<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d6955529389241309188\x26blogName\x3d%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86.%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://thozharmaniyarasan.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com/\x26vt\x3d-8408640130511538487', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

"தமிழ்நாடு நாள் – நவம்பர் 1 (2022) , தமிழ்நாடெங்கும் ஒரு வாரம் கடைபிடிக்க வேண்டும்! சென்னையில் மாபெரும் இந்தி எதிர்ப்புப் பேரணி" --- தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் வேண்டுகோள்!

Thursday, October 27, 2022

 


தமிழ்நாடு நாள் – நவம்பர் 1 (2022)

===========================================
தமிழ்நாடெங்கும் ஒரு வாரம் கடைபிடிக்க வேண்டும்!
சென்னையில் மாபெரும் இந்தி எதிர்ப்புப் பேரணி
===========================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
பெ. மணியரசன் வேண்டுகோள்!
===========================================


இனம், மொழி அடிப்படையில் தமிழர்களின் தாயகம் இந்திய அரசால் சட்டப்படி வடிவமைக்கப்பட்ட நாள் 1956 நவம்பர் – 1ஆம் நாள்! இதுவே தமிழ்நாடு நாள்!

தி.மு.க. ஆட்சி இந்த உண்மையை மறைத்து தனது வாக்குவங்கி வணிக அரசியலுக்காக சூலை 18 தான் தமிழ்நாடு நாள் என்று கடந்தாண்டு அறிவித்தது. அப்போதே அதை நாம் எதிர்த்தோம்; ஏற்கவில்லை!

தி.மு.க., 1967இல் ஆட்சிக்கு வந்த பின், தமிழர்களின் நெடுநாள் கோரிக்கையும், சங்கரலிங்கனார் உயிரீகம் செய்து வலியுறுத்திய கோரிக்கையுமான “தமிழ்நாடு” பெயர் மாற்றக் கோரிக்கையை சட்ட நடைமுறை வழியில் செயல்படுத்துவதற்காக, அன்றைய முதலமைச்சர் அண்ணா 1967 சூலை 18 அன்று சட்டப்பேரவையில் “தமிழ்நாடு” பெயர் மாற்றுமாறு இந்திய அரசுக்கு வேண்டுகோள் வைக்கும் தீர்மானத்தை முன்மொழிந்தார். அனைத்துக் கட்சியினரும் ஆதரித்து அத்தீர்மானத்தை நிறைவேற்றினர்.

இந்திய அரசு 1968 திசம்பர் மாதம்தான் தமிழ்நாட்டின் கோரிக்கையை நாடாளுமன்றத்தில் வைத்து, விவாதித்து ஏற்றுக் கொண்டது. 1969 தொடக்கத்தில் அது செயலுக்கு வந்தது. தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் நாளில் 14.01.1969 அன்று முதலமைச்சர் அண்ணா, தமிழ்நாடு சட்டப்பேரவை முன், “தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்” என்ற பெயர்ப் பலகையைத் திறந்து, தமிழ்நாடு பெயரை அலுவல் முறைப்படித் தொடங்கி வைத்தார்.

இந்த வரிசைகளில் எது தமிழ்நாடு நாள்? தி.மு.க. ஆட்சி 1967 சூலைஇல் நிறைவேற்றிய தீர்மான நாளா? இந்திய அரசு நாடாளுமன்றத்தின் வழி ஏற்றுக் கொண்ட நாளா? அதற்குக் குடியரசுத் தலைவர் கையொப்பம் இட்ட நாளா? இம்மூன்றில் எந்த நாளும் தமிழ்நாடு நாள் ஆகாது!

தமிழர் தாயகம் இந்திய அரசமைப்புப்படி பிறந்த நாளே தமிழ்நாடு நாள்! பிள்ளைக்குப் பிறந்த நாள், அது தாயிடம் இருந்து வெளிவந்த நாளா? பெயர் சூட்டிய நாளா?

வரலாற்று வழியில் பார்த்தால், “தமிழ்நாடு” என்ற பெயரும், “தமிழகம்” என்ற பெயரும் பரிபாடல், புறநானூறு, அகநானூறு போன்ற சங்ககால இலக்கியங்களிலும் நிறையப் பயன்படுத்தப்பட்டுள்ளன. தமிழைத் தாய்மொழியாகக் கொண்டோர் தமிழர் இனம்; தமிழர்களின் தாயகம் தமிழ்நாடு என்ற பெயர்த் தொடர்ச்சி தமிழர்களுக்கே உரியது!

தமிழர்கள் அயல் இனத்தார்க்கு அடிமைகள் ஆக்கப்பட்டபின் அந்த அயல் இனத்தார் நமது தாயகத்திற்கு அவரவர் விருப்பப்படி பெயர் சூட்டினார்கள். வெள்ளையர்கள் மெட்ராஸ் ஸ்டேட் என்றார்கள். இந்திக்காரர்கள் தமிழ் இன மறைப்பு நோக்கத்தில், வெள்ளையன் வைத்த மெட்ராசையே கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, அதை மாற்றித் தமிழ்நாடு என்று வைக்க மறுத்தனர். இந்திக்காரர்கள் மொழி இனத் தாயக மாநிலங்களை உருவாக்கவும் மறுத்தனர். பல்வேறு இன மக்கள் போராடிப் பெற்றவைதாம் மொழி இன மாநில அமைப்புகள்!

ஆங்கிலேயர், இந்திக்காரர்கள் போன்றே வேறொரு வகையில் அயல் இனச் சிந்தனை கொண்டவர்கள் தமிழர்களைத் திராவிடர்கள் என்றனர். அவர்களின் திராவிடக் கவர்ச்சி வசனங்களையும் மீறி, தமிழ் இன – மொழி உணர்வு இயல்பூக்கமாகத் தமிழர்களிடம் இருந்ததால் அவர்களும் “தமிழர்” என்ற இனத்தை ஏற்றுக் கொள்ள வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. ஆனால், திராவிடத் திணிப்பைத் தொடர்ந்து கொண்டே உள்ளார்கள். தமிழ்நாடு நாளிலும் அதைத் திணிக்கிறார்கள்.

“தமிழ்நாடு நாள்” என்பதை ம.பொ.சி. மற்றும் தமிழ் உணர்வாளர்கள் நவம்பர் 1 என்று கடைபிடித்தார்கள். 1990களில் வெகுமக்கள் இயக்கமாக – கருத்தாக நவம்பர் 1ஐ தமிழ்நாடு நாள் என்று பரவச் செய்தது, ஐயா அருணாச்சலம் (ஆனாரூனா) அவர்களின் தமிழ்ச் சான்றோர் பேரவை. அப்போதிருந்தே தமிழ்த்தேசியப் பேரியக்கம் நவம்பர் 1ஐத் தமிழ்நாடு நாளாகக் கடைபிடித்து வருகிறது.

கடந்த ஆண்டு ஆட்சிக்கு வந்த மு.க. ஸ்டாலின் திராவிடத் திணிப்பிற்காக – “திராவிட மாடல்“ என்ற ஒரு சொற்கோவையைப் பரப்பி வருகிறார். இதன் சாரம் தமிழின மறைப்புதான். அத்திட்டத்தின் ஒரு பகுதிதான் – தமிழ்நாடு நாள் நவம்பர் 1 அல்ல, தீர்மானம் நிறைவேற்றப்பட்ட சூலை 18 தான் என்ற ஸ்டாலின் அறிவிப்பு!

நவம்பர் 1 – தமிழ்நாடு நாள் என்றால், சங்க காலத்திலிருந்து தமிழர்கள் வாழ்ந்துவந்த தாயகம் நினைவுக்கு வரும். சங்க இலக்கியங்கள் நினைவுக்கு வரும். சேர, சோழ, பாண்டிய பேரரசர்கள் நினைவுக்கு வருவார்கள். தமிழ்நாட்டு எல்லைகளை மீட்கப் போராடிய போராளிகள் நினைவுக்கு வருவார்கள்; தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வந்த ஆந்திரத்தின் சித்தூர் மாவட்டம், கேரளத்தின் தேவிக்குளம் பீர்மேடு, கர்நாடகத்தின் கோலார் தங்கவயல் போன்ற பல பகுதிகளை திராவிடச் “சகோதரர்களான” தெலுங்கர்கள் – மலையாளிகள் – கன்னடர்கள் பறித்துக் கொண்டார்களே என்ற ஆவேசம் வரும்; தமிழின உணர்ச்சி ஊறும்!

இவற்றையெல்லாம் மறைத்து மடைமாற்றத்தான் சூலை 18! இது தி.மு.க.வை நினைவுபடுத்தும்; திராவிடத்தை நினைவுபடுத்தும். திமு.க.வின் சாதனைப் பட்டியலை நினைவுபடுத்தும். திராவிடவாதிகள் இப்படிப்பட்ட உளவியல் போரை பல வடிவங்களில் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவற்றுள் ஒன்றுதான் – தமிழ்நாடு சட்டப்படி வடிவமைக்கப்பட்ட நாள் முதன்மை அன்று; அதற்குப் பெயர் சூட்டத் தீர்மானம் நிறைவேற்றி தில்லி எசமானர்களைக் கேட்டுக் கொண்ட நாளே, “தமிழ்நாடு நாள்“ என்னும் சூழ்ச்சி!

கலைஞர் கொண்டு வந்த தைப் புத்தாண்டு அறிவிப்பை, பின்னர் வந்த அ.தி.மு.க. முதலைமைச்சர் செயலலிதா நீக்கிவிட்டு, ஆரியக்கதையையொட்டிய சித்திரைப் புத்தாண்டையே தமிழ்ப் புத்தாண்டு என மாற்றினார். அதை நீக்கிட, கடந்த இரண்டாண்டுகளாக எந்த முயற்சியும் மேற்கொள்ளாத “திராவிட மாடல்” ஆட்சி, நவம்பர் 1 - தமிழ்நாடு நாளை மாற்றுவதில் மட்டும் அவ்வளவு முனைப்பு காட்டுகிறது எனும்போதே, இவர்களின் ஆரிய ஆதரவு தமிழ் இன மறைப்பு சூழ்ச்சியைப் புரிந்து கொள்ள முடியும்!

வரும் நவம்பர் 1 (2022) தமிழ்நாடு நாளை தாயக நாளாக மட்டுமின்றி, இந்தித் திணிப்பு எதிர்ப்பு நாளாகவும் கடைபிடிக்க நாம் தமிழர் கட்சி முடிவு செய்திருக்கிறது. மிகப்பெரிய இந்தி எதிர்ப்புப் பேரணி 1.11.2022 செவ்வாய் பிற்பகல் 3 மணிக்கு சென்னை எழும்பூர் இராசரத்தினம் விளையாட்டரங்கிலிருந்து புறப்படுகிறது. தமிழ்த்தேசியப் பேரியக்கம், தமிழ்த்தேசியத் தன்னுரிமைக் கட்சி, தமிழர் நலம் பேரியக்கம், ஆதித்தமிழர் விடுதலை இயக்கம், மருது மக்கள் இயக்கம், வனவேங்கைகள் கட்சி ஆகியவை கலந்து கொள்கின்றன. தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் நான் பங்கேற்கிறேன். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் சிறப்புரை ஆற்றுகிறார்.

இப்பேரணியில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்களும், தமிழின உணர்வாளர்களும் திரளாகக் கலந்து கொள்ள வேண்டும்.

தமிழ்த்தேசியப் பேரியக்க அமைப்புகள், நவம்பர் 1 முதல் 7ஆம் நாள் வரை, தமிழ்நாடு நாளை அங்கங்கே கடைபிடித்து மக்களிடையே தமிழ்த்தேசியக் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

குறிப்பாகத் தமிழ்நாட்டை ஆக்கிரமிக்கும் இந்திக்காரர்களையும் – வெளி மாநிலத்தவர்களையும் வெளியேற்றுவது குறித்த தேவையை மக்களிடம் பேசுங்கள்! இந்தித் திணிப்பை முறியடிக்கக் களம் கண்டாக வேண்டும் என்ற செய்தியைப் பகிர்ந்து கொள்ளுங்கள்!

தோழமையுள்ள,
பெ. மணியரசன்,
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்

=================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : +91 98419 49462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
================================= 

Labels: , ,

"1965 மொழிப்போர் வீரர் - இலக்கியப் படைப்பாளி தோழர் பா. செயப்பிரகாசம் மறைவு பேரிழப்பு!"---- தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் இரங்கல்!

Sunday, October 23, 2022


 1965 மொழிப்போர் வீரர் - இலக்கியப் படைப்பாளி

தோழர் பா. செயப்பிரகாசம் மறைவு பேரிழப்பு!
=========================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
பெ. மணியரசன் இரங்கல்!
=========================================


மிகச்சிறந்த படைப்பிலக்கிய ஆளுமையும், மார்க்சிய லெனினியரும், தமிழ்த்தேசியருமான தோழர் பா. செயப்பிரகாசம் அவர்கள் இன்று (23.10.2022) மாலை தூத்துக்குடி மாவட்டம் – விளாத்திக்குளத்தில் மாரடைப்பால் காலமாகிவிட்டார் என்ற செய்தி சொல்லொணா வேதனையை உண்டாக்குகிறது.

ஆதிக்க இந்தியை எதிர்த்து 1965இல் நடந்த மாபெரும் மாணவர் போராட்டத்தின் தள நாயகர்களில் ஒருவர் தோழர் பா. செயப்பிரகாசம். அப்போது மதுரையில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார்.

பின்னர் மார்க்சிய – லெனினிய மெய்யியல் மற்றும் அரசியலில் ஈடுபாடு கொண்டு மா.லெ. அமைப்பொன்றின் (TNOC) ஆதரவாளராக இருந்தார். 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முன்னணிக் களச் செயல்பாடுகளில் இருந்த கல்லூரி மாணவர்களுக்கு 1967இல் ஆட்சிக்கு வந்த தி.மு.க., மக்கள் செய்தித் தொடர்பு அதிகாரியாக பதவிகள் – மாவட்டங்களில் வழங்கியது. அதன் வழியாக மாவட்ட மக்கள் செய்தித் தொடர்பு அலுவலராகப் பணியாற்றினார் ஜே.பி. (செயப்பிரகாசம் அவர்கள் அன்புடன் ஜே.பி. என்று அழைக்கப்பட்டார்).

சிறுகதை படைப்பதில் இயல்பான ஆர்வம் கொண்டு, ஆற்றலுடன் கதைகள் வழங்கினார். நான் ஜே.பி.யின் சிறுகதை ரசிகன். நெல்லைச் சீமை மொழியில் மிகமிக உயிரோட்டமாக எழுதுவார்!

மார்க்சிய – லெனினியக் கோட்பாடுகளின் அடிப்படையில் “மனஓசை”, “கேடயம்” போன்ற இதழ்களில் அரசியல் திறனாய்வுகள், படைப்பிலக்கியங்கள் எழுதி வந்தார்.

தஞ்சை மாவட்ட மக்கள் செய்தித் தொடர்பு அதிகாரியாக ஜே.பி. பணியாற்றியபோது, அவருடன் நேரில் சந்தித்து நான் உரையாடுவது வழக்கம். மக்கள் செய்தித் தொடர்புத் துறையில் பதவி உயர்வு பெற்று துணை இயக்குநர் பொறுப்பில் சென்னைத் தலைமைச் செயலகத்தில் இருந்தார். ஆனால், அதிகார வர்க்கத் தோரணை எதுவுமின்றி அப்போதும் தோழராகவே பழகினார். அப்பதவி உயர்வும் அவருக்கு மிகத் தாமதமாகவே வழங்கப்பட்டது.

எமது தமிழ்த்தேசியப் பேரியக்கத்தைத் தோழமை அமைப்பாகக் கருதி அன்புடன் அணுகுவார். நாம் அழைக்கும் இலக்கியக் கூட்டங்களுக்கு வருவார். எமது தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழிலும், அதன் மலர்களிலும் பல கட்டுரைகள் எழுதியுள்ளார்.
ஒரு செய்தியை முழுமையாகத் தெரிந்து கொண்டு, ஆற்றோட்டம் போல் அழகாக உரையாற்றுவார். அவசரப்பட்டு சொற்களைக் கொட்டாமல், அளந்து பேசுவார். அது ஜே.பி. பாணி என்று சொல்லலாம்.

தோழர் ஜே.பி.யின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகே உள்ள இராமச்சந்திரபுரம். ஜே.பி.யின் இழப்பு – தமிழ்த்தேசியத்திற்கும், இடதுசாரிக் கருத்தியலுக்கும் தோழர்களுக்கும் பேரிழப்பு!

நாளை மறுநாள் (25.10.2022) பகல் 12 மணி அளவில் அவரது விருப்பப்படி அவரது உடலை தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களின் கல்விக்கு உதவும் வகையில் அளிக்கிறார்கள்.

விளாத்திக்குளம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் திரு. மார்க்கண்டேயன் அவர்கள், தம் பொறுப்பில் தோழர் ஜே.பி. அவர்களை நோயுற்ற நிலையில் பேணிப் பாதுகாத்து வந்துள்ளார்.

தோழர் ஜே.பி. அவர்கட்கு தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வீரவணக்கத்தையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

=================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : +91 98419 49462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
================================= 

Labels: , ,

"ஓசூரில் டாட்டா தொழிற்சாலை இந்திக்காரர்களை இறக்குமதி செய்கிறது! வெளியாரை வெளியேற்றுவோம்!" ---தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை!

Friday, October 14, 2022


ஓசூரில் டாட்டா தொழிற்சாலை

இந்திக்காரர்களை இறக்குமதி செய்கிறது!
வெளியாரை வெளியேற்றுவோம்!
================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
பெ. மணியரசன் அறிக்கை!
================================


ஓசூா் தொடா்வண்டி நிலையத்தில் 29.09.2022 அன்று 860 இளம்பெண்கள் இந்தி மாநிலமான ஜார்கண்டிலிருந்து வந்து இறங்கினா். இவா்களைத் தனிச்சிறப்புத் தொடா்வண்டியில் அழைத்து வந்தது வடநாட்டு டாட்டா நிறுவனம். கிருட்டிணகிரி மாவட்டம் கெலமங்கலம் ஒன்றியம், கூத்தனப்பள்ளி கிராமத்தில் உள்ள டாட்டா மின்னணு (TATA Electronic PVT LTD) தொழிற் சாலையில் வேலை பார்ப்பதற்காக அழைத்து வந்துள்ளார்கள். அடுத்தடுத்து சிறப்புத் தொடா்வண்டிகளில் இந்திக்காரா்களை அழைத்து வர உள்ளார்களாம். ஏற்கெனவே இதே தொழிற்சாலையில் ஆந்திரா, கர்நாடகம், மகாராட்டிரம் உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்தோர் பணிபுரிந்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் 12-ஆம் வகுப்பு முடித்தும், பட்டப்படிப்பு முடித்தும் பல இலட்சம் இளம் பெண்கள் வேலையின்றி விரக்தியின் விளிம்புக்கே சென்றுவிட்டார்கள். அவா்களுக்கெல்லாம் இந்தி முதலாளிகள் வேலை தர மாட்டார்கள். இந்திக்காரர்களுக்கே வேலை தருவார்கள்.

மண்ணின் மக்களுடைய வேளாண் நிலங்களைக் கைப்பற்றி, வேதி நச்சு மண்டலமாக்கி, அவா்களை ஊரைவிட்டு வெளியேற்றி தொழில் நடத்தும் டாட்டா போன்ற வடநாட்டு மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள், தமிழா்களை – மண்ணின் மக்களைப் புறக்கணிக்கின்றன, இந்திக்காரர்களுக்கும் இன்னபிற வெளி மாநிலத்தவா்களுக்கும் வேலை தருகின்றன.

அன்னையின் மடியிலேயே பிள்ளைகளை அனாதைகள் ஆக்கும் இந்த அநீதிக்கு அதிமுக, திமுக ஆட்சிகள் தொடர்ந்து துணை நிற்கின்றன. இப்போதுள்ள மு.க. ஸ்டாலின் அரசு, இந்திக்காரா்களைப் பட்டுக் கம்பளம் விரித்து வரவேற்கிறது. தொடக்க காலத்தில், “வடவா் நம்மவரும் இல்லை; நல்லவரும் இல்லை” என்று வசனம் பேசி வளா்ந்த கட்சி தி.மு.க.

இப்போது தமிழ்நாட்டில் உள்ள, இந்திய அரசு நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில், திட்டம் போட்டு இந்திக்காரர்களையே 90 விழுக்காட்டிலிருந்து 100 விழுக்காடு வரை வேலையில் சோ்க்கிறது இந்திய அரசு. தொடா்வண்டித் துறை, அஞ்சல்துறை, இந்திய அரசு வங்கிகள், வருமான வரி, சரக்கு மற்றும் சேவை வரி அலுவலகங்கள், வானூா்தி நிலையங்கள், துறைமுகங்கள், ஆவடி -திருச்சி படைக்கலத் தொழிற்சாலைகள், பிஎச்இஎல், நெய்வேலி சுரங்கம் மற்றும் அனல் மின் நிலையம், கணக்குத் தணிக்கை அலுவலகம் உள்ளிட்ட அனைத்திலும் இந்திக்காரா்களுக்கே வேலை! மண்ணின் மக்கள் முற்றிலும் புறக்கணிக்கப்படுகிறார்கள். இவ்வேலைகளுக்கான தோ்வுகள் அனைத்திலும் மோசடி வேலைகளைச் செய்து இந்திக்காரர்களையே தேர்ச்சி பெறச் செய்கிறார்கள்.
தமிழ்நாடு அரசுப் பணித் தோ்வாணையத் தோ்விலும் இந்திக்காரா்கள் தோ்வு எழுதி வேலைகளில் சோ்கிறார்கள். இதிலும் ஊழல்! தமிழ்நாடு அரசுப் பணிக்கானத் தோ்வுகளை இந்தியா முழுவதும் உள்ளவர்கள் எழுதலாம் என்று அ.இ.அ.தி.மு.க. ஆட்சி 2016இல் சட்டத் திருத்தம் செய்தது. அதை அப்படியே கடைபிடிக்கிறது திமுக ஆட்சி! தமிழ் ஒரு தோ்வுத் தாளாக இருக்கும் என்று திமுக ஆட்சி புதிய நிபந்தனை போட்டுள்ளது. ”கொடுப்பதைக் கொடுத்து” தமிழில் அதிக மதிப்பெண் வாங்கிவிடுகிறார்கள் இந்திக்காரா்களும் இதர வெளி மாநிலத்தவர்களும்!

அன்றாடம் ஆயிரம் பல்லாயிரமாய் வடவா்கள் வந்து தமிழ்நாட்டில் குவிகிறார்கள். தனியார் துறை தொழில் நிறுவனங்களில், உணவகங்களில், கட்டுமானத் தளங்களில், சாலையோரக் கடைகளில், வேளாண் வேலைகளில் எங்கும் இந்திக்காரர்கள். அவா்கள் தமிழா்களின் வாழ்வாதார வேலைகளை மட்டும் பறிக்கவில்லை; தமிழா் தாயகத்தையே பறிக்கிறார்கள். வேலைத்தளங்கள், கடைகண்ணிகள் என அனைத்து இடத்திலும் இந்தியைப் பரப்புகிறார்கள். இந்திச் சொற்களைப் பயன்படுத்த வேண்டிய நெருக்கடியை நம்மவா்க்கு உண்டாக்குகிறார்கள்.

இந்த அவலம் தொடா்ந்தால் தமிழ்நாடு தமிழா் தாயகமாக நீடிக்காது. தமிழ்நாட்டை இந்தி மண்டலமாக்க வேண்டும் என்பதே இந்திய ஏகாதிபத்தியவாதக் கட்சிகளான காங்கிரசு மற்றும் பாசகவின் திட்டம்! அத்திட்டத்திற்குத் துணைபோய், தமிழ் இனத்திற்கு இரண்டகம் செய்கின்றன திமுகவும் அதிமுகவும்.

இப்படியே அனுமதித்தால் இந்த வெளியார் வாக்குரிமை பெற்று, தமிழ்நாட்டின் தோ்தல் முடிவுகளைத் தீா்மானிக்கும் ஆற்றல்கள் ஆவார்கள். இவா்கள் பாசக, காங்கிரசு போன்ற இந்திய ஏகாதிபத்தியக் கட்சிகளுக்கே வாக்களிப்பார்கள். இவா்களே வேட்பாளா்களும் ஆவார்கள். வெற்றியும் பெறுவார்கள். திரிபுரா இப்படித்தான் வங்காளிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.

டாட்டா தொழிற்சாலையில் இந்திக்காரர்களை வெளியேற்ற வாரீா்!

ஓசூா் டாட்டா மின்னணுத் தொழிற்சாலையிலிருந்து, இந்திக்காரா்களை வெளியேற்ற, அத்தொழிற்சாலை முன் அறப்போராட்டம் நடத்துவோம்! விரைவில் நாள் அறிவிப்போம்!

திறந்த வீட்டில் நுழையும் பிராணிகள் போல் வெளியார் யார் வேண்டுமானாலும் நுழையலாம் என்று இன்றுள்ள நிலையை மாற்ற வேண்டும். நாகாலாந்து, அருணாச்சலப் பிரதேசம், மிசோரம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் இருப்பது போல் வெளியார் தடுப்பு உள்நுழைவு அனுமதி (Inner Line Permit) அதிகாரம் தமிழ்நாடு அரசு பெறக் கோருவோம்.

தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் 90 விழுக்காடு வேலை தமிழா்களுக்கே வழங்க வேண்டும். பத்து விழுக்காட்டிற்கு மேல் உள்ள வெளியாரை வெளியேற்ற வேண்டும். தமிழ்நாடு அரசுத் துறையில் 100 விழுக்காடு வேலைகளும் மண்ணின் மக்களுக்கே வழங்க வேண்டும்.

தமிழ்நாட்டில் தொழில் மற்றும் வணிகம் நடத்தும் வெளி நாட்டினரும், வெளி மாநிலத்தவரும் குறிப்பிட்ட நிறுவனத்தின் மொத்த முதலீட்டில் குறைந்தது 30 விழுக்காடு பங்கு தமிழ்நாட்டு மண்ணின் மக்களின் முதலீடாக இருக்க சட்டமியற்ற வேண்டும். படிப்படியாகத் தமிழா்களுக்கு இந்நிறுவனங்களில் 51 விழுக்காடு முதலீட்டுப் பங்கு என்றாக்க வேண்டும். தமிழ்நாட்டுத் தனியார் துறையில் 90 விழுக்காடு வேலை மண்ணின் மக்களுக்கு வழங்க வேண்டும்.

தமிழ்நாட்டின் தனியார் துறை நிறுவனங்களுக்குத் தொழிலாளிகளை – ஊழியா்களைத் தமிழ்நாட்டின் மண்ணின் மக்களிடமிருந்தே பெறும் வாய்ப்பை அவா்களுக்கு வழங்க தமிழ்நாடு அரசு ”மண்ணின் மக்கள் வேலை வழங்கு வாரியம்” அமைத்து அந்தந்த நிறுவனத்துக்குத் தேவையான தொழிலாளிகளை ஊழியா்களை வழங்கிட வேண்டும். அதற்காக வேலை கோருவோர் பட்டியலைப் பராமரிக்க வேண்டும்.

புதிதாகச் சோ்க்கப்பட்ட வடநாட்டுப் பெண்களை வெளியேற்றித் தமிழ் மண்ணின் பெண்களுக்கு வேலை தரக் கோரித் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினா் தோழா் கோ. மாரிமுத்து அவா்கள் தலைமையில் பேரியக்கத் தோழா்கள் கடந்த 08.10.2022 அன்று மேற்படி டாட்டா மின்னணுத் தொழிற்சாலையின் மனிதவளத் தலைமை அதிகாரி திரு. இரஞ்சன் சட்டோபாத்யாவையும், அடுத்த நிலை அதிகாரிகளான திரு ஜெயசங்கா், திருவாட்டி காமாட்சியையும் நேரில் சந்தித்து கோரிக்கை மடல் கொடுத்திருக்கிறார்கள். அதே கோரிக்கையைக் கிருட்டிணகிரி மாவட்ட ஆட்சித் தலைவரிடமும் கடந்த 10.10.2022 அன்று நம் தோழா்கள் கொடுத்திருக்கிறார்கள்.

நம் கோரிக்கையை விரைவாக நிறைவேற்றவில்லை யென்றால், அடுத்து ஒரு நாள் முடிவு செய்வோம், அழைப்போம். வாருங்கள்; கூத்தனப்பள்ளி டாட்டா தொழிற்சாலை முன் கூடுவோம். அறப்போராட்டம் நடத்துவோம்!

=================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
=================================

Labels: , ,

" மீட்ட உரிமையா? போட்ட பிச்சையா..?"---- ஐயா பெ. மணியரசன், தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

Wednesday, October 5, 2022


 மீட்ட உரிமையா? போட்ட பிச்சையா?

===============================
ஐயா பெ. மணியரசன்,
தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
===============================


தி.மு.க. தலைவர்களும் அமைச்சர்களும் பல்வேறு பிரிவு மக்களை இழிவுபடுத்தும் வகையில் அவ்வப்போது பேசி வருகின்றனர்.

சில மாதங்களுக்கு முன் ஆர்.எஸ். பாரதி தலித்துகளுக்குத் திராவிட இயக்கம் போட்ட பிச்சைதான் உச்சநீதிமன்றத்தில் முதல் முதலாகத் தலித் வரதராசனை நீதிபதியாக்கியது என்றார்.

இப்பொழுது அமைச்சர் பொன்முடி, பட்டியல் வகுப்பு மக்களைக் குறிப்பிட்டு ஒரு காலத்தில் நீங்கள் எல்லாம் பெரிய சாதியினரின் தெருவில் நடக்க முடியாது. பெரியார் போட்ட பிச்சைதான் உங்களையெல்லாம் அந்தத் தெருக்களில் நடக்க வைத்திருக்கிறது என்றார்.

அடுத்து பெண்களைப் பார்த்து, நீங்களெல்லாம் பஸ்ஸில் போகிறீர்கள் அல்லவா, - இங்கிருந்து கோயம்பேடு, கோயம்பேட்டில் இருந்து இங்கே - எல்லாம் ஓசி, ஓசி; தி.மு.க. அரசின் சாதனை என்றார்.

மக்களை இழிவுபடுத்தும் தி.மு.க. மேல்மட்டங்களின் இப் பேச்சுளைக் கண்டித்து ஊடகங்களில் புயல் வீசுகிறது!

நாம் இங்கு இவற்றைச் சுட்டிக் காட்டி இப்போது எழுதுவதற்குக் காரணம், தி.மு.க.வினரின் இப்படிப்பட்ட ஆணவங்களை, அதிகாரத் திமிரைக் கண்டிப்பதற்காக மட்டுமன்று, நம் இளையோரிடம் இப்படிப்பட்ட தீப் பண்புகள் தொற்றிக் கொள்ளக் கூடாது என்று எச்சரிப்பதற்காகவும் ஆகும்.

திருவள்ளுவப் பெருந்தகை எச்சரித்தார்,

“யாகாவார் ஆயினும் நாகாக்க; காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு!”

இன்னொன்றும் கூறி எச்சரித்தார்.

“எல்லார்க்கும் நன்றாம் பணிதல்; அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.”

அடக்கத்துடன் நடந்து கொள்வது எல்லார்க்கும் தேவை. அதேவேளை, செல்வத்திலும் அதிகாரத்திலும் மேல் நிலையில் உள்ளவர்க்கு அவ்வடக்கம் மிகமிகத் தேவை என்று வலியுறுத்தினார்.

பெரியாரைத் தங்கள் ஆசானாக, வழிகாட்டியாகக் கொண்டவர்களுக்குத் திருக்குறள் ஒரு பொருட்டல்ல, பின்பற்றத்தக்க நூலும் அல்ல!

தி.மு.க.வினர் ஒரு காலத்தில் திருக்குறளை, திருவள்ளுவரைப் போற்றியவர்கள்தாம். ஆனால் இப்பொழுது அவர்களின் வழிகாட்டியாக அண்ணா கூட இல்லை. “கடமை, கண்ணியம், கட்டுப்பாடு” என்று கூறி தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பே தம்பிகளுக்கு அறிவுரை வழங்கியவர் அண்ணா.

அண்ணாவின் கருத்துகள், நிலைபாடுகள் சிலவற்றில் நமக்கு மாறுபாடு இருந்தாலும், திறனாய்வுகள் இருந்தாலும், அவரின் அடக்கம், மாற்றுக் கட்சியினரையும், மக்களையும் மதிக்கும் பண்பு போன்றவை மிகவும் சிறப்பானவை.

இப்பொழுது, தி.மு.க.வினர் அண்ணாவை ஓரங்கட்டிவிட்டனர். பெரியார், கருணாநிதி, மு.க. ஸ்டாலின் ஆகியோர்தாம் தி.மு.க. அமைச்சர்களுக்கும், அடுத்த நிலைத் தலைவர்களுக்கும் தலைவர்கள் - வழிகாட்டிகள். மு.க. ஸ்டாலினுக்குப் பெரியாரும் கருணாநிதியும்தான் நடைமுறைத் தலைவர்கள். ஒரு சம்பிரதாயத் தலைவர்தான் அண்ணா!

செயலலிதாவைப் பின்பற்றுகிறார் ஸ்டாலின்
-------------------------------------------------------------
மு.க. ஸ்டாலின் பின்பற்றும் தலைவர்களில் வெளியில் சொல்லப்படாத ஒரு தலைவர் இருக்கிறார். அவர்தான் செயலலிதா!

தலைவர் என்ற முறையில் தி.மு.க.விற்குள்ளும் முதலமைச்சர் என்ற முறையில் தி.மு.க. அமைச்சரவைக்குள்ளும் சனநாயகம் நீக்கி எதேச்சாதிகாரமாய்ச் செயல்படும் “கலையை” செயலலிதாவிடம் கற்றுக் கொண்டு, அதை அப்படியே கடைபிடித்து வருகிறார் ஸ்டாலின்!

“எனது அரசு”, “நான் ஆணையிட்டேன்”, “எனது திட்டம்” என அரசின் எல்லாச் செயல்பாடுகளையும் தனது தனிப்பட்ட அதிகாரத்தால் நடப்பவை போல் சித்தரித்துக் கொண்டுள்ளார் ஸ்டாலின். அமைச்சர்களும் ஒவ்வொரு நேர் காணலிலும், அறிக்கையிலும் முதலமைச்சரின் ஆணைப்படி இதைச் செய்கிறோம், அதைச் செய்கிறோம் என்றுதான் கூறுகிறார்கள். அப்படிக் கூறாவிட்டால் அவர்களின் பதவி நிலைக்காது போலிருக்கிறது.

அமைச்சரவைக் கூட்டத்திலும், உயர் அதிகாரிகள் கூட்டத்திலும் முதலமைச்சர் செயலலிதா தனக்கு மட்டும் கைவைத்த நாற்காலி போடச் சொல்வார். மற்றவர்கள் கை இல்லாத நாற்காலிகளில்தாம் உட்கார்ந்திருப்பர். அதே நடைமுறையை இப்போது ஸ்டாலின் பின்பற்றுகிறார்.

இந்திய அரசமைப்புச் சட்டப்படி, அமைச்சரவை என்பது கூட்டுப் பொறுப்பு (Collective Responsibility) உடையது. சமமானவர்களில் முதலாம் அமைச்சர் முதலமைச்சர் (Chief Minister); மற்ற அமைச்சர்களுக்கு முதலமைச்சர் தனித்தனி துறைகளைப் பிரித்துக் கொடுப்பது ஒரு நிர்வாக ஏற்பாடே! ஓர் அமைச்சர் கூறும் கருத்து, எடுக்கும் நிலைபாடு, போடும் ஆணை, ஒட்டுமொத்த அமைச்சரவைக்கும் உரியதாகும்.

நமக்குத் தெரிந்து காமராசரோ, பக்தவச்சலமோ, அண்ணாவோ, கலைஞர் கருணாநிதியோ, எம்ஜியாரோ “எனது அரசு” என்று பேசுவதை வழக்கமாகக் கொண்டிருக்கவில்லை. நமது அரசு, காங்கிரசு அரசு, தி.மு.க. அரசு, அதி.மு.க. அரசு என்றுதான் பேசினார்கள். “எனது அரசு” என்று ஆணவமாகப் பேசியவர் செயலலிதாதான்! அது மட்டுமல்ல, மற்ற அமைச்சர்கள் “அம்மாவின் அரசு” என்று சொல்லும்படி ஆக்கியவர் செயலலிதாதான்!

இப்போது மு.க. ஸ்டாலின் எனது அரசு என்கிறார். மற்ற அமைச்சர்கள் தளபதியார் அரசு என்கின்றனர்.

பெரிய எதேச்சாதிகாரியாக அஇஅதி.மு.க. விலும், அரசு நடவடிக்கைகளிலும் செயல்பட்ட அதே செயலலிதா “மக்களால் நான், மக்களுக்காக நான்” என்று ஒரு முழக்கத்தை உருவாக்கித் தம்மை அலங்கரித்துக் கொண்டு சனநாயக வேடம் போட்டார். செயலலிதாவின் எதேச்சாதிகாரத்தைப் பின்பற்றும் ஸ்டாலின், தம்மைப் பற்றிக் கூறுவதற்கு “உங்களில் ஒருவன்” என்ற வசனத்தை உருவாக்கிக் கொண்டார்.

செயலலிதா, ஸ்டாலின் போன்றவர்களின் எதேச்சாதிகாரம் இட்லர், முசோலினி நடத்திய முற்றதிகாரம் (சர்வாதிகாரம்) போன்றதன்று. புதுதில்லி ஆதிக்கத்தற்கு உட்பட்ட, குறைந்த அளவு கங்காணி அதிகாரம் கொண்ட மாநில அரசின் முதலமைச்சர்கள் இவர்கள். இவர்கள் மக்களிடம் வாக்கு வாங்கித் தங்கள் அதிகாரத்தை நீட்டித்துக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளவர்கள். எனவே, அவர்கள் மக்களிடம் அதிகமாக சனநாயக வேடம் போடுவார்கள்.

சிற்றதிகாரக் கேடர்கள்
-------------------------------
“சிற்றதிகாரக் கேடர்கள்” என்ற சொற்கோவையை வள்ளலார் தமது பாடலில் பயன்படுத்தியுள்ளார். பெரிய அதிகாரம் இருக்காது; குறைவான அதிகாரம் இருக்கும்; பெரிய அதிகாரம் உள்ளவர்களுக்குக் கீழ் பணிபுரியும் சிறு அதிகாரம் இருக்கும். அப்படிப்பட்ட சிற்றதிகாரம் கொண்டவர்கள் மக்களிடம் கடுமையாகவும் கொடுமையாகவும் நடந்து கொள்வார்கள். மக்களையும் தங்களுக்குக் கீழ் உள்ளவர்களையும் தாக்குவார்கள். ஒரு புரிதலுக்காகப் பழைய காலத்தில் நிலவிய தேயிலைத் தோட்டக் கங்காணிகளின் சிற்றதிகாரத்தை எண்ணிப்பார்க்கலாம்.

அந்தக் கங்காணி மேலதிகாரிக்குக் கட்டுப்பட்டவர். அவரிடம் வளைந்து நெளிந்து பணிவாக நடந்து கொள்வார். ஆனால் தேயிலைத் தோட்டத் தொழிலாளிகளிடம் ஏதாவது ஒரு குறை கண்டவிடத்து அவர்களைச் சாட்டையால் அடிப்பார். அவர் கையில் எப்போதும் சாட்டை இருக்கும்.

நம்முடைய காவல் நிலையங்களில் பெரிய அதிகாரிகளை விடக் கீழ்நிலையில் உள்ள அதிகாரிகளும், காவலர்களும் விசாரணைக்கு உள்ளானவர்களைக் கடுமையாகத் தாக்குவார்கள்.

அப்படித்தான் தி.மு.க., அதி.மு.க. அமைச்சர்கள் ஆளுநருக்கும் புதுதில்லிக்கும் கீழ்ப்பட்டவர்கள் - கட்டுப்பட்டவர்கள். அவர்களிடம் இவர்கள் பணிவாகவும் - சமயங்களில் அடிமைகளாகவும் நடந்து கொள்வார்கள். செயலலிதா, ஸ்டாலின் போன்ற முதலமைச்சர்களிடம் அடிமைபோல் நடந்து கொள்வார்கள். ஆனால் தங்கள் கட்சித் தொண்டர்களிடம், கீழ்நிலை அலுவலர்களிடம், மக்களிடம் எசமானர்கள் போல் அதிகாரம் செய்வார்கள். அத்து மீறிப் பேசுவார்கள். அப்படிப்பட்ட பேச்சுதான் அமைச்சர் பொன்முடி பேச்சு! பெரியசாதித் தெருவில் நீங்கள் எல்லாம் ஒரு காலத்தில் நுழைய முடியாது. பெரியார் போட்ட பிச்சையால் இப்போது நுழைகிறீர்கள் என்றார்.

“பெரியார் போட்ட பிச்சை” என்று சிற்றதிகாரத் திமிரோடு பேசி மக்களை இழிவு படுத்துவார்கள்.

“பிச்சை” என்றால் என்ன? பொருள் இல்லாதவர்கள், உணவில்லாதவர்கள், தானம் கேட்கும்போது, இரக்கம் கொண்டோர் இரப்போர்க்குத் தானம் அளிப்பதுதான் பிச்சை!

வர்ண - சாதி ஆதிக்கம் கொண்டோர் - பட்டியல் வகுப்பு மக்களின் உரிமையைப் பறித்தவர்கள் ஆவார்கள்! இயற்கையின் படைப்பில் மனிதர்கள் அனைவரும் சமம். அந்த இயற்கை நீதியை ஒரு பகுதி மக்களுக்கு மறுத்தவர்கள் - அவர்களை மேல் - கீழ் என்று ஒதுக்கியவர்கள் - அவர்களில் ஒரு சாராரைத் தீண்டத்தகாதவர்கள் என்று இழிவு படுத்தியவர்கள் - மனித நீதியைப் பறித்தவர்கள்; குற்றவாளிகள் ஆவார்கள்!

உரிமை பறிக்கப்பட்டவர்கள், உரிமை கோருகிறார்கள்; அதற்காகப் போராடுகிறார்கள். அவர்களின் உரிமைகளைப் பறித்த வர்ணங்களில், சாதிகளில் உள்ள நேர்மையாளர்கள், சமநீதி கோருவோர், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்குக் குரல் கொடுக்கிறார்கள்; போராடுகிறார்கள். இவர்களின் இச்செயல் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இவர்கள் போட்ட பிச்சையா? இல்லை! பட்டியல் வகுப்பு மக்களுக்குரிய நீதி இன்னும் முழுமையாகக் கிடைக்கவில்லை! பறிக்கப்பட்ட உரிமைகளில் சிலவற்றை அவர்கள் மீட்டிருக்கிறார்கள். அவ்வளவே!

இந்தியா விடுதலை பெற்றதும், சனநாயக முறைத் தேர்தல் கொண்டு வந்ததும் காந்தி, நேரு, காமராசர் போட்ட பிச்சை என்றால் அமைச்சர் பொன்முடி ஏற்றுக் கொள்வாரா?

மக்களிடம் வழிப்பறி செய்வதுபோல் பலவகைகளில் மறைமுகமாகவும் நேர்முகமாகவும் வரிவசூல் செய்கிறார்கள் ஆட்சியாளர்கள். அதிலிருந்துதான் பெண்களுக்குக் குறிப்பிட்ட நகரப் பேருந்துகளில் கட்டணம் இல்லா பயணத்தை வழங்கிக் காட்சிகள் சோடிக்கிறார்கள். அது ஸ்டாலின் வீட்டுப் பணமா? பொன்முடி வீட்டுப் பணமா? நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களைவிடப் பல்லாயிரம் மடங்கு இலட்சம் மடங்கு அமைச்சர்கள் மக்களின் வரிப்பணத்தை அனுபவிக்கிறீர்கள். நீங்கள் இப்படிப் பேசலாமா?

மக்களில் ஊழல்வாதிகளை உருவாக்கும் உத்தி
---------------------------------------------------------------
அதிகாரத்தைப் பயன்படுத்தி நடத்தும் “ஊழல் வசூலில் புது நடைமுறையை உருவாக்கியவர் செயலலிதா. அதைக் கருணாநிதியும் அப்படியே பின்பற்றினார்.

கையூட்டுப் பணத்தை ரொக்கமாகக் கையில் வாங்காமல், அரசாங்கத்திற்கு மறைமுகவரி வசூல் நடப்பதைப் போல் ஆக்கினார் செயலலிதா!

எடுத்துக்காட்டாக, பத்து கோடி ரூபாய்க்கு ஒரு வேலை ஒப்பந்தக்காரர்களிடம் ஒப்படைக்கப்பட்டால், அதில் ஆளுங்கட்சியின் மாவட்டப் பொறுப்பாளர்கள், மாவட்ட அமைச்சர், குறிப்பிட்ட வேலைக்குரிய துறை அமைச்சர், முதலமைச்சர் - அதே போல் அதிகாரிகள் வரிசை என்று அனைவருக்கும் குறிப்பிட்ட விகித விழுக்காடு வெட்டுத் தொகையை அந்த ஒப்பந்தக்காரர் அதிகாரிகள் வழியாகக் கொடுத்து விட வேண்டும்.

மணல் அள்ளுதல், மண் அள்ளுதல் உட்பட எல்லா வேலைகளுக்கும் வெட்டுத்தொகை வசூல் உண்டு. தனிநபர்கள் சொந்தமாகக் கட்டிடம் கட்டினால் சதுரஅடிக்கு இவ்வளவு ரூபாய் என்று வரிசைக் கிரமப்படி வெட்டுத்தொகை கொடுக்க வேண்டும்.

அங்கன்வாடி ஆயா வேலையிலிருந்து உயர் அதிகாரிகள், துணைவேந்தர்கள் வரை எல்லாப் பணியமர்த்தலுக்கும் வரையறுக்கப்பட்ட கையூட்டுத் தொகை உண்டு.

முதல் முதலாக 1969-இல் முதலமைச்சாரான கலைஞர் கருணாநிதிக்கு இவ்வாறான மறைமுக ஊழல் வரிவசூல் முறை தெரியாமல் நேரடியாகத் தொகை வாங்கி அவரும் அவர் அமைச்சர்களும் ஊழல் வழக்குகளில் சிக்கிக் கொண்டார்கள். பின்னர் அவரும் செயலலிதா உருவாக்கிய அதே ஊழல் மாடலைக் கற்றுக் கொண்டார். அவர் மகன் ஸ்டாலினும் அதே மாடலைக் கடைபிடிக்கிறார்.

இவர்கள் தங்கள் ஊழலை இயல்பான ஒன்று போல் காட்டும் உளவியல் உத்திகளைக் கையாள்வார்கள். இலவச எருமைமாடு வழங்குவது போன்ற பல இலவசங்களை வழங்குவார்கள். சில இலவசங்கள் எல்லாருக்கும் கிடைக்காது. குறிப்பிட்ட எண்ணிக்கை என்று அளவு வைத்திருப்பார்கள் அவ்வாறான திட்டங்களை அமைச்சர், மாவட்டச் செயலாளர், ஒன்றியச் செயலாளர் போன்றோர் பரிந்துரைப்பவர்களுக்கே அதிகாரிகள் வழங்குவர். வாக்களிக்கக் கையூட்டுத் தரும் திட்டத்தையும் செயல்படுத்துகிறார்கள். அரசு வழங்கும் சில கட்டணமில்லாத் திட்டங்களைப் பெற ஆளுங்கட்சியினரின் தயவை மக்கள் நாடுகிறார்கள். வேறு பலவழிகளில் மக்களையும் ஊழல் பழக்கங்களுக்குப் பழக்கிவிடுகிறார்கள்.

இப்படிப்பட்ட மனநிலைக்கு உள்ளான மக்களிடம் - அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோரின் ஊழல் செயல்கள், நடக்கக்கூடாத அநீதியாக, ஒழுக்கக் கேடாக, மனப்பதைப்பையும் மனவெறுப்பையும் ஏற்படுத்தாது. “இதெல்லாம் சாதாரணமப்பா” என்ற மனநிலைக்கு வந்துவிடுகிறார்கள்.

இவ்வளவையும் நாம் சொல்வதற்குக் காரணம், நாம் இதையெல்லாம் கண்டுபிடித்துவிட்டோம் என்று பெருமைப்படுவதற்காக அல்ல. “நோய்நாடி, நோய் முதல்நாடியுள்ளாம்”. அது தேவை. ஆனால் அது போதாது. “அது தணிக்கும் வாய் நாட வேண்டும்”.

தமிழ்த்தேசிய இலட்சியத்தை ஏந்துவோர், மேற்கண்ட ஊழல் அரசியலுக்கு மாற்றாக, எதேச்சாதிகாரத்-தலைவர் அரசியலுக்கு மாற்றாக, இலட்சிய அரசியலை - ஊழலற்ற - சனநாயக அரசியலை வெகுமக்களிடையே வளர்க்கத் தங்களை அணியப்படுத்திக் கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட இலட்சிய அரசியலுக்கான முன்மாதிரி வடிவங்களாகத் தங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்; பண்படுத்திக் கொள்ள வேண்டும். அரசியல் என்றாலே தேர்தலில் போட்டியிடும் அரசியல்தான் என்று சுருக்கிக் கொள்ளக் கூடாது. அரசின் இயக்கம் பற்றிய திட்டங்கள் செயல்பாடுகள் அனைத்தும் அரசியலே! தமிழ்த்தேச இறையாண்மை மீட்பு என்பதும் அரசியலே! இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தைத் தாம் எழுதுவதற்கு மூன்று காரணங்களைக் கூறுகிறார். அவற்றுள் முதல் காரணம் “அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்” என்பதாகும். “அரசு நடத்துவதில் தவறு செய்தால், குற்றம் செய்தால் அவர்களை அறம் தண்டிக்கும்” என்பது இதன் பொருள்.

உரிமை அரசியல் – இலட்சிய அரசியல் – எங்கிருந்தோ வராது. நாம் அப்படிப்பட்ட அமைப்பை உருவாக்க வேண்டும். அதற்கான இயக்கம்தான் தமிழ்த்தேசியப் பேரியக்கம்!

இளம் ஆண்களும் பெண்களும் இவ்வாறான ஒழுக்கத்தை - நேர்மையை - சனநாயகத்தைத் தங்கள் வாழ்வியலாக்கிக் கொள்ள வேண்டும். வெகுமக்களில் எல்லோரையும் இவ்வாறு சரியான பண்புக்கு மாற்றிவிட வேண்டும் என்பது தேவைதான். அது இயலாமற் போகலாம். குறிப்பிட்ட அளவுக்கு வெகுமக்கள் இவ்வாறான நேர்மைக்காக - சனநாயத்திற்காக வெகுண்டெழுந்தால் ஊழல் மற்றும் எதேச்சாதிகார நோய்க்குத் தீர்வு கிடைக்கும். அக் குறிப்பிட்ட அளவு வெகு மக்களை அணியப்படுத்தும் களவடிவங்களாக, களச் செயல்பாட்டாளர்களாக இளையோர் முன்வர வேண்டும். அவர்களின் இயக்கமாகத் தமித்தேசியப் பேரியக்கம் ஆக வேண்டும். இவ்வழியில் இறையாண்மை இலட்சியத்திற்கும் வெற்றி கிடைக்கும்.

=================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
================================= 

Labels: ,


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்