<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d6955529389241309188\x26blogName\x3d%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86.%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://thozharmaniyarasan.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com/\x26vt\x3d-8408640130511538487', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

அரசுப்பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வி மட்டுமே இருக்க வேண்டும்! பெ. மணியரசன் அறிக்கை!

Thursday, March 19, 2020

அரசுப்பள்ளிகளில் தமிழ் வழிக்
கல்வி மட்டுமே இருக்க வேண்டும்!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
பெ. மணியரசன் அறிக்கை!


மிழ்நாடு அரசின் வேலை வாய்ப்பில் 20 விழுக்காடு வேலைகளைத் தமிழ்வழியில் கற்றவர்களுக்கு வழங்கும் ஒதுக்கீட்டுச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து அமைச்சர் செயகுமார் சட்டப்பேரவையில் விவாதத்திற்கு வைத்துள்ளார்.
2010 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இச்சட்டம், ஒரு வேலைக்கு அடிப்படைக் கல்வித் தகுதி என்று வரையறுக்கப்பட்டுள்ள படிப்பைத் தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டு படித்திருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறது. ஆனால் ஒன்றாம் வகுப்பிலிருந்து தமிழ்வழியில் படித்திருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கவில்லை. இந்த நிபந்தனையை இப்போது முன்மொழிந்துள்ள சட்டத்திருத்தம் முன் வைக்கிறது.
எடுத்துக்காட்டாக, இளங்கலைப் பட்டத்தை அடிப்படைத் தகுதியாகக் கொண்டுள்ள வேலைக்கு இளங்கலைப் படிப்பைத் தமிழ்வழியில் படித்திருந்தால் போதும். பத்தாம் வகுப்பு, பதினொன்று, பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வுகளைத் தமிழ்வழியில் எழுதியிருக்கத் தேவையில்லை. அவற்றை ஆங்கில வழியிலேயே படித்திருக்கலாம்.
இந்தத் துவாரத்தைப் பயன்படுத்திக்கொண்டு ஒன்றாம் வகுப்பிலிருந்து இளங்கலை உட்பட ஆங்கில வழியிலேயே படித்தவர்கள், வேலைவாய்ப்பிற்காகத் திறந்தவெளி பல்கலைக் கழகமொன்றில், ஏதாவதொரு இளங்கலைப் படிப்பைத் தனியே படித்து பட்டம் வாங்கி வேலையில் சேர்ந்து விடுகிறார்கள். அதிகாரிகள் சிலர் அதற்குத் துணை போயிருக்கிறார்கள்.
இதைத் தடுக்கும் வகையில் இளங்கலைத் தகுதி உள்ள வேலைக்கு, இளங்கலை மட்டுமின்றி 10-ஆம் வகுப்பு, 11, 12 ஆம் வகுப்புகளிலும் தமிழ்வழியில் படித்திருக்க வேண்டும் என்று புதிய திருத்தம் நிபந்தனை போடுகிறது. 12 ஆம் வகுப்புத் தேர்ச்சியை அடிப்படையாக கொண்ட வேலைகளுக்கு 10 ஆம் வகுப்புத் தேர்வையும் தமிழ் வழியில் எழுதியிருக்க வேண்டும் என்று இப்போது புதிய திருத்தத்தில் நிபந்தனை போட்டுள்ளார்கள்.
இந்தப் புதிய சட்டத்திருத்தம் வரவேற்கத்தக்கது! ஆனால் தமிழ்நாடு அரசு தனது அதிகாரத்தின் கீழ் உள்ள அரசுப் பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை ஆங்கிலப் பயிற்று மொழிப் பிரிவுகளை கடந்த 2013லிருந்து அனுமதித்து வருகிறது. அடுத்து தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கு தமிழ் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் தேர்வெழுதலாம், ஆங்கிலத்தில் எழுதலாம், வேலையில் சேர்ந்த பின் இரண்டாண்டுகளுக்குள் தமிழ் கற்றுக் கொண்டால் போதும் என்று தமிழ்நாடு அரசுப்பணித் தேர்வாணையத்தில்(TNPSC) விதி வைத்துள்ளார்கள்.
இந்த இரண்டையும் நீக்கி அரசுப்பணிகளில் தமிழ்ப் பயிற்று மொழி வகுப்புகள் மட்டுமே இருக்கும் என்றும் தமிழ்நாடு அரசுப் பணித் தேர்வெழுதுவோர் தமிழை ஒரு மொழிப்பாடமாகக் கட்டாயம் மேல்நிலைப் பள்ளி, கல்லூரி ஆகியவற்றில் கற்றிருக்க நிபந்தனை போட்டும் செயல்படுத்தினால் மட்டுமே தமிழ்வழிக் கல்வி படிப்போர் எண்ணிக்கை அதிகரிக்கும்.
தமிழ்நாடு அரசு இதற்கான விதிமுறைகளை உருவாக்க வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam




Labels:

மறுபக்கம் மேனாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மாநிலங்களவை உறுப்பினரான மர்மம்! பெ. மணியரசன்


மறுபக்கம்
மேனாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்
மாநிலங்களவை உறுப்பினரான மர்மம்!


ஐயா பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்து, கடந்த 17.11.2019 அன்று பணி ஓய்வு பெற்றவர் ரஞ்சன் கோகாய். அவர் இப்பொழுது நாடாளுமன்ற மாநிலங்களவைக்கான 12 நியமன உறுப்பினர்களில் ஒருவராக மோடி ஆட்சியால் அமர்த்தப்பட்டுள்ளார்.

மாநிலங்களவை உறுப்பினராகிட மகிழ்வுடன் ஒப்புதல் தெரிவித்துள்ளார் கோகோய்!

மோகன் பகவத் – மோடி ஆட்சி ரஞ்சன் கோகோய்க்கு வழங்கியுள்ள பரிசளிப்பாக இந்த நியமனத்தைப் புரிந்து கொள்ளலாம். இதன் வழியே, தங்களுக்கு ஆதரவாக – தங்கள் ஆட்சிக்கு ஆதரவாக தீர்ப்புகளை வழங்கினால், அவருக்கு “வெகுமானம்” உண்டு என இப்போதிருக்கும் நீதிபதிகளுக்கும் “ஆசை”காட்டியுள்ளது மோடி ஆட்சி!

பாபர் மசூதி இருந்த இடம் அப்பள்ளி வாசலை இடித்தவர்களுக்கே சொந்தம் என்று தீர்ப்பளித்தது, சம்மு காசுமீருக்கு அரசமைப்புச் சட்டம் வழங்கியிருந்த சிறப்புரிமைப் பரிவுகளான 370 மற்றும் 35A ஆகியவற்றை நீக்கியதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் போடப்பட்டபோது அவற்றை உடனடியாக விசாரிக்காமல் காலவரம்பற்று தள்ளி வைத்து உதவியது, இரபேல் விமான ஊழல் அம்பலமான போது அதுகுறித்து விசாரிக்கத் தேவையில்லை என ஆணையிட்டது முதலிய “அரசமைப்புச் சட்டப் பணிகள்” பலவற்றைச் செய்தவர் ரஞ்சன்.

உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் இந்திய அரசமைப்புச் சட்டப்படி இந்திய அரசின் நிர்வாகத்திற்கு உட்பட்டவர்கள் அல்லர். அவர்கள் மீது இந்திய ஆட்சி நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியாது. இந்திய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றித்தான் நடவடிக்கை எடுக்க முடியும்.

உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்றமும் இந்திய அரசமைப்புச் சட்டத்தைக் காப்பாற்றும் தனிப் பொறுப்பும் தன்னாட்சியும் கொண்டவை; உயர் மதிப்புமிக்கவை!

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்புகளைக் காப்பாற்றும் அதிகாரம் படைத்தவை உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்றமும். இப்பணியில், இந்திய அரசு நிர்வாகத்துடன் – தேவைப்பட்டால் மோத வேண்டிய கடமையும் – இந்திய அரசைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பும் இவ்வரு நீதிமன்றங்களுக்கும் உண்டு.

ஆனால், ரஞ்சன் கோகோய் புது விளக்கம் தருகிறார். நேற்று (17.03.2020) அசாம் தலைநகர் குவாகாத்தியில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “நாடாளுமன்றமும் நீதித்துறையும் ஒரு புள்ளியில் இணைய வேண்டிய தேவையுள்ளது” எனக் கூறியுள்ளார்.

ஆனால் இதே நீதிபதி ரஞ்சன் கோகோய், கடந்த 12.01.2018 அன்று புதுதில்லியில் சக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் செலமேசுவர், மதன் பி. லோகுர், குரியன் சோசப் ஆகியோருடன் இணைந்து, அப்போதைய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராகவும், இந்திய அரசுக்கு எதிராகவும் செய்தியாளர்களிடம் செவ்வி கொடுக்கும்போது கூறியதை இப்போது நினைவு கூரலாம்.

“உச்ச நீதிமன்ற அதிகாரத்தை இந்திய அரசு ஆக்கிரமிப்பதை உணர்கிறோம். உணர்ச்சிக் கொந்தளிப்புள்ள அரசியல் வழக்குகளை விசாரிக்க உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிகள், தங்களின் விருப்பத்திற்குரிய நீதிபதிகளைக் கொண்ட அமர்வுகளை உருவாக்குகின்றனர். நாங்கள் வெளிப்படையாக இக்கருத்தை செய்தியாளர்களிடம் சொல்வதற்குக் காரணம், இந்தத் தேசத்திற்கு நாங்கள் செலுத்த வேண்டிய நன்றிக் கடன் ஆகும்”.

மேற்கண்ட உச்ச நீதிமன்ற நான்கு நீதிபதிகளும் முதல் முதலாக செய்தியாளர்களைச் சந்தித்து, தங்களின் விமர்சனங்களை மக்களுடன் பகிர்ந்து கொண்ட நேரம் மிக முகாமையானது.

குசராத்தில் உள்துறை அமைச்சராக இருந்த அமித்சா, சொராபுதீன் இணையரைப் போலி மோதலைச் சித்தரித்துக் கொலை செய்யக் காவல்துறையினரைத் தூண்டினார் என்ற வழக்கில் கைதாகி சிறை சென்று, அவர் பிணையில் வெளியில் இருந்த காலம்! அந்த வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி லோயா, “சாலை விபத்தில்” கொல்லப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் குறிப்பிட்ட அமர்வில் விசாரிக்கப்பட்ட காலத்தில்தான் நான்கு நீதிபதிகளும் செய்தியாளர்களைச் சந்தித்தார்கள்.

மோகன் பகவத் – மோடி பாசிச ஆட்சியில் அரசு நிர்வாகத்தின் ஒரு பகுதியாக உச்ச நீதிமன்றம் மாற்றப்பட்டுக் கொண்டிருக்கும் காலம் இது. இக்காலத்தில் ரஞ்சன் கோகோய் – மாநிலங்களவை உறுப்பினராக அமர்த்தப்படுகிறார். அவரும் அதை எதிர்ப்பார்த்திருந்தது போல் மகிழ்வுடன் ஏற்றுக் கொள்கிறார்.

தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஒரு கருத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய அதிகாரம் உச்ச நீதிமன்றத்திற்கும், உயர் நீதிமன்றத்திற்கும் இருக்கிறது. இந்நீதிமன்றங்களின் அதிகாரம் இந்திய அரசு நிர்வாகத்துக்குக் கட்டுப்படாத தன்னாட்சி அதிகாரம். எனவே, உயர் நீதிமன்ற – உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பணி ஓய்வுக்குப் பின் அரசு மற்றும் தனியார் பதவி எதையும் ஏற்கத் தடை விதித்து, சட்டம் இயற்ற வேண்டும். அதற்கு ஈடாக, இந்நீதிமன்றங்களின் நீதிபதிகளுக்குக் கூடுதலான சம்பளமும், ஓய்வுக் காலப் பலன்களும் அளிக்கலாம்!

பணியில் இருந்தபோது, 2019 மார்ச்சு மாதம் நடந்த ஒரு வழக்கில், “பணி ஓய்வுக்குப் பிறகு நீதிபதிகள் பதவிகள் பெறுவது நீதித்துறை சுதந்திரத்தின் மீதான வடு (Scar)” எனப் பேசியவரும் இதே ரஞ்சன் கோகாய்தான்! இப்போது, அவரே நீதித்துறை தன்னாட்சியின் மீது வடுவை ஏற்படுத்தியிருக்கிறார்.

ரஞ்சன் கோகோய் – அவருக்குக் கீழ் பணியாற்றிய பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற புகார் மனு புதையுண்டு போனதும் இந்நேரத்தில் நினைவுக்கு வருகிறது!

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam




Labels:

பேராசிரியர் அன்பழகனார் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் பெ. மணியரசன் இரங்கல்!

Saturday, March 7, 2020

பேராசிரியர் அன்பழகனார் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
ஐயா பெ. மணியரசன் இரங்கல்!







திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகனார் அவர்கள் கடந்த நள்ளிரவில் (06.03.2020) காலமானச் செய்தி துயரமளிக்கிறது. தமிழ்த்தேசியப் பேரியகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பேராசிரியர் அன்பழகனார் சிறந்த தமிழ்ப்பற்றாளர்; தமிழ்ப்பற்றின் காரணமாகத் தமது பெயரைத் தூய தனித் தமிழில் அன்பழகன் என்று மாற்றிக்கொண்டார்.
ஆரிய-சமற்கிருத ஆதிக்க எதிர்ப்பில் ஊற்றம் பெற்றவர். ஆரிய ஆன்மிக நூலான பகவத் கீதையைத் தமிழ்நாட்டில் ஆரியத்துவவாதிகள் பரப்பிய போது அதற்கு மாற்றாகத் திருக்குறளை முன்னிறுத்தினார். தமிழறிஞர்கள் வழிநின்று கடைசிவரை திருக்குறள் மேன்மையைப் பேசியவர் அன்பழகனார்.
தமிழை அழிக்கும் நோக்கத்தோடு தமிழில் சமற்கிருதத்தைத் கலந்து மணிப்பிரவாள நடை என்று ஆரியத்துவவாதிகளும் அவர்களின் அடிவருடித் தமிழர்களும் தமிழைச் சிதைத்த போது தனித்தமிழியக்கத்தை மறைமலை அடிகளார் 1916-இல் தொடங்கினார். சமற்கிருதத்தையும் பிறமொழிச் சொற்களையும் நீக்கி தனித்தமிழில் பேச வேண்டும் எழுத வேண்டும், பிராமணப் புரோகிதர்களையும் சமற்கிருதத்தையும் நீக்கி தமிழர்கள் தங்கள் குடும்பச் சடங்குகளையும் கோயில் சடங்குகளையும் நடத்த வேண்டும் என்பது தனித்தமிழ் இயக்கத்தின் நோக்கம்.
1921- ஆம் ஆண்டு பேராசிரியர் க.நமச்சிவாயர் அழைப்பில் பச்சையப்பன் கல்லூரியில் நடந்த தமிழறிஞர்கள் – தமிழுணர்வாளர்கள் கூட்டத்திற்கு மறைமலை அடிகளார் தலைமை தாங்கினார். ஆரியவாதிகள் தொகுத்த 60 ஆண்டுகளைக் கைவிட்டு, திருவள்ளுவர் ஆண்டைக் கடைபிடிக்கவேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழர் திருநாளாகப் பொங்கலைக் கடைபிடிக்க வேண்டும் என்றும்- தை-1 ஆம் நாள் தமிழராண்டுத் தொடக்க நாள் என்றும் அக்கூட்டத்தில் தமிழறிஞர்கள் முடிவு செய்தார்கள்.
இப்பின்னணியில் தான் தமிழ் நாட்டில் படித்த இளையோரிடம் – தமிழின எழுச்சி ஏற்பட்டது. இந்திய விடுதலைப் போராட்டத்தில் இந்தித்திணிப்பை வலியுறுத்திவந்தது காங்கிரஸ் கட்சி. 1920களில் இருந்தே காங்கிரசின் இந்தித் திணிப்பை தமிழறிஞர்கள் எதிர்த்து வந்தனர். 1930களில் இந்தித் திணிப்பும் அதனால் இந்தி எதிர்ப்பும் தீவிரமடைந்தன.
இப்பின்னணியில்தான் தமிழ்நாட்டில் படித்த இளையோர் – தமிழின எழுச்சிக் கருத்துகளுடன் அரசியல் இயக்கங்களில் பங்கேற்றனர். அந்தத் தலைமுறையில் கடைசித் தலைவராக வாழ்ந்து வந்தவர் பேராசிரியர் அன்பழகனார்.
இன்றைக்குப் பழையக் காலத்தைவிடக் கூடுதலாக இந்தித் திணிப்பும் சமற்கிருதத் திணிப்பும், ஆரிய ஆதிக்கமும் அதிகாரவெறிகொண்டு தாக்குகின்றன.
பேராசிரியர் அன்பழகனார்க்கு இரங்கல் தெரிவிக்கும் அதே வேளையில் – அவரைப் போன்றவர்களுக்கு இன உணர்ச்சி, தமிழுணர்ச்சி ஊட்டிய, தமிழறிஞர்களின் இலட்சியமான தமிழ்த்தேசிய இன உணர்ச்சியை வளர்த்துக் கொள்ளுமாறு இளந்தலைமுறைத் தமிழர்களை கேட்டுக்கொள்கிறேன்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Labels:

போர்க்களப் பேராசிரியர் அறிவரசனார்க்கு புகழ் வணக்கம்! பெ. மணியரசன் இரங்கல்!


போர்க்களப் பேராசிரியர் அறிவரசனார்க்கு புகழ் வணக்கம்!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
ஐயா பெ. மணியரசன் இரங்கல்!






பேராசிரியர் அறிவரசன் ஐயா அவர்கள் நேற்று (04.03.2020) கடையத்தில் அவர்களது இல்லத்தில் உடல்நலமின்றி காலமாகினார். என்ற செய்தி அதிர்ச்சியும் துயரமும் அளிக்கிறது. உடல் நலமின்றி படுக்கையில் இருக்கிறார்கள் என்றசெய்தி தெரிந்து, போய்ப் பார்க்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் இந்தத்துயரச் செய்தி வந்தது.
உடல் நலமின்றி இருந்த நிலையிலும், தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கைத் தமிழ் மந்திரங்கள் ஓதி நடத்த வேண்டும் என்று எடுத்த முயற்சிக்காக என்னைத் தொலைபேசியில் அழைத்துப் பாராட்டினார்.
தமிழீழ விடுதலை ஆதரவுப் போராட்டக்களங்களில் சந்தித்துக் கொண்ட போது தான் ஐயா அறிவரசன் அவர்களுடன் எனக்கு நெருக்கமான பழக்கமும் நட்பும் ஏற்பட்டது. நேர்மையான தமிழறிஞர். தமது எழுது கோலைத் தலைவர்களுக்கு முதுகு சொறியும் குச்சியாக மாற்றாதவர். நீண்ட காலம் திராவிடச் சிந்தனையில் ஊற்றம் பெற்றவர் என்றாலும் பிற்காலத்தில் சிறந்த தமிழ்த்தேசியராகத் தம்மை மறுவார்ப்பு செய்து கொண்டவர்!
எது உண்மையோ, எது தமிழின உரிமை மீட்பிற்குத் தேவையோ அதன் பக்கம் நிற்க வேண்டும் என்று செயல்பட்ட செம்மாந்த நெஞ்சினர் அறிவரசனார்.
தமிழீழத்தில் போர் நிறுத்தம் செயல்பட்ட 2006 - 2008 காலத்தில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் அழைப்பின் பேரில் அங்கு சென்று இரண்டாண்டுகள் தமிழாசிரியர்களுக்குப் பாடம் நடத்திப் பயிற்சி தந்தவர். அவரிடம் தமிழ் கற்ற மாணவிகளில் தமிழீழத் தலைவர் பிரபாகரன் மனைவி மதிவதனி அவர்களும் ஒருவர்.
2009- க்குப் பிறகும் பிரான்சு உள்ளிட்ட மேற்கு நாடுகளுக்குச் சென்று தமிழீழப் பிள்ளைகளுக்கும் ஆசிரியர்களுக்கும் தமிழ் கற்பித்தார். தமிழ்ப் பாடநூல்கள் யாத்துத் தந்தார்.
தமிழ்நாட்டில் நடந்த தமிழின, தமிழ் மொழி உரிமை மீட்புப் போராட்டங்களில் தொடர்ந்து கலந்து கொண்டார். தம் குடும்பத்தைத் தமிழ்த்தேசியக் குடும்பமாக உருவாக்கியவர் ஐயா அறிவரசனார்.
தமிழின இளையோர் பின்பற்றத்தக்க இலட்சிய உறுதி, போர்க்குணம், பண்பாடு முதலியவற்றை ஒருங்கே பெற்றிருந்த பேராசிரியர் ஐயா அறிவரசனார் அவர்களுக்குத் தலைதாழ்த்தி புகழ் வணக்கம் செலுத்திக் கொள்கிறேன்; இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Labels:

தமிழ்நாட்டு இந்துக் கோயில்களின் உரிமையை இந்திய அரசு பறிக்கக் கூடாது! பெ. மணியரசன் அறிக்கை!

Wednesday, March 4, 2020

தமிழ்நாட்டு இந்துக் கோயில்களின்
உரிமையை இந்திய அரசு பறிக்கக் கூடாது!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
பெ. மணியரசன் அறிக்கை!


நாடளுமன்ற மக்களவையில் உத்தரப்பிரதேசத்தின் பா.ச.க உறுப்பினர் ஒருவர் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களை, நடுவண் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் குறிப்பாக இந்திய அரசின் தொல்லியல் துறையின் கீழ் கொண்டுவருவதற்கான சட்டத் திருத்தத்தை இயற்ற தனி உறுப்பினர் சட்டமுன்வடிவை முன் மொழிந்து பேசியுள்ளார்.
அந்தத் திருத்தத்தின் மீது பேசிய நடுவண் கலை மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல், அத்திருத்தத்தை ஆதரித்து பேசியுள்ளார். அப்போது தமிழ்நாட்டில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் தொன்மை வாய்ந்த 7,000 கோயில்கள் இருக்கின்றன. இவை எல்லாம் தமிழ்நாடு அரசு அதிகாரத்தில் இருந்து எடுக்கப்பட்டு இந்திய அரசின் தொல்லியல் துறையில் சேர்க்கப்படவேண்டியவை என்று கோடிட்டு காட்டியிருக்கிறார்.
தமிழ்நாட்டு சிவநெறிக் கோயில்கள், திருமால்நெறிக் கோயில்கள், கிராமக் கோயில்கள், குலத்தெய்வங்கள் ஆகியவற்றிற்கும் வடநாட்டு இந்து ஆன்மிகத்திற்கும் இடையே பெரிய வேறுபாடு உள்ளது. இந்து மதத்தில் பல்வேறு உட்சமய வேறுபாடுகள், பல்வேறு வழிபாடுகள், பல்வேறு தெய்வங்கள் இருக்கின்றன. இந்து மதத்திற்கு என்று ஒற்றைத் தலைமைத் தெய்வமில்லை, ஒற்றைப் புனித நூல் இல்லை.
எனவே வடநாட்டு இந்து மதத்திற்கும், தமிழ்நாட்டு இந்து மதத்திற்கும் இடையே வேறுபாடுகள் இருக்கின்றன. மாநிலத்திற்கு மாநிலம் வழிபாட்டுத் தெய்வங்கள் மற்றும் வழிபாட்டு முறைகள் மாறுபடுகின்றன.
அடுத்து, தமிழ்நாட்டுக் கோயில்கள் தமிழர் கலை, பண்பாடு, தமிழினம் சார்ந்தவை. பிற மாநிலங்களின் கோயில் கலைப் பண்பாட்டில் இருந்து வேறுபட்டவை.
தமிழ்நாட்டுக் கோயில்களின் உரிமையை மாநில அரசிடமிருந்து பறித்து இந்திய அரசுக்குக் கொண்டு போனால், தமிழ் இந்து ஆன்மிகம், தமிழர் கலை, பண்பாடு, வரலாறு, தொன்மை அனைத்தும் அழிக்கப்பட்டு இந்தி, சமற்கிருத, ஆரியமயமாக்கப்படும்.
தமிழ்நாட்டு இந்துக் கோயில்களை தனது அதிகாரத்தின் கீழ் கொண்டு செல்லும் திட்டத்தை இந்திய அரசு கைவிட வேண்டும். இந்திய அரசின் இம்முயற்சியைக் கைவிடச் செய்திட தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரு அவைகளிலும் கடுமையாக எதிர்க்க வேண்டும்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தனிகவனம் செலுத்தி, தமிழ்நாட்டு இந்துக் கோயில்களை இந்திய அரசின் அதிகாரத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Labels:


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்