<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d6955529389241309188\x26blogName\x3d%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86.%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://thozharmaniyarasan.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com/\x26vt\x3d-8408640130511538487', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

"கேரள வனத்துறையினரின் தொடரும் அட்டூழியம் , தமிழக அரசு தூங்குவது ஏன்?" தோழர் பெ.மணியரசன் கேள்வி.

Friday, January 16, 2015

"கேரள வனத்துறையினரின் தொடரும் அட்டூழியம் , தமிழக அரசு தூங்குவது ஏன்?" 
---தோழர் பெ.மணியரசன் கேள்வி.

கடந்த 2014 நவம்பர் 27 லிருந்து இன்றுவரை கேரள வனத் துறையினர் தமிழகத்திற்குரிய முல்லைப் பெரியாறு அணைக்கு, தமிழகப் பொதுப்பணித் துறை அதிகாரிகளும் ஊழியர்களும் செல்ல முடியாதபடி தடுத்துள்ளார்கள். தேக்கடி வழியாக படகில் செல்ல முடியாதபடியும் வல்லக்கடவு தரை வழிப் பாதை வழியாக தமிழக அதிகாரிகள் அணைக்கு வர முடியாதபடியும் தடுக்கப்பட்டுள்ளார்கள். அணையில் உள்ள ஒரு இளநிலைப் பொறியாளர் மற்றும் ஊழியர் இருவருக்கும் உணவுக்குப் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. உடை மாற்றிக் கொள்ளக்கூட வழியில்லாமல் இருக்கிறார் கள். அவர்கள் தங்கள் குடும்பத்தினரைப் பார்க்க முடியாத அவல நிலை மாதக் கணக்கில் நீள்கிறது.
ஒரு வகையில் பிணைக் கைதிகளைப் போல் அவர்கள் அங்கே இருக்கிறார்கள். கேரள அரசின் இந்த சட்டவிரோதத் தடுப்புச் செயலையும் அட்டூழியத்தையும் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
முல்லைப் பெரியாறு அணைக்கு தமிழக அதிகாரிகளைப் போகவிடாமல் தடுத்துவிட்டு, தமிழ கத்தின் கண்காணிப் பில்லாத நேரத்தில் முல்லைப் பெரியாறு அணையில் வெடிகுண்டு வைத்து கேரள அரசு தகர்த்து விடுமோ என்ற அய்யமும் அச்சமும் ஏற்படு கிறது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, உச்ச நீதிமன்றம் அமைத்த கண்காணிப்புக் குழுவின் ஒப்புதலோடு இவ்வாண்டு முல்லைப் பெரியாறு அணையில் தமிழகப் பொதுப்பணித் துறையினர் 142 அடி தண்ணீர்த் தேக்கியதற்கு எதிராகப் பழிவாங்குவதற்காகவே கேரள ஆட்சியாளர்கள் தங்களின் வனத் துறையினரைத் தூண்டிவிட்டு சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட வைத்துள்ளனர். கேரள அரசின் இந்த அராசகத்தைத் தடுக்க இந்திய அரசு என்ன செய்தது, தமிழக அரசு என்ன செய்தது என்ற வினாக்கள் தமிழக மக்களிடம் எழுந்துள்ளன.
எப்பொழுதுமே தமிழகத்தைப் பாகுபாடாகப் பார்த்து ஓரவஞ்சனை செய்துவரும் இந்திய அரசுக்கு, தமிழக அரசு எந்த வகை நெருக்கடியும் கொடுக்காதது மிகவும் வசதியாகப் போய்விட்டது.
முல்லைப் பெரியாறு அணையைச் சுற்றி தேக்கடி உள்ளிட்டு 8,000 ஏக்கர் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் தமிழக அரசின் நிர்வாகத்திற்கு உட்பட்டவை. இந்நிலப்பரப்பை ஒப்பந்தபடி 999 ஆண்டுக்குத் தமிழக அரசு குத்தகைக்கு எடுத்து அதற்குரிய குத்தகைத் தொகையை கேரள அரசுக்கு செலுத்தி வருகிறது. கேரள அரசு மேற்படி குத்தகை நிலப் பரப்பில் விடுதிகள், பல்வேறு அரசு மற்றும் தனியார் கட்டடங் கள் கட்டிக் கொண்டபோது தமிழக அரசு அதைத் தடுக்க வில்லை. உருப்படியான எதிர்ப்பு எதையும் தெரிவிக்க வில்லை.
இந்தத் துணிச்சலில்தான் இப்பொழுது தமிழகப் பொதுப்பணித் துறை அதிகாரிகள் வழக்கம்போல் அன்றாடம் அணைக்குச் சென்றுவர அடையாள அட்டை மற்றும் கையப்பம் ஆகியவற்றைக் கேரள வனத்துறை கேட்கிறது. தமிழக அரசின் அனுபோகத்தில் உள்ள குத்தகை நிலப்பரப்பில் - நீர்ப்பரப்பில் சென்றுவர கேரள வனத் துறையிடம் ஒவ்வொரு தடவையும் அடையாள அட்டை காட்டி அவர்களின் ஒப்புதலுக்காக கையப்ப மிட்டு அவர்களிடம் அனுமதி கேட்க வேண்டிய தேவை எங்கிருந்து வருகிறது? தமிழக அரசின் செயலற்றத் தன்மையானது, கேரள அரசின் இனப்பகை அராசகம் அரங்கேற வாய்ப்பளித்துள்ளது.
தமிழக முதலமைச்சரும் பொதுப்பணித் துறை அமைச்சர் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் முன்னாள் முதல்வர் செயலலிதா அவர்கள் நீதிமன்றத் தண்டனையி லிருந்து விடுபடுவதற்காகத் தமிழகம் முழுவதும் கோயில்களில் வேண்டுதல் விழாக்கள் நடத்துவதிலேயே கவனம் செலுத்துகிறார்கள். தமிழக மக்களின் உரிமைகள் பறிபோவ தைக் கண்டும் காணாமல் இருக்கிறார்கள். இப்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது.
ஒரு மாதத்திற்கு மேல் முல்லைப் பெரியாறு அணையில் அன்றாட நிர்வாகப் பணிகளைக் கவனிக்க முடியாதபடி தமிழக அதிகாரிகள் கேரள வனத் துறை யினரால் தடுக்கப்பட்டிருப்பதை முடிவுக்குக் கொண்டுவர இந்திய அரசு தலையிடும் வகையில் உடனடியாக இந்திய அரசுக்கு தமிழக அரசு நெருக்குதல் கொடுக்க வேண்டுமென்று தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

Labels: ,

"50 ஆவது மொழிப் போர் ஆண்டு -- தமிழர்கள் செய்ய வேண்டியது என்ன...?" -- தோழர் பெ.மணியரசன் கட்டுரை.


"50 ஆவது மொழிப் போர் ஆண்டு -- தமிழர்கள் செய்ய வேண்டியது என்ன...?" 
-- தோழர் பெ.மணியரசன் கட்டுரை.

ஐம்பதாண்டுகள் ஓடிவிட்டன. 1965-இல் தமிழகத்தில் முந்நூறுக்கும் மேற்பட்ட தமிழர்கள் சுட்டுக் கொல்லப் பட்டனர்; சற்றொப்ப பத்துத் தமிழர்கள் தீக்குளித்தும் நஞ்சுண்டும் மடிந்தனர். பல்லாயிரக் கணக்கானோர் சிறையிலடைக்கப் பட்டனர். விசாரணையின்றி சிறையில் வைக்கும் தடுப்புக் காவல் சட்டப்படி சிலர் சிறையிலடைக்கப் பட்டனர்.

இந்தித் திணிப்பை எதிர்த்து ஐம்பது நாட்கள் நடந்த இம்மாபெரும் போராட்டத்தை முன்னின்றும் தலைமை தாங்கியும் நடத்தியவர்கள் மாணவர்கள். தமிழகத்திலும் இந்திய அரசிலும் காங்கிரசுக் கட்சி ஆட்சி செய்தது. தமிழகத்தில் பக்தவத்சலம் முதலமைச் சர்; இந்தியாவில் லால் பகதூர் சாத்திரி தலைமை அமைச்சர். அனைத்திந்தியக் காங்கிரசுக் கட்சியின் ஆற்றல்மிக்கத் தலைவராக காமராசர் விளங்கினார்.

1950 சனவரி 26இல் செயலுக்குவந்த இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 343 (1) பிரிவின்படி, சமற்கிருத எழுத்து வடிவத்தில் உள்ள இந்தி, இந்திய ஒன்றியத்தின் அலுவல் மொழி. இச்சட்டம் செயலுக்கு வந்து பதினைந்து ஆண்டுகள் வரை ஆங்கிலமும் ஒன்றிய அரசின் அலுவல்மொழியாக நீடிக்கும் 343- (2). பதினைந்தாண்டுக் காலவரம்பிற்கு மேலும் ஆங்கிலத் தின் பயன்பாட்டை நீட்டிக்க நாடாளுமன்றம் சட்டம் இயற்றலாம் 343 -_ 3 (ணீ).
மேலே கூறப்பட்ட அரசமைப்புச் சட்டக்கூறு 343 _-3-(ணீ)இன்படி நாடாளுமன்றம் சட்டம் இயற்றா விட்டால் 1965 சனவரி 26-க்குப் பின் இந்தி மட்டுமே இந்திய ஒன்றியத்தின் ஒரே அலுவல் மொழியாக இருக்கும். ஆங்கிலம் அலுவல்மொழி என்ற நிலை யிலிருந்து விடுவிக்கப்படும்.

ஆங்கிலம் அலுவல் மொழி என்ற நிலையிலிருந்து விடுபடாமல் இருப்பதற்கு 1963-ஆம் ஆண்டு நாடாளு மன்றம் இயற்றிய அலுவல் மொழிச் சட்டம் வழிவகுத் தது. ஆனால், 1963 அலுவல் மொழிச் சட்டம் 1965 சனவரி 26-க்குப் பிறகும் இந்தியுடன் ஆங்கிலமும் அலுவல் மொழியாக நீடிக்கலாம் (னீணீஹ்) என்று இருந்தது. “மே” (னீணீஹ்) என்று இருப்பதால் 1965- சனவரி 26க்குப் பிறகு ஆங்கிலம் நீடிக்கலாம், நீடிக்காமலும் போகலாம் என்ற ஐயம் எழுந்தது. இதற்காக 1963 முதல் இந்தித் திணிப்பு எதிர்ப்பு மாநாடுகளைத் திராவிட முன்னேற் றக் கழகம் நடத்தியது.

இந்தித் திணிப்பால் தமிழுக்கு வரும் கேடுகளைத் தி.மு.க. பெருமள வில் பரப்புரை செய்தது. 1965 சனவரி 26 குடியரசு நாளை துக்க நாளாகக் கடைபிடித்துக் கருப்புக் கொடிகளை ஏற்றப் போவதாக அறிவித்தது. குடியரசு நாளைத் துக்க நாளாகக் கடைபிடித்துக் கருப்புக் கொடி ஏற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் பக்தவத்சலம் எச்சரித்தார்.
அதன்பிறகு, தி.மு.க. பின்வாங்கி 1965 சனவரி 25ஆம் நாளைத் துக்க நாளாகக் கடைபிடிப்பதென்றும் பொது இடத்தில் அல்லாமல் அவரவர் வீட்டில் கருப்புக் கொடி ஏற்றுவது என்றும் அறிவித்தது.

மாணவர்களில் பெரும்பாலோர் தி.மு.க.வினர் என்றாலும் காங்கிரசு மாணவர்கள் உட்பட பல்வேறு கட்சிகள் சார்ந்த, கட்சிகள் சாராத மாணவர் களையும் இணைத்துக் கொண்டு பொது நிலையில் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட் டத்தை முன் னெடுத்தனர்.

தி.மு.க. மாணவர்கள் மட்டும் போராடவில்லை; காங்கிரசு மாணவர்களும் போராடுகிறார்கள் என்பதைக் காட்டுவதற்காக காங் கிரசு மாணவர் இரவிச்சந்திரன் என்பவரை தமிழகம் தழுவிய போராட்டத் தலைமைக் குழு விற்குத் தலைவராக அமர்த்தி னார்கள். ஆனால், அவர் கொஞ்ச நாட்களில் அப்பொறுப்பிலிருந்து விலகிவிட்டார். பிறகு தி.மு.க.வைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவர் விருதுநகர் பெ. சீனிவாசன் தலைவ ரானார்.

நடைமுறையில் அப்போராட் டம் மாணவர் போராட்டம் என்பதைக் கடந்து மக்கள் போ ராட்டமாக தமிழர் போராட்ட மாக விரிவடைந்தது.

1965 சனவரி 25இல் இந்தித் திணிப்பை எதிர்த்து கருப்புப் பட்டை அணிந்து மாணவர் பேரணிகள் நடத்த வேண்டும் என்று மாணவர் அமைப்பு முடிவு செய்தது. தமிழகம் முழுக்க அப் பேரணிகள் நடந்தன. மதுரை யில் பேரணியில் வந்த மாணவர்களைக் காங்கிரசுக்காரர்கள் தாக்கிப் படுகாயப்படுத்தினர். மாணவர்கள் குருதி சொட்டச் சொட்டப் பேரணியில் சென்றனர். பின்னர் மருத்துவ மனையில் சேர்க்கப் பட்டனர்.

இந்தச் செய்தி அன்று (25. 01. 1965) மாலை வானொலியில் தெரி விக்கப்பட்டது. இதைக் கேட்டுத் தமிழகம் முழுவதும் மாணவர்களும் உணர்வாளர்களும் கொந்தளித் தனர். மறுநாள் 26. 01. 1965 காலை 10 மணிக்கு சிதம்பரத்தில் அண் ணாமலைப் பல்கலைக் கழக மாணவர்கள் காங்கிசாரின் காட்டு மிராண்டித் தனத்தைக் கண்டித்துப் பேரணியாகப் புறப் பட்டனர். தொடர்வண்டி வாயில் (ரெயில்வே கேட்) அருகே மாணவர்களை காவல் துறை யினரும் கோட்டாட் சியரும் தடுத்தனர். “இன்று குடியரசு நாள். நாளைக்கு கண்டனப் பேரணி நடத்திக் கொள்ளுங்கள்; அனுமதி தருகிறோம்” என்றனர் அதிகாரிகள். மாணவர்கள் கலைந்து சென்றனர்.

மறுநாள் காலை மாணவர் ஊர்வலம் புறப்பட்டு வந்தபோது, அதே தொடர்வண்டி வாயில் கதவை அடைத்து ஊர்வலத்தைத் தடுத்தனர் அதிகாரிகள். மாணவர் கள் அவர்களின் தடையை மீறி ஊர் வலமாகப்புறப்பட்டனர். அப்போது, தமிழகக் காவல்துறையினர் துப்பாக்கியால் மாணவர்களைச் சுட்டனர். சிவகங்கை யைச் சேர்ந்த காவலர் (போலீஸ்) ஒருவரின் மகன் மாணவன் இராசேந்திரன் மார்பில் குண் டேந்தி மடிந்தார். இன்னொரு மாணவர் படுகாயமுற்றார்.

இந்தச் செய்தி வானொலி மூலம் மக்களுக்குப் போனது. தமிழகம் கொந்தளித்தது. உண்மையான மொழிப்போர் தொடங்கியது. அரசு அலுவலகங்கள் இயங்காமல் முடக் கப்பட்டன.தொடர்வண்டிப் பெட்டிகள் எரிக்கப்பட்டன. கடையடைப்புகள் நடந்தன.

26. 01. 1965 விடியற்காலை சென் னை கோடம்பாக்கம் திடலில் “உயிர் தமிழுக்கு உடல் தீக்கு” என்று எழுதி வைத்துவிட்டு, சிவலிங்கம் என்ற இளைஞர் தீக்குளித்து மடிந்தார். 27. 01. 1965 விடியற்காலை சென்னை விருகம்பாக்கத்தில் ஒரு மடல் எழுதி வைத்துவிட்டு அரங்க நாதன் என்ற இளைஞர் தீக் குளித்து தழல் ஈகி ஆனார்.

இவ்விருவருக்கும் முன்னோடி யாக, தமிழகத்தின் முதல் தழல் ஈகியாக 1964 சனவரி 25ஆம் நாள் விடியற்காலை திருச்சி தொடர் வண்டிச் சந்திப்பு நிலைய வாயில் எதிரில் கீழப்பழூர் சின்னச்சாமி என்ற இளைஞர் “தமிழ் வாழ்க! இந்தி ஒழிக!” என்று முழக்கமிட்ட வாறு தீக்குளித்து மடிந்தார். 1965இல் அடுத்தடுத்து கீரனூர் முத்து, சத்தியமங்கலம் முத்து, விராலிமலை சண்முகம், பீளமேடு தண்டபாணி, மயிலாடுதுறை மாணவர் சாரங்கபாணி எனப் பலரும் தீக்குளித்தும், நஞ்சுண்டும் மடிந்தனர்.

1965 பிப்ரவரி 9, 10 ஆகிய நாட் களில் தமிழகமெங்கும் அஞ்சல் நிலைய மறியல் போராட்டங்கள் என்றும் 11 அன்று தொடர்வண்டி மறியல் போராட்டம் என்றும் 12 அன்று தமிழகம் தழுவிய பொது வேலை நிறுத்தம் என்றும் மாண வர் போராட்டக் குழு அறிவித்தது.

1965 பிப்ரவரி 10ஆம் நாள் _- இந்தி எதிர்ப்புப் போராட்டம் கொலைக் களங்களையும், பிணக் குவியல்களையும் கண்ட நாளாகும். மாணவர்களுடன் பொது மக்களும் சேர்ந்து போராட்டங்களில் ஈடு பட்டனர். இராணுவம் இறக்கப் பட்டது.

திருப்பூர், பொள்ளாச்சி, குமார பாளையம் மூன்று இடங்களில் கூட்டம் கூட்டமாகத் தமிழர்கள் சுட்டுக் கொல்லப் பட்டனர். சரக்குந்துகளில் பிணங்களை ஏற்றிச் சென்றனர். தமிழகம் முழுக்கப் பல்வேறு ஊர்களில் துப்பாக்கிச் சூடுகள் நடந்தன. மொத்தமாக முந்நூறு பேர்களுக்கு மேல் தமிழர்கள் சுட்டுக் கொல்லப் பட்டனர் என்று அம்மொழிப் போரில் மாணவராய் கலந்து கொண்டவரும், பின்னர் காரைக் குடி அழகப்பா பல்கலைக் கழகத்தில் துணை வேந்தராக இருந்து ஓய்வு பெற்றவரும், ஆய்வாளருமான பேராசிரியர் முனைவர் அ. இராம சாமி, “என்று முடியும் இந்த மொழிப் போர்?” என்ற நூலில் எழுதியுள்ளார்.

கள ஆய்வுகள், அன்றைய முதல்வர் பக்தவத்சலம் உள்ளிட் டோரிடம் நேர்காணல், அக்காலத் தில் வந்த ஏடுகளில் செய்தித் திரட்டல் எனப் பலவகைகளில் செய்தி திரட்டி இந்நூலை எழுதி யுள்ளார். இந்நூலை சிறந்த தமிழ்ப் பற்றாளரான மதுரை அனல் விவே கானந்தன் அவர்கள் முதலில் வெளி யிட்டார்கள். இப்போது பூம்புகார் பிரசுரம் மறுபதிப்புச் செய்துள்ளது.
மொழிப் போரை ஒடுக்கு வதற்குத் துப்பாக்கிச் சூடு நடத்திட ஆணை பெற்று வந்த இராணு வத்தினரிடையிலும், காவல் துறை யினரிடையிலும் இன உணர்ச்சி பீறிட்டது.

கோவையில் துப்பாக்கிச் சூடு நடத்தியது இராணுவம். ஒரு சிறுவன் பலியானான். கூட்டம் சிதறியது. பிணமாகக் கிடந்த சிறுவனை தூக்கி மடியில் வைத்துக் கொண்டு சீருடையுடன் கையில் துப்பாக்கியுடன் ஓர் இராணுவ வீரன் அழுது புலம்பினான். “எந்தத் தமிழன் பெற்ற பிள்ளையோ இப்படிப் பலியாகிவிட்டாயே!” என்று பலரறிய அழுதான்!

மதுராந்தகம் காவல் நிலையத் தில் காவல் அறையில் அடைக்கப் பட்டிருந்த இந்தி எதிர்ப்பாளர்கள் தப்பிவிடாமல் காவல் காத்த காவலர் புத்திரசிகாமணி என்பவர், தமிழுணர்ச்சி மேலிட வீதியில் “இந்தி ஒழிக, தமிழ் வாழ்க!” என முழங்கிக் கொண்டே ஓடி, அஞ்ச லகத்திலிருந்த இந்தி எழுத்து களைத் துப்பாக்கியால் சுட்டார். அவர் கைது செய்யப்பட்டு, இடை நீக்கம் செய்யப்பட்டார்.

நடுவண் அரசில் அமைச்சர் களாக இருந்த சி. சுப்பிரமணியமும், ஓ. வி. அழகேசனும் இந்தித் திணிப் பையும் அடக்குமுறையையும் கண் டித்துப் பதவி விலகினர். அனைத் திந்தியக் காங்கிரசுத் தலைவராக இருந்த காமராசர் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை கொச்சைப்படுத்தி, கண்டனம் செய்து அறிக்கை எதுவும் விடவில்லை. இந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைக் காலிகளின் போராட்டம், ரவுடி களின் போராட் டம் என்று கொச் சைப்படுத்தி அறிக்கை விட்டார் பெரியார். தொடக்கத்திலிருந்து மாணவர் போராட்டத்தை அவர் எதிர்த்தார்.

திருப்பூரிலும் குமாரபாளையத் திலும் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக சுட்டுக் கொல்லப்பட்ட போது, பொது மக்கள் திரண்டு திருப்பூரில் ஒரு துணை ஆய்வா ளரை வண்டிச் சக்கரத்தில் கட்டி எரித்துக் கொன்றனர். குமார பாளையத்தில் காவிரிப் பாலத்தில் மாட்டிக் கொண்ட இரு காவல் துறையினர் மீது பாலத்தின் இரு முனைகளிலும் திரண்ட பொது மக்கள் கல்லெறிந்தனர். உயிர் பிழைக்கக் காவிரி ஆற்றில் குதித்த அவ்விருவரும் நீரில் மூழ்கி இறந் தனர். கூட்டம் கூட்டமாக அப் பாவிப் பொதுமக்கள் கொல்லப் பட்டதால், மக்கள் கொடுத்த பதிலடி என்று பார்க்காமல், “இனி மேல் திராவிடர் கழகத்தின் தோழர்கள் மண்ணெண்ணெய் பாட்டிலும் தீப்பெட்டியும் வைத்துக் கொள்ளுங்கள். போராட்டக் காலிகளை கண்டால் கொளுத் துங்கள்” என்று அறிக்கை வெளி யிட்டார் பெரியார்.

இதே பெரியார், 1938இல் இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராட்டம் நடத்திச் சிறை சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது, இந்தியைத் திணித்த காங்கிரசுக் கட்சியை எதிர்த்தார் பெரியார். 1965 காலத்தில் தி.மு.க.வை ஒழிக்க வெறி கொண்டு செயல்பட்ட பெரியார், காங்கிரசை ஆதரித்தார். மாணவர் கள் உள்ளிட்ட முந்நூறு தமிழர் கள் -சுட்டுக் கொல்லப்பட்ட போது காவல் துறையினரின் அட்டூழியத் தை பெரியார் கண்டிக்க வில்லை. காங்கிரசுக் காரர்களான சி. சுப்பிர மணியமும், ஓ.வி. அழகேசனும் காட்டிய அளவுக்குக்கூட அரசின் மீதான எதிர்ப்புணர்வை பெரியார் காட்டவில்லை.
பெரியாரின் இந்நிலைபாட்டை தி.மு.க. எதிர்ப்பு என்பதோடு சுருக்கி விட முடியாது. தமிழ் எதிர்ப்பும் அதில் சேர்ந்துள்ளது.

“நான் 1938இல் இந்தித் திணிப்பை எதிர்த்தது, இந்திக்குப் பதிலாகத் தமிழ் வேண்டும் என்ப தற்காக அல்ல. இந்திக்குப் பதிலாக ஆங்கிலம் வேண்டும் என்பதற் காகத்தான்; தமிழ் காட்டுமிராண்டி மொழி என்று நான் நாற்பதாண்டு களாகச் சொல்லி வருகிறேன்;” என்று பெரியார், தி.மு.க. ஆட்சியை ஆதரித்த காலத்திலும் 1968, 1969 ஆண்டுகளில் அறிக்கை கொடுத் துள்ளார். இவையெல்லாம் விடுதலை ஏட்டில் வந்துள்ளன; ஐயா ஆனைமுத்து அவர்கள் தொகுத்த பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் தொகுப்புகளிலும் உள்ளன.

இன்னொரு பக்கம், பெரியாரின் வழித் தோன்றல்கள் என்று சொல் லிக் கொள்ளும் தி.மு.க. தலைவர் அண்ணா தொடங்கி, கலைஞர் கருணாநிதி வரை இந்த மொழிப் போராட்டத்தில் நடந்து கொண்ட முறை வெட்கப்படத் தக்கவை. ஒரு கட்டத்தில் அண்ணா, “மாணவர் நடத்தும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கும் தி.மு.க.வுக்கும் தொடர்பில்லை” என்று அறிக்கை வெளியிட்டார்.

இந்தித் திணிப்பை எதிர்த்த அண்ணாவின் பேச்சுகள், எழுத்து கள், கலைஞர் கருணாநிதி உள் ளிட்ட தி.மு.க. தலைவர்களின் பேச்சுகள், எழுத்துகள், தி.மு.க. நடத்திய மாநாடுகளில் போட்ட தீர்மானங்கள் ஆகியவற்றால் உணர்ச்சி பெற்ற மாணவர்களும் இளைஞர்களும்தாம் இந்தி எதிர்ப் புப் போராட்டத்தின் கள நாயகர் கள் களப் போராளிகள்.

இராணுவத்தையும் காவல்துறை யினரையும் பிணங்களின் மேல் நின்று கொண்டு மக்கள் எதிர்க்கும் போராட்டமாக - மாபெரும் தமிழ்த் தேசிய எழுச்சியாக இந்தி எதிர்ப்புப் போர் வடிவம் கொண்டபின், தி.மு.க. தலைவர்கள் அப்போராட் டத்தைக் கண்டு அஞ்சினர்; பின் வாங்கினர். போராடும் மாணவர் களை, -போராடும் மக்களை தி.மு.க. தலைவர்கள் கைவிட்டனர். உருப் படியான தலைமை இல்லாத போராட்டமாக - அது நடந்து முடிந் தது! அப்போதும், போராட்டத் தைக் கைவிடச் சொல்லி விடிய விடிய நுங்கம்பாக்கம் வீட்டில் வைத்து மாணவர் தலைவர்களை வலியுறுத்தினார் அண்ணா. இந்த மாபெரும் இந்தி எதிர்ப்பு எழுச்சி யைப் பயன்படுத்தி இந்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்து உருப்படியான உறுதிமொழி எதையும் பெற தி.மு.க. தலைவர்கள் முன்வரவில்லை.

ஐம்பது நாட்களுக்குமேல் போ ராட்டம் தொடர்ந்தது. தலைமை அமைச்சர் லால் பகதூர் சாத்திரி வானொலியில் பேசி, ஆங்கிலத்தை நீக்கிவிட்டு இந்தியை மட்டும் ஆட்சி மொழியாகத் திணிக்க மாட்டோம் என்று பொத்தாம் பொதுவாக ஒரு வாக்குறுதி கொடுத்து போராட்டத்தைக் கைவிடுமாறு வேண்டுகோள் விட்டார். மாணவர் போராட்டம் முடிவுக்கு வந்தது.
அசாமில் மாணவர்கள் வெளி யாரை எதிர்த்துப் பெரும் போ ராட்டம் நடத்தினார்கள். இறுதி யாகத் தலைமை அமைச்சர் இராசீவ் காந்தியுடன் அசாம் மாணவர் தலைவர்கள் பேச்சு நடத்தி உடன்பாடு கண்டு, ஒப் பந்தத்தில் கையப்பமிட்டு போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தனர். அவ்வாறெல் லாம் உறுதியான _- தெளிவான வழி காட்டல் தரும் தலைமையாக தி.மு.க. செயல்படவில்லை.

போராடிய மாணவர் தலைவர் களுக்குத் தெளிவான கோரிக்கை வைக்கவும் தெரியவில்லை. இக்கட்டு ரையை எழுதும் நான், 1965-இல் திருக்காட்டுப்பள்ளி உயர் நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தேன். எங்கள் பள்ளி மாணவர்களும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நான் இந்தி எதிர்ப்புப் போராட்டக் குழுவின் செயலாளராக இருந்து செயல்பட்டேன். செங்குட்டுவன் என்ற நண்பர் போராட்டக் குழுவின் தலைவராக இருந்தார். இந்தி எதிர்ப்புப் பேரணியின்போது, எனது இந்திப் புத்தகம் தான் கடைத்தெரு முச்சந்தியில் எரிக்கப் பட்டது.

நாங்கள் தமிழைக் காக்கத்தான் போராடினோம். ஆனால், தமிழ்க் காப்பிற்கான மொழிக் கொள்கை எங்களிடம் இல்லை. இந்தி வேண் டாம் ஆங்கிலம் வேண்டும் என்பது தான் இந்தி எதிர்ப்புப் போராட் டத்தின் நடுநாயகக் கோரிக்கை. ஆங்கிலத்தை அறவே நீக்குவதாக அரசமைப்புச் சட்டமும் கூற வில்லை; 1965இல் இயற்றப்பட்ட அலுவல் மொழிச் சட்டமும் கூற வில்லை. அரசமைப்புச் சட்டம் செயலுக்கு வந்த 15 ஆண்டுகளுக்குப் பின்னும், அதாவது 1965க்குப் பின்னரும் இந்தியுடன் ஆங்கிலமும் அலுவல் மொழியாக நீடிக்கலாம் என்பதுதான் 1963 அலுவல் மொழிச் சட்டம். “நீடிக்கலாம் _- னீணீஹ்” என்று ஆங்கிலத்தில் உள்ளதை “sலீணீறீறீ நீடிக்கும்” என்று திருத்த வேண்டும் என்பதுதான் தி.மு.க.வின் கோ ரிக்கை. அதுதான் மாணவர்களின் மையக் கோரிக்கை! இதற்குத்தான் இவ்வளவு பெரிய மொழிப் போராட்டம்.
உலகில் எங்கும் காணாத அளவுக்கு தாய்மொழி காக்க முந் நூறு பேரைப் பலி கொடுத்த போராட்டம் இது!

இடையிடையே தமிழ் உள் ளிட்ட 14 மொழிகளையும் ஒன்றிய அரசின் அலுவல் மொழிகள் ஆக்க வேண்டும் என்று அண்ணா பேசு வார். அவ்வளவுதான் வரையறுக் கப்பட்ட தெளிவான மொழிக் கொள்கை எதுவும் இன்று வரைக் கும் தி.மு.க.விற்குக் கிடையாது.

தி.மு.க.வுக்கே தெளிவான மொழிக் கொள்கை இல்லாத போது, அ.இ.அ.தி.மு.க., தே.மு.தி.க. உள்ளிட்ட மற்ற கட்சிகளைப் பற்றி விவாதிக்க என்ன இருக்கிறது? கடைசியில் இராசாசியின் மொழிக் கொள்கை தி.மு.க.வின் மொழிக் கொள்கை ஆனது. ‘ழிமீஸ்மீக்ஷீ பிவீஸீபீவீ; ணிஸ்மீக்ஷீ ணிஸீரீறீவீsலீ’ - “ஒரு போதும் இந்தி வேண்டாம், எப்போதும் ஆங்கிலம் வேண்டும்!” என்பதே அது. இதில், தமிழுக்கு எங்கே இடம் இருக் கிறது?

அலுவல் மொழிச் சட்டத்தில் 1967இல் செய்த திருத்தத்தின் வழி தி.மு.க. கோரிய ஷிலீணீறீறீ-லையும் காங்கிரசு ஆட்சி போட்டுவிட்டது. காலவரம்பு வரையறுக்கப்படாமல் இந்தியுடன் ஆங்கிலமும் நீடிக்கும்.

இவ்வளவுக்குப் பிறகு இந்தித் திணிப்பு எவ்வாறுள்ளது? 1965-இல் 1970-இல் இருந்ததைவிடப் பல மடங்கு அதிக அளவிலும் தீவிர முனைப்புடனும் இந்தி தமிழ் நாட்டில் திணிக்கப் படுகிறது. நடுவண் அமைச்சரவையில் தி.மு.க. கூட்டணி சேர்ந்தப் பிறகு தமிழகத் தில், “தேசிய” நெடுஞ்சாலைகளில் _ -பரவலாக இந்தி வழிக்குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.“தேசிய நெடுஞ் சாலை”த் துறை அமைச்சராக இருந்தவர் தி.மு.க.வின் டி.ஆர். பாலு!

1967-தேர்தலில் தி.மு.க. தமிழக ஆட்சியைப் பிடிப்பதற்கு இந்தி எதிர்ப்பு ஈகிகளும், போராட்டங் களும் தாம் படிக்கட்டுகளாக இருந்தன. ஆனால் தி.மு.க. ஆட்சி பீடம் ஏறியப் பிறகும் இந்திப் பாடம் நீக்கப்பட வில்லை. கல்லூரி களில் தேசிய மாணவர் படைப் பயற்சி (ழிசிசி) யில் இந்திக் கட்டளைச் சொற்கள் நீக்கப்பட வில்லை. அண்ணா முதல்வராக இருந்தாலும், இந்தி நீக்கப்பட வில்லை என்பதற்காக, 1967-இல் மீண்டும் மாணவர் போராட்டம் தமிழகம் முழுவதும் எழுந்தது. உடனடியாக அண்ணா வாக்குறுதி அளித்தார்.

அதன்படி, 1968 - சனவரியில் சட்டப் பேரவையில் இரு மொழிக் கொள்கையை அறிவித்தார். இந்திப் பாடம் பள்ளிகளிலிருந்து நீக்கப் பட்டது. கல்லூரிகளில் என்.சி.சி. நீக்கப்பட்டு, நாட்டு நலப் பணித் திட்டம் கொண்டு வரப்பட்டது.
அண்ணா கொண்டுவந்த இரு மொழித் திட்டத்தில் தமிழ் கட்டாயப் பாடமாக இல்லை. முதல் பிரிவில் தமிழ் அல்லது ஏதாவ தொரு இந்திய மொழி என்று கூறப் பட்டது.

தமிழ் மொழி கட்டாயப் பாட மில்லை. ஆனால், இரண்டாவது பிரிவில் உள்ள “ஆங்கிலம்” கட்டாயப் பாடம். முதல் பிரிவில் தமிழைக் கட்டாயப் பாடமாக்கி விட்டு, இரண்டாவது பிரிவில் ஆங்கிலம் அல்லது ஏதாவதொரு அயல் மொழி என்று வைத்திருக்க வேண்டும். அவ்வாறான தாய் மொழிக்கு முதன்மைதரும் மொழிக் கொள்கை தி.மு.க.விடம் இல்லை.

ஆங்கில மோகத்தை வளர்த்த கட்சி தி.மு.க. . 1965 மொழிப் போரை இந்தித் திணிப்பு எதிர் தமிழ் என்று நடத்துவதற்கு மாறாக, இந்தித் திணிப்பு எதிர் ஆங்கிலத் திணிப்பு என்று மாற்றியது தி.மு.க.
அடுத்து, இந்தியாவுக்கொரு இணைப்பு மொழி தேவை என்ற காங்கிரசின் கொள்கையைத் தி.மு. க.வும் ஏற்றுக் கொண்டது. அந்த இணைப்பு மொழி இந்தி_யா அல்லது ஆங்கிலமா என்பதில் தான் காங்கிரசுக்கும் தி.மு.க.வுக்கும் இடையே முரண்பாடு எழுந்தது.

வளர்ச்சியடைந்த பல்வேறு மொழிகள் பேசக் கூடிய நாட்டில் அவற்றுள் ஒரு மொழியை இணைப்பு மொழியாக்கும் வழக்கம் உலகில் பெரும்பாலும் இல்லை. அவ்வாறு ஒரு மொழியை இணைப்பு மொழியாக்கினால் அந்த மொழி மற்ற மொழிகள் மீது ஆதிக்கம் செலுத்தும்; அந்த மொழி பேசும் இனம், ஆதிக்க இனமாக வளரும். இதைத் தவிர்க்கவே பொது மொழி _- இணைப்பு மொழி என்ற பெயர்களில் ஒரு மொழியைக் கொண்டு வருவதை சனநாயக உணர்வுள்ள நாடுகள் ஏற்பதில்லை.

அடுத்து, மொழி என்பது ஓர் இனத்தின் தாய் மொழியாக - ஒரு தாயக நிலப் பகுதியின் மொழியாக விளங்குகிறது. மொழி - தேசிய இனம் - தாயகம் இம்மூன்றும் பிரிக்க முடியாதவை.

தமிழகம் தமிழர்களின் தாயகம், தமிழர்கள் ஒரு தனித் தேசிய இனத் தவர் என்று இந்திய அரசமைப்புச் சட்டம் ஏற்கவில்லை. காங்கிரசு, கம்யூனிஸ்ட் கட்சிகள், பா.ச.க. போன்றவையும் தமிழர்களைத் தனித் தேசிய இனமாகவோ, தமிழ் நாடு தமிழர்களின் தாயகம் என்ப தாகவோ ஏற்கவில்லை. இந்தியர் _- இந்தியா _ என்ற ஒற்றை வடிவத் திற்குள் அடங்கிய மொழிச் சிறு பான்மையினர்; பிராந்தியத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுதான் மேற் படிக் கட்சிகளின் நிலைபாடு.

எனவே, அவை இந்தி - ஆங்கிலம் _ பிராந்திய மொழி என்று மும் மொழிக் கொள்கையை இந்தி பேசாத மாநிலங்களில் திணிக் கின்றன; இந்தி மாநிலங்களுக்கு மும் மொழிக் கொள்கை கிடையாது.
தி.மு.க. போன்ற திராவிடக் கட்சிகளோ இந்தியா _ திராவிடம் _ தமிழ்நாடு என்ற மூன்று நாடுகள் அல்லது தேசங்கள் கொண்ட கருத்தியலை முன்வைத்தவை. அவை இந்தித் திணிப்பை எதிர்த் தாலும் ஆங்கிலத் திணிப்பில் நிலை கொண்டுள்ளன.

தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்களான வங்கி கள், அஞ்சலகம், வருமான வரித் துறை, தொடர்வண்டித் துறை, வாழ்நாள் ஈட்டுறுதிக் கழகங்கள் போன்றவற்றில் ஆங்கிலம் அல்லது இந்தி அலுவல் மொழியாக இருக்க வேண்டிய தேவை என்ன வந்தது? அவை அனைத்தும் தமிழில்தான் இயங்க வேண்டும்.

அனைத்திந்தியத் தலைமையகத் திற்குக் கணக்கு அனுப்பும் போது, ஆங்கிலத்தில் அனுப்பினால் போ தும். அது அந்த அலுவலகத்தின் மொத்த வேலைப் பளுவில் ஐந்து விழுக்காடு இருந்தால் அதிகம். அந்த ஐந்து விழுக்காடு மட்டுமே ஆங்கிலத்தில் இருக்க வேண்டும். மற்ற தெல்லாம் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும்.

இப்பொழுது மேற் கண்டவற் றில் தொடர்வண்டித் துறையைத் தவிர மற்றவற்றில் தமிழகத்தில் வேலை யில் சேர இந்தி அல்லது ஆங்கிலத்தில் தேர்வெழுத வேண்டி யுள்ளது. இந்த அநீதியை நீக்கி, தமிழில் மட்டுமே தேர்வெழுதும் முறையைக் கொண்டு வர வேண் டும்.
எனவே, மும்மொழிக் கொள்கை இந்தி _ஆங்கிலம் இரண்டையும் தமிழ்நாட்டில் திணித்துத் _ தமிழை -_ தமிழர்களை வீழ்த்தும் மொழிக் கொள்கையாகும்.

இருமொழிக் கொள்கை என்பது ஆங்கிலத்தைத் திணித்துத் தமிழை, தமிழர்களை வீழ்த்தும் கொள்கை யாகும்.
ஒரு மொழிக் கொள்கை என்பது தமிழ்நாட்டில் தமிழ் மட்டுமே கட்டாய மொழிப் பாடமாக இருக் கும்; பயிற்று மொழியாக இருக்கும்; தமிழக அரசின், இந்திய அரசின் அலுவலகங்களின் அலுவல் மொழி யாகவும், உயர் நீதிமன்றம் வரை வழக்கு மொழியாகவும் இருக்கும்.

ஆங்கிலம் அல்லது வேறொரு மொழி விருப்பப் பாடமாக இருக் கும். ஏதாவதொரு இரண்டாவது மொழி கற்பது கட்டாயமாக இருக்கும். அது எந்த மொழி என்பதுதான் விருப்பத் தேர்வாக இருக்கும். இரண்டுக்கு மேற்பட்ட எத்தனை மொழிகள் வேண்டும் என்பதை அவரவர் விருப்பத்தின் அடிப்படையில் கற்றுக் கொள்ள லாம்.

மொழிப் போரின் 50ஆவது ஆண்டு விழாவில் - நாம் சரியான மொழிக் கொள்கையை முன்வைப் போம்.

1. இந்திய ஒன்றிய அரசின் அலுவல் மொழிகளில் ஒன்றாகத் தமிழை ஏற்றுச் சட்டமியற்ற வேண்டும்.

2. தமிழகத்தில் இயங்கும் இந்திய அரசு நிறுவனங்களில் அலுவலகங் களில் தமிழ் மட்டுமே அலுவல் மொழியாக இருக்க வேண்டும்.

3. தமிழ்நாட்டில் தமிழ் கட்டாய மொழிப் பாடம்; கட்டாயப் பயிற்று மொழியாக இருக்க வேண்டும். விருப்பப் பாடமாக ஆங்கிலம் அல் லது வேறொரு மொழியைப் படிக்க லாம்.

4. தமிழக அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஆங்கிலப் பயிற்று மொழி வகுப்புகள் தொடங்கி இருப்பதை முற்றாகக் கைவிட வேண்டும்.

5. தமிழக வேலைவாய்ப்பில் உடனடித் திட்டமாக தமிழ்வழியில் படித்தவர்களுக்கு 80 விழுக்காடு வேலை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

6. மருத்துவம் _- பொறியியல் போன்ற உயர் தொழிலியல் கல்லூரி களில் மாணவர் சேர்க்கையில் தமிழ்வழியில் படித்தவர்களுக்கு 80 விழுக்காடு ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
2015 முழுவதும் மொழிப் போரின் 50ஆவது ஆண்டு விழா வைக் கடைபிடிக்கும் வகையில் வேலைத் திட்டங்களை வகுத்துக் கொள்வோம்!

இந்திய அரசின் இந்தித் திணிப் பும் தமிழக அரசின் ஆங்கிலத் திணிப்பையும் முறியடிப்போம்; மக்கள்திரள் எழுச்சிகளை உரு வாக்குவோம். தக்க விளைவுகளை உண்டாக்குவோம்! இக்கடமை களை நிறைவேற்றினால், மொழிப் போர் ஈகியருக்கு நாம் உண்மை யான வீரவணக்கம் செலுத்தியவ ராகவும் நன்றிக் கடன் செலுத்தியவ ராகவும் இருப்போம்!

Labels: ,

“யார் பிரிவினைவாதி..?” -- தோழர் பெ. மணியரசன் வினா!

Thursday, January 1, 2015

“யார் பிரிவினைவாதி..?”
===========================
ம.தி.மு.க. விழிப்புணர்வுப் பரப்புரைக் கூட்டத்தில் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் வினா!)

மறுமலர்ச்சி தி.மு.க.பொதுச் செயலாளர் திரு.வைகோ அவர்கள், காவிரியில் கர்நாடகம் புதிய அணைகள் கட்டுவதைத் தடுத்திடல், மீத்தேன் திட்டத்தைத் திரும்பப் பெறுதல், முழு மதுவிலக்கைச் செயல்படுத்துதல் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த 12.12.2014லிருந்து தஞ்சை, -திருவாரூர், நாகை மாவட்டங்களில் விழிப்புணர்வுப் பரப்புரைப் பயணம் நடத்தினார்.
14.12.2014 அன்று, தஞ்சை மாவட்டம் - ஒரத்தநாடு பேருந்து நிலையம் அருகில், அன்றையப் பரப்புரையின் நிறைவுப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்திற்கு, ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு. துரை. பாலகிருட்டிணன் அவர்கள் தலைமை தாங்கினார். திரு.வைகோ அவர்கள் சிறப்புச் சொற்பொழிவாற்றினார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈரோடு திரு. அ.கணேசமூர்த்தி, ம.தி.மு.க. தஞ்சை மாவட்டச் செயலாளர் திரு. உதயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தின் தொடக்கத்தில், ஒரத்தநாடு கோபு குழுவினர் எழுச்சிப் பாடல்கள் வழங்கினர்.
மேற்கண்ட மூன்று கோரிக்கைகளை முன்வைத்து நடக்கும் ம.தி.மு.க.வின் விழிப்புணர்வுப் பரப்புரைக்கு ஆதரவு தெரிவித்து, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் உரையாற்றினார். அவரது உரையின் சுருக்கம் வருமாறு:
“காவிரி உரிமையை மீட்பதற்காகக் காவிரி உரிமை மீட்புக் குழு அமைத்து கடந்த 2 ஆண்டுகளாகத் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறோம். காவிரி உரிமை மீட்புக் குழுவில், ம.தி.மு.க., மற்ற அரசியல் இயக்கங்கள், விவசாய சங்கங்கள் ஆகியவை இருக்கின்றன. திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கடலூர் மாவட்டங்களில் காவிரி உரிமை மீட்புக் குழு, காவிரி உரிமை மீட்கத் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றது. இப்போராட்டங்களில் ம.தி.மு.க. தோழர்கள் சிறப்பாகப் பங்குபெற்று வருகின்றனர். குறிப்பாக, ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் அண்ணன் துரை. பாலகிருட்டிணன் அவர்களும், மாவட்டச் செயலாளர் அன்பு சகோதரர் உதயக்குமார் அவர்களும் இப்போராட்டங்களில் முன்னணியில் நிற்கின்றனர்.
கடந்த காலங்களில் காவிரி உரிமை மீட்புக் குழுதான் முதன்மைச் சக்தியாக இருந்து போராட்டங்களை நடத்தி வந்தது. ஆனால், இந்த ஆண்டு பல்வேறு விவசாயிகள் சங்கங்களும் பல்வேறு அரசியல் கட்சிகளும் காவிரி உரிமையை மீட்க எழுச்சிமிகு போராட்டங்களை நடத்தியுள்ளன. இது மகிழ்ச்சி யளிக்கிறது. விவசாயிகளுக்கு ஊக்கமளிக்கிறது.
இந்த நிலையில், இன்னும் மேலே சென்று அண்ணன் வைகோ அவர்கள் டெல்டா மாவட்டங் களில் கிராமம் கிராமமாகப் பரப்புரை செய்து வருவது, பெரும் பாராட்டிற்குரியது; பெரும் பயனளிக்கக் கூடியது.
யார் பிரிவினைவாதிகள்?
தமிழ்நாடு இழந்த உரிமைகளை மீட்பதற்காக நாம் குரல் கொடுத்தால், பிரிவினைவாதிகள் என்று சிலர் கூறுகிறார்கள். உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தாலும், அந்தக் காவிரி இறுதித் தீர்ப்பை இந்திய அரசு அரசிதழில் வெளியிட்டாலும் அதைச் செயல்படுத்த முடியாது, ஒரு சொட்டுத் தண்ணீர்க்கூட தமிழ்நாட்டிற்குத்தர முடியாது என்று சொல்லும் கர்நாடகத்தினர் பிரிவினை வாதிகள் இல்லையா?
உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முரணாகக் காவிரியில் புதிதாக 2 அணை கட்டி மேட்டூருக்குத் தண்ணீர் வராமல் தடுக்கப் போகும் கர்நாடக அரசு பிரிவினை வாதி இல்லையா? உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மீறுகின்ற கர்நாடக அரசைக் கண்டித்து சரியான பாதையில் அதைச் செயல்பட வைக்க முன்வராத இந்திய அரசு பிரிவினைவாதத்தைத் தூண்டவில்லையா?
கன்னடர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே உள்ள சிக்கலில் நடுநிலையாகச் செயல்படாமல் பாகுபாடு பார்த்து தமிழர்களுக்கு எதிராகவும், கன்னடர்களின் சட்டவிரோதச் செயல்களுக்கு ஆதரவாகவும் செயல்படும் இந்திய அரசின் அணுகுமுறை பிரிவினைவாதம் இல்லையா?
முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர்த் தேக்கலாம், அணை வலுவாக இருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்படி தமிழகம் 142 அடி தேக்கியதும், உச்ச நீதிமன்றம் அமைத்த கண்காணிப்புக்குழு பார்வையிட்டு அணை வலுவாக இருக்கிறது என்று அண்மையில்தான் சான்றளித்தது. இந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று கேரள அரசு தொடுத்த வழக்கை உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு அமர்வு ஆய்வு செய்து தள்ளுபடி செய்தது. கேரள அரசு புதிதாக அணை கட்டக் கூடாது என்று அந்தத் தீர்ப்பில் கூறியது. கடந்த மே மாதம் தான் இந்தத் தீர்ப்பு வந்தது.
ஆனால், இப்பொழுது பா.ச.க. அரசு நடுவண் அமைச்சர் ஜவடேக்கர் தலைமையிலுள்ள சுற்றுச்சூழல் -_- வனவிலங்கு பாதுகாப்புத் துறை அமைச்சகம், கேரள அரசு புதிய அணை கட்ட முல்லைப் பெரியாற்றுப் பகுதியில் 10 சதுர கிலோ மீட்டர் பரப்பில் ஆய்வு செய்யலாம் என்று அனுமதி வழங்கியிருக்கிறது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நடுவண் அரசே காலில் போட்டு மிதித்து, காறித்துப்பி கேரளம் புதிய அணை கட்டலாம் என்று அனுமதி கொடுத்தால், இது பிரிவினைவாதம் இல்லையா?
நாடாளுமன்றம் ஒரு சட்டம் இயற்றினால், அச்சட்டம் அரசமைப்புச் சட்டத்திற்கு முரண்படாமல் இருக்கிறதா என்பதை ஆராய்ந்து, அச்சட்டம் செல்லும்  செல்லாது என்று அறிவிக்கும் உயர் அதி காரம் படைத்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பைப் புறக்கணித்து, தமிழர்களுக்கு எதிராகவும் - சட்ட விரோத மலையாளிகளுக்கு ஆதரவாகவும் நடுவண் அரசு செயல்படுவது, நடுநிலை தவறி இரண்டு இனங்களுக்கு இடையே பிரிவினையை உண்டாக்குவது இல்லையா? இந்திய அரசின் பிரிவினை அணுகுமுறை இல்லையா?
காலம் காலமாகத் தமிழ்நாட்டின் பகுதியாக இருந்த கச்சத்தீவை, இலங்கைக்குத் தாரை வார்த்துக் கொடுத்த இந்திய அரசு, இப்போது கச்சத்தீவு ஒருபோதும் இந்தியாவில் இருந்ததில்லை என்று உச்ச நீதிமன்றத் திலும், உயர் நீதிமன்றத்திலும் பதில் மனு தாக்கல் செய்திருக்கிறது. இதன் பொருள், கச்சத்தீவு ஒருபோதும் தமிழ்நாட்டில் இருந்ததில்லை என்பதுதானே? சிங்களர்களுக்குச் சாதகமாகவும் தமிழர்களுக்குப் பாதகமாகவும் இந்திய அரசு எடுத்திருக்கும் இந்த நிலைபாடு - பிரிவினைவாதம் இல்லையா?

தமிழ் மக்களைப் பகைப் போக்கோடு பார்த்து, தமிழர்களின் உரிமைகளைப் பறிக்க - உயிர்களைப் பறிக்க சிங்களன் முயன்றால், இந்திய அரசு சிங்கள னுக்குத் துணை செய்யும். கன்னடர்களும் மலையாளிகளும் முயன்றால் அவர்களுக்கு இந்திய அரசு துணை செய்யும். எல்லா நிலையிலும் தமிழர்களுக்கு எதிரா கவே இந்தியா செயல்படும். இதுதானே இந்திய அரசு, தமிழர்களுக்கு எதிராகக் கடைபிடிக்கும் பிரிவினை வாதம்?
இப்படிப்பட்ட இந்திய அரசின் நயவஞ்சகத்தை முறியடிக்கும் வகையில், தமிழ்நாட்டு அரசியல் இல்லை. ஒரு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, ஒரு முடிவெடுத்து பிரதமரைச் சந்தித்து வலியுறுத்துவதற்குக் கூட தமிழ்நாட்டிலே உள்ள அ.தி.மு.க. - தி.மு.க. கட்சி களுக்குப் பொறுப்புணர்ச்சியோ மக்கள் மீது அக்கறையோ கிடையாது. அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தினால், இக்கட்சித் தலைவர்கள் ஒருவர் குரல் வளையை ஒருவர் கடிக்கக்கூடிய அநாகரிகக் கும்பலா? மற்ற மாநிலங்களில் பதவிச் சண்டை இருந்தாலும், மக்கள் பிரச்சினைகளில் ஒன்றுபடுகிறார்கள். அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்துகிறார்கள். அங்கெல்லாம் மக்களைக் கண்டு கட்சித் தலைவர்கள் பயப்படுகிறார்கள். இங்கே, தமிழ்நாட்டில் கட்சித் தலைவர் களைக் கண்டு மக்கள் பயப்பட வேண்டும் என்ற நிலையை உருவாக்கியிருக்கிறார்கள்.
இந்தத் தலைவர்கள் ஆட்டு மந்தை - மாட்டு மந்தை போல், தங்களுக்கு அடிமைப்பட்ட ஓட்டு மந்தை வைத்திருப்பதாகக் கருதிக் கொள்கிறார்கள். அண்ணா தி.மு.க.வில் விவசாயிகள் இல்லையா? அவர்களுக்குப்  பாதிப்பில்லையா? தி.மு.க.வில் விவசாயிகள் இல் லையா? அவர்களுக்குப் பாதிப்பில்லையா? இந்த விவசாயிகள் தங்கள் தங்கள் கட்சியை, உரிமைப் பிரச்சினைகளில் செயல்படுமாறு தூண்ட வேண்டும்.
காவிரிப் படுகை மண்ணை - பாலைவனமாக மட்டுமல்ல, நஞ்சாக மாற்றும் மீத்தேன் திட்டத்தைத் தடுப்பதற்கு அண்ணா தி.மு.க.வும், தி.மு.க.வும் பகிரங்கமாக முன்வர வேண்டும். அவ்வாறு வருமாறு அக்கட்சிகளை, அக்கட்சிகளில் உள்ள விவசாயிகள் வலியுறுத்த வேண்டும்.
அண்ணன் வைகோ அவர்களின் இந்த விழிப் புணர்வுப் பரப்புரைப் பயணம் வெற்றியடைய தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்”.
இவ்வாறு தோழர் பெ.மணியரசன் பேசினார்.
கூட்டத்தில், திரளான பொது மக்களும், தமிழின உணர்வாளர்களும் பங்கேற்றனர்.

Labels:

"பிஞ்சுகளின் குருதி குடித்த தாலிபான்களின் மனித வேட்டை. மனிதகுல அழிப்பு வன்முறைகளுக்கு தீர்வென்ன..?" -- பெ.மணியரசன் கட்டுரை.


"பிஞ்சுகளின் குருதி குடித்த தாலிபான்களின் மனித வேட்டை. மனிதகுல அழிப்பு வன்முறைகளுக்கு தீர்வென்ன..?"
--பெ.மணியரசன் கட்டுரை.

பாகிஸ்தானின் பெஷாவர் நகரிலுள்ள பள்ளிக்கூடம் ஒன்றில், தாலிபான் பயங்கரவாதிகள் கடந்த 16.12.2014 அன்று திடீரென்று புகுந்து, தேர்வெழுதிக் கொண்டிருந்த மாணவர்களை ஒவ்வொரு வகுப்பறைக்குள்ளும் சென்று கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். மாணவர்கள் 132 பேரும், ஆசிரியர் ஒருவர் உள்ளிட்ட 9 அலுவலர்களும் ஆக மொத்தம் 141 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 250 மாணவர்கள் படுகாயமுற்று மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். எனவே, இறப்பு எண்ணிக்கை அதிகமாகிடும் அவலம் உள்ளது.
பாகிஸ்தான் ‘தெஹ்ரி-இ-தாலிபான்’ என்ற அமைப்பு, இந்த படுகொலைக்குப் பொறுப்பேற்று அறிக்கை கொடுத்துள்ளது. அவ்வமைப்பின் பேச்சாளர் முகமது கொரசானி, “வஜ்ரிஸ்தான் கைபர் பகுதியில் எங்கள் குடும்பங்களைச் சேர்ந்தவர்களைப் பாகிஸ்தான் இராணுவம் படுகொலை செய்து வருகிறது. அதற்குப் பழி தீர்க்கவே, பள்ளி மாணவர்களைக் கொன்றோம்” என்று கூறியுள்ளார்.
இந்த வாதத்தை எந்த நடுநிலையாளரும் ஏற்க முடியாது. ஆயுதப்போர் நடத்துபவர்களின் பகை இலக்கு, எதிரியின் இராணுவமாக இருக்க வேண்டுமே தவிர குடிமக்களைக் கொல்வதாக இருக்கக்கூடாது. இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு, தமிழீழ விடுதலைப்புலிகள் நடத்திய ஆயுதந்தாங்கிய விடுதலைப் போராகும்.
சிங்களப்படை எத்தனையோ தடவை குடிமக்கள் பகுதிகளைக் குறிவைத்துக் குண்டுபோட்டு, ஆயிரக்கணக்கான தமிழ் மக்களைக் கொன்று குவித்தது. போரில் பெற்றோரை இழந்து காப்பகத்தில் தங்கிப் படித்துவந்த தமிழ்க் குழந்தைகளைக் குறிவைத்து, செஞ்சோலைக் காப்பகத்தின் மீது சிங்களப்படை குண்டு போட்டு 91 குழந்தைகளைக் கொன்றது. பலரைப் படுகாயப்படுத்தியது. ஆனாலும், பழிவாங்கும் நோக்கில் சிங்களக் குழந்தைகளையோ குடிமக்களையோ விடுதலைப்புலிகள் தாக்கவில்லை என்பதை இங்கு நினைவு கூர வேண்டும்.
பாகிஸ்தான் பள்ளிக் குழந்தைகளைக் கொன்றுகுவித்த ‘தெஹ்ரி-இ-தாலிபான்’ அமைப்பினரின் குருதி வெறியை, காட்டுமிராண்டித்தனம் என்று சொல்வது மென்மையான கண்டனமாகும். பிஞ்சுகளின் குருதி குடித்த தாலிபான் கயவர்களின் மனித வேட்டையைத் தமிழ்த் தேசியப் பேரியக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் பகுதியில் மனித வேட்டையைத் தொடங்கி வைத்தது, வட அமெரிக்க இராணுவம். அதற்கான எதிர்வினையாகத்தான் தாலிபான் அட்டூழியங்கள் தொடர்கின்றன. அமெரிக்க இராணுவம் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் பகுதிகளிலிருந்து உடனடியாக வெளியேற வேண்டும். அந்தந்த நாட்டின் பாதுகாப்பை அந்தந்த நாட்டின் அரசுகள் உறுதிப்படுத்திக் கொண்டு, மக்கள் நாயகம் அங்கெல்லாம் தலையெடுக்க வழிசெய்வது ஒன்றே, இந்த மனிதகுல அழிப்பு வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.
அதேபோல், பாகிஸ்தானில் தனிநாடு கேட்கும் தேசிய இனங்களிடம் கருத்து வாக்கெடுப்பு நடத்தி அச்சிக்கலுக்கு முடிவு காண்பதும், தாலிபான் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வரும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Labels:

"பால் குடித்த மார்பறுத்த பாதகர்கள் கூடாரம் - ஆர்.எஸ்.எஸ்.ம் பா.ச.க.வும்" ---தோழர் மணியரசன் கட்டுரை.



"பால் குடித்த மார்பறுத்த பாதகர்கள் கூடாரம் - ஆர்.எஸ்.எஸ்.ம் பா.ச.க.வும்"
---தோழர் மணியரசன் கட்டுரை.

வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட் டிற்குள் மிகையாகக் குடியேறி, தமிழர்களின் தாயகத்தைத் தங்களின் தாயகமாக அவர்கள் மாற்றிக் கொள்வதைத் தடுக்கும் தற்காப்பு நோக்கில் 1956 நவம்பர் 1-க்குப் பின்வந்து குடியேறிய வெளியாரை வெளியேற்ற வேண்டும் என்று தமிழ்த் தேசியப் பேரியக்கம் போராடி வருகிறது.
மக்கள் உரிமைக்காக நாம் நடத்தும் இந்த மனித உரிமைப் போராட்டத்தை பாசிசம் என்றும் இனவெறி என்றும் எதிரிகள் கூச்சல் போடுவதற்கு முன், தமிழினத்தைச் சேர்ந்த இன இரண்டகர்கள் சிலரே நம்மைக் குற்றஞ்சாட்டுகிறார்கள்.
பாரதமாதா பசனை பாடி இந்தியத் தேசியம் என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கும் ஆரியப் பார்ப்பனிய ஆற்றல்கள், குறிப்பாக ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் “வெளியாரை வெளியேற்றும்” போராட்டத்தில் இறங்கியுள்ளதைத் தமிழ் மக்கள் கவனிக்க வேண்டும்.
பா.ச.க.வின் நடுவண் அமைச்சர் நிரஞ்சன் சோதி என்ற பெண் துறவி, “இராமருக்குப் பிறந்தவர்களுக்கு மட்டும்தான் இந்தியா சொந்தம். மற்றவர்கள் வெளியிலிருந்து வந்தவர்கள். அவர்கள் நாட்டை ஆள்வதற்கு உரிமை இல்லை” என்று அண்மையில் பேசினார். நிரஞ்சன் சோதி அரசமைப்புச் சட்டத்திறகுப் புறம்பாகப் பேசியுள்ளார், அமைச்சர் பதவியிலிருந்து அவரை நீக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராடின. அதன் பிறகு அவர் ஒப்புக்கு வருத்தம் தெரிவித்தார். அமைச்சராக நீடிக்கிறார்.
பா.ச.க. உள்ளிட்ட பரிவாரங்களுக்குத் தலைமை தாங்கும் ஆரியப் பார்ப்பனிய ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் அண்மையில் (21.12.2014) கொல்கத்தாவில் விசுவ இந்து பரிசத் விழாவில் பேசும்போது, வெளியார் சிக்கலைக் கிளப்பியுள்ளார்.
“நாம் அச்சப்படத் தேவையில்லை. நாம் நமது சொந்த மண்ணில் வாழ்கிறோம். நாம் வெளியி லிருந்து சட்ட விரோதமாக நுழைந்தவர்களோ, ஊடுருவியர்களோ அல்லர். இது நம் சொந்த நாடு; நமது இந்து தேசம். ஓர் இந்து தன்நாட்டைவிட்டுப் போக மாட்டான். கடந்த காலத்தில் எதை நாம் இழந்தோமோ, அதை மீட்க வேண்டும்”.
“இந்துக்கள் தலையெடுப்பதைக் கண்டுயாரேனும் அச்சப்பட்டாலோ அல்லது எதிர்த்தாலோ அவர்களோடு மோத வேண்டியதுதான். நாம் நடத்தும் மோதல், நம் முன்னோர்களுக்கு அவர்கள் இழைத்த தீங்குகளுக்கு எதிராகவே! நம் கடவுள் சொல்கிறார், எதிரி நூறு குற்றமிழைத்தால் அவனது எந்தக் குற்றத்தையும் மன்னிக்கக் கூடாது. இந்துக் களை யாரும் மதம் மாற்றக் கூடாது. நாம் மற்ற மதங்களில் உள்ளவர்களை இந்துவாக மாற்ற வேண்டும். அவர்களை அயல் மதங்கள் ஆசை காட்டி இழுத்துக் கொண்டன. கொள்ளைய டிக்கப்பட்ட நமது சொத்தை மீட்பதே அயல் மதங்களில் உள்ளவர்களை இந்துக்களாக மாற்றும் திட்டம். வலிமைமிக்க இந்து சமூகத்தைக் கட்டமைக்கப் போகிறோம்” ((Times of India, 21.12.2014).
ஆர்.எஸ்.எஸ். தலைவரின் மத மாற்றக் கருத்து, அவரது இந்து தேசியம் ஆகியவற்றைப் பின்னர் பார்ப்போம். ஆரியர்கள் மண் ணின் மக்கள் என்றும் முசுலிம்கள் வெளியிலிருந்து சட்ட விரோதமாக, ஊடுருவியர்கள் என்றும் மோகன் பகவத் கூறுவது பற்றிப் பார்ப்போம்.
வடமேற்கு இமயமலைப் பகுதியில் கைபர் கணவாய் வழி யாக சிந்துச் சமவெளி மண்டலத் திற்குள் மேய்ச்சல் சமூகமாக நுழைந்த வெளியினத்தார் ஆரியர்கள். நான்காயிரம் ஆண்டு களுக்கு முன் அவர்கள் அவ்வாறு நுழையும் போது, சிந்து ஆற் றிலிருந்து தென்குமரி வரை, நாகர் கோயிலிலிருந்து காசுமீரின் அனந்த நாக் வரை வாழ்ந்தவர்கள் தமிழர்கள். அரசு செலுத் தியவர்கள் தமிழர்கள். வெளி நாட்டாய்வாளர்கள் பலரும் இந்த உண்மையை வெளிப்படுத் தியுள்ளனர். கற்றறிவாளரான அம்பேத்கர் அவர்களும் இந்த வரலாற்றுண்மையைப் பதிவு செய்துள்ளார்.
தமிழ் மக்களிடமிருந்து நகர நாகரிக வாழ்வையும், மெய்யியல், வடமொழிக்கு எழுத்து வடிவம் போன்றவற்றையும் கற்றுக் கொண்டவர்கள் ஆரியர்கள். அவர்கள் கொண்டு வந்த பிரஜா பதி, பிரமன் போன்ற கடவுளர் கள் எடுபடாத நிலையில், தமிழர் களின் கருப்புத் தெய்வங்களான இராமன், கண்ணன் போன்ற வர்களைக் களவாடி, ஆரியமய மாக்கித் தமிழினத்திற்கு எதிராக நிறுத்தினார்கள்.
பல்வேறு இயற்கைப் பேரழி வுகள், போர்கள் காரணமாகத் தமிழர்கள், தென்னாட்டளவில் சுருங்கிப் போனார்கள். தமிழர் களின் சிந்துச் சமவெளி நக ரங்கள் அழிந்தன. அவற்றின் எச்சங்களாக இப்போது பாகிஸ் தானில் மொகஞ்சோதரோ, அரப்பா ஆகிய புதையுண்ட நகரங்கள் காட்சியளிக்கின்றன. வடநாட்டில் கங்கைச் சம வெளியில் ஆரியவர்த்தம் அமைத்துக் கொண்டார்கள் ஆரியர்கள்.
வடவாரிய மன்னர்கள் மீது போர் தொடுத்து இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், பாண்டியன் நெடுஞ்செழியன், சோழன் கரி கால் பெருவளத்தான் எனப் பல மன்னர்கள் வடவாரிய மன்னர் களை முறியடித்தனர்; விரட்டி அடித்தனர். ஆனால், பின்னர் ஆன்மிகப் பரப்புரையாளர் களாக தமிழ் மன்னர்களின் தூதுவர்களாகத் தனி நபர் களாகத் தமிழ்நாட்டில் குடி யேறிய ஆரியர்கள் காலப் போக்கில் பெரும் எண்ணிக் கையில் புகுந்து இங்கு குடிமக்கள் ஆனார்கள்.
ஆனால், தமிழ் அறவோர்க்கும் சான்றோர்க்கும் இருந்த அந் தணர், ஐயர், பார்ப்பனர் என்ற தூய தமிழ் சிறப்புப் பெயர் களைத் தங்களுக்குச் சூட்டிக் கொண்டு, தமிழ் மக்களோடு, உள்ளூர் மக்கள்போல் கலந்தனர். கிறித்துவத்தைப் பரப்பிடத் தமிழகம் வந்த ஐரோப்பிய பாதிரி மார்களான ராபர்ட் கால்டுவெல் - கால்டுவெல் ஐயர் என்றும், ஜி.யூ.போப் - போப்பையர் என் றும் பெஸ்கி - வீரமாமுனிவர் என்றும் பெயர் சூட்டிக் கொண் டதை ஒப்பிட்டால் ஆரியப் பிராமணர்கள் ‘ஐயர்’ ஆன கதை புரியும்!
தங்கிச் செல்வதற்கு மடத்தில் ஓர் இடத்தைக் கேட்டுப் பெற்ற பரதேசி பின்னர், அந்த மடத் தையே பிடுங்கிக் கொண்டது போல், ஆரியப் பார்ப்பனர்கள் தமிழ்நாட்டுக் கோயில்களின் கருவறையிலிருந்து தமிழர்களை வெளியேற்றினர்; கோயில்களி லிருந்து தமிழை வெளியேற்றி னார்கள். ”அறம் வளர்த்த நாயகி” என்று இறைவி பெயர் இருந் தால், அதைத் ‘தர்ம சம்வர்த்தினி’ என்று மாற்றினார்கள்.
“தீயாடியப்பர்” என்று இறைவன் பெயர் இருந்தால் அதை ‘அக்னீசுவரர்’ என்று மாற்றினார்கள். மயிலாடுதுறை என்று ஊர்ப் பெயர் இருந்தால் ‘மயூரம்’ என்று மாற்றினார்கள். திரு என்பதை ‘ஸ்ரீ’ என்று மாற்றினார்கள். பொங்கல் விழாவை சங்கராந்தி  என்று மாற்றினார்கள்.தமிழர் களின் வானவியல்படி வகுக்கப் பட்ட ஆண்டுக் கணக்கு, மா தங்கள் அனைத்தையும் சமற்கி ருதத்தில் மாற்றினார்கள். கடைசியில் தமிழனைச் சூத்திரன், பஞ்சமன் என்றார்கள். தமிழச்சி யை சூத்திரச்சி என்றார்கள். தங்களை அந்தணர், ஐயர் என்று கூறி உயர்த்திக் கொண்டார்கள்.
பால் குடித்த மார்பறுத்த பாதகர்கள் போல், உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்த கயவர்கள் போல் நடந்து கொண்ட இந்த யோக்கிய சிகா மணிகளின் தலைவர் மோகன் பகவத் கூறுகிறார், யாரோ வெளியிலிருந்து வந்தார்களாம்; இவர்கள் மண்ணின் மக்களாம்.
கோரி முகமதும் கஜினி முகமதும் சோம நாதபுரம் கோயி லையும் மற்ற செல்வங்களையும் கொள்ளை அடித்தார்கள் என் பதைத் திரும்பத் திரும்பச் சொல்லும் ஆரியத் தலைவர் களே, நீங்கள் தமிழர் களிடமிருந்து இந்தியாவையே கொள்ளை அடித்தவர்களாயிற் றே! நாங்கள் கோரி முகமது களையும், கஜினி முகமதுவையும் அறத்தின் அடையாளங்கள் என்று பாராட்டவில்லை. ஆயி ரம் கோரிகளும், கஜினிகளும் சேர்ந்தாலும் ஆரியக் கொள் ளைக்காரர்களுக்கு நிகராக மாட்டார்கள் என்கிறோம்.
தமிழர்களின் தோளில் உட் கார்ந்து கொண்டு தமிழர்களின் முகத்தைக் கடித்து விகாரப் படுத்தியவர்கள் நீங்கள்தான் ஆரியர்களே! நன்றி கொன்றவர் கள்; நயவஞ்சகர்கள். நீங்கள் வெளியார் ஆக்கிரமிப்பு பற்றிப் பேசுகிறீர்களா? தமிழர்களோடு தமிழர்களாக உங்களையும் இணைத்துக் கொண்டது தமி ழினம்! ஆனால், நீங்கள் எப்படி நடந்து கொண்டீர்கள். தமிழின அடையாளங்களை அழித்து, தமிழ் மொழியை அழித்து, சமற்கிருதத்தைத் திணித்தீர்கள்; சமற்கிருத அரங்கேற்றத்தின் அறிவிப்பாளனாக, கட்டி யங்காரனாக மணிப்பிரவாள நடையை உருவாக்கினீர்கள். இதையெல்லாம் ஒவ்வொன்றாக நினைத்தால் இந்த மண்ணும் விண்ணும் உள்ளவரை உங் களைத் தமிழினம் மன்னிக்கக் கூடாது. முசுலிம் போன்ற வெளியாரை மன்னிக்க முடியாது என்று மோகன் பகவத் பேசும் போது, பாதிக்கப்பட்ட நாங்கள் திருப்பிக் கேட்க மாட்டோமா?
தில்லைச் சிற்றம்பலத்தில் தேவாரம் பாடுவதை இன் றைக்கும் எதிர்க்கிறார்கள், தீட்சி தர்கள். உயர்நீதிமன்றம் போய் அந்த உரிமையை நிலைநாட்ட வேண்டியதாய் இருக்கிறது. தில்லைக் கோயிலை தீட்சிதக் கும்பல் கட்டியதா? அல்லது தில்லை ஆட வல்லான் தீட்சிதர் தெய்வமா? கோயிலைக் கட்டி யவன் தமிழன் - கோயிலுக்குள் இருப்பவன் தமிழனுக்குரியவன்! ஆரியவர்த்தத்தில் தில்லைக் கூத் தரசன் போன்ற சிலையோ ஓவியமோ, வடிவமோ தெய்வமாக வணங்கப்படுகிறதா? இல்லையே!
இடையில் வந்த தரகர் கும்பல் அக்கோயிலை எங்களுக்குரியது; சூத்திரத் தமிழர்களுக்குச் சொந்த மில்லை என்கிறது. தமிழ்நாட் டில் பிறந்த ஆரியப் பார்ப்பன சுப்பிமணிய சாமி அரசுப் பொறுப்பிலிருந்த சிதம்பரம் கோயிலை உச்ச நீதிமன்றத்தின் மூலம் தீட்சிதர்களிடம் வாங்கிக் கொடுத்துவிட்டார். அனைவர்க் கும் பொதுவாகத் தில்லைக் கோயில் இந்து அறநிலையத் துறையின் கீழ் இருந்தாலென்ன? தீட்சிதர்களை அர்ச்சனை செய்ய வேண்டாம் என்று யாராவது சொன்னார்களா? இல்லையே! இந்து அறநிலையத் துறையில் உள்ள மதுரை மீனாட்சியம்மன் கோயில், பழனியாண்டவர் கோ யில், திருத்தணி முருகன் கோயில், திருச்செந்தூர் முருகன் கோயில் எல்லாம் அழிந்து விட்டனவா?
“நானும் இந்து நீயும் இந்து” என்று பார்ப்பனர் சொல்வது சூழ்ச்சித் திட்டமாகும் என்று தமிழர்கள் ஐயுறுகிறார்கள். நீ இந்து என்பதும் உன்னைப் போலவே மற்ற தமிழர்கள் இந்து என்பதும் உண்மையானால், பொது நிலையில் இந்து அற நிலையத் துறையின்கீழ் தில்லை நடராசர் கோயில் இருப்பதில் என்ன குற்றம் வந்தது?
ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் கோரிக்கை வைத்துப் போராடி, கடைசியில் சேதுக் கால்வாய் திட்டத்தைச் செயல்படுத்த இந் திய அரசு ஒப்புதல் அளித்தது. அத்திட்டம் செயலுக்கு வந்தால் தென்மாவட்ட இளைஞர் களுக்கு வேலை கிடைக்கும்; தமிழகப் பொருளியல் முன்னேற வாய்ப்புண்டாகும். இராமர் பாலத்தை இடிக்கப் போகி றார்கள் என்று ஒரு புரளியைக் கிளப்பி அத்திட்டத்தைத் தடுத்து நிறுத்தியுள்ளது யார்? இதே பார்ப்பனக் கும்பல்தான்!
எப்பொழுதோ ஒரு காலத்தில் தமிழர் - ஆரியர் பகை இருந்தது; அது காலப்போக்கில் சரியாகி விட்டது; இரண்டு மக்களும் இணக்கம் கண்டு - தமிழ் மக்கள் என்ற தளத்தில்  ஒருங்கிணைந்து செயல்படுகிறார்கள் என்ற நிலை இன்றுவரை உருவாகவில்லை. நல்லிணக்கம் உருவாகாமல் போ னதற்கு யார் காரணம் தமிழகப் பார்ப்பனர்கள்தாம். பார்ப்பனர் களில் நூற்றுக்குத் தொண்ணூற் றைந்து பேர் தமிழர்கள் மீது குதிரைச் சவாரி செய்ய வேண்டும் என்ற குறுகுறுப்பில்தான் இருக் கிறார்கள். ஆரிய இனப் பெருமிதங்களிலும் சமற்கிருதத் தின் சர்வ வல்லமைக் கித்தாப் புக்களிலும் மூழ்கிக் கிடக்கி றார்கள்.
தமிழீழத்தில் 2008---2009இல் ஒன்றரை இலட்சம் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட் டார்கள். அப்போது, போர் நிறுத்தம் கோரித் தமிழ்நாட்டில் நடந்த பேரணிகளில், உண்ணாப் போராட்டங்களில் எத்தனை பார்ப்பனர்கள் கலந்து கொண் டார்களா? விரல்விட்டு எண்ணத் தக்க வகையில்தான் கலந்து கொண்டார்கள். விதிவிலக்காக, பார்ப்பனியத்தை மறுத்த பார்ப் பனர்கள் அப்போராட்டங்களில் கலந்து கொண்டார்கள்.
தமிழர்களை இனப்படு கொலைச் செய்த இராச பட்ஷேக்கு பாரத ரத்னா விருது வழஙக“ வேண்டும் என்று தமி ழகத்தைச்  சேர்ந்த பார்பன சுப்பிரமணியசாமிதானே கோரிக்கை வைக்கிறார். ஆரிய இனவாத இந்திய அரசு ஈழத் தமிழர் அழிப்புப் போரை பின் னாலிருந்து இயக்கியது. இனப் படுகொலைக் குற்றவாளி இராச பக்சே அரசு மீது பன்னாட்டு புலானய்வு கூடாது என்று ஆரிய இனவாத இந்திய அரசு ஐ.நா மனித உரிமை மன்றத்தில் இலங் கைக்கு ஆதரவாக வாக்களித்தது.
சிங்களர்கள் ஆரியர்கள்; இந்திய அரசு ஆரிய இனவாத அரசு! இந்த இருத்தரப்பின ருக்கும் தமிழர்கள் இனப்  பகைவர்கள்! எனவே போர் நிறுத்தம் கோரிய நிகழ்வுகளில் போராட்டங்களில்   தமிழகப் பார்ப்பனர்கள் கணிசமாகக் கலந்து கொள்ளவில்லை. பிறகு, எங்கே “நீயும் .இந்து நானும் இந்து” வாழ்கிறது. இந்தியா விலுள்ள இலங்கைத் தூதர் கரிய வாசம் இலங்கையிலும் இந்தியா விலும் தமிழர்களைத் தவிர மற்ற அனைவரும் ஒரே இனம், ஆரிய இனம் என்று கூறுகிறார். இந்து மத்தில் ஆரிய இந்துவேறு; தமிழ் இந்து வேறு.
இஸ்லாம் மத்ததைச் சார்ந்த ஈரான் நாடும் ஈராக் நாடும் போரி புரிந்து கொள்ளவில்லையா?
இதோ சிரியாவிலும் ஒரே இஸ்லாம் மத்ததைச் சேர்ந்த சியாக்களும் சன்னிகளும் ஒரு வரை ஒருவர் அழித்துக்கொள்ள வில்லையா? அதுபோலத்தான் ஆரிய இந்துக்கள் தமிழ் இந்துக் களைப்  பகைவர்களாக அடக்கி வைக்கப்ட வேண்டிய அடிமை களாகக் கருதுகிறீர்கள்!
பார்ப்பன வகுப்பில் பிறந்து தமிழின உணர்வோடும் சன நாயக உணர்வோடும் நடந்து கொண்ட  நன்  மக்களைப் பார்ப் பனர்கள் எப்படி நடத்தி னார்கள்? பெரும்பாவலர் பாரதி யார் சாதி மறுப்பாளர்;  பறையர் வகுப்பிலே பிறந்த கனகலிங்கத் கைத் தன் குடும்பத்தில் ஒருவராக வைத்திருந்தார். கனகலிங்கத்திற்கு பூணூல் போட்டு பிறவியில் சாதியில்லை என்று அறிவித்தார் பாரதியார். அதற் காகப் பாரதியாரை சாதி நீக்கம் செய்தார்கள் பார்ப்பனர்கள்.
கடையத்தில் தம் மாமியார் வீட்டுக்குப் போன போது பாரதியாரை அக்ரகாரத்தில் நுழையவிடவில்லை பார்ப் பனர்கள்.மனைவி  அக்ரகாரத்தில் கணவன் ஊருக்கு வெளியே ஒரு பிள்ளையார் கோவிலில்! மதுரையில் வைத்தி யநாத அய்யர் ஒடுக்கப்பட்ட மக்களை மதுரை மீனாட்சி யம்மன் கோவிலுக்குள் அழைத்துச் சென்று ஆலய நுழைவுப் போராட்டம் நடத்தி னார். அதற்காக வைத்திய நாதய் யரை சாதி நீக்கம் செய்தனர் பார்ப்பனர்கள்.
பிற்காலத்தில் பாரதியார், வைத்தியநாதய்யர் ஆகியோர் புகழின் உச்சிக்குப் போனபின் “எங்களவா” என்று உச்சி மோந்து கொள்கிறார்கள் பார்பபனர்கள். அவர்கள் புகழைத் திரையாகப் பயன்படுத்தித் தங்களது வர்ணா சிரம வெறியை மறைத்துக் கொள் ளும் உத்திதான் இந்த ஏற்பில் உள்ள கமுக்கம். பாரதியாரை ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகராகவே உருமாற்றிவிட்டனர் பார்ப் பனர்கள்.
அண்மையில் தஞ்சையில் செய்தியாளர்களிடம், பா.ச.க.வின் அனைத்திந்தியச் செயலாளர் எச்.இராசா, பா.ச.க. தலைவர்களை இதே போல் இனியும், வைகோ பேசினால், அவர் பாதுகாப்பாக வீடு போய்ச் சேர முடியாது என்று கூறி மிரட்டினார். இந்த ஆண வம், இந்த வன்மம் ஆரிய ஆதிக் கத்தின் வெளிப்பாடு இல்லையா?
தமிழ்நாட்டில் பா.ச.க.வை வளர்க்க ஆர்.எஸ்.எஸ். தலை மையும் ஆரிய வர்த்தமும் தீவிர மாக இறங்கியுள்ளன. திருவள் ளுவர் விழா நடத்துவதெல்லாம் - தூண்டில் முள்ளில் வைக்கப் பட்ட மீனின் தீனி போன்றது. அரவணைத்து அழிக்கும் ஆரியப் போர் உத்தி அது!
பா.ச.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர் தருண் விசய் கடைந் தெடுத்த ஆர்.எஸ்.எஸ். பேர்வழி! இந்தி மற்றும் சமற்கிருதத் திணிப்பு வெறியர். ஆர்.எஸ். எஸ்.ஸின் அதிகார ஏடான பாஞ்சசன்யத்தின் ஆசிரியராக இருந்தவர்.
பா.ச.க.வில் தமிழர்கள் சேர் வது மிகக் கொடிய இன இரண் டகமாகும். தமிழ்த் துரோகமாகும். பதவிக்காக, பணத்திற்காக இங் கேயும் சில வரதராசப் பெரு மாள்கள், டக்ளஸ் தேவானந் தாக்கள், கருணாக்கள் பா.ச.கவில் சேர்ந்துள்ளனர். அந்தக் கூட்டுக் குருவிகள் புதிய காட்டுக் குருவி களைப் பிடித்திடப் பயன்படும்! விவரம் தெரியாத அப்பாவிகள் சிலர் பா.ச.க.வில் சேரலாம். எப்படிச் சேர்ந்தாலும் பா.ச.க.வில் சேருவது, தமிழினத்தைப் பகை வனிடம் காட்டிக் கொடுக்கும் செயலாகும்!
பா.ச.க. மற்றுமொரு அரசியல் கட்சியன்று; தமிழினத்தின் அடையாளத்தை, பண்பை, இருப் பை அழிக்கத் துடிக்கும் ஆரியத் தலைமையின்கீழ் இயங்கும் கட்சி! பா.ச.க.வுடன் கூட்டணி சேரும் எந்தக் கட்சியும் தமிழினத் துரோகக் கட்சியாகும்!
நாம் ஒரே கட்சியில் இருந் தாலும், வேறு வேறு கட்சிகளில் இருந்தாலும் ஒருவரை ஒருவர் அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, தோழன், மாமன், மச்சான், அப்பா, அம்மா, ஐயா என்று விளித்து அழைப்போம். ஆனால், இப் போது வடநாட்டு அமைப்பான பா.ச.க. ஒருவரை ஒருவர் “ஜி” என்று அழைத்துக் கொள்ளும் பழக்கத்தைப் புகுத்தி வருகிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்த வரை இந்து, முசுலிம், கிறித்தவம் என எந்த மதத்திலிருந்தாலும் அனைவரும் தமிழர்களே! இவற் றிற்கிடையே உயர்வு தாழ்வு கிடையாது! வழிபாட்டுரிமை அனைவர்க்குமான பொது உரி மை!
ஒரு மதத்தில் உள்ளவர் கருத்தியல் அடிப்படையில், இன் னொரு மதத்திற்கு மாறலாம். அது தவறில்லை. ஆனால், மதமாற்றம் செய்வதற்குத் தனித்திட்டம் போட்டு இந்து மதத்தினர், முசுலிம் மதத்தினர், கிறித்துவ மதத்தினர் யார் செய்தாலும் சனநாயக ஆற்றல்கள் அம் முயற்சிகளை ஆதரிக்கக்கூடாது. மதம் மாற்றும் சித்து வேலை களில் எந்த மதத்தினரும் ஈடுபடக் கூடாது.
வெளிமதம் உள்நாட்டு மதம் என்ற பாகுபாடு எதுவும் தமிழ்த் தேசியத்தில் இல்லை. தமிழக மக்கள் பின்பற்றும் எல்லா மதங்களும் மண்ணின் மக்கள் மதங்களே!
1956 நவம்பர் 1-க்குப் பிறகு தமிழ்நாட்டில் குடியேறியவர்கள் மட்டுமே வெளியார்கள்! மற்ற அனைவரும் அவர்கள் எந்தத் தாய்மொழி பேசினாலும் சம உரிமையுள்ள தமிழ் மண்ணின் மக்களே! ஆனால் நமது இந்த சமத்துவக் கொள்கையை குயுக்தி யாக தமிழினத்திற்கு எதிராகப் பயன்படுத்த ஆரியப் பார்ப்பனர் முயன்றாலும் மற்றவர்கள் முயன் றாலும் அது தமிழ்த் தேசத்திற்குச் செய்யும் துரோகமாகும். அப் போது, வெளுத்ததெல்லாம் பால் என்று கருதி தமிழ்த் தேசிய ஆற்றல்கள் ஏமாற மாட்டா!
தமிழர்களே, காலம் கடந் தாவது ஒன்றைப் புரிந்து கொள் ளுங்கள். அயலாரை அதிக எண் ணிக்கையில் தமிழ்நாட்டிற்குள் குடியேற அனுமதித்தால் என்ன அநீதிகளும் அடிமைத்தனங் களும் மண்ணின் மக்களுக்கு ஏற்படும் என்பதை ஒருகாலத்தில் ஆரியப் பார்ப்பனர்களை அதிக மாகக் குடியேற வைத்ததன் பலனைப் பார்த்தபிறகாவது புரிந்து கொள்ளுங்கள்; திருந் துங்கள்.
ஆரியப் பார்ப்பனிய ஆர்.எஸ். எஸ். - பா.ச.க. அயல் அமைப்பு களைத் தமிழ்நாட்டில் தனிமைப் படுத்துவோம்! புறக்கணிப்போம்! தமிழ்த் தேசிய உணர்வு கொள்வோம்; தமிழர்கள் ஒற்றுமை காப்போம்!

Labels: ,


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்