<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d6955529389241309188\x26blogName\x3d%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86.%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://thozharmaniyarasan.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com/\x26vt\x3d-8408640130511538487', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

"பேரியக்கம் நடத்திய டாட்டா போராட்டம் : ஆலையையும் அரசையும் நகர்த்தியுள்ளது! தமிழர் உரிமைப் போராட்டம் தொடரும்!"-----தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை!

Tuesday, December 27, 2022


பேரியக்கம் நடத்திய டாட்டா போராட்டம் :

ஆலையையும் அரசையும் நகர்த்தியுள்ளது!
தமிழர் உரிமைப் போராட்டம் தொடரும்!
==================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
பெ. மணியரசன் அறிக்கை!
==================================


ஓசூர் கெலமங்கலம் ஒன்றியத்தில் அமைந்துள்ள டாட்டா மின்னணுத் தொழிற்சாலை (TATA Electronics) திட்டமிட்டு வடநாட்டுப் பெண்களையும், ஆண்களையும் இறக்குமதி செய்து வேலையில் சேர்த்து வருவது வெட்ட வெளிச்சமானது. மேலும், 6,000 இந்திப் பெண்கள் இவ்வாலை வேலையில் சேர ஜார்கண்டில் பயிற்சி பெற்று வருகிறார்கள் என்ற செய்தியை இந்தியத் தொலைப்பேசித் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவித்தார்.

இந்திக்காரர்கள் உள்ளிட்ட வெளி மாநிலத்தவர்கள் வெள்ளம் போல் புகுந்து தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு நிறுவனங்களிலும் பெருங்குழும நிறுவனங்களிலும் பெரும் எண்ணிக்கையில் வேலையில் சேர்வதைத் தடுத்து, மண்ணின் மக்களாகிய தமிழர்களுக்கு இந்நிறுவனங்களில் 90 விழுக்காடு வேலை உறுதி செய்ய வேண்டும், 10 விழுக்காட்டிற்கு மேல் உள்ள வெளி மாநிலத்தவரை வெளியேற்ற வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் பல்லாண்டுகளாகத் தொடர்ந்து போராடி வருகிறது.

கடந்த 09.12.2022 அன்று, ஓசூர் டாட்டா ஆலை முன் முற்றுகைப் போராட்டம் நடத்தி, மண்ணின் மக்கள் வேலைக்கான கோரிக்கையை வலியுறுத்த முடிவு செய்து ஏற்பாடுகள் செய்தோம். ஆனால், தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் டாட்டா நிறுவனத்திற்கு சேவை செய்து, அறவழியில் நடத்த இருந்த அந்த ஒருநாள் முற்றுகைப் போராட்டத்தை ஆலைக்கு வெளியே ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் கூட நடத்தக்கூடாது என்று தடுத்தனர். காவல்துறையினரை ஏவிவிட்டு, ஆலையைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து யாரும் போராட்டத்திற்குப் போகக் கூடாது என்று மிரட்டித் தடுத்தனர். அப்பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்த போராட்டச் சுவரொட்டிகளைக் கிழித்தனர். வைக்கப்பட்டிருந்த பதாகைகளை எடுத்துச் சென்றனர்.

அப்போராட்டத்திற்கு வருவதற்காக தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்து 08.12.2022 இரவு புறப்பட இருந்த ஊர்திகளையும், தோழர்களையும் தடுத்தனர், காவல்துறையினர். சில ஊர்களில் உள்ளூர்க் காவல் நிலையங்களில் பேரியக்கத்தின் முன்னணிப் பொறுப்பாளர்களை அடைத்து வைத்தனர். வேறு பலரை வீட்டுக் காவலில் வைத்தனர்.

டாட்டாவுக்காகத் தி.மு.க. ஆட்சி நடத்திய இத்தனை ஒடுக்குமுறைகளுக்கும், சனநாயகப் படுகொலைக்கும் இடையே டாட்டா ஆலைக்கு அருகில் உள்ள உத்தனப்பள்ளியில் சற்றொப்ப 1,000 பேர் கூடி முழக்கமிட்டுப் பேரணியாகப் புறப்பட்டபோது, ஆண்கள் – பெண்கள் அனைவரையும் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். அவ்வட்டாரத்தில் டி.ஐ.ஜி. தலைமையில் 750 காவல்துறையினர் டாட்டா ஆலைக்குப் பாதுகாப்பு என்ற பெயரால் சனநாயக வழிப்பட்ட அறப்போராட்டத்தைத் தடுக்கும் கெடுபிடிப் பணியில் ஈடுபட ஆட்சியாளர்களால் அங்கே நிறுத்தப்பட்டனர்.

இத்தனை அடக்குமுறைகளையும் எதிர்கொண்டு ஆண்களும் பெண்களும் டாட்டா ஆலைப் போராட்டத்தில் திரளாக மக்கள் பங்கேற்றனர். அந்த ஆலையைச் சுற்றியுள்ள கிராமவாசிகள் கணிசமாகப் பங்கேற்றனர்.

“வெளியாரை வெளியேற்று! மண்ணின் மக்களுக்கு வேலை கொடு!” என்ற நமது போராட்டம் கட்சி எல்லைகளை – அமைப்பு வேறுபாடுகளைக் கடந்து தமிழர் என்ற இன உணர்ச்சி அடிப்படையில் மக்களிடையே தாக்கத்தை உண்டாக்கியுள்ளது.

இப்பின்னணியில், டாட்டா நிறுவனம் ஆலை அமைந்துள்ள கிருட்டிணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 69 பேருக்கு வேலை வழங்கும் நிகழ்ச்சியை ஆலை வளாகத்தில் ஆளுங்கட்சி – எதிர்க்கட்சிகளின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களையும், மாவட்ட ஆட்சியரையும் வைத்து 26.12.2022 அன்று நடத்தியுள்ளது. அ.தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி. முனுசாமி அவர்கள், “டாடா ஆலைக்கு எதிராக 09.12.2022 அன்று போராட்டம் இங்கு நடக்கவில்லை என்றால், எங்களைக் கூப்பிட்டிருக்க மாட்டீர்கள். தமிழ்நாடு அரசு சலுகை விலையில் நிலம் வாங்கிக் கொடுத்தும், சலுகைக் கட்டணத்தில் 5 ஆண்டுகளுக்க மின்சாரம் வழங்கியும் நீங்கள் எங்களையெல்லாம் சட்டை செய்வதில்லை. எங்கள் கோரிக்கைகளை ஏற்பதில்லை. இப்போது போராட்டங்கள் வந்தவுடன் கூப்பிடுகிறீர்கள்” என்று குத்திக்காட்டிப் பேசியுள்ளார். அக்கூட்டத்தில், டாட்டா நிறுவன நிர்வாக இயக்குநர் விவேகானந்தன், “இனி வெளி மாநிலத்திலிருந்து பணியாளர்களை எடுக்க மாட்டோம்” என்று உறுதி கொடுத்துள்ளார்.

அடுத்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (27.12.2022) இந்தியத் தலைமை அமைச்சர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதி, அதை ஊடகங்களுக்கு அனுப்பியுள்ளார். அதில், தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் வேலைகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும் என்று கோரியுள்ளார்.

இதற்கு மற்ற மாநில அரசுகள் தாங்களே சட்டம் இயற்றியுள்ளன; அல்லது அரசாணை வெளியிட்டுச் செயல்படுத்துகின்றன. ஆனால், மு.க. ஸ்டாலின் தலைமை அமைச்சர்க்கு விண்ணப்பம் போடுவுது, அதுகூட விழுக்காடு (சதவீத) அடிப்படையில் கோரிக்கை வைக்காமல் கோருவது, தமிழர்களிடையே எழுந்து வரும் மண்ணின் மக்கள் கோரிக்கையை மடைமாற்றி திசைதிருப்பும் நோக்கமாகவே புரிந்து கொள்ள முடிகிறது.

அதேவேளை, இங்குள்ள இந்திய அரசு நிறுவனங்களிலும், அலுவலகங்களிலும் 90 விழுக்காடு வேலை தமிழர்களுக்கு ஒதுக்கீடு செய்து நிறைவேற்ற வேண்டும் என்று பல்லாண்டுகளாகப் போராடி வரும் தமிழ்த்தேசியப் பேரியக்கப் போராட்டம் ஸ்டாலினைக் கூட நகர்த்தி உள்ளது என்று நாம் கவனத்தில் கொள்ளலாம்.

தேர்தல் அறிக்கையில் தமிழ்நாட்டு வேலைகள் தமிழருக்கே என சட்டமியற்றுவோம் எனக் கூறிவிட்டு, தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு, ஏன் சட்டமியற்றவில்லை என்று கேட்டு, கடந்த 22.10.2021 அன்று, சென்னை தலைமைச் செயலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். முதல்வரின் தனிச்செயலாளரிடம் இதைச் சுட்டிக்காட்டி மனு வழங்கினோம்.

கோவையில் 11.07.2022 அன்று, பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் தலைமையில், அஞ்சல்துறை மண்டலத் தலைவர் (PMG) அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தி 600க்கும் மேற்பட்டோர் கைதானோம்.

இப்பொழுது நமது கோரிக்கை –

1. 90 விழுக்காடு வேலை தமிழர்களுக்கே வழங்க வேண்டும். அதில் முன்னுரிமை கிருட்டிணகிரி மாவட்ட மக்களுக்கு! 10 விழுக்காட்டிற்கு மேல் உள்ள இந்திக்காரர்களை வெளியேற்ற வேண்டும்.

2. இப்போது மேற்படி ஆலையில் கிருட்டிணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 3,500 பெண்கள் வேலையில் இருப்பதாக ஆலை நிர்வாகம் கூறுகிறது. இது உண்மையா என்றும், மொத்தத் தொழிலாளிகளில் எந்தெந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எவ்வளவு பேர் என்றும் கள ஆய்வு செய்து, உள்ளதை உள்ளபடி தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அறிக்கை வெளியிட வேண்டும்.

3. இந்திய அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் துறைத் தொழிற்சாலைகள் ஆகியவற்றில் 90 விழுக்காடு வேலை தமிழ்நாட்டின் மண்ணின் மக்களுக்கு வழங்கவும், தமிழ்நாடு அரசுப் பணிகளில் 100 விழுக்காடு தமிழர்களுக்கு வழங்கவும் தமிழ்நாடு அரசு புதிதாகச் சட்டம் இயற்ற வேண்டும்.

மண்ணின் மக்கள் வாழ்வுரிமையைக் காக்கும் இக்கோரிக்கைகள் நிறைவேற தமிழ்நாடு முழுவதும் அனைவரும் தங்களால் இயன்ற மக்கள் திரள் போராட்டங்களை நடத்துமாறு கேட்டுக் கொள்கிறோம். தமிழ்த்தேசியப் பேரியக்கம் தொடர்ந்து போராடும் என்ற உறுதியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
============================
பேச: 9443918095, புலனம் : +91 98419 49462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/tamizhdesiyam
===================================

"ஆறு இலட்சம் பணியிடங்களில் தமிழ்நாடு அரசு அலுவலர்களை அமர்த்தாது! வேலை தேடுவோர் கதி என்ன?" ---- பெ. மணியரசன், தலைவர் – தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

Monday, December 26, 2022


ஆறு இலட்சம் பணியிடங்களில்

தமிழ்நாடு அரசு அலுவலர்களை அமர்த்தாது!
வேலை தேடுவோர் கதி என்ன?
=====================================
பெ. மணியரசன்,
தலைவர் – தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

=====================================

தமிழ்நாடு அரசுப் பணித் தேர்வாணையம், புதிதாக அலுவலர்கள் தேர்வு நடத்துவதை நிறுத்தி வைத்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் அத் தேர்வாணையம் பணி இடங்களுக்கான எந்தெந்த பிரிவுகளுக்கு எவ்வெப்போது தேர்வுகள் என்ற விவரத்தை வெளியிட்டுள்ளது.

அதில் பிரிவு 1 (குரூப் 1) பணித்தேர்வு பற்றிய அறிவிப்பு 2023 ஆகத்து மாதம் வெளியிடப்படும் என்றும் அதற்கான முதல்நிலைத் தேர்வு (Preliminary) 2023 நவம்பரில் நடைபெறும் என்றும், அதற்கான முதன்மை (Main)த் தோ்வு 2024 சூலையில் நடத்தப்படும் என்றும், நேர்காணல் 2024 டிசம்பரில் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது முதல் பிரிவு அலுவலர்கள் (அதிகாரிகள்) பணி அமர்த்தல் 2023, 2024 இரண்டு ஆண்டுகளிலும் நடக்காது.

பிரிவு 2, 2A, 3A பதவிகளுக்குான தேர்வு குறித்த அறிவிப்பு எதுவும் இல்லை. பிரிவு 4 – (group-4) பணியிடங்களுக்கு 1754 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட உள்ளதாக அறிவித்துள்ளது ஆணையம்.

தமிழ்நாடு அரசுப் பணியிடங்களின் மொத்த எண்ணிக்கை 15 இலட்சம் என்றும், இப்போது அப்பணிகளில் இருப்போர் எண்ணிக்கை 9 இலட்சம் மட்டுமே என்றும் தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராசன் அவர்கள் கூறியது 5.12.2021 அன்று ஊடகங்களில் வந்தது. அதாவது ஆறு இலட்சம் பணி இடங்கள் 2021 லிருந்து காலியாக உள்ளன. இந்த எண்ணிக்கை இப்போது இன்னும் கூடியிருக்கும்.

மக்களில் வேலையின்றித் தவிக்கும் பலலட்சம் பேரில் 6 இலட்சம் பேர்க்குத் தமிழ்நாடு அரசு உடனடியாக வேலை கொடுக்க முடியும். ஆனால் வெறும் 1754 பேரை நான்காம் நிலைப் பணிகளுக்கு மட்டும் எடுக்கப் போவதாக அரசு அறிவித்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன் நடத்தப்பட்ட நான்காம் பிரிவு (குரூப் 4) பணியாளர் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை 21 இலட்சத்து, 85 ஆயிரத்து 328 என்று கூறுகிறது இன்றைய (26.12.2022) தினத்தந்தி. தமிழ்நாடு அரசு, 2023, 2024-இல் பணியாளர்களையும் அலுவலர்களையும் புதிதாக வேலைக்குச் சேர்க்கப்போவதில்லை என்ற செய்தி தெரிந்த இளையோர் - ஆண்களும் பெண்களும் - கொதித்துப் போயுள்ளார்கள். அவர்களில் சிலரின் குமுறல்களைத் தினத்தந்தி நாளேடு வெளியிட்டுள்ளது.

மக்களுக்கு நிறைவான, சிறப்பான ஆட்சி தருவதில் “திராவிட மாடல்” இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகத்துக்கே முன்மாதிரியானது என்று முதல்வர் மு.க.டாலின் பேசிவருகிறார். சற்றொப்ப ஒரு கோடிப்பேர் படித்துவிட்டு உரிய வேலையில்லாமல் வறுமையிலும் மன உளைச்சலிலும் அல்லாடுகின்றனர். தமிழ்நாடு அரசுக்கு 6 இலட்சம் அலுவலர்கள் தேவை. எதிர்காலம் என்னாகுமோ என்று நிகழ்காலத்தில் அல்லாடும் தமிழர்களில் ஆறுலட்சம் பேரை வேலையில் சேர்த்து வாழ்வளிக்க திராவிட ஆட்சியாளர்களுக்கு இரக்கம் வரவில்லையா? அவர்களுக்கு சமூகப் பொறுப்பு இல்லையா?

தமிழ்நாடு அரசிடம் நிதி இல்லை என்பார்கள்! அமைச்சர்கள், ஆளுங்கட்சிப் பிரமுகர்கள் வருமானத்தில் பாதிப்பு எதுவும் இல்லையே! அண்ணா திமுக ஆட்சியாளர்கள் ஏற்கெனவே வகையினப்படி - வரையறுத்த விகிதப்படி கையூட்டுட்டுத் தொகை இப்போதுள்ள ஆட்சியாளர்களுக்கு வந்து கொண்டுதானே உள்ளது! விலைவாசி உயர்வுக்கேற்ப அத்தொகை உயர்ந்து கொண்டுதானே உள்ளது!

தமிழ்நாட்டின் இண்டு, இடுக்கு, முலை, முடுக்கிலெல்லாம் வரி, வரி என்று வசூலித்துப் புதுதில்லி அள்ளிக் கொண்டு போகிறது. அதில் தமிழ்ட்நாட்டிற்குரிய பங்கை உயர்த்தித் தர இந்திய அரசை தமிழ்நாடு வலியுறுத்தி, அதை மக்கள் கோரிக்கையாக மாற்றலாம் அல்லவா! இந்திய அரசு விதிக்கும் வரிஉயர்வு அனைத்தும் அசல் வரிக்கு மேலதிக வரியாக செஸ், (Cess) சர்சார்ஜ் (Sur-charge) வகையாகவே இருக்கின்றன. ஏன்? செஸ், சர்சார்ஜ் வகைகளில் வசூலாகும் தொகையில் மாநில அரசுக்குப் பங்கு தரவேண்டியதில்லை இந்திய அரசு.

புதுதில்லியின் இந்த வரிவேட்டை சூழ்ச்சியை எதிர்த்துத் தமிழர்கள் கொடுக்கும் எல்லாவகை வரிப்பணத்திலும் பெரும் பங்கு தமிழ்நாட்டிற்கே வேண்டும் என்று கோரிக்கை வைக்கத் திராவிட மாடல் மாநில சுயாட்சியில் – கொள்கை இல்லையோ?

மாநில அரசின் வரிவசூல் உரிமைகளைப் பறித்துக் கொண்டு, ஓட்டாண்டி ஆக்கி வருகிறது இந்திய ஏகாதிபத்திய அரசு! அதற்குக் கீழ்ப்பட்ட ஒரு மாநகராட்சிபோல் மாற்றி வருகிறது 8 கோடி மக்களைக் கொண்ட தமிழ்நாட்டை! ஆனால் அந்தக் குற்றேவல் பதவிகளையே பேரரசு அதிகாரம்போல் பித்தம் தலைக்கேற புகழ்ந்து கொள்ளும் பதவிக் காமம் திமுக தலைவர்களின் கண்களை மறைக்கிறது.

சாராய விற்பனையை அதிகப்படுத்தி மட்டும், தமிழ்நாட்டின் நிதித் தேவைகளை நிறைவு செய்ய முடியாது என்ற உண்மையை முதலமைச்சரும், நிதியமைச்சரும் உணர வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு நிறுவனங்களில்
தமிழர்களுக்கு வேலை கிடைக்கிறதா?

தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் ஒட்டு மொத்தமாகத் தமிழர்களைப் புறக்கணித்து இந்திக்காரர்களையும் இதர வெளிமாநிலத்தவரையும் வேலையில் சேர்க்கின்றனர். இந்த அநீதியைத் தமிழ்நாடு தட்டிக் கேட்கிறதா? அரசு தடுத்து நிறுத்துகிறதா? இல்லை. அவற்றில் வேலைக்காக நடக்கும் தேர்வுகள் தமிழ்நாட்டிற்குள்தான் நடக்க வேண்டும். இந்திய அளவில் நடத்தக் கூடாது என்று கூறி உரிமை மீட்க முடிகிறதா? அதற்கு உரத்துக் குரல் கொடுக்கிறார்களா? இல்லை; இல்லை! இதற்கெல்லாம் பயன்படாத முதலமைச்சர் பதவி எதற்கு?

தமிழ்நாட்டையே இந்தி மாநிலம் ஆக்கிவிடும் அளவிற்கு அன்றாடம் இந்திக்காரர்கள், வெள்ளம்போல் வந்து குவிகிறார்கள். உலகத்திற்கே வெளிச்சம் காட்டும் திராவிட மாடலில் தமிழ்நாட்டைக் கவ்வியுள்ள இந்த அயலார் இருட்டை நீக்க முடியவில்லையே ஏன்?

அமைச்சர் நாசர் இல்லத் திருமணவிழாவில் 19.12.2022 அன்று திருவேற்காட்டில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் “...இன்று தமிழகம் நாட்டிலேயே வளர்ச்சியில் முதலிடத்தில் உயர்ந்து நிற்கிறது என்பதுதான் மகிழ்ச்சியளிக்கிறது” என்று கூறினார் (முரசொலி 20.12.2022)

பலவகைக் கல்வி கற்று, உரிய வேலையில்லாமல் திண்டாடும் ஒரு கோடி பிள்ளைகளைப் பற்றி மு.க. ஸ.டாலினுக்குக் கவலையில்லை. பன்னாட்டு, வடநாட்டு முதலாளிகளைக் கூட்டிவந்து தொழில் தொடங்குவதிலும், அவர் முதல்வர் பதவி வகிப்பதிலும், அதற்கு நெருக்கமாக மகனைக் கொண்டுவந்து விட்டதிலும் அவருக்கு அளவிட முடியாத மகிழ்ச்சி! அந்த மகிழ்ச்சியில் இந்தியாவிலேயே முதலிடத்தில் தமிழ்நாடு இருக்கிறது என்று பூரிப்பு அடைகிறார்.

நம் இளையோர் இவற்றையெல்லாம் விமர்சித்தால், அல்லது கண்டித்தால் மட்டும் போதாது. மாற்று அரசியலை, மாற்று செயல்திட்டங்களை முன்வைத்து மக்களைத் திரட்ட வேண்டும்.

முதலில் கணிசமான மக்களிடம் மாற்றுத்திட்டம் குறித்த ஆதரவை உருவாக்க வேண்டும். பின்னர் அறவழிப்பட்ட மக்கள் திரள் போராட்டங்களை நடத்த வேண்டும். இந்திய அரசு – தமிழ்நாடு அரசு – இரண்டையும் நோக்கி நமது கோரிக்கைகளை - சிக்கல்களுக்கு நாம் கூறும் தீர்வுகளை முன்வைக்க வேண்டும்.

இதற்கெல்லாம் மிகவும் பொருத்தமான மாற்று அரசியல் தமிழ்த்தேசியம்! இப்பொழுது தமிழ்நாட்டில் வேளாண்துறை – சுற்றுச் சூழல் துறை – மனித உரிமைத் துறை போன்றவற்றில் தாக்கங்களை உண்டாக்கி, இயன்றவரை தீர்வுகளைப் பெறுவோர் யார்? பதவி அரசியலுக்கு வெளியே உள்ளோர்தான். ஒரே ஓர் எடுத்துக்காட்டு நம்மாழ்வார்!

நாம் தமிழ்த்தேசியத்தை முதன்மைப்படுத்தி மேற்கண்ட செயல்பாட்டாளர்கள் போல் செயல்களில் ஈடுபட்டால் நாம் முன்வைக்கும் கோரிக்கைகளை அடைய முடியும். மண்ணின் மக்களுக்கு தமிழ்நாடு அரசிலும், இங்குள்ள இந்திய அரசு நிறுவனங்களிலும், தனியார் துறையிலும் வேலை பெற முடியும்!

============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
============================
பேச: 9443918095, புலனம் : +91 98419 49462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/tamizhdesiyam
===================================

Labels: , ,

"வெண்மணி ஈகநாள் : டிசம்பர் 25 (1968) வெண்மணி பொதுவான புனித மண் ஆகட்டும்!" --- பெ. மணியரசன், தலைவர் – தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

Saturday, December 24, 2022


வெண்மணி ஈகநாள் : டிசம்பர் 25 (1968)

வெண்மணி பொதுவான புனித மண் ஆகட்டும்!
=====================================
பெ. மணியரசன்,
தலைவர் – தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
=====================================


அந்தக் குவியல் கொலை நடந்து 54 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. ஆனால், அந்த வெண்மணித் தீ மேலும் ஒளிவிட்டு எரிந்து கொண்டுள்ளது. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் கீழ்வெண்மணியில் 25.12.1968 அன்று ஓரு குடிசைக்குள் உயிர் காக்கக் குவிந்திருந்த உழவுத் தொழிலாளிகள் – ஒடுக்கப்பட்ட மக்கள் – முதியவர்கள் – பெண்கள் – குழந்தைகள் உட்பட 44 பேரை எரித்துக் கொன்று கரிக்கட்டை ஆக்கினர். சாதி ஆதிக்க – நிலக்கிழமை ஆதிக்கக் கொடியவர்கள்! இக்கும்பலின் தலைவன் கோபாலகிருட்டிண நாயுடு!

கொளுத்திக் கொன்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் குற்றவாளிள் அல்லர் என்று விடுதலை செய்தது சென்னை உயர் நீதிமன்றம்!

எரித்துக் கொல்லப்பட்டவர்களும், அவர்களைச் சேர்ந்தவர்களும் அவர்களுக்குத் தலைமை தாங்கிய சி.பி.எம். கட்சியின் உழவுத் தொழிலாளர்களும், உழவுத் தொழில் வேலைகளுக்கு – ஞாயமான கூலி உயர்வு வேண்டும் என்று கோரினர். இதற்காக வேலை நிறுத்தம் செய்தனர்; இதுதான் அவர்கள் செய்த “குற்றம்”!

கூலி உயர்வைக் கூட ஏற்றுக் கொண்டிருப்பார்கள் ஆதிக்கவாதிகள்! நம்மைக் கண்டால் கைகட்டி, அடிமையாய் வாழ வேண்டியவர்கள் – சரிநிகர்ச் சமானமாக – கூலி உயர்வு கேட்டுப் போராடும் “கொடுமையை” சாதியோடு இணைந்த நிலஉடைமை ஆதிக்கவாதிகளால் சகித்துக் கொள்ள முடியவில்லை. தீ வைத்துக் கொளுத்தி எரித்துக் கொன்றார்கள்.

வெண்மணி மக்களின் உயிர் ஈகத்திற்குப் பிறகுதான் கூலி உயர்வு பற்றி – அதிகாரிகளின் அமைதிப் பேச்சுவார்த்தை – கூலி உயர்வு ஒப்பந்தங்கள் என்ற நாகரிக நடைமுறைகள் வந்தன.

வெண்மணிப் படுகொலை வர்க்கப் போராட்டத்தின் விளைவு மட்டுமல்ல, சாதி ஆதிக்க எதிர்ப்பின் விளைவும் ஆகும்.

மனித உரிமை குறித்த விழிப்புணர்ச்சியும், வளர்ச்சியும் அதிகமாகி இருக்கும் இக்காலத்தில், வெண்மணி ஈகம் என்பது தமிழ் இனத்தின் – தமிழ்நாட்டு மக்களின் ஈகம் என்றே பொது நிலையில் அனைவராலும் பார்க்கப்பட வேண்டும். அதேபோல், சி.பி.எம். கட்சி, வெண்மணி ஈகியர் நினைவு மண்ணும் கட்டுமானங்களும் தங்கள் கட்சிக்கு மட்டுமே உரியது என்று கருதாமல் ஒட்டுமொத்த சமூகத்திற்குரிய ஈகம் என்றும், அதற்கான நினைவுச் சின்னம் என்றும் கருதி அதன் கதவுகளை அகலத் திறந்து விட வேண்டும்.

இன்று (24.12.2022) “இந்து தமிழ்” நாளிதழில், திருத்துறைப்பூண்டி வழக்கறிஞர் அரசு, எழுதியுள்ள வெண்மணிக் கட்டுரையில், மற்ற கட்சிகள் அமைப்புகள் – சுதந்திரமாக வந்து வீரவணக்கம் செலுத்திக் கொள்ள வாய்ப்பளிக்காமல் – அதிகக் கட்டுப்பாடுகள் போடுவதைக் கைவிட வேண்டும் என்று வேண்டுகோள் வைத்துள்ளார். மிகமிகச் சரியான அணுகுமுறை இது!

அப்போராட்டத்தை வழி நடத்தியது சி.பி.எம். கட்சி. அக்கட்சியின் உழவர் அமைப்பைச் சேர்ந்தவர்களே உயிரீகம் செய்தார்கள். அவ்வளவு பெரிய உயிரீகம், ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டிற்குரியது; ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் எல்லாப் பிரிவு மக்களும் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்த வேண்டும்.

தமிழ்ச் சமூகம் தன்னிடம் உள்ள சாதிப் பாகுபாட்டு, சாதி ஆதிக்கக் குறைகளைக் களைந்து கொள்ள அந்நாளில் உறுதி ஏற்க வேண்டும்!

வெண்மணி மக்களின் இவ்வளவு பெரிய குவியல் ஈகம் தமிழர்கள் அனைவர்க்கும் உரியது. மனித உரிமையில் அக்கறையுள்ள அனைத்து இன மக்களுக்கும் உரியது! அதன் ஏகபோகம் தன்னைவிட்டுக் கை நழுவிப் போகக் கூடாது என்று சி.பி.எம். கட்சி சிந்திக்கக் கூடாது. பல்வேறு அமைப்பினர் அங்கு வந்து வீரவணக்கம் செலுத்தும்போது அந்தந்த அமைப்பின் பெயரைச் டிசால்லி வாழ்க முழக்கம் எழுப்புவார்கள். அதைத் தடுக்கக் கூடாது.

ஒரு சிறந்த எடுத்துக்காட்டு, ஐயா முத்துராமலிங்கத் தேவர் குருபூசைக்கும், ஐயா இமானுவேல் சேகரனார் குருபூசைக்கும் எல்லாக் கட்சியினரும் எல்லா சனநாயக அமைப்பினரும் சென்று பொதுவாக வணக்கம் செலுத்தி வருகின்றனர். வெண்மணி நினைவிடம் அப்படி அனைவர்க்குமான பொது வணக்க நிலையம் ஆக வேண்டும்.

தமிழ்நாடு அரசு, வெண்மணி நினைவு நாளில் அரசு சார்பில், வணக்கம் செலுத்தும் முறையைக் கொண்டு வர வேண்டும்!

வழக்கம்போல், இவ்வாண்டும் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள் வெண்மணி சென்று வீரவணக்கம் செலுத்துகிறார்கள்!

வெண்மணி ஈகியர்க்கு வீரவணக்கம்! வீரவணக்கம்!

============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
============================
பேச: 9443918095, புலனம் : +91 98419 49462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/tamizhdesiyam
===================================

Labels: , ,

"“கரும்பு உழவர்கள் நிலங்கள் மீது கோடிக்கணக்கில் வங்கிக் கடன் வாங்கி ஏப்பம்விட்ட ஆலை நிலங்களைக் கைப்பற்றுங்கள்.” ---- உழவர் காத்திருப்புப் போராட்டத்தில் பெ. மணியரசன் எழுச்சி உரை!

Wednesday, December 21, 2022


“கரும்பு உழவர்கள் நிலங்கள் மீது கோடிக்கணக்கில் வங்கிக் கடன் வாங்கி ஏப்பம்விட்ட ஆலை நிலங்களைக் கைப்பற்றுங்கள்.”

=========================
உழவர் காத்திருப்புப் போராட்டத்தில் பெ. மணியரசன் எழுச்சி உரை!
=========================


கரும்பு உழவர்களுக்குத் தெரியாமல் அவர்கள் நிலங்களை வங்கிகளில் அடமானம் வைத்து 200 கோடி ரூபாய் கடன் பெற்றுக் கொண்டும், உழவர்களிடம் வாங்கிய கரும்புக்குப் பணம் தராமல் 100 கோடி ரூபாயைச் சுருட்டிக் கொண்டும் மோசடி செய்த தஞ்சை மாவட்டம் திருமண்டங்குடி ஆரூரான் சர்க்கரை ஆலை முதலாளிகளையும் அதற்கு உடந்தையாய் இருந்த அதிகாரிகளையும் உரிய வழக்கில் சிறையில் தள்ளவேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவரும் காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளருமான தோழர் பெ. மணியரசன் ஆவேசமாகப் பேசினார்.

குடந்தை அண்டக்குடியை அடுத்துள்ள திருமண்டங்குடி ஆரூரான் சர்க்கரை ஆலை வாயில் முன்பாக – மேற்படி ஆலை நிர்வாகத்தால் மோசடிக்குள்ளான உழவர்கள் கடந்த 30.11.2022 முதல் நீதிகேட்டு காத்திருப்புப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இப்போராட்டத்தின் 21-ஆம் நாளான 20.12.2022 அன்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன், பேரியக்கத்தின் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் நா. வைகறை, தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. விடுதலைச்சுடர், பொதுக்குழு உறுப்பினர் தோழர் தீந்தமிழன், தமிழ்நாடு உழவர் முன்னணி குடந்தைப் பகுதிப் பொறுப்பாளர் தோழர் திருஞானம், ஆவூர் ஆசிரியர் பெ. கோபால் மற்றும் தோழர் தூயவன் உள்ளிட்ட தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்களும், பட்டீசுவரம் தமிழக உழவர் முன்னணியினரும் கலந்து கொண்டு காத்திருப்புப் போராட்டம் நடத்தும் கரும்பு உழவர்களுக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.

உழவர்களுக்கான கோரிக்கை முழக்கங்களைத் தோழர் நா. வைகறை எழுப்பிட, உழவர்கள் இடியோசைபோல் எதிரொலித்தனர்.

கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் திரு. தங்க. காசிநாதன், செயலாளர் திரு. நாக. முருகேசன், திருவாளர்கள் இராசேந்திரன், இரவிச்சந்திரன், சரபோஜி ஆகியோரும் திரளான உழவர்களும் பங்கேற்றனர்.

சர்க்கரை ஆலை நிலங்களில் சாகுபடி செய்யுங்கள்

வாழ்த்திப் பேசிய தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் பின்வருமாறு கூறினார்:
“உழவர்களே, நீங்கள் உங்கள் கரும்பு சாகுபடிக் கடனுக்காக வங்கிப் படிவங்களில் கையெழுத்துப் போடும்போது, சூழ்ச்சியாக, சர்க்கரை ஆலைக்கான கடனுக்கு உங்கள் நிலங்களை அடமானம் வைத்ததாக பொய் ஆவணம் தயாரித்துள்ளார்கள். இவ்வாறு உழவர்கள் நிலங்களை அடமானம் வைத்து 200 கோடி ரூபாய் ஆரூரான் சர்க்கரை ஆலை முதலாளி ராம் தியாகராசனும், ஆலை நிர்வாகமும் சுருட்டிக் கொண்டுள்ளனர். இவர்கள் அனைவரையும் உரிய தண்டனைச் சட்டப்பிரிவுகளில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.

இதேபோல், எ. சித்தூர் ஆருரான் சர்க்கரை ஆலையிலும் கரும்பு உழவர்களைக் காவு கொண்டுள்ளது மோசடிக் கும்பல்.

பெண்ணாடம் அம்பிகா சர்க்கரை ஆலையில் வேறொரு மோசடிக்கும்பல் – அதாவது ஆலை நிர்வாகிகளும் வங்கிகளின் ஊழல் பெருச்சாளிகளும், நூறு கோடிக்கு மேல் உழவர்களின் நிலங்களை மோசடியாக அடமானம் வைத்து ஏமாற்றியுள்ளார்கள். அத்துடன், உழவர்களிடம் வாங்கிய கரும்புக்கு ஆலை நிர்வாகம் பணம் தராமல் ஏமாற்றிவிட்டது. இந்த ஆலைகளையும் மூடிவிட்டார்கள்; கால்ஸ் சாராய குழுமத்திற்கு மேற்படி ஆலைகளை விற்றுவிட்டார்கள். தமிழ்நாடு அரசுக்கு சர்க்கரை ஆலை தேவை இல்லை; சாராய ஆலைதான் தேவை.

தமிழ்நாடு முதலசை்சர் அவர்கள் இதில் போர்க்கால வேகத்துடன் தலையிட்டு, உழவர்கள் தலையில் சுமத்தப்பட்டுள்ள கடன்களை விலக்கித் தீர்வு காண வேண்டும். மோசடிக் குற்றவாளிகளைச் சிறையில் தள்ள வேண்டும்.

மோசடி செய்து உழவர்கள் தலையில் கடன் சுமத்தியதுடன் – அவர்களிடம் வாங்கிய கரும்புக்கும் விலை தராமல் – ஆலையையும் அதன் நிலம் உள்ளிட்ட சொத்துக்களையும் விற்றது குற்றம். ஆலை நிர்வாகம் மோசடியாக உழவர்கள் மீது சுமத்திய கடனுக்கும், உழவர்கள் விற்ற கரும்புக்கு நிர்வாகம் விலைதராமல் இருப்பதற்கும் தீர்வு காணாமல் கால்ஸ் நிறுவனம் இந்த ஆலையை வாங்கியது குற்றம்.

வெண்ணையை வீட்டில் வைத்துக் கொண்டு வீதியில் நெய்க்கு அலைய வேண்டாம். திருமண்டங்குடி ஆலையின் 440 ஏக்கர் நிலங்களைக் கரும்பு உழவர்கள் கைப்பற்றி – ஒவ்வொருவருக்கும் வரவேண்டிய பணத்திற்கேற்ப நிலங்களைப் பகிர்ந்து சாகுபடி செய்ய வேண்டும். அவ்வாறு வயலில் இறங்கி நிலம் பகிரும்போராட்டத்தில் நாங்களும் பங்கேற்போம். ஆதரவாக மற்ற உழவர்களும் வருவார்கள்.”
“தற்காப்புக்கான சிறந்த உத்தி முதலில் தாக்குதல் தொடுப்பதே என்பர். உங்கள் போராட்டம் வெல்க” என்று பேசி முடித்தார்.
==========================================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
============================
பேச: 9443918095, புலனம் : +91 98419 49462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/tamizhdesiyam
===================================

Labels: ,


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்