<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d6955529389241309188\x26blogName\x3d%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86.%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://thozharmaniyarasan.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com/\x26vt\x3d-8408640130511538487', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

கீழடி நாகரிகம் : ஆரிய - திராவிடத் திருட்டை அனுமதிக்காதீர்! பெ. மணியரசன்

Sunday, September 29, 2019

கீழடி நாகரிகம் :
ஆரிய - திராவிடத் திருட்டை அனுமதிக்காதீர்!

ஐயா பெ. மணியரசன்
தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்.


ஐயகோ, இந்தக் கொடுமை இந்தியாவில் வேறு எந்த இனத்திற்காவது உண்டா?
சொந்த இனத்தின் பெயரை சொல்லக்கூடாது; வேறொரு கலப்பட இனப்பெயரைச் சொல் என்று கட்டளை இடும் இந்தக் கொடுமை மராத்தியர்க்கு உண்டா? குசராத்தியர்க்கு உண்டா? தெலுங்கர் – கன்னடர்க்கு உண்டா? இல்லை! தமிழர்களுக்கு மட்டும்தான் உண்டு!
தமிழர் என்று சொல்லாதே, திராவிடர் என்று சொல்! தப்பித்தவறி தமிழர் என்று சொல்லிவிட்டால், திராவிடர் என்பதை அடுத்த வரியில் சேர்த்துக் கொள் என்கிறார்கள். “தமிழர் நாகரிகம் என்று சொல்லாதே! பாரத நாகரிகம் என்று சொல்!” என்கிறார்கள். இந்தக் கொடுமை வேறு எந்த இனத்திலாவது உண்டா? இல்லை!
திராவிடத் திருட்டு
------------------------------
கற்பனையாகக் கயிறு திரித்த கால்டுவெல் கூட “தமிழர்க்கு மறுபெயர் திராவிடர்” என்று கூறவில்லை. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு போன்ற மொழிகளுக்கு மூல மொழியாக இருந்தது திராவிடம் என்றுதான் கதையளந்தார்!

ஆனால், “திராவிடத் தந்தை” பெரியாரும், அவரின் வாரிசுகளும்தாம் தமிழர் அடையாளத்தை மறைத்து, திராவிட அடையாளத்தைத் திணிப்பதிலேயே 24 மணி நேரமும் குறியாக இருக்கிறார்கள்.
இதோ கீழடியில் தமிழர் தொன்மைப் பண்பாட்டின் பொருட்கள் அடுக்கடுக்காய் கிடைத்து வருகின்றன. திராவிடவாதிகள் திருட்டு வேலையைத் தொடங்கி விட்டார்கள்! அது திராவிட நாகரிகமாம்!
“அதனைத் திராவிடப் பண்பாடு என அறிஞர்கள் குறிப்பிடுவதைக் கேட்கும்போது, செவிகளில் இன்பத்தேன் பாய்கின்றது” என்று 28.09.2019 அன்று வெளியிட்ட அறிக்கையில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் பூரித்துப் போகிறார்.
ஸ்டாலின் அவர்களே, நீங்கள் தமிழர் பண்பாட்டை – திராவிடப் பண்பாடு என்று திரிக்கும்போது எங்களுக்குக் காதில் தேள் கொடுட்டுவது போல் அல்லவா வலிக்கிறது.
இன்னொருபுறத்தில், அமைச்சர் பாண்டியராசனோ கீழடியை பாரதப் பண்பாடு என்கிறார்.
ஆந்திராவிலோ, கர்நாடகத்திலோ கீழடிபோல் பழைய பண்பாட்டு அகழாய்வு கிடைத்தால் அவர்கள் அதைத் திராவிடப் பண்பாடு என்று சொல்வார்களா? சொல்லவே மாட்டார்கள்! தெலுங்கர் பண்பாடு, கன்னடர் பண்பாடு என்றுதான் சொல்வார்கள். தெலுங்கு தேசம் என்றல்லவா அங்கே கட்சி வைத்திருக்கிறார்கள். திராவிடப் பரிவாரங்கள் அங்கு கிடையாதே! தமிழீழத் தமிழர்களிடம் திராவிடக் கயிறு திரிக்க முடியுமா?
திராவிடவாதிகளே, நீங்கள் “தமிழர் என்றாலும் திராவிடர் என்றாலும் ஒன்றுதான் என்று கூறிக் கொள்கிறீர்கள். அக்கூற்றிலாவது, நீங்கள் நேர்மையாக இருந்தால், இலக்கிய வழக்கிலும், மக்கள் வழக்கிலும் தமிழர் என்றே அழைக்கப்படும் தமிழர்களைத் “தமிழர்” என்றே அழையுங்கள்!
தமிழர்களைத் “திராவிடர்கள்” என்றே அழையுங்கள் என்று இன்று உங்களிடம் கோரிக்கை வைப்போர் யார்? இராதாரவி போன்றவர்களா? அதையாவது சொல்லுங்கள்!
மொகஞ்சோதாரோ, அரப்பா நாகரிகம் திராவிட நாகரிகம் என்று அறிஞர்கள் கூறிவிட்டார்களாம். பூரித்துப் போகிறார் ஸ்டாலின். அந்த சிந்துவெளி நாகரிகம் தமிழர் நாகரிகம்தான்! எந்தத் திராவிடர் எந்த நாட்டில் வாழ்ந்தார்? அதற்கென்ன இலக்கியச் சான்று? அதற்கென்ன கல்வெட்டுச் சான்று? செப்பேட்டுச் சான்று?
தமிழர் – திரமிளர்; திராவிடர் என்று ஆனார்கள் என தேவநேயப் பாவாணர் கூறியுள்ளார் என்றும் ஸ்டாலின் தமது அறிக்கையில் “விளக்குகிறார்”. திராவிடரை நிலைநாட்ட இவ்வளவு பெரிய முயற்சி எடுப்பானேன்? “தமிழர்” என்ற இன அடையாளத்தைப் பின்னுக்குத் தள்ளத் தானே!
வலிந்து திராவிடரைத் திணிக்காவிட்டால் வருத்தப்படும் இனம் எது? மொழிஞாயிறு பாவாணர் தெளிவாகக் கூறியுள்ளார். “தமிழ் மொழி திராவிட மொழியன்று; தமிழிலிருந்து திரிந்து பிரிந்து போன தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்றவையே திராவிட மொழிகள்” என்று! தமிழர் திராவிடர் அல்லர் என்றும், பாவாணர் தெளிவுபடுத்தியுள்ளார்.
தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகள் கூட திராவிட மொழிகள் அல்ல. அவை தமிழிலிருந்து பிரிந்தவை. அவை தமிழ் மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை (Tamil Linguistic Family).
கீழடிப் பொருட்களில் காணப்படும் எழுத்தைத் தமிழ் பிராமி என்று கூறுவது, வடநாட்டுப் பிராமிக்கு வால் பிடிக்கும் அடிமைத்தனம்! அது தமிழ் எழுத்து மட்டுமே! அதை மூலத்தமிழ் (Proto Tamil) என்று கூற வேண்டும். தமிழி என்று கூற வேண்டியதில்லை!
ஆரிய நூல்களான மனுதர்மம், குமாரில பட்டரின் தந்திரவார்த்திகா ஆகியவற்றிலிருந்து “திராவிட” என்ற சொல்லை எடுத்தேன் என்கிறார் கால்டுவெல். கால்டுவெல் கயிறு திரித்ததை வைத்து, தமிழர் நாகரிகங்களைத் “திராவிட” நாகரிகம் என்று மேலை நாட்டு ஆய்வாளர்கள் மேம்போக்காக அன்றும் கூறினார்கள்; இன்றும் கூறி வருகிறார்கள்.
இவர்கள் எல்லோரும் கால்டுவெல்லைப் போலவே முதலில் ஆரிய – பிராமணர்களிடம் பாடம் கேட்டு, சமற்கிருதம் கற்றுத் தேர்ந்த பின்னர் தமிழ் கற்றவர்கள். சமகால எடுத்துக்காட்டு – கலிபோர்னியா பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜார்ஜ் எல் ஹார்ட்; சில ஆண்டுகளுக்கு முன் காலமான பின்லாந்தின் அஸ்கோ பர்போலா!
ஆரியப் பெருமிதங்கள் – சமற்கிருதச் சிறப்புகள் ஆகியவற்றில் திளைத்துப் பின்னர், தமிழையும் கற்று – கால்டுவெல் காட்டிய திராவிடத்தை வழிமொழிந்தவர்கள் இவர்கள்.
ஆரியப் புரட்டு
-----------------------
தமிழறிஞர் என்று அறியப்படும் ஜார்ஜ் எல் ஹார்ட் என்பவரின் சமற்கிருதச் சார்பை மட்டும் – ஒரு சோறு பதமாகப் பார்க்கலாம்.

இவர் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் சமற்கிருதப் பேராசிரியராக செயல்பட்டுப் பின்னர் தமிழ் கற்றவர். தமிழ்மொழி கி.மு. 300–இல் தோன்றியது என்றும் சமற்கிருதம் கி.மு. 2000–இல் தோன்றியது என்றும் கட்டுரை எழுதியவர். சங்ககாலத் தமிழ் இலக்கியம் இந்துமதக் கருத்துகளைக் கொண்டது என்று “ஆய்வுரை” வழங்கியவர். இவருக்கு இந்திய அரசு (மோடி அரசு) 2015-இல் பத்மசிறீ விருது வழங்கி சிறப்பித்தது.
மேற்கண்ட கருத்துகளைக் கொண்ட இவரது கட்டுரையை நடப்பாண்டு 12ஆம் வகுப்பு ஆங்கிலப் பாடத்தில் சேர்த்திருந்தார்கள். கடும் எதிர்ப்புக் கிளம்பிய பின் தமிழ்நாடு அரசு அப்பாடத்தை நீக்கியது.
ஆரியமயமாக்கல் ஆபத்து
-----------------------------------------
கீழடி நாகரிகத்தை இந்து நாகரிகம் – ஆரிய நாகரிகம் கலந்தது என்று கூறிட ஆரிய பிராமண “அறிஞர்கள்” இந்நேரம் அணியமாகிக் கொண்டிருப்பார்கள். இவர்கள் சிந்துவெளி தமிழர் நாகரிகத்தையே ஆரிய சரசுவதி நாகரிகம் என்று மாற்றி எழுதினார்கள். இவர்களில் இராசாராம் என்பவர் அரப்பாவில் கிடைத்த காளையின் வால் சுடுமண் வடிவத்தை – குதிரையின் வால் என்று மாற்றினார். காளை தமிழர் விலங்கு, குதிரை ஆரியர் விலங்கு! எனவே, சிந்துவெளி நாகரிகம் ஆரிய நாகரிகம் என்றார். அக்கதையை எல்லாம் உண்மையான ஆய்வாளர்கள் உடைத்துச் சுக்குநூறாக்கினர்.

எல்லாவற்றுக்கும் மேலாக அண்மையில் சிந்துவெளி நாகரிகத்தில் கிடைத்த எலும்புகளை வைத்து, மரபணு (DNA) ஆய்வு செய்ததில், அது ஆரியர் வருகைக்கு முன் இருந்த உள்ளூர் மக்கள் எலும்பு என்று கண்டறியப்பட்டுள்ளது. இதுபற்றிய ஆய்வுக்கட்டுரை Science (சைன்ஸ்) என்ற ஆங்கில ஆய்விதழில் வந்தது. அதை வைத்து ஆங்கில “இந்து” நாளேட்டில் 13.09.2019 அன்று “New reports clearly confirm ‘Arya’ migration into India” என்ற தலைப்பில் டோனி ஜோசப் கட்டுரை எழுதியுள்ளார்.
தமிழ்நாடு தமிழ்த்துறை அமைச்சர் பாண்டியராசன் (அ.தி.மு.க.) அவர்கள், “கீழடியை தமிழர் நாகரிகம் என்று கருதாமல் பாரத நாட்டின் மொத்த நாகரிகத்தின் தொடக்கமாகப் பார்க்க வேண்டும்” என்று இடுக்கில் புகுந்து கடுக்கண் கழற்றுவது போல் ஆரியக் கருத்தைப் புகுத்தினார்.
சங்கம் வளர்த்த தமிழ் மதுரையில் தமிழன்னை சிலையும், மற்ற வரலாற்றுச் சின்னங்களும் வடிப்பதற்குத் தமிழ்நாடு அரசு சார்பில் கொடுக்கப்பட்ட வரைவுக் கோட்பாடுகள் ஆரியஞ்சார்ந்து இருந்தன. அந்தத் துறைக்குப் பாண்டியராசன்தான் அமைச்சர்.
சங்ககாலத் தமிழர் பண்பாடு என்பது வேத பிராமண மதம் – இந்து மதம் ஆகியவை எல்லாம் கலந்த பண்பாடு. இந்த இந்துப் பண்பாடும் வெளிப்படும் வகையில் தமிழன்னை சிலை இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வழிகாட்டும் நெறி வகுத்திருந்தது. தமிழ்த்தேசியப் பேரியக்கம், நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழின உணர்வாளர்கள் சமற்கிருத மாதா வடிவில் தமிழன்னை சிலை அமைப்பதை எதிர்த்து மதுரையில் போராடினோம். அச்சிலைத் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு கைவிட்டது.
ஆரியம் கீழடி நாகரிகத்தைக் களவாட முயலும். முடியாவிட்டால், அது மிகமிகப் பிற்காலத்து நாகரிகம் என்று சொல்லிவிடும். தமிழர்கள் ஆரியத் திருட்டு – திராவிடத் திருட்டு இரண்டிடமும் ஏமாறாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!
கீழடி நாகரிகம் கி.மு. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பது சரியாக இருக்காது. அதற்கும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகவே இருக்கும். மீண்டும் கீழடிப் பொருட்களை விரிவாக ஆய்வு செய்ய வேண்டும். சிந்துவெளி நாகரிகம் கி.மு. 3,300 – 1,700 என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். கீழடி நாகரிகமும் இதையொட்டித்தான் இருக்கும்.
கடலியல் ஆய்வாளர் கிரகாம் அன்காக் பூம்புகாரிலிருந்து 5 கி.மீ. தொலைவில் கடலுக்குள் 11,500 ஆண்டு பழைமையான நகரம் ஒன்று கிடக்கிறது என்று கூறியுள்ளார். சிந்துவெளி நாகரிகம் என்பது, தமிழர்களின் வழிமுறை (Secondary Civilization) நாகரிகமே தவிர முதனிலை நாகரிகமன்று. தமிழர்கள் தெற்கிலிருந்து வடக்கே போனவர்கள்.
கடலுள் மூழ்கிய பஃறுளி ஆறு, குமரிக் கண்டம் ஆகியவையே தமிழர்களின் முதனிலை நாகரிகம் தோன்றிய இடங்கள். அவை கடலுக்குள் மூழ்கிவிட்டதால், ஆதிச்சநல்லூர், பூம்புகார் போன்றவையே இப்போதுள்ள முதனிலை நாகரிகங்கள்!
அருள் கூர்ந்து, தமிழ் இனத்தில் பிறந்த அனைவரும் தங்களைத் தமிழர் என்ற உண்மைப் பெயரில் அழைத்துக் கொள்ளுங்கள்! உங்கள் முன்னோர்க்கு இழுக்குச் சேர்க்கும் வகையில் “திராவிடர்” என்று அழைத்துக் கொள்ளாதீர்கள்! அரசியல் ஆதாயத்திற்காகவோ, பெரியார் பக்திக்காகவோ பிறந்த இனத்தை இழிவு படுத்தாதீர்கள்!
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam




Labels:

கீழமை நீதிபதிகள் பணிக்கு வெளி மாநிலத்தவரை அழைக்கும் அறிவிப்பை இரத்து செய்க! பெ. மணியரசன் அறிக்கை!

Sunday, September 22, 2019

கீழமை நீதிபதிகள் பணிக்கு வெளி மாநிலத்தவரை
அழைக்கும் அறிவிப்பை இரத்து செய்க!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
தோழர் பெ. மணியரசன் அறிக்கை!

தமிழ்நாட்டில் 176 குடிமையியல் மற்றும் குற்றவியல் நீதிபதிகளுக்கான தேர்வு விண்ணப்பம் கோரி தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த 09.09.2019 அன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது (அறிவிப்பு எண் - 555/2019). அதில், இந்தியாவிலுள்ள எல்லா மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் தேர்வெழுதலாம் என்றும், தமிழ் தெரிந்திருக்க வேண்டிய முன் நிபந்தனை இல்லை என்றும், வேலையில் சேர்ந்த பிறகு தகுதிகாண் காலத்திற்குள் (Probation Period) இரண்டாம் வகுப்பு தமிழ்ப் பாடத் தேர்வெழுதினால் போதும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, 2016இல் தமிழ்நாடு அரசுப் பணிகள் தேர்வாணையத் தேர்வை இந்தியாவிலுள்ள அனைவரும் எழுதலாம் என்றும் நேப்பாளம், பூட்டான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும், பாக்கித்தான், வங்காளதேசம், மியான்மர் போன்ற நாடுகளிலிருந்து குடிபெயர்ந்தவர்களும் எழுதலாம் என்றும் திருத்தம் கொண்டு வந்தது அ.தி.மு.க. ஆட்சி. கடந்த 2017 செப்டம்பரில் அரசுப் பல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் தேர்விலும், 2018 பிப்ரவரியில் நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. பொதுத் தேர்விலும், 2019 ஏப்ரலில் மின்வாரியத்திற்கான பொறியாளர் தேர்விலும் வெளி மாநிலத்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தமிழர்களுக்குள் எழும் சிக்கல்களிலும், தமிழ்நாட்டு மக்கள் மீது போடப்படும் வழக்குகளிலும் சாட்சியங்கள் தமிழில்தான் இருக்கும். காவல்துறை ஆவணங்களும் தமிழில்தான் இருக்கும். தமிழ் தெரியாத வெளி மாநிலங்களைச் சேர்ந்த நீதிபதிகள், மாவட்ட அளவில் செயல்பட்டால் இந்த சாட்சியங்களை எப்படிப் புரிந்து கொள்வார்கள்? மாவட்ட நீதிமன்றம் வரை தமிழில் வழக்கு நடத்தலாம், தீர்ப்பெழுதலாம் என்று தமிழ்நாட்டில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. தமிழ் தெரியாத பிறமொழியாளர்கள் நீதிபதிகளானால் இச்சட்டம் நடைமுறையில் சாகடிக்கப்பட்டு விடும்.

கர்நாடகம், குசராத், மகாராட்டிரம், சத்தீசுகட் போன்ற மற்ற மாநிலங்களில் மாநில அரசு வேலைகள் – நடுவண் அரசு வேலைகள் – தனியார் துறை வேலைகள் அனைத்திலும் மண்ணின் மக்களுக்கு வேலை வழங்குவதற்கான விழுக்காட்டு ஒதுக்கீடுகள் அரசு ஆணைகளாக, சட்டங்களாக இயற்றப்பட்டுள்ளன. அண்மையில்கூட, ஆந்திரப்பிரதேச அரசு தனியார் துறையில் 75 விழுக்காட்டு வேலைகளை தெலுங்கு மக்களுக்கு வழங்க வேண்டுமென்று தனிச் சட்டம் இயற்றியுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் அவ்வாறான ஒரு சட்டமியற்ற தமிழ்நாடு ஆட்சியாளர்கள் தொடர்ந்து மறுத்து வருகிறார்கள். இதன் மர்மம் என்ன? பொது மக்களைப் பொறுத்தவரை இம்மறுப்பை இனத்துரோகம் என்றுதான் புரிந்து கொள்கிறார்கள்.

குசராத்தில் மாவட்ட அளவிலான நீதிபதிகள் தேர்வுக்கு குசராத் உயர் நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பில் (நாள் – 26.08.2019, அறிவிப்பு எண் - RC/0719/2019-20) குசராத்தி மொழி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்று முன் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் மாவட்ட அளவிலான நீதிபதி வேலையில் சேர தமிழ் மொழி அறிந்திருப்பது முன் நிபந்தனை அல்ல; வேலையில் சேர்ந்த பிறகு கற்றுக் கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசே கூறியிருக்கிறது. குசராத்தி மொழி தெரிந்திருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்க அம்மாநில உயர் நீதிமன்றத்திற்கு அதிகாரமளித்துள்ள சட்டம், தமிழ்நாடு அரசுக்கு மட்டும் அனுமதி மறுக்கிறதா? தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் இதற்கு விடை சொல்ல வேண்டும்!

ஏன் தமிழ்நாட்டில் அ.தி.மு.க. ஆட்சி மாநில வேலை வாய்ப்பில் தொடர்ந்து வேலையற்றுத் துயருரும் தமிழ் இளைஞர்களைப் புறக்கணிக்க வேண்டும்? ஏன் வஞ்சிக்க வேண்டும்?

தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு நிறுவனங்களில் திட்டமிட்டு நூற்றுக்கு நூறு – நூற்றுக்கு தொண்ணூறு வீதம் வட இந்தியர்களையும், வெளி மாநிலத்தவரையும் வேலையில் சேர்க்கிறது நடுவண் அரசு. அன்றாடம் ஆயிரம் பல்லாயிரமாக வட மாநிலத்தவர் தமிழ்நாட்டில் வந்து குவிந்து தனியார் துறை வேலைகளையும் கவ்விக் கொள்கிறார்கள். இந்தக் கொடுமைகளைத் தடுத்து மண்ணின் மக்களாகிய தமிழர்களுக்கு வேலை உரிமையை நிலைநாட்ட வேண்டிய தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் இந்திய அரசோடு போட்டி போட்டுக் கொண்டு வெளி மாநிலத்தவர்களை தமிழ்நாட்டு வேலைகளுக்கு அழைப்பது சொந்த மக்களுக்குச் செய்யும் துரோகமாகும்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள நீதிபதிகள் தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற்று, தமிழ்நாட்டில் மாவட்ட அளவில் நீதிபதிகளாக செயல்பட மண்ணின் மக்களுக்கே வாய்ப்பு வழங்கும் வகையில் புதிய அறிவிப்பை வெளியிட வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

Labels:

நீலகிரியில் உற்பத்தியாகும் பாண்டியாற்றின் நீரை தமிழ்நாட்டிற்குப் பயன்படுத்துவதற்கான திட்டம் வரையறுக்க நீலகிரியில் நேரில் கள ஆய்வு! பெ. மணியரசன்

Wednesday, September 18, 2019

நீலகிரியில் உற்பத்தியாகும் பாண்டியாற்றின் நீரை
தமிழ்நாட்டிற்குப் பயன்படுத்துவதற்கான திட்டம் வரையறுக்க
நீலகிரியில் ஐயா பெ. மணியரசன் அவர்கள் நேரில் கள ஆய்வு!




தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகி கேரளா வழியாகச் சென்று கடலில் கலக்கும் பாண்டியாற்றின் நீரை, தமிழ்நாட்டின் வேளாண்மைக்கும் குடிநீருக்கும் பயன்படுத்தும் வகையில் திட்டம் தயாரிக்கும் பணிக்காக தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவரும், காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளருமான ஐயா பெ. மணியரசன் அவர்கள் நீலகிரியில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
நீலகிரியில் கடந்த ஆகத்து மாதம் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் துயர் துடைப்புப் பணிகள் வழங்கும் நிகழ்வில் 16.09.2019 அன்று மாலை பங்கேற்ற ஐயா மணியரசன் அவர்கள், நேற்று (17.09.2019) நீலகிரி மாவட்டத்தின் முகாமையான சிக்கல்கள் குறித்து ஆய்ந்தறிய பல்வேறு பகுதிகளில் பயணம் மேற்கொண்டனர்.
தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், மகளிர் ஆயம் தலைவர் திரு. ம. இலட்சுமி அம்மாள், தலைமைச் செயற்குழு தோழர் க. அருணபாரதி, கூடலூர் த.தே.பே. தோழர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் உடன் வந்தனர்.
ஓய்வு பெற்ற மின்துறை கண்காணிப்பாளர் திரு. சி.ஆர். கிருஷ்ணன் மற்றும் மங்குலி கிராமம் திரு. எம்.எஸ். ஆண்டி ஆகியோர் தேவர்சோலையிலுள்ள பாடாந்துறை, வேடன் வயல் - செளுக்காடி, மங்குலி, கொங்கம்வயல், புத்தூர் வயல், மறுப்பமுடி மலை ஆகிய பகுதிகளுக்கு ஐயா மணியரசன் அவர்களை நேரில் அழைத்துச் சென்று அங்குள்ள நீர்நிலைகள் குறித்து விளக்கினர். மகிழுந்து பயணிக்க முடியாத பல மலைப் பகுதிகளுக்கு ஜீப்பில் சென்றனர்.
கூடலூரில் ஐயா பெ. மணியரசன் அவர்கள வரவேற்ற நாம் தமிழர் கட்சி கூடலூர் செயலாளர் திரு. கேத்தீசுவரன் தலைமையிலான தோழர்கள், ஓவேலி – சூண்டி பகுதி வழியாக சந்தனமலை சென்று எல்லமலையிலிருந்து பாண்டியாறு உருவாகும் நீர்ப்பிடிப்புப் பகுதிகளை ஐயா பெ. மணியரசன் அவர்களை அழைத்துச் சென்று காண்பித்தனர். கூடலூர் எழுத்தாளர் சி. கந்தையா அவர்கள் தாம் எழுதிய நூலை ஐயா பெ. மணியரசன் அவர்களிடம் நேரில் வழங்கிப் பேசினார்.
தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் திரு. ஆனந்த் மற்றும் அவர்களது தோழர்கள், நீலகிரி மாவட்டத்தின் சிக்கல்களுக்காக அவர்கள் நடத்திய போராட்டங்களையும், அரசுக் குறிப்பு ஆவணங்களையும் ஐயா பெ. மணியரசன் அவர்களிடம் நேரில் வழங்கிக் கலந்துரையாடினார்.
பாண்டியாற்றின் நீரை தமிழ்நாட்டிற்குப் பயன்படுத்தும் வகையிலான விரிவான திட்டம் குறித்த ஆய்வறிக்கை விரைவில் வெளியிடப்படும்.



Labels:

இந்தியாவின் ஒரே மொழி இந்தி என்பது தமிழை அழிக்கும் செயல்! பெ. மணியரசன் அறிக்கை!

Sunday, September 15, 2019

“இந்தியாவின் ஒரே மொழி இந்தி என்பது
தமிழை அழிக்கும் செயல்!”




தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
பெ. மணியரசன் அறிக்கை!


இந்திய உள்துறை அமைச்சர் அமித்சா, தமது “இந்தி நாள்” – சுட்டுரை (ட்விட்டர்)யிலும், விழா உரையிலும் இந்தியாவின் ஒருமைப்பாட்டை வளர்ப்பதற்கும் – இந்தியாவின் அடையாளத்தை உலகெங்கும் தெரிவிப்பதற்கும் இந்தியால் மட்டுமே முடியும் என்று கூறியுள்ளார். இந்தியாவின் மற்ற மொழிகளுக்கு மதிப்புகள் உள்ள அதே வேளை இந்தியாவின் ஒவ்வொரு மனிதனிடமும் – இந்தியாவின் ஒவ்வொரு வீட்டிலும் இந்தியைக் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும், இந்தி வாரத்தில் அவரவர் தாய்மொழியைப் பேசும்போது இந்திச் சொற்களையும் கலந்து பேசுமாறு வலியுறுத்தியுள்ளார்.


அமித்சாவின் இந்தக் கருத்துகள் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு முற்றிலும் முரணானவை! இந்திய அரசமைப்புச் சட்ட உறுப்பு – 343, இந்திய ஒன்றிய அரசின் அலுவலகங்களில் பயன்படுத்தும் மொழியாக இந்தியையும், அடுத்த நிலையில் ஆங்கிலத்தையும் கூறுகிறது. இந்தியை ”தேசிய மொழி” என்று அரசமைப்புச் சட்டம் கூறவில்லை.



இந்தி மொழி பரப்பும் வாரம், சமற்கிருத மொழி பரப்பும் வாரம் என்று இந்திய அரசு கடைபிடிப்பது இனப்பாகுபாடு காட்டும் செயலாகும்! எல்லா மக்களின் சமத்துவ உரிமையோடு இந்தியாவை நடத்துவதென்றால், அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையிலுள்ள 22 மொழிகளையும் பரப்புதவற்கான “இந்திய மொழிகள் வாரம்”தான் கடைபிடிக்க வேண்டும்.



இந்திய ஒருமைப்பாட்டை வளர்ப்பதற்கு இந்தியில் பேசுங்கள் என வலியுறுத்துவது தமிழ் போன்ற தொன்மை வாய்ந்த மொழிகளை அழிக்கும் செயலாகும்! உலக அளவில் இந்தி மொழியால் மட்டும்தான் இந்தியாவின் அடையாளம் காணப்பட வேண்டுமென்று பா.ச.க. ஆட்சியாளர்கள் விரும்புவது தமிழினம் போன்ற பல்வேறு இன அடையாளங்களை மறுப்பது மட்டுமின்றி, அழிப்பதும் ஆகும்!



இந்தியாவில் பெரும்பான்மையினரால் பேசப்படும் மொழி இந்தி என்று கூறி, அதுதான் இந்தியாவின் அடையாளம் என்று அமித்சா கூறுகிறார். ஒருவேளை ஆங்கிலேயர்கள் இந்தியாவையும் சீனாவையும் ஒரே நாடாக்கியிருந்தால், அப்பொழுது சீன மொழிதான் அதிகம் பேரால் பேசக்கூடிய மொழியாக இருக்கும். பா.ச.க.வினர் சீன மொழியை தங்கள் ஆட்சி மொழியாக – அடையாள மொழியாக ஏற்றுக் கொள்வார்களா?



தனித்தனியே இருந்த பல்வேறு இன அரசுகளை அழித்து, வரலாற்றில் முதல் முதலாக இருநூறு ஆண்டுகளுக்கு முன் “இந்தியா” என்ற பெயரில் ஒரு நிர்வாகக் கட்டமைப்பை ஆங்கிலேயர்கள் உருவாக்கினார்கள். அந்த உண்மையை இந்திய அரசமைப்புச் சட்டம் எழுதியோர் தங்கள் கருத்தில் கொண்டிருந்ததால்தான், இந்தியாவை ஒரு தேசம் (Nation) என்று கூறாமல், அரசுகளின் ஒன்றியம் (Union of States) என்றார்கள். “இந்தியன்” என்றொரு தேசிய இனம் (Nationality) இருப்பதாகக் கூறாமல், “இந்தியாவின் குடிமக்கள்” (Citizen of India) என்று மட்டுமே கூறினார்கள். இந்தியை “தேசிய மொழி
(National Language) எனக் குறிப்பிடாமல், “ஒன்றிய அரசின் அலுவல் மொழி” (Official Language of the Union) என்று அரசமைப்புச் சட்டம் வரைந்தோர் அறிவித்தார்கள்.



இந்த அரசமைப்புச் சட்டத்தையே குப்புறக் கவிழ்த்துவிட்டு, அரசமைப்புச் சட்டத்தில் இந்தியை அலுவல் மொழியாக ஏற்றுக் கொண்ட நாளில் (14 செப்டம்பர் 1949), “இந்தி வாரம்” கடைபிடிக்கிறோம் என்று ஆட்சியாளர்கள் சொல்வது உண்மைக்குப் புறம்பான செய்தி!



இந்தி வாரத்தில் தாய்மொழியில் பேசுவோர், இந்தி மொழியையும் கலந்து பேசுங்கள் என்று அமித்சா அறிவுரை கூறுவதிலிருந்தே ஆட்சியாளர்களின் தொலைநோக்குத் திட்டம் தமிழ் போன்ற தேசிய இன மொழிகளை அழிப்பதுதான் என்று புரிந்து கொள்ள முடிகிறது.



இந்தியாவின் ஒற்றுமையை வலுப்படுத்த இந்தியைத் திணிக்கிறோம் என்று சொல்லும் அமித்சாக்கள், உலக வரலாற்றில் மொழி ஒடுக்குமுறையால் பிரிந்து போன நாடுகளை எண்ணிப் பார்க்க வேண்டும்.



ஒரே கட்சியின் ஆட்சியில் உலக வல்லரசாகத் திகழ்ந்த சோவியத் ஒன்றியம், பதினைந்து நாடுகளாக பிரிந்து போனதற்கு முதன்மையானக் காரணம் – மற்ற 14 மொழி பேசும் மக்களிடம் இரசிய மொழியைத் திணித்ததும், இரசிய இன மேலாதிக்கத்தைச் செயல்படுத்தியதும்தான்! தாய்மொழியைப் பேசும்போது இந்தியைக் கலந்து பேசுங்கள் என்று அமித்சா கூறுகிறார். ஈராக்கின் அதிபர் சதாம் உசேன், தன் நாட்டில் இருந்த குர்திஷ் தேசிய இன மக்கள் தங்கள் தாய்மொழியில் பேசக் கூடாது என்று கட்டளையிட்டார். அமெரிக்கப் படைகள் ஈராக்கை ஆக்கிரமித்தபோது, குர்திஷ் மக்கள் அதை வரவேற்று அமெரிக்காவுடன் இணக்கம் கண்டு தங்களுக்கான தன்னாட்சி மண்டலத்தை (Autonomus State) உருவாக்கிக் கொண்டார்கள்.



இந்திய ஆட்சியாளர்கள் இவற்றையெல்லாம் எண்ணிப் பார்த்து, இந்தி – சமற்கிருத திணிப்புகளைக் கைவிட வேண்டும். தமிழர்கள் தங்கள் இனத்திற்கும் மொழிக்கும் பேராபத்து சூழ்ந்து வருவதைப் புரிந்து கொண்டு, வரலாற்றில் தமிழினம் இல்லாமல் – தமிழ் மொழி இல்லாமல் துடைக்கப்படும் வரை காத்திருக்காமல், இந்தித் திணிப்பு எதிர்ப்பையும், தமிழ் மொழி வளர்ச்சியையும் ஒருங்கிணைத்து மக்கள் திரள் போராட்டம் நடத்த முன்வர வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.




Labels:

பிரம்மசிறீ மணி திராவிட சாத்திரி காஞ்சி சங்கராச்சாரியார் விழாவில்! பெ. மணியரசன், அறிக்கை!

Saturday, September 14, 2019

பிரம்மசிறீ மணி திராவிட சாத்திரி
காஞ்சி சங்கராச்சாரியார் விழாவில்!

தோழர் பெ. மணியரசன்,
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்


சென்னை வீனஸ் காலனியில் உள்ள ஆத்திக சமாசத்தில் காஞ்சி சங்கராச்சாரியார் விசயேந்திர சரசுவதி அவர்கள் தலைமையில் கடந்த 7, 8, 9 செப்டம்பர் 2019 நாட்களில் அத்வைத சபா மற்றும் அக்னி கோத்திரி சம்மேளனம் ஒன்று கூடல் நடந்துள்ளது. இதில் அத்வைதம், அக்கினி கோத்திரம் முதலியவற்றில் விற்பன்னர்களாக உள்ள பிராமணர்கள் கலந்து கொண்டார்கள்.
சாத்திரி வகுப்பில் இறுதித் தேர்வில் வெற்றி பெற்ற 5 பேர்க்குக் கடைசி நாளில் விசயேந்திரர் பரிசுகளும் பணமும் கொடுத்தார். அந்த ஐந்து பேர் பெயர்களும் அவர்களின் குருமார்களின் பெயர்களும் ஆங்கில “இந்து” 13.09.2019 - இதழ் பின் இணைப்பில் 6ஆம் பக்கம் வந்துள்ளது. முழுப்பக்கக் கட்டுரையின் தலைப்பு – “அறுபதாண்டுகளுக்குப் பின் ஆற்றில்மிகு ஒன்று கூடல்” (A Mighty Confluence after 60 years).
காஞ்சி சங்கராச்சாரியாரிடம் பணமும் பரிசும் பாராட்டும் பெற்ற ஐந்து பிராமணர்களில் ஒருவர் – “அத்வைத வேதாந்த இரத்தினம் சிறீ குப்பா சிறீ குரு பில்வேசு சர்மா”. இவருக்குப் பாடம் சொன்ன குரு – “பிரம்மசிறீ மணி திராவிட சாத்திரி” (Guru : Brahmasri Mani Dravida Sastry) என்று போடப்பட்டுள்ளது.
தமிழர் என்றால் பிராமணர்கள் வந்து சேர்ந்து விடுவார்கள், திராவிடர் என்றால் பிராமணர்கள் வர மாட்டார்கள் – அவர்களை ஒதுக்கி வைக்கும் திராவிடப் பெயரில்தான் இயங்க வேண்டுமென்று கூறும் திராவிடவாதிகள் இனியாவது மறு சிந்தனை செய்யுங்கள்!
பெயருக்குப் பின்னால் திராவிடப் பட்டம் போட்டுக் கொள்ளும் மரபு பிராமணர்களுக்கு மட்டுமே உண்டு. தமிழர்களுக்கு அப்படிப்பட்ட மரபு கிடையாது.
திராவிடப் பெயரில் பல பிராமண சங்கங்கள் வெளிப்படையாக செயல்பட்டுக் கொண்டுள்ளன. திராவிட பிராமண மணமக்கள் வரன் தேடும் “திராவிட பிராமின் மேட்ரிமோனி” (Dravida Brahmin Matrimony) இணையதளங்கள் செயல்படுகின்றன. அவற்றையெல்லாம் பார்த்தாவது திருந்துங்கள்!
தமிழர்களே, திராவிட மாயையில் சிக்கி உங்கள் சொந்த இனத்திற்கு இரண்டகம் செய்யாதீர்கள்!
தாய்ப்பாலைப் புட்டிப்பால் என்று கூறாதீர்கள்!

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


Labels:

இளம்பெண்சுபஸ்ரீபதாகைமரணம்:தி.மு.க–அ.தி.மு.க. தலைமைகள்பாவமன்னிப்புக் கேட்க வேண்டும்! பெ. மணியரசன் அறிக்கை!

Friday, September 13, 2019


இளம்பெண்சுபஸ்ரீபதாகைமரணம்:தி.மு.க–அ.தி.மு.க. தலைமைகள்பாவமன்னிப்புக் கேட்க வேண்டும்!

தமிழ்த்தேசியப் பேரியக்கத்
தலைவர் பெ. மணியரசன் அறிக்கை!

இளம் பெண் சுபஸ்ரீ, நேற்று (12.09.2019) பள்ளிக்கரணையில் தனியார் வைத்திருந்த பதாகை விழுந்து, அதனால் ஏற்பட்ட சரக்குந்து விபத்தில் அந்த இடத்திலேயே இறந்துபோன கொடும் செய்தி மனிதநேயமுள்ள அனைத்து நெஞ்சங்களையும் வாட்டி வதைக்கிறது. தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் சுபஸ்ரீ இறப்புக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய பெற்றோருக்கு ஆறுதலைக் கூறிக் கொள்கிறேன்.


அ.இ.அ.தி.மு.க. பிரமுகர் ஜெயகோபால் என்பவர், தன் இல்லத் திருமணத்திற்கு வரும் கட்சித் தலைவர்களை வரவேற்க அந்தப் பதாகை வைக்கப்பட்டிருந்தது. ஏற்கெனவே ஐயா டிராபிக் இராமசாமி அவர்களின் கடும் முயற்சியில் பல தடவை சென்னை உயர் நீதிமன்றமும் அதன் மதுரைக் கிளையும் சாலையோரங்களில் பதாகைகள் வைப்பதைத் தடை செய்து ஆணைகள் பிறப்பித்துள்ளன. ஆனால், அந்த ஆணைகளை முதலில் மீறுகின்ற கட்சியாக ஆளுங்கட்சி இருக்கும். அதையடுத்து, எல்லா கட்சிகளும் மீறும்!

இந்தியாவில் எங்கும் இல்லாத அளவுக்கு திரைப்படக் கவர்ச்சியை அரசியலில் புகுத்தி கற்பனை உலகத்தில் மக்களை முதன் முதலாக மயக்கிய கட்சி தி.மு.க. அதன்பிறகு, அதிலிருந்து பிரிந்த அ.இ.அ.தி.மு.க., தி.மு.க. செய்த கவர்ச்சி வேலைகளைப் பலமடங்கு பெருக்கிச் செய்தது. கட்சித் தலைவர்களை பண்டைக்காலப் பேரரசர்களோடு ஒப்பிட்டு, அவர்களுக்கு பொது நிகழ்ச்சிகளில் முடிசூட்டியும், தெய்வங்களோடு ஒப்பிட்டும் புகழ்கின்ற சீரழிவுப் பண்பாடு தமிழ்நாட்டைப் போல் இந்தியாவில் வேறெங்கும் கிடையாது!

தலைவர்களுடைய பெயரைச் சொல்லிப் பேசுவதே அவர்களை இழிவுபடுத்துவது என்ற நிலைக்கு தமிழ்நாட்டில் சனநாயக எதேச்சாதிகாரம் வளர்க்கப்பட்டுள்ளது. அந்தத் தலைவர்களுக்குக் கீழ் உள்ள பிரமுகர்கள் அந்தந்த வட்டார அரசியல் “ஜமீன்தார்களாக” வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்தக் கவர்ச்சி வேலைகள் காலப்போக்கில், எல்லாக் கட்சிகளையும் தொற்றிக் கொண்டது; எல்லாத் தரப்புத் தனி மனிதர்களையும் தொற்றிக் கொண்டது. தலைவர்களுக்குத் தன்னுடைய விசுவாசத்தைக் காட்டுவதற்காக அடுத்த நிலையில் உள்ளவர்கள் போட்டி போட்டுக் கொண்டு செய்யும் பதாகை விளம்பரங்கள், வரவேற்பு வளைவுகள் பெருகின. தனி மனிதர்கள் தங்களுடைய செல்வாக்கையும் பணத் திமிரையும் காட்டுவதற்காக குடும்ப நிகழ்ச்சிகளுக்கு பொது இடங்களில் பதாகைகள் – வளைவுகள் – சர விளக்குகள் போடுவது பெருகின.

இன்று (13.09.2019) சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், சேசசாயி ஆகியோர் இச்சிக்கல் குறித்து கடுமையாக ஆட்சியாளர்களையும், அதிகாரிகளையும் கண்டித்து திறந்த நீதிமன்றத்தில் பேசியிருக்கிறார்கள். ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் கண்டனக் குரல் எழுப்பிக் கொண்டிருக்கிறது. இந்தப் பின்னணியில் தி.மு.க. - அ.இ.அ.தி.மு.க. கட்சித் தலைவர்கள் தங்கள் கட்சி சார்பில் வரவேற்புப் பதாகைகள் வைக்கக் கூடாதென்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். சில மாதங்கள் போனால் பழைய காட்சிகள் மீளும்!

இவ்வளவு கண்டனங்கள் வந்த பிறகும்கூட, பதாகை வைத்த அ.தி.மு.க. பிரமுகர் ஜெயகோபால் இன்று மாலை 4 மணி வரை கைது செய்யப்படவில்லை. அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்கிறார்கள். ஆனால், அந்தப் பதாகையை அச்சிட்ட அச்சகத்தை மூடி முத்திரை (சீல்) வைத்துள்ளார்கள்.

இந்தக் கொடுமைகள் தொடராமல் தடுப்பதற்கு முதல் தேவை தமிழ்நாட்டு மக்களிடம் மனமாற்றம்! அரசியல் தலைவர்கள் மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக செய்யும் சர்க்கஸ் வேலைகளைக் கண்டு, அருவருக்கும் மனநிலை தமிழர்களிடம் உருவானால்தான் கட்சிகள் திருந்தும். அடுத்து, தி.மு.க. – அ.தி.மு.க. தலைமைகள் தங்களுடைய மலிவான கவர்ச்சி அரசியலுக்காக விலை மதிக்க முடியாத உயிர்களை பலி வாங்கிக் கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து, போலிப் புனைவுகள் மீது நாட்டம் செலுத்துவதைக் கைவிட வேண்டும். மிகைப் போலிப் புனைவு அரசியலை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தியதற்காக தி.மு.க.வும், அதைப் பரப்பியதற்காக அ.தி.மு.க.வும் தமிழ்நாட்டு மக்களிடம் பாவ மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.





Labels:

உயர்நீதிமன்ற – உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் வழிகாட்டுவது அரசமைப்பு சட்டமா? வர்ணாசிரம தர்மமா? பெ. மணியரசன் அறிக்கை!

Tuesday, September 3, 2019

உயர்நீதிமன்ற – உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 
நியமனத்தில் வழிகாட்டுவது
அரசமைப்பு சட்டமா? வர்ணாசிரம தர்மமா?

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
தோழர் பெ. மணியரசன் அறிக்கை!


உயர் நீதிமன்றங்களில் பணியாற்றும் திறமையான வழக்கறிஞர்களை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக தேர்வு செய்யும் பணியை “உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தேர்வுக் குழு” (கொலீஜியம்) செய்து வருகிறது. அவ்வாறு இப்போது சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞராக உள்ள கல்யாண் ஜபக் என்பவரை உச்ச நீதிமன்றத் தேர்வுக் குழு, உயர் நீதிமன்ற நீதிபதியாக தேர்வு செய்துள்ளது. இவர் இராசஸ்தானைச் சேர்ந்தவர். இவருக்குத் தமிழ்ப் பேசத் தெரியுமே தவிர, தமிழ்ப் படிக்கத் தெரியாது என்கிறார்கள்.
மாநில வாரியாக உள்ள உயர் நீதிமன்றங்களின் பரிந்துரையைப் பெற்று நீதிபதிகளைத் தேர்ந் தெடுக்கும் குழு, அந்தந்த மாநில மண்ணின் மக்களுக்கும், அவர்களில் பிற்படுத்தப்பட்ட - ஒடுக்கப் பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கும் போதிய பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும். எனவே, தமிழ் நாட்டின் சென்னை உயர் நீதிமன்றத்தின் வழியாக தமிழர்களே நீதிபதிகளாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
இராசஸ்தானைச் சேர்ந்த வழக்கறிஞர் கல்யாண் ஜபக்கை நீதிபதியாக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உச்ச நீதிமன்றத்திற்குப் பரிந்துரை செய்தது சரியல்ல. வெளியிலிருந்து வந்த அரசியல் அழுத்தம் காரணமாக இத்தேர்வு நடந்திருக்கலாம்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் கேரளத்தைச் சேர்ந்தவர்கள் கணிசமாக நீதிபதிகளாக இருக்கிறார்கள். மண்ணின் மக்களுக்கான இட ஒதுக்கீடு எதுவும் இல்லாததால் மண்ணின் மொழி தெரியாத பிற மாநிலத்தவர்கள் கணிசமான எண்ணிக்கையில் நீதிபதிகளாக இருப்பது சரியல்ல.
எனவே, வழக்கறிஞர் கல்யாண் ஜபக்கை நீதிபதியாக்கும் முடிவை உச்ச நீதிமன்றத் தேர்வுக் குழு (கொலீஜியம்) கைவிட வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். தமிழ்நாட்டைச் சேர்ந்த திறனுள்ள - ஆற்றலுள்ள தமிழர்களை நீதிபதிகளாகத் தேர்வு செய்ய வேண்டும்.
உச்ச நீதிமன்றத்தில் பிராமணர் ஆதிக்கம்
-----------------------------------------------------------------
கடந்த 10.05.2019 அன்று சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து நீதிபதி வெ. இராமசுப்பிரமணியம் அவர்கள் தேர்வு செய்யப்பட்டு, இமாச்சலப்பிரதேச தலைமை நீதிபதியாக பணியமர்த்தப்பட்டார். கடந்த 28.08.2019 அன்று, அதாவது மூன்று மாதத்தில் அவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் பணி உயர்த்தப்பட்டுள்ளார்.

ஆனால், நீதிபதி வெ. இராமசுப்பிரமணியம் அவர்களுக்கு மூத்தவராக - அவருக்கு முன்பே -காசுமீர் உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாகவும், இப்போது மணிப்பூர் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாகவும் கடந்த 2017 மார்ச் முதல் பணியாற்றி வரும், இதே சென்னை உயர் நீதிமன்றத்தைச் சேர்ந்த நீதிபதி சுதாகர் அவர்களுக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதியாகும் வாய்ப்பு வழங்கப்படவில்லை!
மூன்றே மாதத்தில் பிராமணரான நீதிபதி இராமசுப்பிரமணியம் அவர்களுக்கு வழங்கப்படும் பணி உயர்வு, பிராமணரல்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மூத்த நீதிபதி சுதாகருக்கு வழங்கப்படாததற்குக் காரணம் என்ன? உச்ச நீதிமன்றம் பின்பற்றுவது அரசமைப்புச் சட்டமா? வர்ணாசிரம தர்மமா?
உச்ச நீதிமன்றத்திலுள்ள 34 நீதிபதிகளில் நீதிபதி பானுமதி மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் அங்கு நீதிபதிகளாக இருக்கும்போது, தமிழ்நாட்டிலிருந்து மட்டும் ஒரே ஒருவர் மட்டும்தான் அங்கு உள்ளார். ஏன் நீதிபதி சுதாகரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியமர்த்தவில்லை?
நீதிபதி இராமசுப்பிரமணியம் அவர்கள் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாகத் தேர்வு செய்த அதே நாளில் (10.05.2019) இதேபோல், மும்பை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றும் குசராத்தைச் சேர்ந்த நீதிபதி அகில் அப்துல்அமீது குரேஷி என்பவரை கொலீஜியம் மத்தியப்பிரதேசத்திற்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக தேர்வு செய்தது. இந்திய அரசின் சட்ட அமைச்சகம் அதை ஏற்றுக் கொள்ள மறுத்து இப்போது வரை அந்தப் பணி அமர்த்தலை நிறுத்தி வைத்துள்ளது. இதனை எதிர்த்து, குசராத் உயர் நீதிமன்ற பார் கவுன்சில் வழக்குத் தொடர்ந்துள்ளது. மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி குரேசி, குசராத்தில் போலி மோதலில் கொல்லப்பட்ட இஷ்ரத் ஜகான் வழக்கில் அமீத்சாவை சிறையில் அடைக்க ஆணையிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றும் நீதிபதிகள் 34 பேரில் ஒரே ஒருவர்தான் ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். மக்கள் தொகையில் 25 விழுக்காட்டினராக உள்ள ஒடுக்கப்பட்ட - பழங்குடியின மக்களிலிருந்து ஒரே ஒருவர்தான், அதுவும் பத்தாண்டுகளுக்குப் பிறகு அண்மையில் அமர்த்தப்பட்டுள்ளார். 14 விழுக்காட்டினராக உள்ள முசுலிம்களில் ஒருவர் மட்டுமே இப்போது உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருக்கிறார். எண்ணிக்கையில் மிகக்குறைவாக உள்ள பிராமண வகுப்பைச் சேர்ந்த நீதிபதிகள் உச்ச நீதிமன்றத்தில் நிறைந்துள்ளனர். சென்னை உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி து. அரிபரந்தாமன் அவர்கள், இதுகுறித்து தனது ஆதங்கத்தை கருத்தாகப் பதிவு செய்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் - உயர் நீதிமன்றத்தில் ஆரிய பிராமண ஆதிக்கம் கோலோச்ச இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவது கடுமையான கண்டனத்திற்குரியது. உயர் நீதிமன்ற - உச்ச நீதிமன்ற நீதிபதி நியமனங்களில் இட ஒதுக்கீடு இல்லை என்றாலும், சமூகப் பிரிவுகளுக்குப் போதுமான பிரதிநிதித்துவம் (Adequate Representation) அளிக்க வேண்டியது சட்டக் கடமையாகும்.
இதனை எதிர்த்து அனைத்துத் தமிழ் மக்களும், அமைப்புகளும் சனநாயகக் குரல் கொடுக்க வேண்டும். இது நீதித்துறை சிக்கல் மட்டுமல்ல, சமூகநீதிச் சிக்கல் - தமிழினச் சிக்கல் என்று உணர வேண்டும்!
எனவே, வழக்கறிஞர் கல்யாண் ஜபக் என்பவரை தேர்வு செய்துள்ளதை உச்ச நீதிமன்றக் கொலீஜியம் உடனடியாக இரத்து செய்ய வேண்டுமென்றும், தமிழ்நாட்டிலிருந்து தகுதியுள்ள தமிழர்கள் பலரை நீதிபதிகளாக்க வேண்டுமென்றும், இந்திய அரசையும் உச்ச நீதிமன்றத்தையும் கேட்டுக் கொள்கிறேன்.

Labels:


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்