<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d6955529389241309188\x26blogName\x3d%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86.%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://thozharmaniyarasan.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com/\x26vt\x3d-8408640130511538487', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

கவிஞர் வைரமுத்துவின் திராவிட மந்திரம்! பெ. மணியரசன்

Tuesday, August 28, 2018

கவிஞர் வைரமுத்துவின் 
திராவிட மந்திரம்!

தோழர் பெ. மணியரசன் 
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம் 


பாவலர் வைரமுத்து அவர்களின் படைப்பாற்றல் வலிமை நாடறிந்தது! சமகாலத் தமிழ் வளர்ச்சிக்கு வைர முத்துவின் பங்களிப்பு போற்றத்தக்கது. அவருடைய அரசியல் சார்பு என்பது அவருடைய உரிமை என்ற அளவில் அது குறித்து நான் விமர்சிக்கவில்லை. ஆனால் அவரது தமிழாற்றுப் படையின் 19 ஆவது கட்டுரையாக “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் - கால்டுவெல்” பற்றி திருநெல்வேலி பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் 25.08.2018 அன்று அவர் படித்த கட்டுரையின் சில பகுதிகள் விமர்சனத்திற்குரியவை.
சமற்கிருதத் துணையின்றி தமிழ் இயங்கும் என்று கண்டறிந்த கால்டுவெல் பாரட்டப்பட வேண்டியவர். அதே வேளை அவரின் பிழைகளை சுட்டிக்காட்டி திறனாயவும் வேண்டும்.
வைரமுத்து அவர்களின் கால்டுவெல் உரையில் ஒரு பகுதி 26.08.2018 “தினத்தந்தி” நாளேட்டில் வந்துள்ளது.
“தமிழ் என்பது ஒரு மொழி மட்டுமல்ல; ஒரு மொழிக் குடும்பத்தின் தாய் என்றும் திராவிடம் என்பது வெறும் சொல் அல்ல மறுக்க முடியாத மானுடக் கலாச்சாரம் என்றும் அறிவுலகத்துக்கு அறிவித்தவர் கால்டுவெல். கால்டுவெல் மட்டும் திராவிடம் என்ற இனக்குறியீட்டைக் கண்டறியாது இருந்திருந்தால் நமக்கு அடையாளமில்லை. வீழ்த்தப்பட்ட தமிழர்கள் இன்று அடைந்திருக்கும் வெற்றியும் இல்லை. மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை, மறைமலையடிகள், பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகிய திராவிடச் சிங்கங்கள் இல்லை.” (தினத்தந்தி)
“திராவிடம்” என்ற இனக் குறியீட்டைக் கால்டுவெல் கண்டறியாது இருந்தால் தமிழர்களுக்கு அடையாள மில்லை, ஆதாரமில்லை, கிரீடமில்லை, கீர்த்தியில்லை என்று வைரமுத்து வர்ணித்திருப்பது - அவருடைய பாணியில் கூறுவதென்றால் கவிதைக்குப் பொய்யழகு என்பது போல் கட்டுரைக்கும் பொய்யழகோ? கால்டு வெல்லைப் பெருமைபடுத்துவதற்காகத் தமிழையும் தமிழர் பெருமிதங்களையும் சிறுமைப்படுத்த வேண்டுமா?
கால்டுவெல் ஒப்பிலக்கணம் எழுதாமல் போயி ருந்தாலும், தமிழ் வளர்ச்சியும் தமிழர் வளர்ச்சியும் தடைப்பட்டிருக்காது; மனோன்மணியம் சுந்தரம் பிள்ளையும், மறைமலை அடிகளாரும் தமிழறிஞர்களாக சிறந்திருப்பார்கள். அண்ணா மக்கள் தலைவராக வளர்ந்திருப்பார். அவர் சங்கத்தமிழில் - திருக்குறளில் - காப்பியத் தமிழில் காலூன்றி நின்றவர்!
வைரமுத்து தமது கட்டுரையில் வரிசைப்படுத்தி யிருப்பது போல் கால்டுவெல் வருவதற்கு முன்பாக சமயப் பரப்புரைக்காக தமிழ்நாடு வந்த ஐரோப்பியச் சான்றோர்கள் இத்தாலியின் இராபர்ட் நொபிலி (1577 - 1656), இத்தாலியின் வீரமா முனிவர் என்ற கான்ஸ் டன்டின் ஜோசப் பெஸ்கி (1680 - 1742), செர்மனி யிலிருந்து வந்த சீகன் பால்கு (1682 - 1719) இங்கிலாந் திலிருந்து வந்த பிரான்சிஸ் ஒயிட் எல்லீசு (1777 - 1819), இங்கிலாந்திலிருந்து வந்த ஜி.யு. போப் (1820 - 1908) போன்றோர் தமிழின் சீர்மை, தூய்மை, ஆழம், அகலம் அனைத்தையும் கண்டு வியந்து போற்றினர். தங்கள் படைப்புகளையும் தமிழில் வழங்கினர்.
வீரமாமுனிவர் தமிழுக்குச் சதுர அகராதி தந்தார். எழுத்துச் சீர்திருத்தம் கொணர்ந்தார். ஜி.யு. போப் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தார். கிறித்தவ சமயம் பரப்ப வந்த சான்றோராக இருந்தும் மாணிக்கவாசகரின் திருவாசகத்தில் மனம் பறிகொடுத் தார். “தமிழ் மாணவன்” என்று தம்மைச் சொல்லிக் கொள்வதில் பெருமை கண்டார் போப்!
தமிழின் தனித்தன்மையை ஐரோப்பியர் ஏற்றுக் கொண்டால்தான் தமிழ் வாழும்; தமிழர் வாழ்வர் என்று கருதுவது அடிமை மனப்பான்மையில்லையா?
கால்டுவெல்லுக்கு முன் ஒப்பிலக்கண ஆய்வு செய்தவர் பிரான்சிஸ் ஒயிட் எல்லீசு. அவர் ஆங்கிலேயர்! அதே வேளை சமற்கிருதம், தமிழ், தெலுங்கு மொழிகள் கற்றவர். சென்னையில் நாணய அச்சடிப்பு நிலைய அதிகாரியாக இருந்தபோது திருவள்ளுவர் படம் பொறித்து நாணயம் வெளியிட்டார். திருக்குறளின் சில அதிகாரங்களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தார். சென்னை மாகாணத்தில் நிர்வாகப் பணிபுரிய வரும் இளம் வெள்ளை அதிகாரிகள் இம்மாகாணத்தில் உள்ள தமிழ் உள்ளிட்ட மொழிகளைக் கற்பதற்காக சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் 1812இல் கல்லூரி நிறுவினார் எல்லீசு! தம் பெயரைத் தமிழ்மரபுப்படி “எல்லீசன்” என்று அழைக்கச் சொன்னார்.
மேற்படி சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கல்லூரியில் கண்காணிப்புக் குழு செயலாளராகப் பணியாற்றிய அலெக்சாண்டர் டங்கன் காம்பெல் 1816இல் தெலுங்கு மொழி இலக்கணம் குறித்து எழுதிய நூலுக்கு எல்லீசு தந்த முன்னுரை சிறந்த மொழியியல் ஆய்வுரை என்று அறிஞர்களால் போற்றப்படுகிறது. அதில்தான் எல்லீசு அவர்கள், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலை யாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் சமற்கிருத மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை அல்ல; இவை தனிமொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்றார். இவற்றைத் தென்னிந்திய மொழிகள் என்றாரே தவிர திராவிட மொழிகள் என்று கூறவில்லை! அப்போதும் “திராவிட” என்ற சொல்லாட்சி சமற்கிருத நூல்களில் இருந்தது. பிராமண அறிவாளிகள் “திராவிட” என்ற சொல்லைப் பயன்படுத்தி வந்தனர். ஆனால் எல்லீசன் “திராவிட மொழிக் குடும்பம்” என்ற திரிபு வேலையைச் செய்யவில்லை.
தென்னிந்திய மொழிகள் தனிக்குடும்பம் என்ற எல்லீசு இவற்றின் தாய் தமிழ் என்றார். இவ்வாறு எல்லீசு கூறியது 1816இல்! நாற்பது ஆண்டுகளுக்குப் பின் 1856 இல், இந்தத் தென்னிந்தியத் தனிக் மொழிக் குடும்பத்திற்கு “திராவிட மொழிக் குடும்பம்” என்று கால்டுவெல் புனைவுப் பட்டம் சூட்டினார். எது முந்திய ஆய்வு என்று இப்போது தெரிகிறதா?
கவிஞர் வைரமுத்து கூறுவது போல் கால்டுவெல் இல்லையென்றால் தமிழ் மொழிக்கு - தமிழர்களுக்கு அடையாளமில்லை; ஆதாரமில்லை; கிரீடமில்லை, கீர்த்தியில்லை என்ற அவலம் வரலாற்றில் என்றுமே இல்லை! கால்டுவெல்லே - வைரமுத்துவின் கூற்றை ஒப்புக்கொள்ள மாட்டார். அவர் தமது ஒப்பிலக்கண நூலில் பின் வருமாறு குறிப்பிடுகிறார்.
“இவ்வின மொழிகள் (தென்னிந்திய மொழிகள் - பெ.ம.) ஐரோப்பிய ஆசிரியர்களால், ஒரு காலத்தில் “தமுலியன்” அல்லது “தமுலிக்” என்று பெயரிடப் பட்டிருந்தன. ஆனால் இவ்வின மொழிகளுள் தமிழ் நனி மிகப் பழைமையுடைய, பெரிதும் நாகரிகமடைந்த மொழியாதலாலும், தன் இன (மொழி வகையினம்) உடைமைகளாய்ச் சொல்லுருவங்கள், சொல் மூலங்கள் ஆகியவற்றின் பெரும் பகுதியைப் பெற்றுள்ளதாலும், தமில், தமிலன் என்ற சொற்களை முறையே தமிழ் மொழியையும் அதை வழங்கும் மக்களையும் குறிக்க மேற்கொள்வதே விரும்பத்தக்கதாம்.”
- திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம், டாக்டர் கால்டுவெல் அய்யர், தமிழில் - புலவர் கா. கோவிந்தன் எம்.ஏ., சு. ரத்னம் எம்.ஏ., பக்கம் - 7.
ஐரோப்பிய நூலாசிரியர்கள் தமிழ்மொழியையும் தமிழ் இனத்தையும் தமக்கு முன்பாகவே அறிந்து வைத்துள்ளார்கள் என்பதைக் கால்டுவெல்லே கூறுகிறார்.
ஆரியம் வெட்டிய திராவிடப்
படுகுழிக்குள் வீழ்ந்தார் கால்டுவெல்
----------------------------------------------------------

தமிழ் என்பது ஒரு மொழி மட்டுமல்ல; ஒரு மொழிக் குடும்பத்தின் தாய் என்று கால்டுவெல் கூறியதாக வைரமுத்து எழுதியுள்ளார். அது உண்மையன்று; திராவிட மொழிக் குடும்பத்தில் மூத்த மொழி தமிழ் என்ற கால்டுவெல், திராவிடம் என்ற மூலமொழிதான் (Proto Language) தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழி களுக்குத் தாய் என்கிறார்.
இந்தத் திராவிட மொழி இருந்ததற்கான மூலச் சான்றை தமிழ் மொழியிலிருந்தோ அல்லது தெலுங்கு மொழியிலிருந்தோ கால்டுவெல் எடுக்கவில்லை. ஏன் எனில் இவற்றில் பழங்காலத்தில் திராவிட மொழி என்ற பெயரில் ஒரு மொழி கூறப்படவில்லை. பிறகு எங்கிருந்து எடுத்தாராம் கால்டுவெல்? ஆரிய மொழியான சமற் கிருதத்திலிருந்து திராவிட மொழிக்கான - திராவிட இனத் திற்கான சான்றை எடுத்தேன் என்கிறார். அதிலும் மனு ஸ்மிருதியிலிருந்து எடுத்தேன் என்கிறார். இதோ கால்டுவெல் கூற்று :
“மனு கூறுகிறார் (x43, 44) : சத்திரியர்களைச் சேர்ந்த கீழ்வரும் பழங்குடிகள் மெல்ல மெல்ல விரிசாலா (புறச்சாதியினர் - Out caste) ஆனார்கள். அவ்வாறு கீழ்நிலை அடைந்ததற்கு அவர்கள் புனிதச்சடங்குகளைச் செய்யாததும், பிராமணர் தொடர்புகளைக் கைவிட்டதும் காரணம் ஆகும். அப்படி (புறச்சாதிகள்) ஆனவர்கள் பௌந்தரர்கள், ஒட்ரர்கள், திராவிடர்கள், கம்போ ஜர்கள், யவனர்கள், சாகர்கள், பரதாஸ், பகலவாஸ், சீனாஸ், கிராதஸ், தாததாஸ், கசாஸ்”.
“மனு குறிப்பிடும் இப்பழங்குடிகளுள் திராவிடர்கள் மட்டுமே தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள். தென்னிந்தியப் பழங்குடிகள் அனைத்துமே திராவிடர்கள் என்று கருதலாம். இப்பழங்குடிகளுள் யாராவது தாங்கள் திராவிடர்கள் அல்ல என்று கருதினால், அவர்கள் ஆந்தி ரர்கள் - உட்பகுதிகளில் உள்ள தெலுங்கர்கள்; அவர்கள் ஏற்கெனவே ஐத்தரேயா பிராமணாவில் பெயர் குறிக்கப் பட்டவர்கள்; விசுவாமித்தரர் வம்சத்திலிருந்து இழி வடைந்த புஞ்ரஸ், சபரஸ், புலிந்தஸ்.”
- இராபர்ட் கால்டுவெல், A Comparative Grammar of the Dravidian or South-Indian family of languages, 2008, ஆங்கிலம் - Kavithasaran Pathipagam, Chennai - 600019, பக்கம் - 5,6.
மேற்படி மனுநூல் திராவிடர் என்பவர் விரிசாலா என்ற இழி பிறப்பாளர் என்று கூறுகிறது. விரிசாலா என்ற சொல் தான் பின்னர் சூத்திரர் என்று விளக்கப்பட்டது என்கிறார் பேராசிரியர் த. செயராமன் (இனவியல் : ஆரியர் - திராவிடம் - தமிழர் தொடர் கட்டுரை).
மனுதர்ம எதிர்ப்பு பேசும் பெரியாரியர்கள் கொண்டாடும் ‘திராவிடரின்’ பிறப்பு இவ்வாறு உள்ளது.
தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு போன்ற மொழிகளுக்குத் தாய்மொழி அல்லது மூலமொழி தமிழ்தான் என்பதை - மாற்றி அமைப்பதற்காகத்தான் ஆரியச் சான்றுகளைத் தேடி அலைகிறார் கால்டுவெல். அந்தத் தேடலில் ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த குமாரிலபட்டர் என்ற ஆரியர் எழுதிய சமற்கிருத நூலான தந்திர வார்த்திகாவில் வரும் “ஆந்திர - திராவிட பாஷா” என்பதைக் கண்டறிகிறார். இதில் உள்ள ஆந்திரம் தெலுங்கைக் குறிக்கிறது. “திராவிட பாஷா” என்பது மூலமொழியைக் குறிக்கிறது என்று தன்விருப்பப்படி - சான்றேதும் இல்லாமல் முடிவுக்கு வருகிறார். அதே ஏழாம் நூற்றாண்டில், குமாரிலபட்டர் படித்த அதே காஞ்சிபுரத்தில் தர்க்கங்கள் பல நடத்திய திருநாவுக்கரசர் “ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்” என்று தெளிவாக இரு இனங்களைக் குறிப்பிட்டுள்ளார். அதைக் கால்டு வெல் எடுத்துக்கொள்ளவில்லை!
கால்டுவெல் சமற்கிருதம் படித்து ஆரிய இலக்கியங்களில் ஆரியக்கதைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.
“பரதகண்ட புராதனம்” என்றொரு நூலைக் கால்டுவெல் தமிழில் எழுதியுள்ளார். இதன் மறுபதிப்பை என்.சி.பி.எச். பதிப்பகம் 2012 மே மாதம் வெளியிட் டுள்ளது. இந்நூலின் பதிப்பாளர் திரு. பொ. வேல்சாமி அவர்கள்.
இந்தியா முழுமையையும் “பரதகண்டம்” - “பாரதம்” என்று சொல்லிக் கொள்ளும் ஆரியக் கருத்தியலை அடி யொற்றி, அந்த “பரத” கண்டத்தின் அடியொற்றி, அந்த பரத கண்டத்தின் புராதன வரலாற்றைத் திறனாய்வுடன் சொல்லும் பாங்கில் எழுதியுள்ளார் கால்டுவெல். சதுர்வேதங்கள் தொடங்கி இராமாயணம், மகாபாரதம், வாயுபுராணம் உள்ளிட்ட புராணங்கள் முதலியவை பற்றிய விளக்கங்கள்தாம் இந்நூலில் உள்ளன. பரதகண்ட புராதனம் என்பதற்கு ஆங்கிலத்தில் - “Indian Antiquities By the Late Bishop Caldwell” என்று தாம் கண்ட மூலநூலில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்ததாக திரு பொ. வேல்சாமி குறிப்பிடுகிறார். இந்நூல் 1893 இல் வெளி யிடப்பட்டதாகக் குறிப்பு இருந்தது என்கிறார்.
திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எழுதப்பட்டது 1856இல்! சமற்கிருத இலக்கியங்களில் மூழ்கிப் போயிருந்த கால்டுவெல், தமது ஒப்பிலக்கண நூலில் தமிழர்களைப் பழங்குடியினர் (Tribe) என்றும் தமிழை - பழங்குடிகளின் கிளை மொழி (Dialect) என்றும் பல இடங்களில் குறிப்பி டுகிறார். சமற்கிருதத்தை ஒரு பழங்குடிக் கிளைமொழியாக(Dialect)ப் பார்க்கும் ஆய்வுமுறை அவரிடம் இல்லை. எனவே சமற்கிருத நூல்களான மனுதர்மம், மகாபாரதம், இராமாயணம், தந்திரவார்த்திகா மற்றும் புராணங்கள் போன்றவற்றில் கூறப்படும், ஆரியச் சத்திரியர்களில் இழிவடைந்து போன சூத்திரப் பிரிவினரான திராவிடர் களைத் தமிழர்களின் மூலவர்கள் - மூதாதையர் என்று குறிப்பிடுகிறார்.
புறநானூறு, அகநானூறு, பரிபாடல், சிலப்பதிகாரம், தேவாரம், பூதாத்தாழ்வார் பாடல், கம்பராமாயணம், பெரியபுராணம், இளம்பூரணரின் தொல்காப்பிய உரை போன்ற தமிழ் நூல்கள் தமிழர் - தமிழகம் - தமிழ்நாடு ஆகியவற்றைக் கூறுகின்றன. இவற்றில் எதுவுமே கால்டுவெல்லுக்குக் கிடைக்கவில்லையா?
அதுமட்டுமன்று மானிடவியல் ஆய்வு, மரபு இனவியல் ஆய்வு போன்றவற்றில் எதையும் தமது இன ஆய்வுக்கு அடிப்படையாய் கால்டுவெல் எடுத்துக் கொள்ளவில்லை. ஆரிய சமற்கிருத வர்ணாசிரம தர்ம மனு நூல், இராமாயண, மகாபாரத இதிகாசங்கள், புராணங்கள் போன்றவை தான் தமிழர்களுக்கான இன அடையாளம் குறிக்க கால்டுவெல் கையாண்ட “சமூக அறிவியல்” நூல்கள்!
இப்படியாக வருவிக்கப்பட்ட ஆரிய அடையாள திராவிட இனத்தைத்தான் பகுத்தறிவுச் சிந்தனையாளர் பெரியார் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினார். தமிழர்களின் தனித்த அடையாளத்தை - மறைத்து அல்லது அதை நீர்த்துப் போகச் செய்து கலப்பட இனப்பெயராகக் காணப்பட்ட “திராவிட இன” அடையாளத்தைத் திட்டமிட்டுத் திணித்தார் பெரியார். அதில் அவர்க்கான நோக்கம் இருந்தது. அதுபற்றி “திராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா, வழி மாற்றியதா” என்ற எனது நூலில் எழுதியுள்ளேன்.
கவிப்பேரரசு வைரமுத்து கலப்படத் தயாரிப்பான திராவிட இனப்பெயரை ஏன் தூக்கிச் சுமந்து கொண் டாட்டம் போட வேண்டும்?
“திராவிடம் என்ற சொற்சுட்டு கால்டுவெல்லால் உண்டாக்கப்பட்டதன்று. அது ஓர் ஆதிச்சொல்” என்கிறார் வைரமுத்து. ஒரே ஒரு திருத்தம், ஆதிச்சொல் அன்று - ஆரியச்சொல்!
கி.பி. 13ஆம் நூற்றாண்டில் பாண்டியரும், சோழரும் தங்களுக்குள் சண்டையிட்டு வீழ்ந்த பின்னர் தமிழ் நாட்டில் அயலார் ஆதிக்கம் தொடங்கியது. நீண்டகாலம் தமிழர்கள் அடிமை வாழ்வு வாழ நேரிட்டது. அப்போது ஆரியர்கள் தமிழர்களுக்குச் சூட்டிய இழி பெயரான - “சூத்திரர்” என்ற சொல்லையே தாங்களும் தங்களைக் குறிக்க பயன்படுத்திய நிகழ்வுகள் உண்டு! தமிழர்களில் “உயர் சாதி” பிரிவைச் சேர்ந்தோரில் கற்றவர்கள் ஒரு சாரார், தங்களை “சற்சூத்திரர்கள்” என்று சொல்லிக் கொண்டது உண்டு! அதே அடிமை மனநிலையில்தான் தமிழர்கள் தங்களைக் குறிக்க இக்காலகட்டத்தில் ஆரியம் திணித்த “திராவிடர்கள்” என்ற சொல்லைப் பயன்படுத்திக் கொண்டார்கள்.
சமற்கிருதத்தினின்றும் தனித்து இயக்கக் கூடிய மொழி தமிழ் என்பதை 1816-ஆம் ஆண்டே எல்லீசு நிறுவி விட்டார். அதை 1856இல் விளக்கமாக - விரிவாக மெய்ப் பித்துள்ளார் கால்டுவெல். அதற்காக அவரைப் பாராட்டு வோம்! அதே வேளை அவர் தென்னிந்திய மொழிகளின் மூலமொழி தமிழ் என்பதை மாற்றி, “திராவிடம் மூலமொழி” என்று திணித்த ஆய்வியல் அநீதியை வரலாறு மன்னிக்காது! தமக்கு முன்னோடியாய் தென்னிந்திய மொழிகள் ஆய்வில் விளங்கிய எல்லீசு பற்றி கால்டுவெல் தமது ஒப்பிலக்கண நூலில் எதுவும் குறிப்பிடாதது வியப்பாய் உள்ளது.
“மொழி ஞாயிறு” தேவநேயப் பாவாணர் - தமது தமிழ் மொழி வரலாறு நூலில் கால்டுவெல் பங்களிப்பைப் பாராட்டும் அதேவேளை - அவரது தவறுகளைப் பட்டியலிட்டுள்ளார். அப்பட்டியலின் தலைப்பு : “கால்டுவெல் கண்காணியாரின் கடுஞ்சறுக்கல்கள்”.
அதில் முதல் தவறு, “திராவிடம்” என்ற பெயரில் மூலமொழி இருந்ததாகக் குறித்தது. அந்த மூலமொழி தமிழே!
தமிழர்களை உயர் நாகரிகர்களாக மேம்படுத்திய வர்கள் ஆரியர்கள் என்று கால்டுவெல் கூறியிருப்பது தவறு. ஆரியர் தொடர்புக்கு முன் தமிழர்களுக்கு மோட்சம், நரகம், ஆன்மா, பாவம் முதலியவை பற்றி தெரிந்திருக்கவில்லை என்று கூறுவது அடுத்த தவறு.
அடுத்த தவறு, தமிழர்களுக்கு ஆயிரத்திற்கு மேல் எண்ணத் தெரியாது என்று கூறியிருப்பது.
தமிழ் நெடுங்கணக்கு (அகரவரிசை) சமற்கிருத நெடுங்கணக்கைத் தழுவியமைந்தது என்று கால்டுவெல் கூறுகிறார். ஆரிய எழுத்துகளுள் வேண்டியவற்றை எடுத்துக் கொண்டு வேண்டாதவற்றைத் தமிழர்கள் விட்டு விட்டனர் என்று கூறுகிறார். இது தவறு!
அரசன், ஆயிரம், உலகம், கணியம், சேரன், சோழன், பாண்டியன், திரு, நாழி, மனம், மாதம் என்பன வடசொற்கள் என்று கால்டுவெல் கூறுவது தவறு!
மேலும் இலக்கண அடிப்படையில் கால்டுவெல் செய்த தவறுகளையும் பாவாணர் சுட்டிக்காட்டியுள்ளார் (தமிழ் வரலாறு - பாவாணர், பக்கம் 26 - 28).
கால்டுவெல் இல்லையென்றால் - மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை இல்லை, மறைமலையடிகள் இல்லை, அண்ணா இல்லை என்று வைரமுத்து கூறுவது, உணர்ச்சி ஆரவாரம் தவிர உண்மையில்லை!
தொல்காப்பியம், புறம், அகம், காப்பியங்கள், ஆன் மிக இலக்கியங்கள் - தமிழர்களின் அறிவுத்துறை சாதனைகள்! இமயத்தில் வெற்றிக்கொடி ஏற்றி வாழ்ந்த இனம் - தமிழினம்! ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியப் பாண்டியன், ஆரிய மன்னர்களான கனகன் விசயன் ஆகியோரை அடக்கி அவர்கள் தலையில் இமயக் கல்லை ஏற்றி வந்து, கண்ணகிக்குச் சிலை எடுத்த சேரன் செங்குட்டுவன் போன்றோர் தமிழ்ப் பேரரசர்கள்!
“பேர் கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை அர்ச்சித்தால் - போர் கொண்ட மன்னர்க்குப் பொல்லாத நோயாம் - பார் கொண்ட மக்களுக்குப் பஞ்சமும் பிணியு மாம்” என்று எச்சரித்தவர் திருமூலர். “வேத ஆகமங்கள் என்று வீண் வாதம் ஆடாதீர்; சூதாகச் சொன்னதல்லால் உண்மை நிலை தோன்ற உரைக்கவில்லை” என்றார் வள்ளலார்.
தமிழர் மறுமலர்ச்சியின் தொடக்கப் புள்ளி - வள்ளலார்! அவர் தொடங்கிய சாதி, சமய வேறுபாடற்ற சமத்துவ சங்கம் ஒருவகை நிகரமை (சோசலிச)க் கொள்கைக்கு முன்னோடித் திட்டம்!
மறைமலை அடிகளார் 1916இல் தொடங்கிய தனித்தமிழ் இயக்கம் - தமிழில் சமற்கிருத சொற்களை நீக்கி எழுத வேண்டும்; தமிழர் கோயில் மற்றும் குடும்பச் சடங்குகளை பிராமணப் புரோகிதர்களை நீக்கி தமிழ் அறவோரைக் கொண்டு செய்ய வேண்டும் என்ற இலட்சியங்களை முன்வைத்தது. 1930களில் எழுந்த இந்தித் திணிப்பு எதிர்ப்பு எழுச்சி “தமிழ்நாடு தமிழர்க்கே” என்று முழக்கம் கொடுத்தது. தமிழர் என்பதைக் கைவிட்டு, பின்னர் திராவிடர் என்று மாற்றிக் கொண்டவர் பெரியார்.
திராவிடர் என்பதில் கால்டுவெல்லுக்கே கடைசி வரை ஐயுறவு இருந்ததால், தமது ஒப்பிலக்கண நூலுக்கு “திராவிட அல்லது தென்னிந்திய மொழிகளின் ஒப்பிலக்கணம்” (A Comparative Grammar of the Dravidian or South Indian Languages) என்று இரு பெயர் சூட்டினார்.
திராவிடம் என்ற பெயரில் மொழியும் இல்லை; இனமும் இல்லை; நாடும் இல்லை! அப்பெயர் ஆரியம் சூட்டிய திரிபுப் பெயர்!
தமிழே நமக்கு மூலமொழி (Proto Language); தமிழே நமக்கு வளர்ந்த பொது மொழி (Standard Language). தமிழர் என்பதே நமது மரபு இனம் (Race), தமிழர் என்பதே நமது தேசிய இனம் (Nationality).
கவிப்பேரரசு அவர்களே, மல்லாந்து படுத்துக் கொண்டு எச்சில் துப்பினால் அது நம் மார்பில்தான் விழும்; அருள்கூர்ந்து மறுவாசிப்பு செய்யுங்கள்!

Labels:

வெள்ளப் பேரழிவு : தமிழ்நாடு அரசின் புள்ளிவிவரத்தால் கேரளத்தின் பொய் அம்பலம்! பெ. மணியரசன்

Monday, August 27, 2018

வெள்ளப் பேரழிவு : 
தமிழ்நாடு அரசின் புள்ளிவிவரத்தால்
கேரளத்தின் பொய் அம்பலம்!

தோழர் பெ. மணியரசன் 
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம் 

தமிழ்நாடு அரசு முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கி திடீரென்று ஆகத்து 15, 16 நாட்களில் அதிக அளவில் திறந்து விட்டதுதான் கேரளத்தின் வெள்ளப் பேரழிவுக்கு முதன்மைக் காரணம் என்று அம்மாநில அரசு வெளியிலும் உச்ச நீதிமன்றத்திலும் அறிக்கைகள் கொடுத்து வருகிறது. இவ்வாறு தனது தவற்றை மூடி மறைத்து வருகிறது.
தமிழ்நாட்டின் மீது பழிபோடும் கேரளத்தின் பொய்க் கூற்றை தமிழ்நாடு அரசு சரியான புள்ளி விவரங்களுடன் அண்மையில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள எதிர் உறுதி மனு (Counter Affidavit) தகர்த்துள்ளது.
வெள்ளப் பெருக்கும் பேரழிவும் உச்சத்திற்குப் போன ஆகத்து 14 முதல் 19 வரையிலான ஆறு நாட்களில் கேரளம் தனது இடுக்கி அணையிலிருந்தும், இடமலையாறு அணையிலிருந்தும் திறந்துவிட்ட மொத்த நீர் 36 ஆ.மி.க. (டி.எம்.சி.). இதில் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து இதே காலத்தில் திறந்துவிட்ட நீரின் பங்கு 6.65 ஆ.மி.க. மட்டுமே!
இடுக்கி – இடமலையாறு நீர் 29.35 ஆ.மி.க. மிகக் குறைவாக 6 நாட்களில் திறந்துவிட்ட 6.65 ஆ.மி.க. தண்ணீர்தான் இவ்வளவு பெரிய வெள்ளப் பேரழிவுக்குக் காரணம் என்று கேரள அரசு சொல்வது எவ்வளவு பெரிய பொய்!
ஆகத்து 15 அன்று 12 ஆயிரம் கன அடிதான் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திறந்துவிடப்பட்டுள்ளது. திடீரென்று பெருவெள்ளம் திறக்கப்படவில்லை. அடுத்து, 16.08.2018 அன்று 24 ஆயிரம் கன அடி திறந்துவிடப்பட்டுள்ளது. அடுத்த நாட்களில் திறந்துவிடும் தண்ணீரின் அளவு மிகவும் குறைந்துவிட்டது.
முல்லைப் பெரியாறு அணையை இடித்துத் தரை மட்டம் ஆக்க வேண்டுமென்ற கேரளத்தின் சதித்திட்டம் தான் மேற்படிப் பொய்க் கூற்றில் பல் இளிக்கிறது!

Labels:

வெள்ளப் பேரழிவு காலத்திலும் தமிழ்நாட்டுக்கு எதிராக கேரளா சதித்திட்டம் தீட்டுகிறது! பெ. மணியரசன் கண்டனம்!

Friday, August 24, 2018


வெள்ளப் பேரழிவு காலத்திலும்
தமிழ்நாட்டுக்கு எதிராக
கேரளா சதித்திட்டம் தீட்டுகிறது!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
தோழர் பெ. மணியரசன் கண்டனம்!


கேரளத்தில் பெருவெள்ளம் ஏற்படுத்தியுள்ள பேரழிவால், அதன் மீது ஏற்பட்டிருக்கும் அனுதாபத்தைப் பயன்படுத்தி, முல்லைப் பெரியாறு அணையில் நீர்த் தேக்கும் உயரத்தை 142 அடியிலிருந்து 139 அடியாகக் குறைக்கவும், அவ்வணையில் தண்ணீர் திறந்துவிடும் அதிகாரத்தை புதியதொரு மேலாண்மைக் குழுவிடம் ஒப்படைக்கவும் கேரள அரசு குறுக்குவழியில் சிந்தித்து செயல்படுவது கண்டனத்திற்குரியது. 

கேரளத்தைச் சேர்ந்த இரசல் இராய் என்பவர் முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீர் தேக்கும் உயரத்தைக் குறைத்தால்தான் கேரளம் வெள்ள அபாயத்திலிருந்து தப்பிக்க முடியும் என்று உள்நோக்கத்துடன் கூடிய மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். 

அதன் விசாரணையின் போக்கில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தமிழ்நாட்டுத் தரப்பின் வாதத்தைக் கேட்பதற்கு முன்பாகவே, “தமிழ்நாடு அரசு மனச்சான்றுக்கு அஞ்சி நீர் மட்டத்தைக் குறைத்துக் கொள்ள முடிவு செய்ய வேண்டும்” என்று அறிவுரை கூறினார். அப்பொழுது காணொலி மூலம் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் நான் கொடுத்த அறிக்கையில், “காவிரியில் தமிழ்நாட்டின் சட்டப்படியான உரிமையை வெட்டிக் குறைத்து – குறைப்பிரசவம் போல் தீர்ப்பு வழங்கிய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இப்போது முல்லைப் பெரியாறு அணை உரிமையிலும் கை வைக்கிறாரே!” என்று கவலை தெரிவித்திருந்தேன். 

அடுத்து, நடுவண் நீர்வளத்துறை தலைவர் யு.பி. சிங் தலைமையில் உச்ச நீதிமன்றம் அமைத்த குழு, 139.99 அடிக்கு மேல் தண்ணீர் தேக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் பரிந்துரை வழங்கியுள்ள செய்தி இன்று வந்துள்ளது. இதே யு.பி. சிங்தான், உச்ச நீதிமன்றத்தின் காவிரித் தீர்ப்பு கூறிய “ஒரு செயல்திட்டம்” என்பது “மேலாண்மை ஆணையத்தை” குறிக்காது என்று முதன் முதலில் “விளக்கம்” கூறியவர் என்பது கவனத்திற்குரியது! தமிழ்நாட்டிற்கெதிரான அதே மனநிலையில்தான் முல்லைப் பெரியாறு அணை தண்ணீர் உயரம் தொடர்பாகவும் அவர் சிந்தித்திருக்கிறார் என்பது தெரிகிறது. 

உச்ச நீதிமன்றத்தில் நிலவும் இச்சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு, கேரள அரசு நேற்று (23.08.2018) அபாண்டமான ஒரு பதில் மனுவை தாக்கல் செய்துள்ளது. அதில், கேரளத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மனித உயிர்களும், பொருட்களும் சேதமானதற்கு முதன்மையான காரணம் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழ்நாடு அரசு திடீரென்று திறந்துவிட்ட பெரு வெள்ளம் தான் என்று கூறியுள்ளது. 

அவர்களின் கூற்றுக்கு சான்றில்லை என்றாலும், அவர்கள் வாதத்தில் கூறியுள்ளதை ஏற்றுக் கொண்டால் கூட ஆகத்து 15 அன்று 9,000 கன அடி மட்டுமே முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டிருக்கிறது. ஆனால், கேரளத்தின் வெள்ளப்பேரழிவு ஆகத்து 8ஆம் நாள் வாக்கிலேயே தொடங்கிவிட்டது. 

முல்லைப் பெரியாறு அணையில் திறந்து விட்ட 9,000 கன அடி நீர் இடுக்கி அணைக்குச் சென்று, அதன் மதகுகள் வழியே வெளியேற வேண்டும். 70.5 ஆ.மி.க. (டி.எம்.சி.) கொள்ளளவு கொண்ட இடுக்கி அணையின் வடிகாலுக்கு 9,000 கன அடி நீர் அபாயமான அளவா? 

கர்நாடக அரசு முன் கூட்டியே தெரிவிக்காமல், திடீர் திடீரென்று 2 இலட்சம் கன அடி – இரண்டரை இலட்சம் கன அடி என்று காவிரியில் தண்ணீர் திறந்து விடுகிறது. அதற்காகக் கர்நாடக அரசைத் தமிழ்நாடு அரசு குற்றம் சாட்டவில்லை! 

அடுத்ததாக, 21,450 கன அடி தண்ணீர் திறந்து விட்டதாகச் சொல்கிறார்கள். இந்தத் தண்ணீர்தான் இவ்வளவு பேரழிவிற்குக் காரணமா? இடுக்கி அணை உட்பட 80 நீர்த் தேக்கங்களிலிருந்து கேரள அரசு தண்ணீர் திறந்துவிட்டிருக்கிறது. இந்த உண்மையை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தக்கவாறு எடுத்துக் கூறியுள்ளார். 

ஏற்கெனவே கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகத்து 16 அன்று, முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீர் தேக்கும் உயரத்தை142 அடியிலிருந்து 139 அடியாகக் குறைக்க வலியுறுத்தி எழுதிய கடிதத்திற்கு, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எழுதிய விடை மடலில், இரண்டு துயரச் செய்திகளைக் குறிப்பிட்டிருந்தார். 

ஒன்று, அணைக்கு முன்பாக உள்ள நீர் வரத்துப் பகுதியில் நீர் வரும் அளவு எடுப்பதற்கு தமிழ்நாட்டு அதிகாரிகளை கேரள அரசு அனுமதிக்கவில்லை என்பது. இன்னொன்று, பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு அணைப் பகுதியில் ஏற்பட்ட மின் கசிவால் யானை ஒன்று இறந்ததை சாக்காக வைத்துக் கொண்டு, முல்லைப் பெரியாறு அணைக்கு அன்று துண்டித்த மின் இணைப்பை இன்றுவரை கொடுக்க மறுப்பது. இவ்வளவு பெரிய முல்லைப் பெரியாறு அணையில் அனைத்துப் பணிகளும் மின்னாக்கி (ஜெனரேட்டர்) மூலம்தான் செயல்படுகின்றன என்பது வேதனை அல்லவா! 

மின் இணைப்புக் கட்டுமானத்திற்காக கேரள அரசுக்கு தமிழ்நாடு அரசு 1 கோடியே 65 இலட்சம் ரூபாய் கொடுத்துவிட்ட நிலையிலும், மின் இணைப்பு கொடுக்க இதுவரை எந்த ஏற்பாடும் செய்யவில்லை என்று தமிழ்நாடு முதலமைச்சர் சொல்லியிருந்தார். 

இன்று (24.08.2018) உச்ச நீதிமன்றத்தில், தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் முல்லைப் பெரியாறு அணையின் எந்தப் பகுதியையும் செப்பனிட்டு வலுப்படுத்த கட்டுமானப் பொருட்களை எடுத்துச் செல்ல கேரள அரசு அனுமதி மறுக்கிறது என்ற உண்மையைக் கூறியுள்ளது. 

அத்துடன், கேரள அரசு கெட்ட நோக்கத்துடன் சதித்திட்டம் தீட்டுவதுபோல் முல்லைப் பெரியாறு அணை திறப்பினால்தான் கேரளத்திற்கு இவ்வளவு பெரிய வெள்ளமும், இவ்வளவு பேரழிவும் ஏற்பட்டது என்று குற்றம்சாட்டுகிறது என்று தமிழ்நாடு அரசின் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது. 

ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசமைப்பு ஆயம் 2014இல் வழங்கிய தீர்ப்பில், முதல் கட்டமாக முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதனை மூன்று நீதிபதிகள் கொண்ட ஆயத்தின் மூலம் மாற்றிவிடலாம் என்று கேரள அரசு முனைகிறது. இதில் வெற்றியடையா விட்டால், கேரள அரசு புதிய அரசமைப்பு ஆயம் கோரவும் கூடும்! 

கேரள அரசின் சதித்திட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு அரசு தக்க முறையில் எதிர்வினையாற்றி வருவது வரவேற்கத்தக்கது! அதேவேளை, தமிழ்நாடு அரசு தொடர்ந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நடைமுறையில் உள்ள இந்த வழக்கின் ஊடாக, முல்லைப் பெரியாறு அணையின் சிற்றணைப் பகுதியில் அணையை வலுப்படுத்துவதற்குரிய கட்டுமானப் பணிகளை செய்வதற்கு புதிய ஆணை ஒன்றைப் பெற்றாக வேண்டும். கேரள அரசு முல்லைப் பெரியாறு அணைக்கு மின் இணைப்பு (பணத்திற்குத்தான்) கொடுக்க வேண்டும் என்ற ஆணையையும் உச்ச நீதிமன்றத்தில் பெற வேண்டும். 

நடுவண் நீர்வளத்துறைத் தலைவரின் தலைமையில் புதிய கண்காணிப்புக் குழு அமைத்து, அது தண்ணீரைத் திறந்து மூடும் அதிகாரத்தைப் பெற வேண்டும் என்று கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் வைத்துள்ள கோரிக்கையை தமிழ்நாடு அரசு ஒருபோதும் ஏற்கக்கூடாது! 06.09.2018 அன்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்போது, தகுந்த வழக்கறிஞர்களை வைத்து, கேரளத்தின் சதித்திட்டங்களை முறியடிக்க தமிழ்நாடு அரசு எல்லா முயற்சிகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். 

Labels:

தோழர் திருமுருகன் காந்தி கைது : தமிழ்நாடு அரசின் சனநாயகப் பறிப்பு தீவிரமாகிறது! பெ. மணியரசன் கண்டனம்!

Friday, August 10, 2018


தோழர் திருமுருகன் காந்தி கைது :
தமிழ்நாடு அரசின் சனநாயகப் பறிப்பு தீவிரமாகிறது!


தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
தோழர் பெ. மணியரசன் கண்டனம்! 




மே பதினேழு இயக்கத் தலைமை ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்களை நேற்று (09.08.2018) பெங்களுரு வானூர்தி நிலையத்தில், தமிழ்நாடு காவல்துறையினர் கைது செய்து, சிறையிலடைக்க சென்னை கொண்டு வந்திருப்பது முற்றிலும் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கும், இந்தியக் குற்றவியல் மற்றும் தண்டனைச் சட்டங்களுக்கும் எதிரான செயலாகும்! இச்செயல் சனநாயக விரோதமானது மட்டுமல்ல, தமிழின உரிமைகளுக்கும் எதிரானது! 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அறப்போராட்டம் நடத்திய மக்கள் மீது மனிதவேட்டை நடத்துவது போல், காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தி 15 பேரை சுட்டுக் கொன்றும், சற்றொப்ப 80 பேருக்கு படுகாயங்களை உண்டாக்கியும் தமிழ்நாடு காவல்துறை வன்முறை வெறியாட்டம் நடத்தியது. இந்த மனித உரிமை மீறலையும், சென்னை – சேலம் எட்டுவழிச் சாலைத் திட்டத்துக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்தோரைக் கைது செய்த தமிழ்நாடு அரசின் சனநாயக விரோதப் போக்கையும் ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் தோழர் திருமுருகன் காந்தி எடுத்துக்கூறி, நீதிகேட்டதுதான் அவர் செய்த “குற்றம்” ! 

ஐ.நா. மன்றத்தின் சட்டதிட்டங்கள்படி ஒரு நாட்டில் நடக்கும் மனித உரிமை மீறல்களை அந்நாட்டு மக்கள் வெளிப்படுத்துவதற்கு மனித உரிமை மன்றம் வாய்ப்பளிக்கிறது. ஐ.நா. மன்றத்தின் இச்சட்டம் இந்திய அரசு ஏற்றுக் கொண்ட சட்டமாகும். இச்சட்டத்தின்படிதான் திருமுருகன் காந்தி பேசியிருக்கிறார். திருமுருகன் காந்தியின் மேற்படி உரையை மே பதினேழு இயக்கத்தினர் தங்களின் முகநூலில் வெளியிட்டார்கள் என்றும், அதைப் பார்த்த தமிழ்நாட்டைச் சேர்ந்த அ.இ.அ.தி.மு.க.வினர் சென்னை காவல்துறையில் புகார் கொடுத்தார்கள் என்றும், அந்தப் புகாரின் அடிப்படையில் திருமுருகன் காந்தியைக் கைது செய்திருப்பதாகவும் காவல்துறை கூறுகிறது. 

அண்ணா தி.மு.க.வினர் புகார் அளித்திருப்பதால், திருமுருகன் காந்தி பேச்சு சட்டம் ஒழுங்குப் பிரச்சினையை உருவாக்கும் என்று கருதி, அவரைக் கைது செய்திருப்பதாகக் கூறுகிறார்கள். திருமுருகன் காந்தி பேச்சால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை எழும் என்று கூறும் காரணம், எவ்வளவு போலியானது – புனைவானது என்பது எல்லோருக்கும் புரியும்! அவர் ஐ.நா. அவையில் பேசிவிட்டு வந்த, இந்த இடைப்பட்ட ஒரு மாத காலத்தில் அவரால் எந்த சட்டம் ஒழுங்குப் பிரச்சினையும் எழவில்லை! இது ஒரு அடிப்படையற்ற கற்பனை என்பதற்கு இதுவே சான்று! 

தமிழ்நாடு அரசின் இந்தப் புதிய போக்கை ஏற்றுக் கொண்டால், யார் வேண்டுமானால் யார் மீதும் பொய் புகார் கொடுக்கலாம், அந்த அடிப்படையில் தமிழ்நாடு காவல்துறையினர் அவர்களைக் கைது செய்யும் என்ற நிலை ஏற்படும்! 

தமிழ்நாடு அரசு நடுவண் அரசின் அறிவுறுத்தலோடு தொடர்ந்து தமிழ்நாட்டில் சனநாயக உரிமைகளையும் மனித உரிமைகளையும் பறித்து வருகிறது. அதன் ஒரு பகுதிதான் திருமுருகன் காந்தி கைது! இச்செயல்களால் தமிழ்நாடு அரசு, மேலும் மேலும் தமிழ்நாட்டு மக்களிடமிருந்து அந்நியப்பட்டு வருகிறது என்ற உண்மையை ஆட்சியாளர்கள் உணர வேண்டும். 

சனநாயக உரிமைகள், மனித உரிமைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய தமிழர்களின் குடிமை உரிமைகள் ஆகியவற்றை தமிழ்நாடு அரசு தொடர்ந்து பறித்து வருகிறது. பணயக் கைதிகள் போல், மக்களை தன் ஏவலுக்கும் கண்காணிப்புக்கும் கட்டுப்பட்டவர்களாக வைத்துக் கொள்ள தமிழ்நாடு அரசு முனைகிறது. 

எனவே, மக்கள் உரிமையில் அக்கறையுள்ள அனைவரும் சனநாயக உரிமைகளை மீட்கவும், தோழர் திருமுருகன் காந்தியை விடுதலை செய்ய வலியுறுத்தியும் மக்கள் திரள் அறப்போராட்டங்கள் நடத்த வேண்டிய தேவை உள்ளது. 

தமிழ்நாடு அரசு, தனது சனநாயக விரோத நடவடிக்கைகளைக் கைவிட வேண்டுமென்றும், தோழர் திருமுருகன் காந்தியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். 

Labels:

இந்தியத்தேசியத்திற்குள் தமிழ்த்தேசியம் இருக்கிறதா? அர்ஜூன் சம்பத் கட்டுரைக்கு மறுமொழி தோழர் பெ. மணியரசன்

Wednesday, August 8, 2018


இந்தியத்தேசியத்திற்குள்
தமிழ்த்தேசியம் இருக்கிறதா?

அர்ஜூன் சம்பத் கட்டுரைக்கு மறுமொழி

தோழர் பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.


“தினமணி” நாளிதழில் 01.08.2018 அன்று திரு. அர்ஜூன் சம்பத் எழுதிய “தமிழ்த்தேசியமும் இந்தியத்தேசியமும்” கட்டுரையில் தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், காப்பிய இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள் ஆகியவற்றில் “தமிழ்நாடு” என மொழியின் பெயரால் “ஒரு தனிநாடு ஒரு தனித்தேசிய இனம் இருந்ததாகக் குறிப்பு இல்லை” என்று கூறியுள்ளார். “வெறும் மொழியின் அடிப்படையில் மட்டும் எந்தத் தேசிய இனமும் அடையாளம் காணப்படுவதில்லை” என்றும் எழுதியுள்ளார். 

அர்ஜூன் சம்பத் தாம் கூறும் இந்துத்தேசியம் அல்லது இந்தியத்தேசியம் இரண்டிற்கும் இலக்கியம் மற்றும் கல்வெட்டுச் சான்றுகள் எதுவும் தரவில்லையே ஏன்? ஏனெனில், இந்து என்பதும், இந்தியா என்பதும் மிகவும் பிற்காலத்தில் மேற்கத்தியர் சூட்டிய பெயர்கள்! தமிழ், சமற்கிருதம், இந்தி உள்ளிட்ட எந்த மொழியிலும் இருநூறு ஆண்டுகளுக்கு முன் இந்து என்ற மதப்பெயரும், இந்தியா என்ற நாட்டுப் பெயரும் கூறப்படவில்லை. கூறப்படாததற்குக் காரணம் இந்து என்ற பெயரில் மதமோ, இந்தியா என்ற பெயரில் நாடோ, இந்தியர் என்ற பெயரில் இனமோ 200 ஆண்டுகளுக்கு முன் இல்லாததுதான்! 

இதோ காலஞ்சென்ற பெரியவர் காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திரர் கூறுகிறார் :

“நமக்குள் சைவர்கள், வைஷ்ணவர்கள் என்று வேறாகச் சொல்லிக் கொண்டிருந்தாலும் வெள்ளைக்காரன் நமக்கு ஹிந்துக்கள் என்று பொதுப் பெயர் வைத்தானோ நாம் பிழைத்தோம். அவன் வைத்த பெயர் நம்மைக் காப்பாற்றியது”.
- தெய்வத்தின் குரல், பாகம் – 1, பக்கம் 267. 

மேலும் சொல்கிறார் :

“எத்தனையோ கிருத்திருமங்கள் செய்து பாகிஸ்தானைப் பிரித்த அதே வெள்ளைக்காரன்தான், எத்தனையோ யுக்திகள் செய்து நம்மை ஆரியர் திராவிடர் என்றெல்லாம் பேதப்படுத்திய அதே வெள்ளைக்காரன்தான் தன்னையும் அறியாமல் நமக்கு ‘ஹிந்து’ என்று பொதுப் பெயரைத் தந்து, இன்று இந்தியதேசம் என்று ஒன்று இருக்கும்படியான மகாபெரிய நன்மையைச் செய்திருக்கிறான்”.
- அதே நூல், அதே பக்கம்.

பழங்காலத்தில் “பாரததேசம்” என்ற பெயரில் இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் ஒரு தேசமாக இருந்ததாக ஒரு சாரார் சொல்லி வருகிறார்கள். அதற்கான இதிகாசச்சான்று, புராணச்சான்று, வரலாற்றுச் சான்று எதுவுமில்லை! 

இன்று இந்தியா என்று சொல்லப்படும் நிலப்பகுதியில் பழங்காலத்தில் 56 தேசங்கள் இருந்ததாக “மகாபாராதம்” கூறுகின்றது. 

1918இல் வெளிவந்த, “புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள்” என்ற நூலில் அதன் ஆசிரியர் பி.வி. ஜகதீச ஐயர், 56 தேசங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார். அதில், குருதேசம், சூரசேனதேசம் என்று தொடங்கி 56 ஆவது தேசமாக கர்னாடக தேசம் குறிப்பிடப்படுகிறது. அந்த 56இல் சீனதேசம், பாஞ்சாலதேசம், பாரசீக தேசம், காந்தார தேசம், காம்போஜ தேசம், சோழ தேசம், பாண்டிய தேசம், கேரள தேசம் போன்றவை இருக்கின்றன. ஆனால், பாரததேசம் என்பது இல்லை! 

வெள்ளைக்காரக் கிழக்கிந்திய கம்பெனி – தான் கைப்பற்றிய தனித்தனி நாடுகளை ஒற்றை நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர முதல் முதலாக 1773-இல் இந்தியா ஒழுங்குமுறைச் சட்டம் (Regulating Act of 1773) இயற்றியது. அதற்கு முன் இந்தியா என்ற பெயரிலோ அல்லது பாரதம் என்ற பெயரிலோ இந்த நிலப்பகுதி ஒரே நாடாக – ஒரே தேசமாக இருந்ததே இல்லை! வெள்ளைக்காரர் உள்ளிட்ட மேற்கத்தியர் சிந்து ஆற்றின் பெயரை அடையாளமாகக் கொண்டுதான் இந்தியா, இந்து என்ற பெயர்களை உருவாக்கினார்கள். 

இலக்கியங்களில் தமிழ்நாடு
---------------------------------------------
தமிழ்நாடு என மொழியின் பெயரில் ஒரு நாடு, ஒரு தேசிய இனம் இருந்ததாக இலக்கியக் குறிப்பு இல்லை என்கிறார் அர்ஜூன் சம்பத். இதோ இருந்ததற்கான சான்றுகள் :

“வையக வரைப்பில் தமிழகம் கேட்பப்…” – புறநானூறு, 168.

“தமிழகப் படுத்த விமிழிசை முரசின்..” – அகநானூறு, 227.

“தண்டமிழ் வேலித் தமிழ்நாட்டகம் எல்லாம்..” – பரிபாடல், 410.

“இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய..” – சிலப்பதிகாரம், காட்சிக்காதை, 165.

“தென் தமிழ்நாட்டு அதன் பொதியில்..” – கம்பராமாயணம், சுக்ரீவன் கூற்று.

“தமிழ்நாட்டில் போனார் ஞானத் தலைவர்” – சேக்கிழார், பெரிய புராணம், 21 திருநாவுக்கரசு நாயனார் புராணம் பகுதி, பாடல் எண் – 289.

“அரும்பெறல் தமிழ்நாடுற்ற தீங்கினுக்கு” – பெரிய புராணம், திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் புராணம் பகுதி, பாடல் எண் – 604.

தொல்காப்பியத்தில் “செப்பும் வினாவும் வழாஅல் ஓம்பல்” என்பது 496ஆம் நூற்பா. வினாவும் அதற்கான விடையும் தவறில்லாமல் – குழப்பமில்லாமல் இருக்க வேண்டும் என்பது இதன் பொருள். இதற்கு உரை எழுதிய இளம்பூரணர் குழப்பமில்லாத வினாவுக்கும் விடைக்கும் ஓர் எடுத்துக்காட்டு கூறினார். 

“எடுத்துக்காட்டாக, நும்நாடு யாது என்றால் தமிழ்நாடு என்றல்” என்று கூறினார். 

உன் நாடு எது என்றால் சோழ நாடு, பாண்டிய நாடு என்று சொல்வது குழப்பமானது. அப்பெயர்கள் அரச பரம்பரை சார்ந்த ஆட்சிப் பகுதிகள். அவை நாடன்று; தமிழ்நாட்டில் பல்வேறு அரசர்களின் ஆட்சி இருக்கிறது என்ற பொருளில்தான் இந்த எடுத்துக்காட்டை இளம்பூரணர் கூறுகிறார். 

தமிழர் என்ற இனப்பெயர் சங்க இலக்கியம் தொட்டு, பல்வேறு இலக்கியங்களில் காணப்படுகிறது. 

“தமிழ் தலை மயங்கிய தலையாலங்கானத்து” – புறம், 19.

தலையாலங்கானம் என்ற இடத்தில் பாண்டியன் நெடுஞ்செழியன் சேர, சோழ – தமிழ்ப் படைகளை வென்றான். இரு தரப்பிலும் தமிழர்கள் போரிட்டனர். எனவே யார் எந்தப் பக்கம் போரிடுகின்றனர் என்பது குழப்பமாயிருந்தது. இங்கு தமிழ் என்றது தமிழரைக் குறித்தது. 

“செறிகழல் வேந்தன் தென்தமிழ் ஆற்றல்
அறியாது மலைந்த ஆரிய மன்னர்” என்று “தமிழ்” என்பதைத் தமிழர் என்ற பொருளில் கூறினார் சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள். 

அதன்பிறகு – வந்த அப்பர் (திருநாவுக்கரசர்) “ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்” என்று ஆரியரும், தமிழரும் வெவ்வேறு இரு இனத்தார் என்பதைத் தெளிவாகக் கூறினார். பூதத்தாழ்வார் “இருந்ததமிழ் நன்மாலை இணையடிக்கே சொன்னேன், பெருந்தமிழன் நல்லேன் பெரிது” என்று தன்னைப் பெருந்தமிழனாகக் கூறி பெருமைப் பட்டார். 

எனவே இலக்கியங்களில் தமிழர் என்ற இனம் குறிக்கப்படவில்லை என்று அர்ஜூன் சம்பத் கூறுவது சரியன்று! 

தேசிய இன வரையறை
--------------------------------------
“வெறும் மொழியின் அடிப்படையில் மட்டும் தேசிய இனம் அமையாது” என்கிறார் அர்ஜூன் சம்பத். ஆனால், இவர் சார்ந்துள்ள இந்துத்துவா அமைப்பு இல்லாத இந்தியத்தேசிய இனத்திற்கு இந்தி மற்றும் சமற்கிருதம் இரண்டையும் ஏற்றாக வேண்டும் என்று நிபந்தனை போடுகிறது. இனம் (Race), தேசிய இனம் (Nationality) ஆகியவை உருவாவதற்கான முதன்மைக் கூறு தாய்மொழி! கிரேக்கர், ஆங்கிலேயர், பிரஞ்சியர், சப்பானியர் போன்ற தேசிய இனங்கள் அவரவர் தாய்மொழியை அடிப்படையாகக் கொண்டுதான் உருவாகின. அர்ஜூன் சம்பத் சொல்வதுபோல், மொழி வெறும் கருவியன்று! 

தாய்மொழி, தாயகம், பண்பாடு, பொருளியல் வாழ்வு ஆகியவற்றில் பொதுத்தன்மை கொண்டு, வரலாற்றில் நிலைத்து வாழ்பவர்கள் “நாம் ஓரினம்” என்ற மனப்பாங்கு வளரப் பெறுகின்றனர். இதற்கு முன் நிபந்தனையாக இனக்குழு (Ethinicity) மரபு உருவாகிறது. இனக்குழு மரபிலிருந்து ஒரு மூல மொழி தொடர்கிறது. தமிழர்களுக்கு மூலமொழியாகவும் (Dialect) வளர்ச்சியடைந்த பொது மொழியாகவும் (Standard Language) இருப்பது தமிழே!

தேசிய இன அடிப்படையில் இறையாண்மையுடன் தனித்தனி தேசங்கள் அமைவது 18 – 19ஆம் நூற்றாண்டில் தொடங்கியது. அதனால், தேசிய இன உணர்வே அதன்பிறகுதான் உருவானது என்று கொள்ளக் கூடாது. யூதர்களுக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இன உணர்வு இருந்தது. தமிழர்களுக்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இன உணர்வு இருந்ததால்தான், இன அடிப்படையிலான தாயக எல்லையாக வடவேங்கடம் குமரிமுனை இடையிலுள்ள தமிழ் பேசும் பகுதியை தொல்காப்பியம் பாயிரத்தில் பணம்பாரனார் கூறினார். அதேபோல், தமிழகம் – தமிழ்நாடு – தமிழர் என்ற இன உணர்வு வெளிப்பாடுகள் சங்க இலக்கியத்திலிருந்து தமிழர்களுக்குத் தொடர்கிறது. 

மதம் ஒரு தேசியத்திற்கோ அல்லது தேசிய இனத்திற்கோ அடிப்படைக் கூறாக அமைவதில்லை. மதம் – ஒரு மெய்யியல் என்ற அளவில் இனம் கடந்து, மொழி கடந்து பரவும். ஐரோப்பா ஒரே கிறித்துவ தேசமாக அமையவில்லை. அரபு நாடுகள் ஒரே இசுலாமிய தேசமாக அமையவில்லை. மதம் ஒன்றாக இருந்தாலும், மொழி இன அடிப்படையில் அவை தனித்தனி நாடுகளாக இருக்கின்றன. அரசமைப்புச் சட்டத்திலேயே இந்து மதத்திற்கு முதன்மை கொடுத்த இந்து நாடு - நேப்பாளம்! இப்போது புதிதாக வந்துள்ள அரசமைப்புச் சட்டத்தில்தான் அப்பிரிவு நீக்கப்பட்டுள்ளது. ஆனால், “இந்துதேசம்” என்று இந்தியாவை அழைக்க விரும்புவோர் நேப்பாளமும் இந்தியாவும் தனித்தனி நாடாக இருப்பதை உணர வேண்டும். 

இந்திய அரசமைப்புச் சட்டம் இந்தியாவை ஒரு தேசம் (Nation) என்று கூறவில்லை. அரசுகளின் ஒன்றியம் (Union of States) என்றுதான் குறிப்பிடுகிறது (உறுப்பு – 1). ‘இந்தியன்’ (Indian) என்ற பெயரில் ஒரு தேசிய இனம் இருப்பதாக இந்திய அரசமைப்புச் சட்டம் கூறவில்லை. இந்தியக் குடியுரிமை (Citizenship) பற்றி மட்டுமே அது வரையறை செய்கிறது. 

இல்லாத இந்திய தேசியத்தை – இந்து தேசியமாக மாற்றிக் கொண்டு, தமிழ்த்தேசிய இனம் போன்ற இயற்கையான இனங்களின் மொழி, பண்பாடு, அரசுரிமைகள் முதலியவற்றை மறுக்கக் கூடாது. இந்தியா ஒரு நிர்வாகக் கட்டமைப்பு; அதில் பல தேசிய இனங்கள் இருக்கின்றன. 

(பின்குறிப்பு : அர்ஜூன் சம்பத் கட்டுரைக்கு மறுமொழியாக, அக்கட்டுரை வந்த மறுநாளே (02.08.2018) இக்கட்டுரை தினமணிக்கு அனுப்பப்பட்டது. “தினமணி” இதழ் இக்கட்டுரையை வெளியிடாததால், இன்று (09.08.2018) இங்கு வெளியிடப்படுகிறது).

Labels:

வாக்காளர்களுக்கு அதிகமாகக் கையூட்டு தருவது வளர்ச்சிக்கான சான்றாம்! – நியூஸ்18 வாதம்! பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை!

Tuesday, August 7, 2018
வாக்காளர்களுக்கு அதிகமாகக் கையூட்டு
தருவது வளர்ச்சிக்கான சான்றாம்! 
– நியூஸ்18 வாதம்!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
தோழர் பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை!

நேற்று (06.08.2018) மாலை கலைஞர் கருணாநிதி அவர்களின் உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்ட நிலையில் தொலைக்காட்சிகள் அது தொடர்பான நேரலைகள் – கருத்துரையாடல்கள் முதலியவற்றை வெளியிட்டன. நியூஸ்18 – தமிழ் தொலைக்காட்சி, திரு. குணசேகரன் அவர்களை நெறியாளராகக் கொண்டு ஒரு கலந்துரையாடலை நேரலை செய்தது. அதில், திரு. சுமந்த் சி. இராமனும் மற்றும் ஒருவரும் (அவர் பெயர் நினைவில் இல்லை) கலந்து கொண்டனர்.
தி.மு.க. - அ.தி.மு.க. ஆட்சியின் 50 ஆண்டுகளில் மற்ற பல மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்றும் வாக்காளர்களுக்கு அதிகமாகப் பணம் கொடுப்பது கூட பொருளாதார வளர்ச்சியின் பக்க விளைவுதான் என்றும் சுமந்த் சி. இராமனும் மற்றவரும் கூறினர். பணமதிப்பு குறைக்கப்பட்ட நேரத்தில் கண்டெய்னர் சரக்குந்துகளில் 89 கோடி ரூபாய் கடத்தப்பட்டது கூட பணமதிப்பு குறைப்பால் தமிழ்நாட்டுப் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை என்பதற்கான அடையாளம் தான் என்று மேலும் இருவரும் கூறினர். இவ்விருவரின் இக்கருத்தை ஏற்றுக் கொண்ட நெறியாளர் திரு. குணசேகரன், இந்த வாதத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் ஓர் உவமை கூறினார்.
ஆலைக்கழிவுகளால் பாதிப்பு வருகிறது, ஆனால் அது தொழில் வளர்ச்சியின் பக்க விளைவு அல்லவா என்றார்.
உலகில் எந்தப் பொருளியல் வல்லுநரும் பொருளாதார வளர்ச்சிக்கான அளவு கோலாகக் கையூட்டுத் தொகையின் அளவு அதிகரிப்பைக் கூறியிருக்க மாட்டார்கள். தமிழ்நாட்டைவிட பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ள பிரிட்டன், பிரான்சு போன்ற நாடுகளில் தமிழ்நாட்டைப் போல் அதிகமாக வாக்காளர்ககுக் கையூட்டுக் கொடுக்கிறார்களா? இல்லை!
பாலியல் தொழில் வளர்ச்சியடைந்து, அதில் கட்டண உயர்வு ஏற்பட்டால், அதுவும் தமிழ்நாட்டுப் பொருளாதார வளர்ச்சிக்கு தி.மு.க. – அ.தி.மு.க. ஆட்சிகள் நிகழ்த்திய சாதனைதான் என்பார்களோ இவர்கள்!
கலைஞர் கருணாநிதியின் ஆட்சியில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பது நமது வாதமன்று! வெள்ளையராட்சியில் கூட அணைக் கட்டுகள், தொழிற்சாலைகள், சாலைகள், தொடர்வண்டிகள், கல்விக் கூடங்கள் எனப் புதிய முன்னேற்றங்கள் வரத்தான் செய்தன.
கலைஞர் கருணாநிதி அவர்கள் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ள நிலையில், அவர் ஆட்சி பற்றி அக்குவேறு ஆணி வேறாக விமர்சிப்பது தேவை இல்லை.
பொதுவாகத் தி.மு.க. – அ.தி.மு.க. ஆட்சி காலத்தில்தான் அரசியல் சீரழிவுகள் அதிகமாக ஏற்பட்டன. ஆட்சியாளர்கள், அதிகாரிகள் கழகங்களின் பொறுப்பாளர்கள் ஆகியோர் வாங்கும் கையூட்டுத் தொகை கற்பனைக் கெட்டாத வடிவங்களில், அளவுகளில் வளர்ந்தது.
தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் நடத்திக் கொண்ட தனிநபர் பகை அரசியல் இந்தியாவிலேயே எங்கும் இல்லாத அளவிற்கு கேவலமானது! சுக துக்கங்களில் கலந்து கொள்வதுகூட குற்றம் என்று ஆக்கப்பட்டது. சட்டப்பேரவையில் இரு கழகங்களின் தலைவர்களும் ஒன்றாக அமர்ந்து விவாதிக்க முடியாத அவலம்!
கச்சத்தீவு பறிபோனது, மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க முடியாமல் போனது, காவிரி உரிமை போனது, பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக்காடாகத் தமிழ்நாட்டை மாற்றியது போன்ற பேரிழப்புகளும், பேரவலங்களும் கழகங்களின் ஆட்சியில்தான் ஏற்பட்டன.
கல்வித் தகுதி பெற்று தமிழ்நாட்டு வேலை வாய்ப்பு அலுவலகங்களில் வேலை தேடிப் பதிவு செய்துள்ள இளையோர் எண்ணிக்கை 90 இலட்சத்திற்கு மேல்! உரிய கல்வியும் உயர்கல்வியும் கற்றவர்கள் உரிய ஊதியம் இல்லாமல் மிகக் குறைவான அத்துக்கூலியில் கல்வி நிலையம் தொடங்கி தொழிற்சாலைகள் வரை தமிழ்நாட்டில் ஏராளமானோர் பணிபுரிகிறார்கள்.
இவைதாம் தி.மு.க. – அ.தி.மு.க. ஆட்சியின் “சாதனைகள்” !
வடமாநிலங்களைவிடத் தமிழ்நாட்டுப் பொருளாதாரம் வளர்ந்திருக்கிறது என்று இம்மூவரும் கலந்துரையாடலில் கூறினர். கடந்த ஐயாயிரம் ஆண்டுகளில் எந்தக் காலத்தில் வடமாநிலத்தவர்கள் தமிழ்நாட்டுப் பொருளாதாரத்தைவிட வளர்ச்சி பெற்றிருந்தார்கள்? வேறு எதில்தான் தமிழ்நாட்டைவிட முன்னேறியிருந்தார்கள்?
இதுவரை வடமாநிலத்தவர்களைக் காட்டிலும் பொருளாதாரம், அறிவாற்றல், கலைப்படைப்புகள் அனைத்திலும் தமிழர்தாம் முன்னேறி இருந்தார்கள்! கழகங்களின் ஆட்சியில் எவ்வளவோ சீரழிவுகளும், அரசியல் கொள்ளைகளும் இருந்தாலும், மரபுத்தொடர்ச்சி வளர்ச்சி தமிழர்களுக்கு இருக்கிறது என்பதே உண்மை!
திராவிடப் பொற்கால ஆட்சி குறித்த பூரிப்பில் இருப்பவரும், தமிழ்நாட்டில் இந்திய ஏகாதிபத்தியவாதத்தின் கடைசிப் புகலிடம் திராவிட அரசியல்தான் என்று அடையாளம் கண்டவர்களும் நடத்திய கலந்துரையாடல் என்று இதனைப் புரிந்து கொள்ள முடிகிறது.

Labels:

தூத்துக்குடி வழக்கில் ஆட்சியாளர்களின் சட்டவிரோத வழக்குகளுக்கு மதுரை உயர் நீதிமன்றம் சாட்டையடி! பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை!

Friday, August 3, 2018

தூத்துக்குடி வழக்கில் ஆட்சியாளர்களின் 
சட்டவிரோத வழக்குகளுக்கு
மதுரை உயர் நீதிமன்றம் சாட்டையடி!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
தோழர் பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை!

மதுரை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சி.டி. செல்வம் மற்றும் ஏ.எம். பசீர் அகமது ஆகியோர் அமர்வு நேற்று (02.08.2018) தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்துப் போராடிய மக்கள் மீது காவல்துறை போட்டுள்ள நூற்றுக்கணக்கான வழக்குகளை ஒரே வழக்கில் கொண்டு வருமாறு ஆணையிட்டது. அப்போது, நீதிபதி சி.டி. செல்வம் வெளியிட்ட “கண்டனங்கள்” பெரும் ஆறுதலாக உள்ளன.
தமிழ்நாடு ஆட்சியாளர்கள் காவல்துறையை தனிப்பட்ட பழிவாங்கும் செயல்களுக்குத் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்கள். சாதாரணப் பொதுக் கூட்டம் நடத்திட, ஊர்வலம் நடத்திட, சேலம் – திருவண்ணாமலைப் பகுதிகளில் மக்களைச் சந்தித்திட என எதையும் அனுமதிக்காமல் உடனே வழக்குப்போடுவதும் சிறையில் அடைப்பதுமாக இருக்கிறார்கள்.
தூத்துக்குடியில் 22.05.2018 அன்று நடந்த 100ஆவது நாள் ஸ்டெர்லைட் எதிர்ப்பு அறப்போராட்டத்தில், 15 பேரைக் காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர். சற்றொப்ப 80 பேர் துப்பாக்கிச் சூடு மற்றும் இரும்புத் தடி தாக்குதலில் எலும்புகள் முறிந்தும், படுகாயமுற்றும் பாதிக்கப்பட்டனர்.
ஸ்டெர்லைட் ஆலையை மக்கள் விருப்பப்படி மூடிவிட்டதாக ஒரு பக்கம் சொல்லிக் கொண்டு, அப்போராட்டத்தில் ஈடுபட்ட – ஈடுபடாத வெகுமக்கள் மீது ஏராளமான வழக்குகள் போட்டு கைது செய்து வருகிறது தமிழ்நாடு அரசு! ஒருவர் மீது 80 வழக்கு – 100 வழக்கு என்று போடுகின்றனர். ஒரே நாளில் ஒரே நேரத்தில் ஒரே கோரிக்கைக்காக நடந்த அறப்போராட்டத்தில், தனித்தனி வழக்குகளாக நூற்றுக்கணக்கான வழக்குகள் பதிவு செய்துள்ளது காவல்துறை.
இச்சட்டவிரோதச் செயலை எதிர்த்து, மதுரை உயர் நீதிமன்றத்தில் மதுரை வழக்கறிஞர் சான் வின்சென்ட் மற்றும் வழக்கறிஞர் டி. பொன்பாண்டி ஆகியோர் போட்ட பொது நல வழக்கில் நேற்று (02.08.2018) நீதிபதி செல்வம், காவல்துறையின் அத்துமீறலுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் சாட்டை அடி கொடுத்துள்ளார். அதன் சுருக்கம் வருமாறு :
“தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டால் துயரத்தில் உள்ள மக்களுக்குக் கருணை காட்டுவதற்கு மாறாகக் காவல்துறையின் கட்டாந்தடியைக் காட்ட வேண்டுமா?
ஒரு நபர் மீது 100 வழக்குகள் – 80 வழக்குகள்! எதற்காக? ஒரு வழக்கில் பிணை பெற்றால் இன்னொரு வழக்கில் உள்ளேயே இரு என்று சொல்வதற்காகவா? இவ்வளவு ஆணவமும் இரக்கமின்மையும் அரசுக்கு எப்படி வந்தது? நள்ளிரவில் காவல்துறையினர் வீடுகளின் கதவைத் தட்டி, மக்கள் மனத்தில் பீதியை உண்டாக்குவது எதற்காக? இது பற்றி அரசுக்குக் கவலை எதுவும் இல்லையா?
தங்களின் உயிருக்கு உயிரானவர்களைத் துப்பாக்கிச் சூட்டில் பலி கொடுத்த குடும்பத்தினர் தாங்களும் கைது செய்யப்படுவோமோ, தங்களின் நெருங்கிய உறவினர்களும் கைது செய்யப்படுவார்களோ என்று நிரந்தரமாக அச்சப்பட வேண்டும் என்று அரசு விரும்புகிறதா? இதை அறிய நீதிமன்றம் விரும்புகிறது.
நூறாவது போராட்ட நாளன்று (22.05.2018) போட்ட வழக்குகள் அனைத்தையும் - கல்லெறிந்த வழக்கு – கடும் சொற்கள் பேசியதற்கான வழக்கு – சமூக வலைத்தளங்களில் எழுதியதற்கான வழக்குகள் அனைத்தையும் ஒரே வழக்கு ஆக்குங்கள் என்று காவல்துறைக்கு ஆணையிடுகிறோம்”.
மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் அரிராகவன் மீது 92 வழக்குகள்! அவை அனைத்திலும் பிணை பெற்ற நிலையில், அவர் மீது ஏவப்பட்ட தேசியப் பாதுகாப்புச் சட்ட தடுப்புக் காவலை இரத்துச் செய்தபோது, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரை உயர் நீதிமன்றத்துக்கு வரவழைத்தக் கண்டனம் தெரிவித்தது இதே சி.டி. செல்வம் – பசீர் அகமது அமர்வுதான்! அதற்கு முன்பு, சூலை 26 அன்று, ஸ்டெர்லைட் போராட்டக் குழு இளைஞர் மகேஷ் மீது போடப்பட்ட குண்டர் தடுப்புக் காவலை இரண்டே நாட்களில் திரும்பப் பெற ஆணையிட்டதும், இதே நீதிமன்ற அமர்வுதான்!
நீதித்துறை சட்டத்தையும் நீதியையும் பாதுகாப்பதாக இருக்க வேண்டும் என்ற சட்ட நெறிமுறையை உயர்த்திப் பிடித்துள்ளார்கள் நீதிபதி சி.டி. செல்வமும், பசீர் அகமதும்! தூத்துக்குடி போராட்டம் தொடர்பாக – கண்மூடித்தனமாகத் தேசியப் பாதுகாப்புச் சட்டம், குண்டர் சட்டம் ஆகியவற்றில் ஸ்டெர்லைட் ஆலை மூடல் போராட்டத்திற்குத் துணை நின்ற தோழர்களை சிறையில் தள்ளியது எடப்பாடி அரசு! அந்த ஆணைகளைத் தூக்கி எறிந்து அனைவரையும் விடுதலை செய்தது மதுரை உயர் நீதிமன்றம்!
தமிழ்த்தேசியப் பேரியக்கம் 28.07.2018 அன்று திருச்சி உறையூரில் “சனநாயகம் காத்திட – தமிழர் ஒன்றுகூடல்” என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடத்த முறைப்படி எல்லா ஏற்பாடுகளும் செய்தது. கடைசி நேரத்தில் அனுமதி மறுத்தது காவல்துறை. அதே நாளில் மாலை அந்த பொதுக்கூட்டத் திடலுக்கு அருகில் பேரியக்கத் தோழர்களும், உணர்வாளர்களும் திரளாகக் கூடி கண்டன முழக்கம் எழுப்பினோம். ஒலிபெருக்கி இல்லாமல் நான் மட்டும் சிறிது நேரம் தடை விவரங்களைப் பற்றி பேசினேன். அப்போது நான் கூறியதிலிருந்து …
“துச்சாதனன் திரவுபதியின் துகிலை உரியும்போது கண்ணபிரான் ஆடை கொடுத்து காப்பாற்றினான். ஆட்சியாளர்கள் சனநாயகத்தின் துகிலை உரியும்போது, கண்ணபிரான் போல் காப்பாற்ற வேண்டியது நீதித்துறை! ஆனால் சில நேரங்களில் – நீதித்துறை ஆட்சியாளர்களின் சட்டவிரோதச் செயல்களை அங்கீகரிக்கிறது. இந்நிலை மாற வேண்டும்!”.
நீதிபடி சி.டி. செல்வம் அவர்கள் கண்ணபிரான் போல் செயல்பட்டுள்ளார்.

Labels:

காவிரி நீர் கடலில் கலப்பது வீணா? பெ. மணியரசன் சிரப்புக்கட்டுரை!

Wednesday, August 1, 2018

காவிரி நீர் கடலில் கலப்பது வீணா?

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவரும்
காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளருமாகிய
ஐயா பெ. மணியரசன் சிரப்புக்கட்டுரை!

காவிரி நீர் வீணாகக் கடலில் போய் கலக்கிறது. இதைத் தடுக்கத் தமிழ்நாட்டிலோ அல்லது கர்நாடகத்திலோ அணை கட்ட வேண்டாமா என்று சிலர் கேட்கிறார்கள்.
ஆற்றுநீர் கடலில் கலப்பதை “வீணாகக் கலக்கிறது” என்று முடிவு செய்வது ஒரு மூடத்தனம்! ஆற்று நீர் ஆண்டுதோறும் கடலில் கலந்தால்தான், கடல் உப்பு நீர் நிலத்தடியில் மேலும் மேலும் முன்னேறி உட்புகாமல் தடுக்கும்!
காவிரிச் சமவெளியில் கடல் உப்பு நீர் மேலும் மேலும் ஏறி வருகிறது. நிலத்தடி நீர் பாசனத்திற்கும் குடிக்கவும் பயன்படாமல் மாறிப் போகிறது. காரணம், ஐந்தாண்டு அல்லது எட்டாண்டுக்கு ஒருமுறைதான் மேட்டூர் அணை நிரம்பி காவிரி நீர் சிறிதளவு கடலுக்குப் போகிறது.
அடுத்து, உலகெங்கும் ஆற்று நீர் கடலுக்கு செல்வது தடுக்கப்பட்டால், கடல் நீரின் உப்புத் தன்மை அதிகமாகி மீன் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் அழியும் நிலை ஏற்படும்; கடல் நீர் ஆவியாகி மேகமாகும் அளவும் குறைந்து, நிலக் கோளத்தில் மழைப் பொழிவு குறையும்! அதனால் வரும் பாதிப்புகள் பல!
கடலோரத்தில் ஆற்று நீர் கலக்கும் இடத்திற்கும் ஆழ்கடலுக்கும் இடையே அச்சூழலுக்கேற்ப ஒருவகை மீன்கள் உற்பத்தியாகும். ஆற்று நீர் கடலில் கலக்க வில்லையென்றால், அந்த மீன்வளம் அழியும்.
கேரளத்தில் ஓர் ஆண்டில் 2,000 ஆ.மி.க. (1 ஆ.மி.க. - 100 கோடி கன அடி) ஆற்று நீர் - அரபிக் கடலில் கலக்கிறது. கர்நாடகத்தில் ஓர் ஆண்டில் 1,000 ஆ.மி.க. நீர் அரபிக் கடலில் கலக்கிறது. ஆந்திராவில் கோதாவரி ஆற்று நீர் மட்டும் ஓர் ஆண்டில், 2,000 முதல் 3,000 ஆ.மி.க. வரை வங்கக் கடலில் கலக்கிறது.
தமிழ்நாட்டில் பாலாறு, தென்பெண்ணை ஆறுகளின் நீர் கடலில் கலப்பதில்லை. எப்போதாவது பெரும் புயல் ஏற்பட்டால் உலக அதிசயமாக அவற்றின் நீர் கடலில் கலக்கும்! வைகை ஆறு கடலில் போய்ச் சேர வழியே இல்லை. தாமிரபரணி, பெரும்பாலும் கடலில் கலப்ப தில்லை.
காவிரி ஆற்றிலிருந்து தவிர்க்க முடியாமல் தப்பிச் செல்லும் நீர் ஆண்டுச் சராசரியாக 10 ஆ.மி.க.தான் எனக் காவிரித் தீர்ப்பாயம் கணித்துள்ளது.
தண்ணீர்ப் பற்றாக்குறையால் ஆண்டுதோறும் தவிக்கும் தமிழ்நாடு, காவிரி ஆற்றிலும் அதன் கிளை ஆறுகளிலும் தடுப்பணைகள் (அதன் உயரம் சற்றொப்ப 6 அடி அளவில்) கட்டி, தண்ணீரை அங்கங்கே தேக்கி நிறுத்தலாம். இதனால் அதன் அருகே உள்ள கிளை வாய்க்கால்களில் முழு அளவில் தண்ணீரைத் திருப்பி விட முடியும். அத்துடன் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீர் ஊற்று அதிகரிக்கும். அதேபோல் ஆறுகள், வாய்க்கால்கள் அனைத்தையும் தூர்வாரி கரைகளை உயர்த்த வேண்டும்.
மற்றபடி காவிரியில் தமிழ்நாட்டில் புதிய நீர்த்தேக்கம் கட்டத் தேவை இல்லை. கர்நாடகம் மேக்கேத்தாட்டில், இராசிமணல் ஆகிய இடங்களில் புதிய அணை கட்ட அனுமதிக்கக் கூடாது. கர்நாடகம் புதிய அணை கட்டினால் எந்தப் பெரிய வெள்ள காலத்திலும் தமிழ் நாட்டிற்குத் தண்ணீர் திறந்துவிட மாட்டார்கள்.

Labels: ,


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்