<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d6955529389241309188\x26blogName\x3d%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86.%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://thozharmaniyarasan.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com/\x26vt\x3d-8408640130511538487', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

" இதழியல் மற்றும் நாடகத்துறையில் தனித்தடம் பதித்தவர் ஞாநி!" தோழர் பெ. மணியரசன் இரங்கல்!

Monday, January 15, 2018


==================================
இதழியல் மற்றும் நாடகத்துறையில் 
தனித்தடம் பதித்தவர் #ஞாநி!
==================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
தோழர் பெ. மணியரசன் இரங்கல்!
==================================

இதழியல் துறை, கலை இலக்கியம், சனநாயக அரசியல் ஆகிய அனைத்திலும் தனித்தன்மையுடன் கருத்துகளையும் படைப்புகளையும் வழங்கி வந்த நம்முடைய அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தோழர் ஞாநி அவர்கள், இன்று (15.01.2018) விடியற்காலை காலமாகிவிட்டார் என்ற செய்தி, பேரதிர்ச்சியைத் தருகிறது!

சிறுநீரக நோய் காரணமாக அவர் துன்பப்பட்டிருந்த நிலையிலும், படுக்கையில் வீழ்ந்து விடாமல் மன உறுதியினாலும், உணவு ஒழுங்கினாலும் இயங்கி வந்தார். இரண்டு மாதங்களுக்கு முன்பாக, சிதம்பரத்தில் தோழர் பா. பழநி அவர்கள் இல்ல விழாவில், தோழர் ஞாநி அவர்களைச் சந்தித்தேன். அவருடைய உடல் நிலைமை குறித்து சொன்னார். 

வீதி நாடகம் என்ற புதிய வடிவத்தில், சமகால தமிழ்க் கலையை ஒரு போக்காக வளர்த்தவர் ஞாநி. இந்தித் திணிப்பு - இந்துத்துவா அரசியல் ஆகியவற்றை ஒளிவுமறைவின்றி எதிர்த்து வந்தவர் தோழர் ஞாநி. எல்லா நிகழ்வுகளிலும் உடனுக்குடன் கருத்துக் கூறுவார். அவருடைய எல்லா கருத்துகளிலும் நமக்கு உடன்பாடிருக்கிறது என்று சொல்ல முடியாது. எனினும், பெரும்பாலான கருத்துகள் முற்போக்கானவையாகவே இருக்கும்! 

வெளியூரில் நான் இருந்தமையால், தோழர் ஞாநி அவர்களின் இறுதி வணக்க நிகழ்வில் பங்கேற்க முடியவில்லை. சென்னை க.க. நகர் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த தோழர் ஞாநி அவர்களது உடலுக்கு, தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில், புலவர் இரத்தினவேலவன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி, பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல். ஆறுமுகம், சென்னை கிளைச் செயலாளர் தோழர் ஏந்தல் உள்ளிட்டோர் மலர் மாலை அணிவித்து வணக்கம் செலுத்தினர். இன்று (15.01.2018) மாலை, தோழர் ஞாநி அவர்களின் விருப்பப்படி, அவரது உடல் சென்னை அரசுப் பொது மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு கொடையாக வழங்கப்படுகிறது! 

தனித்து நின்று அரசியல் சனநாயகத்திற்கும், வர்ண சாதி ஆதிக்கமற்ற சமத்துவ சமூகத்திற்கும் குரல் கொடுத்து, கலை இலக்கியப் படைப்புகளையும் வழங்கிப் பணியாற்றிய தோழர் ஞாநி அவர்கள் மறைவுக்கு, தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய சிறந்த ஆளுமைகளையம், பண்புகளையும் இளம் தலைமுறையினர் கற்று முன்னேறுவது ஒன்றே, ஞாநி அவர்களுக்கு செய்யக் கூடிய சிறந்த புகழ் வணக்கமாக அமையும்! 

Labels:

" புதிய எதிர்பார்ப்புகளோடு புத்தாண்டை வரவேற்கிறோம்! தோழர் பெ. மணியரசன் வாழ்த்து!"

Sunday, January 14, 2018

=================================
புதிய எதிர்பார்ப்புகளோடு
புத்தாண்டை வரவேற்கிறோம்!
=================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
தோழர் பெ. மணியரசன் வாழ்த்து!
=================================

பொங்கலாய், தமிழர் திருநாளாய், உழவர் பெருநாளாய், புத்தாண்டுப் பிறப்பாய் புதிது புதிதாய் வளர்ந்து வரும் தையே, “தமிழன்டா” மகுடத்துடன் கடந்த ஆண்டு தைப்புரட்சி ஆனாய் நீ! ஏறுதழுவும் உரிமை மீட்டாய்! 

இன்முகத்தோடு, புதிய எதிர்பார்ப்புகளோடு உன்னை வரவேற்கிறோம்!

வையத்தின் மூத்த இனமாய் உள்ள எங்களின் இளமைக்குக் காரணம் - தமிழ்! “தமிழ் எங்கள் இளமைக்குப் பால்” என்றார் பாவேந்தர். 

தமிழர் திருநாள் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்ளும்போது, நம் இளையோர் ஒவ்வொருவரும் இன உரிமை அரசியல், சமூக சமத்துவம், உளவியல் அறம் மூன்றையும் முன்னெடுக்க உறுதி ஏற்க வேண்டும்.

சாதிவெறியர்களால் வீதிகள் எரிக்கப்பட்டால், சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டோர் கொலை செய்யப்பட்டால் உளவியல் அறம் கொண்ட ஒவ்வொரு தமிழனும், தமிழச்சியும் வெட்கப்பட வேண்டும். வேதனைப்பட வேண்டும். இந்த அநீதிகளைத் தடுக்க தங்களால் ஆனவற்றைச் செய்ய வேண்டும்! 

தமிழின உரிமைகள் பறிக்கும் ஆரியத்துவாவின் இந்திய ஆட்சியாளரிடம் அடங்கிப் போவோர் - தமிழ்நாட்டுக் கங்காணி ஆட்சியாளரிடம் தலை சொறிந்துபிழைப்போர் - நம்மில் சாதியால் பலவீனப்பட்டுள்ள மக்களிடம் ஆதிக்கம் செய்வதும், அவர்களைக் கொலை செய்வதும் என்ன வீரம்? உட்சூழ்ச்சி புரியாமல் அந்த ஆதிக்கவாதிகள் காட்டும் சாதிக் கவர்ச்சியில் இளைஞர்கள் சாய்ந்துவிடக் கூடாது! 

இந்தத் தன்னலக்காரர்கள் தமிழின வீரத்தை மழுங்கடித்து, சாதி அடாவடித்தனத்தைத் தூண்டி விடுகிறார்கள்; தமிழ்ப்பற்றை மறக்கச் செய்து சாதிப்பற்றைத் தூண்டி விடுகிறார்கள். 

தமிழ்நாட்டில் அரசியல் பதவி வேட்டையாடிகள் சாதியை - தங்களுக்கான வாக்கு வங்கியாக மாற்றிக் கொண்டுள்ளார்கள். இவர்கள் சாதி உணர்வை அல்லும் பகலும் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறார்கள். 

தமிழர்கள் அனைவரும் ஒரே இன மக்கள்! இது வரலாற்றுண்மை! யாதும் ஊரே யாவரும் கேளீர் (உறவினர்) என்றல்லவா நம் பாட்டன்மார், பாட்டிமார் கூறிச் சென்றுள்ளார்கள். இதுவல்லவா நம் முன்னோர் நமக்கு வழங்கிய மனிதநேய மந்திரம்! 

மனிதப் பிறப்பை உயர்வு தாழ்வாய் மாற்றிச் சொன்னது ஆரியம்! வர்ண - சாதிச் சூத்திரம் சொன்னது பிராமணியம்! நம் முன்னோர் நமக்கு வழங்கிச் சென்றது ஓரினக் கொள்கை! 

இந்துத்துவா முகமூடி மாட்டிக் கொண்டு வரும் ஆரியத்துவா - இசுலாமியர், கிறித்துவர் எல்லாம் அயலார் என்கிறது. நம்மைப் பொறுத்தவரை தமிழர்கள் இந்துவாக, இசுலாமியராக, கிறித்தவராக இருக்கிறார்கள்; அவர்கள் இனம் ஒன்றே!

நம் பொங்கல் விழா அனைவருக்கும் பொதுவான விழா! அறுவடைத் திருவிழா! பொங்கலிட்டுப் படைத்து உண்போர் உண்ணலாம்! படைக்காமலே - பொங்கலிட்டும் உண்ணலாம்! மாட்டுப் பொங்கல் ஏறு தழுவுதல் - காணும் பொங்கல்.. பொங்கல் விழாவில் விளையாட்டுப் போட்டிகள், பாட்டரங்குகள், பட்டிமன்றங்கள், இசை நிகழ்ச்சிகள், நாட்டிய அரங்குகள்.. எத்தனையெத்தனை அரங்கேறுகின்றன! 

அப்பப்பா மக்கள் வெள்ளம் ஒன்று கலக்கும் எத்தனை வடிவங்கள்! இதுபோல் பன்முக விழா வேறேது? 

அனைவர்க்கும் இனிய பொங்கல் - புத்தாண்டு வாழ்த்துகள்! 

Labels: ,

"நீதிபதி இந்திரா பானர்சி வாயிலிருந்து நல்ல சொற்களே வராதா?" தோழர் பெ. மணியரசன்

Tuesday, January 9, 2018

==================================
"நீதிபதி இந்திரா பானர்சி வாயிலிருந்து
நல்ல சொற்களே வராதா?"
==================================
தோழர் பெ. மணியரசன்,
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
==================================

தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் தொழிலாளர்கள் தங்களுக்கு 2016 செப்டம்பரிலிருந்து தர வேண்டிய ஊதிய உயர்வைத் தர வலியுறுத்தியும், தங்களது வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட பணப்பலன்களில் 7 ஆயிரம் கோடி வரைத் தமிழ்நாடு அரசு எடுத்துக் கொண்டு, தொழிலாளர்களுக்குத் தர மறுப்பதைத் தந்திட வலியுறுத்தியும், பணி ஓய்வு பெற்றோர்க்கு ஓய்வூதியம் மற்றும் வைப்பு நிதி போன்றவற்றை தர வலியுறுத்தியும் வேலை நிறுத்தம் செய்து போராடி வருகிறார்கள். 

இப்போராட்டம் தொடர்பான வழக்கில் – சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்சி – நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் அமர்வு 05.01.2018 அன்று “சம்பளம் போதவில்லை என்றால் வேறு வேலைக்கு செல்லுங்கள்” என்று கூறியதுடன், தொழிலாளிகள் வேலை நிறுத்தத்தை உடனடியாகத் திரும்பப் பெற்றுக் கொண்டு வேலைக்குப் போக வேண்டும். வேலைக்குத் திரும்பவில்லை எனில் வேலை நீக்கம் செய்வோம் என்று ஆணையிட்டது. 

நேற்று (08.01.2018) இவ்வழக்கு மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வந்தபோது, இந்திரா – பானர்சி, “தமிழ்நாடு அரசினால் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன்களைத் தர முடியவில்லை என்றால் போக்குவரத்தைத் தனியார் மயமாக்க வேண்டியதுதானே” என்று கூறினார். 

தலைமை நீதிபதி இந்திரா பானர்சி கூற்றின்படி, போக்குவரத்துத் துறை தனியார் மயமானால் 80 ஆயிரம் போக்குவரத்துத் தொழிலாளர் குடும்பங்கள் சந்தியில் நிற்க வேண்டியதுதான்! தனியாரின் கட்டணக் கொள்ளையால் தமிழ்நாட்டு மக்கள் அல்லாட வேண்டியது தான்!

இந்திரா பானர்சி வாயில் நல்ல சொற்களே வராதா? 

மக்கள் வழக்கில் ஒரு பழமொழித் தொடர் ஒன்று இருக்கிறது : “நாக்கில் சனி!”.

Labels:

"போக்குவரத்துத் #தொழிலாளர் வேலை நிறுத்தம் : ஆணவம் பிடித்த நிர்வாக அதிகாரி போல் உயர் நீதிமன்ற நீதிபதிகள் பேசக்கூடாது! " -- தோழர் பெ. மணியரசன் அறிக்கை!

Saturday, January 6, 2018

===========================================
போக்குவரத்துத் #தொழிலாளர் வேலை நிறுத்தம் :
ஆணவம் பிடித்த நிர்வாக அதிகாரி போல்
உயர் நீதிமன்ற நீதிபதிகள் பேசக்கூடாது!
===========================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
தோழர் பெ. மணியரசன் அறிக்கை!
===========================================

மூன்று நாட்களாகத் தொடர்ந்து வேலை நிறுத்தம் செய்துவரும் போக்குவரத்துத் தொழிலாளர்களுடன் அவர்களின் தொழிற்சங்கங்கள் வழியாகப் பேச்சு நடத்தி இணக்கமான முடிவை உண்டாக்கத் தமிழ்நாடு அரசு தவறிவிட்டது. 

ஊதிய உயர்வு குறித்து பேச்சு வார்த்தையில் இரு தரப்புக்கும் இடையே குறைவான வேறுபாடே உள்ளது. ஆனால், தொழிலாளர்களிடமிருந்து அவர்களின் ஊதியத்தில் பிடித்த ஏழாயிரம் கோடி ரூபாயை வருங்கால வைப்பு நிதி, அஞ்சல் ஈட்டுறுதி நிதி (PLI), வாழ்நாள் ஈட்டுறுதி நிதி (LIC) முதலியவற்றிற்குக் கட்டாமல், தமிழ்நாடு அரசு தானே செலவழித்துவிட்டது. கடந்த 16 மாதங்களில் 21 தடவை நடந்த பேச்சில் இந்த ஏழாயிரம் கோடி ரூபாயைத் திருப்பித் தர தமிழ்நாடு அரசு உருப்படியான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை! கொடுத்த வாக்குறுதிகளையும் காற்றில் பறக்கவிட்டுவிட்டது. 

தமிழ்நாடு அரசின் நிதித்துறை திவாலாகிவிட்டது. ஆனால் எம்ஜியார் நூற்றாண்டு விழா என்ற பெயரில் உருப்படியற்ற வாண வேடிக்கைச் செலவுகளை பல நூறு கோடி ரூபாய்க்குச் செய்துள்ளது எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அரசு!

போக்குவரத்துத் தொழிலாளர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் நம்பகத் தன்மையை இழந்துவிட்டது தமிழ்நாடு அரசு! 

இந்நிலையில், 04.01.2018 அன்று பிற்பகல் பேச்சு வார்த்தை முறிந்த நிலையில், போக்குவரத்துத் தொழிலாளர்கள் திடீரென்று வேலை நிறுத்தம் தொடங்கினர். வேலை நிறுத்தம் குறித்து ஏற்கெனவே கொடுத்த அறிவிக்கை போதும் என்கின்றன தொழிற்சங்கங்கள். இது சட்டப்படியான வேலை நிறுத்தம் என்கின்றன. 

ஆனால், தொழிலாளிகள் – பயணிகளை நடுவழியில் அங்கங்கே இறக்கிவிட்டு, அல்லோகலப்படுத்தி வேலை நிறுத்தம் தொடங்கிய முறை சரியன்று! முக்கியமான பேருந்து நிலையங்களில் பயணிகளை இறக்கி விட்ட பின்தான் வேலை நிறுத்தம் தொடங்கியிருக்க வேண்டும். மக்களிடம் இப்பொழுது இதுபற்றி ஏற்பட்டுள்ள கெட்ட பெயரைப் போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் படிப்பினையாக் கொள்ள வேண்டும். 

சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்சி மற்றும் நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு இந்த வேலை நிறுத்தம் சட்ட விரோதமானது என்று அறிவித்ததுடன், உடனடியாக வேலைக்குத் திரும்பவில்லையென்றால் தொழிலாளிகள் பணி நீக்கம் செய்யப்படுவர்; அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் போடப்படும் என்றும் மிரட்டியுள்ளது. 

சம்பளம் போதவில்லை என்றால் வேறு வேலைக்குப் போங்கள் என்று தொழிலாளர்களைப் பார்த்து சொல்வதற்கு, இந்திரா பானர்ஜிக்கு அதிகாரம் தந்தது யார்? இப்பேச்சு அதிகார மமதையின் உச்சம்! 

நீதிபதிகள் இந்திரா பானர்ஜி மற்றும் அப்துல் குத்தூஸ் இருவரும் நீதித்துறை அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளார்கள். அவர்கள் தொழிற்சங்கங்களிடம் இதுகுறித்து விளக்கம் கேட்கும் முன் கடுஞ்சொற்களை உதிர்த்துள்ளார்கள். 

போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு மட்டுமின்றி, தமிழ்நாடு அரசு சட்டத்திற்குப் புறம்பாகப் பயன்படுத்தியுள்ள தங்களது ஊதியப்பணம் ஏழாயிரம் கோடி ரூபாயைத் திருப்பித் தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து 16 மாதங்களாக – குரலெழுப்பி வருகிறார்கள். பணி ஓய்வு பெற்றவர்களுக்கு அவர்களுக்குச் சேர வேண்டிய பணத்தைத் தரவில்லை; இன்றியமையாத் தேவைகளுக்குத் தங்கள் வைப்பு நிதியிலிருந்து கடன் வாங்கும் உரிமையைப் பயன்படுத்த முடியவில்லை. 

தொழிலாளர்களின் இந்தப் பாதிப்புகளைப் பற்றி கவலைப்படாத நீதிபதிகள், பயணிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பைக் கண்டு மனம் வருந்தும் சாக்கில் நீதித்துறை அதிகாரத்தை நிர்வாகத்துறை அதிகாரமாக மாற்றிக் கொண்டுள்ளார்கள். தங்களின் இந்த நிலைபாட்டை உயர் நீதிமன்ற நீதிபதிகள் குறிப்பாக நீதிபதி இந்திரா பானர்சி மறு ஆய்வு செய்ய வேண்டும்; மாற்றிக் கொள்ள வேண்டும். 

ஏற்கெனவே ஆசிரியர்கள் மற்றும் செவிலியர்கள் நடத்திய வேலை நிறுத்தத்தின்போதும் ஆணவம் கொண்ட நிர்வாக அதிகாரிகள் போல்தான் உயர் நீதிமன்ற நீதிபதிகள் கட்டளைகள் பிறப்பித்தனர். 

தமிழ்நாடு முதலமைச்சர் நேரடியாகத் தலையிட்டு, தொழிற்சங்கத் தலைவர்களுடன் பேசி உடனடியாகப் போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி, இயல்பு நிலையைக் கொண்டு வந்து மக்களின் துன்பங்களையும் நீக்க வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். அதைவிட்டுவிட்டு, போராட்டத்தை மடைமாற்ற, மாற்று ஓட்டுநர்களைக் கொண்டு பேருந்துகளை இயக்குகிறோம் என மக்களின் உயிருடன் விளையாடக் கூடாது என்றும் எச்சரிக்கிறேன். 

Labels: ,


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்