<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d6955529389241309188\x26blogName\x3d%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86.%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://thozharmaniyarasan.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com/\x26vt\x3d-8408640130511538487', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

பல்லாவரம் புதிய மேம்பாலத்திற்கு மறைமலையடிகளாரின் பெயர் சூட்ட வேண்டும்! - பெ. மணியரசன் வேண்டுகோள்!

Monday, August 31, 2020



பல்லாவரம் புதிய மேம்பாலத்திற்கு
மறைமலையடிகளாரின் பெயர் சூட்ட வேண்டும்!


தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
பெ. மணியரசன் வேண்டுகோள்!


சென்னை பல்லாவரத்தில் ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்து நெரிசலைப் போக்கும் வகையில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. விரைவில் அதன் திறப்பு விழா நடைபெறவுள்ளதாக நாளேடுகளில் செய்தி வந்துள்ளது. அப்பாலத்திற்கு, தனித்தமிழ் இயக்கத் தந்தையாகவும், தமிழர் மறுமலர்ச்சியின் முன்னோடியாகவும் விளங்கிய மறைமலை அடிகளாரின் பெயரை சூட்டுவது பொருத்தமாக இருக்கும்.

1911ஆம் ஆண்டிலிருந்து பல்லாவரம் சாவடித் தெருவிலுள்ள இல்லத்தில் வசித்து வந்த மறைமலையடிகளார், 1912ஆம் ஆண்டு (22.04.1912) இதே இல்லத்தில்தான், வள்ளலார் இராமலிங்க அடிகளாரின் கொள்கை வழிநின்று “பொதுநிலைக் கழகம்” (சமரச சுத்த சன்மார்க்க சங்கம்) என்ற அமைப்பை தொடங்கி செயல்பட்டார். 1916இல் தனித்தமிழ் இயக்கத்தை நிறுவினார். 1930களில் இந்தித் திணிப்பு எதிர்ப்பு இயக்கத்தில் பல்வேறு அரங்குகளில் முன்னணிப் பங்கு வகித்தார். பல்லாவரம் இல்லத்தில் தங்கிக் கொண்டுதான் அப்பணிகளில் ஈடுபட்டார்.

தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை சேர்த்த மறைமலையடிகளார் தமிழர் இன மொழி உரிமைகளுக்காக களப்பணியாற்றியவர். எனவே, பல்லாவரத்தில் திறக்கப்படவுள்ள புதிய மேம்பாலத்திற்கு, மறைமலையடிகளாரின் பெயரைச் சூட்டுவதே மிகவும் பொருத்தமானது என்று தமிழ்நாடு அரசைக் கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன். மறைமலையடிகளாரின் குடும்பத்தினரும் இவ்வேண்டுகோளை தமிழ்நாடு அரசுக்கு வைத்துள்ளார்கள் என்பது முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்குரியது.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


 


 

Labels: , ,

“தமிழ்தேசிய எதிர்ப்பாளர்கள் ,ஏன் தமிழன் முதல்வர் ஆக கூடாதுன்னு நினைக்குறாங்க.!” - “ழகரம்” இணைய ஊடகத்துக்கு, ஐயா பெ. மணியரசன் அவர்களின் செவ்வி!

Saturday, August 29, 2020

தமிழ்தேசிய எதிர்ப்பாளர்கள் ,ஏன் தமிழன் முதல்வர் ஆக கூடாதுன்னு நினைக்குறாங்க.!”


“ழகரம்” இணைய ஊடகத்துக்கு,

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
ஐயா பெ. மணியரசன் அவர்களின் செவ்வி!




கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Labels: , ,

ஐவர்வழி வேம்பையன் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு! - பெ. மணியரசன் இரங்கல்!

Friday, August 28, 2020



ஐவர்வழி வேம்பையன் மறைவு
ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு!


தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
பெ. மணியரசன் இரங்கல்!


முதுமையிலும் மூச்சும் பேச்சும் தமிழாய் – தமிழினமாய் வாழ்ந்த ஐயா ஐவர்வழி வ. வேம்பையன் அவர்கள் நேற்று தி.பி. 2051 ஆவணி 12 (28.08.2020) வெள்ளிக்கிழமை காலமானார் என்ற செய்தி, பெரும் துயரமளிக்கிறது!

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பணியாற்றியபோது, அங்கேயே இன உணர்வாளர்களைக் கொண்ட மன்றம் அமைத்து பகுத்தறிவு, தமிழின உணர்வு, தமிழ் மொழி உணர்வு, சமூகநீதி ஆகிய இலட்சியங்களுக்காகத் தொடர்ந்து கூட்டங்களும், கருத்தரங்குகளும் நடத்தி வந்தார் ஐயா வேம்பையன் அவர்கள்.

பெரியாரிய பகுத்தறிவுச் சிந்தனையில் தோய்ந்து, மக்கள் பணியாற்றி வந்த ஐவர்வழி வேம்பையன் அவர்கள், மிகச்சிறந்த தமிழ்த்தேசியராக மலர்ச்சி பெற்றார். திருக்குறளை முதன்மைப்படுத்தி, அதன் கருத்துகளைப் பரப்பும் பணிகளில் ஈடுபட்டார்.

திருவள்ளுவர், பெரியார், அண்ணா, பாவேந்தர் பாரதிதாசன், தேவநேயப்பாவாணர் ஆகியோர் கருத்துகளைப் பரப்புவதற்குரிய குறியீடாக “ஐவர்வழி வேம்பையன்” என்று தமது பெயருக்கு முன்னால் சேர்த்துக் கொண்டார்.

திருவள்ளுவர் ஆண்டைக் கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக ஆண்டுதோறும் தைப் பொங்கலையொட்டி, திருவள்ளுவர் ஆண்டு உருவான வரலாற்றையும், தமிழ்நாடு அரசு அதை ஏற்றுக் கொண்ட வரலாற்றையும் சிறு வெளியீடாகவும் வெளியிட்டுப் பரப்பி வந்தார். அதில், நாட்களை தூயதமிழில் எழுதினார். இப்பணிகளின்வழி ஐயா வேம்பையன் அவர்களுடன் தமிழ்த்தேசியப் பேரியக்கத்திற்கு, குறிப்பாக எனக்கு நல்ல உறவு ஏற்பட்டது. நாங்கள் நடத்தும் தமிழர் கண்ணோட்டம் இதழுக்கு ஆண்டுக்கு ஒரு தடவை நிதி அளித்து வந்தார்.

மறைமலை நகரில் அவர் வசித்து வந்த போது, மற்ற தமிழின உணர்வாளர்களுடன் இணைந்து “திருவள்ளுவர் மன்றத்தை” உருவாக்கி, அதன் பணிகளில் ஆர்வத்தோடு பங்கெடுத்து வந்தார். அத்திருவள்ளுவர் மன்றம் மிகச்சிறந்த கருத்தரங்குகள் பலவற்றையும், கூட்டங்களையும் நடத்தி வந்தது – நடத்தி வருகிறது.

பிற்காலத்தில், முதியோர் இல்லத்தில் வசித்து வந்த நிலையிலும், விடாமல் தமிழ்ப்பணியாற்றி வந்தார். திருவள்ளுவர் ஆண்டு பரப்புரை வெளியீடுகளைக் கொண்டு வந்தார். உடல் முடியாத நிலையிலும், கருத்தரங்குகளில் கலந்து கொண்டார்.

ஐயா ஐவர்வழி வ. வேம்பையன் அவர்களின் மறைவு, அவர் ஆற்றி வந்த தமிழர் – தமிழ் உரிமைப் பணிகளுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு! தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில், ஐயா வேம்பையன் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய குடும்பத்தார்க்கும், நண்பர்களுக்கும், கருத்தொருமித்த தோழர்களுக்கும் ஆறுதல் கூறிக் கொள்கிறேன்.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


 


 

Labels: ,

"ஏழு தமிழர் விடுதலைக்காக முதலமைச்சர் உண்ணாவிரதம் தொடங்க வேண்டும்!" தழல் ஈகி செங்கொடி நினைவேந்தல் சூளுரையில் ஐயா பெ. மணியரசன் வேண்டுகோள்!

"ஏழு தமிழர் விடுதலைக்காக முதலமைச்சர்

உண்ணாவிரதம் தொடங்க வேண்டும்!"


தழல் ஈகி செங்கொடி நினைவேந்தல் சூளுரையில்

 தமிழ்த்தேசியப்பேரியக்கத் தலைவர் 
ஐயா பெ. மணியரசன் வேண்டுகோள்!



கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Labels: , ,

“பா.ஜ.க.வின் தமிழ்ப் பற்று ஏமாற்று வேலை!” தமிழ் கேள்வி” இணைய ஊடகத்துக்கு - ஐயா பெ. மணியரசன் அவர்களின் செவ்வி!

Thursday, August 27, 2020

“பா.ஜ.க.வின் தமிழ்ப் பற்று 

ஏமாற்று வேலை!”


“தமிழ் கேள்வி” இணைய ஊடகத்துக்கு,

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
ஐயா பெ. மணியரசன் அவர்களின் செவ்வி!




கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Labels: ,

“தத்துவ குழப்பத்தில் இடதுசாரிகள் - தனித்தியங்கும் தமிழ்த்தேசியம்” - “தமிழம்” இணைய ஊடகத்துக்கு ஐயா பெ.மணியரசன் அவர்களின் செவ்வி!

Wednesday, August 26, 2020

தத்துவ குழப்பத்தில் இடதுசாரிகள் - தனித்தியங்கும் தமிழ்த்தேசியம்”


“தமிழம்” இணைய ஊடகத்துக்கு

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்

 ஐயா பெ.மணியரசன் அவர்களின் செவ்வி!




கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Labels:

"நம் எதிர்காலம் நம் கையில்!" - “இலக்கு” இதழுக்கு பெ. மணியரசன் அளித்த நேர்காணல்!

Monday, August 24, 2020


"நம் எதிர்காலம் நம் கையில்!"

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் குறித்து..
“இலக்கு” இதழுக்கு - தமிழ்த்தேசியப் பேரியக்கத்
தலைவர் பெ. மணியரசன் அளித்த நேர்காணல்!


நடந்து முடிந்த இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் குறித்து, அனைத்துலக ஊடக மையம் சார்பில் “இலக்கு” வார மின்னிதழுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்கள் நேர்காணல் அளித்துள்ளார். அதன் முதல் பகுதி 2020 ஆகத்து (இதழ் 92) இதழில் வெளியாகியுள்ளது. அது வருமாறு :

வினா : இலங்கைக்குள் எமது மக்களுக்கான அரசியல் தீர்வு சாத்தியமாற்றுப் போய்விட்ட அரசியல் சூழ்நிலையில் ஈழத்தமிழர்களுக்குள்ள வேறு தெரிவுகள் குறித்து உங்கள் பார்வை என்ன? 

பதில் : "அண்மையில் (2020 ஆகத்தில்) நடந்த இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளை வைத்து, “அரசியல் தீர்வு” என்பது நிரந்தரமாக சாத்தியமற்றுப் போய்விட்டது என்ற முடிவுக்கு வரக்கூடாது. 

நமக்கான அரசியல் தீர்வு என்பது இலங்கை நாடாளுமன்றத்திற்கு நடைபெறும் தேர்தல் வழியாக வருவது அல்ல. ஈழத்தமிழர் தாயகத்தில் – அதாவது வடக்கு – கிழக்கு மாகாணங்களில் நடைபெறும் கருத்து வாக்கெடுப்பு வழியாக வருவதாகும்! 

இன்றைய இலங்கை என்ற “நாட்டு வடிவம்” சிங்கள ஆக்கிரமிப்பாளர்களாலும், ஐரோப்பியக் காலனி ஆதிக்கவாதிகளாலும் உருவாக்கப்பட்டது. இந்த இலங்கைக்குள் தமிழ் ஈழம் வலுக்கட்டாயமாக இணைக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் செயற்கையாகச் சிறுபான்மை ஆக்கப்பட்டுள்ளார்கள். 

தமிழர் தாயகமான தமிழீழத்தில் தமிழர்கள் பெரும்பான்மையினர்; சிங்களர் சிறுபான்மையினர்! 

ஆக்கிரமிப்பாளர்களால் செயற்கையாகச் சிறுபான்மை ஆக்கப்பட்ட இனங்கள் உலகெங்கும் இருக்கின்றன. தமிழ்நாட்டில் உள்ள எட்டுக் கோடி தமிழர்களும் அப்படித்தான் செயற்கையாகச் சிறுபான்மை ஆக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களின் மக்கள் தொகை பிரித்தானியா மக்கள் தொகையை விட – பிரான்சு மக்கள் தொகையைவிட அதிகம்! 

உலகெங்கும் பார்த்தால், இவ்வாறு சிறுபான்மை ஆக்கப்பட்ட தேசிய இனங்கள், போராடிப் போராடி விடுதலை பெற்று வருகின்றன. 

எத்தியோப்பியாவில் சிக்கிக் கொண்டிருந்த எரித்திரிய தேசிய இனம் தனது எரித்திரிய தாயகத்திற்குள் நடந்த கருத்து வாக்கெடுப்பில் மிகப்பெரும்பான்மை பெற்று, 1993இல் விடுதலை அடைந்தது. 

இந்தோனேசியாவின் ஆக்கிரமிப்பில் இருந்த “சிறுபான்மை” கிழக்குத் திமோர் மக்கள், 1999இல் உலகநாடுகளின் மேற்பார்வையில் கிழக்குத் திமோருக்குள் மட்டும் நடந்த கருத்து வாக்கெடுப்பில் பெரும்பானமை பெற்று விடுதலை அடைந்தனர். 

சூடானில் “சிறுபான்மை” ஆக்கப்பட்ட தெற்கு சூடானியர் – 2011இல் தங்கள் தாயகத்திற்குள் மட்டும் நடந்த கருத்து வாக்கெடுப்பில் பெரும்பான்மை பெற்று வடக்கு சூடானியர் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றனர். 

எரித்திரியா, கிழக்குத் திமோர், தெற்கு சூடான் ஆகியவற்றில் விடுதலைக்காக ஆயுதப்போர் நடந்தது. அதனால்தான் கருத்து வாக்கெடுப்பு நடந்தது. தமிழீழத்தில் ஆயுதப்போர் முடிந்து விட்டதே, இங்கு எப்படி கருத்து வாக்கெடுப்பு வரும் என்று கருதக்கூடாது. 

உலகத்தின் இருபெரும் வல்லரசுகளில் ஒன்றாக விளங்கிய சோவியத் ஒன்றியம் 1990 – 1991இல் 15 நாடுகளாகப் பிரிந்ததற்கு ஆயுதப் போராட்டங்களோ, கருத்து வாக்கெடுப்புகளோ அடிப்படைக் காரணமல்ல; அங்கெல்லாம் இரசிய இன மேலாதிக்கத்தால் – இரசிய மொழி ஆதிக்கத்தால் ஒடுக்கப்பட்டிருந்த தேசிய இனங்களின் மக்கள் எழுச்சி ஒரு குறிப்பிட்ட அரசியல் சூழ்நிலையில் எழுந்தது. இரசிய வல்லரசுக்கு எதிராக இருந்த வட அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் ஆதரவு அந்த மக்களுக்குக் கிடைத்தன. பதினைந்து தேசிய இன நாடுகள் இறையாண்மையுடன் பிரிந்தன. செக்கஸ்லோவோக்கியா எந்தப் போராட்டமும் குருதி சிந்தலும் இல்லாமலே இரு நாடுகளாகப் பிரிந்தது. 

பிரித்தானியாவிலிருந்து பிரிய வேண்டும் என்று அண்மைக்காலத்தில்தான் ஸ்காட்லாந்தியர் விடுதலை முழக்கமெழுப்பினர். அவர்களின் கோரிக்கையை ஏற்று 2014இல் பிரித்தானிய அரசு ஸ்காட்லாந்தில் மட்டும் கருத்து வாக்கெடுப்பு நடத்தியது. 

குறைந்த வாக்கு வேறுபாட்டில் ஸ்காட்லாந்து விடுதலை இயக்கத்தினர் தோல்வி கண்டனர். ஆனால், எதிர்காலத்தில் நடைபெறும் இன்னொரு கருத்து வாக்கெடுப்பில் அல்லது வேறொரு ஏற்பாட்டில் ஸ்காட்லாந்து பிரியும் வாய்ப்பு உண்டு! 

இரண்டாம் உலகப் போர் ஏற்படுத்திய பன்னாட்டு நெருக்கடியைப் பயன்படுத்தி, புலம் பெயர்ந்த நாடுகளில் வாழ்ந்து கொண்டிருந்த யூதர்கள் வட அமெரிக்காவின் உதவியோடு உருவாக்கியதுதான் இசுரேல் என்ற யூதர்களுக்கான நாடு! தமிழீழம் அமைவதற்கு, புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் ஈழத்தமிழர்களும் தமிழ்நாட்டுத் தமிழர்களும் காத்திரமான பங்களிப்பு செய்ய வேண்டியிருக்கிறது என்ற பொறுப்புணர்வை தமிழர்கள் அனைவரும் பெற வேண்டும்.

உலக ஆதிக்க நாடுகளிடையே முரண்பாடுகள் வரும்போதும், அண்டை நாடுகளில் மாற்றங்கள் ஏற்படும்போதும், தமிழீழத்திற்கான கருத்து வாக்கெடுப்போ அல்லது வேறு ஏற்பாடோ தமிழர்களுக்குத் தனிநாடு பெற்றுத்தரும். அதுவும் அரசியல் தீர்வே! 

உலகெங்கும் தாயக இறையாண்மைக்காகப் போராடிக் கொண்டிருக்கும் தேசிய இனங்கள் நூற்றுக்கும் மேல் இருக்கின்றன. நாம் தனியே இல்லை என்பதைத் தமிழர்கள் உணர வேண்டும்".

வினா : எல்லாமே கைமீறிப் போய்விட்டதான ஒரு ஏமாற்றமும் விரக்தியும் எம் மக்களிடம் இந்தத் தேர்தலுக்குப் பின்னால் ஏற்பட்டிருப்பதான ஒரு பார்வை மேலெழுந்து நிற்கிறது. இதுபற்றி உங்கள் கருத்து என்ன?

பதில் : "அண்மையில் நடந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவால் எல்லாமே கைமீறிப் போய்விட்டதாக நினைக்க வேண்டியதில்லை. இராசபட்சே குடும்பம் தோற்று, இரணில் கட்சியோ அல்லது சஜித் பிரேமதாசா கட்சியோ, அல்லது புதிய கூட்டணி ஒன்றோ வென்று அரசு அமைந்திருந்தால் எல்லாமே ஈழத்தமிழர்களின் கையடக்கத்திற்குள் வந்திருக்குமா? 

தமிழர் தாயகத்தை மறுப்பதில், வடக்கு கிழக்கை இணைக்க மறுப்பதில், இலங்கையின் எதேச்சாதிகார ஒற்றையாட்சி முறையைக் கூட்டாட்சியாக மாற்ற மறுப்பதில், வடக்குக் கிழக்கில் சிங்களக் குடியேற்றத்தைத் தீவிரப்படுத்துவதில், சிங்களத் திணிப்பைத் தீவிரப்படுத்துவதில் மேற்கண்ட மூன்று பிரிவினர்க்கும் இடையே வேறுபாடு உண்டா? இல்லை! 

சம்பந்தரின் தமிழ்த்தேசியக் கூட்டணி மீண்டும் 16 இடங்களை அல்லது அதற்கும் மேலாகப் பெற்றிருந்தால் தமிழர் உரிமைகளை மீட்டுத் தருமா? குறைந்தது, ஐ.நா. மனித உரிமை மன்றம் 2015இல் நிறைவேற்றிய போர்க் குற்றங்களுக்கான உள்நாட்டு மற்றும் பன்னாட்டுக் கலப்பு புலனாய்வு மன்றம் அமைக்க வலியுறுத்திப் பெற்றுத் தருவாரா? நடக்காது; நடக்காது! 

புதிதாக உருவாகி வரும் தமிழர் சனநாயக எழுச்சியைப் பாருங்கள்! கஜேந்திர குமார் பொன்னம்பலம் அவர்களின் “தமிழ்த்தேசியத்திற்கான மக்கள் முன்னணி” கட்சி இரண்டு இடங்களையும், விக்கினேசுவரன் அவர்களின் “தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி” கட்சி ஓர் இடமும் பெற்றுள்ளன. இவ்விருவர் கட்சிகளும் தோற்ற தொகுதிகளில் கூட கணிசமாக அதிக வாக்குகளைப் பெற்றுள்ளனர். தமிழ் ஈழத்தமிழர்களிடையே சனநாயக எழுச்சி – வெகுமக்கள் எழுச்சி உருவாகியுள்ளது. மாணவர்களிடையே இவ்வெழுச்சி தெரிகிறது. 

இந்த எழுச்சியை மேலும் வளர்ப்பதும் ஒருங்கிணைப்பதும் மிகமிகத் தேவை! 

எதிர்ப்பக்கம் – சிங்கள அரசியலில் – இராசபட்சே குடும்ப எதேச்சாதிகாரத்திற்கு எதிராக – இதர சிங்களக் கட்சிகளின் போராட்டங்களும் – அவற்றை ஒடுக்கும் அரசின் வன்முறைகளும் தீவிரப்படும். இலங்கையைத் தன்தன் முகாமில் வைத்துக் கொள்ள, இந்திய – சீன அரசுகள் கொடுக்கும் நெருக்கடிகள் – அமெரிக்க வல்லரசின் தலையீடுகள் எனப்பல வெளி அழுத்தங்களுக்கு சிங்கள அரசு உள்ளாகும். குழுச் சண்டை அரசியலில் சிங்களம் சிதறும் சூழலும் எழலாம்! 

வரலாறு நமக்காக எவ்வளவோ வாய்ப்புகளை வைத்திருக்கிறது. அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள, அமைப்பு வழிப்பட்ட (Organisational) ஆற்றலையும், உத்தி வழிப்பட்ட (Strategical) திறமையையும் நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். 

கஜேந்திரகுமார் பொன்னம்பலம், விக்கினேசுரன் ஆகியோர் கூட்டணியாகச் செயல்பட முயல வேண்டும். மலையகத் தமிழர்களை இணைக்க வேண்டும். அவர்களின் அமைப்புகளுடன் பேசி – ஒருவருக்கொருவர் துணை நிற்கும் உறவை வளர்க்க வேண்டும். 

ஐ.நா. மனித உரிமை மன்றத்தின் (2015) தீர்மானத்தைச் செயலுக்குக் கொண்டு வருதல், வடக்கு - கிழக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுதல், வடக்கு - கிழக்கில் சிங்களக் குடியேற்றத்தைத் தடுத்தல், சனநாயக உரிமைகள் - குடிமை உரிமைகள் முதலியவற்றை மீட்டல், தமிழை முழுமையான ஆட்சி மொழியாக, கல்வி மொழியாக செயல்படுத்த வலியுறுத்தல், தமிழர்கள் தனித்தேசிய இனம் என்ற நிலைபாட்டைத் தொடர்ந்து வலியுறுத்துவது, அவ்வப்போது எழும் மக்கள் கோரிக்கைகளுக்குப் போராடுதல் போன்ற செயற்பாடுகளைக் கொண்டு, தமிழீழத் தேசிய வெகுமக்கள் இயக்கத்தைக் கட்டுக் கோப்பாக வளர்க்க வேண்டும். இந்த சனநாயகப் போராட்டங்களிலும் ஈகங்கள் செய்ய வேண்டி வரும். அதற்கு முகம் கொடுக்கும் அமைப்பாக வளர வேண்டும். 

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் இலட்சிய உறுதியும், இலட்சியத்திற்கான முழு ஒப்படைப்பும், அறிவுக் கூர்மையும், அறச் சிந்தனையும், வீரச் சொற்களும் இன்றும் நமக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கின்றன. 

மாவீரர் நாள் உரையில் தலைவர் சொன்னார் : தமிழ் ஈழ விடுதலை இலட்சியம் எமது தலைமுறையில் நிறைவேறவில்லை என்றால், அந்த இலட்சியத்தை அடுத்த தலைமுறைக்குக் கையளிப்போம்! போராட்ட வடிவம் மாறலாம்! ஆனால் ஈழ விடுதலைப் போராட்டம் வெல்லும் வரை தொடரும்.

இன்றும் அவர் வழிகாட்டுகிறார் என்ற உணர்வுடன் செயல்பட வேண்டும். நம் எதிர்காலம் நம் கையில் என்று நம்புங்கள்!".

(நேர்காணலின் அடுத்த பகுதி, அடுத்த இதழில் வெளியாகும்)

“இலக்கு” - ஆகத்து இதழை முழுமையாகப் படிக்க
http://www.ilakku.org/ilakku-weekly-epaper-92-august-23-2020


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

 

Labels: ,

முனைவர் சௌ. வேணுகோபால் பங்களிப்பு என்றும் வாழும்! - ஐயா பெ. மணியரசன் இரங்கல்!


முனைவர் சௌ. வேணுகோபால் பங்களிப்பு
என்றும் வாழும்!


தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
பெ. மணியரசன் இரங்கல்!


மிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தொடக்ககால அமைப்பாளர்களில் ஒருவரும், மொழியியல் அறிஞருமான முனைவர் சௌ. வேணுகோபால் அவாகள், இன்று (24.08.2020) விடியற்காலை 12.10 மணிக்கு சிதம்பரத்தில் தமது இல்லத்தில் காலமானார் என்ற செய்தி, பெரும் துயரமளிக்கிறது.

மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சியிலிருந்து வெளியில் வந்து, தனி இயக்கம் நிறுவிய போது சிதம்பரம் தோழர்கள் அந்த அமைப்பின் முதுகெலும்பு போல் இருந்து செயல்பட்டார்கள். புதிய அமைப்புக்கான கலந்தாய்வுக் கூட்டம் 1985இல் சிதம்பரத்தில்தான் நடந்தது. அங்கு தான் புதிய அமைப்பு பற்றி செய்தியாளர்களிடம் அறிவித்தோம்.

அமைப்பின் தலைமையகத்தை சிதம்பரம் லால்கான் தெரு சந்தில் பல ஆண்டுகள் வைத்திருந்தோம். இப்பொழுது அது மாவட்ட அலுவலகமாக உள்ளது. அப்பொழுது தொடக்கத்திலிருந்து இயக்கத்திற்கான கருத்தியல்களை வளர்த்தல், செயல் திட்டங்களை வகுத்தல், களப்பணியாற்றல் ஆகிய மூன்றிலும் காத்திரமான பங்களிப்பு வழங்கியவர், முனைவர் சௌ. வேணுகோபால் அவர்கள். இயக்கத்தின் முழுநேரச் செயல்பாட்டாளராகப் பணியாற்றினார்.

இன்றைக்கும் நாங்கள் புதிய கருத்துகளை சிந்திக்கும்போது, தருக்கங்கள் நடத்தும்போது தோழர் சௌ.வே. அவர்கள் வழங்கிய கூர்மையான தருக்கங்களை நினைவு கொள்கிறோம்.

முனைவர் சௌ.வே. அவர்கள், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்ற ஆய்வாளர். அவர் பணிக்குப் போக விரும்பவில்லை. மக்கள் பணிக்காகத் தம்மை ஒப்படைத்துக் கொண்டார். மார்க்சிய நூல்களை நன்கு கற்றவர். மண்ணுக்கேற்ப மார்க்சியத்தை மறுவார்ப்பு செய்து கொள்ள வேண்டும் என்ற கருத்தில் நம்பிக்கை கொண்டவர். தமிழ்த்தேசியத்தை வரையறுத்து, முதன்மைப்படுத்த நாங்கள் செய்த தருக்கங்களில் நல்ல வண்ணம் கருத்தியல் பங்களிப்பு வழங்கினார்.

உடல் நலம் குன்றிய நிலையில், மூப்பும் ஏற்பட்ட சூழலில், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பணிகளை செய்ய இயலாமல், வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். அவர் செயல்பட்ட காலத்தில், தன் குடும்பத்தினரை இயக்கச் செயல்பாடுகளில் முழுமையாக ஈடுபடுத்தினார். அவருடைய மகன்களான ஆதிவராகன், இரவிச்சந்திரன் ஆகிய இருவரும் இயக்கப் பொறுப்புகளில் இருந்து செயல்பட்டார்கள். அவருடைய மகள் சாந்தி இயக்க ஆதரவாளராக இருந்தார்.

சிறந்த அறிவாளரை – கருத்துப் பங்களிப்பாளரை எமது இயக்கத்தை நிலைநிறுத்தக் களப்பணி ஆற்றிய வீரரை இழந்த பெரும் சோகம் என் மனத்தைக் கவ்விக் கொண்டுள்ளது. முனைவர் சௌ. வேணுகோபால் அவர்களுடைய பண்பும், தோழமைச் சிறப்பும் கருத்துப் பங்களிப்பும் என்றும் எங்கள் நினைவிலிருக்கும்; வழிகாட்டும்!

முனைவர் சௌ.வே. அவர்களுடைய மறைவுக்குத் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், தோழர்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam



 

Labels:

இந்தி தெரியவில்லை என்றால் வெளியேறு! தமிழ்நாட்டையும் வெளியேறு என்பார்களா? - ஐயா பெ. மணியரசன் கட்டுரை!

Saturday, August 22, 2020




இந்தி தெரியவில்லை என்றால் வெளியேறு!
தமிழ்நாட்டையும் வெளியேறு என்பார்களா?

ஐயா பெ. மணியரசன்,
தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

இந்திய அரசின் இந்திய மரபுவழி மருத்துவத்துறைக்கான ஆயுஷ் அமைச்சகம் அண்மையில் காணொலியில் பயிலரங்கம் நடத்தி, மாநிலங்களில் உள்ள இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவர்களுக்குப் பயிற்சி கொடுத்தது. இப்பயிலரங்கின் தலைமைப் பயிற்சியாளர் அத்துறையின் நடுவண் அமைச்சகச் செயலாளர் வைத்தியா இராஜேஷ் கொட்டேச்சா!

இக்காணொலிக் கருத்தரங்கில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவர்கள் 37 பேர் பங்கேற்றனர். இந்த 37 பேரும் மாவட்டத்திற்கு ஒருவர் என்ற முறையில் தமிழ்நாடு அரசால் தேர்வு செய்யப்பட்டவர்கள். மூன்று நாள் இக்கருத்தரங்கு நடந்துள்ளது.

நடுவண் அரசின் ஆயுஷ் அமைச்சகச் செயலாளர் வைத்தியா இராஜேஷ் கொட்டேச்சா முழுக்க முழுக்க இந்தியிலேயே பயிலரங்கத்தை நடத்தியுள்ளார். மற்றவர்களும் இந்தியிலேயே வகுப்புகளை நடத்தியுள்ளார்கள். தமிழ்நாட்டிலிருந்தும், மற்ற சில மாநிலங்களிலிருந்தும் கலந்து கொண்ட இந்தி தெரியாதோர், ஆங்கிலத்தில் வகுப்புகளை நடத்துமாறு கோரியுள்ளனர்.

தமக்கு ஆங்கிலத்தில் சரளமாகப் பேச வராது; இந்தியில்தான் நடத்துவோம்; “இந்தி தெரியாதோர் வெளியேறுங்கள்” என்று வைத்தியா கூறியுள்ளார்.

வகுப்பு நடத்தியவர்களில் ஒருவருக்குமே ஆங்கிலம் தெரியாதா? அரசமைப்புச் சட்டப்படி இந்திய அரசின் அலுவல் மொழி ஆங்கிலம்! நடுவண் அமைச்சரவையில் ஒரு துறைக்கு செயலாளராக இருக்கும் வைத்தியாவுக்கு ஆங்கிலத்தில் பேச வராதா? இது உண்மையான காரணமல்ல; செய்தியாளர்கள் கேட்டதற்குச் சமாளித்து பதில் சொல்லி இருக்கிறார் வைத்தியா.

“போக்கிரிகள், காலிகள், அந்தப் பயிலரங்கில் கலந்து கொண்டு, சத்தம் போட்டு, அதைச் சீர்குலைத்து விட்டனர்” என்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார் வைத்தியா!

பயிலரங்கில் கலந்து கொண்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த இயற்கை மற்றும் யோகா மருத்துவத் துறையினர், “ஆங்கிலத்தில் பேசுமாறு கேட்டதற்கு “பயிலரங்கத்திற்கு எதிராக இடையூறு செய்கிறீர்கள். இதற்குரிய தண்டனை உங்களுக்குத் தரப்படும்” என்று வைத்தியா மிரட்டியுள்ளார்.

தமிழ்நாட்டில் மருத்துவத் துறையில் முக்கியப் பொறுப்பு வகிக்கும் அதிகாரிகளை – மரபுவழி மருத்துவர்களை போக்கிரிகள் என்றும், வெளியேறுங்கள் என்றும் தண்டிப்பேன் என்றும் மிரட்டி இழிவுபடுத்தும் துணிச்சல் நடுவண் அமைச்சகம் ஒன்றின் செயலாளர்க்கு எங்கிருந்து கிடைத்தது?

மோடி அரசின் இந்தித் திணிப்பின் வேகத்திலிருந்தும், ஒற்றை ஆட்சி எதேச்சாதிகாரத்திலிருந்தும் இந்த இழிசெயல் துணிச்சல் நடுவண் அரசின் அதிகாரிகளுக்குக் கிடைத்திருக்கிறது.

இதுதான் இட்லர் பாணி அதிகாரவர்க்கத்தின் குணம்! உலகை ஆளப்பிறந்தது ஆரிய இனம் என்று கொக்கரித்தார் இட்லர். இந்தியாவை ஆளப்பிறந்தது ஆரிய இனமும் சமற்கிருத மொழியுமே என்று தனக்குள் கொக்கரித்துக் கொண்டு, அதற்கான நாஜி வேலைகளில் ஈடுபடுகிறது மோகன் பகவத் மோடி அரசு!

இதற்கேற்ப முன் மழலைப் பருவத்திலிருநது முதுநிலை ஆய்வுக் கல்விவரை இந்திமயமாக்கப்படுவதற்கும், இந்தியப் பன்மைப் பண்பாட்டை ஒற்றை ஆரிய – சமற்கிருதப் பண்பாடாக மாற்றுவதற்கும் புதிய கல்வித் திட்டத்தைத் திணித்துள்ளது மோடி அரசு!

சில நாட்களுக்கு முன் 09.08.2020 அன்று வானூர்தி நிலையத்தில், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியைப் பார்த்து, “இந்தி தெரியாது என்றால் நீங்கள் இந்தியரா? இல்லையா?” என்று கேட்டார் நடுவண் அரசின் தொழில்துறைக் காவல்படையைச் சேர்ந்த இந்திக்காரர்!

அரசமைப்புச் சட்டத்தைத் திருத்தாமலேயே கிட்டத்தட்ட ஒற்றையாட்சியை நிலைநாட்டிவிட்டார் மோடி! பல்வேறு தேசிய இனங்களின் தனி அடையாளங்களை அழிப்பது, அவர்களின் தாய்மொழியை அருங்காட்சியகத்திற்கு அனுப்பி வைப்பது, இந்தி – சமற்கிருத ஏகாதிபத்தியத்தை நிர்மானிப்பது என்ற தங்களின் இலட்சியத்தில் ஆரியத்துவாவாதிகள் வெகு தொலைவு சென்றுவிட்டார்கள்!

ஏ, தமிழினமே, உனக்கு இன்னுமா இச்சூது விளங்கவில்லை? விளங்கவில்லையா? அல்லது 2021 சட்டப்பேரவையில் எங்கள் கட்சிக்கு வாக்களி; அதுவே சர்வரோக நிவாரணி என்று பேசிக் கொண்டிருக்கும் தேர்தல் கட்சிகள் உன்னைக் குழப்பிவிட்டனவா?

தமிழர்களைப் பார்த்து, இந்தி தெரியாதென்றால் பயிலரங்கை விட்டு வெளியேறு என்று கொக்கரித்த அதிகாரி மீது இதுவரை மோடி அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? நடவடிக்கை எடுக்குமாறு எடப்பாடி அரசு ஏன் கோரிக்கை எழுப்பவில்லை?

ஆங்கிலம் இந்திய அரசின் அலுவல் மொழி என்று அரசமைப்புச் சட்டம் கூறுகிறது. அந்த மொழியில் பேசும்படிக் கேட்டால் குற்றமா?

இந்தி தெரியாத தமிழ்நாட்டை இந்தியாவிலிருந்து வெளியேற்றி விடுவார்களா?


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

 

Labels: , ,

பிரசாந்த் பூசன் - நெடுங்குன்றமாய் நிமிர்ந்து நிற்கிறீர்கள்! - ஐயா பெ. மணியரசன் கட்டுரை!

Thursday, August 20, 2020



பிரசாந்த் பூசன் -
நெடுங்குன்றமாய் நிமிர்ந்து நிற்கிறீர்கள்!


ஐயா பெ. மணியரசன்,
தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்.


இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பொப்டே அவர்களின் சில தீர்ப்புகளையும், பொதுவாக உச்ச நீதிமன்றத்தின் அண்மைக்கால செயல்பாடுகளையும் விமர்சிக்கும் வகையில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூசன் ( Prashant Bhushan ) இரண்டு சுட்டுரைகளை (ட்விட்டுகளை) வெளியிட்டிருந்தார்.

அவை உச்ச நீதிமன்றத்தை அவமதித்து விட்டதாக, உச்ச நீதிமன்றம் தானாக முடிவு செய்து, பூசன் மீது வழக்குத் தொடுத்தது. நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வு விசாரித்து அண்மையில் (14.08.2020) குற்றம் மெய்ப்பிக்கப்பட்டதாகத் தீர்ப்பளித்தது.

பிரசாந்த் பூசன் குற்றவாளி என்று தீர்ப்பளித்துவிட்டு, தண்டனை விவரத்தை 20.08.2020 அன்று அறிவிப்போம் என்று அருண் மிஸ்ரா அமர்வு அறிவித்தது.

இந்தியா முழுவதுமிருந்து முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி உள்ளிட்ட உச்ச நீதிமன்ற – உயர் நீதிமன்ற நீதிபதிகளும், மூத்த வழக்கறிஞர்களும், எதிர்க்கட்சித் தலைவர்களும், ஊடகத்தார்களும், அறிவாளர்களும், குடிமை உரிமை இயக்கங்களும் அருண் மிஸ்ரா அமர்வின் தீர்ப்பை எதிர்த்து, அறிவார்ந்த விமர்சனங்களும் விவாதங்களும் நடத்தி வருகின்றனர்.

இன்று (20.08.2020) உச்ச நீதிமன்றத்தில் நேர்நின்ற பிரசாந்த் பூசன் அளித்த வாக்குமூலம் வரலாற்றுச் சிறப்புமிக்கது! இளந்தலைமுறையினர் கற்றுக் கொள்ள வேண்டியது. இதோ பிரசாந்த் பூசனின் வீரவரிகள் – தன்மான வரிகள் – சனநாயகக் காப்புச் சொற்கள் சில :

“நான் மனம் வருந்தினேன்; தண்டிக்கப்படப் போகிறேன் என்பதற்காக அல்ல! நான் நீதிபதிகளால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறேன் என்பதற்காக!

“நான் அதிர்ச்சி அடைந்தேன் எதற்காக? “கெடுநோக்கம், இழிவுபடுத்தும் எண்ணம் ஆகியவற்றால் திட்டமிட்டு நீதித்துறையைத் தாக்கினேன்” என்று நீதிபதிகள் வந்த முடிவைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.

”நான் இக்குற்றங்களைச் செய்தேன் என்பதற்கு எந்தச் சாட்சியமும் தராமல் – நீதிமன்றம் இந்த முடிவுக்கு வந்துள்ளதே என்று மட்டும் குழம்பிப் போனேன்.

“நான் மீண்டும் சொல்கிறேன்; இரு சுட்டுரை விமர்சனங்களை எனது நேர்மையான நம்பிக்கைகளின் அடிப்படையிலேயே முன்வைத்தேன். சனநாயகத்தில், எந்த உயர் அமைப்பின் மீதும் வெளிப்படையான விமர்சனம் தேவை. அதுவே அவற்றைப் பாதுகாக்கும்.

“காந்தியடிகள் நீதிமன்றத்தில் சொன்னவற்றையே நான் இப்போது சொல்கிறேன் :

“நான் உங்களிடம் கருணை கோரவில்லை. உங்களின் பெருந்தன்மைக்கு நான் வேண்டுகோள் வைக்கவில்லை. நான் இங்கு இருக்கிறேன்; உங்களின் எந்தத் தண்டனையையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறேன். நான் செய்தது குற்றம் என்று சட்ட வரையறைப்படி நீதிமன்றம் முடிவுக்கு வந்தால், அத்தண்டனையை ஒரு குடிமகனின் பெருமைக்குரிய கடமை என்று ஏற்கிறேன்”.

பிரசாந்த் பூசன், நெடுங்குன்றமாய் நிமிர்ந்து நிற்கிறீர்கள்; வாழ்த்துகள்!

(குறிப்பு : பிரசாந்த் பூசன் மன்னிப்புக் கேட்க உச்ச நீதிமன்றம் மூன்று நாள் அவகாசம் கொடுத்து தீர்ப்பைத் தள்ளி வைத்துள்ளது).


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
 

 

Labels: ,

வேலைக்கான புதிய அனைத்திந்தியத் தேர்வு தமிழ்நாட்டு மாணவர்களைக் கழித்துக் கட்டும்! - ஐயா பெ. மணியரசன் அறிக்கை!



வேலைக்கான புதிய அனைத்திந்தியத் தேர்வு
தமிழ்நாட்டு மாணவர்களைக் கழித்துக் கட்டும்!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
பெ. மணியரசன் அறிக்கை!

பொழுது விடிந்தால் புதிய குண்டு ஒன்றை மக்கள் உரிமைகளின் மீது வீசுவது மோடி அரசின் கொரோனாக் காலக் கொள்கையாகிவிட்டது. அவ்வாறு நேற்று (19.08.2020) புதிய சுமையாக – வேலைக்கான அனைத்திந்திய நுழைவுத் தேர்வை அறிவித்துள்ளது.

முதற்கட்டமாகத் தொடர்வண்டித் துறை, வங்கித் துறை, நடுவண் அரசின் பணியாளர் தேர்வுத் துறை ஆகிய மூன்றுக்குமான ஊழியர் வேலைக்கு இந்திய அரசு அனைத்திந்திய முதல்நிலைத் தேர்வு முறையை அறிவித்துள்ளது.

“தேசியப் பணிசேர்ப்பு முகமை (NRA)” என்ற இந்த அமைப்பு மேற்கண்ட மூன்று துறைகளில் வேலைக்குச் சேர்வதற்கான முதல்நிலைத் தேர்வு நடத்தும். இதில் வெற்றி பெறுவோர் மட்டுமே மேற்படி மூன்று துறைகளும் தனித்தனியே நடத்தும் பணியாளர் வேலைக்கான தேர்வுகளை எழுத முடியும். இந்த இரண்டாம் நிலைத் தேர்வில் வெற்றி பெறுவோர் மட்டுமே வேலைக்கு எடுக்கப்படுவர்.

இந்த முதல்நிலைத் தேர்வு, இந்திய அரசின் எல்லாத்துறைகளின் பணி சேர்ப்பிற்கும் மாநில அரசுகளின் பணி சேர்ப்பிற்கும் தனியார் துறைப் பணிகளுக்கும் பின்னர் விரிவுபடுத்தப்படும் என்றும் மோடி அரசின் அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இந்த முதல்நிலைத் தேர்வில் முதலில் தோல்வியுறுவோர் தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்குத் திரும்பத் திரும்ப எழுதலாம் என்கிறது இதன் விதிமுறை!

ஒரு வேலைக்கு ஒரு தடவைத் தேர்வெழுதிய மாணவர்களை – இப்போது இரு தடவை தேர்வெழுதும்படி செய்துள்ளது மோடி அரசு! ஆனால், தேர்வை எளிமைப்படுத்தி, மாணவர்களுககு உதவும் வகையில் வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டத்தை அறிவித்துள்ளது என்று நடுவண் அமைச்சர் ஜவடேகர் செய்தியாளர்களிடம் நேர்காணல் கொடுத்தார். இட்லரின் கோயபல்சு நினைவுக்கு வருகிறார்.

கூடுதலாகச் சுமத்தப்பட்டுள்ள இந்தப் புதிய அனைத்திந்தியத் தேர்வு, ஒடுக்கப்பட்ட – பிற்படுத்தப்பட்ட – கிராமப்புற மாணவர்களை வடிகட்டிக் கழித்துக்கட்டுவதற்கான ஏற்பாடு என்பதை எளிதில் புரிந்து கொள்ள முடியும்!

இந்த புதிய அனைத்திந்திய நுழைவுத் தேர்வு இந்திய அரசின் நடுவண் கல்வி வாரிய (சி.பி.எஸ்.இ.) மற்றும் என்.சி.இ.ஆர்.ட்டி. (NCERT) பாடத் திட்ட அடிப்படையில் நடத்தப்படும். தமிழ்நாடு அரசின் பாடத் திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு இந்த வினாத்தாள்கள் இவர்களின் பாட வரம்புக்கு வெளியே உள்ளவையாக இருக்கும். எனவே, தமிழ்நாட்டு மாணவர்கள் தோல்வி அடைவதற்கான வாய்ப்புகள் இந்த வழியிலும் உண்டு.

இப்போது, இந்திய அரசு நிறுவனங்கள் நடத்துகின்ற வேலைக்கான அனைத்திந்தியத் தேர்வுகளில் மண்ணின் மக்களாகிய தமிழர்கள் எந்த அளவு புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதையும், இந்திக்காரர்களும் மற்ற வெளி மாநிலத்தவர்களும் இத்தேர்வுகளில் சற்றொப்ப 95 விழுக்காட்டிற்கு மேல் தேர்வு செய்யப்படுவதையும் ஏற்கெனவே நாமறிவோம்.

புதிய அனைத்திந்திய முதல்நிலை நுழைவுத் தேர்வு வந்துவிட்டால், அந்தந்தத் துறைகள் நடத்தும் தேர்வெழுதும் தகுதியைக் கூடத் தமிழர்கள் பெற முடியாமல் வடிகட்டப்படுவார்கள் என்பது மட்டும் உறுதி.

அடுத்து, மேற்படி நுழைவுத் தேர்வில் வெற்றி பெறும் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாட்டுத் தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றின் பணிகளுக்கான தேர்வெழுதத் தாராளமாக வருவார்கள்! தமிழ்நாட்டின் மாநில அரசு மற்றும் தனியார் துறைப் பணிகளும் வடவர்களுக்கே அளிக்கப்படும். தமிழ்நாட்டின் இளையோர் அகதிகளாக அலையும் அவலம் உருவாகும்!

தமிழ்நாட்டு இளையோர்க்கு வேலை மற்றும் மேல்படிப்பு படிக்க வாய்ப்புளைப் பறிப்பது மட்டுமின்றி, அவர்களின் உயிரையும் பறிக்கும் அவலம் ஏற்கெனவே அனைத்திந்திய “நீட்” தேர்வால் நடந்து கொண்டுள்ளது. அண்மையில் கோவையில் சுபஸ்ரீ என்ற மாணவி “நீட்” தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்டார் என்பது அபாய எச்சரிக்கை!

ஒவ்வொரு உரிமைப் பறிப்பிற்கும் தனித்தனியே கண்டனம் தெரிவித்து, அடையாள ஆர்ப்பாட்டம் நடத்தி ஓயந்து போவதில் பயன் இல்லை. ஒட்டுமொத்தமாக மோடி அரசு, நமது அனைத்து உரிமைகளையும் பறிக்கிறது என்பதைப் புரிந்து கொண்டு, மக்கள் குறிப்பாக இளையோர் ஒன்று திரள வேண்டும். மண்ணின் மக்கள் உரிமை மீட்பிற்கான மாபெரும் மக்கள் திரள் அறப்போர் எழுச்சிக்கு அனைவரும் அணியமாக வேண்டும்!


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

 

Labels: , ,

தனியார் தொலைக்காட்சிகளில் ஆரியத்துவா அதிகாரம்! - ஐயா பெ. மணியரசன், கட்டுரை!

Tuesday, August 18, 2020


தனியார் தொலைக்காட்சிகளில்
ஆரியத்துவா அதிகாரம்!


ஐயா பெ. மணியரசன்,
தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்



அரசனாய் இல்லாமல் ஆட்சியை இயக்குவது ஆரியத்திற்குக் கைவந்த கலை! ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அதைச் செய்து வருகிறது.

சிறுபான்மையாய் இருந்து கொண்டு, பெரும்பான்மையை ஆட்டிப் படைப்பது, துணைக் கண்டத்தில் சொந்த தேசமில்லாது, இயற்கையான தேசியங்களுக்கு எசமான வேலை பார்ப்பது, சொந்தத் தாய்மொழி இல்லாமல் மற்றவர்களின் தாய் மொழிகளை சமற்கிருதமயமாக்குவது, சொந்தக் கோயில் இல்லாமல் பிறர் தெய்வங்களுக்குச் சூத்திரதாரி ஆவது போன்றவையெல்லாம் ஆரியத்தின் அடிப்படைச் சூழ்ச்சிகள்!

அதுபோல்தான் தமிழ்நாட்டில் ஆட்சியில் இல்லாமலேயே இப்போது ஆட்சி செய்கிறது ஆரியம்! அவர்களுக்கு இப்போதுள்ள கூடுதல் வலிமை, தில்லி ஏகாதிபத்தியத்தின் ஆட்சி அவர்கள் கையில் இருப்பதாகும்! இதுவரை பதுங்கிக் கிடந்த பிராமண அறிவுசீவிகள், நடுநிலை நாடகமாடியோர், இப்போது படமெடுத்து ஆடுகின்றனர்.

நியூஸ்-18 தமிழ் தொலைக்காட்சியில் - அதன் தலைமை ஆசிரியராக – நிர்வாகியாக இருந்த குணசேகரன், விவாத அரங்கப் பொறுப்பிலிருந்த செந்தில் மற்றும் ஆசிப், இளையபாரதி போன்றோர் வெளியேறிவிட்டார்கள்; இவர்கள் பல்வேறு வடிவங்களில் “வெளியேற்றப்பட்டார்கள்”!

நியூஸ்-18 தனியார் துறைத் தொலைக்காட்சி! முதலாளி வடநாட்டைச் சேர்ந்த ரிலையன்சு குழுமம்! தமிழ்நாட்டைச் சேர்ந்த முதலாளிகள் நடத்தும் மற்ற தொலைக்காட்சிகளிலும் ஆர்.எஸ்.எஸ். – பா.ச.க. ஆரியவாதிகளின் தலையீடு அதிகரித்து வருகிறது.

யாரையெல்லாம் கருத்துக் கூறக் கூப்பிடக் கூடாது என்று இந்த ஆரியத்துவாவாதிகள் தனியார் துறைத் தொலைக்காட்சிகளுக்குப் பட்டியல் தருகிறார்கள். அப்பட்டியலாரை அழைக்காமல் செயல்படுகின்றன தொலைக்காட்சிகள்!

அடுத்து, ஆர்.எஸ்.எஸ். – பா.ச.க. தரப்பிலிருந்து ஒவ்வொரு விவாத அரங்கிலும் இரண்டு பேரைக் கூப்பிட வேண்டும் எனறு அறிவுறுத்தியது ஆரியத்துவா முகாம். அதையும் கடைபிடித்தன தொலைக்காட்சிகள். பா.ச.க. சார்பில் ஒருவர் கலந்து கொள்வார்; இன்னொருவர் பத்திரிக்கையாளர் அல்லது வலதுசாரிச் சிந்தனையாளர் அல்லது சமூக ஆர்வலர் என்ற பட்டத்துடன் கலந்து கொள்வார்.

அண்மைக்காலம் வரை தொலைக்காட்சிக் கருத்தாடல்களில் - கலந்துரையாடல்களில் திராவிடவாதிகளை சகித்துக் கொண்டார்கள்; கம்யூனிஸ்ட்டுகளை சகித்துக் கொண்டார்கள்; ஆனால், தமிழ்த்தேசியவாதிகளை மட்டும் சகித்துக் கொள்ளவே முடியாது என்றார்கள் ஆரியத்துவாவாதிகள்! ஆனால், இப்போது இந்த மூன்று தரப்பாரையும் சகித்துக் கொள்ள முடியாது என்கிறார்கள்! தொலைக்காட்சி செய்திப் பிரிவில், விவாதப் பிரிவில் மேற்கண்ட மூன்று பிரிவாரும் பணியாற்றக் கூடாது என்கிறார்கள்.

நியூஸ் – 18 தமிழ்த் தொலைக்காட்சியிலிருந்து மேற்கண்ட அழுத்தங்களால்தான் சிலர் வெளியேறினர்; வேறு சிலர் வெளியேற்றப்பட்டனர். புதிய தறைமுறை உள்ளிட்ட சில தொலைக்காட்சிகளிலும் இந்த அழுத்தங்கள் இப்போது கூடுதலாகி உள்ளன.

விவாதங்களில் பங்கேற்கும் ஆரியத்துவாவாதிகளிடம் அவர்களை மடக்குவதுபோல் நெறியாளர்கள் வினாக்கள் கேட்கக்கூடாதாம்! ஆரியத்தார் பேசினால் – ஆண்டவன் பேசுவதாகப் பொருள் என்று ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் மண்ணின் மக்களைப் பழக்கி வைத்துள்ளார்கள் அல்லவா! இருபத்தோராம் நூற்றாண்டில் – மோடியின் நவீன டிஜிட்டல் இந்தியாவில் – தமிழ்நாட்டில் அவ்வாறான எசமான ஏற்பிசைவை மக்களிடம் எதிர்பார்க்கிறார்கள்.

இன்னொருபுறத்தில், ஒடுக்கப்பட்ட – மிகவும் பிற்படுத்தப்பட்ட – பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த இளைஞர்கள், ஊடகத்துறையில் செல்வாக்கு செலுத்துவதையும் ஆரியத்துவாவாதிகளால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

மோடி அரசு போடும் சட்டங்கள் – அறிவிக்கும் திட்டங்கள் எதையும் யாரும் எதிர்த்துப் பேசக் கூடாது; மாற்றுக் கருத்துக் கூறக்கூடாது என்று தமிழ்நாட்டுப் பா.ச.க.வினர் “முடிவு” செய்துள்ளார்கள். அனைத்திந்தியப் பா.ச.க.வின் பாசிச முடக்கம்தான் இது! ஆனால், மாநில ஆட்சியில் இல்லாத பா.ச.க.வினர்க்கு இப்படிப்பட்ட துணிச்சல் எங்கிருந்து வருகிறது?

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியாகக் கூட இல்லாத கட்சியினர்க்கு – சட்டப்பேரவைத் தேர்தலில் காப்பீட்டுத் தொகையைக் காப்பதற்குரிய வாக்குகள் கூட வாங்க முடியாத கட்சியினர்க்கு இவ்வளவு பெரிய துணிச்சல் எங்கிருந்து வருகிறது?

இரண்டு இடங்களில் இருந்து இத்துணிச்சல் வருகிறது. ஒன்று, தில்லி ஏகாதிபத்திய அதிகார மையம் தரும் பாசிச அதிகாரம்! இன்னொன்று, ஆரிய இனவாதத்திற்கு நேர் எதிரான தமிழின அரசியலையும் அதற்கான பாசிச எதிர்ப்பு செயல்திட்டங்களையும் துணிச்சலுடன் கொண்டிராதத் தமிழ்நாட்டுத் திராவிட அரசியல்; குனிந்து நட என்று தில்லி மையம் கூறினால், மண்டியிட்டுச் செல்கிறது அ.இ.அ.தி.மு.க. ஆட்சி!

அடுத்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் எங்கள் தலைமையில்தான் அ.இ.அ.தி.மு.க. கூட்டணி சேர வேண்டும் என்று பா.ச.க.வின் பல்லக்குத் தூக்கிகள் சொல்லும் அளவிற்கு அ.இ.அ.தி.மு.க.வின் நிலை மோசமாக உள்ளது.

பா.ச..க கூட்டணியிலிருந்து அ.இ.அ.தி.மு.க. விலகிக் கொண்டால், தி.மு.க. என்ன நிலை எடுக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஏற்கெனவே கலைஞர் கருணாநிதி பா.ச.க.வோடு கூட்டணி சேர்ந்து, முரசொலி மாறன் உள்ளிட்ட தம் கழகத்தினரை தில்லிக் கூட்டணி ஆட்சியில் பங்கெடுக்கச் செய்தார் (1999 – 2004).

இந்தத் துணிச்சலில்தான், வெளியிலிருந்து அழுத்தம் கொடுத்து, சன் தொலைக்காட்சியிலிருந்து ஊடகவியலாளர் வீரபாண்டியன் அவர்களை வெளியேற்றினார்கள். அப்போக்கு இப்போது, மிகத்தீவிரம் பெற்றுள்ளது.

தமிழ்நாட்டின் ஆற்றுநீர் உரிமை, மின்சார உரிமை, வேளாண்மை உரிமை, உழவர் உரிமை, ஞாயவிலைக் கடை உரிமை, கல்வி உரிமை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உரிமை முதலியவற்றைக் கடந்த ஐந்து மாதங்களில் கொரோனா முடக்கத்தில் பா.ச.க. ஆட்சி பறித்துவிட்டது. பா.ச.க.வின் போலி ஆன்மிகத்திற்கு மாற்றாக யாராவது பேசிவிட்டால், அவர்கள் மீது உடனே வழக்கு – கைது – பின்னர் குண்டர் சட்டம் என்று ஏவுகிறது எடப்பாடி அரசு!

தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வராமலே, தில்லி அதிகாரத்தை வைத்து பா.ச.க.வினர் நமது கருத்துரிமையை பறித்து வருகிறார்கள்.

ஆரியம் தனது மரபணுவிலேயே சர்வாதிகாரத்தைக் கொண்டுள்ளது.

நம்மைப் பொறுத்தவரை, தமிழ்த்தேசியமும் சனநாயகமும் பிரிக்க முடியாதவை; பிரிக்கக் கூடாதவை!

சனநாயகக் காப்புக் கருத்துப் பரப்பல் – களப்போராட்டம் ஆகியவற்றை அனைத்து முனையிலும் கொண்டு செல்ல வேண்டும்! எதிர்த்துப் போராடுவதே சிறந்த தற்காப்பு உத்தி!


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
 

 

Labels:


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்