<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://draft.blogger.com/navbar.g?targetBlogID\x3d6955529389241309188\x26blogName\x3d%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86.%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://thozharmaniyarasan.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com/\x26vt\x3d-8408640130511538487', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகப் போராட்டங்கள் நடக்கின்றன! ஏன்? தோழர் பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை!

Friday, June 29, 2018

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான்
அதிகப் போராட்டங்கள் நடக்கின்றன! ஏன்?

முதலமைச்சர் கூற்றுக்கு எதிர்வினை!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
தோழர் பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை!

சட்டப்பேரவையில் 27.06.2018 அன்று காவல்துறை மானியக் கோரிக்கையில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, “இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகப் போராட்டங்கள் நடக்கின்றன என்று நடுவண் அரசின் உள்துறை கூறுகிறது” என்றார். ஒட்டுமொத்த இந்தியாவில் அரசியல் கட்சிகள், அமைப்புகள், தொழிற் சங்கங்கள், விவசாய சங்கங்கள் மற்றும் பல வகை அமைப்புகள் நடத்தும் போராட்டங்களில் 15 விழுக்காடு போராட்டம் தமிழ்நாட்டில் நடக்கிறது. கடந்த 2017 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 31,269 போராட்டங்கள் நடந்துள்ளன என்று நடுவண் உள்துறை கூறியுள்ளது என்றார்.
தமிழ்நாட்டில் மட்டும் ஏன் இவ்வளவு போராட்டங்கள்?
மற்ற மாநிலங்கள் ஏற்க மறுத்த ஸ்டெர்லைட் ஆலையைத் தமிழ்நாட்டில்தான் இந்திய அரசு திணித்தது. மற்ற மாநிலங்கள் மறுத்த கூடங்குளம் அணு உலைகள் தமிழ்நாட்டில்தான் கட்டப்பட்டன. மற்ற மாநிலங்கள் மறுத்த நியூட்ரினோ அணுப்பிளப்பு ஆய்வகம் தமிழ் நாட்டில் பொட்டிபுரத்தில் திணிக்கப்படுகிறது.
இந்தியாவின் கிழக்கு, தெற்கு, மேற்குப் பக்கங்களில் கடல் இருக்கிறது. இக்கடலோரங்களில் பல மாநிலங்கள் இருக்கின்றன. அவற்றுக்கு அடுத்தாற்போல், பல நாடுகள் இருக்கின்றன. குறிப்பாக, “பகை நாடு” என்று சொல்லப்படும் பாக்கித்தான், மராட்டிய, குசராத் மாநிலங்களுக்கு அருகில் இருக்கிறது. அங்கெல்லாம் எல்லை தாண்டி மீனவர்கள் மீன்பிடிக்கப் போகிறார்கள்; எப்போதாவது கைது செய்யப்படகிறார்கள். பின்னர் விடுவிக்கப்படுகிறார்கள். ஆனால் அடுத்த நாட்டு மீனவர்களை சுட்டுக் கொல்வதில்லை! தமிழ்நாட்டு மீனவரை எல்லை தாண்டி வந்து தமிழ்நாட்டுக் கடலில் சுண்டைக்காய் சிங்கள நாடு சுட்டுக் கொல்கிறதே, யார் கொடுத்த துணிச்சல்? இதுவரை 600க்கும் மேற்பட்ட மீனவர்களைச் சுட்டுக் கொன்று விட்டதே இலங்கை கடற்படை, யாருடைய ஒத்துழைப்புடன்? இந்தியாவின் ஒத்துழைப்புடன்!
இவற்றையெல்லாம் எதிர்த்து நாங்கள் போராடு கிறோம்! வாழ்வுரிமையைத் தக்கவைக்கப் போராட வேண்டியுள்ளது தமிழர்களுக்கு!
கொச்சித் துறைமுகத்திலிருந்து தமிழ்நாட்டு வழி யாகப் பெங்களூர் செல்லும் கெய்ல் எரிவளிக் குழாய் கேரளத்தில் சாலை ஓரங்களில் - தண்டவாளங்களின் ஓரங்களில் புதைக்கப்படுகிறது; தமிழ்நாட்டில் மட்டும் விளை நிலங்களின் நெஞ்சைப் பிளந்து புதைக்கப்படு கின்றன! எனவே கேரளத்தில் இதை எதிர்த்துப் போராட்டம் தேவைப்படவில்லை. தமிழ்நாட்டில் தேவைப்படுகிறது!
காவிரி விளை நிலங்களை ஓ.என்.ஜி.சி. ஓநாய்கள் கடித்து குதறி மண்ணை வேதி மண்டலமாக்கி, நிலத்தடி நீரை நஞ்சாக்கிவிட்டன. விளை நிலங்களைப் பாது காக்கவும், குடிநீரை மீட்கவும் தமிழர்கள் போராட வேண்டியிருக்கிறது.
கடலூரிலிருந்து இராமநாதபுரம் வரை விளை நிலங்கள், வீடுகள் நிறைந்த ஊர்கள், ஏரிகள், குளங்கள் உள்ள பகுதிகள் அனைத்தையும் அழித்து பெட்ரோலியம், எரிவளி உள்ளிட்ட ஐட்ரோகார்பன், நிலக்கரி முதலிய வற்றை எடுத்துக் கொள்ளை வணிகம் நடத்த பன்னாட்டு மற்றும் வடநாட்டு நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கி யுள்ளது இந்திய அரசு!
எத்தனை இலட்சம் மக்கள் இடம் பெயர வேண்டியிருக்கும்? அவர்கள் எங்கே போவார்கள்? காலம் காலமாகக் குடும்பத்தோடு குடும்பமாகக் கூடி வாழ்ந்த நிலங்களிலிருந்து அவர்களைப் பிரிப்பது எவ்வளவு பெரிய கொலைபாதகச் செயல்? அந்த மக்கள் கொதித்து எழமாட்டார்களா? இப்படிப்பட்ட கொலைபாதகச் செயல் வேறு எந்த மாநிலத்தில் நடக்கிறது? ஒரிசா, சத்தீசுக்கர் பழங்குடி மக்களின் தாயகங்களை அழித்து வேதாந்தாவும் ஜிண்டாலும் வேட்டையாட இந்தியா அனுமதித்தது. அந்த மக்கள் தாய் மண் காக்க ஆயுதமேந்திப் போராடுகிறார்கள்! நாங்கள் அறப் போராட்டம் நடத்துகிறோம்!
இந்தியாவிலிருந்து பக்கத்து நாடுகளான பாக்கித்தான், வங்காளதேசம் ஆகியவற்றிற்கு ஆறுகள் ஓடுகின்றன. அவற்றிற்கான ஓப்பந்தங்கள் செயல்படுகின்றன. இந்தியாவுக்குள் நர்மதை, கோதாவரி, கிருஷ்ணா, மகாநதி போன்ற ஆறுகள் பல மாநிலங்களுக்கிடையே ஓடு கின்றன. அவற்றிற்கான தீர்ப்புகள் செயல்படுகின்றன. ஆனால் எத்தனை தீர்ப்புகள் வந்தாலும் காவிரி மட்டும் கர்நாடகாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வராது என்றால் நாங்கள் போராடாமல் என்ன செய்வது?
போராடாமல் அகதிகளாக எங்கள் மண்ணை விட்டு நாங்கள் வெளியேற வேண்டும் என்று இந்தியாவின் உள்துறை எதிர்ப்பார்க்கிறதா? அந்த உள்துறையின் ஒலிப் பெருக்கியாகப் பேசும் எடப்பாடி நாங்கள் காவிரிப் படுகையைவிட்டு அமைதியாக வெளியேற வேண்டும் என்கிறாரா?
பாலாற்றில், பவானியில் மேலும் அணைகள் கட்டி ஆந்திரமும் கேரளமும் தமிழ்நாட்டிற்குரிய தண்ணீரைத் தடுக்கின்றனவே! அந்தத் திருட்டைக் தடுக்கும் ஆற்றல் தமிழ்நாட்டுக் கங்காணி ஆட்சிகளுக்கு இருந்ததா?
தமிழ்நாட்டின் கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தது இந்தியா! அதைத் தடுக்கக் கூடிய ஆற்றலோ, அக்கறையோ, கொடுத்ததை மீட்கக் கூடிய ஆற்றலோ அக்கறையோ தமிழ்நாட்டுக் கங்காணி ஆட்சிகளுக்கு இருந்ததா? இல்லை! எனவே தமிழ் மக்கள் தான் போராட வேண்டியிருக்கிறது!
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் எம் தமிழ் மக்கள் போராடித்தானே திருவண்ணாமலை வேடியப்பன் மலை - கவுத்தி மலைகளை ஜிண்டால் விழுங்காமல் காத்தார்கள்! சேலம் சேர்வராயன் மலையைக் காத்தார்கள்!
பணைய கைதிகளாகத் தமிழர்கள்..
----------------------------------------------------------
இந்திய அரசின் உத்தி வகுப்பாளர்கள் தீர்மானமாக ஒரு முடிவுக்கு வந்து விட்டார்கள். இந்திய ஏகாதிபத்திய அதிகாரம் எவ்வளவு இருந்தாலும் தமிழ்நாட்டில் பா.ச.க.வோ அல்லது காங்கிரசோ வெகுமக்கள் கட்சியாக வளர முடியாது. இந்திய ஏகாதிபத்தியத்தின் தமிழ்நாட்டுக் காப்பு அரண்களாக விளங்கி வரும் தி.மு.க. - அ.தி.மு.க. கழங்களுக்கு வெளியே மூன்றாவது ஆற்றலாக தமிழர்கள் தங்கள் வாழ்வுரிமையை காக்கக் கட்சிச் சார்பின்றி போராடுகிறார்கள். இது புதிய போக்காக வளர்ந்து விட்டது. ஆட்சியாளர்கள் ஏவும் எந்த அடக்குமுறைக்கும் அஞ்சி மக்கள் பின் வாங்குவதாக இல்லை!

இளைஞர்கள், ஆண்களும், பெண்களும், தற்சார் போடு, தமிழின உணர்வோடு தங்கள் வாழ்வுரிமைக் காகவும், தங்கள் தாயகம் மற்றும் பண்பாடு காக்கவும் கருத்துப் போர் நடத்துவதுடன் களப்போராட்டகளிலும் கை கோக்கிறார்கள்!
எனவே தமிழ் மக்கள் மீது தமிழ்நாட்டுக் கங்காணி அரசின் காவல்துறையை ஏவி விட வேண்டும்; அதுவும் போதாது என்றால் இராணுவத்தை அனுப்பி, தாக்குதல் தொடுக்க வேண்டும்; மக்களைப் பணையக் கைதிகள் போல் வைத்துக் கொண்டு, பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டையை விரிவுபடுத்த வேண்டும் என்பதுதான் இந்திய அரசின் திட்டம்!
இந்நடவடிக்கை மூலம் கணிசமான தமிழர்கள் தங்கள் ஊர்களை விட்டு வெளியேறி விடுவார்கள், வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களை குறிப்பாக வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களைக் கொண்டு வந்து தமிழ்நாட்டில் குவித்துத் தமிழர் தாயகத்தைக் கலப்பின மாநிலமாக மாற்றுவது என்பதுதான் இந்திய அரசின் திட்டம்!
புதிய அடக்குமுறை உத்தி
---------------------------------------------
ஒரு சிக்கலில் மக்கள் தற்காப்புக் குரல் எழுப்பினால், அவர்களை கூட விடாமல் தொடக்கத்திலேயே தடுப்பது, தாக்குவது, தளைப்படுத்துவது என்ற புதிய உத்தியை வகுத்து, தமிழ்நாடு அரசு செயல்படுகிறது. வெளியி லிருந்து ஆதரவு தெரிவிக்க வருவோரைத் தடுப்பது, தளைப்படுத்துவது என்ற புதிய உத்திகளை தமிழ்நாடு அரசு எட்டுவழிச் சாலைப் போராட்டத்தில் கடை பிடிக்கிறது.

சக தமிழ் மக்களின் வாழ்வுரிமைப் போராட்டங்களை ஆதரிக்க வெளியூரிலிருந்து வருவோரை “வெளியார்” என்று முத்திரை குத்தி, அயலாராகக் காட்டுகிறது தமிழ்நாடு அரசு! எட்டு வழிச் சாலை நிலப்பறிப்புக்கு உள்ளானவருக்கு ஆதரவாக நிலம் பறிக்கப்படாத உள்ளூர்க்காரர் வந்தால்கூட, அவரையும் “அயலார்” என்று கைது செய்கிறது எடப்பாடி அரசு!
ஆனால், ஜிண்டால் - வேதாந்தா அகர்வால் - அதானி - அம்பானி போன்ற அயல் இன வேட்டையாடிகளை மண்ணின் மக்கள் போல் பாவித்து, பாதுகாப்பு கொடுக் கிறது; உண்மையான மண்ணின் மக்களைத் தாக்குகிறது.
எதிர்கொள்வது எப்படி? 
--------------------------------------
நம்முடைய பேராயுதம் மக்கள் தான்! மக்கள் ஆற்றலுக்கு முன் - மக்களின் அறச்சீற்றத்துக்கு முன் மற்றெல்லா ஆயுதங்களும் முனை முறிந்து போகும்! ஆயுதப் போராட்டம் வேண்டாம். மக்கள் அறப் போராட்டம் வெல்லும்!

தமிழர் வரலாறு காணாத அளவிற்கு 50 ஆயிரம் மக்கள் தூத்துக்குடியில் அணியணியாக வந்தார்கள். பதின்மூன்று உறவுகளை பலி கொடுத்த பின்னும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதில் உறுதி காட்டி வென் றார்கள்.
“தமிழர் வாழ்வுரிமை காப்போம்! தமிழர் தாயகம் காப்போம்!” என்ற இலட்சிய முழக்கங்களை எழுப்பு வோம்! சாதி, மதம், கட்சிகள் எங்களைப் பிளவுபடுத்த அனுமதியோம்!
மனிதர்கள் அனைவரும் சமம், தமிழர்கள் அனைவரும் சமம் என்ற தமிழர் அறத்தை முன்னிறுத்துவோம்! தமிழர்கள் ஒருங்கிணைவோம்!
தமிழர் அறப்போர் வெல்லும்!

Labels:

காவிரி மீட்பு வெற்றி விழாவா? வெற்று விழாவா? தோழர் பெ. மணியரசன் அறிக்கை!

Monday, June 18, 2018


காவிரி மீட்பு 
வெற்றி விழாவா? வெற்று விழாவா? 

காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர்
தோழர் பெ. மணியரசன் அறிக்கை!


“காவிரி நதிநீர் மீட்புப் போராட்ட விளக்கப் பொதுக்கூட்டம்” என்ற தலைப்பில், இன்று (18.06.2018) மாலை மயிலாடுதுறையில், ஆளும் அ.தி.மு.க. மாபெரும் கூட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளது. அதில், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சிறப்புரையாற்றுகிறார். 

கடந்த 09.06.2018 அன்றுதான், தமிழ்நாடு சட்டப்பேரவையில் இவ்வாண்டு குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையைத் திறக்க முடியாது – எனவே, நிலத்தடி நீர் பாசனத்தை ஊக்கப்படுத்த மின்சாரம் வழங்கப்படும் என்றும், மாற்றுப் பயிர் சாகுபடி செய்ய ஊக்கம் தரப்படும் என்றும் அறிவித்தார். ஒன்பது நாட்களுக்குள் காவிரியில் எந்த உரிமையை மீட்டார்? என்ன வெற்றி கண்டார்? எதற்காக “வெற்றி விழா”?

உச்ச நீதிமன்றம் 31.06.2018க்குள், காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்திட காலவரம்பிட்டு இறுதித் தீர்ப்பு வழங்கி விட்டது. ஆனால், இந்திய அரசு இதுவரை மேலாண்மை ஆணையம் அமைக்கவில்லை. 

நடுவண் நீர் வளத்துறையின் வேறொரு பிரிவில் தலைவராக உள்ள மசூத் உசேன் என்பவரை காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூடுதல் பொறுப்புத் தலைவராக அமர்த்திவிட்டு, ஒதுங்கிக் கொண்டது மோடி அரசு! நடுவண் அரசு அமர்த்த வேண்டிய இரண்டு முழு நேர உறுப்பினர்கள் – இரண்டு பகுதி நேர உறுப்பினர்கள், மற்றும் ஒரு செயலாளர் ஆகியோரை மோடி அரசு அமர்த்தாமல், தமிழ்நாட்டுக்கு எதிராக இனப்பாகுபாட்டு அரசியல் நடத்தி வருகிறது! 

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் ஆகிய மாநிலங்கள் தங்களுக்குரிய தலா ஒரு பிரதிநிதியை ஆணையத்திற்கு நியமித்துவிட்டார்கள். கர்நாடகம் மட்டும் தனது பிரதிநிதியை நியமிக்கவில்லை! 

கர்நாடகம் தனது பிரதிநிதியை நியமிக்காததால், காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதற்கு தடை ஒன்றுமில்லை! காவிரி ஆணையத்தின் சட்டதிட்டப்படி அதன் செயலாளருக்கு மட்டும் ஓட்டுரிமை இல்லை! எஞ்சிய ஒன்பது பேர் பெரும்பான்மை அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும். மேலாண்மை ஆணையத்தில் ஒன்று அல்லது இரண்டு மாநிலப் பிரதிநிதிகள் வராவிட்டாலும், தடை இல்லை! 

குறைந்தபட்ச வருகையாக (கோரம்) மொத்தமுள்ள ஒன்பது பேரில் ஆறு பேர் வந்திருந்தால், கூட்டம் நடத்தலாம். எனவே, இப்பொழுது கர்நாடகப் பிரதிநிதி இல்லை என்பதால், மேலாண்மை ஆணையத்திற்கு நடுவண் அரசு அமர்த்த வேண்டிய உறுப்பினர்களை அமர்த்தாமல் இருப்பதும், ஆணையக் கூட்டத்தை நடத்தாமல் இருப்பதும் திட்டமிட்டு தமிழ்நாட்டைப் பழிவாங்குகிறது என்பதற்குரிய சான்றாகும்! 

நடுவண் அரசின் இந்தப் பழிவாங்கலுக்கு, துணை போகிறது எடப்பாடி அரசு! காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட நடுவண் அரசுக்கு எடப்பாடி அரசு அழுத்தம் கொடுத்து, இந்நேரம் அதில் வெற்றி பெற்று, சூன் மாதத்திற்குரிய 9 டி.எம்.சி. தண்ணீர் கர்நாடகத்திலிருந்து திறந்து விடப்பட்டிருந்தால், ஆளுங்கட்சி “வெற்றி விழா” கொண்டாடலாம்! 

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, காவிரி உரிமை மீட்பில் தனது தோல்வியைத் தானே ஒத்துக் கொள்ளும் வகையில், குறுவை சாகுபடிக்குத் தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை என அறிவித்துவிட்டு, இப்பொழுது “காவிரி நதிநீர் மீட்புப் போராட்ட வெற்றி விழா” நடத்துவது முற்றிலும் முரண்பாடாக உள்ளது! 

அடுத்து, மேட்டூர் அணையில் 90 அடி தண்ணீர் தேங்கினால்தான் குறுவைக்குத் திறக்க முடியும் என்று பழைய நிலையில் இன்றும் பேசுவது சரியல்ல! மேலாண்மை ஆணையம் சூன் மாதத்திற்கு 9 டி.எம்.சி.யும், சூலை மாதத்திற்கு 30 டி.எம்.சி.யும், அதைப்போல் ஆகத்து மாதத்திற்கு உரிய தண்ணீரையும் திறந்துவிட வேண்டும்! அதுதான் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு! எனவே, உடனடியாக மேலாண்மை ஆணையத்தை நடுவண் அரசு அமைக்கச் செய்து, மாதவாரியாக கர்நாடகத்திலிருந்து தண்ணீர் பெறும் உரிமையை செயல்படுத்த வேண்டும். அப்படிச் செய்தால், இன்னும் சில நாட்களில் குறுவைக்குத் தண்ணீர் திறக்க முடியும்! 

கர்நாடகத்தின் நான்கு அணைகளில் கபிணி, ஏமாவதி, ஏரங்கி அணைகள் நிரம்பிவிட்டன. கே.ஆர்.சாகரும் நிரம்பப் போகிறது. மாதவாரியாகத் திறந்துவிட, இதற்கு மேல் கர்நாடகத்திற்கு தண்ணீர் தேவை என்ன இருக்கிறது? தமிழ்நாடு முதலமைச்சர் இதைச் செயல்படுத்தி வைக்க, உருப்படியான நடவடிக்கை எடுத்தால், அவர் கேட்காமலே மக்கள் அவரைப் பாராட்டுவார்கள்! இதையெல்லாம் செய்யாமல், மேட்டூர் அணையைக் காயப்போட்டுவிட்டு, ஆற்று நீர்ப் பாசனக் குறுவையை கைவிடச் சொல்லிவிட்டு, போலி வெற்றி விழா கொண்டாடினால், அதை ஏற்றுக் கொள்ள இன்று மக்கள் தயாராக இல்லை என்பதை அவர் தெரிந்து கொள்ள வேண்டும்.


Labels:

திய தலைமுறை – அமீர் – தனியரசு மீது வழக்கு: தமிழ்நாட்டை உ.பி.யாக மாற்றுகிறது பா.ச.க! தோழர் பெ. மணியரசன் கண்டனம்!

Monday, June 11, 2018


புதிய தலைமுறை – அமீர் – தனியரசு மீது வழக்கு:
தமிழ்நாட்டை உ.பி.யாக மாற்றுகிறது பா.ச.க!

 தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கண்டனம்!

புதிய தலைமுறை தொலைக்காட்சி கோவையில், “தொடர் போராட்டங்கள் மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கா? அரசியல் காரணங்களுக்கா?” என்ற தலைப்பில் நடத்திய “வட்டமேசை” விவாத படப்பிடிப்பில் கலந்து கொண்டு கருத்துக் கூறியதற்காகத் திரைப்பட இயக்குநர் அமீர் அவர்கள் மீதும், அமீரைத் தூண்டி விட்டார் என்று கொங்கு இளைஞர் பேரவைத் தலைவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான உ. தனியரசு அவர்கள் மீதும் காவல்துறை குற்ற வழக்குப் பதிவு செய்திருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது; கண்டனத்திற்குரியது!   

வட்டமேசை விவாதத்தில் கலந்து கொண்ட பா.ச.க.வின் தமிழ்நாடு தலைவர் தமிழிசை சௌந்தரராசன், தூத்துக்குடி கலவரத்துக்குக் காரணம் சமூக விரோதிகளே என்று பேசிய போது, அமீர் குறுக்கிட்டு இரண்டாண்டுகளுக்கு முன், கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலையை ஒட்டி மிகப்பெரிய அளவில் நடந்த வன்முறை வெறியாட்டத்தை நடத்தியவர்கள் சமூக விரோதிகள்தானா என்று கேட்டுள்ளார்.

உடனே, அங்கு பார்வையாளர் பகுதியில் இருந்த மாவட்டத் தலைவர் உள்ளிட்ட பா.ச.க.வினர் கூச்சல் எழுப்பி அமீரைத் தாக்க முனைந்துள்ளனர். நிகழ்ச்சியைத் தொடர விடாமல் தடுத்து விட்டனர். அப்போது உ. தனியரசு தலையிட்டு அமைதி காக்கக் கூறியுள்ளார். தகராறு செய்த பா.ச.க.வினர் கேட்கவில்லை. காவல்துறையினர் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றனரே அன்றி, தலையிட்டு பா.ச.க.வினரின் அடாவடித்தனத்தைத் தடுக்கவில்லை.

தனியரசு, அமீரைப் பாதுகாப்பாக தனது காரில் அழைத்துக் கொண்டு வெளியேறியுள்ளார். அவரைத் தொடர்ந்து கொங்கு இளைஞர் பேரவையினர் தங்கள் கார்களில் வெளியேறி உள்ளனர். இரு சக்கர ஊர்திகள் நான்களில் அந்தக் கார்களைத் துரத்திச் சென்ற பா.ச.க.வினர், வழிமறித்துத் தாக்கி, கார் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். ஆனால் காருக்குள் அமீர் இல்லாததால் திரும்பி விட்டனர். வேறொரு காரில் அமீரை பத்திரமாக அழைத்துச் சென்றுள்ளார் தனியரசு!

காவல்துறையினர் அமீர் மீது மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசிய குற்றத்திற்கான இந்தியத் தண்டனைச் சட்டப்பிரிவுகள் 153 (A), 505 ஆகியவற்றின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளார்கள். இந்தக் குற்றங்களைச் செய்யுமாறு அமீரைத் தூண்டியதாகத் தனியரசு மீதும் வழக்கு!
அதோடு விடவில்லை காவல்துறை! புதிய தலைமுறைத் தொலைக்காட்சி நிறுவன நிர்வாகிகள் மீதும், அந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அதன் கோவைச் செய்தியாளர் மீதும் வழக்குப் பதிந்துள்ளார்கள். வகுப்புக் கலவரத்தைத் தூண்டியதாக 153(A), 505 பிரிவுகளிலும், தனியார் சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாக 3(1) (PPD) பிரிவிலும் வழக்குப் போட்டுள்ளார்கள்.

அமீரைத் தாக்கச் சென்று ஊர்திகளை சேதப்படுத்திய பா.ச.க.வினர் எட்டு பேர் மீது தனியரசுத் தரப்பு வற்புறுத்தியபிறகே, வழக்குப் பதிவு செய்துள்ளார்கள்.

பா.ச.க. ஆட்சியில் உத்திரப்பிரதேசத்தில் நடத்துகின்ற வன்முறைகளைப் போல் தமிழ்நாட்டிலும் பா.ச.க.வினர் நடத்தத் துணிந்துவிட்டனர் என்பதையே கோவை நிகழ்வு காட்டுகிறது. உ.பி.யில் பா.ச.க. ஆட்சியில் பா.ச.க.வினரின் வன்முறையைக் காவல்துறை தடுக்காது – உரிய நடவடிக்கை எடுக்காது என்பதைப்போல்தான் தமிழ்நாடு காவல்துறை கோவையில் உள்நோக்கத்தோடு செயல்பட்டுள்ளது.

கலாட்டா செய்த பா.ச.க.வினர் மீது நடவடிக்கை எடுக்காமல், அந்நிகழ்வை ஏற்பாடு செய்த புதிய தலைமுறைத் தொலைக்காட்சி நிறுவனத்தின் மீதும், அதில் பேசிய அமீர் மற்றும் தனியரசு மீதும் வழக்குத் தொடர்ந்திருப்பது, கருத்துரிமையை முடக்கி, அவர்களை பா.ச.க.வினருக்கு எதிராகக் கருத்துத் தெரிவிக்காமல் அச்சுறுத்தும் செயலாகும்!

தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் பா.ச.க.வின் கைக் கருவியாக செயல்பட்டு தமிழ்நாட்டின் மத நல்லிணக்கத்தை பா.ச.க.வினர் கெடுக்கத் துணைபோகிறார்கள். பா.ச.க.வினரின் எதேச்சாதிகார வாதங்களுக்கு மாற்றுக் கருத்து கூறினால் கூட, பா.ச.க.வினர் தாக்குதலில் ஈடுபடுவார்கள் என்பதற்குக் கோவை நிகழ்வே சான்று!

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் நல்லிணக்கத்தில், தமிழர்களின் கருத்துரிமையில் அக்கறை கொண்டிருந்தால், மேற்படி படப்பிடிப்பின்போது கலாட்டா செய்த பா.ச.க.வினர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க ஆணையிட வேண்டும். பா.ச.க.வினர் 8 பேர் மீது பதிந்த வழக்கில் அவர்களைக் கைது செய்ய வேண்டும். இயக்குநர் அமீர், சட்டப்பேரவை உறுப்பினர் தனியரசு, புதிய தொலைக்காட்சி நிறுவனம், அதன் செய்தியாளர் ஆகியோர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள பொய் வழக்குகளைக் கைவிடச் செய் வேண்டும்

தமிழ்நாட்டில் ஆட்சியில் இல்லாமலே, மக்கள் செல்வாக்கு இல்லாமலே நடுவண் அதிகாரத்தை வைத்துக் கொண்டு, தமிழ்நாட்டை உத்திரப்பிரதேசம் போல் கலவர பூமியாக மாற்ற முனைந்துள்ள பா.ச.க.வினரை எதிர் கொள்ளத் தமிழர்கள் – மனித உரிமைக் காப்பு அடிப்படையில் ஒருங்கிணைய வேண்டும்!

Labels:

கர்நாடகத்தின் ஊதுகுழலாக தமிழ்நாடு முதலமைச்சர் பேசுகிறார்! பெ. மணியரசன் கண்டனம்!

Friday, June 8, 2018



கர்நாடகத்தின் ஊதுகுழலாக
தமிழ்நாடு முதலமைச்சர் பேசுகிறார்! 

காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர்
தோழர் பெ. மணியரசன் கண்டனம்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (08.06.2018) முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், சூன் 12 ஆம் நாள் மேட்டூர் அணையைத் திறக்க இயலாது என்று கூறியபோது, அதற்கான காரணம், பருவமழை பொய்த்துப் போனதுதான் என்று குறிப்பிட்டுள்ளார். 

கர்நாடகத்தில் பருவமழை எத்தனை விழுக்காடு பொய்த்துப் போயுள்ளது, இப்பொழுது கர்நாடகத்தின் வெளியே தெரிந்த அணைகளிலும் காவிரி நீரைப் பதுக்கிக் கொள்ள கட்டப்பட்ட புதிய நீர்த் தேக்கங்களிலும் எவ்வளவு தண்ணீர் இருக்கிறது என்ற உண்மை விவரத்தை முதல்வர் வெளியிட்டிருக்க வேண்டும். அந்த நீர் இருப்பில், விகிதாச்சாரப் பகிர்வு (Prorate) அடிப்படையில் இவ்வளவு நீர் தமிழ்நாட்டிற்கு வந்திருக்க வேண்டும், ஆனால் கர்நாடகம் திறந்துவிட மறுத்து விட்டது என்ற விவரங்களைக் கூறி இருக்க வேண்டும்.

அவ்வாறு, உண்மை விவரங்களைக் கூறாமல் கர்நாடக அரசு கூறுகின்ற “பருவமழை பொய்த்து விட்டது” என்ற பொய்யை தமிழ்நாடு முதல்வரும் கூறியிருப்பது கண்டனத்திற்குரியது. உண்மையில், கர்நாடகத்தின் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இயல்பான மழை அளவைவிட இந்த ஆண்டு (2018) சனவரி 1-லிருந்து மே 31 வரையிலான மழை அளவு கூடுதலாக இருப்பதை கர்நாடக அரசின் புள்ளி விவரங்களே கூறுகின்றன. 

எடுத்துக்காட்டாக, மைசூரு மாவட்டத்தில் வழக்கமான மழை அளவு 230 மி.மீ. ஆகும். ஆனால், இப்போது பெய்துள்ள மழை அளவு 309 மி.மீ. மாண்டியாவில் வழக்கமான மழை அளவு 184 மி.மீ. ஆகும். ஆனால், இப்போது பெய்துள்ள மழை அளவு 295 மி.மீ. சாம்ராஜநகரில் வழக்கமான மழை அளவு 230 மி.மீ. ஆகும். ஆனால், இப்போது பெய்துள்ள மழை அளவு 309 மி.மீ. இந்த உண்மையை எடுத்துக்கூறி பங்கு நீரைக் கேட்பதற்கு மாறாக, கர்நாடகாவை முந்திக் கொண்டு “மழை பொய்த்துவிட்டது” என்று தமிழ்நாடு முதலமைச்சர் பொய்யான தகவலைத் தர வேண்டிய தேவை என்ன? 

சட்டவிரோத நடவடிக்கைகள் – இனவெறி நடவடிக்கைகள் ஆகியவற்றின் உறைவிடமாக விளங்கும் கர்நாடக அரசின் ஊது குழலாக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி அவர்கள் தமிழ்நாடு சட்டப்பேரவையிலேயே பேசியிருக்கிறார். பருவமழை பொய்த்துவிட்டதால், சூன் மாதம் தண்ணீர் திறக்க முடியாது என்று கூறுயிருக்கிறார். 
குறுவைத் தொகுப்புத் திட்டத்திற்கு ரூபாய் 115 கோடி ஒதுக்கியுள்ளதாக முதலமைச்சர் அறிவித்திருப்பது, குறுவையை இவ்வாண்டும் தமிழ்நாடு அரசு கைகழுவிவிட்டது என்பதற்கான முன்னோட்டமே!

டெல்டாவில் ஐந்து மாவட்டங்களில் 5 இலட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்யப்பட்டு வந்தது. அதையும் 3 இலட்சத்து 15 ஆயிரம் ஏக்கர் என்று குறைத்துச் சொல்கிறார் முதல்வர்! அந்த 3 இலட்சத்து 15 ஆயிரம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்ய காவிரித் தண்ணீர் வேண்டுமல்லவா? நிலத்தடி நீர் நாகை, திருவாரூர் மாவட்டங்களில் உப்பாகிவிட்டது. தஞ்சை மாவட்டத்தில், ஏற்கெனவே பல பகுதிகள் பாறையாக இருப்பதால் நிலத்தடி நீர் இல்லை. டெல்டாவில் நிலத்தடி நீர் சாகுபடி என்பது மிகக் குறைந்த பரப்பளவில்தான் நடக்கிறது. 

காவிரி நீர் வராவிட்டாலும் குறைவில்லாமல் குறுவை சாகுபடி செய்ய முடியும் என்பதுபோல் முதல்வர் பேசியிருப்பது கர்நாடகத்தின் மற்றும் இந்திய அரசின் குரலாக உள்ளது. 

குறுவைக்குரிய தண்ணீரைப் பெற எடப்பாடி பழனிச்சாமி அரசு என்ன முயற்சி எடுத்தது? நடுவண் அரசின் தலையீட்டைக் கோரியதா? அனைத்துக் கட்சிக் குழுவடன் தில்லிக்குச் சென்று, அமைச்சர்கள் சந்திக்க மறுத்தாலும் ஒரு போராட்ட உத்தியாக அதிகாரிகளைச் சந்தித்து வலுவாகக் குரல் கொடுத்திருக்கலாம். அதைக்கூட செய்யவில்லை! 

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி 2018 மே 31 ஆம் நாளுக்குள் காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்திருக்க வேண்டும். அதை அமைக்காமல் சாக்குப்போக்கு சொல்லி நரேந்திர மோடி அரசு வேண்டுமென்றே காலம் கடத்துகிறது. 

மேலாண்மை ஆணையத்தின் மொத்த அதிகாரிகள், செயலாளர் உள்ளிட்டு 10 பேர். அதில் ஆறு பேரை இந்திய அரசு நியமனம் செய்ய வேண்டும். நீர் வளத்துறையில் வேறொரு பிரிவில் முழுநேரத் தலைமை அதிகாரியாக இருக்கும் மசூத் உசேனை மட்டும் இடைக்காலத் தலைவராக காவிரி ஆணையத்திற்கு நியமித்திருப்பது கண்துடைப்பு நடவடிக்கை! இதுபற்றி ஒரு கருத்தும் தமிழ்நாடு முதல்வர்க்கு இல்லையா? கருத்து இருந்தால் அதை சட்டப்பேரவையில் வெளியிட்டிருக்கலாம் அல்லவா? 

தமிழ்நாடு முதலமைச்சர் தில்லி மற்றும் பெங்களூரு ஊதுகுழலாக இருக்கிறார். தமிழ்நாட்டு மக்களை வஞ்சிகிறார். கர்நாடக மற்றும் நடுவண் அரசுகளை எதிர்த்துப் போராடுவதுடன் காவிரி உரிமையை மீட்கக் கோரி தமிழ்நாடு அரசையும் எதிர்த்துப் போராட வேண்டிய தேவை உள்ளது. 

Labels:

காவிரித் தீர்ப்பு மூன்றாவது முறையாக அரசிதழில்! இப்போதும் ஆணையம் அமைக்கவில்லை தோழர் பெ. மணியரசன்

Sunday, June 3, 2018



காவிரித் தீர்ப்பு மூன்றாவது முறையாக அரசிதழில்!
இப்போதும் ஆணையம் அமைக்கவில்லை

காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர்
தோழர் பெ. மணியரசன் அறிக்கை!

உச்ச நீதிமன்றம் 18.05.2018 அன்று அளித்த காவிரித் தீர்ப்பை நேற்று (01.06.2018), இந்திய அரசு அரசிதழில் வெளியிட்டுவிட்டு, காவிரி ஆணையம் அமைக்காமல் ஒதுங்கிக் கொண்டிருப்பது கடந்த காலங்களில், அது ஏமாற்றியதுபோல் இப்போதும் செய்கிறதோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.
காவிரித் தீர்ப்பாயம் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பை உச்ச நீதிமன்ற ஆணையின்படி 11.12.1991 அன்று இந்திய அரசு அரசிதழில் வெளியிட்டது. ஆனால், அதை செயல்படுத்தவில்லை!
அடுத்து, காவிரித் தீர்ப்பாயம் வழங்கிய இறுதித் தீர்ப்பை உச்ச நீதிமன்றக் கட்டளையின்படி 19.02.2013 அன்று இந்திய அரசு அரசிதழில் வெளியிட்டது. ஆனால், அத்தீர்ப்பில் கண்டபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் ஒதுங்கிக் கொண்டது. அதனால் அத்தீர்ப்பும் செயலுக்கு வரவே இல்லை!
இப்பொழுது மூன்றாவது முறையாக, செயல்படுத்தக் கூடிய காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்காமல், அரசிதழில் வெளியிட்டுவிட்டு இந்திய அரசு ஒதுங்கிக் கொண்டுள்ளது. விரைவில் மேலாண்மை ஆணையம் அமைக்கப்படும் என்று சொல்கிறார்கள்.
உச்ச நீதிமன்றம் தனது இறுதித் தீர்ப்பை 16.02.2018 அன்று அளித்தது. அதைச் செயல்படுத்தாமல், சாக்குப்போக்கு சொல்லி இதுவரை இழுத்தடித்து வருவது இந்திய அரசுதான்! இப்பொழுதும் செயல்படுத்தும் மேலாண்மை ஆணையம் அமைக்காமல், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை புறக்கணிக்கவில்லை என்று காட்டிக் கொள்வதற்காக ஒப்புக்கு அரசிதழில் வெளியிட்டு ஒதுங்கிக் கொண்டிருக்கிறது.
அத்துடன், நடுவண் நீர்வளத்துறைச் செயலாளர் யு.பி. சிங்கை காவிரி மேலாண்மை வாரியத் தற்காலிகத் தலைவராக அமர்த்தியிருப்பதாக செய்திகள் வருகின்றன. யு.பி. சிங்கை காவிரி மேலாண்மை ஆணையத்தின் தற்காலிகத் தலைவராக அமர்த்துவது என்பது, காவிரி மேலாண்மை ஆணையம் நடுவண் நீர்வளத்துறையின் ஒரு துணைக் குழுதான் (Sub Committee) என்பதை உறுதிப்படுத்துவதாக உள்ளது.
காவிரித் தீர்ப்பாய முடிவுகள் மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஆகியவை தனித்துவமான காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க வேண்டுமென்றும், அதன் தலைவர் முழுநேரப் பொறுப்பில் செயல்படுவார் என்றும் கூறியுள்ளன. நடுவண் நீர்வளத்துறைச் செயலாளரின் கூடுதல் பொறுப்பாக காவிரி ஆணையத் தலைவர் பொறுப்பை வழங்குவது உச்ச நீதிமன்றத் தீர்ப்பை சீர்குலைக்கும் முயற்சியாகும்!
யு.பி. சிங் நடுநிலைத் தவறியவர் என்பதை, உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு வந்ததிலிருந்து அவர் செயல்பட்ட விதம் வெளிப்படுத்தியது.
எனவே, அரசிதழில் வெளியிடப்பட்டது என்ற அளவில் “வெற்றி!”க் களிப்பு காட்டிக் கொள்வது, நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாக அமையும்! இந்திய அரசு இன்னும் காவிரியில் தமிழ்நாட்டின் சட்டப்படியான உரிமைகளை செயல்படுத்த முன்வரவில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நீதியை நிலைநாட்ட போராட வேண்டியத் தேவை உள்ளது என்பதை காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் தெரித்துக் கொள்கிறேன்.

Labels:

காவிரி ஆணையத்திற்கு தற்காலிகத் தலைவர் யு.பி. சிங்: தமிழ்நாட்டிற்கு எதிரான மோடி அரசின் வஞ்சகம் தொடர்கிறது! பெ. மணியரசன் அறிக்கை!

Saturday, June 2, 2018


காவிரி ஆணையத்திற்கு தற்காலிகத் தலைவர்
யு.பி. சிங்: தமிழ்நாட்டிற்கு எதிரான மோடி 
அரசின் வஞ்சகம் தொடர்கிறது!

காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர்
தோழர் பெ. மணியரசன் அறிக்கை!


காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு நடுவண் நீர்வளத்துறையின் செயலாளர் யு.பி. சிங்கை தற்காலிகத் தலைவராக நடுவண் நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி அமர்த்தியிருக்கிறார் என்று செய்தி வந்துள்ளது. யு.பி. சிங் நான்கு மாநிலங்களுக்கும் உரிய பிரதிநிதிகளுடையப் பெயரைத் தருமாறு அந்தந்த மாநில அரசுக்குக் கடிதம் அனுப்பப்போவதாகக் கூறப்படுகிறது. இந்த ஏற்பாடு என்பது, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறிய செயலாகும்! 

காவிரி மேலாண்மை ஆணையத்திற்குத் தற்காலிகத் தலைவர் நியமித்துக் கொள்வதற்கான அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் இந்திய அரசுக்கு வழங்கவில்லை. தனி அதிகாரத்துடன் கூடிய முழுநேரத் தலைவர் ஒருவரை காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அமர்த்த வேண்டுமென்று கூறியதுடன், அவருக்குரிய தகுதிகளையும் உச்ச நீதிமன்றம் வரையறுத்துள்ளது. 

இப்பொழுது யு.பி. சிங் நடுவண் நீர்வளத்துறையின் முழுநேர அதிகாரியாவார். ஒரு கூடுதல் பொறுப்பாக காவிரி மேலாண்மை வாரியத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பணி நியமனம், காவிரி மேலாண்மை ஆணையத்தை தன்னதிகாரம் இல்லாத நடுவண் நீர்வளத் துறையின் ஒரு துணைக் குழுவாக (Sub committee) ஆக்குவதாகும்! 

நடுவண் நீர்வளத்துறையின் கட்டளைகளை ஏற்கெனவே பல தடவை கர்நாடக அரசு செயல்படுத்த மறுத்துள்ளது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பையே செயல்படுத்த மறுக்கும் கர்நாடகம், நடுவண் நீர் வளத்துறைத் துணைக் குழுவின் ஆணையையா செயல்படுத்தும்?

அடுத்து, விரைவில் நிரந்தரத் தலைவர் அமர்த்தப்படுவார் என்று நீர்வளத்துறை சொல்கிறது. விரைவில் என்றால் எத்தனை நாளில்? சில நாட்களில் நிரந்தரத் தலைவர் அமர்த்தப்படுவார் எனில், அதற்குள் தற்காலிகத் தலைவர் ஏன் தேவைப்பட்டார்?

உச்ச நீதிமன்றம் 16.02.2018 அன்று வழங்கிய தீர்ப்பில், ஆறு வார காலத்திற்குள் காவிரி செயல் திட்டத்தை உருவாக்கி அறிவிக்குமாறு நடுவண் அரசுக்குக் கட்டளையிட்டிருந்தது. அதைச் செயல்படுத்தாமல், திட்டமிட்டு காலங்கடத்தி, கடைசி நேரத்தில் 29.03.2018 அன்று அந்த செயல் திட்டம் பற்றியும், மற்ற விவரங்கள் பற்றியும் உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் கேட்கப் போவதாகவும் அதற்குக் கால அவகாசம் 3 மாதங்கள் வேண்டுமென்றும் கோரியதுதான், நிதின் கட்கரி தலைமையிலுள்ள நடுவண் நீர்வளத்துறை! அதன்பிறகும், காலம் தள்ளித்தள்ளி மே 18 வரை இழுத்தடித்தவர் நீர்வளத்துறைச் செயலாளர் யு.பி. சிங்! 

இவர் நடுநிலை தவறியவர் என்பது, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை இவர் அணுகிய விதத்திலிருந்து தெரிய வந்தது. எனவே, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க வேண்டிய கட்டாயம் இருந்தும், அதையும் அதிகாரமில்லாமல் அமைத்து தமிழ்நாட்டிற்கு எதிராக இனப்பாகுபாடு காட்டும் அநீதியை மோடி அரசு தொடர்கிறது என்பதற்கான அடையாளம்தான், நீர்வளத்துறைச் செயலாளர் யு.பி. சிங்கை காவிரி மேலாண்மை ஆணையத்திற்குத் தற்காலிகத் தலைவராக அமர்த்தியிருப்பது! 

சட்டக்கடமையை நிறைவேற்ற மறுத்து தமிழ்நாட்டிற்கு எதிராக பாகுபாடு காட்டும் மோடி அரசின் வஞ்சகத்தைக் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். 

தமிழ்நாடு அரசு இந்தத் தற்காலிக பணி அமர்த்தத்தை ஏற்றுக் கொள்ளக் கூடாது. 

மோடி அரசு யு.பி. சிங் நியமனத்தை உடனடியாகத் திரும்பப் பெற்று, தகுதியும் தன்னதிகாரமும் உள்ள முழுநேரத் தலைவரை காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அமர்த்த வேண்டுமென்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன். மீண்டும் தமிழர்களை வஞ்சிக்கும் தந்திரத்தில், மோடி அரசு இறங்கினால் நீதி கேட்டு ஒட்டுமொத்தத் தமிழ் மக்களும் வீதிக்கு வந்து போராட வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன். 

Labels:


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்