<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d6955529389241309188\x26blogName\x3d%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86.%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://thozharmaniyarasan.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com/\x26vt\x3d-8408640130511538487', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

மராட்டியத்தின் நள்ளிரவு மோசடிக்கு நரேந்திரமோடியே பொறுப்பு பெ. மணியரசன் கண்டனம்!

Saturday, November 23, 2019

மராட்டியத்தின் நள்ளிரவு மோசடிக்கு நரேந்திரமோடியே பொறுப்பு

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
பெ. மணியரசன் கண்டனம்!

மராட்டியத்தில் சிவசேனையும் சரத்பவாரின் தேசியவாதக் காங்கிரசும் கூட்டணி சேர்ந்து அமைச்சரவை அமைக்க இருந்த நிலையில், தேசியவாதக் காங்கிரசிலிருந்து அஜீத்பவாரை இழுத்து 22.11.2019 – 23.11.2019 நள்ளிரவில் அரசியல் சதித் திட்டத்தை அரங்கேற்றி – ஆளுநருக்குத் தெரிவித்து விடியற்காலை 7.30 மணிக்கு ஆளுநர் பா.ச.க.,வின் பட்னாவிசை முதலமைச்சராகவும், அஜீத்பவாரை துணை முதலமைச்சராகவும் பதவி ஏற்கச் செய்த பா.ச.க.,வின் நள்ளிரவு மோசடி வன்மையான கண்டனத்திற்குரியது.

இந்த நள்ளிரவு மோசடிக்கு முழுப்பொறுப்பு தலைமை அமைச்சர் நரேந்திரமோடியே! நள்ளிரவு 12 மணிக்கு ஆளுநருக்குத் தெரிவித்து,12.30 மணிக்கு புது தில்லி புறப்பட இருந்தவரைத் தடுத்து விடியற் காலை 5.30 மணிக்கு பட்னாவிசையும் அஜீத்பவாரையும் சந்திக்க வைத்து ஆளுநர் காலை 7.30 மணிக்குப் பதவியேற்பு உறுதி மொழி செய்து வைக்க நடுவண் அரசே ஏற்பாடு செய்துள்ளது. இவ்வளவு நள்ளிரவு வேலைகளும் தலைமை அமைச்சர் ஏற்பாடில்லாமல் நடக்க முடியாது.

சட்டவிரோத அமைச்சரவை 7.30 மணிக்குப் பதவி ஏற்கிறது. அடுத்த ஒரு மணி நேரத்தில் 8.40 மணிக்கு மோடி டிவிட்டர் வழியாக முதலமைச்சருக்கும், துணை முதலமைச்சருக்கும் வாழ்த்துச் செய்தி அனுப்புகிறார். மோடியிடம் இட்லர் தோற்றுப்போனார்.

சட்ட நடைமுறைகளுக்கு புறம்பாக நள்ளிரவு சதியில் உருவாக்கப்பட்ட அரசுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து செய்தி அனுப்பியிருப்பது. கொடுமையிலும், கொடுமை.

நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியாவில் இனி சட்டத்தின் ஆட்சி நடக்குமா, அடுத்த மக்களவைத் தேர்தல் நடக்குமா என்ற கேள்விகள் எழுகின்றன. பா.ச.க. தலைமைக்கு அரசியல் ஒழுக்கமில்லை. சனநாயகத்தின் மீதும் அரசமைப்பச் சட்டத்தின் மீதும் நம்பிக்கை இல்லை.

இப்படிபட்ட பா.ச.க.,வைத் தமிழ்நாட்டில் வளர்க்கலாமா என்று தமிழர்கள் சிந்திக்க வேண்டும்.


Labels:

கோத்தபய வெற்றியிலிருந்து பாடம் கற்க வேண்டும்! பெ. மணியரசன் அறிக்கை!

Tuesday, November 19, 2019

கோத்தபய வெற்றியிலிருந்து
பாடம் கற்க வேண்டும்!

ஐயா பெ. மணியரசன்
தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்


கடந்த 16.11.2019 அன்று நடந்த இலங்கை குடியரசுத் தலைவர் தேர்தலில், “சிறீலங்கா பொதுஜன பெரமுனா” கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்ட, மகிந்த இராசபக்சேவின் தம்பி கோத்தபய இராசபக்சே 52.25% வாக்குகள் பெற்று பெரும் வெற்றியை ஈட்டியுள்ளார். இலங்கையின் வடக்கு கிழக்கு தமிழர் தாயக மாநிலங்களில் உள்ள தமிழர்களும், தமிழ் பேசும் முசுலிம்களும் கோத்தபய இராசபக்சேயை எதிர்த்து நின்ற “ஐக்கிய தேசியக் கட்சி” வேட்பாளரான சஜித் பிரமேதாசாவுக்கு ஒட்டுமொத்தமாக வாக்களித்திருக்கிறார்கள்.

இராசபக்சே குடியரசுத் தலைவராகவும், அவரது தம்பி கோத்தபய இராசபக்சே பாதுகாப்புத் துறைச் செயலாளராகவும் இருந்த காலத்தில் தமிழின அழிப்புப் போரை தீவிரமாக நடத்தினார்கள். 2008 - 2009இல் இலட்சக்கணக்கான தமிழ்ப் பொது மக்களையும், விடுதலைப்புலி வீரர்களையும் இனப்படுகொலை செய்து நரவேட்டை நடத்தினார்கள்.

சிங்கள பௌத்த பேரினவாத ஆதிக்கத்தை – தமிழர்கள் மீது திணித்ததைப் போலவே, முசுலிம் மக்கள் மீதும் இராசபக்சே அரசு திணித்தது. இதனால் இம்மக்கள் இராசபக்சே தம்பிக்கு வாக்களிக்க மறுத்து, அவரை எதிர்த்துப் போட்டியிட்ட இன்னொரு சிங்களக் கட்சி வேட்பாளருக்கு வாக்களித்தனர். ஆனால், கோத்தபய இராசபக்சே மிகப்பெருவாரியான வாக்குகள் பெற்றது எப்படி என்ற கேள்வி எழுகிறது!

இலங்கையில் தமிழர்கள் செயற்கையாகச் சிறுபான்மையாக்கப்பட்ட மக்கள் ஆவர். வரலாற்றில் தமிழர்களின் அரசு தனித்து அங்கு நடந்து வந்தது. ஐரோப்பிய வணிக வேட்டைக் கொள்ளைக் கம்பெனிகள் வேட்டையாட வந்தபொழுது, பீரங்கிகளால் தமிழின அரசை வீழ்த்தி சிங்கள அரசையும் வீழ்த்தி ஒரே நிர்வாகக் கட்டமைப்பாக இலங்கையை உருவாக்கினார்கள். அதில் ஆங்கிலேய அரசு கோலோச்சியது. இதனால், செயற்கையாக சிறுபான்மையாக்கப்பட்ட தமிழர்கள் எந்தக் காலத்திலும் நாடாளுமன்றத் தேர்தல் வழியாக தம் மொழியை – பண்பாட்டை – தாயகப் பரப்பை பாதுகாத்துக் கொள்ளும் அரசு அதிகாரத்தை பெறவே முடியாத நிலை ஏற்பட்டது.

இலங்கை மக்கள் தொகையில் வடக்கு கிழக்கு மாநிலங்களில் உள்ள “சிறுபான்மை” மக்கள் எண்ணிக்கை 30 விழுக்காடு. மற்ற சிங்கள மாநிலங்களி்ல் சிங்களரின் மக்கள் தொகை 70 விழுக்காடு.

காலனி வேட்டையாடிகளாலும், பெருந்தேசிய இன ஆக்கிரமிப்பாளர்களாலும் செயற்கையாக உருவாக்கப்பட்ட நாடுகளில் செயற்கையாக சிறுபான்மையாகிப் போன மக்களின் உரிமையை அந்நாடுகளில் நடைபெறும் தேர்தல் வாக்குரிமை மூலம் அடைந்துவிட முடியாது என்பதற்கு, இப்பொழுது நடந்துள்ள இலங்கைத் தேர்தல் மற்றுமொரு எடுத்துக்காட்டு!

“பெரும்பான்மையினரின் முடிவை செயல்படுத்துவது” என்ற சனநாயகக் கோட்பாட்டை பல்வேறு இனங்களைக் கொண்ட நாடுகளில் ஒற்றைப் பொருளில் பயன்படுத்தினால், ஒப்பீட்டளவில் சிறுபான்மையாக உள்ள இனங்கள் நிரந்தர அடிமைகளாக வாழ வேண்டிய நிலைதான் ஏற்படும்.

ஏற்கெனவே, பிரித்தானியாவில் (U.K) சிக்கிக் கொண்டுள்ள ஐரிஷ் (அயர்லாந்து), ஸ்காட்டிஷ் (ஸ்காட்லாந்து) தேசிய இனங்கள் தங்களின் மொழி மற்றும் இன உரிமைகளைப் பாதுகாக்க நாடாளுமன்ற – சட்டமன்றத் தேர்தல் மூலம் வழியில்லை என்ற முடிவுக்கு வந்து தனிநாடு கேட்டுப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். உலகத்தில் ஒப்பீட்டளவில் மிகச்சிறந்த சனநாயகம் உள்ள நாடாகக் கருதப்படும் பிரித்தானியாவிலேயே இந்த இனப்பாகுபாடு நடந்து கொண்டுள்ளது.

இதேபோல்தான், ஸ்பெயினில் சிக்கிக் கொண்ட “சிறுபான்மை” தேசிய இனங்கள் விடுதலைக்குப் போராடுகின்றன. சோவியத் ஒன்றியத்தில் இரசியப் பேரினவாதத்தின் ஆதிக்கம் தாங்க முடியாத “சிறுபான்மை” தேசிய இனங்கள் பிரிந்து தனிநாடு அமைத்துக் கொண்டன.

அனைவருக்கும் வாக்குரிமை இருப்பதால், “சிறுபான்மை” தேசிய இனங்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று எந்த நாட்டிலும் நம்ப முடியாது. இந்தியாவிலும் அப்படித்தான்!

இந்த உண்மைக்கான இன்றைய எடுத்துக்காட்டுதான், ஒட்டுமொத்த தமிழர்களும், தமிழ் பேசும் முசுலிம்களும் கோத்தபய இராசபக்சேவுக்கு எதிராக வாக்களித்தும், அந்த வாக்குகள் வலிமையற்றவை – அந்தத் தேர்தல் வெறும் சடங்கு என்ற உண்மையை உலகுக்கு உணர்த்தியுள்ளது.

இலங்கை நாடு மிகப்பெரிய பொருளாதாரச் சிக்கலில் தவித்துக் கொண்டுள்ளது. விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. நாணய மதிப்பு நாள்தோறும் குறைந்து கொண்டுள்ளது. மக்களின் வாழ்க்கைத் தரம் மிக மோசமாகிக் கொண்டிருக்கிறது. வேலையில்லாத் திண்டாட்டம் பெருகியுள்ளது. ஊழல் மலிந்துள்ளது. இவையெல்லாவற்றுக்கும் இராசபக்சே கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் காரணங்களாக இருக்கின்றன.

போர் வெறி கொண்டு, இலங்கையின் கருவூலத்தைக் காலி செய்தவர், இராசபக்சே! அவருடைய கட்சியை சிங்கள மக்கள் பெருமளவு தேர்வு செய்திருக்கிறார்கள் என்றால், அதற்கு என்ன காரணம்? தமிழர்களையும், முசுலிம்களையும் கடுமையாக ஒடுக்குவதில் – அழிப்பதில் முதல் பரிசு பெற வேண்டியது இராசபக்சே குடும்பம் என்ற சிங்களப் பேரினவாத உணர்வு பெரும்பாலான சிங்கள மக்களிடம் இருப்பதுதான் இத்தேர்வுக்குக் காரணம்!

வெற்றி பெற்ற உடனேயே கோத்தபய இராசபக்சே, “எனக்கு வாக்காளிக்காதவர்களும் என் பக்கம் வாருங்கள், உங்களுக்கும் நான்தான் குடியரசுத் தலைவர். ஒரே இலங்கையை உருவாக்க வேண்டும்” என்று மிரட்டல் பாணியில் கோரிக்கை வைத்துள்ளார். சிங்கள பௌத்த இன ஆதிக்கத்தை – மொழி ஆதிக்கத்தை ஏற்றுக் கொண்டு, முழுமையான சிங்கள பௌத்த நாடாக இலங்கையை மாற்றுவதற்கு, சிறுபான்மையினரே மரியாதையாக என்னோடு வாருங்கள் என்ற இராணுவ அழைப்புதான் கோத்தபய விடுத்துள்ள அந்த அழைப்பு!

கோத்தபய இராசபக்சே ஒரே நாடு முழக்கத்தை நரேந்திர மோடியிடமிருந்து எடுத்துக் கொண்டாரா என்ற ஐயப்பாடு எழுகிறது.

வடக்கு - கிழக்கு மாநிலங்களில் மிகத் தீவிரமாக சிங்களக் குடியேற்றங்கள் நடக்கும் அபாயமிருக்கிறது. வடக்கு கிழக்கு மாநிலப் பகுதிகளில் மணலாறு என்ற தமிழர் பகுதியில் இருந்த தமிழர்களை 1984 வாக்கில் இராணுவத்தை வைத்து வெளியேற்றிவிட்டு, வலுவந்தமாக சிங்களக் குடியேற்றங்களை இலங்கை அரசு கொண்டு வந்தது அன்று வலுவந்தமாக 18 கிராமங்களில் சிங்கள அரசு சிங்களக் குடியேற்றங்களைக் கொண்டு வந்தது. இன்றைக்கு அங்கு சிங்களக் குடியேற்ற கிராமங்களின் எண்ணிக்கை சற்றொப்ப நூறு!

மணலாறு என்ற தமிழ்ப் பெயரை “வெலிஓயா” என்று சிங்களத்தில் மாற்றிவிட்டார்கள். ஏராளமான தமிழ் கிராமங்களின் பெயர்களையும் சிங்களத்தில் மாற்றிவிட்டார்கள். அப்பகுதியின் 90 விழுக்காட்டிற்கு மேல் கோத்தபய இராசபக்சேவுக்கு வாக்குகள் கிடைத்துள்ளன. இதே பாணி சிங்களக் குடியேற்றங்களைத்தான், இன்றைக்குள்ள வடக்கு - கிழக்கு தமிழர் மாநிலங்களில் வலுக் கட்டாயமாகக் கொண்டு வரப் போகிறது, கோத்தபய ஆட்சி! ஏற்கெனவே, இந்துக் கோயில்களை பௌத்த கோயில்களாக மாற்றிக் கொண்டுள்ளார்கள். அப்போக்கு இன்னும் தீவிரப்படும்.

தமிழ்நாட்டுத் தமிழர்கள் இலங்கையில் நடந்த தேர்தல் முடிவுகளிலிருந்து மேற்கண்ட பாடங்களைப் படிக்க வேண்டும். தமிழ்நாட்டிலும் இப்படித்தான் குடியேற்றங்களும், தமிழர் ஆன்மிகத்திற்குப் புறம்பான வடஇந்திய ஆன்மிகத் திணிப்பும் நடந்து கொண்டுள்ளன.

வாக்குரிமை மூலம் இலங்கையில் தமிழர்கள் தங்களின் தாயகப் பகுதிகளையும் இன உரிமைகளையும் இன அடையாளங்களையும் தக்க வைத்துக் கொள்ள முடியாது என்று சொல்லும்போது, இதற்கு மாற்று ஆயுதப்போர் என்று கருத வேண்டாம்!

இப்போதைய நிலையில், ஒட்டுமொத்த தமிழர்கள் ஒருங்கிணைந்து சனநாயக வழிப்பட்ட போராட்டங்களை நடத்தி சிங்களப் பேரினவாத அரசுக்கு நெருக்குதல் கொடுத்து, உலகக் கவனத்தை ஈர்த்து உரிமைகளைப் பெற முயல வேண்டும். அதற்கான முதல் தேவை – சம்பந்தர், சுமந்திரன் போன்றவர்களுக்கு அப்பால் உண்மையான தமிழின உரிமையில் அக்கறையும் ஒப்புக் கொடுப்பும் கொண்டு, மக்களைத் திரட்டி சனநாயக வழியில் உரிமைப் போராட்டங்கள் நடத்தும் தலைமை தமிழீழத்தில் உருவாக வேண்டும். தமிழினத்தைச் சேர்ந்த இளம் ஆண்களும், பெண்களும் இதுபற்றி சிந்தித்து சரியான முடிவுக்கு வந்து கூட்டுப் போராட்டங்களை நடத்த வேண்டும்.

இவ்வாறான ஒருங்கிணைந்த மக்கள் திரள் உரிமைப் போராட்டங்கள் தமிழீழத்தில் நடக்கும்போது, தாய்த் தமிழ்நாட்டு மக்கள் அவர்களுக்கு ஆதரவு நல்க வேண்டும். இங்கு சொல்லப்பட்ட படிப்பினைகள், தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும் பொருந்தும்!

கோத்தபய அரசு சீனாவுக்கு ஆதரவாக இருக்கும். அதனால், இந்திய அரசு இலங்கைக்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபடும் என்று நம்மில் சிலர் கதைக்கத் தொடங்குவார்கள். இந்த கதைப்புகளை நம்ப வேண்டாம். கடந்தகால படிப்பினைகள் நமக்கு உணர்த்துவது, எதிர்க்க வேண்டியது சீனர்களையா – தமிழர்களையா என்று முரண்பாடு வந்தால், தமிழர்களைத்தான் எதிர்ப்போம் என்று இந்திய அரசு நிலைபாடு எடுக்கும் என்பதுதான்! எனவே, கொக்கு தலையில் வெண்ணெய் வைத்துப் பிடிக்கும் உத்திகளைச் சொல்லும் “சிந்தனைச் சிற்பி”களின் ஆசை வார்த்தைகளில் தமிழர்கள் பலியாகக் கூடாது என்ற படிப்பினையும் பெற வேண்டும். உரிமை மீட்பிற்கான வழி மக்கள் திரள் எழுச்சியே!


Labels:

அம்மாவின் இறப்பும் அடைக்க முடியாத நன்றிக் கடனும் பெ. மணியரசன்

Thursday, November 14, 2019

அம்மாவின் இறப்பும்
அடைக்க முடியாத நன்றிக் கடனும்

பெ. மணியரசன்
தலைவர் – தமிழ்த்தேசியப் பேரியக்கம்.



ன் அன்னை பார்வதியம்மாள் கடந்த தி.பி. 2050 – ஐப்பசி 25 (11.11.2019) திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் காலமானார். அவருக்கு 92 அகவை இருக்கலாம்.

எத்தனை அகவை ஆனால் என்ன, தாயார், தந்தையார் இறப்பு என்பது எல்லோருக்கும் பேரிழப்புதான்! பற்று துறந்த பட்டினத்தடிகளே, அவரின் தாயார் காலமானபோது, “அன்னை இட்ட தீ அடி வயிற்றிலே” என்று பாடிக் கலங்கினார்.

நேரில் வந்தும், தொலைப்பேசி வழியாகவும் சமூக வலைத்தளங்கள் வழியாகவும் எனக்கும் என் குடும்பத்தார்க்கும் ஆறுதல் சொன்ன பெருமக்களுக்கு நன்றி சொல்லவே இம்மடலை எழுதுகிறேன்.

என் அன்னையார் காலமான செய்தியை உள்நாட்டிலும், உலக நாடுகளிலும் கொண்டு போய்ச் சேர்த்தவர்கள் வலைத்தளங்களைப் பயன்படுத்தும் பெரியவர்களும், நம் பிள்ளைகளும், தோழர்களுமே! என் அன்னையார் காலமான சில மணி நேரத்திலேயே வெளிநாடுகளில் வாழும் நம் தமிழர்கள் அலைப்பேசியில் அழைத்து ஆறுதல் சொல்லத் தொடங்கினார்கள்!

அரசியல் கட்சிகளின் முக்கியப் பொறுப்பாளர்கள் பலர் நேரில் வந்தும், தொலைப்பேசியிலும் ஆறுதல் சொன்னார்கள். அதுபோல் தமிழ்த்தேசியத் தலைவர்கள், உழவர் இயக்கங்களின் தலைவர்கள், மக்கள் இயக்கங்களின் பொறுப்பாளர்கள், சமூகச் செயல்பாட்டாளர்கள், சான்றோர்கள், ஊடகவியலாளர்கள், முக்கியப் பொறுப்பாளர்கள், எங்கள் குடும்ப உறவினர்கள், ஊர்க்காரர்கள் என ஏராளமானோர் நேரில் வந்து எங்கள் துயரத்தில் பங்கு கொண்டார்கள்.

திராவிடம் – பெரியாரியம் ஆகியவற்றில் என்னோடு முரண்பாடு கொண்டுள்ள பெருமக்கள், தோழர்கள் ஆகியோர் நேரில் வந்தும், தொலைப்பேசி வழியாகவும் எனக்கு ஆறுதல் சொன்னார்கள்.

எனக்கும், என் குடும்பத்தினருக்கும் ஒரு வேலையின்றி என் அன்னையார் இறப்பிற்குப் பின் நல்லடக்கம் வரை அனைத்துப் பணிகளையும் செய்தோர் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டப் பொறுப்பாளர்களும் தோழர்களும் – எங்கள் ஊர்க்காரர்களும் ஆவர்! தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள், நாம் தமிழர் கட்சித் தோழர்கள், நேரில் வந்து துயரத்தில் பங்கு கொண்டார்கள். வர இயலாத தோழர்கள் தொலைப்பேசியில் ஆறுதல் கூறினார்கள்.

இவர்கள் அத்தனை பேர்க்கும் என் நெஞ்சு நெகிழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அடைக்க முடியாத ஒரு கடன் நன்றிக்கடன்!

என் தந்தை பெரியசாமிக்கும், என் தாயார் பார்வதிக்கும், என்னை வளர்த்ததில் எனக்குக் கல்வி வாய்ப்பளித்ததில் முக்கியப் பங்காற்றிய என் அம்மாச்சி (அம்மாவின் தாயார்) மங்கலம் அம்மாள் அவர்கட்கும் நான் நன்றி செலுத்துவதில் கடன்பட்டவனாகவே இருக்கிறேன். என்னால் அவர்களுக்கு ஒரு நன்மையும் கிடையாது!

எங்கள் ஆச்சாம்பட்டியில் முதல் முதல் கல்லூரிக்குப் படிக்கப் போனதில் நான் இரண்டாவது ஆள். முதலில் சென்றவர் என் மாமா பெ. கோபால்! அவர் முயற்சியால்தான் திருக்காட்டுப்பள்ளி சர் சிவசாமி ஐயர் உயர்நிலைப் பள்ளியில் 8ஆம் வகுப்பில் சேர்ந்தேன்.

திருச்சி தேசியக் கல்லூரியில் 1965-66இல் புகுமுக வகுப்பு (PUC) படித்த போது, தேர்வில் முதலில் தோற்றுப் பின்னர் தேர்ச்சி பெற்றேன். தேர்ச்சி பெற்று மறு ஆண்டு அதே தேசியக் கல்லூரியிலும், பூண்டி புட்பம் கல்லூரியிலும் இளங்கலை படிப்பிற்கு விண்ணப்பம் போட்டேன். இடம் கிடைக்கவில்லை. பின்னர் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில், திருவாரூர் அருகே குருக்கத்தியில் இரண்டாண்டு படித்து, அதிக மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றேன்.

மார்க்சியப் புரட்சி ஈர்ப்பால் மார்க்சியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சியில் 1972 முதல் செயல்பட்டேன். புரட்சி நடக்கப் போகிறது என்ற நம்பிக்கையுடன் செயல்பட்டேன்.

இந்திராகாந்தி அம்மையார் சனநாயக உரிமைகளைப் பறித்து – எதேச்சாதிகார நெருக்கடிநிலை அறிவித்தபோது, கட்சியில் ஒரு பகுதியினர் தலைமறைவாக இருந்து புரட்சிகரக் கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்று சி.பி.எம். தலைமை முடிவு செய்தது. தலைமறைவாகப் பணியாற்றத் தேர்வு செய்யப்பட்ட தோழர்களில் நானும் ஒருவன்.

பிடி ஆணை, பிடிக்கத் துரத்தும் காவல்துறை, தப்பித்துத் தப்பித்துத் தலைமறைவு வாழ்க்கை ஓராண்டு! அப்படித் தலைமறைவாக இருந்த போதுதான் எனக்கு இன்னொரு அம்மாவாகவும் விளங்கிய என் அம்மாச்சி மங்கலம் அம்மாள் காலமானார். அம்மாச்சியின் உடலைக் கட்டி அழுவதற்கோ, இறுதிச் சடங்கில் பங்கு பெறவோ எனக்கு வாய்ப்பில்லை, நான் தலைமறைவில்! துக்க வீட்டிலும் காவல்துறையினர்! சி.பி.எம். தோழர்கள்தாம் நான் செய்ய வேண்டிய கடமைகளையும் சேர்த்துச் செய்து, பெருங்கூட்டமாகச் சென்று என் அம்மாச்சிக்கான இறுதிச் சடங்குகளைச் செய்து எரியூட்டினார்கள்!

நான் கல்லூரிப் படிப்பை நிறுத்திய நிலையில், என் தந்தையார் காலமாகி விட்டார். எனவே அவர்க்குச் செய்ய வேண்டிய கடமைகளை ஆற்ற முடியாத பருவம் அது!

வியட்நாம் விடுதலைப் புரட்சி போல், தமிழ்நாடு விடுதலைப் புரட்சி நடைபெற வேண்டும் என்ற எண்ணம்தான் சி.பி.எம். கட்சியில் செயல்பட்டபோதும் என் மனத்தில் இருந்தது. சி.பி.எம். கட்சியை விட்டு நானும் தோழர்களும் வெளியேறிய பின் புரட்சிகரத் தனிக்கட்சி அமைத்து செயல்பட்டபோது, தமிழ்த்தேசியக் கருத்தியலை சமூக அறிவியல்படி நாங்கள் வளர்த்தெடுத்தோம்.

தமிழ்த்தேசியப் புரட்சி ஆயுதப் போர் அன்று; அது மக்கள் எழுச்சி என்று வரையறுத்தோம். பணம் – பதவி – விளம்பரம் மூன்றுக்கும் ஆசைப்படாத இலட்சிய வீரர்களைக் கொண்ட பாசறையாகத் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தை வளர்க்க முடிவு செய்து, அதற்கு எங்களை ஒப்படைத்துக் கொண்டோம்.

இதனால், என் தாயார், என் தம்பி ரெங்கராசு, என் தங்கை மணிமேகலை ஆகியோர்க்கு நான் ஆற்ற வேண்டிய கடமைகள் எதையும் செய்ய முடியவில்லை. நான் இளமையிலேயே வீட்டை விட்டு வெளியேறி புரட்சி அரசியலுக்கு வந்து விட்டதாலும், எங்கள் தந்தை நாங்கள் சிறுவர்களாக இருக்கும்போதே காலமானதாலும், என் தம்பி – தங்கை இருவரும் ஆறாம் வகுப்பு, ஏழாம் வகுப்பிற்கு மேல் படிக்க முடியவில்லை.

தந்தைக்கு அடுத்த நிலையில், என் குடும்பத்தினர்க்கு ஆற்ற வேண்டிய கடமைகளை என்னால் ஆற்ற முடியவில்லை.

தொண்ணூறு ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்த என் தாயாருக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை என்னால் ஆற்ற முடியவில்லை.

என்னுடைய அம்மாச்சி குடும்பம் நில உடைமைக் குடும்பம். என் தாத்தா (அம்மாச்சியின் கணவர்) சப்பாணிமுத்து ஆச்சாம்பட்டி பட்டா மணியக்காரர் (கிராம முன்சீப்). தமிழறிஞர் உலக ஊழியன் அவர்கள் முயற்சியில் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் பால பண்டிதம் படித்தார். என் தாத்தாவும் மற்ற பெரியவர்களும் எடுத்த முயற்சியால் 1937 வாக்கில் எங்கள் ஆச்சாம்பட்டியில் ஆங்கிலேயர் ஆட்சியில் ஐந்தாம் வகுப்பு வரை பள்ளிக் கூடம் தொடங்கப்பட்டது. அதில் என் தாயார் பார்வதி ஐந்தாம் வகுப்பு வரை படித்தவர்.

என் தாயார் பெயர் பார்வதி என்றாலும், அவரை பாப்பு என்று அழைப்பார்கள். என்னை பாப்பு மகன் என்று அழைப்பார்கள். “பார்ப்பு” என்ற சொல்லிலிருந்து பாப்பு உருவானது. “பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற்றுள் இளமை” – தொல்காப்பியம் (548). பறவைக் குஞ்சுகளை “பார்ப்பு” என்றும், “பிள்ளை” என்றும் அழைப்பது மரபு. அப்பெயர்களை செல்லமாகக் குழந்தைகளுக்கு வைத்தார்கள். “பார்ப்பு” என்பதுதான் “பாப்பா” என்றும், “பாப்பு” என்றும் ஆனது! ஆண் பிள்ளைகளுக்கும் பாப்பு என்று பெயர் வைப்பதுண்டு.

தாத்தா சப்பாணிமுத்து திருடர்கள் - சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கைகள் எடுத்ததால், அவர்கள் அவரைக் கொலை செய்தனர். இதனால் என் அம்மா படிப்பு ஐந்தாம் வகுப்புடன் தடைபட்டது.

என் தந்தைவழி நிலமும், என் தாத்தா வழி கிடைத்த நிலமும் எங்கள் குடும்பத்திற்குப் போதுமானது. ஆனால் என் படிப்பிற்காக ஒரு பகுதி நிலங்கள் விற்கப்பட்டன.

என் தாத்தா – அம்மாச்சி வழியாக எங்களுக்கு வந்த பத்து ஏக்கர் நிலத்தில்தான் என் மகன் செந்தமிழன் “செம்மை வனம்” வைத்துள்ளார். எங்கள் அம்மாச்சி வழியாகக் கிடைத்த எங்கள் ஆச்சான் வயலில்தான் பார்வதியம்மாள் இறுதி உறக்கம் கொள்கிறார்! அதுவும், அம்மாச்சியின் நினைவாக என் மகளுக்கு மங்கலம் என்று பெயர் சூட்டினேன். நான்கு வயதுக் குழந்தையில் மூளை நரம்பியல் நோய் ஏற்பட்டு, மங்கலம் இறந்துவிட்டது. குழந்தை மங்கலத்தை அடக்கம் செய்த நினைவிடத்திற்கு அருகில்தான், அவள் அப்பாயி பார்வதியம்மாள் படுத்துள்ளார்.

எவ்வளவோ தந்த என் தாயாரை நான் உரியவாறு கவனிக்கவில்லையே என்ற குற்ற உணர்வும், கவலையும் எனக்குண்டு. என் தாயாரை எந்த நாளும் நான் புறக்கணித்ததில்லை. என் பொது இலட்சியத்திற்கு என்னை ஒப்படைத்துக் கொண்டதால், என்னால் அவர்களை உரியவாறு பேணிட முடியாமற் போனது.

முதுமைக் காலத்தின் கடைசி ஆண்டுகளில் என் தங்கை மணிமேகலையும், அவர் மகள்களும்தான் என் அம்மாவை மிகச் சிறப்பாகப் பாதுகாத்தனர். என் மனைவி இலட்சுமி, தன் தாயைக் கவனித்ததைவிடப் பன்மடங்குக் கூடுதலாக தன் மாமியாரைக் கவனித்துக் கொண்டார். என் தம்பி ரெங்கராசும் அக்கறையோடு அம்மாவைக் கவனித்துக் கொண்டான்.

சி.பி.எம். கட்சியில் செயல்பட்ட போதும், இப்போது தமிழ்த்தேசியப் பேரியக்கத்தில் செயல்படும் போதும் எனது குடும்ப வாழ்வைக் கவனித்துக் கொண்டது இவ்விரு இயக்கங்களும்தான்! என் தாயாரின் இறுதிச் சடங்குகளுக்கான அனைத்துச் செலவுகளையும் பகிர்ந்து கொண்டோர் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்களே!

என்னால் அடைக்க முடியாத எனது நன்றிக்கடன் என் அம்மாவுக்கு மட்டுமல்ல, எங்கள் துயரத்தில் பங்கு கொண்ட உங்கள் அனைவருக்கும்தான்!


Labels:

பாரத ரத்தினா சாவர்க்கருக்குப் பின் கோட்சேவுக்கு! பெ. மணியரசன்

Sunday, November 10, 2019

பாரத ரத்தினா
சாவர்க்கருக்குப் பின் கோட்சேவுக்கு!

ஐயா பெ. மணியரசன்,
தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்.


விநாயக தாமோதர சாவர்க்கரின் “இந்துத்துவா”கொள்கை பக்தியினால் உருவானதன்று. வி.டி. சாவர்க்கர் பகுத்தறிவாளர்; அறிவியலுக்குப் புறம்பான பக்திக் கதைகளை, மூட நம்பிக்கைகளை ஏற்காதவர்!
பின்னர் எதற்காக, இந்து மதத்தை அடிப்படையாகக் கொண்ட “இந்துத்துவா”அரசியலை முன்னெடுத்தார்? இனக்கொள்கைக்காக; ஆரிய இனக் கொள்கைக்காக!
ஆரிய பிராமணமேலாதிக்கம் இந்து சமூகத்தில் நிலவ வேண்டும் என்பதற்காக! ஆரிய பிராமண மேலாதிக்கத்திற்கு எதிராக உள்ள இசுலாமிர்களை எதிர்ப்பதற்காக! சாவர்க்கர் பிராமணர்.
சந்திரநாத் பாசு என்ற வங்காளியால் முதல் முதல் கட்டமைக்கப்பட்ட சொற்கோவை “இந்துத்துவா”என்கின்றனர் ஆய்வாளர்கள். அச்சொற்கோவையைத் தனது ஆரிய பிராமண மேலாதிக்கவாத அரசியலுக்கான தத்துவச் சொல் ஆக்கினார் சாவர்க்கர்.
இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் இந்துக் கடவுள்களை வழிபடும் கோடிக்கணக்கான பெரும்பான்மை மக்களை இந்துமத அடையாளத்தை முதன்மைப்படுத்தி ஈர்த்துக் கொள்ளும் வசதி “இந்துத்துவா”கோட்பாட்டில் இருக்கிறது. ஆரிய சாணக்கிய உத்திதான் சாவர்க்கரின் இந்துத்துவா உத்தி! அதில் இந்து பக்தி இல்லை!
அந்தமான் சிறையிலிருந்து 1921இல் விடுதலையாகி சொந்த மாநிலத்தில் (மராட்டியம்) இரத்தினகிரியில் வசித்தார். "இந்து மகாசபா" என்ற மதவாத அமைப்பில் சேர்ந்தார். 1923இல் தனது “இந்துத்துவா”நூலை வெளியிட்டார்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு 1925 இல் தொடங்கப்பட்டது. இது தனியாகவும் இந்து மகாசபா தனியாகவும் செயல்பட்டன.
சாவர்க்கர் புகழ் பரப்புவதேன்?
-----------------------------------------------
ஆர்.எஸ்.எஸ்.சில் பயிற்சி பெற்றவர்கள் தொடங்கிய “சனசங்கம்”என்ற அரசியல் கட்சியோ, அதன் மறு பிறப்பான பா.ச.க.வோ சாவர்க்கரை அவ்வளவாகக் கண்டு கொள்ளவில்லை. இந்திய ஆட்சியை 1998இல் பிடித்தபின் சாவர்க்கர் புகழ்பேசத் தொடங்கியது பா.ச.க.! சாவர்க்கர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தலைநகரான போர்ட் பிளேர் வானூர்தி நிலையத்திற்கு “வீரசாவர்க்கர் பன்னாட்டு வானூர்தி நிலையம்” என்று 2002இல் பா.ச.க. ஆட்சி பெயர் சூட்டியது.

பின்னர், சாவர்க்கரின் இந்துத்துவா கோட்பாட்டை பிரபலப்படுத்தினர் பா.ச.க.வினர். இப்பொழுது சாவர்க்கருக்குப் “பாரத இரத்தினா” விருது வழங்க வேண்டும் என்கிறார், பா.ச.க.வின் உள்துறை அமைச்சர் அமித்சா. இந்திய வரலாற்றை சாவர்க்கர் பார்வையில் புதிதாக எழுத வேண்டும் என்கிறார் அவர்.
பா.ச.க. சாவர்க்கர் பக்கம் அதிகமாகச் சாய்வதேன்? ஜெய் ஸ்ரீ ராம், ஜெய் ஸ்ரீ அனுமான் முழக்கங்களும் வழிபாடும் மட்டுமே இந்துக்களை ஈர்க்கப் போதுமான தாக இல்லை.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இன அரசியல் முன்னுக்கு வருகிறது. மாநில கட்சிகள் அதிகமாகி விட்டன. இன அரசியலுக்கு ஈர்ப்பு அதிகம். இந்துத்துவா பேசும் சிவசேனை கூட மராத்திய இனப்பெருமை பேசுகிறது. “பசுமாட்டு வட்டாரம்”என்று அழைக்கப் படும் இந்தி மாநிலங்களுக்குத் தனித்தேசிய இனம் கூற முடியவில்லை. மொழிவழி மாநிலம் பிரிக்கப்பட்ட போது மொழி - தேசிய இனம் ஆகியவற்றின்படி பெரும்பாலான மாநிலங்கள் அமைக்கப்பட்டன. ஆனால் பசுமாட்டு வட்டாரத்தில் உத்தரப்பிரதேசம் (வடக்கு மண்டலம்), மத்தியப் பிரதேசம் (நடு மண்டலம்) என்று திசையை அடையாள மாகக் கொண்டு மாநிலங்கள் உருவாக்கப் பட்டன.
இந்து மதம் என்பதையே ஓர் இனமாக சித்தரிக்க இந்துத்துவா என்ற சொற்கோவையைப் பயன்படுத்து கின்றன ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள்.
இந்து என்பதை ஒரு தேசமாக - தேசிய இனமாக 1937 வாக்கில் பேசியவர் சாவர்க்கர்.
ஆமதாபாத்தில் 1937ஆம் ஆண்டு நடந்த இந்து மகா சபையின் 19ஆவது பேரவையில் தலைமை உரை ஆற்றிய போது சாவர்க்கர் பின்வருமாறு பேசினார் :
"இந்தியாவில் இரு தேசங்கள் அருகருகே வாழ் கின்றன. சிறுபிள்ளைத்தனமான அரசியல்வாதிகள் பலர் இந்தியா ஏற்கனவே ஒரே தேசமாக உருக்கி ஓட்ட வைக்கப்பட்டது என்று கருதுகிறார்கள்; அல்லது அவ்வாறு அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப ஒட்ட வைக்க முடியும் என்று கருதுகிறார்கள். இவையெல்லாம் நல்ல நோக்கம் தான். ஆனால் இவையெல்லாம் சிந்தனையுள்ள நண்பர்களின் பொய்க் கனவுகள். அவர்கள் (நம்மைப் பார்த்து) வகுப்புவாத அமைப்புகள் என்கின்றனர். ஆனால் பருண்மையான உண்மை என்ன? அவர்கள் கூறும் வகுப்புவாதங்கள் என்பவை - இந்துக்களுக்கும் முசுலிம்களுக்கும் இடையில் பல நூறு ஆண்டுகளாக வரலாறு வழங்கிய பண்பாடு - மதம் - தேசம் தொடர்பான பகைமை!
மகிழ்ச்சி அளிக்காத இந்த உண்மைகளை நாம் துணிச்சலாக சந்திக்க வேண்டும். இன்று இந்தியாவை ஒற்றைத் தன்மை உள்ள ஒரே உறுப்புகளைக் கொண்ட தேசம் என்று உணர முடியாது. முதன்மையாக இது இரண்டு தேசம் - இந்து தேசம், முஸ்லிம் தேசம்!
(V.D. Savarkar, Samagra Savarkar Wangmaya, Hindu Rashtra Darshan, Volume 6, Maharashtra prantik Hindu sabha, Poona 1963, page 296).
இந்தியாவை இரண்டு தேசம் என்று முதன் முதலில் பேசியது முஸ்லிம் லீக்கோ, முகமது அலி ஜின்னாவோ அல்ல - சாவர்க்கர் தான்! 1940இல்தான் முகம்மது அலி ஜின்னா இருதேசக் கோட்பாடு பேசுகிறார்.
மதம் வேறு இனம் வேறு
----------------------------------------
இந்து - முசுலிம் என்ற மத அடிப்படையில் இந்தியாவை இரு தேசங்களாகப் பார்த்தது சமூக அறிவியல்படி தவறு என்பதை வரலாறு மெய்ப்பித்து விட்டது. தேசிய இன அடிப்படையில் - பாக்கித்தானிலிருந்து வங்காள தேசம் பிரிந்து விட்டது. மேற்குப் பாக்கித்தானிலும் சிந்து மாநிலம், பக்தூன் மாநிலம் ஆகியவற்றில் தனிநாட்டுக் கோரிக்கை மக்கள் கோரிக்கையாக வளர்ந்துள்ளது.

இந்தியாவில் பஞ்சாப், அசாம், நாகாலாந்து உள்ளிட்ட பல மாநிலங்களில் தேசிய இனங்கள் தனிநாடு கேட்டுப் போராடுகின்றன. வெளிப்படையாக விடுதலைப் போராட்டம் நடத்தாத மாநிலங்களில் கூட தெலுங்கு தேசம், மகாராட்டிரம் (பெருந்தேசம்), வங்காளிதேசம், கன்னடதேசம், தமிழ்நாடு (தமிழ்த்தேசம்) என்ற சொந்த தேசிய இன உணர்வுகள்தான் மேலோங்கி உள்ளன.
ஒரே ஒரு எடுத்துக்காட்டு, மராட்டிய மாநிலத்தில் மக்கள் தலைராக உள்ளவர் தேசியவாதக் காங்கிரசின் தலைவர் சரத்பவார். அவர் மராட்டிய மாநில முதலமைச்சராக இருந்தபோது கூட்டுறவுத் துறையில் ஊழல் செய்து விட்டார் என்று நடுவண் அரசின் அமலாக்கத்துறை, இப்போது வழக்குப்பதிவு செய்திருப்பதாகவும், அது தொடர்பாக பவாரை விசாரிக்கப் போவதாகவும் அறிவித்தது.
அச்செய்தி வெளியானவுடன், 25.09.2019 அன்று மும்பையில் சரத்பவார் செய்தியாளர்களைச் சந்தித்து, “வீரசிவாஜியின் சித்தாந்தத்தின் வழிவந்த மராத்தியன் எவனும் தில்லிக்குத் தலைவணங்க மாட்டான். நானே நேரில் மும்பை அமலாக்கத்துறை அலுவலகம் சென்று “என்னை விசாரியுங்கள்”என்று கேட்கப் போகிறேன்”என்றுகூறி, அவ்வாறு செல்லும் நாளையும் குறிப்பிட்டார். இச்செய்தி 26.09.2019 அன்று ஏடுகளில் வெளியானது. மறுநாளே (27.09.2019) மும்பை மாநகரக் காவல் ஆணையர் சரத்பவாரை அவரது வீட்டில் சந்தித்து அவ்வாறு அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.
சாவர்க்கர் பிறந்த மராட்டியத்தில்தான் சரத்பவார் பிறந்தார். அது ஆரிய மூளை; இது மண்ணின் மகன் மூளை! இது தில்லி வேறு - மராட்டியம் வேறு என்று இயற்கையாகச் சிந்திக்கிறது. தில்லியில் இப்போது இருப்பது மோடியின் இந்துத்துவா அரசுதான்! சரத்பவார் தாமும் இந்து என்பதால் தமது மராத்தி இனப் பெருமிதத்தை விட்டுக் கொடுக்கவில்லை.
சரத்பவார் ஊழல் செய்தாரா - இல்லையா என்பது குறித்து இங்கு விவாதம் செய்யவில்லை. இந்தியத் தேசியம் பேசுவோரிடையே உள்ள இயற்கையான இன முரண்பாடுகளை எடுத்துக்காட்டவே இந்த நிகழ்வு இங்கு சுட்டப்பட்டது.
இந்தியா ஒரு தேசமன்று - இருதேசமன்று - பல தேசங்களைக் கொண்ட துணைக் கண்டம்!
“பாரத ரத்தினா”
------------------------
வி.டி. சாவர்க்கருக்குப் பாரத ரத்தினா விருது வழங்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்சா கோரிக்கை வைக்கிறார். சாவர்க்கரின் ஆய்வைப் பின்பற்றி இந்தியாவின் வரலாற்றைத் திருத்தி எழுத வேண்டும் என்கிறார்.

அப்படி என்ன வரலாற்று ஆய்வை சாவர்க்கர் நிகழ்த்தி விட்டார்? வெள்ளையரின் கிழக்கிந்தியக் கம்பெனியின் பட்டாளத்தில் இருந்த இந்து முசுலிம் வீரர்கள் இணைந்து, 1857-இல் உத்தரப்பிரதேச மண்டலத்தில் வெள்ளைப் படை அதிகாரிகளை எதிர்த்துப் ஆயுதப் போர் நடத்தினர். அதை ஆங்கிலேயர் சிப்பாயக் கலகம் என்றனர்; காலனி ஆதிக்க எதிர்ப்பாளர்கள் விடுதலைப் போர் என்றனர். இலண்டனில் வசித்த கம்யூனிசதத் தத்துவத் தலைவர் காரல் மார்க்ஸ் “சிப்பாய்க் கலகத்தை”19ஆம் நூற்றாண்டிலேயே இந்தியாவின் முதல் விடுதலைப் போர் என்றார்.
வெள்ளை அரசிடம் நான்கு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு சிறையிலிருந்து விடுதலையான பிறகு இந்து மகாசபையில் சேர்ந்து இந்து மதவாதக் கட்டுரைகள் எழுதிய சாவர்க்கர் 20ஆம் நூற்றாண்டில் மேற்படி “சிப்பாய்க் கலகத்தை”இந்திய விடுதலைப் போர் என்று எழுதினாராம்! அந்த வரலாற்று அறிவின் வெளிச் சத்தில் இந்தியாவின் புதிய வரலாற்றை - இந்துத்துவா பரப்புரைக்கு ஏற்ப எழுத வேண்டும் என்கிறார் அமித்சா! இந்தியாவின் முதல் விடுதலைப் போர் என்று சிப்பாய்ப் புரட்சியை - முதல் முதலாகக் கண்டு பிடித்தவரே சாவர்க்கர் தாம் என்பது போல் அமித்சா அளக்கிறார்.
ஆங்கிலேயர் ஆக்கியவை
-----------------------------------------
இந்தியா, இந்து மதம் என்பவையெல்லாம் வெள்ளைக்காரர்கள் உருவாக்கிய பெயர்கள்! இருநூறு ஆண்டுகளுக்கு முன் இந்தியா என்ற பெயரிலோ, பாரதம் என்ற பெயரிலோ ஒரு நாடு இருந்ததே இல்லை. நூற்ற மைப்பது ஆண்டுகளுக்கு முன் இந்து மதம் என்ற பெயரில் ஒரு மதமும் இருந்ததில்லை.

இந்தியா என்ற பெயரில் ஒரு நிர்வாகக் கட்டமைப்பு - ஒரு நாடு - பிரித்தானியப் பீரங்கிகளின் வல்லுறவால் பிறந்தது. பெற்றவர்கள்தாம் தங்கள் பிள்ளைக்கு இந்தியா என்று பெயர்ச் சூட்டினார்கள். இந்த நிலப்பரப்பில் தனித்தனியே ஆட்சி நடத்திய பல்வேறு இனங்களைச் சேர்ந்த அரசர்களையும் படைத் தலைவர்களையும் வீரர்களையும் சுட்டுக் கொன்றும் தூக்கிலிட்டுக் கொன்றும் அவர்களின் புதைகுழிகளின் மேல் இந்தியா என்ற பெயரில் புதிய ஆட்சியை நிறுவினர். சிந்து ஆற்றை அடையாளமாக வைத்து மேற்கத்திய வணிகர்கள் உருவாக்கிய இந்தியா என்ற பெயரை அந்த நாட்டிற்குச் சூட்டினர்.
இந்திய மொழி எதிலும் அதற்கு முன் இந்தியா என்ற பெயர் குறிப்பிடப்படவில்லை. புராணக் கதை ஒன்று, சகுந்தலைக்கும் துஷ்யந்தனுக்கும் பிறந்த பரதன் என்பவன் அரசனாகி, வடநாட்டில் ஒரு பகுதியை ஆண்டான் என்று கூறுகிறது. அந்தப் “பரதன்”ஆட்சிக்கும் தமிழர்களுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. ஓர் ஆற்றில், ஒரு துறையில் குளித்த தொடர்பு கூட (ஸ்நானப் பிராப்தி கூட) கிடையாது. தமிழர்களைப் போன்றே பல்வேறு இனத்தவர்களுக்கும் அந்தப் பரதனுடன் எந்தத் தொடர்பும் கிடையாது.
ஆணாகிய அந்தப் பரதனைத்தான் பெண்ணாக மாற்றி அனைத்திந்திய வலதுசாரிகளும், இடதுசாரிகளும் “பாரத மாதா”பசனை பாடுகின்றனர்! இதில் காவியும் சிவப்பும் அண்ணன் தம்பிகள்! அக்காள் தங்கைகள்!
இந்து மதம்
------------------
இந்து மதத்தைத் தோற்றுவித்த ஒரு குரு யாரும் இல்லை. இந்து மதத்திற்கென்று தலைமை பீடம் எங்கும் இல்லை. பல்வேறு சமயப் பிரிவுகளின தொகுப்பின் பெயர் இந்து மதம். கடவுள் உண்டு என்பவரும், இல்லை என்பவரும் சம உரிமையோடு இந்து மதத்தில் இருக்கலாம். கடவுள் மறுப்புக் கோட்பாடான உலகாய்தம் இந்து மதக் கோட்பாடுகளில் ஒன்றுதான்!

ஆரிய பிராமணர்கள் உருவாக்கிய வர்ணாசிரமம் - சாதிப் பிரிவுகள் - சாதி ஆதிக்கம் போன்றவை இந்து மதத்தின் அடிப்படைக் கூறுகள் என்று கூறும் இந்து மத மூல நூல் எதுவும் தமிழில் இல்லை. பகவத் கீதை என்பது கிறித்துவர்களுக்கு பைபிள் போல - இசுலாமியர்களுக்குக் குரான் போல இந்துக்களின் தவிர்க்க முடியாத தலைமை நூல் அன்று. தமிழ்ச் சைவர்கள் பகவத் கீதையை ஏற்க மாட்டார்கள். தமிழ் வைணவர்களும் பகவத் கீதையை ஏற்க வேண்டிய கட்டாயம் ஏதுமில்லை. தமிழ் வைணவர் களுக்கு ஆழ்வார்கள் பாசுரங்கள்தாம் இன்றியமை யாதவை! தமிழ் வைணவர்களின் கடவுள் பெருமாள் - திருமால்!
பகவத் கீதையை வியாசர் எழுதவில்லை; கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வாக்கில் ஆரிய பிராமண ஆதிக்க வாதிகளால் எழுதப்பட்டு அது மகாபாரதத்தில் இடைச் செருகலாக சேர்க்கப்பட்டது என்று இராகுல சாங்கிருத்தியாயன் உள்ளிட்ட பல்வேறு ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
கிறித்துவம், இசுலாம் என்பவை மதத்தின் பெயரே தவிர, இனத்தின் பெயர் அன்று. அதேபோல், இந்து என்பது மதத்தின் பெயரே தவிர, இனத்தின் பெயர் அன்று; தேசத்தின் பெயர் அன்று!
ஆரிய பிராமண ஆதிக்கவாதிகள் மெய்யான கடவுள் நம்பிக்கையாளர்கள் அல்லர்! அவர்கள் தங்கள் ஆதிக்கத்திற்கும் தங்களின் பொருள் சுரண்டலுக்கும் கடவுளைப் பயன்படுத்திக் கொள்பவர்கள்! கடவுளைப் பயன்படுத்தித் தூக்கி எறியும் ஆதிக்க வெறியர்கள்! நுகர்வு வெறியர்கள்! எந்த மோசடிக்கும் அஞ்சாதவர்கள்!
மதம் என்பது மொழி கடந்து, இனம் கடந்து, நாடு கடந்து பரவும் ஒரு கருத்தியல் தத்துவம்! அப்படித்தான் பௌத்தம், கிறித்துவம், இசுலாம் போன்ற மதங்கள் பல நாடுகளில் பரவியுள்ளன. இந்துக் கடவுள்களை - வர்ணசாதி சிறைக்குள் அடைத்தவர்கள் ஆரிய பிராமண மேலாதிக்கவாதிகள்! இந்து மதம் மற்ற மொழி - இன - நாட்டு மக்களிடம் பரவாமல் முள்வேலி போட்டு தடுத்தவை ஆரிய பிராமணியத்தின் கர்ம - தர்ம - தண்ட கோட்பாடுகள்!
எதையெடுத்தாலும் உலகு, உலகம் என்று நீதி நெறிகள் சொன்ன தமிழர்களின் ஆசீவகம், சிவநெறி, திருமால் நெறி ஆகியவை வெளியில் பரவாமல் தடுத்தது - ஆரிய பிராமண வேதமத ஆக்கிரமிப்பு!
பிறப்பு அடிப்படையில் சாதிப் புனிதம் - சாதி உயர்வு - சாதித் தீண்டாமை - சாதி இழிவு ஆகியவற்றைக் கற்பித்து நிலைநாட்டிய ஆரிய - பிராமண வர்ணசாதிக் கோட்பாடுகளின் ஆன்மிக - அரசியல் பெயர்தான் சாவர்க்கரின் இந்துத்துவா! இந்துக்களின் புனிதக் கனவான்களாக - மண்ணுலகக் கடவுள்களாக (பூசுரர்களாக)ப் பிராமணர்களைக் கற்பித்து அவர்களின் எசமானத்து வத்தை நிரந்தரப்படுத்துவதுதான் சாவர்க்கரின் - ஆர்.எஸ்.எஸ்., பா.ச.க. பரிவாரங்களின் இந்துத் துவா அரசியல்!
வீரசாவர்க்கரின் ‘வீரம்’
------------------------------------
இலண்டனில் படிக்கும்போது ஒரு வெள்ளை அதிகாரியைத் தாக்கிய வழக்கில் சிறைப்படுத்தப்பட்ட வி.டி. சாவர்க்கரை இந்தியாவுக்குக் கப்பலில் அழைத்து வரும்போது, வழியில் பிரஞ்சுத் துறைமுகத்தில் கப்பலில் இருந்து தப்பித்தார் சாவர்க்கர். பிரஞ்சு அதிகாரிகள் அவரைத் தளைப்படுத்தி ஆங்கிலேய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

அந்தமான் சிறையில் 1911-இல் அடைக்கப்பட்டார் சாவர்க்கர். அவர் 30.08.1911 அன்று சிறை அதிகாரிகளுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதி, கருணை அடிப்படையில் தன்னை விடுதலை செய்யும்படியும், விடுதலை செய்தால் வெள்ளைக்கார அரசுக்கு விசுவாசமாக நடந்து கொள் வேன், அரசியலில் ஈடுபடமாட்டேன் என்றும் உறுதி அளித்தார். வெள்ளை அரசு அவரின் கருணை மனுவை ஏற்க மறுத்தது.
அதன்பிறகு 14.11.1913இல் இரண்டாவது மன்னிப்புக் கடிதம் எழுதினார். “ஊதாரியாக ஊர் சுற்றிவிட்டுத் திரும்பிய மகனைப் போல் (Prodigal) என் பெற்றோராகிய அரசின் கதவைத் தட்டுகிறேன்”என்று அக்கடிதத்தில் கூறியிருந்தார். “என்னை விடுவித்தால், இந்திய மக்கள் பலரிடம் பிரித்தானிய ஆட்சி மீது நம்பிக்கை உருவாகும்”என்றும் எழுதியிருந்தார். இந்த மன்னிப்புக் கடிதத்தை ஏற்க மறுத்தது பிரித்தானிய அரசு.
மூன்றாவது மன்னிப்புக் கடிதத்தை 1917ஆம் ஆண்டு எழுதி அனுப்பினார் “வீர”சாவர்க்கர்! அக்கடிதத்தையும் ஏற்க மறுத்தது ஆங்கிலேய ஆட்சி. நான்காவது கருணை மனுவை 30.03.1920 அன்று பிரித்தானிய ஆட்சியாளர் களுக்கு அனுப்பினார் சாவர்க்கர். வழக்கம்போல் தனது கடந்தகால அரசியல் நடவடிக்கைகளுக்காக வருத்தம் தெரிவித்தும், அரசமைப்புச் சட்டத்திற்குக் கட்டுப்பட்டு நடப்பேன் என்றும் உறுதி கூறியிருந்தார்.
திலகர், காந்தி, பட்டேல் போன்ற தலைவர்கள் சாவர்க்கர் உள்ளிட்ட அரசியல் கைதிகளின் விடுதலையைக் கோரி வந்தனர்.
இந்நிலையில், நான்காவது மன்னிப்புக் கடிதத்தை ஏற்று ஆங்கிலேய ஆட்சியாளர்கள் சாவர்க்கரை விடுதலை செய்தனர். காந்தியை சுட்டுக் கொல்வதற்கு நாதுராம் கோட்சேயைத் தயார்ப்படுத்தியவர் என்ற குற்றச்சாட்டில் 1949-இல் சிறைப்படுத்தப்பட்டார் சாவர்க்கர். ஐயமறக் குற்றச்சாட்டு மெய்ப்பிக்கப்படவில்லை என்று கூறி - சாவர்க்கரை நீதிமன்றம் விடுதலை செய்தது.
இப்போது சாவர்க்கரின் இந்துத்துவாவை ஏற்றுக் கொண்டோரில் பலர் கோட்சேயைத் தியாகி என்று கொண்டாடுகிறார்கள்! காந்தி நினைவு நாளில் காந்தி பொம்மையைச் செய்து துப்பாக்கியால் சுடுகிறார்கள்.
பா.ச.க. ஆட்சி சாவர்க்கருக்கு “பாரத ரத்தினா” விருது கொடுக்க முனைகிறது. அதை அடுத்து, “பாரத ரத்தினா”விருது கோட்சேவுக்குக் கிடைக்கலாம்!
(தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம், 2019 நவம்பர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை இது).



Labels:

தி.மு.க.வும் தி.க.வும் இந்திய எதிர்ப்புக் கட்சிகளா? சுப.வீ. கட்டுரைக்கு எதிர்வினை பெ. மணியரசன்!

Monday, November 4, 2019

தி.மு.க.வும் தி.க.வும்
இந்திய எதிர்ப்புக் கட்சிகளா?

சுப.வீ. கட்டுரைக்கு எதிர்வினை

ஐயா பெ. மணியரசன்,
தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்.


என்னுடைய அன்பிற்குரிய தோழர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்கள், “ராஜீவ் மல்கோத்ராவும் ‘தோழர்’ மணியரசனும்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளார். அதில் உள்ள முக்கியமான சில கருத்துகளுக்கு என்னுடைய மறுமொழி வருமாறு :
“பிராமணர்களுக்கும் இந்தியாவுக்கும் எதிரான இயக்கம் என்பதால் திராவிட இயக்கத்தை எதிர்க்க வேண்டுமென்று அவாள் பேசுவார்கள். பிராமணர்களுக்கும் இந்தியாவுக்கும் ஆதரவான இயக்கம் என்பதால் திராவிட இயக்கத்தை எதிர்க்க வேண்டுமென்று இவாள் பேசுவார்கள். அதாவது இதுவொரு கத்திரிக்கோல் உத்தி” என்று எழுதியுள்ளார் பேரா. சுப.வீ.
இதில், “அவாள்” என்பது பிராமணர்களையும், “இவாள்” என்பது தமிழ்த்தேசியர்களையும் குறிக்கிறது.
தி.க.வினரை காங்கிரசில் சேரச் சொன்னார் பெரியார்
-----------------------------------------------------------------------------------
பிராமணர்களுக்கும் இந்தியாவிற்கும் திராவிட இயக்கம் நிரந்தரமாக – எதிராகச் செயல்படுவதாக சுப.வீ. கூறுகிறார். 1957 பொதுத் தேர்தலில் காஞ்சிபுரத்தில் அண்ணாவைத் தோற்கடித்து காங்கிரசின் சீனிவாச ஐயரை வெற்றி பெறச் செய்ய தீவிர பரப்புரை செய்த பெரியார், அண்ணாவை “வேசிமகன்” எனத் திட்டினாரே, அப்போது கூட பிராமணர் எதிர்ப்பில்தான் பெரியார் பரப்புரை செய்தாரா?

அதே 1957ஆம் ஆண்டு, மக்களவைத் தேர்தலில் தென்சென்னையில் தி.மு.க. ஆதரவுடன் போட்டியிட்ட நீதிக்கட்சியின் முக்கிய சிந்தனையாளர்களில் – செயல்பாட்டாளர்களில் ஒருவராய் இருந்த “சண்டே அப்சர்வர்” பி. பாலசுப்பிரமணியம் அவர்களை தோற்கடித்து, காங்கிரசின் டி.டி. கிருஷ்ணமாச்சாரி அவர்களை வெற்றிபெறச் செய்ய பெரியார் பரப்புரையில் ஈடுபட்டாரே, அப்போதும் பிராமண எதிர்ப்புக்காகத்தான் அதைச் செய்தாரா?
“திராவிடர் கழகச் சார்புடையவர்கள் ஆனாலும் சரி, தி.க. ஆதரவாளர்கள் ஆனாலும் சரி; அவர்கள் காங்கிரசில் சேர்ந்து தொண்டாற்ற ஆசைப்படுவார்களானால் தாராளமாக அவர்கள் இஷ்டப்படி நடந்து கொள்ளலாம்” என்றார் பெரியார். (விடுதலை, 18.08.1961). அனைத்திந்திய ஆட்சியையும் தமிழ்நாட்டு ஆட்சியையும் அப்போது காங்கிரசுதான் வைத்திருந்தது. அப்போது, அனைத்திந்திய காங்கிரசுத் தலைவர் நீலம் சஞ்சீவி ரெட்டி. அப்போது தலைமையமைச்சர் காசுமீர் பிராமணரான பண்டித நேரு! இதுதான் திராவிட இயக்கத்தின் இந்திய எதிர்ப்பா? பிராமணர் எதிர்ப்பா?
1965இல் இந்தி எதிர்ப்பு மாணவர்களை
சுட்டுக் கொல்லச் சொன்னார் பெரியார்
-------------------------------------------------------------
இந்திய அரசு இந்தியைத் திணித்தபோது, தமிழ்நாட்டில் மாணவர்கள் கிளர்ந்தெழுந்து மாபெரும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை நடத்தினார்கள். இந்தி எதிர்ப்பு உணர்ச்சியை மாணவர்களிடம் உருவாக்கியதில் தி.மு.க.விற்கு முக்கியப் பங்குண்டு. அந்த மாணவர் போராட்டம் தமிழர்களின் மக்கள் போராட்டமாக வளர்ச்சியடைந்தது. அந்தப் போராட்டத்தை ஒடுக்க காவல்துறையையும், இந்திய இராணுவத்தையும் மத்திய மாநில காங்கிரசு ஆட்சிகள் ஏவிவிட்டன. நானூறு பேருக்கு மேல் சுட்டுக் கொல்லப்பட்டனர். அப்போது, பெரியார் விட்ட அறிக்கையை மட்டும் சுட்டிக் காட்டுகிறேன்.

“தமிழ்நாட்டில் எங்கே உள்ளது இந்தி? யார் வீட்டு பையனை இந்தி படி என்று எந்த பள்ளியில் யார் கட்டாயப்படுத்தினார்? பத்திரிக்கைக்கார அயோக்கியர்களும், பித்தலாட்ட அரசியல்வாதிகளும் இந்தி கட்டாயம் என்று கட்டி விட்டது கண்டு, எல்லா மக்களும் 'இந்தி' 'இந்தி' என்று இல்லாத ஒன்றை இருக்கிறதாக எண்ணிக்கொண்டு மிரள்வதா? ஆரம்பத்திலே நான்கு காலிகளை சுட்டிருந்தால் இந்த நாச வேலைகளும் இத்தனை உயிர்ச்சேதமும் உடமை சேதமும் ஏற்பட்டு இருக்காது. எதற்காகக் கையில் தடி, துப்பாக்கி? எதற்கு? முத்தம் கொடுக்கவா கொடுத்துள்ளார்கள்? இது என்ன அரசாங்கம்? வெங்காய அரசாங்கம்” - பெரியார். (சான்று : 1965 மே 28 முதல் 30 வரை பெரியாரின் அறிக்கைகளையும், உரைகளையும் தொகுத்து வந்துள்ள “கிளர்ச்சிக்குத் தயாராவோம்” நூல், பக்கம் 6, 10, 14, 15).
தமிழ்நாட்டு மாணவர்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் எதிராக - இந்திய அரசுக்கு ஆதரவாக செயல்பட்ட பெரியாரின் மேற்கண்ட நடவடிக்கைகள் இந்தியாவிற்கு எதிரானதா? தமிழ்நாட்டிற்கு எதிரானதா? திராவிடத் “தத்துவ”த்தில் இதற்கு விடை உண்டா?
இந்தித் திணிப்பை அப்போது எதிர்த்த தி.மு.க. திராவிடக் கட்சியா? இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராடியவர்களை சுட்டுக் கொன்ற பெரியாரின் தி.க. திராவிடக் கட்சியா? சுப.வீ. சொன்ன உவமையை இங்கு பொருத்தலாம் – தி.க.வும், தி.மு.க.வும் கத்தரிக்கோல் போல், எதிரெதிராக இயங்கி இணைந்து செயல்பட்டிருப்பார்களோ?
பெரியாரின் தி.மு.க. எதிர்ப்பும் திராவிடக்கொள்கை தானா?
1957 தேர்தலிலிருந்து 1967 தேர்தல் வரை அண்ணாவையும், தி.மு.க.வையும் வீழ்த்தி காங்கிரசை வெற்றி பெறச் செய்ய கடும் பரப்புரையும், களப்பணியும் ஆற்றிய பெரியாரும் திராவிடர் கழகத்தினரும் திராவிடவாதிகளா? இந்தியத்தேசியவாதிகளா? திராவிடர் கழகத்தின் – பெரியாரின் முதல் எதிரிகளாக அவர்களால் கருதப்பட்ட தி.மு.க.வினர் திராவிடவாதிகளா? இல்லையா? பேராசிரியர்தான் ஆய்வுரை வழங்க வேண்டும்.

“அடைந்தால் திராவிடநாடு, இல்லையேல் சுடுகாடு!” என்று முழங்கிய அண்ணா அவர்கள், 1963ஆம் ஆண்டு தனித்திராவிட நாட்டுக் கோரிக்கையைக் கைவிடும்போது, “எல்லையில் சீனப் படையெடுப்பு! வீடு இருந்தால்தான் ஓடு மாற்றிக் கொள்ளலாம்; இந்தியா இருந்தால்தான் திராவிடநாடு அடைய முடியும்” என்று சொல்லி, தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிட்டாரே, அப்போது அண்ணா இந்திய ஆதரவாளராக இருந்தாரா? எதிர்ப்பாளராக இருந்தாரா? இந்தியாவைத் தன் வீடாகக் கருதினார் அண்ணா! அதுதான் இந்திய எதிர்ப்பா?
தி.மு.க. – காங்கிரசு, பா.ச.க.
கூட்டணிகள் திராவிட உறவுதானா?
---------------------------------------------------------
1971 மக்களவைத் தேர்தலில் இந்திரா காங்கிரசுடன் கலைஞர் கருணாநிதி கூட்டணி சேர்ந்தார். 1975 நெருக்கடிநிலைப் பிரகடனத்திற்குப் பின் 1976 சனவரி 31-இல் முதலமைச்சர் கலைஞர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி ஆட்சியைக் கலைத்தார் இந்திரா காந்தி. 1980 மக்களவைத் தேர்தலில் அதே இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்த கலைஞர் கருணாநிதி, “நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சி தருக!” என்று முழக்கம் விடுத்து மீண்டும் கூட்டணி சேர்ந்தார். அப்போது கலைஞர் இந்திய ஆதரவாளராக இருந்தாரா? இந்திய எதிர்ப்பாளராக இருந்தாரா?

1999இலிருந்து 2003 வரை பா.ச.க. தலைமையில் கூட்டணி சேர்ந்து நடுவண் அமைச்சரவையில் தி.மு.க. பதவி வகித்தது. அப்போதும் தி.மு.க. இந்திய எதிர்ப்பாளராக, பிராமணிய ஆதிக்க எதிர்ப்பாளராக, இந்துத்துவா எதிர்ப்பாளராகத்தான் இருந்ததா?
சுப.வீ. போன்ற தி.மு.க.வின் தீவிரப் பரப்புரையாளர்கள் திராவிடத்தின் இந்துத்துவா எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில், “இனிமேல் பா.ச.க.வுடன் தி.மு.க. கூட்டணி சேராது” என்று தளபதி ஸ்டாலின் அவர்கள் வெளிப்படையாக அறிக்கை வெளியிடுமாறு கோருவார்களா? அவ்வாறு அறிக்கை வெளியிடச் செய்வார்களா?
மாநிலக்கொடியில் கருணாநிதியின் சரணாகதி
--------------------------------------------------------------------------
1970களில் தமிழ்நாட்டிற்குத் தனிக்கொடி வேண்டும் என்று கோரிக்கை வைத்த முதலமைச்சர் கருணாநிதி, அதற்கான மாதிரிக் கொடியை வெளியிட்டார். அதில், இந்திய அரசுக் கொடியின் படத்தை மேலே போட்டு, அதற்குக் கீழே தமிழ்நாடு அரசின் கோயில் முத்திரைச் சின்னத்தைப் பொறித்திருந்தார். அப்போது, கலைஞர் கருணாநிதி – இந்திய ஆதரவாளராக இருந்தாரா, எதிர்ப்பாளராக இருந்தாரா?

அடுத்து, தான் கேட்ட தனிக்கொடி திட்டத்தை அம்போவெனக் கைவிட்டு குட்டிக்கரணம் போட்டு, இந்திய அரசுக் கொடியை இந்திய விடுதலை நாளில் ஏற்றுவதற்கு இந்தியத் தலைமையமைச்சரிடம் மனுப் போட்டு, அவர் அனுமதியைப் பெற்று முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி மூவண்ணக்கொடி ஏற்றினார். அப்போது, கலைஞர் கருணாநிதி – இந்தியதேசியவாதியா? “மாநில சுயாட்சி” வீரரா?
கர்நாடகத்தில் காங்கிரசு முதலமைச்சராக இருந்த சித்தராமையா தயாரித்த மாநிலக் கொடியில் இந்திய அரசுக் கொடி இல்லை. ஒரு காங்கிரசுத் தலைவருக்கு இருந்த இனப்பற்று, மாநிலப்பற்று, துணிச்சல் ஆகியவற்றுக்கு ஈடாக கலைஞர் கருணாநிதியிடம் இந்தப் பண்புகள் இல்லை!
கலைஞர் கருணாநிதி தன்னையும் தி.மு.க.வினரையும் “இனத்தால் திராவிடன்; மொழியால் தமிழன்; நாட்டால் இந்தியன்” என்று அடையாளப்படுத்தி “திராவிட சித்தாந்தப் பொன்மொழி” ஒன்றை உருவாக்கிப் பேசி வந்தாரே, அப்போதும் கலைஞர் இந்தியதேசிய எதிர்ப்பாளர் தானா?
தி.க - தி.மு.க.வின் பிராமணிய சரணாகதிப் படலம்
-------------------------------------------------------------------------------
கலைஞர் கருணாநிதிக்கும் ஆசிரியர் வீரமணிக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக திராவிடர் கழகம், தி.மு.க. ஆதரவு நிலையை விலக்கிக் கொண்டு செயலலிதா தலைமையிலான அ.இ.அ.தி.மு.க. ஆதரவு நிலையை 1990களில் எடுத்தது. சட்டமன்றத்திலேயே தன்னை பாப்பாத்தி என்று சவால் விட்டு அறிவித்துக் கொண்ட செயலலிதா புகழ் பாடுவதையே அப்போது அன்றாட அரசியலாக்கிக் கொண்டார் ஆசிரியர் வீரமணி. புகழ்ச்சியின் உச்சமாக வல்லம் பெரியார் கல்லூரிக்கு செயலலிதாவை அழைத்து “சமூகநீதி காத்த வீராங்கனை” பட்டம் அவருக்கு வழங்கினார் வீரமணி. அதுவும் பிராமணிய எதிர்ப்புதானா?

திராவிட முன்னேற்றக் கழகம் 1962-க்குப் பிறகு, இராசாசியுடன் நல்லுறவு வைத்துக் கொண்டு கூட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டது. 1967 பொதுத்தேர்தலில் இராசாசியின் சுதந்திரா கட்சியுடன் தி.மு.க. கூட்டணி சேர்ந்து தொகுதிப் பங்கீடு செய்து கொண்டது. அப்போது, தேர்தல் பரப்புரையில் பிராமணர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைத்தார் இராசாசி! “பிராமணர்கள் ஒரு கையால் தங்கள் பூணூலைப் பிடித்துக் கொண்டு, மறு கையால் உதயசூரியனுக்கு வாக்களியுங்கள்” என்று பேசினார். அப்பொழுதும், திராவிடம் இந்துத்துவா எதிர்ப்பில் – பிராமண எதிர்ப்பில்தான் இருந்ததா?
திராவிடர் பற்றிய பெரியாரின்
வர்ணணை சமூக அறிவியலா?
-------------------------------------------------
“தமிழர் என்றால் தாங்களும் தமிழர் என்று பார்ப்பனர்கள் சேர்ந்து கொள்வார்கள். திராவிடர் என்றால் அதில் பிராமணர்கள் சேர முடியாது” என்று வரலாற்றியல், மானிடயியல் அறிஞர்கள் யாரும் கூறாத ஒரு கருத்தை பெரியார் கூறினார். ஆனால், உண்மையில், ஆரிய பிராமணர்களுக்கு மட்டுமே “திராவிடர்” என்ற பெயர் உருவானது என்ற செய்தியை வரலாற்று ஏடுகளிலிருந்து நாங்கள் தொகுத்துக் கொடுத்துள்ளோம்.

திராவிடத்தின் தந்தைமாரில் ஒருவராக விளங்கக்கூடிய கால்டுவெல் ஆரிய நூல்களான மனுதர்மத்திலிருந்தும், குமாரிலபட்டரின் தந்திரவார்த்திகாவிலிருந்தும் “திராவிட” என்ற சொல்லை எடுத்தேன் என்று தன்னுடைய “திராவிட அல்லது தென்னிந்திய மொழிகளின் ஒப்பிலக்கணம்” நூலில் குறிப்பிட்டுள்ளார். இன்றைக்கு ”திராவிட பிராமண மேட்ரிமோனி” (Dravida Brahmin Matrimony) என்பதை இணையதளத்தில் தட்டினால், எத்தனை திராவிட பிராமண சங்கங்கள் இருக்கின்றன, எத்தனை திராவிட பிராமணப் பிரிவுகள் இருக்கின்றன என்பது தெரிய வரும்!
இன்றைக்கும், ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள புதூரில் தமிழ்நாட்டிலிருந்து குடியேறிய பிராமணர்கள் வாழ்கிறார்கள். அவர்கள் “புதூரு திராவிட சங்கம்” என்று வைத்துள்ளார்கள். புதூரு பிராமணர்கள் மட்டுமே அதில் உறுப்பினர்கள்! (காண்க : http://www.pdassociationnellore.comhttp://pudurdravida.com). சென்னையில் தென்கனரா திராவிட பிராமணர் சங்கம் - பதிவு செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது. (The South Kanara Dravida Brahmin Association, Chennai) - பதிவு 1953 அக்டோபர் 19. (http://www.skdbassociation.com).
பிரித்தானியக் கலைக்களஞ்சியம் “திராவிடன்” என்ற சொல்லுக்கு விளக்கம் அளிக்கும்போது, “இச்சொல் முதன் முதலில் தென்னிந்தியாவில் வாழும் பிராமணர்களை மட்டுமே குறித்தது. பிற்காலத்தில், கெடு வாய்ப்பாக இந்தப் பெயரால் மண்ணின் மக்களையும் குறிக்கும் நிலை உருவானது” என்று கூறுகிறது. (காண்க : http://gluedideas.com/Encyclopedia-Britannic…/Dravidian.html).
குசராத்தி, மராத்தி, தெலுங்கு, கன்னடம், தமிழ் பேசும் தாயகங்களில் வாழும் பிராமணர்களைக் குறிக்க “பஞ்ச திராவிடர்கள்” என்ற சொல்லும் வரலாற்று ஏடுகளில் காணக்கிடைக்கிறது. பிராமணர்களைத்தான் “பஞ்ச திராவிடர்கள்” என்று அழைத்தார்கள். ஐயமிருந்தால், பேராசிரியர் தொ. பரமசிவன் அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்!
தி.மு.க. கோவையில் 1950இல் நடத்திய “முத்தமிழ்” மாநாட்டில் நாவலர் சோமசுந்தர பாரதியார், அண்ணல் தங்கோ போன்ற தமிழறிஞர்கள் பங்கேற்றுப் பேசினர். அப்போது, திராவிடர் என்பதற்கு தமிழ் இலக்கியத்தில் சான்று எதுவுமில்லை என்று கூறி, திராவிடம் என்ற சொல்லைக் கைவிடுமாறு அண்ணாவிடம் இவ்விருவரும் கேட்டுக் கொண்டனர். அதற்கு அண்ணா விடையிறுக்கும்போது, சென்னை மாநிலக் கல்லூரி வாயிலில் நிற்கும் உ.வே.சாமிநாதய்யர் சிலையின் கீழே “திராவிட வித்யா பூசணம்” என்று எழுதப்பட்டிருப்பதையும், “சனகணமன” பாட்டில் “திராவிட” என்ற சொல் வருவதையும் சான்றாகக் காட்டினாரே தவிர, சங்க இலக்கியத்திலிருந்தோ, காப்பிய இலக்கியத்திலிருந்தோ சான்று காட்டவில்லை! அப்போதும், அண்ணா காட்டிய “திராவிட”ச்சான்றுகள் ஆரியம் சார்ந்தவையே!
மேற்கண்ட வரலாற்றுப் பின்னணியில்தான், ஆய்வு அடிப்படையிலும் அரசியல் நிலைபாட்டு அடிப்படையிலும் திராவிடம் என்பது ஆரியத்தின் இளைய பங்காளி என்று துல்லியமாகச் சொல்கிறோம். இப்பொழுதும், ஆரியத்தின் இளைய பங்காளியாகத்தான் இந்திய ஏகாதிபத்தியத்தின் தமிழ்நாட்டு காவல் அரணாகத்தான் திராவிடம் செயல்படுகிறது.
2008 – 2009 ஆண்டுகளில் சிங்களப் பேரினவாத அரசு ஈழத்தில் தமிழின அழிப்புப் போரை நடத்தியது. அதற்கு, எல்லா வகையிலும் இந்திய ஆட்சியாளர்கள் துணை நின்றார்கள். இந்திய அரசு ஈழத்தில் போர் நிறுத்தம் கோர வேண்டுமென்று கூறி, அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி அரை நாள் உண்ணாப் போராட்டம் நடத்தினார். ஆனால், இந்திய அரசு போர் நிறுத்தம் கேட்க மறுத்துவிட்டது. உண்ணாப்போராட்டத்தோடு முடித்துக் கொண்டது மட்டுமில்லை, ஈழத்தில் தமிழினப் போருக்குத் துணை நின்ற இந்திய அரசில் தி.மு.க. பதவி வகித்துப் பலன் அனுபவித்தது. இந்த தமிழினத்துரோகமும் திராவிடத்தின் இந்திய எதிர்ப்பு தானோ?
தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்
தோழர் கி. வெங்கட்ராமன் குறித்து..
-------------------------------------------------------------------------
பேராசிரியர் சுப.வீ. அவர்களுடைய இன்னொரு முகாமையான கேள்வி இதோ : “தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அவர்கள் ஏன் திராவிடத்தை எதிர்ப்பதில்லை? பூனைக்குட்டி வெளியில் வந்துவிடும் என்பதாலா? உண்மையில் வெங்கட்ராமன்தான் பேசுகிறார். மணியரசன் வாய் அசைக்கிறார். அவர் நெஞ்சில் கள்ளம் இல்லையென்றால், அவரும் நேரடியாகப் பேச வேண்டும் தானே?”

“பிராமண வகுப்பில் பிறந்த தோழர் வெங்கட்ராமன்தான் சிந்திக்கும் ஆற்றல் உடையவர். பிராமணர் அல்லாத தமிழினத்தில் பிறந்த மணியரசன் சிந்திக்கும் ஆற்றல் அற்றவர். வெங்கட்ராமனுக்கு ஊதுகுழலாக இருக்கிறார்” என்று சுப.வீ. பேசும்போது, அவர் மணியரசனை அவமானப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு, தமிழினத்தையே அவமானப்படுத்துகிறார்.
ஏனெனில், “தமிழர்களுக்கு சிந்திக்கும் ஆற்றல் இல்லை, தமிழர்கள் முட்டாள்கள், தமிழ் மொழி காட்டுமிராண்டி மொழி” என்று பேசிய பெரியார் மரபில் வந்தவரல்லவா! எனவே, பிராமணர்களால் மட்டுமே கூர்மையாக சிந்திக்க முடியும் என்ற அடிமை உளவியலில் இருந்து சுப.வீ. போன்றவர்கள் இன்னும் விடுபடாமல் இருப்பது வருத்தத்திற்குரியது!
எனது இந்தக் கருத்தை, சற்றொப்ப பத்தாண்டுகளுக்கு முன் பேராசிரியர் சுப.வீ. அவர்களிடம் தஞ்சாவூரில் எங்களது இயக்க அலுவலகத்தின் வாசல் அருகில் மரநிழலில் நின்று பேசிக் கொண்டிருக்கும்போது நான் கூறியிருக்கிறேன். அப்போதும், “வெங்கட்ராமன் தான் உங்களைக் கெடுத்துவிட்டார்” என்று சொன்னார். “தமிழனுக்கு சொந்தமாக சிந்திக்கும் ஆற்றல் இல்லை எனக் கருதுகிறீர்களா சுப.வீ.?” என்று நான் கேட்டேன்.
தோழர் கி. வெங்கட்ராமன் திராவிடத்தைப் பற்றி விமர்சிக்காமல் இருப்பதற்குக் காரணம், திராவிடவாதிகள்தான்! நீங்கள் கருத்தளவில் விவாதம் செய்ய மாட்டீர்கள், பிராமணியர்களைப்போல பிறப்பிலிருந்து விவாதம் செய்வீர்கள். கருத்துக்கு விடை சொல்லாமல், அவர் பிராமண வகுப்பில் பிறந்ததைக் கூறி, உடனே உங்களின் ஆதரவாளர்களை களிப்படையச் செய்வீர்கள். அப்போது, கருத்தளவில் தருக்கம் நடக்காது. அது பிறப்பளவில் திசைமாறிப் போகும்!
எனவே, தோழர் கி.வெ. திராவிடம் குறித்த தருக்கத்தில் பங்கு கொள்ளாமல் இருக்கிறார். அதேசமயம், தி.க. – தி.மு.க.வில் இருப்பவர்களைவிட நடைமுறையில் பிராமணிய எதிர்ப்பாளர் தோழர் கி. வெங்கட்ராமன். படிக்கும் காலத்திலேயே பூணூலை அறுத்தெறிந்துவிட்டு, மனித சமத்துவ சிந்தனை வசப்பட்டு, மார்க்சியக் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்குத் தேடி வந்து எங்களோடு இணைந்தவர் தோழர் கி.வெ.! தன்னுடைய இரு மகள்களுக்கும் பிராமணரல்லாத வகுப்பில் பிறந்தவர்களைத் தேடித் திருமணம் செய்து வைத்தவர். ஆரியத்தை - பிராமணியத்தை அவருடைய கட்டுரைகள், சொற்பொழிவுகள் வாயிலாக மட்டுமின்றி, நடைமுறையிலும் எதிர்த்து வருபவர். இந்துத்துவாவை எதிர்த்து, அரிய கருத்துகள் கொண்ட பல கட்டுரைகளை அவர் எழுதியுள்ளார்.
திராவிடவாதிகள் தருக்கம் செய்வதைவிட, குறுக்குவழியில் குதர்க்கம் செய்வதில் நாட்டமுடையவர்கள். அதனால்தான், அவர்களோடு நேரடி தருக்கத்தில் அவர் ஈடுபடவில்லை.
தமிழ்த்தேசியத்தின் மரபும் வீரமும்
--------------------------------------------------------
தமிழ்த்தேசியப் பேரியக்கம், திராவிடவாதிகளைப் போல் பிராமணர்களைக் கண்டு அஞ்சும் இயக்கமல்ல! வர்ணாசிரமத்தை – பிராமணியத்தை எதிர்க்கக்கூடியவர்கள் பிராமணர்களில் இருந்தாலும், வெளிப்படையாக அவர்களை வரவேற்கக்கூடிய இயக்கம் – தமிழ்த்தேசியப் பேரியக்கம். எங்கள் இயக்கத்தில் உறுப்பினராக்கிக் கொள்வோம். இதில் எந்த ஒளிவுமறைவுமில்லை! அதேபோல், ஆரிய எதிர்ப்பில் - பிராமணிய ஆதிக்க எதிர்ப்பில் ஈடுபடாதவர்களை – அவர்கள் மரபுவழித் தமிழினத்தில் பிறந்திருந்தாலும், தமிழ்த்தேசியப் பேரியக்கம் உறுப்பினர்களாக ஏற்பதில்லை!

வெளிப்படையாக ஆரியத்தை – பிராமணியத்தை – இந்துத்துவாவை – இவற்றை செயல்படுத்தி வரும் இந்திய அரசை தமிழ்த்தேசியப் பேரியக்கம் எதிர்த்து வருகிறது. நாங்கள் தி.மு.க.வைப் போல், காங்கிரசுடனோ, பா.ச.க.வுடனோ கூட்டணி சேர்வதில்லை. கூட்டுப் போராட்டங்களும் நடத்துவதில்லை!
தமிழ் இனம் வரலாறு நெடுக ஆரியத்தை – பிராமணியத்தை எதிர்த்தே வந்திருக்கிறது. இதற்கான இலக்கியச் சான்றுகள் ஏராளமாக இருக்கின்றன. அதேபோல், வர்ணாசிரம தர்மம், சாதி உயர்வு தாழ்வு இவற்றையெல்லாம் தமிழினம் எதிர்த்தே வந்திருக்கிறது. சங்க இலக்கியங்கள், திருக்குறள் போன்றவை மனித சமத்துவத்தைத்தான் பேசுகின்றன.
தமிழர் ஆன்மீகம் கூட பழங்கால ஆசீவகமாக இருந்தாலும், சிவநெறியாக இருந்தாலும், திருமால் நெறியாக இருந்தாலும், ஆரிய வர்ணாசிரம தர்மத்தை ஏற்கவில்லை; எதிர்த்தே வந்திருக்கிறது. திருமூலர் கூறிய “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்” என்ற பொன்மொழியைத் தான், அண்ணா தன்மொழியாக ஏற்றுக் கொண்டார். வள்ளலாரின் சமத்துவ ஆன்மீகம் ஆரிய வர்ணாசிரம எதிர்ப்பில் கருக்கொண்டது. தமிழர் ஆன்மீகம், தமிழ்ப் பெருமையைத்தான் – தமிழர் பெருமிதத்தைத்தான் கூறி வந்திருக்கிறது. இவ்வாறான வரலாற்று வழியில் வந்த எங்களது இக்காலத் தமிழ்த்தேசியம், ஆரிய பிராமணிய சித்தாந்தத்தையும் அதன் இன மேலாதிக்கத்தையும், வர்ணாசிரம தர்மத்தையும், சாதி ஒடுக்குமுறைகளையும் இந்திய ஏகாதிபத்தியத்திய அரசியலையும் தொடர்ந்து எதிர்த்து வருகிறது.
அதேபோல், வெளியார் சிக்கலில் 1956 நவம்பர் 1-க்கு முன்பிருந்து தமிழ்நாட்டில் வாழக்கூடியவர்களும், அவர்களின் வழி வந்தவர்களும் தமிழ்நாட்டின் மண்ணின் மக்களே, அவர்கள் சம உரிமை உள்ளவர்கள் என்றுகூறி, அவர்களின் தமிழ்த்தேசிய ஈடுபாட்டிற்கேற்ப அவர்களையும் உறுப்பினராக்கிக் கொள்கிறோம். அவர்களும் பொறுப்புகளுக்குத் தேர்வாகிறார்கள். தெலுங்கு, கன்னடம், உருது, மராத்தி, சௌராட்டிரம் போன்ற மொழிகளைப் பேசக் கூடிய மக்கள் நானூறு – ஐநூறு ஆண்டுகளாக இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு மரபுவழித் தமிழர்களுக்கு உள்ள அனைத்து உரிமைகளும் உண்டு என்பது தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் கொள்கை!
பேராசிரியர் சுப.வீ. அவர்களை, தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர் என்று சிலர் விமர்சித்தபோது, அதை நாங்கள் கண்டித்தோம். பிறமொழி பேசுவோர் பற்றிய எங்கள் மேற்கண்ட நிலைபாட்டை அப்பொழுதும் கூறியிருக்கிறோம். சுப.வீ. அவர்கள் மரபுவழித் தமிழினத்தைச் சேர்ந்தவர் என்ற உண்மையையும் கூறியிருக்கிறோம்.
மேற்கண்ட எமது வினாக்களுக்கு சுப.வீ. அவர்கள் விடை கூறட்டும்; அதன்பிறகு பார்ப்போம்!

Labels:

திருவள்ளுவர் சிலை அவமதிப்பு : உலகெங்கும் தமிழர்கள் பதற்றம்! குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்க! பெ. மணியரசன் அறிக்கை!



திருவள்ளுவர் சிலை அவமதிப்பு :
உலகெங்கும் தமிழர்கள் பதற்றம்!
குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்க!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
பெ. மணியரசன் அறிக்கை!

தமிழர்களுக்கு மட்டுமின்றி, உலக மக்களுக்கு உரிய வாழ்வியல், அரசியல், அறம் ஆகிய கோட்பாடுகளை வழங்கியவர் திருவள்ளுவப் பெருந்தகை. அவர் அனைத்து மக்களுக்கும் பொதுவானவர் என்பதால்தான் உலகத்திலேயே மிக அதிகமான மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்ட சமயச் சார்பற்ற நீதி நூலாக அவர் தந்த திருக்குறள் விளங்குகிறது. தஞ்சை பிள்ளையார்பட்டியில் தமிழினப் பேராசான் திருவள்ளுவர் சிலையை இழிவுபடுத்திய கயவர்களை தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

மாறுபட்ட கருத்துடைய குழுக்களிடையே – மக்கள் பிரிவுகளிடையே ஏற்படும் கருத்து மோதல்களுக்கு அப்பாற்பட்டவர் திருவள்ளுவர். அவர் தமிழினத்தின் உலக அடையாளமாக விளங்குகிறார். அவருடைய சிலையை இழிவுபடுத்துவதாக நினைத்து, இத்தீச்செயலில் ஈடுபட்டவர்கள் தங்களைத்தான் இழிவுபடுத்திக் கொண்டுள்ளார்கள். ஒருவன் தன்னைப் பெற்ற தாய் மீது சாணியை வீசி இழிவுபடுத்தியது போன்றதுதான், இந்தத் தீச்செயல்!

தமிழினப் பேராசான் திருவள்ளுவப் பெருந்தகையின் சிலையை இழிவுபடுத்திய கயவர்களையும், அவர்களுக்குப் பின்புலமாக உள்ளவர்களையும் உடனடியாகக் கண்டறிந்து கைது செய்திட காவல்துறையை முழு ஆற்றலுடன் தமிழ்நாடு அரசு செயல்பட வைக்க வேண்டும். இதில் காலத்தாழ்வு ஏற்படக் கூடாது. காலத்தாழ்வு ஏற்பட்டால், தமிழ்நாடு முழுவதும் பதட்டநிலை கூடுதலாகும் வாய்ப்பிருக்கிறது. தமிழ்நாடு அரசு விரைந்து செயல்படுமாறு தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095

முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


Labels:

”தேவிகுளம் பீரிமேடு மீட்பும் திராவிட குழப்பங்களும்” பெ. மணியரசன், சிறப்புக் கட்டுரை!

Friday, November 1, 2019

”தேவிகுளம் பீரிமேடு மீட்பும்
திராவிட குழப்பங்களும்”

ஐயா பெ. மணியரசன்,
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.


(2011 திசம்பரில் தமிழ்நாட்டில் முல்லைப் பெரியாறு அணை காக்க தமிழ் மக்களிடையே எழுந்த எழுச்சியையொட்டி, தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2012 பிப்ரவரி 1-15 இதழில் வெளியான கட்டுரை - காலத்தேவை கருதி இங்கு மீண்டும் வெளியிடப்படுகிறது).
மக்கள் சீறியெழுந்து தெருவுக்கு வந்து போராடத் தொடங்கிவிட்டால், அவர்கள் தாங்கள் செல்ல வேண்டிய திசையை சரியாகத் தீர்மானித்துக் கொள்வார்கள். முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்புப் போராட்டம் இதற்கோர் எடுத்துக்காட்டு!
ஈழத்தமிழர்களை இலட்சக் கணக்கில் கொன்றழித்த இராசபட்சே கும்பலை இனப் படுகொலைக் குற்றவாளிகளாகத் தண்டிக்க வேண்டும் என்று எழுந்த மக்கள் போராட்டம், இராசீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனையை நிறைவேற்றத் துடித்த இந்திய அரச்சைத் தடுத்து நிறுத்தி மூன்று தமிழர் உயிர்காக்க மூண்டெழுந்தப் போராட்டம், முல்லைப்பெரியாறு அணை உரிமை மீட்கக் கிளர்ந்தெழுந்த மக்கள் பேரழுச்சி கேரளத்தில் அப்பாவித் தமிழ் மக்களைத் தாக்கிய மலையாளிகளுக்குப் பாடம் புகட்டத் தமிழகத்தில் தந்த பதிலடி போன்றவை அனைத்தும் காலம் காலமாக வஞ்சிக்கப்பட்ட தமிழர்களின் இன உணர்ச்சி அணை உடைத்த வெள்ளம் போல் சீறிப் பாய்ந்த வெளிப்பாடுகள் ஆகும்.
எதிரி நம்மை இன அடிப்படையில் தாக்கும் போது நாமும் இன அடிப்படையில்தான் எதிரியோடு போராடவேண்டும். இந்த உண்மையை நம் மக்கள் புரிந்து கொண்டு போராடினார்கள். நாற்காலி நாயகர்கள் நடத்தும் தேர்தல் கட்சிகளால் நம் மக்களைப் பிளவுபடுத்த முடியவில்லை. அவர்களின் அறிக்கைகள் அடையாளப் போராட்டங்கள், மக்கள் எழுச்சியை மடை மாற்றவோ, நீர்த்துப்போகச் செய்யவோ முடியவில்லை.
முல்லைப்பெரியாறு அணை உரிமையை மீட்பது மட்டுமின்றி, மலையாளிகளிடம் நாம் இழந்த தமிழ் மண்ணையும் மீட்க வேண்டும் என்று தமிழ்மக்கள் முழக்கமிட்டனர். முதல் கட்டமாக இடுக்கி மாவட்டத்தை மீட்க வேண்டும் என்று இடிமுழக்கம் செய்தனர். கூடலூர் லோயர் கேம்ப், கம்பம் மெட்டு ஆகிய இடங்களில் இருபத்தைந்தாயிரம், ஐம்பதாயிரம், எண்பதாயிரம் எனக் குவிந்த மக்கள் ‘எங்கள் சொந்த மண்ணான இடுக்கி மாவட்டத்தைத் தமிழ்நாட்டுடன் இணைப்போம்’ என்று எழுப்பிய முழக்கம் மேற்குத் தொடர்ச்சி மலைகளை அதிரச் செய்தது. அம்மலைத் தொடர்களுக்கு அப்பால் இடுக்கி மாவட்டத்தில் வாழும் தமிழர்கள் ‘இடுக்கி மாவட்டத்தைத் தமிழ்நாட்டுடன் இணை’’ என்று எதிரொலித்துப் பேரணிகள் நடத்தினர்.
ஏற்கெனவே தமிழ்த் தேசிய அமைப்புகளும் தமிழின உணர்வாளர்களும், இன உணர்வு ஏடுகளும் தேவிகுளம் பீரி மேட்டைத் தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்று குரல் கொடுத்து வந்தனர். இப்பொழுது அது மக்கள் முழக்கமாகியுள்ளது. மூணாறு, தேவிகுளம், பீரிமேடு, குமுளி, தேக்கடி, கண்ணகி கோயிலின் ஒரு பகுதி, முல்லைப்பெரியாறு அணை முதலிய அனைத்துத் தமிழ்ப் பகுதிகளும் இடுக்கி மாவட்டத்தில்தான் உள்ளன.
மொழிவழி மாநிலங்கள் அமைக்கப் பட்டபோது, இந்தியா தமிழினத்தை வஞ்சித்து விட்டது. மொழிவழி மாநிலங்களின் எல்லைகளை வரையறுக்க அமைத்த ஆணையத்தில் மலையாளியான கே.மாதவப் பணிக்கரை (சர்தார் கே.எம். பணிக்கர்) ஓர் உறுப்பினராய் பிரதமர் நேரு அமர்த்தியதே தமிழினத்திற்கெதிரான நோக்கம் கொண்டதாகும்.
மூன்று பேர் கொண்ட அவ்வாணையத்தில் இன்னொரு உறுப்பினர் இந்திக்காரரான குன்ஸ்ரூ. அதன் தலைவர் பீகாரியான பசல் அலி.
திருவிதாங்கூர்-கொச்சி சமஸ்தானத்தில் மலையாளிகளின் ஆளுகையின்கீழ் நொய்யாற்றின் கரை, நெடுமங்காடு, கொச்சின் சித்தூர், தோவாளை அகத்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு, செங்கோட்டை, தேவிகுளம், பீரிமேடு, பாலக்காடு ஆகிய தமிழ்ப்பகுதிகள் சிக்கியிருந்தன. அவற்றை தமிழ்நாட்டுடன் இணைக்கவேண்டும் என்ற கோரிக்கையும் அதற்கான இயக்கமும் 1945-இல் திருவிதாங்கூர் சமஸ்தானத் தமிழர்களிடம் வடிவமெடுத்தன.
திருவிதாங்கூர்- கொச்சி மாநில (கேரள)க் காங்கிரசில் பொறுப்பு வகித்த, உறுப்பு வகித்த தமிழர்கள் இன அடிப்படையில் மலையாளிகளின் தலைமையில் இயங்கிய திருவிதாங்கூர்-கொச்சி காங்கிரசிலிருந்து விலகி திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு என்ற தமிழர்களுக்கான அமைப்பை உருவாக்கிக் கொண்டனர். 1945 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் நாள் நாகர்கோவிலில் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு அமைக்கப்பட்டது.
இதன் இலட்சியம்: திருவிதாங்கூர் சமஸ்தானப் பகுதியில் உள்ள தமிழக நிலப்பரப்பைத் தாய்த்தமிழ்நாட்டுடன் இணைப்பது என்பதாகும்.
இதன் நோக்கங்கள்: 1. தமிழ்மொழி வளர்ச்சி, 2. அனைத்திந்தியக் காங்கிரசின் வேலைத்திட்டங்களை ஒட்டி இந்திய விடுதலைக்குப் பாடுபடுவது. 3. திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் சிறுபான்மையாக. உள்ள தமிழர் உரிமைகளைப் பாதுகாப்பது. இவ்வமைப்பு தமிழர் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைக்க வலியுறுத்திப் பல போராட்டங்கள் நடத்தியது.
மொழிவழி மாநில எல்லைகளைப் பரிந்துரைக்க அமைக்கப்பட்ட பசல் அலி ஆணையம் தனது அறிக்கையை 1955 அக்டோபர் 10 ஆம் நாள் வெளியிட்டது. தமிழ்நாடு பற்றி அதன் பரிந்துரை வருமாறு:
சென்னை மாநிலத்தில் உள்ள மலபார் மாவட்டத்தைக் கேரளத்தோடும், தென் கன்னட மாவட்டத்தை மைசூரோடும் சேர்த்துவிட வேண்டும்.
திருவிதாங்கூர்-கொச்சி மாநிலத்தில் உள்ள கல்குளம் விளவங்கோடு, தோவாளை அகத்தீசுவரம், செங்கோட்டை ஆகிய தமிழ் வட்டங்களை (தாலுகாக்களை) சென்னை மாநிலத்துடன் இணைக்க வேண்டும் சென்னை மாநிலம் என்ற பெயர் நீடிக்க வேண்டும்.
சென்னை நகரம் தமிழ் மாநிலத்திற்கே உரியதாய் அதன் தலைநகரமாய் இருக்க வேண்டும்.
சென்னை மாநில-ஆந்திர மாநில எல்லைச் சிக்கலை அதற்கென அமர்த்தப்படவிருக்கும் எல்லை ஆணையம் கிராம அடிப்படையில் திருத்தி அமைப்பதை (பசல் அலி) ஆணையம் ஏற்றுக் கொள்கிறது.
தேவிகுளம், பீரிமேடு, பாலக்காடு, நெய்யாற்றின்கரை, நெடுமங்காடு, கொச்சின், சித்தூர் ஆகியவை தமிழ்நாட்டுடன் சேர்க்கப்படவில்லை. அதே போல் கோலார் தங்கவயல், கொள்ளேகாலம் ஆகியவை தமிழ்நாட்டுடன் சேர்க்கப்படவில்லை.
இப்படி சேர்க்கப்படாத பகுதிகளைக் கேட்டு, தமிழ் நாட்டுத் தமிழ் மக்கள் ஆத்திரப் படவுமில்லை. தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் போர்க் கோலம் பூணவுமில்லை. அமைதி நிலவியது.
செங்கோட்டை வட்டம் முழுவதையும் பசல் அலி ஆணையம் தமிழகத்திற்கு வழங்கியிருந்தது. தமிழகத்தின் அசைவற்ற நிலையைப் பார்த்த மலையாளிகள் இந்திய அரசில் செல்வாக்கு செலுத்தி வளமான காட்டுப்பகுதிகளைக் கொண்ட செங்கோட்டை வட்டம் கேரளத்திற்கும் செங்கோட்டை நகர் மட்டும் தமிழகத்திற்கு என்றும் மாற்றிவிட்டனர். அதன்பிறகும் தமிழ்நாடு கொந்தளிக்கவில்லை.
பசல் அலி ஆணைய அறிக்கை 10.10.1955 அன்று வெளிவந்தது. அன்றே பெரியாரிடம் தினத்தந்திச் செய்தியாளர் இது குறித்து நேர்காணல் நடத்தினார். தேவிகுளம் பீரிமேடு தொடர்பான செய்தியாளர் கேள்வியும் பெரியார் அளித்த விடையும் வருமாறு:
நிருபர்: தமிழ் தாலுகாக்கள் (1).தேவிகுளம், (2).பீர்மேடு, (3).நெய்யாத்தங்கரை, (4). கொச்சின் சித்தூர் ஆகிய தாலுக்காக்கள் மலையாளத்துடன் சேர்ந்து விட்டதே! இது பற்றி உங்கள் கருத்தென்ன?
ஈ.வெ.ரா: இது பற்றி எனக்குக் கவலை இல்லை. மலையாளத்துடன் அவைகளைச் சேர்க்க வேண்டியது தான்.
நிருபர்: கவலையில்லை என்கிறீர் கள். அவைகள் தமிழ் தாலுகாக்கள் தானே!
ஈ.வெ.ரா: ஆமாம். சமீபத்தில் சென்னைக்கு சர்தார் பணிக்கர் (மொழி வாரி மாகாணக் கமிட்டி மெம்பர்) வந்திருந்தார். அவரை நான் சந்தித்துப் பேசினேன்.
‘தொழிலுக்காக தமிழர்கள் அங்கு வந்தார்களே தவிர நிலம் மலையாளத்தைத்தான் சேர்ந்தது’ என்று பணிக்கர் சொன்னார். நானும் ’சரி’ என்று சொல்லிவிட்டேன்.
இவ்வாறு ஈ.வெ.ரா. கூறி முடித்தார். திருச்சியிலுள்ள பெரியார் மாளிகையில் இந்தப் பேட்டி நடந்தது. (தினத்தந்தி 11.10.1955)
பசல் அலி அறிக்கை வெளியானவுடன் தி.மு.க குறிப்பிடும்படி எந்த எதிர்ப்பும் காட்டவில்லை. காமராசரும் காங்கிரசும் எதிர்ப்புப் காட்டாதது ஒரு செய்தியே அன்று. தெற்கெல்லை மீட்புப் போராட்டம் காமராசரின் விருப்பத்திற்கெதிராகவே கன்னியாகுமரி மாவட்டப் பகுதியில் நடந்து கொண்டிருந்தது. திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசை காமராசர் எதிர்த்தே வந்தார்.
"பசல் அலி அறிக்கை தமிழினத்திற்கு அநீதி இழைத்து விட்டது’" என்று உடனடியாக செய்தியாளர்களிடம் கூறினார் ம.பொ.சி. அத்தோடு நில்லாமல் பெரியார், அண்ணா ஆகியோரையும் மற்ற தலைவர்களையும் தனித்தனியே நேரில் சந்தித்து தேவிகுளம், பீரிமேடு வட்டங்களை மீட்க அனைத்துக் கட்சிப் போராட்டம் நடத்த வேண்டும் என்று அழைத்தார்.
மா.பொ.சி.யின் முயற்சியால் 27.1.1956 அன்று சென்னை ஏழு கிணறு ஜி. உமாபதி இல்லத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது. முதலில் வர ஒப்புக்கொண்ட பெரியார், கூட்டத்திற்கு வரவில்லை. அண்ணா கலந்துகொண்டார்.
ம.பொ.சி. கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு வரமுடியாததற்கான காரணங்களைத் தெரிவித்து அடுத்தடுத்து மூன்று அறிக்கைகள் வெளியிட்டார் பெரியார். அவை விடுதலை ஏட்டில் 25.1.1956, 26.1.1956, 27.1.1956 ஆகிய நாள்களிட்டு பெரியார் கையொப்பமிட்ட அறிக்கைகளாக வந்தன. அவற்றின் சாரம் இதுதான்:
தேவிகுளம்- பீரிமேடு வட்டங்களை இணைக்கும் ஒற்றை கோரிக்கையாக மட்டும் அனைத்துக் கட்சிப் போராட்டம் நடக்கக் கூடாது.
1) எல்லைக் கமிசன் என்பது எல்லை வரையறுப்பதில் நமக்கு ( தமிழர்களுக்கு) செய்துள்ள ஓர வஞ்சனையான காரியங்களைத் திருத்துதல்.
2) இந்தி மொழியை யூனியனுக்கு ஆட்சி மொழியாகவும், இந்தியாவுக்குத் தேசிய மொழியாகவும் ஆக்கப்படாமல் தடுப்பது.
3) தமிழ் யூனியன் ஆட்சி என்பதில் படை, போக்குவரத்து, வெளிநாடு உறவு தவிர்த்த மற்ற அதிகார ஆட்சி உரிமைகள் தமிழ்நாட்டுக்குக் கிடைக்கும்படிச் செய்தல் (தனித்தமிழ்நாட்டுக் கோரிக்கைக்குப் பாதகமில்லாமல் இக்கோரிக்கையை வைக்கிறோம்).
4) தமிழ்நாட்டைப் பிரித்து அதற்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டல், சென்னை, மதராஸ் என்ற பெயர்களை நீக்கல்.
5) தென்மண்டலம் (தட்சி ணப்பிரதேசம்) அமைக்க உள்ளதை எதிர்த்தல்.
மேற்கண்ட ஐந்து கூறுகளும் ஒருங்கிணைக்கப்படாததால் ம.பொ.சி. கூட்டிய கூட்டத்திற்கு போகவில்லை என்று பெரியார் கூறுனார். இவை பற்றி ம.பொ.சியிடம் ஏற்கெனவே பேசியுள்ளதாகவும் தமது அறிக்கையில் குறிப்பிட்டார்.
அந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளக்கூடாது என்பதற்காகவே இத்தனை கோரிக்கைகளையும் பெரியார் இணைத்திருப்பார் என்று நாம் கருதப் பல காரணங்கள் உண்டு.
அனைத்துக் கட்சிப் போராட்டம் நடத்த வேண்டிய உடனடித்தேவை ஏற்பட்டது, இரண்டு காரணங்களுக்காக 1) பசல் அலி குழு தமிழகத்திற்கு இழைத்த அநீதியைப் போக்கி, குறைந்தது தேவிகுளம் பீர்மேட்டையாவது தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்பதற்காகவே. 2) சென்னை ராஜ்ஜியம் என்ற பெயர் நீடிக்க வேண்டும் என்று பசல் அலி குழு பரிந்துரைத்திருந்தது. அதை மாற்றித் தமிழ்நாடு என்று பெயர் மாற்ற வேண்டும்.
தட்சிணப் பிரதேசத் திட்டத்தை இராசாசி தவிர மா.பொ.சி. உள்ளிட்ட அனைவரும் எதிர்த்தனர்.
இந்த உடனடிக் கோரிக்கைகளுடன் நீண்டகாலக் கோரிக்கைகளான மாநில சுயாட்சி, இந்தி இந்தியாவின் ஆட்சிமொழியாக இருக்கக் கூடாது என்பவற்றை பெரியார் இணைத்தது சரியா?
எடுத்துக்காட்டாக முல்லைப்பெரியாறு அணை உரிமை மீட்புப் போராட்டம் இப்பொழுது கூட்டுப் போராட்டமாகவும் நடக்கிறது. அந்தந்த அமைப்பின் போராட்டமாகவும் நடக்கிறது. இதற்கான கூட்டுப் போராட்டத்தில் நெய்யாற்றின் கரை, நெடுமங்காடு, கொச்சின் சித்தூர், பாலக்காடு, தேவிகுளம், பீரிமேடு ஆகிய அனைத்துப் பகுதிகளையும், தமிழ்நாட்டோடு இணைக்க வேண்டும் என்று கோரிக்கையில் சேர்த்துக் கொண்டால்தான் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சேரும் என்று நிபந்தனை போடலாமா? கூடாது. கூட்டுப் போராட்டத்திற்கான உத்தி அதுவன்று. மேற்கண்ட தமிழ் நிலப்பகுதிகளைத் தமிழ் நாட்டுடன் இணைக்க வேண்டும் என்பது த.தே. பொ.க. வின் உறுதியான கொள்கை. அதைத் த.தே.பொ.க. வின் தனிப்போராட்டத்தில் வைத்துக் கொள்ளலாம். அந்த நிலமீட்புக் கோரிக்கைக்கும் கூட்டுப் போராட்டம் நடத்தும் காலம் வரும். ஆனால் இப்பொழுது முல்லைப்பெரியாறு அணை உரிமை மீட்பில் முதற்பெரும் கவனம் இருக்க வேண்டும். அந்த அடிப்படையில்தான் கூட்டுப் போராட்டம் நடத்த ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்க 21.12.2011 அன்று ம.திமு.க. முன்னெடுத்தக் கூட்டுப் போராட்டத்தில் த.தே.பொ.க.வும் பங்கேற்றது.
ம.பொ.சி. தேவிகுளம் பீர்மேட்டை மீட்பதற்கு அழைத்த கூட்டுப் போராட்டத்தில் கலந்து கொள்ள இந்தித் திணிப்பு எதிர்ப்பு, மாநில சுயாட்சி ஆகிய நிபந்தனைகளைப் போட்டார் பெரியார். காமராசரையும் காங்கிரசையும் ஆதரிக்க அவர் இந்த நிபந்தனைகளை போட்டாரா? இல்லை..
1957, 1962 தேர்தல்களில் காங்கிரசு வெற்றிக்காக உழைக்க மேற்கண்ட நிபந்தனைகளைப் போட்டாரா? 1965-இல் மாணவர்கள் நடத்திய மாபெரும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை எதிர்த்தாரே பெரியார் ஏன்? காங்கிரசு ஆதரவு நிலையிலிருந்து கொண்டு தான் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை எதிர்த்தார்.
மாணவர்கள் உள்ளிட்ட தமிழர்களை முந்நூறுக்கும் மேற்பட்டோரை காங்கிரசு ஆட்சி 1965-இல் சுட்டுக் கொன்றது. அப்போதும் காங்கிரசு ஆட்சியைத்தான் பெரியார் ஆதரித்தார். ஆனந்த விகடன் ஏடு அப்போது பெரியாரிடம் நேர்காணல் நடத்தியது. அந்நேர்காணலை நடத்தியோர் சாவி மற்றும், மணியன். அது வருமாறு:
சாவி: அந்தக் காலத்துலே இந்தியை எதிர்த்துப் போராட்டமெல்லாம் நடத்தினீர்களே, இப்ப ஏன் சும்மா இருக்கீங்க?
பெரியார்: அப்படியா? மன்னிக்கணும்; இப்ப இந்தி எங்கே இருக்குது? தெரியாமத்தான் கேக்குறேன். சொல்லுங்கோ?
சாவி: இந்தி தான் ஆட்சி மொழியா வந்துட்டுதே..
பெரியார்: எங்கே வந்துட்டுது? உனக்குத்தான் இங்கிலிஷ் இருக்குதே. இந்தியா ஒண்ணா இருக்கணும்னா பொதுவா ஒரு ஆட்சிமொழி வேணும்தானே? இந்திக்காரன் உங்க மாதிரி இங்கிலீஷை நினைக்கலையே. இங்கிலீஷ் அவமானம்னு நினைக்கிறானே. தமிழ்நாட்டுக்காரன் சொல்றபடி இந்தியா நடக்குமா? அது ஜனநாயகமா?
- ஆனந்தவிகடன் 11.4.1965

1965 மொழிப்போர் நடந்து முடியும் தருவாயில் பெரியார் கூறிய கருத்துகள் இவை. அப்போழுது எங்கே போயிற்று அவரது இந்தி ஆதிக்க எதிர்ப்பு? தனித் தமிழ்நாட்டுக் கோரிக்கைக்குப் பாதகமில்லாமல் அவர் ம.பொ.சி.யிடம் கேட்ட மாநில சுயாட்சிக் கோரிக்கை காங்கிரசை ஆதரித்த போதெல்லாம் எங்கே போயிற்று? இந்தியா ஒன்றாக இருக்க வேண்டுமெனில் இந்தி ஆட்சி மொழியாக இருப்பதுதான் சனநாயகமென்று 1965-இல் பேசுகிறார்.
இந்தித் திணிப்பு எதிர்ப்பு, மாநில சுயாட்சி ஆகிய கோரிக்கைகளையும் சேர்த்துக் கொண்டால் தேவிகுளம், பீரிமேடு மீட்புப் போராட் டத்திற்கு வருகிறேன் என்று கூறிய பெரியார், பசல் அலி ஆணைய அறிக்கை வந்த போது 10.10.1955 அன்று தேவிகுளம், பீரிமேடு வட்டங்கள் கேரளத்துடன் சேர்க்கப்பட்டது ’’சரிதான்’’ என்று ஆதரித்தார் என்பதை முன்னர் பார்த்தோம் (தினத்தந்தி, 11.10.1954).
ஆந்திர, கர்நாடக, கேரளப் பகுதிகள் இணைந்திருந்த சென்னை மாகாணத்தை மொழிவழி மாநிலங்களாகப் பிரித்து, தமிழ்நாடு உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் 1948-இல் பெரியார் எதிர்த்தார்.
‘சென்னை மாகாணத்தை நான்கு கூறுகளாக ஆக்க வேண்டுமென்பது கண்டிப்பாக அரசியல் வாழ்வையே தங்கள் ஜீவனமாக, வியாபாரமாக, பதவி- பட்டம்- பணம் சேர்த்தல் முதலிய காரியங்களுக்கு வழி யாக வைத்துக் கொண்டு வாழ்க்கை நடத்தும் சிலர் தங்கள் நலனுக்காக இதை- இந்தப் பிரிவினையை வேண்டு வார்களானால், வலியுறுத்து வார்களானால் அதற்கு இடம் கொடுப்பது திராவிட கலாச் சாரத்துக்கும் திராவிட சமுதா யத்துக்கும், திராவிடத் தலை மொழியாகிய தமிழுக்கும் தேய்வு- அழிவு ஏற்பட்டு விடு மென்று எச்சரிக்க விரும்பு கிறேன்" -_ பெரியார், விடுதலை 1. 8. 1948.
மொழி அடிப்படையில் தமிழ்நாடு அமைவதை-, அதற் காகக் கோரிக்கை வைப்பதை இங்கு எதிர்க்கிறார் பெரியார். மொழிவழி மாநிலம் கோரு வோர் காட்டுமிராண்டிகளின் பிரதிநிதிகள் என்று இராசாசி 1956-இல் பேசினார்.
1948இல் மொழிவழி மாநிலப் பிரிவினையை எதிர்த்த பெரி யார் 1955-இல் தமிழ்நாடு தனிநாடாக வேண்டும் என் கிறார். என்னே தன் முரண்பாடு! அத்தோடு அவர் நிற்கவில்லை. 1948-இல் அவர் போற்றிய திராவிடச் சமுதாயத்தின் திராவிடக் கலச்சாரத்தின் ஒரு பகுதியாக விளங்கும் மலையாளி களை என்ன சாடு சாடுகிறார் பாருங்கள். 1956-இல் அவர் பேசியது:
“ஏறக்குறைய பார்ப்பனக் குறும்பும் மலையாளக்குறும்பும் ஒன்றுதான். இரண்டிற்கும் ஒற்றுமை அதிகம். பார்ப் பானுக்குள்ள புத்தியெல்லாம் மலையாளிக்கும் உண்டு. பார்ப் பனனைப் போலவே மலை யாளிகள் மான ஈன மில்லா தவர்கள். மற்ற நாட்டில் போய் அண்டிப் பிழைக்கிறோமே என்ற எண்ணம் கூட இருக் காது. எதற்கெடுத்தாலும் திமி ராகப்பேசவும், பார்ப்பனர் களைப் போல் தந்திரமாகப் பேசவும் தெரியும்.’’
- வேலூரில் பெரியார் உரை 29. 1. 1956 (இதை விடுதலை நாளேடு- 18. 1. 2012இல் ஒரு கட்டுரையில் வெளியிட்டுள் ளது)
பெரியார் சொற்களில் சொன்னால் பார்ப்பனர்களைப் போன்ற மலையாளிகளையும் சேர்த்துக்கொண்டது தானே அவர் கூறி வந்த திராவிடம், அவர் உரத்துப்பேசிய திராவிட சமுதாயம் மற்றும் திராவிடக் கலாச்சாரம். சென்னை மாகாணத்திலிருந்து மலபார் மாவட்ட மலையாளிகளை பிரித்து அனுப்பக் கூடாது என்றுதானே மொழிவழித் தமிழக அமைப்பை 1948 -இல் எதிர்த்தார்!
அன்றன்றைக்கு அவர் எடுத்த அரசியல் நிலைபாட்டிற்கேற்ப வெவ்வேறு வரையறுப்புகளைக் கூறிவந்துள்ளார் பெரியார்.
தமிழ்த் தேசிய இனம் குறித்து சமூக அறிவியல் வழிப்பட்ட வரையறுப்பு அவரிடம் இல்லை.
சென்னை மாகாணத்தி லுள்ள தெலுங்கர், கன்னடர், மலையாளிகள் பிரிந்து போகக் கூடாது என்று 1948-இல் கூறிய பெரியார், இந்த நான்கு மாநிலங்களையும் சேர்த்து நேரு முன்மொழிந்த தட்சிணப் பிரதேசத்தை அவர் ஆதரித் திருக்க வேண்டும்.
சென்னை மாகாணத்தி லிருந்து தெலுங்கு, கன்னட, மலையாளப் பகுதிகளைப் பிரித்துவிடக் கூடாது என்று பேசிய பெரியார் 1956-இல் அந்த இனங்களோடு தமிழர்களும் சேர்ந்து ஒரே மாநிலமாக இருப்பதை ஏன் எதிர்த்தார்?
அப்படி ஒரு மாநிலம்- அதாவது தட்சிணை பிரதேசம் அமைந்து விட்டால் திராவிடர் கழகம் தமிழர்களிடம் மட்டும் உள்ள சின்னஞ் சிறு அமைப் பாக சிறுத்துப் போயிருக்கும். திராவிடத்தையும் பெரியாரை யும் ஏற்காத தெலுங்கர்கள், கன்னடர்கள், மலையாளிகளே தட்சிணப்பிரதேசத்தில் பெரும் பான்மையாக இருந்திருப்பார்கள்.
மொழிவாரி மாநிலத்திற்குக் குரல் கொடுக்காத காமராசர், தெற்கெல்லை வடக்கெல்லை மீட்புப் போராட்டங்களை ஆதரிக்காத காமராசர், தட்சி ணப் பிரதேசம் அமைவதை மட்டும் ஏன் எதிர்த்தார்? தட்சிணப்பிரதேசம் அமைந்து விட்டால் அதில் காமராசர் முதலைமைச்சராகத் தொடர முடியாது. பெரும்பான்மை இனமான தெலுங்கர்களே பெரும்பாலும் முதலமைச்சர் ஆவர். அதுமட்டுமல்ல, தங்க ளுக்குள் முரண்பாடுகள் இருந் தாலும் தெலுங்கர்களும், கன்னடர்களும், மலையாளி களும் தமிழரை எதிர்ப்பதில் ஒன்று சேர்ந்து விடுவார்கள். எனவேதான் காமராசர், தட்சிணப் பிரதேசத்தை எதிர்த்தார்.
எனவே, தட்சிணப் பிரதேச அமைப்பை எதிர்த்ததில், பெரி யாருக்கும், காமராசருக்கும் அவரவர் எதிர்காலம் சார்ந்த பார்வை இருந்ததே தவிர, தமிழ்த் தேசிய இனம், தனி இனம் என்ற சரியான பார்வை இல்லை.
தி.மு.க. ஏன் தட்சிணப் பிரதேசத்தை எதிர்த்தது? 1957 தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ள வேளையில் தட்சி ணப் பிரதேசம் முன் மொழியப் பட்டது. தி.மு.க. கூறிவந்த "திராவிடப் பொன்னாடு’’ தானே தட்சிணப் பிரதேசம்! அதை ஏன் எதிர்க்க வேண்டும்? முதலில் திராவிட இன ஒற்றுமையை உருவாக்கி, அடுத்து திராவிட நாட்டு விடுதலைக்குப் போராடு வதுதானே தி.மு.க.வின் திட்ட மாக இருந்திருக்க வேண்டும். திராவிடர்கள் ஒன்றிணைக் கப்படுவதைக் கண்டு அண்ணா ஏன் அஞ்சினார்? தட்சிணப் பிரதேசத்தில் தி.மு.க. ஒரு போதும் ஆட்சி அமைக்க முடியாது.
1956-இல் தமிழ்நாட்டில் பெரியாரும் அண்ணாவும் பெற்றிருந்த செல்வாக்கும் அவர் களின் கழகங்கள் பெற்றிருந்த வளர்ச்சியும் திராவிடத் தட் சிணப் பிரதேசம் அமைந்தால் சடசடவெனச் சரிந்து சிறுபான் மை ஆகிவிடும் என்பதை உணர்ந்து அவர்கள் அஞ்சி னார்கள்.
ஏமாளித் தமிழர்களிடம், இவர்கள் திராவிட இன உறவுகளை-, திராவிடக் கலாச் சாரத்தைப் பேசினார்கள். இந்திய அரசே திராவிடர்களை ஒரே மாநிலமாக இணைக்கப் போகிறது என்று வந்தவுடன் தங்கள் நிலை என்ன ஆகுமோ என்று அஞ்சினார்கள். இதற்குப் பெயர் இனக்கொள்கையா?
இவர்களிடம் தேசிய இனங்கள் குறித்த வரையறுப்பும் தமிழ்த் தேசிய இனம் குறித்த புரிதலும் இல்லை. ஆனால் ‘இன அரசியல்’ நடத்தினார்கள். தமிழர்கள் தங்களின் மரபு இனமாகவும் தேசிய இன மாகவும் விளங்கும் தமிழ் இனத்தை உள்ளது உள்ளபடி உணரவிடாமல் இவர்கள் குழப்பிவிட்டார்கள்! இன்றைக்கும் தி.மு.க.வும் தி.க.வும், மற்ற பெரியாரியல் வாதிகளும் திராவிடத்தைச் சொல்லி தமிழர்களைக் குழப்பு கிறார்கள்.
கலைஞர் கருணாநிதி இன் றும் ‘திராவிடம்’ என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்து கிறார். "இனத்தால் திராவிடன் மொழியால்தான் தமிழன்" என்று கூறிக்கொள்கிறார். இவ்வாண்டு நடந்த பெருங்கேடாக தி.க. தலைவர் கி.வீர மணி, தமிழர் திருநாள் விழாவை "திராவிடர் திருநாள் விழா" என்று பெயர் மாற்றி மூன்று நாள் கொண்டாடினார். திராவிடச் சீர்குலைவு இன்னும் ஓயவில்லை. தமிழர்கள் இன உணர்ச்சி பெற்று எழும்போதெல்லாம் "திராவிடத் தலைவர்கள்" தங்கள் சீர்குலைவு வேலையைத் தொடங்கி விடுகிறார்கள்.
முல்லைப்பெரியாறு அணைப் போராட்டத்தில் மக்களின் எழுச்சியைப் பார்த்த கருணாநிதி, அம் மக்களைத் தமது தேர்தல் அரசியலுக்கு ஈர்த்துக் கொள்வதற்காக தேவிகுளம் பீரி மேட்டைத் தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்கிறார். மலையாள அரசு, தமிழர்களின் பொங்கல் விழாவுக்கு விடுமுறை விடாத நிலையில், தமிழ் நாட்டில் ஐந்து மாவட்டங்களில் மலையாளிகளின் ஓணம் பண்டிகைக்கு விடுமுறை விட்டு தமிழினத் துரோகம் புரிந்தவர் இதே கருணாநிதி தான். ஆந்திரப் பிரதேச முதல மைச்சர் இராசசேகரரெட்டி விமானவிபத்தில் இறந்ததற்கு தமிழ்நாட்டில் விடுமுறைவிட்டு, தி.மு.க. கொடியை மூன்று நாள்களுக்கு அரைக்கம்பத்தில் பறக்க விட்டவர் இதே கருணாநிதிதான். அண்ணா, பெரியார், எம்.ஜி.ஆர். இறந்த போது ஆந்திரம் விடுமுறை விடவில்லை.
1956 பிப்ரவரி 20 -இல் அனைத்துக் கட்சி நடத்திய தமிழகப் பொது வேலை நிறுத்தம் மற்றும் முழு அடைப்பில் கலந்து கொண்ட தற்கப்பால் தமிழ்நாட்டில் தேவிகுளம் பீரிமேடு மீட்பிற்காக தனியே ஒரு போராட்டத் தைக்கூட தி.மு.க. நடத்த வில்லை. குமரி மாவட்டத்தில் தி.மு.க.வினர் திரு.தமிழ்நாடு காங்கிரசு நடத்திய போராட் டங்கள் சிலவற்றில் அப்போது கலந்துள்ளனர். கருணாநிதி தமது அறிக்கையில் தமிழக முழுஅடைப்பில் தி.மு.க. கலந்து கொண்டதைக் குறிப்பிட்டுள்ளார். மற்றவையெல்லாம் கழகத்தின் தீர்மானங்களும் அறிக்கைகளும் தாம்!
பெரியார் தி.க. என்ன கூறுகிறது? முல்லைப்பெரியாறு அணை உரிமைப் போராட் டத்தில் இந்திய அரசை எதிர்த்துப் போராடவேண்டுமே தவிர கேரளத்தையோ மலையாளிகளையோ எதிர்த்துப் போராடக்கூடாது என்கிறது. கேரளம் 'சண்டித்தனம்" செய்கிறதாம்! கேரளத்தில் தமிழர்கள் தாக்கப் பட்ட தெல்லாம் சண்டித்தனம் தானோ?
’’முல்லைப்பெரியாறு அணை மீண்டும் எரியத் தொடங் கியுள்ளது. கேரள அரசின் சண்டித்தனம் தமிழர்களைத் கொதித்தெழ வைத்துள்ளது.
‘ஒன்றுபட்ட இந்தியா தோல்வி அடைந்து விட்டது. இந்தியாவில் வாழும் தேசிய இனங்களின் உரிமைகளுக்கு ஒன்றுபட்ட இந்தியாவுக்குள் தீர்வு கிடைக் காது என்ற நிலையில், தமிழர் களின் பிரதான எதிரியாக நிற்பது பார்ப்பன-பன்னாட்டுச் சுரண்டலுக்காக மட்டும் அதிகாரத்தைப் பயன்படுத்தும் இந்திய ஆட்சிதான்’’
- புரட்சிப் பெரியார் முழக்கம் (பெ.தி.க. ஏடு) 15. 12. 2011

தமிழ்நாட்டு விடுதலையைத் தனது முதன்மை இலட்சிய மாகக் கொண்டுள்ள இயக்கம் போல் காட்டிக் கொண்டு, கேரளத்திற்கும் மலையாளிகளுக்கும் பதிலடி கொடுக்கும் தமிழ் மக்களைத் திசை திருப்பிவிட இந்திய அரசை எதிர்த்து போராடுங்கள் என்று மடை மாற்றுகிறது பெ.தி.க.
1956 சனவரியில் ம.பொ.சி. கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்குப் போக மறுத்த பெரியார் தனித்தமிழ்நாடு கோரிக்கைக்கு ஊனம் ஏற்ப டாமல் மாநில சுயாட்சிக் கோரிக்கையை இணைத்துக் கொண்டால், இந்தி எதிர்ப்பை இணைத்துக் கொண்டால் தேவிகுளம் பீரிமேடு போராட் டத்திற்கு வருவேன் என்று காரணம் காட்டித் திசை திருப்பினாரல்லவா! அதே உத்தியைத்தான் இப்பொழுது பெ.தி.க.வும் கையாள்கிறது.
அய்யப்ப கோயிலுக்குப் போன தமிழர்களை மலையாளிகள் அடித்து விரட்டியதை எளிமைப்படுத்தி மலையாளிகள் மீது தமிழர்களுக்குச் சீற்றம் வராமல் அவர்களுக்குத் தற்காப்புப் பணி புரிகிறது பெ.தி.க. “சூத்திரத்தமிழர்களை அடித்து விரட்டி விட்டதாலேயே ‘சூத்திர’ மலையாளிகள் அய்யப்பனுக்கு முழு உரிமை கோரவும் முடியாது. அவர்களால் அய்யப் பனை நெருங்கிவிடவும் முடியாது. அங்கே நம்பூதிரிப் பார்ப்பான் சூத்திர மலையாளிகளை மட்டுமல்ல பெண்களையும் சேர்த்து கர்ப்பக்கிரகத்திலிருந்து வெளியே விரட்டி அடிக்கிறான். - புரட்சிப்பெரியார் முழக்கம் 15.12.2011
வர்ணாசிரம எதிர்ப்பு, பெண்ணுரிமை என்ற முற்போக்குச் சொல்லாடல்கள் மூலம் மலையாளிகளைப் பாதுகாக்கும் ‘திராவிட உத்தி’ இது.

பத்துநாள்களாகக் கேரளத்தில் கேள்வி கேட் பாரற்று மலையாள இன வெறி யர்கள் அப்பாவித் தமிழர்களை அடித்தார்கள். தமிழ்ப் பெண் களைச் சிறைப்படுத்தி மான பங்கப் படுத்தினார்கள். அதன் பிறகே தமிழ்நாட்டில் மலை யாளிகளுக்குப் பதிலடி கொடுத் தோம். தமிழ்நாட்டில் நடந்த பதிலடி என்பது மலையாளி களின் நிறுவனங்களை மூடச் செய்ததாகத்தான் அமைந்தது. இதைத் தாங்கிக்கொள்ள முடிய வில்லை பெரியார் தி.க.வால்! அவர்களின் திராவிட பாசம் தமிழர் களுக்கு எதிராக உள்ளது. மலையாள இனவெறியர்களைப் பாதுகாக்க முனைகிறது. இதற்காகத் தமிழர்களிடம் சூத்திர பாசத்தைக் கொண்டு வந்து கொட்டுகிறது பெ.தி.க.
அய்யப்பன் கோயிலில் பெண்களை அனுமதிக்கவில் லையே என்று கவலைப்படும் பெ.தி.க.வுக்கு, தேனி மாவட்டத் தமிழ்ப் பெண்கள் மலையாளி களால் கடத்தப்பட்டு மான பங்கப் படுத்தப்பட்டது பெரிதாக உறுத்தவில்லை. திராவிட பாசம் மனச்சசான்றை மரத்துப் போகச் செய்கிறது.
அடிக்கும் மலையாளிகளும் ஆடுகளாம் அவர்களால் அடிக்கப்படும் தமிழர்களும் ஆடுகளாம்! இரு ஆடுகளும் மோதிக் கொண்டால் இந்திய அரசு என்ற நரிதான் இரத்தம் குடிக்குமாம்! திசை திருப்பு கிறது பெ.தி.க.
“ஆனாலும் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில் தமிழ்நாட்டின் உரிமைகளைப் பெற்றுத் தர வேண்டிய கடமை யைக் கைகழுவிவிட்டு, தமிழர் -கேரள மோதல்களைக் கூர் தீட்டி விட்டு ஆடுகள் மோதலில் ரத்தம் குடிக்கும் நரிகளைப் போல், "ஒருமைப்பாடு', "தேசபக்தி' பேசிக் கோண்டு உரிமை களைத் தடுத்து நிறுத்தும் முதன்மை எதிரி இந்திய அரசு தான்”. - -புரட்சிப் பெரியார் முழக்கம், 22. 12. 2011.
இந்திய அரசு ஓர் ஏகாதிபத்திய அரசு. பல்வேறு இனங்களுக்கிடையே எழும் முரண்பாடுகளைத் தீர்க்காமல் மோத விடுவது அதன் பொதுவான உத்திதான். அந்த இந்திய அரசின் உயர் அதிகார மையங்களில் மலையாளிகள் தாம் முகாமையான பொறுப்புகளில் உள்ளார்கள். ஈழத்தமிழர்களை அழிக்கும் போரை இந்தியா மறைமுகமாக நடத்தியதற்கு முகாமைக் காரணிகளாக இருந்தவர்கள் அந்த மலையாளிகள் தாம் என்பது ஊரறிந்த உண்மை. இதே பெ.தி.க.வும் அக்குற்றச்சாட்டைத் தனது ஏட்டில் எழுதியுள்ளது. தமிழகத் தமிழர்கள் மலையாளிகளால் தாக்கப்படும் போது மட்டும், மலையாளிகள் அப்பாவி ஆடுகள் என்றும் அவர்களை ஏவுவது இந்திய அரசுதான் என்று தான் என்றும் கண்டுபிடித்துள்ளது. இக்கண்டுபிடிப்பு எங்கிருந்து வந்தது? திராவிட பாசத்திலிருந்து வந்தது.
இரண்டு ஆடுகளையும் இந்திய அரசு கூர் தீட்டி விட்டது என்றால், தமிழர்களை மலையாளிகளுக்கு எதிராக அது கூர் தீட்டிவிட்டதா?
தமிழர்களைப் பார்த்துக் கேட்கிறோம். தமிழர்களே, மலையாளிகளோடு மோதுங்கள் என்று உங்களை இந்திய அரசு கூர்தீட்டி விட்டதா? மலையாளிகளைத் தாக்கும்படி தமிழர்களை இந்திய அரசு தூண்டி விட்டதா? இல்லை. தம்மின அப்பாவி மக்கள் மலையாள இனவெறியர்களால் அன்றாடம் தாக்கப்படுவதைக் கண்டு நெஞ்சு குமுறிய தமிழ்நாட்டுத் தமிழர்கள் தங்களின் இன உணர்ச்சி தூண்டியதால் மலையாளி களுக்குப் பதிலடி கொடுத்தார்கள். இந்திய அரசு தமிழர்களைத் தூண்டிவிட்டதாக ஏன் பெ.தி.க. பிழைபடப் பேச வேண்டும்-?
தமிழர்கள் தாக்கப்பட்டார்கள். மலையாளிகள் தாக்கினார்கள். இதை “தமிழர் - கேரள” மோதல் என்று வர்ணிக்கிறது பெ.தி.க. நம்மைச் சொல்லும் போது தமிழர் என்று குறிப்பிடும் அக்கட்சி மலையாளிகளைக் குறிப்பிடும் போது மட்டும் இனப்பெயரைக் குறிப்பிடாமல் ”கேரள” என்று மாநிலப் பெயரைக் குறிப் பிடுகிறது.
“தமிழக - கேரள” மோதல் என்று குறிப்பிட்டிருந்தால் கூட அதுவும் சரியில்லை. தமிழகம் கேரளத்தோடு மோதியதா? இல்லை, கேரளம்தான் தமிழகத்தோடு மோதியது. மோதிக் கொண்டுள்ளது.
இந்திய அரசை உண்மையில் எதிர்ப்பதாக இருந்தால் தமிழக விடுதலையை தனது முதன்மை இலட்சியமாக அறிக்கை வடிவில் பெ.தி.க. அறிவித்து இயங்க வேண்டும். அதை விடுத்து முல்லைப் பெரியாறு அணை உரிமைப் போராட்டத்தில் மலையாள இனவெறியர்களுக்கு எதிராக ஏற்பட்டுள்ள தமிழர் இன எழுச்சியை மடை மாற்றுவதற்காக இந்திய அரசு எதிர்ப்பினைப் பயன் படுத்தக் கூடாது.
அடிபட்டு, அடிபட்டு, உரிமை இழந்து இழந்து, மலையாள இனவெறியர்களுக்கு எதிராகச் சீறிச் சினந்து எழுந்துள்ள தமிழ் மக்களையும் தமிழின உணர்வாளர்களையும் திசை திருப்பும் வகையில், ஆடுகளின் மோதல், இரத்தம் குடிக்கும் நரிக்கதை, சூத்திரர், பெண்ணுரிமை சொல்லாடல் போன்றவற்றை பெ.தி.க. பயன்படுத்துவது சரியன்று.
திராவிட இயக்கத்தின் திராவிட இனக்கொள்கை அன்றும் தமிழர் உரிமைகளுக்கு எதிராக இருந்தது இன்றும் எதிராக உள்ளது.
இன எழுச்சி பெற்றுள்ள தமிழர்கள் தமிழ்த்தேசியம் என்ற தமிழினத்திற்குரிய தத்துவப் பதாகையை ஏந்தினால் தான் நம் போராட்டங்களும் எழுச்சிகளும் மீண்டும் விரையமாகாமல் தமிழின உரிமைகளை மீட்கப் பயன்படும்!
முல்லைப்பெரியாறு அணை உரிமையை மீட்கும் போராட்டத்துடன் முதற்கட்டமாக இடுக்கி மாவட்டத்தை இணைக்கவும் இன அடிப்படையில் தமிழர்கள் ஒன்று திரள்வோம்! போராடுவோம்! தாக்குபவனைத் திருப்பித் தாக்குவோம்!

Labels:


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்