<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d6955529389241309188\x26blogName\x3d%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86.%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://thozharmaniyarasan.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com/\x26vt\x3d-8408640130511538487', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

சமூகநீதியைத் தகர்க்க சதி மோடி - இராகுல் சூழ்ச்சி! பெ. மணியரசன்,

Monday, January 21, 2019


சமூகநீதியைத் தகர்க்க சதி
மோடி - இராகுல் சூழ்ச்சி!

தோழர் பெ. மணியரசன்,
தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்.


முன்னேறிய வகுப்பில் பிறந்து, பொருளியல் வகையில் பின்தங்கியுள்ளோருக்கு இந்திய அரசு மற்றும் மாநில அரசின் கல்வி - வேலை வாய்ப்புகளில் தனியே 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை நரேந்திர மோடி அரசு அவசர அவசரமாக இராகுல் காங்கிரசின் ஆதரவோடு நிறைவேற்றியுள்ளது. சமூகநீதிக்கு மிகப்பெரிய ஆபத்து விளைவிக்கும் நுட்பமான சதிவேலையே இந்தச் சட்டம்!
தற்போது, முன்னேறிய வகுப்பினரின் மக்கள் தொகை விகிதத்திற்கு ஏற்ப, அவர்களுக்குக் கல்வி - வேலை வாய்ப்புகளில் பிரதிநிதித்துவம் இல்லை என்று மோடி அரசுக்கு யார் சொன்னது? அவர்களுக்கு இப்போது இட ஒதுக்கீடு வழங்கியாக வேண்டிய அளவுக்கு, அப்படி என்ன அவசரமும், அவசியமும் ஏற்பட்டது?
ஒடுக்கப்பட்ட - பிற்படுத்தப்பட்ட - பழங்குடியின மக்கள், அவர்களது மக்கள் தொகை விழுக்காட்டிற்கு ஏற்ப கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் இடம் பெறவில்லை என்பதை ஆராய்ந்து, அதற்குரிய கணக்கீடு களின்படியே அப்பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. முன்னேறிய வகுப்பினரின் இட ஒதுக்கீட்டுக்கு அப்படி ஏதேனும் ஆணையம் அமைத்து ஆய்வு செய்யப் பட்டதா? இல்லை!
ஒடுக்கப்பட்ட - பிற்படுத்தப்பட்ட - பழங்குடியின மக்கள் ஏன் பின்தங்கிப் போனார்கள்?
ஆரிய வைதீக வர்ணாசிரம தர்மம் பிறப்பிலேயே உயர்வு தாழ்வு கற்பித்து, மக்களிடையே சாதிப் பிளவு களை உண்டாக்கியது. உழைக்கும் மக்களை சூத்திரர்கள் - பஞ்சமர்கள் என ஒதுக்கி வைத்தது. அவர்களது தொழில் நுட்ப அறிவையும், உழைப்பையும் சுரண்டியது. எனவேதான் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் அவர் களது மக்கள் தொகைக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் இல்லாமல் போனது.
ஏன் வந்தது இடஒதுக்கீடு?
-----------------------------------------
முன்னேறிய வகுப்பினரே கல்வி - வேலை வாய்ப்புகளில் நிறைந்திருந்தனர். இதன் காரணமாகவே, மற்ற வகுப்பினர் முன்னேறி வருவதற்கான ஏற்பாடாக இட ஒதுக்கீட்டு முறை கொண்டு வரப்பட்டது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 15 - 16களில் இதற்கான திருத்தங்கள் செய்யப்பட்டு, சமூக வகையிலும், கல்வியிலும் பின் தங்கியவர்களை கை தூக்கி விடுவதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இப்போது, தமிழ்நாட்டில் முன்னேறிய வகுப்பாக பிராமணர்கள்தான் கோலோச்சுகின்றனர். தமிழ்நாட்டில் முன்னேறியோர் பட்டியலில் பிராமணர் அல்லாதவர் எண்ணிக்கை மிகவும் குறைவு. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பெரும்பாலோர் இட ஒதுக்கீட்டுப் பட்டியலுக்குள் வந்துவிடுகின்றனர். மக்கள் தொகையில் பிராமணர்கள் 3 விழுக்காட்டினராக உள்ளனர். அவர் களில் பொருளியல் வகையில் பின்தங்கியவர்களுக்கு, 10 விழுக்காடு இட ஒதுக்கீடு என சட்டம் இயற்றியுள்ளது எந்த வகையில் ஞாயம்? அவர்கள் மக்கள் தொகை விகிதத்திற்கு ஏற்ப கல்வியும், வேலை வாய்ப்பும் பெறவில்லை என்று இந்திய அரசு எதன் அடிப்படையில் கணக்கிட்டது?
இன்றைக்கு பிராமணரல்லாத உயர் வகுப்பினர்கூட பிராமணர்களின் அளவுக்கு பிரதிநிதித்துவம் பெறவில்லை. இந்த முன்னேறிய வகுப்பினர், எந்தக் காலத்திலாவது பிறப்பு அடிப்படையில் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தார்களா? கல்வி - வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டார்களா? பின்னர், இவர்களுக்கு ஏன் இந்த சிறப்புரிமை? இதன் பெயர்தான் இந்தியத்தேசியம் - இந்துத்துவா - பிராமணத்துவா!
பா.ச.க. அரசு கொண்டு வந்துள்ள இச்சட்டத்தை காங்கிரசுக் கட்சி ஆதரித்து வாக்களித்தது. சி.பி.எம். - சி.பி.ஐ. கட்சிகளும் ஆதரித்துள்ளன. தேர்தலை மனத்தில் வைத்து பா.ச.க. இச்சட்டத்தைக் கொண்டு வருவதையும், அவசர அவசரமாகக் கொண்டு வருவதையும்தான் இந்தக் கட்சிகள் எதிர்க்கின்றனவே தவிர, இந்தச் சட்டத்தை எதிர்க்கவில்லை!
“பிராமணத்துவா” கட்சிகள்
-----------------------------------------
காங்கிரசுக் கட்சி கடந்த 2014 மக்களவைத் தேர்தலின் போது, முன்னேறிய வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு கொண்டு வருவோம் எனத் தேர்தல் வாக்குறுதியே அளித்திருந்தது. அண்மையில் இராகுல்காந்தி, தன் பூணூலைக் காட்டி தான் தத்தாத்ரிய கோத்திர பிராமணன் என்று கூறி தன்னை உலகுக்கு அடையாளப் படுத்திக் கொண்டார் என்பதும் கவனிக்கத்தக்கது.

கடந்த 08.01.2019 அன்று அறிக்கை வெளியிட்ட சி.பி.எம். கட்சியின் அரசியல் தலைமைக் குழு இந்தச் சட்டம் சமூகநீதிக்கு எதிரானது என்றெல்லாம் குரல் எழுப்பவில்லை. தங்கள் கட்சி முன்னேறிய வகுப்பாருக்கு பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கு வதை ஆதரிக்கிறது என்றும் அவ்வறிக்கை கூறுகிறது. அவசரமாக ஏன் கொண்டு வருகிறீர்கள் என்று மட்டும் கேட்கிறது.
நாடாளுமன்றத்தில் பேசிய சி.பி.எம். கட்சி உறுப்பினர் டி.கே. ரங்கராசன், சி.பி.ஐ. கட்சி உறுப்பினர் டி. ராஜா ஆகியோர், மாற்றுத் திட்டம் என்ற பெயரில், வெளித் தோற்றத்துக்கு எதிர்ப்பு என்பதுபோல் காட்டிக் கொள்வதற்காக தனியார் துறையிலும் இதே இட ஒதுக்கீடு வேண்டுமென பேசியுள்ளனர். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் “நான் முன்னேறிய வகுப்பாருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை ஆதரித்து வாக்களித்தேன்” என்று டி.கே. ரங்கராசன் கூறினார்.
இவ்வாறு, பிராமணர்களுக்காக ஒரே அணிவகுப்பில் நின்று இக்கட்சிகள் குரல் கொடுப்பதன் பெயர்தான் இந்தியத்தேசியம் - அதன் இன்னெரு பெயர்தான் இந்துத்துவா - அதன் அசல் பெயர்தான் பிராமணத்துவா!
இச்சிக்கலில் மட்டுமின்றி, இந்தியத்தேசியத்திற்கு முன்னுரிமை தரும் கம்யூனிஸ்ட்டு கட்சிகள் பல்வேறு அடிப்படைச் சிக்கல்களில் காங்கிரசு - பா.ச.க. நிலை பாட்டையே கொண்டுள்ளன. பல எடுத்துக் காட்டுகள் இருக்கின்றன. சான்றுக்கு ஒன்றே ஒன்று, இந்தியாவின் ஆட்சிமொழி இந்திதான் என்று சி.பி.எம்., சி.பி.ஐ. கட்சிகளின் கொள்கை அறிக்கை கூறுகிறது.
முன்னேறிய வகுப்பில் பிறந்து பொருளியல் வகையில் பின்தங்கியவர்களைக் கணக்கிட, ‘ஆண்டுக்கு 8 இலட்சம் ரூபாய் வருமானம் பெறுபவர்கள்’ என மோடி பிறப்பித்த இச்சட்டம் தெரிவிக்கிறது. ஆண்டுக்கு 8 இலட்சம் ரூபாய் என்றால், அவர்களது மாத ஊதியம் 66 ஆயிரம் ரூபாய்! ஒரு நாள் ஊதியம் 2,191 ரூபாய்! இந்த வருமானம் பெறுபவர்கள் பின்தங்கியவர்களா? அவர்களுக்கு ஏன் தனி இட ஒதுக்கீடு?
சாதிவாரிக் கணக்கெடுப்பை ஏன் வெளியிடவில்லை?
--------------------------------------------------
இச்சட்டம் செயலுக்கு வந்த பின், தமிழ்நாட்டில் நடைமுறையிலிருக்கும் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டில், ஒடுக்கப்பட்ட - பிற்படுத்தப்பட்ட வகுப்புகளில் பிறந்தவர்கள் மதிப்பெண் அடிப்படையில் போட்டியிட்டு வெற்றி பெற வாய்ப்பளித்த 31 விழுக்காட்டுப் பொதுப் பட்டியல் 21 விழுக்காடாக சுருங்கிவிட்டது!

பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அவர்களின் மொத்த மக்கள் தொகை விகிதத்திற்குச் சமமாக இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. தமிழ்நாட்டில் சற்றொப்ப 70 விழுக்காடு வரை உள்ள பிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 விழுக்காடுதான் இட ஒதுக்கீடு உள்ளது.
இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மக்கள் தொகை 56 விழுக்காடு என மண்டல் குழு கணக்கிட் டுள்ளது. அந்த 56 விழுக்காட்டினருக்கு இந்திய அரசுப் பணிகளில் 27.5 விழுக்காடுதான் ஒதுக்கீடு வழங்கப் படுகிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இப்போது அளிக்கப் பட்டுள்ள 10 விழுக்காட்டை, வெறும் 3 விழுக்காடு மக்கள் தொகைக் கொண்ட பிராமணர்கள் தான் மிகப்பெரும்பான்மையாக எடுத்துக் கொள்வார்கள். அதே பிராமணர்கள், மதிப்பெண் அடிப்படையில் பெறுவதற்கு 21 விழுக்காடு பொதுப்பட்டியலும் இருக்கிறது.
கடந்த 2011ஆம் ஆண்டு, காங்கிரசு ஆட்சியில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டபோது சாதி வாரியாகக் கணக்கிட்டார்கள். இப்போது வரை, அந்த சாதிவாரி மக்கள் தொகைப் பட்டியல் வெளியிடப்படவில்லை! காங்கிரசு ஆட்சியும் வெளியிடவில்லை; பின்னர் வந்த பா.ச.க. ஆட்சியும் அதை வெளியிட வில்லை. வெளியிட்டுவிட்டால், மக்கள் தொகையில் மிகவும் குறைவாக உள்ள பிராமணர்களின் எண்ணிக்கையும் - முன்னேறிய வகுப்பார் எண்ணிக்கையும் தெரிந்துவிடும், அதேபோல் மக்கள் தொகையில் மிகப்பெரும் பான்மையான வகுப்பினர், ஒடுக்கப்பட்ட மற்றும் பழங்குடியின மக்கள் தொகை ஆகியோர் எண்ணிக்கை யும் தெரிந்துவிடும் என்று இக்கட்சிகள் அஞ்சுகின்றன. எனவே, இந்த இரட்டையர்களின் சூழ்ச்சியைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியத்தேசியம் அளிக்கும் சமூகநீதி பழைய “மனுநீதி”தான்!
திராவிடக் கட்சிகளின் நாடகங்கள்
------------------------------------------------------
தங்களை “சமூகநீதிக் காவலர்கள்” என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் தி.மு.க. - அ.தி.மு.க. கட்சிகள், சாதிவாரி மக்கள் தொகைப் பட்டியலை வெளியிடச் சொல்லி ஏன் போராடவில்லை?

தி.மு.க., அதிமுக. கட்சிகள் இச்சட்டத்தை எதிர்த்துக் குரல் கொடுத்துள்ளன. வரவேற்கிறோம்! ஆனால், வெறும் குரல் எழுப்பிவிட்டு அவர்கள் யாரோடு இருக் கின்றனர்? அச்சட்டத்தை வெளிப்படையாக ஆதரித்துள்ள காங்கிரசுடன் தி.மு.க. இருக்கிறது. இச் சட்டம் நிறைவேற பா.ச.க.வுக்கு உதவும் வகையில் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல், தந்திரமாக அ.தி.மு.க. வெளிநடப்பு செய்து பா.ச.க.வுடன் நிற்கிறது.
தமிழ்நாட்டின் கல்வி உரிமையைப் பறிக்கும் “நீட்” தேர்வு, வரி வசூல் உரிமையைப் பறிக்கும் ஜி.எஸ்.டி., உயிர்க்கொல்லி ஸ்டெர்லைட் ஆலையைக் கொண்டு வருவது, எட்டுவழிச் சாலை அமைப்பது, காவிரிப் படுகையை நாசமாக்கி வேதி மண்டலமாக்க பன்னாட்டு நிறுவனங்களை அனுமதிப்பது, ஏழு தமிழர் விடு தலையை எதிர்ப்பது முதலியவற்றில் எல்லா வகையிலும் எதிராக நிற்கும் காங்கிரசுடன் தி.மு.க. எதற்காக கூட்டணி சேர்ந்து நிற்கிறது? பதவிக்காக! பதவிக்காக தமிழரைக் காட்டிக் கொடுத்து, இனத்துரோகம் செய்ய இவர் களுக்குத் தயக்கமில்லை! காங்கிரசுக் கட்சியை வெளிப்படையாகக் கண்டித்து, தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட வேண்டும். இல்லையேல் காங்கிரசுடனான உறவை முறித்துக் கொள்ள வேண்டும்! செய்வார்களா?
அ.தி.மு.க.வோ, பா.ச.க.வின் எடுபிடியாக அவர்களது திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டுள்ளது. ஆனால், நாடாளுமன்றத்தில் எதிர்ப்பதுபோல் நாடகமாடிக் கொண்டுள்ளது.
ஆக, இக்கட்சிகள் வெறும் கணக்குக் காட்டத்தான் அடையாள எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன. திராவிட இயக்கத்தின் உயிர்க்கொள்கை சமூகநீதி எனக் கூறிக் கொள்ளும் இக்கட்சிகள், இந்தச் சட்டத்தின் வழியே சமூகநீதிக் கோட்பாட்டையே காலி செய்துள்ள இந்தியத் தேசியக் கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து குலாவிக் கொண்டுள்ளன.
இவற்றையெல்லாம் எதிர்க்க ஒரு மாற்று சிந்தனை - புதிய சிந்தனை தேவை! சிந்திக்கும் ஆற்றல், உண்மை களைக் கண்டறியக் கூடிய உளப்பாங்கு ஆகியவற்றோடு தமிழ் மக்கள் இதனை எதிர் கொள்ள வேண்டும். அதற்கான தத்துவமே “தமிழ்த்தேசியம்”! பிற்போக்குச் சட்டங்களை தூக்கி எரியும் ஆற்றல் நமக்கிருக்கிறது!
இந்திய அரசே! சமூகநீதியை குழிதோண்டிப் புதைக்கும் இச்சட்டத் திருத்தத்தைக் கைவிடு! திரும்பப் பெறு என்று முழங்குவோம்!

Labels:

வெண்மணிப் படுகொலையும் பெரியார் எதிர்வினையும் பெ. மணியரசன்

Wednesday, January 2, 2019


வெண்மணிப் படுகொலையும்

பெரியார் எதிர்வினையும்

தோழர் பெ. மணியரசன்,
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.


வெண்மணி ஈகியரின் ஐம்பதாம் ஆண்டு நிறைவு நினைவு நாள் 25.12.2018 அன்று வந்தது. ஐம்பதாம் ஆண்டு நிறைவையொட்டி, இவ்வாண்டு வெண்மணி ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சிகள் தமிழ்நாட்டில் பரவலாக நடந்தன. நிலக்கிழமை ஆதிக்கமும், சாதி ஆதிக்கமும் இணைந்து ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்கள் 44 பேரை குடிசையில் வைத்து, கொளுத்திச் சாம்பலாக்கிய கொடிய நாள் – திசம்பர் 25, 1968!
வெண்மணி ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்திக் கொள்கிறோம்!
நாற்பத்து நான்கு பேரைக் கொளுத்திக் கொன்ற கொலைவெறிக் கும்பலுக்குத் தலைமை தாங்கிய நபர் கோபாலகிருஷ்ண நாயுடு.
வெண்மணிப் படுகொலை பற்றி பெரியார் தகுந்த முறையில் கண்டன அறிக்கை “வெளியிடவில்லை” என்றும், “தக்க முறையில் வெளியிட்டார்” என்றும் இப்போது விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
கோபாலகிருஷ்ண நாயுடுவுக்கு ஆதரவாக பெரியார் நடந்து கொண்டார் என்ற விமர்சனமும் வைக்கப்படுகிறது. வெண்மணியில் தீ வைத்துக் கொல்லப்பட்ட மக்கள், மார்க்சியக் கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள். வெண்மணிக்குப் பிறகு வெளியிட்ட அறிக்கையிலும், செம்பனார் கோயில் பொதுக்கூட்டப் பேச்சிலும் பெரியார் கம்யூனிஸ்ட் கட்சிகளைத் தடை செய்ய வேண்டுமென்று வலியுறுத்தினார். பெரியாரின் இந்தக் கருத்து பற்றியும் விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
அப்பொழுது பெரியார் வெளியிட்ட முழு அறிக்கையும், செம்பனார் கோயில் பேச்சும் கீழே வெளியிடப்படுகிறது. இதைப் படிப்பவர்கள் பெரியாரின் அணுகுமுறை பற்றி அவரவர் மனச்சான்றுக்கேற்ப முடிவு செய்து கொள்ளட்டும்!
/////////////////////////////////////////////////////////
“ஜனநாயக ஆட்சி உள்ளவரை யோக்கியர் மறைந்து போக வேண்டியதுதான்; அயோக்கியர்கள் ஆட்டம் போட வேண்டியதுதான். இந்திய மக்கள் காட்டுமிராண்டிகள்; இந்திய தர்மம் குற்றப் பரம்பரையர்கள் தர்மமேயாகும். மநுதர்மவாதிகள் உள்ளவரை நாடு ஒழுக்கம், நேர்மை, நாணயம், நீதி பெற முடியாது. வெள்ளையன் வெளியேறியவுடன் நாடு அயோக்கியர்கள் வசமாகிவிட்டது.
காந்தியார் பார்ப்பனர்களுக்கு நல்ல பிள்ளையாகி(த்தான்) ஒரு மகானாக ஆவதற்கு எண்ணி என்றைய தினம் மக்களை சட்டம் மீறும்படித் (அயோக்கியர்களாகும்படி) தூண்டி விட்டாரோ, அன்று முதல் மனித சமுதாயம் ஒழுக்கத்தில் கீழ் நிலைக்குப் போய் விட்டது! சட்டம் மீறுதல் மூலம் சத்தியாகிரகம் என்னும் சண்டித்தனம் செய்தல் மூலம் காரியத்தை சாதித்துக் கொள்ள, மக்களுக்கு காந்தி என்று வழி காட்டினாரோ அன்று முதலே மக்கள் அயோக்கியர்களாகவும், காலிகளாகவும் முந்திவிட்டார்கள்.
“புழுத்துப்போன பண்டத்தின் மீது நாய் வெளிக்குப்போன' மாதிரி மக்களை அயோக்கியர்களாக ஆக்கிவிட்டு, ஜெயிலையும் உடம்பைத் தேற்றிக்கொள்ளும் ஓய்விடமாகப் பார்ப்பனர்கள் என்று ஆக்கினார்களோ, அன்று முதலே யோக்கியர்கள் எல்லாம் அயோக்கியர்களாக ஆகவேண்டியவர்களாகி விட்டார்கள். யோக்கியர்கள் மானத்தோடு வாழ இடமில்லாமல் போய்விட்டது.
எந்த மனிதனும் ‘அயோக்கியனாக ஆனாலொழிய வாழ முடியாத' நிலை ஏற்பட்டு விட்டது. ‘சட்ட விரோதமான குற்றங்களைச் செய்தவன்தான் இராஷ்டிரபதியாகவும், பிரதமராகவும், முதல் மந்திரியாகவும் மற்றும் மந்திரிகளாகவும், பெரும் பதவியாளர்களாகவும் ஆக முடியும்' என்ற நிலைமை ஏற்பட்டவுடன் அரசியலில் யோக்கியர்களுக்கு இடம் இல்லாமலே போய்விட்டது. அயோக்கியர்களுக்கே ஆட்சி உரிமையாகிவிட்டது.
இந்த நிலையிலும் இந்தத் தன்மையிலும் நாட்டுக்கு ‘சுதந்திரம்' கிடைத்து இருபது ஆண்டுகளில் நாட்டில் செல்வாக்குப் பெறாத அயோக்கியத்தனம், அக்கிரமம், கொள்ளை கொலைகாரத்தனம், நாச வேலைகள் என்பவைகளில் ஒன்றுகூட பாக்கியில்லாமல் செல்வாக்குப் பெற்று, தினசரியில் நடைபெற்று வருகின்றன. அவை எந்த அளவுக்கு வளர்ந்தன என்றால்
1. காந்தியார் கொல்லப்பட்டார்
2. தலைவர் காமராஜரைக் கொல்ல முயற்சிகள் செய்யப்பட்டன
3. போலிஸ் அதிகாரிகள் கட்டிப் போட்டு நெருப்பு வைத்துக் கொளுத்தப்பட்டனர்
4. நீதி ஸ்தலங்கள், ரயில் நிலையங்கள் கொளுத்தப்பட்டன. ஜெயில் கதவு உடைக்கப்பட்டது. பல வாகனங்கள் (பஸ்கள்) கொளுத்தப்பட்டன. வழிப்பறிகள் நடந்தன. மற்றும் நிலங்களில் துர் ஆக்கிரகமாகப் பயிர்கள் அறுவடை செய்து கொண்டு போகப்பட்டன. விவசாயிகளின் வீடுகள் கொளுத்தப்பட்டன
5. கடைசி நடவடிக்கையாக நேற்று முன்தினம், தற்காப்புக்கு ஆக ஓடி ஒரு வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட ஆண், பெண், குழந்தைகள் உட்பட 42 பேர்கள் பதுங்கிக் கொண்ட வீட்டைப் பூட்டிவிட்டுக் கொளுத்தி, 42 பேரும் கருகி சாம்பலாக்கப்பட்டிருக்கிறார்கள். இவ்வளவும் அரசியல் கட்சிக்காரர்களால் பட்டப் பகலில் வெட்ட வெளிச்சத்தில் வெளிப்படையாகவே செய்யப்பட்ட காரியங்களாகும்.
சட்ட விரோதமான, பலாத்காரமான, நாசவேலைகளான காரியங்களைச் செய்து, அதன் மூலம் பலன் பெறுவதற்கென்றே ஏற்படுத்திக் கொண்ட ஸ்தாபனங்களாலேயே, அவற்றின் பலனாகவே செய்யப்பட்ட, நடைபெற்ற காரியங்களாகும். இவைகளை அடக்கப் பயன்படும்படியான போதிய சட்டமில்லை; சட்டம் செய்வது மூலாதாரக் கொள்கைக்கு விரோதமாக இருந்து வருகிறது.
சட்டத்திற்கும், நீதிக்கும் சம்பந்தமில்லாத நீதிஸ்தலங்கள்தான் நிறைந்திருக்கின்றன. சட்டங்களின் யோக்கியதை இப்படி இருக்க பழிவாங்கும், ஜாதி உணர்ச்சி கொண்ட, சுயநலத்தையே முக்கியமாய்க் கருதுகிற நீதிபதிகளே 100க்கு 90 பேர்களாக இருக்கிறார்கள்.
அமைச்சர்களும், ஆட்சியாளர்களும் இந்த நிலையை மாற்ற, அடக்க ஆரம்பித்தால் நமது பதவிக்கு ஆபத்து வந்து விடுமே என்று பயந்தவர்களாகவே இருந்து வருகிறார்கள் என்பது மாத்திரமல்லாமல் அமைச்சர்கள் ‘நாங்கள் செய்வதையெல்லாம் மாற்றி தங்களுக்கு அவமானம் உண்டாக்கும்படியான நீதிஸ்தலங்களும், நீதிபதிகளும் ‘எங்களுக்கு மேலாக' இருப்பதால் எங்களால் மக்கள் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் ஒன்றும் செய்ய முடியவில்லை' என்கிறார்கள். மற்றும் லஞ்சம், ஒழுக்கக்கேடு, நேர்மை அற்றத்தன்மை இல்லாத அதிகாரிகள் மிக மிக அரிதாகவே இருக்கிறார்கள்.
அவற்றைக் கண்டுபிடித்தால் சிபார்சு வருகிறது. அதை அலட்சியம் செய்து நடவடிக்கை நடத்தினால், நீதிஸ்தலங்கள் பெரிதும் அவர்களை குற்றமற்றவர்களாக ஆக்கிவிடுகின்றன. ஜாதி காரணமாக, சிபாரிசு காரணமாக அரசாங்கத்தைப் பழிவாங்கும் காரணமாக எப்படிப்பட்ட ஒழுக்கக்கேடான அதிகாரியும் நீதிஸ்தலங்களில் தப்பித்துக் கொள்கிறார்கள்.
பார்ப்பனருக்கு வசதியான, பொது நலத்துக்கு கேடான, நீதிக்குக் கேடான குற்றமான காரியங்கள் நிறைந்த, தர்மங்கள் கொண்ட நூல், எப்படி மத (மநு) தர்மமாக இருக்கிறதோ, அது போல் சமுதாயக் கேடானதும் பார்ப்பனருக்குக் கேடாயிருந்தால் ஆட்சியையே பாழ் பண்ணக்கூடியதுமானத் தன்மைகள் நிறைந்ததே அரசியல் (சட்ட) தர்மமாக இன்று விளங்குகிறது.
ஒன்று பார்ப்பனர், இல்லாவிட்டால் தமிழர் அல்லாதவர், இல்லாவிட்டால் பார்ப்பன தாசர் தவிர வேறு யாரும் பதவிக்கு வரமுடியாததானத் தன்மையில் அரசியல் சட்டம், நடவடிக்கை இருப்பதால், என்றென்றும் திருத்த முடியாத தன்மையில் “ஜனநாயக ஆட்சி தர்மம்” இருந்து வருகிறது.
இவற்றிற்கு ஒரு பரிகாரம் வேண்டுமானால், “ஜனநாயகம்” ஒழிக்கப்பட்டு, “அரச நாயகம்” ஏற்பட வேண்டும். அது எளிதில் முடியாத காரியமானால், தமிழ்நாடு தனி முழு சுதந்திரமுள்ள நாடாக ஆக்கப்பட வேண்டும். அது முடியவில்லையானால், இந்தியா அன்னியனுடைய ஆட்சிக்கு வர வேண்டும்.
இந்தியாவானது இந்தியர்கள் ஆட்சி புரிகிறவரை, மேல்கண்ட மாதிரியான மநுதர்மம் தான் ஆட்சி தர்மமாக இருக்க முடியும். ஆதலால் மக்கள் மனித தர்ம ஆட்சியில் இருக்க வேண்டுமானால், இந்தியாவுக்கு அன்னிய ஆட்சிதான் தகுதி உடையதாகும்.
அதுவும் இரஷ்ய ஆட்சி – அதாவது இரஷ்யரால் ஆளப்படும் ஆட்சிதான் வரவேண்டும். அல்லது பிரிட்டன், அமெரிக்கா போன்ற வெள்ளையன் ஆட்சிதான் வேண்டும். அப்படியில்லாமல் இந்தியாவை இந்தியன் ஆள்வது என்றால், அது பார்ப்பன நலத்துக்கு ஆக ஆளப்படும் சூழ்ச்சியாட்சியாகத்தான் அதாவது, இன்று போலத்தான் இருக்கும். இருந்து தீரும். மக்களும் தாங்கள் சூத்திரர்கள் என்பதை ஒப்புக் கொண்டவர்களாகத்தான் இருக்க முடியும்.
எனவே, இன்றைய இந்த நிலை மாற வேண்டுமானால் முதலாவது, குறைந்தது –
1. காங்கிரஸ் - திராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற இரண்டு கட்சிகளைத் தவிர, அரசியல் சம்பந்தமான எல்லா கட்சிகளையும் இல்லாமல் ஆக்கிவிட வேண்டும்.
2. சமுதாயக் கட்சிகள் இருக்க வேண்டுமானால் அவைகளின் கொள்கைகளில், நடப்புகளில் சட்டம் மீறுதல், பலாத்காரம் ஏற்படுதல், ஏற்படும்படியான நிலைமை உண்டாக்குதல் ஆகியத் தன்மைகள் இல்லையென்று உறுதி மொழி பெற்ற பிறகே அவைகள் அனுமதிக்கப்பட வேண்டும்.
3. எந்தக் கட்சி ஸ்தாபனம் ஏற்படுத்துவதானாலும் அரசாங்க அனுமதி பெற்றுத் தொடங்க வேண்டும். அந்த அனுமதியும் முதலில் ஓரு ஆண்டுக்கு, பிறகு இரண்டாண்டுக்குப் பிறகு மூன்றாண்டுக்கு என்று அனுமதி கொடுத்து, இந்த ஆறாண்டு காலத்தில் ஒரு தவறு, எச்சரிக்கைப் பெறுதல் இல்லையானால்தான் காலவரையின்றி அனுமதி கொடுக்க வேண்டும்.
கம்யூனிஸ்டுகள் என்கின்ற பெயரால் எந்தக் கட்சிக்கும் அனுமதி அளிக்கக் கூடாது.
இப்போது இருப்பவைகளைத் தடுத்துவிட வேண்டும். சமுதாய - பொருளாதார சம உரிமைப் பிரச்சார ஸ்தாபனம் என்பதாக மேற்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு இருக்கலாம். கட்சிகளைத் தடுக்கவோ, ஏற்படுவதை மறுக்கவோ, சமாதானம் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கக்கூடாது என்பவை போன்ற நிபந்தனை மேற்பார்வை இருக்க வேண்டும்.
பத்திரிகைகளைப் பெரும் அளவுக்குக் கட்டுப்படுத்த வேண்டும். முடிவாக, ஜெயில்களில் வகுப்புகள் இருக்கக் கூடாது. ஒரே வகுப்புதான் இருக்க வேண்டும். இப்போதைக்கு இந்த நிபந்தனைகள் இருக்கலாம். அரசாங்க அதிகாரிகள் மீது அரசாங்கம் எடுத்துக் கொள்ளும் நடவடிக்கைகளுக்கு கவர்னர் முடிவே முடிவானது என்றும், கோர்ட்டுகளுக்கு அதிகாரமில்லையே என்றும் திட்டம் செய்துவிட வேண்டும். எந்தக் காரியத்திற்கும் சட்டம் மீறுதல் இருக்கக் கூடாது. மீறுவதை அசல் கிரிமினல் குற்றமாகவே பாவிக்கப்பட வேண்டும்.
இப்படியான பல திருத்தங்கள் செய்தால் தான் இந்தியாவை இந்தியர் ஆளலாம். அதுவும் அன்னியர் ஆட்சி ஏற்படும் வாய்ப்பு ஏற்படும் வரைதான். இந்தியாவைப் பொருத்தவரையில் இந்த நிலையில் எப்படி இருந்தாலும் நம் நாட்டை நாம் தான் ஆள வேண்டும் என்பது அயோக்கியர்களும் காலிகளும் வாழத்தான் வசதி அளிக்கும்.
“Patriotism is the last refuge of a scoundrel” தேச பக்தி என்பது அயோக்கியனின் கடைசிப் புகலிடம் -ஜான்சன் (பெரியாரின் அறிக்கை, விடுதலை, 28.12.1968)
ஐயா வே. ஆனைமுத்து அவர்கள் தொகுத்த “பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்” - இரண்டாம் வரிசை, தொகுதி - 3, அரசியல் - 3, பக்கம் 2093 - 2097-லிருந்து..)
/////////////////////////////////////////////////////////
செம்பனார்கோயில் பேச்சு
/////////////////////////////////////////////////////////

வெண்மணிக் கொடுமை நடந்தபோது, அத்தீவைப்பை நடத்திய ஆதிக்கக்காரர்களைக் கண்டித்துப் பெரியார் அறிக்கை கொடுக்கவில்லை. வெண்மணி தீ வைப்பிற்குப் பின் 12.1.1969இல் செம்பனார்கோயில் (நாகை மாவட்டம்) பொதுக் கூட்டத்தில் பெரியார் பேசியது, அன்றைய அவரது மனநிலையைக் காட்டுகிறது.
/////////////////////////////////////////////////////////
“தஞ்சை மாவட்டத்தில் இடதுசாரி கம்யூனிஸ்ட்டுகள் விவசாய மக்களுக்கு நலன் செய்வது போல அவர் களுக்காகப் பாடுபடுவதுபோல ஏழை எளியவர்களின் வாழ்வை உயர்த்துவது போல மேடைகளிலே பேசுகிறார்கள். உங்கள் கூலியை உயர்த்துவது, வாழ்வை வளமாக்குவது எங்கள் கட்சியேயாகும் எனக்கூறி விவசாய மக்களை ஏமாற்றி, அவர்களைப் பலிவாங்கிக் கொண்டு வருகிறார்கள். கூலி உயர்வு என்பது ஒரு கட்சியால் ஏற்படுவதல்ல. இதனைத் தொழிலாளர்கள் உணர வேண்டும்.
நாட்டில் ஏற்படுகின்ற பொருளாதார மாற்றம், விலைவாசி உயர்வு - பற்றாக்குறை இவை களைக் கொண்டுதான் கூலிகள் உயர்கின்றதே தவிர கட்சிகளால் அல்ல. தொழிலாளர்கள் தங்களுக்குக் கிடைக்கிற பொருளாதாரத்தில் எப்படி வாழவேண்டும் என்பதை கம்யூனிஸ்ட் தோழர்கள் உங்களுக்குக் கூறாமல் நாட்டிலே கலவரத்தையும் புரட்சியையும் ஏற்படுத்தி இன்றைய தினம் வலதானாலும் சரி, இடதானாலும் சரி, அதிதீவிர கம்யூனிஸ்ட்டுகளானாலும் சரி இந்த ஆட்சியினைக் கவிழ்த்துவிட வேண்டுமென்கின்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். அதற்கு விவசாயத் தோழர்களும் மற்ற தொழிலாள நண்பர்களும் இடம் கொடுக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கின்றேன்.
நாகை தாலுக்காவிலே கலகம் செய்யத் தூண்டியது கம்யூனிஸ்ட் கட்சி. அதன் காரணமாக 42 பேர் உயிரிழந்தனர். கம்யூனிஸ்ட் கட்சி நமக்கு ஒத்துழைத்த கட்சி என்று அரசாங்கம் சும்மா இருந்து விடவில்லை. தேவையான நடவடிக்கையினை மேற்கொண்டிருக்கின்றது.
நாட்டில் அராஜகத்தைத் தூண்டும் பணியில் கம்யூனிஸ்ட்டுக் கட்சி மிகத் தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றது. இதற்கு இடம்கொடுக்காமல் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கம்யூனிஸ்ட்டுகளின் குறி கீழத்தஞ்சைப் பகுதி பக்கம் திரும்ப இருக்கிறது. இங்குள்ள விவசாயத் தோழர்கள் இங்கு அந்த தீயசக்தி பரவ இடம் கொடுக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கின்றேன். இந்த ஆட்சியைப் பலவீனப்படுத்தக் கம்யூனிஸ்ட்டுக் கட்சி ஈடுபட்டுள்ளது. அதற்கு நம் மக்கள் ஆதரவளிக்காமல் இவ்வாட்சிக்குத் தங்களின் ஆதரவினைக் கொடுப்பதன் மூலம் இந்த அரசை மேலும் பலம் பொருந்தியதாக்க வேண்டும்.”
- விடுதலை 20.1.1969.
/////////////////////////////////////////////////////////////////////////
கூலி உயர்வுப் போராட்டத்தில் 
பெரியார் நிலக்கிழார்களை ஆதரித்தார் 
தோழர் அ.கோ. கஸ்தூரிரங்கன் கூற்று
/////////////////////////////////////////////////////////////////////////

திராவிடர் கழகத்திலிருந்து தான் விலகியது ஏன் என்பதற்கு தோழர் அ.கோ. கஸ்தூரிரங்கன், அளித்த விளக்கம் :
“திராவிட விவசாய சங்க வேலைகளில் தீவிரமாக இருந்த அந்தக் காலகட்டத்தில் தேர்தலில் காமராசரை ஆதரிக்கக் கட்சி (திராவிடர் கழகம்) முடிவெடுத்தது. மிராசுதார்கள் பெரும்பாலும் காங்கிரசுக் காரர்கள். கிராமங்களில் மிராசுதார்களை - அவர்களுடைய ஆதிக்கத்தை எதிர்த்துக் கடுமையாக வேலை செய்து கொண்டிருந்த நேரம்.
“அதே வேளையில் அய்யா சொன்னபடி பச்சைத்தமிழர் காமராசரை ஆதரித்துக் கூட்டத்தில் பேச வேண்டிய நிலைமை. பல இடங்களில் மிராசுதார்கள் கூட்டங்களுக்கு வர மாட்டார்கள். ஏ.ஜி.கே. (அ.கோ.கத்தூரிரங்கன்) வந்தா நான் வரமாட்டேம்பாங்க... பல இடங்களில் நம்ம மேல (மிராசுதார்கள்) தாக்குதல் கொடுத்தாங்க. இதன் உச்ச கட்டமாக அந்தணப்பேட்டை, பாப்பாகோயில் இங்கெல்லாம் நம்ம வீடுகளையெல்லாம் கொளுத்தினாங்க. அப்போ (பெரி யார்) அய்யா நாகப்பட்டினம் வர்றார்..
“.. நாகை அவுரித்திடலில் கூட்டம். ராதா கிருஷ்ண நாயுடுன்னு ஒரு டாக்டர். அவரு மிராசுதார் சார்பா அய்யா விடம் என்னைப் பற்றிக் கடுமையா குறைபட்டிருக்கார்..
“.. அப்ப அந்தக் கூட்டத்திலே பெரியார் அறிவிக்கிறாரு.. ஏ.ஜி.கே. இருக்காரே, கஸ்தூரிரங்கன், அவருக்கும் மிராசுதார்க்கும் நடக்கிற சண்டையிலே நம்ம கழகத்துக்கு எந்த சம்பந்தமுமில்ல அப்படின்னு அறிவிச்சுடறாரு..
“என்னைக் கூப்பிட்டு எதுவுமே கேக்கல..”
“... நாங்கள் 1962 கடைசியில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தோம்”.
- வெண்மணிச் சூழல், தோழர் ஏ.ஜி.கே. நேர்காணல், திருவாரூர் நேயம் இலக்கிய இயக்கம் வெளியீடு, 2008, பக்கம் 4 - 6.

Labels:


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்