<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d6955529389241309188\x26blogName\x3d%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86.%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://thozharmaniyarasan.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com/\x26vt\x3d-8408640130511538487', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

" *மொழி – இனம் - தாயகம் மூன்றும் நிலையானவை*"--- தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா *பெ. மணியரசன்* அவர்களின் மலேசிய மாநாட்டு உரை!

Tuesday, July 25, 2023


*மொழி – இனம் - தாயகம் மூன்றும் நிலையானவை*

========================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா *பெ. மணியரசன்* அவர்களின் மலேசிய மாநாட்டு உரை!
========================================


பதினோராவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (11th International Tamil Research Conference), உலகத் தமிழ் ஆராய்ச்சி அமைப்பு – International Association of Tamil Research – IATR சார்பில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில், மலாயா பல்கலைக் கழக வளாகத்தில் 21-23 சூலை 2023 மூன்று நாட்கள் நடந்தது. அதில் கலந்து கொண்டு உரையாற்ற சிறப்பு அழைப்பாளராகப் பலரை அழைத்திருந்தார்கள். அதில் நான் கலந்து கொண்டு 22.7.2023 முற்பகல் 20 மணித்துளிகள் பேசினேன். எனக்கான தலைப்பு *”பழந்தமிழ் இலக்கியத்தில் தமிழ், தமிழர், தமிழ்நாடு”* என்பதாகும். நேரக் குறைவு காரணமாக அணியம் செய்த குறிப்புகளில் சிலவற்றைப் பேச முடியவில்லை. அவற்றையும் சேர்த்து, அன்றைய உரை இங்கு முழுமையாகத் தரப்பட்டுள்ளது:

அன்பு கெழுமிய 11-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு ஆய்வுச் சான்றோர்களே, தமிழ் உணர்வாளர்களே, உங்கள் அனைவருக்கும் வணக்கம். சென்னை கலைஞன் பதிப்பக உரிமையாளர் திருவாளர் நந்தன் மாசிலாமணி அவர்கள்தாம் இம் மாநாட்டில் கலந்து கொள்ள என்னை அழைத்தார். அவருக்கு என் நன்றி! எனது உரைக்கான தலைப்பு: “பழந்தமிழ் இலக்கியத்தில் தமிழ், தமிழர், தமிழ்நாடு“ என்பதாகும். நமக்குத்தான் தமிழ்ப் பெயராலேயே மொழிப் பெயரும், இனப் பெயரும், தாயகப் பெயரும் அமைந்துள்ளன. தமிழ், தமிழர், தமிழ்நாடு! இவ்வாறு நமக்கு அண்டை இனங்களாக உள்ள தெலுங்கர், கன்னடர், மலையாளி போன்றோர்க்குத் தாயகப் பெயர் அமையவில்லை. தமிழர்கள் கொடுத்து வைத்தவர்கள்!

மக்கள், இயற்கையின் படைப்பு! அதேபோல் அவர்களின் மொழி, இனம், தாயகம் மூன்றும் இயற்கையின் படைப்பு!

உலக உருண்டை ஒன்றுதான். ஆனால் அதில் பல இனங்கள், பல மொழிகள், பல தாயகங்கள்! ஒற்றை உலக உருண்டையில் இவ்வாறு பன்மைகள் இருக்கின்றன. ஒரே கதிரவன்தான் உலகிற்கு இருக்கிறது. ஆனால் அது தோன்றி மறையும் நேரங்கள் அங்கங்கே பலப்பல! அதன் வெப்பவீச்சும் பலப்பல அளவுகள்!

இயற்கையாக அமைந்துள்ள இந்தப் பன்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். ”மனிதக் குரங்கிலிருந்து மனிதராக மாறும் வரையில் உள்ள உழைப்பின் பாத்திரம்” என்ற நூலை எழுதிய பிரெடெரிக் எங்கெல்சு, மனித குல வளர்ச்சியில் என்ன முரண்களின் கூட்டியக்கத்தால் மொழி உண்டாயிற்று என்று சொல்ல முடியவில்லை என்று கூறினார். மார்க்சிய இயங்கியலில் கூட அறிய முடியாதவை இல்லை; ஆனால் அறியப் படாதவை உண்டு என்பார்கள். அறியப்படாதவை தொடர்ந்து கொண்டே இருக்கும்!

நம்முடைய தாயாம் தமிழ் எப்பொழுது தோன்றியது? யாரால் தோற்றுவிக்கப்பட்டது? தமிழ் என்றும் இருக்கிறது என்பது மட்டுமே நமக்குத் தெரியும். மொழி வளர்ச்சிப் படிக்கட்டுகள் தமிழுக்கும் இருந்திருக்கும். ஆனால் எப்பொழுது தோன்றியது, எப்டித் தோன்றியது ஏன் தோன்றியது என்று துல்லியமாகத் தெரியாது.

நேற்று இம்மாநாட்டில் பேசிய திருவாளர் வைகச் செல்வன் (அதிமுக) அவர்கள் கூடத் தமிழ்ப் பழமையைக் கூறும்போது,

”ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும் ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரோன் ஒன்று, ஏனையது
தன்னேர் இலாத தமிழ்!”

என்ற தண்டியலங்கார மேற்கோள் பாடலைச் சொன்னார். கதிரவனைப் போல் தமிழ் என்றும் இருக்கிறது! ”என்றும் உள்ள தென் தமிழ்” என்பார் கம்பர். அகத்தியப் படலத்தில், “என்றுமுளதென்றமிழ் இயம்பி இசை கொண்டான் அகத்தியன்“ என்பார். என்றும் இருக்கிறது தமிழ்; அதைக் கற்றுப் புகழ்பெற்றான் அகத்தியன் என்றார். அகத்தியன் ஆரியனல்லன், தமிழன்! தமிழுக்கு முறையான முதல் இலக்கணம் கண்ட மாமுனி அகத்தியன்.

”ஆதிசிவன் பெற்றுவிட்டான் என்னை
ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே நிறை
மேவும் இலக்கணம் செய்து கொடுத்தான்”

என்று பாரதியார் பாடியிருப்பது வரலாற்றுப் பிழை. என்றும் தமிழ் இருக்கிறது!

நம்முடைய பாவேந்தர்,

”திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள்” என்றார்.

*பழந்தமிழ் இலக்கியங்களில் தமிழ்நாடு!*

தமிழகம், தமிழ்நாடு என்ற சொற்கள் சங்க இலக்கியங்கள் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களில் பரவலாக வருகின்றன. பரிபாடலில் ”தண்டமிழ் வேலித் தமிழ்நாட்டு அகமெல்லாம்” என்று வருகிறது. வேலி என்றால் எல்லை என்று பொருள். குளிர்ச்சியான தமிழை வேலியாகக் கொண்ட தமிழ்நாடு என்று கூறுகிறது பரிபாடல். அப்பொழுது அந்தத் தமிழ்நாட்டில் ஒற்றை அரசா இருந்தது? இல்லை. சிற்றரசுகள் பல இருந்தன. நம் தமிழ்தான் நமது தேசத்திற்கான எல்லை. நம் தமிழ் பேசப்படாத பகுதி எனில் அது ”மொழிபெயர் தேஎம்”! தமிழ்மொழி பேசப்படும் பகுதி நம் தேஎம் - தேயம்! தேயம் என்பதிலிருந்து ”தேஷ்” என்ற சொல்லை வடவர் உருவாக்கியிருப்பர். நாடு என்ற சொல்லும் நமக்கு அப்போதிருந்தே இருக்கிறது. தமிழகம் என்ற சொல்லும் இருக்கிறது. ”தமிழ்கெழு மூவர் காக்கும் மொழி பெயர் தேஎத்தே” என்கிறது அகம். 31-ஆம் பாடல்.

புறநானூற்றில் 168-ஆம் எண் பாடல் பிட்டங்கொற்றன் என்ற சிற்றரசரை கருவூர்க் கதப் பிள்ளைச் சாத்தனார் என்ற புலவர் பாராட்டி எழுதியது.

”வையக வரைப்பில் தமிழகம் கேட்பப்
பொய்யாச் செந்நா நெளிய ஏத்திப்
பாடுப என்ப பரிசிலர் நாளும்”

என்ற வரிகள் அப்பாடலில் உள்ளன. தமிழகம் என்ற சொல்லைத் தமிழர்களுக்கான தாய்நாடு என்ற பொருளில்தான் ”தமிழகம்“ என்று புலவர் குறிப்பிடுகிறார்.

”தமிழகப் படுத்த விமிழிசை முரசின்
வருநர் வரையாப் பெருநா ளிருக்கை”

என்று அகநானூறு 227 ஆம் பாடல் கூறுகிறது.

சிலப்பதிகாரம் மிகத் தெளிவாகத் தமிழகம் என்றும், தமிழ்நாடு என்றும் தமிழர்களின் முழுத் தாயகத்தையும் பெருமையோடு கூறுகிறது. அரங்கேற்றுக் காதையில் ஆடல், பாடல், அழகு மூன்றும் நிறைந்தவள் என்று மாதவியை அறிமுகப் படுத்துவார் இளங்கோவடிகள். அடுத்து மாதவிக்கு நாட்டியம் கற்றுக் கொடுத்த ஆசிரியர் சிறப்பைக் கூறி அவரை அறிமுகப்படுத்தவார். அவ்வாசிரியர்,

”இமிழ்கடல் வரைப்பின் தமிழகம் அறியத்
தமிழ் முழுதறிந்த தன்மையன் ஆகி”

என்பார். தமிழை முழுமையாகக் கற்றவர். தமிழ்நாடு முழுவதும் அவரை அறியும் என்பார்.

கண்ணகிக்குச் சிலை வடிக்கப் பொதியமலைக் கல் எடுப்பதா, இமயமலைக் கல் எடுப்பதா என்று சேரன் செங்குட்டுவன் கேட்பான். இமயக் கல் எடுக்கலாம் என்றனர் அவையோர். நாம் கல்லெடுக்கப் போவதைப் படைஎடுத்து நாடு பிடிக்க வருவதாகத் தவறாக அங்குள்ள மன்னர்கள் புரிந்து கொண்டால் என்ன செய்வது என்றான் செங்குட்டுவன். அப்போது படைத்தளபதி வில்லவன் கோதை, அப்படிப் புரிந்து கொண்டால் அவர்களைச் சந்திப்போம் என்று ஆவேசமாகப் பேசினான்.

”ஆரிய மன்னர் ஈர்ஐநூற்று வர்க்கு
ஒருநீ ஆகிய செருவெங் கோலம்
கண்விழித்துக் கண்டது கடுங்கண் கூற்றம்
இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய
இதுநீ கருதினை யாயின் ஏற்பவர்
முதுநீர் உலகில் முழுவதும் இல்லை”.

ஆரிய மன்னர் ஆயிரம் பேர் நின்றாலும் அவர்கள் முன் போர்க் கோலத்தோடு நீ ஒருவன் நின்றால் அவர்கள் நடுங்கிப் போவர்! ஒலிக்கின்ற கடலை எல்லையாகக் கொண்ட தமிழ்நாட்டை ஒருங்கிணைக்க முனையும் நீ, இமயம் சென்றால் உன்னை எதிர்த்திட யாரும் இருக்கமாட்டார்கள் என்றான் வில்லவன் கோதை! தெளிவாகத் ”தமிழ்நாடு” என்கிறான். தமிழர்க்குப் பகைவர்கள் ஆரியர்கள் என்பதையும் இளங்கோவடிகள் எடுத்துக் காட்டுகிறார்!

அடுத்து, அடிகள் கையாளும் ஒரு சொல்லாட்சி! ”உன்னை ஏற்பவர்” என்கிறார். உன்னைச் சந்திப்பவர் என்று பொருள்! சந்திக்கத் தயாரா என்றால் என்னைப் பொருத, மோதத் தயாரா என்பதாகும். இரண்டாம் உலகப் போரில் இட்லர் படை இலண்டனை நெருங்கிக் கொண்டிருந்தபோது, உயரமான இடத்தில் நின்று பிரிட்டன் தலைமை அமைச்சர் வின்ஸ்டன் சர்ச்சில் ”London will take it” என்று அறிவித்ததாகச் சொல்வார்கள். ‘will take it’ என்றால் சந்திக்கத் தயார் என்பதாகும். அதைத்தான் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வில்லவன் கோதை, உன்னை ஏற்பவர், உன்னைச் சந்திப்பவர் எவரும் இல்லை என்றான்!

அத்துடன் வில்லவன் கோதை நிற்கவில்லை. நம்முடைய தென் தமிழ்நாட்டு வில், மீன், புலி சின்னங்கள் பொறித்த கொடியை வடநாடெங்கும் ஏற்றிப் பறக்கவிட ஆணை இடுவோம் என்றான்! நண்பர்களே, தோழர்களே உங்கள் பிள்ளைகளுக்கு, பேரப்பிள்ளைகளுக்கு வில்லவன்கோதை என்று பெயர் சூட்டுங்கள்!

இன்று தமிழ்நாட்டில் என்ன நிலை? இந்தியக் கொடியை எல்லா இடங்களிலும் ஏற்ற வேண்டும். வில், மீன், புலி சின்னங்கள் பொறித்த தமிழ்க் கொடியை ஏற்ற முடியாது. பிரிவினைவாதிகள் என்று கைது செய்வார்கள். அதிலும் குறிப்பாக நவம்பர் 1-ஆம் நாள், தமிழ்நாடு நாள்; 1956 நவம்பர் 1-ஆம் நாள் தமிழர் தாயகமாக இந்திய சட்டப்படி தமிழ்நாடு ஏற்கப்பட்ட நாள்! அந்த நாளில் நம் மூவேந்தர் சின்னங்கள் பொறித்த கொடியை ஏற்ற முடியாது! தமிழ்நாடு அரசுக்கெனத் தனிக் கொடி கிடையாது. கர்நாடகத்தில் அனைத்துக் கட்சியினரும், மக்களும் நவம்பர் 1-ஆம் நாள் - கர்நாடகம் உருவான நாளில் அவர்களின் மாநிலக் கொடியை ஏற்றுகிறார்கள்.

தமிழ் என்றால் தமிழரையும் குறிக்கும். அப்படித்தான் சங்க இலக்கியங்களிலும் சிலப்பதிகாரத்திலும் கூறப்பட்டுள்ளது. “தென் தமிழ் ஆற்றல் காண்குதும்” என்று கூறி செங்குட்டுவன் படையுடன் சென்றான் என்று இளங்கோவடிகள் கூறும்போது, ”தென்னாட்டுத் தமிழர்” என்பதைக் குறிக்கின்றது. புறநானூற்று 19-ஆம் பாடலில்

”இமிழ்கடல் வளைஇய ஈண்டகன் கிடக்கை
தமிழ்தலை மயங்கிய தலையாலங் கானத்து”

என்பது, இந்தப் பக்கமும் தமிழர்கள், அந்தப்பக்கமும் தமிழர்கள், யார் எந்தப் படையைச் சேர்ந்தவர் என்பது சட்டென்று புரிவதில்லை; குழப்பமாக இருக்கிறது என்று கூறுகிறது.

சங்க கலத்திற்குப் பின் தெளிவாகத் தமிழன் என்று கூறும் வழக்கம் செய்யுள்களில் இடம் பெற்றுள்ளது. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த திருநாவுக்கரசர் சிவபெருமானை ”ஆரியன் கண்டாய்; தமிழன் கண்டாய்” என்று விளித்தார். பூதத்தாழ்வார் தன்னைப் ”பெருந்தமிழன்” என்று அழைத்துக் கொண்டார்.

”யானெ தவம் செய்தேன் ஏழ்பிறப்பும் எப்பொழுதும்
யானே தவமுடையேன் எம்பெருமான் யானே
இருந்தமிழ்தன் இறையடிக்கே சொன்னேன்
பெருந்தமிழன் நல்லேன் பெரிது!”

தமிழ், தமிழர், தமிழ்நாடு என்று, தமிழ்த் தேசியத்தின் மூன்று அடிப்படைக் கூறுகளையும் இரண்டாயிரம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் கூறிவிட்டார்கள். நம் இனப் பெயர் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னும் ”தமிழர்”தான், இன்றும் ”தமிழர்”தான்!

இந்த அவையில் இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சித் தலைவர்களில் ஒருவரான தோழர் சி. மகேந்திரன் இருக்கிறார்; மார்க்சியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவரான தோழர் பாலபாரதி இருக்கிறார். கம்யூனிஸ்ட்டுத் தலைவர் ஸ்டாலின் போன்றவர்கள், முதலாளியம் தனது சந்தையில் கண்டறிந்ததுதான் தேசியம் என்றார்கள். முதலாளிய வளர்ச்சிப் போக்கில்தான் தேசிய இனம் குறித்த புரிதல் வந்தது என்றார்கள். ஆனால், தமிழர்களுக்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தங்களின் இனம் குறித்த புரிதல் வந்து விட்டது.

18-ஆம் நூற்றாண்டில், அமெரிக்க ஐக்கிய நாடுகளை உருவாக்கியபோது, பெருங் கூட்டரசு (Confederation), கூட்டரசு (Federation) பற்றியெல்லாம் விவாதித்தார்கள். தேசிய இனங்கள் குறித்தும் விவாதித்தார்கள். அவ்வாறு ஜார்ஜ் வாஷிங்டனும், ஜெஃபர்சனும், ஹாமில்டனும் விவாதிப்பதற்கு முன்பே மூன்று ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்ச் சான்றோர்கள் தமிழ் இனம் பற்றியும் தமிழ்த்தேசம் பற்றியும் அறிந்து கொண்டார்கள். அடையாளப்படுத்தினார்கள்.

கடைசியாக ஒரே ஒரு எடுத்துக்காட்டு; தொல்காப்பிய நூற்பாவான ”செப்பும் வினாவும் வழாஅல் ஓம்பல்” என்பதற்கு விளக்கம் எழுதிய உரையாசிரியர் இளம்பூரணர், வினாவும் விடையும் குழப்பிமில்லாமல் தெளிவாக இருக்க வேண்டும் என்று கூறிவிட்டு, குழப்பமில்லாத கேள்விக்கும் பதிலுக்கும் எடுத்துக்காட்டாக ”நும் நாடு யாது என்றால், தமிழ்நாடு என்றல்” என்றார். ஏன் அப்படிச் சொன்னார்? இளம்பூரணர் பொது ஆண்டு 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்பர். தமிழ்நாட்டில் சேர, சோழ, பாண்டிய நாடுகள் இருந்து வந்தமை பொதுவான செய்தி. இளம்பூரணர் காலத்தில் சோழநாடும், பாண்டிநாடும் இருந்தன. உன்நாடு எது என்றால் சோழநாடு, பாண்டிய நாடு என்று சொல்லக் கூடாது. அது அரசவழி நிர்வாக நாடுகள். இவை மாறிப்போகும். மொழி, இனம், பொதுத்தாயகம் சார்ந்து நாட்டை அடையாளப்படுத்த வேண்டும். அதுவே சரியானது; நிலையானது. எந்த அரசின் கீழ் இருக்கிறாய் என்று கேட்டால் சோழ அரசு அல்லது பாண்டிய அரசு என்று கூறலாம் என்பதே இளம்பூரணர் கருத்தாக இருந்திருக்கும்.

எது நாடு என்பது பதினொன்றாம் நூற்றாண்டிலேயே தெளிவு படுத்தப்பட்ட செய்தி! இப்போது நாம் குழம்பக் கூடாது; குழப்பக் கூடாது. ஒன்றைக் கருதிப் பார்க்க வேண்டும். தமிழ் இனத்தின், இலக்கியத்தின் வராற்றில், தமிழ்நாட்டை தமிழை, தமிழரைத் ‘திராவிடம்’, ‘திராவிடர்’ என்று அழைக்கும் வழக்கம் 18-ஆம் நூற்றாண்டுவரை இல்லை. விசயநகரத் தெலுங்கர் ஆட்சிக் காலத்தில்தான் தாயுமானவர் (1705-1742) திராவிடம் என்ற சொல்லைப் பயன்படுத்தினார்.

பண்டைக் காலத்திலேயே நாம் தமிழர்கள்; இப்போதும் தமிழர்கள் என்பது போல உலகில் வேறு சில பழமையான இனங்களும் இருக்கின்றன. யூதர்கள், சீனாவின் ஹான் இனத்தவர்கள், கிரேக்கர்கள் போன்றவர்கள், மரபு இனமாக (Race) பண்டைக் காலத்திலும் இதே பெயரைக் கொண்டிருந்தனர். இப்போது தேசிய இனமாக (Nationality) அதே பெயரைக் கொண்டுள்ளார்கள். தமிழர்களாகிய நாமும் அப்படியே!

ஐரோப்பாவில் ஆங்கிலேயர், செர்மானியர், பிரஞ்சுக்காரர்கள் போன்ற பல தேசிய இனத்தவர்கள் பல்வேறு மரபினங்களின் கலப்பில் தோன்றியவர்கள் என்பர். அதை அப்படியே நம் தமிழ் இனத்திற்குப் பொருத்தக் கூடாது! பழங்குடியாய் (Tribes), மரபினமாய் (Race) தேசிய இனமாய் (Nationality) ஒரே தமிழ் இன அடையாளம் கொண்டவர்கள் நாம்!

இப்படிச் சொல்வதால் மற்ற எந்த இனத்தையும் நாம் தாழ்வாகக் கருதுகிறோம் என்று பொருள் அல்ல. இனச் சமநிலையே நம் கொள்கை! ஆனால் இன அடிப்படையில் அயலார் நம்மை அடிமைப்படுத்த, ஆதிக்கம் செய்ய முனைந்தால் அவர்களை எதிர்ப்பதும், நம் இனத்தைக் காப்பதும் நம் கடைமை!

இவற்றையெல்லாம் நான் இங்கு சொல்வதற்குக் காரணம், இந்த உலகம் பல்வேறுபட்ட தேசிய இனங்கள் – அவற்றின் தாயகங்கள் – ஆகியவற்றைக் கொண்ட பன்மை வடிவமாகும் என்பதை வலியுறுத்தவே!

இந்த உலகப் பன்மையில் பல்வேறு மொழிகள், பண்பாடுகள், மரபுகள், பக்குவங்கள், சிந்தனைப் போக்குகள், பருவங்கள், காலநிலைகள் முதலியவை கொண்ட பல்வேறு இனங்கள் இருக்கின்றன. எல்லோரும் மனிதர்களே என்ற அடிப்படையில் சில பொதுத் தன்மைகளும் இருக்கின்றன. ஒன்று கலந்து, ஒற்றைத் தன்மை பெற முடியாத தனித் தன்மைகளும், வேற்றுமைகளும் இருக்கின்றன. ஒவ்வொரு இனத்திற்கான உளவியல் உருவாக்கங்கள் ஒன்றிணைய முடியாதன. ஒருமை வடிவம் பெறமுடியாத தனித்தன்மைகளைக் கொண்டுள்ளன.

இவ்வாறான வேறுபாடுகள் ஒருபக்கம் – இவற்றுக்கிடையே உள்ள தொலைவுகள் (distance) மறுபக்கம். பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட இந்தியாவைத் துணைக்கண்டம் என்று அழைப்பதும் இவ்வாறான பற்பல வேற்றுமைகள் அடிப்படையில்தான்! இந்தியாவை ஒரு தேசம் என்று வரையறுக்காமல் பல்வேறு அரசுகளின் ஒன்றியம் என்று இந்திய அரசமைப்புச் சட்டம் கூறுகிறது (Article 1. India, that is Bharat shall be a Union of States).

மதம் ஒரு மெய்யியல் என்ற அடிப்படையில் மொழி கடந்து, இனம் கடந்து, தேசம் கடந்து பரவும். ஆனால், அதே மதம், அது செயல்படும் நாடுகளில் உள்ள அதே மதத்தைச் சேர்ந்த வெவ்வேறு மொழி பேசும், வெவ்வேறு இனங்களை ஒருங்கிணைக்கவோ, ஒரு தேசத்துக்குள் கொண்டு வரவோ முடிவதில்லை. ஒரே கிறித்துவ மதத்தைச் சேர்ந்தவர்கள்தாம் ஐரோப்பாவில் தங்களுக்குள் முதல் உலகப் போரையும், இரண்டாம் உலகப் போரையும் நடத்திக் கொண்டார்கள். இசுலாம் மதத்தைச் சேர்ந்த ஈரான், ஈராக் நாடுகள் ஏழரை ஆண்டுகள் போர் நடத்தி இலட்சக்கணக்கான முசுலிம் மக்களைக் கொன்றன. ஒரே புத்தரையும் புத்த மதத்தையும் பின்பற்றும் சீனாவும் சப்பானும் என்நேரமும் பகையுணர்வுடன் உருமிக் கொண்டிருகின்றன. கர்நாடகத்தில் காவிரிச் சிக்கலை வைத்து தமிழ் இந்துக்களைக் கன்னட இந்துக்கள் 1991 டிசம்பரில் இனப்படுகொலை செய்தார்கள். அவர்களுக்கிடையே அங்கு நேரடிப் பகையோ, மோதலோ இல்லை. தமிழர்கள் மீதான இன வெறுப்பும் கன்னட வெறியும் அவர்களை வன்முறைக்குத் தூண்டின. மதத்தால் இணக்கப்படுத்த முடியவில்லை.

உழைப்பு மற்றும் பொருளியல் உற்பத்தி சார்ந்த ”வர்க்கம்” (Class) என்ற சமூக வடிவம் ஓர் இனத்துக்குள்தான் உறவு கொண்டிருக்கும். அதே வகை உறவை, அயல் தேசங்களில் உள்ள அதே வர்க்கத்திடம் – தொழிலாளி அல்லது முதலாளி வர்க்கத்திடம் கொள்வதில்லை. முதலாளிய நாடுகள் போரிட்டுக் கொள்வதைப் பார்க்கிறோம். கம்யூனிஸ்ட்டு நாடுகளான சீனாவும் வியட்நாமும் 1970களில் எல்லைப் போர் நடத்திக் கொண்டன. அதே போல், 1960களில் இருந்து கம்யூனிஸ்ட்டு சீனாவும் கம்யூனிஸ்ட்டு சோவியத் ஒன்றியமும் தங்களுக்கிடையே பகை கொண்டு தனித்தனி பகை முகாம்கள் அமைத்துக் கொண்டன.

ஒரே தேசத்திற்குள், ஒரே இனத்துக்குள் மத-மோதல்கள், சாதி-மோதல்கள், வர்க்க-மோதல்கள் வருவதில்லையா? வரும். ஆனால், அந்த உள் முரண்பாடுகள், தங்களுக்குள் தீர்வு கண்டு, ஒரே இனத்துக்குள் அவை நீடிக்கின்றன. அயல் இனத்தோடு முரண்பாடு வரும்போது பிரிந்து தனித் தேசம் அமைத்துக் கொள்கின்றன.

இனம், தேசிய இனம் பொதுத் தாய்மொழி அவற்றின் வழித் தாயகம் என்பவை பிரிக்க முடியாதவை. பிரிந்து போக முடியாதவை! அடுத்த இனங்களோடு, அடுத்த இனத் தாயகங்களோடு இணைந்து ஒன்று கலக்க முடியாதவை. இந்தத் தனிவடிவங்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக நீடிக்கின்றன, நிலைத்துள்ளன. இந்த அடிப்படையில் புதியபுதிய தேசங்கள் பிறந்து கொண்டுள்ளன.

ஆன்மிகம், வர்க்கப் பொதுமை, சமூகநீதி முதலிய கொள்கைகள் கொண்ட இலட்சியர்கள் தங்கள் திட்டங்களைக் குறிப்பிட்ட இனத்திற்குள்தான் வைக்க வேண்டும். அனைத்து இனங்களுக்கும் என்று வைத்தால் வெல்ல முடியாது. குறிப்பிட்ட இனத்தில் வெல்லலாம்.

=================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
=================================
 

Labels: ,

"பொய் சொல்கிறது அறநிலையத் துறை! பழனி குடமுழுக்கு தமிழில் நடந்ததாக!"---- *பெ. மணியரசன்* ஒருங்கிணைப்பாளர், தெய்வத் தமிழ்ப் பேரவை

Saturday, July 15, 2023


 *பொய் சொல்கிறது அறநிலையத் துறை! பழனி குடமுழுக்கு தமிழில் நடந்ததாக!*
================================
*பெ. மணியரசன்*
ஒருங்கிணைப்பாளர்,
தெய்வத் தமிழ்ப் பேரவை
================================


பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் அறநிலையத்துறை இணை ஆணையர் / செயல் அலுவலர் உயர்திரு செ. மாரிமுத்து பி.ஏ.பி.எல்., அவர்களிடமிருந்து அண்மையில் எனக்கு ஒரு கடிதம் வந்தது. அக்கடிதம் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் சென்னை, அவர்களுக்கு எழுதப்பட்டது. அதன் நகலை எனக்கும் அனுப்பியுள்ளார்கள்.

அதில் 27.1.2023 அன்று நடந்த பழனி தண்டாயுதபாணி திருக்கோயில் குடமுழுக்கு வேள்விச் சாலையில் வேத விற்பன்னர்களுக்கு (சமற்கிருத அர்ச்சகர்களுக்கு) இணையாக 108 ஓதுவார்கள் கலந்து கொண்டு தமிழில் பாசுரம் பாடியும், கோபுரக் கலச விமானத்தில் சமற்கிருதத்திற்கு இணையாக ஓதுவார்கள் தமிழ்ப் பாசுரம் பாடியும், சமற்கிருதத்திற்கு இணையாகத் தமிழிலும் குடமுழுக்கு சிறப்பாக நடைபெற்றது என்று இணை ஆணையர் / செயல் அலுவலர் வழக்குரைஞர் செ. மாரிமுத்து அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

அறநிலையத்துறை இணை ஆணையர் / செயல் அலுவலரின் மேற்படி கூற்று உண்மை இல்லை. 108 தமிழ் ஓதுவார்களைக் கோயிலின் பல இடங்களில் தமிழ்ப்பாசுரம் பாட அனுமதித்தார்கள். ஆனால் வேள்விச்சாலைக்குள், கோபுரக் கலசப் புனித நீரூற்றலில் அனுமதிக்கவில்லை.

அருள்மிகு பழனி தண்டாயுதபாணி திருக்கோயிலில் 27.1.2023 அன்று நடைபெற உள்ள குடமுழுக்கில் கருவறைப் பூசை, வேள்விச்சாலை பூசை, கலச நீராட்டு ஆகிய மூன்று இடங்களிலும் தமிழ் மந்திரங்களும் சமற்கிருத மந்திரங்களும் சம அளவில் ஓதி வழிபாடுகள் நடத்த வேண்டும் என்று எமது தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில் தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் (சென்னை), இணை ஆணையர் (பழனி) ஆகியோர்க்கு மனுக்கள் அளித்தோம். தெய்வத் தமிழ்ப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் எனது தஞ்சை அலுவலக முகவரி இட்டு மனுக்களை அளித்தோம்.

திருக்கோயில் குடமுழுக்குகளைத் தமிழ் மந்திரங்களையும், சமற்கிருத மந்திரங்களையும் சம அளவு ஓதி வழிபாடுகள் நடத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு இருமுறை அளித்த தீர்ப்புகளையும் சுட்டிக் காட்டியிருந்தோம். தஞ்சைப் பெருவுடையார் திருக்கோயில் குடமுழுக்கையொட்டி நாங்களும் மற்ற நண்பர்களும் போட்ட வழக்கில், நீதிபதிகள் எம். துரைசாமி, டி. ரவீந்திரன் அமர்வு 31.1.2020 அன்று வழங்கிய தீர்ப்பையும், கரூர் பசுபதீசுவரர் திருக்கோயில் குடமுழுக்கின்போது தெய்வத் தமிழ்ப் பேரவை செயற்குழு போட்ட வழக்கில் நீதிபதிகள் என். கிருபாகரன், பி. புகழேந்தி ஆகியோர் அமர்வு 19.8.2021 அன்று வழங்கிய தீர்ப்பையும் நாங்கள் அனுப்பிய மனுக்களில் சுட்டிக் காட்டியிருந்தோம்.

தெய்வத் தமிழ்ப் பேரவை செயற்குழு உறுப்பினர்களான சித்தர் மூங்கிலடியார், குச்சனூர்க் கிழார், சிம்மம் சத்தியபாமா அம்மையார், கி. வெங்கட்ராமன், க. அருணபாரதி, நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் முருகேசன், ஆவடி கலையரசி அம்மா, ஆசீவகச் சுடரொளி, சென்னை சிவவடிவேலன், பெ. மணியரசன் ஆகியோர் முன்கூட்டியே கடந்த 21.12.2022 அன்று முற்பகல் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமர குருபரன் அவர்களை, அவரது தலைமையக அலுவலகத்தில் (சென்னையில்) நேரில் சந்தித்து மனு கொடுத்து, உயர்நீ திமன்றத் தீர்ப்பின்படி பழனி தண்டாயுதபாணி திருக்கோயில் குடமுழுக்கைத் தமிழ் மந்திரங்கள் ஓதி நடத்துமாறும், தகுதியுள்ள தமிழ் அர்ச்சகர்களையும் இணைத்துக் கொள்ளுமாறும் கோரிக்கை வைத்தோம். அப்போது குமரகுருபரன் அவர்கள் இப்போது தமிழில் நடத்த முடியாது. ஓர் ஆய்வுக்குழு போடப்பட்டுள்ளது. அதன் பரிந்துரை வந்தபிறகுதான் அதனைச் செய்ய முடியும் என்று கூறி எங்கள் கோரிக்கையை மறுத்தார். அப்போது உடனிருந்த இணை ஆணையர் ஒருவர், கால்துறை அதிகாரி மற்றும் அலுவலக ஊழியர்கள் ஆகியோர்க்கு இந்த உண்மை தெரியும்.

அதன்பிறகு, தமிழ்வழிக் குடமுழுக்குக் கோரிக்கை மனுக்களை பழனி தண்டாயுதபாணி திருக்கோயில் இணை ஆணையர் / செயல் அலுவலர் ஆகியோரிடமும் தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில் கொடுத்தோம்.

பழனி முருகன் கோயில் குடமுழுக்கைக் கோயில் கருவறை, வேள்விச்சாலை, கோபுரக் கலசம் ஆகிய இடங்களில் தமிழ் மந்திரங்கள் ஓதி, தமிழில் குடமுழுக்குக்குரிய கிரியைகள் மேற்கொண்டு, தமிழ் அர்ச்சகர்கள் கோபுரக் கலசங்களில் புனித நீர் ஊற்றி நடத்துமாறு கோரிக்கை வைத்து பழனியில் 20.1.2023 அன்று தெய்வத் தமிழ்ப் பேரவையினரும், நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணியினரும் பழனி நகரம் மயில் சதுக்கத்தில் (மயில் ரவுண்டானாவில்) ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.

திருக்குடமுழுக்கு நடந்த 27.1.2023 அன்று காலை தெய்வத் தமிழ்ப் பேரவை செயற்குழு உறுப்பினர்களான சிம்மம் சத்தியபாமா அம்மையார் அவர்களும், க. அருணபாரதி அவர்களும் பழனி தண்டாயுதபாணி திருக்கோயிலில் வழிபடச் சென்றபோது, காவல்துறையினரிடம் சொல்லித் தடுத்து மலைமேல் ஏறவிடாமல் அவர்களைத் தடுத்துவிட்டார்கள் இந்து அறநிலையத் துறையினர்.

திருக்குடமுழுக்கில் நடந்தது என்ன?

வேள்விச்சாலையில் இருந்த 90 யாக குண்டங்களில் ஒன்றில் கூட ஒருபோதும் தமிழ் மந்திரம் ஓதப்படவில்லை. உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி அதே வேள்விச் சாலையில் 45 குண்டங்களில் தமிழ் மந்திரம் ஓதுவோரும், 45 குண்டங்களில் சமற்கிருத மந்திரம் ஓதுவோரும் நிரந்தரமாக அமர்ந்து இருமொழிகளிலும் மந்திரம் ஓதியிருக்க வேண்டும். அவ்வாறு நடைபெறவே இல்லை. தமிழ் ஓதுவார்கள் அனைவரையும், வேள்விச் சாலைக்கு வெளியே நின்று பாடச் செய்தனர். இதைத் தான் 108 தமிழ் ஓதுவார்கள் வேள்விச் சாலையில் பாடினார்கள் என்று பொய் சொல்கிறது அறநிலையத்துறை!

அதேபோல், கோபுரக் கலசங்களில் ஒரே நேரத்தில் சரிபாதி தமிழ் அர்ச்சகர்களும் மறுபாதி சமற்கிருத அர்ச்சகர்களும் முறையே தமிழ் மந்திரமும் சமற்கிருத சுலோகங்களும் சொல்லி இரு தரப்பினரும் புனித நீர் ஊற்றிக் குடமுழுக்குச் செய்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யவில்லை. தமிழ் ஓதுவார் ஒருவரை கோபுரத்திற்கு அழைத்துச் சென்று ஒலிபெருக்கிமுன் தமிழ்த் திருப் பாடல்களைப் பாடச் சொல்லியுள்ளார்கள்.

பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் குடமுழுக்கிற்கான வேள்விச்சாலை வழிபாட்டையும் கோபுரக் கலசப் புனித நீரூற்றலையும் பார்த்துள்ளார்கள். முழுக்க முழுக்க சமற்கிருதமும் பிராமண அர்ச்சகர்களுமே ஏகபோக ஆதிக்கம் செய்தனர். அவர்களை வேத விற்பன்னர்கள் என்று போற்றிப்பாடுகிறது தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை! அந்தப் பிராமண அர்ச்சகர்கள் சமற்கிருத வேதங்கள் நான்கிலும் கற்றுத் துறைபோன அறிஞர்களா? அவர்களை வேத விற்பன்னர்கள் என்று வர்ணிப்பதில் உண்மை இருக்கிறதா? இல்லை!

தமிழ் வழிபாட்டை விரும்பும் தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காக மேற்படி குடமுழுக்கின் அழைப்பிதழைத் தூய தமிழில் அச்சடித்தார்கள்! குடமுழுக்கு என்ற மைய நடவடிக்கையில் தமிழ் ஓதுவார்கள் ஈடுபடுத்தப்படாமல், 108 ஓதுவார்களை அழைத்து, அவர்களை கருவறை - வேள்விச்சாலை - கோபுரக் கலசம் ஆகியவற்றைத் தீண்டாமல் வெளியே பாடல்கள் பாடச் செய்தார்கள். தமிழ் ஓதுவார்களுக்கும் தமிழ் அர்ச்சகர்களுக்கும் நமது தாய்த் தமிழுக்கும் எதிரான தீண்டாமைக் குற்றத்தைத் தமது நேரடிப்பார்வையில் அரங்கேற்றினார் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு!
பழனி குடமுழுக்கில் சமற்கிருதத்திற்கு இணையாகத் தமிழ் மந்திரம் இடம் பெறாது என்பதை அப்போதிருந்த அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் 21.12.2022 அன்று எங்களிடம் நேரில் கூறிவிட்டார். அதுதான் 27.1.2023 அன்று நடந்தது. பிராமண அர்ச்சகர்களும், சமற்கிருதமும் கருவறை, வேள்விச்சாலை, கோபுரக் கலசம் ஆகியவற்றில் ஒற்றை ஆதிக்கம் செலுத்தினர். தமிழும், தமிழ் அர்ச்சகர்களும் புறக்கணிக்கப்பட்டு வெளியே தான் நிறுத்தப்பட்டனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு தீர்ப்புகளையும் அவமதித்தார்கள் ஆட்சியாளர்கள் - அறநிலையத்துறையினர்! தமிழ் மொழிக்கும், தமிழ் அர்ச்சகர்கட்கும் எதிரான தீண்டாமைக் குற்றத்தைப் புரிந்துள்ளார்கள்.

”அன்னைத் தமிழில் அர்ச்சனை” என்று திமுக ஆட்சியாளர்கள் கூறியது தமிழைப் புறக்கணித்து தமிழ் அர்ச்சகர்களை ஒதுக்கி வைத்து, சமற்கிருதத்திற்கும் பிராமண அர்ச்சகர்களுக்கும் ஏகபோக ஆதிக்கம் அளிப்பதை மறைப்பதற்கான சூழ்ச்சியே என்பதைத் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் குடமுழுக்கில் தெய்வத் தமிழ் மொழிக்கும், தமிழ் அர்ச்சகர்களுக்கும் எதிராகத் தீண்டாமையைக் கடைபிடித்த குற்றத்திற்காக அமைச்சர் சேகர்பாபு, அறிநிலையத் துறை அதிகாரிகள் ஆகியோர் மீது சட்டப்படி வழக்குத் தொடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழர்கள் தங்களால் ஆன அளவில் தமிழ் அர்ச்சனையும் தமிழ்க் குடமுழுக்கும் நடத்த முன்வர வேண்டும் என்று தெய்வத் தமிழ்ப்பேரவை சார்பில் கேட்டுக் கொள்கிறோம்!

================================
தெய்வத் தமிழ்ப் பேரவை
================================
முகநூல்: www.fb.com/theivathamizh
சுட்டுரை: www.twitter.com/TheivigaThamizh
பேச: 9841949462, 9443918095
================================ 

Labels: , , ,

"ஆர்.என். இரவியை நீக்குக! ஆளுநர் பதவியை நீக்குக! செந்தில் பாலாஜியை நீக்குக!" --- ஐயா பெ. மணியரசன், தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

Tuesday, July 4, 2023


ஆர்.என். இரவியை நீக்குக!

ஆளுநர் பதவியை நீக்குக!
செந்தில் பாலாஜியை நீக்குக!
==============================
ஐயா பெ. மணியரசன்,
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
==============================


ஆரியத்துவா நாட்டாண்மையாக ஆளுநர் மாளிகையில் அமர்த்தப்பட்டுள்ள ஆர்.என். இரவி, தமிழ்நாடு அமைச்சர்களைப் பதவிநீக்கம் செய்யும் அதிகாரம் தனக்கு உண்டு என்கிறார். இதற்கு முதலமைச்சரின் பரிந்துரை தேவையில்லை என்கிறார். அதன்படி, தமிழ்நாடு அமைச்சரவையிலிருந்து செந்தில் பாலாஜியைப் பதவி நீக்கம் செய்துவிட்டதாக இரவி, 29.6.2023 மாலை, முதலமைச்சர் மு.க. டாலினுக்குக் கடிதம் அனுப்பினார். இப்பதவி நீக்கத்திற்கு முதலமைச்சரின் பரிந்துரை தேவையில்லை. ஆளுநருக்கே இதற்கான அதிகாரங்களை இந்திய அரசமைப்புச் சட்ட உறுப்புகள் 154(1), 163(1), (2) மற்றும் 164(1) முதலியவை வழங்குகின்றன என்று ஆர்.என். இரவி கூறினார்.

ஆர்.என். இரவி, அடாவடித்தனமாக முதலமைச்சரின் பரிந்துரைகள் இல்லாமல், - செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்தது செல்லாது, முதலமைச்சரின் அறிவுரையின் (advice) பேரில்தான் ஓர் அமைச்சருக்குப் பதவி ஏற்பு செய்து வைப்பதையோ, பதவி நீக்கம் செய்வதையோ ஆளுநர் செய்ய முடியும், செந்தில் பாலாஜியை நீக்கிட இரவிக்கு அதிகாரம் இல்லை என்பதே அரசமைப்புச் சட்ட வல்லுநர்களின் கருத்து. தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் நிலைபாடும் அதுவே! அமைச்சரவையில் நீடிக்கிறார் பாலாஜி என்று மு.க. ஸ்டாலின் எதிரடி கொடுத்து இரவிக்குக் காட்டமாகக் கடிதம் அனுப்பினார்.

செந்தில் பாலாஜியைப் பதவி நீக்கம் செய்வதற்கு முன்வந்ததற்கான காரணங்களை இரவி தமது கடிதத்தில் கூறியிருந்தார். செந்தில் பாலாஜி 2011-2015 காலத்தில் செயலலிதாவின் அதிமுக அமைச்சரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது, ஊழியர்கள் பணியமர்த்தம் செய்திட கையூட்டு வாங்கி மாட்டிக் கொண்டார். அவரை விசாரித்து அவர் மீது வழக்கு நடத்தலாம் என்று உச்சநீதிமன்றம் அண்மையில் அனுமதி அளித்தது; விசாரணை நடந்தது. அதைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தாலும், சிறைவாசியாகத்தான் – நீதிமன்ற சிறைக்காவலில்தான் – இருக்கிறார். எனவே, அவரால் அமைச்சர் பணிகளைச் செய்ய முடியவில்லை. மேலும் குற்றச்சாட்டில் சிறையில் இருப்பவர் அமைச்சராக நீடித்தால், தனது அதிகாரத்தை வைத்து தன்மீதுள்ள வழக்கை சீர்குலைப்பார். அவரைப் பதவிநீக்கம் செய்யப் பரிந்துரைக்குமாறு முதலமைச்சருக்குக் கடிதம் எழுதிவிட்டேன். ஆனால் முதலமைச்சர், பாலாஜி துறைப் பொறுப்பு இல்லாத – வெறும் அமைச்சராக நீடிப்பார் என்று அறிவித்துவிட்டார். எனவே, நான் செந்தில் பாலாஜியைப் பதவிநீக்கம் செய்துவிட்டேன் என்கிறார். ஆனால், ஏறகெனவே இவரை ஏவிவிட்ட இந்திய ஆட்சியாளர்கள் நான்கு மணி நேரத்திற்குள் தலையிட்டு ஆளுநர் செய்த பதவி நீக்கத்தை நிறுத்தி வைக்கச் செய்துள்ளார்கள்.

இந்தச் சட்டச் சிக்கலில், ஊழல் சிக்கலில் நமது நிலைபாடு என்ன?

முதன்மையாக இருநிலைபாடுகள் முன்வைக்கப்படுகின்றன. 1. ஓர் அமைச்சரைப் பதவி அமர்த்தம் செய்யவோ, நீக்கவோ முதலமைச்சரின் அறிவுரை – ஆளுநருக்குத் தேவை. அது முன்நிபந்தனையாகும். அவ்வாறான அறிவுரை மு.க. ஸ்டாலினிடமிருந்து பெறாத நிலையில், ஆளுநர் இரவி, செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து தன்முனைப்பாக நீக்கியது செல்லாது என்பதே நமது நிலைபாடு.

ஆனால், ஊழல் செய்து சிறையில் இருக்கும் நபர் அமைச்சராக நீடிப்பது அறமா, ஒழுக்கமா என்று கேட்டால், இல்லை என்பதே நமது விடை! துறைப் பொறுப்பில்லாமல், வெட்டி வேலைகூட எதுவுமில்லாமல் அமைச்சராக நீடிப்பது அரசுப் பணத்தைக் கையாடல் செய்வதற்கு ஒப்பாகும்.

இச்சிக்கலுக்குத் தீர்வு என்ன? செந்தில் பாலாஜி, தானே பதவி விலக வேண்டும்; அவர் மறுத்தால் முதல்வர் ஸ்டாலின் அவரைப் பதவிநீக்கம் செய்ய வேண்டும். இதுவே தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் கோரிக்கை!

ஆளுநர் பதவியையே நீக்க வேண்டும்
---------------------------------------------------
மாநில அரசின் உரிமையை வலியுறுத்தி ஆளுநர் இரவியின் அடாவடித்தனங்களை அறிவுத்துறையினர் எதிர்ப்பது சரி! ஆனால், அவர்கள் அத்துடன் நிற்கக் கூடாது. ஸ்டாலின், செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்த வேண்டும். கடந்த காலத்தில் ஊழல் குற்றச்சாட்டுகள் வந்தபோது அமைச்சர்கள் பதவி விலகியதையும் சிலர் சுட்டிக் காட்டுகிறார்கள். மன்மோகன்சிங் தலைமையிலான கூட்டணி மைச்சரவையில் திமுகவின் ஆ. இராசா இருந்தபோது, அவர் மீது 2ஜி அலைக்கற்றை ஊழல் வந்தது. விசாரித்துத் தீர்ப்பு வருவதற்கு முன்பே அவர் பதவி விலகும்படி கோரப்பட்டார்; பதவி விலகினார்.

இப்போது விசாரணைக் கைதியாக, சிறையில், காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் செந்தில் பாலாஜி, கடந்த இரண்டு ஆண்டுகளாக திமுக ஆட்சியில் அடித்திருக்கும் கொள்ளை, செய்திருக்கும் ஊழல்கள் கொஞ்ச நஞ்சமல்ல! அத்திறமையின் காரணமாகவே முதலமைச்சரின் அடுப்படி அமைச்சரவையில் அதிக செல்வாக்கு பெற்றுள்ளார் செந்தில் பாலாஜி! அவர் செய்து வந்த கையூட்டு ஊழல்களுக்காக அவர் முறைப்படி விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டியவரே!

அடுத்து, ஆளுநர் பதவியிலிருந்து ஆர்.எஸ்.எஸ். இரவியை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை மிகமிக ஞாயமானது; தேவையானது.

அறிவுத் துறையினர் மற்றும் நடுநிலையாளர்கள் அத்துடன் நிறகக் கூடாது. ஆளுநர் பதவியை ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் சேர்த்தே பேச வேண்டும். அதற்கான சட்ட வழிப்பட்ட தருக்கங்களை மக்கள் முன் வைக்க வேண்டும்!

ஆளுநர் பதவி என்ற வழக்கம் எப்போது வந்தது, ஏன்வந்தது? இந்தியத் துணைக் கண்டத்தில் நிலவிய பல்வேறு இனங்களின் தனித்தனி அரசுகளை, வெள்ளை இன வேட்டையாடிகள் பீரங்கிகளாலும் துப்பாக்கிகளாலும் வீழ்த்தி, அழித்து ஆக்கிரமிப்புக் காலனி ஆட்சியை நிலைநாட்டினர். ஆறாயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து வந்த அயலார், தங்களுக்கேற்ற நிர்வாக மண்டலங்களை உருவாக்கி அவற்றை மாநிலங்கள் (Provinces) என்றனர்.

ஆறாயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள ஆங்கிலேயர்கள் தங்களது இந்தியத் துணைக் கண்ட ஆட்சிப் பகுதிகளைக் கண்காணிக்க – கட்டுப்படுத்தி வைக்க – அங்கிருந்து அதிகாரிகளை அனுப்பி வைத்தனர். அந்த மண்டல அதிகாரிக்கான பதவிப்பெயர் ஆளுநர் (கவர்னர்)! இவ்வாறான பல மண்டலங்களின் தலைமையகம் தில்லியில் இருந்தது. அங்கே மண்டல ஆளுநர்க்கான தலைமை ஆளுநர் இலண்டனிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டார். அவரைத் தலைமை ஆளுநர் என்றனர்.

1947 ஆகத்து 15-இல் வெள்ளையரிடமிருந்து இந்தியா விடுதலை பெற்றபின் இந்தியாவுக்கென்று தனி அரசமைப்புச் சட்டம் உருவாக்கினர். அதில் ஆங்கிலேய அயலார் நட்டு வைத்த தலைமை ஆளுநர் – கவர்னர் ஜெனரல் அதிகாரப் பதவியை நீக்கி விட்டனர். அப்பதவிக்கு மாற்றாக நாடாளுமன்றத்திற்குக் கட்டுப்பட்ட குடியரசுத் தலைவர் (President) பதவியை உருவாக்கினர். அக் குடியரசுத் தலைவரும் நாடாளுமன்ற இரு அவைகளின் உறுப்பினர்கள், அனைத்து மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் வாக்களிக்கும் தேர்தல் மூலம்தான் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று சட்டம் செய்தனர். (அரசமைப்புச் சட்ட உறுப்பு 54)

ஆனால், காலனி ஆதிக்க வெள்ளையர் உருவாக்கிய மாநில ஆளுநர் பதவிகளை அப்படியே வைத்துக் கொண்டனர். இந்திய ஆட்சியாளர்களும், இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய ”நடுநிலை தவறாத நாயகர்களும்!” காலனி ஆதிக்க வேட்டையாடிகள் தங்களின் காலனிகளைக் கண்காணிக்க உருவாக்கிய ஆளுநர் அதிகாரப் பதவியை இந்திய அரசுக்கு நீக்கியவர்கள், மாநில அரசுகளுக்கு மட்டும் நீட்டித்துக் கொண்டது சனநாயகமா? குடியாட்சிக் கோட்பாடா? இல்லை, இல்லை! கவர்னர் ஜெனரல் பதவியை ஒழித்தவர்கள் கவர்னர் பதவியை மட்டும் வைத்துக் கொண்டது ஏன்? புதுதில்லியின் புதிய ஏகாதிபத்தியத்திற்குக் காலனியக் கவர்னர் பதவிகள் தேவைப்பட்டன!

நமது வினா இதுதான்! 1947 ஆகத்து 15-இல் இந்தியா விடுதலை பெற்றது. ஆனால் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் விடுதலை பெறவில்லையா? இதற்கான விடையை இந்தியக் கவர்னர்களைக் கருத்தரித்த கனவான்களும், அவர்களின் வாரிசுகளும்தான் கூற வேண்டும்!

மாநில ஆளுநர், குடியரசுத் தலைவர் போல் தேர்ந்தெடுக்கப்படுபவர் அல்லர்! புதுதில்லியில் ஏகாதிபத்திய ஆட்சி நட்த்துதுவோர் அனுப்பி வைக்கும் ஆட்கள்தாம் ஆளுநர்கள்! அவர்களுக்கான தகுதி என்ன?

இந்திய அரசமைப்புச் சட்ட உறுப்பு 157 ஆளுநர்க்கான தகுதியைக் கூறுகிறது: இந்தியக் குடிமகனாக/மகளாக இருக்க வேண்டும். முப்பந்தைந்து அகவை முடிந்தவராக இருக்க வேண்டும். அவ்வளவே.

வேறு குறிப்பிட்ட கல்வித் தகுதியும் தேவையில்லை. இந்த நபர், குடியரசுத் தலைவரைப் போல், மாநில சட்டப் பேரவை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படுபவரும் அல்லர். இந்திய நாட்டில் ஒரு தாய்க்கும் தந்தைக்கும் பிறந்திருக்க வேண்டும், 35 அகவையை முடித்திருக்க வேண்டும். இப்படிப்பட்ட நபர் எப்படி ஆளுநராக அமர்த்தப்படுவாராம்?

இந்தியக் குடியரசுத் தலைவரால் இந்த நபர் ஆளுநராக அமர்த்தப்படுவார். (அரசமைப்புச் சட்ட உறுப்பு 155).

எவ்வளவு காலத்திற்கு இவர் ஒரு மாநிலத்தில் ஆளுநராக இருப்பார்? குடியரசுத் தலைவர் விரும்பும்வரை! (அரசமைப்புச் சட்ட உறுப்பு 156 (1).

குடியரசுத் தலைவர் ஆளுநர் பதவிக்கான நேர்காணல்கள் நடத்தித் தேர்வு செய்வாரா? இல்லை. இந்திய அமைச்சரவை அல்லது இந்திய உள்துறை அமைச்சகம் அடையாளம் கண்டு ஒரு நபரை ஆளுநர் ஆக்கிட குடியரசுத் தலைவர்க்குப் பரிந்துரைக்க வேண்டும் என்பது சட்டக் கட்டாயம். இந்திய அமைச்சரவை அல்லது உள்துறை அமைச்சர் தனது ஆளுங்கட்சியிலிருந்து ஆள் பிடிப்பார்!

அப்படிப் பிடிக்கப்பட்ட நபர்தான் ஆர். என். இரவி! 1947 க்கு முன் பிரிட்டன் ஆட்சியாளர்கள் இந்தியாவில் ஆட்சி நடத்த ஆள்பிடித்து அனுப்பியதற்கும் இதற்கும் என்ன வேறுபாடு இருக்கிறது?

மக்கள் பிரதிநிதி என்ற தகுதியும் கிடையாது, கல்வித் தகுதியும் கிடையாது! அவர் தலைவரும் இல்லை, அதிகாரியும் இல்லை! இந்தியாக்காரன் என்ற அநாமதேயத் தகுதியும் 35 அகவையும் இருந்தால்போதும். புதுதில்லியின் மாநிலக் காலனிகளுக்கு ஆளுநராக அனுப்பிவிடலாம். காங்கிரசு இந்திய ஆட்சியில் இருந்தபோது ஒரு பழமொழியே உருவானது; “தேர்தலில் வெற்றி பெற்றால் அமைச்சர்; தோற்றால் ஆளுநர்” என்பதே அப்பழமொழி!

இப்போதுள்ள ஆர்.என். இரவி உளவுத்துறை அதிகாரி வேலை பார்த்தவர். நாகாலாந்தில் விடுதலைப் பிரதேசம் வைத்துக் கொண்டு ஆயுதப் போராட்டம் நடத்தும் அமைப்புகளுடன் சமாதானம் பேசி உடன்பாடு காண்பதற்காக அனுப்பப்பட்டவர். அங்கு நிலையான உடன்பாடும் ஏற்படவில்லை. இவரையே நாகாலாந்து ஆளுநர் ஆக்கினார்கள். இவரால் அங்கு காலம் கழிக்க முடியவில்லை. அனைத்துத் தரப்பினரும் இவரை எதிர்த்தனர். ”தமிழ்நாட்டைத் தண்டிக்க நீதான் சரியான ஆள்; போ தமிழ்நாட்டுக்கு” என்று ஆளுநராக அனுப்பிவிட்டார்கள் தில்லி ஏகபாதிபத்தியவாதிகள்!

இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அப்பாமார் (Founding Fathers of the Constitution of India) என்ன நேர்மையோடு ஆங்கிலேயன் உருவாக்கிய ஆளுநர் பதவியை இவர்களும் ஏற்றார்கள்?

அமெரிக்க ஐக்கிய நாடுகள், (USA) செர்மானியக் கூட்டாட்சி, சுவிட்சர்லாந்து கூட்டாட்சி போன்ற எந்தக் கூட்டாட்சியிலும் தலைமை அரசிலிருந்து மாநிலத்திற்கு ஆளுநர் என்ற தனிநபரை அனுப்பும் விதி இல்லை.

எனவே இப்போது ஆர்.என். இரவியின் அட்டூழியங்களைக் கண்டிப்போர் -திறனாய்வு செய்வோர் – இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ள ஆளுநர் பதவியை ஒழிக்க வேண்டும் எனக் கோர வேண்டும். குறிப்பாக இக் கோரிக்கையைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து எழுப்ப வேண்டும். பாசக பாசிசத்திற்கு எதிராகக் காங்கிரசு தலைமையில் அனைத்திந்தியக் கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டும் மு.க. ஸ்டாலின், பொதுவாக ஆளுநர் பதவியை ஒழிக்கும் அரசமைப்புச் சட்ட திருத்தத்தைத் தங்கள் கூட்டணியின் கொள்கைப் பிரகடனங்களில் ஒன்றாகச் சேர்க்கக் கோரவேண்டும். குறிப்பாக இராகுல் காந்தியை ஏற்கச் செய்ய வேண்டும். இக் கோரிக்கையை வெளிப்படையாகத் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் எழுப்ப வேண்டும். ஒட்டு மொத்த தமிழ்நாட்டுக் கட்சிகளின் - மக்களின் - ஆதரவைக் கோர வேண்டும். மற்ற மாநிலங்களிலும் இதற்கான ஆதரவை முதல்வர் ஸ்டாலின் கோர வேண்டும்.

இந்திய அமைச்சரவைக்கும் மாநில
அமைச்சரவைக்கும் இடையே பாகுபாடு!
------------------------------------------------------
இந்திய அரசில் குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவரவே முடியாது. அதற்கு அரசமைப்புச் சட்டத்தில் இடமில்லை! ஆனால் மாநில அரசில் குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவரலாம். புதுதில்லியில் மக்களவையைக் கலைத்தால்கூட காவந்து அமைச்சரவை – தலைமை அமைச்சர் தலைமையில் இருந்தே ஆகவேண்டும். ஆனால் மாநிலத்தின் சட்டப் பேரவையைக் கலைக்கவும், பல ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆளுநர் ஆட்சி நடத்தவும் விதிகளை அரசமைப்புச் சட்டம் கொண்டுள்ளது. சனநாயகக் கொலைக் குத்தீட்டிகளாக உறுப்புகள் 356-ம் அதன் உட்பிரிவுகளும் இருக்கின்றன. இவற்றுள் ஒரே ஒரு விதிவிலக்கு கொடுத்திருக்கிறார்கள், அரசமைப்பை யாத்த புண்ணியவான்கள்! அது குடியரசுத் தலைவர் ஆட்சி அம்மாநிலத்தில் உள்ள உயர்நீதிமன்றத்துக்குப் பொருந்தாது என்பதுதான்!

கூட்டாட்சி நடக்கும் அமெரிக்க ஐக்கியநாடுகள், செர்மனி, கனடா, சுவிட்சர்லாந்து போன்றவற்றில் மாநில ஆட்சிகளை மையத் தலைமை ஆட்சியால் கலைக்க முடியாது.

மாநில ஆட்சிக் கலைப்பு அதிகாரம் என்பது வெள்ளையன் கருவில் உருவான விதி! 1947-இல் இந்திக்காரன் இந்தியாவைக் கைப்பற்றிய பின் அந்த வெள்ளைக் கரு – கலப்பினக் குட்டியாக வளர்ந்து நிற்கிறது.

மாநில ஆட்சியை தில்லி ஏகாதிபத்திய அரசு கைப்பற்றிக் கொள்வது மட்டுமல்ல, மாநிலத்தையே பல துண்டுகளாக்கிச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் அதிகாரத்தை அரசமைப்புச் சட்ட உறுப்பு 3 தில்லி நாடாளுமன்றத்துக்கு வழங்கியுள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு இந்திய அரசு சம்மு காசுமீர் மாநிலத்தைப் பிளந்து, பிரிவுகளாக்கி, ஒன்றியப் பிரதேசங்களாக்கிவிட்டது. தமிழ்நாட்டை மூன்று ஒன்றியப் பிரதேசங்களாக வெட்டித் துண்டாடக் காத்திருக்கின்றனர், இந்திய ஆட்சியாளர்கள்! அவர்களின் இந்த இனத்தகர்ப்புக்கு இடம் கொடுக்கிறது இந்திய அரசமைப்புச் சட்டம்!

இவை அனைத்தையும் விவாதிக்க வேண்டிய நேரம் இது! ஆர்.என். இரவியின் அடாவடித் தனங்கள், தனிநபர் வக்கிரங்கள் மட்டுமல்ல, இந்திய அரசமைப்புச் சட்டம் அவருக்கு வழங்கியுள்ள வாய்ப்புகளும் ஆகும்!

ஆளுநர் இரவியை நீக்கிவிட்டால் மட்டும், மாநில ஆட்சிக்கான சிக்கல் தீர்ந்துவிடாது. அரசமைப்பு உறுப்பு (154(1) கூறுகிறது: The executive power of the State shall be vested in the Governor and shall be exercised by either directly or through officers subordinate to him in accordance with this Constitution.

மாநில ஆட்சி அதிகாரம் ஆளுநருக்கு உரிமையாக வழங்கப்பட்டிருக்கிறது என்று கூறும் அரசமைப்பு உறுப்பு 154(1) இருக்கும் வரை அது புதிதுபுதிதாக இரவிக்களைப் பெற்றெடுக்கும்; நபரின் பெயர்தான் மாறி இருக்கும்.

”ஆளுநருக்கு உதவவும் ஆலோசனை கூறவும் முதல் அமைச்சர் தலைமையில் ஓர் அமைச்சரவை இருக்கும்.”

”அமைச்சரவை ஆலோசனை கூறுபவற்றுள் எதை ஏற்கலாம் அல்லது மறுக்கலாம் என்று முடிவு செய்யும் விருப்பத் தேர்வு உரிமை (discretion) ஆளுநருக்கு உண்டு. அவருடைய விருப்பத் தேர்வை எதிர்த்து எந்த நீதிமன்றமும் விசாரிக்க முடியாது.”

மேலே மேற்கோள்களுக்குள் உள்ள இரு பத்திகளும் இந்திய அரசமைப்புச் சட்ட உறுப்பு 163(1), (2) ஆகியவற்றின் சாரம்!

ஆளுநரின் விருப்பத்தேர்வு உரிமையை (discretion) வரையறுத்து, கட்டுக்குள் வைக்கும் உச்சநீதிமன்றத் தீர்ப்புகளும் உண்டு. கட்டுப்பாடு விதிக்காத தீர்ப்புகளும் உண்டு. அதனால், இரு தரப்பும் தங்களுக்குச் சாதகமாக உச்சநீதிமன்றத் தீர்ப்புகளைத் துணைக்கழைக்கும் வாய்ப்புகளும் உண்டு!

திமுக, காங்கிரசு, சிபிஎம், சிபிஐ போன்ற கட்சிகள் அரசமைப்புச் சட்டத்திலிருந்து ஆளுநர் பதவியை நீக்க வேண்டும், மாநில ஆட்சியைப் புதுதில்லி கலைப்பதற்குள்ள அதிகாரத்தை நீக்க வேண்டும் என்ற சனநாயக கூட்டரசுக் கோரிக்கைகளை முன்வைக்கவில்லை!

சனநாயகத்தில் - தமிழ்நாட்டு இறையாண்மையில் - அக்கறையுள்ள நாம் இக் கோரிக்கைகளை மக்கள் முழக்கமாக்குவோம்!

இந்திய அரசே, உடனடியாக ஆளுநர் இரவியை வெளியேற்று! ஆளுநர் பதவியை நீக்கு.

முதலமைச்சர் அவர்களே, செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குக!

இவையே நம் முழக்கங்களாகட்டும்!

=================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
=================================

Labels: , , , ,


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்