<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d6955529389241309188\x26blogName\x3d%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86.%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://thozharmaniyarasan.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com/\x26vt\x3d-8408640130511538487', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

"தமிழர்களின் முகமாக விளங்கியவர் பாவேந்தர்" பாவேந்தர் பாரதிதாசன் 125ஆம் ஆண்டு விழாக் கருத்தரங்கில் தோழர் பெ.மணியரசன் பேச்சு.

Saturday, May 16, 2015
"தமிழர்களின் முகமாக விளங்கியவர் பாவேந்தர்" 
--பாவேந்தர் பாரதிதாசன் 125ஆம் ஆண்டு விழாக் கருத்தரங்கில் தோழர் பெ.மணியரசன் பேச்சு.
 
பாவேந்தர் பாரதிதாசன் 125ஆம் ஆண்டு விழாக் கருத்தரங்கிற்குத் தலைமை ஏற்றிருக்கும் பாவலர் முழுநிலவன் அவர்களே, பாவரங்கில் கலந்து கொண்டு எழுச்சிப்பாக்கள் வழங்கிய பாவலர் நெல்லை இராமச்சந்திரன் அவர்களே, பாவலர் அருள்மொழி அவர்களே, பாவலர் பிரகாசு பாரதி அவர்களே,
சிறப்புரை அரங்கத்தில் சிறப்பான ஆய்வுரை வழங்கிய பேராசிரியர் முனைவர் வீ. அரசு அவர்களே, முனைவர் தி. பரமேசுவரி அவர்களே, இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்துக் கொண்டிருக்கும் ஐயா அருகோ அவர்களே, மறைமலை அடிகளார் பேரன் ஐயா தாயுமானவன் அவர்களே, அண்ணல் தங்கோ அவர்கள் பேரன் தோழர் அருட்செல்வன் அவர்களே, மா.பொ.சி. பேத்தி முனைவர் பரமேசுவரி அவர்களை முன்பே விளித்து விட்டேன். இங்கு குழுமியிருக்கும் சான்றோர்களே, சகோதரிகளே, நண்பர்களே, தோழர் களே!
இங்கே ஐயா அருகோ அவர்கள் எனக்கு சால்வை அணிவித்துப் பாராட்டினார். அருகோ அவர்களுக்குத் தான் நாங்கள் சால்வை அணிவித்துப் பாராட் டியிருக்க வேண்டும். தமிழ்த் தேசியக் களத்தில் அவர் எங்களுக்கு முன்னோடி, தொடர்ந்து அக்களத்தில் வழிகாட்டிக் கொண்டிருப்பவர்.

இந்த விழாவில் பாவலர் பொன்னடியான் அவர்களை வரவழைத்துச் சிறப்பித்திருக்க வேண்டும். அவர் சென்னையில்தான் வாழ்கிறார். பாவேந்தர் பாரதிதா சனின் நேரடி மாணவர்களில் உயிரோடிருப்பவர் பாவலர் பொன்னடியான். புரட்சிப் பாவலருடன் கூட இருந்தவர். முன்கூட்டியே இந்தச் சிந்தனை எங்களுக்கு வரவில்லை. இன்று பிற்பகல் அருட்செல்வன் நினை வூட்டினார். பொன்னடியான் அவர்களால் இங்கு வர முடியாத நிலை. அவர் பெருங்குடியில் உள்ளேன் என்றார். அவருடன் நான் தொடர்பு கொண்டு பேசி னேன். வேறொரு வாய்ப்பில் பொன்னடியான் அவர் களை நாம் சிறப்பிக்க வேண்டும்.

இந்த நிகழ்ச்சியில் இளம் மாணவி சரண்யா சிறப் பாக சிற்றுரை வழங்கினார். அவரைப் பாராட்ட வேண்டும்.

தமிழ்க் கலை இலக்கியப் பேரவை பாவேந்தரின் 125ஆம் ஆண்டு விழாவைப் பல இடங்களில் நடத்தி வருகிறது. இன்று சென்னையில் இங்கு இவ்விழாவை நடத்திக் கொண்டுள்ளோம். ஏற்கெனவே, ஓசூர், தஞ்சாவூர் ஆகிய இடங்களில் நடந்த பாவேந்தர் விழாக்களில் நான் கலந்து கொண்டேன். கோபியிலும் இவ்விழாவை த.க.இ.பே. நடத்தியுள்ளது.

கோவேந்தர்களை விடவும் பாவேந்தர்கள் வரலாற் றில் நிலைத்து வாழ்கிறார்கள். எத்தனையோ மன் னர்கள் ஆண்டிருக்கிறார்கள். அவர்களில் கரிகால் பெருவளத்தான், ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், இராசராசன், இராசேந்திரச் சோழன் போன்ற சில மன்னர்கள் மட்டுமே மக்கள் மனத்தில் தொடர்ந்து நிற்கிறார்கள். கபிலர் இல்லை என்றால் பாரியின் பெருமைகூட வரலாற்றில் நின்றிருக்குமா என்பது கேள்விக்குறிதான்!

கலை இலக்கியப் படைப்பாளிகள் மக்களின் மனத் துடன் பேசுகிறார்கள்; மனத்துடன் உரையாடுகிறார்கள். அதனால் அவர்கள் காலம் கடந்தும் வாழ்கிறார்கள்.

சிறந்த கலை இலக்கியப் படைப் பாளிகள் தாங்கள் வாழும் சமூகத்தின் - தாங்கள் வாழும் இனத்தின் முகமாக - ஆன்மாவாக விளங்கு கிறார்கள். டால்ஸ் டாய் இரசிய மக்களின் முகமாக விளங்கினார். அவரின் சமகாலப் படைப்பாளிகள் டால்ஸ்டாயை அப்படித் தான் அழைத்தனர்.
தாம் வாழ்ந்த காலத்தில் இருந்த ரசிய சமூகத்தின் சிக்கல்களை விவாதித்து - அச்சமூகத்தை அடுத்த கட் டத்திற்கு முன்னோக்கி நகர்த்துவதற்குரிய கருத்து களைத் தம் படைப்பு களில் வழங்கினார் டால்ஸ்டாய்.
ஒரு படைப்பாளி தான் வாழும் சமூகத்திற்குத், தன் இன மக்களுக்கு முழுமையாகத் தன்னை ஒப் படைத்துக் கொள்ளும் போதுதான் அப்படைப்பாளி அம் மக்களின் அடையாளமாக - முகமாக மாற முடியும்!
“நமக்குத் தொழில் கவிதை; நாட்டுக்குழைத்தல்; இமைப்பொ ழுதும் சோராதிருத்தல்” என்று தன் பணி பற்றிப் பாரதி பிரகடனம் செய்தான். அப்படியே அவன் வாழ்ந்தான்.

எனவே, இருபதாம் நூற்றாண்டில் தமிழ் மக்களின் அடையாளமாகப் பாரதி விளங்கினான். பாரதிக்குப் பின் தமிழர்களின் முழுமையான முகமாக, தமிழர்களின் ஆன்மாவாக விளங்கியவன் பாவேந்தன்!
இப்பொழுது தமிழில் பாரதியாரைப் போல், பாவேந்தரைப் போல் எழுத்தாற்றல் பெற்றவர்கள் இல்லையா? இருக்கிறார்கள். அவர்கள் ஏன் தமிழர் களின் முகமாக மாற முடியவில்லை. அவர்கள் முழுமை யாகத் தமிழர்களுக்குத் தங்களை ஒப்படைத்துக் கொள்ளவில்லை. எழுத்துக் கலையில் வல்லவர்களாக இருக்கிறார்கள். அதற்குமேல் அவர்கள் தங்களைத் தாம் வாழும் சமூக மக்களுக்கு ஒப்படைத்துக் கொள்ள வில்லை.

நம் தமிழினம் ஆங்கிலேயர்களுக்கு முன்பே அறிவு வளர்ச்சி பெற்ற இனம். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மொழியியல் குறித்து எழுதிய தொல்காப்பியர் பிறந்த இனம். அப்போது, ஆங்கிலேயர்களுக்கு அவர் களுடைய மொழியே பிறக்கவில்லை.

ஐரோப்பாவில் கி.பி. 13ஆம் நூற்றாண்டில்தான் Philology என்ற மொழியியல் தோன்றியதாக ஆய் வாளர்கள் கூறுகிறார்கள். மொழி குறித்த முழு அறிவு தமிழர்களுக்கு இருந்தது. அதுபோல் தேசம், இனம் குறித்த சிந்தனைகள் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் பிருந்தே தமிழர்களுக்கு இருந்து வருகிறது.
தொல்காப்பியத்திற்கு அணிந் துரை வழங்கிய பனம்பாரனர் “வட வேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்உலகம்” என்று கூறித் தமிழர் தாயகத்தை வரையறுக்கிறார். அக்காலத்தில் தமிழ் நாட்டில் பல சிற்றரசுகள் இருந்திருக்கும். ஆனால், தமிழர்களுக்குத் தாயகம்,- தமிழர்களுக்கு நாடு ஒன்று தான் என்று தமிழ் அறிஞர்கள் கருதினர். அது தமிழ கம்! தமிழ் பேசப்படாத இடங்களை மொழி பெயர் தேயம் என்றனர். நம் மொழி பேசும் இடம் நம் தேயம் என்றனர். அந்தக் காலத்திலேயே தமிழர்களுக்குத் தேசம் குறித்த புரிதல் இருந்தது. ஒற்றை அரசின் கீழ் உள்ள தேசமாக உருவெடுப்பது பின்னர் - முதலாளிய உற்பத்தி முறை வளர்ச்சிக் காலத்தில் இருக்கலாம். ஆனால் தேசம் குறித்த கருத்தியல் மூவாயிரம் ஆண்டு களுக்கு முன்பே தமிழர்களுக்கு இருந்தது.

எப்பொழுதும் கருத்தியல் முந்திப் பிறக்கும். அதன் பிறகே அக்கருத்தியலுக்கான நடைமுறை வடிவம் கிடைக்கும்.
சங்க இலக்கியத்தில் தமிழகம் என்ற சொல் வருகிறது. சிலப்பதிகாரத்தில் தமிழ்நாடு என்ற சொல் வருகிறது.

இமிழ் கடல் வேலியைத் தமிழ் நாடாக்கிய
இது நீ கருதினை ஆயின், ஏற்பவர்
முது நீர் உலகின் முழுவதும் இல்லை;
இமயமால்வரைக்கு எம்கோன் செல்வது
கடவுள் எழுதவோர் கற்கே;
--என்கிறது சிலப்பதிகாரம்!

“செப்பும் வினாவும் வழாஅல் ஓம்பல்” என்ற தொல்காப்பிய நூற்பா, கேள்வியும் பதிலும் குழப்ப மில்லாமல் இருக்கவேண்டும் என்று கூறுகிறது. “நான் மொழியால் தமிழன், இனத்தால் திராவிடன், நாட்டால் இந்தியன், கண்டத்தால் ஆசியன், உயிரினத் தால் ஒரு ஜந்து..” என்பது போல் இங்கே ஒரு மூத்த தலைவர் பேசிக் கொண்டுள்ளார். குழப்பமாகப் பேசுவ தற்கு இது “சிறந்த” எடுத்துக்காட்டு.

தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய இளம்பூரணர் குழப்ப மில்லாத வினாவுக்கும் விடைக்கும் எடுத்துக் காட்டு ஒன்று கூறினார். “நும் நாடு யாது என்றால் தமிழ்நாடு என்றல்” என்றார். இளம்பூரணர் காலம் கி.பி. 11ஆம் நூற்றாண்டு என்பர். அப்போது சோழ நாடு இருந்தது. பாண்டிய நாடு இருந்தது. தமிழ்நாடு எங்கே இருந்தது? தமிழ்நாட்டிற்குள்தான் சோழநாடு, பாண்டிய நாடு, சேரநாடு ஆகியவை இருக்கின்றன என்ற தேசக் கோட்பாடு தமிழர்களிடம் அப்போதே இருந்தது.

அப்போதெல்லாம் ஐரோப்பியர்களுக்குத் தேசக் கோட்பாடும் கிடையாது.
மொழி, இனக் கோட்பாடுகளும் இல்லை. தமிழ் மொழி, தமிழர், தமிழ்நாடு என்ற கோட்பாடு இரண் டாயிரம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் களுக்கு இருந்தது.

சங்க காலத்திற்குப் பிறகு, தமிழர்கள் அயலார் ஆட்சிகளுக்கு அடிமைகள் ஆகிவிட்டோம். களப்பிரர், பல்லவர் ஆகிய அயல் இனத்தார்க்கு அடிமைகள் ஆனோம். பிற்காலச் சோழர்கள் ஆட்சி, பாண்டியர்கள் ஆட்சி என்பவை தமிழர்கள் ஆட்சியாக சிறிது காலம் இயங்கியது. பின்னர், சுல்தான்கள் ஆட்சி, நாயக்க மன் னர்கள், தளபதிகள் ஆட்சியில் சிக்குண்டோம். அதன் பிறகு, வெள் ளையர்க்கு அடிமை ஆனோம். அதனால் நம் இன வளர்ச்சி தடைப்பட்டது.
ஐரோப்பியர்கள் 15ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு தான் வளர்ச்சி அடைந்தார்கள். அதை அவர்கள் மறு மலர்ச்சிக் காலம் என்றார்கள். “நம் இனம் ஏற்கெனவே மலர்ச்சி பெற்றிருந்தது, பின்னர் வாடிப்போனது. இப்போது மறுபடியும் அந்த மலர் மலர்கிறது” என்ற பொருளில்தான் ஆங்கிலேயேர்கள் மறுமலர்ச்சிக் காலம் என்றார்கள். Renaissance என்பது அதுதான்!

பிரடெரிக் எங்கெல்ஸ் ஐரோப் பிய மறுமலர்ச்சி பற்றிக் குறிப்பிடும் போது, ரோமாபுரி நாகரிகத்தின் புதையுண்ட கட்டட இடிபாடுகளிலிருந்து தங்களின் வரலாற்றுப் பெருமிதங்களைக்கண்டறிந்தனர் என்றார்.
அப்படி வரலாற்றுப் பெருமை யுள்ள நாம் மீண்டும் பெருமிதங்களைப் படைக்க வேண்டும் என்று கூறி சமகால மக்களைத் தட்டி எழுப்பினர் என்பார். தமிழர் களும் தங்கள் மறுமலர்ச்சியில் வரலாற்றுப் பெரு மிதங்களைச் சொன் னார்கள். பாரதியும் பாரதிதாசனும் இப்பெருமிதங்களைச் சொன்னார்கள்.
நாம் நீண்ட காலம் அடிமை வாழ்வு வாழ்ந்ததால் நம் சமூகத்தில் மறுமலர்ச்சிக் காலம் ஐரோப்பாவில் தோன்றிய காலத்தில் தோன்றவில்லை. நீராவி எந்திரம் உருவாக்கியதுபோல ஐரோப்பாவில் உருவான தொழில் நுட்பப் புரட்சியும் தமிழ்ச் சமூகத்தில் அப்போது உருவாகவில்லை.

தமிழ் இலக்கிய மறுமலர்ச்சியின் தொடக்கப் புள்ளியாக வள்ளலார் இருக்கிறார். அது ஒரு தொடக்க நிலை. அதிலிருந்து பாய்ந்து அடுத்த கட்டத்திற்குத் தமிழ் இலக்கியத் தைக் கொண்டு சென்றவர் பாரதி யார். பாரதியிடமிருந்து உரம் பெற்று பாரதியைவிடக் கூடு தலாகப் பாய்ந்தவர் பாரதிதாசன்.

மறைமலைஅடிகள் 1916-இல் தொடங்கிய தனித் தமிழ் இயக்கம், தமிழில் வடமொழி ஆதிக்கத்தையும் வடமொழிக் கலப்பையும் நீக்கித் தனித்தமிழில் எழுதுவது, பேசுவது, அதுபோல் தமிழர்களின் குடும்பச் சடங்குகள் - கோயில் பூசைகள் ஆகியவற்றிலிருந்து பார்ப்பனர்களையும் வடமொழியையும் நீக்குவது என்ற கொள்கைகளைக் கொண்டது.

மக்களைப் பாடிய பாரதியின் தாக்கம், பாரதியின் எளியநடை, பெரியாரின் மூடநம்பிக்கை எதிர்ப்பு, பெண்ணுரிமை, கம்யூனிஸ்ட்டுகளின் பொதுவுடை மைக் கருத்துகள், உழைப்பாளர் உரிமைகள், மறை மலை அடிகளின் தனித்தமிழ்; தமிழர் எழுச்சி இவை அனைத்தின் சங்கமிப்பாகவும், புதிய வார்ப்பாகவும் உருவானவர்தான் பாரதிதாசன்!

“சாதி ஒழித்தல் ஒன்று - நல்ல தமிழ் வளர்த்தல் மற்றொன்று; இதில் பாதியை நாடு மறந்தால் மறுபாதி துலங்குவதில்லையாம்” என்று எனக்குப் பாரதி சொல்லித் தந்தார்” என்று பாவேந்தர் கூறு கிறார்.

“எஞ்சாதிக்கு இவர் சாதி இழிவென்று சண்டையிட் டுப் பஞ்சாகிப் போனாரடி சகியே” என்று சாதி ஆதிக்கத்தைச் சாடுகிறார் பாவேந்தர். தொடர்ந்து சாதி ஒழிப்பை எழுதி வந்தார் பாவேந்தர்.
ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வைப் போற்றினார்.

“சேரிப் பறையர் என்றும்
தீண்டாதோர் என்றும் சொல்லும்
வீரர் நம் உற்றாரடி” என்று பாடினார்.
“இருட்டறையில் உள்ளதடா உலகம்
சாதி இருக்கின்ற தென்பானும் இருக்கின்றானே
மருட்டுகின்ற மதத்தலைவர் வாழ்கின்றாரே
வாயடியும் கையடியும் மறைவதெந்நாள்? “ என்று கேட்டார்.

பெண்ணுரிமையைப் பேசினார். சஞ்சீவிபர்வ தத்தின்சாரலில், கணவனுக்கும் மனைவிக்கும் இடையே ஒரு விவாதம் நடப்பது போன்ற காட்சியை உருவாக் கினார். மனைவியைப் பேச விடாமல் தடுத்துக் கணவர் பேசுவதுபோல் ஒரு காட்சி! அப்போது அந்த மனைவி கூறுவாள்:

“பெண்ணுக்குப் பேச்சுரிமை வேண்டாம் என் கின்றீரோ?
மண்ணுக்கும் கேடாய் மதித்தீரோ பெண்ணினத்தை
பெண்ணடிமை தீரும்மட்டும் பேசுந்திருநாட்டின்
மண்ணடிமை தீர்ந்துவருதல் முயற்கொம்பே
ஊமை என்று பெண்ணை உரைக்கு மட்டும்
ஆமை நிலைதான் ஆடவர்க்கும் உண்டு! “
என்பாள். 

இங்கே பாவேந்தர் ஓர் அருமையான வரலாற்று வழிப்பட்ட, உளவியல் வழிப்பட்ட கருத் தைக் கூறுகிறார். பெண்ணடிமைத்தனம் நீடிக்கும் வரை ஆணுக்கும் உண்மையான விடுதலை கிடையாது என்பதுதான் அந்த உயர்ந்த கருத்து!

அடிமைத்தனத்திற்கும் அண்டிப் பிழைக்கும் இழி விற்கும் பழக்கப் பட்டு, தன்மானமிழந்து கிடந்த தமிழர் களைப் பார்த்துப் பாடினார் பாவேந்தர். இன்றைக்கும் இப்பாடல் பொருத்தமாய் உள்ளது. தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் அரசியல் மக்களிடையே உருவாக் கியுள்ள அடிமை மனப்பான்மையை, அண்டிப் பிழைக் கும் இழிவை அப்படியே எடுத்துச் சொல்வது போல் இப்பாடல் உள்ளது. ஆனால் இதனை 1938-இல் பாவேந்தர் எழுதினார்.

“பள்ளம் பறிப்பாய் பாதாளத்தின்
அடிப்புறம் நோக்கி அழுந்துக! அழுந்துக!
பள்ளம் தனில்விழும் பிள்ளைப் பூச்சியே
தலையைத் தாழ்த்து! முகத்தைத் தாழ்த்து!
தோளையும் உதட்டையும் தொங்கவை ஈன
உளத்தை உடலை உயிரைச் சுருக்கு
நக்கிக் குடிஅதை நல்லதென்று சொல்”
என்றெல்லாம் அடிமைத் தனத்தைக் கூறிவிட்டு பின்னர் அதே பாட்டில், அந்த அடிமையை எழுப்பு கிறார் பாவேந்தர்.

“மனிதரில் நீயுமோர் மனிதன் மண்ணன்று
இமைதிற எழுந்து நன்றாய் எண்ணுவாய்
தோளை உயர்த்து சுடர்முகம் தூக்கு
மீசையை முறுக்கு மேலே ஏற்று
விழித்த விழியில் மேதினிக்கு ஒளிசெய்
நகைப்பை முழக்கு நடத்து உலகத்தை!
...
ஏறு வானை இடிக்கும் மலைமேல்
ஏறு விடாமல் ஏறு ஏறு மேன்மேல்
ஏறிநின்று பாரடா எங்கும்
எங்கும் பாரடா இப்புவி மக்களை
பாரடா உனது மானிடப் பரப்பை
பாரடா உன்னுடன் பிறந்த பட்டாளம்!”
தன்னம்பிக்கையும், தன்மானமும் கொண்ட தமிழ் மக்கள் - உலக மக்களை உறவாக நினைக்கும் பரந்த மனம் கொள்ள வேண்டும் என்ற மனித நேயத்தை-- உலக நேயத்தை வெளிப்படுத்துகிறார். இனவெறிக் கருத்தோ - மொழிவெறிக் கருத்தோ பாரதிதாசனிடம் இல்லை.

மொழியை வெறும் தகவல் பரிமாற்றக் கருவி என்று கூறும் வறட்டுப்பார்வை பலரிடம் உண்டு. ஆனால், பாவேந்தர், சமூக அறிவியல்படி மொழியின் பாத்திரத்தைக் கூறுகிறார்.

“இனத்தைச் செய்தது மொழிதான் - இனத்தின்
மனத்தைச் செய்தது மொழிதான்” என்றார்.
ஓர் இனம் அல்லது ஒரு தேசிய இனம் உருவா வதற்கு முதல் தேவை மொழியாகும். அதேபோல், அந்த இனத்தில் உள்ள மக்களிடையே நாம் ஒரே இனத்தைச் சேர்ந் தல்வர்கள் “நாம், நம்மவர்” என்ற (We Feeling) உணர்வை -அவ்வாறான உளவியல் உருவாக்கத்தை உருவாக்குவது மொழி. தேசிய இன உருவாக்கம் குறித்துப் பேசும்போது, ஜே.வி.ஸ்டாலின் இதைக் குறிப்பிடுகிறார்.

இந்த சமூக அறிவியலைப் புரட்சிப் பாவலர் பாரதிதாசன் தம் சிந்தனை ஆற்றல் கொண்டு சொல் கிறார். இனத்தின் மனத்தை அதாவது உளவியல் உருவாக்கத்தைச் செய்தது மொழிதான் என்கிறார்.
“எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு”
என்று பாவேந்தர் பாடியது வெறும் மொழிப் பாராட்டன்று. அது ஒரு கோட்பாடு! தமிழ்மொழி அழிந்தால் தமிழர்கள் ஒரு தேசிய இனமாக இருக்க மாட்டார்கள். பல்வேறு அயல் மொழிகளைப் பேசிக் கொண்டு உதிரிகளாகி சொந்த மண்ணிலேயே அடுத்த இனத்தாரை அண்டிப் பிழைக்கும் இரண்டாம்தர, மூன்றாம் தர மக்களாகி விடுவர். அதனால் தான் “எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் - மங்காத தமிழென்று சங்கே முழங்கு” என்றார்.
பெரியார் தலைமையில் இயங்கியதால் திராவிடர் - திராவிடம் என்ற கருத்துகளை ஏற்றுக் கவிதைகள் எழுதி வந்தார் பாரதிதாசன். பின்னர், 1950களின் பிற்பகுதியில் திராவிடர் என்று இருந்த இடங்களை தமிழர் என்று மாற்றினார். 1956 அல்லது 1958 என்று நினைக்கிறேன். தனித்தமிழ் நாடு விடுதலை கேட்ட ஆதித்தனாரின் நாம் தமிழர் கட்சி மாநாட்டில் பாரதி தாசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது, ஆதித் தனார் “தாயின் மேல் ஆணை” என்ற தலைப்பில் பாவேந்தரின் தமிழர் எழுச்சிப் பாடல்களைத் தொகுத்து வெளியிட்டார். அதில், “திராவிடர்” என்று இருந்த இடங்களில் தமிழர் என்று மாற்றினார் பாவேந்தர்.

பாரதிதாசன் ஆய்வில் கரை கண்ட ஐயா இளவரசு அவர்களிடம் திராவிடர் என்பதைத் தமிழர் என்று பாரதிதாசனே மாற்றிய விவரம் பற்றிக் கேட்டேன். “ஆம் பாரதிதாசனே அப்படி மாற்றினார். குடும்ப விளக்கு நூலை மறுபடி பதிப்பிக்கும் போது, இன் னின்ன இடங்களில் திராவிடர் என்பதை தமிழர் என்று மாற்றினார்” என்று இளவரசு குறிப்பிட்டார்.
தமிழ்த் தேசிய நோக்கில் 17.06.1958 அன்று குயில் இதழில் பாரதிதாசன் எழுதிய இந்தப் பாடலைக் கேளுங்கள்;

“செந்தமிழா உன்நாட்டின் பேரென்ன செப்பென்றால்
இந்தியா என்றே இளிக்கின்றான் என்தாயே!
பைந்தமிழ் நாட்டினையும் பாரதம் என்றும் சொல்வான்
எந்தவகையில் இச்சேய் உருப்படுவான் என்தாயே?
..
தமிழ்மொழிதான் தாய்மொழி என்னும் தமிழன்
தமிழ்நாடுதான் தனது தாய்நாடென் றெண்ணானோ?
தமிழ்நாடென் தாய்நாடு தாய்மொழி தான்என்றன்
தமிழ் என்றுணரான் சழக்கனன்றோ என்தாயே?
நம்தாய் அடிமை; வடநாட்டான் நம்ஆண்டான்
இந்தநிலை மாற்றா திருந்தென்ன என்தாயே!”
தமிழ் மண் பதிப்பக உரிமையாளர் ஐயா இளவழகன் அவர்கள் பாரதிதாசன் அவர்களின் அனைத்துப் பாடல்கள், கட்டு ரைகள் ஆகியவற்றைப் ’பாவேந்தம்’ என்ற தலைப்பில் 25 தொகுதிகளாக வெளி யிட்டுள்ளார். முனைவர் இரா. இளவரசு, இளங்குமர னார், தமிழகன் ஆகியோர் பதிப்பாசிரியர்களாக இருந்துள்ளனர். இவற்றை வாங்கிப் படிக்க வேண்டும்.

மறைமலையடிகள் வலியுறுத்திய தனித்தமிழில் பிற்காலத்தில் பாக்கள் எழுதினார் பாவேந்தர். இவ் வாறாகத் தமிழ்த் தேசியப் பாவலராக விளங்கினார்.
தொடக்கத்தில் துதிப்பாடல்கள் பாடினார். இறுதிக்காலத்தில் சீனப்படையெடுப்பை ஒட்டி இந்திய ஆதரவுப் பாடல்களை எழுதினார். ஆனால் பாரதி தாசன் என்ற படைப்பாளி இவற்றால் அறியப் பட வில்லை; அரவணைக்கப் படவில்லை. அவரது தமிழின உணர்வு, பகுத்தறிவு, பொதுவுடை மை, தனித்தமிழ்நாடு, சாதி எதிர்ப்பு, பார்ப்பனிய எதிர்ப்பு, பெண்ணு ரிமை போன்ற முற்போக்குப் படைப்புகளுக்காகத்தான் அவர் தமிழ் மக்களால், அனைத்துத் தரப்பு மக்களாலும் ஏற்கப்பட்டார்.

பாரதிதாசனிடமிருந்து இளை ஞர்கள், இளம் படைப்பாளிகள் கற்றுக் கொள்ள வேண்டிய ஒரு செய்தி உள்ளது. தமிழ் மொழியைக் காட்டுமிராண்டி மொழி என்று 1939 தொடங்கி கடைசி வரை கூறி வந்தவர் பெரியார். தமிழ் சனியனைக் கைவிட்டுவிட்டு வீட்டில் மனைவியுடன் வேலைக்காரிகளுடன் ஆங்கி லத்தில் பேசிப் பழகிக் கொள்ளுங்கள் என்று 1968-இல் கூடக் கூறினார் பெரியார்.

1939லிருந்து தமிழுக்கெதிராகவும் ஆங்கிலத்திற் காதரவாகவும் பெரியார் கருத்துக் கூறி வந்தபோது, அவரைத் தம் தலைவராக ஏற்றுக் கொண்டிருந்தார் பாவேந்தர். ஆனால், அதற்காக அவர் ஒரு போதும் தமிழை இழித்தோ பழித்தோ எழுதியதில்லை.
தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று பெரியார் கூறிய போதுதான் பாரதிதாசன் “தமிழுக்கும் அமுதென்று பேர் -- அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என்று எழுதினார்.
“தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர் தந்த தேன்”
என்று எழுதினார்.
பெரியாருக்காக தமிழ் குறித்த தமது உயர் மதிப்பீட்டை - அன்பைப் பாரதிதாசன் மாற்றிக் கொள் ளவில்லை. பெரியாருக்காக - தமிழை இழிவுபடுத்திய புலவர்கள் சிலரும் அப்போது பெரியாருடன் இருந் தனர்.
தமிழைத் தொடர்ந்து இழிவு படுத்தி வந்த பெரியாரைத் திறனாய்வு செய்து, கண்டனம் செய்து, குயில் ஏட்டில் 10.01.1961-இல் ஒரு கவிதை எழுதினார் பாரதிதாசன். பெரியார் பெயரைக் குறிப்பிடவில்லை. ஆனால், அவரைத்தான் குறிப்பிடுகிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
”தமிழைக் கொண்டே தமிழகம் ஆனது
தமிழகத் தமிழர் தலைவர் தாமும்
தமிழ்நாடென்று சாற்றவும் மறுத்தனர்
தமிழால் தமிழர்க்குத் தலைவர் ஆயினர்
தமிழால் தலைமை அடைந்த அவர்கள்
தமிழில் ஏதுளது என்று சாற்றுவர்
தமிழைப் பேசித் தலைவர் ஆயினர்
தமிழை எழுதித் தலைவர் ஆயினர்
தமிழாற் பயன்ஏது என்று சாற்றினர்
தமிழர் வாழத் தக்கவை யான
எல்லாக் கருத்தையும் இயம்பி வந்தனர்
எல்லா உண்மையும் எடுத்துக் காட்டினர்
அரைநூற்றாண்டாய் அறிவு புகட்டினர்
அந்த அருமைத் தலைவரே இந்நாள்
ஆங்கிலம் தாயாய் அமைக என்றும்
தமிழால் உருப்படோம் என்றும் சாற்றினர்
இந்தத் தமிழில் விஞ்ஞானம் இல்லை
அந்த ஆங்கிலத்தில் அதிகம் உண்டே
ஆதலால் அழியத் தக்கது தமிழாம்
நாட்டுக் குழைத்த தலைவர்கள்
கேட்டுக் குழைப்பதால் பெறுவது கெடுதியே!”
“நாட்டுக் குழைத்த தலைவர்கள், கேட்டுக் குழைப்பதால் பெறுவது கெடுதியே” என்பதில், இந்தக் கெடுதி நாட்டுக்கு மட்டுமல்ல, அந்தத் தலைவர்களின் புகழுக்கும் கெடுதியே என்ற பொருளில் பாடுகிறார் பாவேந்தர்.

பாரதியாரைத் தம் குருவாகக் கடைசிவரை ஏற்றுக் கொண்டிருந்தார் பாரதிதாசன். அதற்காகப் பார்ப்பன ஆதிக்கத்தை - பார்ப்பனியத்தை எதிர்ப்பதில் சற்றும் பின்வாங்கவில்லை. ஏ.டி.பன்னீர்ச்செல்வம் விமான விபத்தில் இறந்தபோது எழுதிய இரங்கற் பாவில்,
எல்லையில் தமிழர் நன்மை என்னுமோர் முத்துச்சோளக்
கொல்லையில் பார்ப்பான் என்னும் கொடுநரி உலவும்போது
தொல்லைநீக்க வந்ததூயர் பன்னீர்ச் செல்வம்
என்றார்.
குடியேறும் ஆரியப் பாதகர்கள் சூழ்ச்சியால்
கொலையுண்ட தமிழர் நெஞ்சும்
குறுநெறிச் சங்கரன் புத்தநெறி மாற்றிட
கொல்வித்த தமிழர் நெஞ்சும்
என்று பாடி ஆரியத்தைச் சாடினார் பாவேந்தர்.
பெரியாரைத் தலைவராக ஏற்றுக் கொண்டதால் பெரியாரைப் பின்பற்றித் தமிழை இழிவுபடுத்தவில்லை பாரதிதாசன். பாரதியாரைக் குருவாக ஏற்றுக் கொண் டதால் பார்ப்பன ஆதிக்கத்தை, -பார்ப்பனியத்தை எதிர்க்க மறுக்கவுமில்லை பாவேந்தர். பாவேந்தரின் இந்தத் தெளிவு, இந்த ஆளுமை நம் இளைஞர்களுக்கும் நம் படைப்பாளிகளுக்கும் வேண்டும்.
பாரதியார் பார்ப்பன வகுப்பில் பிறந்தவர் என்பதற் காகப் பெரியாரியவாதிகள் பாரதியாரைப் புறக்கணித் தார்கள். ஆனால் அறிஞர் அண்ணா திராவிடர் கழகத்தில் இருந்தபோதே, பாரதியாரை மக்கள் கவிஞர் என்று 1948இல் பாராட்டி, அனைத் திந்திய வானொலியில் சிறப்பாக ஆங்கிலத்தில் பேசி னார்.
நவீன காலத்தில் வள்ளலார் தமிழை மக்கள் மயப் படுத்துவதில் முதல் அடி எடுத்து வைத்தார். அவர்க்குப் பின் வந்த பாரதியார் உலக மொழிகளில் ஏற்பட்ட சமகால வளர்ச்சியைத் தமிழுக்குத் தந்தவர். பாரதியார் பார்ப்பானை ஐயர் என்ற காலமும் போச்சே என்று பாடினாலும், ஆரிய தேசம், ஆரிய சம்பத்து, வேதப் பெருமை என்றெல்லாம்பாடி, பார்ப்பனி யத்தை - ஒரு வகையில் ஆதரித்தார் என்பது எனது கருத்து. ஆனா லும், புறக்கணிக்கப்பட வேண்டியவர் அல்லர் பாரதி யார். “கிறுக்கன் பாரதி” என்றார் பெரியார். அப்படி முற்றிலும் புறக்கணிக்க முடியாது பாரதியாரை.
பாரதியின் வரலாற்றுப் பாத்திரத்தை பாரதிதாசன் தெளிவாகக் கூறுகிறார்.
ஜாரின் கொடுமை தாங்கா உருசியம்
ஏருற லெனினை ஈன்றே தீரும்
செல்வர் சில்லோர் நல்வாழ் வுக்கே
எல்லா மக்களும் என்ற பிரான்சில்
குடிகள் குடிகட் கெனக் கவிகுவிக்க
விக்டர் யூகோ மேவினான் அன்றோ
தமிழரின் உயிர்நிகர் தமிழ்நிலை தாழ்ந்ததால்
இமைதிற வாமல் இருந்த நிலையில்
தமிழகம் தமிழுக்குத் தகும்உயர் வளிக்கும்
தலைவனை எண்ணித் தவங் கிடக்கையில்
இலகு பாரதிப் புலவன் தோன்றினான்
பைந்தமிழ்த் தேர்ப்பாகன் அவனொரு
செந்தமிழ்த் தேனீ சிந்துக்குத் தந்தை
என்றார் பாவேந்தர். இது சரியான பார்வை!
அதே வேளை பாரதியாரிடம் உள்ள பார்ப்பனி யத்தை மறுக்கவும் நாம் திறம் பெற்றிருக்க வேண்டும். பாரதி முழுக்க முழுக்க ஒரு பார்ப்பனியவாதியாக மட் டும் இருந்தவர் அல்லர் என்ற உண்மையையும் புரிந்து கொள்ள வேண்டும்.

பாவேந்தர் பாரதிதாசனின் தமிழின எழுச்சிப் பாடல்களை மேடைகளில் நரம்பு புடைக்க முழங்கித் தமிழர்களைத் திரட்டிய தி.மு.க. தலைவர்கள், தி.மு.க. பேச்சாளர்கள், அவர்கள் வளர்ந்த பிறகு, ஆட்சிக்கு வந்த பிறகு, பாரதிதாசனின் தமிழ்த் தேசியக் கொள் கையை - தமிழ் மொழிக் கொள்கையைக் கைவிட்டு விட்டு, ஆதிக்க இந்தியத் தேசியத்தை ஆதரிக்கின்றனர். தமிழைப் பலியிட்டு ஆங்கில ஆதிக்கத்தை வளர்த்த னர்.
அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்; அவர்களின் வரலாறு செத்து விட்டது. அவர்களின் பிணங்களை அவர்களே சுமக்கட்டும்; இளைஞர்கள் சுமக்கச் செல்ல வேண்டாம்.

நாம் தமிழ்த் தேசியர்கள்; பாவேந்தர் பாரதிதாச னின் தமிழினக் கொள்கைகளை, தமிழ் மொழிக் கொள் கைகளை சமூகவியல் கொள்கைகளை முன்னெடுப் போம்; பாவேந்தரின் ஒளிச்சுடரை ஏந்துவோம்!

Labels: , ,

"அன்று கண்ணகி சிலையை அப்புறப்படுத்தினார்கள்; இன்று அதே சிலையின் காலடியில் மலர் வணக்கம்" -- தோழர் பெ.மணியரசன் அறிக்கை.


"அன்று கண்ணகி சிலையை அப்புறப்படுத்தினார்கள்; இன்று அதே சிலையின் காலடியில் மலர் வணக்கம்" 
--தோழர் பெ.மணியரசன் அறிக்கை.

சித்திரை முழுநிலவு நாள் கண்ணகிக்கு வீரவணக்கம் செலுத்தும் நாள். சென்னை கடற்கரையில் உள்ள கண்ணகி சிலைக்கு அ.இ.அ.தி.மு.க. அமைச்சர்கள் சித்திரை முழுநிலவு நாளையட்டி 03.05.2015 ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து வணங்கி இருக்கிறார்கள். இது பற்றிய செய்தி படத்துடன் ஏடுகளில் வந்துள்ளது அ.இ.அ.தி.மு.க. அமைச்சர்கள் வளர்மதி, கோகுலஇந்திரா, தி.தி.இரமணா, டி.கே.எம்.சின்னையா, கே.டி. இராஜேந்திரபாலாஜி, எஸ்.அப்துல்ரகிம் மற்றும் சென்னை மேயர் சைதை துரைசாமி உள்ளிட்டோர் கண்ணகி சிலையின் காலடியில் மலர் தூவி வணக்கம் செலுத்தும் காட்சி படமாக வந்துள்ளது.

தமிழர் வரலாற்றுச் சிறப்பின் அடையாளமாகவும், அறச்சீற்றத்தின் வடிவமாகவும் விளங்குகின்ற கண்ணகியின் இதே சிலையை 2001 டிசம்பரில் அன்றைய முதலமைச்சர் செயலலிதா ஆணையின் பெயரில் எந்திரங்கள் வைத்து பெயர்த்தெடுத்து எழும்பூர் அருங்காட்சியகத்தில் ஒரு மூலையில் தூக்கிப்போட்டு விட்டார்கள். தலைமைச் செயலகம் வரும் போதெல்லாம் முதலமைச்சர் செயலலிதாவின் கண்ணில் ஓர் அபச குணமாக, அருவருக்கத்தக்க சிலையாக கண்ணகி சிலை நின்றது என்றும் எனவே அதை அப்புறப்படுத்த ஆணையிட்டார் என்றும் அப்போது கருத்துகள் பேசப்பட்டன.
தமிழர் பெருமிதங்களில் ஒன்றாக விளங்கிய கண்ணகி சிலையை அப்புறப்படுத்தியதை அறிந்து தமிழகம் முழுவதும் தமிழ் மக்கள் கொந்தளித்தார்கள் தமிழ்த் தேசியப் பேரியக்கம் (அப்போது த.தே.பொ.க.) செயலலிதா அரசின் தமிழின வெறுப்பு நடவடிக்கை இது என்று வன்மையாகக் கண்டித்து அதே இடத்தில் மீண்டும் கண்ணகி சிலை வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி போர்க்குரல் எழுப்பியது.

தமிழ்த் தேசியப் பேரியக்கம், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் ஆகிய அமைப்புகள் கூட்டாக மீண்டும் அதே இடத்தில் கண்ணகி சிலை வைக்க போராட்டம் நடத்தின. சிறு வடிவில் கண்ணகி சிலை ஒன்று செய்து அதை அதே இடத்தில் நிறுவும் போராட்டத்தை நடத்தின. அப்போராட்டதின் தலைமைப் பொறுப்பை நான் ஏற்றிருந்தேன். தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் தியாகு அவர்களை அம்பத்தூர் காவல் நிலையத்தினர் முன் கூட்டியே கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விட்டனர். இரு இயக்கங்களை சேர்ந்தவர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் இப்போரட்டத்தில் கைதானோம். அதன் பிறகு பூம்புகாரில் இருந்து மதுரை வரை கண்ணகி சிலையை அதே இடத்தில் வைப்பதற்கான பரப்புரை ஊர்திப் பயணம் நடத்தினோம்.

திராவிட முன்னேற்றக் கழகம் கண்ணகி சிலையை மீண்டும் அதே இடத்தில் வைப்பதற்கான கோரிக்கையை வலியுறுத்தி பெருந்திரள் இயக்கம் நடத்தியது.
யாருடைய கோரிக்கையையும் ஏற்காத முதலமைச்சர் செயலலிதா கண்ணகி சிலையை மீண்டும் அதே இடத்தில் வைக்க மறுத்துவிட்டார். 2006இல் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் அன்றைய முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் கண்ணகி சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவினார். 

இத்தனை ஆண்டுகளாக இல்லாத வழக்கமாக இப்போது அ.இ.அ.தி.மு.க.வினர் கண்ணகி சிலையின் காலடியில் மலர் தூவி வணங்குவது முரண்பட்ட செயலாக உள்ளது. கர்நாடக நீதிமன்றம் சொத்துக் குவிப்பு வழக்கில் செயலலிதாவுக்கு தண்டனை அளித்தப் பிறகு அ.தி.மு.க.வினர் அதிலிருந்து விடுதலையாக கோயில் கோயிலாக பூசை நடத்துவது, பால்குடம் தூக்குவது, மொட்டை அடித்துக்கொள்வது போன்ற பல்வேறு வேண்டுதல்களை செய்து வருகிறார்கள். கடைசியாக கண்ணகியிடம் கருணை கேட்டு வந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.

அன்று கண்ணகி சிலையை அப்புறப்படுத்தியவர்கள் இன்று கண்ணகியின் காலடியை வணங்கியுள்ளனர்.

ஒன்று மட்டும் உறுதி, இறுதியில் தமிழே வெல்லும்!

(இக்கட்டுரை, தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2015 மே 16 இதழில் வெளியானது.)

Labels: ,

"பூலான்தேவிக்கு கிடைத்த பொதுமன்னிப்பு வீரப்பனுக்கு கிடைக்காதது ஏன்?" தோழர் பெ.மணியரசன் பேச்சு.


"பூலான்தேவிக்கு கிடைத்த பொதுமன்னிப்பு வீரப்பனுக்கு கிடைக்காதது ஏன்?" --தோழர் பெ.மணியரசன் பேச்சு.

தமிழர் நீதிக் கட்சியின் தலைவர் தோழர் சுபா. இளவரசன் அவர்களின் தந்தையார் திரு. பாலசுந்தரம் அவர்கள் அண்மையில் காலமானதையட்டி அவரு டைய படத்திறப்பு விழா அரியலூர் மாவட்டம், கு. வல்லம் கிராமத்தில் 2.5.2015 அன்று தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அவர்கள் தலைமை யில் நடைபெற்றது. பெரியவர் பாலசுந்தரம் அவர்களின் படத்தை மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் அய்யா வே. ஆனைமுத்து அவர்கள் திறந்து வைத்தார்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் தோழர் சீமான், குன்னம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பி னர் திரு எஸ்.எஸ். சிவசங்கர் (தி.மு.க.), திருவாட்டி அற் புதம்மாள், திருவாட்டி முத்துலெட்சுமி வீரப்பன், புலவர் கலியபெருமாள் மூத்த மகன் வள்ளுவன், திரு பெருநற் கிள்ளி (தி.மு.க.), திரு கு.வல்லம் கோவிந்தசாமி உள்ளிட் டோர் நினை வேந்தல் உரை யாற்றினர். நிகழ்ச் சியை, தமிழர் நீதிக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் இளங் கோவன் ஒருங்கிணைத்தார். நிறைவில் தோழர் சு.பா. இளவரசன் நன்றி உரையாற்றினார்.

அந்நினைவேந்தல் கூட்டத்தில் தோழர் பெ. மணியரசன் ஆற்றிய உரையின் ஒரு பகுதி வருமாறு:

“தொண்ணூறு அகவை வரை நிறைவாழ்வு வாழ்ந்து மறைந்த அய்யா பாலசுந்தரம் அவர்களுக்கு என்னுடைய வணக்கத்தையும், சு.பா. இளவரசன் உள்ளிட்ட அய்யா வின் பிள்ளைகளுக்கும், உறவினர்களுக்கும் என்னுடைய ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அய்யா பாலசுந்தரம் அவர்களின் சிறப்பு என்பது, தன்னுடைய மகன் இளவரசன் தமிழ்நாடு விடுதலைப் படையில் சேர்ந்து ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டி ருக்கிறார் என்பது தெரிந்தும், தன்னுடைய மகனை அரவணைத்த தும் மகனின் தோழர்களுக்கு அடைக் கலம் கொடுத்த தும் ஆகும். அவர் ஒரு பெரிய குடும்பத்தைக் கட்டிக் காத்ததுடன், தமிழர்களையும் தன் குடும்பத்தினராகக் கருதி பற்றோடு நடந்துகொண் டுள்ளார்.

இங்கு பேசிய அற்புதம்மாளையும் சகோதரி முத்து லெட்சுமியையும் இந்த மேடையில் அமர்த்தியது நாம் அல்ல. காவல் துறையினர்தான். அவர்களுக்கும், அவர்கள் குடும்பத்தினருக்கும், காவல்துறையினர், இழைத்த அநீதிகளும் கொடுத்தத் துன்பங்களும், துயரங் களும் இந்த அரசுக் கட்டமைப்புக்கு எதிராக இந்தக் குடும்பப் பெண்களை எழுச்சி கொள்ள வைத்துள்ளது.

இரசியப் புரட்சியில் லெனின் சொன்னார், “நம் முடைய தோழர்கள் கடும் முயற்சி செய்து நம் கட்சிக்கு ஆள் சேர்ப்பது ஒருபக்கம் இருந்தாலும், ஜார் மன்னனின் காவல்துறை செய்து வரும் அட்டூழியங்கள் நம் கட்சிக்கு அதிகமாக உறுப்பினர்களைச் சேர்த்து விடுகிறது’’ என்று கூறினார். அப்படித்தான் காவல்துறையின் அடக்குமுறைகள் தமிழ்த் தேசியத்தின் பக்கம் அதிகமாக ஆண்களையும் பெண்களையும் தமிழ்நாட்டில் சேர்த்து வருகின்றன.

தமிழ்நாட்டில் தமிழினம் சார்ந்த, தமிழின உரிமை கள் சார்ந்த அரசியல் கட்சிகள் ஆளும் கட்சிகளாக இல்லை. மாறி மாறி இங்கு ஆட்சி செய்து வரும் கட்சிகள் இந்திய ஏகாதிபத்தியத்திற்குக் கங்காணி வேலை செய்யும் கட்சிகளாக தமிழர்களை அயலாருக் குக் காட்டிக் கொடுக்கும் கட்சிகளாக இருக்கின்றன. இன உணர்வுள்ள கட்சிகளின் ஆட்சி தமிழ்நாட்டில் நடந்திருந்தால் சுபா. இளவரசன் போன்றவர்கள் பத்தாண்டுகள் சிறையில் இருந்தபின்னும் மேலும் ஆயுள் தண்டனை பெற்று வழக்குக்கு அலைந்து கொண்டிருக்க மாட்டார்கள்.

வீரப்பன் அவர்களையே எடுத் துக் கொள்ளுங்கள். தொடக்கத்தில் அவர் தன்னலத்திற்காக சந்தனமரக் கடத்தல் குற்றத்தில் ஈடுபட்டிருக்கலாம். பின்னர் அவர் காவல்துறையின் அடக்கு முறைகளை எதிர்த்து எதிர்த்து பெரும் வீரனாக மாறிவிட்டார். தமிழகக் கர்நாடகக் காவல்துறைக்கு சவாலாக விளங் கினார். இந்தியா முழுவதும் பேசப்படும் நபராக ஆனார். அந்த நிலையில் அவர் திருடர் என்ற நிலையிலிருந்து மாறி தமிழின உரிமைகளுக்குப்போராடும் பொது மனிதனாக ஆனார். காவல் துறையினரால் அவரைப் பிடிக்க முடியாத நிலையில் அவர்தானே சரண் அடைய முன் வந்தார். பொதுமன்னிப்புக் கோரினார். ஆனால் தமிழக ஆட்சியாளர்கள் அதை ஏற்கவில்லை.

வடநாட்டில் பூலான்தேவி பெரிய அளவில் கொலை, கொள் ளை நடவடிக்கைகளில் ஈடுபட்டு காட்டில் வாழ்ந்தார். காவல் துறையால் அவரை பிடிக்க முடிய வில்லை. பிறகு அவருக்கு மத்திய மாநில அரசுகள் சம் மதித்து பொது மன்னிப்பு வழங்கின. அப்படிப்பட்ட ஒரு பொது மன்னிப்பு வீரப்பனுக்கு ஏன் கிடைக்க வில்லை? தமிழ்நாட்டில் தமிழின உணர்வற்ற கங்காணி களின் அரசியல் மேலோங்கி இருப்பதுதான் வீரப் பனுக்குப் பொதுமன்னிப்பு கிடைக்காததற்குக் காரணம்.

நம்முடைய சுபா. இளவரசன், பொழிலன், மாறன் போன்ற தம்பிகள் ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கை கொண்டு சில நடவடிக்கைகளில் இறங்கினார்கள். எனக்கு அந்தப் போராட்ட முறையில் உடன்பாடு இல்லை. ஆனால் இளமையில் அப் பாதையில் சென்ற இவர்கள் தங்கள் நிலைபாட்டை மாற்றிக் கொண்டு மக்கள் திரள் அரசியலுக்கு, சனநாயக வழி அரசிய லுக்கு வந்து விட்டார்கள். பல ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டார்கள்.

தமிழ்நாட்டில் ஒரு தமிழினச் சார்பு கட்சி ஆளக் கூடிய நிலை யிருந்தால் தமிழின உரிமைக்காக ஆயுதப் போராட்ட வழியில் சென்று பின்னர் பொதுப் பாதைக்கு, மக்கள்திரள் போராட்டப்பாதைக்கு திரும்பிய இளைஞர்கள் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கி அனைத்து வழக்குகளிலிருந்தும் விடுவித்திருக்கும். தம்பி பேரறி வாளன், சாந்தன், முருகன் ஆகி யோரும் அவ்வழக்கிலுள்ள மற்றவர் களும் இருபத்து நான்கு ஆண்டு களாக சிறையில் இருக்க வேண்டிய அவசியம் என்ன? தமிழ்நாட்டில் வலுவான தமிழ்த் தேசிய அரசியல் உருவாகியிருந்தால் அவர்களை யெல்லாம் சட்டப்படி விடுதலை செய் திருக்கலாம். இந்தப் படிப்பி னையைத் தான் தமிழின உணர்வாளர்கள் பெறவேண்டும்.

இந்திய விடுதலைப் போராட் டத்தில் 1942 ஆகஸ்டு புரட்சி எனப் படும் “வெள்ளையனே வெளியேறு’’ என்ற காங்கிரசு போராட்டம் முகாமையானது. காந்தியடிகள் உட்பட காங்கிரசு தலைவர்கள் கூடி மும்பை மாநாட் டில் எடுக்கப்பட்ட தீர்மானப்படிதான் அப்போராட் டம் அறிவிக்கப்பட்டது.
ஆனால் அப்போராட்டம், தந்திக் கம்பி அறுத்தல், தண்டவாளம் பெயர்த்தல் போன்ற வன்முறைப் போராட்டமாகவும் மாறியது. ஆட்சியாளர்களின் அடக்குமுறைக்குப் பல்லாயிரக் கணக்கானோர் உள்ளானார்கள், பல்லாயிரக்கணக்கானோர் சிறைப் படுத்தப்பட்டனர். காந்தியடிகள் ”வன்முறைக்குத் திரும்பிய வெள்ளையனே வெளியேறு போராட் டத்தை திரும்பப் பெற்றுக்கொண்டேன். இனி எனக்கும் இந்தப் போராட்டத்திற்கும் தொடர்பில்லை’’ என்று அறிவித்தார்.

ஆனால் பண்டித நேரு, வன்முறைப் போராட் டத்தில் காங்கிரசுக்கு நம்பிக்கை இல்லை என்று அறிவித்துவிட்டு, நடந்த சம்பவங்கள் அனைத்திற்கும் காங் கிரசு பொறுப்பேற்றுக் கொள்கிறது. வன்முறைப் போராட்டம் உட்பட எல்லா போராட்டங்களிலும் ஈடுபட்டவர்கள் தேசப்பக்தர்கள்; அவர்களுக்கு அரசு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என்று ஆங்கிலேய அரசிடம் கோரிக்கை வைத்தார். பலர் விடுதலை செய்யப்பட்டனர்; மற்றும் பலர் விடுதலை செய்யப்படவில்லை.

காங்கிரசு ஆட்சிப்பொறுப் பேற்ற பின்னர் அனை வரும் விடுதலை செய்யப்பட்டனர். பண்டித நேருவுக்கு இருந்த அந்தப் பார்வை தமிழக அரசியலில் வர வேண்டும்.

காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு, கச்சத்தீவு உரிமைகளை இழந்தது மட்டுமல்ல, தமிழின உரிமை களுக்காகப் போராடிய இளைஞர்கள் உணர்வாளர்கள் போன்றோரின் மனித உரிமைகளையும் நாம் இழந்துள்ளோம்.
இந்தச் சிக்கல்களைத் தீர்க்க தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித் துத்தான் நாம் செயல்படவேண்டும் என்பதில்லை. நம்முடைய தமிழ் மக்களில் 25 விழுக் காட்டினர் தமிழ்த் தேசியத்தை ஆதரிக்கும் நிலை உருவானால், பல்லாயிரக் கணக்கில் இலட்சக்கணக்கில், தமிழ் மக்கள் வீதிக்கு வந்து உரிமைக்குப் போராடும் தமிழ்த் தேசிய எழுச்சி ஏற்பட்டால் தமிழினம் சார்ந்து நாம் முன்வைக்கும் கோரிக்கைகளை மாநில அரசும் சரி, மத்திய அரசும் சரி நிறைவேற்ற வேண்டிய நெருக் கடி ஏற்படும். வேலூர் சிறைக் கதவுகளை அரசே திறந்துவிடும் நிலை ஏற்படும். அரசு தவறினால் மக்களே திறந்துவிடுவார்கள்.

தமிழ்த் தேசியத்தை மக்கள் முழக்கமாக நாம் வளர்க்க வேண் டும். தமிழ்த்தேசியம் என்ன என் பதையும் நாம் துல்லியப்படுத்த வேண்டும். எமது தேசிய இனம் தமிழர், எமது தேசிய மொழி தமிழ், எமது தேசம் தமிழ்த் தேசம், இறையாண்மை உள்ள தமிழ்த் தேசக் குடியரசு அமைப் பது எமது இலக்கு என்ற தெளிவான வரை யறுப்பையும் நாம் முன் வைக்க வேண்டும். இப்படிப்பட்ட உறுதி யை ஏற்பதே தமிழர் எதிர்காலத்தை ஒளிமயமாக்கும்”.

இவ்வாறு தோழர் பெ. மணியரசன் பேசினார்.
நிகழ்வில், திரளான தமிழின உணர்வாளர்களும், பகுதி வாழ் மக்களும் கலந்து கொண்டனர்.

Labels:

"இந்தியாவை நம்பினோம்; அனாதைகள் ஆனோம். திராவிடத்தை ஏற்றோம்; ஏமாளிகள் ஆனோம்' சுவரொட்டி வழக்கு - கைது!" தோழர் மணியரசன் கட்டுரை.

Friday, May 1, 2015

"இந்தியாவை நம்பினோம்; அனாதைகள் ஆனோம். திராவிடத்தை ஏற்றோம்; ஏமாளிகள் ஆனோம்' சுவரொட்டி வழக்கு - கைது!" 
--தோழர் மணியரசன் கட்டுரை.

“மந்திரம் போல் சொல் வேண்டும்’’ என்றான் பாரதி. உண்மையை உரைப்பதாகவும், உணர்ச்சியைக் கிளர்ந்தெழச் செய்வதாகவும் உள்ள சொற்கோவை யைத்தான் மந்திரம் போன்ற சொல் என்றான் பெரும்பாவலன்!
ஆனால், போலிகளுக்கு உண்மை சுடும். அவர் களிடம் அதிகாரம் இருந்துவிட்டால் சொற்களைத் தண்டிக்கத் துடிப்பார்கள். அது முடியாத நிலையில் சொன்னவர்களைத் தண்டிக்க முனைவார்கள்.
அண்மையில் ஆந்திரப்பிரதேசத்தில் இருபது தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டது குறித்த ஒரு சுவரொட்டி, அ.இ.அ.தி.மு.க. ஆட்சியாளர்களை ஆத்திரப்படவைத்துள்ளது.

கன்னடர், மலையாளிகள், தெலுங்கர், சிங்களர் தமிழர்களின் உரிமைகளைப் பறித்தார்கள்; உயிர்களை அழித்தார்கள்; இந்தியாவை நம்பினோம் அனாதைகள் ஆகிவிட்டோம்; திராவிடத்தை ஏற்றோம் ஏமாளிகள் ஆகிவிட்டோம். இனி தமிழ்த்தேசியமே தற்காப்பு ஆயுதம்!

“இந்தச் சுவரொட்டியைத் தயாரித்து ஒட்டச் சொன்னவர் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன். ஒட்டியவர் தமிழ்த் தேசியப் பேரியக்க திருச்சி மாநகரச் செயலாளர் மூ.த. கவித்துவன்’’ என்று முதல் தகவல் அறிக்கை அணியம் செய்து 23.4.2015 அன்று பிற்பகல் திருச்சி கன்டோன்மென்ட் காவல் நிலையத்தினர் தோழர் கவித்துவனைத் தளைப்படுத்தி நீதிமன்றத்தில் நிறுத்தி இரவோடு இரவாகத் திருச்சி நடுவண் சிறையில் அடைத்துவிட்டனர்.
மறுநாள் மணியரசனைத் தளைப்படுத்திட திருச்சி காவல்துறையினர் சென்னைக்கு விரைந்தனர். சென்னை கலைஞர் கருணாநிதி நகரில் தமிழர் கண்ணோட்டம் மாதமிருமுறை ஏட்டின் அலுவலக மாகவும் த.தே.பே. அமைப்பின் தலைமையகமாகவும் உள்ள செயலகத்திற்குக் காவல் ஆய்வாளர் உமாசங்கர் தலைமையில் காவலர்கள் நுழைந்தனர். அப்போது நமது செயலகத்தில் அலுவலகப் பொறுப்பாளரும் பொதுக் குழு உறுப்பினருமான தோழர் வி.கோவேந்தன் இருந்தார்.

“மணியரசன் எங்கே?’’
“தஞ்சையில் இருக்கிறார். நீங்கள் எதற்காக வந்தீர்கள்?’’
“சட்டவிரோதச் சுவரொட்டி அடித்து ஒட்டியுள்ளீர்கள். வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மணியரசனைக் கைது செய்ய வேண்டும். சுவரொட்டி அச்சிட் டதற்கான ஆதாரங்களை எடுக்க வேண்டும். உங்கள் அலுவலகத்தைச் சோதனையிடப் போகிறோம்.’’

இந்தச் செய்தியை தோழர் கோவேந்தன் தஞ்சை யிலிருந்த என்னிடம் தொலைபேசியில் கூறினார். நான் ஆய்வாளர் உமாசங்கரிடம் தொலைபேசியில் பேசினேன்.

“என்னைக் கைது செய்வதாக இருந்தால், தஞ்சைக்கு வாருங்கள். நான் தயாராக இருக்கிறேன். கைது செய்து கொண்டுபோங்கள்.’’
“நான் இதோ வந்து விடுகிறேன். அங்கேயே இருங்கள்.’’
“விமானத்தில் வரப்போகிறீர்களா?’’
“அதற்கெல்லாம் எங்களுக்கு ஏது ஏற்பாடு?’’
“நீங்கள் எங்களது பத்திரிகை அலுவலகத்தைச் சோதனை செய்வது என்பது கூடாது. அதற்கு நீதிமன்ற ஆணை பெற்றிருக்க வேண்டும். நாங்கள் சுவரொட்டி ஒட்டியதை ஏற்றுக் கொள்கிறோம். மறுக்கவில்லை. கைதுக்கும் தயாராக இருக்கிறேன். பிறகென்ன சோதனை போடுகிறீர்கள்?’’
“சுவரொட்டி வடிவமைத்த ஆதாரம் வேண்டும். உங்கள் கணிப்பொறியிலிருந்து நகல் எடுத்துக் கொள் கிறேன்.’’
“அது உலகம் முழுக்க முகநூலிலும், இணையதளச் செய்திப் பகுதியிலும் போய்விட்டது. அதன் நகலை எங்கிருந்து வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ள லாம். எங்கள் கணிப்பொறியிலிருந்துதான் எடுக்க முடியும் என்பதில்லை.’’
“அது சரி. நான் ஒரு நகல் எடுத்துக் கொள்கிறேன்.’’

நான் தோழர் கோவேந்தனிடம் ஒரு நகல் எடுத்துக் கொடுங்கள் என்றேன்.
சற்று நேரத்திற்கெல்லாம் கோவேந்தன், “ஐயா, நம் கணிப்பொறியை எடுத்துக் கொண்டு போகிறார்கள்’’ என்று பதற்றத்தோடு சொன்னார். உதவிக்கு முன் கையைக் கொடுத்தால் முழங்கையைக் கடிக்கும் பழக்கம் காவல்துறையினருக்கு உண்டு!

ஆய்வாளர் உமாசங்கரிடம் தொலைபேசியில் பேசினேன்.
“அது சென்னை மாநகர முதன்மை நீதிபதியால் எங்களது பத்திரிகை அலுவலகமாகப் பதிவு செய்யப் பட்டுள்ளது. அதில் நீங்கள் நீதிமன்ற அனுமதியில்லாமல் இரண்டரை மணிநேரம் சோதனையிட்டது தவறு. அத்துடன் எங்களது தமிழர் கண்ணோட்டம் இதழின் முக்கியப் பதிவுகள் உள்ள கணிப்பொறியை எடுத்துச் செல்வது சட்டவிரோதம். கணிப்பொறியை வைத்துவிடுங்கள்’’.

“நான் சோதனையிடுவது பற்றி சைதாப்பேட்டை நீதிமன்றத்துக்குத் தகவல் கொடுத்துள்ளேன். அது போதும்’’.

“அது போதாது. நீதிமன்ற அனுமதியின் நகலை எங்கள் அலுவலகப் பொறுப்பாளர் கோவேந்தனிடம் கொடுத்துக் கையெழுத்து பெறுங்கள். கணிப்பொறியை எடுத்துச் செல்லக் கூடாது.’’

“திருச்சிக்கு எடுத்துச்சென்றுவிட்டு கம்ப்யூட்டரைத் திருப்பிக் கொடுத்துவிடுவேன்.’’ என்றார் உமாசங்கர்.
அதன் பிறகு உடனடியாக, திருச்சி ஐ.ஜி. திரு. ராமசுப்பிரமணி அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உமாசங்கரின் சட்டவிரோதச் செயல்களைப் பற்றிக் குறிப்பிட்டேன். “உங்கள் அதிகாரிகளைச் சட்டவிதிகளின் படி நடந்து கொள்ளச் சொல்லுங்கள். கணிப்பொறியை அவர் எடுத்துச் செல்லக் கூடாது.’’ என்றேன். உடனே அவர் “நான் அதைப் பார்க்கிறேன். டி.சி. மூலம் தொடர்பு கொள்ளச் சொல்கிறேன்’’ என்றார்.

கணிப்பொறியைத் திருப்பி வைத்துவிட்டார் ஆய்வாளர் உமாசங்கர். அதற்குள் செய்தியறிந்து சென்னை அலுவலகத்திற்கு ஊடகத்துறையினர் வந்து விட்டனர். காவல்துறையினருக்குச் சங்கடமாகி விட்டது.
தஞ்சை கட்சி அலுவலகத்தில் காவல்துறையினரை எதிர்பார்த்து கைதுக்காக நான் காத்திருந்த செய்தி யறிந்து தொலைக்காட்சி ஊடக நண்பர்களும் அச்சு ஊடக நண்பர்களும் வந்துவிட்டனர். தொலைக் காட்சிகளில் இச்செய்தி ஓடத் தொடங்கியது.

மீண்டும் ஆய்வாளர் உமா சங்கர் என்னிடம் தொடர்பு கொண்டு நாங்கள் தஞ்சை வந்து கொண்டிருக்கிறோம் என்று பகல் 1 மணி வாக்கில் சொன்னார். “வாருங்கள் நான் எங்கள் கட்சி அலுவலகத்தில் காத்திருக்கிறேன்” என்றேன்.
தஞ்சை மாவட்டத் தோழர்களும், தோழமை அமைப்புகளைச் சேர்ந்த நண்பர்களும், அலுவலகம் வந்து என்னிடம் நடந்த செய்திகளைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். இரவு 9 மணி வரை உமாசங் கரும் அவரைச் சேர்ந்த காவல்துறையினரும் தஞ்சை வரவில்லை.
இச்செயல்கள் அனைத்திற்கும் ஆய்வாளர் உமாசங்கர் அவர்களைப் பொறுப்பாக்க முடியாது. “மேலிடத்தின்’’ கட்டளைகளை அவர் நிறைவேற்று கிறார்.

தோழர்களை எல்லாம் வீட்டிற்குப் போகச் சொல்லிவிட்டு நானும் வெளிக்கிளம்பினேன்.
மறுநாள் 25.4.2015 பிற்பகல் 2 மணி வரை தஞ்சை கட்சி அலுவலகத்தில் காத்திருந்தேன். காவல்துறையி னர் வரவில்லை.

மாலை ஓசூருக்குக் காரில் புறப்பட்டோம். தோழர்கள் குழ. பால்ராசு, நா. வைகறை, அ. ஆனந்தன், க. விடுதலைச் சுடர் ஆகிய த.தே.பே. தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் என்னுடன் வந்தார்கள்.

மறுநாள் 26.4.2015 காலை 9.30 மணிக்கு ஓசூரில் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை சார்பில் பாவேந்தர் பாரதிதாசன் 125 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா. அதில் நிறைவுரை நான் ஆற்ற வேண்டும். அன்று மாலை தருமபுரியில் தமிழ்த் தேசியப் பேரியக்க அமைப்பு தொடக்க அரங்கக் கூட்டம். அதிலும் கலந்து கொள்ள வேண்டும். திட்டமிட்ட வேலைகளில் ஈடுபடத் தொடங்கிவிட்டேன்.
தோழர் கவித்துவனைப் பிணையில் வெளிக் கொணர வழக்கறிஞர் த. பானுமதி அவர்கள் 27.4.2015 அன்று திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் வாதாடினார். அரசு வழக்குரைஞர் அசோகன், பிணை வழங்கக் கூடாது என்று மிகக் கடுமையாக எதிர்த்து வாதிட் டுள்ளார். “இவர்கள் பிரிவினைவாதிகள், தேசத்திற் கெதிரானவர்கள், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முதல் நபர் இன்னும் கைதாகவில்லை. எனவே கவித்துவனுக் குப் பிணை வழங்கக் கூடாது’’ என்று கூறியுள்ளார். அதற்குப் பதில ளித்த வழக்கறிஞர் பானுமதி அவர்கள், “பிரிவினை வாதம், தேசத் துரோகம் ஆகியவற்றிற்கான பிரிவு எதுவும் இவ்வழக்கில் இல்லை.

கன்னடர், மலையாளி, தெலுங்கர், சிங்களர் போன்ற பிற இனத்தவர் தமிழர்களைத் தாக்குகிறார்கள். கொலை செய்கிறார்கள். தமிழர் உரிமைகளைப் பறிக்கிறார்கள் என்ற அவலக்குரல்தான் இந்தச் சுவரொட்டியில் இருக்கிறது. இது இனங்களுக்கிடையே பகையை மூட்டுவது ஆகாது. கலகத்தைத் தூண்டுவது ஆகாது. முதல் குற்றஞ்சாட்டப்பட்ட நபராக உள்ள பெ. மணியரசனைக் காவல்துறை கைது செய்யப் போகவே இல்லை. அவர் கைதுக்குட் படத் தயாராக உள்ளார். ஒரு வேளை இவ்வழக்கு தோற்றுவிடும் என்பதால் அவரைக் கைது செய்யாமல் இருக்கிறார்களோ என்னவோ தெரியவில்லை. எனவே கவித்துவனுக்குப் பிணை வழங்க வேண்டும்” என்று கேட்டுக் கொண் டார்.

அரசு வழக்குரைஞர் மிகக் கடுமையாக எதிர்த் ததால் பிணை மனுவைத் தள்ளுபடி செய்தார் நீதிபதி பூர்ணிமா!

உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் கவித்து வனுக்குப் பிணை கோரி மேல்முறையீடு செய்துள்ளார் வழக்கறிஞர் பானுமதி.
சுவரொட்டிச் சொற்கள் பல்வேறு இனங்களுக்கு இடையே பகையை மூட்டி விடுகிறது என்றும், (இ.த. ச. 153 ஏ), சுவரொட்டி ஒட்டியதன் மூலம் பொது இடங்களை அசிங்கப்படுத்தி விட்டார்கள் என்றும் (3 of TNO PPD ACT) மேற்படி வழக்கில் அரசு குற்றம் சாட்டி யுள்ளது.

கன்னடர்கள், மலையாளிகள், தெலுங்கர்கள், சிங்க ளர்கள் தமிழர்களின் உயிரைப் பறித்திருக்கி றார்கள். உரிமைகளைப் பறித்திருக்கிறார்கள். தட்டிக் கேட்கவும், தடுத்து நிறுத்தவும் நாதியற்ற அரசியல் அனாதை களாய் தமிழர்கள் உள்ளார்கள். இந்திய அரசு நடுநிலை தவறி தமிழின எதிர்ப்பு அரசியல் நடத்திக் கொண்டுள்ளது. தமிழின உரிமைகளைப் பாதுகாப்ப தற்காக - மீட்பதற்காக கட்சி நடத்துவதாகக் கூறிக் கொண்ட திராவிடக் கட்சிகளான தி.மு.க.வும் அதிலி ருந்து பிரிந்த அ.தி.மு.க.வும் இந்திய வல்லரசின் கங்காணிக் கட்சிகளாக மாறித் தமிழினத்தைக் காட்டிக் கொடுத்து சொந்த லாபம் பார்த்துக் கொண்டிருக் கின்றன. எனவே இந்தியத்தை நம்பிப் பயனில்லை. திராவிடத்தை நம்பியும் பயனில்லை. தமிழ்த் தேசியக் கொள்கை வளர்ந்தால்தான் அது தமிழினத்தின் தற்காப்பிற்குரிய தத்துவ ஆயுதமாக விளங்கும் என்ற பொருளில்தான் மேற்படி சுவரொட்டி போடப் பட்டுள்ளது.

மேற்கூறியுள்ள நமது மதிப்பீட்டில், வரையறுப்பில் என்ன தவறு இருக்கிறது?
1991ல் காவிரித் தீர்ப்பாயம் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பை உச்சநீதி மன்ற அறிவுரையின் படி நடுவண் அரசு தனது அரசிதழில் வெளியிட்டது. அதை எதிர்த்துக் கர்நாடகக் காங்கிரசு அரசு முழு அடைப்பு நடத்தியது. கன்னட வெறியர்கள் ஏராளமான தமிழர் களை இனக் கொலை புரிந்தனர். பல்லாயிரக் கணக் கான தமிழர்களின் வீடுகளை எரித்தனர். தமிழர் வணிக நிறுவனங்களைச் சூறையாடினர். இரண்டு இலட்சம் கர்நாடகத் தமிழர்கள் ஏதிலிகளாக (அகதிகளாக) தமிழகம் ஓடிவந்தனர். ஏறத்தாழ இருபது நாள் இந்த இனவெறி வன்முறை நடந்தது. இதைத் தடுக்க முன் வரவில்லை இந்திய அரசு. ஒரு கண்டனம் கூட இந்திய அரசு தெரிவிக்கவில்லை.

கன்னடர் வன்முறை வெறியாட்டத்தைத் தடுத்து நிறுத்த அப்போதைய முதல்வர் “புரட்சித் தலைவி’’ செயலலிதாவாலும் முடியவில்லை. “தானைத் தலைவர்’’ கருணாநிதியாலும் முடியவில்லை. இவ்விரு வரும் கர்நாடகத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களை நேரில் பார்த்து ஆறுதல் கூறக் கூடப் போகவில்லை. அசா மில், பீகாரிகள் தாக்கப்பட்டபோது லல்லுபிரசாத் அசாம் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்த்து ஆறுதல் கூறினார். அசாமுக்கு இராணுவத்தை அனுப்பிப் பீகாரிகளைப் பாதுகாக்குமாறு பிரதமர், குடியரசுத் தலைவர் ஆகியோரை நேரில் சந்தித்துக் கோரிக்கை வைத்தார்.

கன்னடர்கள் உச்சநீதி மன்றத்தீர்ப்பை முறியடித்துத் தமிழகத்திற்குள்ள காவிரி உரிமையைப் பறித்து தமிழர் களை இனப்படுகொலை செய்தாலும் அதன் மீது இந்திய அரசு நடவடிக்கை எடுக்காது; செயலலிதாவும் கருணாநிதியும் தமிழர்களைப் பாதுகாக்கக் களத்தில் இறங்கிச் செயல்படாத அறிக்கைவிடும் போலிகள் என்பதை கண்டு கொண்ட மலையாளிகள் முல்லைப் பெரியாறு அணை உரிமைச் சிக்கலில் உச்சநீதிமன்றத் தீர்ப்பைப் புறக்கணித்தார்கள். 2011 நவம்பரில் கேரளம் சென்ற தமிழர்களை அடித்துத் துரத்தினார்கள். தேனி மாவட்டத் தமிழ்ப் பெண்களைத் தோட்ட வேலைக் குப் போன இடத்தில் கடத்தி 24 மணி நேரம் காவலில் வைத்து அவமானப் படுத்தினர். ஐயப்பசாமி கோயிலுக் குப் போன தமிழர்களைத் தாக்கி செருப்பு மாலை போட்டார்கள்.
சிங்களர்கள் - தமிழகக் கடல்பகுதிக்கே வந்து தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொன்றனர். 600 தமிழக மீன வர்கள் சிங்களக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப் பட்டனர். இன்றும் தமிழக மீனவர்களை அடித்து விரட்டுகின்றனர். கடத்திக் கொண்டு போய் சிறைகளில் அடைக்கின்றனர். மீன்பிடிப் படகுகளையும் கடத்திச் செல்கின்றனர்.

இந்திய அரசின் எல்லா வகைப் பங்களிப்போடும், கருணாநிதி, செயலலிதா ஆகியோரின் போலித்தன அரசியலின் பங்களிப்போடும் சிங்கள வெறியர்கள் ஒன்றரை இலட்சம் தமிழர்களை இனப்படுகொலை செய்தார்கள். ஐ.நா. மனித உரிமை மன்றம் இயற்றிய தீர்மானத்தின்படி பன்னாட்டு வல்லுநர் குழு- இலங் கையின் போர்க்குற்றங்களை விசாரிக்க வேண்டும். ஆனால் பன்னாட்டுப் புலனாய்வுக் குழு இலங்கை செல்லாமல் தடுக்கும் அரசியல் அழுத்தத்தை உலக அரங்கில் இந்தியா தந்து கொண்டுள்ளது.

“தானைத் தலைவர்’’ கருணாநிதியும், “புரட்சித் தலைவி’’ செயலலிதாவும் ஈழத்தமிழர்களைக் காக்க உருப்படியாகச் செய்தது என்ன? ஒன்றுமில்லை. அவ் விருவருக்கும் உள்ள மக்கள் பலத்திற்கு அவர்கள் உண்மையாகப் போராடியிருந்தால் ஈழத்தமிழர் இனப்படுகொலையைத் தடுத்திருக்க முடியும். ஒப்புக் குக் குரல் கொடுத்துவிட்டு இருவரும் ஒதுங்கிக் கொண் டார்கள். இன்று வரை ஈழத்தமிழர் சிக்கலில் அதே உத்தி யைத்தான் இருவரும் கடைபிடிக்கிறார்கள்.

அண்டை அயல் இனத்தார் தமிழினத்தைத் தாக்கி அழித்து வருவதையும் தமிழக உரிமைகளைப் பறித்து வருவதையும் அந்த அநீதிகளுக்கு இந்திய அரசு மறை முகமாகத் துணை போவதையும் தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள். தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் தொடர்ந்து தமிழினத்தைக் காட்டிக் கொடுத்து, அரண்மனை அரசியல் -- ஊழல் அரசியல் நடத்தி வருவதையும் கண்டுகொண்ட ஆந்திரத் தெலுங்கர்கள் இப்போது செம்மரக் கடத்தல் தடுப்பு என்ற பெயரில் இருபது தமிழர்களை முதல்நாளே கடத்திக் கொண்டு போய் சித்திரவதை செய்து உறுப்புகளை அறுத்து அதன் பின்னால் சுட்டுக் கொன்று இனப்படுகொலை செய்துள்ளார்கள்.

செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட ஆந்திரத் தெலுங்கர்களை இப்படிக் கூட்டமாகக் கடத்தி சுட்டுக் கொல்லவில்லை. ஆந்திரத் தெலுங்கர்களை அவ்வாறு சுட்டுக் கொன்றால் அதையும் நாம் வன்மையாகக் கண்டிப்போம். அப்படித் தெலுங்கர்கள் கொல்லப் பட்டால் அது மனித உரிமைப் பறிப்பு. இருபது தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது இனப் படு கொலை. இரண்டிற்கும் வேறுபாடிருக்கிறது. ஆனால் அவ்வாறு தெலுங்கர்கள் கொல்லப்படவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும்.
இந்த வரலாற்று அவலங்களைத்தான் மேற்படி சுவரொட்டி சுட்டிக் காட்டுகிறது. எந்த இனத்திற்கு எதிராகவும் இனப்பகையைத் தூண்டவில்லை. அந்த இனங்கள் தமிழர்களுக்கு இழைத்து வரும் அநீதியைத் தான் எடுத்துரைத்தோம்.

அதிமுக அரசின் சுவரொட்டி வழக்கு இரண்டு காரணங்களுக்காக இருக்கும். ஒன்று தமிழின ஆதரவு போல் நாடகமாடும் செயலலிதாவின் போலித்தனத் தைத் த.தே.பே. தொடர்ந்து அம்பலப்படுத்துகிறது. அதற்குப் பழிவாங்க வேண்டும். இரண்டாவது தமிழின உரிமைப் போராளிகளைப் பழி வாங்குவதன் மூலம் பார்ப்பனியப் பாசகவுடன் நெருக்கம் கொண்டு, சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து தப்பிக்க வழி தேடலாம் என்ற உத்தி!

ஏடுகளின், ஊடகங்களின் தலையீடு மட்டும் இல்லை எனில் இன்னும் எத்தனையோ அட்டூழியங் களை - சனநாயகப் படுகொலைகளை - மனித உரிமைப் பறிப்புகளை அதிமுக ஆட்சி அன்றாடம் அரங்கேற் றும்! இந்தச் சுவரொட்டி வழக்கில் ஓர் எல்லையோடு அதிமுக அரசு நின்றதற்குக் காரணம் தொலைக்காட்சி மற்றும் அச்சு ஊடகச் செய்தியாளர்களின் தலையீடே! அடுத்து நீதித்துறைக்கு அஞ்சுகிறது அதிமு.க.

இந்து மதத்தை ஏற்காதவர்கள் பாகிஸ்தானுக்குப் போய்விட வேண்டும் என்று பகிரங்கமாக மேடைகளில் முழங்குகிறார்கள் பாசக நடுவண் அமைச்சர்கள்- நாடாளுமன்ற உறுப்பினர்கள். பாபர் மசூதியை இடித் தது சரிதான் என்று இன்றும் பாசகவினர் பேசு கின்றனர். இவர்கள் உண்டாக்காத இனப்பகையை- மதப் பகையைத் தமிழ்த் தேசியப் பேரியக்கம் உருவாக்கு கிறதா? இல்லை.
சொத்துக் குவிப்பு வழக்கில் செயலலிதா பெங் களூரு சிறையில் அடைக்கப்பட்ட போது கன்னடர் எதிர்ப்புச் சுவரெழுத்துகளை அதிமுகவினர் எழுதினர். சென்னையில் கன்னடர் நிறுவனங்களைத் தாக்கினர். அவ்வாறான அட்டூழியம் எதையும் த.தே.பே. செய்ய வில்லை.

போலிப்பட்டங்கள் - போலி முழக்கங்கள்தாம் திராவிடக் கட்சிகளின் கவச குண்டலங்கள்! உண்மை யான தமிழின உணர்ச்சியும் தமிழ்த் தேசியக் கொள்கை யும் எழுச்சி பெறும்போது தங்களது அரிதாரம் உதிர்கிறதே என்ற ஆத்திரம் திராவிடக் கட்சிகளுக்கு உண்டு!

விழிப்புற்ற தமிழர்களே, எழுச்சி பெற்ற தமிழர்களே!
இந்திய அரசு இனப்பகை அரசு என்பதை இமைப் பொழுதும் மறந்துவிடாதீர்கள். எச்சரிக்கை எச்சரிக்கை!
திராவிட அரசியல் கங்காணி அரசியல், தமிழினத்தைக் காட்டிக் கொடுக்கும் அரசியல் என்பதைக் கணப்பொழுதும் மறந்து விடாதீர்கள்! எச்சரிக்கை எச்சரிக்கை!
சாலையார் கூறியது போல் - சேதாரம் இல்லாமல் நகை செய்ய முடியாது; தியாகங்கள் இல்லாமல் பகை வெல்ல முடியாது என்ற உண்மையை உணர்வோம்!
முன்வைத்த காலை பின்வைக்காமல் தமிழ்த் தேசியத்தை முன்னெடுப்போம்! வழக்குகளும் - சிறைகளும் தமிழ்த் தேசிய வளர்ச்சிக்கான படிக்கட்டுகளாகட்டும்!!

(இக்கட்டுரை, தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2015 மே 1 இதழில் வெளியானது).

Labels: ,


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்