<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d6955529389241309188\x26blogName\x3d%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86.%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://thozharmaniyarasan.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com/\x26vt\x3d-8408640130511538487', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

மேக்கேதாட்டை எதிர்க்கும் பா.ச.க. - ஒப்புதல் வழங்கிய நீராற்றல் துறையை எதிர்க்குமா? - பெ. மணியரசன் கேள்வி!

Saturday, July 31, 2021



மேக்கேதாட்டை எதிர்க்கும் பா.ச.க. - ஒப்புதல் வழங்கிய நீராற்றல் துறையை எதிர்க்குமா?

காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் கேள்வி!


“கர்நாடக அரசு மேக்கேதாட்டு அணை கட்ட அனுமதிக்க மாட்டோம்; ஒரு செங்கல் வைக்கக் கூட விட மாட்டோம்; அங்கு அணை கட்டுவதை எதிர்த்துத் தஞ்சாவூரில் பா.ச.க. 05.08.2021 அன்று 10 ஆயிரம் பேருடன் உண்ணாப் போராட்டம் நடத்தும்” என்று பா.ச.க.வின் தமிழ்நாடு தலைவர் கே. அண்ணாமலை அறிவித்துள்ளார். 

மேக்கேதாட்டு அணை கட்டுவதில் கர்நாடக ஆளும் பா.ச.க.வும், தமிழ்நாட்டு பா.ச.க.வும் எதிர் எதிரான நிலை எடுத்திருப்பதன் மூலம், இந்தியா முழுமைக்கும் ஒரே இந்துத்துவா, ஒரே பண்பாடு, ஒரே அரசியல் கொள்கை, ஒரே மொழி என்று பேசி வந்த அதன் ஏகத்துவ நிலைபாடு தவறானது என்று அக்கட்சியே வெளிப்படுத்தி விட்டது. 

அடுத்து, தமிழ்நாடு பா.ச.க. உண்மையாகவே மேக்கேதாட்டு அணையை எதிர்க்கிறதா அல்லது தமிழ்நாட்டு உரிமைக்காக நிற்பது போல் நடிக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. 

அண்ணாமலை உண்மையாகவே, மேக்கேதாட்டு அணையை எதிர்க்கிறார் என்றால், அவர் முதலில் எதிர்க்க வேண்டியது இந்திய அரசின் நீராற்றல் துறையைத்தான்! ஏனெனில், பா.ச.க. ஒன்றிய அரசின் நீராற்றல் துறை (ஜல்சக்தித் துறை)தான், கர்நாடக அரசிடம் மேக்கேதாட்டு அணையின் விரிவான திட்ட அறிக்கை (DPR – Detailed Project Report) தயாரித்து அனுப்புமாறு 24.10.2018 அன்று கர்நாடகத்திற்கு அனுமதி அளித்தது. அந்த விரிவான திட்ட அறிக்கையைக் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் முன்வைத்து அதற்கு ஒப்புதல் பெறுமாறு அறிவுறுத்தி, அதனை காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு 20.01.2019 அன்று அனுப்பியும் வைத்தது. 

இந்த உண்மைகளை ஒன்றிய நீராற்றல் துறை அமைச்சர் கசேந்திர சிங் செகாவாத் பா.ம.க.வின் இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாசு அவர்கள், நாடாளுமன்ற மாநிலங்களவையில் எழுப்பிய வினாவுக்கு 26.07.2021 அன்று அளித்த விடையில் கூறியுள்ளார். 

தமிழ்நாடு அரசு மேக்கேதாட்டு அணைத் திட்டத்திற்குத் தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ள நிலையில், தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் பல தடவை ஒருமித்து, அந்த அணைத் திட்டத்தை எதிர்த்துத் தீர்மானம் போட்டுள்ள நிலையில் – இந்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்தறை அந்த அணைக்கு அனுமதி தராத நிலையில் – பா.ச.க. ஒன்றிய அரசின் நீராற்றல் துறை அந்த அணைக்கான அனுமதியை மேற்கண்டவாறு வழங்கியுள்ளது. 

தமிழ்நாடு பா.ச.க.வும் அதன் தலைவர் அண்ணாமலையும் மேக்கேதாட்டு அணையை அரசியல் நாடகமாக அல்லாமல் உண்மையாக எதிர்க்கிறார்கள் என்றால், அந்த அணைக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு நீராற்றல் துறை கொடுத்த அனுமதியை இரத்துச் செய்து, காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அது அனுப்பி வைத்த அறிக்கையை திரும்பப் பெற்று, அதைக் கர்நாடக அரசுக்குத் திருப்பி அனுப்பிவிட வேண்டும். இக்கோரிக்கையை இந்திய நீராற்றல் துறைக்கு பா.ச.க. தலைவர் கே. அண்ணாமலை முன்வைக்க வேண்டும். 

கர்நாடக அரசைக் கண்டிப்பதுடன், ஒன்றிய நீராற்றல் துறையையும் கண்டித்து கே. அ்ண்ணாமலை உண்ணாப் போராட்டம் நடத்தினால் அதுவே உண்மையான போராட்டமாகும். கர்நாடக அரசை மட்டும் கண்டித்து உண்ணாப் போராட்டம் நடத்தினால் கட்சி வளர்ப்பதற்காக தமிழ்நாடு பா.ச.க. நடத்தும் நாடகம் என்றே தமிழ் மக்கள் புரிந்து கொள்வார்கள். 


செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
பேச: 98419 49462, 94432 74002

Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery
www.kaveriurimai.com


 

Labels: , , ,

தமிழ்நாடு வெளிமுதலாளிகளின் முதல் வேட்டைக்காடா? - ஐயா பெ. மணியரசன் உரை!

தமிழ்நாடு வெளிமுதலாளிகளின் முதல் வேட்டைக்காடா?


தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
ஐயா பெ. மணியரசன் உரை!


கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Labels: , ,

அசாம் - மிசோரம் எல்லைப் போர்! தமிழ்நாடு எல்லை? - பெ. மணியரசன் உரை!

Thursday, July 29, 2021

அசாம் - மிசோரம் எல்லைப் போர்!

 தமிழ்நாடு எல்லை?



தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் உரை!


கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Labels: , ,

மேக்கேதாட்டு அணைகட்ட மோடி அரசின் முன்னெடுப்புகள்! ஒன்றிய அமைச்சரின் ஒப்புதல் வாக்குமூலம்! - பெ. மணியரசன் அறிக்கை!

Wednesday, July 28, 2021





மேக்கேதாட்டு அணைகட்ட மோடி அரசின் முன்னெடுப்புகள்! ஒன்றிய அமைச்சரின் ஒப்புதல் வாக்குமூலம்!

காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர்
பெ. மணியரசன் அறிக்கை!


கர்நாடகம் காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டில் அணைகட்டுவதற்குரிய முன் ஒப்புதல்களை இந்திய அரசு கொடுத்து விட்டது என்ற உண்மை 26.07.2021 அன்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஒன்றிய அரசின் நீராற்றல் துறை அமைச்சர் கசேந்திர சிங் செகாவாத் கூறியதிலிருந்து தெரிய வருகிறது. பா.ம.க.வின் இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள் மேக்கேத்தாட்டு அணை குறித்து கேட்ட வினாவுக்கு விடை அளித்த ஒன்றிய அமைச்சர் செகாவாத் கூறிய செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.

இதோ அமைச்சரின் கூற்று:

“மேக்கேத்தாட்டில் அணைகட்டுவதற்கு கர்நாடக அரசு அனுமதி கோரியதை அடுத்து இந்திய அரசின் நீராற்றல் ஆணையத்தின் (CWC) ஆய்வுக்குழு (Screening Committee) 24.10.2018 அன்று அணைக்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரித்து அனுப்புமாறு அனுமதி அளித்தது. அதற்கான சில நிபந்தனைகளையும் ஆய்வுக்குழு விதித்தது. கர்நாடக அரசு 20.01.2019 அன்று விரிவான திட்ட அறிக்கையை (DPR) நடுவண் நீராற்றல் ஆணையத்திடம் அளித்தது. அந்த விரிவான திட்ட அறிக்கையை உடனடியாக நடுவண் நீராற்றல் துறை காவிரி ஆற்று நீர் மேலாண்மை ஆணையத்திற்கு (CWMA) அனுப்பி தொடர்புடைய மாநிலங்களின் ஒப்புதலைப் பெறுமாறு கோரியது”. தமிழ்நாட்டின் தொடர் எதிர்ப்பைச் சட்டை செய்யாமல் மேக்கேத்தாட்டிற்கு அனுமதி அளிக்கும் வேலைகளை இந்திய அரசு பார்த்து வந்துள்ளது என்பதற்கு இது சான்று!

மேக்கேதாட்டில் கர்நாடகம் அணை கட்டினால் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்குக் கர்நாடகத்திலிருந்து திறக்க வேண்டிய தண்ணீரை மட்டுமின்றி அம்மாநில அணைகளிலிருந்து மிகையாக வெளியேறும் காவிரி வெள்ள நீரையும் தேக்கிக் கொள்வார்கள் என்று கூறி தமிழ்நாடு அரசும், தமிழ்நாட்டுக் கட்சிகளும் அத்திட்டத்தைத் தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளன.

மேக்கேத்தாட்டு அணைத்திட்டத்தைத் தடுக்குமாறு இந்திய அரசை வலியுறுத்தி 05.12.2014, 27.03.2015 ஆகிய நாட்களில் தமிழ்நாடு சட்டப் பேரவை ஒரு மனதாகத் தீர்மானங்கள் நிறைவேற்றி இந்தியத் தலைமை அமைச்சருக்கு அனுப்பியுள்ளது. உழவர் அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் மேக்கேத்தாட்டு அணையை எதிர்த்துப் போராட்டங்கள் நடத்தியுள்ளன.

2018 செப்டம்பர் 4 ஆம் நாள் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமை அமைச்சர் மோடிக்கு கடிதம் எழுதி மேக்கேதாட்டு அணைத்திட்டம் உச்ச நீதிமன்றம் 16.02.2018 அன்று வழங்கிய காவிரித் தீர்ப்புக்கு எதிரானது என்று சுட்டிக் காட்டியுள்ளார். அந்த மடலில், கர்நாடக அரசு தயாரித்துள்ள மேக்கேதாட்டு அணைக்கான சாத்தியக் கூறு அறிக்கையை (Feasibility Report) நடுவண் நீராற்றல் துறை ஏற்கக் கூடாது என்று எடப்பாடி பழனிச்சாமி கோரியுள்ளார்.

தமிழ்நாட்டின் இத்தனை எதிர்ப்புகளையும் இடது கையால் புறந்தள்ளி விட்டு, முதல் கட்ட சாத்தியக்கூறு அறிக்கையை ஏற்றுக் கொண்டு, அடுத்த கட்டமாக விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரித்து அனுப்புமாறு கோரிப் பெற்றுள்ளது ஒன்றிய அரசின் நீர் ஆற்றல் துறை!

அதுமட்டுமின்றி, அந்த விரிவான திட்ட அறிக்கையைச் செயல்படுத்தும் வழிமுறையாக உடனடியாக, அதனை 20.01.2019 அன்று காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அனுப்பி தமிழ்நாடு உள்ளிட்ட மற்ற மாநிலங்களின் ஒப்புதலைப் பெறக் கோரியுள்ளது.

இவை அனைத்திற்குமான ஒப்புதல் வாக்குமூலத்தை மாநிலங்களவையில் அளித்துள்ளார் மோடி அரசின் நீராற்றல் துறை அமைச்சர் கசேந்திர சிங் செகாவாத்! மோடி – அமித்சா ஒப்புதல் இல்லாமல் இவை அனைத்தும் நடந்திருக்காது. 

இதே கசேந்திர சிங் செகாவாத்தை அண்மையில் புதுதில்லியில் 06.07.2021 அன்று தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் சந்தித்து மேக்கேதாட்டு அணையை அனுமதிக்கக் கூடாது என்று மனுக் கொடுத்தார். வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசியத் துரைமுருகன் “நீராற்றல் துறை அமைச்சர் கொடுத்த உறுதிமொழி திருப்தி அளிக்கிறது வெற்றி” என்று கூறினார். அதே இடத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ அவர்கள் “பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்பது போல் ஒன்றிய அமைச்சர் பேச்சு இருக்கிறது” என்றார்.

துரைமுருகன் தலைமையிலான் குழு புதுதில்லியில் மனுக் கொடுப்பதற்கு முன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் 18.06.2021 அன்று புதுதில்லியில் தலைமை அமைச்சர் மோடியைச் சந்தித்து மேக்கேதாட்டுக்கு அனுமதிக் கொடுக்கக் கூடாது என்று மனு கொடுத்தார்.

இத்தனைக்கும் பின் எல்லாவற்றையும் ஒன்றுமில்லை என்று போட்டு உடைத்து விட்டார் கசேந்திர சிங் செகாவாத். கர்நாடகத்திற்கு மேக்கேதாட்டு அணைகட்ட அனுமதி கொடுக்கும் வழிமுறைகளைக் கையாண்டு வருகிறோம் என்று கூறிவிட்டார்.

கடந்த காலங்களில் காங்கிரசு ஒன்றிய அரசு, கர்நாடகம் சட்ட விரோதமாக ஏமாவதி, ஏரங்கி, கபினி, சுவர்ணவதி அணைகள் கட்ட அனுமதித்தது. அதே ஓரவஞ்சனையில் இப்போது மேக்கேத்தாட்டு அணையைக் கட்டி முடிக்கக் கர்நாடகத்திற்கு பா.ச.க. அரசு துணை செய்கிறது.

கடந்த தி.மு.க. ஆட்சி காலத்தில் ஏமாவதி, ஏரங்கி, கபினி, சுவர்ணவதி சட்டவிரோத அணைகள் கட்டப்பட்டன. அதே பாணியில் இப்போதும் தமிழ்நாட்டை தி.மு.க. அரசு ஏமாற்றக் கூடாது. தமிழ்நாட்டு மக்களும் ஏமாறக் கூடாது. 

மேற்கண்டவாறு மோடி அரசு மேக்கேதாட்டு அணைகட்ட ஒவ்வொரு கட்டத்திலும் முன்னெடுப்புச் செய்த போதெல்லாம் எடப்பாடி அரசு அதை எதிர்க்கவில்லை என்பதையும் தமிழ்நாட்டு மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், மேக்கேதாட்டு அணைகட்ட அனுமதி கொடுக்காத நிலையில் அதே அரசின் இன்னொரு பிரிவான நீராற்றல் துறை இவ்வளவு வேகமாக அந்த அணைக்கு அனுமதி கொடுத்து செயல்படுவது எப்படி?

காவிரி நீர் வரவில்லை என்றால் 22 மாவட்டங்களுக்கு தமிழ்நாட்டில் குடிநீர் இல்லை; 15 மாவட்டங்களில் பாசனம் இல்லை என வெகுண்டெழுந்து வெகுமக்கள் போராடி மேக்கேத்தாட்டு அணையைத் தடுக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசு, அனைத்துக் கட்சிகள் மற்றும் உழவர் அமைப்புகளின் கூட்டத்தைக் கூட்டி காவிரிக் காப்பு போராட்ட நாள் என ஒரு நாளை வரையறுத்து ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் பேரணிகள் - ஆர்ப்பாட்டங்கள் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டுமென்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன். உடனடித் தடை ஆணை பெற உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.       


செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
பேச: 98419 49462, 94432 74002

Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery
www.kaveriurimai.com


 

Labels: , ,

தமிழ்ப் பேரறிஞர் இளங்குமரனார் காலமான பின்னும் “வாழ்ந்த காலமானார்”! பெ. மணியரசன் இரங்கல்!

Tuesday, July 27, 2021



தமிழ்ப் பேரறிஞர் இளங்குமரனார்
காலமான பின்னும் “வாழ்ந்த காலமானார்”!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
பெ. மணியரசன் இரங்கல்!


தமிழின் தனித்தன்மை மீட்பு, தமிழின உரிமை மீட்பு முதலியவற்றில் மறைமலை அடிகளார் வழியில் செயல்பட்ட தமிழ்ப்பேரறிஞர் ஐயா இளங்குமரனார் 25.07.2021 முன்னிரவு நேரத்தில் மதுரைத் திருநகரில் தமது இல்லத்தில் காலமானார் என்ற செய்தி பேரதிர்ச்சியைத் தருகிறது.

ஆழ்ந்த தமிழ்ப் புலமை, வியக்கத்தக்க சொல்லாய்வு, தணியாத தமிழ்த்தேசிய உணர்வு, நேர்மை, எளிமை இவற்றின் சின்னமாகவும் மொழிஞாயிறு பாவாணரின் தொடர்ச்சியாகவும் வாழ்ந்தவர் இளங்குமரனார்.

ஐநூறுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியவர் ஐயா இளங்குமரனார். தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்ட பாவாணரின் மொத்த படைப்புகளுக்கான “தேவநேயம்” என்ற பத்துத் தொகுதிகளின் பதிப்பாசிரியராக அரும்பணி ஆற்றினார். செந்தமிழ்ச் சொற் பொருட்களஞ்சியம் 14 தொகுதிகள் ஐயாவின் படைப்புகளாகும்.

ஐயா திருச்சி அருகே அல்லூரில் நிறுவிய திருவள்ளுவர் தவச்சாலையும், அதில் அமைக்கப்பட்டிருந்த பாவாணர் நூலகமும் புதுத்தடம் புதித்தவை.

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் மாத இதழான தமிழர் கண்ணோட்டம் இதழை ஐயா அவர்களுக்குத் தொடர்ந்து அனுப்பி வந்தோம். ஐயா அவர்கள் ஒவ்வொரு மாத இதழையும் விரும்பிப் படிப்பார். அவ்வப்போது பாராட்டி மடல் எழுதுவார். தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் இலட்சியத்தை, செயல் நெறிகளை, போராட்ட முறைகளைப் பல முறை பாராட்டியுள்ளார்.

தமிழ்த்தேசியப் பேரியக்கம் இளங்குமனார் ஐயா அவர்களை ஆற்றல் மிகு ஆசானாக ஏற்று அவரிடம் அறிவுரைகளைப் பெறுவதில் ஆர்வம் காட்டி வந்தது.

மிகை எண்ணிக்கையில் வெளியார் தமிழ்நாட்டில் குவிவதைத் தடுக்கப் பேரியக்கம் எடுக்கும் முயற்சிகளைப் பாராட்டுவார். ஒரு முறை செங்கிப்பட்டியில் நடந்த கூட்டமொன்றில் பேசிய ஐயா “யாதும் ஊரே யாவரும் கேளிர்” (எல்லா ஊரும் நம் ஊரே, எல்லோரும் நம் உறவினரே) என்ற கணியன் பூங்குன்றனார் பாடலைக் கொஞ்ச காலத்திற்கு நினைவு கூராமல் நிறுத்தி வைப்போம் என்று பேசினார்.

ஐயா காலமான செய்தி பெருந்துயரம் தருகிறது. அதேவேளை தாம் வாழ்ந்த காலத்தின் அடையாளமாக அக்காலமாக ஆகியுள்ளார் என்று ஆறுதல் பெறுவோம். பாவேந்தர் கூறியது போல், “தமிழுக்குத் தொண்டு செய்வோர் சாவதில்லை” என்று ஐயா இளங்குமரனார் குடும்பத்தினரும், அன்பர்களும் ஆறுதல் பெறுவோம்.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


 

Labels: ,

குடும்பக் கட்டுப்பாடு செய்யாதீர்கள்! - ஐயா பெ. மணியரசன் உரை!

Tuesday, July 20, 2021

குடும்பக் கட்டுப்பாடு செய்யாதீர்கள்!



தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
ஐயா பெ. மணியரசன் உரை!


கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Labels: , , ,

இலட்சியமா? எதிர்வினையா? - ஐயா பெ. மணியரசன் உரை!

Sunday, July 18, 2021

இலட்சியமா? எதிர்வினையா?



தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
ஐயா பெ. மணியரசன் உரை!


கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Labels: , ,

தமிழ்நாட்டைப் பிரிப்போர்! இந்தியாவைப் பிரிப்பார்களா? - ஐயா பெ. மணியரசன் உரை!

Friday, July 16, 2021

தமிழ்நாட்டைப் பிரிப்போர்! 

இந்தியாவைப் பிரிப்பார்களா?



தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
ஐயா பெ. மணியரசன் உரை!



கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Labels: , , ,

"கொங்கு நாடு பா.ச.க.வின் சதித்திட்டம்! கையாளாக செயல்படும் இராமதாசு!" "ரெட்பிக்ஸ்" ஊடகத்துக்கு - ஐயா பெ. மணியரசன் நேர்காணல்!

Saturday, July 10, 2021

"கொங்கு நாடு பா.ச.க.வின் சதித்திட்டம்! கையாளாக செயல்படும் இராமதாசு!"


"ரெட்பிக்ஸ்" ஊடகத்துக்கு

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
ஐயா பெ. மணியரசன்  நேர்காணல்!



கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Labels: , ,

பனை மரப் பாதுகாப்புச் சட்டம் தேவை! - பெ. மணியரசன் அறிக்கை!

Saturday, July 3, 2021

 


பனை மரப் பாதுகாப்புச் சட்டம் தேவை!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
பெ. மணியரசன் அறிக்கை! 


கஜா புயலால் கூட சாய்க்க முடியாத பனை மரங்களைத் தமிழ்நாட்டில் பண வேட்டைக்காரர்கள் வெட்டிச் சாய்க்கிறார்கள். தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களிலும் வட மாவட்டங்களிலும் பனை அழிப்பு வணிகம் வேகமாக நடந்து கொண்டுள்ளது. திருவாரூர், நாகை மாவட்டங்களில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உணர்வுள்ள அமைப்புகள் பண வேட்டைக் காரர்களின் பனை வேட்டையை அங்கங்கே தடுத்துப் பேராடி வருகின்றனர். 

திருத்துறைப்பூண்டி மற்றும் அதை ஒட்டிய சேகல், கீழ்வேளூர், தீவம்பாள்பட்டினம், கொருக்கை, மீனம்பநல்லூர், மாங்குடி மற்றும் வேதாரணியம் பகுதி கிராமங்கள் போன்ற பகுதிகளில் உள்ள பனை மரங்களை செங்கல் சூளைகளுக்கும், தொழிற்சாலைகளுக்கும் எரிபொருளாகப் பயன்படுத்த சரக்குந்துகளில் தொடர்ந்து ஏற்றிச் செல்கிறார்கள். 

ஒரு பனை மரத்தை 200 ரூபாய்க்கு எரிபொருளாக விற்கும் அவலம் நெஞ்சை பதைக்க வைக்கிறது. பசுமைச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பருத்திச்சேரி ராஜாவும், அந்த அமைப்பைச் சேர்ந்தவர்களும், மற்றும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்களும் அப்பகுதிகளில் வெட்டப்பட்ட பனை மரங்களை ஏற்றிச் சென்ற சரக்குந்துகளை மறித்துக் காவல்துறையினரிடம் ஒப்படைத்து வரும் செய்திகள் நாளேடுகளிலும், செய்தி ஊடகங்களிலும் வந்து கொண்டுள்ளன. ஆனாலும் பனைவேட்டை தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. 

தமிழர்களை இனப்படுகொலை செய்து அழித்த இலங்கை அரசு கூடப் பனை மரங்களை வெட்டத் தடை விதித்துக் கடும் சட்டம் இயற்றியுள்ளதாகக் கூறுகிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் அப்படிப்பட்ட சிறை அடைப்பு எதுவுமின்றி பனைவேட்டையர்கள் தப்பி விடுகிறார்கள். 

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் 2018இல் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், இந்தியாவில் 9 கோடிப் பனை மரங்கள் இருப்பதாகவும், அதில் 5½ கோடி மரங்கள் தமிழ்நாட்டில் இருப்பதாகவும் கூறுகிறது. ஆனால், அதில் இன்று 2½ கோடி பனை மரங்கள்தாம் இருக்கும் என்று சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளோர் கூறுகிறார்கள். 

தமிழ்நாட்டின் அடையாளச் சின்னம் பனை மரம்! வேர் தொடங்கி பனை மட்டை இலை நுனி வரை பயன்படும் மரம் அது! நம்முடைய பழைய இலக்கியங்களைப் பதிய வைத்துப் பாதுகாத்தது பனை ஓலைகள்! ஆழத்தில் கிடக்கும் நிலத்தடி நீரை மேலே இழுத்து, மேல் மண்ணில் ஈரப்பதம் காப்பது பனை வேர்களே! 

கிளைகள் இல்லாத பனைமரம் நுங்கு, பதனீர், பனங்கற்கண்டு, பனைவெல்லம், பனம்பழம், பனங்கிழங்கு என்று எத்தனை கிளை வகை உணவுப் பொருட்களைத் தன்னுள் பொதிய வைத்துள்ளது. வீடுகட்ட மிக வலுவான மரம் பனை! 

தென்னந்தோப்பு வளர்க்கிறோம். ஆனால், பனந்தோப்பு வளர்ப்பதில்லை. பழைய மரங்கள், தானே முளைத்த மரங்கள், ஆர்வலர்கள் அங்கங்கே விதைத்த மரங்கள் என்று பனை மரங்கள் வளர்கின்றன.

அவற்றைத் தொழிற்சாலைக் கொள்ளை நோய் அழித்துவிடாமல் பாதுகாக்கும் பொறுப்பு பசுமை ஆர்வலர்களுக்கு மட்டுமல்ல, அனைத்துத் தமிழ் மக்களுக்கும் உண்டு. கூடுதலான பொறுப்பு தமிழ்நாடு அரசுக்கு இருக்கிறது, 

பனைப் பாதுகாப்புக்கென்று புதிய சட்டம் இயற்ற வேண்டும்; அதில் சிறைத் தண்டனைப் பிரிவு சேர்க்க வேண்டும். அத்துடன், பனைப் பாதுகாப்பு, பனை வளர்ப்பு விழிப்புணர்வை அரசும் பரவலாக மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும் என்று தமிழ்நாடு அரசைத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். 


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Labels: , ,


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்