<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://draft.blogger.com/navbar.g?targetBlogID\x3d6955529389241309188\x26blogName\x3d%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86.%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://thozharmaniyarasan.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com/\x26vt\x3d-8408640130511538487', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது,இந்திய அரசு திட்டவட்டம்! தேழர்பெ. மணியரசன்

Thursday, March 22, 2018





காவிரி மேலாண்மை வாரியம் 
அமைக்க முடியாது, அதிகாரமற்ற 
செயல்திட்டத்தையும் உடனே 
அமைக்க முடியாது” 
 இந்திய அரசு திட்டவட்டம்!

இந்த இனப்பாகுபாட்டை முறியடிக்க
என்ன செய்யப் போகிறோம்?

காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர்
தேழர்  பெ. மணியரசன் அறிக்கை ! 


இந்திய அரசின் நீர்வளத்துறைச் செயலாளர் யு.பி. சிங், நேற்று (21.03.2018) தில்லியில் செய்தியாளர்களிடம் பேசியபோது, “உச்ச நீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கச் சொல்லி தீர்ப்பளிக்கவில்லை; மாறாக, ‘ஒரு செயல்திட்டத்தை’ அமைக்க சொல்லியிருக்கிறது” என்று மீண்டும் கூறியுள்ளார். அச்செயல் திட்டத்தை மார்ச் 30க்குள் அமைக்க வாய்ப்பில்லை என்றும் தெளிவாகக் கூறியுள்ளார். “தொடர்புடைய அனைத்து மாநிலங்களும் ஏற்கும் ஒரு சரியான செயல் திட்டத்தை அமைக்க முடியும் என்று நம்பிக்கை இருக்கிறது” என்றும் தெரிவித்துள்ளார்.
கர்நாடக அரசு ஏற்றுக் கொள்ளும் அதிகாரமில்லாத செயல் திட்டத்தைத்தான் இந்திய அரசால் உருவாக்க முடியும் என்பதை சுற்றிவளைத்து யு.பி. சிங் தெரிவித்து விட்டார்.
காவிரித் தீர்ப்பை செயல்படுத்துவதில், கர்நாடக அரசிற்கு “இரத்து அதிகாரத்தை” (வீட்டோ) இந்திய அரசு கொடுக்க விரும்புகிறது என்பதுதான் இதன் பொருள்! உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி மாதாவாரியாகத் திறந்துவிட வேண்டிய தண்ணீரைக் கர்நாடகம், ஒருபோதும் திறக்காது என்பது இதன் பொருள்! கர்நாடகத்தின் இந்த சட்டவிரோதச் செயலை நரேந்திர மோடி அரசு ஊக்கப்படுத்துகிறது.
காவிரித் தீர்ப்பாயம் 1991இல் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பை செயல்படுத்த மறுத்தும், 2007இல் வழங்கிய இறுதித் தீர்ப்பை செயல்படுத்த மறுத்தும், 2016இல் உச்ச நீதிமன்றம் ஆணையிட்ட தண்ணீரைத் தமிழ்நாட்டுக்குத் திறந்துவிட மறுத்தும் இந்திய அரசின் துணையோடு “வெற்றி கண்ட” கர்நாடகம், இப்போது மோடி அரசின் ஆதரவுடன் உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பையும் செயல்படுத்த மறுக்கிறது.
இந்திய அரசில் காங்கிரசு ஆட்சியில் இருந்தாலும், பா.ச.க. ஆட்சியில் இருந்தாலும் அரசமைப்புச் சட்டப்படியிலான உரிமைகளை தமிழ்நாட்டிற்கு வழங்காது என்பதுதான் வரலாற்று உண்மை!
இந்தியாவுடன் தமிழ்நாடு சேர்ந்திருப்பதற்கு இந்திய அரசு தரும் பரிசு இதுதானா? நர்மதை, கோதாவரி, கிருஷ்ணா, பக்ரா பியாஸ் போன்ற ஆறுகள் பல மாநிலங்களுக்கிடையே பாய்கின்றன. அவற்றில் சிக்கல் வந்து விசாரணை அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு, தீர்ப்புகள் வந்த பின், அத்தீர்ப்புகள் இந்திய அரசால் செயல்படுத்தப்படுகின்றன.
ஆனால், தமிழ்நாட்டுக்கு மட்டும் காவிரி வழக்கில் தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பையும் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் அப்படியே செயல்படுத்த முடியாது, கர்நாடகத்தின் ஒப்புதல் பெற்றுத்தான் செயல்படுத்த முடியும் என்று இந்திய அரசு சொல்வது, தமிழர்களுக்கு எதிரான அநீதி இல்லையா? அரசமைப்பு சட்டத்தின் முன் அனைத்து மாநிலமும் சமம் என்பது தமிழ்நாட்டுக்குப் பொருந்தாது என்பது இனப்பாகுபாடு இல்லையா?
இந்தியாவில், உரிமை பறிக்கப்பட்ட - ஒதுக்கப்பட்ட இனமாக (Aparthied) தமிழர்கள் வாழ்கிறோம் என்பதைத் தமிழ்நாட்டுத் தமிழர்கள் உணர வேண்டும். உரிமை மீட்க விழித்தெழ வேண்டும்.
மார்ச் 30க்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுவது உறுதி என்று நேற்று இரவு வரை கூறிவந்த, தமிழிசை சவுந்திரராசன், வானதி சீனிவாசன் போன்ற தமிழர்களுக்கு தன் மதிப்பும் தமிழர்கள் மீது அக்கறையும் இருந்தால், அவர்கள் நடுவண் அரசின் இந்த இனப்பாகுபாட்டை எதிர்த்து, முதல் கட்டமாக பா.ச.க.வில் தாங்கள் வகிக்கும் பதவிகளிலிருந்து விலக வேண்டும்.
எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அரசு, இனியும் “காத்திருப்போம்” என்று கதையளக்காமல் அனைத்துக்கட்சிக் கூட்டத்தை உடனடியாகக் கூட்டி, இந்திய அரசின் இனப்பாகுபாட்டைக் கண்டிக்கும் வகையிலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வலியுறுத்தியும், தமிழ்நாடு தழுவிய போராட்டம் நடத்த முடிவெடுக்க வேண்டும்.
முதல் கட்டப் போராட்டமாக, குமரி முனையிலிருந்து கும்மிடிப்பூண்டிவரை இந்திய அரசின் அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களை ஒரு வார காலத்திற்கு முற்றிலுமாக முடக்கும் மக்கள் எழுச்சிப் போராட்டத்தை நடத்த முன் வர வேண்டுமென்று, ஆளுங்கட்சியான அ.இ.அ.தி.மு.க.வையும், எதிர்க்கட்சியான தி.மு.க.வையும் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

Labels:

"சிங்கள - புத்த இனவெறியர் தாக்குதல் " தமிழர்களும் முஸ்லிம்களும் கைகோக்க வேண்டும் -- தோழர் பெ.மணியரசன்

Wednesday, March 21, 2018

===================================
"சிங்கள - புத்த இனவெறியர் தாக்குதல் "
தமிழர்களும் முஸ்லிம்களும் 
கைகோக்க வேண்டும்
===================================
தோழர் பெ.மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம். 
===================================
இனவெறியாட்டம் இல்லாமல் சிங்கள - புத்த அரசியலுக்கு உயிர்ப்பில்லை. தமிழின அழிப்புப்போர் முடிந்தபின் சிங்கள - புத்த இனவெறியர்கள் பரபரப்பற்ற வெறுமையை உணர்ந்தார்கள் போலும்!

ஒரு சாலை விபத்து, கிழக்கு மாநிலமான அம்பாறையில் 22.02.2018 அன்று நடந்தது. அந்த விபத்தை உண்டாக்கியவர், ஊர்தியை ஓட்டி வந்த சிங்கள இளைஞர்! விபத்து நடந்த நேர ஆத்திரத்தில், அந்த சிங்கள இளைஞரைக் கடுமையாகத் தாக்கிவிட்டனர். தாக்கியவர்கள் முஸ்லிம்கள்! அந்த இளைஞர் கண்டி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 01.03.2018 அன்று இறந்து விட்டார்.

சிங்கள இனவெறியர்கள் - புத்த பிக்குகள் உள்ளிட்டோர் வன்முறை வெறியாட்டத்தைத் தொடங்கினர்.

தாக்கப்பட்ட சிங்கள இளைஞர் இறந்து போன செய்தியுடன், இன்னொரு கட்டுக் கதையையும் உடனடியாகப் பரப்பினர். அம்பாறை நகரில் ஒரு முசுலிம் உணவகத்தில் சிங்களருக்கும் தமிழர்களுக்கும் வழங்கும் உணவில் ஆண்மை இழக்கச் செய்யும் மருந்தைக் கலந்து தருகின்றனர் என்ற “செய்தி” காற்றின் வேகத்திற்கேற்பப் பரவும் தீ போல் பரவியது! 

அந்தக் குறிப்பிட்ட உணவக ஊழியர் ஒருவரை சிங்கள வெறியர்கள் அடித்து நொறுக்கி, “மருந்து கலந்த உணவை சிங்களர்களுக்குத் தந்தோம்” என்று பேச வைத்தனர். அக்காணொலியை ஊடகங்களில் பரப்பினர். (கர்நாடகத்தில் 2016-இல் தமிழ் மாணவர், சரக்குந்து ஓட்டி வந்த தமிழர் உள்ளிட்ட தமிழர்களைப் பிடித்து அடித்து, அரை அம்மணமாக்கி மண்டியிடச் செய்து, காவிரி கர்நாடகத்திற்குத்தான் சொந்தம் என்று சொல்ல வைத்தார்கள் அல்லவா! அதுபோல்தான்!).

மேற்கண்ட காணொலி பரவியபின் சிங்களர் வெறியாட்டம் அதிகமானது. முசுலிம்கள் பெரும்பான்மையாக வாழும் மாவனல்ல, காலி, களுத்துறை பகுதிகளில் சிங்கள இனவெறியர்களின் தீ வைப்பும் சூறையாடலும் மிக அதிகம்! அம்பாறையில் தொடங்கிய கலவரம் கண்டி வரை நீண்டது. பள்ளி வாசல்கள் எரிக்கப்பட்டன. முசுலிம் வணிக நிறுவனங்கள் சூறையாடப்பட்டன; எரிக்கப்பட்டன. தீ வைப்பில் கண்டியைச் சேர்ந்த அப்துல் பாசித் கருகி மாண்டார். 

தாக்கப்பட்ட பள்ளி வாசல்கள் 24 என்று ஒரு கணக்கெடுப்பு கூறுகிறது. பல கோடி ரூபாய் பெறுமானமுள்ள முசுலிம் மக்களின் சொத்துகள் சூறையாடப்பட்டன அல்லது எரிக்கப்பட்டன. காவல்துறையினரால் கலவரத்தை அடக்க முடியவில்லை. இராணுவம் களத்தில் இறக்கப்பட்டது. அவசர நிலைப்பிரகடனம் செய்யப்பட்டது. 

தமிழீழத்தின் கிழக்கு மாநிலத்தில் இந்த சிங்கள - புத்த இனவெறியாட்டம் நடந்தது. 

கிழக்கு மாநிலத்தில் உள்ள முசுலிம்கள் தங்களைத் தமிழர்கள் என்று கூறிக் கொள்வதில்லை. தமிழ் பேசும் முசுலிம்கள் என்று கூறுவர். தமிழ்தான் அவர்களுக்குத் தாய் மொழி! ஆனால் அவர்கள் வெளிநாட்டிலிருந்து குடியேறியவர்கள் என்றும், வரலாற்றுப் போக்கில் தமிழ் தங்கள் தாய்மொழி ஆகிவிட்டது; ஆனால் தாங்கள் தமிழர்கள் அல்லர் என்றும் கூறிக் கொள்கின்றனர். 

தமிழீழ விடுதலைப்போரில் தமிழ் பேசும் முசுலிம்கள், தமிழர்களோடு இணையவில்லை. தனித்து நின்றனர் அல்லது சிங்களர் பக்கம் நின்றனர். தமிழ் பேசும் முசுலிம்களின் அரசியல் தலைவர்கள் உறுதியாக சிங்கள அரசு பக்கம் நின்றனர். 

தமிழர் விடுதலைக் கூட்டணி 1977-இல் தமிழீழப் பிரகடனத்தை முன்நிறுத்தி தேர்தலைச் சந்தித்தபோது, அதன் பரப்புரைக்குப் பொறுப்பு வகித்தவர் எம்.எச்.எம். அஸ்ரப். ஆனால் பின்னாளில் அவர் முசுலிம்களுக்கெனத் தனிக்கட்சி தொடங்கினார். 

முசுலிம் இளைஞர்கள் பலர் சிங்களப் படையாட்களுக்குத் துணை நின்று, தமிழ் இளைஞர்கள் அழிவுக்குக் காரணமாயினர். தமிழர்களின் ஊர்களைச் சிங்களப் படையாட்கள் எரிக்கத் துணை நின்றனர் அவர்கள். இதனால் விடுதலைப்புலிகள் ஒரு சமயம் முசுலிம்களைத் தாக்கினர். வடக்கு மாநிலத்திலிருந்து முசுலிம்களை வெளியேற்றினர். 

இந்தத் தவறுகளைக்களையும் வகையில், ஒரு சார் முசுலிம் தலைவர்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே சமரச உடன்பாடு ஏற்பட்டு கூட்டறிக்கை வெளியிட்டனர். 

ஆனாலும், இன்னும் தமிழர்களுக்கும் தமிழ் பேசும் முசுலிம்களுக்கும் இடையே நல்லிணக்கம் ஏற்படவில்லை. தமிழ் பேசும் முசுலிம்களைப் பிரித்து, தனித்தரப்பாக்கி வைத்துக் கொண்டு, தமிழர் அழிப்புப் போரை நடத்தியது சிங்கள புத்த இனவெறி அரசு! இப்போது தமிழர்களைத் தனிப்பிரித்து பார்வையாளர் ஆக்கிவிட்டு, தமிழ் பேசும் முசுலிம்களைத் தாக்குகிறது, சிங்கள புத்த இனவெறிக் கும்பல்!

தமிழர்களும் தமிழ் பேசும் முசுலிம்களும் ஒன்றுபட்டால்தான், இருதரப்புக்கும் பாதுகாப்பு! இந்த உண்மையை உணர்ந்து, இக்காலத் தலைமுறையினர் இணக்கம் காண்பதே, இருதரப்பின் தற்காப்புக்கும் இன்றியமையாத் தேவையாகும்! 

தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம்
மார்ச் 16 - 31, 2018

=====================================
கண்ணோட்டம் இணைய இதழ்
=====================================
ஊடகம்:www.kannotam.com
முகநூல் : fb.com/tkannottam
=====================================
பேச: 7667077075, 98408 48594
=====================================

Labels: ,

"உள் மனத்தடைகளும் உரிமை இழப்புகளும்" -- தோழர் பெ.மணியரசன்.

Tuesday, March 20, 2018

============================================
உள் மனத்தடைகளும் உரிமை இழப்புகளும்
============================================
தோழர் பெ.மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம். 
============================================

இப்பொழுதும் நமது ஊர்ப்புறங்களில் ஒற்றையடிப் பாதைகள் இருக்கின்றன. காடுகளின் வழியாக - வேளாண் நிலங்களின் ஊடாக அந்த ஒற்றையடிப் பாதைகள் போகின்றன. 

ஓர் ஆள் மட்டுமே நடந்து செல்லக்கூடிய அகலக் குறைவான பாதை என்பதால் அதற்கு ஒற்றையடிப் பாதை என்று பெயர்! 

அந்த ஒற்றையடிப் பாதை ஒன்றில் ஒருநாள் அடுத்தடுத்து மூன்று பேர் வெவ்வேறு நேரங்களில் பயணம் சென்றனர். அப்பாதையின் நடுவில் முள்கொத்து ஒன்று கிடந்தது. 

முதலில் சென்றவர் முள் கொத்தைக் கவனிக்காமல், அதன் மீது ஏறிச் சென்றார். காலில் முள் குத்தி குருதி வந்தது. அவர் தன் காலில் குத்திய முள்ளை எடுத்து விட்டுப் பயணம் தொடர்ந்தார். அந்த முள் கொத்து அப்படியே பாதை நடுவே கிடந்தது. 

அடுத்து, அவ்வழியே வந்தவர் முள்கொத்தைப் பார்த்துவிட்டார். தன் காலில் முள் குத்தாமல் இருக்க ஒதுங்கி நடந்து சென்றார். முள்கொத்து அதே இடத்தில் கிடந்தது. 

மூன்றாவதாக வந்தவர் முன்கூட்டியே முள் கொத்தைக் கவனித்து விட்டார். அவர் முள்கொத்தின் அருகே சென்று அதை எடுத்து, அருகில் உள்ள முள்புதர் ஒன்றில் போட்டுவிட்டுப் பயணத்தை மேற்கொண்டார்.

இந்த மூன்று பேரும் நம் சமூகத்தில் இருக்கின்றனர். நாம் இவர்களில் யார் போல் இருக்க வேண்டும்? சட்டென்று, மூன்றாவது நபர் போல் இருக்க வேண்டும் என்று விடை சொல்லி விடுவோம்! ஆனால் நடை முறையில் நாம் மூன்றாவது நபர் போல் வாழ்கிறோமா? செயல்படுகிறோமா? இது அவரவரும் நெஞ்சைத் தொட்டு சொல்லிக் கொள்ள வேண்டிய விடை!

ஒரு திருமண மண்டபத்தில் உணவருந்தியவர்கள் கை கழுவுமிடத்தில் பல குழாய்களில் பலர் கை கழுவிக் கொண்டிருந்தினர். நீர் வழியும் தொட்டியில் அடைப்பு ஏற்பட்டு, கழுவிய நீர் கீழே குழாயில் வடியாமல் தொட்டி நிரம்பிவிட்டது. நிரம்பிய தொட்டி நீர், வெளியில் வடியும் நிலை. அப்போதும் தங்களுக்குச் சிக்கல் இல்லாமல் சிலர் இலேசாக நீர் திறந்து கழுவிச் சென்றனர். ஒருவர் மட்டும் கையை உள்ளே விட்டு, தொட்டியின் அடைப்பை நீக்கினார். கணநேரத்தில் தொட்டி வற்றிவிட்டது. அவர் தன் கையை, அருகில் இருந்த சோப்பினால் நன்கு கழுவி தூய்மைப்படுத்திக் கொண்டார். அவர் கை நாறவில்லை. அவர் கை புண்ணாகவில்லை. அவர் கை புனிதப்பட்டது!

காவிரி ஆற்று நீரில் சட்டப்படியுள்ள தமிழ்நாட்டின் உரிமையை மறுத்துக் கர்நாடக அரசு வன்மத்துடன் செயல்படுகிறது. தமிழர்களுக்கெதிராக கர்நாடகத்தில் வன்முறை வெறியாட்டங்கள் தொடர்கின்றன.

இந்திய அரசில் காங்கிரசு இருந்தாலும் பா.ச.க. இருந்தாலும் அது தமிழர்களுக்கெதிராக வஞ்சகத்துடன் செயல்பட்டு, நமது காவிரி உரிமையை மறுத்து வருகிறது. சட்டப்படி இந்திய அரசால் அமைக்கப்பட்ட மூன்று நீதிபதிகளைக் கொண்ட தீர்ப்பாயம் 1991 - இல் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பையும், 2007 - இல் வழங்கிய இறுதித் தீர்ப்பையும் செயல்படுத்த மறுக்கிறார்கள் இந்திய ஆட்சியாளர்கள்!

இனப்பாகுபாட்டின் எல்லைக்கே சென்று இந்திய பா.ச.க. ஆட்சியும், உச்ச நீதிமன்றமும் மறைமுகக் கூட்டணி வைத்துக்கொண்டு, நடுநிலை தவறிய தீர்ப்பொன்றை 16.02.2018 அன்று வழங்கியது.

“உலக நகரம் பெங்களூர்” என்று உச்ச நீதிமன்றம் வர்ணித்து, அதன் முழுத் தண்ணீர்த் தேவைக்கும் காவிரித் தண்ணீர் வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. அதற்காகத் தமிழ்நாட்டின் பங்கு நீரில் இருந்து 4.75 ஆ.மி.க. எடுத்து கர்நாடகத்திற்கு வழங்கியது. ஆனால் பெங்களூரைவிட எல்லா வகையிலும் பெரிய நகரம் சென்னை என்றும் அதன் குடிநீர்த் தேவைக்குக் காவிரி நீர் வேண்டும் என்றும் தமிழ்நாட்டுத் தரப்பு வழக்கறிஞர்கள் எடுத்துவைத்த வாதத்தை ஏற்கவில்லை உச்ச நீதிமன்றம்.

கர்நாடகத்தில் காவிரிப் படுகைக்கு வெளியே உள்ள 28 மாவட்டங்களில் வறட்சி ஏற்படுகிறது என்று கூறி, தமிழ்நாட்டின் பங்கிலிருந்து 10 ஆ.மி.க. தண்ணீரை எடுத்துக் கர்நாடகத்திற்கு வழங்கியது தீபக் மிஸ்ரா ஆயம்! தமிழ்நாட்டில் காவிரிப் படுகைக்கு வெளியே பல மாவட்டங்கள் தொடர்ந்து வறட்சி மாவட்டங்களாக வாடுகின்றன! அவற்றை ஏன் உச்ச நீதிமன்றம் கணக்கில் கொள்ளவில்லை?

காவிரித் தீர்ப்பாயம் தமிழ்நாட்டின் பங்கு நீரை மிகவும் குறைத்து 192 ஆ.மி.க. என்று இறுதித் தீர்ப்பில் வழங்கியதிலும் 14.75 ஆ.மி.க.வைப் பறித்துத் தமிழ்நாட்டின் பங்கு நீரை 177.25 ஆ.மி.க. ஆக்கிவிட்டது உச்ச நீதிமன்றம்! 

இந்த்த் தீர்ப்பும் 15 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அதன்பிறகு? 

உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் இவ்வளவு பாதகங்கள் இருந்தபோதும் - இதனைத் தமிழ்நாட்டு விவசாயிகள் சங்கங்கள் வரவேற்றனவே அது எப்படி? தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் இந்த பாதகங்கள் பற்றி வாய்த் திறக்க மறுத்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் போதும் என்று அறிக்கைப் பந்தயத்தில் இறங்கினவே அது எப்படி?

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு நடுநிலை தவறிய ஒருதலைச் சார்பானது; தமிழ்நாட்டிற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்று தீர்ப்பு வந்த 16.02.2018 முற்பகலில் இருந்தே தமிழ்த்தேசியப் பேரியக்கம் - காவிரி உரிமை மீட்புக் குழு ஆகியவற்றின் சார்பில் ஊடகங்களில் நான் கருத்துகள் கூறி வந்தேன்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் பாதகங்களைத் திருவாளர்கள் வைகோ, தி. வேல்முருகன் போன்ற கட்சித் தலைவர்கள் கடுமையாக எதிர்த்தனர். ஆனால் ஆளும் அ.தி.மு.க.வோ, அரசின் ஏற்பிசைவு பெற்ற எதிர்கட்சியான தி.மு.க.வோ உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் தமிழ்நாட்டிற்கேற்பட்ட இழப்புகளையும் பாதகங்களையும் முதன்மைப்படுத்தி எதிர்க்கவில்லை. “இதையாவது செயல்படுத்த வேண்டும்” என்று கோரிக்கை வைத்தனர்.

தமிழ்நாட்டு விவசாயிகள் சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள், தமிழ்நாட்டின் ஆட்சி ஆகியவற்றின் “தற்காப்பு ஆற்றல்”, “தன்மான உணர்வு”, “எதிர்காலத் தலை முறையின் மீதான அக்கறை” முதலியவற்றின் “தரத்தை”ப் புரிந்துகொண்ட கர்நாடக அரசும், கர்நாடகக் கட்சிகளும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அனுமதிக்க மாட்டோம் என்று கொக்கரிக்கத் தொடங்கின.

வரலாறு நெடுகத் தமிழர்களுக்கு எதிராக வடவர்கள் கக்கி வந்த ஆரிய நஞ்சை நெஞ்சில் நிறைத்துக் கொண்டுள்ள இந்திய ஆட்சியாளர்கள், உச்ச நீதிமன்றத் தீர்ப்பு காவிரி மேலாண்மை வாரியம் அமைந்திடக் கூறவில்லை; ஏதாவதொரு செயல்திட்டம் (கி ஷிநீலீமீனீமீ) அமைக்க வேண்டுமென்று கூறியுள்ளது என்று திசை திருப்பினர். தமிழ்நாடு உள்ளிட்ட நான்கு மாநிலத் தலைமைச் செயலாளர்களைச் கூட்டித் தில்லியில் இதனை அறிவித்தனர் (09.03.2018).

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலும் முதன்மை எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலையிலும் நடந்த அனைத்துக்கட்சி கூட்டம் (22.02.2018) ஒரு மனமாக நிறைவேற்றிய தீர்மானம் உச்ச நீதிமன்றம் தமிழ்நாட்டிற்கிழைத்த அநீதிகளைச் சுட்டிக் காட்டவில்லை. அத்தீர்ப்பினால் ஏற்பட்டுள்ள பேரிழப்பு களைப் பற்றிப் பேசவில்லை! 

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு கர்நாடகத்தின் பங்கு நீரில் ஐந்து ஆ.மி.க. குறைத்திருந்தால் - கர்நாடகம் இந்நேரம் போர்க்களமாகி இருக்கும்! நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவராய், கன்வில்கர் ஆகியோர் கொடும் பாவிகளை வீதிக்கு வீதி சந்துக்கு சந்து எரித்து சாம்பலாக்கிக் கொண்டிருப்பார்கள். தமிழர்களைத் தாக்கியிருப்பார்கள்; தமிழர்களின் வணிக நிறுவனங்களைச் சூறையாடியிருப் பார்கள். தமிழ்நாட்டு அரசு மற்றும் தனியார் ஊர்திகளை எரித்துச் சாம்பலாக்கியிருப்பார்கள்.

இவையெல்லாம் நம் மிகைக் கற்பனைகள் அல்ல! 1991 டிசம்பரிலும் 2016-லும் நடந்தவைதான்!

கன்னடர்கள் தமிழர்களுக்கு எதிராக நடத்திவரும் கொலைகளையும், வன்முறை வெறியாட்டங்களையும் தமிழ்நாட்டில் கன்னடர்களுக்கு எதிராகச் செய்யுங்கள் என்று நாம் கூறவில்லை.

உச்ச நீதிமன்றமும் இந்திய அரசும் காவிரியில் சட்டத்திற்குப் புறப்பாக தமிழ்நாட்டின் உரிமைகளுக் கெதிராக இழைத்துவரும் அநீதிகளை எதிர்த்து அறவழியில் - சனநாயக முறையில் மாபெரும் மக்கள் எழுச்சி தமிழ்நாட்டில் எழவில்லையே ஏன்?

போராட்டம் இல்லையென்றாலும் உரிமைக்குரல் உரியவாறு ஒலிக்கவில்லையே, ஏன்? “இதையாவது கொடு” என்று கையேந்தி நிற்கிறார்களே நம் மக்கள்! ஏன்?

தங்கள் உரிமைக்காக மக்கள் எழுச்சி கொள்ளாததற்குப் பின்வரும் காரணங்களைக் கூறலாம்.

1. அடைய வேண்டிய இலக்காகப் பதவி நாற்காலிகளை ஆக்கிக்கொண்ட அரசியல் தலைவர்கள் - தமிழ்நாட்டு மக்களின் வாழ்வுரிமைகளைக் காக்கவும் மீட்கவும் உறுதியான போராட்டங்களை முன்னெடுப்ப தில்லை. உரிமை மீட்பு உணர்ச்சியில் மக்கள் தீவிரம் கொள்ளாமல் இந்தத் தலைவர்கள் பார்த்துக் கொண்டார்கள்.

உரிமை உணர்ச்சி மக்களிடம் பீறிட்டால் - உண்மையான இலட்சியங்களை நோக்கி மக்கள் முன்னேறுவார்கள். தலைமை, தங்கள் கையைவிட்டுப் போய் விடும் என்று அச்சப்பட்டார்கள் தலைவர்கள். இந்த நிலை, கடந்த காலத்திலும் இருந்தது. இப்போதும் தொடர்கிறது!

2. மக்களிடையே உரிமைக்கான எழுச்சியின்மை, செயலின்மை ஆகியவற்றிற்குப் பல காரணங்கள் இருக் கின்றன. 

முதல் காரணம், முன் முயற்சி எடுக்கத் தயங்குவது! அரசியல் தலைமைகள், மண்ணின் மக்களை - ‘குடிமக்கள்’ என்ற உரிமை உணர்ச்சியற்றவர்களாய் - அரசிடம் இலவசங்களை எதிர்பார்க்கும் ‘பயனாளி’களாய் மாற்றியுள்ளன.

ஊடக வெளிச்சத்தில் பளப்பளப்புக் காட்டும் அடையாளப் போராட்டங்களில் பங்கெடுத்தால் போதும் என்ற மனநிலை மக்களிடம் வளர்ந்தது. காலப்போக்கில் களப் போராட்டங்களில் கலந்து கொள்வதிலும் மக்களின் ஆர்வம் குறைந்தது. 

பணம், பாட்டில், பிரியாணி என்ற முப்பெரும் கவர்ச்சி காட்டி மக்களைக் கூட்டங்களுக்கு அழைக்கும் பழக்கத்தைக் கட்சிகள் உண்டாக்கிவிட்டன.

இந்த முப்பெரும் கவர்ச்சிகளுக்கு ஆட்படாத மக்களிடம் எழுச்சி வராதது ஏன்? 

1. புகைப்பிடிப்பவர்களிடையே தொடர்ந்து பழகினால் புகைப்பிடிக்காதவரும் அதனால் பாதிக்கப்படு வார்கள் அல்லவா! அதுபோல் தமிழ்நாட்டின் பொது மனநிலை பாதிக்கப்பட்டபோது, நல்லவர்களும் துணிச்சல் இழக்கிறார்கள்; முன்முயற்சி இழக்கிறார்கள்.

2. உரிமை இலட்சியங்கள் - கோரிக்கைகள் பற்றிப் பேசினால், உடனே இந்த நல்லவர்கள் இது சாத்தியமா என்று கேள்வி கேட்பார்கள்.

நமது இலட்சியம் தவிர்க்க முடியாத தேவையா, சரியானதா என்று சிந்திக்காமல் சாத்தியமா என்று சிந்திப்பார்கள். தமிழ்நாட்டின் தவிர்க்க முடியாத தேவையாக உள்ள காவிரி உரிமை மீட்பு போன்ற ஒரு கோரிக்கையை முன்வைக்கும் போது அது சாத்தியமா என்று ஒருவர் சிந்தித்தால் - அவர் முன்முயற்சி எடுக்கத் தயங்குபவர் - என்று தெரிகிறது.

படைவலிமை மிக்க பிரித்தானிய காலனி ஆட்சியை இந்தியாவிலிருந்து வெளியேற்றுவது சாத்தியமா என்று தான் அக்காலத்தில் மக்களில் பலர் பரவலாகக் கேட்டார்கள். அரசியல் தலைமையும் மக்களும் போராடி வெள்ளை அரசை வெளியேற்றினார்கள் அல்லவா!

இந்திய அரசையும் தமிழ்நாடு அரசையும் எதிர்த்துப் போராடி நெடுவாசலில் ஓ.என்.ஜி.சி.யை வெளியேற்ற முடியுமா என்று சிலர் கேட்டார்கள். அந்த கிராம மக்கள் துணிந்து போராடினார்கள். மற்ற கிராமங்களும் மக்களும் பல்வேறு அமைப்பினரும் நெடுவாசல் மக்களுக்கு ஆதரவாகத் திரண்டார்கள். இதுவரை ஓ.என். ஜி.சி. அங்கு நுழைய முடியவில்லை. கொங்கு மண்டலத்தில் விளைநிலங்களில் கெயில் குழாய்கள் புதைக்கப்படாமல் தடுத்தது, திருவண்ணாமலைப் பகுதியில் கவுத்திமலை - வேடியப்பன் மலை ஆகியவற்றை வடக்கிந்தியப் பெருங்குழுமங்களின் வேட்டையிலிருந்து பாதுகாத்தது, ஏறுதழுவுதல் என்ற சல்லிக்கட்டு உரிமையை மீட்டது என மக்கள் ஆற்றல் - சாதனை களைப் படைத்துதான் வருகிறது.

“சாத்தியமா?” என்று கேட்டுக் கொண்டிருந்தால் எதுவும் சாத்தியமாகாது!

“இதையாவது கொடு” என்று உரிமை பறித்தவனிடம் கேட்டால் அவன் எதையும் கொடுக்கமாட்டான்!

அப்படித்தான் காவிரி உரிமைப் போராட்டத்தில் நாம் தொடர்ந்து இழந்து வருகிறோம்.

1934 - இல் மேட்டூர் அணை திறந்ததிலிருந்து 1984 வரை ஓர் ஆண்டிற்கு சராசரியாக 361.5 ஆ.மி.க. தண்ணீர் கர்நாடகத்திலிருந்து வந்தது. அது 1991இல் தீர்ப்பாயத்தின் இடைக்கால தீர்ப்பில் 205 ஆ.மி.க. ஆனது. அது தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பில் 192 ஆ.மி.க. ஆனது. அது உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் 177.25 ஆ.மி.க. ஆனது. இதுவும் உறுதியில்லை என்னும் வகையில், தீர்ப்பாயம் சொன்ன காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது - ஏதோ ஒரு செயல் திட்டம் அமைப்போம் என்கிறது நடுவண் அரசு! ஏன் இந்த வீழ்ச்சி?

தமிழ் மக்கள் தமிழ்நாட்டுக் கட்சிகளை நம்பி ஏமாந்தது ஒரு பக்கம். இன்னொரு பக்கம் ஒவ்வொரு தடவையும் இதையாவது கொடு என்று நம் மக்கள் கெஞ்சியது!

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அக்குவேறு ஆணி வேறாகப் பிரித்துப் போட்டு அது இழைத்துள்ள அநீதியை நாம் விளக்கியுள்ளோம்.

உச்ச நீதிமன்றம் இழைத்துள்ள அநீதியைப் போக்கி - நீதியைப் பெற காவிரி வழக்கிற்கு ஏழு அல்லது ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசமைப்பு ஆயம் அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசும் கட்சிகளும் மக்களும் கோர வேண்டும் என்றோம். இதற்கான முன்னெடுத்துக் காட்டாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பின் முல்லைப் பெரியாறு வழக்கில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு ஆயம் அமைக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டதை எடுத்துக்காட்டினோம். அ.தி.மு.க., தி.மு.க., கட்சிகள் இதுபோன்ற சரியான கோரிக்கை வைக்கவில்லை. மற்ற விவசாய சங்கங்களும் இதுபோன்ற கோரிக்கையை வைக்கவில்லை.

எனவே இவ்வளவுதான் தமிழ்நாடு என்று புரிந்து கொண்ட இந்திய அரசின் தலைமை அமைச்சர் மோடி, தமிழ்நாடு முதல்வரின் தலைமையில் வரும் அனைத்துக் கட்சிக் குழுவைக்கூட சந்திக்க மறுத்து விட்டார். கடைசியில் ‘காவிரி மேலாண்மை வாரியம் என்பது தீர்ப்பில் இல்லை; ஏதோ ஒரு செயல் திட்டம் என்றுதான் உள்ளது. அப்படித்தான் அமைப்போம்’ என்கிறது மோடி அரசு!

கடந்த காலங்களில் அதிகாரம் இல்லாமல் அமைக்கப் பட்ட காவிரி ஆணைக்குழு (Cauvery Authority), காவிரி கண்காணிப்புக் குழு (Cauvery Monitoring Committee) போல் ஏதோ ஒரு செயல் திட்டம் அமைப்பதாகச் சொல்கிறது.

தமிழர்களே, உழவர்களே இந்தக் கட்டத்திலாவது சிந்தியுங்கள்! 

“இதையாவது கொடு” என்று கெஞ்சுவதை விட்டொழியுங்கள்; உரிமைக்குரலை உரத்து முழங்குங்கள்!

தமிழ்நாட்டில் கடலில் போய் வீணாக ஆயிரக்கணக்கான ஆ.மி.க. தண்ணீர் விழுவதாகவும் அதைத் தேக்கிட ஏரி, குளங்களை ஆழப்படுத்தி புதிய நீர்த் தேக்கங்களைக் கட்டினால் கர்நாடகத்திடம் கையேந்திட வேண்டியதில்லை என்றும் சிலர் கதையளக்கிறார்கள். களத்தில் இறங்காமல் திசைமாற்றிவிட சிலர் இப்படி கயிறு திரிக்கிறார்கள்.

தமிழ்நாடு மழை மறைவு மண்டலம்! தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய மேகங்களை மேற்குத் தொடர்ச்சி மலைகள் தடுப்பதால், கேரளத்திலும், கர்நாடகத்திலும் பெருமழை கொட்டுகிறது. தமிழ்நாட்டில் காவிரி மண்டலத்தில் கடலில் போய்க் கலக்கும் மழை நீர் கடலில் மிகமிகக் குறைவு! 

காவிரி, பூம்புகாரில் போய் கலப்பது பத்தாண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் அதிசயம் ஆகிவிட்டது. அதுவும் அதிகம் போனால் 20 ஆ.மி.க. இருக்கும்! தாமிர பரணியில் எப்போது வெள்ளம் போய் கடலில் கலந்தது? வைகை கடலுக்கே போவதில்லை. தென்பெண்ணை, பாலாறு, போன்றவற்றில் தண்ணீர் பார்ப்பதே அரிது!

தமிழ்நாட்டில் தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவமழை பொய்க்காமல் பெய்தால் அதிக அளவாக 950 மில்லி மீட்டர் பெய்யும்! கேரளத்தின் சராசரி மழை 3,055 மில்லி மீட்டர்! கர்நாடகத்தின் சராசரி மழை 1,248 மில்லி மீட்டர்! கடலோரக் கர்நாடகத்தில் சராசரி மழை 3,456 மில்லி மீட்டர்! இதில் கணிசமான நீர் அரபிக் கடலில் கலக்கிறது! 

நர்மதை, கோதாவரி, கிருஷ்ணா போன்ற ஆறுகள் பல மாநிலங்களுக்குக்கிடையே ஓடலாம். அவற்றிற்கான தீர்ப்புகள் செயல்படலாம். தமிழ்நாட்டிற்கு மட்டும் காவிரி வராதா? கர்நாடகம் பிச்சை போட வேண்டுமா என்ற உரிமை உணர்வு ஒவ்வொரு தமிழனுக்கும் தமிழச்சிக்கும் வேண்டும்!

“நல்லது நடக்க வேண்டும்; அதற்காக நாம் போராடி சிக்கலில் மாட்டிக் கொள்ளக் கூடாது” என்று சிலர் நினைக்கிறார்கள். இது தன்னலவாதமில்லையா? கோழைத்தனம் இல்லையா? நாம் ஒரு மறியலுக்கோ, முற்றுகைக்கோ அழைத்தால் சிலரிடம் இருந்து எப்படிப்பட்ட கேள்விகள் வருகின்றன?

கைது இருக்குமா? கைது செய்தால் மாலையில் விட்டுவிடுவார்களா?

இப்போது மறியல், முற்றுகை, ஆர்ப்பாட்டம் போன்ற போராட்டங்களில் கலந்த கொண்டதற்காக ஆண்டுக் கணக்கில் அல்ல, மாதக்கணக்கில் சிறையில் கிடப்போர் யார்? குண்டர் சட்டம், தேசியப் பாதுகாப்புச் சட்டங்கள் ஏவப்படுகின்றன. யார் மீது? போராட்டங்களை ஒருங்கிணைக்கும் சிலர் மீது! அதைத் தாங்கி வெளிவரும் ஆற்றல் அந்த ஒருங்கிணைப்பாளர்க்கு இருக்கிறது!

பத்து நாள் - பதினைந்து நாள் சிறையிலிருந்தால் எதிர்காலமே இருண்டு விடுமா? குடும்பமே நாசமாகி விடுமா? உள்மனத்தில் சிறை பற்றி ஏன் இந்த பீதி? தமிழினத்தின் உரிமைக்காக சிறை செல்வது பெருமை இல்லையா?

நமக்காக யாரோ ஒரு கதாநாயகன் வந்து தமிழ்நாட்டு ஆட்சியைப் பிடித்து, எல்லா மாற்றங்களையும் கொண்டு வருவார் என்பதைக் காட்டிலும் ஏமாளித்தனம் - கோழைத்தனம் வேறு உண்டா? 1967லிருந்து ஆட்சி மாற்றங்கள் நடந்து கொண்டுதான் உள்ளன. தலைமையில் ஆள் மாற்றங்கள் நடந்து கொண்டுதான் உள்ளன. காவிரி, கச்சத்தீவு, பாலாறு, தென்பெண்ணை, பவானி உரிமைகள் பறிபோய்க் கொண்டுதான் உள்ளன! ஏன்? உரிமைகளைக் காக்கவும், மீட்கவும் மக்கள் எழுச்சி இல்லாததால்! மக்களிடமும் விழிப்புணர்வு போதிய அளவு இல்லாதது, தமிழ்நாட்டுக் கட்சிகளுக்கும் வசதியாய்ப் போய்விட்டது! 

கடவுள் அவதாரங்களே போராடித்தான் நீதியை வெல்லச் செய்தன! அறிவுரை கூறி அல்ல! துரியோதனனிடம் கண்ணன் அறிவுரை எடுபட்டதா? இல்லை! குருச்சேத்திரப் போரில் அர்ச்சுனனுக்குத் தேரோட்டித் தான் கண்ணனால் ‘நீதி’யை வென்றெடுக்க முடிந்தது. தன் மனைவி சீதையை அனுப்பிவிடச் சொல்லி இராவணனிடம் அனுமனை அனுப்பிய இராமன் முயற்சி வென்றதா? இல்லை! இராமாவதாரம் போரிட்டுத்தான் தன் மனைவியை மீட்க முடிந்தது. 

சிலுவையில் அறையப் போவது அறிவிக்கப்பட்ட பின்னும், ஏசு மன்னனிடம் மன்னிப்புக் கேட்கவில்லை! நபிகள் நாயகம் படைதிரட்டிச் சென்றுதான் மெக்காவை மீட்க முடிந்தது! 

இவற்றையெல்லாம் படிப்போம்; இவற்றையெல்லாம் போற்றுவோம்; வழிபடுவோம் ஆனால் நாம் நம் கால உரிமைகளுக்காக - சனநாயகப் போராட்டங்களில் பங்கு பெறக் கூடாது; போராட்டங்களைத் தவிர்ப்பதற்கான பொன்மொழிகளை உருவாக்கிக் கொள்வோம் என்றால் என்ன பொருள்? 

அரசாங்கம் போட்ட சட்டத்தையும், திட்டத்தையும் நம்மால் மாற்றிவிட முடியுமா என்று கூறி தனது பல வீனத்தை மறைத்துக் கொள்வது என்ன ஞாயம்? மக்கள் போராட்டங்கள் எத்தனையோ சட்டங்களை மாற்றியுள்ளன. புதிய சட்டங்களை இயற்றச் செய்துள்ளன. உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி அவர்கள் தலைமையில் நடந்த உழவர்கள் எழுச்சி யினால்தான், வேளாண் பணிகளுக்கு இலவச மின்சாரம் கிடைத்தது. விவசாயிகளின் கலந்தாய்வுக் கூட்டங்களை மாதந்தோறும் மாவட்ட ஆட்சியர் நிலை உருவானது. 

அரசியலுக்கு வராத நிலையில், அன்னா அசாரேவும், கெஜ்ரிவாலும் மக்களைத் திரட்டிப் போராடியதால்தான் ஆட்சியாளர்களின் ஊழல்களை விசாரித்துத் தண்டிப்பதற்கான லோக்பால் சட்டம் இயற்றப்பட்டது. 

இப்படிப்பட்ட அவ நம்பிக்கையாளர்கள் ஒரு பக்கம் இருந்தாலும், இவற்றையெல்லாம் மீறி காவிரி உரிமை மீட்க, பயிர்க்காப்பீட்டுத் தொகை பெற்றிட, ஓ.என்.ஜி.சியை விரட்டியடிக்க நடக்கும் போராட்டங்களில் நம் உழவர்களும் இளையோரும் திரளாகப் பங்கு கொள்கின்றனர். 

நம் உரிமைகளைக் காக்கவும் மீட்கவும் இதுவரை சனநாயகப் போராட்டங்களில் கலந்து கொள்ளாதவர்கள், இனி ஊக்கத்தோடு கலந்து கொள்ளுங்கள்! வரலாறு மாறிக் கொண்டிருக்கிறது. வரலாறு முன்னேறிக் கொண்டிருக்கிறது. தமிழர்களாகிய நாம் பின் தங்கிவிடக் கூடாது. நம் முன்னோர்கள் போர்க்குணத்தின் சின்னமாய் விளங்கியவர்கள்!

தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம்
மார்ச் 16 - 31, 2018

Labels: ,

"முள்ளிவாய்க்கால் முற்றத்தின் அடித்தளமாக நிலைத்தவர் ம. நடராசன்" - பெ. மணியரசன் இரங்கல் !


"முள்ளிவாய்க்கால் முற்றத்தின் 
அடித்தளமாக நிலைத்தவர் ம. நடராசன்"
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை!
1965 மொழிப் போர் தலைவர்களில் ஒருவரும் 'புதிய பார்வை' ஆசிரியருமான திரு. ம. நடராசன் அவர்கள் காலமான செய்தி அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
1965இல் இந்தித் திணிப்பை எதிர்த்து தமிழ்நாட்டில் நடந்த உலகத்தில் ஒப்புமை காட்ட முடியாத வரலாற்றுச் சிறப்புமிக்க மொழிப் போரின் மாணவத் தலைவர்களில் திரு. நடராசனும் ஒருவர்.
நான் அப்போது திருக்காட்டுப்பள்ளி சர் சிவசாமி ஐயர் உயர்நிலைப்பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வந்தேன். எங்கள் பள்ளியின் இந்தி எதிர்ப்புப் போராட்டக் குழுவின் செயலாளராக நான் இருந்தேன்.
1965 சனவரி 25 அன்று இந்தித் திணிப்பை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் நடந்த மாணவர் பேரணிகளில் ஒன்றாக, அன்று தஞ்சை நகரில் மாபெரும் மாணவர் பேரணி நடந்தது. அப்பேரணி ஏற்பாட்டாளர்களில் நடராசன் ஒருவர்! நான் அந்த பேரணியில் கலந்து கொண்டேன்.
மயிலாடுதுறை மன்னம்பந்தல் அ.வ.அ. ( ஏ.வி.சி. ) கல்லூரியில் இளங்கலை படித்துக் கொண்டிருந்த மாணவர் சாரங்கபாணி, இந்தித் திணிப்பை எதிர்த்து கல்லூரி வாயிலில் தீக்குளித்து இறந்தார். அவருக்கு வீரவணக்கம் செலுத்தவும் அவரது குடும்பத்தினருக்கு நிதி உதவி செய்யவும் தஞ்சை திலகர் திடலில் மாபெரும் மாணவர் கூட்டம் நடந்தது.
சாரங்கபாணி குடும்பத்தினருக்கு நிதி உதவி செய்வதற்கு திருக்காட்டுப்பள்ளி மாணவர்கள் திரட்டிய ஒரு சிறு தொகையை நான் கொண்டு வந்து திரு. நடராசன் அவர்களிடம் கொடுத்தேன். அப்போது அவர் பச்சை மையில் எழுதி கையெழுத்துப் போட்டு அதற்கான ரசீதை என்னிடம் கொடுத்தார்.
திரு. நடராசன் அவர்கள் பல தமிழ்ப் பணிகள் ஆற்றினார். அவருடைய மிகப்பெரும் தமிழினப் பணியாக - முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தைக் குறிப்பிடலாம்.
இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் துணையுடன் சிங்கள பெளத்த இனவெறி அரசு ஈழத்தமிழர்களுக்கு எதிரான இன அழிப்புப் போரை நடத்தியது. அதில் உயிரிழந்த ஈழத்தமிழர்கள் மற்றும் தமிழீழ விடுதலைக் களத்தில் போராடி ஈகியரான விடுதலைப்புலிகள் ஆகியோர்க்கான மிகச்சிறந்த நினைவகம் - தஞ்சையில் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் ஐயா பழ.நெடுமாறன் அவர்களின் பெரு முயற்சியால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவகம் உலகம் முழுவதிலுமுள்ள தமிழர்கள் வந்து பார்க்கவும் வணங்கவுமான தமிழர் அடையாளச் சின்னமாய் விளங்குகிறது.
இந்த நினைவகத்தின் அடித்தளமாக திரு. ம. நடராசன் அவர்கள் இருக்கிறார்கள். அவர் அன்பளிப்பாக கொடுத்த நிலத்தில்தான் நினைவகம் அமைந்துள்ளது.
அதுமட்டுமின்றி அங்குள்ள ஒவ்வொரு கட்டுமானத்திலும் ம. நடராசன் பங்களிப்பு இருக்கிறது. ஆண்டுதோறும் பொங்கல் நாளில் தஞ்சையில் 3 நாள் தொடர்ந்து தமிழர் பண்பாட்டு விழா நடத்தி வந்தார்.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பின்னும் நன்கு இயங்கி வந்த நடராசன் அவர்கள், திடிரென்று நோய்வாய்ப்பட்டு காலமான செய்தி அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
ஐயா நடராசன் அவர்களுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வீரவணக்கம் தெரிவித்துக் கொள்கிறேன்.

Labels:

"காவிரி: உச்ச நீதிமன்றமும் நடுவண் அரசும் தமிழ்நாட்டு முதுகில் குத்திவிட்டன!" -- தோழர் பெ. மணியரசன் அறிக்கை !

Saturday, March 10, 2018

============================================
காவிரி: உச்ச நீதிமன்றமும் நடுவண் அரசும்
தமிழ்நாட்டு முதுகில் குத்திவிட்டன!
============================================
காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர்
தோழர் பெ. மணியரசன் அறிக்கை ! 
============================================

தமிழர்களின் காவிரி உரிமை மீட்பு முயற்சியில், இந்திய அரசும் உச்ச நீதிமன்றமும் ஒன்றாகச் சேர்ந்து தமிழ்நாட்டின் முதுகில் குத்திவிட்டன; ஐம்பதாண்டுகளாகத் தமிழ்நாட்டில் கோலோச்சும் தி.மு.க.வும், அ.இ.அ.தி.மு.க.வும் தமிழ்நாட்டின் மார்பில் குத்திவிட்டன. 

“உச்ச நீதிமன்றம் 16.2.2018 அன்று வழங்கிய தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் – காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை அமைக்கக் கட்டளை இடவில்லை; ஏதோ “ஒரு செயல்திட்டம்” அமைக்கத்தான் கட்டளை இட்டுள்ளது” என்று நடுவண் அரசின் நீர்வளத்துறைச் செயலாளர் யு.பி. சிங் நேற்று (09.03.2018) பிற்பகல் தில்லியில் செய்தியாளர்களிடம் அறிவித்துள்ளார். தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் கூட்டத்தில் நேற்று விவாதித்தபின் யு.பி. சிங் இவ்வாறு கூறியுள்ளார். 

இக்கூட்ட முடிவில் செய்தியாளர்கள் சந்திப்பில், செய்தியாளர் கேட்ட வினாக்களுக்கு விடை அளித்த யு.பி. சிங், “நாங்கள் புது வகையான ஒரு செயல்திட்டத்தை உருவாக்க முயல்வோம்; அச் செயல் திட்டத்தை உச்ச நீதிமன்றம் சொன்னபடி ஆறு வாரங்களுக்குள் அமைக்க முடியாது; இனிமேல்தான் அப்பணியைத் தொடங்க வேண்டும். காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கூறியிருப்பதுகூட ஒரு பரிந்துரைதானே தவிர – கட்டளை அல்ல” என்றார். நடுவண் அரசு விரும்புகின்ற “செயல்திட்டத்தை” கூட உச்ச நீதிமன்றம் விதித்த ஆறு வார காலக்கெடுவுக்குள் அமைக்க முடியாது என்கிறது நடுவண் அரசு!

காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பில் கூறியுள்ளபடி காவிரி மேலாண்மை வாரியம், அதன்கீழ் ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை அமைத்தால், உச்ச நீதிமன்றம் குறைத்து வழங்கியுள்ள 177.25 ஆ.மி.க. (டி.எம்.சி.) தண்ணீரும் தமிழ்நாட்டிற்குக் கிடைத்துவிடுமே என்று கவலைப்பட்டுள்ளது நரேந்திர மோடி அரசு! 

வரிகளுக்கிடையே படித்து, தோண்டித் துருவிக் கண்டுபிடித்து, உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் “ஒரு செயல் திட்டம் அமைக்கும்படி கூறப்பட்டுள்ளது; காவிரி மேலாண்மை வாரியம் என்று பெயர் குறிப்பிட்டுக் கூறவில்லை” என்று நடுவண் அரசு இப்போது கூறுகிறது. அந்த “ஒரு செயல்திட்டம்” எப்படி இருக்க வேண்டும் என்று நான்கு மாநிலங்களும் தனித்தனியே கருத்துகள் வழங்குங்கள் என்று கேட்கிறது மோடி அரசு!

நடுவண் அரசின் நீர்வளத்துறைச் செயலாளர் கூறிய “ஏதோ ஒரு செயல்திட்டம்” என்ற விளக்கம் கர்நாடக அரசு கூறிய விளக்கம்தான்! 

“கர்நாடகத்தின் வன்முறைகள் வளர்க! கர்நாடகத்தின் சட்ட மீறல்கள் வாழ்க! கர்நாடகத்தின் இனவெறி ஓங்குக!” என்று நடுவண் அரசும் உச்ச நீதிமன்றமும் முழக்கம் போடுவதுபோல்தான் நம் காதுகளில் ஒலிக்கிறது! 

தமிழர்களுக்கெதிரான கர்நாடகத்தின் இனவெறிச் செயல்களையும், இந்திய அரசின் (காங்கிரசு மற்றும் பா.ச.க. ஆட்சியாளர்களின்) இனப்பாகுபாட்டு வஞ்சகச் செயல்களையும் கர்நாடகத்தில் வரப்போகும் தேர்தலுக்காக - பதவி அரசியலுக்காக செய்யும் தவறுகள் என்று தமிழ்நாட்டுத் தலைவர்கள் பேசுகிறார்கள். இந்தியத்தேசியம் பேசும் காங்கிரசு மற்றும் பா.ச.க. தலைமைகளின் தமிழின எதிர்ப்பு உளவியலை “பதவி ஆசை” என்ற பட்டுத் துணியால் போர்த்தி மறைக்கும் ஏமாளிகளாக அல்லது இனத்துரோகிகளாக அந்தத் தலைவர்கள் இருக்கிறார்கள்.

தி.மு.க.வும், அ.தி.மு.க. அரசும் சேர்ந்து 22.2.2018 அன்று சென்னையில் காவிரிக்காக நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம், கர்நாடகத்தின் மனம் காயம்படாமலும், நடுவண் அரசுடன் உரசல் ஏற்படாமலும் எச்சரிக்கையுடன் போடப்பட்டதை நாடறியும்! 

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு நடுநிலை தவறி, ஒருதலைச் சார்பாக, தமிழ்நாட்டின் இயற்கை நீதியை மறுத்து வெளிவந்தது. அத்தீர்ப்பில் தமிழ்நாட்டின் சட்டப்படியான உரிமைகள் பறிக்கப்பட்டதும், அநீதியாகத் தமிழ்நாட்டின் தண்ணீரில் 14.75 ஆ.மி.க.வைப் பறித்துக் கர்நாடகத்துக்குக் கொடுக்கப்பட்டதும் வெட்ட வெளிச்சமாகத் தெரிந்த உண்மைகள்! இப்படிப்பட்ட இந்தத் தீர்ப்புகூட, 15 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது ஒரு கொலை பாதகச் செயல் போல் உள்ளது! 

காவிரியாறு மாநிலங்களுக்குச் சொந்தமில்லை – அது தேசியச் சொத்து என்று கூறி, இந்திய அரசின் அதிகாரத்துக்குக் காவிரி உரிமையை உச்ச நீதிமன்றம் கொண்டு போய் உள்ளது. இவ்வாறான பல இழப்புகளை அனைத்துக் கட்சிக் கூட்டத் தீர்மானம் சுட்டிக்காட்டவே இல்லை!

தீர்ப்புரையின் பத்தி 403 - பக்கம் 457-இல், “A SCHEME” – “ஒரு செயல்திட்டம்” இன்றிலிருந்து (16.2.2018லிருந்து) ஆறு வார காலத்திற்குள் அமைக்கப்பட வேண்டும் என்றுதான் கூறப்பட்டிருக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் என உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுச் சொல்லவில்லை என்று கர்நாடகம் வல்லடி வழக்குப் பேச இதுவே வாய்ப்பளித்தது. இந்த “ஏதோவொரு செயல்திட்டம்” (A SCHEME) என்ற தீர்ப்புரையின் சொல்லாடல் குழப்பத்தை உண்டாக்கும் என்று தீர்ப்பு வந்த அன்றே (16.02.2018) நான் தொலைக்காட்சி விவாதங்களில் கூறினேன். மறுநாள் அறிக்கையாகவும் வெளியிட்டேன். “ஏதோ ஒரு செயல் திட்டம்” என்று உச்ச நீதிமன்றம் குழப்பாகக் கூறியதை அனைத்துக் கட்சித் தீர்மானம் கண்டு கொள்ளவே இல்லை! 

தீர்ப்பு வந்த அன்று மாலை முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட அறிக்கையில், “ஒரு செயல்திட்டம்” அமைக்கும்படி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாகக் கூறினார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஆணையிட்டதாக அவர் கூறவில்லை! எனவே, அவருக்கும் “அந்த விவரம்” புரியாமல் இல்லை!

எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் மனமொத்து நிறைவேற்றியது, அனைத்துக் கட்சித் தீர்மானம்! 

தீபக் மிஸ்ரா தலைமையிலான உச்ச நீதிமன்ற ஆயம் காவிரி வழக்கை விசாரித்து வருவதை காவிரி உரிமை மீட்புக் குழுவினராகிய நாங்கள் அங்குலம் அங்குலமாகக் கவனித்து அவ்வப்போது எதிர்வினை ஆற்றியுள்ளோம். 

தீபக் மிஸ்ரா, அமிதவராய், கன்வில்கர் ஆயம் நடுநிலை தவறி கர்நாடகத்துக்குச் சாய்வாகக் கட்டப்பஞ்சாயத்து செய்யப்போகிறது என்பதை கண்டறிந்து, “உச்ச நீதிமன்றமே காவிரி வழக்கில் கட்டப்பஞ்சாயத்து செய்யாதே” என்று தீர்மானம் போட்டதுடன், 27.07.2017 அன்று பூதலூரில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். 

“கர்நாடகம் மேக்கேதாட்டில் அணை கட்டிக் கொள்ளத் தமிழ்நாடு எதிர்ப்புத் தெரிவிக்காது, தமிழ்நாட்டிற்குரிய தண்ணீரைத் தந்தால் போதும்” என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்குரைஞர்கள் உமாபதியும், சேகர் நாப்தேவும் வாதிட்டதை எதிர்த்து, 19.08.2017 அன்று முதலமைச்சருக்குத் திருவாரூரில் கருப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அதன்பிறகுதான், மேக்கேதாட்டு அணையை ஏற்கமாட்டோம் என்று முதலமைச்சர் திருவாரூரிலேயே அறிக்கை வெளியிட்டார். சேகர் நாப்தே உச்ச நீதிமன்றத்தில் மேக்கேதாட்டு அணையை எதிர்த்தார். 

தீபக் மிஸ்ரா ஆயம் ஒருதலைச் சார்பாக விசாரிக்கிறது என்ற நமது கவலையை உறுதி செய்யும் வகையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நால்வர், செல்லமேசுவரர் தலைமையில் செய்தியாளர்களைச் சந்தித்து, தீபக் மிஸ்ரா பக்கச்சார்பு பார்ப்பவர் என்று விமர்சித்தனர். அதன்பிறகு உடனடியாக 18.01.2018 அன்று கூடிய காவிரி உரிமை மீட்புக் குழு தீபக் மிஸ்ரா ஆயம், தீர்ப்பு வழங்கக் கூடாது என்றும், ஏழு நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசமைப்பு ஆயத்திற்கு காவிரி வழக்கை மாற்ற வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு போட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி அரசுக்குக் கோரிக்கை வைத்தோம். 

இன்னுமொரு முகாமையான செய்தி – காவிரித் தீர்ப்பாயத் தீர்ப்பை இரத்து செய்துவிட்டு, காவிரித் தீர்ப்பாயத்தைக் கலைத்துவிட்டு, காவிரி வழக்கை புதிதாக அமைக்கப்பட உள்ள ஒற்றைத் தீர்ப்பாயத்திடம் புதிய வழக்காகத் தாக்கல் செய்ய 2017 மார்ச்சில் இந்திய அரசு மக்களவையில் சட்ட வரைவு முன்மொழிந்தது. அதை எதிர்த்து காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில், என் தலைமையில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 19 நாள் இரவு பகலாக 15.04.2017 வரை காத்திருப்புப் போராட்டம் நடத்தினோம். அடுத்து, காவிரி டெல்டா மாவட்டங்களில் – ஏழுநாள் தொடர்வண்டி மறியல் போராட்டம் நடத்தினோம். இப்போராட்டங்கள் மக்கள் ஆதரவையும், அனைத்துக் கட்சி ஆதரவையும் பெற்ற நிலையில், மக்களவையில் முன்மொழியப்பட்டு விவாதப் பட்டியலில் இருந்த ஒற்றைத் தீர்ப்பாய வரைவு நிறைவேற்றப் படாமல் நிலுவையில் வைக்கப்பட்டது.

காவிரி வழக்கின் மீது காவிரி உரிமை மீட்புக் குழு உன்னிப்பாகக் கவனம் செலுத்தி, இத்தனை தற்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இவற்றில் அ.தி.மு.க.வின் பங்கு என்ன? தி.மு.க.வின் பங்கு என்ன? ஒற்றைத் தீர்ப்பாயத் திட்டத்தைத் தடுக்க தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் – அதன் அரசும் எடுத்த நடவடிக்கைகள் என்ன?

1991 சூன் 25-இல் வெளியான காவிரித் தீர்ப்பாய இடைக்காலத் தீர்ப்பு 1991 திசம்பரில் இந்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டது. 2007 பிப்ரவரி 25இல் இறுதித் தீர்ப்பு வந்தது. அது 2013 பிப்ரவரி 19இல் இந்திய அரசின் அரசிதழில் போடப்பட்டது. இத்தீர்ப்புகள் இரண்டையும் இந்திய அரசு செயல்படுத்தவில்லை! இந்திய அரசு அவற்றைச் செயல்படுத்தும்படி தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் உரியவாறு போராடியதுண்டா? வெற்றி கண்டதுண்டா? தி.மு.கழகம் காங்கிரசு ஆட்சியிலும் பா.ச.க. ஆட்சியிலும் நடுவண் அரசில் பங்கேற்று சாதித்தது என்ன? 

எனவேதான் இந்திய அரசும் உச்ச நீதிமன்றமும் சேர்ந்து, நமது காவிரி உரிமையைப் பறித்துக் கர்நாடகத்திற்குக் கொடுக்கும் இந்தத் தருணத்திலாவது தமிழ்நாட்டு மக்கள் கொதித்தெழ வேண்டும்.

காரைக்கால், சென்னை உட்பட 20 மாவட்டங்களுக்குக் குடிநீர் காவிரி நீர்; 12 மாவட்டங்களுக்குப் பாசன நீர்! எனவே, தமிழ்நாடு தழுவிய அளவில் காவிரி மீட்பு சனநாயகப் போராட்டம் நடைபெற வேண்டும். 

தமிழ்நாடு அரசு காவிரி வழக்கிற்கு உச்ச நீதிமன்றத்தின் அரசமைப்பு ஆயம் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான அரசியல் அழுத்தத்தை நடுவண் அரசுக்குத் தர வேண்டும். 

அரசமைப்பு ஆயத் தீர்ப்பு வரும்வரை செயல்படக் கூடிய வகையில் தீபக் மிஸ்ரா ஆயம் கூறியுள்ள தண்ணீரைக் கர்நாடகம் மாத வாரியாகத் திறந்துவிட தீர்ப்பாயத் தீர்ப்பில் உள்ளது போல் காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக இந்திய அரசு அமைக்க வேண்டும். 

இவ்விரு கோரிக்கைகளையும் முன்வைத்து தமிழ்நாடு தழுவிய அளவில் முதற்கட்டமாக ஒரு வாரம் இந்திய அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள் செயல்படாதவாறு முடக்கும் போராட்டத்தை அனைத்துக் கட்சிகளும், அனைத்து உழவர் அமைப்புகளும், அனைத்து இயக்கங்களும் முன்னெடுக்க வேண்டும் என்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன். 

==========================
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
==========================
பேச: 76670 77075, 94432 74002 
==========================
==========================

Labels: ,

"பெண்ணுரிமை வெல்க! பெண்ணும் ஆணும் வாழ்வாங்கு வாழ்க!" --

Thursday, March 8, 2018

மார்ச்சு - 8 - அனைத்துலக மகளிர் நாள்
====================================
பெண்ணுரிமை வெல்க! 
பெண்ணும் ஆணும் வாழ்வாங்கு வாழ்க!
====================================
தமிழ்தேசியப் பேரியக்கத் தலைவர் 
தோழர் பெ.மணியரசன் சிறப்புக் கட்டுரை !
====================================

"பன்னாட்டு மகளிர் நாளில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் பெண்களுக்கும் பெண்ணுரிமைப் போராளிகளுக்கும் நெஞ்சு நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பெண்ணுரிமைப் போராட்டம் வெல்க!

தமிழர் அறம், அனைத்துவகைச் சமத்துவத்தையும் கூறுகிறது. மனிதர்கள் அனைவரும் சமம்; தமிழர்கள் அனைவரும் சமம் என்று கூறுகின்றோம். சாதி, மதம், இனம் கடந்த சமத்துவத்தைப் பேசுகிறோம். மனித உரிமை அடிப்படையில் சமத்துவத்தைப் பேசுகிறோம். தமிழர் அறம் ஆண் பெண் சமத்துவத்தையும் கூறுகிறது. நம்முடைய சங்க இலக்கியங்கள் தலைவன் தலைவி என்று கணவனையும் மனைவியையும் சமமாகத்தான் அழைத்தன. பிற்காலத்தில் தமிழ்ச் சமூகத்திலும் ஆணாதிக்கம் கொடியேற்றியது.

மனித உளவியலில் ஆதிக்க உணர்வு இயல்பாக இணைந்துள்ளது. தனக்குக் கட்டுப்பட்டவர்கள், தான் சொல்வதைக் கேட்டு நடக்கக் கூடியவர்கள் இருக்க வேண்டும் என்று மனித மனம் விரும்புகிறது. இதற்கு சாதியைப் பயன்படுத்துவர், மதத்தைப் பயன்படுத்துவர், இனத்தைப் பயன்படுத்துவர், செய்யும் தொழிலைப் பயன்படுத்துவர், குடும்பத்திற்குள்ளே பாசத்தைப் பயன்படுத்துவர், வயதைப் பயன்படுத்துவர். அந்த வரிசையில் பெண்ணாகப் பிறந்ததை ஆண் உளவியல் பயன்படுத்திக் கொண்டு ஆதிக்கம் செலுத்துகிறது.

பெண்ணைத் தனக்குக் கட்டுப்பட்டவளாக, தனது விருப்பத்தை நிறைவேற்றுபவளாக ஆணாதிக்க உளவியல் மாற்றிக் கொள்கிறது. மேல்சாதிப் பெண்ணாக இருந்தாலும், பணக்காரப் பெண்ணாக – சொத்துமிகவுள்ள பெண்ணாக இருந்தாலும் – படித்த பெண்ணாக இருந்தாலும், அதிகாரம் உள்ள பதவியில் இருக்கின்ற பெண்ணாக இருந்தாலும் அப்பெண்ணும் ஏதோ ஒருவகையில் சமூகத்திலும் தனது குடும்பத்திலும் ஆணாதிக்கத்தின் கீழ் வாழ்பவராகவே இருக்கிறார்.

எந்த ஆதிக்கமானாலும் அது எப்படித் தொடர்கிறது? ஆதிக்கம் என்பது ஆதிக்கம் என்று உணரப்படாதவாறு, சமூகத்தின் இயற்கையாக – காலம் காலமாக சமூகம் ஏற்றுக் கொண்ட செயல்முறையாக – உளவியல் மாற்றம் செய்யப்படுகிறது. அதுவே சமூக நன்மையாக சித்தரிக்கப்படுகிறது. சூரியன் கிழக்கே தோன்றுவது போல், தென்றல் தெற்கிலிருந்து வீசுவது போல் இயற்கையானதாக - இயல்பானதாக ஆதிக்கம் என்பதை அனைவரும் உணரும்படி செய்துவிடுவார்கள் ஆதிக்கவாதிகள்!

ஆதிக்கத்தால் பாதிக்கப்படும் மக்கள் தாங்களே அதை விரும்பி ஏற்றுக் கொள்ளும் மனநிலையை அவர்கள் ஏற்படுத்தி விடுவார்கள். அதற்கான கதைகள், புராணங்கள், கலைகள் எல்லாவற்றையும் உருவாக்கிவிடுவார்கள். வண்டி இழுத்துப் பழக்கப்பட்ட மாடு தானே முன்வந்து நுகத்தடியில் கழுத்தைக் கொடுப்பதைப் போல், பெண்கள் தாமே முன்வந்து தங்களது அடிமை நிலையை ஏற்றுக் கொள்ளும்படி செய்துள்ளார்கள். அதுதான் பண்பு, அதுதான் ஒழுக்கம் என்பதாகப் பெண்கள் கருதும்படிச் செய்துவிட்டார்கள்.

ஆணாதிக்கம் மட்டுமல்ல, இன ஆதிக்கம், மொழி ஆதிக்கம், சாதி ஆதிக்கம், மத ஆதிக்கம், முதலாளிய ஆதிக்கம், ஏகாதிபத்திய ஆதிக்கம், இந்தியத் தேசிய ஆதிக்கம் உட்பட எல்லா ஆதிக்கங்களும், பாதிக்கப்பட்டவர்கள் தாங்களே முன்வந்து அந்த ஆதிக்கங்களை ஏற்றுக் கொள்ளும் சமூகக் கட்டுக்கோப்பையும் மனநிலையையும் உருவாக்கி வைத்துள்ளன.

பெண்களுக்கெதிரான ஆணாதிக்கத்தை முதலில் எதிர்க்கும் பொறுப்பும், கடமையும் விழிப்புணர்வு பெற்ற, சனநாயக உணர்வுள்ள ஆண்களுக்குத்தான் இருக்கிறது. இந்த ஆண்கள் முதலில் தங்கள் மனத்தில் உள்ள ஆணாதிக்க அழுக்கைத் துடைத்து மனத்தைத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். தன் தாயை, உடன் பிறந்தாளை, தன் காதலியை, தன் மனைவியை சமமாகக் கருதும் மனநிலையை, அவர்களோடு சமத்துவ நிலையில் உறவு கொள்ளும் உளவியலை, ஆண்கள் பெற வேண்டும்.

வீட்டு வேலைகளைப் பெண்களுடன் பகிர்ந்து கொள்ளும் மனப் பக்குவம் ஆண்களுக்கு வர வேண்டும். சமைத்தல், துவைத்தல், கூட்டிப் பெருக்குதல், பாத்திரங் கழுவுதல் போன்ற பல வேலைகளைப் பெண்களுடன் பகிர்ந்து கொள்வது இழிவல்ல, பெருமைக்குரிய செயல் என்ற மனமலர்ச்சி உருவாக வேண்டும்.

பெண்கள் பெற வேண்டிய உரிமைக்கான இலக்கு இப்போது ஆண்கள் பெற்றிருக்கும் ஆதிக்கங்கள் அல்ல. ஆண்களும் பெண்களும் சம உரிமைகள் – பொது உரிமைகள் பெறுவதே பெண்ணுரிமையின் இலக்காக இருக்க வேண்டும்.

ஆணைப் போல் முடிவெட்டிக் கொள்ளுதல், ஆடை அணிந்து கொள்ளுதல், பொட்டு – பூ போன்றவற்றைத் துறத்தல் போன்றவற்றைப் பெண்ணுரிமைச் செயல்பாட்டின் அடையாளங்களாகக் கொள்ள வேண்டியதில்லை. பெண்ணுரிமையின் இலக்கு ஆண் அடையாளங்களை – ஆணின் ஒப்பனைகளைப் பெண்கள் ஏற்றுக் கொள்வதல்ல! அவ்வாறு செய்வது, மறைமுகமாக ஆணாதிக்கத்தைத் தனது முன்மாதிரியாக ஏற்றுக் கொள்வதாகும்.

அழகியல் உணர்வுகள் – அது சார்ந்த ஒப்பனைகள் ஆணுக்கொரு வகையாக இருக்கும்; பெண்ணுக்கொரு வகையாக இருக்கும். அது தவறல்ல. பெண் விரும்பினால் ஆண்களைப் போல் ஆடை அணிந்து கொள்ளட்டும். பொட்டு வைத்தல், பூ வைத்தல் போன்ற பழக்கங்களைக் கைவிடட்டும். ஆனால், புடவை கட்டிக் கொண்டு, பொட்டும் பூவும் வைத்துக் கொண்டு வாழும் பெண்ணுக்கும் சம உரிமை வேண்டும். பெண் ஒரு பெண்ணாக ஒப்பனைகள் செய்து கொண்டாலும் அவருக்கும் அனைத்து உரிமைகளும் வேண்டும். இதுவே முன்மாதிரியான பெண்ணுரிமைப் போராட்டமாகும்.

பாலியல் உறவில் உருவாகும் ஆண் – பெண் சமத்துவம்தான் நிலையான பெண்ணுரிமையாக அமையும். அதில் நிலவும் ஆணாதிக்கம் சமூக அமைதியை மட்டுமின்றி குடும்ப அமைதியையும் கெடுக்கிறது. பாலியல் உறவில் பெண்ணுக்குப் புனிதங்கள் கற்பிப்பதைக் கைவிட வேண்டும். ஆணும் பெண்ணும் பாலியல் உறவில் ஒருவர்க்கொருவர் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். அதில் உள்ள குறைபாடுகளை ஆணும் பெண்ணும் மனம் திறந்து விவாதிக்கும் பண்பு பெற வேண்டும். வீணான ஐயங்களும், புனிதங்களும் பேசி வாழ்க்கையைச் சீர் குலைத்துக் கொள்ளக் கூடாது. பாலுறவில் பிறழ்ச்சிகள் ஏற்பட்டால் சரி செய்து கொள்ள வேண்டும். உடனே உறவை முறித்துக் கொள்ள முனையக்கூடாது.

சேர்ந்து வாழவே முடியாத அளவிற்கு மனமுறிவு ஏற்பட்டுவிட்டால், மணமுறிவு செய்து கொள்ளும் உரிமை எப்போதும் வேண்டும். அதேவேளை பாலுறவில் வெறும் நுகர்வு வெறி மட்டுமே தலைதூக்கி நின்றால், அது ஆண் – பெண் இணக்கத்தை, நல்லுறவைக் கெடுத்துவிடும். வரம்பில்லா பாலுறவு ஆண் – பெண் இணக்கத்தையும், வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் மட்டுமல்ல வாழ்க்கையையும் அழித்து விடும்.

எந்தப் பொருளை நுகர்வதற்கும் வரம்பும் கட்டுப்பாடும் தேவை. அதைப் போல் ஆண் – பெண் பாலுறவு நுகர்வுக்கும் வரம்பும் கட்டுப்பாடும் தேவை. வரம்பற்ற நுகர்வு எதிலும் கூடாது. மிகை நுகர்வு வேட்கையும் வெறியும் கூடாது! அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சென்று நம் முன்னோர்கள் சொன்னார்கள்!

ஆணாதிக்கத்தை மட்டும் எதிர்த்து நடத்தும் பெண்ணுரிமைப் போராட்டங்கள் பெண்ணுரிமையில் சிறுசிறு முன்னேற்றங்களை அடைய உதவும். ஆனால், முழுமையான பெண் விடுதலைக்கு இட்டுச் செல்லாது.

எந்த வகை ஆதிக்கமும் செலுத்தாத – எந்த வகை ஆதிக்கத்தையும் ஏற்காத சமூகம் அமைவதே ஆணாதிக்கத்தை முற்றமுழுதாக நீக்கும். ஐரோப்பாவில் நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே பெண்ணுரிமைப் போராட்டங்கள் நடந்து வருகின்றன. நம் நாட்டுப் பெண்களைவிடக் கூடுதலான உரிமைகளை அவர்கள் பெற்றுள்ளார்கள். ஆனால் அங்கு இன்னும் ஆணாதிக்கம் நிலவுகிறது. பெண்ணுரிமைப் போராட்டங்கள் தொடர்கின்றன. ஏன்?

அந்நாடுகளில் இன ஆதிக்கம், முதலாளிய ஆதிக்கம், ஏகாதிபத்திய ஆதிக்கம் போன்ற ஆதிக்கங்கள் நிலவுகின்றன. எனவே, ஆணாதிக்கம் தொடர்வதற்கான உளவியல் களமாகவே ஐரோப்பிய நாடுகள் இருக்கின்றன.

எந்தவகை ஆதிக்கமும் இல்லாத சமூகத்தைத் தொலைநோக்கு இலக்காக வைத்துக் கொண்டு – ஆதிக்க அழுக்குகளிலிருந்து விடுபட்டதாக நம் மனத்தை அன்றாடம் தூய்மைப்படுத்திக் கொண்டே, நிலவுகின்ற ஆதிக்கங்களை எதிர்த்துப் போராட வேண்டும். அவ்வாறான போராட்டமாகப் பெண்ணுரிமைப் போராட்டம் நடக்க வேண்டும்.

பெண்ணுரிமைப் போராட்டம், மற்றவகை உரிமைப் போராட்டங்களிலிருந்து ஒருவகையில் மாறுபட்டுத் தனித்தன்மை கொண்டதாகவும் இருக்கிறது. ஆணாதிக்கத்தை எதிர்த்த போராட்டம் என்பதன் செயற்களம் எது? சமூகம் மட்டுமல்ல தன் வீடும்தான்!

ஆணாதிக்கத்தை எதிர்த்துத்தன் தந்தையோடு – தம்பியோடு – அண்ணனோடு – காதலனோடு – கணவனோடு போராட வேண்டியுள்ளது. ஆண்டானை எதிர்த்து, ஆதிக்க சாதிக்காரரை எதிர்த்து, ஆதிக்க மதவாதியை எதிர்த்து, ஆதிக்க இனத்தை எதிர்த்து, முதலாளியை எதிர்த்து, இந்தியத் தேசியத்தை எதிர்த்துப் போராடுவது போல் ஆணாதிக்கத்தை எதிர்த்துப் பெண்கள் போராட முடியாது!

ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நடக்கும் ஆணாதிக்க எதிர்ப்புப் போராட்டம் ஒரு பகை முரண்பாடல்ல! உறவைத் துண்டித்துக் கொள்வதற்கான போராட்டமல்ல, உறவை மேம்படுத்திக் கொள்வதற்கான போராட்டம்! அந்தப் புரிதலோடு, அந்தப் பக்குவத்தோடு ஆணாதிக்க எதிர்ப்புப் போராட்டத்தைப் பெண்கள் நடத்த வேண்டும். விழிப்புணர்வு பெற்ற ஆண்கள், சனநாயக உணர்வுள்ள ஆண்கள் அதே புரிதலோடு – பக்குவத்தோடு பெண்ணுரிமைப் போரட்டத்தை ஏற்க வேண்டும் என்பது மட்டுமல்ல, ஆண்களும் அப்போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்!

பெண்ணுரிமைப் போராட்டம் வெல்க! பெண்ணும் ஆணும் வாழ்வாங்கு வாழ்க!

இன்னணம்,
பெ. மணியரசன், 
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

Labels: ,

வன்முறைத் தூண்டல் குற்றத்தின்கீழ் எச். இராசாவை தமிழ்நாடு அரசு கைது செய்ய வேண்டும்! -- தோழர் பெ. மணியரசன் அறிக்கை!

Wednesday, March 7, 2018

===================================
வன்முறைத் தூண்டல் குற்றத்தின்கீழ் 
எச். இராசாவை தமிழ்நாடு அரசு 
கைது செய்ய வேண்டும்! 
===================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
தோழர் பெ. மணியரசன் அறிக்கை!
===================================

ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ச.க.வின் அசல் முகத்தை மறைத்துக் கொள்ளாமல் அப்படியே வெளிப்படுத்தும் நபர்கள் எச். இராசா மற்றும் சுப்பிரமணிய சாமி போன்ற கயவர்கள். திரிபுராவில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ச.க. கும்பல் ஆட்சியைக் கைப்பற்றியவுடன், ஜெர்மனியில் நாஜி குண்டர்கள் செய்த வேலைகளைத் தொடங்கியுள்ளார்கள். அதில், ஒரு பகுதிதான் வரலாற்று நாயகர் மாமேதை லெனின் சிலையை அவர்கள் திரிபுராவில் உடைத்தது! 

உடனடியாக எச். இராசா என்பவர், தமிழ்நாட்டில் பெரியார் சிலைகளை உடைக்க வேண்டுமென்று தமது சுட்டுரையில் கூறி, தமது ஆரியத்துவா வெறியை வெளிப்படுத்தினார். சிரியாவில் மக்கள் படுகொலை செய்யப்படும் கொடுமையை எதிர்த்து நேற்று (06.03.2018) ஆர்ப்பாட்டம் நடத்தி ஐ.நா. பிரிவு ஒன்றின் அலுவலகத்தில் மனு கொடுக்கும் நிகழ்ச்சியில், தோழமை அமைப்புகளோடு நானும் கலந்து கொண்டிருந்தபோது, சன் தொலைக்காட்சியில், இது குறித்து எனது கருத்தையும் கேட்டார்கள். 

நான் உடனடியாக, பெரியார் சிலை உடைத்திட செய்தி வெளியிட்ட எச். இராசாவின் ஆரியத்துவா வெறியை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்றும், தமிழ்நாட்டில் ஆரியத்துவா பா.ச.க.வில் தமிழர்கள் உறுப்பு வகிப்பது பற்றி மறு சிந்தனை செய்ய வேண்டும் என்றும் கூறினேன். 

பெரியார் மீது ஆரியத்துவாவாதிகளின் சினத்திற்குக் காரணமென்ன? அவர் தொடர்ந்து பார்ப்பன ஆதிக்கத்தை, ஆரியத்தை, வர்ணாசிரம தர்மத்தை எதிர்த்து பரப்புரையும், போராட்டமும் நடத்தியதுதான் பார்ப்பனிய மற்றும் ஆரியத்துவா ஆற்றல்கள் அவர் மீது தீராத சினம் கொண்டு, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தாக்கி வருகின்றன. 

தமிழர் அடையாளங்களை ஒழித்தல், தமிழினத்தை ஆரியத்துக்கு அடிமை இனமாக மாற்றுதல் என்ற ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ச.க.வின் ஆரிய வேலைத்திட்டத்தின் ஒரு பகுதிதான் பெரியார் சிலை உடைப்புக் கோரிக்கை என்பதைத் தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்தை அண்மையில் இழிவுபடுத்தியதையும் நாடறியும்! 

பெரியார் சிலை உடைக்கும் கருத்துகளை வெளியிட்டு, வன்முறையைத் தூண்டியுள்ள எச். இராசா மீது இந்தியத் தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை சிறையில் அடைக்கத் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இப்பொழுது மட்டுமல்ல ஏற்கெனவே, வைகோ உயிரோடு வீடு திரும்ப மாட்டார் என்று கூறியும், கவிஞர் வைரமுத்துவின் தலையை வெட்டி உருட்டியிருக்க வேண்டும் என்றும் தொடர்ந்து பேசி வன்முறையைத் தூண்டி வருகின்ற ஆரியக் குண்டர் எச். இராசா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது தமிழ்நாடு அரசின் பொறுப்பு! இதைத் தமிழ்நாடு அரசு தட்டிக் கழிக்கக் கூடாது என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். 

Labels:


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்