<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d6955529389241309188\x26blogName\x3d%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86.%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://thozharmaniyarasan.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com/\x26vt\x3d-8408640130511538487', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முழுமையான தமிழ்த்தேசியர் தமிழறிஞர் ம.இலெ. தங்கப்பா தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் இரங்கல்!

Thursday, May 31, 2018



"முழுமையான தமிழ்த்தேசியர் 
தமிழறிஞர் ம.இலெ. தங்கப்பா"

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் இரங்கல்!



மூத்த தமிழறிஞர், முழுமையான தமிழ்த்தேசியர் முனைவர் ம.இலெ. தங்கப்பா அவர்கள் 31.05.2018 விடியற்காலையில் புதுவையில் தம் இல்லத்தில் காலமானார் என்ற செய்தி பேரிடியாய் நெஞ்சில் இறங்கியது. நானும் தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி, புதுவை ஒருங்கிணைப்பாளர் தோழர் இரா. வேல்சாமி உள்ளிட்ட தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்களும் ஐயாவுக்கு வீரவணக்கம் செலுத்தச் சென்றோம்.

மறைமலையடிகளார், பாவாணர், பெருஞ்சித்தனார் வரிசையில் அடுத்து நின்றவர் ம.இலெ. தங்கப்பா அவர்கள். தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆழ்ந்த புலமை! வெளியிலும் வீட்டியிலும் தனித்தமிழே பேச்சு மொழி! குடும்பமே தமிழியக்கக் குடும்பம்!

ஐயாவின் இல்லத்தரசியார் விசாலாட்சி அம்மையார் தூயத்தமிழில் சரளமாய் வீட்டில் பேசுவார்; அவர்கள் பிள்ளைகள் செங்கதிர், விண்மீன், பாண்டியன், இளம்பிறை, மின்னல் ஆகியோர் தூயத்தமிழிலே உரையாடுவர்! எழுதுவர்!

தங்கப்பா அவர்கள் கட்டுரை மற்றும் பாக்களை 1965 – 1966 ஆம் ஆண்டுகளில் “தென்மொழி” இதழில் படித்ததின் வழியாக ஐயா அவர்கள் மீது எனக்கு ஈர்ப்பு உண்டானது. திருச்சி தேவர் மன்றத்தில் 1968இல் நடந்த உலகத் தமிழ்க் கழக முதல் அமைப்பு மாநாட்டில் தங்கப்பா அவர்களின் அறிவார்ந்த உரையைக் கேட்டேன். பாவேந்தர் பாரதிதாசன் பாக்களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து “தென்மொழி”யில் வெளியிட்டார் தங்கப்பா!

கழக (சங்க) இலக்கியங்கள், வள்ளலார், பாரதியார், பாவேந்தர் பாடல்களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ளார். சங்க இலக்கியங்களை (Love Stands Alone) என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் தந்தார். அந்நூலுக்கு சாகித்திய அகாதமி விருது வழங்கியது. ஐயாவின் “சோளக் கொள்ளை பொம்மை” என்னும் சிறுவர் இலக்கிய நூலுக்கும் சாகித்திய அகாதமி விருது வழங்கியது.

இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். தம்பட்டம் அறியா தமிழ்ச் சான்றோர்; ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைக் குன்றம் ம.இலெ. தங்கப்பா!

புதுவை அரசு ம.இலெ. தங்கப்பா அவர்களுக்கும், முனைவர் இரா. திருமுருகன் அவர்கட்கும் “கலைமாமணி” விருது அளித்தது. அரசு அலுவலர்கள் தமிழில்தான் கையொப்பமிட வேண்டும் என்று ஆணை இடுமாறு புதுவைத் தமிழறிஞர்கள் புதுவை அரசிடம் கோரிக்கை வைத்தார்கள். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றவுடன் இவ்விருவரும் புதுவை அரசு தங்களுக்கு வழங்கிய கலைமாமணிப் பட்டத்தைத் திருப்பி அனுப்பி விட்டனர்!

ம.இலெ. தங்கப்பா அவர்கள் ஆய்வறிஞர் மட்டுமல்ல; களப் போராளியும் ஆவார்! தமிழ் மொழி, தமிழீழம் சார்ந்த போராட்டங்களில் புதுவையிலும் கலந்து கொண்டு தளைப்படுவார். தமிழ்நாட்டிலும் கலந்து கொண்டு தளைப்படுவார்.

“தமிழர் கண்ணோட்டம்” இதழில் அவ்வபோது கட்டுரை எழுதி வந்தார். அவர் எழுதிய மடலே ஒரு கட்டுரையாக தமிழர் கண்ணோட்டத்தில் வெளிவந்தது. கடைசியாக அவரது அருமையான கட்டுரை தமிழர் கண்ணோட்டம் 2018 மே 16 – 31 இதழில் வெளிவந்தது. அதன் தலைப்பு: நிற வெறி – இன வெறி – சாதி வெறி வேர்கள் எங்கே? அகற்றுதல் எங்ஙனம்? 

உடல்நலமின்றி ஐயா அவர்கள் இருக்கிறார்கள் என்பதறிந்து 03.05.2018 அன்று புதுவை சென்று ஐயாவையும் அம்மாவையும் பார்த்து நலம் விசாரித்து வந்தோம்! முடியாத நிலையிலும் இருவரும் கலகலப்பாகப் பேசினார்கள்!

நேற்று (31.05.2018) மாலை புதுவையில் ஐயாவின் இல்லத்திலிருந்து புதுவை சிப்மர் மருத்துவமனைவரை அவர் உடல் பின்னால் வந்தோம். அவர் விருப்பப்படி அவர் உடல் மருத்துவக் கல்லூரி மாணவர்களின் ஆய்வுக்கு ஒப்படைக்கப்பட்டது.

அதற்கு முன் மருத்துவமனை வளாகத்தில் நடந்த இரங்கல் கூட்டத்தில் ஐயா நெடுமாறன் அவர்களும் நானும் மற்றவர்களும் பேசினோம்.

“தமிழ்த்தேசியத்தில் உங்கள் பாதை சரியாக இருக்கிறது; முன்னேறிச் செல்லுங்கள்!” என்று ஐயா அவர்கள் 03.05.2018 அன்று என்னிடம் கூறிய சொற்கள் இன்று அவர் உடல் அருகே நின்று இரங்கல் உரையாற்றிய போது என் மனதில் எதிரொலித்தது!

நாங்கள் மட்டுமல்ல, நாம் எல்லோரும் ஐயா ம.இலெ. தங்கப்பா அவர்கள் வாழ்ந்து காட்டிய – வகுத்துக்கொடுத்துள்ள தமிழ்த்தேசியப் பாதையில் முன்னேறிச் செல்வோம்! இதுவே ஐயாவுக்கு தமிழர்கள் செலுத்தக் வேண்டிய நன்றிக்கடன்! 

Labels:

ஒடுக்குமுறை அரசே! வேல்முருகன் உள்ளிட்டோரை விடுதலை செய்! தோழர் பெ. மணியரசன் அறிக்கை!

Tuesday, May 29, 2018




ஒடுக்குமுறை அரசே! 

வேல்முருகன் உள்ளிட்டோரை விடுதலை செய்!



தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
தோழர் பெ. மணியரசன் அறிக்கை!


தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் திரு. தி. வேல்முருகன் அவர்களை, கைது செய்த முறையும் காவல்துறையினர் அவரை நடத்திய விதமும் கடுங்கண்டனத்திற்குரியவை. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினர்க்கு ஆறுதல் சொல்லவும், காயம்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து நலம் விசாரிக்கவும் வந்தவரை 24.05.2018 அன்று தூத்துக்குடி விமான நிலையத்தில் கைது செய்து, இரவோடிரவாக விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் கொண்டு சென்று 26.05.2018 அன்று நீதிமன்றத்தில் நிறுத்தி, அங்கிருந்து சென்னை புழல் சிறையில் கொண்டுபோய் அடைத்துள்ளார்கள். 

தேசிய நெடுஞ்சாலையில் உள்ள உளுந்தூர்பேட்டை கட்டண வசூல் சாவடியைத் தாக்கியதாக 01.04.2018 அன்று திரு. வேல்முருகன் உள்ளிட்ட 11 பேர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் 24.05.2018 அன்று தூத்துக்குடி விமான நிலையத்தில் வைத்து கைது செய்ததன் மர்மம் என்ன? 01.04.2018லிருந்தே வேல்முருகன் தலைமறைவாக இருந்தாரா? இவ்வழக்கில் ஏற்கெனவே வாழ்வுரிமைக் கட்சியைச் சேர்ந்தவர்கள் பத்து பேர் பலநாள் சிறையிலடைக்கப்பட்டு பிணையில் வந்துள்ளார்கள். 

அவர் கட்சியின் பெயருக்கேற்ப எத்தனையோ வாழ்வுரிமைப் போராட்டங்களைத் தொடர்ந்து நடத்திக் கொண்டும், அவற்றில் பங்கேற்றுக் கொண்டும்தான் இருந்தார். அடுத்தடுத்து மக்களுக்கான சனநாயகப் போராட்டங்களை அவர் நடத்தியதுதான் தமிழ்நாடு அரசின் பார்வையில் குற்றமா? 

உளுந்தூர்பேட்டை வழக்கிற்காகக் காவல்துறை கைது செய்ய விரும்பியிருந்தால் எப்போதோ அவரைக் கைது செய்திருக்கலாம். தூத்துக்குடியில் வைத்துக் கைது செய்ததில் ஓர் உள்நோக்கம் இருக்கிறது. குறிப்பிட்ட எண்ணிக்கையில் சிலரை சுட்டுக்கொல்ல வேண்டும், பலரைப் படுகாயப்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்ட மனித அழிப்பும் மனித வதையும்தான் தூத்துக்குடித் துப்பாக்கிச் சூடு! அந்த மனித அழிப்புக்குள்ளாகி பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு தெரிவிப்போர் “கதி இதுதான்” என்று காட்டி மக்களையும், மக்கள் போராளிகளையும் அச்சுறுத்துவதுதான் தமிழ்நாடு அரசின் நோக்கம் என்று புரிகிறது. 

அண்மைக்காலமாக இவ்வாறான தேர்ந்தெடுக்கப்பட்ட அடக்குமுறையை எடப்பாடி பழனிச்சாமி – ஓ. பன்னீர்ச்செல்வம் அரசு கட்டவிழ்த்துவிட்டிருப்பதைத் தமிழினப் போராளிகளும், தமிழ் மக்களும் கவனித்துக் கொண்டு வருகிறார்கள். நான் ஏற்கெனவே ஒரு கருத்தை எடப்பாடி – ஓ.பி.எஸ். அரசு பற்றி சொல்லி வருகிறேன். இந்த அரசு பார்வைக்கு வலுவற்றதாகவும், உறுதியற்றதாகவும் தோற்றம் தருகிறது. உண்மையில் இது ஒரு தற்காலிக அரசுதான்! ஆனால் ஒடுக்குமுறையில் ஒரு எதேச்சாதிகார அரசைப் போலவே செயல்படுகிறது என்பதே அது! 

காவிரிப் போராட்டச் சூழலில், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை தவிர்க்க வலியுறுத்தி நடந்த மறியல் போராட்டத்தில் கண்ணாடி இழைத் தடியால் தாக்கிப் பலரைப் படுகாயப்படுத்தியது இதே அரசுதான்! அதில் ஒரு காவலர் தாக்கப்பட்டதை சாக்காக வைத்து, நாம் தமிழர் கட்சியினரை வீடு வீடாகத் தேடி, கைது செய்து காவல்துறை அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டதும் இவர்கள்தான்! 

அடுத்து, தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து சனநாயக வழியில் போராட்டம் நடத்திய இயக்குநர் வ. கௌதமன் அவர்களையும் தோழர்களையும் புழல் சிறையில் அடைத்தார்கள். இப்போது, வேல்முருகன் அவர்கள் மீது ஒடுக்குமுறையை ஏவி உள்ளார்கள். மக்கள் அதிகாரம், புரட்சிகர இளைஞர் முன்னணி போன்ற பல்வேறு அமைப்புத் தோழர்களையும் ஆங்காங்கு கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்கள். 

தமிழ் மக்கள் உரிமைகளுக்காகப் போராடும் இயக்கங்கள், இந்த அடக்குமுறைகளைக் கண்டு அஞ்சப் போவதில்லை. எசமானர்களின் கையாட்கள் போல் செயல்படும் எடப்பாடி – ஓ.பி.எஸ். அணியினர் தாம் மக்களிடமிருந்து மேலும் மேலும் அந்நியப்படுவார்கள். 

தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் தங்களின் தமிழினத் துரோக அரசியலையும், அடக்குமுறையையும் கைவிட வேண்டும் என்றும், திரு. வேல்முருகன் அவர்களையும், ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராளிகளையும் உடனே விடுதலை செய்ய வேண்டுமென்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

திரு. வேல்முருகன் கைதைக் கண்டித்து, நாளை (29.05.2018) மாலை 3 மணிக்கு, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தமிழக வாழ்வுரிமைக் கூட்டமைப்பு ஒருங்கிணைக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில், நானும், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்களும் பங்கேற்கிறோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

Labels:

தூத்துக்குடியில் அமைதி திரும்ப உடனடியாகச் செய்ய வேண்டியவை என்ன? பெ. மணியரசன் அறிக்கை!

Friday, May 25, 2018



தூத்துக்குடியில் அமைதி திரும்ப
உடனடியாகச் செய்ய வேண்டியவை என்ன?

நேரில் சென்று வந்த . . . 
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
தோழர் பெ. மணியரசன் அறிக்கை!



தமிழ்நாட்டின் “ஜாலியன் வாலாபாக்” ஆகிவிட்ட தூத்துக்குடிக்கு, தமிழ்நாடு காவல்துறை மனித வேட்டை நடத்திய மறுநாளே 23.05.2018 அன்று சென்றோம். தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், தலைமைச் செயற்குழு தோழர்கள் இரெ. இராசு, ம. இலட்சுமி, பொதுக்குழு உறுப்பினர் தோழர் குரும்பூர் மு. தமிழ்மணி, மகளிர் ஆயம் நடுவண் குழு உறுப்பினர் தோழர் மதுரை பே. மேரி, தோழர்கள் செரபினா, மனித உரிமை மற்றும் தமிழ் உரிமைப் போராளி வழக்கறிஞர் பகத்சிங் மற்றும் குரும்பூர் பகுதித் தோழர்கள் முதலியோரும் என்னுடன் வந்தார்கள்.
ஆள் நடமாட்டமில்லாத வீதிகள் – மூடிக்கிடக்கும் கடைகள் மற்றும் நிறுவனங்கள் – முழு சோகத்தில் தூத்துக்குடி! இந்தியா – பாக்கித்தான் எல்லையோர நகரம் போர்க்காலத்தில் இறுக மூடிக் கிடக்கும் காட்சிபோல் இருந்தது.
எந்நேரமும் பாய்வதற்கு ஆயத்தமாய் ஆயுதங்களுடன் சுற்றிவரும் காவல் படைகள் ஒருபக்கம்; மறுபக்கம் தடையை மீறி ஊர்வலம் வந்ததாகத் தங்கள் மக்களை சுட்டு வீழ்த்திய காவல்துறையினர்க்கும் ஆட்சியாளர்களுக்கும் எதிராகக் குமுறும் நெஞ்சங்களுடன் மண்ணின் மக்கள்!
தூத்துக்குடி சின்ன சகாயபுரம் (மினி சகாயபுரம்) 17 அகவை மாணவி ஸ்நோலின் 22.05.2018 துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார். அவர் வீட்டுக்குச் சென்றோம். ஸ்னோலின் தாயார், பெரியம்மா, சின்னம்மா, உறவினர் என அனைவரின் கதறலைப் பார்த்து நெஞ்சம் பதைத்தோம்! என்ன சொல்லி ஆறுதல் கூற முடியும்? அவர்களின் கதறல் ஓயவில்லை.
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமுற்றவர்களைப் பார்த்தோம். தூத்துக்குடி மறை மாவட்டத்தைச் சேர்ந்த அருட்தந்தை செயசீலன் (அகவை 68) வயிற்றில் பாய்ந்த துப்பாக்கிக் குண்டுகள் முதுகு வழியாக வெளியேறியுள்ளன. அவர் தூத்துக்குடி அமெரிக்கன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரைப் பார்த்தோம். அவரிடம் பேச முடியாத நிலை!
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இரண்டு பெரிய வார்டுகளில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டிலும், இரும்புத்தடித் தாக்குதலிலும் படுகாயமுற்றவர்கள் சற்றொப்ப 65 பேர் இருந்தார்கள்; பெண்கள் வார்டில் துப்பாக்கிச் சூட்டில் தாக்குண்ட பெண்கள் இருந்தார்கள்.
ஒவ்வொருவரிடமும் விசாரித்து ஆறுதல் கூறினோம். அவர்கள் எல்லாம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்னால் அமர்ந்து கோரிக்கை முழக்கம் எழுப்பி மாலை வரை போராட்டம் நடத்தப் போகிறோம் என்ற எண்ணத்தில் வந்திருக்கிறார்கள். குடும்பம் குடும்பமாக வந்திருக்கிறார்கள். பகல் உணவும், குடிநீர் பாட்டிலும் கையோடு எடுத்து வந்திருக்கிறார்கள்.
ஆனால் ஆட்சியாளர்கள் முன் கூட்டியே வேறு வகையாகத் திட்டம் தீட்டியிருக்கிறார்கள். சுட்டுக் கொல்லும் தனிப்பிரிவு காவல்படையினரை வரவழைத்துத் திட்டம் தீட்டியிருக்கிறார்கள். மாவட்ட ஆட்சியருடன் அந்தத் தனிப்பிரிவினர் மஞ்சள் சீருடையுடன் முன்கூட்டியே எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியிருக்கிறது. சட்டம் ஒழுங்குச் சிக்கல் எழுந்தால், துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டி வந்தால் – என்ன வகை துப்பாக்கியைப் பயன்படுத்த வேண்டும் என்று கட்டுப்பாடு இருக்கிறது. அவ்வாறு தடை செய்யப்பட்டுள்ள - தொலைவில் குறி பார்த்து சுடும் எஸ்.எல்.ஆர். துப்பாக்கிகளைக் காவல் துறையினர் பயன்படுத்தி சுட்டிருக்கிறார்கள்.
துப்பாக்கிச் சூடு இருவகையாக நடத்தப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட நபரை சாகடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் குறிபார்த்து இடுப்புக்குமேல் சுட்டத்தில்தான் தலை, முகம், மார்பு, வயிறு பாகங்களில் சுடப்பட்ட குண்டு பாய்ந்து அந்த இடத்திலேயே துடிதுடித்து இறந்துள்ளார்கள். அடுத்த வகையாக கூட்டத்தைக் கலைப்பதற்காக இடுப்பிற்குக் கீழே பலரைச் சுட்டிருக்கிறார்கள். அவர்கள் ஏராளமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சிகிச்சை பெற்றவர்களில் ஒருவர் நேற்று (24.05.2018) இறந்துவிட்டார்.
நாங்கள் மருத்துவமனைக்குப் போகும்முன், நடுப்பகல் நேரத்தில் மருத்துவமனை முன் கூடியிருந்தோர் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 22 அகவை இளைஞர் காளியப்பன் அந்த இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இதுவரை மொத்தம் 13 பேரைத் துப்பாக்கிகள் விழுங்கியுள்ள செய்தி தெரிந்துள்ளது.
1965இல் இந்தித் திணிப்பை எதிர்த்து நடந்த மொழிப்போரில் 300க்கும் மேற்பட்டோரை காங்கிரசு ஆட்சி சுட்டுக் கொன்றது. அப்போதுகூட பெண்கள் சுட்டுக் கொல்லப்படவில்லை. ஆனால், அ.தி.மு.க. ஆட்சியில் தூத்துக்குடியில் பெண்கள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்கள். மேலும் சில பெண்கள் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமுற்று மருத்துவமனையில் இருக்கிறார்கள்.
பெண் காவலர்கள் மூர்க்கத்தனமாகத் தாக்கியதைக் காயம்பட்டவர்கள் சொன்னார்கள். தாக்குதலில் கீழே விழுந்து கிடந்த ஒருவர் மார்பில், ஒரு பெண் காவலர் பாறாங்கல்லைத் தூக்கிப் போட்டதை பாதிக்கப்பட்டவரே எங்களிடம் சொன்னார். ஒரு காவலர் துப்பாக்கிக் கட்டையைத் திருப்பி, ஓர் இளம்பெண் வயிற்றில் ஓங்கி அடித்ததில் இரத்தப்போக்குடன் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
மக்களிடம் நாங்கள் விசாரித்த இடங்களில் எல்லாம், “திட்டமிட்டு சுட்டுக் கொன்றிருக்கிறார்கள்” என்ற கருத்து ஒரே குரலில் வந்தது. அடுத்து, “தூத்துக்குடியை விட்டு காவல்துறையை வெளியேறச் சொல்லுங்கள், நாங்கள் அமைதைியை நிலைநாட்டுகிறோம்” என்று கூறினார்கள்.
இன்று வரை (25.05.2018) தூத்துக்குடியில் நான்கு நாட்களாக இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை. கடைகள் மூடிக் கிடப்பதால், குழந்தைகளுக்குப் பால் வாங்கக்கூட வழியில்லை. உணவு உள்ளிட்ட மற்ற தேவைகளின் நிலை பற்றி கற்பனை செய்து கொள்ளலாம்.
தமிழ்நாட்டில் கடந்த அறுபதாண்டுகளில் - வரலாற்றில் இல்லாத அளவிற்கு, மக்கள் வெள்ளம் 22.05.2018 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகைக்கு இலட்சக்கணக்கில் பல்வேறு முனைகளில் இருந்து அணி அணியாக ஆண்கள், பெண்கள், மாணவர்கள் எனத் திரண்டு வந்தார்கள். அவர்களை அமைதியாக முற்றுகையிட அனுமதித்து, முழக்கமிட அனுமதித்து, முதலமைச்சர் சார்பில் ஓர் அமைச்சர் அங்கு வந்து, “ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும்” என்று எழுத்து வடிவிலான அறிக்கையை – எந்த இரு பொருளும் இல்லாமல் திட்டவட்டமாக அறிவித்து, மக்களை வெற்றி முழக்கத்துடன் கலையச் செய்திருக்கலாம்.
ஆனால், ஆட்சியாளர்களின் திட்டம் வேறாக இருந்ததுபோல் தெரிகிறது.
காவிரிச் சமவெளியில் ஓ.என்.ஜி.சி.யை வெளியேற்றிட – கனிம வேட்டையைத் தடுத்திட – நியூட்ரினோ ஆய்வகத்தைத் தடுத்திட - பல்வேறு இடங்களில் மணல் கொள்ளையைத் தடுத்திட – கோவை பகுதியில் விளை நிலங்களில் கெயில் குழாய்கள் பதிப்பதைத் தடுத்திட - இன்னும் பல்வேறு வாழ்வுரிமைகளுக்காகத் தன்னெழுச்சியாக மக்கள் நடத்திடும் போராட்டங்களைத் தடுத்திட இராணுவத்தை இறக்கிட – மோடி அரசும், எடப்பாடி அரசும் திட்டமிட்டு வருகின்றன. அதற்காக 29.04.2018 அன்று கும்பகோணத்திற்கு அதிவிரைவு இராணுவப்பிரிவு அதிகாரிகளையும், படையாட்களையும் அனுப்பி மாவட்டக் காவல்துறை அதிகாரிகளுடன் கலந்தாய்வு செய்ய வைத்தனர்.
தூத்துக்குடியில் சனநாயக வழியில் போராடும் மக்களை சகட்டுமேனிக்கு சுட்டுக் கொல்வதைப் பார்த்து, தமிழ்நாட்டில் எல்லாப் பகுதி மக்களும் பீதி அடைந்து, கோழைகளாகிவிட வேண்டும் என்று ஆட்சியாளர்கள் திட்டமிட்டார்கள். ஆனால் தூத்துக்குடியில் இத்தனை துப்பாக்கிக் கொலைகளுக்குப் பின்னர் மக்கள் மேலும் ஆவேசத்துடன் வீரத்துடன் போராடும் உணர்ச்சி பெற்றுள்ளார்கள் என்பதை அனைவரும் பார்க்கிறோம். ஆட்சியாளர்களுக்கும் தெரியும்!
இனியாவது, தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் தங்கள் அணுகுமுறையை மாற்ற வேண்டும்; மக்கள் மீது போர் தொடுக்கும் தங்கள் திட்டத்தைக் கைவிட வேண்டும்.
உடனடியாகச் செய்ய வேண்டியவை
----------------------------------------------------------
1. தூத்துக்குடியில் சமயம், சமூகம் சார்ந்த தலைவர்கள், வணிகர் சங்கத் தலைவர்கள், ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டக் குழுத் தலைவர்கள் – கல்வித்துறை சேர்ந்தவர்கள் – மாணவப் பிரதிநிதிகள் ஆகியோரைக் குறிப்பிட்ட எண்ணிக்கையில் கொண்டு அமைதிப் பேச்சு நடத்த வேண்டும். அரசு சார்பில் ஓர் அமைச்சரும் அதிகாரிகளும் கலந்து கொள்ள வேண்டும்.

அக்கூட்டத்தில், “ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிவிட்டோம்; சட்டச்சிக்கல்கள் வந்தால் சட்டரீதியாக முறியடித்து ஆலையைத் திறக்க விடமாட்டோம்” என்று முதலமைச்சர் கையொப்பமுடன் உள்ள உறுதிமொழியை எழுத்து வடிவில் மக்களுக்குத் தர வேண்டும்.
2. தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட காவல்துறையினரைத் தவிர வெளியிலிருந்து வர வழைக்கப்பட்ட காவல்துறையினர் அனைவரையும் திருப்பி அனுப்பிவிட வேண்டும்.
3. இதுவரை கைது செய்துள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். விசாரணைக்கென்று பொதுமக்களை அழைப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இவற்றைச் செய்தால் தூத்துக்குடி உள்ளிட்ட தமிழ்நாட்டு மக்களின் பதற்றம் தணியும்!

Labels:

காவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள். பெ. மணியரசன்

Sunday, May 20, 2018



காவிரி ஆணையத்தின் 
இருபெரும் ஊனங்கள்

 காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர், பெ. மணியரசன்

உச்ச நீதிமன்றம் 18.5.2018 அன்று இறுதி செய்த காவிரி மேலாண்மை ஆணையத்தில் இருபெரும் ஊனங்கள் இருக்கின்றன.
ஒன்று, கர்நாடக அணைகளின் மதகுகளைத் திறந்து மூடும் அதிகாரம் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு மட்டுமே உண்டு என்று நேரடியாகக் கூறப்படாதது.

கர்நாடக அணைகளின் மதகுகளைத் திறந்து விடும்படி காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகப் பாசனத்துறையினர்க்கு ஆணை இட்டுத்தான் செயல் படுத்த முடியும் என்ற நிலை இருந்தால், கர்நாடக அரசு அவ்வாறு தன் அதிகாரிகளும் ஊழியர்களுக்கும் திறக்கக் கூடாது என்று ஆணை இட்டால், நிலைமை என்னவாகும்?
ஏனெனில் ஏற்கெனவே பலமுறை தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்து விடும்படி உச்சநீதிமன்றம் ஆணை இட்டும் அதைச் செயல்படுத்த முடியாது என்று வெளிப்படையாகக் கர்நாடக அரசு மறுத்து வந்துள்ளது.

கடந்த 2016 இல் 10,000 கன அடி, 6,000 கன அடி, 2000 கன அடி தண்ணீர் திறந்து விடுமாறு பலமுறை உச்சநீதிமன்றத் தீபக் மிஸ்ரா ஆயம் கட்டளை இட்டும் தண்ணீர் திறந்து விட மறுத்துவிட்டது கர்நாடக அரசு. அது மட்டுமின்றி, கர்நாடக சட்டப்பேரவையைக் கூட்டி தண்ணீர் திறந்து விட முடியாது என்று ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியது கர்நாடக அரசு.
உச்சநீதிமன்றக் கட்டளையை மீறியதற்காக கர்நாடக அரசின் மீது உச்சநீதி மன்றமோ அல்லது இந்திய அரசோ ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழ்நாடு பாதிக்கப்பட்டதுதான் மிச்சம்!
இரண்டாவது ஊனம், ஏதாவதொரு மாநிலம் மாற்றுக் கருத்து கூறினால் காவிரி மேலாண்மை ஆணையத்தில் வாக்களிக்கும் உரிமையுள்ள ஒன்பது உறுப்பினர்களின் பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்துப்படி முடிவெடுக்க வேண்டும் என்று இருப்பதாகும். ஆணையத்தின் தலைவர் மற்றும் நான்கு உறுப்பினர்கள் – ஆக மொத்தம் ஐந்து பேர் நடுவண் அரசின் அதிகாரிகள்; நடுவண் அரசால் அமர்த்தப்படுவோர் ஆவர். தமிழ்நாடு உள்ளிட்ட நான்கு மாநிலங்களுக்கும் தலா ஒருவர் வீதம் நான்கு பேர்.
இதில் கர்நாடக உறுப்பினர் மாற்றுக் கருத்து தெரிவித்து, தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்து விடமறுத்தால், நடுவண் அரசின் ஐந்து உறுப்பினர்கள் நடுவண் அரசின் வழிகாட்டுதல் படி நடந்து கொள்வார்கள்.
காவிரித் தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தீர்ப்பு 1991 – இல் வழங்கப்பட்டதிலிருந்து, இறுதித்தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டு செயல்படுத்துமாறு 2013 – இல் உச்சநீதிமன்றம் ஆணையிட்டதிலிருந்து இதுவரை எந்தத் தீர்ப்பையும் செயல்படுத்த மறுத்து வருகிறது இந்திய அரசு. காங்கிரசு அரசாக இருந்தாலும் பாசக அரசாக இருந்தாலும் நடுவண் அரசின் நிலைபாடு எப்போதும் தமிழ்நாட்டிற்கு எதிராகப் பாகுபாடு காட்டுவதுதான். இனி அந்தப் பாகுபாடு தொடராது என்பதற்கு என்ன உறுதி? கர்நாடக உறுப்பினர்களின் எதிர்ப்புக்கு சாதகமாக இந்திய அரசு அதிகாரிகள் நடந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது.
இந்த இருபெரும் ஊனங்கள் புதிய காவிரி மேலாண்மை ஆணையத்தில் இருக்கின்றன. இவற்றைச் சரி செய்வது எப்படி? இந்த ஊனங்களால் பாதிப்பு வராது என்று நேரடியாக தெளிவாக உறுதி கூற நரேந்திரமோடி அரசு தயாரா?

உச்சநீதிமன்றம் அப்போது தலையிட்டு சரிசெய்யுமா? கடந்த கால அனுபவங்கள், “இல்லை” என்ற விடையைத்தான் தருகின்றன.
இவற்றிக்கப்பால், 16.2.2018 அன்று தீபக் மிஸ்ரா ஆயம் அறிவித்த காவிரித் தீர்ப்பு, இந்திய அரசமைப்புச் சட்டவிதிகளுக்கு முரணானது. 1956 ஆம் ஆண்டின் தண்ணீர்த் தகராறு சட்டத்திற்கு எதிரானது. அத்துடன் அத்தீர்ப்பு மரபுவழித் தண்ணீர் உரிமை (Riparian Right) என்ற அடிப்படை உரிமையைத் தகர்த்து விட்டது.
தேவைக் கேற்ற தண்ணீர் பகிர்வு (Equitable Share) கோட்பாட்டைத் திணித்துள்ளது.
வேளாண்மைக்கு நிகராகத் தொழில்துறைக்கு தண்ணீர் அளிக்கும் கோட்பாட்டைப் புகுத்தியுள்ளது.
இந்த அநியாயங்களின் அடிப்படையில் தமிழ்நாட்டிற்குரிய தண்ணீரை மிக மோசமாகக் குறைத்துவிட்டது உச்சநீதிமன்றம்.
எனவே இதைச் சரி செய்ய காவிரி வழக்கிற்கு உச்சநீதிமன்றத்தில் ஏழு நீதிபதிகளைக் கொண்ட அரசமைப்பு ஆயம் அமைக்கப்பட வேண்டும் என்றும் அதற்கான வழக்கைத் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தொடுக்க வேண்டும் என்றும் காவிரி உரிமை மீட்புக் குழு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. முல்லைப்பெரியாறு வழக்கு, உச்சநீதிமன்ற மூன்று நீதிபதிகளால் விசாரிக்கப்பட்டு, தீர்ப்பு வழங்கும் நிலையில் அரசமைப்பு ஆயத்திற்கு மாற்றப்பட்ட முன் எடுத்துக்காட்டையும் சுட்டிக் காட்டி வருகிறது.
மேற்கண்ட எச்சரிக்கைகளுடன் - விழிப்புணர்வுடன் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது பற்றி தமிழர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

Labels:

காவிரி செயல் திட்டத்தின் உயிர் தன்னதிகாரம் தமிழ்நாடு அதை வலியுறுத்த வேண்டும்! பெ. மணியரசன்

Wednesday, May 16, 2018



காவிரி செயல் திட்டத்தின் உயிர் தன்னதிகாரம்

தமிழ்நாடு அதை வலியுறுத்த வேண்டும்!


காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர்

தோழர் பெ. மணியரசன் அறிக்கை!



காவிரி வழக்கில் இன்று (16.05.2018) உச்ச நீதிமன்றத்தில் மிகவும் அடிப்படையான – உயிரான திருத்தம் ஒன்றை தமிழ்நாடு அரசு முன்வைக்காமல் போனது பெருந்துயரம் ஆகும்! அதாவது அமைக்கப்படவுள்ள “காவிரி செயல்திட்டம்” – தற்சார்பான தன்னதிகாரம் (Independent) கொண்ட அமைப்பாக இருக்க வேண்டும். அதற்கான திருத்தத்தை உச்ச நீதிமன்றம் சேர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வலியுறுத்தியிருக்க வேண்டும். செயல்திட்டத்தின் அதிகாரம் தெளிவில்லாமல் இருக்கிறது என்று கூறியதோடு தமிழ்நாடு அரசு நிறுத்தியிருக்கக் கூடாது!

காவிரித் தீர்ப்பாயம் வழங்கிய இறுதித் தீர்ப்பு பாகம் – 5இல் – 15ஆம் பத்தியில் (Para) செயல்திட்டம் பற்றி கூறும்போது, “தற்சார்பு அதிகாரம்” (Independent) கொண்டதாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது. அதற்குமுன் 14ஆம் பத்தியில் “செயல்திட்டம் போதுமான அதிகாரம் கொண்டதாக இருக்க வேண்டும்; அவ்வாறான அதிகாரம் அதற்கு இல்லையென்றால் தீர்ப்பாயத்தின் முடிவுகள் ஒரு துண்டுத்தாளில் (Piece of Paper) மட்டுமே இருக்கும் என்று அஞ்சுகிறோம்” என்று தீர்ப்பாய நீதிபதிகள் மூவரும் கூறியுள்ளனர்.

இந்திய அரசின் நீர்வளத்துறை தயாரித்த செயல் திட்ட வரைவில் வேண்டுமென்றே தந்திரமாக “தற்சார்பு அதிகாரம் (Independent)” என்ற சொல்லைத் தவிர்த்துவிட்டது; தீர்ப்பாயத்தில் உள்ள மற்ற சொற்களைப் பயன்படுத்தி இருக்கிறது.

அப்படிப்பட்ட இந்த செயல்திட்டத்திற்குத்தான் “காவிரி மேலாண்மை வாரியம்” என்று பெயர் மட்டும் வைக்க வேண்டுமென்று தமிழ்நாடு அரசு கோரியிருக்கிறது. அக்கோரிக்கையை உச்ச நீதிமன்றமும், இந்திய அரசும் ஏற்றுக் கொண்டு விட்டது.

இந்த “காவிரி மேலாண்மை வாரியத்தின்” கட்டளையை ஏதாவதொரு மாநிலம் செயல்படுத்த மறுத்தால், அதைச் செயல்படுத்திக் கொள்வதற்கு தேவையான உதவியை அது நடுவண் அரசிடம் கோரலாம் என்று தீர்ப்பாயத் தீர்ப்பில் உள்ளது. இதை “செயல்படுத்த மறுப்பது பற்றி நடுவண் அரசிடம் மேலாண்மை வாரியம் கூறி உதவி கோரலாம்; அதில் நடுவண் அரசு எடுக்கும் முடிவே இறுதியானது” என்று வரைவுச் செயல்திட்டத்தில் நடுவண் அரசு தந்திரமாகச் சேர்த்துள்ளது.

“மேலாண்மை வாரியத்தின்” கட்டளையை ஏற்க ஒரு மாநிலம் மறுத்தால், அதைச் செயல்படுத்தி வைக்கத் தேவையான காவல்துறை மற்றும் இராணுவ உதவிகளைப் போன்ற உதவிகளை இந்திய அரசிடம் கோரலாம் என்ற பொருளில்தான் மேலாண்மை வாரியம் நடுவண் அரசின் உதவியைக் கோரலாம் என்று தீர்ப்பாயம் கூறியுள்ளது.

இந்திய அரசின் முடிவே இறுதி முடிவு என்று புதிதாகச் சேர்க்கப்பட்ட பத்தியை நீக்க வேண்டுமென்று தமிழ்நாடு அரசு கோரியதும், அத்திருத்தத்தை தீபக் மிஸ்ரா ஆயம் ஏற்றுக் கொண்டதும் வரவேற்கத்தக்கது!

அடுத்து, என்னென்ன பயிர் செய்ய வேண்டும் என்பதையும், சொட்டு நீர்ப் பாசனம் உட்பட என்னென்ன பாசன முறைகளைக் கடைபிடிக்க வேண்டும் என்பதையும் மேலாண்மை வாரியம் முடிவு செய்யும் என்று நடுவண் நீர்வளத் துறை தயாரித்த செயல் திட்டத்தில் கூறப்பட்டிருப்பதையும் நீக்குமாறு தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் கோர வேண்டும்.

காவிரி மேலாண்மை வாரியத்தின் அனுமதி இல்லாமல் புதிய அணைகள் யாரும் கட்டக் கூடாது என்பதை செயல்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று கட்டளையிடுமாறு உச்ச நீதிமன்றத்தைத் தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும்.

கர்நாடக அரசு திருந்தவே இல்லை என்பதற்கான சான்றாகத்தான் “மாதவாரியாகத் தண்ணீர்திறந்து விடக் கூறும் பகுதியை நீக்க வேண்டும்” என்றும், சூலை மாதத்திற்கு விசாரணையை மாற்ற வேண்டும் என்றும் அடாவடிக் கோரிக்கைகளை உச்ச நீதிமன்றத்தில் வைத்துள்ளது. உச்ச நீதிமன்றம் கர்நாடகத்தின் முறையற்ற கோரிக்கைகளை ஏற்கக் கூடாது!


Labels:

பொம்மைச் செயல்திட்டம் கொடுத்திருக்கிறது மோடி அரசு! பெ. மணியரசன்

Monday, May 14, 2018



பொம்மைச் செயல்திட்டம்
கொடுத்திருக்கிறது மோடி அரசு!

காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர்
தோழர் பெ. மணியரசன் அறிக்கை!


இந்திய அரசின் நீர்வளத்துறை இன்று (14.05.2018) உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள காவிரி வரைவுச் செயல்திட்டம் - தன்னாட்சி அதிகாரமற்ற ஒரு பொம்மை பொறியமைவாகவே உள்ளது.

“காவிரி தண்ணீர் மேலாண்மை செயல்திட்டம் – 2018” (Cauvery Water Management Scheme 2018) என்ற பெயரில் முன்வைக்கப்பட்டுள்ள இந்த வரைவுத் திட்டத்தின் பிரிவு – 9, செயல்திட்டத்தின் (ஆணையத்தின்) அதிகாரங்கள், செயல்பாடுகள், கடமைகள் பற்றி குறிப்பிடுகின்றன. அதில், உட்பிரிவு (iv) பின்வருமாறு கூறுகிறது :

“கேரளத்தின் பாணாசுர சாகர், கர்நாடகத்தின் ஏமாவதி, ஏரங்கி, கபினி, கிருஷ்ணராஜசாகர், தமிழ்நாட்டின் கீழ்பவானி, அமராவதி மற்றும் மேட்டூர் ஆகியவற்றிலிருந்து ஒரு மாதத்திற்கு 10 நாள் கணக்கில், அந்தந்த மாநிலம் தண்ணீர் திறந்துவிடுவதற்கு ஒட்டுமொத்தமான ஒரு வழிகாட்டுதலை இந்த ஆணையம் கொடுக்கும்”.

இந்த ஆணையம் தன் பொறுப்பில் தண்ணீர் திறந்துவிடாது என்பதை இப்பிரிவு கூறுகிறது. தமிழ்நாட்டிற்குத் திறந்துவிட வேண்டிய தண்ணீரை, கர்நாடக அரசுதான் இந்த ஆணையம் வந்தபிறகும் திறந்துவிடுமாம்!

ஒரு மேற்பார்வைப் பணியைத்தான் இந்த ஆணையம் செய்யும் என்பதை ஏற்கெனவே, இதற்கு முன் உள்ள பிரிவு (9)(ii) உறுதி செய்கிறது.

உச்ச நீதிமன்றத்தின் கட்டளையையே துச்சமாகத் தூக்கியெறிந்துவரும் கர்நாடகம், புதிதாக அமைக்கப்படும் இந்த ஆணையத்தின் “வழிகாட்டுதலையா” செயல்படுத்தும்? கேழ்வரகில் நெய் வடிகிறது என்றால், கேட்பவருக்கு மதி எங்கே என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது!

அடுத்து, பின்வரும் பிரிவு (9)(xiv)இல், ஏதாவதொரு மாநிலம் இந்த ஆணையத்தின் வழிகாட்டுதலை செயல்படுத்தவில்லை என்றால், அந்த ஆணையம் நடுவண் அரசிடம் முறையிடும் என்றும் அதில் நடுவண் அரசு எடுக்கும் முடிவே இறுதியானது என்றும் கூறுகிறது.

1991 – சூன் 25ஆம் நாள், காவிரித் தீர்ப்பாயம் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பிலிருந்து இன்று வரை காவிரித் தீர்ப்பாயத்தின் தீர்ப்புகளையும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளையும் இந்திய அரசு தொடர்ந்து செயல்படுத்த மறுத்து வருகிறது என்பதை, தமிழ்நாடு மட்டுமல்ல – உலகமே அறியும்! புதிய ஆணையத்தின் வழிகாட்டுதலை கர்நாடகம் ஏற்க மறுத்தால், இந்திய அரசிடம் புகார் செய்து தீர்வு காணலாம் என்பது போகாத ஊருக்கு வழி சொல்வதாகும்!

இந்த வரைவுச் செயல்திட்டம் – நீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்துவது, கர்நாடகத்திற்கும் தமிழ்நாட்டிற்குமான தண்ணீர்ப் பகிர்வு, அதன்படி கர்நாடகத்திலிருந்து தமிழ்நாட்டிற்குத் தண்ணீர்த் திறந்துவிடுதல் என்ற வரம்புகளுக்கு அப்பால் சென்று, என்னென்ன பயிர் செய்யலாம், என்னென்ன பயிர் செய்யக்கூடாது, சொட்டு நீர்ப் பாசனம், தொழிற்சாலைகளுக்கு எவ்வளவு தண்ணீர் தருவது, மற்ற மற்ற காரியங்களுக்கு எவ்வளவு தண்ணீர் தருவது உள்ளிட்ட எல்லா செய்திகளிலும் தலையிடும் என்றும் இதிலும் இந்திய அரசின் தலையீடு இருக்குமென்றும் கூறுகிறது.

அடுத்து, பிரிவு (9)(xviii)இல், இந்திய அரசு அவ்வப்போது வெளியிடும் எல்லா வகை வழிகாட்டுதல்களையும் இந்த ஆணையம் செயல்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதைவிடக் கொடுமையாக இந்த ஆணையம், தனது மேற்கண்ட பணிகளை தனியாருக்கு குத்தகைக்கு விடலாம் என்று வரைவுச் செயல்திட்டத்தின் பிரிவு – 12 கூறுகிறது.

இவற்றையெல்லாம் பார்க்கும்போது, குரங்கு ஆப்பம் பிரித்த கதைதான் நினைவுக்கு வருகிறது!

காவிரித் தண்ணீரை இந்திய அரசின் தேசிய நீர்க் கொள்கையின்படி தனியாருக்குக் குத்தகைக்குக் கொடுத்து, சாகுபடிக்கும் குடிநீருக்கும் மீட்டர் வைத்து விற்பனை செய்யும் திட்டத்தை செயல்படுத்தவும் இந்த ஆணையத்திற்கு இந்திய அரசு அதிகாரம் வழங்கியிருக்கிறது.

கடந்த 08.05.2018 அன்று உச்ச நீதிமன்றத்தில், வரைவுச் செயல்திட்டத்தைத் தாக்கல் செய்ய முடியாததற்குக் காரணம் - நடுவண் அமைச்சரவையின் ஒப்புதல் பெற முடியாததுதான் என்றும், தலைமை அமைச்சரும் மற்ற அமைச்சர்களும் கர்நாடகத் தேர்தல் பரப்புரைக்குச் சென்று விட்டனர் என்றும் இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் காரணம் கூறினார். 

ஆனால், இன்று (14.05.2018) தாக்கல் செய்யப்பட்டுள்ள வரைவுச் செயல்திட்டம், நடுவண் அமைச்சரவையின் ஒப்புதலைப் பெறவில்லை. இதுபற்றி, உச்ச நீதிமன்ற வளாகத்திலிருந்த தமிழ்நாடு சட்ட அமைச்சர் சி.வி. சண்முகத்திடம் கேட்டபோது, நடுவண் நீர்வளத்துறையின் வரைவுச் செயல்திட்டத்திற்கு நடுவண் அமைச்சரவையின் ஒப்புதல் தேவையில்லை, உச்ச நீதிமன்றத்தில் அதை நேரடியாகத் தாக்கல் செய்ய அவர்களுக்கு அதிகாரமிருக்கிறது என்று கூறினார். கடந்த 08.05.2018 அன்று வரைவுச் செயல்திட்டத்தைத் தாக்கல் செய்ய முடியாததற்குக் காரணம் அமைச்சரவை ஒப்புதல் இல்லாததுதான் என்று இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கூறியது முழுப்பொய் என்பதற்கு தமிழ்நாடு சட்ட அமைச்சரின் கூற்றே சாட்சியம்! இதே சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம், 08.05.2018 அன்று நடுவண் அமைச்சரவை ஒப்புதல் தேவையில்லை என்று கூறாதது ஏன்?

அதே சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம், இன்று தாக்கல் செய்யப்பட்ட - கர்நாடக அணைகளிலிருந்து தண்ணீர் திறந்துவிடும் அதிகாரமில்லாத செயல்திட்டத்தை வரவேற்று தமிழ்நாடு அரசுக்கு வெற்றி என்று கூறினார். அத்துடன் இந்திய அரசுக்கு நன்றி கூறினார். தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தமிழ்நாட்டிற்கு நீதி கிடைத்துள்ளது என்று கூறியுள்ளார்.

இவையெல்லாம், ஏற்கெனவே பா.ச.க. தலைமையினால் எழுதிக் கொடுக்கப்பட்ட வாசகங்களோ என்ற ஐயம் ஏற்படுகிறது. பா.ச.க.வின் ஊதுகுழல்தான் அண்ணா தி.மு.க. ஆட்சி என்று அ.இ.அ.தி.மு.க.வின் தொண்டர்கள் உள்பட அனைத்துத் தமிழர்களும் புரிந்து கொள்வார்கள்!

பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழ்நாட்டுக்குப் பாலூட்டும் தாயாக விளங்கி வந்த காவிரியின் மார்பறுக்கும் நரேந்திர மோடியின் நயவஞ்சகத்தையும், தமிழ்நாடு அரசின் இனத்துரோகத்தையும் முறியடிக்கும் வகையில் தமிழர்கள் கிளர்ந்தெழுந்து உரிமை மீட்புப் போராட்டக் களங்களை அமைக்க வேண்டிய தேவை அதிகமாகியுள்ளது என்பதை காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

காவிரித் தீர்ப்பாயத்தின் வழிகாட்டுதல்படி அதிகாரமுள்ள மேலாண்மை வாரியம் அமைக்காமல், அதிகாரமில்லாத பொம்மை ஆணையத்தை முன்மொழிந்துள்ள இந்திய அரசின் இந்த வரைவுத் திட்டத்தை உச்ச நீதிமன்றம் ஏற்காமல் நிராகரிக்க வேண்டும். உச்ச நீதிமன்றமே தீர்ப்பாயத்தின் வழிகாட்டல்படி அமையக்கூடிய – கர்நாடகத்தின் அணைகளின் மதகுகளைத் திறந்து மூடும் அதிகாரமுள்ள செயல்திட்டத்தை வடிவமைத்து செயல்படுத்த ஆணையிட வேண்டும் என்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன். 

Labels:

நீட் தேர்வின் தமிழர் உயிர்ப்பறிப்பு தொடர்கிறது! நிரந்தர விலக்கு கோரி ஒருங்கிணைந்த போராட்டம் தேவை! பெ. மணியரசன்

Sunday, May 6, 2018


நீட் தேர்வின் தமிழர் உயிர்ப்பறிப்பு தொடர்கிறது!

நிரந்தர விலக்கு கோரி
ஒருங்கிணைந்த போராட்டம் தேவை!


தோழர் பெ. மணியரசன் அறிக்கை!

இந்திய அரசும், உச்ச நீதிமன்றமும் போட்டி போட்டுக் கொண்டு, மாநில உரிமைகளைப் பறித்து வருகின்றன. அந்த உரிமைப் பறிப்புகளில் ஒன்றுதான் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான “நீட்” தேர்வு! இவ்வாறான மாநில உரிமைப் பறிப்புகள் அதிகமாகத் தமிழ்நாட்டைத்தான் பாதிக்கின்றன.
இந்திய அரசும், உச்ச நீதிமன்றமும் திணித்த “நீட்” தேர்வு கடந்த ஆண்டு மாணவி அனிதாவை பலிவாங்கியது. இந்த ஆண்டும், பலரை அத்தேர்வு பலி வாங்கி வருகிறது.
கடந்த 26.04.2018 அன்று, சேலம் தமிழ்ச் சங்க சாலையைச் சேர்ந்த மாணவர் கெவின்ஹரி என்பவர், நீட் தேர்வுக்குப் பயின்றுவந்த நிலையில், அதனால் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் அச்சம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். 01.05.2018 அன்று, “நீட்” தேர்வுக்குப் படித்து வந்த புதுச்சேரி அரும்பார்த்தபுரம் பாரதிதாசன் நகரைச் சேர்ந்த 17 அகவை மாணவி சிவசங்கிரி, “நீட்” தேர்வு மன உளைச்சலால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இப்போது, திருத்துறைப்பூண்டி விலக்குடி மாணவர் கஸ்தூரி மகாலிங்கத்தின் தந்தை கிருஷ்ணசாமி பலியாகியுள்ளார்!
கேரள மாநிலம் – எர்ணாக்குளத்தில் மாணவர் மகாலிங்கம் நீட் தேர்வு எழுத மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அதற்காக மகாலிங்கமும், அவரது தந்தை கிருஷ்ணசாமியும் எர்ணாக்குளத்திற்கு நிற்கக்கூட இடமில்லாமல், கழிவறைக்குள் ஒண்டிக் கொண்டே நீண்ட தொலைவுக்கு விடிய விடிய தொடர்வண்டிப் பயணம் செய்தனர். இதனால், கிருஷ்ணசாமி அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டு, தங்கியிருந்த விடுதியில் மாரடைப்பால் இறந்துள்ளார்.
இந்திய அரசைப் பொறுத்தவரை தமிழர்களின் உயிர் ஈ – எறும்பு உயிர்களைவிடவும் மலிவானவை! இந்தியா வெள்ளையரிடமிருந்து விடுதலை பெற்ற காலத்திலிருந்து, இந்திய அரசின் உரிமைப் பறிப்புகளால் நேர்ந்த தமிழர் உயிர்ப் பறிப்புகள் ஏராளம்! ஏராளம்!
1965இல் இந்தித் திணிப்பை எதிர்த்த போராட்டத்தில், முந்நூறுக்கும் மேற்பட்ட தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தியா கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுத்ததால், சிங்களப் படையினால் கடலில் கொல்லப்பட்ட தமிழ்நாட்டுத் தமிழர்கள் 600 பேருக்கு மேல்! இலட்சோப இலட்சம் ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்த சிங்களத்துக்கு இந்தியா உதவி செய்ததைக் கண்டித்து தீக்குளித்து மாண்ட தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஏராளம்! காவிரி உரிமை மறுக்கப்பட்டு, வேளாண்மை செய்ய வழியின்றி தற்கொலை செய்து கொண்ட தமிழ்நாட்டு உழவர்கள் பல நூறு பேர்!
இப்பொழுது, எதிர்காலக் கனவுகளோடு கல்வி கற்க இளம் பிஞ்சுகள் – இந்தியாவின் நீட் தேர்விற்கு வரிசையாக பலியாகிறார்கள். மாணவர்கள் மட்டுமின்றி, அவர்களது பெற்றோர்களும் பாதிக்கப்படுகிறார்கள்.
நடுவண் பாடத் திட்ட வாரியம் (சி.பி.எஸ்.இ.) என்பது, பெரும் எண்ணிக்கையில் தனியார் பள்ளிகளைக் கொண்டுள்ள பாடத்திட்ட நிறுவனம்! தனியார் ஆதிக்கமும் வடநாட்டுத் தலைமையும் கொண்ட நடுவண் பாடத்திட்ட வாரியத்திடம் (சி.பி.எஸ்.இ.) நீட் தேர்வு நடத்தும் பொறுப்பை ஒப்படைத்தது ஏன்?
நீட் தேர்வை ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் எதிர்ப்பதால், தமிழ்நாட்டு மாணவர்களைப் பழிவாங்கும் நோக்கத்தில், தமிழ்நாட்டு மாணவர்களை இராசத்தானத்திலும், கேரளத்திலும் தேர்வெழுத மேற்படி வாரியம் அலைக்கழித்துள்ளது. சனநாயகமற்ற இந்த முடிவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்து, இயற்கை நீதிக்குப் புறம்பாக தீர்ப்பு வழங்கியது.
தமிழ்நாடு அரசு, நீட் தேர்வை இனியும் ஏற்றுக் கொள்ளக் கூடாது! தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு விலக்கு சட்ட முன்வரைவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் உடனே தர வேண்டுமென தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும். ஆளுங்கட்சியே முன்வந்து நீட் தேர்வு விலக்கு கேட்டு போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். தமிழ்நாட்டிலிருந்து நிரந்தரமாக நீட் தேர்வை விரட்டும் வகையில், ஒருங்கிணைந்த போராட்டங்களை அனைத்துக் கட்சிகளும், பொது மக்களும் முன்னெடுக்க வேண்டும்.


Labels:

அதிகாரமில்லாத செயல்திட்டம் கொண்டு வர இந்திய அரசு மறைமுகத் திட்டம்! பெ. மணியரசன்

Friday, May 4, 2018

அதிகாரமில்லாத செயல்திட்டம் கொண்டு வர
இந்திய அரசு மறைமுகத் திட்டம்!
காவிரிப் போராட்டத்தை விழிப்புடன் விரிவுபடுத்த வேண்டும்!
காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை!



காவிரி வழக்கில் நேற்று (03.05.2018) தீபக் மிஸ்ரா ஆயம் நடத்திய விசாரணையும் கூறிய முடிவுகளும் அந்த ஆயத்தின் மீது கொஞ்ச நஞ்சம் நம்பிக்கை வைத்திருந்தவர்களையும் ஏமாற்றிவிட்டது.

கர்நாடகத் தேர்தல் பரப்புரைக்குத் தலைமை அமைச்சரும் மற்ற நடுவண் அமைச்சர்களும் போய்விட்டதால் அமைச்சரவையைக் கூட்டி – அதில் காவிரிக்கான செயல் திட்டத்தை வைத்து ஒப்புதல் கேட்க வாய்ப்பில்லை, எனவே மேலும் இரண்டு வாரம் தள்ளி காலக் கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று நடுவண் அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால், தீபக் மிஸ்ரா ஆயத்தின் முன் கூறினார்.

கே.கே. வேணுகோபாலின் இந்தப் பொய்க் கூற்றை ஏற்றுக் கொண்ட தீபக் மிஸ்ரா, நரேந்திர மோடி அரசைக் கண்டிப்பதுபோல் பாவனை காட்டினார். இவ்வாறு வேணுகோபால் உச்ச நீதிமன்றத்தில் தவறான தகவல் கூறிய நாளுக்கு முதல் நாள்தான் (02.05.2018) புதுதில்லியில் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி தலைமையில் நடுவண் அமைச்சரவை கூடி சுரங்கம், புகையிலை, மருத்துவமனை உள்ளிட்ட ஆறு திட்டங்களுக்கு ஒப்புதல் கொடுத்தது.

அதற்கு முன் 2018 ஏப்ரல் 9 அன்று உச்ச நீதிமன்ற விசாரணையில், தீபக் மிஸ்ரா ஆயம் 03.05.2018க்குள் “செயல்திட்டம்” அமைக்க வேண்டுமென்று இந்திய அரசுக்கு ஆணையிட்டது. அதன்பிறகு, 11.04.2018 அன்றும், 25.04.2018 அன்றும், கடைசியாக 02.05.2018 அன்றும் என மூன்று முறை நடுவண் அமைச்சரவை கூடியுள்ளது. அமைச்சரவைக் கூடுவதற்கே நேரமில்லை என்று நரேந்திர மோடி அரசின் தலைமை வழக்கறிஞர் கூறுவது எவ்வளவு பெரிய பொய்!

காவிரித் தீர்ப்பாயம் கூறிய கட்டமைப்புடன் – அதிகாரத்துடன் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென்ற ஒற்றை முழக்கம் தமிழ்நாடு முழுக்க ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில், அந்தக் கோரிக்கையலிருந்து தமிழர்களின் கவனத்தைத் திசை திருப்பும் நோக்குடன் உடனடியாக 4 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட வேண்டுமென்று கர்நாடகத்திடம் கோரினார் தீபக் மிஸ்ரா! சற்று நேரத்தில், அதைக் குறைத்து 2 டி.எம்.சி. திறந்துவிட வேண்டும் என்றார்.

கடந்த 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், கர்நாடகம் நாள்தோறும் 10,000 கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டுமென்று முதலில் கட்டளையிட்டார் தீபக் மிஸ்ரா. கர்நாடக அரசு அவ்வாறு திறந்துவிட மறுத்துவிட்டது. அதன்பிறகு, 6,000 கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டுமென்று கர்நாடகத்துக்கு கட்டளையிட்டார். அதையும் திறந்துவிட கர்நாடக அரசு மறுத்துவிட்டது. அதன்பிறகு, நாள்தோறும் 2,000 கன அடி தண்ணீர் தமிழ்நாட்டுக்குத் திறந்துவிட வேண்டுமென்று கர்நாடக அரசுக்கு அடுத்தடுத்து 4 வாய்தாக்களில் தீபக் மிஸ்ரா கட்டளையிட்டார். அதையும் செயல்படுத்த முடியாது என்று சித்தராமையா மறுத்துவிட்டார்.

இதற்காக முதலமைச்சர் சித்தராமையா மீதோ, கர்நாடகத் தலைமைச் செயலாளர் மீதோ நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தீபக் மிஸ்ரா ஆயம் பதிவு செய்யவில்லை. இப்பொழுது இந்த ஆயம் கட்டளையிட்டபடி 2 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட முடியாது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையாவும், பாசன அமைச்சர் எம்.பி. பாட்டிலும் நேற்றே (03.05.2018) கூறி விட்டார்கள். இந்த நீதிமன்ற அவமதிப்புக்கு தீபக் மிஸ்ரா ஆயம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?

அடுத்து, பெயரை மட்டும் “காவிரி மேலாண்மை வாரியம்” என்று வைத்துக் கொண்டு, காவிரித் தீர்ப்பாயம் கூறிய அதன் கட்டமைப்பு மற்றும் அதன் அதிகாரங்களையெல்லாம் பறித்து, அதிகாரமற்ற ஒரு “செயல் திட்டத்தை”க் கொண்டு வர இந்திய அரசு முயல்கிறது. உச்ச நீதிமன்றம் அதற்கு துணை போகும் என்று கருதக் கூடிய நிலையில்தான் அதன் விசாரணை முறை உள்ளது.

நடுவண் அரசின் நீர்வளத்துறை 29.03.2018 நாளிட்டு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த விளக்கம் கேட்கும் மனுவில், காவிரித் தீர்ப்பாயம் கூறிய காவிரி மேலாண்மை வாரியத்தை அதிகாரமில்லாத உதவாக்கரை வாரியமாக மாற்றியமைக்கும் நோக்கில்தான் உச்ச நீதிமன்றத்திடம் அது விளக்கங்கள் கேட்டுள்ளது. அவற்றில் சில வருமாறு :

1.   காவிரி மேலாண்மை வாரியம் என்று தீர்ப்பாயம் சொல்லியதில் தொழில்நுட்பத் துறை அதிகாரங்களைக் கொண்டதாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதை ஆட்சித்துறை அதிகாரிகளையும், தொழில்நுட்பத்துறை அதிகாரிகளையும் கொண்டதாக மாற்றி அமைக்கலாமா?

2.   காவிரித் தீர்ப்பாயம், காவிரி மேலாண்மை வாரியத்தின் செயல்பாடுகள் குறித்து கூறியுள்ளவற்றை மாற்றி அமைக்கலாமா?

3.   இதில் தொடர்புடைய மாநிலங்கள் கூறக் கூடிய மாற்றுக் கருத்துகளையும் கவனத்தில் கொண்டு காவிரி மேலாண்மை வாரியம் என்பதை மாற்றி அமைக்கலாமா?

4.   இந்த புதிய “செயல் திட்டத்தை” உருவாக்க மேலும் 3 மாத காலம் அவகாசம் வேண்டும்.

நடுவண் நீர்வளத்துறையின் விளக்கம் கேட்கும் மனுவின் சாரம் இதுதான்!

இதன் பொருள், காவிரித் தீர்ப்பாயம் கூறிய “காவிரி மேலாண்மை வாரியம்” என்பதை சாரத்தில் கொன்றுவிட்டு, அதிகாரமில்லாத ஒரு செயல்திட்டத்தை காவிரி மேலாண்மை வாரியம் என்ற பெயரில், அல்லது வேறொரு பெயரில் கொண்டு வரவே இந்திய அரசு விரும்புகிறது என்பதாகும்!
நேற்று (03.04.2018) நடுவண் அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால், காவிரி செயல் திட்டம் தயாராகிவிட்டது, நடுவண் அமைச்சரவையின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம் என்று கூறியது மேற்கண்ட சூழ்ச்சிகளையும் உள்ளடக்கியதுதான்!

எனவே, கர்நாடகத்தின் இனவெறிச் செயலுக்கும் நடுவண் அரசின் இனப்பாகுபாட்டு அணுகு முறைக்கும் துணை போகக் கூடிய நிலையில், தீபக் மிஸ்ரா ஆயம் செயல்படும் நிலையில், ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் காவிரித் தீர்ப்பாயம் கூறிய கட்டமைப்பும் அதிகாரமும் கொண்ட காவிரி மேலாண்மை வாரியம் உடனே வேண்டும் என்று கோரிக்கையைத் துல்லியமாக்கி, கடுமையாகப் போராட வேண்டிய தேவை எழுந்துள்ளது.


தமிழ்நாட்டை வஞ்சித்துவிட்டு, இந்திய அரசினுடைய நிர்வாகம் செயல்பட முடியாது என்ற அளவிற்கு ஒத்துழையாமை இயக்கத்தைத் தமிழர்கள் வலுப்படுத்த வேண்டும்; விரிவுபடுத்த வேண்டும்! இந்திய அரசு அலுவலகங்களும், நிறுவனங்களும் செயல்பட முடியாத நிலையை குறிப்பிட்ட காலத்திற்கு உருவாக்க வேண்டும் என்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.


Labels:


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்