<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d6955529389241309188\x26blogName\x3d%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86.%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://thozharmaniyarasan.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com/\x26vt\x3d-8408640130511538487', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

பாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது! தோழர் பெ. மணியரசன்

Sunday, April 22, 2018



பாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது!

                                                                                தோழர் பெ. மணியரசன்

தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தால் காணப்படும்.

என்றார் தமிழினப் பேராசான் திருவள்ளுவர். ஒருவர் வாழுங்காலத்தில் தகுதிகள் மிகுந்தவராக வாழ்ந்தாரா இல்லையா என்பது அவர் மறைவிற்குப் பின் எஞ்சி வாழும் அவரின் செயல்களால், கருத்து களால் அளக்கப்படும் என்றார். இக்குறளுக்கு ஒருவரின் பிள்ளைகளால் அவரின் தகுதி அறியப்படும் என்று பொருள் கூறுவாரும் உளர்.
அண்மையில் காலமான செயலலிதாவின் “தகுதியும் புகழும்” எத்தன்மையானவை என்பது அ.இ.அ.தி.மு.க. வினரின் இன்றையச் செயல்களால் அளக்கப்பட வேண்டும்.
செயலலிதாவுக்கே ஊழல் வழக்கில் 4 ஆண்டு சிறைத் தண்டனையும் 100 கோடி ரூபாய் தண்டத் தொகையும் உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. அவர் இறந்து விட்டதால் அவர் தண்டனை படிக்கப்பட வில்லை. காரணம் அத்தண்டனையை அனுபவிக்க ஆள் இல்லை என்பதால்!
கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்ட சசிகலா தரப்பு சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு ஒரு நபருக்கு மூன்று கோடி ரூபாயும் மூன்று கிலோ தங்கமும் கையூட்டாக வழங்கப்பட்டது என்கிறார்கள். சட்டப் பேரவை உறுப்பினர் ஒருவர் தனக்குப் பெண் பிள்ளை கள் இல்லாததால் மூன்று கிலோ தங்கம் வேண்டாம் அதற்கு ஈடாகப் பணம் கொடுத்து விடுங்கள் என்றாராம்!
நடிகர் சரத்குமாரை இழுக்க அவருக்கு ஏழு கோடி ரூபாய் தரப்பட்டதாம். அவர் வீட்டில் நடுவண் வருமானவரித்துறை சோதனை! நலத்துறை அமைச்சர் விசயபாஸ்கர் வீடுகளிலும் அவரின் உறவினர்கள் மற்றும் கையாட்களின் வீடுகளிலும் சோதனைகள். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அ.தி.மு.க.-வின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் உள் ளிட்ட அனைவரின் பணப் பதுக்கல் - ஊழல் அந்த ரங்கம் பலவற்றை வருவானவரி அதிகாரிகளிடம் விசய பாஸ்கர் உளறிக் கொட்டிவிட்டார் என்கிறார்கள்.
இரட்டை இலைச் சின்னத்தை மீட்க தில்லித் தரகர் ஒருவர்க்கு தினகரன் கையூட்டுக் கொடுத்ததை அத்தரகரே ஒப்புக்கொண்டுள்ளார். அவர் தளைப் படுத்தப்பட்டார். அடுத்த கைது தினகரன் என் கிறார்கள்.
புரட்சித்தலைவியின் வாரிசாக விளம்பரப்படுத்தப் பட்ட “சின்னம்மா” என்கிற சசிகலா ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு பெங்களூர்ச் சிறையில் உள்ளார்.
ஏற்கனவே, செயலலிதாவின் ஆட்சியின் தலைமைச் செயலாளராக இருந்த இராம மோகனராவ் வீடும் கோட்டை அலுவலகமும் சோதனை இடப்பட்டன.
இன்னும் இன்னும் எத்தனையோ ஊழல்கள், வெளிவரப்போகின்றன. புரட்சித் தலைவியின் போர்ப்படைத் தளபதிகள் பம்மிப் பதுங்கிக் கிடக் கிறார்கள்.
தக்க தலைமையின்றி, கூட்டுத் தலைமையுமின்றி சிதறிக்கிடக்கிறது அ.தி.மு.க.!
ஒற்றைச் சர்வாதிகாரத் தலைவியாய் தன்னை உருவாக்கிக் கொண்ட செயலலிதா - தந்திரங்களையும் சர்வாதிகாரத்தையும் மட்டுமே நம்பினார். இரண்டாம் நிலைத் தலைவர்கள், மூன்றாம், நான்காம் நிலைத் தலைவர்கள்கூட உருவாகாமல் தடுத்தார். செயலலிதா வீற்றிருக்கும் காரின் சக்கரத்தைப் பார்த்துக் கும்பிடும் கொத்தடிமைகளாக அவரின் அமைச்சர்கள் நடத்தப் பட்டார்கள். கொள்ளை விகிதம் போதும் என்று அமைச்சர்களும் அடங்கிக் கிடந்தார்கள்.
தமது ஆட்சியின் வழியாக அன்றாட நிர்வாக ஏற்பாடாகக் கிடைத்த ஊழல் பணத்தை மற்ற அமைச்சர்களுடன் அவரவர் தகுதிக்கேற்ப பகிர்ந்து கொண்டார். ஆனால் ஆட்சி மற்றும் கட்சியின் அதிகாரத்தைத் தகுதியான மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவில்லை. ஒற்றைச் சர்வாதிகாரியாக விளங்கி னார்.
அதனால், செயலலிதா மறைவுக்குப்பின் அந்தக் கட்சி, தலைமை இன்றி சின்னாபின்னமாய்க் கிடக் கிறது. அரசியலில் ஆனா, ஆவன்னா தொடர்பு கூட இல்லாத “தீபா” என்ற ஒரு பெண் - _ செயலலிதா வின் இரத்தத் தொடர்பு என்று கூறிக் கொண்டு தலைவி வேடம் போட்டுத் திரிகிறார். தீபாவின் கணவர் என்ற ஒரு நபர் தான்தான் தலைவர் என்று திரிகிறார். இந்த இருவரைச் சுற்றித் திரிய அ.தி.மு.க. முகவர்கள், தொண்டர்கள் பலர்.
“தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப்படும்”.
சசிகலாவின் குடும்ப உறுப்பினர் ஒருவர்கூட அ.தி.மு.க. பொறுப்பில் - ஆட்சிப் பொறுப்பில் இருக்கக் கூடாது, சசிகலா துதிபாடிகளாக இருந்தவர்களே இப்போது புது முடிவுக்கு வந்துள்ளார்கள். சீரழிவு மற்றும் குழப்பங்களுக்கிடையே இவ்வாறான மாற்றங்களும் நடக்கின்றன.
இந்தக் குழப்பங்களில் ஆதாயம் பெற - ஆக்கிமிப்பில் இறங்க பா.ச.க. பதுங்கி இருக்கிறது என்பது மட்டுமல்ல, குழப்பங்களை பா.ச.க.வே உருவாக்கும்.
நடுவண் வருமானவரித்துறையால் சோதனை இடப்படவுள்ள அமைச்சர்கள் மற்றும் அ.இ.அ.தி.மு.க.வின் முக்கியப் புள்ளிகளின் பட்டியலை நடுவண் அரசு கையில் வைத்துக் கொண்டு, அ.தி.மு.க.வினரை மிரட்டியதாகச் சொல்கிறார்கள். இது உண்மையாக இருக்கலாம். ஏனெனில், இதைச் சொல்பவர் ஆர்.எஸ்.எஸ். குருமூர்த்தி!
அடுத்து, மோடி அரசின் அமைச்சரவையில் அ.தி.மு.க.வும் சேர வேண்டுமென்ற கருத்து அ.தி.மு.க. வின் அணிகளில் ஒன்றிலிருந்து வருகிறது. இதுவும் பா.ச.க. திரைமறைவு வேலையை அம்பலப்படுத்தும் செய்திதான்!
தமிழினத்தைக் கருவறுக்கக் காத்துக் கிடக்கும் ஆரிய பா.ச.க., அண்ணா திமுக மந்தையை அப்படியே வளைத்துக் கொள்ள வலைவீசவில்லை! தடியைத் தூக்கி உள்ளது. அரசியல் ஒழுக்கம், ஆன்மிக ஒழுக்கம் இரண்டுமே இல்லாத ஆரிய மேலாதிக்கவாத பா.ச.க. வின் அதிகாரத்தின் முன் குலை நடுங்கிக் கிடக்கின் றனர் அம்மாவின் அடிமைகள்!
தமிழினத்தின் மானம் சந்தி சிரிக்கிறது. தமிழர்களை எவர் மதிப்பார்?
பா.ச.க. ஆக்கிரமிப்பைத் தடுப்பதற்காக அ.தி.மு.க. அணி ஒன்றை ஆதரிப்பதோ, தி.மு.க.வை ஆதரிப்பதோ தன்மானமற்ற, தற்சாற்பற்ற செயலாகும். காட்டிக் கொடுக்கும் கங்காணி அரசியலைக் காப்பதாகவே அமையும்.
ஒருவேளை அ.தி.மு.க. மந்தையை வளைத்துப் போட்டு, பா.ச.க. தமிழ்நாட்டு அரசியலில் தலை யெடுத்தால், அது தற்காலிக வீக்கமாகவே பா.ச.க.வுக்கு அமையும். எனவே இளைஞர்கள், தன்மானமுள்ள தமிழர்கள் பதற்றப்பட வேண்டாம்! தமிழ் மண் ஆரிய பா.ச.க.வை ஏற்காது!
கங்காணி அரசியல் நடத்தும் அ.தி.மு.க. - தி.மு.க. கட்சிகளின் சிதைவில் தான் தன்மானமுள்ள தற்சார்புள்ள தமிழர் உரிமை அரசியல் கிளர்ந்தெழும்! அதற்குச் சில ஆண்டுகள் தேவைப்படலாம்.
இந்துத்துவா அபாயத்தைத் தடுக்க தி.மு.க.வை ஆதரிப்போம் என்று இடதுசாரிகளும் இன்னபிற சின்ன தி.மு.க.க்களும் தோள்தட்டி நிற்கக்கூடும். அது பற்றிக் கவலைப்பட வேண்டாம். அவற்றிற்குத் தமிழர்களுக்குத் தேவைப்படும் தனித்த இலட்சியமோ, வேலைத்திட்டமோ கிடையாது. அவ்வப்போது அடையாள எதிர்வினை ஆற்றி, தங்கள் இருப்பைத் தக்க வைத்துக் கொள்ளவே பெரும்பாடு படுகின்றன. அவற்றால் மாற்று அரசியலை உருவாக்க முடியாது.
பா.ச.க. என்ற பாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது.
எதிர்ப்பு அரசியல் இலட்சிய அரசியல் ஆகிவிடாது. தி.மு.க., அ.தி.மு.க.-வின் சீரழிவு அரசியலில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். தி.மு.க., அ.தி.மு.க. பாணி வெற்றுவேட்டு அரசியலை அருவருக்கும் பண்பு வளர வேண்டும்.
தமிழ்த்தேசிய இலட்சியம், தமிழர் அறம் ஆகிய வற்றை அடித்தளமாக்கி, சரியான புதிய அரசியலை முன்னெடுத்தால் ஆரியவாத பா.ச.க. அரசியலைத் தமிழ்நாட்டில் ஓரங்கட்ட முடியும்.





Labels:

கர்நாடகத்தின் சட்ட விரோதச் செயல்களை ஊக்கப்படுத்துகிறது உச்ச நீதிமன்றம்! பெ. மணியரசன் அறிக்கை!

Monday, April 9, 2018

கர்நாடகத்தின் சட்ட விரோதச் செயல்களை ஊக்கப்படுத்துகிறது உச்ச நீதிமன்றம்!

காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை!

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட ஆயம், நேற்று (09.04.2018) காவிரி வழக்கில் கூறிய முடிவுகள் நீதித்துறையின் மாண்புக்கு இழுக்கு உண்டாக்குவதாக உள்ளன.

கடந்த 16.02.2018 அன்று தீபக் மிஸ்ரா ஆயம் வழங்கிய காவிரித் தீர்ப்பில் கர்நாடகம் மாதவாரியாகத் தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய தண்ணீரைக் கர்நாடக அணைகளில் திறந்துவிட்டு மூடும் அதிகாரம் கொண்ட காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென்று கூறாமல், “ஒரு செயல்திட்டத்தை” அமைக்க வேண்டுமென்று கூறியது. அச்செயல்திட்டத்தை தீர்ப்பு வழங்கிய நாளிலிருந்து ஆறு வாரங்களுக்குள் அதாவது 29.03.2018க்குள் நிறுவ வேண்டுமென்று கூறியிருந்தது.

ஆனால் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு, அந்த “ஒரு செயல்திட்டத்தை”யும் அமைக்காமல் “செயல்திட்டம்” (Scheme) என்பதற்கு விளக்கம் கேட்டும், அதை அமைப்பதற்கு மேலும் 3 மாதம் கால நீட்டிப்பு கேட்டும் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை 31.03.2018 அன்று தாக்கல் செய்தது. உச்ச நீதிமன்றம் விதித்த கெடுவுக்குள் நடுவண் அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை என்று கூறி, அதன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்யுமாறு தமிழ்நாடு அரசு மனு போட்டது.

இவற்றையெல்லாம் ஒன்றாக்கி நேற்று (09.04.2018) தீபக் மிஸ்ரா ஆயம் விசாரணை நடத்தியது. தான் விதித்த காலக்கெடுவுக்குள் “செயல்திட்டம்” ஒன்றை ஏன் அமைக்கவில்லை என்று கேள்வி கேட்ட உச்ச நீதிமன்றம், இந்திய அரசின் இச்செயல் தனக்கு வியப்பளிப்பதாகக் கூறியது. ஆனால் அதற்காக இந்திய அரசைக் கண்டிக்கவில்லை. ஆனால், நடுவணரசு கேட்ட கால நீட்டிப்பை மறைமுகமாக அதே தீபக் மிஸ்ரா ஆயம் வழங்கியுள்ளது.

அதாவது, 2018 மே 3ஆம் நாளுக்குள் காவிரி செயல்திட்டம் பற்றிய வரைவை உச்ச நீதிமன்றத்தில் நடுவணரசு தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அந்த வரைவை உச்ச நீதிமன்றம் பரிசீலனை செய்து தகுந்த ஆணையிடும் என்றும் கூறியுள்ளது. இதன் பொருள், மே 3ஆம் நாள் – செயல்திட்டம் குறித்த வரைவை இந்திய அரசு அளித்தாலும், அன்றே அதன் மீது தீர்ப்பு வராது! அதை உச்ச நீதிமன்றம் பரிசீலித்து முடிவெடுக்க பிறகொரு நாளில் வாய்தா போடும் என்பது உறுதியாகிறது. அதாவது, மே 12இல் நடைபெற வேண்டிய கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் அதற்குள் முடிந்து விடும்! எவ்வளவு தந்திரமான தீர்ப்பு இது !

அடுத்து, தங்களது 16.02.2018 தீர்ப்பில், “காவிரி மேலாண்மை வாரியம்” என்ற சொற்றொடரை பயன்படுத்தவில்லை என்று நேற்றைய (09.04.2018) விசாரணையில் தீபக் மிஸ்ரா கூறினார்.

அடுத்து, மிக முக்கியமான ஒரு கருத்தை தீபக் மிஸ்ரா மேற்படி விசாரணையின் போது கூறினார். 2007இல் வழங்கப்பட்ட காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு பற்றி நடுவணரசு கவலைப்பட வேண்டியதில்லை, அந்தத் தீர்ப்பு உச்ச நீதிமன்றத் தீர்ப்போடு பிணைக்கப்பட்டு விட்டது என்றார். 16.02.2018 தீர்ப்பில், தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய தண்ணீரின் அளவைக் குறைத்ததைத் தவிர, காவிரி தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பில் நாங்கள் கைவைக்கவில்லை என்று கூறிய தீபக் மிஸ்ரா ஆயம், காவிரி மேலாண்மை வாரியம் என்பதை நாங்கள் கூறவே இல்லை என்று கூறுகிறது. காவிரித் தீர்ப்பாயத்தின் அதிகாரம், அதன் கட்டமைப்பு அனைத்தையும் தீர்ப்பாயம் துல்லியமாக வரையறுத்துள்ளது.

அதாவது தீர்பாயத்தின் தீர்ப்பை தீபக் மிஸ்ரா ஆயம் விழுங்கிவிட்டது என்பதை மறைமுகமாகக் குறிக்கத்தான், அத்தீர்ப்பு உச்ச நீதிமன்றத் தீர்ப்புடன் பிணைக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்களோ?

தமிழ்நாடு அரசு, நடுவணரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் கதி என்ன? ஏன் அதைப் பற்றி ஒரு வார்த்தையும் இல்லை?

கர்நாடக அரசின் சட்டவிரோதச் செயல்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பும் விசாரணையும் அமைந்துள்ளன. இந்த விசாரணை (09.04.2018) மேலும் கால நீட்டிப்பு வழங்கியதுடன், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டியதில்லை, “ஏதோவொரு செயல்திட்டம்” இந்திய அரசு அமைத்தால் போதும் என்று நேற்று (09.04.2018) கூறியதால் உற்சாகமடைந்த கர்நாடகத் தரப்பினர் 12.04.2018 அன்று நடத்தவிருந்த கர்நாடக முழு அடைப்பைக்  கைவிட்டனர். உச்ச நீதிமன்றம் கர்நாடகத்துக்குச் சாதகமாகத்தான் இருக்கிறது என்பதை ஒளிவு மறைவின்றி கர்நாடகத் தரப்பு வழக்கறிஞர் மோகன் காதர்க்கி 09.04.2018 அன்று கூறியுள்ளார்.

நீதிமன்றக் கட்டளையை செயல்படுத்த மறுத்த நடுவண் அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போட வேண்டும் என்று கேட்டுக் கொண்ட தமிழ்நாடு அரசின் மனுவை உச்ச நீதிமன்றம் கண்டுகொள்ளாமல் ஒதுக்கித் தள்ளிவிட்டது!

இவ்வளவு பாதகங்கள் இருந்தும், உச்ச நீதிமன்றத்தின் இந்த விசாரணை முடிவுகள் தமிழ்நாடு அரசுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று உச்ச நீதிமன்ற வளாகத்தில் தமிழ்நாடு சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் கூறியது இனத்துரோகச் செயலாகும்!

மே மாதம் 3-க்குப் பிறகும் கர்நாடக அணைகளைத் திறந்து மூடும் அதிகாரம் படைத்த “ஒரு செயல் திட்டத்தை” இந்திய அரசு உருவாக்காது என்பது வெள்ளிடைமலை!

இந்திய அரசமைப்புச் சட்டம், எல்சிங்கி பன்னாட்டு விதிகள், தீர்ப்பாயத் தீர்ப்பு, உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஆகியவற்றை செயல்படுத்த மறுக்கும் இந்திய அரசுக்கு எதிராக முழுமையான ஒத்துழையாமை இயக்கத்தை தமிழர்கள் கடைபிடிக்க வேண்டும். இந்திய அரசு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் இயங்காமல் முடக்க வேண்டும். இப்பொழுது எழுந்துள்ள தமிழர்களின் அறச்சீற்றம் சரியான திசை நோக்கி ஒருங்கிணைய வேண்டும்.

இந்தியாவில் தமிழர்கள் உரிமைப் பறிக்கப்பட்ட இனமாக – ஓர் ஒதுக்கப்பட்ட இனமாக (Apartheid) வைக்கப்பட்டுள்ளோம் என்ற உண்மையை உணர்ந்து, தமிழ்த்தேசிய உரிமைக்கு தமிழர்கள் கிளர்ந்தெழ வேண்டும்!

காவிரி வழக்கில், உச்ச நீதிமன்றம் நடுநிலை தவறியதுடன், இவ்வழக்கிற்கு இந்திய அரசமைப்புச் சட்ட விதிகளுக்கு எதிரான - பாதகமான முடிவுகளையும் 16.02.2018 தீர்ப்பில் வழங்கியுள்ளது. இதனால் அத்தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும். இவ்வழக்கிற்கு ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசமைப்புச் சட்ட ஆயம் நிறுவ வேண்டுமென்ற இலக்கினை வரையறுத்துக் கொண்டு, இடைக்காலமாக தீர்ப்பாயம் கூறியுள்ள கட்டமைப்புடன் காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்து ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் மேலும் ஆவேசத்துடன் போராட வேண்டும் என்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

Labels:

சூரப்பாவையும் பன்வாரிலாலையும் திரும்பப் பெற வேண்டும்! பெ. மணியரசன் அறிக்கை!





சூரப்பாவையும் பன்வாரிலாலையும்
திரும்பப் பெற வேண்டும்!


தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்

தோழர் பெ. மணியரசன் அறிக்கை!


தமிழ்நாடு அரசின் உயர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கன்னடரான எம்.கே. சூரப்பா என்பவரை துணைவேந்தராக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் 05.04.2018 அன்று அமர்த்திய செயல், இந்தியாவில் மட்டுமல்ல தமிழ்நாட்டிலும் தமிழர்களுக்கு உரிமை இல்லை என்ற பா.ச.க.வின் ஆரியத்துவா கருத்தை நிலைநாட்டுவதாகவே உள்ளது.
ஏற்கெனவே தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக் கழகத்திற்கு ஆந்திராவைச் சேர்ந்த சூரிய நாராயண சாஸ்திரி என்பவரை 22.03.2018 அன்று துணை வேந்தராக பன்வாரிலால் அமர்த்தினார். அதற்கு முன், தமிழ்நாடு இசைப் பல்கலைக் கழகத்திற்கு கேரளாவைச் சேர்ந்த பிரமிளா என்பவரை துணை வேந்தராக்கினார், பன்வாரிலால்! பணியமர்த்தப்பட்ட எல்லோருக்கும் உள்ள “கூடுதல்” தகுதி, இவர்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ். - ஆரியத்துவ ஆதரவாளர்கள் என்பதே!
தமிழ்நாட்டில் உள்ள 10 அரசுப் பொறியியல் கல்லூரிகள், 17 பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், 3 அரசு உதவி பெறும் கல்லூரிகள், 554 தனியார் பொறியியல் கல்லூரிகள் ஆகியவை அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்குகின்றன. இந்தப் பல்கலைக்கழகத்திற்குத் தகுதியான கல்வியாளர் தமிழினத்தில் கிடைக்கவில்லையா? தகுதியான கல்வியாளர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால், தமிழர்களுக்கு அந்த உரிமை மற்றும் அதிகாரம் கிடைத்துவிடக் கூடாது என்ற உள்நோக்கத்தோடு, அயல் இனத்தாரை தொடர்ந்து துணை வேந்தர்களாக பா.ச.க. ஆட்சி அமர்த்துகிறது.
துணை வேந்தராக வெளி மாநிலத்தவரை பணியமர்த்தினால், அதன் வழியாக பல்கலைக் கழகத்திலும், அதன் உறுப்புக் கல்லூரிகளிலும் பேராசிரியர்கள், விரிவுரையாளகள், அலுவலகப் பணியாளர்கள் தொடங்கி மாணவர்கள் வரை - வெளி மாநிலத்தவரைச் சேர்க்கும் அபாயம் இருக்கிறது என்பதையும் தமிழர்கள் உணர வேண்டும்.
இந்த அதிகாரப் பறிப்புக்கு – உரிமைப் பறிப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்க முதலமைச்சர் எடப்பாடி அரசுக்கு அக்கறையும் இல்லை; ஆற்றலும் இல்லை! இந்தியாவில் தமிழ்நாடு – இன அடிப்படையில் ஒதுக்கப்பட்ட - உரிமைப் பறிக்கப்பட்ட (Apartheid) மாநிலமாக வைக்கப்பட்டுள்ளது என்ற உண்மையை தமிழ்த்தேசியப் பேரியக்கம் தொடர்ந்து கூறி வருகிறது.
இக்கூற்றுக்கு இன்னொரு சாட்சியமாகத்தான் எம்.கே. சூரப்பா என்ற கன்னடரை பா.ச.க. ஆளுநர் பன்வாரிலால், அண்ணா பல்கலைக் கழகத்துக்கு துணை வேந்தர் ஆக்கியிருக்கிறார்.
தமிழ்நாட்டு பொறியியல் அறிஞர்களிடம், பேராசிரியர்களிடம் இல்லாத திறமைகள், கல்விப் புலமைகள், சூரப்பாவிடம் இருக்கின்றனவா? இல்லை! ஏற்கெனவே பணியாற்றிய இடங்களில் அலுவலகத்திற்கு முறையாக வராதவர் என கண்டிக்கப்பட்டவர் இவர். பஞ்சாப் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்திற்குப் புதிய கட்டடங்கள் கட்ட நிதி ஒதுக்கியபோது, ஐந்து ஆண்டுகளாக அதைக் கிடப்பில் போட்டதன் காரணமாக கட்டுமானச் செலவு பல மடங்கு அதிகரிக்க இவரே காரணம் என இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளரால் குற்றம்சாட்டப்பட்டவர் சூரப்பா!
தமிழ்நாட்டின் காவிரி உரிமையை மறுத்து கன்னட இனவெறியோடு செயல்படும் கர்நாடகத்திற்கு பரிசளிப்பதுபோல், தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் எம்.கே. சூரப்பாவை தமிழ்நாட்டில் துணை வேந்தர் ஆக்கியிருக்கிறார் பன்வாரிலால்!
சூரப்பாவை துணை வேந்தர் பணியிலிருந்து விடுவித்து திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டுமென்றும், பல்வேறு கண்டனங்களுக்கு அன்றாடம் உள்ளாகிவரும் தமிழ்நாட்டு ஆளுநர் பன்வாரிலாலைத் திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டுமென்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் இந்திய அரசைக் கேட்டுக் கொள்கிறேன். இக்கோரிக்கை நிறைவேறும் வகையில், தமிழர்கள் தன்மான அடிப்படையில் தாயக உரிமை காக்கும் முறையில் சனநாயகப் போராட்டங்களை நடத்த வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

Labels:

காவிரி உரிமைப் பறிக்கும் இந்திய அரசுக்கு எதிராக தமிழர் ஒத்துழையாமை இயக்கம்! முதல் கட்டமாக நெய்வேலி முற்றுகைப்போர். பெ.மணியரசன்.

Monday, April 2, 2018







காவிரி உரிமைப் பறிக்கும் இந்திய அரசுக்கு எதிராக தமிழர் ஒத்துழையாமை இயக்கம்!
முதல் கட்டமாக நெய்வேலி
முற்றுகைப்போர் !

காவிரி உரிமை மீட்புக் குழு போராட்ட அறிவிப்பு!


காவிரி உரிமை மீட்புக் குழுவின் விரிவடைந்த கலந்துரையாடல் கூட்டம்ஒருங்கிணைப்பாளர் ஐயா பெமணியரசன் தலைமையில் இன்று (02.04.2018) சென்னை சேப்பாக்கம் நிருபர்கள் சங்கத்தில் நடைபெற்றது.

நாம் தமிழர் கட்சி தலைவர் திருசீமான்தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் திருதிவேல்முருகன்மனித நேய சனநாயக கட்சி தலைவர் திருதமிமுன்அன்சாரிகொங்கு இளைஞர் பேரவை தலைவர் திருதனியரசுஎஸ்.டி.பி.தலைவர் திருதெகலான் பாகவிதமிழர் நலம் பேரியக்கம் தலைவர் இயக்குனர்முகளஞ்சியம்தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கிவெங்கட்ராமன்தமிழர் தேசிய முன்னணி பொதுச்செயலாளர் திருசிமுருகேசன்தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் தியாகுஆதித்தமிழர் விடுதலை இயக்கத் தலைவர் தோழர் வினோத்தமிழ்த்தேசமக்கள் கட்சி தலைவர் தோழர் தமிழ்நேயன்இளந்தமிழகம் இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் இராசன் காந்திதமிழக மக்கள் சனநாயகக் கட்சிபொதுச்செயலாளர் தோழர் வெற்றிச்செல்வன்தமிழர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் செயப்பிரகாச நாராயணன்இந்திய சனநாயக கட்சி பொதுசெயலாளர் திருசெயசீலன்தன்னாட்சித் தமிழகம் திருஆழி செந்தில்நாதன்விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி தலைமை நிலையச் செயலாளர் தோழர்வினோத்குமார்மே பதினேழு ஒருங்கிணைப்பாளர் தோழர் அருள்முருகன்பச்சைத் தமிழகம் செய்தித் தொடர்பாளர் தோழர் யாஅருள்தாஸ் உள்ளிட்டஅரசியல் அமைப்புப் பொறுப்பாளர்களும்தமிழக விவசாயிகள் சங்கத் தஞ்சை மாவட்டத் தலைவர் திருமணிமொழியன்காவிரி விவசாயிகள் பாதுகாப்புசங்கத் தலைவர் திருகாவிரி தனபாலன்சமவெளி விவசாயிகள் சங்க தலைவர் திருபழனிராசன்நெடுவாசல் போராட்டக் குழு தோழர் நெடுவைதிருமுருகன்தாளாண்மை உழவர் இயக்க ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் திருநாவுக்கரசு.வி.திருச்சி மாவட்டத் தலைவர் திரு.பாசின்னத்துரைஉள்ளிட்ட பல்வேறு உழவர் அமைப்புப் பொறுப்பாளர்களும்
இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

காவிரிச் சிக்கலில் தொடர்ந்து தமிழின விரோதத்துடன் செயல்பட்டு வரும் இந்திய அரசுக்கு எதிராக தமிழர் ஒத்துழையாமை இயக்கம் நடத்துவதெனஇக்கூட்டத்தில்ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டதுஇதன் முதல் கட்டமாகதமிழ்நாட்டின் கனிம வளமான நெய்வேலி நிலக்கரியை சுரண்டிக் கொண்டுள்ளஇந்திய அரசைத் தடுக்கும் வகையிலும்காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்து வஞ்சகத்துடன் செயல்பட்டு வரும் இந்திய அரசைக் கண்டிக்கும்வகையிலும் வரும் 10.04.2018 - செவ்வாய் அன்று நெய்வேலி நிலக்கரி நிலையத்தை அனைத்து இயக்கங்களும்அமைப்புகளும் ஒன்றிணைந்துமுற்றுகையிடுவதென முடிவெடுக்கப்பட்டது.

அடுத்தகட்டமாகஇந்திய அரசு அலுவலகங்களை செயல்பட விடாமல் தடுப்பதுதமிழ்நாட்டுக்கு வரும் இந்திய அமைச்சர்களுக்கு கருப்புக் கொடி காட்டுவதுஇந்திய அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளைப் புறக்கணிப்பது என பல்வேறு வடிவங்களில் தமிழர் ஒத்துழையாமை இயக்கத்தை விரிந்த தளத்தில்நடத்தவும் முடிவு மேற்கொள்ளப்பட்டது.

மேலும்காவிரி உரிமைக்காக தமிழ்நாட்டில் பல்வேறு கட்சிகளும்உழவர் அமைப்புகளும்வணிகர்களும் நடத்தி வரும் போராட்டங்களுக்கு முழுமனதாகஆதரவு தெரிவிப்பதுடன் அவற்றில் ஆங்காங்கே பங்கேற்கவும் தோழமை அமைப்பினருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது!

தமிழினமேகாவிரி உரிமைக்காக அணிதிரள்க!












Labels:


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்