<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d6955529389241309188\x26blogName\x3d%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86.%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://thozharmaniyarasan.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com/\x26vt\x3d-8408640130511538487', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

" சீமான் மீது போட்ட பழிவாங்கும் வழக்குகளைக் கைவிடுக!" --- தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் கோரிக்கை!

Thursday, March 30, 2023


 சீமான் மீது போட்ட பழிவாங்கும் வழக்குகளைக் கைவிடுக!

=====================================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் கோரிக்கை!
=====================================================


நாம் தமிழர் கட்சித் தலைவர் செந்தமிழன் சீமான் மீது அடுத்தடுத்து வழக்குகள் பதிவு செய்வது தமிழ்நாட்டு ஆட்சியாளர்களின் பழிவாங்கும் நடவடிக்கையாகவே உள்ளது.

தமிழ்நாட்டில் பொதுக்கூட்டங்களில் ஆவேசமாகப் பேசுவோர் மீதெல்லாம் வழக்குகள் பதிவு செய்தால், இப்போதுள்ள காவல்துறையும் போதாது; நீதிமன்றங் களும் போதாது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தமது கட்சி வேட்பாளரை ஆதரித்துப் பேசும்போது, தமிழ்நாட்டில் வடவர் வெள்ளம் புகுந்து தமிழர் தாயகத்தைச் சிதைப் பதைத் தடுக்கும் நோக்குடன், அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துப் பேசினார் சீமான். இந்தி மண்டலத்தைச் சேர்ந்த கருத்துப் பரப்பல் வணிக நிறுவன உரிமையாளர் பிரசாந்த் கிஷோர் அதைப் பெரிது படுத்தி சீமானைக் கைது செய்க என்று தமிழ்நாடு முதலமைச்சருக்குக் கோரிக்கை வைத்தார். உடனடியாக - சீமான் மீது பிணை மறுப்புப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விட்டார்கள்.

அதே தேர்தல் பரப்புரையில் அருந்ததியர் குறித்து, சீமான் செய்த விமர்சனத்தில் எமக்கு உடன்பாடில்லை. ஆனால் அதற்கு வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி வழக்குப் போட்டது மிகை நடவடிக்கையாகும். தீண்டாமையை ஆதரித்து அவர் பேசவில்லை.

திருச்சி நடுவண் சிறைக்குள் ஒரு தனிமைச் சிறை அமைத்து, இராசீவ் காந்தி கொலை வழக்கில் 32 ஆண்டு சிறைவாசத்திற்குப் பின் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட முருகன், சாந்தன், இராபர்ட் பயாஸ், செயக்குமார் ஆகியோரைத் தமிழ்நாடு அரசு அடைத்து வைத்துள்ளது. இதைக் கண்டித்து அவர்கள் சிறைக்குள் உண்ணாப் போராட்டம் நடத்துகிறார்கள். அவர்களின் விடுதலை கோரி திருச்சியில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தலைமையில் 23.03.2023 அன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அதற்காக சீமான் உட்பட 500 பேர் மீது பிணை மறுப்புப் பிரிவில் வழக்குப் பதிவு செய்துள்ளார்கள். அதே ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றிய மருது மக்கள் இயக்கத் தலைவர் திரு. முத்துப்பாண்டி அவர்கள் மீது தனி வழக்குப் போட்டுத் தளைப்படுத்தி சிறையில் அடைத்துள்ளார்கள்.

தி.மு.க. ஆட்சியின் இவ்வழக்குகள், சனநாயக உரிமைப் பறிப்பு மட்டுமல்ல; பழிவாங்கும் தன்மை கொண்டவை. இந்த அனைத்து வழக்குகளையும் கைவிடுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைத் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

=====================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=====================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
=====================================

Labels: ,

"பழைய பக்தவத்சலம் ஆட்சியைத்தான் புதிய ஸ்டாலின் நடத்துகிறார்!" ----- பெ.மணியரசன், தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

Friday, March 17, 2023


==========================================

பழைய பக்தவத்சலம் ஆட்சியைத்தான்

புதிய ஸ்டாலின் நடத்துகிறார்!
==========================================
பெ.மணியரசன்,
தலைவர்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
==========================================

இந்திரா காந்தியின் நெருக்கடி நிலைபோல்தான் தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்காலம் இருக்கிறது. பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தக் கண்மூடித்தனமாகத் தடை போடுகிறது தி.மு.க. அரசு.

அடுத்து இந்திக்காரர்களிடம் பாராட்டுப் பெறுவதற்காகத் தமிழ்நாட்டிலேயே தமிழர்களின் அடிப்படை சனநாயக உரிமைகளைப் பறிக்கிறது தி.மு.க. ஆட்சி!

தி.மு.க.வின் அடிப்படைக் கொள்கையே தமிழின மறைப்புத் திராவிட இனக் கொள்கை! இப்போது அதன் அடுத்த கட்ட வளர்ச்சியாக “இந்தியன்” என்ற இனக்கொள்கையில் தீவிரம் காட்டி தமிழின உணர்வாளர்களைத் தாக்குகிறது.

தமிழ்நாட்டின் ஆட்சித் துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் எல்லாம், இங்கு புலம் பெயர்ந்து வாழும் இந்திக்காரர்களுக்குக் கீழ்ப்படிதல் உள்ள சேவகர்கள் என்று மாற்றியுள்ளது. மண்ணின் மக்களாகிய தமிழர்களை இந்திக்காரர்களுக்கு இடையூறு தருவோர் என்று சந்தேகப் பட்டியலில் வைத்துள்ளது.

ஆர்ப்பாட்டம், ஊர்வலம், மறியல், முற்றுகை என்பவை சனநாயகத்தில் ஏற்கப்பட்ட போராட்ட வடிவங்கள். ஆனால் இவற்றைத் தமிழ்நாட்டில் பல அமைப்புகளால் நடத்த முடியவில்லை. பா.ச.க. மட்டுமே நினைத்த நேரத்தில் இப்படிப்பட்ட வடிவங்களில் போராட்டம் நடத்த முடிகிறது. தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் அண்மைக் கால அனுபவங்களையே சான்றுகளாக எடுத்துக் கொள்ளலாம்.

தி.மு.க.தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிப்படி 75 விழுக்காடு வேலை தனியார் துறையில் தமிழர்களுக்கு வழங்கிடச் சட்டம் இயற்றக் கோரித் தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் 15.03.2023 அன்று நடந்த ஆர்பாட்டத்தைத் தடைசெய்து தோழர்களைத் தலைப்படுத்தியது காவல்துறை.

கடந்த 12.07.2022 அன்று கோவையில், தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் 90 விழுக்காடு வேலை தமிழர்களுக்கு வழங்கிடக் கோரியும் தமிழ்நாடு அரசு அதற்குச் சட்டம் இயற்றிட வலியுறுத்தியும் ஓர் ஆர்ப்பாட்டம் நடத்தியது தமிழத்தேசியப் பேரியக்கம். அஞ்சல் துறைத் தலைவர் (PMG) அலுவலகத்திற்கு அருகில், யாருக்கும் இடையூறின்றி சாலை ஓரத்தில் நடத்திய அதற்குத் தடை! சற்றொப்ப 700 பேரை தளைப்படுத்தி மண்டபத்தில் அடைத்தனர். மாலை 6:00 மணிக்கு மேல் விடுவித்தனர். இப்பொழுதெல்லாம் இந்திய அரசு நிறுவனங்களில், தமிழ்நாட்டில் 95% வேலைகள் இந்திக்காரர்களுக்கும் இன்னபிற வெளிமாநிலத்தவர்க்கும் தருகிறார்கள். அவர்கள் நடத்தும் தேர்வுகள் சூழ்ச்சியானவை!

ஓசூர் கெலமங்கலம் டாட்டா மின்னணுத் தொழிற்சாலையில் பல்லாயிரக் கணக்கில் வடநாட்டு இந்திப் பெண்களை வேலையில் சேர்க்கிறார்கள். தகுதியுள்ள தமிழ்ப் பெண்களை இன அடிப்படையில் புறக்கணிக்கிறார்கள். இந்த இன ஒதுக்கலை எதிர்த்தும் மண்ணின் மக்களுக்கு 90% வேலை கோரியும் 09.12.2022 அன்று அந்த டாட்டா ஆலை வாயிலுக்கு வெளியே முற்றுகைப் போராட்டம் நடத்தத் தமிழ்த் தேசியப் பேரியக்கம் அறிவிப்பு வெளியிட்டது. முறைப்படி அனுமதியும் கோரியது.

அந்த முற்றுகைப் போராட்டத்தைத் தடை செய்து பேரியக்கத்திற்கு எதிரான ஒடுக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டது தி.மு.க.ஆட்சி! எந்தெந்த ஊர்களில் இருந்து ஊர்திகளில் அந்த முற்றுகைக்கு ஆண்களும் பெண்களும் புறப்படுகிறார்களோ, அங்கங்கே முன்னணித் தோழர்களைக் காவல் நிலையங்களில் கொண்டு போய் உட்கார வைத்து விட்டார்கள். ஊர்த்திகளுக்கு முன் மறித்துக் கொண்டு காவல்துறையினரை நிறுத்திவிட்டனர். இது போன்ற ஒடுக்கு முறைகள் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியில்தான் அரங்கேறி இருக்கின்றன.

டாட்டா ஆலை வாயிலுக்கு வெளியே நடத்த இருந்த போராட்டத்தை இரண்டு கிலோ மீட்டர் தள்ளி பக்கத்து ஊரில் நடத்த தமிழ்தேசியப் பேரியக்கம் ஒப்புக் கொண்டு – காவல்துறையும் ஒப்புக் கொண்டு அப்போராட்டம் நடந்தது. ஆனால் அங்கே காவல் துறையினர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோரைத் தளைப்படுத்தி பத்து கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள ஒரு மண்டபத்தில் கொண்டு போய் சற்றொப்ப 600 பேரை – ஆண்களையும் பெண்களையும் அடைத்தனர்.

டாட்டாவுக்குத்தாள் பணிந்து சேவகம், தமிழர்களுக்குத் கோல் கொண்டு தாக்குதல்! இதுதான் தி.மு.க.வின் திராவிட மாடல்! இதே மு.க.ஸ்டாலின் 2021 சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கையில், ஆட்சிக்கு வந்தால் தனியார் துறையில் தமிழர்களுக்கு 75 விழுக்காடு வேலை வழங்கிடச் சட்டம் இயற்றுவோம் என்று வாக்குறுதி அளித்தார்.

அண்மையில் 27.01.2023 அன்று தமிழ்க் கடவுள் பழனி முருகன் கோயில் குடமுழுக்கு வந்தது. அக்குடமுழுக்கை உயர்நீதி மன்றத் தீர்ப்பின் படி 50 விழுக்காடு தமிழ் மந்திரம் ஓதி நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து 20.01.2023 அன்று பழனியில் நமது தெய்வத் தமிழ்ப் பேரவை ஆர்ப்பாட்டம் அறிவித்தது. அந்த ஆர்ப்பாட்டத்திற்குத் தடை விதித்தது காவல் துறை! ஒலி பெருக்கி வைக்காமல் தடுத்தது. காவல் துறையினரைக் குவித்திருந்தது. அதையும் மீறி ஆர்ப்பாட்ட முழக்கமெழுப்பினர் ஆன்மிகச் சான்றோர்கள்; பூசைகள் செய்வோர்! அவர்கள் கணிசமாகத் கலந்து கொண்டு முழக்கம் எழுப்பியதால் யாரையும் தளைப்படுத்தவில்லை காவல்துறை!

அத்தோடு பழனி முருகன் கோயில் குடமுழுக்கைக் கருவறை, வேள்விச்சாலை, கோயில் கலசம் என மூன்று இடங்களிலும் பிராமண புரோகிதர்களைக் கொண்டு சமற்கிருதத்திலேயே நடத்தியது மு.க.ஸ்டாலின் ஆட்சி! தமிழ் மந்திரம் புறக்கணிக்கப்பட்டது.

“வீழ்வது நாமாக இருக்கட்டும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்” என்று சொல்லிச் சொல்லித் தமிழை வீழ்த்தி வருகிறது தி.மு.க.! தலைவர்கள் குபேர வாழ்க்கை வாழ்கிறார்கள்.

கடந்த பிப்ரவரி (2023) இறுதியில், புது தில்லி தொடங்கி இந்தி மண்டலங்களில் பா.ச.க.வின் தகவல் தொழில் நுட்பப்பிரிவினர் (IT group) ஒரு வதந்தியைத் திட்டமிட்டு பரப்பினர். தமிழ்நாட்டில் வேலைபார்க்கும் இந்திக்காரர்களைத் தமிழின வெறியர்கள் தாக்குகிறார்கள். இதோ எட்டுப்பேர் பிணங்களாகக் கிடப்பதைப் பாருங்கள் என்று ஊடகங்களில் காட்டினார்கள்.தமிழ்நாட்டில் இந்திகாரர்கள் உயிருக்குப் பாதுகாப்பில்லை” என்றனர்.

வட இந்தியா கொந்தளித்தது. பீகார் சட்டப்பேரவையில் பா.ச.க.வினர், “தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் பிணங்கள் கிடக்கின்றன. இந்திக்காரர்கள் தமிழ் வெறியர்களால் தாக்கப்பட்டு குருதிக் காயங்களுடன் துடித்துக் கொண்டு கிடக்கிறார்கள்.” என்று ஆவேசமாகத் கத்தி, பேரவை நிகழ்சிகளை முடக்கினார்கள். அடுத்த நாளும் இதே போல் சட்டப்பேரவையைப் பா.ச.க.வினர் முடக்கினர்.

உடனே நிதிஷ்குமார் – தேஜஸ்வி அரசு தமிழ்நாட்டில் ஆய்வு செய்ய பீகார் அதிகாரிகளைக் கொண்ட குழுவை அனுப்பியது. அக்குழுவுக்குச் சேவகம் செய்ய தமிழ்நாட்டு உயர் அதிகாரிகளை அனுப்பினார் மு.க.ஸ்டாலின். மிச்சம் மீதியுள்ள தமிழ்நாட்டின் இறையாண்மையைக் காலி செய்தார்.

இந்திக்காரர்கள் தங்கியுள்ள, வேலை செய்கின்ற எல்லா இடங்களுக்கும் இண்டு இடுக்குகளுக்கும் பீகார் குழுவினரும், தமிழ்நாட்டு ஆட்சித் துறை மற்றும் காவல்துறையினரும் சென்று இந்திக்காரர்களைத் தமிழர்கள் தாக்குகிறார்களா, மிரட்டுகிறார்களா என்று கேட்டார்கள். “நாங்கள் எப்போதும் போல் இயல்பாக உள்ளோம்; யாரும் எங்களைத் தாக்கவில்லை” என்று இந்திக்காரர்கள் கூறினார்கள்.

ஆனால் அதன்பிறகும் தமிழ்நாடு காவல் துறைத் தலைமை இயக்குநர் முனைவர் சி.சைலேந்திரபாபு, காவல் உயர் அதிகாரிகளுடன் காணொலிக் கூட்டம் நடத்தி, அதில், இந்திக்காரர்கள் தங்கியுள்ள பகுதிகளில் 24 மணிநேரமும் காவல் துறையினர் ரோந்து சுற்றிப் பாதுகாப்பு தரவேண்டும். அவர்களுடன் புலனக் (வாட்ஸ் ஆப்) குழு உருவாக்கித் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டும், அவர்கள் புகார் சொன்னால் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும், அதை உடனுக்குடன் மேலதிகாரிகளுக்குத் தெரிவிக்க வேண்டும். அவர்களுக்குக் காவல் துறை தொலைபேசி எண்களை அந்தந்தப் பகுதிக் காவல்துறையினர் போய்க் கொடுக்க வேண்டும் என்பன போன்ற கட்டளைகள் இட்டார்.

“இந்திக்காரர்களுக்கு எதிராக எந்தத் தாக்குதலும் நடைபெறவில்லை என்று கள ஆய்வு செய்து நீங்கள்தான் (காவல்துறை தலைமை இயக்குநர்) அறிக்கை கொடுத்தீர்கள். பீகார் குழுவும் விசாரணை நடத்தி அதையே சொன்னது. பின்னர் ஏன் இத்தனை தீவிரக் கெடுபிடிகள் செய்கிறீர்கள். இதனால், தமிழ்நாட்டில் தனிச் சலுகை உள்ளவர்கள் இந்திக்காரர்கள்; சந்தேகப் பட்டியலில் உள்ளவர்கள் தமிழர்கள் என்ற மனநிலை இந்திக்காரர்களிடமும் தமிழர்களிடமும் உருவாகும்.

ஈரோடு, திருப்பூர், சூளகிரி, சூலூர் போன்ற இடங்களில் இந்திக்காரர்கள்தான் தமிழர்களைத் தாக்கியுள்ளார்கள். இனிமேல் இந்திக்காரர்கள் தாக்கினால் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கக் கூடத் தமிழர்கள் அச்சப்படும் சூழ்நிலையை உருவாக்கி விட்டீர்கள். அத்துடன் இந்திக்காரர்கள் வேலை செய்யும் இடங்களில் வேலை கொடுத்த தமிழர்களை மதிக்காத – அச்சுறுத்துகிற அபாயம் ஏற்பட்டுள்ளது. அருள் கூர்ந்து இந்தக் கெடுபிடிகளைக் கைவிடுங்கள். குற்றம் நடந்தால் நடவடிக்கை எடுங்கள் என்று காவல் தலைமை இயக்குநருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருந்தேன்.

இவ்வாறான கெடுபிடிகளைக் கைவிடக் கோரியும், ஸ்டாலின் அவர்களின் தேர்தல் வாக்குறுதிப்படி – தமிழ்நாட்டில் தனியார் துறையில் 75 விழுக்காடு வேலை தமிழர்களுக்கு வழங்கும் சட்டம் இயற்றக் கோரியும் 08.03.2023 அன்று தஞ்சையில் எமது தமிழ்த்தேசியப் பேரியக்க அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பு வைத்திருந்தேன்.

தஞ்சைக் கீழவாசல் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் காவல்துறையினர் எங்கள் அலுவலகத்திற்குள் வந்து செய்தியாளர் சந்திப்புக்கு அனுமதி இல்லை நிறுத்திவிடுங்கள் என்றார்கள். சொந்த அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்புக்கு அனுமதி கோரும் புதிய முறையை உருவாக்கியுள்ளார்கள். தொலைக்காட்சி, அச்சு ஊடகச் செய்தியாளர்கள் நிறையப் பேர் வந்து விட்டதால் பின்வாங்கிப் போய்விட்டார் காவல் ஆய்வாளர்.

அன்று (08.03.2023) மாலை குடந்தை சாமிமலையில் தி.மு.க. தேர்தல் அறிக்கைப்படி 75 விழுக்காடு வேலை தமிழர்களுக்கென்று சட்டம் இயற்றக்கோரி ஆர்ப்பாட்டம் செய்த தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்களைத் தளைப்படுத்தி ஆர்ப்பாட்டத்தைக் கலைத்தனர் காவல்துறையினர்.

அதே போல் 15.03.2023 அன்று மாலை 6:00 மணியளவில் தஞ்சை மாவட்டம் பூதலூர் வட்டம் செங்கிப்பட்டி – சாணூரப்பட்டியில், மேற்கண்ட 75% வேலைச்சட்டத்திற்காக நடக்க இருந்த ஆர்ப்பாட்டத்திற்குத் தடை விதித்து அதில் கலந்து கொள்ள முன் வந்தோரை தளைப்படுத்தினர் காவல்துறையினர். என்னையும், தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் நா.வைகறை, பூதலூர் ஒன்றியச் செயலாளர் தோழர் பி.தென்னவன் உட்பட சற்றொப்ப 50 பேர்களைத் தளைப்படுத்தினர்.

மேற்கண்ட எல்லாக் கைதுகளிலும் எங்கள் மீது வழக்குகள் பதிவு செய்துள்ளனர். அவற்றைக் கைவிடாமல் நீதிமன்றங்களுக்கு அனுப்பினால் தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களில் எங்கள் மீது வழக்கு நடக்கும். நாங்கள் அலைய வேண்டும். ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு வழக்கிலும் நீதிமன்ற படிகள் ஏறி இறங்கும் போது அவர்கள் மு.க.ஸ்டாலினை “வாழ்த்துவார்கள்”.

அப்படி என்ன குற்றம் அல்லது வன்முறை நாங்கள் செய்தோம்? மண்ணின் மக்களாகிய தமிழர்களுக்கும், தாய்மொழியான தமிழுக்கும் சட்டப்படி உள்ள உரிமைகளைக் கோருகிறோம். இது குற்றமா? இவையெல்லாம் குற்றம் என்கிறது ஸ்டாலின் ஆட்சி! தமிழ் இனத் தற்காப்பு உணர்வுகளைக் குற்றம் என்கிறது. தமிழ்த்தாயை முடக்குகிறது! அன்னை மண்ணிலேயே தமிழர்களை அயலார்க்கு அடிமை ஆக்குகிறது தி.மு.க. ஆட்சி!

1960களில் பக்தவத்சலம் நடத்திய காங்கிரசு ஆட்சியைத்தான் 2020களில் மு.க.ஸ்டாலின் நடத்துகிறார். அப்போது இந்தித் திணிப்பை எதிர்த்து கூடமுடியாது. போராட முடியாது. வீடுகளில் கூட கருப்பு கொடி ஏற்ற முடியாது. 1965-இல் மாணவர்களும் மக்களும் போராடிய போது சற்றொப்ப 400 பேரை சுட்டுக் கொன்றது பக்தவத்சலம் ஆட்சி! அந்த பக்தவத்சலத்திற்கு ஸ்டாலின் அப்பா சென்னையில் மணி மண்டபம் கட்டித் திறந்தார். மகனோ அதே பக்தவத்சலம் ஆட்சியை நடத்தத் தொடங்கியுள்ளார். இந்தியும் இந்திக்காரர்களும் தமிழ்நாட்டில் தனிச்சிறப்பு பெறுகின்றனர்.

அந்தக் காலத்தில் – ஆரிய ஆதிக்கத்தை வீழ்த்த இளந்தமிழர்களை அழைத்தார் பாவேந்தர்! இப்போது ஆரிய ஆதிக்கத்தை மட்டுமல்ல, அதன் புதிய பரிவாரங்களையும் எதிர்த்திட உங்களை அழைக்கிறார்!

பூட்டிய இரும்புக் கூட்டின் கதவு
திறக்கப்பட்டது! சிறுத்தையே வெளியில் வா!
எலி என உன்னை இகழ்ந்தவர் நடுங்கப்
புலியெனச் செயல் செய்யப் புறப்படு வெளியில்!
*****
மனிதரில் நீயும் ஓர் மனிதன் மண்ணன்று!
இமை திற; எழுந்து நன்றாய் எண்ணுவாய்!
தோளை உயர்த்து; சுடர் முகம் தூக்கு!
மீசையை முறுக்கி மேலே ஏற்று!
*****
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!
-பாவேந்தர்
=====================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=====================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
===================================== 

Labels: , ,

"பெண்ணுரிமை வளர்க! மண்ணுரிமை வெல்க!" ---- பெ.மணியரசன் தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம.

Sunday, March 12, 2023


பெண்ணுரிமை வளர்க!

மண்ணுரிமை வெல்க!
==============================
பெ.மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்
==============================


உலக மகளிர் நாள் மார்ச்சு 8 (2023) வந்து சில நாட்கள் கழித்து வாழ்த்துகளைச் சொல்கிறேன்; பொறுத்தருள்க. ஒரு வரியில் வாழ்த்துச் சொல்லி விடலாம். வழிகாட்டலாகக் கருத்துகள் சொல்ல விரும்பியதால் தாமதம்!

இந்திக்காரர்கள்தான் தமிழ்நாட்டின் தலைமைக் குடிமக்கள் என்பது போன்ற தமிழ்நாடு அரசின் அணுகுமுறைகள்; இந்திக்காரர்கள் தமிழ்நாட்டில் இனப்படுகொலை செய்யப்படுகிறார்கள்; தொடர்ந்து தமிழர்களால் தாக்கப்படுகிறார்கள் என்பன போன்ற ஆரியத்துவாவாதிகளின் அவதூறுப் பரப்புரைகள்; அதுவும் புதுதில்லியிலிருந்து புறப்பட்டு உ.பி, பீகார் வழியே தமிழ்நாட்டில் வலம் வரும் கொடுமை! இவற்றிற்கெல்லாம் எதிர்வினை ஆற்ற வேண்டி இருந்ததால் மகளிர் நாளுக்கான வாழ்த்துக் கட்டுரை எழுதத் தாமதம் ஏற்பட்டது.

வட அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் எழுந்த பெண்ணுரிமைப் போராட்டங்களின் வழியே பெண்ணுரிமைகள் சிறிதுசிறிதாக மேம்பட்டன. நிகரமை (சோசலிக)க் கொள்கை கொண்ட பெண்கள் இக்களத்தில் முன்நின்றனர். குறிப்பாகப் பொதுவுடைமையரான கிளாரா ஜெட்கின் அம்மையாரின் பங்களிப்பு பெரிது.

1908-ஆம் ஆண்டு நியுயார்க் நகரத்தில் வேலைநேரக் குறைப்பு, ஊதிய உயர்வு, பெண்களுக்கு வாக்குரிமை என்ற முழக்கங்களை வைத்து 15 ஆயிரம் பெண்கள் பேரணி நடத்தினர்.

1910-இல் டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் நடந்த பன்னாட்டு உழைக்கும் பெண்கள் மாநாட்டில் பேசிய கிளாரா ஜெட்கின், உலக மகளிர் உரிமை நாளாக ஒரு நாளை கடைபிடிக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார்.

பின்னர், அந்த “ஒருநாள்” என்பது இரசியப் புரட்சியுடன் தொடர்புடைய நாள் ஆனது. முதல் உலகப் போர் நடந்து கொண்டிருந்தபோது, பொதுவுடைமையரின் இரசியப்புரட்சி தொடங்கியது. 1917-இல் உலகப் போரிலிருந்து இரசியா விலகிக் கொள்ள வேண்டும் என்று ஜார் மன்னனுக்குக் கோரிக்கை வைத்து கம்யுனிஸ்ட்டுக் கட்சி போராடியது.

மக்களுக்குத் தேவை “உணவு-அமைதி; போர் அல்ல” என்று முழுக்கமெழுப்பி ஆண்களும் பெண்களும் போராடினர். ஜார் மன்னன் அரசுப் பதவியிலிருந்து விலகினார். அப்போது பதவி ஏற்ற தற்காலிக அரசு பெண்களுக்கு வாக்குரிமை அளித்தது. அந்தநாள் பழைய ஜூலியன் நாட்காட்டிப்படி பிப்ரவரி 23; திருத்தப்பட்ட கிரிகோரியன் நாட்காட்டிப்படி மார்ச்சு – 8.

இந்த மார்ச்சு 8-ஐத் தான் பன்னாட்டு மகளிர் நாளாகக் கடைபிடிக்க வேண்டும் என்று பெண்ணுரிமைப் போராளிகள் முடிவு செய்தனர். ஐ.நா. மன்றம் இதனை உலக மகளிர் நாளாக ஏற்று 1975-இல் அறிவித்தது.

இந்தப் பெண்ணுரிமைப் பன்னாட்டு நாளை ஆரியத்துவா வாதிகளில் ஒரு சாரார் ஏற்றுக் கொள்வதில்லை. மனுதர்மவாதிகள் பெண்ணுரிமையை ஏற்க மாட்டார்கள். பெண்களை எவ்வளவு முடியுமோ அவ்வளவு இழிவு படுத்திய நூல் மனுதர்ம நூல்! இப்போது கூட தினமணி நாளிதழில் 7.3.2023 அன்று வந்த நடுப்பக்கக் கட்டுரையின் தலைப்பு “நமக்கு எதற்கு மகளிர் தினம்?” என்பதாகும். இக்கட்டுரையை எழுதியவர் கோதை ஜோதிலட்சுமி என்ற பெண் எழுத்தாளர்! மகளிர் நாள் கடைபிடிப்பதை எதிர்த்து எழுதியுள்ளார்.

தமிழ்த்தேசியர்களாகிய நாம் மார்ச்சு 8 மகளிர் நாளைக் கடைபிடிக்கிறோம். அயல் நாடுகளில் உருவான நாள் என்று இதனை நாம் புறக்கணிப்பதில்லை. “உள்ளதை உள்ளபடி பார்” என்பது நமது வழிகாட்டும் மொழி! நம் தமிழ்ச் சமூகத்தில் பெண்ணுரிமையை முற்றிலுமாக மீட்க பன்னாட்டு மகளிர் நாள் பயன்பட வேண்டும் என்பது தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் நிலைபாடு.

கடந்த காலத்தில் நடந்த மகளிர் உரிமைப் போராட்டத்தை ஏன் கொண்டாட வேண்டும் என்ற வினாவுக்கு விடையாக ஐ.நா. மன்றம் 1996-இல் ஒரு முழக்கத்தை உருவாக்கியது. “கடந்த காலத்தைக் கொண்டாடுதல், வருங்காலத்திற்கான திட்டமிடல்” என்பதே அம் முழக்கம்.

நாமும் மகளிர் நாள் கடைபிடிக்கும் போது, தமிழ்ச் சமூகத்தில் பெண்ணுரிமை மீட்டல் குறித்த வேலைத் திட்டங்களை வகுத்துக் கொள்ள வேண்டும்; புதுப்பித்துக் கொள்ள வேண்டும். நம்முடைய தமிழ்மரபு என்பது முற்போக்குக் கருத்துக்கள் எங்கிருந்தாலும் ஈர்த்துத் தன்மயமாக்கிக் கொள்ள வேண்டும் என்பதாகும். வெறும் நகலெடுக்காமல் நமது சமூக உள்ளடக்கம், பண்பாட்டிற்கேற்பத் தன்மயமாக்கிக் கொள்ள வேண்டும். உண்ட உணவு தன்மயமாதல் போல்!

தமிழர் மரபில் பெண்கள்
----------------------------------
உலகெங்கும் நடந்தது போல் தமிழ்ச் சமூகத்திலும் பெண்ணுரிமைப் பறிப்புகள் நடந்துள்ளன. அதே வேளை ஆண்-பெண் சமநிலைக் கருத்துகளும் பெண்ணுரிமைக் கருத்துகளும் செயல்பாடுகளும் தமிழர்களிடையே மேலோங்கி இருந்துள்ளன. வேறு எந்த மொழியிலும் இல்லாத அளவிற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பெண்கல்வி நம் சமூகத்தில் ஓங்கி இருந்திருக்கிறது. நாற்பதுக்கும் மேற்பட்ட பெண்பாற் புலவர்கள் சங்கஇலக்கியங்களில் பாடல்கள் படைத்துள்ளார்கள். களச் செயல்பாடுகளிலும் இருந்துள்ளார்கள். பெண்களை தலைமைப்படுத்தி சிலப்பதிகாரம், மணிமேகலை என்ற இரு காப்பியங்கள் எழுந்துள்ளன.

காதலன்-காதலியை, கணவன் மனைவியை, தலைவன்-தலைவி என்று நம் முன்னோர்கள் சமநிலையில் அழைத்துள்ளார்கள். மனைவியை இல்லத்தரசி என்றும் அழைத்துள்ளார்கள். ஆனாலும் அந்நிலையிலும் ஆணுக்கு நிகராக முழு அளவில் பெண்ணுரிமை இருந்ததாகச் சொல்ல முடியாது. பிற்காலத்தில் ஏற்பட்ட கொடுமையான பெண்ணடிமைத்தனம் அக்காலத்தில் இல்லை. இக்காலத்தில் பெண்ணுரிமை மீட்பில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அது தமிழ்நாட்டில் மட்டுமின்றி, இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் மிகக் கொடுமையான பெண்ணுரிமை மறுப்புகள் இக்காலத்திலும் இருக்கின்றன.

தனக்குரிய கணவனைத் தேர்வு செய்யும் உரிமை பெருமளவில் பெண்களுக்கு இல்லை. அதில் காதல் உரிமை என்பது பெரிதும் மறுக்கப்படுகிறது. பட்டியல் வகுப்பு இளைஞனை இதர வகுப்புப் பெண் காதலித்துத் திருமணம் செய்து கொண்டால், இருவரையுமோ அல்லது இருவரில் ஒருவரையோ கொலை செய்யும் போக்கு அண்மைக் காலங்களில் பேரதிர்வுகளை உண்டாக்கின.

சமூக இலட்சியமில்லாத பதவி-பணவேட்டை அரசியல் நிலவுகிறது. சமூகத்தைச் சீர்திருத்துவதோ, மாற்றி அமைப்பதோ இன்றைய தமிழ்நாட்டு அரசியலின் இலட்சியம் அல்ல. சமூகத்தில் உள்ள பலவீனங்களைப் பயன்படுத்திக் கொண்டு பதவிகள் அடைவது, பணக் கொள்ளை நடத்துவது என்பதுதான் பெரிதும் இன்றைய அரசியல்வாதிகளின் இலக்கு!

நேரடியாகப் பதவி அரசியலில் ஈடுபடாமல் கருத்துப் பரப்புரைக் களத்தில் செயல்படும் “முற்போகாளர்” மற்றும் “இடது சாரிகள்” எனப்படுவோர் பெரும்பாலும் மேற்கண்ட பதவி-பண வேட்டை அரசயில்வாதிகளின் ஏதோ ஒரு பிரிவுக்குப் பக்கவாத்தியம் வாசிப்பவர்களாக செயல்படுகின்றனர்.

இவர்கள் எல்லோரும் பெண்ணுரிமை மீட்பில் இதுவரை ஏற்பட்ட முன்னேற்றங்களையே இமயச் சிகரச் சாதனைகளாக வர்ணித்துக்கொண்டு பரப்புரை செய்வோர் ஆவர். “இந்தச் சாதனைகளுக்கு” எல்லாம் யாராவது ஓர் தலைவரை, கட்சியை முழுக்காரணமாக்கி மக்களுக்கு மூளைச் சலவை செய்வர்!

சமூகத்தில் சமகாலத்தில் நடைபெறும் இவ்வாறான திருகல்-மருகல்களைப் புரிந்து கொண்டு தமிழ்த்தேசியர்கள் செயல்பட வேண்டும். அதே வேளை பெண்ணுரிமை மீட்பில் தமிழ்த்தேசியர்கள் நடைமுறை வேலைத் திட்டங்களை வகுத்துக் கொண்டு அவற்றைக் கடைபிடிக்க வேண்டும்.

“மக்கள் அனைவரும் சமம்; தமிழர்கள் அனைவரும் சமம்; ஆணும் பெண்ணும் சமம்” என்பது தமிழ்த்தேசிய அறம்!

இது மேடை முழக்கமாய், வெளிப்பகட்டு வெற்று ஆரவாரமாய் நீர்த்துப் போகக் கூடாது. தமிழ்த்தேசியத்தை ஏற்றுக் கொண்ட ஒவ்வொரு ஆணும் தங்கள் செயல்பாட்டின் வழி பெண்ணுரிமை மீட்புக்கு பங்களிக்க வேண்டும். பெண்ணுரிமை மீட்பு ஒவ்வொரு வீட்டிலிருந்து தொடங்க வேண்டும்.

தமிழ்நாட்டில் பெண்களை நன்கு படிக்க வைக்கிறார்கள். அது மகிழ்ச்சியான செய்தி. அதே வேளை அப்பெண்கள் வீட்டிற்குள் ஆணுக்கு நிகரான சமஉரிமையை இன்னும் முழுமையாய்ப் பெறவில்லை. சமையல் வேலைகளில் ஆண்களும் இயல்பாகப் பங்கெடுக்கும் போதுதான் ஆண்-பெண் சமநிலைக்கான அடிப்படைகள் அமையும். சமையலும், குழந்தை வளர்ப்பும் பெண்களுக்கு மட்டுமே உரியவை என்பதில் மாற்றம் வரவேண்டும். இவற்றை ஆணும் பெண்ணும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

ஏதாவது புதிய பாணியில் பெண் பிள்ளைகள் உடை உடுத்தினால் உடனே ‘ஆபாசம்’ என்று வசைபாடாமல், பொறுமையாகக் கவனித்துப் பின் கருத்துச் சொல்லலாம். இறுக்கமான முழுக்கால் சட்டை (leggings) இளம் பெண்கள் அணியத் தொடங்கிய காலத்தில் “ஆபாசம்” என்ற ஆணோசை அதிர்வுகளை உண்டாக்கியது. இப்போது அவ்வுடை இயல்பாகிவிட்டது.

மனிதர்கள் தங்களை அழகுபடுத்திக் கொள்வது ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள பொது உளவியல். பிறர் கண்ணில் நாம் அழகாகத் தெரிய வேண்டும் என்பதே இதன் சாரம். இது தவறில்லை. ஆனால் மிகை ஈர்ப்புக்காக மிகை ஒப்பனை தேவை இல்லை.

இந்த மகளிர் நாளை ஒட்டி (2023 மார்ச்சு 😎 நடிகை குஷ்பு ஒரு செய்தி குறிப்பிட்டிருந்தார். அவர் இப்போது பாசகவில் இருக்கிறார். அவரை அனைத்திந்திய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக மோடி அரசு அமர்த்தியுள்ளது. அந்நாளை ஒட்டி குஷ்பு பேசியது அது. அவருடைய தந்தையார் குஷ்புவுக்கு 8 அகவையிலிருந்து 15 அகவை வரை பாலியல் தொல்லைகள் தந்தார் என்றார். அதே வேளை குஷ்புவின் தாயார் தன் கணவரைத் தெய்வமாகப் போற்றினார் என்றும் கூறினார்.

குஷ்புவின் அரசியல் தேர்வு குறித்து அவர்மீது, எனக்குத் திறனாய்வுண்டு. ஆனால் அவர் சொன்ன இச்செய்தியை நாளேட்டில் படித்தபோது குஷ்புவின் மீது ஆழந்த இரக்கமும் மதிப்பும் ஏற்பட்டது.

வீட்டில் தொடங்கி வீதிவெளி வரை நிலவும் ஆணாதிக்கத்தின் வடிவங்களில் அதுவும் ஒன்று!

மனைவியின் விருப்பம் இல்லாமல் கணவனே கட்டாயப் பாலுறவு கொள்ளக் கூடாது, அப்படிச் செய்தால் அது வன்முறை என்று உச்சநீதிமன்றத் தீர்ப்பு அண்மையில் வந்தது. இது சரியான தீர்ப்புதான்!

தமிழ்த்தேசியர்கள் இவற்றில் எல்லாம் கவனம் செலுத்தி பெண்ணுரிமை அடிப்படை மனித உரிமை என்றுணர்ந்து பேணவேண்டும்.

ஆணும் பெண்ணும் இணைந்துதான் பெண்ணுரிமை மீட்புப் போராட்டம், உழைப்புப் பகிர்வுக் களப்பணிகள் முதலியவற்றைச் செய்ய வேண்டும். ஒருவரை ஒருவர் வீழ்த்தும் பகை முரண்பாடல்ல இது! பெண்ணுரிமை மீட்புப் போராட்டத்தின் இந்தச் சிக்கல்களை ஆணும் புரிந்து கொள்ள வேண்டும், பெண்ணும் புரிந்து கொள்ள வேண்டும். இப்போராட்டத்தில் இருபால் இணக்கம் ஏற்பட வேண்டுமாயின் முதலில் ஆண்கள் பெண்ணுரிமைப் போராட்டங்களுக்கும் செயல்பாடுகளுக்கும் முன்கை எடுக்க வேண்டும். இதை முன்நிபந்தனையாகக் கூறவில்லை. ஆணின் பங்களிப்பு அதிகமாக வேண்டும் என்பதற்காகக் கூறுகிறேன்.

பெண்களின் சமூகப் பொறுப்பு
-------------------------------------------
பிள்ளைகளை ஆங்கில வழியில் படிக்க வைத்து, தமிழைப் புறக்கணிக்கும் போக்கு தமிழ்நாட்டுக் குடும்பங்களில் பெருகிவிட்டது. தமிழ் உரிமை பேசும் ஆண்களிடம் “உங்கள் பிள்ளைகளையே தமிழ்ப்புறக்கணிப்பில் ஈடுபடுத்தலாமா” என்று கேட்டால் பெரும்பாலோர் சொல்லும் விடை “வீட்டில் துணைவியார் வற்புறுத்தல்” என்பதுதான். “குடும்ப அமைதியைக் கெடுக்க வேண்டாம் என்று நானும் ஒத்துப் போய்விட்டேன்” என்கிறார்கள்.

தமிழ் இனம், தமிழ்மொழி, தமிழர் தாயகம் முதலிய சமூக இலட்சியங்களில் பெண்கள் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும். இதுதான் புதுமைப் பெண்ணின் அடையாளம்!

அதேபோல் பிள்ளைகளுக்குத் தூய தமிழ்ப்பெயர்கள் சூட்டுவதைத் தவிர்த்து, சமற்கிருதப் பெயர்களைச் சூட்டும் இழிவு, கொள்ளை நோய்போல் தமிழ்ச் சமூகத்தில் பரவிவிட்டது. பிராமணப் புரோகிதரிடம் போய், பிள்ளைக்குப் பெயர் வைக்க முதலெழுத்து அல்லது முழுப்பெயர் கேட்பது, அவர்கள் ஆரிய சமற்கிருதப் பெயர்களைச் சொல்வது, அவற்றைச் சூட்டுவது என்ற நடைமுறை பெருகிவிட்டது. திராவிட மாடல் ஆட்சிகள்தாம் ஐம்பதாண்டுகளுக்கு மேல் இங்கு நடக்கின்றன. இக்காலத்தில் ஆரிய ஊடுருவல் எல்லாத் துறையிலும் அதிகமாகிவிட்டது.

ஆரிய ஊடுருவலைத் தடுத்தால்தான் தமிழ்ச்சமூகம் தற்சார்புள்ள தனித்தன்மையுள்ள இனமாக நீடிக்க முடியும். ஆரிய ஊடுருவலை அடையாளம் காண்பதில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான பொறுப்பு வேண்டும். ஆண்களில் சிலர் பெண்களின்மீது பொறுப்புக் கூறி நழுவிக் கொள்ளும்போக்கும் உண்டு.

“பெண்ணடிமை தீரும் மட்டும், பேசும் திருநாட்டின் மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே” என்றார் பாவேந்தர். தமிழ்த்தேசியத்தை முன்னெடுப்பதில் பெண்கள் தன்முயற்சியுடன் செயற்களம் வரவேண்டும்.

அடுத்து குடும்ப உறவுகளில் விரிசல் வரும்போது பெண்களையே காரணமாகக் கூறுகிறார்கள். பழைய கூட்டுக் குடும்பங்களை மீட்க முயல வேண்டியதில்லை. கணவனுடைய பெற்றோர் அல்லது மனைவியுடைய பெற்றோர் கைவிடப்படக் கூடாது. கணவன் தாய்-தந்தையைக் குடும்பத்தோடு இணைத்துப் பாதுகாக்க மனைவி துணையாக இருக்க வேண்டும். அதேபோல் மனைவியின் தாய்-தந்தையைப் பாதுகாக்க வேண்டிய சூழல்களில் அவர்களை அழைத்து வந்து குடும்பத்தில் வைத்துப் பராமரிக்க கணவன் துணையாக இருக்க வேண்டும். அகவை முதிர்ந்த அன்னை தந்தையரை அனாதைகள் போல் ஆக்கிவிடக் கூடாது.

பெண்ணுரிமை வளர்க! பேசுந் தமிழ்நாட்டின் மண்ணுரிமை வெல்க!

=====================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=====================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
=====================================

Labels: , ,


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்