<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d6955529389241309188\x26blogName\x3d%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86.%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://thozharmaniyarasan.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com/\x26vt\x3d-8408640130511538487', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

"பெண்ணுரிமைப் போராட்டத்தில் புதிய சிந்தனைகள் வேண்டும்" தோழர் பெ.மணியரசன் பேச்சு

Friday, March 20, 2015

"பெண்ணுரிமைப் போராட்டத்தில் புதிய சிந்தனைகள் வேண்டும்"
-- தோழர் பெ.மணியரசன் பேச்சு

கும்பகோணம் பலநோக்கு சமூகப்பணிச் சங்கமும், குடந்தை நடுநகர் சுழற்சங்கமும் இணைந்து நடத்திய, 'அகில உலக மகளிர் தின விழா', 17.03.2016 அன்று குடந்தையில் கடைபிடிக்கப்பட்டது. நிகழ்வின் தொடக்கத்தில், குடந்தை மகாமகக் குளத்திலிருந்து அண்ணா சிலைவரை மகளிர் பேரணி நடைபெற்றது. பேரணியை, குடந்தை நகர்மன்றத் தலைவர் திரு. இரத்னா சேகர் தொடக்கி வைத்தார்.

பின்னர், கும்பகோணம் பல்நோக்கு சமூகப்பணிச் சங்க வளாகத்தில் நடைபெற்ற மகளிர் நாள் கூட்டத் திற்கு, மருத்துவர் சித்ரா வசீகரன் தலைமையேற்றார். கும்பகோணம் பலநோக்கு சமூகப்பணிச் சங்கச் செயலா ளர் அருள்திரு. எஸ். அல்போன்ஸ், குடந்தை நடுநகர் சுழற்சங்கத் தலைவர் பொறியாளர் வின்செண்ட் பிரபாகரன், சங்க உதவி ஆளுநர் பொறியாளர் எம். பழனிவேலு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

விழாவில் கலந்து கொண்டு, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பேசியதன் எழுத்து வடிவம் :
“உலக மகளிர் நாளை ஒட்டி, கும்பகோணம் பல்நோக்கு சமூகப்பணிச் சங்கமும், குடந்தை நடுநகர் சுழற்சங்கமும் இணைந்து “இன்றைய சூழலில் பெண்களின் நிலை” என்ற தலைப்பில் நடத்தும் கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசும் வாய்ப்பினை எனக்களித்த நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெண்ணுரிமை பற்றிப் பேசும்போது, இப்போது ஆண் அனுபவித்துக் கொண்டிருக்கும் உரிமைகளைப் பெண்ணும் அனுபவிக்கும் உரிமை என்று கூறி - அடைய வேண்டிய உரிமையின் எல்லை ஆண் உரிமை என்றும் - ஆண்தான், பெண்ணுரிமைக்கான முன்மாதிரி என்பது போலவும் கூறிவிடுகிறார்கள். பெண்ணுரிமைப் போராட்டம் தனக்கான முன்மாதிரியை உருவாக்கிக் கொள்ளும்.

அதற்கும் மேலே ஆண் - பெண் வேறுபாடு உடையில் ஒப்பனையில் கூடாது; ஒரே வடிவத்திற்கு ஆணும் பெண்ணும் வந்துவிட வேண்டும் என்பது போலவும் பேசுகிறார்கள். அதற்காக ஆணைப் போல் பெண்ணும் தலைமுடியைக் கிராப் வெட்டிக் கொள்ள வேண்டும், முழுக்கால் சட்டை அணிய வேண்டும், பெண் பூ வைத் துக் கொள்ளக் கூடாது, பொட்டு வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் கூறுகிறார்கள்.

அழகியல் உணர்வும், அழகியல் தேர்வும் ஆணுக்கு ஒரு வகையில் இருக்கிறது, பெண்ணுக்கு இன்னொரு வகையில் இருக்கிறது. இயற்கைப் படைப்பில் ஆண் வடிவம் வேறு; அது வன்மையானது. பெண் வடிவம் வேறு; அது மென்மையானது.

தன்னை அழகுபடுத்திக் கொள்வதற்கு ஆணின் விருப்பமும் தேர்வும் வேறு. பெண்ணின் விருப்பமும் தேர்வும் வேறு. இதில் ஆண் உளவியல் வேறு; பெண் உளவியல் வேறு.

பதினைந்து வயதில் பெண்ணின் உதட்டுக்கு மேல் முடி முளைத்தால் - ஐயோ மீசை முளைக்கிறதே என வருந்தி, அதை நீக்கி விடுகிறார்கள். அதே பதினைந்து வயதில் ஆணின் உதட்டுக்கு மேல் முடி முளைக்க வில்லையெனில் - ஐயோ மீசை முளைக்கவில்லையே என அவன் கவலைப்படுகிறான்; கருப்பு மையால் தீட்டிக் கொள்கிறான். அழகியல் மனநிலை, ஆணுக்கு வேறு பெண்ணுக்கு வேறு.

புடவை கட்டிக் கொள்வதா, சுடிதார் அணிந்து கொள்வதா, முழுக்கால் சட்டை அணிந்து கொள்வதா என்பதைப் பெண் முடிவு செய்யட்டும். அவர் இவற்றில் எதைத் தேர்வு செய்தாலும் நான் ஏற்றுக் கொள்பவன். ஆனால், பெண்ணே நீ உரிமை பெற வேண்டுமானால் ஆண்போல் கிராப் வெட்டிக் கொள், முழுக்கால் சட்டை போட்டுக் கொள் என்பதில் எனக்கு உடன் பாடில்லை. இது இன்னொரு வகை ஆணாதிக்கம்! இன்னொரு வகைப் பெண்ணடிமைத்தனம்!
புடவை அணிந்தால் பெண்ணுக்கு சம உரிமை கிடைக்காதென்றால் அது என்ன பெண்ணுரிமை! புடவை கட்டியிருந்தாலும் வேறு உடை அணிந்தி ருந்தாலும் அந்தப் பெண்ணுக்கு சம உரிமை இருக்க வேண்டும். அப்போதுதான் அவளின் உரிமையை ஆண் அங்கீகரித்தான் என்பதாகும்.

இலண்டன் வட்ட மேசை மாநாட்டிற்கு காந்தியடிகள் வேட்டி துண்டுடன் சென்றார். அப்படிச் செல்வது சரியா, வெள்ளை அரசாங்கம் ஏற்குமா, அனுமதிக்குமா என்று சர்ச்சை எழுந்தது. “என் நாட்டு மக்களின் உடை இது; அவர்கள் உடையில்தான் நான் வருவேன், எங்கள் மக்களை அங்கீகரிப்பதென்றால் இந்த உடையில் ஆங்கிலேயர்கள் என்னை அங்கீகரிக் கட்டும்; அவர்கள் அப்படி ஏற்கவில்லை யெனில் நான் அங்கு போக வேண்டியதில்லை” என்றார் காந்தி.

வெள்ளை அரசாங்கம் காந்தியடிகள் வேட்டி துண்டோடு வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்ள இசைவளித்தது. காந்தியை அரை நிர்வாணப் பக்கிரி என்று ஒரு காலத்தில் வின்ஸ்டன் சர்ச்சில் அழைத்து நையாண்டி செய்தார். ஆனால், காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட போது, “நாங்கள் இவ்வளவு காலம் காந்தியைப் பத்திரமாகப் பாதுகாத்தோம். உங்களுக்கு அதிகாரம் கொடுத்த பின், 6 மாதம் கூட அவரை உங்களால் பாதுகாக்க முடியவில்லை” என்று சாடினார். இது தான் காந்திக்கும் காந்தியடிகள் அணிந்த உடைக்கும் கிடைத்த அங்கீகாரம்! எனவே, பெண்கள் அவர்கள் விரும்பும் அழகியல்படி அவர்கள் உடை உடுத்திக் கொண்டு சமத்துவம் பெறும் வாய்ப்புதான் சரியான உரிமை மீட்பாகும்.

பெண் ஆணைப் போல் வலிமை உள்ளவள் என்பதை நிரூபித்தால்தான் சம உரிமைப் பெற முடியும் என்று கருதுவது தவறு. அதற்காக, பெண் இராணு வத்தில் பணிபுரிய வேண்டும் - விமானம் ஓட்ட வேண் டும் என்று வலிந்து திணிக்க வேண்டியதில்லை. அவ்வேலைகளைச் செய்ய பெண்ணுக்கு எந்தத் தடையும் இருக்கக்கூடாது. ஆனால், அவற்றையெல் லாம் செய்தால்தான், சம உரிமை பெறத் தகுதி உண்டு என்று நிபந்தனை போடக் கூடாது. ஆணுக்கு ஒருவகை வலிமை இருக்கிறது, பெண்ணுக்கு இன்னொரு வகை வலிமை இருக்கிறது. கருவைச் சுமந்து குழந்தையைப் பெற்றெடுத்து, மனித குலத்தைப் பெருக்கும் வாய்ப்பும் வலிமையும் ஆணுக்கில்லை. இதனால், ஆணைக் குறைவாக நினைக்கிறோமா? இல்லை. எனவே, சமூகத்திற்கு ஆணும் பெண்ணும் சமமாகத் தேவைப்படு கிறார்கள். வலிமை சார்ந்து, சமத்துவத்தை வழங்குவது நீதியன்று!

பெண்கள் ஆபாசமாக உடை உடுத்திக் கொள்கிறார்கள். அதனால்தான், பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகிறார்கள் என்ற ஒரு விவாதம் தொலைக் காட்சிகளில் நடக்கிறது. ஆபாசமாக உடையணிவதால் அல்ல, ஆண்களின் வக்கிரத்தால் - ஆண்களின் மேலாதிக்க வெறியால் பாலியல் வல்லுறவுகள் நடைபெறு கின்றன. நான்கு வயது பெண் குழந்தையைக் கூட பாலி யல் வன்முறைக்கு உட்படுத்தியிருக்கிறார்கள். மூதாட் டியை இளைஞர்கள் பாலியல் வல்லுறவு கொண் டார்கள் என்ற செய்தியெல்லாம் வந்து கொண்டுதான் இருக்கிறது.

எனவே, பாலியல் வல்லுறவுக்கு பெண்கள் உடை உடுத்தும் முறை முக்கியக் காரணமல்ல. ஆண்களின் ஆணாதிக்கக் குணம் என்று எதிர்வாதம் புரிகிறார்கள். ஆனால், பாலியல் வல்லுறவுகள் பெருகுவதற்கு உண்மையான காரணம் என்ன என்பதை மேற்கண்ட இருவாதங்களும் சரியாக கண்டறியவில்லை என்றே கருதுகிறேன். ஆண்களுக்குப் பாலியல் வல்லுறவில் ஆணாதிக்கக் குணம் இருக்கிறது. அரைகுறை ஆடை உடுத்தல், பாலுணர்வைத் தூண்டும் நிலையும் இருக் கிறது. ஆனால், ஆணாதிக்கக் குணமுள்ள எல்லா மனிதர்களும் பாலியல் வல்லுறவில் இறங்கிவிடுவ தில்லை. அரைகுறை ஆடை உடுத்த பெண்ணை எல்லா ஆணாதிக்க ஆண்களும் பாலியல் வன் முறைக்கு உள்ளாக்குவதில்லை.

சிலருக்குக் கடும் பசியெடுக்கிறது. அவர்கள் கண்முன்னால் கடைகளில், தள்ளு வண்டிகளில் உணவுப் பண்டங்கள் இருக்கின்றன. காசு கொடுத்து வாங்கி உண்ணப் பணமில்லை. பலர், பசியைத் தாங்கிக் கொண்டு போய் விடுவார்கள். சிலர், உணவைத் திருடிச் சாப்பிட முயல்வார்கள். மனத்தைக் கட்டுப்படுத்த முடிந்தவர்கள் திருடிச் சாப்பிட முனைய மாட்டார்கள். மனத்தைக் கட்டுப்படுத்த முடியாதவர்கள் திருடர் களாக மாறி விடுகிறார்கள்.
எல்லா மனிதர்கள் உடலிலும் பாலியல் உணர்வு இயல்பூக்கமாக (Instinct) பசி, தாகம் போல் இருக்கிறது. அது, குறிப்பிட்ட பருவத்திற்குப் பிறகு காமப்பசியாக வளர்கிறது. உரிய காலத்தில், அங்கீகரிக்கப்பட்ட முறை யில் பாலுறவு வாய்ப்பு கிடைக்காத போது, சிலர் மனத்தை அடக்கிக் கொள்கிறார்கள். சிலர் காமுகத் திருடர்களாக மாறி விடுகிறார்கள். காமப்பசி என்பது, உடல் பசி மட்டுமல்ல. மனப்பசியும் ஆகும். காமம் என்பது, மனிதர்களுக்கு உடல் மற்றும் மனம் சார்ந் ததும் ஆகும். மன வளர்ச்சியில் பல நன்மைகள் இருக் கின்றன. சில தீமைகள் இருக்கின்றன. மன வளர்ச்சி பெறாத விலங்குகள் காமத்தில் ஒழுக்கத்தைக் கடை பிடிக்கின்றன. மன வளர்ச்சி பெற்ற மனிதர்கள், காமத் தில் ஒழுங்கு தவறி நடக்கிறார்கள். கற்பனையில் இன்பம் அனுபவிக்கும் - கற்பனையில் வாழ்ந்து பார்க்கும் மன வளர்ச்சி விலங்குகளுக்கு இல்லை. மனிதர்களுக்கு இருக்கிறது. அதுவே, காமப் பெரும் பசியைத் தூண்டுகிறது.
இந்தக் காமப்பசியை காம நெருப்பாக வளர்க்கின்ற புறத் தூண்டுதல் பற்றி நாம் பேசாமலேயே பாலியல் வன்முறைகளை மட்டும் கண்டிக்கிறோம். ஏடுகள், இதழ்களைப் பிரித்தால் காமக் கனலைத் தூண்டும் விளம்பரங்கள், ஒளிப்படங்கள், திரைப்படங்கள், கதைகள், கட்டுரைகள் இருக்கின்றன. தொலைக் காட்சி யைத் திருகினால், இரு சக்கர வண்டி விளம்பரத்திற்கு ஆண் - பெண் உறவைத் தூண்டக்கூடிய காட்சிகள் வருகின்றன. திரைப்படக் காட்சிகள் வருகின்றன.

ஒரு பனியன் விளம்பரத்திற்குக் கூட பாலுறவைத் தூண்டும் காட்சிகள் விளம்பரமாக வருகின்றன. தெருவில், திரும்பிய பக்கமெல்லாம் காம உணர்ச்சியைத் தூண்டும் காட்சிகள். இதனால், ஒருவன் மனத்தில் காம நெருப்பு மேலும் மேலும் பற்றி எரிகிறது. மனத்தை அடக்க முடி யாதவன், எளிதில் திருடக் கூடிய பலவீனமான இட மாகப் பார்த்து, சிறு பெண் குழந்தையை வல்லுறவு கொள்கிறான். தனியே செல்லும் பெண்ணைப் பாலியல் வன்முறை செய்கிறான். இந்தப் பாலியல் வன்முறையில் ஈடுபட்டவனைக் கட்டாயம் தண்டிக்க வேண்டும். ஆனால், இவன் மனத்தில் திரும்பிய பக்கமெல்லாம் பாலுணர்ச்சி நெருப்பைப் பற்ற வைத்த கயவர்களுக்கு என்ன தண்டனை? யார் வழங்குவது? ஒரு பொறுப் புள்ள சமூகம் - ஒரு பொறுப்புள்ள அரசு காமத் தீயை வளர்க்கும் விளம்பரங்களை, காட்சிகளை தவிர்த்து முறைப்படுத்தும் கடமையைச் செய்தாக வேண்டும்.
இந்தப் பாலியல் வன்முறைகளைத் தவிர்க்க ஆண் - பெண் பிள்ளைகளுக்கு பள்ளிக் கூடங்களில் பாலியல் கல்வி சொல்லித்தர வேண்டும் என்று கூறப்படுகிறது. ஐரோப்பாவில் அமெரிக்காவில் மாணவர்களுக்குப் பாலியல் கல்வி சொல்லித் தரப்படுகிறது. அதனால், அங்கு பாலியல் வன்முறைகள் குறைந்துவிட்டனவா என்றால் இல்லை! நான், ஈழத்தமிழர் கருத்தரங்குகளில் கலந்து கொள்வதற்காக மேற்கத்திய நாடுகள் சிலவற்றிற்குப் போன போது, பருவமடைந்து பள்ளிக்குச் செல்லும் சிறுமிகளுக்கு அவர்களின் தாய்மார்கள் புத்தகப் பைக்குள் கருத்தடை சாதனங்கள் அனுப்புவதை அறிந்தேன்.
அவர்கள், 14 வயதிற்குப் பிறகு தங்குதடையற்ற பாலுறவு கொள்கிறார்கள். அதனால், அவர்களில் பலர் கல்வி நாட்டம் குறைந்து பத்தாம் வகுப்புக்கு மேல் படிக்காத நிலை இருக்கிறது. அந்நாடுகளில் பல் கலைக்கழகப் படிப்பிற்குச் செல்லுகின்ற மாணவர்களின் விகிதம் குறைவாக இருக்கிறது. அதற்குக் காரணம் பிஞ்சிலேயே பழுத்துவிடுவது தான்! பாலியல் நாட்டம் கூடுதலாகி படிப்பை விட்டுவிடுகிறார்கள். அடுத்த வளர்ச்சியாக திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்தல் (Living together) என்ற வடிவத்தை உருவாக்கினார்கள்.

திருமணம் செய்து கொள்ளாமல் குழந்தையும் பெற்றுக் கொள்கிறார்கள். பிறகு, ஒருவ ருக்கு ஒருவர் ஒத்துப் போகவில்லையென்று பிரிந்து விடுகிறார்கள். அந்தக் குழந்தையை வளர்க்கும் பொறுப்பு, அந்தப் பெண்ணின் தலையில்தான் விழுகிறது. அங்கேயும் பெண்தான் கூடுதலாகப் பாதிக்கப்படுகிறாள்.

எனவே, மேற்கு நாடுகளைப் பார்த்து அப்படியே காப்பியடிப்பதும், சரிப்பட்டுவராது.

மனித மனத்தை ஒழுங்குபடுத்தாமல், கட்டுப்படுத் தாமல் மிகை நுகர்வு வாழ்க்கைக்குப் பழக்கிவிட்டால், அது பாலுறவிலும் அராஜகத்தையும் ஒழுங்கின் மையையும் உண்டாக்கும். கவியரசு கண்ணதாசன், ‘அண்ணன் என்னடா தம்பி என்னடா’ என்ற பல்லவி கொண்ட பாடலில்,

“கட்டுச் சேவலை பெட்டைக் கோழிக்கு
கட்டி வைத்தவன் யாரடா? - அவை
எட்டுக் குஞ்சுகள் பெற்ற போதிலும்
சோறு போட்டவன் யாரடா?
வளர்ந்த குஞ்சுகள் பிரிந்த போதிலும்
வருந்தவில்லையே தாயடா
மனித ஜாதியில் துயரம் யாவுமே
மனதினால் வந்த நோயடா” என்றார்.

நம்முடைய தொல்காப்பியர், மூவாயிரம் ஆண்டு களுக்கு முன்பே ஆறாவது அறிவு பகுத்தறிவு என்று சொல்லாமல், மனம் என்றார். மன வளர்ச்சி தான் மனித வாழ்க்கையை மேம்படுத்தும்.

நாம் ஐரோப்பா அமெரிக்காவைப் பார்த்து உலக மயம், தாராளமயம் என்ற கருத்துகளை வளர்த்துக் கொண்டோம். மிகையாக நுகர்ந்தால் அதிகமாகப் பொருட்கள் விற்பனையாகும் என்பது பன்னாட்டுப் பெருமுதலாளிகளின் திட்டம்! மிகை நுகர்வுதான் உயர்ந்த வாழ்க்கையின் இலக்கு என்பதுபோல் காட்டப்பட்டுவிட்டது. இங்கு ஒரு சாமியார் கூட, ‘அத்தனைக்கும் ஆசைப்படு’ என்று ஒரு முழக்கத்தையே உருவாக்கியிருக்கிறார். இவர், கார்ப்பரேட் சாமியார். பொருள்களில் மிகை நுகர்வு வருவது பாலியலில் மிகை நுகர்வாக வளரும். அந்தச் சீரழிவைத்தான் நாம் இப்போது சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

நம்முடைய மனம் எப்பொழுதும் அற்பச் செய்தி களில் அதிக நாட்டம் கொள்ளும். இங்கேகூட ஏதோ வொரு நடிகை நடிகரின் அந்தரங்க வாழ்க்கை பற்றி நான் பேசத் தொடங்கினால், ஊசிபோட்டால் ஓசை கேட்கும் அளவிற்கு அமைதி உண்டாகிவிடும். அத்தனை உறுப்புகளும் கூர்மையடைந்துவிடும். நமது உடலமைப்பு, மனம் ஆகியவை அப்படித்தான் இருக் கின்றன. இவற்றை, உயர்ந்த செய்திகளின்பால் உயர்ந்த நோக்கங்களின்பால் திருப்பி அவற்றில் மகிழ்ச்சி காணும் பழக்கத்தை மனத்திற்கு நாம்தான் உருவாக்க வேண்டும். மிகை நுகர்வு எதிலும் கூடாது என்ற பயிற்சி, எளிமையில் மனநிறைவு என்பவை உண்டாக வேண்டும்.

ஒவ்வொரு ஆணிடமும் பெண்ணிடமும் உருவாக்க வேண்டிய மாற்றங்கள் இருக்கின்றன. அங்கிருந்து நாம் தொடங்க வேண்டும். அதேவேளை, காமப்பசியைத் தூண்டி வணிகம் நடத்தும் கயமைத்தனம் ஒழிய வேண்டும்.
அவ்வாறான மனப்பயிற்சியும் அதற்கான சமூகமும் உருவாகும்போதுதான், பாலியல் வன்முறைகளை நாம் தவிர்க்க முடியும். அதற்காக பாலியல் வன்முறைக் குற்றங்களுக்கு தண்டனை கூடாது என்பதல்ல என் வாதம். கட்டாயம் தண்டனை வேண்டும். அதே நேரம், மனப்பயிற்சியும் சமூக மாற்றமும் வேண்டும்.

சமையல் செய்வது பெண்ணின் வேலை என்று ஆகி விட்டதால், பெண் விடுதலைக்கு உணவு விடுதிகளில் சாப்பிடுவது ஒரு வழிமுறை என்ற கருத்து உருவாகியுள்ளது. ஆணோ பெண்ணோ முதலில் கற்றுக் கொள்ள வேண்டிய தற்காப்புக் கலை, கராத்தே, - சிலம் பம், - குங்பூ அல்ல, சமையல் கலையே! சமையல் கலை யைக் கற்றுக் கொள்ளாமலே ஆண்கள் பெண்ணுரிமை பேசுகிறோம்.

சமையல் கலையைக் கற்றுக் கொண்டு, வீட்டுச் சமையல் பணியை - குடும்ப வேலைகளை ஆண், பெண்ணுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். அதுதான் பெண்ணுரிமைக்கு ஆண்கள் செய்யும் பங்களிப்பு. ஆனால் இப்பொழுது சமைத்த சாப்பாட்டை தானே போட்டு சாப்பிடக்கூட ஆண்கள் தயாராக இல்லை. இரவு பன்னிரெண்டு மணிக்கு வீட்டுக்குத் திரும்பும் கணவன், தூங்கிக் கொண்டிருக்கும் அந்தப் பெண்ணை எழுப்பி சாப்பாடு போடச் சொல்கிறான். அது மிகக் கொடுமையானது. தானே போட்டு சாப்பிட்டால், சாப்பிட்டது போல் இல்லை என்கிறான். இரவு பன்னி ரெண்டு மணிக்கு நன்கு தூங்கிக் கொண்டிருக்கும் பெண்ணை எழுப்பி, சாப்பாடு போடச் சொல்வது எவ்வளவு பெரிய சித்திரவதை!

தானே போட்டு சாப்பிட்டுவிட்டு, தட்டைக் கழுவி வைக்க வேண்டும். தான் சாப்பிட்ட தட்டை கழுவுவது இழிவு என நினைக்கக்கூடிய ஆணாதிக்க மனப் பான்மை இருக்கிறது. இதைச் சொல்லுகின்ற நான், நானே சாப்பாடு போட்டுக் கொண்டு தட்டைக் கழுவி வைக்கும் பழக்கத்தை உடையவன் தான். சமையல் வேலையில் பங்கு கொள்ளவில்லையே என்ற குற்றவுணர்வு எனக்குண்டு.

சென்னை போன்ற இடங்களில் இரவு 9 மணிக்கு மேல் நடுத்தர மற்றும் உயர் நடுத்தர வகுப்புக் குடும்பங் களைச் சேர்ந்தவர்கள், கணவன் மனைவி குழந்தைகள் என அனைவரும் சாப்பிட, உணவு விடுதிக்கு வந்து விடுகிறார்கள். சில வேளைகளில் இவ்வாறு உணவு விடுதிகளில் சாப்பிடலாம். தொடர்ந்து, உணவு விடுதிகளில் சாப்பிடுவது உடல் நலத்துக்குக் கேடு. எவ்வளவு எளிமையாக இருந்தாலும், வீட்டுச் சாப்பாடு உடல் நலத்திற்கும் மன நலத்திற்கும் உகந்தது.

பன்னாட்டு உணவக நிறுவனமான மெக்டொ னால்ட் இந்தியாவில் கடைகள் திறந்திருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் அந்த மெக்டொனால்ட் நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஒருவர் இந்தியா வந்து, தங்களுடைய உணவு விடுதிகளில் வணிகம் எப்படி நடக்கிறது என்று பார்த்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “இன்னும் இந்தியர்கள் அதிகமாக வீட்டுச் சாப்பாடு சாப்பிடுவதுதான் சிறந்தது என்றும் கவுரவமானது என்றும் நம்புகிறார்கள். அதனால், நாங்கள் எதிர்பார்த்த அளவு எங்கள் விடுதிகளில் வணிகம் நடக்கவில்லை” என்று சொன்னார். இந்தச் செய்தியை படிக்கும் போது எனக்கு ஒருபக்கம் மகிழ்ச்சியாகவே இருந்தது.

வீட்டுச் சாப்பாடு என்பதுதான் உடல் நலத்திற்கும் சிக்கனத்திற்கும் சிறந்தது. இதிலுள்ள சிக்கல், ஆண்கள் சமையல் பணியில் பங்கு கொள்ளாதது தான். நம்முடைய தமிழ்நாட்டில் ஆண்மக்கள் சமையல் கற்றுக் கொள்ளவேண்டும். தங்கள் குடும்பங்களில் சமையல் பணிகளில் ஈடுபட வேண்டும். இதுவொரு தமிழ்த் தேசியப் பண்பு என்ற உணர்வு வர வேண்டும்.

ஏசுபிரான் சொன்னார், “நான் பாவிகளுக்குத் தீர்ப்பெழுத வரவில்லை. பாவிகளை மீட்கவே வந்திருக்கிறேன்” என்று. காரல் மார்க்ஸ் கல்லூரியில் படிக்கும் போது, ‘தமது எதிர்காலத் திட்டமென்ன’ என்ற கட்டுரையில், “இதுவரை வந்த அறிஞர்கள் உலகத்தை, சமூக சிக்கல்களை விளக்கினார்கள். நான் அவற்றை மாற்றவே விரும்புகிறேன்” என்று எழுதினார். எனவே, செயல் துடிப்புள்ளவர்கள் தீர்ப்பு வழங்கி ஒதுங்கிக் கொள்ள மாட்டார்கள். தீர்ப்பு வழங்குவது எளிது, யாரும் வழங்கலாம். மனிதர்களை மாற்றுவது, சமூக அமைப்பை மாற்றுவது என்பதுதான் கடினம். அதில்தான் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். ஏசுநாதரும், காரல் மார்க்சும் சமூகத்தை மாற்றும் தங்கள் நோக்கத்தைத்தான் வெளிப்படுத்தினார்கள்.

நம்முடைய தமிழர் மரபில், சங்ககால வாழ்வில் ஓரளவு ஆணாதிக்கம் இருந்தாலும், பெருமளவு ஆண் - பெண் சமத்துவம் இருந்தது. கணவனுக்குப் பெயர் தலைவன் என்றால், மனைவிக்குப் பெயர் தலைவி என்று இருந்தது. தலைவன்/தலைவி என்ற சமத்துவம் நிலவியது. அக்காலத்தில், பெண்கள்தான் திருமணத்தை நடத்தி வைத்திருக்கிறார்கள். சங்ககாலத்தில் வாழ்ந்த பெண்பாற் புலவர்களின் எண்ணிக்கைக்கு ஈடாக, அதே காலத்தில் வேறு எந்த மொழியிலும் பெண்பாற் புல வர்களோ, அறிஞர்களோ விளங்கியதாக சான்றில்லை.

பிற்காலத்தில், நம்முடைய தமிழ்ச் சமூகத்தில் மிகக் கொடிய முறையில் பெண்ணடிமைத்தனம் வந்து விட்டது. மனிதகுல வளர்ச்சியில் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் முரண்பாடு இருந்தது. அது தீர்க்கப் பட்டு, மனித குலத்தின் வெற்றி உறுதி செய்யப்பட்டது. ஆனால், மனிதர்களுக்குள்ளேயே உள்ள மிகப்பெரிய முரண்பாடாக ஆண் - பெண் முரண்பாடு, ஆணாதிக்கம் - பெண்ணடிமைத்தனம் என்ற முரண்பாடு நீடிக் கிறது. இந்த முரண்பாட்டில் ஒன்று இன்னொன்றை வெற்றிக் கொள்வதல்ல, ஆணும் பெண்ணும் சமத்துவ நிலையில், அன்பு நிலையில் இணக்கம் காண்பது, சமஉரிமை பெறுவது. அப்படிப்பட்ட, சம உரிமையுள்ள தமிழச்சியையும், சம உரிமையுள்ள தமிழனையும் மறுவார்ப்பு செய்து இல்லற வாழ்க்கையையும் சமூக வாழ்க்கையையும் இனிதாக்கக் கூடியதே தமிழர் அறம். அதுவே, தமிழ்த் தேசிய அறம்! பெண்ணுரிமைப் போராட்டத்தில் புதிய சிந்தனைகள்வேண்டும்

இந்த மகளிர் உரிமை நிகழ்வில், இந்த கருத்துகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள வாய்ப்பளித்தமைக்கு நன்றி கூறி, பெண்ணுரிமை தழைக்கட்டும் என்று வாழ்த்தி விடைபெறு கிறேன்! நன்றி வணக்கம்!”
இவ்வாறு தோழர் பெ. மணியரசன் பேசினார்.

நிறைவில், குடந்தை நடுநகர் சுழற்சங்கச் செயலாளர் திரு. ஜெரால்டு நன்றி நவின்றார். கூட்டத்தில், திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.

Labels: ,

"திராவிடமா? தமிழ்த் தேசியமா?" தோழர் பெ.மணியரசன் பேச்சு.

Monday, March 16, 2015

"திராவிடமா? தமிழ்த் தேசியமா?"
====================================
-- தோழர் பெ.மணியரசன் பேச்சு (பகுதி 2)

(சென்னை சங்கம்-4 தமிழ்த் திருவிழாவில் 16.02.2015 அன்று, “இன்றையத் தேவை திராவிடமா? தமிழ்த் தேசியமா?” என்ற தலைப்பில் நடந்த விவாதத்தில் திராவிடம்’என்ற தலைப்பில் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்களும், ‘தமிழ்த் தேசியம்’என்ற தலைப்பில் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அவர்களும் பேசினர். தோழர் பெ. மணியரசன் வாதத்தின் நிறைவுப் பகுதியின் எழுத்து வடிவம்).

"பெரியாரியம் என்பது ஒரு தத்துவமாக, சிந்தனை யாக உருவாக்கப்படவில்லை. அதற்கான அடிப்படைக் கூறுகளோ, தரவுகளோ அதில் இல்லை (ஆய்வு முறை யியலும் இல்லை). அதனால்தான் பெரியாரியம் தமிழ் நாட்டைத் தாண்டி வேறு மாநிலங்களிலோ, வேறு நாடுகளிலோ ஏற்கப்படவில்லை. நமக்கு மாறுபட்ட கருத்து இருந்தாலும், காந்தியம் இந்தியா முழுவதும் மட்டுமின்றி வெளி நாடுகளிலும் பரவியுள்ளது. மார்க் சியம் உலகெங்கும் பரவியுள்ளது. அப்படிப்பட்ட பரவல் பெரியாரியத்துக்கு இல்லை
பெரியார் பேசியது, பெரும்பாலும் எதிர்வினைக் கருத்துகள். எதிரிகளின் கருத்துகளுக்கு எதிராகப் பேசி னார், செயல்பட்டார். தனக்கான நேர்வகைக் கருத்தி யலை அவர் உருவாக்கவில்லை
திராவிடம் என்பதற்குப் புத்துயிர் கொடுத்தது, கால்டுவெல். இந்திய மொழிகளை ஆய்வு செய்த ஐரோப்பியர், இந்திய மொழிகள் அனைத்தும் சமற்கிருத மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்ற னர். தமிழும் சமற்கிருத மொழியிலிருந்து பிறந்ததே என்றனர்
இதில், குறிப்பிடத்தக்கவர் மாக்ஸ் முல்லர். அவரைப் பார்ப்பனர்கள் கொண்டாடுவார்கள். ஆனால், எல்லீஸ் என்ற வெள்ளைக்கார அதிகாரிதான் - 1812 வாக்கில் - சமற்கிருத மொழிக் குடும்பத்தைச் சேராதவை தமிழ், தெலுங்கு போன்ற தென்னிந்திய மொழி கள் என்றார். அவர் திருக்குறளை ஆங்கிலத் தில் மொழிபெயர்த்தார். திருவள்ளுவர் படம் பொறித்த நாணயத்தை வெளியிட்டார்
அயோத்திதாசப் பண்டிதர், “எல்லீஸ் துரையிடம் பட்லராக இருந்த என் தாத்தா கந்தப் பிள்ளைதான் அவருக்குத் தமிழ் கற்றுக் கொடுத்தார்”என்று பெருமையாகக் குறிப்பிடுகிறார்.
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி களைத் தென்னிந் திய மொழிகள் என்று பெயர் சூட்டினார் எல்லீஸ். ஆனால் அவருக் குப் பின் வந்த கால்டுவெல் - தமிழ் உள்ளிட்ட தென்னிந் திய மொழிகளை விரிவாக ஆய்வு செய்து, சமற்கிருதத் தின் துணை இன்றித் தனித்து இயங்கக் கூடியது தமிழ் என்ற உண்மையை நிலை நாட்டினார்
வடக்கே உள்ள மொழிகள் சமற்கிருத மொழிக் குடும்பம் என்று சொல்லப்படுவது போல் தெற்கே உள்ள மொழிகளை தனிமொழிக் குடும்பமாகச் சொல்ல வந்த கால்டுவெல் - இந்த மொழிக் குடும்பத் திற்கு ஒரு பெயர் சூட்ட விரும்பினார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு ஆகிய மொழிகளில் தமிழே மூத்த மொழி, சமற்கிருதமின்றித் தனித்தி யங்கும் ஆற்றல் பெற்றது என்பதால் தமிழ் மொழிக் குடும்பம் என்று பெயர் சூட்டலாம் என்று முதலில் கால்டுவெல் சிந்தித்தார். ஆனால் அதை தெலுங்கு, கன்னட, மலையாள மொழியினர் ஏற்றுக் கொள்வார் களா என்ற ஐயம் கால்டுவெல்லுக்கு ஏற்பட்டது
எனவே, வடமொழிகளில் தேடினேன் என்கிறார் கால்டுவெல். மனுஸ்மிரிதியில் த்ராவிட”என்ற சொல் இருக்கிறது. குமாரிலபட்டர், “ஆந்த்ர - த்ராவிட பாஷா”என்கிறார். எனவே, தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளுக்குப் பொதுப் பெயராக திராவிட“என்பதைச் சூட்டினேன் என்கிறார் கால்டுவெல்
கால்டுவெல் பிறந்த இருநூறாம் ஆண்டுக்கு கருத்தரங்குகள் நடந்து கொண்டுள்ளன. நான் தமிழறி ஞர்கள் சிலரிடம் கேட்டேன். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளுக்குத் தமிழல்லாத மூலமொழி ((Proto Language) ஒன்று இருந்ததாகக் கூறுகிறார் கால்டுவெல். அது அவரின் ஊகமாக இருக்கிறதே தவிர, அதற்கான தரவுகள் எதுவும் தரவில்லையே என்றேன். அவர்களும் தரவுகள் கூறவில்லை
தமிழல்லாத ஒரு மூலமொழி இருந்ததற்கான சான்று எதுவும் தராமல், தமிழே மூலமொழியாக இருந்திருக்கலாம்; ஆனால், அப்படிச் சொன்னால் தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசுவோர் அதை ஏற்றுக் கொள்வார்களா என்பது ஐயமாக உள்ளது என்கிறார். எனவே, எல்லாருக்கும் பொதுவான ஒரு மூலமொழியைத் தேடினேன். சமற்கிருத இலக்கியங் களில் உள்ள திராவிட”என்ற சொல்லை எடுத்துக் கொண்டேன் என்கிறார். இது மொழியியல் ஆய்வா? இல்லை.
கால்டுவெல் குறிப்பிடும் மூலமொழி தமிழ்தான். திராவிடம் என்ற பெயரில் ஒரு மொழியும் இருந்த தில்லை. ஒரு இனமும் இருந்ததில்லை. ஒரு நாடும் இருந்ததில்லை. திராவிடம் என்பது ஆரிய உருவாக்கம்.
கிளைமொழி(Dialect)யும் தமிழே! வளர்ச்சி யடைந்த பொது மொழியும் (Standard Language) தமிழே! இன்று தேசிய மொழியும் ((National Language) தமிழே!
திராவிட மொழி இருந்தது என்பதில் கால்டு வெல்லுக்கே சந்தேகம் இருந்ததால்தான் அவர் தமது நூலுக்கு, “திராவிட மொழிகளின் அல்லது தென்னிந்திய மொழிகளின் ஒப்பிலக்கணம்” (Comparative grammar of Dravidian Languages or South Indian Languages)) என்கிறார். இந்தியாவுக்கு இந்தியா அல்லது பாரதம் என்று இரு கற்பனைப் பெயர்களை வைத்தது போல் இது இருக்கிறது
இப்படிப்பட்ட வலுவற்ற கால்டுவெல் கற்பனையை வைத்துக் கொண்டுதான் திராவிடம்”என்பதைக் கட்டியுள்ளார்கள்இவர்கள் தெலுங்கர், கன்னடர், மலையாளி ஆகியோர் திராவிடர் என்கிறார்கள். அவர்கள் யாரும் தங்களைத் திராவிடர்கள் என்று சொல்லிக் கொள்வ தில்லை. ஆனால், அவர்கள் தெலுங்கர், கன்னடர், மலையாளி என்ற இன உணர்ச்சியில் ஒன்று சேர்ந்து கொள்கிறார்கள். நம்மைவிட அவர்கள் இன உணர்ச்சி யில் தீவிரமாக உள்ளார்கள்.
தமிழர்கள் என்ற அடிப்படையில் நாம் இன உணர்ச்சி கொள்வதில் -பலவீனம் இருக்கிறது.   திராவிடர் என்று இல்லாத ஒன்றைப் புகுத்தி திராவிட இயக்கம் தமிழர்களின் உளவியலில் ஊனத்தை ஏற்படுத்திவிட்டன. அந்த உளவியல் ஊனம் காரண மாகத்தான் தமிழர்கள் இன்று இன உணர்ச்சியில் பின்தங்கி உள்ளார்கள்
இதே திராவிட இயக்கத்தினர் ஈழத் தமிழர்களை ஈழத் திராவிடர் என்று அழைப்பதில்லை. ஈழத் தமிழர் என்றே அழைக்கின்றனர். ஏனெனில், ஈழத் தமிழர்கள் தங்களைத் திராவிடர் என்று அழைப்பதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஏமாந்தவர்கள் தமிழ்நாட்டுத் தமிழர்கள்தான்
திராவிடர் எனத் திராவிடர் கழகம் சொல்கிறது; பெரியார் சொன்னார். ஆனால், தி.மு.. திராவிடர் கிடையாது; திராவிடம் தான் உண்டு என்கிறது.
கவிஞர் தணிகைச் செல்வன் கவிதை நூல் வெளி யீட்டு விழாவில் கலைஞர் இக்கருத்தைக் கூறியுள்ளார். கலைஞர் கூறியது 2001 அக்டோபர் 2ஆம் நாள் முரசொலியில் வந்துள்ளது
எனவேதான் அண்ணா அவர்கள் மிகுந்த எச்சரிக்கையாக ஆரியர், திராவிடர் என்று பகுத்துக் குறிப்பிடவில்லை. ஆரியம் - திராவிடம் என்று கலாச் சாரங்களை வேறுபடுத்திக் காட்டினார்கள். இப் பொழுது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழிகளுக்குட்பட்டப் பகுதி திராவிடம் என்று அழைக்கப்பட்டாலுங்கூட தனித்தனிப் பகுதிகளாக அவை இயங்கிக் கொண்டிருக் கின்றன. அங்கே தனித்தனி ஆட்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இருந்தபோதிலும், நாம் தமிழ் மொழிக்குரியவர்கள். தமிழ்த் தேசிய உணர்வை வெறுத்துவிடவில்லை. ஏற்றுக் கொள்கிறோம்”

பெரியார் திராவிடர் என்கிறார். அண்ணா திராவிடர் இல்லை, திராவிடம்தான் இருக்கிறது என் கிறார். உங்களுக்குள்ளேயே திராவிடர்”பற்றி ஒருமித்த ஒரு கருத்து இல்லாத போது - திராவிடர் என்பதையும் திராவிடம் என்பதையும் ஏன் தமிழர்கள் மீது திணிக்கிறீர்கள்?
அதே பேச்சின் முற்பகுதியில், கலைஞர் சொல் கிறார், “நான் மொழியால் தமிழன், இனத்தால் திராவிடன், நாட்டால் இந்தியன், உலகத்தால் மனிதன்”என்கிறார். அதே முரசொலியில் இதுவும் வந்துள்ளது

அண்ணா மிகவும் எச்சரிக்கையாகத் திராவிடர் என்று சொல்லவில்லை,- திராவிடம் என்றுதான் சொன் னார் என்கிறார். அதே பேச்சில், “நான் இனத்தால் திராவிடன்”என்கிறார். ஏன் இந்தக் குழப்பம்? இல்லாத திராவிடத்தை - எடுத்துக் கொண்டதால் இந்தக் குழப்பம். அடுத்த கேள்வி, மொழியால் தமிழன், இனத் தால் திராவிடன், நாட்டால் இந்தியன் என்று மூன்று வகை இனங்களைச் சொல்கிறாரே, இப்படிப்பட்ட இன வரையறுப்பு உலகத்தில் எங்காவது உண்டா? சமூக அறிவியலுக்கு இது பொருந்துமா?
பெரியாரின் பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, பெண்ணுரிமைப் போராட்டங்களை நான் பாராட்டுகிறேன். ஆனால், அவரின் இனக்கொள்கை, -மொழிக் கொள்கைகளை, கருத்துகளை முற்றிலுமாக எதிர்க்கிறேன்

பெரியாரை விமர்சித்தால் உடனே அப்படி விமர்சிப்பவர்களைப் பார்ப்பன ஆதரவாளர்கள் என்று முத்திரை குத்துகிறீர்கள். எங்களது தமிழ்த் தேசியப் பேரியக்கம், இந்திய அரசுக் கட்டமைப்பில் பார்ப்ப னியம் இருக்கிறது என்கிறது. எங்கள் கொள்கை அறிக் கையில் இந்திய அரசு என்பது பெருமுதலாளிகள் தலைமையிலான ஆரியப் பார்ப்பனிய - இந்தி ஆதிக்க அரசு என்கிறது. இவ்வாறு இந்திய அரசை வரையறை செய்து எந்த திராவிடக் கட்சியாவது, திராவிட இயக்கமாவது இந்திய அரசு பார்ப்பனிய அரசு என்று கூறியதுண்டா? இல்லை

நாங்கள் இந்திய அரசு இனப்பகை அரசு என் கிறோம். இந்திய அரசிலிருந்து தமிழ்நாடு விடுதலை அடைய வேண்டும் என்கிறோம். எந்தத் திராவிடக் கட்சியாவது, தேர்தலில் நிற்காத திராவிட இயக்க மாவது தமிழ்நாட்டு விடுதலையை தனது இலட்சி யமாக அறிவித்திருக்கிறதா? இல்லை! பிறகு உங்களை விமர்சிக்கிற எங்களைப் பார்த்துப் பார்ப்பனிய ஆதரவாளர் என்று எந்த வகையில் கூறுகிறீர்கள்? நாங் கள் கூறுகிறோம், திராவிடர்கள்தான் பார்ப்பனர்களின் ஒன்றுவிட்ட சகோதரர்கள்

சங்க இலக்கியத்திலோ, காப்பியங்களிலோ, தமிழர் கள் தங்களைத் திராவிடர்கள் என்று கூறிக் கொண்ட தில்லை. திராவிடர் என்று கூறிக் கொள்வதைத் தமிழர்கள் இழிவாகக் கருதினார்கள். முத்தமிழ் அறிஞர் கலைஞர் திராவிடர் என்பதற்கு சங்க இலக்கியங்க ளிலிருந்து சான்று காட்டாமல், தாகூரின் ஜன கன பாட்டிலிருந்தும், .வே. சாமிநாதய்யர் சிலையின் கீழ் அவரை திராவிட வித்வத்வ என்று எழுதியிருப்ப தையும்தானே சான்றாகக் காட்டுகிறார். இவையெல் லாம் ஆரியச் சான்றுகள்தானே! தமிழர்களின் அகச் சான்று இருக்கிறதா? இல்லை!
நாங்கள் கூறும் தமிழ்த் தேசியம் தெளிவானது

எமது தேசியம் இனம் தமிழர்! - நான் இந்தியனும் இல்லை; திராவிடனும் இல்லை.
எமது தேசிய மொழி தமிழ்! - இந்தியோ அல்லது ஆங்கிலமோ எமது தேசிய மொழி அல்ல!
எமது தேசம் தமிழ்த் தேசம் - இந்தியாவோ திராவிடமோ எமது தேசம் அல்ல.

இறையாண்மையுள்ள தமிழ்த் தேசக் குடியரசு அமைப்பது எமது இலக்கு!
இந்த நான்கு கூறுகளையும் கொண்டதுதான் தமிழ்த் தேசியம். இதுதான் நாங்கள் முன்வைக்கும் தமிழ்த் தேசியம்! இந்தத் தமிழ்த் தேசியம்தான் இன்றையத் தேவை

தோழர் பெ.. இவ்வாறு பேசி முடித்தபின் இருவருக்கும் இறுதிவாதம் செய்ய பத்து, பத்து நிமிடங்கள் தந்தார்கள். அப்போது பேரா. சுப.வீ. எழுப்பிய வினாக்களுக்கு தோழர் பெ.. அளித்த விடை வருமாறு :
கேரளாவில் ஐயப்பன் கோயிலுக்குப் போன தமிழர்களை மலையாளிகள் தாக்கினார்கள் என்று நான் சொன்னதற்கு, தமிழ்நாட்டிலிருந்து அங்கே ஐயப்பன் கோயிலுக்கு ஏன் போனார்கள் என்று சுப.வீ. கேட்டார்கள். அங்கே போயிருக்கக்கூடாது என்கிறார். அப்படியென்றால், ஈழத்தில் சிவன் கோயிலைச் சிங்கள அரசு இடித்ததை நாம் குற்றமாகச் சொன்னால், சுப.வீ. தமிழர்கள் ஏன் கோயில் கட்டினார்கள் என்று கேட்பாரோ?
தமிழ்நாட்டில் உள்ள பக்தர்களுக்கு திராவிடம் பாதுகாப்புத் தராது என்கிறாரா?
தருமபுரியில் தமிழர்களுக்குள்ளேயே சாதிச் சண்டை நடந்ததே, பிறகு எங்கே தமிழர் ஒற்றுமை இருக்கிறது என்று சுப.வீ. கேட்டார். தருமபுரியில் ஒடுக்கப்பட்டத் தமிழர்கள் வீடுகள் எரிக்கப்பட்ட போது, நான் அங்கே போய்ப் பார்த்தேன். அந்த வன்முறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தினோம். நான் எங்களது தமிழர் கண்ணோட்டம் இதழில், ஈழத்தில் சிங்களர்கள் தமிழர்கள் வீடுகளை எரித்ததற்கும் நாயக்கன் கொட்டாய் பகுதியில் ஒடுக்கப்பட்டத் தமிழர்கள் வீடுகள் எரிக்கப் பட்டதற்கும் எந்த வேறுபாடும் இல்லை என்று ஆசிரிய உரை எழுதினேன். நமக்குள் இருக்கிற சாதி அழுக்கை நாம் போக்கியாக வேண்டும்! அதற்காக, எதிரிக்கு நாம் இடம் கொடுக்கக் கூடாது. தமிழினம் இல்லை என்று சொல்ல முடியாது

தமிழீழத் தலைவர் பிரபாகரனும் உமா மகேசுவரனும் ஒரு கட்டத்தில் பாண்டி பசாரில் சண்டையிட்டுக் கொண்டார்கள் என்பதற்காக, சிங்கள அரசு உங்களுக்குள்ளேயே ஒற்றுமை இல்லை; உங்களுக்குத் தனி நாடு ஏன்”என்று கேட்டால் அதை ஒப்புக் கொள்வோமா

பார்ப்பனர்களைக் கட்சியில் சேர்ப்பதில்லை என்று கட்சியில் விதி வைப்பதற்குப் பதிலாக - தமிழர் என்ற இனத்தையே கைவிடச் சொன்னார் பெரியார். இது தவறு; காலுக்குச் செருப்புப் போட்டுக் கொள்வதற்குப் பதில் காட்டுக்கே செருப்புப் போட்டுவிட்டது போல் ஆகிவிட்டது என்று நான் சொன்னதற்கு, மணியரசன் தன் கட்சியில் பார்ப்பனரைச் சேர்க்காமல் இருக் கிறாரா என்று சுப.வீ. கேட்டார்

பார்ப்பனியத்தை மறுத்த பார்ப்பனர்களைக் கட்சியில் சேர்த்துக் கொள்ளலாம் என்பதுதான் எங்கள் நிலைபாடு. பூணூலை அறுத்து எறிந்துவிட்டு, துப்புரவுத் தொழிலாளர்களுக்கான சங்கத்தில் செயல்பட்டு, அவர்கள் வீட்டில் தங்கி, அவர்கள் வீட்டில் மாட்டுக்கறியும், பன்றிக்கறியும் சாப்பிட்டு, இப்போது தமிழ்த் தேசியப் புரட்சிக்கு முழுவதுமாகத் தன்னை ஒப்படைத்துக் கொண்டிருக்கும் ஒருவரைத் தமிழ்த் தேசிய இயக்கத்தில் சேர்த்துக் கொள்வது தவறு இல்லை

பெரியார்கூட பார்ப்பனர்கள் தங்களின் ஆச்சார அனுஷ்டானங்களையும் பேத உணர்ச்சியையும் கைவிட்டு நானும் திராவிடன் என்று கூறினால் சேர்த்துக் கொள்வோம் என்று தானே கூறியிருக்கிறார்

உடனே, சுப.வீ. குறிக்கிட்டு, பெரியார் மனிதநேயம் உள்ளவர். யாரையும் பிறப்பால் வெறுப்பவர் இல்லை. அப்படி வருபவர்களை சேர்த்துக் கொள்ளலாம் என்றார்

பெ.. : பார்ப்பனர்களைப் பெரியார் சேர்த்துக் கொண்டால் மனித நேயம். மணியரசன் சேர்த்துக் கொண்டால் பார்ப்பனியமா?
அடுத்து, சுப.வீ. இங்கு பேசும் போது, மணியரசன் தமிழ்நாடு விடுதலை கேட்பதாகச் சொல்கிறார். அவர் இந்திய அரசின் கடவுச்சீட்டு (இந்தியன் என்ற அடிப்படையில்) வைத்துள்ளாரா இல்லையா? அவர் கடவுச்சீட்டு வைத்திருந்தால் அவர் தனித் தமிழ்நாடு கேட்பதில் முரண்பாடில்லையா என்று கேட்டார்

தமிழீழ விடுதலைப்புலிகள் உலகம் வியக்க விடுதலைப் போராட்டம் நடத்தினார்கள். அவர்களும் இலங்கை அரசின் கடவுச்சீட்டைத்தான் பயன்படுத் தினார்கள். ஆன்டன் பாலசிங்கம் தமது சிகிச்சைக்காக இலங்கை அரசின் கடவுச்சீட்டை வைத்துத்தான் வெளி நாடுகளுக்குப் போனார். அது குற்றம் இல்லை.

எங்கள் மண்ணை ஆக்கிரமித்து ஆட்சி நடத்துபவன்தான் எங்களுக்கான கடவுச்சீட்டை வழங்க வேண்டும். உலகில் எந்த விடுதலை இயக்கம், தான் எதிர்த்துப் போராடுகின்ற அரசிடமிருந்து கடவுச்சீட்டு பெறாமல் போராடுகின்றன?

விசயநகர, நாயக்கர் கால ஆட்சியில்தான் தமிழ்நாட்டில் வர்ண சாதி ஆதிக்கம் பார்ப்பன ஆதிக்கம், சமற்கிருதம் மற்றும் தெலுங்கு ஆதிக்கம் கொடி கட்டிப் பறந்தது. அதை திராவிட இயக்கத்து அறிஞர்கள் விமர்சிப்பதில்லை. இராசராசன், இரா சேந்திரச்சோழன் ஆட்சியை மட்டுமே விமர் சிப்பார்கள் என்றேன். அதற்கு சுப.வீ. பெரியாரை தெலுங்கர் என்ற சாதிச் சிமிழுக்குள் அடைக்கப் பார்க்கிறார் மணியரசன் என்றார்

பெரியார் தெலுங்கர் இல்லை, கன்னடர். கன்னடர் என்பதற்காகப் பெரியாரை நான் ஒருபோதும் விமர்சித்ததில்லை. பெரியாரை மட்டுமல்ல, 1956 நவம்பர் 1 மொழிவழி தமிழர் தாயகமாக - தமிழ்நாடு அமைக்கப்படுவதற்கு முன் தமிழ்நாட்டில் வசிக்கும், தெலுங்கு பேசுவோர், கன்னடம் பேசுவோர், உருது பேசுவோர், சௌராட்டிரம் பேசுவோர், மராத்தி பேசுவோர் உள்ளிட்ட அனைவரும் தமிழக மண்ணின் தமிழ்த் தேசிய மக்கள் - தமிழர்களைப் போல் சம உரிமை உள்ள மக்கள் என்பதே நாங்கள் முன்வைக்கும் தமிழ்த் தேசியம்

விசய நகர மன்னர்கள் பார்ப்பனியத்திற்கு ஆதர வாக இருந்ததைத் தான் விமர்சித்துப் பேசியிருப்பதாக சுப.வீ. சொன்னார். ஒரு சுப.வீ.யைத்தான் அவரால் சொல்ல முடிகிறது. தெலுங்கு மன்னர்கள் மீது - தெலுங்கர்கள் மீது திராவிட இயக்கத்திற்கு ஒரு soft corner- ஒரு மென்மை அணுகுமுறை இருக்கிறது என்பதைத்தான் நான் சொல்கிறேன். பெரியாரை சாதிச் சொல்லி விமர்சிக்கவில்லை.
நன்றி வணக்கம்!

(இக்கட்டுரை, தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2015 மார்ச் 16 இதழில் வெளியானது.)

Labels: ,

"புரட்சியின் தலைமை அந்தந்த நாட்டிற்கும் அந்தந்த நாட்டில்தான் இருக்க முடியும். அடுத்த நாட்டில் இருக்க முடியாது" தோழர் பெ.மணியரசன் பேச்சு.


"புரட்சியின் தலைமை அந்தந்த நாட்டிற்கும் அந்தந்த நாட்டில்தான் இருக்க முடியும். அடுத்த நாட்டில் இருக்க முடியாது" 
--தோழர் பெ.மணியரசன் பேச்சு.

(பழ.நெடுமாறன் நூல் வெளியீட்டு விழாவில் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் பேசியதின் எழுத்து வடிவம்).

இந்நூல் அறிமுகக் கூட்டம் திருச்சி இரவி சிற்றரங்கில் 08.03.2015 அன்று திரு. பொன்னிறைவன் தலைமையில் நடந்தது. பேராசிரியர் கணேசமூர்த்தி, வழக்குரைஞர் த. பானுமதி, திறனாய்வாளர் வீ. . சோமசுந்தரம், திருவாவடுதுறை இளைய ஆதினகர்த்தர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி திருச்சி மாவட்டத் தலைவர் தோழர் இந்திரஜித் உள்ளிட்டோர் உரை யாற்றினர்

நிறைவில், திரு. பழ.நெடுமாறன் அவர்கள் ஏற்புரை யாற்றினார். அங்கு, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பேசியதின் எழுத்து வடிவம்

தமிழர்களுக்குத் தேவையான அறிவாயுதங்களாக அவ்வப்போது நூல்கள் எழுதி வழங்கி வருகிறார் ஐயா பழ.நெடுமாறன். மார்வாடிகள், குசராத்திகள் தமிழர் களின் தொழில் வணிகத்தைக் கைப்பற்றி ஆதிக்கம் செய்கிறார்கள். அவர்களை வெளியேற்ற வேண்டும் என்று 1990களில் கூட்டாகப் போராடினோம்

அப்போது, “தமிழகம் : வந்தேறிகளின் வேட்டைக் காடா?” என்ற அருமையான நூலை எழுதித் தந்தார்கள்.
அதில் நபர் வாரியாக மார்வாடி - குசராத்திகள் தமிழ்நாட்டின் தொழில் - வணிகத்தில் யார் யார் ஆதிக்கம் செய்கிறார்கள், தமிழ்நாட்டிற்கு வரும் போது அவர்கள் எத்தகைய நிலையில் இருந்தார்கள். பின்னர் எப்படிக் கொழுத்தார்கள் என்ற விவரங்கள்,- பாரதியார் கவிதைகள் கூட மார்வாடியிடம் அடமானமாக இருந்து மீட்கப்பட்ட வரலாறு எனப் பல விவரங்களைத் தந்தார்கள்.

அதேபோல் காவிரிச் சிக்கல் எழுந்தபோது, தமிழக ஆற்றுநீர்ச் சிக்கல்களை எல்லாம் விவரமாக எழுதி நூலாக்கித் தந்தார்கள்.  “உருவாகாத இந்தியத் தேசிய மும் உருவான இந்து பாசிசமும்”என்ற அருமையான நூலையும் தந்தார்கள். அந்த வரிசையில் காலத்தை வென்ற காவிய நட்பு”என்ற இந்த நூலை வழங்கியுள்ளார்கள்

எழுநூறு பக்கங்கொண்ட இந்நூல் இந்திய - இரசிய பண்டைய உறவும் பண்பாட்டுப் பரிமாற்றமும் பற்றி விரிவாகப் பேசுகின்றது. இந்தியா உருவாவதற்கு முந்தைய காலங்களில் இந்தோ - ஆரிய மொழிக் குடும் பத்தைச் சேர்ந்த சமற்கிருதம் - இரசிய மொழித் தொடர் புகள் - பழங்குடிகள் தொடர்புகள் தொடங்கி - இரசியப் புரட்சி கால உறவுகள் எனப் பலவற்றை இந்நூலில் தொகுத்துள்ளார்கள்

இந்தியா என்ற நிர்வாகக் கட்டமைப்பை வெள்ளையர்கள் உருவாக்குவதற்கு முன்பிருந்து இந்தப் பகுதி மக்களுக்கும் வெளிநாடுகளுக்கும் தொடர்பு இருந்தது. வெள்ளையர்கள் இந்தியாவை உருவாக்கிய பின்னரும் இந்தியாவுக்கும் சீனாவுக்கும், இந்தியாவுக்கும் சப்பானுக்கும் இன்னபிற நாடுகளுக்கும் இடையே உறவு இருந்தது.

இவற்றில் இந்திய - இரசிய நட்புறவை மட்டும் சிறப்பாக எழுத வேண்டிய தேவை என்ன? பொதுவுடைமைக் கொள்கையை - மனித சமத்துவக் கொள்கையை முதன்முதலாக செயல்படுத்திக் காட்டி யவர்கள் இரசியர்கள். அந்த மனித நேய - மனித சமத்து வக் கொள்கையின்பால் உள்ள மதிப்பு காரணமாகவே இந்திய - இரசிய நட்புறவைப் பாராட்டி, ஐயா அவர்கள் எழுதியுள்ளார்கள்.

இந்தியாவுக்கும் இரசியாவுக்கும் இருந்த தொடர்புகள், தமிழ்நாட்டிற்கும் இரசியப் புரட்சிக்கும் இருந்த தொடர்புகள் ஆகியவற்றின் வரலாற்றுப் பதிவுகள் இந்நூலில் ஏராளமாக உள்ளன. அந்த காலகட்டங்களில் நிகழ்ந்த பல்வேறு வரலாற்று நிகழ்வுகளின் கலைக் களஞ்சியமாக இந்நூல் உள்ளது.

1857இல் வெடித்த சிப்பாய்க் கலகத்தின் கதா நாயகனாகக் கருதப்படும் நானா சாகிப் தலைமறை வான குறிப்புகள், -அவர் இரசியா செல்ல விரும்பினார் என்ற குறிப்புகள், அவர் எங்கு மரணமடைந்தார் அவரின் எலும்புகள் எங்கே கிடைத்தன என்ற விவரங்கள் இந்நூலில் உள்ளன.
பாலகங்காதர திலகர்தான் முதன் முதலில் இந்தியாவில் காரல் மார்க்ஸ் பற்றிப் பேசியவர் என்ற செய்தியும் இந்நூலில் உள்ளது. காரல் மார்க்ஸ் அவர்களின் சோசலிசக் கருத்துகளை 1885ஆம் ஆண்டு சனவரி முதல் தமது மராட்டா’இதழில் . . .

இந்தியாவில் முதல் கம்யூனிஸ்ட்டு சிங்காரவேலர் தான் என்ற செய்தியும் -சிங்காரவேலர்க்கும் - லெனினுக்கும் இடையே நடந்த கடிதப் போக்கு வரத்துகள் பற்றியும், இந்தியாவிலிருந்து இரசியா சென்றவர்களிடம் சிங்காரவேலர் நலமாக உள்ளாரா?” என்று லெனின் விசாரித்த செய்திகளும் இந்நூலில் உள்ளன.

இவை மட்டுமின்றி, 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ்நாட்டின் அரசியல் - சமூகவியல் - சிந்தனை வளர்ச்சிக்கு இரசிய நாடு எந்த அளவு ஊக்க ஆற்றலாக விளங்கியது என்பதை இந்நூல் மூலம் அறியலாம்.
பொதுவுடைமை பற்றி வ..சி.க்கு இருந்த புரிதலின் தொடக்க நிலை எப்படி இருந்தது என்பது கவனிக்கத்தக்கது.

கல்வி, ஒழுக்கம், கடவுள் வழிபாடு, ஆற்று நீர், ஏரி நீர், பெரும்பாட்டை, பொதுக் கூட்டுறவு, காட்டில் வாழும் உயிர்கள், இராஜாங்க உத்யோகங்கள் முதலியன பொதுவுடைமைகள். ஒருவனுடைய செல்வம், குளத்து நீர், கிணற்று நீர், நடைபாதை, வீடு, வீட்டில் வாழும் உயிர்கள், சொந்த வேலைகள் முதலியன தனி உடைமைகள். பொது உடைமைகளில் யாவர்க்கும் சம உரிமை உண்டு. ஆதலால் அவற்றை ஒருவர் அனுபவிப்பதை மற்றொருவர் தடுக்கலாகாது. தனி உடைமைகளில் அவற்றின் சொந்தக்காரருக்கு மாத்திரம் தனி உரிமை உண்டாதலால் அவற்றை அவரவர் தவிர வேறொருவர் அனுபவிக்க முற்பட லாகாது”என்று 1927இல் வ..சி. பேசியிருக்கிறார்.

அன்றைய சூழ்நிலை என்பது விஞ்ஞான சோசலிசக் கருத்துகள் சரியாகப் பரவாத சூழ்நிலை என்றும், பிரித்தானிய ஏகாதிபத்தியத்தை வேரறுக்கும் வேலைக்கே முதன்மை கொடுத்த சூழ்நிலை என்றும் ஐயா நெடுமாறன் அவர்கள் இதற்கு விளக்கமும் கொடுத்துள்ளார். இதெல்லாம் நல்ல பதிவுகளாகும். முற்போக்கான ஒரு தத்துவம் முயன்று தவறிக் கற்றல் முறையில் வளர்ந்துள்ளது என்பதற்கான காலப்பதிவு இது.

அதேபோல வ..சி. அவர்கள், கடவுள் ஏற்பு ஒரு சமயக் கருத்தாவது போல், கடவுள் மறுப்பும் இன்னொரு சமயக் கருத்தாகும் என்று கூறிய சனநாயகப் பண்பையும் இந்நூல் பதிவு செய்துள்ளது.

இரசியப் பொதுவுடைமைக் கருத்துகளால் ஈர்க்கப்பட்ட பாரதியார், அதனை இந்தியா ஏற்க வேண்டும் என்ற கருத்தில் முப்பது கோடி சனங்களின் சங்கம் முழுமைக்கும் பொது உடைமை”என்று பாடினார்.
இரசியாவின் தவறுகள்
தமிழக வரலாற்றில் சேர்ப்பதற்குரிய பல தரவுகள், செய்திகள், நிகழ்வுகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. எனவே, இந்நூல் ஒரு குறிப்பிட்ட காலத்தின் வரலாற்றுக் களஞ்சியமாக உள்ளது.

இரசியாவின் சிறப்புகளை, அது நமக்களித்த பெருமைக்குரிய கருத்துகளை, உதவிகளை நன்றியோடு பாராட்டும் அதே வேளையில், இரசியாவின் தவறுகளையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.

பிற்காலத்தில் இரசியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சி, ஒவ்வொரு நாட்டிலும் செயல்படும் கம்யூனிஸ்ட்டுக் கட்சி தன் வழிகாட்டுதலுக்கேற்ப செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தியது. உலகெங்கும் உள்ள கம்யூனிஸ்ட்டுக் கட்சிகளின் தலைமை பீடம், இரசியா என்பதுபோல் நடந்து கொண்டது. இந்த அணுகு முறையால் இந்தியக் கம்யூனிஸ்ட்டு இயக்கம் பாதிக்கப்பட்டது. காங்கிரசு ஆட்சிக்கு ஒரு துணை ஆற்றல் போல் இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சியை மாற்றியது இரசியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சி.
இரசியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சியும் சீனக் கம்யூனிஸ்ட்டுக் கட்சியும் சண்டையிட்டுக் கொண்டு, இந்தியக் கம்யூனிஸ்ட்டு இயக்கத்தில் அவை ஒவ்வொன்றும் தனக்கான தனி பிரிவு வைத்துக் கொண்டன.

இந்திராகாந்தி 1975-இல் நெருக்கடி நிலையை அறிவித்து, சனநாயக உரிமைகளை, மனித உரிமைகளைப் பறித்தார். அந்த நெருக்கடி நிலையை கம்யூனிஸ்ட்டு இரசியா ஆதரித்தது. அதனால் நெருக்கடி நிலையை இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சியும் ஆதரித்தது. அப்போது, இரசிய அதிபர் பிரஷ்னேவ் தில்லி வந்திருந்தார். சோசலிஸ்ட்டுத் தலைவர் மதுலிமாயி, பிரஷ்னேவைச் சந்தித்து, “நீங்கள் காங்கிரசாட்சியின் நெருக்கடி நிலையை ஆதரிப்பது சரியல்ல”என்றார். அதற்கு பிரஷ்னேவ், “நெருக்கடி நிலை பிற்போக்குச் சக்திகளுக்கு எதிரான முற்போக்கு நடவடிக்கை. “காங்கிரசுக் கட்சி, முதலாளியக் கட்சியல்ல. ஐரோப்பாவில் கம்யூனிஸ்ட்டுக் கட்சிகளின் மூலவடிவமாக இருந்த சமூக சனநாயகக் கட்சி போன்றதுதான். எனவே காங்கிரசுக் கட்சிக்கு இந்தியாவில் எதிர்க்கட்சி தேவை இல்லை”என்றார்.

தமிழீழத்தில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட போது அந்த இரத்தத்தில் கைநனைத்தது இரஷ்யா. இவற்றையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

புரட்சியின் தலைமை அந்தந்த நாட்டிற்கும் அந்தந்த நாட்டில்தான் இருக்க முடியும். அடுத்த நாட்டில் இருக்க முடியாது. ஈழ விடுதலைக்கானத் தலைமை ஈழத்தில்தான் இருக்க முடியும். அது தமிழ்நாட்டில் இருக்க முடியாது. அதேபோல், தமிழ்நாட்டு விடுதலைக்கானத் தலைமை தமிழ் நாட்டில்தான் இருக்க முடியும். அது ஈழத்தில் இருக்க முடியாது. ஈழம், தமிழ்நாடு இரண்டிற்குமான பொதுத் தலைமையும், இருக்க முடியாது.

அழுதழுது பெற்றாலும் அவள் கருவுற்ற பிள்ளையை அவள்தான் பெற்றெடுக்க வேண்டும். செவிலி அல்ல. இப்படிப்பட்ட படிப்பினைகளையும் இரசியாவிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.

வரலாறு படிக்கும் மாணவர்கள், வரலாறு எழுதும் ஆய்வாளர்கள், சாதாரண வாசகர்கள் அனைவர்க்கு மான செய்திகளின், தரவுகளின் களஞ்சியமாக காலத்தை வென்ற காவிய நட்பு”நூல் விளங்குகின்றது.

பக்கங்கள் : 708 + XVII
விலை : ரூ. 800.00
வெளியீடு :
நியூ செஞ்சுரி புத்தக நிலையம்,
41-ஙி, சிட்கோ தொழிற்பேட்டை,
அம்பத்தூர், சென்னை - 600 098.
பேசி : 044-26241288

Labels:

"திராவிடமா? தமிழ்த் தேசியமா?" -- தோழர் பெ.மணியரசன் பேச்சு.

Sunday, March 1, 2015

"திராவிடமா? தமிழ்த் தேசியமா?" 
====================================
-- தோழர் பெ.மணியரசன் பேச்சு (பகுதி 1)

அருள்தந்தை செகத் கஸ்பர் அவர்கள்  தலைமை யில் இயங்கும் தமிழ் மையம், தமிழர் தொழில் வர்த்தகப் பெருமன்றம் ஆகியவை நடத்திய சங்கம் -4 தமிழ்த் திருவிழாவின் ஒரு பகுதியாக சென்னை இராசா அண்ணாமலைபுரம் டி. என். இராசரத்தினம் அரங்கில் 16.2.2015 அன்று “இன்றையத் தேவை திராவிடமா? தமிழ்த் தேசியமா? என்ற தலைப்பில் விவாத மேடை நடந்தது. 
“திராவிடமே” என்ற தலைப்பில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களும் “தமிழ்த் தேசியமே” என்ற தலைப்பில் தோழர் பெ. மணியரசன் அவர்களும் தருக்க உரையாற்றினர்.  முதலில் 30 மணித்துளி சுப.வீ. பேசினார்.
அடுத்து 30 மணித்துளி பெ.ம. பேசினார். பின்னர் ஒவ்வொருவரும் பத்து, பத்து மணித்துளிக்கு பதிலுரை ஆற்றினர்.  இருவர் வாதங்களும் தருக்க அடிப் படையிலும் தோழமை உணர்வுடனும் நிறைவுற்றன. 
ஆனால் கருப்புச் சட்டை அணிந்த தோழர்கள் பத்துப் பதினைந்து பேர் அரங்கத்தின் நடுவில் எழுந்து நின்று மேலும் மேலும் தாங்கள் வினாத் தொடுக்க வாய்ப் பளிக்க வேண்டும் என்று கோரினர்.  அதற்கு திரு. செகத் கஸ்பர் 8.45 மணிக்கு முடிக்க வேண்டும். 9.15 மணியைத் தாண்டி நடந்து கொண்டுள்ளது. இனியும் தாமதிக்க இயலாது. இத்துடன் நிறைவு செய்கிறோம் என்றார்.  தமது அமைப்பின் வழக்கப்படி உறுதிமொழி சொல்ல மற்றவர்கள் வழிமொழிந்தனர்.
ஆனால் மேற்படி கருப்புச் சட்டைத் தோழர்கள் எழுந்து நின்று “கஸ்பர் ஒழிக - பெரியார் வாழ்க” என்றும் மற்ற முழக்கங்கள் எழுப்பியும் கூச்சலிட்டனர்.  பின்னர் “மணியரசன் ஒழிக’’ என்று நெடுநேரம் முழக்கம் எழுப்பினர். இதற்கிடையே அவர்களை அமைதிப் படுத்த சுப.வீ ஒலிபெருக்கியில் வேண்டுகோள் விடுத்தார்.  “இது ஒரு தோழமையுடன் கூடிய விவாதம்.  இதில் நீங்கள் முழக்கம் போடுவது சரியல்ல. அமைதி யாகச் செல்லுங்கள்’’ என்றார்.
 பார்வையாளர் வரிசையிலிருந்து மேடையேறிய திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் தோழர் கலி. பூங்குன்றன் ஒலி வாங்கியை வாங்கி “நாம் சந்திக்க வேண்டிய களங்கள் வரும். அப்போது சந்திக்கலாம். இப்போது அமைதியாகச் செல்லுங்கள்’’ என்றார்.  ஆனால் அதன் பின்ன ரும் அத் தோழர்கள் அமைதியடைய வில்லை. அரங்கத்திற்கு வெளியே நின்று கொண்டு முழக்க மெழுப்பினர். 
தமிழின உணர்வாளர் களும், நிகழ்ச்சி நடத்திய அமைப்பினரும் தோழர் பெ. மணியரசன் அவர் களைச் சூழ்ந்து கொண்டு வழி அனுப்பி வைத்தனர்.
அங்கு இருவர் ஆற்றிய உரைகளையும் வெளியிட இவ்விதழில் இடம் போதாது.  எனவே தோழர் பெ. ம. வாதத்தின் முகாமையான பகுதி மட்டுமே இங்கு வெளியிடப்படுகின்றது.  பேச்சு வடிவம் - எழுத்து வடிவ மாக மாற்றப்பட்டுள்ளது.  அடைப்புக்குள் உள்ளவை விளக்கத்திற்காகப் புதிதாகச் சேர்க்கப்பட்டவை.
பெ. ம. பேச்சு
திராவிடத்திற்கு எதிரான கருத்துகளைப் பார்ப் பனியம் தான் தூண்டிவிடுகிறது என்று இங்கு சுப. வீ. பேசினார்.  “ கடவுளை மறுத்தால், சைத்தானை ஆதரிக் கிறீர்கள், அதனால்தான் கடவுளை மறுக்கிறீர்கள்’’ என்று பக்தர்கள் கூறுவார்கள். அது போல் திரா விடத்தை நாங்கள் மறுத்தால், அதனைப் பார்ப்பனர்கள் தூண்டிவிட்டுள்ளார்கள் என்று பெரியாரியவாதிகள் கூறுகிறார்கள். இது பகுத்தறிவுப் பக்தி மார்க்கம். 
இன்றைய அவசரத் தேவை தமிழ்த் தேசியமே!
ஆரியப் பார்ப்பனிய இந்திய அரசு சமற்கிருதத்தைத் திணிக்கிறது.  இந்தித் திணிப்பைத் தீவிரப்படுத்தியுள் ளது.  இந்திய அளவிலும் தமிழக அளவிலும் ஆரியப் பார்ப்பனிய இந்துத்துவா கூடுதல் வளர்ச்சி பெற் றுள்ளது.  கூடுதல் அதிகாரத்தோடு அது கோலோச்சு கிறது. 
திராவிட மாநிலங்கள் என்று சொல்லப்படும் ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், கேரளம் ஆகியவை தமிழர்களை எதிரிகளாகக் கருதுகின்றன. காவிரி உரிமையைப் பறித்துக் கொண்டது மட்டுமின்றி 1991 நவம்பர் - டிசம்பரில் காவிரிக் கலகம் என்ற பெயரில் கர்நாடகத் தமிழர்களைக் கன்னட வெறியர்கள் கொலை செய்தார்கள்.  வீடுகளை எரித்தார்கள்.  தமிழர் வணிக நிறுவனங்களைச் சூறையாடினார்கள்.  இரண்டு இலட்சம் தமிழர்கள் கர்நாடகத்திலிருந்து ஏதிலிகளாக - அகதிகளாகத் தமிழ்நாட்டிற்கு ஓடி வந்தனர்.
 மலையாளிகள் முல்லைப் பெரியாறு அணை உரிமையைப் பறித்ததுடன், 2011 நவம்பர், டிசம்பரில் கேரளம் சென்ற தமிழக அரசு ஊர்திகளை அடித்து நொறுக்கினார்கள். தமிழ்நாட்டிலிருந்து சென்ற அய்யப்ப பக்தர்களைத் தாக்கினார்கள்.  அங்கு ஒரு தேநீர்க் கடையில் வெந்நீரைத் தமிழ் இளைஞர் மீது ஊற்றிக் கொன்றார்கள். தேனி மாவட்டத்திலிருந்து தோட்ட வேலைக்குச் சென்ற 400 தமிழ்ப் பெண்களைக் கடத்தி 24 மணி நேரம் வைத்திருந்து அவமானப் படுத்தினார்கள். 
ஆந்திரத் தெலுங்கர் பாலாற்றில் அணை கட்டித் தமிழகத்திற்குத் தண்ணீர் வராமல் தடுத்தார்கள். இப்போது கடைசியாகக் கணேசபுரத்தில் அணை கட்டுகிறார்கள்.  கசிவு நீர் கூடப் பாலாற்றிலிருந்து இனி வராது. 
இவர்களையெல்லாம் நம்மோடு சேர்த்து திராவிடர்கள் என்கிறார்கள். 2009 இல் 1 லு  இலட்சம் ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்தார்கள். தமிழக சட்டப் பேரவையில் செயலலிதா முன் மொழிந்து “ஈழ இனப்படுகொலைக்குப் பன்னாட்டுப் புலனாய்வு தேவை. இலங்கை இந்தியாவின் பகை நாடு, இந்திய அரசு இலங்கைக்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும், ஈழம் குறித்துக் கருத்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும்’’ என்று ஒரு மனதாகத் தீர்மானம் நிறைவேற்றினார்கள். அந்நடவடிக்கை ஒரு நாடகமாகக் கூட இருக்கட்டும்.  அப்படி ஒரு தீர்மானம் நிறைவேற்ற வேண்டிய புறநிலை அழுத்தம் -- இன உணர்வு தமிழ்நாட்டில் நிலவுவதால் ஒரு மனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
ஆனால் ஆந்திரா, கர்நாடகா, கேரள சட்டப் பேரவைகளில் இல்லாவிட்டாலும் அங்குள்ள கட்சிகள் தமிழினப் படுகொலைக்கு ஒரு கண்டனத் தீர்மானம் கூடப் போடவில்லை.  ஒரு சொட்டுக் கண்ணீர் ஈழத் தமிழர்களுக்காக அவர்களிடம் இல்லை.
“தானாடாவிட்டாலும் சதை ஆடும்” என்பார்கள். அப்படித்தான் தமிழ்நாட்டில் நாம் போராடினோம்.  அந்தத் திராவிடர்களுக்கு அது உருத்தவில்லை.  ஏனெனில் திராவிடர் என்ற ஓர் இனம் இல்லை.
பெரியார்தான் திராவிட இனம் குறித்த சித்தாந்தத்தை உருவாக்கியவர்.  இங்குப் பேசிய சுப.வீ. “திராவிடம் என்பது ஒரு கோட்பாடு” என்றார்.  அப்படி ஒரு கோட்பாட்டைச் செயற்கையாக உருவாக்கியவர் பெரியார்தான்.  இங்கே எனக்கு முன் திராவிட இயக்க வரலாற்றைத் தொகுத்த திருநாவுக்கரசு அவர்கள் உட்கார்ந்திருக்கிறார்கள்.  நீதிக்கட்சியினர், பார்ப்பனர் அல்லாதார்க்கு உரிய பங்கு கிடைக்க வேண்டும். நீதி கிடைக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தினார் களே அன்றி அவர்கள் திராவிடம் என்ற சித்தாந்தத்தை உருவாக்கவில்லை.
நாம் சங்க காலத்திற்குப் பிறகு களப்பிரர் காலம் தொடங்கி - பல்லவர் காலம் என ஆயிரக்கணக்கான ஆண்டுகள் அடிமைகளாக இருந்துவிட்டோம்.  இடையில் சிறிது காலம் சோழர்கள் ஆட்சி, பாண்டியர் ஆட்சி. சோழர்களிலும் வாரிசற்றுக் குலோத்துங்கச் சோழன் முதல் பெண் வழி வாரிசாக வந்த தெலுங்குச் சோழர்கள் ஆட்சி.  பின்னர் நாயக்க மன்னர்கள் ஆட்சி யில் தமிழர்களின் மிச்சம் மீதியிருந்த சிறப்புகள் எல்லாம் பாழடிக்கப்பட்டன.  நாயக்கர் ஆட்சி என்பது தெலுங் கர் ஆட்சி! சமற்கிருதமும் தெலுங்கும் கோலோச்சின.  பார்ப்பனர்கள் ஆதிக்கம் புரிந்தனர்.
தமிழ் மொழியில் சமற்கிருதம் கலந்து பேசுவது எழுதுவது சிறப்பு என்று மணிப்பிரவாள நடையைக் கொண்டு வந்தனர். தமிழர்களைத் திராவிடர்கள் என்றனர்.  தமிழர்கள் தங்களைத் திராவிடர்கள் என்று ஒருபோதும் சொல்லிக் கொண்டதில்லை. அப்படிக் கூறிக் கொள்வதை இழிவாகக் கருதினார்கள்.  அதனால்தான் சங்க காலத்திலிருந்து எந்த இலக்கியத் திலும் தமிழர்கள் தங்களைத் திராவிடர்கள் என்று கூறிக் கொண்டதற்கான சான்று கிடையாது. ஆரியர் கள் உருவாக்கிய சொல் திராவிடம் என்பது. 
ஆனால் நாயக்கர் காலத்தில் பார்ப்பனியம் கோலோச்சியதால் - பார்ப்பனர்கள்  கூறியபடி தமிழர்கள் தங்களைத் திராவிடர்கள் என்று சொல்லிக் கொண்டனர். அதில் பெருமை இருப்பதாகக் கருதிக் கொண்டனர். அடிமை மனநிலையின் வெளிப்பாடு அது. 
ஏன், அக்காலத்தில் தமிழர்கள் தங்களைச் சூத்தி ரர்கள் என்றும் சொல்லிக் கொண்டனர்.  தமிழர் களிலேயே உயர்சாதி என்று கூறிக் கொண்டோர் தங் களை சற்சூத்திரர் - உயர்ந்த சூத்திரர் என்றும் கூறிக் கொண்டனர்.  அதனால் நாம் இன்றும் நம்மை சூத்திரர் என்றா கூறிக் கொள்கிறோம்.  அது போல்தான் ஆரியப் பார்ப்பனர் சூட்டிய “திராவிடர்’’ என்ற பெயரையும் நாம் ஏற்கக் கூடாது. அது இழிவு!
அயோத்திதாசப் பண்டிதர் போன்ற தமிழறிஞர்கள் அந்தக் காலத்தில் திராவிட சங்கம் வைத்தனர்.  திராவிடர் என்றும் கூறிக் கொண்டனர். ஆனால் பின்னர் அயோத்திதாசர் மக்கள் தொகைக் கணக் கெடுப்பில் ஒடுக்கப்பட்ட மக்களை “சாதியற்ற தமிழர்” என்று பதியும்படி மனுச் செய்தார்.  அவர் நடத்திய இதழின் பெயர் முதலில் “ஒரு பைசா தமிழன்’’, பின்னர் “தமிழன்” என்பதாகும்.
திராவிடர் என்று தங்களைத் தமிழர்கள் எப்படிப் பட்ட அடிமைச் சூழலில் சொல்லிக் கொண்டார்கள் என்பதை - சூத்திரா? என்று சொல்லிக் கொண்டதோடு ஒப்பு நோக்கி திராவிடர் என்ற சொல்லைக் கைவிட வேண்டும். 
 “திராவிட இனம்’’  என்ற சித்தாந்தத்தைப் பெரியார் எப்படி உருவாக்கினார் என்பதைப் பார்க்க வேண்டும்.  இதோ பெரியார் கூறுகிறார்.
“தமிழர் என்பது மொழிப் பெயர். திராவிடர் என்பது இனப் பெயர்.  தமிழ் பேசும் மக்கள் யாவரும் தமிழர் என்ற தலைப்பில் கூட முடியும். ஆனால் தமிழ் பேசும் அத்தனை பேரும் திராவிடர் ஆகிவிட முடியாது.  இனத்தால் திராவிடனான ஒருவன் எந்தச் சமயத்தைச் சார்ந்தவனாயிருந்தாலும் எந்த மொழி பேசுபவனாயிருந்தாலும் அவன் திராவிடர் என்ற தலைப்பில் தான் சேருவான். ஆகையால் திராவிட மொழி தமிழ் என்ற காரணத்திற்காக, தமிழ் பேசும் திராவிடன் அல்லாத ஒருவன் மொழி காரணமாக மட்டுமே தன்னைத் திராவிடன் என்று கூறிக் கொள்ள முடியாது. 
“தமிழர் என்றால் பார்ப்பானும் தன்னைத் தமிழனென்று கூறிக் கொண்டு நம்முடன் கலந்து கொண்டு மேலும் நம்மைக் கெடுக்கப் பார்ப்பான்.  திராவிடர் என்றால் எந்தப் பார்ப்பானும் தன்னைத் திராவிடன் என்று கூறிக் கொண்டு நம்முடன் சேர முற்பட மாட்டான்.  அப்படி முன்வந்தாலும் அவனு டைய ஆச்சார அனுஷ்டானங்களையும் பேத உணர்ச்சி யையும் விட்டுவிட்டுத் திராவிடப் பண்பை ஒப்புக் கொண்டு அதன்படி நடந்தாலொழிய நாம் அவனைத் திராவிடன் என்று ஒப்புக் கொள்ள மாட்டோம். 
“தமிழர் என்பதில் நான் சேர்க்க நினைத்த அத்தனை பேரையும் சேர்க்கவும் நான் விலக்க நினைத்த நமக்கு மாறுபட்ட கலாச்சாரமுடைய கூட்டத்தை விலக்கவும் வசதியுண்டா? இழிவுக்கும் தாழ்வுக்கும் கட்டுப்பட்டுள்ள மக்களையும் இதற்கு நேர்மாறாக, இழிவுக்கே காரணமான உயர் சாதி மக்களையும் ஒன்றாக்கிக் கொண்டால் அதில் இவ்விழிவு நீங்க வழி ஏற்படுமா? முதலில் இவ்விழிவு நீங்கட்டும்! பிறகு எல்லாருமே ஒன்றாவோம்!”
-ஈ.வெ. ரா. சிந்தனைகள் -(வே. ஆனைமுத்து தொகுப்பு - பாகம் 1 - பக்கம் 548)
இனம் பற்றிப் பெரியார் கூறும் வரையறுப்பு தவறானது. வரலாற்று வழியில் உருவாவது இனம். ஒருவர் சேர்க்க நினைப்போரை சேர்த்துக் கொள்ளவும், விலக்க நினைப்போரை விலக்கிக் கொள்ளவும் “இனம்’’ என்ற வரையறுப்பில் இடமில்லை.  இனம் என்பது பிறப்பால் வருவது, குணத்தால் - பண்பால் வருவது அல்ல. எடுத்துக் காட்டாக பிரபாகரன் தமிழின விடுதலைத் தலைவர். கருணா தமிழினத் துரோகி. கருணாவைத் தமிழன் இல்லை என்று சொல்லிவிட முடியாது.  ஏனெனில், தமிழனா இல்லையா என்பது கருணாவின் தாய் - தகப்பனை வைத்து முடிவு செய்கி றோமே தவிர, கருணாவின் நடவடிக்கையை வைத்து அல்ல.  கருணாவின் நடவடிக்கையை வைத்துத் தமிழி னத் துரோகி என்கிறோம். பெரியார் சேர்க்க நினைப் பவரை சேர்த்துக் கொள்வதற்கும், விலக்க நினைப்ப வரை விலக்கிக் கொள்ளவும் இன ஆராய்ச்சியில் இடமில்லை.
தமிழன் என்றால் தனது தாய்மொழி தமிழ் என்று சொல்லிக் கொண்டு பார்ப்பான் தானும் தமிழன் என்று வந்து விடுவான். திராவிடன் என்றால் பார்ப்பான் தான் திராவிடன் என்று சொல்லிக் கொண்டு வரமுடியாது என்கிறார் பெரியார்.  இதுவும் நடைமுறை உண்மை இல்லை.
பார்ப்பனர்கள் தாம் தங்களைத் திராவிடர்கள் என்று சொல்லிக் கொண்டார்கள்.  தமிழர்கள் தங்களைத் திராவிடர்கள் என்று பழங்காலத்தில் சொல்லிக் கொண்டதில்லை. விந்திய மலைக்குத் தெற்கே உள்ள பிராமணர்களைப் பஞ்ச திராவிடர் அதாவது ஐந்து திராவிடர் என்றும் விந்திய மலைக்கு வடக்கே உள்ள பிராமணர்களை ஐந்து கௌடர்கள் என்றும் சொல்லிக் கொண்டார்கள்.  1. ஆந்திரார், 2. கர்நாடகர், 3. மகாராஷ்டிரர், 4. கூர்ஜரர் (குஜராத்) 5. தமிழர் ஆகிய ஐந்து பிரிவுப் பார்ப்பனரும் பஞ்ச திராவிடர் என்று தங்களை வரையறுத்துக் கொண்டார்கள்.  வடக்கே பீகார், காஷ்மீர் வரை உள்ள பார்ப்பனர்கள் பஞ்ச கவுடர்கள்.
கி.பி. நான்காம் நூற்றாண்டில் வஜ்ர நந்தி என்ற ஆரியப் பார்ப்பன சமணர் மதுரையில் நிறுவிய சமண சங்கத்தின் பெயர் திராவிட சங்கம் என்பதாகும்.  அக்காலத்தில் தமிழர்கள் தங்களைத் திராவிடர் என்று சொல்லிக் கொண்டதில்லை. அதற்கான அகச் சான்று இல்லை. ஆனால் சமத்துவம் பேசிய சமண சமயத் துறவி ஆரியராய் இருந்த காரணத்தால் திராவிட சங்கம் என்று அமைத்தார். 
ஆதி சங்கரர் எழுதிய சௌந்தர்ய லகரியில் வரும் “திராவிட சிசு” என்பது ஆரியப் பார்ப்பனரான ஆதி சங்கரரையே குறிக்கும் என்பாரும் உண்டு.  கௌனிய கோத்திரத்தைச் சேர்ந்த ஆரியப் பார்ப்பனரான திருஞான சம்பந்தரைக் குறிக்கும் என்பாரும் உண்டு.  இருவரில் யாரைத் திராவிடக் குழந்தை என்று குறிப்பிட்டிந்தாலும் அவ்விருவருமே பிராமணர் என்பதால் தான் குறிக்கப்பட்டிருக்கிறது என்று சென்னையிலிருந்து வெளிவரும் பிராமணர்கள் நடத்தும் “பிராமின் டுடே” என்ற இதழ் கூறுகிறது. 
இதோ அந்த பிராமின் டுடே இதழ். இது 2007 செப்டம்பர் மாத இதழ். இக்கட்டுரையின் தலைப்பு “ஆதி சங்கரர் , திருஞானசம்பந்தர் - பிராமண திராவிடர்கள்” என்று உள்ளது.  இதை எழுதியவர் டாக்டர் எஸ். ராமகிருஷ்ணன் , பேராசிரியர், தலைவர் உயிர் வேதியியல், சங்கர நேத்ராலயா பார்வை ஆராய்ச்சி நிறுவனம், சென்னை - 6 என்று போடப்பட்டுள்ளது. 
மயிலாப்பூர் சமற்கிருதக் கல்லூரயில் இப்போதும் மணி திராவிட் என்று சமற்கிருதப் பேராசிரியர் இருக்கிறார்.  அவர் பார்ப்பனர்.  அவரை அண்ணல் தங்கோ பேரன் அருட்செல்வன் சந்தித்துப் பேசினார். அப்போது மணி திராவிட் தங்கள் குடும்பத்தின் முன்னோர்கள் கடைப்பிடித்துவரும் பழக்கப்படி தன் பெயருக்குப் பின்னால் திராவிட் என்ற சொல்லைச் சேர்த்திருப்பதாகக் கூறினார். “தமிழ்நாட்டிலிருந்து மும்பை சென்று எங்கள் முன்னோர்கள் வசித்தனர். அங்கு வசிக்கும் தமிழர்கள் தங்கள் பெயருக்குப் பின்னால் முதலியார், செட்டியார் என்பது போன்ற சாதிப் பெயர்களைப் போட்டுக் கொள்வார்கள்.  பிராமணர்கள் தாங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதைக் காட்டிக் கொள்வதற்காகத் திராவிடர் என்று பெயருக்குப் பின்னால் போட்டுக் கொள்வார்கள் என்று மணி திராவிட் கூறியிருக்கிறார்.
பெங்களூரில் வசிக்கும் மட்டைப் பந்து வீரர், இராகுல் திராவிட், ஒரு நேர்காணலில் தங்கள் முன்னோர்கள் கும்பகோணத்தைச் சேர்ந்த பிரா மணர்கள். எங்கள் குடும்பத்தில் பெயருக்குப் பின்னால் திராவிடர் என்பதைக் குறிக்கும் திராவிட் என்ற சொல்லைச் சேர்த்துக் கொள்வோம். என் தாத்தா பெயரிலும் திராவிட் இருந்தது என்றார்.
பிரித்தானியக் கலைக் களஞ்சியம் (Britanica Encyclopaedia) ) திராவிடர் என்றால் தென்னாட்டுப் பிராமணர் என்று  கூறுகிறது.  இதோ அந்த நகல் என்னிடம் இருக்கிறது. படிக்கிறேன் (பேராசிரியர் த. செயராமன் கண்டறிந்தது)
“Dravidian : a name only applied in Indian usage to the Southern group of the Brahmins q.v. But Dravidian is applied
unfortunately to the indigineous people of India South of the Vindhyas and to the northern half of Ceylon it should be confined to the languages of this area”. - Encyclopaedia Britanica, Vol 7. Edn 15(1947),P624
 “திராவிடர் என்பது இந்திய வழக்கத்தில் தென்னகக் குழுவைச் சேர்ந்த பிராமணர்களை மட்டுமே குறித்த சொல்.  ஆனால் கெடுவாய்ப்பாக, விந்திய மலைக்குத் தெற்கே உள்ள உள்நாட்டு மண்ணின் மக்களையும் இலங்கையின் வடபாகத்தில் உள்ள மண்ணின் மக்களையும் குறிப்பதாய் ஆனது. இந்தப் பகுதியில் உள்ள மொழிகளுடன் மட்டுமே இச் சொல்லை (திராவிடர்) வரம்பு கட்டிக் கொள்ள வேண்டும்.
-பிரித்தானியக் கலைக் களஞ்சியம், தொகுதி 7, பதிப்பு 15 (1947) பக்கம் 624 (ஆங்கிலம்)
தமிழ் மொழியை அடையாளமாக வைத்தால் பார்ப்பான் தனது தாய்மொழி என்று கூறித் தானும் தமிழன் என்று வந்துவிடுவான். திராவிடன் என்றால் தானும் திராவிடன் என்று வர முடியாது என்றார் பெரியார். பெரியாரின் இந்த வரையறுப்பு தவறு என்றாகிறது.  ஏனெனில் பிரித்தானியக் கலைக் களஞ்சியம் “திராவிடர்” என்ற அடையாளத்தை விந்திய மலைக்குத் தெற்கேயும் இலங்கையின் வடபாகத்திலும் பேசப்படும் மொழி பேசுவோருடன் மட்டுமே திராவிடர் என்பதை வரம்பு கட்ட வேண்டும் என்கிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற தென்னக மொழிகளைப் பேசுவதால் இப்பகுதிகளில் வாழும் பிராமணர்கள் திராவிடர்கள் ஆனார்கள் என்று கூறுகிறது. 
திராவிடர் என்றால் பார்ப்பனர் வரமாட்டார் என்பது வரலாற்று உண்மையல்ல. பெரியாருக்கே அதில் சந்தேகம் இருந்ததால் தான் “எந்தப் பார்ப்பானும் தன்னைத் திராவிடன் என்று கூறிக் கொண்டு நம்முடன் சேர முற்பட மாட்டான். அப்படி முன்வந்தாலும் அவனுடைய ஆசார அனுஷ் டானங்களையும் பேத உணர்ச்சிகளையும் விட்டுத் திராவிடப் பண்பை ஒப்புக் கொண்டு அதன்படி நடந்தால் அவனைத் திராவிடன் என்று சேர்த்துக் கொள்ளலாம்” என்கிறார்.
உலகத்தில் எங்கேயாவது இனத்துக்கான வரையறுப்பை பெரியார் கூறுவது போல் ஒருவனின் நடத்தையை வைத்து முடிவு செய்வார்களா? பெரியார் “திராவிடம்” குறித்து ஒரு சித்தாந்தத்தை உருவாக்க முயன்றார். ஆனால் அதற்குரிய அடிப்படைக் கூறுகளை அவரால் சொல்ல முடியவில்லை.  அதற்கான தரவுகளை அவரால் தரமுடியவில்லை.  அதனால் அவர் ஒரு போலி சித்தாந்தத்தைத்தான் ((Pseudo Idealogy) உருவாக்கினார்.
அவர் பார்ப்பனரைத் தன்னுடைய அமைப்பில் சேர்ப்பதில்லை என்று அமைப்பு விதியைச் செய்து கொண்டிருக்கலாம்.  அதற்கு மாறாக - தமிழர் என்றால்  பார்ப்பான் தன் மொழியும் தமிழ் என்று கூறிக் கொண்டு தானும் தமிழன் என்று வந்துவிடுவான்,   எனவே திராவிடன் என்கிறேன் என்றார் பெரியார்.  இது என்ன ஞாயம்? உலகில் தோன்றிய முதற்பெரும் இனமான தமிழ் இனத்தின் அடையாளத்தை -- இருப்பைப் பெரியார் மறுத்தது என்ன ஞாயம்? ஆந்திர, கர்நாடக, கேரள மாநிலங்களில் அவரவரும் அவரவர் இனப் பெயரோடு அதைச் சொல்லிக் கொண்டு ஒருங்கிணைகிறார்கள். தமிழ்நாட்டில் பெரியார் தமிழர் அடையாளத்தை மறுத்து தமிழர் ஒருங்கிணைப்பைச் சிதறடித்து விட்டார். இன உணர்வில் ஓர் உளவியல் ஊனத்தை ஏற்படுத்தி விட்டார். இதை நினைத்தால் நெஞ்சு பொறுக்க வில்லை. 
காலுக்குச் செருப்புப் போட்டுக் கொள்வதற்கு மாறாகக் காட்டுக்கே செருப்புப் போடு என்பது போல், தமிழர் என்ற நமது இனப் பெயரையே மறைத்தார் பெரியார். தெலுங்கர்களை, கன்னடர்களை, மலையாளி களை உங்கள் இனப் பெயரைக் கை விடுங்கள் என்று சொன்னால் அவர்கள் ஏற்பார்களா? மாட்டார்கள்.  பாழ்பட்ட தமிழினத்தில்தான் தங்கள் இன அடை யாளத்தை மறுக்கச் சொன்னார் பெரியார்.
 நான் அறிந்தவரை பெரியார் தமிழின மறுப்பாளர். தமிழ் மொழி எதிர்ப்பாளர். 
ஆனைமுத்து ஐயா பெரியாரின் பேச்சுகளை, எழுத்துகளை மூன்று தொகுதிகளாக வெளி யிட்டுள்ளார்கள்.  (மறுபதிப்பில் பல பகுதிகளாகப் பிரித்துள்ளார்). அந்த மூன்று தொகுதிகளையும் இளைஞர்கள் ஒரு மாதத்திற்குத் தொடர்ச்சியாகப் படித்துப் பாருங்கள்.  அதன் பிறகு பெரியாரைப் பற்றி ஒரு முடிவுக்கு வாருங்கள். நான் சொல்கிறேன் என்பதற்காக ஏற்க வேண்டியதில்லை. 
1938இல் தமிழ்நாடு தமிழர்க்கே என்பார். 1939இல் திராவிட நாடு திராவிடர்க்கே என்பார். 1956இல் தமிழ்நாடு தமிழர்க்கே என்பார். ஒவ்வொன்றையும் மாற்றிக் கொண்டே போவார். 1952இல் ஆச்சாரியார் (ராஜாஜி) முதலமைச்சர் ஆனபோது வரவேற்றார்.  அவரைப் பாராட்டினார். அதன்பிறகு, காமராசர் முதலமைச்சர் ஆனபிறகு அவரைப் பாராட்டிக் கொண்டே இருந்தார். தி.மு.க.வையும் அண்ணாவையும் ஒழிப்பதையே முதற்பெரும் வேலையாகக் கொண்டி ருந்தார்.
1966இல் “பார்ப்பனத் தோழர் களுக்கு” என்று தலைப்பிட்டு வேண்டுகோள் கடிதம் எழுதினார்.  அதில், பார்ப்பனர்களை நாட்டை விட்டு வெளி யேற்றிவிட வேண்டும் என்று நான் கூறவில்லை.  உங்கள் பங்கை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்; எங்கள் பங்கை நாங்கள் எடுத்துக் கொள்கிறோம். எங்கள் பங்கையும் சேர்த்து நீங்கள் எடுப்பதால் பிரச்சினை வருகிறது.
என் மீதுள்ள கோபத்தில் ஆச்சாரியார் பேச்சைக் கேட்டுக் கொண்டு கண்ணீர்த் துளிகளுக்கு வாக்களித்து விடாதீர்கள். காங்கிரசுக்கு வாக்களியுங்கள் என்றார். ஆனால் 1967இல் திமுக வெற்றி பெற்று அண்ணா, பெரியாரைப் பார்த்து வாழ்த்துப் பெற்றவுடன் தி.மு.க. ஆட்சியை ஆதரிக்கத் தொடங்கி விட்டார்.
அண்ணாவுக்குப் பின் கலைஞர் ஆட்சியை ஆதரித்தார். 1970இல் கல்லூரிப் பட்டப்படிப்பில் கலைஞர் தமிழ்வழிக் கல்வியைக் கொண்டு வந்தார்.  அப்போது காமராசர் அதை எதிர்த்தார்.  மாணவர் களைத் தமிழ்வழிக் கல்விக்கு எதிராகப் போராடுமாறு தூண்டிவிட்டார் காமராசர்.  கலைஞர் ஆட்சியை ஆதரித்து வந்த பெரியார் அப்போது மட்டும் 1970இல் தமிழ்வழிக் கல்வியை ஆதரித்து விடுதலையில் எழுதினார். 
(காங்கிரசை ஆதரித்து வந்தபோது மாணவர்கள் 1965இல் நடத்திய மாபெரும் இந்தி எதிர்ப்பு மொழிப் போரை பெரியார் எதிர்த்தார்)
ஆட்சியாளரை ஆதரிக்கும் நோக்கில்தான் 1970இல் தமிழ்வழிக் கல்வியை ஆதரித்தார் பெரியார்.  இதைப் பெரிதாக சுப.வீ. காட்டுகிறார்.  பெரியார் தமிழ் வழிக் கல்வியை ஆதரித்தார் என்கிறார்.  ஆனால் அதன்பிறகு 1972இல் பெரியார் தமிழை எதிர்த்தார்.  இதோ பெரியார் 1972 டிசம்பரில் கலைமகள் இதழுக்குக் கொடுத்த நேர்காணல் ஈ.வெ.ரா. சிந்தனைகள் இரண்டாவது பாகம் பக்கம் 1228.
செய்தியாளர் - தமிழைக் காட்டுமிராண்டி பாஷை  என்று நீங்கள் குறிப்பிட்டீர்களே?
பெரியார் - ஆமாம் சொன்னேன். என்ன தப்பு? ஒருத்தனோடு ஒருத்தன் சண்டை போட்டுக்கிட்டுத் தமிழிலே திட்டறானே.. எப்படித் திட்டறான்? அவன் அம்மா, அக்கா, பொண்டாட்டி -எல்லாரையும்னா இழுக்கிறான் ( இந்த இடத்தில் சில நடைமுறைத் தமிழ் வசவுகளை உதாரணத்துக்குக் குறிப்பிடுகிறார் - திரு பெரியார்.  அவற்றை நான் எழுதாமலே வாசகர்கள் புரிந்து கொள்ளக் கூடும். -செய்தியாளர்) அதே மாதிரி சண்டை வந்து இங்கிலீஷ்லே திட்டினா. .“ஃபூல்”னு திட்டலாம், “இடியட்”னு திட்டலாம். தமிழிலே திட்ற மாதிரி கேவலமாகத் திட்டறதுண்டா? அதுவும் கிராமங்கள்ல பெண்பிள்ளைகள் சண்டை போட்டுக்கிறதைக் கேட்டா நான் சொல்றது புரியும்”.
தமிழில் அம்மாவை, அக்காவை, மனைவியை இழுத்துத் திட்டறதனாலே தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்றார் பெரியார். ஆங்கிலத்தில் பாஸ்டர்டு ( விபச்சாரி மகன்) என்று திட்டுகிறார்கள்.  இதற்கு என்ன சொல்வார் பெரியார். 
தமிழ் மொழி எதிர்ப்பு என்பது தொடர்ந்து பெரியாரிடம் இருந்து வந்தது.  1969இல் பெரியார் தமிழ் பற்றிச் சொன்னதைப் பாருங்கள். 
“எனது இந்தி எதிர்ப்பு என்பது இந்தி கூடாது என்பதற்கோ, தமிழ் வேண்டும் என்பதற்கோ அல்ல என்பதைத் தோழர்கள் உணர வேண்டும்.  மற்றெதற்கு என்றால் ஆங்கிலமே பொது மொழியாக அரசாங்க மொழியாக தமிழ்நாட்டு மொழியாக தமிழன் வீட்டு மொழியாக ஆக வேண்டும் என்பதற்காகவேயாகும். 
“தமிழன் பழைய தமிழனாகவே இருக்க வேண்டும் என்று கருதுவது, தமிழன் காட்டுமிராண்டியாகவே இருக்க வேண்டும் என்று கருதுவதற்கு ஒப்பாகும்.
  “நாம் இவ்வாறு கூறுவது தமிழன் உலக மனிதனாக - விஞ்ஞான உருவாக - ரஷ்யா, இங்கிலாந்து, அமெரிக்கா, ஜப்பான் மக்களை விஞ்ஞானத்தில் தோற்கடிக்கத் தக்கவனாக ஆக வேண்டும் என்பதற் கேயாகும்.  நாம் இன்று கிணற்றுத் தவளைகளாக இருக்கிறோம்.  நமக்குக் கம்பனுக்கு மேல் புலவன் இல்லை.  வள்ளுவனுக்கு மேல் தீர்க்கதரிசி இல்லை. இக்கருத்தில் நாம் உலக மனிதனாக ஆக முடியாது என்பது எனது பலமான கருத்து. ஆகையால் தமிழர் தோழர்களே உங்கள் வீட்டில் மனைவியுடன் குழந்தைகளுடன் வேலைக்காரிகளுடன் ஆங்கிலத்தி லேயே பேசுங்கள். பேசப் பழகுங்கள். பேச முயலுங்கள்.  தமிழ்ப் பைத்தியத்தை விட்டொழியுங்கள். என்னை வையாதீர்கள். மனிதனாக வாழ முயலுங்கள்.”
(விடுதலை அறிக்கை 27.1.1969, ஈ.வெ.ரா. சிந்தனைகள் பாகம் 2 பக்கம் 989)
பெரியார் 1969 இல் கூறிய இந்த மொழிக் கொள்கை சரியா? அவருடைய மொழிக் கொள்கை வெறும் நுகர்வு வாதத்தை (consumerisam) அடிப்படையாகக் கொண்டது..  நுகர்வு வாதம் மனித மாண்புகளைப் பற்றிக் கவலைப் படாதது.
 பெரியாரிடம் தமிழின மறுப்பும் தமிழ் மொழி எதிர்ப்பும் தொடர்ந்து இருந்து வந்தது. 
(அடுத்த இதழில் முடியும்)

(இக்கட்டுரை, தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2015 மார்ச் 1 இதழில் வெளியானது.)

Labels: ,


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்