<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d6955529389241309188\x26blogName\x3d%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86.%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://thozharmaniyarasan.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com/\x26vt\x3d-8408640130511538487', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

"1983 - கருப்பு யூலை” - ஐயா பெ.மணியரசன் உரை!

Monday, July 27, 2020


"1983 - கருப்பு யூலை”


தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் - ஐயா பெ.மணியரசன் உரை!





கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Labels: ,

பா.ச.க. பாசிசத்தி்ற்கு நீதித்துறையும் பலியா? - ஐயா பெ.மணியரசன் உரை!

Saturday, July 25, 2020

பா.ச.க. பாசிசத்தி்ற்கு

 நீதித்துறையும் பலியா?


தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் - ஐயா பெ.மணியரசன் உரை!



கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Labels: ,

அய்யனாருக்கு பீகாரில் கோவில் கட்டுவியா நீ? - ஆஸ்திரேலியா தமிழ் முரசு இணையத்திற்கு ஐயா பெ.மணியரசன் நேர்காணல்!

Friday, July 24, 2020

அய்யனாருக்கு பீகாரில்

 கோவில் கட்டுவியா நீ?

ஆஸ்திரேலியா தமிழ் முரசு இணையத்திற்கு,
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் 

தலைவர் ஐயா பெ.மணியரசன் நேர்காணல்!



கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Labels: ,

கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையகத்தை இழிவுசெய்த நபரைக் கைது செய்யாதது ஏன்? - ஐயா பெ. மணியரசன் கண்டனம்!

Thursday, July 23, 2020

கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையகத்தை
இழிவுசெய்த நபரைக் கைது செய்யாதது ஏன்?

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
பெ. மணியரசன் கண்டனம்!


தான் எழுதுவதை, பேசுவதை மற்றவர்கள் படிப்பார்கள் – பார்ப்பார்கள் என்ற குதூகலத்தில் கொச்சை மொழியைப் பயன்படுத்துவோர் சமூக ஊடகங்களில் பலதரப்பிலும் இருக்கிறார்கள். மாற்றுக் கருத்தை திறனாய்வாகச் சொல்லாமல், மற்றவர்களை தனிப்பட்ட முறையில் சாதியை – மதத்தை – இனத்தை சொல்லியும், பாலியல் சொற்களைப் பயன்படுத்தியும் வசவு செய்து இன்பம் காணுவோர் அதிகரித்து வருவது பொறுப்புள்ள மக்களுக்கு பெருங்கவலையை ஏற்படுத்துகிறது.
இவற்றைத் தடுக்க சட்டங்கள் இருக்கின்றன. இந்தச் சட்டத்தைப் பயன்படுத்துவோர் அரசியல், சாதி, மத பாகுபாடு காட்டக்கூடாது. சொந்தக் காரணங்களுக்காகப் பழிவாங்கவும் கூடாது!
கந்த சஷ்டி கவசத்தை சொல்லி முருகக் கடவுளை இழிவுபடுத்திய இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுத்தது சரி. ஆனால், அவர்கள் அலுவலகத்தை மூடி முத்திரையிடுவது, அவர்களுடைய வலையொளிப் பக்கத்தை முற்றிலுமாக முடக்குவது போன்றவை அதிகாரத்தை விருப்பு வெறுப்பு அடிப்படையில் மிகையாகப் பயன்படுத்தும் செயலாகும்.
அண்மையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாட்டுத் தலைமையகத்தை கேவலமாகக் கொச்சைப்படுத்தியும், மூத்த தலைவர் ஐயா நல்லக்கண்ணு அவர்களை இழிவுபடுத்தியும் முகநூல் பதிவு வெளியிட்ட இளைஞர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அக்கட்சியும், தோழமை அமைப்புகளும் சனநாயக உணர்வாளர்களும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால், இதுவரை தமிழ்நாடு காவல்துறை அந்த இளைஞரைக் கைது செய்யவில்லை. ஏன் இந்தப் பாகுபாடு? அந்த இளைஞர் பா.ச.க. தரப்பில் இருந்து கொண்டு, பா.ச.க.வை எதிர்க்கின்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை இழிவுபடுத்தியதால் தமிழ்நாடு ஆட்சியாளர்கள் அமைதி காக்கிறார்களா?
ஏற்கெனவே இவ்வாறான போக்கு வெளிப்பட்டு வருகிறது. எச். இராசா, எஸ்.வி. சேகர் போன்ற பா.ச.க. புள்ளிகள் மீது வழக்குகள் பாய்ந்தபோது அவர்களைக் கைது செய்யாமல் தமிழ்நாடு அரசு விலகி நின்றதை நாடறியும். ஆனால், எதிர்க்கட்சியினர் மீது புகார் வரும்போது, அவர்களைப் பாய்ந்து கைது செய்வது நடந்துள்ளது.
கோவை மாவட்டம் – அன்னூர் தந்தை பெரியார் திராவிடக் கழகத்தைச் சேர்ந்தவர் கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியதற்குக் காவல்துறையினர் உடனே கைது செய்திருக்கிறார்கள். மறுநாள், பெரியாரை இழிவுபடுத்திய பா.ச.க.வினர் எழுதியது தொடர்பாக த.பெ.தி.க.வினர் காவல்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, த.பெ.தி.க.வினரும், சனநாயக உணர்வாளர்களும் போராட்டம் நடத்திய பிறகுதான் பா.ச.க.வைச் சேர்ந்த அந்த நபரைக் கைது செய்துள்ளது காவல்துறை.
சட்டத்தை நடுநிலையோடு செயல்படுத்தாமல் பா.ச.க. தரப்பின் மீது குற்றச்சாட்டு எழுந்தால், தமிழ்நாடு அரசு செயலற்று இருக்கும் அல்லது அவர்களைப் பாதுகாக்கும் என்ற நிலை தொடர்ந்தால், அ.இ.அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் தமிழ்நாட்டை உத்திரப்பிரதேசமாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்று பொருள்!
எந்தத் தரப்பைச் சேர்ந்தவராக இருந்தாலும் சமூக ஊடகங்களில் தனிநபர்களைக் கொச்சையாக இழிவுபடுத்தினால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேவேளை, தலைவர்களுடைய – இயக்கங்களுடைய – செயல்பாடுகள் மீதும், கருத்துகள் மீதும் திறனாய்வு (விமர்சனம்) செய்யும்போது அதன் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்ற வரம்பு வேண்டும்.
எனவே, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையகத்தையும், தலைவரையும் இழிவுபடுத்திய நபரை உடனடியாகக் கைது செய்ய வேண்டுமென தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam




Labels: , ,

சிந்தனைத் தளத்தில் கோவை ஞானி என்றும் வாழ்வார்! - பெ. மணியரசன் இரங்கல்!

Wednesday, July 22, 2020

சிந்தனைத் தளத்தில்
கோவை ஞானி என்றும் வாழ்வார்!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
பெ. மணியரசன் இரங்கல்!

பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய சிந்தனையாளர் தோழர் கோவை ஞானி அவர்கள் காலமான செய்தி பெரும் துயரமளிக்கிறது. கொரோனா முடக்கம் தடுப்பதால், நேரில் சென்று கோவை ஞானி அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்த முடியவில்லை! தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கோவை மாநகரச் செயலாளர் தோழர் விளவை இராசேந்திரன் அவர்களும், மாநகரக் குழு உறுப்பினர் தோழர் திருவள்ளுவன் அவர்களும் நேரில் சென்று கோவை ஞானி அவர்களுக்கு மலர் வணக்கம் செலுத்தியுள்ளார்கள்.

நாங்கள் தனி இயக்கம் கண்டு, தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்த நிலையில் 1990களின் தொடக்கத்தில் கோவை ஞானி அவர்களோடு எனக்கு நேரடித் தொடர்பு ஏற்பட்டது. அதற்குமுன் வானம்பாடி கவிஞர்களின் வரிசையில் ஞானி அவர்களை அறிந்திருந்தேன்.

சிறந்த மார்க்சியரான தோழர் ஞானி அவர்கள், வறட்டுத்தனமாக மார்க்சியத்தைப் பார்க்காமல் மண்ணுக்கேற்ற மார்க்சியமாக மலரச் செய்வதில் பெரும் சிந்தனை உழைப்பு செய்தவர். தமிழ்த்தேசியத்தை முழுமையாக ஏற்று, அது மார்க்சியத்திற்கு இசைவானது என்று பல உரைகள் நிகழ்த்தியுள்ளார்; கட்டுரைகள் எழுதியுள்ளார். அவரது அம்முயற்சியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு என்பது, தமிழ்த்தேசியம் குறித்து தமிழ்நாட்டின் பல்வேறு ஆளுமைகளை அழைத்து கோவையில் அடுத்தடுத்து சொற்பொழிவாற்ற வைத்தது. பின்னர், அச்சொற்பொழிவுகளையெல்லாம் எழுத்து வடிவில் தொகுத்து, “தமிழ்த்தேசியப் பேருரைகள்” என்று ஒரு பெரும் நூலை வெளியிட்டார். அந்தச் சொற்பொழிவுகளில் ஒருநாள் என்னையும் அழைத்துப் பேச வைத்தார்.

கருத்தியல் உழைப்பிற்கான முயற்சிகளை கோவை ஞானி அவர்களிடமிருந்து இளைஞர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். பிற்காலத்தில், அவருடைய இரு கண்களும் பார்வையிழந்த நிலையில் அவர் அன்றாடம் படித்தறிந்த செய்திகள் ஏராளம்! ஏராளம்! அன்றைய நாளேடுகள் தொடங்கி, புதிது புதிதாக நூல்களைப் படித்தார். படித்தார் என்றால் அவர் நேரடியாகப் படிக்கவில்லை. அவர் மீது அன்பு கொண்ட இளைஞர்கள் அன்றாடம் அவருக்குப் படித்துக் காட்டும் பணியைச் செய்தார்கள்.

செய்திகளைத் தெரிந்து கொள்வதில் – அறிவைத் தேடுவதில் அவருக்கிருந்த பேரார்வம் – விடாமுயற்சி மலைப்புத்தட்ட வைக்கும். தாம் படிப்பது மட்டுமின்றி, மக்கள் படிப்பதற்கு ஏராளமான நூல்களை எழுதியுள்ளார்.

கோவை ஞானி அவர்கள் தம்முடைய திறந்த சிந்தனைகள் – நூல்கள் வழியாக தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பார். அவர்களின் மறைவுக்குத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Labels: ,

பறம்புமலையை (பிரான்மலையை) உடைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்களை கைது செய்தது கண்டனத்திற்குரியது! பெ. மணியரசன் அறிக்கை!

Tuesday, July 21, 2020

பறம்புமலையை (பிரான்மலையை)
உடைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்களை
கைது செய்தது கண்டனத்திற்குரியது!


தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
பெ. மணியரசன் அறிக்கை!

பாரி மன்னன் ஆண்ட பறம்புமலை எனறு தமிழறிஞர்களாலும், ஆய்வாளர்களாலும் அடையாளப்படுத்தப்பட்ட சிவகங்கை மாவட்டம் – பிரான்மலைக்குச் சேதம் உண்டாக்கக்கூடிய வகையில், தனியார் கல்குவாரி அமைத்து, மலைக்கான பாதையை உடைத்து வருகிறார்கள். அடுத்து, அவர்கள் பிரான்மலையின் பகுதிகளையும் உடைக்கக்கூடிய அபாயம் இருக்கிறது.


சங்ககாலக் கடையெழு வள்ளல்களில் ஒருவரான பாரி மன்னரின் இப்பறம்புமலை பாதுகாக்கப்பட வேண்டிய தமிழர் வரலாற்றுச் சின்னமாகும். பறம்புமலையைப் பாதுகாக்க வேண்டும், அதைச் சுற்றிலும் மலையை உடைக்கும் தனியார் வணிகத்திற்குத் தடை விதிக்க வேண்டுமென்று அப்பகுதி தமிழின உணர்வாளர்கள் தமிழ்நாடு அரசுக்குக் கோரிக்கை வைத்து வருகிறார்கள். ஆனால், இதுவரை தமிழ்நாடு அரசு இக்கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை. மலை உடைப்பு வேலை தொடர்கிறது.



இந்நிலையில், இன்று (21.07.2020) காலை, பறம்புமலை பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகளின் முன்னணிப் பொறுப்பாளர்களும், ஆர்வலர்களும் பிரான்மலையில் என்ன நடக்கிறது என்று கள ஆய்வு செய்யப் போனவர்களை, காவல்துறையினர் வழிமறித்துத் தளைப்படுத்தி மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளார்கள். அவர்களைக் கைது செய்தது கண்டனத்திற்குரிய செயலாகும்.



தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், இதில் கவனம் செலுத்தி பறம்புமலைக்கு ஆபத்து உண்டாக்கும் வகையில் அங்கே நடைபெறும் தனியார் மலை உடைக்கும் வேலைகளுக்குத் தடை விதிக்க வேண்டுமென்றும், இன்று தளைப்படுத்தப்பட்டுள்ள சிறுவர் – சிறுமியர் உட்பட 65 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.



தலைமைச் செயலகம்,

தமிழ்த்தேசியப் பேரியக்கம்



பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Labels: ,

வடமாநிலத் தொழிலாளர்களை மீண்டும் அழைக்கக் கூடாது! தமிழ்நாடு முதல்வருக்கு பெ. மணியரசன் கோரிக்கை!

Monday, July 20, 2020

வடமாநிலத் தொழிலாளர்களை
மீண்டும் அழைக்கக் கூடாது!

தமிழ்நாடு முதல்வருக்கு
தமிழ்த்தேசியப் பேரியக்கத்
தலைவர் பெ. மணியரசன் கோரிக்கை!

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், கடந்த 17.07.2020 அன்று ஈரோடு சென்றிருந்தபோது, அம்மாவட்ட சிறுதொழில் உரிமையாளர் சங்கத்தின் தலைவர்கள் முதலமைச்சரிடம் ஒரு கோரிக்கை விண்ணப்பம் தந்துள்ளார்கள். அதில், ஈரோட்டில் வேலை பார்த்த 25,000 வடமாநிலத் தொழிலாளர்கள் கொரோனாவினால் சொந்த ஊர் திரும்பி விட்டார்கள். எனவே, இங்கு தொழிலாளர்கள் பற்றாக்குறை காரணமாக தொழிற்சாலைகளை இயக்க முடியவில்லை என்றும், வடமாநில அரசுகளைத் தொடர்பு கொண்டு மீண்டும் 25,000 தொழிலாளர்களை ஈரோட்டுக்குத் திருப்பி அழைத்து வர வேண்டுமென்றும் அம்மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

வடமாநிலத் தொழிலாளிகள் சொந்த ஊர் சென்றுவிட்டதால் ஏற்படும் தொழிலாளர் பற்றாக்குறையை ஈடுகட்ட தமிழ்நாடு அரசு, கடந்த 16.06.2020 அன்று “தமிழ்நாடு தனியார் துறை வேலை இணைம்” (Tamilnadu Private Job Portal) - www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தைத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்தது. அதில் தொழிலாளர் வேண்டுவோரும், வேலை வேண்டுவோரும் தங்களது முகவரியைப் பதிவு செய்து கொண்டால், அவர்களுடைய தேவைகளை நிறைவு செய்வோம் என்று கூறியிருந்தார்கள். அந்த இணையதளம் செயல்படுகிறதா? அதன் மூலம், தேவைப்படும் நிறுவனங்களுக்குத் தொழிலாளிகளை இதுவரை அனுப்பி வைத்திருக்கிறார்களா என்ற விவரம் தெரியவில்லை.

“தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர் வேலை வழங்கு வாரியம்” என்ற நிறுவனத்தை உருவாக்கி, அதன் மூலமாக வேலை கோரும் திறன் பெற்ற / திறன் குறைந்த மற்றும் தொழில் பயிற்சி பெற்ற அனைவரையும் பதிவு செய்து, எந்தெந்த நிறுவனங்களுக்கு எந்தத் தகுதியில் தொழிலாளர் தேவைப்படுகிறார்களோ, அவர்களை வழங்க வேண்டும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் கடந்த 2020 ஏப்ரல் மாதத்திலிருந்து தமிழ்நாடு அரசுக்குக் கோரிக்கை வைத்து வருகிறது.

மீண்டும் வடமாநிலத் தொழிலாளிகளை அழைத்து வருவதால் பின்வரும் பாதிப்புகள் உருவாகும் ஆபத்து உள்ளது. ஒன்று, கொரோனா கொள்ளைத் தொற்று நோய் மேலும் பரவும் அபாயம். இரண்டு, மண்ணின் மக்கள் வேலையின்றித் தவிக்கும்போது வெளி மாநிலத்தவர்களை வேலைக்கு அமர்த்தும் அநீதி. மூன்று, வடமாநிலத்தவர்கள் மிகை எண்ணிக்கையில் தமிழ்நாட்டில் குவியும்போது தமிழ்நாடு தமிழர்களின் தாயகமாக – தமிழ் மொழியை ஆட்சிமொழியாகக் கொண்ட தாயகமாக நீடிக்காமல் இந்தி மாநிலமாக மாறிவிடும் ஆபத்து.

மேற்கண்ட அனைத்தையும் கவனத்தில் கொண்டு, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டுத் தொழில் முனைவோருக்குத் தேவையான தொழிலாளிகளை தமிழ்நாட்டிலிருந்தே வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறும், வடமாநிங்களிலிருந்து தொழிலாளர்களை அழைக்கும் கோரிக்கையை நிராகரிக்குமாறும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.



தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam



Labels: , , ,

"பா.ச.க.வுடன் சேரமாட்டோமென ஸ்டாலின் சொல்வாரா?" - ஐயா பெ. மணியரசன் கேள்வி!


"பா.ச.க.வுடன் சேரமாட்டோமென ஸ்டாலின் சொல்வாரா?"

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் கேள்வி!





கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Labels: , ,

தமிழ் இந்து கட்டுரை: நாயரைக் காவிய நாயகனாக்கி நடேசனாரை மறைத்தது ஏன்? - பெ. மணியரசன் கட்டுரை!

Friday, July 17, 2020

தமிழ் இந்து கட்டுரை:

நாயரைக் காவிய நாயகனாக்கி
நடேசனாரை மறைத்தது ஏன்?

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
ஐயா பெ. மணியரசன் கட்டுரை!

“தமிழ் இந்து” இதழில் 17.07.2020 அன்று கே.கே. மகேஷ் எழுதிய “டி.எம். நாயர் : திராவிட சிந்தாந்த முன்னோடி” என்ற கட்டுரை வந்துள்ளது. டி.எம். நாயர் அவர்கள் நினைவுகூரத்தக்க – பாராட்டத்தக்க நீதிக்கட்சித் தலைவர்களுள் ஒருவர். பிராமணிய ஆதிக்கத்தை எதிர்த்தும் பிராமணரல்லாதார் வகுப்புரிமையைக் கோரியும் இயங்கிய அறிவார்ந்த தலைவர்களுள் ஒருவர்.

ஆனால், கட்டுரையாளர் டி.எம். நாயர் அவர்களை முன்வைத்து தமது கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டு, திராவிடச் சவாரி செய்துள்ளார். அதுபற்றி மட்டும் எனது திறனாய்வை முன்வைத்துக் கொள்கிறேன்.

“ஆனாலும் அவரால் (நாயரால்) அன்றைய காங்கிரசுக் கட்சிக்குள் இருந்த சாதிய ஏற்றத் தாழ்வுகளை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அனைவருக்கும் சமமதிப்பும் மரியாதையும் கிடைக்க வேண்டும் என்ற அவரது எதிர்பார்ப்பு நிறைவேறாத நிலையில், காங்கிரசை விட்டு வெளியேறி, தியாகராயருடன் இணைந்து 1916இல் “தென்னிந்திய நல உரிமைச் சங்க”த்தைத் தொடங்கினார். இந்த அமைப்புதான் இன்றையத் திராவிடக் கட்சிகளின் முன்னோடி” என்கிறார் கே.கே. மகேஷ்.

தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தை முன்மொழிந்த மூலவர்கள் மூவர். அவர்கள் நடேச முதலியார், பிட்டி தியாகராயர், டி.எம். நாயர்!

பிட்டி தியாகராயரும், டி.எம். நாயரும் காங்கிரசுக்காரர்கள். இருவரும் சென்னை மாநகராட்சி உறுப்பினர்கள். இருவரும் பிராமண ஆதிக்க எதிர்ப்பு மற்றும் வகுப்புரிமைக் கோரிக்கையில் ஒத்த கருத்துடையோர். ஆனால், இருவருக்குமிடையே இணக்கமில்லை. சேர்ந்து செயல்படும் நட்பு இல்லை.

அக்காலத்தில், சென்னை மாநிலக்கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில் படிக்கும் பிராமணரல்லாத மாணவர்களை வரவழைத்துப் பாராட்டி ஊக்கப்படுத்துவது, அரசுப் பணியில் உள்ள பிராமணரல்லாத அலுவலர்களை அழைத்துப் பாராட்டி ஊக்கப்படுத்துவது போன்ற பணிகளை ஒரு மருத்துவர் சென்னையில் தொடர்ச்சியாகச் செய்து வந்தார். அவர்தாம் திருவல்லிக்கேணி பெரிய தெருவில் வாழ்ந்து வந்த நடேச முதலியார். பிராமணரல்லாதார் முன்னேற்றத்திற்காக 1912இல் “மெட்ராஸ் யுனைடெட் லீக்” என்ற அமைப்பை உருவாக்கினார் நடேசனார். மறு ஆண்டே 1913-இல் நடந்த பேரவைக் கூட்டத்தில் அதைத் “திராவிட சங்கம்” (Dravidian Association) என்று நடேசனார் பெயர் மாற்றினார்.

இப்படிச் செயல்பட்டு வந்த நடேசனார்தாம் – பிராமண ஆதிக்க எதிர்ப்பில் ஒத்த கருத்தும் நடைமுறையில் எதிரும்புதிருமான பிணக்கும் கொண்டிருந்த பிட்டி தியாகராயரையும், டி.எம். நாயரையும் அணுகி இருவரையும் இணக்கப்படுத்தினார். இம்மூவரும் சேர்ந்துதான் வகுப்புரிமை நோக்கத்திற்கான அமைப்பை உருவாக்கத் திட்டமிட்டனர். இம்மூவரின் அழைப்பின் பேரில்தான் 20.11.1916 அன்று சென்னையில் முக்கியப் பிரமுகர்களும் உணர்வாளர்களும் கலந்து கொண்ட மாநாடு நடந்தது. கலந்து கொண்டோரில் 26 பிரமுகர்கள் பெயர் பதிவாகியுள்ளது. மேற்படி மூவருடன் திவான் பகதூர் பி. ராஜரத்தின முதலியார், திவான் பகதூர் பி. இராமராய நிங்கார், இராவ் பகதூர் எம்.சி. ராஜா, டாக்டர் முகம்மது உஸ்மான் சாகிப், ஜே.எம். நல்லசாமிப் பிள்ளை, இராவ் பகதூர் டி. எத்திராஜூலு முதலியார், ஆர்க்காடு ஏ. இராமசாமி முதலியார், எஸ். முத்தையா முதலியார் உட்பட 26 பெயர்கள் உள்ளன.

இக்கூட்டத்தில் தான் 20.11.1916 அன்று தென்னிந்திய நலஉரிமைச் சங்கம் என்ற நீதிக்கட்சி அமைக்கப்பட்டது. “தியாகராயருடன் இணைந்து டி.எம். நாயர் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தைத் தொடங்கினார்” என்று கே.கே. மகேஷ் எழுதியுள்ளார். தென்னிந்திய நல உரிமைச் சங்கம் நிறுவிட முன்முயற்சி எடுத்த மூலவரில் நடேசனார் முதன்மையானவர் என்றே கூற வேண்டும். அப்படிக் கூறாவிட்டாலும் அம்மூவரில் ஒருவராக நடேசனாரைக் கூறியிருக்கலாம் அல்லவா? கே.கே. மகேஷ் நடேசனார் பெயரைக் குறிப்பிடாதது ஏன்? அவர் தமிழ் இனத்தில் பிறந்ததால் கட்டுரையாளர்க்கு ஒவ்வாமை ஏற்பட்டு விட்டதோ?

அதேபோல், இடஒதுக்கீட்டிற்கான வகுப்புவாரி ஆணை (கம்யூனல் ஜி.ஓ.) முதல் முதலாக செயல்படுத்தப்பட்டது. 1928இல் செயல்படுத்தப்பட்டதில் டி.எம். நாயரின் எண்ணமே அது என்கிறார் கட்டுரையாளர். இந்த இடத்திலும் இட ஒதுக்கீட்டிற்காக டி.எம். நாயர் உழைத்ததை நான் மறுக்கவில்லை. மாறாகப் பாராட்டுகிறேன். ஆனால், டி.எம். நாயரால் மட்டுமே சிந்திக்கப்பட்டு, முன்வைக்கப்பட்ட திட்டம் வகுப்புவாரி ஒதுக்கீடு என்பதுபோல் கட்டுரையாளர் கதை கட்டுவது ஏன்? வகுப்புவாரி இட ஒதுக்கீடு திட்டத்தை முன்வைத்த – அதை அன்றைய சென்னை மாகாணத்தில் முதல் முதலாக செயல்படுத்திய தமிழர்களின் பெயர்களைக் கட்டுரையாளர் மறைப்பதேன்?

1928ஆம் ஆண்டு முதல் முதலாக வகுப்புவாரி இட ஒதுக்கீடு ஆணையின் ஒரு பகுதியைச் சென்னை மாகாணத்தில் செயல்படுத்தியது சுப்பராயன் என்ற தமிழரை முதலமைச்சராகக் கொண்ட சுயேச்சை அமைச்சரவை. அப்போது நீதிக்கட்சி ஆட்சியில் இல்லை! அந்த அமைச்சரவையில் எஸ். முத்தையா முதலியார் ஓர் அமைச்சர். அவர்தாம் தமது பத்திரப் பதிவுத்துறையில் முதல் முதலாக வகுப்புவாரி இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்தினார். முத்தையா முதலியாரும் தமிழர். இவர் 20.11.1916 அன்று சென்னையில் நடந்த தென்னிந்திய நல உரிமைச் சங்க அமைப்பு மாநாட்டில் கலந்து கொண்டவர்.

வகுப்புவாரி இடஒதுக்கீட்டிற்கான கோரிக்கை - நீதிக்கட்சி தொடங்கப்படும் முன்பே -பிட்டி தியாகராயர், டி.எம். நாயர், நடேச முதலியார் போன்றோர் குழந்தைப் பருவத்தில் இருந்தபோதே, பாதிக்கப்பட்ட வகுப்புகளில் பிறந்த அறிவாளிகளால் முன்வைக்கப்பட்டது.

அக்கோரிக்கைகளைப் பரிசீலித்துத்தான் ஆங்கிலேய அரசும் அதிகாரிகளும் இட ஒதுக்கீட்டிற்கான முன்னெடுப்புகளை அக்காலத்தில் செய்தார்கள். சென்னை மாகாண ஆங்கிலேய அரசின் வருவாய் வாரியம் (Revenue Board) 1854ஆம் ஆண்டே ஒரு நிலை ஆணை வெளியிட்டது.

நிலை ஆணை எண் : 128/2 பின்வருமாறு கூறியது :

“மாவட்ட அளவிலான அலுவலர்கள் நியமனத்தில் செல்வாக்குள்ள சில குடும்பங்களுக்கு ஏகபோக உரிமையாக ஆகிவிடாமல் மாவட்ட ஆட்சியாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் முதன்மையாக – (அதிகமாக) உள்ள சாதிகளுக்கு வேலைகளைப் பகிர்ந்து அளிக்க வேண்டும்”.

ஆனால், இந்த ஆணை சரிவரக் கடைபிடிக்கப்படவில்லை.

1871-ஆம் ஆண்டில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் கண்காணிப்பாளராக இருந்த டபுள்யு. ஆர். கார்னிஷ், “நாட்டின் முன்னேற்றம் தொடர்பான எந்தச் செய்தியையும் பார்ப்பனக் கண்ணாடி போட்டுக் கொண்டு பார்க்கக் கூடாது. அரசின் உண்மையான கொள்கை - அரசு அலுவலர்களில் பார்ப்பனர்களின் எண்ணிக்கைக்கு வரம்பு கட்டுவதாகவும், பார்ப்பனரல்லாத இந்துக்கள் மற்றும் முசுலிம்கள் அரசு அலுவல்களுக்குள் நுழைவதை ஊக்கப்படுத்துவதாகவும் இருக்க வேண்டும்; எந்த ஒரு சாதிக்கும் தனி முக்கியத்துவம் தருவதாக இருக்கக் கூடாது”.
- Report on the Census of Madras Presidency, 1871. Vol – I, Page 197.

இம்மேற்கோள் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் “வகுப்புவாரி வரலாறு” – மூன்றாம் பதிப்பு, 2000 – நூலில் இருந்து எடுக்கப்பட்டது.

இட ஒதுக்கீட்டிற்கான விதை வெள்ளையராட்சியிலேயே ஊன்றப்பட்டது. அது நீதிக்கட்சியின் புதிய கண்டுபிடிப்பன்று. வகுப்புவாரி உரிமையை முதன்மைப்படுத்தி நீதிக்கட்சித் திட்டம் வகுத்ததற்குப் பாராட்டலாம்; அவ்வளவே! அதற்கு மேல் ஆதியும் அந்தமும் நீயே என்று நீதிக்கட்சிக்குப் பாசுரம் பாட வேண்டியதில்லை.

சென்னை மாகாணத்திற்கு வெளியே மராட்டியத்தின் ஒரு பகுதியில் மன்னர் சாகு மகாராசா 1901-இல் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கினார். அதன்பிறகு, 1920க்கு சற்றுமுன் திருவிதாங்கூர் – கொச்சி சமஸ்தானத்தில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதேபோல் மைசூர் மகாராசா அரசிலும் வகுப்பு அடிப்படையில் இ்ட ஒதுக்கீடு அக்காலகட்டத்தில் வழங்கிட ஏற்பாடுகள் நடந்ததாகக் கூறப்படுகிறது.

இவையெல்லாம் காட்டுவதென்ன? பிராமண ஆதிக்கத்தால் வேலைவாய்ப்பில் பாதிக்கப்பட்ட பிராமணரல்லாதார்க்கு வகுப்புரிமை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கும் திட்டம் 19ஆம் நூற்றாண்டில் வெள்ளை அதிகாரிகளால் முன்மொழியப்பட்டது; அதன்பின்னர் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் – நீதிக்கட்சி தோன்றுவதற்கு முன்னரும், அது ஆட்சிக்கு வருவதற்கு முன்னரும் சென்னை மாகாணத்திற்கு வெளியே சமஸ்தான அரசுகளில் இட ஒதுக்கீடு பேசப்பட்டது; வழங்கப்பட்டது.

வகுப்புவாரி இட ஒதுக்கீடு, கருக்கொண்டது, உருக்கொண்டது எல்லாமே – நீதிக்கட்சியினால் மட்டுமே என்பதும், அந்த நீதிக்கட்சிதான் திராவிடக் கட்சியின் தாய்க்கட்சி என்பதும் மாய்மாலம்!

நீதிக்கட்சி – திராவிடக் கட்சியா?
-----------------------------------------------------
தென்னிந்திய நல உரிமைச் சங்கத் தொடக்க மாநாட்டில், புதிய அமைப்பின் பெயரில் “திராவிடர்” என்ற சொல் இருக்க வேண்டும் என்று சிலர் கூறியபோது, அது கூடாது என்று கூறித் தவிர்த்துவிட்டுத்தான் “தென்னிந்திய நல உரிமைச் சங்கம்” என்ற பெயரைச் சூட்டினார்கள்.

நடேச முதலியார் (1913-லேயே) திராவிடர் சங்கம் (Dravidian League) என்ற பெயரைத் தமது அமைப்பிற்கு வைத்திருந்தாலும் பிட்டி தியாகராயர் உள்ளிட்ட பெரும்பாலோர் அப்பெயரை ஏற்கவில்லை. எனவேதான் “தென்னிந்தியா” என்ற தலைப்பில் தங்கள் அமைப்பிற்குப் பெயர் சூட்டினர்.

ஆந்திரத் தெலுங்கர்கள் தங்களின் புதிய கட்சிக்காகத் தொடங்கிய தெலுங்கு இதழின் பெயர் ஆந்திரப்பிரகாசிகா (ஆந்திர ஒளி); கட்சித் தலைமை தொடங்கிய ஆங்கில இதழின் பெயர் ஜஸ்ட்டிஸ் (நீதி). (இதன் பெயரில்தான் பின்னர் கட்சி அழைக்கப்பட்டது). ஆனால், தென்னிந்திய நலஉரிமைச் சங்கத்தின் தமிழ்நாட்டுக் கிளை தொடங்கிய இதழின் பெயர் “திராவிடன்!” இப்பொழுதாவது, புரிகிறதா தமிழ்நாட்டில் மட்டும் நடக்கும் திராவிடக் குழப்பத்தை!

இந்தத் தென்னிந்திய நல உரிமைச் சங்கம்தான் (நீதிக்கட்சிதான்) திராவிடத்தின் தாய்க் கட்சியா?

அலுவல்களில் பிராமண ஆதிக்கத்தை எதிர்த்த நீதிக்கட்சி பிராமணிய வர்ணாசிரமத்தையோ, சமூகத்தில் நிலவும் பிராமணிய ஆதிக்கத்தையோ எதிர்க்கவில்லை. இதைப் பெரியாரே கூறுகிறார். திருவரங்கம் நகராட்சி கொடுத்த வரவேற்பில் கலந்து கொண்ட அன்றைய முதலமைச்சர் பனகல் அரசர்க்கு (இராமராய நிங்கார்க்கு) பிராமணர்கள் சமற்கிருதத்திலேயே அச்சிடப்பட்ட வரவேற்பு மடலை வாசித்துக் கொடுத்தனர். நன்றி தெரிவித்துப் பேசிய பனகல் அரசர் சமற்கிருதத்திலேயே பேசினார் என்பதைக் கண்டித்துப் பெரியார் எழுதினார். பனகல் அரசர் பூணூல் போட்டிருந்தார் என்ற விமர்சனமும் உண்டு.

பெரியார் 1919இல் அரசியலில் நுழைகிறார். நேரடியாகக் காங்கிரசில் சேர்கிறார். அவர் நீதிக்கட்சியில் சேரவில்லை. 1925இல் காங்கிரசை விட்டு வெளியேறுகிறார். அப்போதும் அவர் நீதிக்கட்சியில் சேரவில்லை. தனி அமைப்புத் தொடங்கினார். பிறகு எப்படி நீதிக்கட்சி – திராவிடர் கழகத்தின் தாயாகும்? திராவிடமே ஒரு புனைவு! திராவிடக் காதலர்களின் புனைவோ கொஞ்ச நஞ்சமல்ல!

தொடங்கப்பட்டு மிகக்குறுகிய காலத்திலேயே நீதிக்கட்சி 1920இல் ஆட்சியைக் கைப்பற்றியது என்று கே.கே. மகேஷ் களிப்பெய்துகிறார். காரணம் என்ன? காங்கிரசுக் கட்சி தேர்தலில் பங்கெடுக்காததுதான்! வேறு போட்டிக் கட்சி இல்லை!

1937இல் காங்கிரசுக் கட்சி முதல் முதலாகத் தேர்தலில் போட்டியிட்டது. நீதிக்கட்சி காணாமல் போய்விட்டது. நீதிக்கட்சிக்குக் காங்கிரசு சாவுமணி அடித்துவிட்டது என்றவுடன், துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று நீதிக்கட்சியின் தலைமையில் இருந்த ஆந்திரத்து சமீன்தார்களும் கனதனவான்களும் ஓடி விட்டனர். இந்தத் தலைமையை யாரிடமாவது ஒப்படைத்துவிடுவோம் என்று தேடி, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் சிறையில் இருந்த பெரியாரை இவர்கள் தலைவராகத் “தேர்ந்தெடுத்தனர்”. அந்தக் கனவான்கள் நீதிக்கட்சிக் கூடாரத்தைக் காலி செய்தார்கள். பெரியாருக்கும் நீதிக்கட்சிக்கும் ஏற்பட்ட இணைப்பு ஒரு விபத்து போல் ஏற்பட்டதுதான்.

பெரியார் அக்கட்சியின் பெயரை நீக்கிவிட்டார். தமது சுயமரியாதை இயக்கத்திற்குப் பின்னர் “திராவிடர் கழகம்” என்று பெயர் மாற்றினார்.

திராவிட விரிவாக்க ஆசை
--------------------------------------------
டி.எம் நாயர் – மாபெரும் மக்கள் தலைவராக விளங்கியவர் என்பதுபோல் சித்தரிக்க முயல்கிறார் கே.கே. மகேஷ்.

“ஒரு மலையாளியான டி.எம். நாயர், அன்றைய சென்னை மாகாணம் பிரதிபலித்த தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாளச் சமூகங்களின் கூட்டுச் சக்தியாகவே நீதிக்கட்சியைக் கனவு கண்டார். பிற்பாடு, “திராவிட நாடு” முழக்கம் வரை சென்ற திராவிட இயக்கத்தின் வரையறையும், தென்னிந்தியச் சமூகங்களின் புள்ளியில் சந்திப்பவை. நாயர் மேலும் பல ஆண்டுகள் வாழ்ந்திருந்தால் என்னவாகி இருக்கலாம்? திராவிட இயக்கம் குறைந்தபட்சம் தென்னிந்தியா தழுவிய அமைப்பாகக் கூட விரிவடைந்திருக்கலாம். ஆனால், அவர் விட்டுச் சென்ற புள்ளியிலிருந்தும் கூட, அது அற்றுப் போய்விடவில்லை என்பதே முக்கியமான செய்தி. இதற்குக் காரணம் இந்த மண்ணின் இயல்போடு இணைந்த ஒரு அரசியலை அவர் அடையாளம் கண்டார். அந்த வகையில் இந்திய அரசியலின் முக்கியமான தொலைநோக்கர்களில் ஒருவராக அவர் ஆகிறார்”.

மேலே கண்டது கே.கே. மகேஷின் முடிவுரை.

டி.எம். நாயர் குறைந்த அகவையில் இறந்தது துயராமனது. ஆனால் அவர் கூடுதல் ஆண்டுகள் வாழ்ந்திருந்தால், தெலுங்கு, கன்னட, மலையாள மாநிலங்களிலும் திராவிடக் கட்சி ஓங்கி வளர்ந்து செழித்திருக்கலாம் என்று கே.கே. மகேஷ் கதை சொல்வதுதான் முரண்பாடு!

பெரியார், அண்ணா போன்ற தலைவர்கள் அவர்கள் கூறிய மற்ற மூன்று திராவிட மாநிலங்களில் திராவிட இயக்கத்தை வளர்க்க முடியவில்லை. ஆனால் நாயர் இருந்திருந்தால் அதைச் சாதித்திருப்பார் என்று கூறுகிறார் கட்டுரையாளர்.

நீதிக்கட்சி தொடங்கப்பட்டவுடன் – அதற்கென ஆந்திரத்திற்கு தெலுங்கில் ஆந்திரப் பிரகாசிகா ஏடும், தமிழில் திராவிடன் ஏடும் தொடங்கப்பட்டன. நாயர் உயிரோடு இருந்த காலத்திலேயே அவரது தாய்மொழியான மலையாளத்தில் ஏன் இயக்க ஏடு தொடங்கவில்லை? கேரளத்தில் படிக்க ஆளில்லை! அதுதான் காரணம்!

நாயர் விட்டுச் சென்ற புள்ளியிலிருந்து தொடங்கி தென்னிந்தியா முழுவதும் திராவிட இயக்கத்தைக் கொண்டு போகலாம் என்கிறார் மகேஷ். காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு ஆகியவற்றில் தமிழ்நாட்டிற்குள்ள உரிமைகளைப் பறித்துவரும் மற்ற மாநிலங்களில் போய் அவர்கள் மொழிகளில் இந்த “அறிவுரையை” மகேஷ் போன்றவர்கள் பரப்ப வேண்டும்; தமிழ்நாடு இவ்வளவு காலமாகத் திராவிடத்தைச் சுமந்ததுபோதும்! அது மற்ற மாநிலங்களுக்குப் போகட்டும்!


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam




Labels: , , ,

"பெரியார் Vs பா.ஜ.க. தமிழர்களை கழுத்தருக்கும் சக்தி இவர்கள்!” ஐயா, பெ. மணியரசன் உரை!

"பெரியார் Vs பா.ஜ.க.

தமிழர்களை கழுத்தருக்கும் சக்தி இவர்கள்!”


தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்

ஐயா, பெ. மணியரசன் உரை!




கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Labels: , ,

குற்றச்சட்டத் திருத்தமா? ஆர்.எஸ்.எஸ் சட்ட அரங்கேற்றமா? - ஐயா, பெ. மணியரசன் உரை!

Thursday, July 16, 2020

குற்றச்சட்டத் திருத்தமா? ஆர்.எஸ்.எஸ் சட்ட அரங்கேற்றமா?

 

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்

ஐயா, பெ. மணியரசன் உரை!




கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Labels: , ,

”மறைமலையடிகளாரும் தமிழர் மறுமலர்ச்சியும்” ஐயா பெ. மணியரசன் உரை!

”மறைமலையடிகளாரும் தமிழர் மறுமலர்ச்சியும்”

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
ஐயா பெ. மணியரசன் உரை!







கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Labels: , ,

விகாசு துபே கொலை: வளர்த்த பாம்பு கடித்ததா? - ஐயா பெ. மணியரசன் உரை!

Saturday, July 11, 2020

விகாசு துபே கொலை: வளர்த்த பாம்பு கடித்ததா?


தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
ஐயா பெ. மணியரசன் உரை!






கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Labels: ,

ஊர்ப் பெயர்களைத் தமிழில் உள்ளது போல் ஆங்கிலத்திலும் மாற்றுவதை தமிழ்நாடு அரசு நிரந்தரமாகக் கிடப்பில் போட்டு விட்டதா? பெ. மணியரசன் கேள்வி!

Thursday, July 9, 2020

ஊர்ப் பெயர்களைத் தமிழில் உள்ளது போல்
ஆங்கிலத்திலும் மாற்றுவதை தமிழ்நாடு அரசு
நிரந்தரமாகக் கிடப்பில் போட்டு விட்டதா?


தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
பெ. மணியரசன் கேள்வி!


ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகள் நம் தமிழ்நாட்டைக் கைப்பற்றியபோது, ஆதிக்கச் செருக்குடன் தமிழில் உள்ள ஊர்ப் பெயர்களை சிதைத்து, மனம்போன போக்கில் மாற்றி ஒலித்தார்கள். திருவல்லிக்கேணியை “ட்ரிப்ளிக்கேன்” (TRIPLICANE) என்றும், தூத்துக்குடியை “தூத்துக்கொரின்” (TUTICORIN) என்றும் மாற்றினார்கள். அவ்வாறே ஆங்கிலத்தில் எழுதினார்கள்.

ஆங்கிலேய ஆதிக்கவாதிகள் உருவாக்கிய இந்தச் சீரழிவுகளைப் போக்கிட, இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊர்ப்பெயர்களை தம்தம் தாய்மொழிகளில் உள்ளபடியே ஆங்கிலத்தில் எழுத வேண்டும், பேச வேண்டும் என ஆணைபோட்டுச் செயல்படுத்தியுள்ளார்கள். எடுத்துக் காட்டாக, கர்நாடகத்தில் ஆங்கிலயர் சிதைத்த பிஜப்பூர், குல்பர்கா, பெல்காம் முதலிய ஊர்களின் பெயர்களை முறையே பிஜப்புரா, கலபுர்க்கா, பெலகாம் என்று ஆங்கிலத்திலும் எழுத வேண்டும் என அம்மாநில அரசு 2014 நவம்பர் 1-இல் ஆணையிட்டது.

ஆனால், “திராவிட இன” அரசியல் நடத்திக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டு தி.மு.க. – அ.இ.அ.தி.மு.க. ஆட்சிகள் தமிழ் மரபுப்படியான மாற்றங்களை ஊர்ப்பெயர்களுக்குச் செய்யவில்லை. எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது, அப்போதைய அமைச்சர் எஸ்.டி.எஸ். முயற்சியின் பயனாய், மயூரம் – மயிலாடுதுறை என மாற்றப்பட்டது. அத்தோடு நின்று போனது. கலைஞர் கருணாநிதி ஆட்சியில் மெட்ராஸ் – “சென்னை” என மாற்றப்பட்டதோடு நின்று போனது. அதுவும், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை உயர் நீதிமன்றம் முதலியவற்றுக்குப் பொருந்தாது, அவற்றின் பெயரில் “மெட்ராஸ்” தொடர்கிறது.

தமிழ்நாட்டின் ஊர்ப் பெயர்களை தமிழ் ஒலிப்பிற்கு ஏற்ப ஆங்கிலத்திலும் எழுத வேண்டும் என்று ஆணையிடப்படும் என்ற அறிவிப்பை 2018 – 2019 நிதிநிலை அறிக்கை – மானியக் கோரிக்கையில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் க. பாண்டியராசன் சட்டப்பேரவையில் அறிவித்தார். இப்பணிக்காக 5 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்றும் அறிவித்தார்.

மாவட்ட ஆட்சியர்கள் வழியாக, தமிழ் முறைப்படி மாற்றம் செய்ய வேண்டிய ஊர்ப் பட்டியல்களைப் பெற்று, தமிழ்நாடு அரசு அதனை 01.04.2020 அன்று அரசிதழில் வெளியிட்டது. அவ்வாறு தமிழ்வழியில் மாற்றம் செய்யப்பட வேண்டிய ஊர்கள் 1018. எடுத்துக்காட்டாக, எக்மோர் என்பது எழும்பூர் என்றும், சின்ஞ்ஜி என்பது செஞ்சி என்றும் ஆங்கிலத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளன.
ஆனால், அப்பட்டியலில் சில ஊர்ப் பெயர்கள் தமிழ் எழுத்துகளுக்கு ஏற்ப சரியான ஆங்கில எழுத்துகளில் மாற்றப்படவில்லை என்றும், அதைச் சரி செய்து இரண்டு – மூன்று நாட்களில் சரியான புதுப்பட்டியலை வெளியிடுவோம் என்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராசன் 18.06.2020 அன்று அறிவித்தார்.

எடுத்துக்காட்டாக, வேலூர் என்பது VEELOOR (வீலூர்) என்று மாற்றப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபோன்ற தவறுகள் மிகமிகச் சில மட்டுமே! இவற்றிற்கு மட்டும் தனியே ஒரு திருத்தம் வெளியிட ஏற்பாடு செய்துவிட்டு, சரியாக உள்ள மிகப்பெரும்பான்மையான பெயர்களை அரசு ஆணையாக வெளியிட்டிருக்கலாம்.

ஆனால், தமிழ்நாடு அரசின் நோக்கம் வேறொன்றாக இருந்திருக்கிறது. சமற்கிருதத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்ட தமிழ் ஊர்ப் பெயர்களையும் தமிழுக்கு மாற்றுங்கள் என்ற கோரிக்கை இதே காலத்தில் ஆட்சியாளர்களை நோக்கி தமிழ் உணர்வாளர்களால் எழுப்பப்பட்டது.

எடுத்துக்காட்டாக, வேதாரணியம் என்பதை மரைக்காடு என்றும், விருத்தாச்சலம் என்பதை முதுகுன்றம் என்றும் பழைய நிலைக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. ஆரியத்தின் அடிமடியில் கைவைக்கிறார்களே என்று கலங்கிப் போனவர்கள், ஆட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுத்து தமிழ் ஒலிப்புப்படி ஆங்கிலத்திலும் எழுத வேண்டுமென்ற திட்டத்தைக் கிடப்பில் போடச் செய்துவிட்டார்கள் என்று ஐயப்படுகிறோம்.

20.06.2020 அன்று இக்கருத்தை நான் காணொலி உரையில் கூறியிருந்தேன். அதுதான் உண்மை என்பதுபோல் ஆட்சியாளர்களின் நடைமுறை உள்ளது.

இரண்டு – மூன்று நாட்களில் சரி செய்து இப்பட்டியலை வெளியிடுவோம் என்று 18.06.2020 அன்று உறுதியளித்த தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராசன், அதுபற்றி எதுவும் பேசாமல் இருப்பதன் நோக்கம் என்ன?

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று 2015 திசம்பரில் தீர்ப்பளித்தும், அதைச் செயல்படுத்த முன்வரவில்லை அ.இ.அ.தி.மு.க. ஆட்சி! அதைச் செயல்படுத்துமாறு, தி.மு.க. போராடவில்லை! இப்பொழுது, சமற்கிருதத்தில் மாற்றப்பட்ட ஊர்களின் பெயர்களையும் தமிழில் மாற்றி ஆணையிட வேண்டுமென்ற கோரிக்கை வந்தவுடன் ஆங்கிலத்தில் செய்யவிருந்த திருத்தத்தை அ.இ.அ.தி.மு.க. அரசு, நிரந்தரமாகக் கைவிட்டு விட்டதோ என்று கருத வேண்டியுள்ளது.

தமிழில் உள்ளதுபோலவே ஆங்கிலத்திலும் மாற்றியமைக்கப்பட்ட ஊர்களின் பெயர்ப் பட்டியலை தமிழ்நாடு அரசு உடனடியாக வெளியிட்டு செயல்படுத்த வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இல்லையேல், தமிழ் உணர்வு அமைப்புகளையும், உணர்வாளர்களையும் ஒருங்கிணைத்து தமிழ்த்தேசியப் பேரியக்கம் இதற்கான போராட்டங்களை முன்னெடுக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


Labels: ,


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்