<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d6955529389241309188\x26blogName\x3d%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86.%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://thozharmaniyarasan.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com/\x26vt\x3d-8408640130511538487', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

இந்திய அரசு எப்போதும் சிங்களர் பக்கமே நரேந்திர மோடி காணொலி உரை! பெ. மணியரசன்

Sunday, July 22, 2018



இந்திய அரசு எப்போதும் சிங்களர் பக்கமே
நரேந்திர மோடி காணொலி உரை!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
தோழர் பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை!

இலங்கையில் இந்திய அரசு உதவியுடன் செயல்படும் மருத்துவ உதவி ஊர்தி (ஆம்புலன்ஸ்) திட்டத்தை விரிவுபடுத்தும் நிகழ்ச்சியில் நேற்று (21.07.2018) இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி தில்லியில் இருந்தவாறு காணொலி மூலம் தொடங்கி வைத்தார். 

அப்போது அவர் பேசியது உலகெங்கும் வாழும் தமிழர்கள் கவனிக்கத்தக்கதாகும். “இலங்கையை ஒரு பக்கத்து நாடாக மட்டும் நான் பார்ப்பதில்லை. தெற்காசியாவில் மிகச்சிறப்பான - நம்பிக்கைக்கு உரிய பங்காளியாகத்தான் (Trusted Partner) நான் பார்க்கிறேன். நல்ல தருணங்களிலும், மோசமான தருணங்களிலும் எப்போதுமே இலங்கை கூப்பிட்ட குரலுக்கு முதலில் பதில் அளிக்கும் நாடு இந்தியா” என்று அப்போது மோடி பேசியுள்ளார். இச்செய்தி இன்று (22.07.2018) ஏடுகளில் வந்துள்ளது.

சிங்கள அரசுடன் இந்தியாவுக்குள்ள இந்த உறவு ஆரியப்பாசத்தின் அடிப்படையிலானது! காங்கிரசு ஆட்சியாக இருந்தாலும், பா.ச.க. ஆட்சியாக இருந்தாலும் பாசமுள்ள பங்காளி உறவைத்தான் சிங்கள இனத்துடன் அவை கொண்டுள்ளன. 

ஒன்றரை இலட்சம் ஈழத்தமிழர்களை சிங்கள அரசு இனப்படுகொலை செய்ததற்கு போர் வகையிலும், அரசியல் வகையிலும் உற்ற துணையாய் நின்றது இந்தியா! அதை மனத்தில் வைத்துத்தான், “நல்ல தருணங்களிலும் மோசமான தருணங்களிலும் இலங்கையின் கூப்பிட்ட குரலுக்கு முதலில் பதில் அளிக்கும் நாடு இந்தியா!” என்று நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டு மீனவர்கள் 600-க்கும் மேற்பட்டோரை சிங்களக் கடற்படை சுட்டுக் கொன்ற நேரங்களிலும், இன்றைக்கும் நம் மீனவர்களை தமிழ்நாட்டுக் கடல் பரப்பிலும், பன்னாட்டுக் கடல் பரப்பிலும் சிங்களக் கடற்படை தாக்கும்போதும், தமிழ்நாடு கதறிக் கதறி இந்தியாவின் உதவியைக் கேட்டது. ஆனால், இந்தியா ஒரு போதும் உதவிக்கு வந்ததில்லை! 

சட்டப்படி அமைக்கப்பட்ட தீர்ப்பாயம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவை அளித்த தீர்ப்புகளின்படி கர்நாடகம் காவிரியில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று தமிழ்நாட்டு உழவர்களும், அரசியல் கட்சிகளும் கதறிக் கதறி வேண்டுகோள் வைத்தாலும் இந்தியா அதற்கு செவி சாய்த்ததில்லை! 

தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சிக் குழுவினர் தலைமையமைச்சரை நேரில் சந்தித்து காவிரி தொடர்பாக மனு கொடுக்க அனுமதி கேட்டபோது, அதற்குக்கூட அனுமதி மறுத்தார் நரேந்திர மோடி! 

ஆனால், “இலங்கை கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி சென்று உதவுகிற இந்தியா” என்று நரேந்திர மோடி ஒளிவு மறைவின்றி குறிப்பிடுகிறார். 

உள்ளதை உள்ளபடி புரிந்து கொள்ள வேண்டியவர்கள் – தமிழர்கள்! 

இந்திய அரசின் கங்காணிகளாகச் செயல்பட்டுக் குழப்பிக் கொண்டிருக்கும் “அறிவாளிகள்” மற்றும் அரசியல்வாதிகள் ஆகியோரிடம் எச்சரிக்கையாய் இருந்து, தமிழர்கள் தமிழ்த்தேசிய உணர்வைப் பெறுவதற்குரிய பாடத்தையே நரேந்திர மோடி நடத்தியுள்ளார். 

Labels:

நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தோற்றுப் போனது இந்தியத்தேசியம்! பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை!

Saturday, July 21, 2018


நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில்
தோற்றுப் போனது இந்தியத்தேசியம்!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
தோழர் பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை!


நாடாளுமன்றத்தில் தெலுங்கு தேசம் கட்சி நேற்று (20.07.2018), நரேந்திர மோடி அமைச்சரவைக்கு எதிராகக் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பில் நரேந்திர மோடி அரசு வெற்றி பெற்றாலும், “இந்தியத்தேசியம்” தோல்வி அடைந்துவிட்டது!
இந்த வாக்கெடுப்பில், பா.ச.க.வின் கூட்டணியிலுள்ள சிவசேனை கட்சி கலந்து கொள்ளவில்லை. மராட்டியத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக சிவசேனை தொடர்ந்து பா.ச.க. ஆட்சியை விமர்சித்து வருகிறது. இத்தனைக்கும் சிவசேனை தேசிய சனநாயகக் கூட்டணியில் உறுப்பு வகிப்பதுடன், நடுவண் அமைச்சரவையிலும் உறுப்பு வகிக்கிறது. அத்துடன் இந்துத்துவா – இந்தியத்தேசியம் என்பதில் தீவிர கருத்து கொண்ட கட்சி அது!
பாபர் மசூதி இடிப்பில் தங்கள் கட்சியினர் கலந்து கொண்டதில் பெருமை கொள்கிறோம் என்று வெளிப்படையாக அறிவித்தது அதன் தலைமை! ஆனால், மராட்டிய மக்கள்தான் தன்னுடைய இறுதி இருப்புக்கான அடித்தளம் என்ற நிலையில், மராட்டியத்தில் அடுத்து ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென்ற நோக்கில் கூட்டணி ஆட்சியைக் கைவிட்டது. அத்துடன், இந்தியத்தேசியம் – இந்துத்துவா ஆகியவற்றை கைவிடாவிட்டாலும் மராட்டிய மக்கள் உணர்வுக்குப் பின்தான் அவை என்ற நிலைக்கு வந்துள்ளது சிவசேனை!
ஒரிசாவில் ஆளுங்கட்சியாக உள்ள பிஜூ சனதா தளம், இந்த நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பைப் புறக்கணித்துள்ளது. “கடந்த பத்தாண்டுகளாக காங்கிரசுக் கூட்டணி அரசும் பா.ச.க. கூட்டணி அரசும் ஒரிசாவிற்கு எந்தப் பயனும் தரவில்லை. பின்னர் எதற்காக நாங்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ள வேண்டும்” என்று பிஜூ சனதா தளம் கட்சியின் மக்களவைத் தலைவர் பத்ருஹரி மேத்தா எதிர்க்கேள்வி கேட்டுள்ளார்.
தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி (டி.ஆர்.எஸ்.) வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் வெளிநடப்பு செய்துவிட்டது. அதற்கு அக்கட்சியின் தலைவர்கள் சொன்ன காரணம் – “தெலங்கானா மாநிலத்துக்கும், நடுவண் அரசுக்கும் இடையே நல்லிணக்கம் நிலவும்போது, தெலுங்கு தேசம் கொண்டு வந்த இந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நாங்கள் ஏன் ஆதரிக்க வேண்டும்” என்பதாகும்!
பஞ்சாபின் மாநிலக் கட்சியான பாதல் அகாலி தளம், அம்மாநிலத்தில் தனக்கு நேர் எதிராக உள்ள காங்கிரசை வீழ்த்துவதற்காக பா.ச.க.வை ஆதரித்து வருகிறது. எனவே, பா.ச.க. அரசை ஆதரித்து வாக்களித்தது.
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, 19.07.2018 அன்று மேட்டூரில் செய்தியாளர்களிடம் பேசும்போது, தெலுங்கு தேசம் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்க மாட்டோம் என்றார். “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, 22 நாட்கள் அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர்கள் மக்களவையை முடக்கி போராட்டம் செய்தார்கள். எந்தவொரு மாநிலமும் நமக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கவில்லை! எனவே, தமிழகப் பிரச்சினைகளுக்கு மட்டும் குரல் கொடுப்போம்! ஆந்திரா மாநிலப் பிரச்சினைக்காக கொண்டு வரப்படும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரிக்கத் தேவையில்லை” என்றார்.
பா.ச.க.வின் தயவு தேவை என்ற நோக்கத்தில் அ.இ.அ.தி.மு.க. இந்த முடிவை எடுத்திருக்கவும் வாய்ப்புண்டு! ஆனால், அக்கட்சி சொன்ன காரணம் – தமிழ்நாட்டு மக்களை சார்ந்துதான் நாங்கள் செயல்படுவோம் என்பதாகும். இவ்வாறு சொன்னால், தமிழர்கள் தங்களை ஆதரிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு முதலமைச்சருக்கு இருக்கிறது.
நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்மொழிந்து கொண்டு வந்த தெலுங்கு தேசம் கட்சியின் முதன்மைச் செய்தி – ஆந்திரப்பிரதேசத்திற்கு மோடி அரசு இரண்டகம் செய்துவிட்டது; மாநிலப் பிரிவினையால் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட ஒப்புக் கொண்டபடி மோடி அரசு சிறப்பு நிதி தரவில்லை; புதிதாகக் கட்டப்படும் தலைநகர் அமராவதிக்குத் தேவையான நிதி தரவில்லை என்பதாகும்.
மேற்கண்ட அனைத்துச் செய்திகளையும் இணைத்துப் பார்த்தால், இந்தியத்தேசியம் என்பது தோற்றுப் போயிருக்கிறது. நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்தவர்களும் சரி, வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்தவர்களும் சரி இந்தியத்தேசிய அரசியல் - இந்தியத்தேசியப் பொருளியல் கொள்கை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு செயல்படவில்லை என்பது தெரிய வருகிறது.
இந்தியா முழுவதும் அந்தந்த மாநில இனச் சார்போடுதான் அரசியல் கட்சிகள் செயல்படுகின்றன. மாநிலத் தேசிய இன உணர்வுடன் நிற்பதுதான் ஓர் உத்தி என்ற அளவில்கூட ஆதாயம் தரும் அரசியலாகும்.
தமிழ்நாட்டில் தமிழின உணர்வு கொள்வதோ, தமிழ்த்தேசியக் கொள்கை பேசுவதோ விதிவிலக்கான தனித்த செயல் அல்ல! எல்லா மாநிலங்களும் அப்படித்தான் இருக்கின்றன. அரசியல் ஆதாயத்திற்கான உத்தியாக இல்லாமல், உண்மையான தமிழின உணர்வை – தமிழ்நாட்டில் வளர்ப்பதுதான் நம் உரிமைகளையும், உயிர்களையும் பாதுகாப்பற்குரிய உறுதிப்பாடாகும்!
இந்த நம்பிக்கையில்லா விவாதத்தில் உச்ச காட்சி - மோடியைக் காரசாரமாக விமர்சித்த இராகுல் காந்தி கடைசியில் அவரைக் கட்டித் தழுவியதாகும்! இந்தியத்தேசியம் – ஒட்டுண்ணி முதலாளியம் – இந்தி, சமற்கிருதத் திணிப்பு – ஆரிய அடிநாதம் ஆகிய அனைத்திலும் இரட்டையர்களாக உள்ள காங்கிரசும், பா.ச.க.வும் தழுவிக் கொண்டது இயல்பே!

Labels:

காவிரி ஒழுங்காற்றுக் குழு சூலை மாதத் தண்ணீரைத் திறக்காதது ஏன்? தோழர் பெ. மணியரசன் கேள்வி!

Friday, July 6, 2018



காவிரி ஒழுங்காற்றுக் குழு

சூலை மாதத் தண்ணீரைத் திறக்காதது ஏன்?

காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் 

தோழர் பெ. மணியரசன் கேள்வி!

புதுதில்லியில் நேற்று (05.07.2018) கூடிய காவிரி ஒழுங்காற்றுக் குழு, சூலை மாதத்திற்குக் கர்நாடகம் தமிழ்நாட்டிற்குத் திறந்துவிட வேண்டிய 31.25 ஆ.மி.க. (டி.எம்.சி.) தண்ணீரைத் திறந்து விட ஏற்பாடு எதுவும் செய்யாமல், புள்ளி விவரங்கள் தொடர்பாக நான்கு மாநிலங்களும் படிவம் நிரப்பச் சொல்லிவிட்டுக் கலைந்துள்ளது. இது பெரும் ஏமாற்றத்தைத் தருகிறது! 

கடந்த 02.07.2018 அன்று புதுதில்லியில் கூடிய காவிரி மேலாண்மை ஆணையம் சூலை மாதத்திற்குரிய 31.25 ஆ.மி.க. தண்ணீரைக் கர்நாடகம் தமிழ்நாட்டிற்குத் திறந்துவிட வேண்டும் என்று அறிவித்ததே, அது என்னாயிற்று? வழக்கம்போல் இதுவும் ஏட்டுச் சுரைக்காய் தானா? 

கர்நாடகத்தில் வழக்கத்தைவிட அதிகமாகப் பருவமழை பெய்து, அம்மாநில அணைகளில் சராசரியாக 90 விழுக்காட்டிற்கு மேல் தண்ணீர் நிரம்பியுள்ள நிலையில்கூட, சூலை மாதத்திற்குரிய தண்ணீரைத் தமிழ்நாட்டிற்குத் திறக்காவிட்டால், காவிரி ஆணையம் – ஒழுங்காற்றுக் குழு என்பவையெல்லாம் பொம்மை அமைப்புகளா என்ற கேள்வி எழுகிறது. 

நேற்று நடந்த ஒழுங்காற்றுக் குழுவில் நீர்த் தேக்கங்களில் தண்ணீர் ஆவியாகப் போவது பற்றியும், நீர் இருப்பு, வருகின்ற தண்ணீர், மழைப்பொழிவு போன்றவை பற்றியும் புள்ளி விவரங்களை நான்கு மாநிலங்களும் நிரப்பித் தருவதற்கான படிவங்களை கொடுத்ததுதான் அக்கூட்டத்தின் ஒரே பணியாகத் தெரிகிறது.

இப்படிவங்களை சூலை 16க்குள் நான்கு மாநிலங்களும் ஒழுங்காற்றுக் குழுவுக்குத் தர வேண்டும் என்றும், அதன் அடுத்த கூட்டம் சூலை 19இல் நடக்கும் என்றும் அதன் தலைவர் நவீன் குமார் தெரிவித்துள்ளார். அவரிடம் செய்தியாளர் ஒருவர் சூலை மாதத்திற்குரிய தண்ணீர் திறந்து விடுவது பற்றி என்ன ஆணை பிறப்பித்துள்ளீர்கள் எனக் கேட்டதற்கு, “பருவமழை நன்கு பெய்து கொண்டிருக்கிறது” என்று மட்டும் விடையாகக் கூறினார். 

சூலை மாதத்திற்குரிய தண்ணீரைக் கர்நாடகம் திறந்துவிட்டால் இவ்வாண்டு குறுவை சாகுபடி செய்ய முடியும்! 

காவிரியை மீட்டு விட்டதாக “வெற்றி” விழா கொண்டாடி வரும் தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த ஆணைப்படி கூடக் கர்நாடகத்திலிருந்து தண்ணீர் பெற அக்கறை காட்டவில்லை என்பது வேதனை அளிக்கிறது. 

காவிரித் தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தீர்ப்பு, இறுதித் தீர்ப்பு மற்றும் அவ்வப்போது வெளியிட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் ஆகியவற்றைச் செயல்படுத்த மறுத்ததுபோல்தான் மூன்று நீதிபதிகள் ஆயம் வழங்கிய காவிரி இறுதித் தீர்ப்பையும், அதன் அடிப்படையில் அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையம் 02.07.2018 அன்று வெளியிட்ட ஆணையையும் செயல்படுத்த இந்திய அரசு மறுக்கிறதா என்ற ஐயம் வலுவாக எழுகிறது. 

நேற்று (06.07.2018) கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, கர்நாடக சட்டப்பேரவையில் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் காவிரியின் குறுக்கே மேக்கேத்தாட்டில் அணை கட்டுவோம் என்று உறுதியளித்துள்ளார். அத்துடன், கன்னட அமைப்புகள் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்துவிட்டால், முழு அடைப்பு உள்ளிட்ட போராட்டங்கள் நடத்துவோம் என அறிவித்துள்ளன. இவை அனைத்தும் கர்நாடகத்திற்கு இந்திய அரசு கொடுக்கும் துணிச்சலில்தான் உருவாகின்றன. 

தமிழ்நாடு அரசும், இந்திய அரசும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஆணைப்படி உடனடியாக சூலை மாதத்திற்குரிய தண்ணீரைக் கர்நாடகத்திடமிருந்து பெற்றுத் தர வேண்டும் என்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன். 

Labels:

தோழர் முகிலனைத் தனிமைச் சிறையில் அடைக்காதீர்! அடிப்படை வசதிகள் செய்து தருக! தமிழக சிறைத்துறை அமைச்சருக்கு தோழர் பெ. மணியரசன் கோரிக்கை!




தோழர் முகிலனைத்
தனிமைச் சிறையில் அடைக்காதீர்!
அடிப்படை வசதிகள் செய்து தருக!

தமிழக சிறைத்துறை அமைச்சருக்கு...

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
தோழர் பெ. மணியரசன் கோரிக்கை!


சட்டவிரோத மணல் வணிகம் மற்றும் மணல் கொள்ளை ஆகியவற்றைத் தடுப்பதில் மக்கள் திரள் போராட்டங்கள் நடத்தி வருபவர் தோழர் முகிலன். அதற்கு முன் கூடங்குளம் அணு உலை அபாயத்தைத் தடுக்க மக்கள் போராட்டங்களில் தொடர்ந்து பங்கேற்றவர். 

கூடங்குளம் போராட்டம் தொடர்பாக தோழர் சுப. உதயகுமார், தோழர் முகிலன் மற்றும் அப்பகுதி மக்கள் மீது ஏராளமான வழக்குகளைக் காவல்துறை போட்டுள்ளது. கூடங்குளம் வழக்கில் வாய்தாவுக்கு நீதிமன்றம் போகவில்லை என்பதற்காகத் தோழர் முகிலன் மீது வள்ளியூர் நீதிமன்றம் பிடி ஆணை (வாரண்ட்) பிறப்பித்திருந்தது. ஆனால் தோழர் முகிலன் தலைமறைவாக இல்லை. வெளிப்படையாக இயங்கி வந்தார். போராட்டங்களில் கலந்து வந்தார். 

அந்த பிடி ஆணைக்காகக் காவல்துறையினர் தோழர் முகிலனைத் தளைப்படுத்தி வள்ளியூர் நீதிமன்றத்தில் நேர் நிறுத்தினர். நீதிமன்றம் அவரை சிறையில் அடைத்தது. ஆனால் தோழர் முகிலன் பிணையில் வெளிவர மறுத்து, சற்றொப்ப 300 நாட்களாக சிறையில் உள்ளார். வழக்கை விரைந்து நடத்த நீதிமன்றத்துக்குத் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தார்.

அவரை அண்மையில் பாளையங்கோட்டை சிறையிலிருந்து மதுரை சிறைக்கு மாற்றி இருக் கிறார்கள். மதுரை சிறையில் தூய்மை அற்ற பாழடைந்த தனி அறையில் சாக்கடைக் கழிவுகளுக்கு அருகில் தோழர் முகிலனைத் தனியே அடைத்து வைத்திருப்பதாகச் செய்திகள் வருகின்றன.

தோழர் முகிலனுடன் வழக்குத் தொடர்பாக கலந்து பேச வரும் வழக்குரைஞர்களுக்கு நேரம் குறைக்கப்படுவதாகவும் அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார். இதுவும் அவருக்கான நீதியை மறுப்பதாகும்! 

குற்றஞ்சாட்டப்பட்டவரை சிறையில் தூய்மையான அறையில், உரிய வசதிகளுடன் வைத்திருப்பது சிறைச் சட்டமாகும். குற்றஞ்சாட்டப்பட்டவருக்குரிய குற்றவியல் நீதிச் சட்டங்கள் (Criminal Justice Rules) இருக்கின்றன. அவற்றிற்குப் புறம்பாக யாரையும் சிறையில் நடத்தக் கூடாது! 

தமிழ்நாடு சிறைத்துறை அமைச்சர் அவர்களும், சிறைத்துறை மேலதிகாரிகளும் உடனடியாகத் தலையிட்டு, மதுரை நடுவண் சிறையில் தோழர் முகிலனுக்குரிய அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்து தருமாறும் தனிமைப்படுத்தி சிறை வைப்பதைக் கைவிடுமாறும், தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

Labels:

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு : தமிழ்நாடு ஆளுநரும் புதுவை ஆளுநரும் திருந்துவார்களா? தமிழ்நாடு முதல்வர் முதுகு நிமிருமா? தோழர் பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை!

Thursday, July 5, 2018



உச்ச நீதிமன்றத் தீர்ப்பு : தமிழ்நாடு ஆளுநரும் புதுவை ஆளுநரும் திருந்துவார்களா?
தமிழ்நாடு முதல்வர் முதுகு நிமிருமா?


தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
தோழர் பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை!


தலைநகர் தில்லியில் முதல்வர் அரவிந்த் கெச்ரிவால் அமைச்சரவையை செயலற்றதாக்கி, நிர்வாகத்தை முடக்கி வைத்த துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் நடவடிக்கைகள் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானவை என்று உச்ச நீதிமன்றம் நேற்று (04.07.2018) தீர்ப்பளித்திருப்பது தில்லிக்கு மட்டுமின்றி, இந்தியா முழுமைக்கும் அத்துமீறல் செய்யும் ஆளுநர்களுக்குக் கடிவாளம் போட்டது போல் உள்ளது. 

“அமைச்சரவையின் உதவி மற்றும் அறிவுரைப்படிதான் துணை நிலை ஆளுநர் செயல்பட வேண்டும்” என்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு ஆயம் தீர்ப்பளித்துள்ளது. ஐந்து நீதிபதிகளும் தனித்தனித் தீர்ப்பெழுதினாலும், ஒத்த கருத்தோடு எழுதியுள்ளார்கள். 

அரசுக்கு அலுவலர்கள், பள்ளிகளுக்கு ஆசிரியர்கள், மருத்துவமனைகளுக்கு மருத்துவர்கள் – செவிலியர்கள் என யாரை கெச்ரிவால் அரசு அமர்த்தினாலும், அத்தனை நியமனங்களையும் தடுத்து வந்தார் துணை நிலை ஆளுநர் அனில் பைஜால். அவர் தானாகச் செயல்படவில்லை. அவ்வாறு தடைகள் போட வேண்டும் என்பதுதான் நரேந்திர மோடி – அமித்சா தலைமையின் விருப்பம்! 

மோடி – அமித்சா நிர்வாகத்தின் அதே வேலைத் திட்டத்தைத் தான் புதுச்சேயில் துணை நிலை ஆளுநர் கிரேன் பேடி செயல்படுத்தி புதுவை நிர்வாகத்தை சீர்குலைத்து வருகிறார். 

அதேவேலைத் திட்டத்தைத் தமிழ்நாட்டில் செயல்படுத்த அனுப்பப்பட்டவர்தான் ஆளுநர் பன்வாரிலால் புரோகித். இதில் தில்லி முதலமைச்சர் கெச்ரிவால், புதுவை முதலமைச்சர் நாராயணசாமி ஆகியோர் தங்கள் மாநில ஆளுநரின் அதிகார ஆக்கிரமிப்பை எதிர்த்து சட்டப்போராட்டமும் சனநாயகப் போராட்டமும் நடத்தி வருகிறார்கள். இப்போது கெச்ரிவால் ஓரளவு வெற்றி பெற்றுள்ளார். ஆனால் தமிழ்நாட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி என்ன செய்கிறார்? ஆளுநர் பன்வாரிலாலின் அதிகார அத்துமீறலுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கிறார்! 

தமிழ்நாடு அமைச்சரவையின் அறிவுரையைக் கேட்காமலே பல்கலைக்கழகத் துணை வேந்தர்களை அமர்த்துகிறார் பன்வாரிலால். தமிழ்நாட்டிற்கு ஆந்திராவைச் சேர்ந்தவரை துணை வேந்தராக அமர்த்துகிறார். எல்லா மாவட்டங்களுக்கும் சென்று அதிகாரிகளைக் கூட்டி அரசின் வேலைகளையும், திட்டப்பணிகளையும் ஆய்வு செய்கிறார். 

ஆளுநர் அரசமைப்புச் சட்டத்திற்கு முரணாக செயல்படும்போது, சனநாயக வழியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினால் – கருப்புக்கொடி காட்டினால் ஏழாண்டு சிறைத் தண்டனை பெற்றுத் தருவேன் என்று ஆளுநர் பன்வாரிலால் அறிவிக்கிறார். இதற்கானத் துணிச்சலை ஆளுநருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கொடுக்கிறார். 

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தமது தீர்ப்புரையில் கையாண்டிருக்கும் சில சொற்கள் மிகவும் கவனத்திற்குரியவை. 

“நன்கு விவாதித்து சட்டப்படி அமைச்சரவை எடுத்த முடிவுகளை முடக்க ஆளுநர் குழி பறிக்கக் கூடாது”. 

“கூட்டுப் பொறுப்புடன் அமைச்சரவை எடுத்த முடிவை செயல்படுத்துவதற்கு உரிய முக்கியத்துவம் தராமல் (ஆளுநர்) தடையாய் இருந்தால் பிரதிநிதித்துவ ஆட்சி என்பது செல்லரித்துப் போகும்!”.

“முதலமைச்சரும் அமைச்சர்களும் நன்கு விவாதித்து எடுத்த முடிவை செயல்பட விடாமல் துணை நிலை ஆளுநர் தடுத்தால் அமைச்சரவையின் கூட்டு முடிவு என்பது அம்மணமாக்கப்பட்டது போல் வெறுமை ஆகிவிடும்!”. 

உச்ச நீதிமன்றத்தின் மேற்கண்ட நெறிகாட்டும் நெருப்புச் சொற்கள் அனைத்து ஆளுநர்களுக்கும் பொருந்தும். பன்வாரிலால் புரோகித்தும் கிரேன் பேடியும், திருந்துவார்களா? மோடி அரசு திருத்திக் கொள்ளுமா? எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் முதுகு நிமிருமா? இவர்கள் எல்லாம் தங்களைத் திருத்திக் கொள்வதே சனநாயகம்! 

Labels:

கர்நாடகத்திற்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதித்துப் போராட வேண்டும்! தோழர் பெ. மணியரசன் அறிக்கை!

Sunday, July 1, 2018



கர்நாடகத்திற்கு எதிராகப் பொருளாதாரத்
தடை விதித்துப் போராட வேண்டும்!

காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர்
தோழர் பெ. மணியரசன் அறிக்கை!


“காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதை ஏற்க முடியாது” என்று நேற்று (30.06.2018) கர்நாடக முதலமைச்சர் தலைமையில் பெங்களூருவில் கூடிய அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப் போவதாகவும், நாடாளுமன்றத்தில் கர்நாடக உறுப்பினர்கள் போராடப் போவதாகவும் அத்தீர்மானம் கூறுகிறது. 

உச்ச நீதிமன்றத்தின் காவிரித் தீர்ப்பை நாடாளுமன்றத்தில் வைத்து - விவாதித்து அதில் பெரும்பான்மை அடிப்படையில்தான் நிறைவேற்றியிருக்க வேண்டும், அவ்வாறில்லாமல் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நேரடியாக ஏற்க முடியாது என்றும் அத்தீர்மானத்தில் கூறியுள்ளார்கள். 

இப்பொழுது, கர்நாடகத்தின் வெளிப்படையான காவிரி அணைகள் நான்கிலும் தண்ணீர் நிரம்பி – அணைகள் உடையாமல் இருப்பதற்காக மிகை நீர் திறந்துவிடப்பட்டிருக்கிறது. கபிணி அணை உடைந்துவிடும் என்ற அச்சத்தில் 25,000 கன அடி தண்ணீர் திறந்துவிட்ட வேளையில், மேற்படி தீா்மானம் கர்நாடக அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. காவிரிச் சிக்கல் என்பது தண்ணீர்ச் சிக்கல் அல்ல – அது கன்னடர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலே உள்ள இனச்சிக்கல் என்பதை கர்நாடக அரசும், அனைத்துக் கட்சிகளும் மீண்டும் உணர்த்தியுள்ளன. 

மேற்படி தீர்மானம், இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது! உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது! இப்படிப்பட்ட தீர்மானம் நிறைவேற்றிய கூட்டத்தில், நடுவண் அரசின் மூத்த அமைச்சர்கள் அனந்தகுமார், சதானந்த கவுடா ஆகியோர் கலந்து கொண்டு தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்துள்ளார்கள். அவர்கள், தமிழ்நாட்டிற்கும் சேர்த்துத்தான் நடுவண் அமைச்சர்களா? அல்லது அரசமைப்புச் சட்ட உரிமை கோரப்படாத ஒதுக்கப்பட்ட (Aparthied) இனத்தின் தாயகமாக தமிழ்நாட்டை நடுவண் அரசு வைத்திருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது! நாட்டின் தலைமையமைச்சர் நரேந்திர மோடி, இதற்கு விடை சொல்ல வேண்டும்! 

மேற்படி சட்டவிரோதத் தீர்மானத்தை நிறைவேற்றியவர்கள், இந்தியத்தேசியம் பேசக் கூடிய “ஒற்றை பாரத மாதா” புகழ் பாடக் கூடிய காங்கிரசு, பா.ச.க., மதசார்பற்ற சனதா தளக் கட்சித் தலைவர்கள் என்பது கவனத்திற்குரியது! அவர்கள் பேசும் இந்தியத்தேசியம் – பாரததேசியம் ஆகியவற்றில் தமிழ்நாட்டுக்கு இடமில்லை, கர்நாடகத்தின் கன்னட இனவெறிச் செயல்களுக்குத் தான் இடமிருக்கிறது என்பதை அவர்களே வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். 

இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கும், உச்ச நீதிமன்றத்திற்கும் எதிராக இனவெறி அடிப்படையில் நடந்த கர்நாடக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்ட நடுவண் அமைச்சர்கள் அனந்தகுமார் மற்றும் சதானந்த கவுடா ஆகியோரை, தலைமையமைச்சர் நரேந்திர மோடி உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும். அவ்வாறு பதவி நீக்கம் செய்யவில்லையென்றால், நரேந்திர மோடி தமிழர்களுக்கு எதிரான கன்னட இனவெறியை ஆதரிக்கிறார் என்று பொருளாகும்! 

நடுவண் அரசில் காங்கிரசு இருந்தாலும், பா.ச.க. இருந்தாலும் நீண்ட நெடுங்காலமாக காவிரி வழக்கில் – காவிரித் தீர்ப்பாயம், உச்ச நீதிமன்றம் ஆகியவை வழங்கிய எந்தத் தீர்ப்பையும் இந்திய அரசு செயல்படுத்தவில்லை என்ற துணிச்சலில்தான் கர்நாடகத்தின் கன்னட இனவெறிச் செயல்கள் தீவிரமடைகின்றன. 

காவிரித் தீர்ப்பாயம் வழங்கிய இறுதித் தீர்ப்பை அப்படியே செயல்படுத்தும் வகையில், “காவிரி மேலாண்மை வாரியம்” அமைக்கும் முன்மொழிவைத்தான் நாடாளுமன்றத்தில் நடுவண் அரசு வைத்து, தேவைப்படும் திருத்தங்களை செய்திருக்க வேண்டும் என்பதுதான் “மாநிலங்களுக்கு இடையிலான தண்ணீர்த் தகராறுச் சட்டம் – 1956”இன்படி சட்டத்தேவையாகும். அந்த இறுதித் தீர்ப்பை எதிர்த்து, கர்நாடகம் போட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் அந்த இறுதித் தீர்ப்பின் பகுதிகளை ஏற்றுக் கொண்டு, அத்தீர்ப்புக்குப் பதிலாக புதிய தீர்ப்பை வழங்கியபின் அந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நாடாளுமன்றத்தில் வைக்கக்கூடிய சட்டத்தேவை எதுவுமில்லை! உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நாடாளுமன்றம் விவாதித்துதான் செயல்படுத்த வேண்டும் என்ற சட்டக் கட்டாயம் எப்போதும் இல்லை!

இந்நிலையில், தமிழ்நாடு அரசு, கர்நாடகத்தின் இனவெறிச் செயல்களை எதிர்கொண்டு சட்டப்படியான தமிழ்நாட்டு உரிமையை மீட்பதற்கு என்ன அரசியல் மற்றும் சட்ட நடவடிக்கைகளை எடுக்கப்போகிறது? 

கர்நாடக அனைத்துக் கட்சித் தீர்மானத்திற்கு ஒரு கண்டனத்தைக் கூட தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவிக்கவில்லை! காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதற்கு முன்பாகவும், அதன் செயல்பாடுகள் தொடங்குவதற்கு முன்பாகவும் “வெற்றி விழா” கொண்டாடி, தமிழ்நாட்டு மக்களைத் திசைதிருப்பி வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, இப்பொழுது என்ன செய்யப் போகிறார்? 

கன்னட இனவெறிச் செயல்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், ஒரு வாரம் கர்நாடகத்திற்கு எதிராக தமிழ்நாடு அரசு பொருளாதாரத் தடை விதித்து தமிழ்நாட்டுக்கும் கர்நாடகத்துக்கும் இடையே எந்தவகைப் பொருளாதாரப் போக்குவரத்தும் இல்லாமல் செய்ய வேண்டும்! தமிழ்நாடு அரசு இந்த சனநாயகப் போராட்டத்தை முன்னெடுக்கவில்லை என்றால், முதன்மை எதிர்க்கட்சியான தி.மு.க. அனைத்துக் கட்சிகளையும், அனைத்து உழவர் அமைப்புகளையும், மற்றுமுள்ள அமைப்புகளையும் ஒருங்கிணைத்து கலந்தாய்வு நடத்தி, ஒரு வாரம் கர்நாடகத்திற்கு எதிரான பொருளாதாரத் தடைப் போராட்டத்தை நடத்த முன்வர வேண்டுமென்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன். 

நாளை (02.07.2018), புதுதில்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி சூன் மாதத்திற்குரியத் தண்ணீரையும், சூலை மாதம் முதல் பத்து நாட்களுக்குரியத் தண்ணீரையும் திறந்துவிட ஆணையிட வேண்டும். அவ்வாறு ஆணையிட வில்லை என்றால், இந்திய அரசைக் கண்டித்து ஒரு வார காலத்திற்கு தமிழ்நாட்டில் இந்திய அரசு அலுவலகங்களை மூடும் போராட்டத்தை அனைத்துக் கட்சிகளும் நடத்த வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். 

Labels:


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்