<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d6955529389241309188\x26blogName\x3d%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86.%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://thozharmaniyarasan.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com/\x26vt\x3d-8408640130511538487', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

"பிடல் காஸ்ட்ரோவின் சிந்தனைகள் தமிழ் மக்களுக்கு வழிகாட்டும்! வரலாற்று நாயகன் காஸ்ட்ரோவுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கம் வீரவணக்கம்!" -- பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை!

Sunday, November 27, 2016

=================================================

பிடல் காஸ்ட்ரோவின் சிந்தனைகள் தமிழ் மக்களுக்கு வழிகாட்டும்! வரலாற்று நாயகன் காஸ்ட்ரோவுக்கு 
தமிழ்த்தேசியப் பேரியக்கம் வீரவணக்கம்!
=================================================
பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை!

=================================================
தொண்ணூறு அகவையிலும் துடிப்புமிக்க இளைஞர்களின் சிந்தனைத் தூண்டுணர்ச்சியாய் விளங்கியவர் பிடல் காஸ்ட்ரோ. ஆயுதப்புரட்சியில் வெற்றி கண்டு அரசமைத்தாலும் ஆயுதப்புரட்சியாளர்களுக்கு மட்டுமின்றி, அறவழிப் போராட்டம் நடத்துவோர்க்கும் உந்துவிசை அளித்தவராய் வாழ்ந்தவர் புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோ. அவர் கியூப நேரப்படி 25.11.2016 மாலை காலமானார் என்ற செய்தி உலகெங்கும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கியூபாவின் கம்யூனிஸ்ட் ஆட்சித் தலைவராக விளங்கிய அவரை, கம்யூனிஸ்ட் அல்லாத நாடுகளின் தலைவர்களும் போற்றினர். இறுதிவரை சமூக மாறுதலின் அடையாளச் சின்னமாகவும் புரட்சியின் கலங்கரை விளக்கமாகவும் இளைஞர் நெஞ்சில் வீற்றிருந்தவர் பிடல் காஸ்ட்ரோ.

தென் அமெரிக்க நாடுகளை தனது வேட்டைக் காடாகவும், அந்நாட்டின் ஆட்சியாளர்களை தனது கங்காணிகளாகவும் பயன்படுத்தி வந்த வட அமெரிக்காவின் புதிய காலனி ஆதிக்கத்தின் முகத்தில் குத்தி, அதன் மூக்கை உடைத்தவர்கள் பிடல் காஸ்ட்ரோவும் அவரின் தோழர்களும். வட அமெரிக்கக் கங்காணியாக ஏவல் செய்த கியூபாவின் சர்வாதிகாரி பாடிஸ்ட்டாவின் இராணுவ அரசை வீழ்த்தும் போரில், பிடல் காஸ்ட்ரோவும் சே குவேராவும் இரட்டையராய் இணைந்தனர்.

வட அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூக்குக்கு முன்னால் உள்ள கியூபா, ஒரு சிறு தீவு. இன்றும் அதன் மக்கள் தொகை 1 கோடியே 27 இலட்சம். 1959இல் பிடல் காஸ்ட்ரோவும் சே குவேராவும் தலைமை தாங்கிய புரட்சி வெற்றி பெற்ற போது, கியூபாவின் மக்கள் தொகை இன்னும் குறைவு. ஆனால், உலகத்தை ஆட்டிப் படைக்கும் வட அமெரிக்க வல்லாதிக்கம் தன் மீது வாலாட்டாமல் தடுத்து வைத்தது அந்த கியூபா.

சின்னஞ்சிறு தேசங்களால் ஏகாதிபத்தியங்களை - பெரிய நாடுகளின் ஆதிக்கத்தை எதிர்த்துச் சமாளிக்க முடியாது என்று செயல்படாவாதம் பேசிக் கொண்டிருப்போருக்கு கியூபா தக்க  பாடமாகும்.
சனநாயகம், மனித உரிமை என்றெல்லாம் பீற்றிக் கொள்ளும் வடஅமெரிக்கா பிடல் காஸ்ட்ரோவைக் கொல்ல 638 முறை தனது சி.ஐ.ஏ. உளவுத்துறை மூலமும், கியூபக் கருங்காலிகள் மூலமும் முயன்று தோற்றது.
சோவியத் ஒன்றியம் வீழ்ந்தவுடன் கியூபாவின் கம்யூனிஸ்ட் ஆட்சி முடிவுக்கு வரும் என்று கருதியோர் உண்டு. ஆனால், காஸ்ட்ரோ புயல் தாங்கியாக நின்று கியூப சமத்துவ சமூக அமைப்பைக் காத்தார்.
உலகெங்கும் நடந்த விடுதலைப் போராட்டங்களுக்கும் சனநாயகப் போராட்டங்களுக்கும் கியூபா ஆதரவளித்து வந்தது. பல நாடுகளுக்கு இலவசமாக தனது மருத்துவர்களை அனுப்பி உதவி செய்தது. அமெரிக்காவும் அதன் கூட்டாளி நாடுகளும் கியூபாவுக்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதித்துத் தனிமைப்படுத்தின.

இருந்தும், அவற்றையெல்லாம் எதிர்கொண்டு அந்நாட்டு மக்களுக்கு தொடக்கக் கல்வியிலிருந்து இறுதிக் கல்வி வரை இலவசமாக வழங்கி வருகிறது கம்யூனிச ஆட்சி! அதேபோல், அனைவருக்கும் அனைத்து நிலையிலும் இலவசமாக மருத்துவம் வழங்கி வருகிறது. அமெரிக்க முகாமின் பொருளாதார முற்றுகையால், அதன் இயல்பான வளர்ச்சியும் வளமையும் பாதிக்கப்பட்டிருந்தாலும் தன்மானத்தோடு தன் காலில் நிற்கும் நாடாக இன்றும் கியூபா விளங்குகிறது.
வரலாற்றுச் சாதனை படைத்து நிலைத்துவிட்ட கியூபாவுடன், இப்பொழுது அமெரிக்காவும் உறவு கொண்டுள்ளது. பிடல் காஸ்ட்ரோ காலத்திலேயே தூதரக உறவு ஏற்பட்டது. இந்த வளர்ச்சி மகிழ்ச்சிக்குரியதுதான்!
இவ்வளவு சாதனைகள் இருந்தும், உலகெங்கும் வாழும் தமிழர்களின் நெஞ்சில் முள்ளாகக் குத்தக்கூடிய ஒரு தவறையும் காஸ்ட்ரோவின் கியூபா 2009இல் செய்தது. அதன்பின்னரும் செய்தது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை கியூபா ஆதரிக்கவில்லை. அதன் இந்நிலைபாடு தமிழர்கள் நெஞ்சில் காயமாய் இருந்த வேளையில், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல், கியூப அரசின் இன்னொரு நிலைபாடு இருந்தது. அதுதான், தமிழீழத்தில் சிங்கள அரசு நடத்திய இனப்படுகொலை பற்றியும் விடுதலைப்புலிகள் நிகழ்த்திய “வன்முறை” குறித்தும் இலங்கை அரசே விசாரிக்க ஓர் ஆணையம் அமைக்க வேண்டுமென்று 2009 சூன் மாதம், சுவிட்சர்லாந்து ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் தீர்மானம் முன்மொழிந்தபோது, இந்திய – இலங்கை அரசுடன் சேர்ந்து கியூபா அத்தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தது. அதே கூட்டத்தில், ஈழத்தமிழர்களை அழித்து விடுதலைப்புலிகளைத் தோற்கடித்ததற்காக இலங்கை அரசைப் பாராட்டி இந்தியா கொண்டு வந்த தீர்மானத்தை கியூபா ஆதரித்து வாக்களித்தது.

அடுத்தடுத்து, ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் ஈழத்தில் இலங்கை அரசு நடத்திய இனப்படுகொலை பற்றி விசாரிக்க வேண்டுமென்று வட அமெரிக்கா கொண்டு வந்த கண்துடைப்பானத் தீர்மானங்களைக் கூட கியூபா எதிர்த்து வாக்களித்தது.
பிடல் காஸ்ட்ரோ உயிரோடு இருக்கும்போதே, அவர் வழிகாட்டலில் அவர் தம்பி ரால் காஸ்ட்ரோ நடத்தும் கம்யூனிஸ்ட் ஆட்சி, ஒர் இனப்படுகொலையை ஆதரிக்கிறதே என்ற குமுறல் தமிழர் நெஞ்சமெல்லாம் எழுந்தது. கியூபாவின் அச்செயல், அந்நாட்டிற்கு மட்டுமின்றி வரலாற்று நாயகனாய் விளங்கக்கூடிய காஸ்ட்ரோவுக்கும் நிரந்தரக் கரும்புள்ளியாய் அமைந்து விட்டது!
சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் தன் நாட்டு நலனுக்காக பிறநாட்டு நலனைப் பலியிடும் அதே பாதையில் கியூபாவும் சென்றுவிட்டதே என்ற துயரம் தமிழர் நெஞ்சங்களைக் கவ்வியது. அதற்காக கியூப அரசைக் கண்டித்தோம்.

இது ஒருபக்கம் இருந்தாலும், தமிழினத்தின் அறமும் வரலாற்றுப் பார்வையும் குறுகிய தன்னல நோக்கம் கொண்டவை அல்ல! ஈழ விடுதலைப் போராட்டத்தில் தவறிழைத்ததற்காக பிடல் காஸ்ட்ரோவின் முழு ஈக வரலாற்றையும், புரட்சி வரலாற்றையும் முற்றிலுமாக மறுக்க மாட்டோம்.
கியூபப் புரட்சியின் நாயகன் – ஏகாதிபத்திய எதிர்ப்பு வரலாற்றின் திசைகாட்டி – இன்றைக்கும் இளைஞர்களின் எழுச்சிச் சொல்லாக விளங்கும் பிடல் காஸ்ட்ரோ அவர்களுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கம் வீரவணக்கம் செலுத்துகிறது!
பிடல் காஸ்ட்ரோவின் சிந்தனைகள் தமிழ்நாட்டில் தமிழ்த்தேசிய வழிகாட்டலுக்குப் பயன்படும். “ஒரு புரட்சியாளன் தனது இலட்சியத்தை ஒளிவு மறைவின்றி தனது பகைவனுக்கும் நண்பர்களுக்கும் தெரிவிக்க வேண்டும்” என்றார் காஸ்ட்ரோ. “தற்காத்துக் கொள்வதற்காக பகைவனிடம் தனது இலட்சியத்தை நேரடியாக வெளிப்படுத்தாமல் சுற்றி வளைத்துச் சொல்வதோ அல்லது மறைத்துப் பேசுவதோ சந்தர்ப்பவாதத்தின் தொடக்கம்” என்றார் காஸ்ட்ரோ. தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு இது எச்சரிக்கை தரும் மிகச்சிறந்த வழிகாட்டு நெறியாகும்.
தன் இலட்சியத்தை ஒளிவு மறைவின்றி சொல்வதன் மூலம் பகைவனின் தாக்குதலை எதிர் கொள்ள புரட்சியாளர்கள் அணியமாக இருக்க வேண்டும். ஆயுதப் புரட்சி நடத்துவோர் ஆயுத வழியில் எதிர் கொள்ள வேண்டும். தமிழ்த்தேசியப் பேரியக்கம் போல், அறவழிப் போராட்டம் நடத்துவோர் சிறைக்குச் செல்லவும் தூக்கு மேடை ஏறவும் அணியமாக இருக்க வேண்டும். 
“நிலவுகின்ற அரசின் எதேச்சாதிகாரத்தின் மீது சீற்றமும், நிலவுகின்ற அரசியல் அநீதிகள் மீது  வெறுப்பும் இளைஞர்கள் நெஞ்சில் கனலாக எரிந்தால், அவர்களுக்கு ஒவ்வொரு விடியற்காலமும் சேவல் கூவுகின்ற ஓசை புரட்சிக்கான அழைப்போசையாகவே கேட்கும்” என்றார் பிடல் காஸ்ட்ரோ.

இவ்வாறான காஸ்ட்ரோவின் விழிப்புணர்ச்சிச் சிந்தனைகள் தமிழ் இளைஞர்களுக்கு வழி காட்டட்டும்!

Labels:

“நெற்பயிர்கள் காய்ந்து சருகாகிவிட்டன! ஏக்கருக்கு 25,000 ரூபாய் இழப்பீடு தர வேண்டும்” -- காவிரி உரிமை மீட்புக் குழு நெல் வயல்களை நேரில் பார்வையிட்டுக் கோரிக்கை!

Friday, November 25, 2016
==============================================
“நெற்பயிர்கள் காய்ந்து சருகாகிவிட்டன!
ஏக்கருக்கு 25,000 ரூபாய் இழப்பீடு தர வேண்டும்”
==============================================
காவிரி உரிமை மீட்புக் குழு நெல் வயல்களை
நேரில் பார்வையிட்டுக் கோரிக்கை!
==============================================
காவிரி நீர் மறுக்கப்பட்டதால், தஞ்சை மாவட்டத்தில் காய்ந்து கருகியுள்ள சம்பாப் பாசன நிலங்களை, காவிரி உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் தலைமையில், காவிரி உரிமை மீட்புக் குழுவினர் இன்று (25.11.2016) காலை குழுவாகச் சென்று நேரில் பார்வையிட்டனர்.

தமிழர் தேசிய முன்னணிப் பொதுச் செயலாளர் திரு. ஐயனாபுரம் சி. முருகேசன், தமிழக விவசாயிகள் சங்கத் தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. த. மணிமொழியன், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி நிறுவனத் தலைவர் திரு. குடந்தை அரசன், மனித நேய மக்கள் கட்சி வணிகப் பிரிவு தமிழகச் செயலாளர் திரு. ஜெ. கலந்தர், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ. பால்ராசு, இந்திய சனநாயகக் கட்சித் தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. சிமியோன் சேவியர்ராஜ், மனித நேய சனநாயகக் கட்சி மாவட்டச் செயலாளர் திரு. அகமது கபீர் ஆகியோர் அக்குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

முதலில், தஞ்சை மாவட்டம் – பாபநாசம் வட்டம் – ரா.ரா. முத்திரக்கோட்டையில், நடவு நட்டு 40 நாள் – 50 நாள் கடந்த நெற்பயிர்களை இக்குழுவினர் பார்வையிட்டனர். உள்ளூர் உழவர்கள் திரளாக வந்து, காவிரித் தண்ணீர் வராததாலும் பருவமழைப் பொய்த்துப் போனதாலும் காய்ந்து கிடக்கும் நெற்பயிர்களைப் பாருங்கள், அரசிடம் கோரிக்கை வைத்து நிவாரணமாவது பெற்றுத் தாருங்கள் என துயரத்தோடு கூறினர். குறிப்பாக, உழவர்கள் பாலசுப்பிரமணியன், இரமேசு ஆகியோர் வயல்களில் சருகாகிக் காய்ந்து கொண்டிருந்த நெற்பயிர்களைப் பிடிங்கிக் கூட வந்திருந்த செய்தியாளர்களிடம் அவர்கள் காட்டினர்.

பிறகு, அங்கிருந்து புறப்பட்டு தஞ்சை வட்டம் இரெட்டிப்பாளையம், வண்ணாரப்பேட்டை வழியாக நெற்பயிர் காய்ந்து சருகான வயல்களைப் பார்த்தனர். அங்கிருந்து கல்விராயன்பேட்டை சென்றனர்.

அங்கு நடவு நட்டு நாற்பது நாள் ஆன வயல்களில், பாளம் பாளமாக வயல் வெடித்துக் கிடந்ததையும் நெற்பயிர்கள் சருகாகிக் கொண்டிருந்ததையும் குழுவினர் பார்த்தனர். இனிமேல் மழைப் பெய்தால்கூட இந்த நெற்பயிர்கள் தேறாது என்பதனால், அந்த நடவு நட்ட வயல்களிலும் - நடவு செய்வதற்காக நாற்றங்காலில் காய்ந்து சருகாகிக் கொண்டிருந்த வயல்களிலும் மாடுகளைவிட்டு மேய்த்துக் கொண்டிருந்தார்கள். பார்வையிடவந்தோர் அவற்றைப் பார்த்தனர். செய்தியாளர்கள் படம் பிடித்தனர்.

அதன்பிறகு, அந்த ஊர் மக்கள் திரண்டு தங்கள் துயரங்களை சொல்வதற்காகக் கூடியிருந்த இடத்திற்கு பார்வையாளர் குழுவினர் சென்றனர். அங்கிருந்த உழவர்கள் ஆண்களும், பெண்களும், இனி எங்கள் எதிர்காலம் என்னாவதென்றே தெரியவில்லை, இனிமேல் இந்த நெற்பயிரைப் பாதுகாக்கவோ காப்பாற்றவோ முடியாது, நடவு நட்டு காய்ந்து சருகாகிப் போன வயல்கள் ஒரு பக்கம். இன்னொரு பக்கம், நாற்றங்காலில் நாற்றுவிட்டு நடவுக்கு சேரடித்து தண்ணீரில்லாமல் காய்ந்து போன வயல்கள் இருக்கின்றன. எனவே அரசாங்கம் எங்களுக்கு இழப்பீடு வழங்கினால்தான் குடும்பம் நடத்த முடியும், இல்லையென்றால் உயிரை மடித்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று கண்ணீரும் கம்பலையுமாக அவர்கள்  தெரிவித்தனர்.

இரண்டு இடங்களிலும் செய்தியாளர்களைச் சந்தித்த, குழுவின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் பின்வருமாறு தெரிவித்தார் :
“தமிழ்நாடு அரசு மேட்டூர் அணையைத் திறந்து சம்பா சாகுபடியைச் செய்யுங்கள் என அறிவுறுத்தியதை நம்பிதான், காவிரி டெல்டா மாவட்ட உழவர்கள் சம்பா சாகுபடியைத் தொடங்கினர்.

கர்நாடக அரசும் இந்திய அரசும் கூட்டுச் சேர்ந்து கொண்டு தமிழ்நாட்டிற்குரிய காவிரித் தண்ணீரை - உச்ச நீதிமன்றம் கட்டளையிட்டும் திறந்துவிடாமல் பழிவாங்கி விட்டனர். இந்த நிலையில், பருவமழையும் பொய்த்துவிட்டது. நெற்பயிர்கள் நீரின்றி காய்ந்து சருகாகிக் கிடக்கின்றன.

தமிழ்நாடு அரசு இதுபற்றி இதுவரை எந்த ஆறுதல் வார்த்தையும் விவசாய மக்களுக்குக் கூறவில்லை. தமிழ்நாடு வேளாண்மைத்துறை அமைச்சர் தஞ்சை மாவட்டத்தில் இருக்கிறார். உணவுத்துறை அமைச்சர் திருவாரூர் மாவட்டத்தில் இருக்கிறார். இவர்கள் இருவரும் காவிரி டெல்டாவில் காவிரி நீர் இல்லாமலும், பருவமழைப் பொய்த்தும் பாதிக்கப்பட்ட நிலங்களை – மக்களை நேரில் பார்த்து ஆய்வு செய்யவில்லை; ஆறுதல் கூறவில்லை.

காவிரி டெல்டாவில் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் மட்டும் இதுவரை வேளாண்மை பொய்த்துப் போனதால் 12 உழவர்கள் இறந்துள்ளனர். வேளாண் நிலங்களிலேயே சிலர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கிறார்கள். மற்றும் சிலர் நெற்பயிருக்கு அடிக்கப்படும் பூச்சி மருந்தை உட்கொண்டு உயிர் விட்டிருக்கிறார்கள்.

இவ்வளவு கொடிய துயரம் ஏற்பட்டுக் கொண்டிருக்கும்போது, டெல்டா மாவட்ட அமைச்சர்கள்கூட அக்குடும்பங்களைச் சந்தித்து ஆறுதல் சொல்லவில்லை. அந்த நிலங்களைப் பார்வையிடவில்லை.
எனவே, உடனடியாக டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும். தமிழ்நாட்டில் இவ்வாண்டு முற்றிலுமாகப் பருவமழைப் பொய்த்துவிட்டதால், தமிழ்நாடு முழுவதையும் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலமாக தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும். வறட்சி துயர் துடைப்புப் பணிகளுக்காக இந்திய அரசிடமிருந்து சிறப்பு நிதி கோரிப் பெற வேண்டும்.

கடந்த 2014 - 2015ஆம் ஆண்டுக்கு கர்நாடக அரசு, தன்னை வறட்சி மாநிலமாக அறிவித்துக் கொண்டு இந்திய அரசிடம் 2,400 கோடி ரூபாய் பெற்றது. அதுபோல், தமிழ்நாடு அரசும் அறிவித்து இந்திய அரசிடம் கூடுதல் நிதி பெற்று, டெல்டா மாவட்டங்களின் உழவர்களுக்கு குறைந்தபட்ச நிவாரணமாவது அளிக்க முன்வர வேண்டும்.      
    
உழவர்களுக்கு சாகுபடி செய்து இழப்பு ஏற்பட்ட நிலங்களுக்கு ஒரு ஏக்கருக்கு 25,000 ரூபாய் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும். சாகுபடி செய்ய தயாராக இருந்தும், காவிரித் தண்ணீர் இல்லாததால் தரிசாகப் போடப்பட்டுள்ள நிலங்களுக்கு, ஒரு ஏக்கருக்கு 15,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.
வருவாய்த்துறை அடங்கல் புத்தகத்தில், கிராம நிர்வாக அதிகாரிகள் சாகுபடிக் கணக்கு எழுதும்போது, கடந்த ஆண்டு சாகுபடி செய்ததைக் கணக்கில் கொண்டு, இவ்வாண்டு தரிசு நிலத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும். சில கிராமங்களில் சாகுபடிக் கணக்கு, இன்னும் எழுதவேத் தொடங்கவில்லை. உடனடியாக அங்கெல்லாம் சாகுபடிக் கணக்கு எழுதும் பணிகளைத் தொடங்க வேண்டும்.

தொழிற்சாலைகளில் கதவடைப்பு ஏற்பட்டால், தொழிலாளர்களக்கு லேஆப் சம்பளம் தருவதுபோல், காவிரி டெல்டா மாவட்ட விவசாயத் தொழிலாளர்களுக்கு ஒரு குடும்பத்திற்கு ரூபாய் 25,000 இழப்பீடு வழங்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு தொடர்ந்து அலட்சியம் காட்டினால், பல்லாயிரக்கணக்கில் இலட்சக்கணக்கில் விவசாயிகள் வீதிக்கு வந்து நீதி கேட்டுப் போராடுவோம்! யாரும் மனமுடைந்து தற்கொலை முயற்சிகளில் ஈடுபடக் கூடாது! நாம் வாழப் பிறந்தவர்கள். வாழ்வதற்காகப் போராடுவோம்!
நிலவுகின்ற அவல நிலையின் தீவிரத்தைப் புரிந்து கொண்டு, இழப்பீடு வழங்கவும் துயர் துடைப்புப் பணிகளை உடனடியாகச் செய்யவும், உழவர்கள் வாங்கியுள்ள கூட்டுறவுக் கடன், இந்திய அரசு வங்கிக் கடன் உள்ளிட்ட அனைத்துக் கடன்களையும் தள்ளுபடி செய்யவும் நடுவண் – மாநில அரசுகள் முன் வர வேண்டும்”.

இவ்வாறு தோழர் பெ. மணியரசன் கூறினார்.

Labels: , ,

"இரசியப்புரட்சி - 100: வென்ற புரட்சி வீழ்ந்ததேன்?" -- தோழர் பெ. மணியரசன் - சிறப்புக் கட்டுரை!

Friday, November 18, 2016
=============================================
இரசியப்புரட்சி - 100: வென்ற புரட்சி வீழ்ந்ததேன்?
=============================================
தோழர் பெ. மணியரசன் - சிறப்புக் கட்டுரை!
=============================================
மனித குல வரலாற்றில் இரசியப் புரட்சியை உலகம் கொண்டாடியதைப் போல் வேறெந்தப் புரட்சியையும் கொண்டாடியதில்லை. அதுவரை நடந்த புரட்சிகளில் மக்கள் அனைவர்க்குமான புரட்சியாக வெற்றி அடைந்தது இரசியப் புரட்சி மட்டுமே! 1917 நவம்பர் 7-இல் வெற்றியடைந்த அப்புரட்சிக்கு அகவை 99 முடிந்து நூறாவது ஆண்டு தொடங்கியுள்ளது.

இன்றும் உலகெங்கும் மதிப்புடனும் மகிழ்ச்சியுடனும் நினைவு கூரப்படும் அந்த இரசியப் புரட்சி அது அரங்கேறிய நாட்டில் உரியவாறு போற்றப்பட வில்லை. இரசியாவில் அரசு விழாவாக கொண்டாடப்படவில்லை. சிறிய எதிர்க்கட்சியாகிவிட்ட கம்யூனிஸ்ட் கட்சி கொண்டாடும் நிகழ்வாக அங்கு சுருங்கி விட்டது.

எந்திரக் கண்டுபிடிப்புகளும் அவற்றின் உரிமையில் தனிநபர் ஏகபோகமும் வளர்ந்து முதலாளிய ஆதிக்க சமூகங்கள் உருவானபின் -_ உள்நாட்டு மக்களை மட்டு மின்றி - வெளிநாடுகளைச் சுரண்டும் காலனிய ஆதிக்கங்கள் வளர்ந்தபின் _- மனிதனை மனிதன் அடிமைப் படுத்தாதே, மனிதனை மனிதன் சுரண்டாதே என்ற மார்க்சிய _- லெனினியக் கருத்தியல் எழுந்தது. அதன்முதல் செயல்வடிவம் இரசியப் புரட்சி!

“அவரவர் ஆற்றலுக்கேற்ற உழைப்பு, அவரவர் உழைப்புக்கேற்ற பலன்” என்ற மனித சமத்துவ நீதி சமூக சட்டமாகியது! அதன் பெயர் நிகரமை (சோசலிசம்)!

“குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு
மேன்மையுறக் குடிமை நீதி
கடியொன்றில் எழுந்ததுபார்; குடியரசென்று
உலகறியக் கூறி விட்டார்;
அடிமைக்குத் தளையில்லை யாருமிப்போது
அடிமையில்லை அறிக என்றார்”

என்று இரசியப்புரட்சியின் பயன்பாட்டை 1917-லேயே பாடினார் பாரதியார். “ஆகாவென்று எழுந்ததுபார் யுகப்புரட்சி” என்று பாடி தமிழ் இலக்கியத்தில் ‘புரட்சி’ என்ற சொல்லை முதல் முதலாகச் சேர்த்தார் பாரதியார்.

வறுமை இல்லை; ஆதிக்க மனிதர்கள் இல்லை; வேலையில்லை என்று யாருமில்லை; விலைவாசி உயர்வில்லை; கல்வி, மருத்துவம் போன்றவற்றிற்குக் கடைசி நிலை வரை கட்டணமில்லை; மலிவான பயணக் கட்டணம் - இப்படி எத்தனையோ சாதனைகள் சோவியத் ஒன்றியத்தில்!

இரசியப் புரட்சிக்கு முன்னும் புரட்சிக்குப் பின்னும் அங்கு கிளர்ந்தெழுந்த மக்கள் கலைகளும் இலக்கியங்களும் முன்னத்தி ஏர் ஓட்டும் படைப் பாளிகளை உலகிற்கே அடையாளம் காட்டின!
மண்ணளாவிய சாதனைகள் மட்டுமின்றி விண்ணளாவிய சாதனையாக 1957-இல் முதல் முதலாக ஸ்புட்னிக் என்ற செயற்கைக் கோள் ஏவியது சோவியத் ஒன்றியம்!

உலகை நடுங்க வைத்த இட்லரின் ஆக்கிரமிப்புப் படைகளை நடுங்க வைத்து ஓட ஓட விரட்டியது சோவியத் படை!

கிழக்கு ஐரோப்பாவில் கம்யூனிஸ்ட் ஆட்சிகள்; சீனப்புரட்சி வெற்றி, கியூபப் புரட்சி வெற்றி, வியட்நாம் வெற்றி என இரசியப் புரட்சியின் வெற்றி விரி வடைந்தது. உலக நிகரமை முகாம் உருவானது.

சோவியத் ஒன்றியம் - சீனா இடையே 1960களில் ஏற்பட்ட பிளவு, சோவியத் முகாம் _- சீன முகாம் என்று பிரிவினையை ஏற்படுத்தியது.

பொதுவுடைமை முகாம் சரிவிற்கு முதல் வித்திட்டது சோவியத் - சீனப் பிளவு! இரு நாடுகளும் -இரு பொதுவுடைமைக் கட்சிகளும் கடும் பகைமையுடன் எல்லா முனையிலும் மோதிக் கொண்டன.

பட்டாளி வர்க்க சர்வதேசியம் என்று மற்ற நாட்டினர்க்குப் பாடம் நடத்திய இவ்விருநாட்டுத் தலைமைகளும் தங்கள் நாட்டு நலன் - தேசிய நலன் - அரசியல் தலைமை என்ற அடிப்படையில் பிளவு பட்டன. இம்முரண்பாட்டில் நடைமுறைக் கோட்பாட்டுச் சிக்கல்கள் சில இருந்தன. ஆனால், இது தத்துவப் போர் போல் மிகைப்படுத்திக் காட்டப்பட்டது.

பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தைச் சொந்த தேசிய நலனுக்கு உட்படுத்தியே சோவியத் ஒன்றிய - சீனப் பொதுவுடைமைக் கட்சிகளும், அரசுகளும் செயல்பட்டன. உலகம் சுற்றுவதைவிட இந்தியாவின் பட்டறிவை வைத்தே நாம் இதுபற்றி அறிய முடியும்.

சோவியத் ஒன்றியத்தை இந்திய அரசு பன்னாட்டு அரங்கிலும் உள் நாட்டரங்கிலும் ஆதரிக்க வேண்டும் என்பது அந்நாட்டுப் பொதுவுடைமைக் கட்சியின் அரச உத்தி! இதற்காக இந்தியப் பொதுவுடைமைக் கட்சி இந்திய அரசை ஆதரிக்க வேண்டும் என்று சோவியத் கட்சி திட்டம் தந்தது. இந்தியத்தேசியக் காங்கிரசுக் கட்சி முற்போக்காளர்களையும் தேசிய முதலாளிய ஆற்றல்களையும் அதிகமாகக் கொண்ட கட்சி என்று வர்க்க முற்போக்கு முத்திரை குத்தியது சோவியத் கம்யூனிஸ்ட்டுக் கட்சி!

நெருக்கடி நிலைச் செயல்பாட்டுக் காலத்தில் (1975 - 1977), சோவியத் ஒன்றியத்தின் தன்னலச் சர்வதேசியம் பளிச்சென்று தெரிந்தது.

பேச்சுரிமை, எழுத்துரிமை, கூட்டம் கூடும் உரிமை, தொழிற்சங்க உரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகளைத் தடை செய்து நெருக்கடி நிலையை அன்றையத் தலைமை அமைச்சர் இந்திராகாந்தி கொண்டு வந்தார்.

உச்ச நீதிமன்றத்தில் நெருக்கடி நிலை பற்றி நடந்த வழக்கில், அன்றைய இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் நிரேன் டே, “உயிர் வாழும் உரிமையும் (அரசமைப்புச் சட்ட உறுப்பு 21) நெருக்கடி நிலை காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது” என்று வாதாடினார்.

இந்தியா முழுவதும் பல்லாயிரக்கணக்கில் தலைவர்களும் தொண்டர்களும் இடதுசாரிகள், வலது சாரிகள் என அனைத்து வகையினரும் இரவோடிரவாகத் தளைப்படுத்தப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டனர்.

இந்த நெருக்கடி நிலைச் சாற்றலை (பிரகடனத்தை) மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சி எதிர்த்தது; அதன் தலைவர்கள், தொண்டர்கள் பலர் சிறையில் அடைக்கப்பட்டனர்; பலர் தலைமறைவாகப் பணியாற்றினர்; ஆனால் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி நெருக்கடி நிலையை வரவேற்று, அதை முற்போக்கு நடவடிக்கை என்று வர்ணித்தது. தொழிலாளர் போனசு உரிமை பறிக்கப்பட்டதைக் கூட ஏற்றுக் கொண்டது அக்கட்சி!

ஏனெனில் சோவியத் பொதுவுடைமைக் கட்சி இந்தியத்தேசியக் காங்கிரசை - இந்திரா காந்தி தலைமையை ஆதரிக்கும்படி இந்தியப் பொதுவு டைமைக் கட்சிக்கு வழிகாட்டியது. சோவியத் கட்சியின் இந்தியக் கிளையாகவே சி.பி.ஐ. செயல்பட்டு வந்தது.

நெருக்கடி நிலைச் சாற்றல் செயலில் இருந்தபோது சோவியத் ஆட்சித் தலைவரும் கட்சித் தலைவருமான பிரஷ்னேவ் தில்லி வந்திருந்தார். அவரைச் சந்தித்த சோசலிசக் கட்சித் தலைவர் மதுலிமாயி, “நீங்கள் இந்திய நெருக்கடி நிலைச் சாற்றலை ஆதரிப்பது சரியில்லையே” என்றார். அதற்கு பிரஷ்னேவ், “இந்திய தேசியக் காங்கிரசு என்பது ஐரோப்பாவில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு முந்திச் செயல்பட்ட இடதுசாரிக் கட்சியான சமூக சனநாயகக் கட்சி போன்றது. இந்தியாவில் எதிர்க்கட்சியே தேவையில்லை. நெருக்கடி நிலை - பிற்போக்கு ஆற்றல்களை எதிர்த்துப் பிறப்பிக்கப்பட்ட முற்போக்கு நடவடிக்கை” என்றார்.

பிரஷ்னேவைச் சந்தித்தபின் செய்தியாளர்களைச் சந்தித்த மதுலிமாயி மேற்கண்ட செய்தியைச் சொன்னார். அது அப்போது ஏடுகளில் வந்தது. சோவியத் ஒன்றியத்தின் சவலைப் பிள்ளையாகத்தான் கடைசி வரை இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சி இருந்தது.

சீனப் பொதுவுடைமைக் கட்சியின் - அதன் ஆட்சியின் பாட்டாளி வர்க்க சர்வதேசியம் எப்படி இருந்தது?

இந்தியத் தலைமை அமைச்சர் பண்டித நேருவை 1950களில் பாராட்டிக் கொண்டிருந்தது சீனக்கட்சி. 1955 ஏப்ரல் 18 - 24 நாட்களில் சீனாவும் இந்தியாவும் சேர்ந்து இந்தோனேசியாவில் பாண்டுங் நகரத்தில் மாநாடு நடத்தி - ஐம்பெரும் நட்புறவுக் கொள்கை (பஞ்ச சீலம்) வகுத்தன.

1960 ஏப்ரலில் சீனத் தலைமை அமைச்சர் சூஎன்லாய் இந்தியா வந்தார். பண்டிதரும் சூஎன்லாயும் ஒரே ஊர்தியில் பவனி வந்தனர். அப்போது “இந்தியரும் சீனரும் உடன்பிறப்பு – உடன்பிறப்பு” (இந்தி - சீனி பாயி பாயி) என்று இருவரும் முழக்கம் கொடுத்தனர்.

ஆனால் 1962 அக்டோபரில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லைப் போர் மூண்டபின் -அதை அடுத்த ஆண்டுகளில் இந்தியத்தேசியக் காங்கிரசுத் தலைமை - இந்திய ஆளும் வர்க்கம ஆகியவை பற்றிப் புதிய வர்க்க நிர்ணயிப்பை மாவோ தலைமையிலான சீனக் கட்சி வெளியிட்டது.

காங்கிரசுக் கட்சி தரகு முதலாளியக் கட்சி - இந்திய ஆளும் வர்க்கம் தரகு முதலாளிய வர்க்கம், இந்திய மக்கள் புரட்சியின் முன் மாலைப் பொழுதில் இருக்கிறார்கள், இந்தியப் புரட்சியை இந்தியப் பொதுவுடைமையாளர்கள் தொடங்க வேண்டும் என்றது.

ஆனால் பாக்கித்தான் ஆளும் வர்க்கத்தைத் தரகு முதலாளி வர்க்கம் என்று சீனக்கட்சி வரையறுக்க வில்லை. இந்திய ஆளும் வர்க்கம் தரகு முதலாளி வர்க்கமாக இருக்கும்போது, இந்தியாவிலிருந்து பிரிந்த - ஒப்பீட்டளவில் சிறிய பாக்கித்தானின் ஆளும் வர்க்கம் தரகு முதலாளி வர்க்கமாக இருக்காதா?

1962லிருந்து இன்று வரை பாக்கித்தான் சீனாவின் நட்பு நாடு என்று சொல்வதைவிட உடன்பிறப்பு நாடாகவே இருந்து வருகிறது. ஏன்? இந்தியாவை எதிர்க்கப் பாக்கித்தான்தான் பயன்படும்!

தனது மேலாதிக்கத்திற்குக் கீழ்ப்படியாத செக்கோஸ்லோவாக்கியா - கம்யூனிஸ்ட் ஆட்சியின் தலைவர் அலெக்சாண்டர் துப்செக்கை நீக்கிவிட்டு அங்கு தனக்குக் கையடக்கமான ஆட்சியை சோவியத் படை அமர்த்தியது. இதுவும் பாட்டாளி வர்க்க சர்வ தேசியத்தின் பெயரால்தான் நடந்தது. இதற்காக அந்நாட்டில் சோவியத் கூட்டணிப் படைகள் நடத்திய குருதி வேட்டைக் கொடுமையானது.

தென்னமெரிக்க நாடான சிலியில் தேர்தல் மூலம் மார்க்சியத் தலைவர் அலெண்டே குடியரசுத் தலைவர் ஆனார். அவர் வட அமெரிக்க ஏகபோக நிறுவனங்கள் பலவற்றை அரசுடைமையாக்கினார். வட அமெரிக்கச் சார்பாளராக இருக்க மறுத்தார். அமெரிக்க சி.ஐ.ஏ. சிலியின் படைத்தளபதி பினோசே என்பவருடன் கூட்டுச் சதி செய்து, அலெண்டேயை சுட்டுக் கொன்று ஆட்சியை பினோசெயிடம் ஒப்படைத்தது (1973).

பினோசே மார்க்சியவாதிகளையும், முன்னாள் அமைச்சர்களையும் தொழிற்சங்கத் தலைவர்களையும், மனித உரிமை அமைப்பினரையும், மக்களையும் பல்லாயிரக்கணக்கில் சுட்டுக் கொன்றான். பின்னாளில் அதற்காகப் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் தண்டிக்கப் பட்டான். அந்தப் பினோசே ஆட்சிக்கு ஏற்பிசைவு வழங்கி ஆதரித்து வந்தது சீன ஆட்சியும் சீனப் பொதுவுடைமைக் கட்சியும்! அப்போதும் மாசேதுங் அவர்கள்தான் சீனக்கட்சியின் தலைவர்!

சோவியத் கட்சியும், சீனக்கட்சியும் தன்தன் நாட்டு நலனுக்கேற்ப பெரியண்ணன் வேலை செய்து மற்ற நாட்டு உரிமைகளை, நலன்களைப் பலியிடத் தயங்கவில்லை. எனவே சோவியத் ஒன்றியம் சீனாவும் கடும் பகை நாடுகளாயின! சோவியத் ஒன்றியமும் சமூக ஏகாதிபத்திய நாடு என்றது சீனக்கட்சி!- அத்தோடு நிற்கவில்லை. உலக மக்களின் முதல் எதிரி சமூக ஏகாதிபத்திய சோவியத் நாடுதான் என்றது சீனா! அமெரிக்க முதலாளிய ஏகாதிபத்தியம் இரண்டாவது உலக எதிரி என்றது. மற்ற நாடுகள் மூன்றாவது வகை நாடுகள் என்றது. இதுவே 1970களில் -மாவோவின் சீனா வைத்த மூன்றுலகக் கோட்பாடு என்று விரிந்தது. இந்த மூன்றுலகக் கோட்பாடு எவ்வளவு பிழையானது என்பது சோவியத் வீழ்ச்சியின் போது மெய்ப்பிக்கப்பட்டது.

சோவியத் ஒன்றியத்தில் கம்யூனிஸ்ட்டு ஆட்சி 1991-இல் முடிவுக்கு வந்தது. சீனத்தில் இப்போது கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெயரில் முதலாளியக் கட்சி ஆட்சியில் இருந்து வருகிறது.

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற பொதுவுடைமைக் கட்சியின் ஒற்றை மேலாண்மை ஆட்சி அங்கு முதலாளியம் திரும்புவதைத் தடுக்க முடியவில்லை. சிவப்பு வண்ணத்தை வைத்துக் கொண்டே முதலாளியத்திற்கும் சீரழிந்தனர். சீனர்களில் பெரும்பெரும் முதலாளிகள் உருவாகியுள்ளனர். சீனக் கம்யூனிஸ்ட்டுக் கட்சித் தலைவர்களே முதலாளிகளாக உள்ளனர். அமெரிக்கா உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் சீனத்தில் மிகவும் இலாபத்தோடு இயங்குகின்றன.

பாட்டாளி வர்க்க சர்வதேசியம் உயரியக் கொள்கைதான் - அதை இப்போது செயல்படுத்த முடியாது என்பதைத்தான் நாம் கற்றுக் கொள்ள வேண்டும். அவரவர் தேசியத்திலும் சமத்துவக் கொள்கைகள் - அந்தந்த தேசத்திற்குரிய வழியில் உருவாகி, அரசுக் கொள்கையாகச் செயல்பட்டுப் பக்குவப்படும்போது, சமூக அறத்தின் பாற்பட்டு சர்வதேசியம் உருவாக வாய்ப்பு ஏற்படும்! அதற்கு நெடுங்காலம் தேவைப்படக் கூடும்.

அடுத்து பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்! நாடாளுமன்ற சனநாயகத்தையே பார்த்தறியாத இரசிய மக்களிடமும், சீன மக்களிடமும் கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வாதிகாரம் - பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற பெயரில் செயல்படுத்தப்பட்டது. அங்கு அது எடு பட்டது. ஆனால் முதலாளிய நாடாளுமன்ற சனநாயகத்தில் வாழ்ந்து பழகிய மக்கள் ஒரு கட்சிச் சர்வாதிகாரத்தை ஏற்க மாட்டார்கள்.

அடுத்து, மிக முகாமையான இன்னொன்று, சோவியத் ஒன்றியத்தில் பாட்டாளி வர்க்க சர்வாதி காரக் கோட்பாட்டைப் பயன்படுத்தி ஆட்சி செய்த ஒற்றைக் கம்யூனிஸ்ட் கட்சியில் ஊழல் பெருச்சாளிகள் அதிகாரவர்க்க எதேச்சாதிகாரிகள் உருவாயினர். அவர்களை எதிர்த்து மக்கள் போராட உரிமையில்லை. போராடினால் புரட்சித் துரோகிகள், கம்யூனிஸ்ட் துரோகிகள் - மக்கள் பகைவர்கள் - அமெரிக்கக் கையாட்கள் என்று பட்டம் சூட்டிச் சிறையில் அடைப்பார்கள் அல்லது தீர்த்துக் கட்டுவார்கள்.

சீனாவில் இப்பொழுது நடப்பது - அதிகார வர்க்கத்தின் எதேச்சாதிகார ஆட்சிதான்! ஊழல் பெருச்சாளிகளின் புகலிடமாகவே சீனக் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளது. உலகிலேயே உரிமை பறிக்கப்பட்ட பாட்டாளிகளில் முதல் வரிசையில் இன்றைய சீனப்பாட்டாளிகள் விளங்குகிறார்கள்.

சோவியத் ஒன்றியத்தில் பிற்காலத்தில் வறுமை அதிகரித்து, உணவுப் பங்கீட்டு நிலையங்களில் மணிக் கணக்கில் வரிசையில் நிற்கும் அவலம் ஏற்பட்டது.

எனவே பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற ஒற்றை அதிகார மைய - ஒற்றைக் கட்சி ஆட்சியினால், மக்கள் கம்யூனிஸ்ட் கட்சியின் மீது வெறுப்புக் கொள்ள வாய்ப்பாயிற்று! அச்சூழ்நிலையை வட அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, சோவியத் ஒன்றியத்தில் கம்யூனிஸ்ட் ஆட்சியை வீழ்த்த உத்தி வகுத்தன.

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரக் கோட்பாட்டைக் கைவிடுவது பற்றி இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சிகள் விவாதிக்கின்றனவா என்று தெரியவில்லை; ஆனால் அதைக் கைவிட்டதாக அவை அறிவிக்கவில்லை.

மூன்றாவதாக, சோவியத் ஒன்றியம் பல்தேசிய நாடு என்றும் அதில் உள்ள குடியரசுகள் பிரிந்து போக உரிமை உண்டு என்றும், அந்நாட்டின் அரசமைப்புச் சட்டம் கூறியது. இரசிய மொழி சோவியத் ஒன்றியத்தின் ஒற்றை ஆட்சிமொழி என்று அந்நாட்டின் அரசமைப்புச் சட்டம் கூறவில்லை.

ஆனால், சோவியத் ஒன்றியத்தில் இரசிய தேசிய இனமேலாதிக்கம் செயல்பட்டது. இரசிய மொழி சோவியத் ஒன்றியம் முழுமைக்குமான ஒற்றைப் பொது மொழியாக - ஆட்சி மொழியாகத் திணிக்கப்பட்டது. கோர்பச்சேவ் ஆட்சிக் காலத்தில் இராணுவக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு கருத்துரிமை (கிளாஸ் நாஸ்த்) வழங்கப்பட்டவுடன், அடக்கி வைத்திருந்த தேசிய இன உணர்வுகள், அடையாளங்கள் வெளிப்பட்டு, 14 நாடுகள் இரசியாவிலிருந்து பிரிந்தன. இரசியாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியும் நீக்கப்பட்டது.

இன்றுவரை சீனம் - திபெத் தேசிய இனத்தையும், உய்கூர் தேசிய இனத்தையும் படைகொண்டு ஒடுக்கியே தன்னுடன் பிணைத்து வைத்துள்ளது. பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமையை லெனின் வலியுறுத்தினார் என்பதெல்லாம் பிற்காலத்தில் சோவியத் ஒன்றியத்திலும் -செயல்படவில்லை. தொடக் கத்தில் இருந்தே சீனத்திலும் செயல்படவில்லை.

சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கு மேற்கண்டவை மட்டுமின்றி, பொருளியல் காரணங்களும் இருக் கின்றன. சந்தையைக் கணக்கில் எடுத்து, பொருள் விலையைத் தீர்மானித்தல், வரம்பற்ற மானியங்கள் குறித்த மறு ஆய்வு, அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்குப் போட்டியாக மிகையான படைத்துறைச் செலவு, விண்வெளி ஆய்வுச் செலவு, நட்பு நாடுகளுக்கு நிதி உதவி போன்ற பல காரணங்கள் - படிப்பினைகளாக உள்ளன.

அந்தந்த மட்டத்தில் உழைக்கும் மக்களுக்கு அதிகாரமும் பொறுப்பும் கொடுக்காமல் மையப்படுத்தப் பட்ட அதிகாரத்தைச் சார்ந்து உற்பத்தி மற்றும் வழங்கல் நடந்தது போன்ற மற்ற காரணங்களும் படிப்பினைகளாக இருக்கின்றன.

சோவியத் ஒன்றியம், சீனம் ஆகிய நாடுகளின் சாதனைகளிலிருந்தும் கற்றுக் கொள்ள வேண்டும். தவறுகளிலிருந்தும் படிப்பினை பெற வேண்டும்.

அடுத்து மார்க்சிய லெனினிய சித்தாந்தத்தில் செய்ய வேண்டிய மறு ஆய்வுகளையும் இரசியப் புரட்சி நூறாவது ஆண்டு விழாக் காலத்தில் விவாதிப்பது பொருத்தம்!

1. பாட்டாளி வர்க்க சர்வதேசியத்திற்கு - காலப் பொருத்தத்திற்கு அப்பால் சென்று கொடுத்த முன் நிபந்தனையை மறு ஆய்வு செய்தல்; நிகழ்காலப் பொருத்தத்திற்கேற்ப அதன் செயல் வடிவத்தை வரையறுப்பது. அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கான உலக சமூக மாற்றத்திற்குரிய நிகழ்ச்சி நிரலை இறுதி செய்துவிட்ட இறுமாப்பிலிருந்து விடுபடல்!

2. கிளை மொழி (Dialect) பொது மொழியாக (Standard Language) வளர்ந்தது - தேசிய இன மொழியாக உருவெடுத்தது ஆகியவை சமூக வளர்ச்சியில் ஆற்றிய முற்போக்குப் பாத்திரம் குறித்த வரையறை இதுவரை மார்க்சிய லெனினியத்தின் அடிப்படைக் கோட்பாடுகளில் இல்லை. இனி அது பற்றி ஆய்வது.

3. அதேபோல் தேசிய இன உருவாக்கம் - தேச அமைப்பு ஆகியவை சமூக வளர்ச்சி வரலாற்றில் ஆற்றும் முற்போக்குப் பாத்திரம் குறித்து இதுவரை மார்க்சிய லெனினிய அடிப்படைக் கோட்பாடுகளில் சொல்லப்படவில்லை. இது பற்றி ஆய்வு செய்வது.

இன்று முதலாளிய ஏகாதிபத்தியங்களும் பன்னாட்டு முதலாளிய நிறுவனங்களும் உலக வேட்டையாடலுக்கு “உலகமயம்” என்ற கோட்பாட்டை அறிவித்துச் செயல் படுத்தி வருகின்றன.

இவ்வல்லரசுகளையும் பன்னாட்டு நிறுவனங்களையும் எதிர் கொள்ள மிகச் சரியான படை, சொந்தத் தாயகப் பற்றுடன் போராடும் குறிப்பிட்ட தேசிய இன மக்கள்தான் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

4. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரக் கோட்பாட்டைக் கைவிடுதல்; பல கட்சிச் செயல்முறையின் கீழும் நிகரமை நிற்கும்படியான சமூகத்தைக் கட்டமைத்தல்; அதற்கு இசைவான பண்பாட்டு மாறுதல்களை மக்களிடையே உருவாக்குதல், அதனடிப்படையில் ஒரு புதிய மனிதனை – புதிய மனிதியை உருவாக்குதல், அந்தப் பக்குவத்திற்குக் காத்திருத்தல்!

நிர்வாகத்தில் மேலிருந்து கீழ்வரை செங்குத்தான ஒற்றை அதிகார மையம் என்பதை மாற்றி, ஊராட்சி அளவிலிருந்து, தொழிற்சாலை அளவிலிருந்து உச்சி வரை கிடைக்கோட்டு (Horizontal) முறையில் கூட்டுத் தலைமைகளை உருவாக்குதல்!

5. பொருளியல் கோட்பாடுகளில் சந்தையையும் சந்தைப் போட்டிகளையும் உரியவாறு கணக்கில் கொள்ளுதல்.

மையப்படுத்தப்பட்ட பெருவீத உற்பத்தி முறைக்கு மாற்றாகப் பரவலாக்கப்பட்ட - சிற்றளவு உற்பத்தி முறையும், வழங்கலும் கடைபிடித்தல்.

6. சூழலியல், இயற்கை வேளாண்மை, மரபுவழி மருத்துவம் போன்றவற்றிற்கு சமூக வளர்ச்சியில் உரிய பங்களித்தல்.

7. உலகம் முழுவதற்கும் ஒரே வகையான சமூக வளர்ச்சிப் பாதைகளை முடிவு செய்யாமல் - ஒரே வகையான புரட்சி குறித்த புரிதலை ஏற்படுத்தாமல், அந்தந்த தேசியச் சமூகத்திற்கேற்ற வளர்ச்சிப் பாதை களை - சமூக மாற்ற வடிவங்களை முடிவு செய்து கொள்ளும் தற்சார்பு சமூக அறிவியலை வளர்த்தல்.

சமூகத்திற்கு முன், தத்துவத்தை நிறுத்தாமல், சமூகத்திற்கேற்ப தத்துவத்தில் கோட்பாடுகளையும் இலக்குகளையும் உருவாக்கிக் கொள்ளுதல்!

8. அறம்சார்ந்த பண்புகள், ஒழுக்கம், நுகர்வு வரம்பு, மனித நேய உறவு ஆகியவற்றைப் பெறுவதற்கான உள வியலை ஒவ்வொரு தனிமனிதரிடமும் வளர்த்தல்!

தொண்ணூற்றொன்பது ஆண்டுகளுக்கு முன் மனித குல வரலாற்று வளர்ச்சியில் மாபெரும் பாய்ச்சலை உண்டாக்கிய நவம்பர் புரட்சி நாயகர்கள் அனைவர்க்கும் நன்றியுடன் வீரவணக்கம் செலுத்துவோம்!

Labels:

"சல்லிக்கட்டு : உச்ச நீதிமன்றத் தடை அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது! நடுவண் அமைச்சர் பொன் இராதாகிருட்டிணன் பதவி விலக வேண்டும்!" -- தோழர் பெ. மணியரசன் அறிக்கை!

Thursday, November 17, 2016
============================================
சல்லிக்கட்டு : உச்ச நீதிமன்றத் தடை
அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது!
நடுவண் அமைச்சர் பொன் இராதாகிருட்டிணன்
பதவி விலக வேண்டும்!
==========================
================== தோழர் பெ. மணியரசன் அறிக்கை!
==========================
==================

உச்ச நீதிமன்றம் நேற்று (16.11.2016), “சல்லிக்கட்டு” எனப்படும் தமிழர் ஏறுதழுவல் விழாவிற்கு தடை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. இத்தீர்ப்பை வழங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் ரோகிந்தன் நாரிமன் ஆகியோர் அமர்வு, தடைக்கானக் காரணங்களாகக் கூறியிருப்பவை சட்ட நெறிகளுக்குப் புறம்பானவையாக இருக்கின்றன.

இந்திய அரசுக்கும் மாநில அரசுக்குமான அதிகாரப் பகிர்வுப் பட்டியலில், மாநிலப்பட்டியல் 14 – 15, கால்நடைகள் பாதுகாப்புக்கான அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்குகிறது. சல்லிக்கட்டு விளையாட்டை ஒழுங்குபடுத்தவும், காளைகளுக்குத் துன்பம் நேராமல் பாதுகாக்கவும் உரிய விதிகளை ஏற்படுத்தி, 2009ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு இயற்றிய, “தமிழ்நாடு சல்லிக்கட்டு ஒழுங்குமுறைச் சட்டம் – 2009” (Tamil Nadu Regulation of Jallikattu Act, 2009) என்ற சட்டம், இந்த அதிகாரத்தின்படிதான் இயற்றப்பட்டது.

ஆனால் உச்ச நீதிமன்றம், “1960ஆம் ஆண்டு இந்திய அரசு இயற்றிய விலங்குகள் பாதுகாப்புச் சட்டத்திற்கு எதிரானதுதான் தமிழ்நாடு அரசின் சட்டம்” என்றுகூறி, சல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரிய தமிழ்நாடு அரசின் சீராய்வு மனுவைத் தள்ளுபடி செய்திருக்கிறது.

“ஏறுதழுவுதல் நிகழ்ச்சியைப் பார்த்து மக்கள் மகிழ்வது என்று கூறுவது மனிதர்களின் கீழ்த்தரமான மகிழ்ச்சியை ஆதரிப்பதாகும்” என்று உச்ச நீதிமன்ற அமர்வு, தன் தீர்ப்பில் கூறியிருக்கிறது.

குதிரைகளைத் துன்புறுத்தி, ஓட்டப்பந்தயம் நடத்தி அதைப் பல்லாயிரக்கணக்கான மக்கள் கட்டணம் செலுத்திப் பார்த்து மகிழ்வதென்பது “கீழ்த்தரமான மகிழ்ச்சி” வகையில் சேராதா? மனிதர்களை ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ள – குத்திக் கொள்ள – கீழேத் தள்ளி மிதிக்க – பல வகைகளில் துன்புறுத்திக் கொள்ளச் சொல்லி நடத்தப்படும் குத்துச் சண்டையை வேடிக்கைப் பார்ப்பது “கீழ்த்தரமான மகிழ்ச்சி” இல்லையா?

இவற்றையெல்லாம் அனுமதிக்கும் உச்ச நீதிமன்றம், தமிழர்களின் ஏறுதழுவுதல் விளையாட்டை மட்டும் தடுத்திருப்பது சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டை உச்ச நீதிமன்றமே மீறியதாக அமைகிறது!

தமிழ்நாடு அரசு சட்டத்தில் (2009), “சல்லிக்கட்டு விளையாட்டிற்கு காளைகளைப் பழக்குவது அவற்றைத் துன்புறுத்துவதாகாது“ என்று கூறியிருக்கிறது. இதனை “ஏற்க முடியாது” என்றும் “சிந்தித்துப் பார்க்கக்கூட முடியாது” என்றும், “பழக்குவது என்பது வீட்டு விலங்குகளைக் கொடுமைப்படுத்துவதுதான்” என்றும் உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது.

ஏர் உழுவுவதற்கும், வண்டி இழுப்பதற்கும் காளைகளைப் பழக்குவதுகூட இனி தடை செய்யப்படுமா என்ற கேள்வி எழுகிறது. கன்று குடிப்பதற்காக சுரக்கும் மாட்டின் பாலை கறப்பதும் துன்புறுத்துவதுதான் என்று உச்ச நீதிமன்றம் இனி தடை போடுமா? எல்லாவற்றுக்கும் மேலாக, மாடுகளை – ஆடுகளை – மற்ற பிராணிகளைக் கொன்று சாப்பிடுவது மிகப்பெரிய துன்புறுத்தல் என்று உச்ச நீதிமன்றம் தடை போடுமா?

தமிழ்நாடு அரசுக்காக வாதாடிய மூத்த வழக்குரைஞர் சேகர் நபாதே, சிறப்பாகவே தருக்கம் செய்துள்ளார். அவர், “ஏறுதழுவல் என்பது சமயத்திருவிழாவோடு தொடர்புடையது. தீபாவளி உட்பட எல்லாத் திருவிழாக்களும் சமயத்தில் வேர் கொண்டுள்ளவைதான். பொங்கல் திருவிழாவின் ஒரு பகுதியாகத்தான் ஏறுதழுவல் விழா இருக்கிறது. அரசமைப்புச் சட்ட உறுப்பு 25, இவ்வாறான சமய விழாக்களைத் தடை செய்யக் கூடாதென்று கூறுகிறது. அதற்கு முரணாக, ஏறுதழுவுதலைத் தடை செய்யக் கூடாது” என்று வாதிட்டுள்ளார்.

அதற்கு, “இவ்வாறு வாதாடுவது அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய பெருந்தகைகளின் புகழுக்கு இழுக்கு சேர்ப்பதாகும்” என்று நீதிபதி மிஸ்ரா கூறியிருக்கிறார். இது சட்ட நெறிப்பட்ட மறுமொழி அல்ல! அரசமைப்புச் சட்டத்தை இயற்றியவர்களின் “புனிதத்தைக்” கூறி, அதற்குப் பின்னால் ஒளிந்து கொண்டு - தன் விருப்பப்படி தீர்ப்பெழுதும் உத்தி இது!

தமிழ்நாட்டில் ஏறுதழுவுதல் விழாக்கள், கிராமப்புறங்களின் நாட்டுப்புறத் தெய்வங்களின் வாசலிலிருந்தோ அல்லது அத்தெய்வங்களின் திருவிழாக்களாகவோ நடத்தப்படுகின்றவைதான். இந்த விழாக்கள், சமயத் தெய்வங்களோடு தொடர்புபடுத்தப்பட்டிருந்தாலும் சமயச்சார்பற்று (Secular), சாதிச்சார்பற்று நடக்கிற தமிழர்களின் பொது விழாக்களாகும்.

இந்திய அரசமைப்புச் சட்டம் சமயச் சார்பு விழாக்களுக்கு வழங்கியிருக்கின்ற உரிமையை (உறுப்பு 25) மீறும் செயலாகவும் இத்தீர்ப்பு அமைந்துள்ளது.

இந்திய அரசின் இரட்டை வேடம் இதில் அம்பலமாகியுள்ளது. வேடிக்கைக் காட்டுவதற்குத் தடை செய்யப்பட்ட விலங்குகளில் பட்டியலில் உள்ளவை, சிங்கம், புலி, கரடி, குரங்கு, சிறுத்தை ஆகிய வரிசையில 2011இல், காளையையும் அன்றைய காங்கரசு நடுவணரசு சேர்த்தது (Ministry of Environment And Forests Notification, Dated 11.07.2011, F. NO. 27-11201 1-AWD).

இந்த ஆறு விலங்குகளில் காளையைத் தவிர எஞ்சிய ஐந்து விலங்குகளும் விலங்குக் காட்சி சாலைகளில் கூண்டுகளுக்குள் வைக்கப்பட்டிருப்பவை! வீட்டில் வளர்க்கப்படுபவை அல்ல! வீட்டில் வளர்க்கப்படும் காளையை கண்காட்சி சாலையிலுள்ள காட்டு விலங்குகள் பட்டியலில் சேர்த்தது ஏன்?

காங்கிரசு அரசு காளையையும் அப்பட்டியலில் சேர்த்ததை அப்படியே வைத்துக் கொண்டு, தமிழ்நாட்டு சல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கிறோம் என்று பா.ச.க. அரசு கூறுவது அரசியல் மோசடி அல்லவா? அந்தப் பட்டியலில் காளை இன்றும் இருப்பதுதான், உச்ச நீதிமன்றம் ஏறுதழுவலுக்குத் தடை விதிக்க வாய்ப்புத் தருகிறது.

இந்த வழக்கில் வாதாடிய நடுவணரசு வழக்கறிஞர் முகில் ரோத்தகி, தடை செய்யப்பட்டப் பட்டியலிலிருந்து காளையை நீக்க எந்த உறுதியும் தரவில்லை. தமிழ்நாட்டு சல்லிக்கட்டுக்கு விதித்தத் தடையை மட்டும் நீக்க வேண்டுமென்று அவர் வாதாடியது வெறும் பாசாங்குதான் என்பது உச்ச நீதிமன்றத்துக்கும் தெரியும்!

இந்திய அரசின் தமிழ்நாட்டு ஒலிபெருக்கியாக உலா வந்து கொண்டிருக்கும் நடுவண் அமைச்சர் பொன் இராதாகிருட்டிணன், சல்லிக்கட்டு நடந்தே தீரும் என்று அடிக்கடி வாக்குறுதி கொடுத்து வந்தார். இந்த வழக்குத் தீர்ப்புக்குப் பிறகாவது, இந்திய அரசின் இரட்டை வேடத்தைக் கண்டித்து அவர் பதவி விலக வேண்டும்! காவிரிச் சிக்கலில் – தமிழ்நாட்டு உரிமைக்கு எதிராக அவர் பேசி வந்ததைப் போல் இதிலும் அவர் நடந்து கொள்ளக் கூடாது!

தமிழ் மக்கள் தங்கள் முன்னோர்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக நடத்தி வந்த தமிழின மரபுத் திருவிழாவான சல்லிக்கட்டு விழாவை நடத்துவதற்குரிய சட்டத் திருத்தம் வரும் வரையில், நீதிக்கான அறப் போராட்டமாக சல்லிக்கட்டு விழாக்களை கட்டுப்பாட்டுடனும் தமிழ்நாடு அரசுச் சட்டத்தின் ஒழுங்குமுறை விதிகளைக் கடைபிடித்தும் ஊர் ஊராக நடத்தி சட்ட ஏற்பிசைவுக்கு வழிகாண வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

Labels:

"இந்தியாவின் நிதிநிலையை சீர்குலைத்த நரேந்திர மோடி அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்!" -- தோழர் பெ. மணியரசன் அறிக்கை!

Tuesday, November 15, 2016
============================================
இந்தியாவின் நிதிநிலையை சீர்குலைத்த
நரேந்திர மோடி அரசின் மீது நம்பிக்கையில்லாத்
தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்!
============================================
தோழர் பெ. மணியரசன் அறிக்கை!
============================================
தன்னார்வ குதூகலத்தில் - தன் விளம்பர வேட்கையோடு நரேந்திர மோடி அரசு, 500 – 1,000 ரூபாய் தாள்கள் செல்லாது என்று அறிவித்த முறை தவறானது என்று உச்ச நீதிமன்றம் இன்று (15.11.2016) கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த அரைவேக்காட்டு நடவடிக்கை இந்தியா முழுவதும் மக்களின் அன்றாட வாழ்க்கை மற்றும் சிறிய – நடுத்தர வணிகம் ஆகியவற்றை முற்றிலுமாக நிலைகுலைத்துள்ளன.
காய்கறிகள்கூட விற்பனையாகாமல் தேங்கிக் கிடக்கின்றன. வணிகர்கள் மட்டுமின்றி, அவற்றை உற்பத்தி செய்யும் உழவர்களின் கதி என்னாவது? டீசல் வாங்கவும், மற்ற இன்றியமையா செலவுகளுக்கும் பணமில்லாமல் மீனவர்கள் படகுகளை எடுத்துச் சென்று மீன் பிடிக்க முடியாமல் துயரத்தில் சிக்கியுள்ளனர்.
இந்திய அரசு உண்டாக்கிய இந்தப் பொருளாதாரச் சிக்கலால் மருத்துவமனைகளில் பழைய ரூபாய் நோட்டு வாங்காமல் குழந்தைகள் இறந்துள்ளன. கிராமப்புறங்களில் தங்களது சேமிப்புத் தொகைப் பயன்படாத நிலையில் தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன. சில திருமணங்கள்கூட நின்று தற்கொலைகள் நடைபெற்றுள்ளன.
தமிழ்நாட்டில் 09.11.2016-லிருந்து கிராமப்புற மக்களின் வங்கியான கூட்டுறவு வங்கிகள் முற்றாக முடங்கிவிட்டன. உழவர்களும் கூட்டுறவு வங்கிகளில் வேலை செய்வோரும் வீதிக்கு வந்து போராடிக் கொண்டிருக்கின்றனர்.
“வளர்ச்சியின் தூதுவர்” என்றும், “செயல்படும் அரசின் நாயகர்” என்றும் வர்ணிக்கப்பட்ட நரேந்திர மோடியின் விளம்பரப் பேராசைக்கு இந்தியப் பொருளாதாரம் பலியிடப்பட்டுள்ளது. அனைத்திந்திய அளவில் ஏற்பட்டுள்ள இந்த நிலைகுலைவுக்கு இடையில், நரேந்திர மோடியின் வாய்ச்சவடால் மட்டும் குறையவில்லை. தன்னை எரித்தாலும் – தன்னைக் கொலை செய்தாலும் தான் பின் வாங்கப் போவதில்லை என்று பேசி, தனக்குத் தானே பேய் விரட்டிக் கொள்கிறார்.
அம்பானி, அதானி உள்ளிட்ட விரல்விட்டு எண்ணக்கூடிய பெரும் பன்னாட்டு நிறுவனங்கள் சில, வரி பாக்கி மற்றும் எட்டரை இலட்சம் கோடி வைத்துள்ளன. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையில் நரேந்திர மோடியே சொன்னது போல், இந்தியாவுக்கு வெளியே 25 இலட்சம் கோடி ரூபாய் கருப்புப் பணம் இருக்கிறது.
இவற்றைலெ்லாம் மீட்க உருப்படியான நடவடிக்கை எதுவும், கடந்த இரண்டரை ஆண்டுகளாக மோடி அரசு எடுக்கவில்லை. கருப்புப் பணம் – கள்ளப்பணம் ஆகியவற்றை உண்மையிலேயே ஒழிப்ப தென்றால், ஒட்டு மொத்த சமூகத்தில் பன்னாட்டு நிறுவனங்கள், அதிகார வர்க்கம், அரசியல் வாதிகள், நீதித்துறை, பெரும் வணிக நிறுவனங்கள், திரைப்படத்துறை போன்ற பலவற்றில் நடைபெறும் ஊழல்கள் மற்றும் சட்டவிரோதப் பணப் பரிமாற்றங்கள் ஆகிய வற்றின் மீது தாக்குதல் தொடுத்து, அவற்றை ஒழுங்குபடுத்த முன்வர வேண்டும். இவற்றில் எதுபற்றியும் நரேந்திர மோடி அரசு அலட்டிக் கொள்ளவில்லை. சாமான்ய மக்கள் பயன்படுத்தும் ரூபாய் தாள்களைத் தடை செய்து விட்டு ஊழல் ஒழிப்பு வேடம் போட்டு, மேற்கண்ட துறைகளில் உள்ள கொள்ளையர்களைப் பாதுகாக்கிறது.
பண வீக்கம் - விலைவாசி உயர்வு வர வாய்ப்புள்ளது
-----------------------------------------------------------------------------------
இந்த நிலைகுலைவை சரி செய்வதற்காக உடனடியாக ஏராளமானப் பணத்தாள்களை புழக்கத்தில்விடப் போகிறார்கள். இந்த நடவடிக்கையானது பெரிய அளவுக்குப் பண வீக்கத்தையும், விலைவாசி உயர்வையும் உண்டாக்கப் போகிறது!
அவசரத்தில் அள்ளித் தெளித்த கோலம் போல் அச்சிடப்பட்ட புதிய 2000 ரூபாய் பணத்தாள்கள், பணமெடுக்கும் எந்திரங்களில் (ஏ.டி.எம்.) பொருந்தாத அளவைக் கொண்டிருப்பதால், அவற்றின் வழியாக தொகை எடுப்பதில் சிக்கல் உள்ளது. வெறும் 100 ரூபாய் தாள்களைக் கொண்டு மட்டுமே ஏ.டி.எம்.கள் நிரப்பப்படுவதால், வழக்கமாக எடுப்பவர்களைவிட மிகக் குறைவானர்கள் மட்டுமே அதில் பணம் எடுக்க முடிகிறது. வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் இடையே தகராறுகள் ஏற்படுகின்றன.
இந்தியச் சமூகத்தில் பெரும் நிலைகுலைவை உண்டாக்கிவிட்ட மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்து, கட்சி வேறுபாடில்லாமல் வாக்களித்து ஒரு மாற்று ஆட்சியை உருவாக்கக்கூடிய சனநாயகத் தெளிவும் அறமும் இருந்தால், நாடாளுமன்றம் நீடிப்பதற்கான பொருத்தப்பாடு இருக்கும். நாளை கூடப்போகும் நாடாளுமன்றம், கட்சித் தலைமைக்கான எசமான விசுவாசிகளின் கூடாரம்தான் என்பதை மீண்டும் மெய்ப்பித்தால், மக்கள் போராட்டம்தான் இதற்குத் தீர்வாக இருக்க முடியும்!
இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு ஆர்.எஸ்.எஸ். – மோடி அணியினர் நெருக்கடி நிலை சாற்றலை (பிரகடனத்தை) கொண்டு வர வாய்ப்புண்டு. அதை நோக்கித்தான் மோடி அரசு, காய்களை நகர்த்துகிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
எனவே, சனநாயகத்தில் நம்பிக்கையுள்ள அனைவரும் ஒருங்கிணைந்து மோடி அரசு உண்டாக்கியுள்ள பொருளாதாரச் சீர்குலைவைக் கண்டிக்கவும், சனநாயக உரிமைகளைப் பறிக்கும் நெருக்கடி நிலை வராமல் தடுக்கவும் குரல் கொடுக்க வேண்டிய – போராடி வேண்டிய நேரம் வந்துள்ளது.
தோழர் அன்பழகனைத் தாக்கிய
தருமபுரி யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கிக்
கிளை மேலாளரைக் கைது செய்ய வேண்டும்!
----------------------------------------------------------------------------
தருமபுரி - யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் கணக்கு வைத்துள்ள தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழரும் பங்குச்சந்தை முகவருமான தோழர் அன்பழகன் நேற்று (14.11.2016), இந்திய சேம வங்கியின் வழிகாட்டுதல்படி தனது அலுவலக நிர்வாகத்திற்காக ரூபாய் 10,000 பணமெடுக்கப் போனபோது, அவ்வங்கிக் கிளையின் மேலாளர் பிரபுசர்மா ரூபாய் 2,000 மட்டும்தான் தர முடியும் என்றுகூறி, அன்பழகன் கோரியத் தொகையைத் தர மறுத்து விட்டார்.
அப்பொழுது அன்பழகன், இந்திய சேம வங்கியின் வழிகாட்டுதல் சுற்றறிக்கையை சுட்டிக் காட்டி, 10,000 ரூபாய் கொடுங்கள் என்று வலியுறுத்தியிருக்கிறார். அதற்கு மேலாளர் பிரபுசர்மா, அன்பழகனை அவமரியாதையுடன் பேசியதுடன் – அங்கிருந்த வாடிக்கையாளர்களுக்குப் பணம் கிடைக்காமல் செய்ய – அன்பழகன் முயல்வதாகத் தவறாகக் கூறி, ஊழியர்களையும் மற்றவர்களையும் தூண்டிவிட்டுள்ளார்.
தனது வேண்டுகோளை வலியுறுத்திக் கொண்டிருந்த அன்பழகனை மேற்படி மேலாளரும் வங்கி ஊழியர்களும் சூழ்ந்து கொண்டு தாக்கி, அவரை இழுத்துக் கொண்டுபோய் பிணைக் கைதி போல் ஒரு அறையில் உட்கார வைத்து விட்டார்கள். செய்தியறிந்து காவல் நிலையத்திலிருந்து காவலர் வந்துதான் அவரை மீ்ட்டு உள்ளார். அன்பழகன் தாக்கப்பட்டது, பிணைக் கைதி போல் உட்கார வைக்கப் பட்டது அனைத்தும் வங்கியிலுள்ள சி.சி.டி.வி. படக்கருவியில் பதிவாகியுள்ளன.
வங்கி மேலாளரும், அவ்வங்கி ஊழியர்களும் தாக்கியதில் ஏற்பட்ட வீக்கம் மற்றும் உள் காயங்களுக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக சேர்க்கப்பட்டு அன்பழகன் சிகிச்சைப் பெற்று வருகிறார். அவரிடம் விசாரிப்பதற்கு மருத்துவமனை வந்த தருமபுரி பி-1. காவல் நிலையத் துணை ஆய்வாளர், அன்பழகன் கூறியவற்றை அப்படியே எழுதிக் கொள்ளாமல் அவர் விருப்பப்டி எழுதிக் கொண்டு போயுள்ளார்.
இன்று (15.11.2016) தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் கோ. மாரிமுத்து அவர்களும், வழக்கறிஞர் முத்துவேலு அவர்களும் தருமபுரி தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்களுடன் சென்று, அன்பழகனைச் சந்தித்து அவர் எழுதிக் கொடுத்தப் புகாரை தருமபுரி பி-1. காவல் நிலைய ஆய்வாளரிடம் கொடுத்துள்ளார்கள்.
அன்பழகன் புகாரிலுள்ளபடி வழக்குப் பதிவு செய்து, தருமபுரி – யூனியன் பேங்க் ஆப் இந்தியா கிளை மேலாளர் பிரபுசர்மாவையும் மற்ற ஊழியர்களையும் உடனடியாகக் கைது செய்ய வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். சட்டப்படியான நடவடிக்கையை எடுக்கவில்லையெனில், மேற்படி கிளை மேலாளரைக் கைது செய்ய வலியுறுத்தி, தருமபுரியில் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Labels:

“தமிழர்களே! எந்த இசத்தின் பெயராலும் இனத்துரோகத்தை ஏற்காதீர்கள்! அமெரிக்க ஐரோப்பிய அரசியலைப் பாருங்கள்!” -- தோழர் பெ. மணியரசன் - சிறப்புக் கட்டுரை!

Thursday, November 10, 2016
=============================================
“தமிழர்களே! எந்த இசத்தின் பெயராலும்
இனத்துரோகத்தை ஏற்காதீர்கள்!
அமெரிக்க ஐரோப்பிய அரசியலைப் பாருங்கள்!”
==========================
===================
தோழர் பெ. மணியரசன் - சிறப்புக் கட்டுரை!
==========================
===================
“வட அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தலில் டொனால்டு டிரம்பை வெற்றி பெறச் செய்தது ‘வெள்ளை இனத் தொழிலாளி வர்க்கம்’ (Working Class whites made the difference) என்று இந்து ஆங்கில ஏடு இன்று (10.11.2016), முதல் பக்கத்திலேயே தலைப்புச் செய்தி போட்டுள்ளது.

“தொழிலாளிக்கு இனமில்லை, மொழி இல்லை” என்று தமிழ்நாட்டில் இடதுசாரி அமைப்புகள் முழக்கமிடுகின்றன. அவற்றின் தலைவர்கள் திருந்துவார்களா என்பது ஐயம்!

தனது தாயகத்தில் தனது வாழ்வுரிமை பாதிக்கப்பட்டால் – தீர்மானிக்கும் ஆற்றலாகத் தான் இருப்பதை இழக்க நேர்ந்தால் தொழிலாளி வர்க்கம் இனத் தற்காப்பு நோக்கில் வீதிக்கு வரும் என்பதை அமெரிக்கத் தொழிலாளி வர்க்கம் மட்டுமின்றி, ஏற்கெனவே ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து, பிரித்தானியா வெளியேற வாக்களித்த இங்கிலாந்துத் தொழிலாளி வர்க்கமும் மெய்ப்பித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா பிரியக் கூடாது என்று வாக்களித்து ஸ்காட்லாந்தியத் தொழிலாளி வர்க்கமும் மெய்ப்பித்துள்ளது. பிரித்தானியா ஒரே நாடாக இருந்தாலும் அங்குள்ள இருவேறு இனங்களின் தொழிலாளி வர்க்கம், தங்கள் தங்கள் நலன் கருதி இருவேறு முடிவுகளை எடுத்துள்ளன.

வட அமெரிக்கா – உலகில் மிக மோசமான ஏகாதிபத்திய நாடு! வென்றுள்ள டிரம்பும் வெற்றி வாய்ப்பை இழந்துள்ள ஹிலரியும் ஏகாதிபத்தியவாதிகளே!

அமெரிக்க ஏகாதிபத்திய நிறுவனங்களின் இலாப வேட்டைக்காக உருவாக்கப்பட்ட உலமயக் கொள்கை – மற்ற நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதேவேளை அமெரிக்காவில், வெளிநாட்டுப் பணியாளர்கள் அதிகமாக வர வாய்ப்பளித்தது. அதனால் வட அமெரிக்க உழைக்கும் மக்களில் கணிசமானோர் வேலை வாய்ப்பை இழந்தனர். வறுமையுற்ற வெளிநாடுகளிலிருந்து வரும் உழைக்கும் மக்கள் குறைந்த சம்பளம் பெற ஒப்புக் கொள்வதால், உள்நாட்டு வெள்ளை இனத் தொழிலாளிகள் அவர்கள் நாட்டுப் பொருளியலுக்கேற்ற உயர் ஊதியம் பெற முடியவில்லை.

வட அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் மேல் தட்டு வர்க்கத்தினர்க்கும் பெரும் பயனளிக்கும் உலகமயம் உள்நாட்டு உழைக்கும் மக்களுக்கு உரிய பயன் தரவில்லை. எனவே அவர்கள் வெளிநாட்டுத் தொழிலாளிகள் வருகையைக் கட்டுப்படுத்த உறுதி கொடுத்த டிரம்புக்கு உழைக்கும் மக்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களித்துள்ளார்கள்.

வட அமெரிக்கப் பொருளாதாரத்தை ஆட்டிப் படைப்போர் யூத ஏகபோக முதலாளிகள். குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களித்தவர்களிடம் – வெளியே நடத்திய கருத்துக் கணிப்பில் யூதர்கள் 71 விழுக்காடு ஹிலரிக்கும் 24 விழுக்காடு டிரம்புக்கும் வாக்களித்ததாக அதே இந்து ஏட்டில் புள்ளி விவரம் வந்துள்ளது.

உலகமயப் பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டையை – ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடும் தொழிலாளி வர்க்கம் சொந்தத் தேசியத் தாயக மண்ணின் மக்களாக உள்ள உழைப்பாளிகளாகவே இருப்பார்கள். வெளி இனங்களிலிருந்து வந்த தொழிலாளிகள் அந்த வர்க்கப் போராட்டத்தை நடத்த முன்வர மாட்டார்கள். பல நாட்டு விவரங்களை ஆய்வு செய்த மேற்கத்திய மார்க்சிய அறிஞர்கள் இதே கருத்தை இப்போது முன் வைத்து வருகிறார்கள்.

எனவே தமிழ்நாட்டில் இடதுசாரிச் சிந்தனை என்ற பெயரால் – பாட்டாளி வர்க்க சர்வதேசியம் – இந்தியத்தேசியம் என்ற பெயரால் தமிழினத் துரோகம் செய்யத் தூண்டும் தலைமைகளின் தவறான வழிகாட்டலுக்குத் தமிழின இளைஞர்கள் பலியாகக் கூடாது.

டிரம்பின் வெற்றியை நாம் எடுத்துக்காட்டுவது – அவரை ஆதரிக்க அன்று! அங்கு மக்களின் “இன உணர்வு” எப்படி இருக்கிறது என்று எடுத்துக்காட்டவே!

தமிழ்நாட்டில் தொடர்வண்டித்துறை, பி.எச்.இ.எல்., பாதுகாப்புத்துறை தொழிற்சாலைகள், வங்கிகள், வருமான வரி – உற்பத்தி வரி – சுங்க வரி அலுவலகங்கள், நெய்வேலி அனல் மின் நிலையம், பெட்ரோலிய – எரிவளி ஆலைகள் என எல்லா நடுவணரசு நிறுவனங்களிலும் 80 விழுக்காட்டிற்கு மேல் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களையே வேலையில் சேர்க்கிறார்கள். மண்ணின் மக்களாகிய தமிழ் இளைஞர்களுக்குத் தகுதி இருந்தும், பிறந்த இனம் காரணமாகப் புறக்கணிக்கிறார்கள்.

இந்த நிறுவனங்களில் 90 விழுக்காடு வேலைகள் தமிழர்களுக்கே தர வேண்டும், 10 விழுக்காட்டிற்கு மேல் வேலையில் உள்ள வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களை வெளியேற்ற வேண்டும் என்று எமது தமிழ்த்தேசியப் பேரியக்கம் போராடி வருகிறது. கடந்த 12.09.2016 அன்று இக்கோரிக்கையை முன் வைத்து, திருச்சித் தொடர்வண்டிக் கோட்டத் தலைமையகத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்தினோம். ஆயிரம் பேர்க்கு மேல் கலந்து கொண்டார்கள்; 560 பேர் கைதானார்கள். அதில் பெண்கள் 150 பேர்!

இதோ – இப்போதுகூட தமிழ்நாட்டில் இந்திய அரசு வங்கிக் கிளைகளில் (ஸ்டேட் பாங்க்) வேலைக்குத் தேர்வு செய்துள்ள 1,420 பேரில் 80 விழுக்காட்டினர் மலையாளிகளும் இந்திக்காரர்களும் என்ற உண்மை வெளிப்பட்டுள்ளது.

இந்திய அரசு நமது 90 விழுக்காட்டுக் கோரிக்கையை ஏற்கவில்லையென்றால், மண்ணின் மக்களாகிய தமிழ் இளைஞர்கள் – நடுவணரசு நிறுவனங்களுக்குச் சென்று அறவழியில் முற்றுகையிட வேண்டும்.

தமிழர்களே, உலகம் போகிற போக்கைப் பாருங்கள்! இன அடிப்படையில் அவரவர் தாயக வாழ்வுரிமையைத் தக்க வைக்கப் போராடுகிறார்கள்.

எந்த இசத்தின் பெயரால் இனத் துரோகத்தைத் தூண்டினாலும் ஏமாறாதீர்கள்! போராட்டக் களத்திற்கு முன் கருத்துக் களத்தைச் சரி செய்யுங்கள்!

தமிழினத் தற்காப்புணர்ச்சியைப் பரப்புங்கள்! விவாதியுங்கள்! விழித்துக் கொள்ளுங்கள்!

Labels: ,

"டிரம்ப் வெற்றி : தமிழர்களுக்கு உணர்த்தும் பாடம்!" -- தோழர் பெ. மணியரசன் - சிறப்புக் கட்டுரை!

Wednesday, November 9, 2016
=============================================
டிரம்ப் வெற்றி : தமிழர்களுக்கு உணர்த்தும் பாடம்!
==========================
===================
தோழர் பெ. மணியரசன் - சிறப்புக் கட்டுரை!

==========================
===================
வட அமெரிக்காவின் குடியரசுத் தலைவராக, குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பத
ு தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு ஒரு செய்தியை அழுத்தமாக உணர்த்துகிறது.

சொந்த இனம் வெள்ளை இனம் – வந்த இனங்கள் கருப்பினங்கள்; மற்ற இனங்கள் என்ற வேறுபாட்டை முன்னிறுத்தியும், வெள்ளை இன மேன்மை மற்றும் மேலாதிக்கம் ஆகியவற்றை வலியுறுத்தியும் தேர்தல் பரப்புரை செய்த டிரம்பை அந்நாட்டு மக்கள் பெரும்பான்மை அடிப்படையில் தேர்ந்தெடுத்துள்ளார்கள்.

இப்பொழுது குடியரசுத் தலைவராக உள்ள பாரக் ஒபாமா – தேர்தலில் போட்டியிட்ட போதும் – வெற்றி பெற்ற பின்னரும், ஒபாமா அசல் அமெரிக்கக் குடிமகன் அல்ல என்றும் அசல் கிறித்தவர் அல்லர் என்றும் பேசியவர் டிரம்ப். நடப்புத் தேர்தல் விவாதம் சூடு பிடித்த போது, குடியரசுத் தலைவர் ஒபாமா, “கருப்பின அமெரிக்கர்கள் ஹிலரி கிளிண்டனுக்கே வாக்களிக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.

“வெளிநாடுகளிலிருந்து வட அமெரிக்காவுக்கு ஊழியர்கள் வருவதால் வெள்ளை இனத்தவர் வேலை வாய்ப்பு பறிபோகிறது. என்னைத் தேர்ந்தெடுத்தால் வெளிநாட்டிலிருந்து வேலைக்கு வந்தோரை கணிசமாக வெளியேற்றுவேன்; புதிதாக வராமல் தடுப்பேன்” என்றார் டிரம்ப்!

உலகில் மிகவும் வளர்ச்சியடைந்த முதலாளிய சமூக அமைப்பைக் கொண்ட நாடு வட அமெரிக்கா (USA). நாடாளுமன்ற சனநாயகத்தின் மூலவர்கள் என்று போற்றப்படுவதில் முதல் இடம் பெற்றவர்கள் வெள்ளை இனத்தவர்!

உலகமயம் பற்றி மற்ற நாடுகளுக்குப் பாடம் நடத்துவோர் தங்கள் நாட்டில் சொந்த இனவாதம் பேசுகின்றனர்.

அங்கு ஏன் இனப்பாகுபாடு, இனவாதம் இன்னும் மறையவில்லை?

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகல்
ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்ந்திருந்தால் அயல் இன ஐரோப்பியர்கள் அதிகமாகப் பிரித்தானியாவில் குடியேறி விடுகிறார்கள். பிரித்தானியாவில் வெள்ளையர்களின் வேலை வாய்ப்பு பறி போகிறது; எனவே ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என்று பெருவாரியாக வாக்களித்து வெளியேறியது பிரித்தானியா! இதுவும் இனச்சிக்கல்தான்!

பிரித்தானியாவில் ஒரு மாநிலமாக இருந்து கொண்டு, தனிநாடு கேட்கும் ஸ்காட்லாந்து – ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா பிரியக்கூடாது என்று பெருவாரியாக வாக்களித்திருந்தது. ஏன்?

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்தால் வெள்ளை இன மேலாதிக்கத்தை மற்ற இன மக்களின் துணை கொண்டு சமாளிக்கலாம் என்ற நோக்கிலேயே ஸ்காட்லாந்தியர்கள் “ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரியக்கூடாது” என்று வாக்களித்தனர்.

உலகின் முதற்பெரும் முதலாளிய சமூக அமைப்பைக் கொண்டது பிரித்தானியா! மூத்த நாடாளுமன்றத்திற்குச் சொந்தக்காரர்கள் வெள்ளைக்காரர்கள்! அங்கு வெள்ளை இனவாதம், ஸ்காட்லாந்திய இனவாதம், ஐரிஷ் இனவாதம் ஆகியவை இருக்கின்றன.

உலகெங்கும் நாடுகள் பெரும்பாலும் இனத்தாயக அடிப்படையில்தான் அமைந்துள்ளன.

முந்நூறு ஆண்டுகளுக்கு முன் வணிக வேட்டைக்கு வந்த வெள்ளையர்கள் பல்வேறு இனங்களின் அரசுகளை அழித்து, தங்கள் நிர்வாக வசதிக்காக இந்தியா என்ற ஒற்றை நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்கினர். எனவே தமிழர் உள்ளிட்ட பல இனத்தவர்கள் இன அடிப்படையில் இறையாண்மையுள்ள தாயக நாட்டை உருவாக்கிக் கொள்ளாமல் தடுக்கப்பட்டுள்ளனர்.

இதனால் தமிழ்நாட்டில் பிற அயல் இனத்தார் மிகையாகக் குடியேறுவதும், வேலை வாய்ப்பைப் பெறுவதும் தமிழர் தாயகத்தைச் சிதைத்து, கலப்பின மாநிலமாக்கும் செயல் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் கூறி வருகிறது. அவ்வாறு வரும் வெளியாரை வெளியேற்ற வேண்டும் என்று போராடி வருகிறது.

இவ்வாறான எமது தமிழினத் தாயகத் தற்காப்புப் போராட்டத்தை “இனவெறி” என்று சாடும் “சனநாயகவாதிகள்”, “சர்வதேசியவாதிகள்” – சனநாயகம் வளர்ச்சியடைந்த நாடுகளில் என்ன நடக்கிறது என்று பார்க்க வேண்டும். அவர்கள் உலக நடப்புகளைப் பார்க்கிறார்களோ இல்லையோ, நம் தமிழ் இளைஞர்கள் ஆண்களும், பெண்களும் தாயகப் பாதுகாப்பு, வெளியார் ஆக்கிரமிப்பு ஆகியவை பற்றி வளர்ச்சியடைந்த நாடுகளில் நிலவும் பார்வையைப் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழினத் தற்காப்புணர்வை ஒவ்வொரு தமிழரும் பெற்றாக வேண்டும்; தமிழினத் தற்காப்பு ஆற்றலை ஒவ்வொரு தமிழரும் வளர்த்துக் கொள்ள வேண்டும். நம்முடைய தமிழினப் பற்று எந்த அயல் இனத்திற்கும் எதிரான வெறியன்று; நம் இனத் தற்காப்பு சார்ந்ததே! அடுத்தவர் தாயகத்தில் நாம் ஆட்சி கோரவில்லை; ஆதிக்கம் கோரவில்லை! அடுத்த இனத்தார்க்கு நாம் எந்தத் தீங்கும் செய்வதில்லை; தீங்கு நினைப்பதுமில்லை!

வெள்ளை இனத்தவரின் இன அரசியல்தான் டிரம்ப் வெற்றி! தமிழர்கள் இன உணர்ச்சியின்றியிருந்தால் இந்தியதேசியத்தின் வழியாக ஆரிய இனத்தின் மற்றும் வட நாட்டாரின் ஆதிக்கத்தின் கீழ் அடிமைகளாகவே வாழ்வோம்! தமிழர்கள் இன உணர்ச்சியின்றி, இடதுசாரிப் பார்வையில் – சர்வதேசியம் பேசி அல்லது திராவிடப் பார்வையில் சொந்தத் தமிழினத்தை இழிவுபடுத்திக் கொண்டால், ஆரிய – வட இனத்தார்க்கு மட்டுமின்றி அண்டை அயல் இனத்தார்க்கும் அடிமைகள் ஆகிவிடுவோம்!

வட அமெரிக்காவையும் பிரித்தானியாவையும் மட்டுமல்ல, கர்நாடகத்தின் இந்தியதேசியவாதிகளின் கன்னட இனவெறியையும், கேரளத்தில் இடதுசாரிகளின் மலையாள இனவெறியையும் பார்த்து எச்சரிக்கை பெறுங்கள்!

இன உணர்வு கொள்வோம்; இறையாண்மையுள்ள தமிழ்த்தேசம் கோருவோம்!

Labels: ,

"தமிழ்நாட்டில் ஸ்டேட் வங்கிகளில் (SBI) புதிதாக வெளி மாநிலத்தவரை வேலைக்குச் சேர்த்தால் வெளியேற்றுவோம்!" -- தோழர் பெ. மணியரசன் அறிக்கை!

Tuesday, November 8, 2016
=========================================
தமிழ்நாட்டில் ஸ்டேட் வங்கிகளில் (SBI)
புதிதாக வெளி மாநிலத்தவரை வேலைக்குச்
சேர்த்தால் வெளியேற்றுவோம்!
==========================
===============
தோழர் பெ. மணியரசன் அறிக்கை!
==========================
===============
தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசின் அரசு (ஸ்டேட் பாங்க்) வங்கிகளில் (SBI) 1,420 பணி இடங்களுக்கு நடந்த தேர்வில் தமிழ்நாட்டுத் தேர்வர்கள் புறக்கணிக்கப்பட்டு, மிகப்பெரும்பான்மையாக கேரள மற்றும் இந்தி மாநில மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன.

தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு நிறுவனங்களான தொடர்வண்டித்துறை, அஞ்சல் துறை, நடுவணரசு வங்கிகள், பி.எச்.இ.எல். ஆலைகள், படைத்துறை தொழிற்சாலைகள், பெட்ரோலிய ஆலைகள், வானூர்தி நிலையங்கள் துறைமுகங்கள், வருமானவரி – உற்பத்தி வரி – சுங்கவரி அலுவலகங்கள் எனப் பலவற்றிலும் மண்ணின் மக்களாகிய தமிழர்களைப் புறக்கணித்து வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களையே மிகப் பெரும்பான்மையாக வேலைகளில் சேர்த்து வருகிறார்கள்.

சொந்த மண்ணிலேயே தமிழர்களை அயலாராகவும், அண்டிப் பிழைக்கும் இரண்டாந்தரக் குடிமக்களாகவும் மாற்றும் இந்திய அரசின் மறைமுகத் திட்டத்தின் கீழ்தான் – தமிழ்நாட்டில் செயல்படும் இந்திய அரசு நிறுவனங்களில் தமிழகத் தேர்வர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறார்கள். இது மறைமுக இன ஒதுக்கல் கொள்கையாகும்! தமிழ்நாடு தமிழர் தாயகமாக நீடிக்கக் கூடாது – அது கலப்பின மாநிலமாக மாற்றப்பட வேண்டும் என்ற குறிக்கோளும் இந்திய அரசுக்குத் தீவிரமாக உள்ளது.

அன்றாடம் பெரும் எண்ணிக்கையில் தமிழ் மக்கள் பயன்படுத்தும் வங்கிகள், தொடர் வண்டித்துறை, நடுவண் வரி அலுவலகங்கள் ஆகியவற்றில் தமிழ் தெரியாத வெளி மாநிலத்தவர் அதிக எண்ணிக்கையில் பணியமர்த்தப்பட்டுள்ளதால் மொழிச் சிக்கலால் அடிக்கடி தகராறுகள் ஏற்படுகின்றன.

அண்மையில் சென்னைச் சூளைமேடு அஞ்சலகத்தில் “சேது” என்ற தமிழர் தமிழில் முகவரியிட்டு அளித்த விரைவஞ்சலை வாங்க மறுத்த இந்தி ஊழியர் “பிளடி தமிழில் எழுதாதே” என்று பேசி இழிவுபடுத்தினார். சேது விடாப்பிடியாகப் போராடி, தமிழ் முகவரியுடன் அக்கடிதத்தை அனுப்பியதுடன், அந்த இந்தி ஊழியரை மன்னிப்புக் கேட்கவும் வைத்துள்ளார். இதேபோல் தொடர்வண்டித்துறையில் அயல் மொழி ஊழியர்களால் தமிழ் நாட்டில் அடிக்கடி தமிழர்களுக்கு அவமதிப்பும் தகராறும் ஏற்படுகிறது.

அயல் மாநிலத்தவர்கள் அதிக எண்ணிக்கையில் நடுவண் அரசு நிறுவனங்களில் சேர்க்கப்படும் போது, மண்ணின் மக்களாகிய தமிழர்களின் வாழ்வுரிமை பறிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் அயல் இனத்தாரை இந்திய அரசுப் பணிகளில் திணிக்கிற அளவிற்கு மற்ற மாநிலங்களில் அயலார் திணிப்பு நடப்பதில்லை. இனத் தற்காப்பற்ற – கங்காணி அரசியல் தமிழ்நாட்டில் செல்வாக்குப் பெற்றிருப்பதே இவ்வாறான ஆக்கிரமிப்புகள் எளிதாக அரங்கேற வாய்ப்பளிக்கிறது.

தேவகவுடா இந்தியத் தலைமை அமைச்சராக இருந்த போது (1996 - 1997), இந்திய ஒன்றிய அரசின் தேர்வாணையத்தில் தேர்வெழுதி, பணி ஆணையுடன் வேலையில் சேர பெங்களூர்த் தலைமைக் கணக்காயர் அலுவலகம் சென்ற 18 தமிழர்களை, அங்கு பணியாற்றிய கன்னட ஊழியர்கள் விரட்டி அடித்ததை இங்கு நினைத்துப் பார்க்க வேண்டும்.

அப்போது அந்த கன்னட ஊழியர்கள், “கர்நாடகாவில் சரோஜினி மகிசி அறிக்கை செயல்பாட்டில் உள்ளது. 90 விழுக்காடு வேலை கன்னடர்களுக்குத்தான் தர வேண்டும்” என்று காரணம் கூறினர். அது போன்ற ஒரு தற்காப்பு ஏற்பாடு தமிழ்நாட்டில் இல்லை, கடைசி வரை அந்த 18 தமிழர்களுக்கும் அந்த பெங்களூர் நடுவண் அலுவலகத்தில் வேலை தரவில்லை.

இப்போது, இந்தியத் தலைமை அமைச்சர் தலையிட்டு, தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசின் ஸ்டேட் வங்கிகளில் பணியாற்றத் தேர்வு செய்துள்ள 1,420 பேர் பட்டியலைக் கைவிடச் செய்ய வேண்டும். தமிழ்நாட்டினர் மட்டுமே கலந்து கொள்ளும் நிபந்தனையுடனும் தமிழில் மட்டுமே தேர்வெழுதும் உரிமையுடனும் புதிதாக தேர்வு நடத்தித் தமிழர்களைத் தேர்வு செய்ய வேண்டும்.

அவ்வாறு செய்யவில்லை என்றால், இந்த 1,420 பேர் பட்டியலில் உள்ள வெளி மாநிலத்தவர் யாரும் வேலை செய்ய அனுமதிக்க மாட்டோம். தமிழ்த்தேசியப் பேரியக்கம் அந்த அயல் மாநிலத்தவர் வேலைக்கு அமர்த்தப்படும் ஸ்டேட் வங்கிகளில் தொடர் மறியல் போராட்டம் நடத்தும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேற்படித் தேர்வெழுதிப் புறக்கணிக்கப்பட்ட மாணவர்களும், மற்றுமுள்ள மாணவர்களும் இளைஞர்களும் தங்கள் தாயகத்தில் தங்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்கும் இந்த அறவழிப் போராட்டத்தில் திரளாகக் கலந்து கொள்ளுமாறு தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

Labels: ,


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்