<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d6955529389241309188\x26blogName\x3d%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86.%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://thozharmaniyarasan.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com/\x26vt\x3d-8408640130511538487', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

"காவிரி வழக்கிற்கு உச்ச நீதிமன்ற அரசமைப்பு அமர்வு தேவை! " -- தோழர் பெ. மணியரசன் கோரிக்கை!

Saturday, February 17, 2018

=================================
காவிரி வழக்கிற்கு உச்ச நீதிமன்ற
அரசமைப்பு அமர்வு தேவை! 
=================================
தமிழ்நாடு அரசுக்கு - 
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
தோழர் பெ. மணியரசன் கோரிக்கை!
=================================

உச்ச நீதிமன்றம் காவிரி வழக்கில் 16.02.2018 அன்று வழங்கிய தீர்ப்பு, தமிழ்நாட்டுக்குரிய தண்ணீரின் அளவை மேலும் குறைத்துள்ளதுடன் காவிரி உரிமையைப் பறிப்பதற்கான அடிப்படைக் கூறுகளையும் கொண்டிருக்கிறது.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில், நீதிபதிகள் அமிதவராய், ஏ.எம். கான்வில்கர் ஆகிய மூன்று பேரையும் கொண்ட அமர்வு, தமிழ்நாடு – கர்நாடகம் ஆகிய இரு மாநிலங்களுக்கிடையே நடுநிலையைக் கடைபிடிக்கவில்லை! 

கர்நாடகத்தின் நீர்த் தேவை அதிகமென்று பலவாறாக வர்ணிக்கும் தீர்ப்புரை, தமிழ்நாட்டின் நீர்த் தேவை பற்றி கண்டுகொள்ளவே இல்லை! எடுத்துக்காட்டாக, பெங்களூரு நகரத்தின் மூன்றில் ஒரு பகுதிதான் காவிரிப்படுகையில் வருகிறது, அந்தப் பகுதிக்கு மட்டும் காவிரி நீரை வழங்குவதே சரி என்று காவிரித் தீர்ப்பாயம் தனது இறுதி முடிவில் கூறியுள்ளது. ஆனால், உச்ச நீதிமன்றம் முழு பெங்களூருவுக்கும் காவிரித் தண்ணீர் தேவை என்றும், பெங்களூரு உலக நகரம் என்றும் கூறி, அதற்கான கூடுதல் தண்ணீரை தமிழ்நாட்டிற்குரிய 192 ஆ.மி.க.விலிருந்து 14.75 ஆ.மி.க.வை எடுத்து வழங்கியிருக்கிறது! 

இந்த 14.75 ஆ.மி.க.வில், தமிழ்நாட்டின் காவிரிப்படுகையில் கிடைக்கக் கூடிய 20 ஆ.மி.க. நிலத்தடி நீரிலிருந்து 10 ஆ.மி.க.வை எடுத்துக் கொடுக்கிறோம் என்று தீர்ப்புரை கூறுகிறது. அந்த 10 ஆ.மி.க.வையும் கர்நாடகம் தர வேண்டிய 192இல் கழித்துக் கொள்ள வேண்டுமென்றும் கூறுகிறது. அத்துடன், பெங்களூரு “உலக நகரம்” என்று கூறி, மேலும் 4.75 ஆ.மி.க. தண்ணீரை தமிழ்நாட்டிற்குக் கர்நாடகம் தர வேண்டிய நீரிலிருந்து கொடுக்கிறது. 

பெங்களூரு நகரத்திற்கு கூடுதலாகத் தர வேண்டிய தண்ணீரை கர்நாடகத்துக்கு ஒதுக்கியுள்ள 270 ஆ.மி.க.விலிருந்து ஏன் எடுக்கவில்லை? பெங்களூருவைவிட தொழில் துறையிலும், மக்கள் தொகையிலும் பெரிய நகரமாகவும், பன்னாட்டுத் தொழிலகங்கள் நிறைந்த நகரமாகவும் சென்னை இருக்கிறது. தண்ணீர் பற்றாக்குறையில் தவிக்கும் சென்னை மாநகருக்குக் குடிநீரைக் கூடுதலாக ஒதுக்க உச்ச நீதிமன்றம் அக்கறைப்படாதது ஏன்?

அடுத்து, தமிழ்நாட்டில் காவிரிப்படுகையில் நிலத்தடி நீர் இருக்கிறது என்பதற்கு 1972ஆம் ஆண்டு UNDP என்ற ஐ.நா. நிறுவனம் கொடுத்த கணக்கையும், அதன் பின்னர் 1980இல் இந்திய அரசு நிறுவனம் கொடுத்த கணக்கையும் சான்றாகக் காட்டிய உச்ச நீதிமன்றம், கர்நாடகத்தில் காவிரிப்படுகையில் கிடைக்கும் நிலத்தடி நீர் பற்றி கணக்கு இல்லை என்று கைவிரிக்கிறது. இது உண்மைக்குப் புறம்பானது! பாகுபாடான அணுகுமுறை! 

உண்மையில், தமிழ்நாட்டின் காவிரிப்படுகையில் 1972 – 80க்குப் பிறகு, இன்றைய நிலையில் நிலத்தடி நீர் பல பகுதிகளில் சாகுபடிக்கும் குடிநீருக்கும் பயன்படாத உப்பாகிவிட்டது. கர்நாடகம் காவிரியைத் தடுத்துவிட்ட நிலையில், தொடர்ந்து நிலத்தடி நீரை எடுத்து சாகுபடி செய்ததால் நிலத்தடி நீரின் ஆழம், பல நூறு அடிகளுக்குக் கீழே போய்க் கொண்டே இருக்கிறது. 

உச்ச நீதிமன்றம் முன் வைக்கப்பட்ட வழக்கு என்பது, காவிரியில் ஓடி வரும் நீரைப் பகிர்ந்து கொள்வதற்கான (Cauvery Water Dispute) சிக்கல்தானே தவிர, காவிரிப்படுகை நிலத்தடி நீரைப் (Cauvery Ground Water Dispute) பகிர்ந்து கொள்வதற்கான சிக்கல் அல்ல! 

இவ்வழக்கில், இந்திய அரசு தமிழ்நாட்டுக்கு எதிராக செய்த வஞ்சக வேலைகள் கொஞ்ச நஞ்சமல்ல! எடுத்துக்காட்டாக, மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர்த் தகராறு சட்டப் பிரிவு 6A – தண்ணீர்த் தீர்ப்பாயம், தீர்ப்பளித்துவிட்டால், அதை செயல்படுத்த – அதற்குரிய தனிப் பொறியமைவை (SCHEME) நடுவண் அரசு உருவாக்க வேண்டும் என்பதில் ஆங்கிலத்தில் “May” என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அச்சொல், “அமைக்கலாம்” என்ற பொருள் தருவதால், அதை மாற்றி “அமைக்க வேண்டும்” எனப் பொருள் தரும் ‘Shall’ போட வேண்டுமென்று உச்ச நீதிமன்ற அமர்வு கூறியபோது, நடுவண் அரசின் தலைமை வழக்கறிஞர் (Sollicitor General) இரஞ்சித்குமார், “அதைக் கட்டாயமாக்கி மாற்ற வேண்டாம், “மே” அப்படியே இருக்கட்டும், நடுவண் அரசு பார்த்துக் கொள்ளும்” என்று கூறினார். இது தீர்ப்புரையில் வந்துள்ளது. 

இதிலிருந்து இந்திய அரசின் – பா.ச.க.வின் மோடி அரசின் தமிழ்நாட்டிற்கெதிரான வஞ்சக நெஞ்சம் தெரிய வருகிறது! ஆனால், உச்ச நீதிமன்ற அமர்வு, பொறியமைவு அமைப்பது கட்டாயம் என்ற வகையில் தனது தீர்ப்பில் ‘Shall’ போட்டுள்ளது. 

அதே வேளை உச்ச நீதிமன்றம், இன்னொரு குழப்பத்தை வைத்துள்ளது! காவிரித் தீர்ப்பாயம் தனது இறுதித் தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை அமைக்க வேண்டும் என்று கூறியுள்ளது. அத்துடன், அதற்கான அதிகாரக் கட்டமைப்பு, தலைமை, உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் பணி போன்றவற்றை வரையறுத்துக் கூறியுள்ளது தீர்ப்பாயம்! எனவே, உச்ச நீதிமன்ற அமர்வு இந்த காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை அமைக்க வேண்டும் என்றுதான் குறிப்பாகக் கூறியிருக்க வேண்டும்! 

அதைவிடுத்து, ஒரு பொறியமைவு (A SCHEME) அமைக்க வேண்டுமென்று, பொத்தாம் பொதுவில் உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது ஏன்? இதைப் பயன்படுத்தி, இந்திய அரசு பல் இல்லாத – அதாவது அதிகாரமில்லாத காவிரிப் பொறியமைவு ஒன்றை அமைக்கும் அபாயம் இருக்கிறது! இந்தக் குழப்பத்தை உச்ச நீதிமன்றம் உருவாக்கி இருப்பது ஏன்?

காவிரி ஆறு யாருக்கும் சொந்தமில்லை, குறிப்பாக தமிழ்நாட்டிற்கோ - கர்நாடகத்திற்கோ சொந்தமில்லை, அது “இந்தியத்தேசிய சொத்து” என்று தீர்ப்புரையில் கூறியதன் மர்மம் என்ன? காவிரி ஆறு, கர்நாடகம், தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு உரிமையுள்ள ஆறு! இந்த உரிமை இருப்பதால்தான், தண்ணீர்ப் பகிர்வு அளவுகளில் முரண்பாடுகள் ஏற்பட்டு அதைத் தீர்த்து வைக்க நீதித்துறையை நான்கு மாநிலங்களும் நாடியுள்ளன. 
ஹெல்சிங்கி உடன்பாட்டின்படி, ஓடிவரும் ஆற்று நீரில் மரபுரிமை அடிப்படையிலான நீர் உரிமை, நாடுகளின் எல்லை கடந்து இருக்கிறது. அதன் பெயர் தண்ணீர் மரபுரிமை (Riparian Right). இந்த உரிமையை இந்த நான்கு மாநிலங்களிலிருந்தும் பறிக்கின்ற வகையில், காவிரி ஆறு யாருக்கும் சொந்தமில்லை – “தேசிய சொத்து” என்கிறது. இதன் பொருள், காவிரி – இந்திய அரசின் சொத்து என்பதாகும்! அதாவது, மாநில அதிகாரப்பட்டியில் உள்ள காவிரியை – இந்திய அரசு அதிகாரப்பட்டியலில் உச்ச நீதிமன்றம் சேர்ப்பதாகும்.

உச்ச நீதிமன்ற தீபக் மிஸ்ரா அமர்வுக்கு இந்த கருத்து இருக்கிறது என்பதற்கு அடையாளமாக தீர்ப்புரையில், திரும்பத் திரும்ப இந்திய அரசின் “தேசிய நீர்க் கொள்கை” என்ற பழைய சட்டத்தையும் புதிய வரைவையும் கூறுகிறது. “தேசிய நீர்க் கொள்கை” என்பது, ஆறுகளை மாநில அரசுகளிடமிருந்து பிடுங்கி இந்திய அரசின் கையில் வைத்துக் கொண்டு, அவற்றை பன்னாட்டு நிறுவனங்களுக்குக் குத்தகைக்கு விடுவது என்பதுதான்! உழவர்கள் பாசனத்திற்கோ, மக்கள் குடிநீருக்கோ அந்தத் தண்ணீரைப் பயன்படுத்த வேண்டுமெனில் “மீட்டர்” பொருத்தி, அந்த அளவுக்குக் கட்டணம் செலுத்தும் முறை என்பதுதான் “தேசிய நீர்க் கொள்கை”! 

புதிய வரைவு நிலையில் 2012இலிருந்து இருக்கும் “தேசிய நீர்க் கொள்கை”யை உச்ச நீதிமன்ற அமர்வு, சட்டம்போல் எடுத்துக் கொண்டு அதை முதன்மைப்படுத்தி தீர்ப்புரையில் கூறுவதன் மர்மம் இதுதான்! 

எந்த வகையில் பார்த்தாலும், காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அநீதியானது! மனச்சான்று அற்றது! கட்டப்பஞ்சாயத்துத் தன்மையுள்ளது! கடைசியில், பன்னாட்டு நிறுவனங்களுக்குக் காவிரியை ஒப்படைக்கும் தன்மையுள்ளது! எனவே, இந்த இழப்புகளிலிருந்து தமிழ்நாட்டின் காவிரி உரிமையை மீட்க காவிரி வழக்கை – ஏழு நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு அமர்வுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறது. 

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மேல் முறையீடாக நாம் இந்தக் கருத்தை முன்வைக்கவில்லை! ஒன்றிய அரசு அதிகாரப்பட்டியல், மாநில அரசு அதிகாரப் பட்டியல், பொது அதிகாரப் பட்டியல் ஆகியவற்றுக்கு இடையிலான முரண்பாடாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வந்துவிட்டது. எனவே, இது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் சிக்கலாக உள்ளது. மேலும், தகுந்த சட்ட வல்லுநர்களைக் கொண்டு கலந்தாய்வு செய்து, காவிரி வழக்கை விசாரித்துத் தீர்ப்புரைக்க உச்ச நீதிமன்ற அரசமைப்பு அமர்வை உருவாக்கித் தருமாறு தமிழ்நாடு அரசு, இந்திய அரசு மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவற்றை உரியவாறு அணுக வேண்டுமென்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். 

அதேவேளை, அரசமைப்பு அமர்வு தீர்ப்பளிக்கும் வரை, உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பைச் செயல்படுத்தும் வகையில் உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை அமைத்திடுமாறு இந்திய அரசை தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும். 

Labels: ,

" ஈழத்தமிழர்கள் இனத்துரோகிகளைப் புறந்தள்ள வேண்டும்! உண்மையான இன உரிமை அமைப்புகள் ஒருங்கிணைய வேண்டும்! " -- தோழர் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை!

Thursday, February 15, 2018


=======================================
இலங்கை உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் :
--------------------------------------------------------------------- 
ஈழத்தமிழர்கள் இனத்துரோகிகளைப்
புறந்தள்ள வேண்டும்!
உண்மையான இன உரிமை
அமைப்புகள் ஒருங்கிணைய வேண்டும்! 
=======================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
தோழர் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை!
=======================================

இலங்கை உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் சிங்கள மக்களிடம் இனத் தீவிரவாதம் கூடுதலாக வளர்ந்துள்ளதையே காட்டுகின்றன. மொத்தமுள்ள 341 உள்ளாட்சி சபைகளில் 239-ஐ இராசபட்சேயின் சிறீலங்கா பொதுசன பெரமுனா வென்றுள்ளது. தலைமை அமைச்சர் இரணில் விக்கிரமசிங்கேயின் ஐக்கிய தேசியக் கட்சி, மிகக் குறைவாக 41 சபைகளில்தான் வென்றுள்ளது. 

குடியரசுத் தலைவர் சிறிசேனாவின் இலங்கை சுதந்திக் கட்சி வெறும் 10 இடங்களில் தான் வென்றுள்ளது.

இதனால் இப்போது இலங்கை கூட்டணி ஆட்சியாளர்களிடையே உறுதியற்ற தன்மையும் - பிளவுகளும் ஏற்பட்டுள்ளது. இது நல்லது.

இராசபட்சே வருங்காலத்தில் ஆட்சியைப் பிடித்தாலும் புதிதாக பேராபத்து வரப் போவதில்லை! எல்லா அழிவு வேலைகளையும் உரிமைப் பறிப்புகளையும தமிழரகளுக்கெதிராக ஏற்கனவே செய்து முடித்து விட்டார்கள்.

இராசபட்சே, சிங்களர்களுக்கிடையே இழந்த செல்வாக்கை மீண்டும் பெற்றுவிட்டார் என்று சொல்ல முடியாது. ஏற்கெனவே குடியரசுத் தலைவர் தேர்தலில் சிங்களர்கள் இராசபட்சேவுக்குத்தான் பெரும்பான்மையான வாக்குகளை கொடுத்தார்கள். தமிழர்களின் எதிர்ப்பு வாக்குகளால்தான் அவர் தோற்றார். அன்றிலிருந்து இன்று வரை சிங்களர்களிடம் தமிழர்களை அரவணைத்துச் செல்லும் சனநாயக நோக்கு பெரும்பான்மை பெறவே இல்லை. ஏற்கெனவே தமிழர்களுக்கு எதிராக இருந்த இனவெறி நீடிக்கிறது அல்லது சற்றுக் கூடுதலாகி இருக்கிறது என்று கணிக்கலாம்.

அடுத்து சிறீசேனா - இரணில் இருவரும் தமிழர்களை அரவணைத்துச் செல்லும் பண்பாளர்களோ, பன்மைவாதிகளோ அல்லர். தமிழின எதிர்ப்பில் முகமூடி அணியாத பகைவன் இராசபட்சே - முகமூடி அணிந்த பகைவர்கள் சிறீசேனாவும் - இரணிலும்!

சிறீசேனா - இரணில் அரசு, இராசபட்சேயின் சாரமான தமிழின எதிர்ப்புக் கொள்கைகளைத்தான் பின்பற்றுகிறது. வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து படையை விலக்கிக் கொள்ள மறுத்து விட்டது. படையாட்கள் வன்கவர்தல் செய்த தமிழர் காணிகளைத் திருப்பித் தரவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக மட்டுமே மிகச் சில காணிகள் தமிழர்களுக்கு மீண்டும் கிடைத்தன.

வடக்கு கிழக்கு மாநில அரசுகளுக்கு எந்த அதிகாரமும் தரவில்லை. விடுதலைப்புலிகள் என்று குற்றம் சாட்டி கொடுஞ்சிறைகளில் அடைத்துள்ள ஆயிரக்கணக்கான தமிழர்களை விடுதலை செய்ய புதிய அரசு மறுத்து விட்டது. காணாமல் போனவர்கள் என்று சொல்லப்படும் தமிழர்களுக்கான பொறுப்பு (Accountability) எதையும் செயல்படுத்த வில்லை. ஐ.நா. மனித உரிமை மன்றம் நிறைவேற்றிய தீர்மானத்தின்படி சிங்கள அரசும் படையாட்களும் செய்த “போர்க்குற்றங்கள்” குறித்த விசாரணை எதையும் செய்யவில்லை. இன அழிப்புக் கயவர்கள் யாருமே தண்டிக்கப்படவில்லை!

இப்பொழுது நடைமுறையில் உள்ள சிங்களப் பேரினவாத ஒற்றையாட்சி முறைக்கு மேலும் கூடுதல் அதிகாரம் தரவும், வடக்கு கிழக்கு மாகாண இணைப்பை நிரந்தரமாக மறுக்கவுமான புதிய அரசமைப்பு யாப்பை சிறீசேனா அரசு கொண்டு வருகிறது. எனவே இராசபட்சே மீண்டும் வருவதால் தமிழர்கள் புதிதாக இழப்பதற்கு ஏதுமில்லை!

மாறாக தமிழர்களுக்கிடையே புதிய விழிப்புணர்ச்சி வளர்ந்து வருகிறது. சம்பந்தர் தலைமையிலான தமிழினத் துரோகக் கூட்டணியைப் புறக்கணிக்க தமிழர்கள் முன்வந்துள்ளார்கள். கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சாவகச்சேரி, பருத்தித்துறை நகராட்சிகளை வென்றுள்ளது. மேலும் உள்ளாட்சி உறுப்பினர்கள் பலரைப் பெற்றுள்ளது. 

சம்பந்தரின் இனத்துரோகம் பளிச்சென்று தெரியும் வகையில், எதிரிகளோடு பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார். தனிப்பெரும்பான்மை யாருக்கும் இல்லாத நிலையில், யாழ்ப்பாணம் நகராட்சியில் நிர்வாகம் அமைக்க, இன எதிரி இரணில் கட்சியுடனும், இராசபட்சேயின் கூட்டாளி டக்ளஸ் தேவானந்தாவுடனும் பேச்சு நடத்நடத்துகிறார். டக்ளஸ் தேவானந்தாவுக்கும் சிறு வளர்ச்சி உள்ளது. 

கஜேந்திரகுமாரின் முன்னேற்றம் வரவேற்கத்தக்கது. சம்பந்தர் கூட்டணியிலிருந்து விலகியுள்ள பிரேமச்சந்திரனும் கஜேந்திரகுமாரும் கூட்டுச் செயல்பாடுகளுக்கு முயன்றால் நல்லது!

சிங்கள இனவாதம் அதே தீவிரத்துடன் இருப்பதால், தமிழர்களிடையே இன உணர்ச்சியும், சந்தர்ப்பவாதத்தைப் புறந்தள்ளி ஒருங்கிணையும் புதிய போக்கும் போர்க்குணமும் வளரும்!

எனவே இராசபட்சே வளர்ச்சியைக் கண்டு அச்சப்படாமல், தமிழர் சனநாயகப் போராட்டங்களை விரிவுபடுத்தவும் விரைவுபடுத்தவும் கிடைத்த புறநிலை ஊக்கமாக இச்சூழ்நிலையைப் பயன்படுத்த வேண்டும்! அதேபோல், உண்மையான தமிழீழ தேசிய ஆற்றல்கள் கூட்டு நடவடிக்கைகளை வளர்க்க வேண்டும்!

Labels: ,

"தமிழ்நாட்டுத் தேர்வர்களை வஞ்சிக்கும் வகையில் அரசுப் பணித் தேர்வு வினாத்தாள் தயாரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!" -- தோழர் பெ. மணியரசன் கோரிக்கை!

Wednesday, February 14, 2018
================================================

தமிழ்நாட்டுத் தேர்வர்களை வஞ்சிக்கும்
வகையில் அரசுப் பணித் தேர்வு வினாத்தாள்
தயாரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!
================================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
தோழர் பெ. மணியரசன் கோரிக்கை!
================================================

அனைத்திந்திய அளவில் நடைபெறும் வேலை வாய்ப்புத் தேர்வுகளில் வடநாட்டை மையப்படுத்தி வினாக்கள் இருக்கும். அவற்றில் தமிழ்நாடு புறக்கணிக்கப்படும். ஆனால் தமிழ்நாடு அரசு நடத்திய 4ஆம் பிரிவுக்கான 9,351 பணி இடங்களுக்கான தேர்வில் தமிழ்நாட்டு வரலாறு, பண்பாடு, மரபு, நிலம், நிகழ்ச்சி கள் புறக்கணிக்கப்பட்டு வடநாட்டை மையப்படுத்தி கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. 

தமிழ்நாட்டுக் கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய்த்துறை எழுத்தர்கள் போன்ற பணிகளில் சேர்வோர்க்கு, வடநாட்டு வரலாறு, பண்பாடு, நிலம், நிகழ்ச்சிகள் பற்றி வினாக்கள் கேட்பது எதற்காக?

“இந்தியா - மாலத்தீவு இடையிலான ஒத்திகைக்கு என்ன பெயர்?”, “இந்திய விமானப் படையிலிருந்து கழற்றி விடப்பட்ட ஊர்தியின் பெயர் என்ன?”, “2017 அக்டோபரில் டெல்லியில் தொடங்கப்பட்ட நிறுவனம் எது?”, “மத்திய அரசு அறிவித்த பல்வேறு யோஜனாக்கள் தொடங்கப்பட்ட ஆண்டுகள் என்ன?”, “இரவீந்திரநாத் தாகூர் பிறந்த தேதி எது?” (இக்கேள்விக்குக் கட்டங்களில் கொடுக்கப்பட்டிருந்த விடைகள் அனைத்துமே தவறு என்பது வேறு செய்தி!).

தமிழ்நாடு அரசு, விடைத்தாள்கள் அணியம் செய்யும் பொறுப்பை யாரிடம் விட்டது? அதற்கு என்ன வழி காட்டியது? தமிழ்நாட்டுத் தேர்வர்களின் எதிர்காலத்தையே சிக்கலாக்கிவிட்ட இந்தக் கேள்வித்தாள்கள் தயாரிப்புக்கான பொறுப்பானவர்கள் அத்தனை பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான சிறப்புப் புலனாய்வுக் குழுவை தமிழ்நாடு அரசு உடனடியாக அமைக்க வேண்டும்.

அடுத்து, வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எந்தெந்த மையத்தில் எவ்வளவு பேர் தேர்வு எழுதினார்கள் என்ற செய்தி மர்மமாக இருக்கிறது. இராமேசுவரம் தங்கச்சிமடம் தேர்வு மையத்தில் மட்டும் மத்தியப்பிரதேசம் மற்றும் அசாம் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஐந்து பேர் தேர்வெழுதியதாகத் தமிழ் நாட்டுத் தேர்வர்கள் கூறுகிறார்கள். கோவை உள்ளிட்ட பல இடங்களில் மலையாளிகள் தேர்வெழுதியதாகக் கூறுகிறார்கள். மொத்த மையங்களில் வெளி மாநிலத்தவர் தேர்வெழுதிய விவரத்தைத் தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும். 

மராட்டியம், கர்நாடகம், குசராத் மாநிலங்களில் உள்ளதுபோல் தமிழ்நாட்டிலும், மாநில அரசுப் பணி களில் 100 விகிதம் தமிழர்கள் மட்டுமே தேர்வெழுதவும், தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசுப் பணிகளில் 90 விழுக்காடு பேர் தமிழர்களாக இருக்கும் வகையிலும் தமிழ்நாடு அரசு புதிய சட்டம் இயற்ற வேண்டும். அனைத்துக் கட்சிகளும் இயக்கங்களும், மக்களும் இக்கோரிக்கையை எழுப்ப வேண்டும். இக்கோரிக்கையை முன்வைத்து, தமிழ்த்தேசியப் பேரியக்கம் 03.02.2018 அன்று சென்னையில் எழுச்சிமிகு மாநாடு நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Labels: ,


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்