<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d6955529389241309188\x26blogName\x3d%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86.%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://thozharmaniyarasan.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com/\x26vt\x3d-8408640130511538487', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

”மண்ணின் மக்களுக்கே வேலை - சி.பி.எம். தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி! தமிழ்நாட்டில் நாம் கோரினால் இனவெறியா? ” -- தோழர் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை!

Friday, November 3, 2017

=========================================
மண்ணின் மக்களுக்கே வேலை - சி.பி.எம். 
தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி!
தமிழ்நாட்டில் நாம் கோரினால் இனவெறியா? 
=========================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
தோழர் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை!
=========================================

இமாச்சலப்பிரதேச சட்டப்பேரவைக்கான தேர்தல் அறிக்கையில் இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சி (மார்க்சிஸ்ட்டு), தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இமாச்சலப் பிரதேசத்தின் மண்ணின் மக்களுக்கு மாநில அரசுத் துறையில் 70 விழுக்காடு பணி ஒதுக்கீடு தருவதாக உறுதி கூறியுள்ளது (The Hindu, 03.11.2017). இது வரவேற்கத்தக்கது!
தமிழ்த்தேசியப் பேரியக்கம் 1992லிருந்து தமிழ்நாட்டில் தொழில், வணிகம், வேலை வாய்ப்பு ஆகியவற்றில் நிலவும் வெளி மாநிலத்தவர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து, மண்ணின் மக்களாகிய தமிழர்களுக்கு உரிய முன்னுரிமை வேண்டும் என்று கோரி வருகிறது.
தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில், 90 விழுக்காடு தமிழர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும், இவற்றில் 10 விழுக்காட்டிற்கு மேலுள்ள வெளி மாநிலத்தவர்களை வெளியேற்ற வேண்டும், தமிழ்நாடு அரசுத் துறையிலுள்ள அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் 100 விழுக்காடு வேலை தமிழர்களுக்கு வழங்க வேண்டும், தனியார் துறையில் 90 விழுக்காடு வேலை தமிழர்களுக்கு வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துப் போராடி வருகிறது.
இக்கோரிக்கைகளை வைத்து, அண்மையில் 31.10.2017 அன்று சென்னை நுங்கம்பாக்கம் வருமான வரி அலுவலகம் முன்பும், திருச்சி திருவெறும்பூர் பி.எச்.இ.எல். தொழிற்சாலை முன்பும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் காத்திருப்புப் போராட்டம் நடத்தியது. அப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் காவல்துறையினர் தளைப்படுத்தினர்.
இவ்வாறான மண்ணின் மக்களுக்குரிய கோரிக்கைகளை தமிழ்த்தேசியப் பேரியக்கம் எழுப்பும்போதும், போராட்டம் நடத்தும்போதும் இதனை “இனவெறி” என்றும், “பாசிசம்” என்றும் மார்க்சியர்கள் பலர் கண்டனம் செய்து வந்துள்ளனர். இப்போது, மார்க்சியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சி, இமாச்சலப் பிரதேசத்தில் இந்தக் கோரிக்கையை வைத்துள்ளதற்கு அவர்கள் என்ன சொல்கிறார்கள்?
தமிழ்நாட்டின் உரிமைகள் – தமிழர்களின் நலன்கள் ஆகியவற்றை முன்னிறுத்தி, தமிழ்த்தேசியப் பேரியக்கம் கோரிக்கை வைக்கும்போது, அயல் இனத்தாருக்கு எதிரான இனவெறித்திட்டம் எதையும் முன்வைப்பதில்லை! தமிழினத்தின் தற்காப்பு மற்றும் வாழ்வுரிமைக் கோரிக்கைகளாகவும், அதேவேளை உலகு தழுவிய அளவில் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ள தேசிய இனங்களின் தாயக உரிமைகளுக்கு இயைந்த கோரிக்கைகளாகவும்தான் வைக்கிறோம்.
ஏற்கெனவே கர்நாடகம், குசராத், மராட்டியம், சத்தீஸ்கட் போன்ற மாநிலங்களில் மண்ணின் மக்களுக்கான இட ஒதுக்கீடு செயல்பாட்டில் இருக்கிறது.
இயற்கையாய் வளர்ச்சியடைந்துள்ள தேசிய இனங்களின் உரிமைகளைப் பறிக்கும் இந்தியத்தேசியம் மற்றும் தமிழின மறுப்பை அடித்தளமாகக் கொண்டுள்ள திராவிட இனவாதம் ஆகியவற்றை இங்கு முன்னிலைப்படுத்துவோர் தமிழ்த்தேசியப் பேரியக்கம் முன்னெடுக்கும் தமிழர் தாயக உரிமைகளை “இனவெறி” என்று கொச்சைப்படுத்துகின்றனர். மேற்கண்ட இரு வாதங்களுக்கும் பலியான அப்பாவிகளும், அதேபோல் “இனவெறி” முழக்கம் என்று நம் கோரிக்கைகளைக் கருதுகின்றனர்.
மார்க்சியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சி, இந்தியத்தேசியம் மட்டுமின்றி சர்வதேசியத்தையும் பேசும் கட்சி! அக்கட்சி மட்டுமல்ல, இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சியின் கர்நாடகப் பிரவு, அம்மாநிலத்தில் மண்ணின் மக்களுக்கு வேலை ஒதுக்கீடு செய்ய சரோஜினி மகிசி பரிந்துரைகளைச் சரியாகச் செயல்படுத்த வேண்டுமென்று கோரிக்கை வைத்து, பெங்களூரில் 13.03.2017 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தியது.
மண்ணின் மக்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை என்ற திட்டத்தை பல்வேறு மாநிலங்களில் காங்கிரசு, பா.ச.க., ஜனதா, ஆம் ஆத்மி கட்சிகள் ஏற்கெனவே செயல்படுத்தி வருகின்றன அல்லது கோரி வருகின்றன. இப்போது, சி.பி.எம்., சி.பி.ஐ. கட்சிகளும் அக்கோரிக்கையை முன்வைக்கின்றன.
போலியாக திராவிட இனவாதம் பேசிக் கொண்டிருக்கும் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் 1967லிருந்து தமிழ்நாட்டை ஆண்டு வந்த போதிலும், மண்ணின் மக்களுக்கான வேலை வாய்ப்பு முன்னுரிமைத் திட்டத்தை செயல்படுத்தவில்லை! மாறாக, தமிழ்நாட்டில் குவியும் வெளி மாநிலத்தவர்களுக்கு குடும்ப அட்டையும், வாக்காளர் அட்டையும் வழங்கி, தமிழர்களின் வாழ்வுரிமையை அவர்கள் பறித்திட வாய்ப்பளித்து வருகின்றன.
தமிழர்கள் கட்சி வேறுபாடு பார்க்காமல், தமிழ்த்தேசியப் பேரியக்கம் முன்வைத்திருக்கும் மண்ணின் மக்களுக்கான வேலை ஒதுக்கீட்டுக் கோரிக்கையை ஆதரித்துக் குரல் எழுப்பினால் – போராடினால், தமிழ்நாட்டில் தகுதி இருந்தும் சொந்த மண்ணிலேயே வேலை மறுக்கப்பட்டு, வறுமையில் உழலும் இலட்சோப இலட்சம் தமிழ் இளைஞர்களுக்கு வாழ்வு கிடைக்கும்!
அனைவரும் ஒரே குரலில் தமிழ்நாட்டில் இந்திய அரசு நிறுவனங்களில் 90 விழுக்காடு – தனியார் துறையில் 90 விழுக்காடு – தமிழ்நாடு அரசுத்துறையில் 100 விழுக்காடு வேலைகளைத் தமிழர்களுக்குக் கோருவோம்!

Labels:

”தேவிகுளம் பீரிமேடு மீட்பும் திராவிட குழப்பங்களும்” -- தோழர் பெ. மணியரசன்

Thursday, November 2, 2017

==================================
”தேவிகுளம் பீரிமேடு மீட்பும்
திராவிட குழப்பங்களும்”
==================================
தோழர் பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
==================================

மக்கள் சீறியெழுந்து தெருவுக்கு வந்து போராடத் தொடங்கிவிட்டால், அவர்கள் தாங்கள் செல்ல வேண்டிய திசையை சரியாகத் தீர்மானித்துக் கொள்வார்கள். முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்புப் போராட்டம் இதற்கோர் எடுத்துக்காட்டு!

ஈழத்தமிழர்களை இலட்சக் கணக்கில் கொன்றழித்த இராசபட்சே கும்பலை இனப் படுகொலைக் குற்றவாளிகளாகத் தண்டிக்க வேண்டும் என்று எழுந்த மக்கள் போராட்டம், இராசீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனையை நிறைவேற்றத் துடித்த இந்திய அரச்சைத் தடுத்து நிறுத்தி மூன்று தமிழர் உயிர்காக்க மூண்டெழுந்தப் போராட்டம், முல்லைப்பெரியாறு அணை உரிமை மீட்கக் கிளர்ந்தெழுந்த மக்கள் பேரழுச்சி கேரளத்தில் அப்பாவித் தமிழ் மக்களைத் தாக்கிய மலையாளி களுக்குப் பாடம் புகட்டத் தமிழகத்தில் தந்த பதிலடி போன்றவை அனைத்தும் காலம் காலமாக வஞ்சிக்கப்பட்ட தமிழர்களின் இன உணர்ச்சி அணை உடைத்த வெள்ளம் போல் சீறிப் பாய்ந்த வெளிப்பாடுகள் ஆகும்.

எதிரி நம்மை இன அடிப்படையில் தாக்கும் போது நாமும் இன அடிப்படையில்தான் எதிரியோடு போராடவேண்டும். இந்த உண்மையை நம் மக்கள் புரிந்து கொண்டு போராடினார்கள். நாற்காலி நாயகர்கள் நடத்தும் தேர்தல் கட்சிகளால் நம் மக்களைப் பிளவுபடுத்த முடியவில்லை. அவர்களின் அறிக்கைகள் அடை யாளப் போராட்டங்கள், மக்கள் எழுச்சியை மடை மாற்றவோ, நீர்த்துப்போகச் செய்யவோ முடியவில்லை.

முல்லைப்பெரியாறு அணை உரிமையை மீட்பது மட்டுமின்றி, மலையாளிகளிடம் நாம் இழந்த தமிழ் மண்ணையும் மீட்க வேண்டும் என்று தமிழ்மக்கள் முழக்கமிட்டனர். முதல் கட்டமாக இடுக்கி மாவட்டத்தை மீட்க வேண்டும் என்று இடிமுழக்கம் செய்தனர். கூடலூர் லோயர் கேம்ப், கம்பம் மெட்டு ஆகிய இடங்களில் இருபத்தைந்தாயிரம், ஐம்பதாயிரம், எண்பதாயிரம் எனக் குவிந்த மக்கள் ‘எங்கள் சொந்த மண்ணான இடுக்கி மாவட்டத்தைத் தமிழ்நாட்டுடன் இணைப்போம்’ என்று எழுப்பிய முழக்கம் மேற்குத் தொடர்ச்சி மலைகளை அதிரச் செய்தது. அம்மலைத் தொடர்களுக்கு அப்பால் இடுக்கி மாவட்டத்தில் வாழும் தமிழர்கள் ‘இடுக்கி மாவட்டத்தைத் தமிழ்நாட்டுடன் இணை’’ என்று எதிரொலித்துப் பேரணிகள் நடத்தினர்.

ஏற்கெனவே தமிழ்த் தேசிய அமைப்புகளும் தமிழின உணர் வாளர்களும், இன உணர்வு ஏடுகளும் தேவிகுளம் பீரி மேட்டைத் தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்று குரல் கொடுத்து வந்தனர். இப்பொழுது அது மக்கள் முழக்கமாகியுள்ளது. மூணாறு, தேவிகுளம், பீரிமேடு, குமுளி, தேக்கடி, கண்ணகி கோயிலின் ஒரு பகுதி, முல்லைப்பெரியாறு அணை முதலிய அனைத்துத் தமிழ்ப் பகுதிகளும் இடுக்கி மாவட்டத்தில்தான் உள்ளன.

மொழிவழி மாநிலங்கள் அமைக்கப் பட்டபோது, இந்தியா தமிழினத்தை வஞ் சித்து விட்டது. மொழிவழி மாநிலங்களின் எல்லைகளை வரையறுக்க அமைத்த ஆணை யத்தில் மலையாளியான கே.மா தவப் பணிக்கரை(சர்தார் கே.எம். பணிக்கர்) ஓர் உறுப்பினராய் பிரதமர் நேரு அமர்த்தியதே தமிழினத்திற்கெதிரான நோக்கம் கொண்டதாகும்.

மூன்று பேர் கொண்ட அவ்வாணையத்தில் இன்னொரு உறுப்பினர் இந்திக்காரரான குன்ஸ்ரூ. அதன் தலைவர் பீகாரியான பசல் அலி.

திருவிதாங்கூர்- கொச்சி சமஸ் தானத்தில் மலையாளிகளின் ஆளுகையின்கீழ் நொய்யாற்றின் கரை, நெடுமங்காடு, கொச்சின் சித்தூர், தோவாளை அகத்தீஸ் வரம், கல்குளம், விளவங்கோடு, செங்கோட்டை, தேவிகுளம், பீரிமேடு, பாலக்காடு ஆகிய தமிழ்ப்பகுதிகள் சிக்கியிருந்தன. அவற்றை தமிழ்நாட்டுடன் இணைக்கவேண்டும் என்ற கோரிக்கையும் அதற்கான இயக்கமும் 1945-இல் திருவி தாங்கூர் சமஸ்தானத் தமிழர் களிடம் வடிவமெடுத்தன.

திருவிதாங்கூர்- கொச்சி மாநில (கேரள)க் காங்கிரசில் பொறுப்பு வகித்த, உறுப்பு வகித்த தமிழர்கள் இன அடிப் படையில் மலையாளிகளின் தலைமையில் இயங்கிய திருவி தாங்கூர்-கொச்சி காங்கிரசி லிருந்து விலகி திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு என்ற தமிழர்களுக்கான அமைப்பை உருவாக்கிக் கொண்டனர். 1945 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் நாள் நாகர்கோவிலில் திருவி தாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு அமைக்கப்பட்டது.

இதன் இலட்சியம்: திருவி தாங்கூர் சமஸ்தானப் பகுதியில் உள்ள தமிழக நிலப்பரப்பைத் தாய்த்தமிழ்நாட்டுடன் இணைப்பது என்பதாகும்.

இதன் நோக்கங்கள்: 1. தமிழ்மொழி வளர்ச்சி, 2. அனைத்திந்தியக் காங்கிரசின் வேலைத்திட்டங்களை ஒட்டி இந்திய விடுதலைக்குப் பாடு படுவது. 3. திருவிதாங்கூர் சமஸ் தானத்தில் சிறு பான்மையாக. உள்ள தமிழர் உரிமைகளைப் பாதுகாப்பது. இவ்வமைப்பு தமிழர் பகுதிகளைத் தமிழ்நாட் டுடன் இணைக்க வலியுறுத்திப் பல போராட்டங்கள் நடத் தியது.

மொழிவழி மாநில எல்லைகளைப் பரிந்துரைக்க அமைக்கப்பட்ட பசல் அலி ஆணையம் தனது அறிக்கையை 1955 அக்டோபர் 10 ஆம் நாள் வெளியிட்டது. தமிழ்நாடு பற்றி அதன் பரிந்துரை வருமாறு:

சென்னை மாநிலத்தில் உள்ள மலபார் மாவட்டத் தைக் கேரளத்தோடும், தென் கன்னட மாவட்டத்தை மைசூரோடும் சேர்த்துவிட வேண்டும்.

திருவிதாங்கூர்-கொச்சி மாநிலத்தில் உள்ள கல்குளம் விளவங்கோடு, தோவாளை அகத்தீசுவரம், செங்கோட்டை ஆகிய தமிழ் வட்டங்களை (தாலுகாக்களை) சென்னை மாநிலத்துடன் இணைக்க வேண்டும் சென்னை மாநிலம் என்ற பெயர் நீடிக்க வேண்டும்.

சென்னை நகரம் தமிழ் மாநிலத் திற்கே உரியதாய் அதன் தலை நகரமாய் இருக்க வேண்டும்.

சென்னை மாநில-ஆந்திர மாநில எல்லைச் சிக்கலை அதற்கென அமர்த்தப் பட விருக்கும் எல்லை ஆணையம் கிராம அடிப் படையில் திருத்தி அமைப்பதை (பசல் அலி) ஆணையம் ஏற்றுக் கொள்கிறது.

தேவிகுளம், பீரிமேடு, பாலக் காடு, நெய்யாற்றின்கரை, நெடு மங்காடு, கொச்சின், சித்தூர் ஆகியவை தமிழ்நாட்டுடன் சேர்க்கப்படவில்லை. அதே போல் கோலார் தங்கவயல், கொள்ளேகாலம் ஆகியவை தமிழ்நாட்டுடன் சேர்க்கப்பட வில்லை.

இப்படி சேர்க்கப்படாத பகுதிகளைக் கேட்டு, தமிழ் நாட்டுத் தமிழ் மக்கள் ஆத்திரப் படவுமில்லை. தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் போர்க் கோலம் பூணவுமில்லை. அமைதி நிலவியது.

செங்கோட்டை வட்டம் முழுவதையும் பசல் அலி ஆணையம் தமிழகத்திற்கு வழங்கியிருந்தது. தமிழகத்தின் அசைவற்ற நிலையைப் பார்த்த மலையாளிகள் இந்திய அரசில் செல்வாக்கு செலுத்தி வளமான காட்டுப்பகுதிகளைக் கொண்ட செங்கோட்டை வட்டம் கேரளத்திற்கும் செங்கோட்டை நகர் மட்டும் தமிழகத்திற்கு என்றும் மாற்றிவிட்டனர். அதன்பிறகும் தமிழ்நாடு கொந்தளிக்கவில்லை.

பசல் அலி ஆணைய அறிக்கை 10.10.1955 அன்று வெளிவந்தது. அன்றே பெரி யாரிடம் தினத்தந்திச் செய்தி யாளர் இது குறித்து நேர் காணல் நடத்தினார். தேவிகுளம் பீரிமேடு தொடர்பான செய்தி யாளர் கேள்வியும் பெரியார் அளித்த விடையும் வருமாறு:

நிருபர்: தமிழ் தாலுகாக்கள் (1).தேவிகுளம், (2).பீர்மேடு, (3).நெய்யாத்தங்கரை, (4). கொச்சின் சித்தூர் ஆகிய தாலுக்காக்கள் மலையா ளத்துடன் சேர்ந்து விட்டதே! இது பற்றி உங்கள் கருத் தென்ன?

ஈ.வெ.ரா: இது பற்றி எனக்குக் கவலை இல்லை. மலையாளத் துடன் அவைகளைச் சேர்க்க வேண்டியது தான்.

நிருபர்: கவலையில்லை என்கிறீர் கள். அவைகள் தமிழ் தாலுகாக்கள் தானே!

ஈ.வெ.ரா: ஆமாம். சமீபத்தில் சென்னைக்கு சர்தார் பணிக்கர் (மொழி வாரி மாகாணக் கமிட்டி மெம்பர்) வந்திருந்தார். அவரை நான் சந்தித்துப் பேசினேன்.

‘தொழிலுக்காக தமிழர்கள் அங்கு வந்தார்களே தவிர நிலம் மலையாளத்தைத்தான் சேர்ந்தது’ என்று பணிக்கர் சொன்னார். நானும் ’சரி’ என்று சொல்லிவிட்டேன்.

இவ்வாறு ஈ.வெ.ரா. கூறி முடித்தார். திருச்சியிலுள்ள பெரியார் மாளிகையில் இந்தப் பேட்டி நடந்தது. (தினத்தந்தி 11.10.1955)

பசல் அலி அறிக்கை வெளி யானவுடன் தி.மு.க குறிப்பிடும் படி எந்த எதிர்ப்பும் காட்ட வில்லை. காமராசரும் காங்கி ரசும் எதிர்ப்புப் காட்டாதது ஒரு செய்தியே அன்று. தெற் கெல்லை மீட்புப் போராட்டம் காமராசரின் விருப்பத்திற் கெதிராகவே கன்னியாகுமரி மாவட்டப் பகுதியில் நடந்து கொண்டிருந்தது. திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசை காம ராசர் எதிர்த்தே வந்தார்.

"பசல் அலி அறிக்கை தமிழினத்திற்கு அநீதி இழைத்து விட்டது’" என்று உடனடியாக செய்தியாளர்களிடம் கூறினார் ம.பொ.சி. அத்தோடு நில்லாமல் பெரியார், அண்ணா ஆகி யோரையும் மற்ற தலைவர் களையும் தனித்தனியே நேரில் சந்தித்து தேவிகுளம், பீரிமேடு வட்டங்களை மீட்க அனைத் துக் கட்சிப் போராட்டம் நடத்த வேண்டும் என்று அழைத்தார்.

மா.பொ.சி.யின் முயற்சியால் 27.1.1956 அன்று சென்னை ஏழு கிணறு ஜி. உமாபதி இல்லத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது. முதலில் வர ஒப்புக் கொண்ட பெரியார், கூட்டத் திற்கு வரவில்லை. அண்ணா கலந்து கொண்டார்.

ம.பொ.சி. கூட்டிய அனைத் துக் கட்சிக் கூட்டத்திற்கு வரமுடியாததற்கான காரணங்களைத் தெரிவித்து அடுத்தடுத்து மூன்று அறிக்கை கள் வெளியிட்டார் பெரியார். அவை விடுதலை ஏட்டில் 25.1.1956, 26.1.1956, 27.1.1956 ஆகிய நாள்களிட்டு பெரியார் கையொப்பமிட்ட அறிக்கை களாக வந்தன. அவற்றின் சாரம் இதுதான்:

தேவிகுளம்- பீரிமேடு வட்டங் களை இணைக்கும் ஒற்றை கோரிக்கையாக மட்டும் அனைத்துக் கட்சிப் போராட் டம் நடக்கக் கூடாது.

1) எல்லைக் கமிசன் என்பது எல்லை வரையறுப்பதில் நமக்கு ( தமிழர்களுக்கு) செய்துள்ள ஓர வஞ்சனையான காரியங்களைத் திருத்துதல்.

2) இந்தி மொழியை யூனிய னுக்கு ஆட்சி மொழி யாகவும், இந்தியாவுக்குத் தேசிய மொழி யாகவும் ஆக்கப்படாமல் தடுப் பது.

3) தமிழ் யூனியன் ஆட்சி என்பதில் படை, போக்குவரத்து, வெளிநாடு உறவு தவிர்த்த மற்ற அதிகார ஆட்சி உரிமைகள் தமிழ்நாட்டுக்குக் கிடைக்கும் படிச் செய்தல் (தனித்தமிழ் நாட்டுக் கோரிக்கைக்குப் பாத கமில்லாமல் இக்கோரிக்கையை வைக்கிறோம்).

4) தமிழ்நாட்டைப் பிரித்து அதற்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டல், சென்னை, மதராஸ் என்ற பெயர்களை நீக்கல்.

5) தென்மண்டலம் (தட்சி ணப்பிரதேசம்) அமைக்க உள்ள தை எதிர்த்தல்.

மேற்கண்ட ஐந்து கூறுகளும் ஒருங்கிணைக்கப்படாததால் ம.பொ.சி. கூட்டிய கூட்டத்திற்கு போகவில்லை என்று பெரியார் கூறுனார். இவை பற்றி ம.பொ.சியிடம் ஏற்கெனவே பேசியுள்ளதாகவும் தமது அறிக்கையில் குறிப்பிட்டார்.

அந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்து கொள் ளக்கூடாது என்பதற்காகவே இத்தனை கோரிக்கைகளையும் பெரியார் இணைத்திருப்பார் என்று நாம் கருதப் பல காரணங்கள் உண்டு.

அனைத்துக் கட்சிப் போ ராட்டம் நடத்த வேண்டிய உடனடித்தேவை ஏற்பட்டது, இரண்டு காரணங்களுக்காக 1) பசல் அலி குழு தமிழகத்திற்கு இழைத்த அநீதியைப் போக்கி, குறைந்தது தேவிகுளம் பீர்மேட்டையாவது தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்பதற்காகவே. 2) சென்னை ராஜ்ஜியம் என்ற பெயர் நீடிக்க வேண்டும் என்று பசல் அலி குழு பரிந்துரைத் திருந்தது. அதை மாற்றித் தமிழ்நாடு என்று பெயர் மாற்ற வேண்டும்.

தட்சிணப் பிரதேசத் திட்டத் தை இராசாசி தவிர மா.பொ.சி. உள்ளிட்ட அனைவரும் எதிர்த் தனர்.

இந்த உடனடிக் கோரிக் கைகளுடன் நீண்டகாலக் கோரிக்கைகளான மாநில சுயாட்சி, இந்தி இந்தியாவின் ஆட்சிமொழியாக இருக்கக் கூடாது என்பவற்றை பெரியார் இணைத்தது சரியா?

எடுத்துக்காட்டாக முல்லைப்பெரியாறு அணை உரிமை மீட்புப் போராட்டம் இப்பொழுது கூட்டுப் போராட் டமாகவும் நடக்கிறது. அந்தந்த அமைப்பின் போராட்ட மாகவும் நடக்கிறது. இதற்கான கூட்டுப் போராட்டத்தில் நெய்யாற்றின் கரை, நெடு மங்காடு, கொச்சின் சித்தூர், பாலக்காடு, தேவிகுளம், பீரிமேடு ஆகிய அனைத்துப் பகுதி களையும், தமிழ்நாட்டோடு இணைக்க வேண்டும் என்று கோரிக்கையில் சேர்த்துக் கொண்டால்தான் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சேரும் என்று நிபந்தனை போடலாமா? கூடாது. கூட்டுப் போராட்டத்திற்கான உத்தி அதுவன்று. மேற்கண்ட தமிழ் நிலப்பகுதிகளைத் தமிழ் நாட்டுடன் இணைக்க வேண்டும் என்பது த.தே. பொ.க. வின் உறுதியான கொள்கை. அதைத் த.தே.பொ.க. வின் தனிப்போராட்டத்தில் வைத்துக் கொள்ளலாம். அந்த நிலமீட்புக் கோரிக்கைக்கும் கூட்டுப் போராட்டம் நடத்தும் காலம் வரும். ஆனால் இப்பொழுது முல்லைப்பெரியாறு அணை உரிமை மீட்பில் முதற்பெரும் கவனம் இருக்க வேண்டும். அந்த அடிப்படையில்தான் கூட்டுப் போராட்டம் நடத்த ஒத்து ழைப்பு நல்க வேண்டும்.

முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்க 21.12.2011 அன்று ம.திமு.க. முன்னெடுத்தக் கூட்டுப் போராட்டத்தில் த.தே.பொ.க.வும் பங்கேற்றது.

ம.பொ.சி. தேவிகுளம் பீரி மேட்டை மீட்பதற்கு அழைத்த கூட்டுப் போராட்டத்தில் கலந்து கொள்ள இந்தித் திணிப்பு எதிர்ப்பு, மாநில சுயாட்சி ஆகிய நிபந்தனை களைப் போட்டார் பெரியார். காமராசரையும் காங்கிரசையும் ஆதரிக்க அவர் இந்த நிபந்தனை களை போட்டாரா? இல்லை..

1957, 1962 தேர்தல்களில் காங்கிரசு வெற்றிக்காக உழைக்க மேற்கண்ட நிபந்தனைகளைப் போட்டாரா? 1965-இல் மாண வர்கள் நடத்திய மாபெரும் இந்தி எதிர்ப்புப் போராட் டத்தை எதிர்த்தாரே பெரியார் ஏன்? காங்கிரசு ஆதரவு நிலை யிலிருந்து கொண்டு தான் இந்தி எதிர்ப்புப் போராட் டத்தை எதிர்த்தார்.

மாணவர்கள் உள்ளிட்ட தமிழர்களை முந்நூறுக்கும் மேற்பட்டோரை காங்கிரசு ஆட்சி 1965-இல் சுட்டுக் கொன்றது. அப்போதும் காங்கிரசு ஆட்சியைத்தான் பெரியார் ஆதரித்தார். ஆனந்த விகடன் ஏடு அப்போது பெரியாரிடம் நேர்காணல் நடத்தியது. அந்நேர்காணலை நடத்தியோர் சாவி மற்றும், மணியன். அது வருமாறு:

சாவி: அந்தக் காலத்துலே இந்தியை எதிர்த்துப் போராட்ட மெல்லாம் நடத்தினீர்களே, இப்ப ஏன் சும்மா இருக்கீங்க?

பெரியார்: அப்படியா? மன்னிக் கணும்; இப்ப இந்தி எங்கே இருக்குது? தெரியாமத்தான் கேக்குறேன். சொல்லுங்கோ?

சாவி: இந்தி தான் ஆட்சி மொழியா வந்துட்டுதே..

பெரியார்: எங்கே வந்துட்டுது? உனக்குத்தான் இங்கிலிஷ் இருக்குதே. இந்தியா ஒண்ணா இருக்கணும்னா பொதுவா ஒரு ஆட்சிமொழி வேணும்தானே? இந்திக்காரன் உங்க மாதிரி இங்கிலீஷை நினைக்கல்லையே. இங்கிலீஷ் அவமானம்னு நினைக்கிறானே. தமிழ்நாட்டுக் காரன் சொல்றபடி இந்தியா நடக்குமா? அது ஜனநாயகமா? 

- ஆனந்தவிகடன் 11.4.1965

1965 மொழிப்போர் நடந்து முடியும் தருவாயில் பெரியார் கூறிய கருத்துகள் இவை. அப்போழுது எங்கே போயிற்று அவரது இந்தி ஆதிக்க எதிர்ப்பு? தனித் தமிழ்நாட்டுக் கோரிக் கைக்குப் பாதகமில்லாமல் அவர் ம.பொ.சி.யிடம் கேட்ட மாநில சுயாட்சிக் கோரிக்கை காங்கி ரசை ஆதரித்த போதெல்லாம் எங்கே போயிற்று? இந்தியா ஒன்றாக இருக்க வேண்டு மெனில் இந்தி ஆட்சி மொழி யாக இருப்பதுதான் சனநாயக மென்று 1965-இல் பேசுகிறார்.

இந்தித் திணிப்பு எதிர்ப்பு, மாநில சுயாட்சி ஆகிய கோரிக்கைகளையும் சேர்த்துக் கொண்டால் தேவிகுளம், பீரிமேடு மீட்புப் போராட் டத்திற்கு வருகிறேன் என்று கூறிய பெரியார், பசல் அலி ஆணைய அறிக்கை வந்த போது 10.10.1955 அன்று தேவிகுளம், பீரிமேடு வட்டங்கள் கேரளத் துடன் சேர்க்கப் பட்டது ’’சரிதான்’’ என்று ஆதரித்தார் என்பதை முன்னர் பார்த் தோம்(தினத்தந்தி, 11.10.1954).

ஆந்திர, கர்நாடக, கேரளப் பகுதிகள் இணைந்திருந்த சென் னை மாகாணத்தை மொழிவழி மாநிலங்களாகப் பிரித்து, தமிழ் நாடு உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் 1948-இல் பெரியார் எதிர்த்தார்.

‘சென்னை மாகாணத்தை நான்கு கூறுகளாக ஆக்க வேண்டு மென்பது கண்டிப்பாக அரசியல் வாழ்வையே தங்கள் ஜீவனமாக, வியாபாரமாக, பதவி- பட்டம்- பணம் சேர்த்தல் முதலிய காரியங்களுக்கு வழி யாக வைத்துக் கொண்டு வாழ்க்கை நடத்தும் சிலர் தங்கள் நலனுக்காக இதை- இந்தப் பிரிவினையை வேண்டு வார்களானால், வலியுறுத்து வார்களானால் அதற்கு இடம் கொடுப்பது திராவிட கலாச் சாரத்துக்கும் திராவிட சமுதா யத்துக்கும், திராவிடத் தலை மொழியாகிய தமிழுக்கும் தேய்வு- அழிவு ஏற்பட்டு விடு மென்று எச்சரிக்க விரும்பு கிறேன்" -_ பெரியார், விடுதலை 1. 8. 1948.

மொழி அடிப்படையில் தமிழ்நாடு அமைவதை-, அதற் காகக் கோரிக்கை வைப்பதை இங்கு எதிர்க்கிறார் பெரியார். மொழிவழி மாநிலம் கோரு வோர் காட்டுமிராண்டிகளின் பிரதிநிதிகள் என்று இராசாசி 1956-இல் பேசினார்.

1948இல் மொழிவழி மாநிலப் பிரிவினையை எதிர்த்த பெரி யார் 1955-இல் தமிழ்நாடு தனிநாடாக வேண்டும் என் கிறார். என்னே தன் முரண்பாடு! அத்தோடு அவர் நிற்கவில்லை. 1948-இல் அவர் போற்றிய திராவிடச் சமுதாயத்தின் திராவிடக் கலச்சாரத்தின் ஒரு பகுதியாக விளங்கும் மலையாளி களை என்ன சாடு சாடுகிறார் பாருங்கள். 1956-இல் அவர் பேசியது:

“ஏறக்குறைய பார்ப்பனக் குறும்பும் மலையாளக்குறும்பும் ஒன்றுதான். இரண்டிற்கும் ஒற்றுமை அதிகம். பார்ப் பானுக்குள்ள புத்தியெல்லாம் மலையாளிக்கும் உண்டு. பார்ப் பனனைப் போலவே மலை யாளிகள் மான ஈன மில்லா தவர்கள். மற்ற நாட்டில் போய் அண்டிப் பிழைக்கிறோமே என்ற எண்ணம் கூட இருக் காது. எதற்கெடுத்தாலும் திமி ராகப்பேசவும், பார்ப்பனர் களைப் போல் தந்திரமாகப் பேசவும் தெரியும்.’’

- வேலூரில் பெரியார் உரை 29. 1. 1956 (இதை விடுதலை நாளேடு- 18. 1. 2012இல் ஒரு கட்டுரையில் வெளியிட்டுள் ளது)

பெரியார் சொற்களில் சொன்னால் பார்ப்பனர்களைப் போன்ற மலையாளிகளையும் சேர்த்துக்கொண்டது தானே அவர் கூறி வந்த திராவிடம், அவர் உரத்துப்பேசிய திராவிட சமுதாயம் மற்றும் திராவிடக் கலாச்சாரம். சென்னை மாகாணத்திலிருந்து மலபார் மாவட்ட மலையாளிகளை பிரித்து அனுப்பக் கூடாது என்றுதானே மொழிவழித் தமிழக அமைப்பை 1948 -இல் எதிர்த்தார்!

அன்றன்றைக்கு அவர் எடுத்த அரசியல் நிலைபாட்டிற் கேற்ப வெவ்வேறு வரையறுப்புகளைக் கூறிவந்துள்ளார் பெரியார்.

தமிழ்த் தேசிய இனம் குறித்து சமூக அறிவியல் வழிப்பட்ட வரையறுப்பு அவரிடம் இல்லை.

சென்னை மாகாணத்தி லுள்ள தெலுங்கர், கன்னடர், மலையாளிகள் பிரிந்து போகக் கூடாது என்று 1948-இல் கூறிய பெரியார், இந்த நான்கு மாநிலங்களையும் சேர்த்து நேரு முன்மொழிந்த தட்சிணப் பிரதேசத்தை அவர் ஆதரித் திருக்க வேண்டும்.

சென்னை மாகாணத்தி லிருந்து தெலுங்கு, கன்னட, மலையாளப் பகுதிகளைப் பிரித்துவிடக் கூடாது என்று பேசிய பெரியார் 1956-இல் அந்த இனங்களோடு தமிழர்களும் சேர்ந்து ஒரே மாநிலமாக இருப்பதை ஏன் எதிர்த்தார்?

அப்படி ஒரு மாநிலம்- அதாவது தட்சிணை பிரதேசம் அமைந்து விட்டால் திராவிடர் கழகம் தமிழர்களிடம் மட்டும் உள்ள சின்னஞ் சிறு அமைப் பாக சிறுத்துப் போயிருக்கும். திராவிடத்தையும் பெரியாரை யும் ஏற்காத தெலுங்கர்கள், கன்னடர்கள், மலையாளிகளே தட்சிணப்பிரதேசத்தில் பெரும் பான்மையாக இருந்திருப் பார்கள்.

மொழிவாரி மாநிலத்திற்குக் குரல் கொடுக்காத காமராசர், தெற்கெல்லை வடக்கெல்லை மீட்புப் போராட்டங்களை ஆதரிக்காத காமராசர், தட்சி ணப் பிரதேசம் அமைவதை மட்டும் ஏன் எதிர்த்தார்? தட்சிணப்பிரதேசம் அமைந்து விட்டால் அதில் காமராசர் முதலைமைச்சராகத் தொடர முடியாது. பெரும்பான்மை இனமான தெலுங்கர்களே பெரும்பாலும் முதலமைச்சர் ஆவர். அதுமட்டுமல்ல, தங்க ளுக்குள் முரண்பாடுகள் இருந் தாலும் தெலுங்கர்களும், கன்னடர்களும், மலையாளி களும் தமிழரை எதிர்ப்பதில் ஒன்று சேர்ந்து விடுவார்கள். எனவேதான் காமராசர், தட்சிணப் பிரதேசத்தை எதிர்த்தார்.

எனவே, தட்சிணப் பிரதேச அமைப்பை எதிர்த்ததில், பெரி யாருக்கும், காமராசருக்கும் அவரவர் எதிர்காலம் சார்ந்த பார்வை இருந்ததே தவிர, தமிழ்த் தேசிய இனம், தனி இனம் என்ற சரியான பார்வை இல்லை.

தி.மு.க. ஏன் தட்சிணப் பிரதேசத்தை எதிர்த்தது? 1957 தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ள வேளையில் தட்சி ணப் பிரதேசம் முன் மொழியப் பட்டது. தி.மு.க. கூறிவந்த "திராவிடப் பொன்னாடு’’ தானே தட்சிணப் பிரதேசம்! அதை ஏன் எதிர்க்க வேண்டும்? முதலில் திராவிட இன ஒற்றுமையை உருவாக்கி, அடுத்து திராவிட நாட்டு விடுதலைக்குப் போராடு வதுதானே தி.மு.க.வின் திட்ட மாக இருந்திருக்க வேண்டும். திராவிடர்கள் ஒன்றிணைக் கப்படுவதைக் கண்டு அண்ணா ஏன் அஞ்சினார்? தட்சிணப் பிரதேசத்தில் தி.மு.க. ஒரு போதும் ஆட்சி அமைக்க முடியாது.

1956-இல் தமிழ்நாட்டில் பெரியாரும் அண்ணாவும் பெற்றிருந்த செல்வாக்கும் அவர் களின் கழகங்கள் பெற்றிருந்த வளர்ச்சியும் திராவிடத் தட் சிணப் பிரதேசம் அமைந்தால் சடசடவெனச் சரிந்து சிறுபான் மை ஆகிவிடும் என்பதை உணர்ந்து அவர்கள் அஞ்சி னார்கள்.

ஏமாளித் தமிழர்களிடம், இவர்கள் திராவிட இன உறவுகளை-, திராவிடக் கலாச் சாரத்தைப் பேசினார்கள். இந்திய அரசே திராவிடர்களை ஒரே மாநிலமாக இணைக்கப் போகிறது என்று வந்தவுடன் தங்கள் நிலை என்ன ஆகுமோ என்று அஞ்சினார்கள். இதற்குப் பெயர் இனக்கொள்கையா?

இவர்களிடம் தேசிய இனங்கள் குறித்த வரையறுப்பும் தமிழ்த் தேசிய இனம் குறித்த புரிதலும் இல்லை. ஆனால் ‘இன அரசியல்’ நடத்தினார்கள். தமிழர்கள் தங்களின் மரபு இனமாகவும் தேசிய இன மாகவும் விளங்கும் தமிழ் இனத்தை உள்ளது உள்ளபடி உணரவிடாமல் இவர்கள் குழப்பிவிட்டார்கள்! இன்றைக்கும் தி.மு.க.வும் தி.க.வும், மற்ற பெரியாரியல் வாதிகளும் திராவிடத்தைச் சொல்லி தமிழர்களைக் குழப்பு கிறார்கள்.

கலைஞர் கருணாநிதி இன் றும் ‘திராவிடம்’ என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்து கிறார். "இனத்தால் திராவிடன் மொழியால்தான் தமிழன்" என்று கூறிக்கொள்கிறார். இவ்வாண்டு நடந்த பெருங்கேடாக தி.க. தலைவர் கி.வீர மணி, தமிழர் திருநாள் விழாவை "திராவிடர் திருநாள் விழா" என்று பெயர் மாற்றி மூன்று நாள் கொண்டாடினார். திராவிடச் சீர்குலைவு இன்னும் ஓயவில்லை. தமிழர்கள் இன உணர்ச்சி பெற்று எழும் போதெல்லாம் "திராவிடத் தலைவர்கள்" தங்கள் சீர்குலைவு வேலையைத் தொடங்கி விடு கிறார்கள்.

முல்லைப்பெரியாறு அணைப் போராட்டத்தில் மக்களின் எழுச்சியைப் பார்த்த கருணாநிதி, அம் மக்களைத் தமது தேர்தல் அரசியலுக்கு ஈர்த்துக் கொள்வதற்காக தேவிகுளம் பீரி மேட்டைத் தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்கிறார். மலை யாள அரசு, தமிழர்களின் பொங்கல் விழாவுக்கு விடுமுறை விடாத நிலையில், தமிழ் நாட்டில் ஐந்து மாவட் டங்களில் மலையாளிகளின் ஓணம் பண்டிகைக்கு விடுமுறை விட்டு தமிழினத் துரோகம் புரிந்தவர் இதே கருணாநிதி தான். ஆந்திரப் பிரதேச முதல மைச்சர் இராசசேகரரெட்டி விமானவிபத்தில் இறந்ததற்கு தமிழ்நாட்டில் விடுமுறைவிட்டு, தி.மு.க. கொடியை மூன்று நாள்களுக்கு அரைக்கம்பத்தில் பறக்க விட்டவர் இதே கருணாநிதிதான். அண்ணா, பெரியார், எம்.ஜி.ஆர். இறந்த போது ஆந்திரம் விடுமுறை விடவில்லை.

1956 பிப்ரவரி 20 -இல் அனைத்துக் கட்சி நடத்திய தமிழகப் பொது வேலை நிறுத்தம் மற்றும் முழு அடைப்பில் கலந்து கொண்ட தற்கப்பால் தமிழ்நாட்டில் தேவிகுளம் பீரிமேடு மீட்பிற்காக தனியே ஒரு போராட்டத் தைக்கூட தி.மு.க. நடத்த வில்லை. குமரி மாவட்டத்தில் தி.மு.க.வினர் திரு.தமிழ்நாடு காங்கிரசு நடத்திய போராட் டங்கள் சிலவற்றில் அப்போது கலந்துள்ளனர். கருணாநிதி தமது அறிக்கையில் தமிழக முழுஅடைப்பில் தி.மு.க. கலந்து கொண்டதைக் குறிப்பிட் டுள்ளார். மற்றவையெல்லாம் கழகத்தின் தீர்மானங்களும் அறிக்கைகளும் தாம்!

பெரியார் தி.க. என்ன கூறுகிறது? முல்லைப்பெரியாறு அணை உரிமைப் போராட் டத்தில் இந்திய அரசை எதிர்த்துப் போராடவேண்டுமே தவிர கேரளத்தையோ மலையாளிகளையோ எதிர்த்துப் போராடக்கூடாது என்கிறது. கேரளம் 'சண்டித்தனம்" செய்கிறதாம்! கேரளத்தில் தமிழர்கள் தாக்கப் பட்ட தெல்லாம் சண்டித்தனம் தானோ?

’’முல்லைப்பெரியாறு அணை மீண்டும் எரியத் தொடங் கியுள்ளது. கேரள அரசின் சண்டித்தனம் தமிழர்களைத் கொதித்தெழ வைத்துள்ளது.

‘ஒன்றுபட்ட இந்தியா தோல்வி அடைந்து விட்டது. இந்தியாவில் வாழும் தேசிய இனங்களின் உரிமைகளுக்கு ஒன்றுபட்ட இந்தியாவுக்குள் தீர்வு கிடைக் காது என்ற நிலையில், தமிழர் களின் பிரதான எதிரியாக நிற்பது பார்ப்பன-பன்னாட்டுச் சுரண்டலுக்காக மட்டும் அதிகாரத்தைப் பயன்படுத்தும் இந்திய ஆட்சிதான்’’

_-புரட்சிப் பெரியார் முழக்கம் (பெ.தி.க. ஏடு) 15. 12. 2011

தமிழ்நாட்டு விடுதலையைத் தனது முதன்மை இலட்சிய மாகக் கொண்டுள்ள இயக்கம் போல் காட்டிக் கொண்டு, கேரளத்திற்கும் மலையாளி களுக்கும் பதிலடி கொடுக்கும் தமிழ் மக்களைத் திசை திருப்பி விட இந்திய அரசை எதிர்த்து போராடுங்கள் என்று மடை மாற்றுகிறது பெ.தி.க.

1956 சனவரியில் ம.பொ.சி. கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்குப் போக மறுத்த பெரியார் தனித்தமிழ்நாடு கோரிக்கைக்கு ஊனம் ஏற்ப டாமல் மாநில சுயாட்சிக் கோரிக்கையை இணைத்துக் கொண்டால், இந்தி எதிர்ப்பை இணைத்துக் கொண்டால் தேவிகுளம் பீரிமேடு போராட் டத்திற்கு வருவேன் என்று காரணம் காட்டித் திசை திருப்பினாரல்லவா! அதே உத்தியைத்தான் இப்பொழுது பெ.தி.க.வும் கையாள்கிறது.

அய்யப்ப கோயிலுக்குப் போன தமிழர்களை மலையா ளிகள் அடித்து விரட்டியதை எளிமைப்படுத்தி மலையாளிகள் மீது தமிழர்களுக்குச் சீற்றம் வராமல் அவர்களுக்குத் தற் காப்புப்பணி புரிகிறது பெ.தி.க.

“சூத்திரத்தமிழர்களை அடித்து விரட்டி விட்டதாலேயே ‘சூத்திர’ மலையாளிகள் அய்யப்பனுக்கு முழு உரிமை கோரவும் முடி யாது. அவர்களால் அய்யப் பனை நெருங்கிவிடவும் முடி யாது. அங்கே நம்பூதிரிப் பார்ப்பான் சூத்திர மலையாளிகளை மட்டுமல்ல பெண்களையும் சேர்த்து கர்ப்பக்கிரகத்திலிருந்து வெளியே விரட்டி அடிக்கிறான். - புரட்சிப்பெரியார் முழக்கம் 15.12.2011

வர்ணாசிரம எதிர்ப்பு, பெண் ணுரிமை என்ற முற்போக்குச் சொல்லாடல்கள் மூலம் மலை யாளிகளைப் பாதுகாக்கும் ‘திராவிட உத்தி’ இது.

பத்துநாள்களாகக் கேரளத்தில் கேள்வி கேட் பாரற்று மலையாள இன வெறி யர்கள் அப்பாவித் தமிழர்களை அடித்தார்கள். தமிழ்ப் பெண் களைச் சிறைப்படுத்தி மான பங்கப் படுத்தினார்கள். அதன் பிறகே தமிழ்நாட்டில் மலை யாளிகளுக்குப் பதிலடி கொடுத் தோம். தமிழ்நாட்டில் நடந்த பதிலடி என்பது மலையாளி களின் நிறுவனங்களை மூடச் செய்ததாகத்தான் அமைந்தது. இதைத் தாங்கிக்கொள்ள முடிய வில்லை பெரியார் தி.க.வால்! அவர்களின் திராவிட பாசம் தமிழர் களுக்கு எதிராக உள்ளது. மலையாள இனவெறியர்களைப் பாதுகாக்க முனைகிறது. இதற்காகத் தமிழர்களிடம் சூத்திர பாசத்தைக் கொண்டு வந்து கொட்டுகிறது பெ.தி.க.

அய்யப்பன் கோயிலில் பெண்களை அனுமதிக்கவில் லையே என்று கவலைப்படும் பெ.தி.க.வுக்கு, தேனி மாவட்டத் தமிழ்ப் பெண்கள் மலையாளி களால் கடத்தப்பட்டு மான பங்கப் படுத்தப்பட்டது பெரிதாக உறுத்தவில்லை. திராவிட பாசம் மனச்சசான்றை மரத்துப் போகச் செய்கிறது.

அடிக்கும் மலையாளிகளும் ஆடுகளாம் அவர்களால் அடிக்கப்படும் தமிழர்களும் ஆடுகளாம்! இரு ஆடுகளும் மோதிக் கொண்டால் இந்திய அரசு என்ற நரிதான் இரத்தம் குடிக்குமாம்! திசை திருப்பு கிறது பெ.தி.க.

“ஆனாலும் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில் தமிழ்நாட்டின் உரிமைகளைப் பெற்றுத் தர வேண்டிய கடமை யைக் கைகழுவிவிட்டு, தமிழர் -கேரள மோதல்களைக் கூர் தீட்டி விட்டு ஆடுகள் மோதலில் ரத்தம் குடிக்கும் நரிகளைப் போல், "ஒருமைப் பாடு', "தேச பக்தி' பேசிக் கோண்டு உரிமை களைத் தடுத்து நிறுத்தும் முதன்மை எதிரி இந்திய அரசு தான்”. - -புரட்சிப் பெரியார் முழக்கம், 22. 12. 2011.

இந்திய அரசு ஓர் ஏகாதி பத்திய அரசு. பல்வேறு இனங் களுக்கிடையே எழும் முரண் பாடுகளைத் தீர்க்காமல் மோத விடுவது அதன் பொதுவான உத்திதான். அந்த இந்திய அரசின் உயர் அதிகார மையங் களில் மலையாளிகள் தாம் முகாமையான பொறுப்புகளில் உள்ளார்கள். ஈழத் தமிழர்களை அழிக்கும் போரை இந்தியா மறைமுகமாக நடத்தியதற்கு முகாமைக் காரணிகளாக இருந்தவர்கள் அந்த மலையாளிகள் தாம் என்பது ஊரறிந்த உண்மை. இதே பெ.தி.க.வும் அக்குற்றச்சாட் டைத் தனது ஏட்டில் எழுதி யுள்ளது. தமிழகத் தமிழர்கள் மலையாளிகளால் தாக்கப்படும் போது மட்டும், மலையாளிகள் அப்பாவி ஆடுகள் என்றும் அவர்களை ஏவுவது இந்திய அரசுதான் என்று தான் என்றும் கண்டுபிடித்துள்ளது. இக்கண்டுபிடிப்பு எங்கிருந்து வந்தது? திராவிட பாசத்தி லிருந்து வந்தது.

இரண்டு ஆடுகளையும் இந்திய அரசு கூர் தீட்டி விட்டது என்றால், தமிழர்களை மலையாளி களுக்கு எதிராக அது கூர் தீட்டிவிட்டதா?

தமிழர்களைப் பார்த்துக் கேட்கிறோம். தமிழர்களே, மலையாளிகளோடு மோதுங்கள் என்று உங்களை இந்திய அரசு கூர்தீட்டி விட்டதா? மலையாளிகளைத் தாக்கும்படி தமிழர்களை இந்திய அரசு தூண்டி விட்ட தா? இல்லை. தம்மின அப்பாவி மக்கள் மலையாள இனவெ றியர்களால் அன்றாடம் தாக்கப் படுவதைக் கண்டு நெஞ்சு குமுறிய தமிழ்நாட்டுத் தமிழர்கள் தங்களின் இன உணர்ச்சி தூண்டியதால் மலையாளி களுக்குப் பதிலடி கொடுத்தார்கள். இந்திய அரசு தமிழர் களைத் தூண்டிவிட்ட தாக ஏன் பெ.தி.க. பிழைபடப் பேச வேண்டும்-? 

தமிழர்கள் தாக்கப்பட் டார்கள். மலையாளிகள் தாக்கி னார்கள். இதை “தமிழர் - கேரள” மோதல் என்று வர்ணிக் கிறது பெ.தி.க. நம்மைச் சொல்லும் போது தமிழர் என்று குறிப்பிடும் அக்கட்சி மலையாளிகளைக் குறிப்பிடும் போது மட்டும் இனப்பெயரைக் குறிப் பிடாமல் ”கேரள” என்று மாநிலப் பெயரைக் குறிப் பிடுகிறது.

“தமிழக-கேரள” மோதல் என்று குறிப்பிட்டிருந்தால் கூட அதுவும் சரியில்லை. தமிழகம் கேரளத்தோடு மோதியதா? இல்லை, கேரளம் தான் தமிழகத் தோடு மோதியது. மோதிக் கொண்டுள்ளது.

இந்திய அரசை உண்மையில் எதிர்ப்பதாக இருந்தால் தமிழக விடுதலையை தனது முதன்மை இலட்சியமாக அறிக்கை வடிவில் பெ.தி.க. அறிவித்து இயங்க வேண்டும். அதை விடுத்து முல்லைப் பெரியாறு அணை உரிமைப் போராட் டத்தில் மலையாள இனவெறி யர்களுக்கு எதிராக ஏற்பட் டுள்ள தமிழர் இன எழுச்சியை மடை மாற்றுவதற்காக இந்திய அரசு எதிர்ப்பினைப் பயன் படுத்தக் கூடாது.

அடிபட்டு, அடிபட்டு, உரிமை இழந்து இழந்து, மலையாள இனவெறியர்களுக்கு எதிராகச் சீறிச் சினந்து எழுந்துள்ள தமிழ் மக்களையும் தமிழின உணர்வாளர்களையும் திசை திருப்பும் வகையில், ஆடுகளின் மோதல், இரத்தம் குடிக்கும் நரிக்கதை, சூத்திரர், பெண்ணுரிமை சொல்லா டல் போன்றவற்றை பெ.தி.க. பயன் படுத்துவது சரியன்று.

திராவிட இயக்கத்தின் திராவிட இனக்கொள்கை அன்றும் தமிழர் உரிமைகளுக்கு எதிராக இருந்தது இன்றும் எதிராக உள்ளது.

இன எழுச்சி பெற்றுள்ள தமிழர்கள் தமிழ்த்தேசியம் என்ற தமிழினத்திற்குரிய தத்து வப் பதாகையை ஏந்தினால் தான் நம் போராட்டங்களும் எழுச்சிகளும் மீண்டும் விரைய மாகாமல் தமிழின உரிமைகளை மீட்கப் பயன்படும்!

முல்லைப்பெரியாறு அணை உரிமையை மீட்கும் போராட் டத்துடன் முதற் கட்டமாக இடுக்கி மாவட்டத்தை இணைக் கவும் இன அடிப்படையில் தமிழர்கள் ஒன்று திரள்வோம்! போராடுவோம்! தாக்குபவனைத் திருப்பித் தாக்குவோம்!

(தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2012 பிப்ரவரி 1-15 இதழில் வெளியான கட்டுரை).

Labels:

”தமிழக எல்லை மீட்புப் போராட்ட வரலாற்றை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்!” -- தோழர் பெ. மணியரசன்



==========================================
தமிழக எல்லை மீட்புப் போராட்ட வரலாற்றை 
பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்!
==========================================
தோழர் பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
==========================================

ஓர் ஆறானது நிலத்தை அறுத்துக் கொண்டு ஓடி தனக்கான கரையைத் தானே அமைத்துக் கொள்கிறது. அப்படித்தான் ஒரு மொழி பேசும் மக்கள் வரலாற்றுப் போக்கில் தங்களுக்கான தாயகத்தை உருவாக்கிக் கொள்கிறார்கள். 

“வடவேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ்கூறும் நல்லுலகம்” (தொல்காப்பியம், சிறப்புப்பாயிரம் - பனம்பாரானார்) என்ற வடிவில் தமிழர் தாயகமும் அப்படித்தான் அமைந்தது. 

தொல்காப்பியர் காலத்தில் வடக்கே வேங்கடமலை (திருமலை – திருப்பதி), தெற்கே குமரிமுனை, கிழக்கிலும் மேற்கிலும் கடல் என்ற இயற்கை வரம்புகளுடன் தமிழ்நாடு இருந்தது. பின்னர் மலையாள மொழி உருவானதால் மேற்கில் கேரளம் உருவானது. 

கிழக்கிந்திய ஆங்கிலக் கம்பெனியார் பீரங்கி முனையில் பல்வேறு இன மக்களின் தாயகங்களைக் கைப்பற்றி, தங்கள் நிர்வாக வசதிக்கேற்ப “இந்தியா” என்ற நாட்டை உருவாக்கினர். 

இந்திய விடுதலைப் போராட்டத்திற்குக் காந்தி அவர்கள் தலைமையேற்ற பின், அவர் இந்தியாவின் தனித்தன்மையைப் புரிந்து கொண்டு, மாநிலக் காங்கிரசு அமைப்புகளை பிரித்தானிய அரசு அமைத்திருந்த மாநில அடிப்படையில் இல்லாமல், மொழிவழித் தாயகத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கச் சொன்னார். அவ்வாறு 1920களில் உருவாக்கப்பட்டதுதான் தமிழ்நாடு காங்கிரசுக் கமிட்டி! இப்பெயர் அப்போது சூட்டப்பட்டதுதான்!

அப்போது இன்றுள்ள ஆந்திரப் பிரதேசம் சென்னை மாகாணத்தில் இணைக்கப்பட்டிருந்தது. ஆந்திர மாநிலத்தார் தனி மாநில காங்கிரசுக் கமிட்டி வைத்துக் கொண்டனர்.

விடுதலை பெற்ற இந்தியாவில் மொழிவழித் தாயகங்கள், அவற்றிற்கான தன்னாட்சி (மாநில சுயாட்சி) எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்குமாறு மாநில மறுசீரமைப்புக் குழுவை அனைத்திந்திய காங்கிரசுக் கமிட்டி 1927இல் நிறுவியது. அக்குழுவின் தலைவர் மோதிலால் நேரு, செயலாளர் பண்டிதர் சவகர்லால் நேரு! 

சென்னைக் கடற்கரையில் 1938 செப்டம்பர் 11-இல் வெள்ளம்போல் மக்கள் பல்லாயிரக்கணக்கில் கலந்து கொண்ட மாபெரும் இந்தி திணிப்பு எதிர்ப்பு மாநாடு நடந்தது. அம்மாநாட்டிற்குத் தலைமை தாங்கிய மறைமலை அடிகளார் முன்மொழிய பெரியாரும், தமிழறிஞர் சோமசுந்தர பாரதியாரும் வழிமொழிய “தமிழ்நாடு தமிழருக்கே” என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை மாகாணத்தைத் தமிழர் தாயகமாகக் கொண்டு தனி மாநிலம் உருவாக்க வேண்டும் என்று அத்தீர்மானம் கோரியது. 

அனைத்திந்தியக் காங்கிரசுக் கட்சியின் 1946-ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கை மொழிவழி மாநிலம் அமைக்க உறுதியளித்தது. 

ஆனால் 1947 ஆகத்து 15-இல் இந்தியா விடுதலை பெற்ற பின், நேரு அரசாங்கம் மொழிவழி மாநிலம் அமைப்பதற்கான முயற்சியில் இறங்கவில்லை. அக்கோரிக்கையைக் கிடப்பில் போட்டு விட்டது. 

தொடர்ந்து கோரிக்கைகள் வரவே தலைமை அமைச்சர் பண்டித நேரு மொழி மாநிலம் குறித்த பரிந்துரை வழங்குவதற்காக 1948 சூன் 17 அன்று எஸ்.கே. தார் தலைமையில் ஆணையம் அமைத்தார். 

தமிழரசுக் கழகத் தலைவர் ம.பொ.சி. 1948 செப்டம்பர் 13ஆம் நாள் தார் ஆணையக் குழுவைச் சந்தித்து, கோரிக்கை விண்ணப்பம் கொடுத்தார். அதன் சுருக்கம் :

“சென்னை மாகாணத்தைத் தமிழகம், ஆந்திரம், கேரளம், கன்னடம் என நான்கு மொழிவழி மாநிலங்களாக உடனே ஏக காலத்தில் பிரிக்க வேண்டும். தமிழ்நாடு தனி மாநிலமாகப் பிரிய வேண்டியது அவசியம் என்பதைத் தமிழர்கள் உணர்கின்றனர். அந்தப் பிரிவினை அவசரமாக நிறைவேற்றப்பட வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். பிரிக்கப்படும் தமிழ் மாகாணத்தின் எல்லைகள் தெற்கே குமரி முனையாகவும் வடக்கே திருப்பதியாகவும் இருக்க வேண்டும். 

“சென்னை நகரம் தமிழ்நாட்டிலேயே இருக்க வேண்டும். புதிய தமிழகம் சட்டசபை, மந்திரிசபையோடு கூடிய சுயாட்சியுள்ள மாகாணமாக இருக்க வேண்டும். அந்நிய நாட்டுறவு, போக்குவரத்து, பாதுகாப்பு ஆகியவற்றை மத்திய அரசுக்கு விட்டுக் கொடுத்து, ஏனைய எல்லா அதிகாரங்களும் உள்ள சுதந்தர அரசுகளாக மாநிலங்கள் இருக்க வேண்டும்”.

ஆனால் தார் ஆணையம் 1948 டிசம்பர் 10ஆம் நாள் அளித்த அறிக்கையில், மொழி அடிப்படையில் மாநிலங்கள் அமைக்கக் கூடாது என்றும் நிர்வாக வசதிக்கேற்ப இப்போதுள்ள மாநிலங்களைப் பிரிக்கலாம் என்றும் பரிந்துரை செய்திருந்தது. 

தார் ஆணையத்தின் இந்தப் பரிந்துரையை எதிர்த்து ஆந்திரம் கொந்தளித்தது. “விசாலாந்திரம்” கோரி ஆந்திரக் காங்கிரசுத் தலைவர்களும் கம்யூனிஸ்ட்டுத் தலைவர்பகளும் மக்களும் போராடினார்கள். ஆனால் தமிழ்நாட்டில் இந்த அறிக்கையை எதிர்த்து எந்தப் போராட்டமும் இல்லை! 

தமிழ்நாட்டில் மாநிலக் காங்கிரசுத் தலைமை மொழிவழி மாநிலக் கோரிக்கையை எழுப்பவே இல்லை. இளைஞர்களின் இன எழுச்சி அமைப்பாக விளங்கிய திராவிடர் கழகம் தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாளத் தாயகங்களைக் கொண்ட திராவிட நாடும் திராவிட இனமும் பேசி வந்ததால் தமிழ் மாநில அமைப்பில் அக்கறை காட்டவில்லை. 

ஆனால் தமிழ்நாட்டின் தெற்கில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் மலையாள மாநில நிர்வாகத்தில் சிக்கிக் கொண்ட தமிழர்கள் தமிழ்நாட்டுடன் இணைய வேண்டும் என்று 1948லிருந்தே தொடர்ச்சியாகப் பல போராட்டங்கள் நடத்தி வந்தனர். 

அதேபோல் வடக்கில், ஆந்திரத் தெலுங்கர் நிர்வாகத்தில் சிக்கிக் கொண்ட சித்தூர் மாவட்டத் தமிழர்கள் 1947லிருந்தே தாய்த்தமிழகத்தில் இணைய தொடர்ச்சியாகப் போராடி வந்தனர். தெற்கிலும் வடக்கிலும் மொழி இன அடிப்படையில் தமிழ்நாட்டுடன் தங்கள் பகுதிகள் சேர்க்கப்பட வேண்டும் என்று போராடிய தலைவர்கள், செயல்பட்டாளர்கள் - பெரும்பாலும் காங்கிரசார் மற்றும் காந்தியவாதிகள்! 

தாய்த் தமிழ்நாட்டுடன் இணைந்திட வடக்கிலும் தெற்கிலும் காங்கிரசார் நடத்திய போராட்டங்களைத் தமிழ்நாடு காங்கிரசுக் கமிட்டி ஆதரிக்கவில்லை. கேரளக் காங்கிரசிலிருந்து விலகி, திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசுக் கமிட்டி அமைப்பை உருவாக்கித்தான் மார்சல் நேசமணி, பி.எஸ். மணி, தாணுலிங்க நாடார், காந்திராமன், குஞ்சன் நாடார், நத்தானியேல் போன்ற பெருமக்கள் தலைமையில் அப்போராட்டம் நடந்தது. இப்போராட்டத்தை ஆதரித்து அதில் கலந்து கொண்ட ப. ஜீவானந்தம் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர். கட்சி சார்பற்ற பிரமுகர்களும் அப்போராட்டத்தில் இருந்தார்கள். 

அதேபோல் வடக்கெல்லை மீட்புப் போராட்டத்தை முன்னெடுத்த ம.பொ.சி., மங்கலங்கிழார், தளபதி கே. வினாயகம், கோல்டன் ந. சுப்ரமணியம், டி.எம். திருமலைப்பிள்ளை, சித்தூர் அரங்கநாத முதலியார் போன்றோர் காங்கிரசாரே! இப்போராட்டக் குழுவில் செயல்பட்ட ந.அ. ரசீது அவர்கள் தி.மு.க.! 

1946-ஆம் ஆண்டு சூன் 30ஆம் நாள் தெற்கெல்லை மீட்புப் போராட்டத்தின் முதல் தொடக்கமாக திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு அமைக்கப்பட்டது. 

மலையாளக் காவல்துறையின் தடியடி – குறிப்பாக முதலமைச்சர் பட்டம் தாணுப்பிள்ளை அரசின் கொடிய அடக்குமுறை, துப்பாக்கிச் சூடு – சிறை அடைப்பு அனைத்தையும் எதிர்கொண்டு வளர்ந்தது தி.த.நா. காங்கிரசு! 

இப்போராட்டங்களின் சிகரமாக 1953 ஆகத்து 11-ஆம் நாளைத் தமிழர் விடுதலை நாள் (Deliverance Day) என்று அறிவித்து திருவிதாங்கூர் சமஸ்தானத் தமிழகப் பகுதி முழுவதும் முழு அடைப்பு நடத்தினர். அனைத்து மக்களும் கலந்து கொண்டனர். திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு விடுத்த அழைப்பை ஏற்று திருவிதாங்கூர் தமிழகக் கம்யூனிஸ்ட் கட்சி, நாஞ்சில் மாவட்ட தி.மு.கழகம், மாணவர் சம்மேளனம் ஆகிய அமைப்புகள் முழு அடைப்புப் போராட்டத்தில் பங்கேற்றன. 

கொடிய அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்ட பட்டம் தாணுப்பிள்ளை அரசு, 11.08.1954 அன்று 11 தமிழர்களை சுட்டுக் கொன்றது. பல நூறு பேரை அடித்தும் சுட்டும் படுகாயப்படுத்தியது. பலநூறு தமிழர்களை சிறையில் அடைத்தது. 

வடக்கெல்லை பாதுகாப்புக் குழு 1952இல் அமைக்கப்பட்டது. அதன் தலைவர் ம.பொ.சி. செயலாளர் தளபதி கே. வினாயகம். பல போராட்டங்கள் நடத்தியது. 144 தடையை மீறி ம.பொ.சி., கே. வினாயகம், மங்கலங்கிழார் உள்ளிட்டோர் 25.06.1953இல் கைதாகிச் சிறை சென்றனர். 

வடக்கெல்லை மீட்புப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறையிடைக்கப்பட்ட திருவாலங்காடு பி. கோவிந்தசாமி இராஜமுந்திரி சிறையிலும், பழனிமாணிக்கம் தடியடியிலும் மாண்டனர். 

ஏற்கெனவே தனி ஆந்திரம் கோரி சென்னையில் ஆந்திராவைச் சேர்ந்த பொட்டி ஸ்ரீராமலு சாகும்வரை உண்ணாப் போராட்டம் தொடங்கி, 57ஆம் நாள் 15.12.1952 அன்று காலமானார். பொட்டி ஸ்ரீ ராமலுவின் இறப்பு – ஆந்திராவில் பெருங்கிளர்ச்சியைத் தட்டி எழுப்பியது. 

நீதிபதி பசல் அலி தலைமையில் கே.எம். பணிக்கர் (இவர் கேரளம்), கே.என். குன்சுரு ஆகியோரைக் கொண்ட மாநிலங்கள் மறு சீரமைப்புக் குழுவை 22.12.1952 அன்று இந்திய அரசு அமைத்தது. அது 1955 அக்டோபர் 10 அன்று தனது அறிக்கையை அளித்தது. 

அவ்வறிக்கை சித்தூர் மாவட்டத்தை ஆந்திராவுடன் சேர்த்தது. சித்தூர் மாவட்டம் 90 விழுக்காடு தமிழர்களைக் கொண்ட தமிழ் மாவட்டம்! 1911-இல் வெள்ளை அரசு வட ஆர்க்காடு மாவட்டத்திலிருந்து பிரித்து, சித்தூர் மாவட்டத்தை உருவாக்கியது. வடார்க்காடு மாவட்டத்திலிருந்த திருத்தணி, புத்தூர், சித்தூர், திருப்பதி, திருக்காளத்தி, பல்லவனேரி (பலமனேரி) ஆகிய ஆறு தமிழ் வருவாய் வட்டங்கள் சித்தூர் மாவட்டத்தில் சேர்க்கப்பட்டன. அம்மாவட்டத்தில் மதனப்பள்ளி, வாயல்பாடி ஆகிய இரண்டு மட்டுமெ தெலுங்கு வருவாய் வட்டங்கள்! பசல் அலி குழு முழு சித்தூர் மாவட்டத்தையும் ஆந்திராவுடன் இணைத்தது. 

சித்தூர் மாவட்டத்தைத் தமிழ்நாட்டுடன் இணைக்க வலியுறுத்தி ம.பொ.சி. தலைமையில் போராட்டங்கள் தொடர்ந்தன. சித்தூர் மாவட்டம் மறு ஆய்வுக்குரிய பகுதி என்று அறிவித்து, ஆய்வு செய்ய இந்திய அரசு படாஸ்கர் குழுவை அமைத்தது. 

படாஸ்கர் குழு பரிந்துரையில், திருப்பதி, திருக்காளத்தி, சித்தூர், பலமனேரி முதலிய தமிழர் வருவாய் வட்டங்களை இழந்தோம். திருத்தணி, திருவாலங்காடு, வள்ளிமலை பகுதிகள் தமிழ்நாட்டுடன் சேர்க்கப்பட்டன. சென்னையை ஆந்திரம் கேட்டது. தமிழ்நாடு ஆந்திரம் இரண்டுக்கும் பொதுவான தலைநகரமாக சென்னையை அறிவிக்க பண்டிதநேரு திட்டமிட்டார். 

அன்றைய சென்னை மாகாண முதல்வர் இராசாசி நேருவின் இத்திட்டத்தை எதிர்த்தார். மீறி பொதுத் தலைநகரமாக சென்னையை அறிவித்தால் முதல்வர் பதவியிலிருந்து விலகி விடுவென் என்று இராசாசி நேருவிடம் கூறி விட்டார். 

சென்னைத் தமிழ்நாட்டின் தலைநகராக மட்டுமே இருக்க வேண்டும் என்று ம.பொ.சி. சென்னை மாநகராட்சியில் தீர்மானம் கொண்டு வந்தார். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட கவுன்சிலர்கள் உட்பட மிகப்பெரும்பாலோர் ஆதரவுடன் அத்தீர்மானம் நிறைவேறியது. சென்னை தப்பியது!

திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த தமிழ் வருவாய் வட்டங்களான தோவாளை, அகத்தீசுவரம், கல்குளம், விளவங்கோடு, நெய்யாற்றின்கரை, செங்கோட்டை, தேவிகுளம், பீர்மேடு, சித்தூர் ஆகிய ஒன்பது வருவாய் வட்டங்கள் தமிழ்நாட்டோடு இணைக்கப்பட வேண்டும். ஆனால், தோவாளை, அகத்தீசுவரம், கல்குளம், விளவங்கோடு ஆகிய வருவாய் வட்டங்களும், செங்கோட்டை வருவாய் வட்டத்தில் செங்கோட்டை நகரம் மட்டும் தமிழ்நாட்டில் இணைக்கப்பட்டன. எஞ்சியவற்றை இழந்தோம். கோலார் தங்கவயல், கொள்ளேகாலம் ஆகிய மாவட்டங்களைக் கர்நாடகத்திடம் இழந்தோம். 

தேவிகுளம் – பீர்மேட்டை இழந்ததால் முல்லைப் பெரியாறு அணையையும் இழந்தோம். சித்தூர் மாவட்டத்தை இழந்ததால், வடபென்ணை ஆறு, பொன் வாணியாறு, ஆரணி ஆற்று அணை, திருப்பதி மலை போன்ற முக்கிய இடங்களை இழந்தோம். ஆந்திரம் பாலாற்றில் பல அணைகள் கட்டித் தமிழ்நாட்டுத் தண்ணீரைத் தடுத்துவிட்டது. அதன்பிறகு கச்சத்தீவையும் இழந்தோம். காவிரி ஆற்று உரிமை, முல்லைப் பெரியாறு அணை உரிமை ஆகியவை அந்தரத்தில் தொங்குகின்றன. 

தெற்கு வடக்கு எல்லை மீட்புப் போராட்டங்கள் பெரும் வீச்சோடு நடந்து கொண்டிருந்த காலத்தில், துப்பாக்கிச் சூடு நடத்தித் தமிழர்கள் கொல்லப்பட்ட காலத்தில், தமிழ்நாட்டின் மையப்பகுதிகள் வீச்சான மக்கள் திரள் போராட்டங்களை நடத்தி ஆட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை. அதனால்தான் தமிழ்நாட்டில் சேர வேண்டிய பல பகுதிகளை சேர்க்க முடியாமல் இழந்து விட்டோம். இந்தப் படிப்பினையை இன்றையத் தலைமுறையினர் கற்று விழிப்படைய வேண்டும்! தெற்கு - வடக்கெல்லை மீட்புப் போராட்டங்களையும், அதில் செய்யப்பட்ட தியாகங்களையும் தமிழ்நாடு அரசு பாடத்திட்டத்தில் சேர்த்து மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும்.

Labels:


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்