<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d6955529389241309188\x26blogName\x3d%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86.%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://thozharmaniyarasan.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com/\x26vt\x3d-8408640130511538487', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

"தமிழ்நாடு அஞ்சல்துறையில் 100 விழுக்காடு இந்திக்காரர்களை பணியமர்த்தும் பட்டியலைக் கைவிடு!. தமிழ்நாடு முதல்வர் தலையிட வேண்டும்!"-- தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் கோரிக்கை!

Thursday, April 28, 2022

 

தமிழ்நாடு அஞ்சல்துறையில்
100 விழுக்காடு இந்திக்காரர்களை
பணியமர்த்தும் பட்டியலைக் கைவிடு!
=================================
தமிழ்நாடு முதல்வர் தலையிட வேண்டும்!
=================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
பெ. மணியரசன் கோரிக்கை!
=================================


தமிழ்நாடு வட்ட முதன்மை அஞ்சல்துறைத் தலைவர் அலுவலகம் (Chief Post Master General) 30.03.2022 நாளிட்டு வெளியிட்டுள்ள புதிய ஊழியர் சேர்ப்புப் பட்டியலில் 946 பெயர்கள் உள்ளன. இவர்கள் தமிழ்நாட்டில் எந்தெந்தக் கோட்டத்தில் எந்தெந்த அலுவலகத்தில் பணியில் சேர வேண்டும் என்ற விவரங்கள் உள்ளன.

946 பெயர்களில் ஒரு பெயர்கூடத் தமிழ்நாட்டுப் பெயராக இல்லை. எல்லாம் வடநாட்டுப் பெயர்கள். தப்பித் தவறி ஒரு சில தமிழ்ப் பெயராவது இருக்குமா என்பது கேள்விக் குறிதான்!

இப்பட்டியலில் உள்ள வடநாட்டினர் இப்பொழுதுதான் பணி ஏற்று வருகிறார்கள். தமிழ்நாட்டில் தமிழர்களை நூற்றுக்கு நூறு புறக்கணித்து, வடநாட்டுக்காரர்கள் சற்றொப்ப 20 பேர் மயிலாடுதுறை அஞ்சல் அலுவலகங்களில் சேர்க்கப்பட்டதை அப்பகுதி மண்ணின் மக்கள் உரிமை கோரும் உணர்வாளர்கள் அறிந்தவுடன் இன்று (28.04.2022) மயிலாடுதுறை அஞ்சல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பாக – இந்த அநீதியைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டு அஞ்சல் கண்காணிப்பாளரிடம் மனுவும் கொடுத்துள்ளார்கள்.

அம்மனுவில் வேலையில்லாமல் தவித்து அஞ்சல் பணிக்காகத் தேர்வு எழுதி இலட்சக்கணக்கான தமிழ்நாட்டு இளையோர் காத்திருக்கும்போது, முழுக்கமுழுக்கத் தேர்வு செய்யப்பட்ட வடமாநிலத்தவர் யாருக்கும் பணி கொடுக்கக் கூடாது என்றும் இதுபற்றி உயர்நிலை விசாரணை நடைபெற வேண்டும் என்றும் கோரியுள்ளார்கள்.

சமூக ஆர்வலர்கள் மற்றும் மயிலாடுதுறை வளர்ச்சிக் குழு சார்பில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பேராசிரியர் இரா. முரளிதரன் தலைமை தாங்கியுள்ளார். வழக்கறிஞர் வேலு. குபேந்திரன், திரு. தமிழ் கணேசன், சீர்காழி அரவிந்தன் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளார்கள்.

தமிழ்நாட்டின் அஞ்சல் துறை, தொடர்வண்டித்துறை, பி.எச்.இ.எல்., நெய்வேலி அனல் மின் நிலையம், துறைமுகங்கள், வானூர்தி நிலையங்கள் உள்ளிட்ட இந்திய அரசு நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள் அனைத்திலும் தகுதியுள்ள தமிழ்நாட்டு இளையோரைத் திட்டமிட்டுப் புறக்கணித்துவிட்டு, வடநாட்டவர்களுக்கு வேலை வழங்கும் இனப்பாகுபாடு பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது.

மேற்படிப் பணிகளுக்கான தேர்வில் ஆள்மாறாட்டம் செய்வது, போலிச் சான்றிதழ் கொடுத்து வேலையில் சேர்வது போன்ற மோசடிகள் தமிழ்நாட்டில் பலமுறை அம்பலமாகி உள்ளன. அவ்வாறான வடநாட்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டு வழக்குகள் நடக்கின்றன.

தொழில், வணிகம், வேலை வாய்ப்பு போன்ற பொருளாதார வளர்ச்சி நடவடிக்கைகளில் அந்தந்த மொழித் தாயகத்தில் அந்தந்த மொழி மாநிலத்தவர்க்கு முன்னுரிமையும் முழு வாய்ப்பும் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. அந்த நோக்கத்திற்கு முற்றிலும் எதிராகத் தமிழ்நாட்டில் இந்திய அரசுத் துறைகளில் தமிழர்களைப் புறக்கணித்து, வடநாட்டு – இந்தி மாணவர்களை முறையற்ற வழிகளில் இந்திய அரசு திணிப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், தமிழர்களின் வாழ்வுரிமை பறிபோகும் இந்த அநீதியைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டு இளையோரின் எதிர்கால வாழ்வில் அக்கறையுள்ள அனைவரும் கூட்டாகச் சேர்ந்தோ, அல்லது தனித்தோ உடனடியாகக் களம் இறங்கிப் போராட வேண்டும். தமிழ்த்தேசியப் பேரியக்கம் போராடும்!

கோரிக்கை – 1. இந்திய அஞ்சல் துறையில் 30.03.2022 நாளிட்டு தமிழ்நாடு முதன்மைத் தலைமை அஞ்சல்துறைத் தலைவர் வெளியிட்டுள்ள பணி அமர்த்த ஆணையைத் திரும்பப் பெறு!

2. தமிழ்நாட்ல் உள்ள அஞ்சல்துறை அலுவலகங்கள் அனைத்திலும் 90 விழுக்காடு வேலை தமிழர்களுக்கு வழங்கு! வடநாட்டவரைத் திணிப்பதைக் கைவிடு!

=====================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=====================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
=====================================

Labels: ,

"கேரளத்தில் மலையாள ஆதிக்க ஆட்சி தமிழ்நாட்டில் திராவிட ஆட்சி! கண்ணகி கோயில் பறிபோகிறது!"-- தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ.மணியரசன்.

Friday, April 15, 2022

கேரளத்தில் மலையாள ஆதிக்க ஆட்சி

தமிழ்நாட்டில் திராவிட ஆட்சி!

கண்ணகி கோயில் பறிபோகிறது!
======================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ.மணியரசன்
======================================


காவியத் தலைவி கண்ணகி இறுதி நிலை அடைந்த இடம் தேனி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ளது. சேரன் செங்குட்டுவன் எழுப்பிய கண்ணகி கோயில் அங்குள்ளது. மங்கல தேவி கோயில் என்று அது வழங்கப்படுகிறது.

ஆண்டு தோறும் சித்திரை முழு நிலவு நாளில், கண்ணகி கோட்டமான மங்கல தேவி கோயிலுக்குப் பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் சென்று பூசை செய்து வழிபடுவது வழக்கம்.

இவ்வாறு தமிழர்கள் பல்லாயிரக் கணக்கில் சென்று கண்ணகியை வழிபடுவதைக் கேரள ஆட்சியாளர்கள் விரும்பவில்லை. கேரள அரசின் காப்புக் காட்டு எல்லைக்குள் கண்ணகி கோயில் உள்ளது என்று தவறாக வாதம் செய்து, கேரள அரசு அனுமதித்தால் தான் தமிழ்நாட்டிலிருந்து தமிழர்கள் வரமுடியும் என்று தடைபோட்டது.

இந்த சிக்கல் 1975-இல் பெரிதாக வெடித்த போது, தமிழ்நாட்டு நில அளவை அதிகாரிகள், தங்கள் ஆவணங்களிலிருந்து அளந்து காட்டி கண்ணகி கோயில் (மங்கல தேவி கோயில்) தமிழ்நாட்டு எல்லைக்குள் இருக்கிறது என மெய்ப்பித்தார்கள்.

அதன் பிறகு ஆண்டுக்கு ஒரு வாரம் மட்டும் – கண்ணகி கோயில் வந்து தமிழர்கள் வழிபட அனுமதிப்போம் என்றது கேரள அரசு. சில ஆண்டுகள் கழித்து, மூன்று நாட்கள் மட்டும் தான் கண்ணகி கோயில் செல்ல அனுமதிப்போம் என்றது. அதையும் பின்னர் குறைத்து ஒருநாள் மட்டும் தான் சித்திரை முழுநிலவு அன்று பகல் 4 மணி வரைதான் அனுமதிப்போம் என்று நேரத்தைக் குறைத்தனர் கேரள ஆட்சியாளர்கள். நடப்பாண்டில் 16.04.2022 சித்திரை முழுநிலவு நாளில் காலை 10 மணியிலிருந்து பிற்பகல் 2 மணி வரை மட்டும் தான் கண்ணகி கோயிலுக்குப் போக மக்களை அனுமதிப்போம் என்று மேலும் நேரத்தைக் குறைத்துள்ளது கேரள அரசு.
இந்த நேரக் குறைப்பைத் தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. நமது தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன், கேரளத்தின் இடுக்கி மாவட்ட ஆட்சியர் ஷீபா ஜார்ஜ் நிபந்தனைகளை அப்படியே ஏற்றுக் கொண்டு, பிற்பகல் 2 மணிவரை தான் அனுமதிக்கப்படுவர் என்று கெடுபிடி செய்கிறார். அதன் பிறகு பனிமூட்டம் அதிகமாகி விடும் என்று முரளிதரன் கூறுகிறார்.

மக்கள் நடமாட முடியாத அளவில் பகல் 2 மணிக்குப் பனி மூட்டம் போடுவதில்லை என்று கம்பம், கூடலூர், குமுளி பக்கம் வாழும் தமிழர்களும் தமிழக மங்கல தேவி அறக்கட்டளை நிர்வாகிகளும் கூறுகிறார்கள்.

தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் கூறுவது போல் இந்த ஆண்டு பனி மூட்டம் முன் கூட்டியே உருவாகிவிடுகிறது என்றால் என்ன செய்திருக்க வேண்டும்? ஒரு நாள் அனுமதி என்பதை இரண்டு நாள் அனுமதியாக மாற்றி ஏற்பாடு செய்திருக்க வேண்டும். ஏற்கெனவே ஒருவாரம் தொடர்ந்து வழிபாடு நடந்த கோயில் தானே கண்ணகி கோயில்! ஏன் அவ்வாறு தமிழ்நாடு அரசு வாதாடி வாய்ப்பை உருவாக்க வில்லை?

இன்று மு.க.ஸ்டாலின் ஆட்சிக் காலத்தில் மட்டும் அல்ல, கருணாநிதி, எம்.ஜி.ஆர், செயலலிதா ஆட்சிக் காலங்களிலேயே கேரள ஆட்சியாளர்கள், கண்ணகிக் கோயில் பகுதி மட்டுமல்ல பல்வேறு பகுதிகளில் தமிழ்நாட்டிற்குரிய நிலப்பரப்பை ஆக்கிரமித்துக் கொண்டார்கள். திருநெல்வேலி மாவட்டத்தில் செண்பகவல்லி அணைப்பகுதியைக் கேரள வனத்துறை ஆக்கிரமித்துக் கொண்டு, தமிழ்நாட்டிற்கு வந்து கொண்டிருந்த மலை நீரோட்டங்களைத் தடுத்துக் கேரளப் பக்கம் திருப்பிக் கொண்டார்கள்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் பாண்டியாறு பகுதிகளைக் கேரளம் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலும் இதே ஆக்கிரமிப்பு! கோவை மாவட்டத்திலும் இதே ஆக்கிரமிப்பு!

தமிழ்நாட்டிற்கும் கேரளத்திற்கும் இடையே சற்றொப்ப 600 கிலோமீட்டர் நீள எல்லைப் பகுதி இன்னும் அளந்து ஒதுக்கப்படாமலே இருக்கிறது என்கிறார்கள்.

தமிழ்நாட்டில் திராவிட மாடல் அரசியல்! கேரளத்தில் மலையாள மாடல் அரசியல்! கேரளத்தில் காங்கிரசு ஆண்டாலும் கம்யூனிஸ்ட்டு ஆண்டாலும் மலையாள இன ஆதிக்கம் – தமிழர் புறக்கணிப்பு என்பது தொடர்கதைதான். மலையாள அரசியல் தலைவர்கள் தங்களை ஒரு போதும் திராவிடர் என்று கூறிக் கொள்ள மாட்டார்கள்; மலையாளிகள் என்றே கூறிக் கொள்வர். அவர்கள் அவ்வாறு தங்களது இயற்கையான இனப் பெயரைக் கூறிக் கொள்வது தவறு அல்ல. அவர்களின் தமிழர் எதிர்ப்பும், மலையாள இன ஆதிக்கமும்தான் நமது கண்டனத்திற்குரியவை!

கண்ணகி கோயில், கேரளத்தின் காப்புக் காட்டுப் பகுதியில் இருப்பதால், அக்கோயிலுக்குச் செல்வதற்குக் கட்டுப்பாடுகள் போடுவதாகக் கேரள ஆட்சியாளர்கள் கூறுகிறார்கள். ஆனால் அதே காப்புக் காட்டுப் பகுதியில் உள்ள ஐயப்பன் கோயிலுக்கு ஆண்டுக்கு 100 நாட்களுக்கு மேல் மக்கள் வெள்ளம் வழிபடப் போகலாம் என்று அனுமதிக்கிறது கேரள அரசு! அதே பெரியாறு காப்புக் காட்டுக்குள் இருக்கும் கண்ணகி கோயிலுக்கு மட்டும் கெடுபிடிகள் மிக்கக் கட்டுப்பாடுகள்; அக்கட்டுபாடுகள் இருந்தும் ஆண்டுக்கு ஒரே ஒரு நாள் குறிப்பிட்ட சில மணி நேரம் மட்டும் தான் அனுமதி!

கேரள ஐயப்பன் மலையாளிகள் தெய்வம்; கண்ணகி, தமிழச்சி; தமிழர் தெய்வம் என்ற இனப்பாகுபாடுதான்! கேரளத்தில் மலையாள அரசியல், தமிழ்நாட்டில் மலையாளிகளையும் மற்றவர்களையும் உடன்பிறப்புகளாக இணைத்துக் கொண்ட திராவிட அரசியல்! தமிழர்களின் சட்டப்படியான தாயக உரிமைகள் மீதோ, உயிர்கள் மீதோ அக்கறை இல்லாத திராவிட அரசியல் இங்கே! அதனால் காவிரிச் சிக்கல் என்றால் கர்நாடகத்தில் தமிழர்களைக் கொல்வார்கள்; தாக்குவார்கள். முல்லைப் பெரியாறு சிக்கல் என்றால், கேரளத்தில் தமிழர்களையும், தமிழ்நாட்டு ஊர்திகளையும் தாக்குவார்கள். ஆந்திரத்தில் செம்மரம் காணாமல் போனால் தமிழர்களைக் கடத்திக் கொண்டு போய் சுட்டுக் கொல்வார்கள்!

கண்ணகி கோயிலுக்குக் கேரள வனத்துறைக்குள் போகாமல், தமிழ்நாட்டு வனப் பகுதிக்குள் பளியங்குடி வழியாகச் செல்லலாம். கூடலூருக்கு மேற்கே செல்லும் குமுளி சாலையில் இருந்து 5.6 கிலோ மீட்டர் தான் கண்ணகி கோயில்! அதில் சாலை போட வேண்டும் என தமிழ்நாட்டில் கோரிக்கை எழுந்து, கலைஞர் கருணாநிதி 1996-2001 ஆட்சிக் காலத்தில் அச்சாலை போட ஒப்புக் கொண்டார். ஆனால் கேரள எதிர்ப்பால் அதைக் கைவிட்டார்.

இப்பொழுதாவது முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அந்தப் பளியங்குடிப் பாதையில் சாலை போட்டு, ஆண்டு முழுவதும் கண்ணகி கோயிலுக்கு தமிழ்நாட்டு மக்கள் சென்று வழிபட வாய்ப்பளிக்க வேண்டும். அத்துடன், அளந்து ஒதுக்கப்படாமல் இருக்கின்ற தமிழ்நாடு – கேரள எல்லையை அளந்து வரையறுக்க வேண்டும்.

=====================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=====================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
===============================

Labels: ,

"தமிழ்நாடு கல்வி குழுவிற்கு நிர்வாகத் தலைவராகக் கல்வியாளரை அமர்த்த வேண்டும்! " --- தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ.மணியரசன் வேண்டுகோள்!

Thursday, April 7, 2022

 

தமிழ்நாடு கல்வி குழுவிற்கு

நிர்வாகத் தலைவராகக் கல்வியாளரை அமர்த்த வேண்டும்!
=======================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ.மணியரசன் வேண்டுகோள்!
=======================================

தமிழ்நாடு அரசு பல்வேறு வல்லுனர்களைக் கொண்ட புதியக் கல்விக் குழு ஒன்றை அமைத்துள்ளது. இது தமிழ்நாடு அரசு கல்வி நிலையங்களுக்கான பாடத்திட்டம் மற்றும் கலைத்திட்டங்களை வகுக்கும் என்று அரசு அறிவித்திருக்கிறது. இந்திய அரசு தனது புதிய கல்விக் கொள்கையை மாநில அரசுக் கல்வித் துறையிலும் செயல்படுத்தத் தீவிரம் காட்டி அதற்கான பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது.

பல்கலைக் கழக மானியக் குழுவில் இணைந்துள்ள கலைக் கல்லூரிகளுக்கும் (UGC) நுழைவுத் தேர்வை நடத்துவோம் என்று இந்திய அரசு அறிவித்துள்ளது. இந்திய அரசின் இந்த ஆக்கிரமிப்புகளைத் தடுத்து நிறுத்தத் தமிழ்நாடு அரசு செயல் திட்டம் எதையும் வகுக்காத நிலையில் அது அமைத்துள்ள புதிய வல்லூனர் குழுவின் பரிந்துரைகள் என்னவாகும் என்ற வினாக்குறி எழுகிறது.

தமிழ்நாடு அரசு அமைத்துள்ள இந்தக் குழுவில் தகுதி மிக்க வல்லுனர்கள் பலர் இடம் பெற்றிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் அதன் தலைவராக ஒரு கல்வியாளரை அமர்த்தாமல் நீதிபதியை நியமித்திருப்பது சரியா என்ற கேள்வி கல்வியாளர்களிடையே உள்ளது. நீதிபதி முருகேசன் அவர்களைத் தலைவராக நியமித்துவிட்ட நிலையில் நிர்வாகத் தலைவராக (Executive Chairman) மேற்படி குழுவில் உள்ள தகுதி வாய்ந்த ஒருவரை அமர்த்தி அக்குறைப்பாட்டை சரிசெய்யுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை தமிழ்த்தேசியப் பேரியக்கதின் சார்பில் கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

=====================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=====================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
===============================

Labels: ,


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்