<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d6955529389241309188\x26blogName\x3d%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86.%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://thozharmaniyarasan.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com/\x26vt\x3d-8408640130511538487', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

"பன்னாட்டு நிறுவனங்களுக்காக வேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம்!" -- தோழர் பெ. மணியரசன் எச்சரிக்கை!

Sunday, October 22, 2017


=================================
பன்னாட்டு நிறுவனங்களுக்காக
வேளாண்மையைப் பலியிட
மோடி அரசின் புதிய திட்டம்!
=================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
தோழர் பெ. மணியரசன் எச்சரிக்கை!
=================================

இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திர மோடியின் நேரடிப் பொறுப்பிலுள்ள “நிதி ஆயோக்” என்ற இந்திய மறுசீரமைப்பு ஆணையத்தின் முழுநேர உறுப்பினர் இரமேஷ் சந்த், வேளாண்மையை மாநில அதிகாரப் பட்டியலிலிருந்து நடுவண் அதிகாரப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார். 

அவ்வாறு மாற்றுவதன் மூலம் அனைத்திந்திய அளவில் பல மாநிலங்களுக்கிடையே வேளாண் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு கிடைக்கும், வேளாண் பொருட்களின் விலையை சீராக வைத்திருக்கலாம், கூடுதல் விலை கிடைக்க வாய்ப்பு உருவாகும், பன்னாட்டுத் தொழில் நுட்பங்களை நடுவண் அரசின் மூலம் வேளாண்மையில் பயன்படுத்தலாம், வேளாண்மையை நவீனப்படுத்தலாம் என்றெல்லாம் அவர் கூறியுள்ளார். 

இப்பொழுதுள்ள சட்டப்படி, இந்தியா முழுவதும் ஒரே உணவு மண்டலம்! வேளாண் விளை பொருட்களை இந்தியா முழுவதும் விற்பதற்கு தடைச் சட்டம் எதுவுமில்லை. எனவே, இந்தியா முழுவதும் வேளாண் விளை பொருட்களை சந்தைப்படுத்துவதற்காக நடுவணரசிடம் வேளாண்மையைக் கொண்டு செல்ல புதிய தேவை எழவில்லை!

வேளாண் உற்பத்திப் பொருட்கள் அனைத்தையும், இந்திய அரசு இலாப விலைக்குக் கொள்முதல் செய்யும் திட்டம் எதையும் இரமேஷ் சந்த் கூறவில்லை. நடுவணரசிடம் வேளாண்மை போனால், வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கு இப்பொழுதுள்ள குறைந்தபட்ச ஆதரவு விலையைவிடக் கூடுதல் விலை கிடைக்கும் என்று இரமேஷ் சந்த் கூறுகிறாரே தவிர, அதற்கான வழிவகைகள் எதையும் அவர் கூறவில்லை! 

வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யும் அதிகாரம் ஏற்கெனவே இந்திய அரசின் கையில்தான் இருக்கிறது. இந்திய அரசு அடிமாட்டு விலைக்கு வேளாண் விளை பொட்களுக்கு விலை நிர்ணயிக்கிறது. இதனால்தான், உழவர்கள் கடனாளியாகி இந்தியா முழுவதும் தற்கொலை செய்து கொள்கிறார்கள். 

இப்பொழுது விலை உயர்வுக்குப் பரிந்து பேசுவதைப்போல் பாசாங்கு செய்கிறார் நடுவண் அரசு அதிகாரி! நடுவண் அரசு வேளாண் விளை பொருட்களுக்கு இலாப விலை நிர்ணயிக்க மாநில அரசுகள் தடுத்தனவா? அனைத்திந்திய சந்தையில் விலை கூடுதலாகக் கிடைக்கும் என்று ஆசை வார்த்தைக் காட்டுகிறார் - அறுக்கப் போகும் ஆட்டிற்குத் தழையைக் கொடுத்து அழைத்துச் செல்வதைப் போல! 

முதலில், வேளாண்மையை தில்லி அதிகாரத்திற்குக் கொண்டு போக வேண்டும். அடுத்ததாக, விளை நிலங்களை தில்லி அதிகாரத்தின்கீழ் கொண்டு போக வேண்டும். தனிநபர் நிலம் விற்று வாங்குவதையும் தில்லி அதிகாரத்தின்கீழ் கொண்டு செல்ல வேண்டும். அதன்பிறகு, வேளாண் உற்பத்தியில் வணிகக் கொள்ளைக்காக பன்னாட்டு நிறுவனங்கள் உருவாக்கும் மரபீனி மாற்று விதை, மறுபடியும் முளைக்காத விதை போன்ற பல்வேறு விதைகளையும், பூச்சி மருந்துகளையும், நவீன சாகுபடி முறைகளையும் தாராளமாகத் திணிக்க வேண்டும். 

அடுத்த கட்டமாக, விளை நிலங்களை பெருங்குழும நிறுவனங்கள் வாங்குவதற்கும் ஓ.என்.ஜி.சி. போன்ற இந்திய அரசு நிறுவனங்கள் தங்குதடையின்றி வேட்டையாடுவதற்கும் தாராளமாகக் கதவு திறந்துவிடும் வகையில் – நிலத்தின் மீதான அதிகாரத்தையும் நடுவணரசுக்குக் கொண்டு போக வேண்டும். இதுதான் இந்திய அரசு மறைத்து வைத்துள்ளத் திட்டம்!

இப்பொழுது நடுவண் அரசு திணிக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் மரபீனி மாற்று விதைகளை, சில மாநில அரசுகள் தடுத்து வைத்துள்ளன. அதேபோல், பன்னாட்டு நிறுவனங்களுக்கு நிலம் கையகப்படுத்தித் தருவதிலும் சில மாநில அரசுகள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றன. இவற்றையெல்லாம் முறியடித்து, ஒற்றை அதிகாரத்தை தில்லியில் வைத்துக் கொண்டு, பன்னாட்டு நிறுவனங்களுக்கு நிலங்களையும், சாகுபடியையும் திறந்துவிட மோடி அரசு கடும் முயற்சி செய்கிறது. 

வெளிநாட்டு நிறுவனங்களும் இந்திய நாட்டு நிறுவனங்களும் தங்கள் தொழிலுக்காக விளை நிலங்களை வாங்குவதற்கு நிலம் கையகப்படுத்தித் தரும் பொறுப்பு அரசிடமிருக்க வேண்டியதில்லை, அந்தந்த நிறுவனங்களே உழவர்களிடம் நேரடியாக விலை பேசி வாங்கிக் கொள்ளலாம் என்ற திட்டத்தை அண்மையில் வெளியிட்டார்கள்.

இதன் தொடர்ச்சியாகத்தான் வேளாண்மையை நடுவணரசு அதிகாரத்திற்குக் கொண்டு போகும் ஆலோசனையை, நரேந்திர மோடியின் குரலாக செயலாற்றி வரும் இரமேஷ் சந்த் கூறியுள்ளார். இப்பொழுது இரமேஷ் சந்த் கூறியுள்ள ஆலோசனை சட்டமானால், இந்தியா முழுவதுமுள்ள வேளாண்மையும் உழவர்களும் காலப்போக்கில் பன்னாட்டு நிறுவனங்களிடம் தங்கள் நிலங்களை ஒப்படைத்துவிட்டு, ஊரைவிட்டு வெளியேறி நகரங்களில் கூலி வேலை தேடும் அவலம்தான் மிஞ்சும்! 

எனவே, வேளாண்மையை நடுவணரசு அதிகாரத்திற்குக் கொண்டு செல்லும் ஆலோசனையை கருத்தளவில் இருக்கும்போதே தடுக்க வேண்டிய பொறுப்பு, உழவர்களுக்கு மட்டுமல்ல, உணவு உண்ணும் அனைத்து மக்களுக்கும் தாயக மண்ணை நேசிக்கும் அனைவருக்கும் இருக்கிறது! 

இந்தத் திட்டம் செயலுக்கு வந்தால், இந்தியா முழுவதும் உழவர் போராட்டங்களை மோடி அரசு எதிர் கொள்ள வேண்டியிருக்கும். ஏற்கெனவே பணமதிப்புமாற்றம், ஜி.எஸ்.டி. போன்றவற்றால் ஓட்டாண்டியாகியுள்ள அனைத்துப் பகுதி மக்களும், உழவர்களும் ஒன்றுசேர்ந்து மோடி அரசுக்கு எதிரான உரிமைப் போரை நடத்துவார்கள் என்பதை புரிந்து கொண்டு, மோடி அரசு இந்த ஆலோசனையை ஏற்கக் கூடாது என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். 

Labels: ,

"மயக்கும் மாநில சுயாட்சியும் தோற்றுப்போன கூட்டாட்சிக் கோட்பாடும்" -- தோழர் பெ. மணியரசன்

Wednesday, October 18, 2017


======================================
மயக்கும் மாநில சுயாட்சியும்
தோற்றுப்போன கூட்டாட்சிக் கோட்பாடும்
======================================
தோழர் பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
======================================

தமிழ்நாட்டில் “மாநில சுயாட்சிப்” பருவம் மறுபடியும் தொடங்கியுள்ளது. திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் மாநில சுயாட்சி பற்றிப் பேசி வருகிறார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் மாநில சுயாட்சி மாநாடு போட்டார். அந்த மாநாட்டில் தமிழ்நாடு காங்கிரசுத் தலைவர் திருநாவுக்கரசரும் மாநில சுயாட்சியை ஆதரித்துப் பேசினார். சிபிஎம், சிபிஐ கட்சிகளின் தமிழ்நாட்டுத் தலைவர்களான ஜி. இராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோரும் மாநில சுயாட்சியை வலியுறுத்திப் பேசிவருகின்றனர்.

தமிழ் இன உணர்ச்சியும் தமிழ்த்தேசியக் கருத்தியலும் இளைஞர்களை ஈர்த்து வரும் இக்காலத்திற்கேற்ற இன்னொரு இடைக்கால முழக்கமாக மாநிலத் தன்னாட்சி இவர்களுக்கு வாய்த்திருக்கிறது. 1970களில் திமுக மாநில சுயாட்சி மாநாடு போட்டு தமிழ்நாட்டிற்கென தனிக் கொடி ஏற்றியது. சிபிஎம் கட்சி, பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சி, திமுக உள்ளிட்ட கட்சிகளுடன் சேர்ந்து மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் கேட்டுக் கமுக்கக் கூட்டங்கள் (conclave) பலவற்றில் கலந்து கொண்டது. அதன்பிறகு மாநிலத் தன்னாட்சி, மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் என்ற முழக்கங்களை “அம்போ” என்று விட்டுவிட்டு அடுத்தடுத்து வாக்குச் சந்தைக்கு வாய்ப்பான வெவ்வேறு முழக்கங்களை மேற்கண்ட எல்லோரும் முழங்கினர். 

மாநில அதிகாரங்களைத் தொடர்ந்து பறித்து வந்த காங்கிரசு, பாசக கட்சிகளின் தலைமையில் கூட்டணி சேர்ந்து நடுவண் அரசில் அமைச்சர்களைப் பெற்றது திமுக. தமிழினத்திற்கு அதிகாரம் கேட்டவர்கள் தங்களுக்கான கங்காணி அதிகாரம் பெற்றனர். அதிகாரத்தில் பங்கு பெறாமல் காங்கிரசின் ஆட்சியைப் பாதுகாக்கும் கூட்டணியில் சிபிஎம், சிபிஐ கட்சிகள் இடையில் சேர்ந்திருந்தன. இப்போது ஒளிவு மறைவற்ற கூட்டணியைக் காங்கிரசுடன் ஏற்படுத்திக் கொள்ள சிபிஎம் ஆராய்ந்து வருகிறது. 

பாரதமாதா பக்தியில் பாசக, காங்கிரசுக் கட்சிகளுடன் போட்டி போடும் அளவிற்கு இந்தியத் தேசியவாதிகளாய் உள்ளனர் சிபிஎம், சிபிஐ தலைவர்கள்! பாரதமாதாவுக்கோ, எந்நேரமும் அடங்காத அதிகாரப்பசி! அந்த அதிகாரப் பசிக்கான உணவு மாநில உரிமைகள்! 

இன்றைக்கும் மாநில அதிகாரப் பறிப்புக் கட்சியான காங்கிரசுடன் திமுக கூட்டணி அமைத்துள்ளது. நாளைக்குப் பாசக கூப்பிட்டால் அதன்பக்கம் தாவவும் திமுக அணியம்தான்!

இதுதான் திமுக கூட்டணியின் மாநிலத் தன்னாட்சி மகத்துவம்!

மாநில சுயாட்சியா?
தேசியத் தன்னாட்சியா? 
---------------------------------------
இது ஒரு பக்கம் இருக்க, மாநிலத் தன்னாட்சி என்ற சொற்கோவையே, இந்திய ஏகாதிபத்தியத்திற்கு மண்டியிடும் இவர்களின் மனப்பான்மையைத்தான் வெளிப்படுத்துகிறது. தேசிய இனத் தாயகத்திற்கான தன்னாட்சிதான் கோர வேண்டும். நமது தேசிய இனத்தாயகம் தமிழ்நாடு! தமிழ்நாட்டுத் தன்னாட்சி என்று கூறாமல், மாநிலத் தன்னாட்சி என்று கூறுவதன் பொருள் என்ன?

இந்தியாதான் தேசம், இந்தியர்தான் தேசிய இனம், இந்தியத் தேசியம்தான் ஒரே தேசியம், தமிழ்நாடு இந்தியாவில் ஒரு மண்டலம், அல்லது ஒரு பிராந்தியம். அந்தப் பிராந்தியப் பெயர் மாநிலம். மாநில சுயாட்சி என்று நாங்கள் கோருவதுகூட பிராந்திய சுயாட்சிதான்! தமிழ்த் தேசிய இனத்தின் தன்னாட்சியோ, தமிழ்த் தேசியத்தின் தாயகமான தமிழ்நாட்டின் தன்னாட்சியோ அல்ல என்று தில்லி எசமானர்களுக்கு இங்கிதமாக இவர்கள் தெரிவித்துக் கொள்கிறார்கள். அதனால்தான் இவர்கள் தமிழ்நாட்டுத் தன்னாட்சி என்று முழக்கம் வைக்காமல் உள்நோக்கத்துடன் “மாநில சுயாட்சி” என்று கூறுகின்றனர். அனைத்திந்தியாவிற்கும் கேட்பதெனில், தேசிய இனங்களின் தன்னாட்சி என்று கேட்க வேண்டும். 

இந்திய அரசை ஒரு கூட்டாட்சி (Federal State) அரசாக மாற்ற வேண்டும். அதன் காரணமாக மொழிவழி மாநிலங்களாக அமைக்கப்பட்டுள்ள தேசிய இனத் தாயகங்களுக்குத் தன்னாட்சி (Autonomy for Nationality Homelands) வழங்க வேண்டும். படைத்துறை, வெளியுறவுத்துறை, பண அச்சடிப்பு, தகவல்தொடர்பு போன்ற சிலவற்றைத் தவிர மற்ற எல்லா அதிகாரங்களும் தேசிய இனத் தாயகத்திற்கு வரவேண்டும். 

மாநில சுயாட்சி பேசுவோர் இப்படித் தெளிவாக தங்களின் முழக்கத்திற்கு வரையறை தரவில்லை. மாநில சுயாட்சி மாநாடு நடத்திய திருமாவளவன்கூட இவ்வாறு வரையறை செய்து தீர்மானம் நிறைவேற்றவில்லை. 

“இந்திய தேசம் வலிமையாக இருக்க வேண்டும், இந்தியத் தேசம் வலிமையாக இருந்தால்தான் தலித்துகளுக்கும் விளிம்புநிலை மக்களுக்கும் பாதுகாப்பு” என்று திருமாவளவன் அம்மாநாட்டில் பேசினார். அதே மாநாட்டில் பேசிய மு.க. ஸ்டாலின், இந்திய அரசு வலிமையாக இருக்க வேண்டும் என்பதில் எங்களுக்கும் மாற்றுக் கருத்தில்லை என்று பேசினார்.

இவர்கள் மாநில சுயாட்சி என்ற முழக்கத்தை நடுவண் அரசிடமிருந்து சில அதிகாரங்களையாவது கூடுதலாகப் பெறுவது என்ற உண்மையான நோக்கத்தில் முன்வைத்துப் போராடினால், தமிழ்த்தேசிய இறையாண்மை இலக்கை அடைவதற்கான ஒருபடி முன்னேற்றம் என்ற அளவில் அதை வரவேற்கலாம். ஆனால் அதிலும் அவர்களுக்கு உண்மையான அக்கறை இல்லை என்பதைத்தான் அவர்களின் கடந்தகால வரலாறும், இப்போதையப் பேச்சுகளும் வெளிப்படுத்துகின்றன. 

இன்றையப் பருவத்திற்கேற்ப இடைக்கால முழக்கமாகப் போலி மாநில சுயாட்சி பேசுவோரைப் பற்றி இதுவரை பார்த்தோம். 

இனி உண்மையான கூட்டாட்சி பற்றியும் தேசிய இன அடிப்படையில் தன்னாட்சி பெற்ற இனங்கள் நடைமுறையில் உண்மையான சமத்துவம் பெற்றிருந்தனவா என்பது பற்றியும் பார்க்க வேண்டியது மிகமிக முக்கியம். 

உலகநாடுகளின்
தன்னாட்சியும் – கூட்டாட்சியும் 
--------------------------------------------------
உலகத்தில் தேசிய இனத் தன்னாட்சி கொண்ட கூட்டாட்சி அரசுகள் சிறுபான்மைத் தேசிய இனங்களுக்குச் சமத்துவம் வழங்காமல் தோற்றுவிட்டன. தேசிய இனங்களின் கூட்டாட்சிக் கோட்பாடு தோற்றுவிட்டதுதான் நடைமுறை உண்மை.

சனநாயக உருவாக்கத்திலும் அதன் வளர்ச்சியிலும் முகாமையான பங்கு வகித்த நாடுகள் பிரித்தானியாவும் பிரான்சும்! இந்த ஆங்கிலேயரும் பிரஞ்சியரும் சேர்ந்து கூட்டாட்சி அமைத்த நாடு கனடா! பழம்பெரும் கூட்டாட்சி அது! கனடாவில் பிரஞ்சு மக்கள் தாயகம் கியுபெக்! இதர மாநிலங்களில் எல்லாம் ஆங்கிலேயர் மிகப் பெரும்பான்மையோர். கனடாவில் ஆங்கிலேயர் மக்கள் தொகை 56.9% பிரஞ்சியர் மக்கள் தொகை 21.3% 

ஆங்கிலேயர், ஆங்கில ஆதிக்கம் கனடாவில் மேலோங்கி பிரஞ்சுக்காரர்கள் இரண்டாந்தரக் குடிமக்கள் ஆக்கப்பட்டனர். பிரஞ்சு கியுபெக் தனிநாடு கேட்டுப் போராடுகிறது. ஒரு முறை கியுபெக்கில் கருத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. கியுபெக் பிரிவினைக்கு ஆதரவான வாக்குகள் ஒற்றுமைக்கான வாக்குகளை விட சிறிதளவு குறைந்து விட்டது. எனவே கியுபெக் தேசம் அமைவது தள்ளிப் போய்விட்டது. மீண்டும் ஒரு கருத்து வாக்கெடுப்புக்காக காத்திருக்கிறது கியுபெக். பிரஞ்சு மக்கள் நிம்மது இழந்து தவிக்கிறார்கள். 

பிரித்தானியாவில் ஆங்கிலேயர் பெரும்பான்மையினர். அடுத்த நிலையில் ஸ்காட்லாந்தியர், ஐரிஷ், வேல்ஸ் தேசிய இனங்கள்! வடக்கு அயர்லாந்து (ஐரிஷ்) விடுதலை கோரி நீண்டகாலமாகப் போராடி வருகிறது. ஐரிஷ் விடுதலை இயக்கமும் மக்களும் மிகக் கடுமையான அடக்குமுறைகளைச் சந்தித்தனர். அந்த ஐரிஷ் மக்களுக்கு மாநில அரசு, நாடாளுமன்றம், அதற்கான சில அதிகாரங்கள் ஆகியவற்றை ஆங்கிலப் பெரும்பான்மை அரசு வழங்கியுள்ளது. ஆனாலும் விடுதலைக் கோரிக்கையை வடக்கு அயர்லாந்து கைவிடவில்லை. 

கடந்த பத்தாண்டுகளில் ஸ்காட்லாந்து விடுதலைக் கோரிக்கை வேகம் எடுத்தது. அதன்பிறகு ஸ்காட்லாந்து மக்களுக்கான மாநில அரசு, நாடாளுமன்றம் அமைக்கப்பட்டன. ஆனாலும் தாங்கள் கோரும் சமத்துவம் கிடைக்கவில்லை என்றும் விடுதலை வேண்டும் என்றும் ஸ்காட்லாந்தியர்கள் போராடி வருகிறார்கள். அதற்காகக் கடந்த ஆண்டு ஸ்காட்லாந்தில் விடுதலை குறித்துக் கருத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. குறைவான வாக்கு வேறுபாட்டில் ஸ்காட்லாந்து விடுதலைக்கோரிக்கை வெற்றிவாய்ப்பை இழந்தது. மற்றுமொரு கருத்து வாக்கெடுப்பை நோக்கி ஸ்காட்லாந்து காத்திருக்கிறது. 

கியுபெக், ஸ்காட்லாந்து இரண்டும் குறைந்த வாக்கு வேறுபாட்டில் தோற்றதற்குக் காரணம் அவ்விரு மாநிலங்களிலும் ஆங்கிலேயர்கள் அதிகமாகக் குடியேறியது என்கிறார்கள். 

ஐரோப்பாவின் இன்னொரு வளர்ச்சியடைந்த நாடான ஸ்பெயினிலிருந்து பிரிந்து செல்ல கட்டலோனியத் தேசிய இனமும் பாஸ்க் தேசிய இனமும் விடுதலை கேட்கின்றன. ஸ்பெயின் நாடு கட்டலோனியாவுக்கு 1932 ஆம் ஆண்டே தன்னாட்சி வழங்கிவிட்டது. கட்டலோனியாவில் வலுவான மாநில அரசு இருக்கிறது. அது பிரிந்து போவதற்கான கருத்து வாக்கெடுப்பை அண்மையில் (1.10.2017) நடத்தியது. அக்கருத்து வாக்கெடுப்பு சட்டவிரோதமானது என்று அறிவித்த ஸ்பெயின் நடுவண் அரசு, கட்டலோனியாவில் கடும் அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிட்டது. 

வாக்குப்பெட்டிகளைப் பறித்துச் செல்வது, வாக்களிக்க வரிசையில் நின்ற மக்களை அடித்துக் கலைப்பது, பெண்களை காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குவது, என வன்முறைகளை ஏவியது ஸ்பெயின் நடுவண் அரசு. அப்படி இருந்தும் வாக்களிக்க வாய்ப்பு கிடைத்த 43 விழுக்காடு கட்டலோனியர்களில் 92 விழுக்காட்டினர் கட்டலோனியாவின் விடுதலைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்கள். 

இராக்கில் அமெரிக்க உதவியுடன் மாநிலத் தன்னாட்சி பெற்ற குர்தீசு அரசு இருக்கிறது. அது கடந்த செப்டம்பர் 25இல் நடத்திய கருத்து வாக்கெடுப்பில் குர்தீசு மக்கள் தனிநாட்டுக்கு ஆதரவாகப் பெருவாரியான வாக்குகள் அளித்தனர். 

இவையெல்லாம் முதலாளிய நாடுகள். இவற்றில் இன ஒடுக்குமுறை, இனப் புறக்கணிப்பு இருக்கும். கம்யூனிச நாட்டில் எல்லா வகைச் சமத்துவமும் உண்டு, பாட்டாளி வர்க்க சர்வதேசியச் சமத்துவம் அதன் உயிர்நாடி என்பர் மார்க்சியர்கள். 

கம்யூனிஸ்ட் சோவியத் ஒன்றியம் 1990களில் பதினைந்து நாடுகளாகப் பிரிந்தது ஏன்? அதன்பிறகு கம்யூனிஸ்ட் செக்கஸ்லோவியா இரு நாடுகளாகவும் யுகோஸ்லோவியா ஆறு நாடுகளாகவும் பிரிந்தது ஏன்?

சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியம் என்பது நாட்டின் பெயர். எந்த இன அடையாளமும் அதில் இல்லை. மாநிலம் என்று இல்லாமல் ஒவ்வொரு தேசிய இனமும் ஒரு குடியரசு என்று அந்நாட்டின் அரசமைப்புச் சட்டம் கூறியது. ஒற்றை ஆட்சி மொழி கிடையாது. பதினைந்து மொழிகளும் ஆட்சி மொழி என்றது அதன் அரசமைப்புச் சட்டம். பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமை (சுயநிர்ணய உரிமை) ஒவ்வொரு குடியரசுக்கும் உண்டு என்று அந்த அரசமைப்புச் சட்டம் கூறியது. முதலாளிகள், நிலக்கிழார்கள் என்று யாருமில்லை அங்கு! 

பிரிந்துபோன லித்துவேனியா, லாட்வியா, எஸ்த்தோனியா, அஜர்பைஜான், ஜார்ஜியா, உக்ரைன், பைலோரசியா, கிர்க்கிஸ்தான், கஜக்கஸ்தான் போன்ற தேசிய இனங்கள் என்ன கூறின, “எங்கள் மீது ரசியமொழி திணிக்கப்பட்டது, இரசிய இனமே மேலாதிக்கம் செலுத்தியது, இரசிய இனம் எங்களைச் சுரண்டியது என்பதுதான் அவர்களின் முதன்மைக் குற்றச்சாட்டு!

இவ்வாறு குற்றஞ்சாட்டியவர்களும் கம்யூனிஸ்ட்டுகள்! ஒரே ஒரு சான்று மட்டும் காட்டுவோம். கனடாவின் டொரண்டோ பல்கலைக் கழகத்தில் உக்ரைன் ஆய்வு இருக்கையின் ஆய்வாளராக உள்ள ஸ்டீபன் வெளிச்சென்கோ எழுதியுள்ள “உக்ரேனிய மார்க்சியரும் இரசிய ஏகாதிபத்தியமும் 1918-1923 : நிகழ்காலக் கிழக்கு ஐரோப்பாவின் அயர்லாந்திற்கான முகவுரை (Ukrainian Marxists and Russian Imperialism 1918-1923 : Prelude to the Present in Eastern Europe’s Ireland) (http://www.irishleftreview.org/ – 23 /05 /2014.

உலகத்தில் கூட்டாட்சி சிறப்பாக நடைபெறவே இல்லையா? சிலநாடுகளில் சிறப்பாக நடைபெறுகின்றன. அமெரிக்க ஐக்கிய நாடுகள் (USA) செர்மன் கூட்டாட்சிக் குடியரசு போன்றவற்றைச் சொல்லலாம். அவ்விரு நாடுகளும் பல்தேசிய இன நாடுகள் அல்ல. ஓர் இனப் பெரும்பான்மையும் ஒற்றை ஆட்சி மொழியும் கொண்டவை. அமெரிக்க ஐக்கிய நாடுகள் என்ற வட அமெரிக்காவில் மிகப் பெரும்பான்மையோர் ஆங்கிலேயர், ஆங்கிலம் பேசுவோர்! ஆங்கிலம் மட்டுமே அங்கு ஆட்சி மொழி! செர்மனியில் செர்மானியத் தேசிய இனமே மிகப் பெரும்பான்மையினர். அது அவர்களின் தாயகம். செர்மன் (டொயிச்) மொழி அங்கு ஒரே ஆட்சிமொழி. 

வடஅமெரிக்கா, செர்மனி ஆகிய நாடுகளில் வரலாற்று அடிப்படையில் தனித்தனியே பல சிற்றரசுகள் இருந்தன. ஆனால் அவை அனைத்திலும் ஒரே மொழி, ஒரே இனம்! அவற்றை ஒருங்கிணைத்து அமெரிக்க ஐக்கிய நாடுகள் என்றும் செர்மனி என்றும் நாடுகள் உருவாக்கப்பட்டபோது அந்தந்த நாட்டுக்குள் ஒரு கூட்டாட்சி தேவைப்பட்டது. அதாவது ஒரே இனத்திற்கான நாட்டிற்குள் உள்கூட்டாட்சி! 

வட அமெரிக்காவில் எற்கெனவே மாநிலங்களுக்கு உள்ள உரிமைகள் மைய அரசால் மெல்ல மெல்ல பறிக்கப்படுகின்றன என்ற குறைபாடுகள் எழுந்துள்ளன என்பதும் கவனிக்கத்தக்கது, 

சுவிட்சர்லாந்தில் கூட்டாட்சி சிறப்பாகச் செயல்படவில்லையா என்று சிலர் கேட்கக் கூடும். அது மிகச் சிறிய நாடு. செர்மன், பிரான்சு, இத்தாலி நாடுகளின் எல்லையோரங்களில் பிரிந்திருந்த அம்மொழி பேசும் மக்கள் உருவாக்கிக் கொண்ட ஒரு புது நாடு. அது சராசரிக் கூட்டாட்சிக்கு எடுத்துக்காட்டாக அமைய முடியாது. 

கனடா, பிரித்தானியா, ஸ்பெயின் இராக் முதலிய நாடுகளில் இருப்பவை வெவ்வேறு தேசிய இனங்கள் – வெவ்வேறு தேசிய மொழிகள்! அவற்றை விட அதிக எண்ணிக்கையில் இந்தியாவில் வெவ்வேறு தேசிய இனங்களும் தேசிய மொழிகளும் இருக்கின்றன. கனடா, பிரித்தானியா, ஸ்பெயின் நாடுகளில் இருப்பதைவிட மிகக் கொடிய முறையில் ஆரியச் சார்பில்லாத இனங்களும் மொழிகளும் ஒடுக்கப்படுகின்றன. 

இந்தியாவில் மாநில அரசுகளிடம் இருந்த கொஞ்சநஞ்ச உரிமைகளும் அதிகாரங்களும் அன்றாடம் பறிக்கப்படுகின்றன. மொகாலயப் பேரரசில்கூட தில்லி ஆட்சியில் இவ்வளவு அதிகாரங்கள் குவிக்கப்பட்டதில்லை. ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியில் தில்லியில் குவிக்கப்பட்டிருந்த அதிகாரங்கள் மீண்டும் இப்போது குவிக்கப்பட்டுவிட்டன. 

இந்தியா என்ற நாட்டை ஆங்கிலேயக் கிழக்கிந்திய வணிகக் கம்பெனி 1773 இல்தான் பீரங்கி முனையில் உருவாக்கி முடித்தது. ஆங்கிலேயரின் வேட்டையாடலுக்கு முன் இந்தியாவில் இன்றுள்ள தேசிய இனங்கள் தங்களுக்கான சொந்த நாடுகளையும் அரசுகளையும் பெற்றிருந்தன. ஆங்கிலேய வணிக நிறுவனம் உருவாக்கிய இந்தியாவில் அதிகப் பலன் பெற்றது ஆரிய இனத்தவர்கள்!

இன்று ஆரிய இந்தியாவின் அரசியல் பெயர் பாரதம்! 

ஏன் கூட்டாட்சி தோற்றது ?
-------------------------------------------
கூட்டாட்சியிலுள்ள பெரும்பான்மை தேசிய இனம் தனது மொழியையும் மேலாதிக்கத்தையும் தனது தனித்த அடையாளத்தையும் திணிக்காமல் – முன்னிலைப்படுத்தாமல் எந்தக் கூட்டரசும் செயல்பட்டதில்லை. ஒரு தேசம் அல்லது நாடு என்றிருந்தால் அதற்கு ஒரு ஒற்றை வரலாற்றுப் பின்னணியும் அதற்குரிய வரலாற்றுத் தத்துவமும்தான் எல்லா இடத்திலும் முன்வைக்கப்படுகின்றன. கூட்டாட்சியிலுள்ள எல்லா தேசிய இனங்களின் அதிகாரமும், மொழியும், அடையாளமும் சமமாக எந்த நாட்டிலும் வைக்கப்பட்டதில்லை. இந்தியா எனில் ஆரிய வரலாறு, ஆரியத் தத்துவமான வேத இதிகாசக் கொள்கைகள், ஆரிய மொழிகளான சமற்கிருதம், இந்தி, ஆரியவர்த்தமான மத்திய இந்தி மாநிலங்கள் ஆகியவைதான் மேலாதிக்கத்திலும் முன்னிலையிலும் வைக்கப்படுகின்றன. இது போல்தான் இரசிய, ஆங்கில, ஸ்பானிஷ் மேலாதிக்கங்கள் அந்தந்தக் கூட்டாட்சியில் நிலவின. இந்த மேலாதிக்கங்களுக்கு முதலாளியம், கம்யூனிசம் என்ற வேறுபாடு இல்லை. 

தமிழ்த் தேசிய இறையாண்மை 
--------------------------------------------------
இந்தியாவில் ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் இறையாண்மை வேண்டும். மாநில சுயாட்சி அல்ல. தமிழ்நாட்டிற்குத் தமிழ்த் தேசிய இறையாண்மை வேண்டும். 

தமிழ் மொழி, தமிழ் இன உணர்ச்சி இரண்டையும் பதவி அரசியலுக்கும் பண வேட்டை அரசியலுக்கும் பயன்படுத்திக் கொண்ட திமுக இப்போது எழுந்துவரும் தமிழ் இன உணர்ச்சியை மீண்டும் தனது தன்னல அரசியல் பக்கம் திருப்பிவிட மாநில சுயாட்சி பேசுகிறது. ஒட்டு மொத்தத் தமிழர்களுக்குரிய இலட்சியமில்லாத இந்தியத் தேசிய வாதக் கம்யூனிஸ்ட்டுகளும் மற்றவர்களும் கரைசேர இடைக்கால உத்தியாக மாநில சுயாட்சியைக் கையிலெடுக்கின்றன. இந்திய ஏகாதிபத்தியம் தமிழ்நாட்டில் தனது கடைசிப் பாசறைகளாக திராவிடக் கட்சிகளையும் கம்யூனிஸ்ட்டுக் கட்சிகளையும்தான் நம்பி இருக்கின்றது. 

தமிழர்களின் உரிமை முழக்கம் தமிழ்த் தேசிய இறையாண்மை!

Labels: , ,

“தமிழ்த்தேசியர்கள் இனவெறியர்களா?” -- தோழர் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை!

Saturday, October 14, 2017


======================================
“தமிழ்த்தேசியர்கள் இனவெறியர்களா?”
======================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
தோழர் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை!
======================================

தமிழ்த்தேசியம் வளர வளர அதில் திரிபுகளும் வந்து குறுக்கிடுகின்றன. எந்தக் கோட்பாட்டிலும் கொள்கை யிலும் திரிபுகள் வரத்தான் செய்யும். அவற்றை எதிர் கொண்டு சரியான திசையில் அதைச் செலுத்துவது அக் கோட்பாட்டை சரியாக முன்னெடுப் போரின் பணியா கும்! 

காரல் மார்க்ஸ் வாழ்ந்த காலத்திலேயே மார்க்சியத்தில் திரிபுகள் குறுக்கிட்டன. காரல் மார்க்ஸ் இலண்டனில் வாழ்ந்த காலத்தில் ஜெர்மனியில் இருந்த ஒரு சோசலிஸ்ட்டுக் குழுவின ருடன் கடிதப் போக்குவரத்து வைத்திருந்தார். அக்கழுவினர் தங்களை மார்க்சியவாதிகள் என்று கூறிக்கொண்டனர். ஆனால் ஒரு குறிப்பிட்ட வரையறுப்பில் காரல் மார்க்ஸ் நிலைபாட்டை மறுத்து ஜெர்மன் சோசலிஸ்ட்டுகள் மார்க்சுக்கு எழுதினர். அவர்களின் தருக்கத்தை மறுத்த காரல் மார்க்ஸ், நீங்கள்தான் மார்க்சியவாதிகள் என்றால் நான் மார்க்சியவாதி இல்லை என்று விடை எழுதினார்!

எது தமிழ்த்தேசியம்? 
--------------------------------- 
இப்போது தமிழ்த்தேசியத்திற்கு, சிலர் வெவ்வேறு விளக்கங்கள் கூறு கின்றனர். 

“தமிழ்த்தேசியம்’’ என்பதற்கான வரைவிலக்கணம் ஒன்றாகத்தான் இருக்க முடியும். தமிழ்த்தேசியத் திற்கானப் போராட்டத்தின் ஊடாகச் செயல்படுத்த வேண்டிய சமூகத் திட்டங்கள் ஒவ்வொரு அமைப்பிற்கும் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால் தமிழ்த்தேசியம் என்பதன் அடிப்படை வரைய றுப்பு ஒன்றுதான். 

தமிழ்த்தேசியம் என்றால் என்ன? 

எமது தேசிய மொழி தமிழ்,
எமது தேசிய இனம் தமிழர், 
எமது தேசம் தமிழ்த்தேசம்,
இறையாண்மையுள்ள தமிழ்த்தேசம் எமது இலக்கு!

இந்த வரையறுப்பில் மாறுபடும் ஒருவர் தமிழ்த் தேசியராக இருக்க முடியாது! 

தங்களின் தேசிய இனம் இந்தியர், திராவிடர் என்று சொல்லிக் கொள்வோர் தமிழராக இருக்கலாம்; தமிழ்த்தேசியராக இருக்க முடியாது! 

தமிழர் என்பது பிறப்பு அடிப்படையில் உள்ள அடையாளம்! தமிழ்த்தேசியர் என்பது தமிழ்த்தேசம் சார்ந்தது. தமிழ்த்தேசத்திற்கு அதாவது தமிழ்நாட்டிற்கு உரிய மக்கள் எல்லாம் தமிழ்த்தேசியராக இருக்கத் தகுதியும் உரிமையும் படைத்தவர்கள். ஆனால் அவர்கள் தமிழ்த்தேசியராக இருக்கிறார்களா இல்லையா என்பது அவரவர் நிலைபாட்டைப் பொறுத்தது. 

ஒருவர் தமிழ்த்தேசியத்தை மறுத்து இந்தியத் தேசியத்தை ஏற்றுக் கொண்டு, இந்தியத்தேசியராகச் செயல்பட்டால் அவர் தமிழ்த்தேசியர் அல்லர். ஆனால் பிறப்பு அடிப்படையில் அவர் தமிழராக இருக்கலாம்; பிறப்பு அடிப்படையில் பிரபாகரன் தமிழர்; காட்டிக் கொடுத்த கருணாவும் தமிழர்தான். அதை நாம் மாற்ற முடியாது. பிரபாகரன் தமிழீழத்தேசியர், கருணா சிங்களத் தேசியத்தை ஏற்றுக் கொண்டவர்! 

மரபினம் - தேசிய இனம் 
---------------------------------------
திராவிடர் என்று தங்களைக் கூறிக்கொள்வோர் இரண்டுங்கெட்டானாக இருக்கிறார்கள். இந்தியன் என்பதற்காவது செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு நாடும் - திணிக்கப்பட்ட ஒரு மொழியும் கூறப்படுகிறது. திராவிடர் என்பதற்கு வரலாற்றில் எக்காலத்திலும் ஒரு நாடு கிடையாது; அதற்கான ஒரு பொது மொழி யும் கிடையாது. திராவிடர் என்ற பெயரில் மரபினமும் (Race) கிடையாது; தேசிய இனமும் (Nationality) கிடையாது. ஆதலால்தான் திராவிடர் என்பதை இரண்டுங்கெட்டான் என்கிறோம். திராவிடத்தையும் திராவிட இனத்தையும் இன்றும் வலியுறுத்துவோர் ஒன்று குழப்பவாதிகளாக இருக்க வேண்டும் அல்லது வேறு ஏதோ உள்நோக்கம் கொண்டோராக இருக்க வேண்டும். 

தெலுங்கு, கன்னடம், உருது, சௌராட்டிரம், மராத்தி பேசும் மக்கள் முந்நூறு நானூறு ஆண்டு களாகத் தமிழ்நாட்டைத் தாயகமாகக் கொண்டு இங்கு வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் யார்? அவர்கள் தமிழ்த்தேச மக்கள், தமிழ் மக்கள்! அவர்களுக்கு வேறு தாயகம் கிடையாது. அவர்கள் மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் வேறு தாயகங்களில் வாழலாம். ஆனால் இங்கு வாழும் மக்கள் தமிழ் மக்கள். அவர்கள் தங்களைத் தமிழராகக் கருதிக் கொள்ள முழு உரிமை உண்டு! 

“மரபினம்” என்பதற்கும் தேசிய இனம் என்பதற்கும் சிறு வேறுபாடு உண்டு! இனக்குழு என்ற பழங்குடி நிலையிலிருந்து வளர்ச்சி பெற்று மொழியும் மக்கள் பெருக்கமும் கொண்டவர்கள் மரபினம். வெவ்வேறு மரபு இனக்குழுக்களைச் சேர்ந்தவர்கள், பழங்குடிகள் வரலாற்று வழியில் ஒருங்கிணைந்து ஒரு தேசிய இனம் ஆகின்றனர். இவ்வாறு உருவான தேசிய இனத்திற்கு “தமிழர்” என்ற பெயர் மட்டும் எப்படி வருகிறது? 

தன்னியல்புப்படுத்தல் (Assimilation)
------------------------------------------------------
மரபு வழிப்பட்ட தமிழ் மொழித் தாயகமாகவும், மரபு வழிப்பட்ட தமிழர்களை மிகப் பெரும்பான்மை மக்களாகவும் கொண்டிருப்பதால் இது தமிழ்த்தேசம் ஆகிறது. வரலாற்று வழியில் இங்கு வந்து வாழ்ந்து இணைந்துவிட்ட பிறமொழி பேசும் மக்களும் தமிழ்த்தேசிய இன மக்கள் ஆகின்றனர். 

பிறமொழி பேசுவோர் எவ்வாறு தமிழ் மக்களாக - தமிழர்களாக உருவளர்ச்சி பெறுகின்றனர்? தங்களின் நிரந்தரத் தாயகமாகத் தமிழ்நாட்டை அவர்கள் ஏற்று வாழ்கின்றனர்; தங்களின் பொது மொழியாக, பேச்சு மொழியாக, கல்வி மொழியாக, ஆட்சி மொழியாகத் தமிழை ஏற்றுச் செயல்படுகின்றனர். வரலாற்று வழிப் பட்ட இந்த இயல்வளர்ச்சி (Process), பிறமொழி யைத் தாய் மொழியாகக் கொண்ட அம்மக்களைத் தமிழ் மக்களாக தன்னியல்புப்படுத்தி (Assimilation) விடுகிறது.

உலக நாடுகளில் தேசிய இன உருவாக்கம் இப்படித் தான் அமைந்துள்ளது; தேசங்கள் இவ்வாறான கட்டுமானத்தைத்தான் பெற்றுள்ளன. அந்த வரலாற்று விதிக்குத் தமிழ்நாடு விதிவிலக்கன்று! 

தமிழர் - தமிழ்த்தேசிய இன மக்கள் - தமிழ் மண்ணின் மக்கள் என்பதற்கு நாம் ஒரு வரையறை வைக்க வேண்டியுள்ளது. மொழிவழித் தாயகமாக தமிழ்நாடு அமைக்கப்பட்ட 1956 நவம்பர் 1-க்குப் பிறகு தமிழ்நாட்டில் குடியேறிய பிற மொழியாளர் அனைவரும் வெளியார் என்று வரையறுக்கிறோம். அதற்கு முன் தமிழ்நாட்டைத் தாயகமாகக் கொண்ட பிறமொழி பேசும் மக்கள் தமிழ் மக்களே! 

தமிழ் மொழியிலிருந்து பிரிந்தவைதாம் தெலுங்கு, கன்னட மொழிகள். அந்த வகையில் “தமிழர்” என்ற மரபிலிருந்து பிரிந்தவர்கள்தாம் தெலுங்கர், கன்னடர் என்ற ஓர் உறவும் கூடுதலாக இருக்கிறது. அந்த மரபினத்தின் பெயர் “தமிழர்” என்பதுதான்; “திராவிடம்” என்பது அன்று! “திராவிடர்” என்று ஒரு மரபினம் இருந்ததற்கான வரலாற்றுச் சான்று எதுவுமில்லை. மனுதர்மம் மற்றும் வட மொழி ஆரியப் புராணங்கள் மட்டுமே “திராவிட” என்று உச்சரித்துள்ளன. 

தெலுங்கர் எதிர்ப்பின் பின்னணி 
-------------------------------------------------
தமிழின உணர்வாளர்களில் ஒரு சாராரிடம் தெலுங்கர் எதிர்ப்பு இருக்கிறது. அவர்களின் தெலுங்கர் எதிர்ப்பை நாம் ஏற்க வேண்டியதில்லை. ஆனால் அவர்களுக்கு அவ்வாறான எதிர்ப்புணர்ச்சி ஏற்படக் காரணங்கள் யாவை என்று ஆராய வேண்டும். காரணங்களே இல்லாமல், இந்த எதிர்ப்புணர்ச்சி உருவாகவில்லை! 

சற்றொப்ப நானூறு ஆண்டுகளாக தெலுங்கு மன்னர்கள் தமிழ்நாட்டைப் பிடித்து அதன் பெரும் பகுதியை ஆட்சி செய்தார்கள். அதனால் பெரும் பெரும் நிலக்கிழார்களாகவும், சமீன்தார்களாகவும் பாளையப் பட்டு ஆட்சியாளர்களாகவும் தெலுங்கர்கள் உருவா னார்கள். 

விசய நகரத் தளபதிகள் மற்றும் நாயக்க மன்னர்கள் ஆட்சியில் தமிழ்நாட்டில் தமிழ் மொழி பின்னுக்குத் தள்ளப்பட்டு தெலுங்கும் சமற்கிருதமும் கோலோச் சின. அதன் தொடர்ச்சியாகத்தான் இன்றும் தமிழிசைப் புறக்கணிக்கப்பட்டு, தெலுங்கிசை தமிழ்நாட்டுக் “கச்சேரிகளை” ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. 

திருவையாற்றில் நடக்கும் தியாகராசர் இசை விழாவில் தண்டபாணி தேசிகர் தெலுங்கில் பாடாமல் தமிழில் பாடினார் என்பதற்காக - அவர் பாடி முடித்த பின் அம்மேடையைக் கழுவித் “தூய்மை”ப்படுத்தி னார்கள் பிராமணர்கள்! பெங்களூருவில் இசை நிகழ்ச்சியில் எம்.எஸ். சுப்புலட்சுமி தமிழிலும் பாடினார் என்பதற்காகக் கன்னடர்கள் கல்லெறிந்தார்கள். 

தெலுங்கு பேசுவோரில் உள்ள மேல் சாதியாரும் பிராமணர்களும் தமிழ்நாட்டின் ஆளும் வர்க்கமாக _- ஆளும் “இனமாக” விளங்கினார்கள். 

பிரித்தானியக் காலனி ஆட்சி தமிழ்நாட்டில் ஏற்பட்டபோது, அது உருவாக்கிய மாகாணப் பிரிவினையில், இன்றுள்ள முழு ஆந்திரப்பிரதேசமும் சென்னை மாகாணத்தில் இணைக்கப்பட்டது. தமிழர் எண்ணிக்கைக்குச் சமமாகத் தெலுங்கர் எண்ணிக் கையும் இருந்தது. 

இந்தப் பின்னணியில் தெலுங்கரான பி.ட்டி. தியாகராயர் தலைமையில் நீதிக்கட்சி சென்னையில் தொடங்கப்பட்டது. ஆந்திரத்தின் சமீன்தார்கள், நிலக்கிழார்கள்தான் நீதிக்கட்சியில் மேலாதிக்கம் செலுத்தினர். பிரித்தானிய அரசு நடத்திய சட்டப் பேரவைத் தேர்தலில் நீதிக்கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. 

சுப்பராயலு ரெட்டியார் என்ற தெலுங்கர் சென்னை மாகாணத்தில் 1920இல் நீதிக்கட்சி ஆட்சியின் முதல் முதலமைச்சர் ஆனார். அடுத்து, பனகல் அரசர், முனுசாமி நாயுடு, பொப்பிலி அரசர் என்று நீதிக்கட்சி முதலமைச்சர்கள் தெலுங்கர்கள்! 

ஆந்திரம் பிரியாத நிலையில் 1946 - 1947இல் ஆந்திராவைச் சேர்ந்த காங்கிரசுக்காரர் தங்குத்தி பிரகாசம் முதலமைச்சர்! விடுதலை பெற்ற இந்தியாவில் சென்னை மாகாணத்தின் காங்கிரசு முதல் அமைச்சர்களாக - தமிழ்நாட்டைச் சேர்ந்த தெலுங்கு பேசும் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார், ராஜபாளையம் குமாரசாமி ராஜா!

தி.க.வினரும் தி.மு.க.வினரும் தமிழர் இன அடையாளத்தை மறைக்கும் வகையில், “திராவிடர்” என்ற ஆரியச்சார்பான ஓர் இன அடையாளத்தைத் தமிழர்கள் மேல் சுமத்தினார்கள். இன்றுவரை முழுமையாகத் தமிழர் இன அடையாளத்தை மீட்க முடியாமல், திராவிடச் சேற்றில் சிக்கிக் கொண்டுள் ளோம். 

தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகிய நான்கு மாநிலங்களும் சேர்ந்தது திராவிட நாடு என்று தி.க., தி.மு.க. தலைவர்கள் பேசினார்கள்; எழுதினார்கள்! ஆனால் ஆந்திர, கர்நாடக, கேரள மாநிலங்களில் “திராவிடர்” என்ற பேச்சே கிடையாது! அந்தக் கூச்சல் தமிழ் மண்ணில் மட்டுமே ஒலிக்கிறது. ஆந்திர நடிகர் “தெலுங்கு தேசம்” என்றுதான் கட்சி தொடங்கினார். 

புதிதாகத் தமிழ்நாட்டில் கட்சி தொடங்கிய நடிகர் விசயகாந்தோ, திராவிடப் பெயரைத் தம் கட்சிக்கு வைத்தார். விசயகாந்த் தாய்மொழி தெலுங்கு என்பதால் நாம் அவரை அயலாராகப் பார்க்கவில்லை. ஆனால் அவர் உளவியல் எப்படிச் செயல்படுகிறது, தெலுங்கு தேசம் தொடங்கிய நடிகர் என்.டி. இராமாராவ் உளவியல் எப்படிச் செயல்பட்டது என்று தமிழ் இளைஞர்கள் ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள். தெலுங்கு தேசம் என்ற பெயர் ஆந்திரத் தெலுங்கான மாநிலங்களுக்கு மிகப் பொருத்தமான பெயர் என்பதில் நமக்கு மாறுபாடில்லை. ஆனால் தமிழ்நாட்டிற்குப் பொருத்தமற்ற - தமிழை மறைக்கக் கூடிய திராவிடப் பெயரை மீண்டும் மீண்டும் சூட்டுகிறார்களே என்ற வருத்தமான மனநிலை நமக்கு உருவாகிறது. 

தெலுங்கர், மலையாளி, கன்னடர் என்று அயல் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டில் தொடர்ந்து முதலமைச்சர்களாக வருகிறார்கள். இப்பொழுது கூட கன்னட நாட்டு ரஜினிகாந்த் முதலமைச்சராக முன் வருகிறார். ஆனால் ஆந்திர, கர்நாடக, கேரள மாநிலங்களில் மாநில அளவிலான அரசியல் தலைவராக, முதலமைச்சராக ஏன் ஒரு தொழிற்சங்கத் தலைவராகக் கூட தமிழர்கள் வரமுடியவில்லையே எனத் தமிழ் இளைஞர்கள் எண்ணிப் பார்க்கிறார்கள். 

இன்றும் தமிழ்நாட்டில் திராவிடத்தை அதிகமாக வலியுறுத்துவோர் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள்தாம் என்ற கருத்து நிலவுகிறது. 

கடந்த ஆண்டு தெலுங்கு மாநிலங்கள் மாநாடு சென்னையில் நடந்தது. அதில் தமிழ்நாடும் தெலுங்கு மாநிலம் என்றும், தமிழ்நாட்டில் தெலுங்கை இரண்டாவது ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றினர். வெங்கையா நாயுடுவின் சிறப்புரையுடன், தமிழிசையின் துரோக உரையுடன் இம்மாநாடு நடைபெற்றது. அதில், தெலுங்கு மொழியை வளர்ப்பவர்களுக்கு வாக்களியுங்கள் என்று வேண்டுகோள் விட்டார் வெங்கையா நாயுடு! அப்போது தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க இருந்தது. இம்மாநாட்டிற்கு முந்தைய ஆண்டில் தெலுங்கு மாநாட்டைச் சென்னையில் நடத்தினார்கள். அதிலும் வெங்கையா கலந்து கொண்டார். 

தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் வாழும் தெலுங்கு மக்கள் முந்நூறு நானூறு ஆண்டுகளாக இம் மண்ணில் வாழ்ந்து, இம்மண்ணின் மக்களாகி, தமிழைத் தங்களின் இன்னொரு தாய்மொழியாகவே நேசிக்கும் உளவியல் கொண்டுள்ளார்கள். ஆனால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் வணிகம் செய்ய வந்து குடியேறியவர்கள், அதிகாரியாக வந்து குடியேறியவர்கள், வேலை நிமித்தம் வந்து குடியேறியவர்கள், தமிழ்நாட்டையும் ஆந்திரத்தையும் இரட்டைத் தாயகமாகக் கொண்டவர்கள். அவர்களில் பலர் இன்னும் அதே உளவியலில் இருக்கிறார்கள். 

மொழிவழி மாநிலப் பிரிவினையின்போது, சென்னையை ஆந்திராவுடன் சேர்க்க வேண்டும் என்று குரல் கொடுத்த “சென்னைவாசிகள்” இவர்கள்தாம்! 

இப்போது இந்திய ஏகாதிபத்தியவாதிகள் - தமிழ்நாட்டில் தமிழ் இன விழிப்புணர்ச்சியும் எழுச்சியும் வளர்ந்து விடாமல் தடுப்பதற்காகத் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழ் மக்களைப் பிரித்துவிடும் சூழ்ச்சியில் - தமிழ்த் தேசியத்திற்கு எதிராகத் திருப்பிவிடும் பெரு முயற்சியில் இறங்கியுள்ளார்கள். அதற்கான பொறுப்பாளர்களாக வெங்கையா நாயுடு, நிர்மலா சீத்தாராமன் ஆகியோரை அமர்த்தியுள்ளார்கள். அவ்வப்போது ஆந்திராவைச் சேர்ந்தவர் களை ஆளுநராகவும் அனுப்புகிறார்கள். பிறந்த இனத்திற்கு இரண்டகம் செய்து பதவி பெறும் துரோகிகளாகப் பொன். இராதாகிருட்டிணன், தமிழிசை சௌந்திரராசன் போன்றோர் செயல்படுகிறார்கள். 

இந்தப் பின்னணியில்தான் தமிழ்த்தேசியத்தை ஏற்றுள்ள இளைஞர்களில் ஒருசாரார் தெலுங்கர் - எதிர்ப்பை முதன்மைப்படுத்துகிறார்கள் என்ற நடப்பைப் புரிந்து கொள்ள வேண்டும். 

இது ஒரு பக்கம் இருக்க, தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கு பேசும் மக்கள் தமிழ் மொழிக்கும் தமிழ் இனத்திற்கும் வலுச்சேர்க்க நல்கிட்ட அறிவுத்துறைப் பங்களிப்பையும், இயக்க வழிப்பட்ட பங்களிப்பையும் பார்க்க வேண்டும். தமிழ் அறிஞர்களாக, 1965 இந்தி எதிர்ப்புப் போராட்ட வீரர்களாக, ஈழ விடுதலைப் போராட்டத்தில் மெய்யுணர்வோடு பங்கேற்றவர்களாக, அதற்காகத் தன்னையே எரித்துக் கொண்டவர்களாக, இன்று தமிழ்வழிக் கல்விப் போராட்டத்தில் களத்தில் நிற்பவர்களாக, தமிழ்த்தேசியத்தின் செயல்வீரர்களாக, தெலுங்கை மரபுவழித் தாய்மொழி யாகக் கொண்டவர்கள் நம் முன்னே நிற்கிறார்கள். அவர்கள் எல்லாம் “தந்திரமாகச்” செயல்படுகிறார்கள், போலியாகச் செயல்படுகிறார்கள் என்று கூறினால் அது முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க முயலும் செயலாக அமையும்! அவர்கள் உண்மை யாகவே செயல்படுகிறார்கள். 

தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட மக்கள், தெலுங்கைத் தமிழ்நாட்டின் ஆட்சி மொழியாக்கவோ, கல்வி மொழியாக்கவோ கோரவில்லை. அவ்வாறு கோரும்படி இந்திய ஏகாதிபத்தியவாதிகளும் சென்னைப் பகுதியில் குடியேறி வாழும் தெலுங்கு வணிகர்களும், அதிகாரப் பிரிவினரும் அம்மக்களைத் தூண்டுகிறார்கள். 

நம்முடைய அணுகுமுறை அந்தத் தூண்டுதலுக்குத் தூபம் போட்டதாக அமையக் கூடாது! 

தெலுங்கை மரபுவழித் தாய்மொழியாகக் கொண்ட மக்கள் தங்களுக்கிடையே தாய்மொழியில் பேசிக் கொள்வதை நாம் எதிர்க்கக் கூடாது. அதை அவர்களின் தகுதிக் குறைவாகக் கருதக் கூடாது. தாய் மொழியில் பேசாதே என்று சொல்வது மிகக் கொடிய மனித உரிமைப் பறிப்பாகும்! 

நடைமுறை உண்மை என்னவெனில், தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர்களில் பலர்க்குத் தெலுங்கே தெரியாது என்பதுதான்! நயினா, அவ்வா என்ற சொற்களைத் தவிர வேறு தெலுங்குச் சொற்கள் அவர்களுக்குத் தெரியாது. குடும்பங்களில் அவர்கள் தமிழில்தான் பேசிக் கொள்கிறார்கள். இந்த வளர்ச்சிதான் தன்னியல்புப்படுத்தும் (Assimilation) வளர்ச்சி! 

நம் இளைஞர்களில் சிலர் குறுக்கிட்டு அவர்களைத் தமிழர்கள் அல்லர் என்று கூறினால், அவர்கள் தெலுங்கைத் தேடும் நிலை உருவாகும்! தமிழிலிருந்து பிரிந்தது தெலுங்கு; அவர்கள் தங்களின் மூலத் தாய்மொழிக்குத் திரும்புவது சரியானதுதான்! அதேவேளை தெலுங்கில் பேசக் கூடாது, தெலுங்கைப் படிக்கக் கூடாது என்று யாரும் அவர்களைக் கட்டாயப் படுத்தக் கூடாது! 

தமிழ்த்தேசியர் இனவெறியரா?
-------------------------------------------------
தமிழ்த்தேசியத்தைத் தலையெடுக்காமல் நசுக்கத் திட்டமிடும் இந்திய ஏகாதிபத்தியவாதிகள் தங்களின் துணைப் படையாகத் தமிழ் மண்ணில் ஆள்பிடிக்க அலைகிறார்கள்; இருபத்து நான்கு மணி நேரமும் அதுபற்றியே சிந்திக்கிறார்கள். தமிழ்த்தேசிய எழுச்சி கண்டு கிலி பிடித்து கிடக்கிறார்கள். அவர்கள் தமிழ்த் தேசிய இளைஞர்கள் சிலர் உணர்ச்சிவசப்பட்டு பிறமொழி பேசுவோர் மீது வைக்கும் சில விமர்சனங் களை முதன்மைப்படுத்தி அதுதான் தமிழ்த்தேசியம் என்பதுபோல் சித்தரிக்கிறார்கள். 

“தமிழ்த்தேசியம்’’ என்பது பிறமொழி பேசுவோரைப் பகைவராகப் பார்க்கும் தமிழ் இன வெறியர்களின் சொற்கோவை என்று அடையாளப்படுத்த, இந்திய ஏகாதிபத்தியவாதிகள் அவசரம் காட்டுகிறார்கள். ஏடுகளில் ஊடகங்களில் அவர்களின் செவ்வி அவ்வாறாக இருக்கிறது. 

சட்டப்படி அமைக்கப்பட்ட தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பைச் செயல்படுத்த மறுத்து, உச்ச நீதிமன்றக் கட்டளையையும் எதிர்த்து, அனைத்துக் கட்சிகளும் ஒரே முடிவில் தீர்மானம் போட்டு - தமிழ்நாட்டுக்குரிய காவிரித் தண்ணீரைத் தடுத்துக் கொண்டுள்ள கர்நாடகக் காங்கிரசு, பா.ச.க., ஜனதா தளத் தலைவர் களும் கன்னட மக்களும் பரந்த மனம் கொண்ட இந்தியத்தேசியவாதிகள்! தமிழ்த்தேசியர்கள் இனவெறியர்கள்! என்னே முரண்பாடு!

பெங்களூரில் நிறுத்தப்பட்டிருந்த தமிழர்களின் 250 சொகுசுப் பேருந்துகள், சரக்குந்துகள் ஆகியவற்றை எரித்து சாம்பலாக்கியவர்கள் பரந்த இந்தியத்தேசிய வாதிகள் - தமிழர்கள் இனவெறியர்கள்! 

1991 டிசம்பர் - 1992 சனவரியில் காவிரிக் கலவரம் நடத்தி கர்நாடகத்தில் ஏராளமான தமிழர்களை இனப் படுகொலை செய்து, ஆயிரக்கணக்கான தமிழர் வணிக நிறுவனங்களையும், வீடுகளையும் சூறையாடி எரித்துச் சாம்பலாக்கியவர்கள் பரந்த மனம் படைத்த இந்தியத் தேசியவாதிகள்! அவர்களெல்லாம் இனவெறியர்கள் அல்லர்! 

முல்லைப்பெரியாறு அணையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்துக் கலகம் நடத்தி, தமிழர்களைத் தாக்கிய மலையாளிகள் இனவெறியர் அல்லர்! அவர்கள் எல்லாம் மார்க்சிய சர்வதேசியவாதிகள் - இந்தியத்தேசியவாதிகள்! 

பேருந்தில் பயணம் செய்த 20 தமிழர்களைக் கடத்திக் கொண்டு போய் சித்திரவதை செய்து, கட்டி வைத்துச் சுட்டுக் கொன்ற ஆந்திரத் தெலுங்கு தேச ஆட்சியாளர்களும் தெலுங்கர்களும் இனவெறியர் அல்லர்! 

கடந்த காலங்களில் தமிழ்நாட்டிலேயே தமிழர்கள் ஓரங்கட்டப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட உண்மைகளால், உணர்ச்சிவசப்பட்டு, பக்குவக் குறைவாக பிறமொழி பேசுவோர், தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகக் கூடாது என்று பேசிய இளைஞர்கள் மட்டும் தமிழின வெறியர்கள்; வீழ்த்தப்பட வேண்டியவர்கள் என்கிறார்கள். அந்த இளைஞர்களுக்கும் அறிவுரை சொல்லி, தமிழர் அறத்தின்பால் அவர்களை நிறுத்தி, பிறமொழி பேசும் மக்களும் நம் தமிழ் மக்கள்தாம் அவர்களுக்கும் சம உரிமை உண்டு என்று நாங்கள் பேசி வருகிறோம். ஆனால் அந்த இளைஞர்களைத் தாக்குவதாக சொல்லிக் கொண்டு ஒட்டுமொத்தத் தமிழ்த்தேசியத்தையே இனவெறிக் கூச்சல் என்று சித்தரிக்கும் நயவஞ்சகர்களை -- உட்புகுந்து குழப்பும் இந்தியத்தேசிய முகவர்களை சரியாகத் தமிழ் மக்கள் அடையாளம் காண வேண்டும்! 

இந்திய ஏகாதிபத்தியவாதிகள் - ஆரியப் பிராமணிய மேலாதிக்கவாதிகள் முதலியவர்களே தமிழ்த் தேசியத்தின் பகை ஆற்றல்கள் என்பதை அனைத்துப் பிரிவுத் தமிழ் மக்களும் அடையாளம் காண வேண்டும். 

வரலாற்று வழியில் தமிழ்நாடு வந்து, தமிழ்நாட்டைத் தாயகமாகக் கொண்டு வாழும் தெலுங்கு, கன்னடம், உருது, மராத்தி, சௌராட்டிரம் பேசும் மக்களும் தமிழ் மக்களே, தமிழ்த்தேசிய மக்களே! இந்தப் புரிதல் இளந்தமிழர்களுக்கு வேண்டும். இந்த உணர்வை இம்மொழிகள் பேசும் தமிழ் உணர்வாளர்கள் இம்மக்களிடையே வளர்க்க வேண்டும்!

Labels:

"கேரளத்தின் அனைத்துச் சாதியினர் அர்ச்சகர் அமர்த்தத்தால் தி.மு.க. - அ.தி.மு.க. சாயம் வெளுத்து விட்டது!" -- தோழர் பெ. மணியரசன்

Wednesday, October 11, 2017


==================================
கேரளத்தின் அனைத்துச் சாதியினர்
அர்ச்சகர் அமர்த்தத்தால் 
தி.மு.க. - அ.தி.மு.க. 
சாயம் வெளுத்து விட்டது!
==================================
தோழர் பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்
==================================

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் தீண்டாமைக் கொடுமைகள் குறித்தும், அவர்களது பொருளியல் – கல்விச் சூழல்கள் குறித்தும் ஆராய 1969இல் இந்திரா காந்தி ஆட்சிக்காலத்தில், ஒரு குழு அமைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகத் தொடர்ந்து போராடி வந்த தலைவர் இளையபெருமாள் அவர்கள் தலைமையில் அக்குழு செயல்பட்டது. 

அக்குழுவின் பல்வேறு பரிந்துரைகளுள் ஒன்றுதான், அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக்க வேண்டும் என்ற கோரிக்கை! இக்கோரிக்கையை திராவிடர் கழகத் தலைவர் பெரியார் வரவேற்றார். 1970இல், அதற்காக கருவறை நுழைவுப் போராட்டத்தை அறிவித்தார். 

இதனையடுத்து, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை அன்றைய முதல்வர் கருணாநிதி 02.12.1970இல் கொண்டு வந்தார். அதற்குத் தடை கோரி ஆதிக்கவாதிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். அவ்வழக்கில் உச்ச நீதிமன்றம் 14.03.1972 அன்று தீர்ப்பு வழங்கியது. 

அத்தீர்ப்பு தமிழ்நாடு சட்டத்தைத் தடை செய்யவில்லை. ஆகமப் பயிற்சி கொடுத்து அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக்கலாம் என்ற நிபந்தனையுடன் அனுமதி வழங்கியது. 1976 சனவரி 31 வரை ஆட்சியிலிருந்த கருணாநிதி ஆகமப் பயிற்சி கொடுத்து அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக்கிட நிறைய வாய்ப்பிருந்தது. ஏன் அவர் அதைச் செய்யவில்லை? 

எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் 24.09.1979 அன்று, நீதிபதி மகாராசன் தலைமையில் அமைக்கப்பட்ட 12 பேர் குழு, 1982இல் அளித்த அறிக்கையில், சாதி அடிப்படையில் உச்ச நீதி மன்றம் எத்தடையும் விதிக்கவில்லை என்றும், ஆகமப் பயிற்சி அர்ச்சகர்களுக்குக் கண்டிப்பான தேவை என்றும் கூறியது. அதனடிப்படையில், அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் தொடங்கப்பட்டன. 

இதன்பிறகு, 1989 சனவரியிலிருந்து 1991 சனவரி வரை கருணாநிதி முதல்வராக இருந்தார். அதன்பின், 1996 மே முதல் 2001 மே வரை முதல்வராக இருந்தார். அப்போதும் அவர் அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக்கவில்லை! 

1992இல் செயலலிதா ஆட்சிக்கு வந்த பின், “அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக்குவோம்” என்று கூறினார். ஆனால் எதையும் செய்யவில்லை! திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள், செயலலிதாவுக்கு “சமூகநீதி காத்த வீராங்கனை” பட்டம் வழங்கியதோடு, அர்ச்சகராக்குவது குறித்து எந்த கேள்வியும் எழுப்பவில்லை! 

கருணாநிதி அவர்கள் 2006இல் மீண்டும் முதலமைச்சர் ஆன போது, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆவதற்காகப் புதிதாக ஒரு அரசாணையை (எண் 118) 23.05.2006 அன்றும், ஒரு சட்டத்திருத்தத்தை (சட்டம் 15/2006) 14.07.2006 அன்றும் இயற்றினார். 

ஏற்கெனவே அவர் இயற்றிய சட்டத்தைத் தள்ளுபடி செய்யாமல், ஒரே திருத்தம் சேர்த்து உச்ச நீதிமன்றம் 1972இல் தீர்ப்பு வழங்கியிருக்கும்போது, புதிய சட்டம் ஏன் இயற்றினார்? சமூகநீதிச் சாதனையாளராகக் காட்டிக் கொள்வதற்கான ஒரு பாசாங்கு அது! 

இந்தப் புதிய சட்டத்தை எதிர்த்து ஆதிக்க சாதியினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போட்டார்கள். இந்தத் தடவையும் உச்ச நீதிமன்றம் கருணாநிதியின் சட்டத்தைத் தள்ளுபடி செய்யாமல், ஆகமப்படி அமைந்த கோயில்களுக்கு அந்த அந்த ஆகமத்தைச் சேர்ந்த இந்துக்களுக்குப் பயிற்சி கொடுத்து அர்ச்சகராக்கலாம் என்றும், அர்ச்சகராவதற்குப் பிறப்பு வழியில் எந்தத் தடையும் இல்லை; சாதி, கோத்ரம் போன்ற எந்த நிபந்தனையும் கிடையாது என்று 15.12.2015 அன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

அப்போது அத்தீர்ப்பின் விளக்கத்தை –ஆன்மிக அறிஞர் ஐயா. சத்தியவேல் முருகனார் அவர்களிடம் நான் கேட்டு ஐயங்களைப் போக்கிக் கொண்டேன். சத்தியம் தொலைக்காட்சி விவாதத்திலும் புதிய தீர்ப்பின்படி அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்றேன். அதேபோல், பேராசிரியர் சுப. வீரபாண்டியனும், சத்தியவேல் முருகனாரிடம் தனியே விளக்கம் கேட்டு உறுதி செய்து கொண்டு, தொலைக்காட்சி விவாதத்தில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகத் தடை இல்லை என்று வாதிட்டார். 

அதன்பின்னர், தோழர் சுப.வீ.யைத் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு, “இப்பொழுது வந்துள்ள உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, ஒடுக்கப்பட்ட பிரிவினர் உள்ளிட்ட அனைத்துச் சாதியினரும் அ.இ.அ.தி.மு.க. அரசு அர்ச்சகராக அமர்த்த வேண்டும் என்று அறிக்கை விடும்படி கலைஞரைக் கேட்டுக் கொள்ளுங்கள்” என்றேன். “உறுதியாகக் கலைஞரைச் சந்தித்துச் சொல்கிறேன்” என்றார் சுப.வீ. ஆனால் கடைசிவரை அவ்வாறு ஒரு கோரிக்கையை அ.தி.மு.க. அரசிடம் கலைஞர் வைக்கவே இல்லை! 

ஊடகவியலாளர்கள் 16.12.2015 அன்று கலைஞரிடம் இத்தீர்ப்பு குறித்து கேட்டபோது, “ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வருவோம்” என்று சொன்னார். ஆனால், அதன்பின்னர் அப்படியொரு “ஆராய்ச்சி”யோ, “முடிவோ” எட்டப்பட்டதாக அவர் எதுவும் தெரிவிக்கவில்லை! 

ஆசிரியர் வீரமணி, இத்தீர்ப்பின்படி அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக அமர்த்தும்படி அரசுக்குக் கோரிக்கை வைத்தார். அதற்காகக் கூட்டங்கள் நடத்தினார். 

அன்றைய முதல்வர் செயலலிதா எப்போதும் ஆரியச் சிந்தனையை அடிமனத்தில் தேக்கியவர். எனவே அவர் 2015 உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி அனைத்துச் சாதியினர் அர்ச்சகர் சட்டத்தைச் செயல்படுத்தவில்லை. 

இப்போது அந்த 15.12.2015 உச்ச நீதிமன்றத் தீர்ப்பைப் பயன்படுத்தித்தான் கம்யூனிஸ்ட் முதல் அமைச்சர் பினராயி விசயன் ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 6 பேர் உட்பட பிராமணரல்லாத 36 பேரை கேரளக் கோவில்களில் அர்ச்சகர்களாக அமர்த்தியுள்ளார். 

உச்ச நீதிமன்றம் விதித்த ஆகமப் பயிற்சி என்ற நிபந்தனை ஆகமப்படி கட்டப்பட்ட கோயில்களுக்கு மட்டும்தான் பொருந்தும். ஆகமப்படி கட்டப்படாத கோயில்களில் ஆகமப்பயிற்சி இல்லாமல் அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக்கலாம்; அதற்கான வழிபாட்டுப் பயிற்சி இருந்தால்போதும். தமிழ்நாடு இந்து அறநிலையத்துறையின் கீழ் மிக அதிகமாக ஆகமம் இல்லாத கோயில்களே இருக்கின்றன! தமிழ்நாட்டில் இந்து அறநிலையத்துறையின் கீழுள்ள 36,000 கோயில்களில், 200க்கும் குறைவான கோயில்கள் மட்டுமே, ஆகம விதிகள்படி கட்டப்பட்டவை. 

பிராமணர் பொல்லாப்பு வேண்டாம், பிராமணரல்லாதோரில் உள்ள மேல்சாதிக் கோட்பாட்டாளர்கள் எதிர்ப்பு வேண்டாம் – வாக்குகள் பாதிக்கப்படும் என்று கருதித்தான் கருணாநிதி 1972 தீர்ப்புப்படி ஒடுக்கப்பட்ட வகுப்பினர் உள்ளிட்ட அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக்காமல் ஒதுங்கிக் கொண்டார்! அ.தி.மு.க. ஆட்சியில் அக்கோரிக்கையை எழுப்பாமலும் ஒதுங்கிக் கொண்டார்! 

“தான் செயல்படத் தயார். ஆனால் உச்ச நீதிமன்றம் தடுத்து விட்டது” என்று பாச்சா காட்டும் உத்திதான் எதிலும் எப்போதும் கருணாநிதியின் இரட்டை அணுகுமுறை! 

இதே கருணாநிதி அவர்கள் ஆட்சிக்காலத்தில்தான் 2011இல் (05.01.2011), திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில் பிரசாதம் லட்டு பிடிப்பதற்கு பார்பனர் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டுமென தனது இந்து அறநிலையத்துறை அறிவிப்பு வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்க இன்னொரு செய்தி! 

இந்த வரலாற்றையெல்லாம் யார் நினைவில் வைத்திருக்கப் போகிறார்கள் என்ற துணிச்சலில், அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக்கும் சமூகநீதித் தாகத்துடன் கருணாநிதி இருந்ததாகவும், உச்ச நீதிமன்றம் தடுத்துவிட்டது போலவும் அறிக்கை விடுகிறார் தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின்! அத்தோடு, கேரளாவைப் பார்த்து அ.தி.மு.க. அரசு பாடம் கற்குமா என்று கேள்வியும் எழுப்புகிறார். 

அ.தி.மு.க. பாடம் கற்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. அதேவேளை தி.மு.க.வின் சமூகநீதிச் சாயம் கேரள நடவடிக்கையால் வெளுத்து விட்டது என்பதையும் ஸ்டாலின் உணர வேண்டும். 

தமிழர்களுக்கு முதல் முதல் கோவணம் கட்டி விட்டதே திராவிடத் தலைவர்கள்தாம் என்று மிகை வர்ணனை செய்து கொள்ளும் திராவிடவாதிகள் கேரளாவைப் பார்த்தாவது தங்கள் தம்பட்ட சத்தத்தைக் கொஞ்சம் குறைத்துக் கொண்டு, ஆக்கவழியில் செயல்பட - சிந்திக்க வேண்டும்! 

Labels: ,

"துரோகத் திட்டங்களைத் தூக்கியெறிந்து காவிரி காக்கும் மாநாடு! தஞ்சைக்குத் திரளுங்கள் தமிழர்களே! "

Wednesday, October 4, 2017


====================================
துரோகத் திட்டங்களைத் தூக்கியெறிந்து
காவிரி காக்கும் மாநாடு! 
தஞ்சைக்குத் திரளுங்கள் தமிழர்களே! 
====================================
காவிரி உரிமை மீட்புக் குழு அழைப்பு!
====================================

நடப்பாண்டில் தென்மேற்குப் பருவமழை கர்நாடக, கேரள மாநிலங்களில் சராசரி அளவைவிடக் கூடுதலாகப் பொழிந்து, கர்நாடக அணைகளில் கடந்த சூன் மாதம் முதல் கணிசமாக நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வந்த போதும், கர்நாடகம் தமிழ்நாட்டிற்குரிய தண்ணீரைத் திறந்து விடவில்லை. 

சூன் - 10 ஆ.மி.க. (டி.எம்.சி.), சூலை – 34 ஆ.மி.க., ஆகத்து 50 ஆ.மி.க., செப்டம்பர் 40 ஆ.மி.க. என 134 ஆ.மி.க. தண்ணீர் கர்நாடகம் திறந்துவிட்டிருக்க வேண்டும். ஆனால் வெறும் 38 ஆ.மி.க. மட்டுமே கர்நாடகம் திறந்து விட்டது. 

உச்ச நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகள் அமர்வில் காவிரி வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே இந்த அவலம் நிகழ்கிறது. இதனால் 6ஆவது ஆண்டாகத் தொடர்ந்து குறுவை சாகுபடிக்கு மேட்டூரில் தண்ணீர் திறக்கவில்லை. சம்பா சாகுபடிக்கும் உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கவில்லை. வீராணம் ஏரி வறண்டு, சென்னைக்குக் குடிநீரும் கொண்டு போக முடியவில்லை.

கர்நாடக அணைகள் நிரம்பி, அணைகளுக்கு ஆபத்து என்ற நிலை ஏற்பட்டபோது, மிகை வெள்ள நீரை வேறு வழியின்றிக் கர்நாடகம் இப்போது திறந்துவிட்டது. அக்டோபர் 2-ஆம் நாள் மேட்டூர் அணை திறக்கும் அவலம் ஏற்பட்டது. 

மத்திய அரசுடன் மிகவும் இணக்கமாகவும் நெருக்கமாகவும் செயல்படும் தமிழ்நாடு அரசு, காவிரியில் சட்டப்படி கர்நாடகம் திறக்க வேண்டிய தண்ணீரைத் திறந்துவிட நடுவண் அரசு மூலம் உரிய அழுத்தம் கொடுத்து நடவடிக்கை எடுக்கவில்லை. நேரடியாகக் கர்நாடக அரசுடன் பேசி அழுத்தம் கொடுத்துத் தண்ணீர் பெறவும் முடியவில்லை. 

தமிழ்நாட்டிற்கு இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பாதுகாப்புமில்லை; அரசியல் பாதுகாப்பும் இல்லை. அனாதைபோல் உள்ளோம்! 

கொடுமைகளின் கொடுமுடிபோல், இந்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரஞ்சித்குமார் 20.09.2017 அன்று காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் பேசிய வாதங்கள் அமைந்தன. 

“காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பை அப்படியே செயல்படுத்த முடியாது. அதில் நடுவண் அரசுக்கு 12 சந்தேகங்கள் இருக்கின்றன; மேலும் பல குழப்பங்கள் இருக்கின்றன. அந்த இறுதித் தீர்ப்பில் நீக்க வேண்டியவற்றை நீக்கி, சேர்க்க வேண்டியவற்றை சேர்த்து, திருத்தங்கள் பல செய்துதான் செயல்படுத்த முடியும். அந்த வேலையை நாடாளுமன்றம் பார்த்துக் கொள்ளும்” என்றார் ரஞ்சித் குமார். 

இந்திய அரசு வெளிப்படையாகவே காவிரித் தீர்ப்பைக் காலி செய்யும் முடிவில் இருப்பதைத் தெரிவித்த பிறகும், தமிழ்நாடு அரசு எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை; தற்காப்பு நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

கர்நாடக அரசின் வழக்கறிஞர் பாலி நாரிமன் உச்ச நீதிமன்றத்தில், “தமிழ்நாட்டிற்கு 192 ஆ.மி.க. தண்ணீர் தர முடியாது; 100 அல்லது 102 ஆ.மி.க. தண்ணீர்தான் தர முடியும்; அதையும் மாதாமாதம் தர முடியாது. ஆண்டுக்கு ஒரு தடவைதான் தர முடியும்” என்று வாதிட்டார். 

காவிரி வழக்கில் தமிழ்நாட்டிற்கு நீதி கிடைக்காதோ, வெட்டிச் சிதைக்கப்பட்ட கட்டப்பஞ்சாயத்து தீர்ப்புதான் கிடைக்குமோ என்ற அச்சம் தமிழ் மக்களிடம் ஏற்பட்டுள்ளது. 

இப்படிப்பட்ட நெருக்கடியான நேரத்தில், “வஞ்சக வலையறுக்கும் காவிரிக் காப்பு மாநாடு” – தஞ்சை காவேரி திருமண மண்டபத்தில் 06.10.2017 வெள்ளி பிற்பகல் 3 மணியிலிருந்து 8.30 மணி வரை நடக்கிறது. 

12 மாவட்டங்களில் 24,50,000 ஏக்கர் நிலங்களுக்குப் பாசன நீர் – 20 மாவட்டங்களில் நான்கரை கோடி மக்களுக்குக் குடிநீர் – காவிரி நீர்தான்! 

எல்லா அதிகாரங்களையும் குவித்து வைத்துள்ள இந்திய அரசு, தமிழ்நாட்டிற்கு எதிராகப் பாகுபாடு காட்டுகிறது; காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட உச்ச நீதிமன்றம் ஆணையிட்டும் அதைச் செயல்படுத்த மறுக்கிறது. தமிழ்நாடு அரசோ, காவிரி உரிமையைக் காப்பதில் கவலை அற்று, அக்கறையற்று, செயலற்று காலத்தை ஓட்டுகிறது. 

காவிரி உரிமைப் போராட்டத்தில் கடைசி விளிம்பில் நிற்கிறோம். புதிய உத்திகளையும் போராட்டத் திட்டங்களையும் வகுக்க வேண்டும். தஞ்சை மாநாட்டில் எந்த அளவு அதிகம் மக்கள் திரள்கிறார்களோ, அந்த அளவு இந்திய அரசின் கவனமும், தமிழ்நாடு அரசின் கவனமும் ஈர்க்கப்படும்! திருப்பங்கள் உண்டாக்கலாம்! வாருங்கள், வாருங்கள் என்று காவிரி உரிமை மீட்புக் குழு உங்களை அழைக்கிறது! 

Labels: ,

" கட்டணக் கொள்ளைக்கு எதிரான இராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம்" -- தோழர் பெ. மணியரசன் நேரில் சென்று ஆதரவு!

Monday, October 2, 2017

=============================================
கட்டணக் கொள்ளைக்கு எதிரான 
இராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம்
-------------------------------------------------------------------------------
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
தோழர் பெ. மணியரசன் நேரில் சென்று ஆதரவு!
=============================================

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் முறைகேடுகளால் சீரழிந்து வந்த நிலையில், 2013இல் தமிழ்நாடு அரசே அதை கையகப்படுத்தியது. அதைத் தொடர்ந்து, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த இராசா முத்தையா மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி ஆகியவையும் அரசுடைமை ஆக்கப்பட்டன. எனினும், இராசா முத்தையா மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் அரசு அனுமதிக்க கட்டணம் வசூலிக்கப்படாமல், கொள்ளைக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டிலுள்ள மருத்துவக் கல்லூரிகளையும், அதன் கட்டணங்களையும் கட்டுப்படுத்தவும், முறைப்படுத்தவும் தமிழ்நாடு அரசு ஏற்படுத்திய எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்ததுடன், இராசா முத்தையா மருத்துவக் கல்லூரி – பல் மருத்துவக் கல்லூரி ஆகியவையும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அது நடைபெறாததால், இராசா முத்தையா கல்லூரி தம் விருப்பத்திற்குக் கட்டணக் கொள்ளை நடத்தி வருகிறது.
இதைக் கண்டித்தும், தமிழ்நாடு அரசு விதித்த கட்டணத்தையே இங்கு வசூலிக்க வேண்டுமெனக் கோரி கடந்த ஆகத்து 29 முதல் அக்கல்லூரிகளின் மாணவர்கள், கல்லூரி வளாகத்தில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மாணவர்களின் ஞாயமான கோரிக்கைகளுக்கு செவி சாய்க்க வேண்டிய அரசு, அதைச் செய்யாமல் மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்தன. மேலும், விடுதிகளையும் மூடி மாணவர்களை கட்டாயமாக வெளியேற்றினர். போராட்டத்தைக் கைவிடவில்லை எனில் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மிரட்டல் விடுத்திருக்கின்றனர்.
எனினும், அச்சுறுத்தலுக்கு அடிபணியாமல் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. நேற்று (01.10.2017) நடைபெற்ற 33ஆவது நாள் போராட்டத்தில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன், பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் ஆகியோர் பங்கேற்றுடன், கோரிக்கைகளை ஆதரித்து மாணவர்களிடம் உரையாற்றினர்.
தோழர் பெ. மணியரசன் பேசுகையில், “அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசே ஏற்று நடத்தத் தொடங்கிய பிறகு, இராசா முத்தையா கல்லூரியும் தமிழ்நாடு அரசுதான் நிர்வகித்திருக்க வேண்டும். அது நடக்காததால்தான், இங்குக் கட்டணக் கொள்ளை பெருமளவில் நடக்கிறது.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் சற்றொப்ப 13,600 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தனியார் கல்லூரிகளிலோ 2 இலட்சம் முதல் 4 இலட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், இராசா முத்தையா கல்லூரியிலோ மிக மோசமாக சற்றொப்ப 13 இலட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கும் அவலம் நடக்கிறது!
இதன் காரணமாக, இங்கு நடைபெறும் மருத்துவமனையும் சீரழிந்து கிடக்கிறது. பொது மக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையும் தரமானதாக இல்லை!
மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்று சொல்லும் தமிழ்நாடு அரசு, கடலூர் மாவட்டத்திற்கென்று உள்ள இந்த மருத்துவக் கல்லூரியை உடனடியாக அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். அப்போதுதான், இக்கட்டணக் கொள்ளையைத் தடுக்க முடியும்!
இதை வலியுறுத்தி, வரும் அக்டோபர் 9 அன்று சிதம்பரத்தில் முன்னெடுக்கப்படும் அனைத்துக் கல்லூரி மற்றும் பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில், தமிழ்த்தேசியப் பேரியக்கமும் பங்கெடுக்கிறது. தமிழ் மக்கள் அனைவரும் இதில் பங்கேற்க வேண்டுமெனவும் அழைப்பு விடுக்கிறோம்” என்று பேசினார்.
தமிழக இளைஞர் முன்னணி துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஆ. குபேரன், தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் தோழர் சுப்பிரமணிய சிவா, மகளிர் ஆயம் நடுவண் குழு உறுப்பினர் தோழர் ம. இலட்சுமி, தோழர் சுகன் உள்ளிட்ட பேரியக்கத் தோழர்கள் உடனிருந்தனர்.

Labels:


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்