<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d6955529389241309188\x26blogName\x3d%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86.%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://thozharmaniyarasan.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com/\x26vt\x3d-8408640130511538487', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

பெ. மணியரசன் 75 பெருவிழா! ”தமிழ் எங்கள் இளமைக்குப் பால்!” ---- ஐயா பெ. மணியரசன், தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

Wednesday, May 31, 2023


 பெ. மணியரசன் 75 பெருவிழா!

”தமிழ் எங்கள் இளமைக்குப் பால்!”
===============================
ஐயா பெ. மணியரசன்,
தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
===============================

    
எனது அகவை மூப்பு விழாவை ”பெ. மணியரசன் - 75 பெருவிழா” என்ற தலைப்பில் தி.பி. 2054 வைகாசி 28 – 11.6.2023 ஞாயிறு அன்று முழுநாள் விழாவாக திருச்சி திருவெறும்பூரில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் நடத்தியது.

திருவெறும்பூர் கூத்தைப்பார் சாலை, தாஸ் திருமண மண்டபத்தில் காலையில் நடந்த அரங்கக் கூட்டத்திலும், மாலையில் திருவெறும்பூர் திறந்தவெளியில் நடந்த பொதுக் கூட்டத்திலும் பங்கேற்று என்னை வாழ்த்திய சிறுவர் முதல் பெரியவர் வரையிலான அனைத்துப் பேருள்ளங்களுக்கும் நெஞ்சு நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தனிப்பட்ட என்னைப் பாராட்ட – வாழ்த்த வந்தவர்கள் என்று இப்பெருங் கூட்டத்தினரை நான் கருதவில்லை. தமிழ் மொழி காக்க, தமிழ் இனம் காக்க, தமிழர் தாயகம் காக்க, மனித உரிமையும் மக்கள் நாயகமும் காக்க, தமிழீழத் துயர் நீக்க, இலட்சியச் சுடரேந்திப் போராடும் இயக்கத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ளவன் என்ற முறையில்தான் இவ்வளவு பெருமக்களும் நேரில் வந்து என்னை வாழ்த்தினார்கள்; தொலைபேசி வழியே வாழ்த்தினார்கள்; அறிக்கைகள் வழியே வாழ்த்தினார்கள். தஞ்சை வீட்டிலும், சென்னைத் தலைமை அலுவலகத்திலும் வந்து வாழ்த்தினார்கள்!

அத்தனை பேர்க்கும் நான் செலுத்தும் நன்றி என்பது, என் உடல் இயங்கும் வரை மேற்சொன்ன இலட்சியங்களுக்காக உழைப்பேன் என்ற உறுதிமொழிதான்! நீங்களும் இதைத்தான் ஏற்பீர்கள்!

இப்படி ஒரு விழாவை 75-ஆம் அகவை பவளவிழாவை நடத்தித் தமிழ்த்தேசியப் பேரியக்கத்திற்கு நிதி திரட்டலாமா என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன் சிந்தித்தோம். ஏற்கெனவே சி.பி.எம். தலைவர் தோழர் பி. இராமமூர்த்தி அவர்களுக்கும், சி.பி.ஐ. தலைவர் ஐயா இரா. நல்லகண்ணு அவர்களுக்கும் இவ்வாறான விழாக்களை அந்தந்தக் கட்சியும் எடுத்து நடத்தியது. அத் தலைவர்களும் தங்களுக்கு அளிக்கப்பட்ட நிதியைக் கட்சி வளர்ச்சிக்குக் கொடுத்தார்கள்.

பின்னர் எனக்கான விழாவை கொரோனாத் தொற்றுக் காலம் என்பதால் தள்ளி வைத்தோம். அதன்பிறகு அடுத்த ஆண்டுகளில் அவ்விழாவை நடத்துவதில் எனக்கு விரும்பம் இல்லாமல் போய்விட்டது. அதுவும் ஓர் ஆடம்பரம் ஆகிவிடுமோ என்ற தயக்கம் என் உள்மனத்தில் உருத்தியது.

இதற்கிடையே என் மகன் ம. செந்தமிழன் இவ்வாறான விழாவையும், என் தன் வரலாற்று நூல் வெளியீட்டையும் தங்களது செம்மை வாழ்வியல் நடுவம் அமைப்பின் சார்பில் நடத்த விரும்பினார். என் வரலாற்றுச் செய்திகள் தொகுக்க ஒரு குழுவையும் அமர்த்தி விட்டார். அதிலும் என்னால் ஒத்துழைக்க முடியவில்லை. நாம் தமிழர் கட்சித் தலைவர் செந்தமிழன் சீமான் அவர்கள் இவ்வாறான விழா நடத்த முன்வந்தார். அந்த அமைப்பின் பொறுப்பாளர்கள் இவ்விழாவிற்கு ஒப்புதல் தர என்னை வலியுறுத்தினார்கள். பொதுவாக இவ்விழா நடத்துவதில் எனக்கு ஆர்வம் இல்லை.

இவற்றிற்கெல்லாம் இடையே தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுத் தோழர்கள் கொரோனா முடிந்த உடனே இவ்விழாவை நடத்த வலியுறுத்தினார்கள். குறிப்பாக தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செய்லாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அவர்கள் இவ்விழாவை நடத்த வேண்டும் என்று உறுதியாகவும் பிடிவாதமாகவும் இருந்தார்.

இறுதியில் நானும் ஏற்றுக் கொண்டு, இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டது. எனது பிறந்தநாள் 10.5.1947. இதன்படி எனக்கு இப்போது 77 அகவை நடந்து கொண்டுள்ளது. இப்படித்தான் பி. இராமமூர்த்தி அவர்கட்கு 60ஐக் கடந்து மணிவிழா நடந்தது. எனது பவளவிழா 75ஐக் கடந்து 77-இல் நடந்துள்ளது.

தோழர் கி. வெங்கட்ராமன் அவர்களின் திட்டமிடலில், தோழர்கள் உற்சாகத்துடன் உழைத்ததில் இப்பெருவிழா சிறப்பாக நடந்தேறியுள்ளது; அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

இப்பெருவிழாவின் திறப்புரையை என் மகனும், செம்மை வாழ்வியல் அமைப்பின் ஆசானுமான ம. செந்தமிழன் வழங்கினார். அதன்பின், ஓவியர் கு. புகழேந்தி வாழ்த்துரை வழங்கி எனக்கு சால்வை அணிவித்தார்.

இந்த விழாவின் நிலைத்த ஆவணமாக என் இயக்க வாழ்வு – போராட்டங்கள் பற்றிய ஆவணத் திரைப்படமும், புகைப்படத் தொகுப்புகளும் அமைந்துள்ளன. இவற்றைத் தேடித் தொகுப்பதில் பெருமுயற்சி எடுத்தவர் துணைப் பொதுச் செயலாளர் தோழர் க. அருணபாரதி! ”பன்முகப் போராளி பெ. மணியரசன்” என்ற ஆவணத் திரைப்படத்தை தோழர் அருணபாரதி எழுதி இயக்கியிருந்தார். அப்படம் அரங்க நிகழ்வில் திரையிடப்பட்டது. சிதம்பரம் மாணவர் ச. கவின் படத்தொகுப்பு மற்றும் ஒலிக் கோவையில் சிறப்பாகப் பங்காற்றியுள்ளார். பாவலர் நா. இராசாரகுநாதன் நிகழ்ச்சி விளக்கப் பின்னணிக் குரல் கொடுத்துள்ளார். பொறியாளர் ச. முத்துக்குமாரசாமி எழுச்சியாக முன்னோட்டப் பாடல் பாடியுள்ளார். ஒளிப்படக் கலைஞர் இராபின் மற்றும் அவரது உதவியாளர் ஜானகிராமன் ஆகியோர், பல சிறப்புக் காட்சிகளை திறம்பட ஒளிப்பதிவு செய்து வழங்கியுள்ளனர்.

இந்த ஆவணப்படத்தில், ஆச்சாம்பட்டியில் 60 ஆண்டுகளுக்கு முன் என்னோடு பழகியவர்கள் 1966-இல் திமுக கிளை தொடங்கிய போது சேர்ந்து செயல்பட்ட திருவாளர் ஆ. கருப்பையன் போன்றவர்கள் – பின்னர் மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சி (சிபிஎம்)யில் என்னுடன் செயல்பட்ட ஆ. முனியையா, கா. சண்முகம் போன்றவர்களிடம் நேர்காணல் எடுத்துள்ளார் அருணபாரதி!

மாணவர் பருவத்திலிருந்து இக் காலம்வரை உள்ள எனது புகைப்படங்களை – என்னுடன் இருந்தோர் புகைப்படங்களைத் தொகுத்துள்ளார் அருணபாரதி. இப்புகைப்படங்களை என் துணைவியார் ம. இலட்சுமி, தொலை நோக்கோடு பாதுகாத்து வைத்துள்ளார். இவற்றையெல்லம் அன்புத் தோழர் கோவேந்தன் அவர் இணையர் - என் அன்பு மகள் போன்ற ஜன்னா (எ) புதுமொழி ஆகியோர் கணிப்பொறியில் பதிவேற்றி வைத்திருந்தனர். இவ்விருவரும் இளம் அகவையில் அடுத்தடுத்து நோய்தாக்கி இயற்கை எய்தியது பெருந்துயரம்! இவர்கள் பதிவேற்றியவை இப்போது தோழர் அருணபாரதிக்குப் பயன்பட்டன.

பாவலர், ஓவியர் கவிபாஸ்கர் அவர்கள், புகைப்படக் கண்காட்சி அரங்கத்தை சிறப்புற வடிவமைத்திருந்தார். நிகழ்வுகளின் தொடக்கமாகப் பேரியக்கக் கொடியைத் தோழர் கி. வெங்கட்ராமன் ஏற்றி வைத்தவுடன், இந்த ஒளிப்படக் கண்காட்சி அரங்கத்தை தோழர் அ. மன்னர்மன்னன் திறந்து வைத்தார். திருக்காட்டுப்பள்ளியில் 1968 - 69இல் உலகத் தமிழ்க் கழகம் தொடங்கியதிலிருந்து என் இணைபிரியாத் தோழர் அ. மன்னர்மன்னன்.

இவ்விழாவை ஒட்டி ஆவணப்படுத்திய இன்னொரு முயற்சி, எனது தன்வரலாற்று நூலின் முதற்பகுதி வெளியிட்டதாகும். மாதக்கணக்கில் நேரமெடுத்து எழுத வேண்டிய நூல் இது! ஆனால் கடைசிக் கட்டத்தில் பத்து நாட்களில் எழுத வேண்டிய நெருக்கடிக்கு என்னை நானே உட்படுத்திக் கொண்டேன். முன்கூட்டியே கொஞ்சம் கொஞ்சமாக எழுதியிருந்தால் இந்தச் சுமையும் துன்பமும் இருந்திருக்காது. ”எங்கிருந்து.. இங்கு!” என்ற தலைப்புக் கொண்ட என் தன் வரலாற்றுக் குறிப்புகள் இவ்விழாவில் வெளியிட அணியமானது பெருவியப்பு!

ஏற்கெனவே ஐயா கீழடிவாணன், தோழர் அருணபாரதி ஆகியோர் கொஞ்சம் தட்டச்சு செய்திருந்தார்கள். கடைசி நெருக்கடியில் பெரும் பகுதியைத் தட்டச்சு செய்தவர் என் மருமகள் காந்திமதி செந்தமிழன்! திருத்தம் போடுவது உட்பட கடும் உழைப்பு!

அங்கங்கே தேவையான படங்களை இணைத்து முழுநூலையும் வடிவமைத்தவர் தோழர் அருணபாரதி. அட்டை வடிவமைப்பு தோழர் கவிபாஸ்கர்! அட்டையுடன் மொத்தம் 276 பக்கம் இந்த நூலை இரண்டு நாளில் அச்சிட்டுக் கொடுத்தவர் சென்னை ஜோதி அச்சக உரிமையாளர் அன்பு நண்பர் கணேசமூர்த்தி!

கணேசமூர்த்தி அவர்கள் தம் துணைவியாருடன் விழாவுக்கு வந்து என்னை வாழ்த்தினார்கள்!

இந்நூலை விழாவில் வெளியிட்டு சிறப்பாக உரையாற்றினார் முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன் அவர்கள்! அவருடன் மாணவர் பருவத்திலிருந்து மாறாத் தோழமை! தமிழக வாழ்வுரிமைக்கட்சித் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான திரு. தி. வேல்முருகன், மனித நேய சனநாயகக் கட்சித் தலைவர் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. தமிமுன் அன்சாரி, அறிவியலாளர் தோழர் த.வே. நடராசன், திருச்சி பொறியாளர் திரு. துரை இரவி, பொறியாளர் இரா.பே. இராசப்பா ஆகியோர் நூலின் முதல் படிகளைப் பெற்றுக் கொண்டு உரையாற்றினர்.

திரு. வேல்முருகன் அவர்கள் உரையாற்றும்போது ”மணியரசன் அவர்களும் அவர் கட்சியும் தேர்தலில் பங்கேற்பதில்லை என்றாலும், தனித் தன்மையுள்ள தமிழ்த்தேசியத் தேர்தல் கூட்டணி ஒன்றை உருவாக்க முயன்று என்னுடனும், சீமான் உள்ளிட்ட மற்றவர்களுடனும் பேசினார். ஆனால் கடைசியில் அது உருவாகவில்லை” என்றார். இவ்வுரையைக் கேட்ட ஒரு நண்பர் ‘தேர்தலில் பங்கெடுக்காத நீங்கள் மற்றவர்கள் தேர்தல் கூட்டணி அமைக்க முயலலாமா’ என்று கேட்டார். தேர்தலில் பங்கெடுக்காத விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டணி என்ற பெயரில் தேர்தல் கூட்டணி அமைத்து வழிகாட்டினார். விடுதலைப் புலிகளுக்கு வலிமையும் மக்கள் செல்வாக்கும் இருந்ததால் அத்திட்டம் செயல்பட்டது. தமிழ்த்தேசியப் பேரிக்கத்திற்கு போதிய மக்கள் செல்வாக்கு இல்லாததால் அது செயல்படாமல் போயிற்று! மற்றபடி அவ்வாறான முயற்சி தவறானதன்று என்றேன்.

தோழர் தமிமுன் அன்சாரி அவர்கள் கூட்டாகச் சேர்ந்து நடத்திய போராட்டங்களை நினைவு கூர்ந்தார். அறிவியலாளர் த.வே நடராசன் அவர்கள், ‘இனத்திற்குள்தான் வர்க்கம் வருகிறது. இனம் இறையாண்மை பெறுவதுதான் அடிப்படைத் தேவை’ என்றார். இவ்வாறாக அவ்வரங்கம் நல்ல கருத்துப் பரிமாற்றக் களமாக அமைந்தது.

முதுபெரும் புலவர் புதுக்கோட்டை துரை. மதிவாணன் ஐயா, காவிரி உரிமை மீட்புக்குழு பொருளாளர் ஐயா த. மணிமொழியன், மக்கள் மருத்துவர் இல.ரா. பாரதிச்செல்வன், தமிழுரிமைக் கூட்டமைப்புத் தலைவர் புலவர் இரத்தினவேலவன், பேரப்பிள்ளைகளான சிறுவர்கள் தஞ்சை நிகரன், மதுரை இலக்கியன் வரை.. பல்வேறு அனுபவங்கள் மற்றும் பார்வைகளில் பேசியது ஈர்ப்பாக இருந்தன.

தமிழ்த்தேசியப் பேரியக்க தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர்கள் அ. ஆனந்தன் (பொருளாளர்), பழ. இராசேந்திரன், நா. வைகறை, மு. தமிழ்மணி, மூ.த. கவித்துவன், திருச்சி வே.க. இலக்குவன், கதிர்நிலவன், க. விடுதலைச்சுடர், புதுவை வேல்சாமி ஆகியோர் உரையாற்றியும், பல்வேறு ஒருங்கிணைப்பு பணிகளைச் செய்தும் துணை நின்றனர். என் வாழ்க்கை இணையர் ம. இலட்சுமி “எனது பார்வையில் பெ.ம” என்ற தலைப்பில் பேசினார்.

கலை நிகழ்ச்சிகள்
-------------------------
முருகன்குடி திருவள்ளுவர் கலைக் குழுவின் பறையாட்டம், சிதம்பரம் தமிழர் தற்காப்புப் பயிற்சிப் பள்ளி மாணவர்களின் சிலம்பாட்டம், மல்லர் கம்பம், குடந்தை பேரக் குழந்தைகளின் நடனம், ஈரோடு பேரக் குழந்தைகள் ஈரோடு சரவணன் எழுதிய பாடல்களைப் பாடியது முதலியவை மனத்தை நெகிழச் செய்தன.

பாடல்கள்
--------------
என்னைப் பற்றிய பாடல்கள் என்றாலும் அவை தமிழ்நாட்டின், தமிழின் உரிமை மீட்பு சார்ந்த போர் முழக்கமாக இயற்றப்பட்டிருந்தன. பாவலர் கவிபாஸ்கர் எழுதித் திரை இசைப்பாடகர் முனைவர் சித்தன் செயமூர்த்தி இசையமைத்துப் பாடிய பாடலை தமிழர் நலப் பேரியக்கத் தலைவர், இயக்குநர் மு. களஞ்சியம் வெளியிட இயக்குநர் கிட்டு பெற்றுக் கொண்டார். பாவலர் நா. இராசாரகுநாதன் எழுதி, பொறியாளர் ச. முத்துக்குமாரசாமி இசையமைத்துப் பாடிய பாடல், இலக்கியர் இலரா. மோகன் அவர்கள் இயற்றி, இசையமைப்பாளர் இரா.நா. வசந்த அவர்கள் இசையமைத்த பாடல் எனப் புதிய பாடல்கள் அரங்கேற்றப்பட்டன.

பகல் கூட்டம் அரங்கத்தில் நடக்கட்டும். மாலைப் பொதுக்கூட்டம் திறந்த வெளியில் நடக்க வேண்டும் என்று வலியுறுத்தியவர் செந்தமிழன் சீமான் அவர்கள். அவ்வாறே நடந்தது. பெருந்திரளான கூட்டம்!

முதல் நிகழ்வாக பெருவிழா நினைவுக் கல்வெட்டை தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பி. தென்னவன் திறந்து வைத்தார்.

திறந்தவெளி நிறைவுப் பொதுக்கூட்டத்தில் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் போராட்ட வரலாறு குறித்து தோழர் கி. வெங்கட்ராமன் அவர்கள் எழுதியுள்ள “தடம் மாறாத் தமிழ்த்தேசியம்” நூலின் அறிமுகம் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா. வைகறை தலைமையில் நடைபெற்றது. நூலின் சிறப்பு குறித்து தோழர் கதிர்நிலவன் உரையாற்றினார்.

அதன்பின், ”தமிழ்த்தேசியம் இனி” என்ற தலைப்பில் உரையாற்றிய தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் துணைத் தலைவர் தோழர் க. முருகன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கோ. மாரிமுத்து, துணைப் பொதுச் செயலாளர் தோழர் க. அருணபாரதி மூவரும் செறிவான எழுச்சியுரை ஆற்றினார்கள். தோழர்கள் பெ. மணியரசன், கி. வெங்கட்ராமன் இருவரும்தான் தமிழ்த்தேசிய எழுச்சியுரை ஆற்றுவார்கள் என்பதில்லை, மற்ற தோழர்களும் இளையோரை விழித்தெழச் செய்யும் வண்ணம் உரையாற்றுவார்கள் என்பதற்கு இவர்களின் அன்றைய பேச்சே சான்று!

நிறைவரங்கத்துக்குத் தலைமை தாங்கிய தோழர் கி. வெங்கட்ராமன் இந்திய ஆரியக் கட்டமைப்பின் தமிழின அழிப்பு வேலைகளை விளக்கினார். இந்த இன அழிப்புக் கட்டமைப்பைப் பல முனைகளில் எதிர்கொள்வதுதான், தமிழர்களின் அடுத்த கட்ட நகர்வாக இருக்க வேண்டும் என்று விளக்கி வீர உரையாற்றினார். அவருடைய பேச்சை அக்கறையுடன் ஆர்வத்துடன் கூட்டத்தினர் உள்ளவாங்கினர்!

அடுத்து அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் எழுச்சியுரை! ‘தமிழ்த்தேசியத்தைத் தத்துவமாக வளரத்திட ஐயா பெ. மணியரசன் அளித்துள்ள பங்களிப்புகளை ஏணியாகப் பற்றிக் கொண்டு இளையோர் மேலேறி வரவேண்டும்’ என்றார். பெ. மணியரசனும் கி. வெங்கட்ராமனும் இணைந்து தமிழ்த்தேசியத்திற்கு தந்துள்ள பங்களிப்புகளை வியந்து பாராட்டினார்.

தெய்வத் தமிழ்ப் பேரவை தலைமைச் செயற்குழு உறுப்பினரும், சேலம் மேச்சேரி சத்தியபாமா அறக்கட்டளைத் தலைவருமான கருவுறார் சித்தர் வழிச் செயல்பாட்டாளர் அருள்திரு சத்தியபாமா அம்மா அவர்கள் தம் சீடர்களுடன் வந்து எனக்கு மாலை அணிவித்து தலையில் முடிசூட்டி, கனமான செங்கோல் வழங்கினார். இவற்றை ஏற்பதில் எனக்கு மிகவும் கூச்சமாக இருந்தது. இவற்றை அப்படியே சீமான் அவர்களுக்கு அணிவித்தேன். அவற்றை அவர் எனக்கே திருப்பி அணிவித்தார்.

எனக்குத் தனி மேடை
------------------------------
மண்டபத்தில் நிகழ்ச்சிகளுக்கான மேடைக்கு அப்பால் ஓர் ஓரத்தில் எனக்குத் தனிமேடை போட்டிருந்தார்கள். என்னைப் பார்க்க - வாழ்த்த வருபவர்களால் மேடை நிகழ்வுகளுக்கு இடையூறு ஏற்படக் கூடாது என்று இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.

தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வந்தவர்கள் – குடும்பம் குடும்பமாக வந்தவர்கள் எனப் பலரும் என்னிடம் வந்து வாழ்த்து தெரிவித்தனர். இளையோர் வாழ்த்துப் பெற்றனர். துண்டு, மாலை, நிதி என ஒவ்வொருவரும் அணிவித்தனர்/அளித்தனர். சர் சிவசாமி அய்யர் உயர்நிலைப்பள்ளியில் நாங்கள் மூவராய் இணைந்தவர்கள் – இங்கும் சந்தித்துக் கொண்டோம். திருச்சடை வளந்தை சாமி. தங்கமணி, கூடநாணல் கு. பெரியசாமி (இருவரும் இப்போது மயிலாடுதுறை வாசிகள்) வந்திருந்தனர். உலகத் தமிழ்க் கழகத்தில், திருக்காட்டுப் பள்ளியில் இணைந்த தோழர்கள் திருப்பூந்துருத்தி அ. மன்னர் மன்னன், அடஞ்சூர் புலவர் கரு. அரங்கராசன் ஆகியோர் வந்திருந்தனர். ஈகி என் வெங்கடாசலம் அவர்களின் மகன்கள் பேரா. வெ. சுகுமார், வெ. கண்ணன் (சிபிஎம்) என். வி. அவர்களின் அண்ணன் மகன் இரா. நடராசன் (சிபிஎம்) ஆகியோர் வந்து வாழ்த்தினர்.

காவிரி உரிமை மீட்புக்குழுவைச் சேர்ந்த உழவர் பெருமக்கள், தெய்வத்தமிழ்ப் பேரவையைச் சேர்ந்த பெருமக்கள், பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நண்பர்கள் எனப் பலரும் வந்து வாழ்த்தினர்.

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, திராவிட இயக்கத் தமிழர் பேரவைத் தலைவர் பேராசிரியர் சுப. வீரபாண்டியர், தேசிய சமூக கலை இலக்கியப் பேரவைத் தலைவர் திரு. தாரை. குமரவேல் ஆகியோர் இப்பெருவிழா சிறக்க வாழ்த்தி எழுதிய கடிதங்களை மேடையில், தோழர் கி.வெ. வாசித்தார்.

வந்து வாழ்த்தியோர் மொத்தம் 4,00,950 ரூபாய் நிதி அளித்தனர். ஒரு தங்க மோதிரம், இரு தங்கக் காசுகள், ஒரு வெள்ளிக் கைக்காப்பு ஆகியவற்றையும் பரிசளித்தனர். நிதி ரூ. 4,00,950-ஐ அப்படியே தமிழ்த்தேசியப் பேரியக்க வளர்ச்சி நிதிக்கு அளித்து விட்டேன்.

வெளிநாட்டில் பணியாற்றும் தமிழர்களின் நன்கொடையில் எனக்கு புதிய மகிழ்வுந்து வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளனர். அனைவர்க்கும் நெஞ்சார்ந்த நன்றி!

தஞ்சையிலிருந்து இவ்விழாவுக்குப் புறப்பட்டு வரும்போது புதுக்குடியில் வள்ளலார் பணியக அன்பர்கள் ஐயா சுந்தரராசன் தலைமையில் சிறப்பான இசை முழங்க வரவேற்பளித்தனர். பேரியக்கத் தோழர்களும் க. காமராசு உட்படப் பலர் கலந்து கொண்டனர். வெளிநாட்டில் வாழும் ஈழத்தமிழர்கள் சிலர் நேரிலும், பலர் தொலைபேசியிலும் வாழ்த்தினர்.

வேலைப் பகிர்வு - கூட்டுழைப்பு
-------------------------------------------
நிகழ்வு நாளன்று காலை உணவு, பகல் உணவு (அசைவம்) வழங்கும் பொறுப்பை தோழர்கள் வெ. இளங்கோவன், இளையராசா உள்ளிட்ட ஈரோட்டுத் தோழர்கள் எடுத்துக் கொண்டு பலரும் பாராட்டும் வகையில் உணவளித்தனர். பகல் உணவில் சைவ உணவுப் பொறுப்பை தஞ்சை தம்பி கைலாசம்-செம்மலர் இணையரின் இராமு அடிசில் உணவகம் ஏற்றுக் கொண்டு பலரும் பாராட்டும் வகையில் உணவளித்தனர்.

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமையகப் பொறுப்பாளர் தோழர் வெற்றித்தமிழன் மற்ற தோழர்களுடன் இணைந்து, இப்பெருவிழா தொடர்பாக சென்னை அலுவலகத்திலிருந்து செய்ய வேண்டிய பணிகள் அனைத்தையும் சுறுசுறுப்பாகச் செய்தார்கள்.

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் அனைத்துப் பகுதி அமைப்புகளும் தன்னார்வத்துடன் இவ்விழாவிற்குரிய அனைத்துப் பணிகளையும் செய்து, இயக்கத் தோழர்களையும் குடும்பத்தினரையும் நண்பர்களையும் அழைத்து வந்தனர். இருந்தும் பலர்க்கு அழைப்பு இல்லை; அறிவிப்பு கூட இல்லை என்ற குறைபாடுகளையும் நண்பர்கள் தோழர்கள் கூறுகிறார்கள். நம் வீட்டுத் திருமணங்களிலும் இவ்வாறான குறைபாடுகள் ஏற்படுவதுண்டு. பொறுத்தருள்க என்று உரிமையுடன் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

ஆச்சாம்பட்டியிலிருந்து அனைத்து பகுதியினரும், அனைத்துக் கட்சியினரும் உரிமையுடன் உறவுடன் கலந்து கொண்டது மகிழ்ச்சியாக இருந்தது.

சாரத்தில், இது ஒரு தனிநபருக்கான விழாவன்று; தமிழ்த்தேசிய இலட்சியத்திற்கான விழா! இதில் தனிநபரின் தனிச்சிறப்பும், உறவுகளும் உள்ளடங்கும்! அவரவர் தனித்தன்மை பாதிக்கப்படுவதில்லை!

இது முதுமைக்கால விழாதான்! ”தமிழ் எங்கள் இளமைக்குப் பால்” என்றார் பாவேந்தர்! தமிழுக்கும், தமிழர்க்கும் பணியாற்றினால் மனம் எப்போதும் இளமையாய் இருக்கும்!

இவ்விழாவினை சிறப்பாக நடத்திடத் திருச்சித் தோழர்கள் நல்கிய கடும் உழைப்பும், திட்டமிடலும் மிகமிக பாராட்டிற்குரியவை. வரவேற்புக் குழுத் தலைவர் தோழர் வே.க. இலக்குவன், தோழர்கள் மூ.த. கவித்துவன், நா. இராசா ரகுநாதன், மு. தியாகராசன், பொறியாளர் இராசப்பா, வே.பூ. இராமராசு, இராகுல், பி. சுப்பிரமணியன், ஆகியோர் குழுவாக தொடர்ந்து 1 மாதம் நிதிதிரட்டல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டனர். தோழர்கள் முருகேசன், அழகர், கென்னடி, இராசா, கிருட்டிணமூர்த்தி (கிச்சா), கோவிந்தன், முனியப்பன், ஆகியோர் நிகழ்ச்சிகள் சிறக்க அக்கறையுடன் உழைத்தார்கள்.

தமிழ்நாடு அளவில் அங்கங்கே நம் தோழர்கள் பலர் பல வேலைகளில் உழைத்தார்கள். அனைவருக்கும் பாராட்டுகள்!

எழுபத்தாறு நிறைவுற்ற முதுமை!
எண்ணமோ இன்னும் இளமை!
உடல் ஒத்துழைக்கவில்லையே
ஓட முடியவில்லையே என்றேன்!

உடனே தமிழ்த்தாய் அதட்டினாள்!
”நீ ஓட வேண்டாம்,
உன் இளையோரை ஓட வை!
எண்ணத்துடிப்பை வெளிப்படுத்தி
இலட்சியத்தை நோக்கி ஓட வை!
நாட்டை விட்டு ஓடுவர் பகைவர்” என்றாள்!

அன்னையின் ஆணைக்கு மறுப்பேது?
அணிதிரட்டுவோம்!

அனைவர்க்கும் நன்றி!

“தமிழ் எங்கள் இளமைக்குப் பால்” என்றார் பாவேந்தர்!

எனக்கும்தான்!

=================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
=================================

Labels:

"பாசனக் கால்வாய் தூர்வாரும் பணிகளில் கமிஷன் கேட்டு தி.மு.க.,வினர் கோஷ்டி மோதல்! பணிகள் பாதிப்பு!"--- காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் ஐயா பெ. மணியரசன் அறிக்கை!

Saturday, May 20, 2023


பாசனக் கால்வாய் தூர்வாரும் பணிகளில் கமிஷன்

கேட்டு தி.மு.க.,வினர் கோஷ்டி மோதல்! பணிகள் பாதிப்பு!
==========================================================
காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர்
ஐயா பெ. மணியரசன் அறிக்கை!
==========================================================

தஞ்சை மாவட்டத்தில் ஆற்று நீர்க் கால்வாய்களைத் தூர்வருவதற்காக ரூ 20 கோடியே 45 இலட்சம் தமிழ்நாடு பொதுப்பணித் துறை நிதி ஒதுக்கியுள்ளது. இத்திட்டத்தை தஞ்சை மாவட்டத்தில் 27.04.2023 அன்று அமைச்சர்கள் துரை. முருகன், கே.என். நேரு, அன்பில் மகேசு பொய்யாமொழி ஆகியோர் நேரில் வந்து பூதலூர் ஆனந்த காவேரிக் கால்வாயில் தொடங்கி வைத்தனர்.

அந்த ஆனந்த காவேரி தூர்வாரும் ஒப்பந்தம் எடுத்தவர் பூதலூர் பகுதியைச் சேர்ந்த தி.மு.க., காரர் தாம்! ஆனால், தி.மு.க., வில் இதே வட்டாரத்தைச் சேர்ந்த இன்னொரு கோஷ்டியினர் இந்த ஒப்பந்த வேலைக்கு தங்களுக்கு குறிப்பிட்ட சதவீதம் கமிஷன் தொகை தர வேண்டும் என்று கோரி, மேற்படி ஒப்பந்தக்காரரை வேலை செய்ய விடாமல் தடுத்து வந்தனர். தி.மு.க., கோஷ்டிகளிடையே சமரசம் செய்ய முடியவில்லை. மொத்தம் 6 கி.மீட்டர் வேலையில் இதுவரை 2 கிலோ மீட்டர் மட்டுமே தூர்வாரும் பணி முடிந்துள்ளதாகச் சொல்கிறார்கள்.

இந்நிலையில் 19.05.2023 அன்று இரவு எதிர்க் கோஷ்டியினர் மேற்படி ஆனந்த காவேரியில் தூர்வாரும் பணிக்காக நிறுத்திவைக்கப்படிருந்த பொக்லின் எந்திரத்தை அடித்துச் சேதப்படுத்தியதுடன் பொக்லைனில் உள்ள முக்கியமான பாகங்களைத் திருடிச் சென்றுவிட்டார்கள் என்று சில நபர்கள் பெயரையும் சுட்டிக்காட்டி நடவடிக்கை கோரி வெண்ணாறு – வெட்டாறு பகுதி உதவிப் பொறியாளர் பூதலூர் காவல் நிலையத்தில் எழுத்து வடிவில் புகார் 20.05.2023 அன்று கொடுத்துள்ளார்.

தி.மு.க., வினர் தங்களின் தன்னலத்திற்காகக் கோஷ்டிச் சண்டைப் போட்டுக் கொண்டு உழவர்கள் மற்றும் பொதுமக்களுக்கான அரசு திட்டத்தைச் செயல்படுத்தவிடாமல் தடுத்து பொக்லைன் எந்திரத்தையும் சேதப்படுத்தியுள்ளார்கள். மூன்று அமைச்சர்கள் தொடங்கி வைத்த நாளில் இருந்து தி.மு.க., வினரின் கோஷ்டிச் சண்டை தொடர்ந்து வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் இந்தச் சிக்கலிலும் இது போல் டெல்டாவில் மற்ற இடங்களில் நடைபெறும் பாசன மேம்பாட்டு வேலைகளிலும் தி.மு.க.,வினர் கமிஷன் கேட்டு கோஷ்டிச் சண்டை போடுவதைத் தவிர்க்கவும் இவ்வேலைகளை சூன் மாதம் தண்ணீர் திறப்புக்குள் முடிக்கவும் உரியவாறு நடவடிக்கை எடுக்குமாறு காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் கேட்டுகொள்கிறேன்.

==========================
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
==========================
பேச: 98419 49462, 94432 74002
==========================
Fb.com/KaveriUrimai
www.kaveriurimai.com
==========================

Labels: , , ,

"மணிப்பூரில் பெருந்தீயைப் பற்ற வைத்தது பா.ச.க.வும், நீதிபதியும்!" --- ஐயா பெ. மணியரசன், தலைவர் – தமிழ்த்தேசியப் பேரியக்கம்

Tuesday, May 9, 2023

 


மணிப்பூரில் பெருந்தீயைப்

பற்ற வைத்தது பா.ச.க.வும், நீதிபதியும்!
===============================
பெ. மணியரசன்,
தலைவர் – தமிழ்த்தேசியப் பேரியக்கம்
===============================


மணிப்பூர் மாநிலம் கடந்த 3.5.2023-லிருந்து பற்றி எரிகிறது. இரு இனங்களுக்கு இடையே வன்முறை! மணிப்பூர் தலைநகர் இம்பால், அதை ஒட்டியுள்ள சமவெளிப் பகுதிகளில் மிகப் பெரும்பான்மையாய் வாழ்பவர்கள் பழங்குடி அல்லாத மெய்த்தி மக்கள். மலைப் பகுதிகளில் மிகப் பெரும்பான்மையாய் வாழ்பவர்கள் குக்கி பழங்குடி மக்கள். மற்ற சிறுசிறு பிரிவு பழங்குடிகளும் உண்டு. இப்பழங்குடிகள் 41 விழுக்காட்டினர். மெய்த்தி சமவெளி மக்கள் 54 விழுக்காட்டினர். இவர்களில் வெளித் தாயகங்களிருந்து குடியேறியவர்கள் கணிசமானோர்.

மோரே மலைப்பகுதியில் தமிழர்களும் வாழ்கிறார்கள். இவர்கள் மியான்மரிலிருந்து வந்து குடியேறியவர்கள். 1960களில் மியான்மரில் (பர்மாவில்) தமிழர்களைத் தாக்கிக் கொன்று, வணிக நிறுவனங்களைச் சூறையாடி, வீடுகளை எரித்து வேட்டையாடினர் பர்மிய ஆளும் இனத்தைச் சேர்ந்தவர்கள். அப்போது உயிர்காக்கப் புலம் பெயர்ந்து அருகில் உள்ள மணிப்பூர் மலை மண்டலத்தில் குடியேறினர் தமிழர்கள். குக்கி, மெய்த்தி மக்களுக்கு அடுத்த எண்ணிக்கையில் தமிழர்கள். மோரே மலைப் பகுதிகளில் வாழ்கிறார்கள்.

இந்தத் தமிழர்களின் வீடுகள் 42 மோரே மலைப் பகுதியில் எரிக்கப்பட்டு விட்டன என்கிறார் மோரே தமிழ்ச் சங்கத் தலைவர் சேகர். (நேர்காணல் ஏகலைவன், ராவணா வலையொளி).

குக்கி - மெய்த்தி இன மோதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். ஏராளமான வீடுகள், வணிகக் கட்டிடங்கள் எரியூட்டப்பட்டன. இதில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் குக்கி மக்கள். மாநில அரசும், இந்தியப் படைத் துறையினரும் பல்வேறு இடங்களில் மக்களுக்கான பாதுகாப்பு முகாம்கள் அமைத்துள்ளன. அவற்றில் மாநில அரசு நடத்தும் முகாம்களில் குக்கி மக்களுக்கு உணவில்லை, தண்ணீர் இல்லை என்று கூறி இந்திய அரசு முகாம்களைத் தேடிப் போகிறார்கள்!

வெளி மாநிலங்களிலிருந்து வந்து மணிப்பூரில் உள்ள இந்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் – மருத்துவம், பொறியியல், படிப்போரையும் மற்றவர்களையும் அந்தந்த மாநில அரசுகள் பாதுகாப்பாக அழைத்துக் கொண்டு போய்விட்டன. அண்டை மாநிலங்களான அசாம், மிசோரம், சிக்கிம் போன்றவை மட்டுமல்ல, தொலைவில் உள்ள மராட்டியம் போன்ற மாநிலங்களும் மணிப்பூரில் படிக்கும், - வசிக்கும்- தங்கள் இன மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. ஆனால், தமிழ்நாடு அரசு மட்டும் இன்று வரை (9.5.2023) கண்டு கொள்ளவில்லை.

தமிழ்நாட்டு மாணவர்களும் மற்றவர்களும் மணிப்பூரில் உள்ளார்கள் என்பது ஒரு பக்கம்! இன மோதலின், - எரியூட்டல் தாக்குதலின் – மையமாக உள்ள மோரே மலைப் பகுதிகளில் தமிழர்கள் 1960களிலிருந்து தாயகம் போல் வசித்து வருகிறார்கள். இவர்கள் 1960களில், பர்மிய ஆளும் இனவெறியர்களின் தீவைப்பு, சூறையாடல், படுகொலைகள் முதலியவற்றால் பாதிக்கட்பட்டு தப்பி ஓடிவந்த தமிழினத்தின் ஒரு பகுதியினர்.

மோதல், மெய்த்தி – குக்கி இனங்களுக்கிடையே என்றாலும், மோரே மலைப்பகுதியில் குக்கி இன மக்களோடு தமிழர்களும் வாழ்ந்துவருகிறார்கள். இவர்களின் 42 வீடுகள் எரிக்கப்பட்டு விட்டன என்று மோரே தமிழ்ச் சங்கத் தலைவர் சேகர் கூறுகிறார். (நேர்காணல், ஏகலைவன் – ராவணா தொலைக்கட்சி)

இந்நேர்காணலில், உங்களுக்கு ஏற்பட்டுள்ள இப்பாதிப்புகள் பற்றித் தமிழ்நாடு அரசு சார்பில் யாரும் விசாரித்தார்களா, உதவி செய்ய முன் வந்தார்களா என்று ஏகலைவன் கேட்ட கேள்விக்கு, “இல்லை“ என்று விடையிறுக்கிறார் தமிழ்சேகர்!

இங்கே இருப்பது திராவிட அரசு! இந்தியத் தலைமை அமைச்சர் பதவியை 2024 தேர்தலில் குறிவைத்துள்ள தலைமை! ”தமிழர்” என்ற ”இனக் குண்டுச் சட்டிக்குள்” சிக்காது; ஏனெனில் அதில் பதவிக் குதிரை ஓட்ட முடியாது.

இந்த இனக் கலவரம் ஏன் வெடித்தது? இதற்கும் தமிழ்நாடுதான் உடனடி காரணமாக இருக்கிறது. மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் பொறுப்புத் தலைமை நீதிபதி திருவாளர் எம்.வி. முரளிதரன்; தமிழர். தமிழ்நாடு உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றியவர். இவர் மீது சில புகார்கள் எழுந்ததால், இவர் மணிப்பூர் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். மணிப்பூர் ஆளுநர் இல. கணேசன்; தமிழ்நாடு பா.ச.க.வின் முன்னாள் தலைவர். மணிப்பூரில் பா.ச.க. ஆட்சி! முதலமைச்சர் பீரேன் சிங்!

அம்மாநிலத்தில் ஏற்கெனவே தனிப் பெரும்பான்மையாய் உள்ள – பழங்குடி அல்லாத – பழங்குடிகளைவிட வாழ்க்கைத் தரம் மேம்பட்ட மெய்த்தி மக்களுக்கும் பழங்குடி குக்கி மக்களுக்கும் இடையே முட்டல் மோதல்! மேலாதிக்கம் செலுத்துவது மெய்த்தி இனம்! அவர்கள் இந்து மதம்! மலைவாழ் குக்கிகளும், மற்ற பழங்குடிப் பிரிவுகளும் கிறித்துவர்கள்!

இவ்விரண்டில் பா.ச.க. எந்தப் பக்கம் என்று கேட்க வேண்டுமா? நடுநிலையில் நிற்காது; மெய்த்தி பக்கம்தான் நிற்கிறது. நிற்பதோடல்லாமல், அவர்களின் ஆதரவைப் புதுப்பித்துக் கொண்டே இருப்பதற்காக அவர்களின் கோரிக்கைகளை ஏற்றது பா.ச.க.!

குக்கி மலைவாழ் மக்கள் உள்ள பழங்குடிப் பட்டியலில் தங்கள் இனத்தைச் சேர்க்க வேண்டும் என்றனர் மெய்த்தி தலைவர்கள்! அதற்கான குறுக்குவழி ஒன்றை உருவாக்கினார்கள் பா.ச.க.வினர். மணிப்பூர் உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு, மெய்த்தி மக்களைப் பழங்குடிப் பட்டியலில் சேர்க்க ஆணை இடுமாறு கோரினர்.

நீதிபதி முரளிதரன் சட்டம் படித்தவர்தாம்! இந்தியாவிலும் மணிப்பூரிலும் பா.ச.க. ஆட்சி! பா.ச.க. சார்பாளர்கள் கோருகிறார்கள், கொடுத்துவிடுவோம் என்று கருதிவிட்டார் போலும். அவர் பொறுப்பு - தலைமை நீதிபதி! அரசமைப்புச் சட்டம் தொடர்பான இச்சிக்கலில் இன்னொரு நீதிபதி கொண்ட அமர்வை உருவாக்கிக் கொள்வோம் என்று அவர் கருதவில்லை; அந்த இடைஞ்சல் ஏன் என்று நினைத்திருக்கலாம்! அவரே 27.3.2023 அன்று தீர்ப்பளித்துவிட்டார்.

‘மெய்த்தி சமூகத்தைப் பழங்குடிப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற இக் கோரிக்கையை மாநில அரசு விரைவாக ஆழ்ந்து ஆராய வேண்டும். இத்தீர்ப்பின் நகல் கிடைத்த நான்கு வாரங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும். பட்டியல் பழங்குடியில் மெய்த்தி மக்களைச் சேர்ப்பது குறித்த அறிக்கையை இந்திய அரசுக்கு அனுப்ப வேண்டும்’ என்றார் தமது தீர்ப்பில்.

இவ் வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடக்கும்போது மணிப்பூர் பா.ச.க. அரசு இக்கோரிக்கையை எதிர்க்கவில்லை. அரசமைப்பு உறுப்பு 342 ஐ சுட்டிக் காட்டி இதுபற்றி முடிவெடுக்க உயர் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்றும் கூறவில்லை. அமைதியாக இருந்து இவ்வாறான தீர்ப்பு வர ஒத்துழைத்தது.

பழங்குடி மக்களிடையே கொதிப்பும் கொந்தளிப்பும் ஏற்பட்டது.

பா.ச.க.வின் சட்டப் பேரவை உறுப்பினராகவும் மலை மண்டல நிர்வாகக் குழு தலைவராகவும் உள்ள தின்காங் லுங்க் என்பவர் இத்தீர்ப்புக்கு எதிராகப் பேசினார். ஊடகங்களில் அது வந்தது. அதே போல் பழங்குடி மாணவர் அமைப்பின் தலைவர் ஒருவரும் இத்தீர்ப்பை எதிர்த்துப் பேசினார்.

பழங்குடி அல்லாத மக்களைப் பழங்குடிகளாக மாற்றுகிறது இத்தீர்ப்பு என்று விமர்சித்தனர். இதனால் கொந்தளித்த நீதிபதி முரளிதரன், அவ்விருவரையும் தன் முன்னால் நேர்நிறுத்த வேண்டும் என்று மாநிலக் காவல்துறை தலைமை இயக்குநருக்கு ஆணைஇட்டார்.

இவரின் இந்த ஆணையை எதிர்த்து மேற்கண்ட இருவரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்கள்.

இதற்கிடையே, அனைத்து பழங்குடி மக்கள் சார்பாக 3.5.2023 அன்று இம்பாலில் மாபெரும் கண்டனப் பேரணி நடத்தினார்கள். அப்போது மெய்த்தி இனத்தார்க்கும் குக்கி இனத்தார்க்கும் இடையே மோதலும், கலகமும் மூண்டன. இருதரப்பு வீடுகளும் பற்றி எரிந்தன. மோரே மலைப்பகுதிக்கும் இச் சண்டை பரவியது. இன்றுவரை முற்றிலுமாக அமைதி திரும்பவில்லை. நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு விட்டார்கள். 200-க்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றுள்ளனர். கண்டதும் சுட ஆணை இடப்பட்டது. இந்தியப் படையினரும் இந்திய காவல் துறையினரும் இறக்கிவிடப்பட்டனர். பாதுகாப்பு முகாம்களில் கூட இனப்பாகுபாடு காட்டப்படுகிறது. குக்கி இன மக்களுக்கு உணவும் தண்ணீரும் கூட கிடைப்பதில்லை என்று அழுகிறார்கள். மாநில அரசு முகாமிலிருந்து இந்தியப் படை நடத்தும் முகாம்களுக்கு மாற்றுங்கள் என்று குக்கிகள் கோருகிறார்கள்.

மொத்தம் 30,50,000 மக்கள்தொகை கொண்ட சிறிய பழங்குடி மக்கள் மாநிலத்தில் புகுந்த பா.ச.க. அங்கு பெரும்பான்மையாய் – இந்துக்களாய் உள்ள மக்களைத் திரட்டிக் கொள்வதற்காக அம்மக்களுக்கு ஆசை காட்டி, பழங்குடிப் பட்டியலில் சேர்ப்பதாகப் பரப்புரை செய்தது. இவ்வளவு பெரிய வன்முறைகளுக்கும் உயிரிழப்புகளுக்கும் இந்தியப் படை தலையிட வேண்டிய நிலைமைக்கும் மூல காரணம் பா.ச.க.தான். அதற்குத் துணை போன நீதிபதி அடுத்த காரணம்!

ஆரியத்தின் அடிப்படைத் தத்துவமே வர்ணாசிரம தர்மம்! அதுவே அவர்களின் சனாதனம்! வர்ணாசிரமம் என்பது பிறப்பால் மக்களை மேல் - கீழ் என்று செயற்கையாகப் பிரிப்பது! இதனால் மக்களிடையே நிலவுகின்ற சாதி உயர்வு தாழ்வை – சாதிப் பிளவுகளைப் பயன்படுத்தித் தங்கள் தலைமையில் மக்களைத் திரட்டிக் கொள்வது என்பதுதான் எப்போதும் பா.ச.க. உத்தி!

நீதிபதிகளும் துணை போவது பெருந் தீவினை! உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஓய். சந்திரசூட் இது தொடர்பான வழக்கில் நேற்று (8.5.2023) இம்பால் உயர்நீதிமன்றத் தீர்ப்பு (27.3.2023) பற்றி சாட்டை அடி கொடுத்தார்.

இந்திய அரசமைப்பு உறுப்பு 342 தெளிவாக பழங்குடிமற்றும் பட்டியல் வகுப்பில் புதிதாகச் சாதிகளைச் சேர்க்கவோ, இருக்கும் சாதிகளை நீக்கவோ, மாற்றி அமைக்கவோ உயர் நீதிமன்றத்திற்கும் மாநில அரசுக்கும் அதிகாரம் இல்லை என்று கூறியுள்ளது. இந்திய குடியரசுத் தலைவருக்கும் நாடாளுமன்றத்திற்கும்தான் அவ்வதிகாரம் இருக்கிறது. அப்படி இருக்க, எப்படி இதுபோல் ஒரு தீர்ப்பு வரலாம்? மாநில அரசு அதை எதிர்க்காமல் இருப்பது என்ன நீதி என்று சீறினார்; ஏடுகளில் வந்துள்ளது.

இந்திய உள்துறை அமைச்சர் அமித் சா இத்தனை வன்முறைகளுக்கும், கொடுமைகளுக்கும் பிறகு, நேற்று தொலைக்காட்சி செய்தி ஒன்றில் பேசும்போது ”உயர்நீதிமன்றத் தீர்ப்பு பற்றி எல்லாத் தரப்பினரும் கலந்து பேசலாம்” என்கிறார்!

பா.ச.க.வின் குறி உச்ச நீதிமன்றத் தன்னாட்சியைத் தகர்ப்பதுதான். அதற்கான சட்டமோதலை சட்டத்துறை அமைச்சர், - பழங்குடி இனத்தைச் சேர்ந்த - ரிஜ்ஜூ மூலம் அன்றாடம் நிகழ்த்தி வருகிறது.

தமிழ்நாட்டில் மூன்று விழுக்காடளவில் உள்ள முன்னேறிய ”அவா”ளுக்குப் பத்து விழுக்காடு அளித்தது தானே பா.ச.க. அரசு!

=================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
=================================








Labels: , , ,


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்