்பாடு என்று உரக்க ஓசை எழுப்பும் மோடி குசராத்தின் முதலமைச்சராக இருந்த போது, காங்கிரசு போட்ட 1995-ஆம் ஆண்டின் மண்ணின் மக்களுக்கே வேலை ஆணையைத் தானே செயல்படுத்தினார். இப்போதுள்ள குசராத் பாசக அரசும் அதைத்தானே செயல்படுத்துகிறது.
இந்தியத் தேசியம் பேசும் காங்கிரசார் தங்கள் ஆட்சியில் கர்நாடகம், குசராத் போன்ற மாநிலங்களில் மண்ணின் மக்களுக்கே வேலை என்ற சட்டத்தை ஏன் இயற்றினார்கள்?
இந்துத்துவா பேசும் சிவசேனைக் கட்சி - பாசகவின் பங்காளிக் கட்சி ஆட்சி, மராட்டியத்தின் வேலை மண்ணின் மக்களுக்கே என்கிறதே, அது எப்படி?
அது அப்படித்தான்; இந்தியா என்பது பல தேசங்களைக் கொண்ட ஒரு துணைக் கண்டம்! பல இனங்கள், பல மொழிகள் – அவற்றிற்கான தேசங்கள் இங்கு இருக்கின்றன. ஆரியத்துவா வாதிகள் – மோகன் பகவத் – மோடி அணியினர் ஒரு தேசம் என்று மேலும் மேலும் அமுக்கினால் பாசகவும் புட்டுக்கொள்ளும்; இந்தியாவும் புட்டுக்கொள்ளும்! இதுதான் இந்தியாவின் உள் முரண்பாடு!
உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் உட்பட வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மத்தியப் பிரதேச வேலைகளைக் கைப்பற்றிக் கொள்கிறார்கள். இதைத் தடுக்க அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் செளகான் மண்ணின் மக்கள் வேலை ஒதுக்கீட்டுச் சட்டம் கொண்டுவரப் போவதாக 2020 ஆகத்து மாதம் அறிவித்தார். அத்துடன் இன்னொன்றையும் கூறினார். மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர்கள், இளைஞர்களுக்கு நிரந்தர குடிமக்கள் பட்டியல் ஒன்று பதிவு செய்து வைத்துக் கொண்டு, அப்பட்டியலில் உள்ளவர்கள் மட்டுமே வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று சட்டம் கொண்டுவரப் போவதாகவும் கூறினார்.
இதற்குப் பெயர் இந்தியத் தேசியமா? இதற்குப் பெயர் இந்துத்துவா தேசியமா? இரண்டுமில்லை. மத்தியப்பிரதேசத் தேசியம் என்று வேண்டுமானால், சொல்லலாம்!
ஏற்கெனவே, பஞ்சாப், சம்மு காசுமீர், வடகிழக்கு மாநிலங்கள் ஆகியவற்றில் ஆயுதந் தாங்கிய அமைப்புகள் தனிநாடு கேட்டுக் கொண்டுள்ளன!
மோகன் பகவத்-மோடி அணியினர் நிலைநாட்ட முயலும் இந்துத்துவா பாசிசம் என்கின்ற ஆரியத்துவா பாசிசம் ஒரு வேளை முழுமைப்பட்டாலும் அது எத்தனை ஆண்டுகள் நீடிக்கும்? உள் முரண்பாடுகளால் அந்தப் பாசிசம் விரைவில் உடைந்து விழும்!
உச்சநீதிமன்றம்
-----------------------
இந்திய அதிகார மையத்தின் உச்சங்களில் ஒன்று உச்சநீதிமன்றம். அதில் மிகப் பெரும்பாலோர் ஒரே உயர் வகுப்பைச் சேர்ந்தவர்கள். உச்ச நீதிமன்ற-உயர்நீதிமன்ற நீதிபதிகள் பதவியில் இட ஒதுக்கீடு இல்லை.
கடந்த 12.01.2018 அன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் செலமேஸ்வர், ரஞ்சன் கோகோய், மதன் பி.லோகுர், குரியன் ஜோசப் ஆகிய நால்வரும் நீதிமன்ற வேலை நாளில், உச்சநீதிமன்ற வளாகத்தில், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் நடுநிலையற்ற பக்கச் சார்பான செயல்பாட்டைக் கண்டித்து செய்தியாளர்களுக்குச் செவ்வி கொடுத்தார்கள். தலைமை நீதிபதிக்கு அந்நால்வரும் கொடுத்த விமர்சனக் கடித நகலையும் செய்தியாளர்களுக்குக் கொடுத்தார்கள்.
இப்பொழுது ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் செகன் மோகன் ரெட்டி, உச்ச நீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா, தனது அரசுக்கு எதிராகச் செயல்படுகிறார் என்றும் ஆந்திரப் பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதிகள், தனது அரசுக்கு எதிராகத் தீர்ப்புகள் கொடுக்கத் தூண்டுகிறார் என்றும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பொப்டேவுக்கு புகார் மனு அனுப்பியுள்ளார். அந்த மனு நகலை செய்தியாளர்களுக்கும் கொடுத்துவிட்டார்.
உச்சநீதிமன்றத்தை செகன் மோகன் ரெட்டி அவமதித்துவிட்டார் – அவர்மீது அவமதிப்பு வழக்குப் போட வேண்டும் என்று பாசகவைச் சேர்ந்த உச்சநீதிமன்ற வழக்கறிஞர் அசுவினிகுமார் உபாத்யாய் என்பவர் இந்திய அரசின் சட்டத் தலைவர் (அட்டர்னி ஜெனரல்) கே.கே வேணுகோபாலுக்கு மடல் எழுதினார். ஆனால் கே.கே வேணுகோபால் அவமதிப்பு வழக்குப் போடமுடியாது என்று மறுத்துவிட்டார். உச்சநீதிமன்றத்தை அசுவினிகுமார் நேரடியாக அணுகிக் கொள்ளலாம் என்று கூறிவிட்டார்.
அண்மையில் உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரும், நாடறிந்த மனித உரிமைச் செயல்பாட்டாளருமான பிரசாந்த் பூசன் அவர்கள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பொப்டேவை விமர்சித்து, சுட்டுரை வெளியிட்டார் என்பதற்காக அவர்மீது உச்சநீதி மன்றம் தானே முன்வந்து ஆகத்து மாதம் (2020) அவமதிப்பு வழக்குத் தொடுத்தது.
அவ்வழக்கில் சட்டத்தலைவர் கே.கே.வேணுகோபால் கருத்தைக் கேட்ட போது, இந்த விமர்சனத்திற்காக அவமதிப்பு வழக்கு போடக் கூடாது என்று உறுதியாக மறுத்துவிட்டார்.
நீதிபதி அருண்மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு, பிரசாந்த் பூசன் மன்னிப்புக் கேட்டால் வழக்கை முடித்து வைப்பதாகக் கூறியது. பிரசாந்த் பூசன் மன்னிப்புக் கேட்க மறுத்துவிட்டார். நீதிபதிகள், “பிரசாந்த் பூசன் ஒரு ரூபாய் தண்டத்தொகை கட்ட வேண்டும்” என்று தீர்ப்பளித்தனர். அந்த 1 ரூபாயைக் கட்டினார் பூசன்!
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பொப்டேயை விமர்சித்த வழக்கு இது. இந்திய அரசின் சட்டத்தலைவர் கே.கே.வேணுகோபால், இந்த அவமதிப்பு வழக்கை ஆதரிக்க உறுதியாக மறுத்துவிட்டார்.
இப்போது உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பொப்டேக்கும் மராட்டிய சட்டப் பேரவைத் தலைவர்க்குமான மோதல் ஒன்று உருவாகியுள்ளது.
“ரிபப்ளிக்” என்ற ஆங்கிலத் தொலைக்காட்சியின் முதலாளியாகவும் அதன் தலைமைப் பொறுப்பிலும் இருக்கும் அருணாப் கோசுவாமி ஆரியத்துவா தீவிரவாதி, ஆர்எஸ்எஸ் – பாசகவின் ஊடக டமாரம் அவர். அவர் நெறியாள்கை அரம்பத் தனமாக இருக்கும். அவர் மராட்டிய சட்டப் பேரவையில் நடந்த நிகழ்வொன்றைக் கண்டித்துக் காட்டுக் கூச்சல் போட்டு ரிபப்ளிக் தொலைக்காட்சியில் விளாசியுள்ளார். மராட்டிய சட்டப்பேரவைத் தலைவர் அதன் மீது நடவடிக்கை எடுத்துள்ளார். அந்த நடவடிக்கைக்குத் தடை கோரி உச்சநீதிமன்றத்தில் மனுச்செய்துள்ளார் அருணாப்.
சட்டப்பேரவை நடவடிக்கைக்கு எதிராக வழக்குப்போட்டது “உரிமை மீறல்” என்று கூறி சட்டப் பேரவைத் தலைவர், அருணாப்பின் செயலை உரிமைமீறல் குழுவின் ஆய்வுக்கு அனுப்பிவிட்டார். இச்செய்தியை அருணாப் உச்சநீதிமன்றத்திற்கு மனுவாகத் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பொப்டே நீதிமன்றத்தில் கொதித்துக் கொந்தளித்துள்ளார்.
மராட்டிய சட்டப் பேரவைச் செயலருக்கு எதிராக பொப்டே கொட்டிய சொற்கள் இதோ:
“யார் இந்த அதிகாரி? அவருக்கு (சட்டப்பேரவை செயலருக்கு) இப்படிப்பட்ட துணிச்சல் எங்கிருந்து வந்தது?”
“இந்த நீதிமன்றத்திற்கு வந்ததற்காக அவரை (அருணாப்பை) எப்படி மிரட்ட முடியும்?”
“அந்தச் செயலரின் அறிவிப்பு, நீதித்துறை நிர்வாகத்தில் கொடூரமாகக் குறுக்கிடும் செயலாகும்?”
உடனே, மராட்டியப் பேரவைச் செயலாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுத்திட வேண்டும் என்று கூறியுள்ளார் பொப்டே!
அப்படி சட்டப்பேரவைச் செயலர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை-உச்சநீதிமன்றம் தானே முன்வந்து தொடுத்தால் மராட்டிய சிவசேனை-காங்கிரசு கூட்டணி ஆட்சி அதை எதிர் கொள்ள என்ன செய்யுமோ! மராட்டிய அரசுக்கும் – உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்குமான மோதல் இது!
இந்திய அரசு - மாநில அரசு சட்ட மோதல்
-------------------------------------------------------
வேளாண்மையிலிருந்து உழவர்களை வெளியேற்றிவிட்டு, நிலங்களையும், உணவுப் பொருள் வணிகத்தையும் பன்னாட்டுப் பெருங்குழுமங்களிடம் ஒப்படைக்கும் உத்தியுடன் மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்தது மோகன் பகவத் – மோடி அரசு. இச்சட்டங்களை எதிர்த்து இந்தியா முழுவதும் போராட்டங்கள் நடக்கின்றன.
சில மாநில அரசுகள், இச்சட்டங்கள் தங்கள் மாநிலங்களில் செயல்பட முடியாதவாறு மாற்று வேளாண் சட்ட முன்வடிவுகளை இயற்றியுள்ளன. இராசஸ்தான், பஞ்சாப், சட்டீஸ்கட் மற்றும் வேறு சில மாநிலங்களும் இவ்வாறு மாற்றுச் சட்ட முன்வடிவுகளை நிறைவேற்றியுள்ளன. இவை ஆளுநரின் அல்லது குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று சட்டங்கள் ஆகுமா என்ற வினா எழலாம்.
இங்கு கவனிக்க வேண்டியது, இந்திய அரசு எதேச்சாதிகாரமாக நிறைவேற்றும் மக்கள் பகைச் சட்டங்களை எதிர்க்கட்சி மாநில அரசுகள் கண்டனம் செய்து விட்டு, அச்சட்டங்கள் தங்கள் மாநிலங்களில் செயல்பட அனுமதித்த பழைய போக்கு இனி தொடராது என்பதுதான். மோடி அரசு சில சட்டங்களை நடைமுறைப்படுத்த முடியாதவாறு எதிர்க் கட்சி மாநில அரசுகள் முட்டுக்கட்டை போடும்; சட்ட மோதல்களைக் கடைபிடிக்கும்.
நடுவண் புலனாய்வு அமைப்பிற்கு எதிர்ப்பு
------------------------------------------------------------
இந்திய அரசின் நடுவண் புலனாய்வு அமைப்பு (சிபிஐ) தங்கள் மாநிலங்களில் தானே முன்வந்து வழக்குப் பதிவு செய்து, புலனாய்வு செய்யும் அனுமதியை சில மாநில அரசுகள் நீக்கிவிட்டன. பஞ்சாப், இராசஸ்தான், சட்டீஸ்கட், தெலங்கானா, கேரளம், ஜார்கண்ட் போன்ற மாநிலங்கள் இவ்வாறு நடுவண் புலனாய்வு அமைப்பிற்கு அனுமதி மறுத்துள்ளன.
பாசகவின் மாநில அரசுகள், மற்ற மாநில அரசுகள் எடுக்கும் மண்ணின் மக்கள் உரிமைச் சட்ட ஏற்பாடுகள், மாநிலச் சார்பு நிலைபாடுகள் - எதிர்க்கட்சி மாநில அரசுகள் இந்திய அரசின் எதேச்சாதிகாரத்திற்கு எதிராக எடுக்கும் செயல்பாடுகள் - உச்சநீதிமன்றத்திற்குள் ஏற்படும் உள் முரண்பாடுகள் போன்றவை எல்லாம் மோகன் பகவத்-மோடி அரசின் பாசிசப் பயணத்தைத் தடுத்து நிறுத்தி விடுமா? வேகத் தடைகள் போடுகின்றன; பாசிசம் முழுமையடையாமல் தடுத்துவிடும் என்று கருத முடியாது. முழு பாசிசத்தை நோக்கி முழுமூச்சுடன் செல்கிறது மோடி அரசு. இந்தியப் பாசிசம் என்பது ஆரியத்துவம். அதன் அரசியல் கட்சி பாசக!
பாசிசம் முழுமை அடைந்து விட்டால் தேர்தல்கள் நடக்காது. எதிர்க்கட்சிகள், சனநாயக உரிமை இயக்கங்கள், தமிழ்த்தேசிய அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தேசிய இனங்களின் அமைப்புகள் அனைத்தும் தடைசெய்யப்படலாம்.
ஆனால் இவ்வாறான பாசிச ஆட்சி இந்தியாவில் நீண்டகாலம் தொடர முடியாது; குறுகிய காலத்திலேயே முடிவுக்கு வந்துவிடும்! ஏனெனில் இந்தியா செர்மனியோ, இத்தாலியோ அல்ல! செர்மனியில் ஒரே தேசிய இனம், ஒரே பொது மொழி, ஒரே கிறித்துவ மதம்! செர்மானிய இனவெறியைக் கிளப்பி பாசிசத்தை வளர்க்க இந்த ஒருமைநிலை இட்லருக்கு உதவியாக இருந்தது. இந்தியாவில் பல இனங்கள், பல மொழிகள், பல மதங்கள்! பிரித்தானிய வணிக வேட்டையாடிகளின் பீரங்கிகள் வன்முறையால் இணைப்பதற்கு முன் பல்லாயிரம் ஆண்டுகளாகத் தனித்தனியே இருந்த நாடுகள் இந்தியாவில் இருக்கின்றன. இந்தியா என்ற நிர்வாகக் கட்டமைப்பை வெள்ளையர்கள் உருவாக்கி இருநூற்றமைம்பது ஆண்டுகளுக்குள்தான் ஆகிறது.
முந்நூறு, நானூறு ஆண்டுகளாகப் படையெடுப்புகளால் ஒன்றிணைக்கப்பட்டிருந்த ஐரோப்பிய நாடுகள். பின்பு தனித்தனியாய்ப் பிரிந்து தனி அரசுகள் அமைத்துக் கொண்ட வரலாறுகள் இருக்கின்றன.
இந்திரா காந்தி 1975-1976-இல் தீவிரமாக செயல்படுத்திய நெருக்கடி நிலை என்ற எதேச்சாதிகார ஆட்சி - சனநாயகப் பறிப்பு – நீண்ட காலம் நீடிக்க முடியவில்லை. 1977-இல் முடிவுக்கு வந்தது.
எனவே பாசக பாசிசத்தை எதிர்த்து வெல்வது எளிது. ஆனால் சில ஆண்டுகள் அதன் அடக்குமுறைகளை எதிர்கொள்ள வேண்டும்! அதற்குரிய ஈகங்களைச் செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டின் அவலம்
-------------------------------
தமிழ்நாட்டின் நிலை என்ன? பாசக பாசிசத்திற்கு ஆதரவாக அஇஅதிமுக! ஒரு வேளை பாசகவை விட்டு அது விலகி விட்டால் திமுக பாசக பக்கம் போய் விடுமோ என்ற ஐயம்! பாசகவோடு கலைஞர் கருணாநிதி காலத்தில் 1999 - இல் திமுக கூட்டணி சேர்ந்து ஐந்து ஆண்டுகள் நடுவண் ஆட்சியில் இருந்தது.
1975-1976 இந்திரா காந்தியின் நெருக்கடி நிலையை முழுக்க முழுக்க ஆதரித்தது எம்ஜியார் தலைமையிலான அஇஅதிமுக. 1977 மக்களவைத் தேர்தலில், சர்வாதிகார இந்திரா காந்தியையும் அவரது காங்கிரசையும் தோற்கடித்தனர் வடநாட்டு மக்கள். தமிழ்நாட்டில் அஇஅதிமுக - காங்கிரசு கூட்டணி அமோக வெற்றி பெற்றது.
தமிழ்நாட்டில் திமுக-அதிமுக என்ற இருமுனை முகாம் அரசியல் நிரந்தரம் என்பது போல் தோற்றங் கொண்டுள்ளது. இந்த இருபெரும் சந்தர்ப்பவாதக் கட்சிகளுடன் சிறிய சந்தர்ப்பவாதக் கட்சிகள் கூட்டணி சேர்ந்து கொள்கின்றன.
பாசிச எதிர்ப்பு, தமிழர் உரிமை மீட்பு என்று பேசிக்கொண்டு, வாக்குச் சாவடிக்கு வழிகாட்டுவதாக மட்டும் செயல்பட்டால். தமிழ்த்தேசிய அமைப்புகளும் திமுக,அதிமுக போல் சந்தர்ப்பவாத அமைப்புகளாக மாறிவிடும்!
தமிழ்நாட்டில் பாசக பாசிச எதிர்ப்பு என்ற ஒற்றை முழக்கம் – உரிய பயன்தராது. ஒன்றை எதிர்க்கும் போது – அதற்கு சரியான மாற்றாக இன்னொன்றை முன்வைக்க வேண்டும். பொய்யை எதிர்க்கும் போது உண்மையை மாற்றாக வைக்க வேண்டும். இருட்டை நீக்க வேண்டுமானால் வெளிச்சம் வேண்டும்.
பாசிச எதிர்ப்பு என்று திமுக அணியை முன்வைத்தால் – இவர்களின் சனநாயகம் எப்படிப்பட்டது என்று தெரியாதா? வரம்புக்குட்பட்ட அதிகாரத்தில் இவர்கள் செய்த சர்வாதிகாரம் தெரியாதா? இவர்கள் பாசிசத்திற்குக் கீழடங்கிப் போக மாட்டார்களா?
பாசக பாசிசத்தை முறியடிக்க ஓர் அனைத்திந்தியக் கட்சியின் தலைமையில் சனநாயகக் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற நிபந்தனை இல்லை. தேசிய இனங்களின் பாசிச எதிர்ப்புப் போக்கில் சமத்துவ அடிப்படையில் கூட்டணி அமையலாம் அல்லது தனித்தனியே போராட்டங்கள் நடக்கலாம். இவ்வாறான போராட்டங்களும் வெற்றி ஈட்டும்.
பாசிசத்தை வீழ்த்தும் போது புதிய தமிழ்நாடு புதிய உள்ளடக்கத்தோடு எழவேண்டும்.
பாசக பாசிசத்தை வீழ்த்துவதற்கு அதற்கு மாற்று சனநாயகமாக – மாற்று அரசியலாக இலட்சியத் தமிழ்த்தேசியம் விளங்க வேண்டும்.
பதவி, பணம், விளம்பரம் மூன்றுக்கும் ஆசைப்படாத இலட்சியப் போராளிகள் – பாசிச எதிர்ப்பு சனநாயகப் போராட்டத்திற்கு – மக்களிடையே விழிப்புணர்வு ஊட்ட வேண்டும். உணர்வாளர்களை அணிதிரட்ட வேண்டும்.
“நானும் வரலாற்று நாயகன்தான் – வரலாற்று நாயகிதான்” என்ற தன்மன ஏற்பு ஒவ்வொரு தமிழர்க்கும் வேண்டும்.
“அடிச்சுவடும் அடையாளமும் இன்றி நான் மறைந்து போக மாட்டேன்” என்ற உறுதி ஒவ்வொருவர்க்கும் வேண்டும்.
கொள்கைத் தெளிவும் மன உறுதியும் இருந்தால் நம்மால் பாசிசத்தை வீழ்த்த முடியும்!

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam



 

Labels: , ,


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்