<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d6955529389241309188\x26blogName\x3d%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86.%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://thozharmaniyarasan.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com/\x26vt\x3d-8408640130511538487', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

"இந்தியத்தாலும் , திராவிடத்தாலும் தமிழர் மறுமலர்ச்சி முடக்கப்பட்டது" -- தோழர் பெ.மணியரசன் பேச்சு.

Sunday, May 1, 2016
"இந்தியத்தாலும் திராவிடத்தாலும் தமிழர் மறுமலர்ச்சி முடக்கப்பட்டது" 
-- தோழர் பெ.மணியரசன் பேச்சு.

திருவண்ணாமலையில் பல்லாண்டுகளாகத் தொடர்ந்து செயல்பட்டுவரும் திருவண்ணாமலைத் தமிழ்ச் சங்கம் 23.04.2016 காரிக்கிழமை மாலை, தூயதமிழ்க்காவலர் கு.மு. அண்ணல்தங்கோ அறக்கட்டளைச் சொற்பொழிவு நடத்தியது. அதில், “தமிழர் மறுமலர்ச்சியும் அண்ணல்தங்கோவும்’’ என்ற தலைப்பில் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் உரையாற்றினார்.

திருவண்ணாமலை வேங்கிக்கால் ஆண்டாள் -- சிங்காரவேலு திருமண மண்டபத்தில் நடந்த அண்ணல் தங்கோ நினைவுச் சொற்பொழிவிற்குத் திருவண்ணாமலைத் தமிழ்ச் சங்கத் தலைவர் தோழர் அருள்வேந்தன் பாவைச்செல்வி தலைமை தாங்கி உரையாற்றினார். சங்கத்தின் செயலாளர் திரு. கே. காதர்சா வரவேற்புரை நிகழ்த்தினார்.

அண்ணல்தங்கோ அவர்களின் மகன்வழிப் பெயர்த்தி அருள்விழி கணவரும், திருவண்ணாமலைத் தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவருமான திரு. சீனி. கார்த்திகேயன் முன்னிலை வகித்து உரையாற்றினார். தமிழ்ச்சங்கத்தின் பொருளாளரும் ஆண்டாள் -- சிங்காரவேலு திருமண மண்டபத்தின் உரிமையாளருமான திரு. சிங்கார. துரை உரையாற்றினார்.
அண்ணல்தங்கோ பெயரன் அருட்செல்வன்
அண்ணல்தங்கோ அவர்களின்  மகள் நாவுக்கரசி வழிப் பெயரனும், ”தூயதமிழ்க்காவலர் கு.மு. அண்ணல்தங்கோ” என்ற தலைப்பில் தம் தாத்தாவின் வரலாற்று நூல் எழுதியவருமான தோழர் செ. அருள்செல்வன், அண்ணல்தங்கோ குறித்த அறிமுகவுரை ஆற்றினார். அதன் சுருக்கம் வருமாறு;

தூயதமிழ்க்காவலர் அண்ணல்தங்கோ அவர்கள் இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு ஐந்து முறை சிறைக்குப் போனார். மராட்டியத்தின் நாகபுரி, பிடல், சாகர், கேரளத்தின் கண்ணனூர் மற்றும் வேலூர், பெல்லாரி போன்ற பல சிறைகளில் மாற்றி மாற்றி வைக்கப்பட்டார்.
பெரியாரின் குடிஅரசு இதழில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். 1927-இல் பார்ப்பனப்  புரோகிதரை நீக்கித் தமது திருமணத்தைத் தாமே தலைமை தாங்கி நடத்தி, புரோகித நீக்கத் திருமணத்திற்கு முன்னோடியாக விளங்கினார் அண்ணல்தங்கோ.

மறைமலை அடிகளாரின் தனித்தமிழ் இயக்கத்தில் பற்றுக் கொண்டு, தனித்தமிழ் பேசியும் எழுதியும் வந்தார். சமற்கிருதப் பெயர்களைத் தமிழில் மாற்றினார். முதலில் சாமிநாதன் என்ற தம் பெயரை அண்ணல்தங்கோ என்று மாற்றினார். தி.மு.க.வின் தலைவர்கள் பலரின் பெயர்களையும் மாற்றினார். சின்னராஜ் - என்ற பெயரை சிற்றரசு என்று மாற்றினார். சிந்தனைச்சிற்பி என்று சிறப்பிக்கப்பட்ட சிற்றரசு தாம் அவர். டார்பிடோ ஜனார்த்தனம் பெயரை மன்பதைக் கன்பன் என்று மாற்றினார்.

கிருபானந்தவாரியாரை அருளின்பக் கடலார் என்பார். ரெங்கசாமியை அரங்கண்ணல் என்று மாற்றியவரும் அண்ணலே! கலைஞர் கருணாநிதியின் பெயரை அருட் செல்வம் என்று மாற்றினார். இதைக் கலைஞரே பலமுறை தெரிவித்துள்ளார்.

“திராவிடர்” என்று சொல்லக் கூடாது, தமிழர் என்றுதான் சொல்ல வேண்டும். திராவிடர் என்பது இனப்பெயர் அன்று என்று பெரியாரிடமும் அண்ணாவிடமும் பலமுறை போராடினார் அண்ணல்தங்கோ. திராவிடர் கழகம் என்று 1944-இல் சேலம் மாநாட்டில் பெயர் சூட்டப்பட்ட போது, அதை எதிர்த்தவர்களில் அண்ணல்தங்கோவும் ஒருவர்.

பெரியார், அண்ணா, பாவேந்தர் பாரதிதாசன், பாவாணர், ஜி.டி. நாயுடு, சர் முத்தையா செட்டியார், முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம், நாவலர் சோமசுந்தர பாரதியார் உள்ளிட்ட பெருமக்கள் பலருடன் நெருங்கிப் பழகியவர் அண்ணல்தங்கோ. “தமிழ் நிலம்” என்று ஏடு நடத்தினார். தமிழ்நாட்டு எல்லைக் காப்பு மாநாடு நடத்தினார். தமிழ்நாடு பெயர் மாற்ற மாநாடு நடத்தினார். 1904 ஏப்ரல் 12-இல் பிறந்த அண்ணல்தங்கோ, 04.12.1974-இல் காலமானார்.
இவ்வாறு தோழர் அருட்செல்வன் பேசினார்.

தோழர் பெ. மணியரசன் ஆற்றிய அண்ணல்தங்கோ நினைவுச் சொற்பொழிவின் ஒருபகுதி எழுத்து வடிவில் கீழே தரப்படுகிறது. சிற்சில இடங்களில் தேவை கருதி கூடுதல் செய்தி கூறப்பட்டுள்ளது. உரை வருமாறு:

தமிழர் மறுமலர்ச்சிக் காலத்தின் நாயகர்களில் ஒருவர் அண்ணல்தங்கோ. ஆனால் அவ்வாறு அவர் தமிழ்நாட்டு வரலாற்றில் மக்கள் பரப்பில் அறியப் படாமல் இருக்கிறார். அதிகாரம் பெற்றவர்கள் தங்களுக்குச் சார்பான ஒற்றைமுக வரலாற்றையே பெரும்பாலும் பதிவு செய்கின்றனர். காங்கிரசாரும் அப்படித் தான் செய்தனர். திராவிட இயக்கத்தவரும் அப்படித்தான் செய்தனர்.

ஒற்றை இயக்கப் போக்கை, ஒற்றைக் கதாநாயகப் போக்கையே அவர்கள் பதிவு செய்கின்றனர். இங்கு பேசிய அண்ணல் தங்கோ பெயரன் அருட்செல்வன், இந்திய விடுதலைப்போரில் ஈடுபட்டு சிறை சென்றதற்காகக் காங்கிரசாட்சி அண்ணல் தங்கோ அவர்களுக்கு 15 ஏக்கர் நிலம் வழங்கியதாகவும், “நிலத்திற்காக நான் போராடவில்லை” என்று கூறி 15 ஏக்கர் நிலத்தை வாங்க அண்ணல்தங்கோ மறுத்துவிட்டார் என்றும் கூறினார். வேலூர் மாவட்டத்தில் அண்ணல் தங்கோ பெயரை ஒரு பள்ளிக்கோ அல்லது பொது நூலகத்திற்கோகூட சூட்டவில்லை என்று வருத்தத்துடன் குறிப்பிட்டார்.

1938, 1965 இந்தி எதிர்ப்பு மொழிப் போராட்ட ஈகியர்க்குக் கூட உரியவாறு நினைவுச் சின்னங்கள் எழுப்பப்படவில்லை. வரலாற்றுச் சிறப்புமிக்க அப்போராட்டங்கள் பாடப் புத்தகங்களில் ஏற்றப் படவில்லை. வடக்கெல்லை, தெற்கெல்லை மீட்புப் போராட்டங்கள் - அவற்றில் நடந்த ஈகங்கள், மீட்கப்பட்ட தமிழர் தாயக நிலங்கள் ஆகியவைகூட பாடப் புத்தகங்களில் சேர்க்கப்படவில்லை.

இதற்காகக் காங்கிரசாரையும் திராவிட இயக்கத் தாரையும் விமர்சிப்பதோடு நாம் நின்றுவிடக் கூடாது. நாம் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுகளை, நாயகர்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை மேற்கொள்ள வேண்டும்.

அண்ணல்தங்கோவுக்கு ஒரு பெயரன் இருந்து, அந்தப் பெயரனுக்கும் எழுத்தாற்றல் இருந்ததால் அவரது வாழ்க்கை வரலாறு நமக்குத் தெரிய வந்துள்ளது. அப்படிப்பட்ட குடும்ப வாரிசு இல்லை என்றால் அண்ணல்தங்கோவின் புகழ்மிக்க வரலாறு பதிவாகி இருக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

சாதி ஒழிப்பு, சமூக சமத்துவம், தமிழர் வரலாற்று மீட்சி ஆகியவற்றில் தடம் பதித்த அயோத்திதாசப் பண்டிதர் அவர்களைக்கூட அண்மைக் காலமாகத் தான் நாம் அறிந்து வருகிறோம்.
எமது தமிழ்த் தேசியப் பேரியக்கத்தைப் பொறுத்த வரை, இயன்றவரை நம் வரலாற்று நாயகர்களை மீண்டும் மீண்டும் மக்களிடம் கொண்டு செல்ல முயன்று வருகிறது.

அண்ணல்தங்கோ அவர்களின் நூற்றாண்டு நிறைவுற்ற நிலையில் 2005ஆம் ஆண்டு சென்னையில் நடந்த தமிழ்நாடு தழுவிய மாநாட்டில் (த.தே.பொ.க.) அண்ணல்தங்கோ வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கத்தை அச்சிட்டு வெளியிட்டோம். அண்ணலின் மகள்கள் --மருமகன்கள் - பேரப்பிள்ளைகள் ஆகியோரை அழைத்து மாநாட்டில் சிறப்பித்தோம்.

கடந்த சனவரி 24-இல் (2016) மதுரையில், தமிழ்த் தேசியப் பேரியக்கம் நடத்திய மொழிப்போர்-50 மாநாட்டில், மொழிப்போரின் முதல் தழல் ஈகி கீழப்பழூர் சின்னச்சாமி துணைவியார் கமலம் - மகள் திராவிடச்செல்வி, 1965 மொழிப்போர் ஈகியரான விராலிமலை சண்முகம் அண்ணன் மாணிக்கம், கீரனூர் முத்து, சத்தியமங்கலம் முத்து, ஆசிரியர் வீரப்பன், பீளமேடு தண்டபாணி உள்ளிட்ட ஈகியர்களின் குடும்பத்தினரை அழைத்து சிறப்புச் செய்தோம். விருகம்பாக்கம் அரங்கநாதன் மகன்களை சென்னையில் எமது அலுவலகத்திற்கு அழைத்து சிறப்புச் செய்தோம்.

மறைமலை அடிகளார் பெயரன் திரு. மறை. தி. தாயுமானவன், முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் மகன் ஐயா கதிரேசன், அண்ணல்தங்கோ பெயரன் தோழர் அருட்செல்வன், மொழிப்போர் பேராசிரியர் சி. இலக்குவனார் அவர்களின் மகன் திரு. இலக்குவனார் திருவள்ளுவன், பாவலரேறு பெருஞ் சித்திரனார் மகன் திரு. மா. பூங்குன்றன் ஆகியோரை அழைத்துச் சிறப்புச் செய்தோம். பாவாணர் அவர்களின் மகன் திரு. தே. மணி அவர்களை அப்போது எங்களால் தொடர்பு கொள்ள இயல வில்லை. பின்னர் தொடர்பு கொண்டோம்.

தமிழ் இனத்திற்கு, தமிழ் மொழிக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க பங்களிப்பு வழங்கிய நாயகர்கள் அனைவ ரையும் தொடர்நது, அடுத்தடுத்த தலைமுறையினரிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பதில் நாங்கள் எங்களால் இயன்ற பணிகளைச் செய்து வருகிறோம். விழிப்புணர்வு பெற்ற தமிழர்கள் அனைவரும் இப்பணியில் ஈடுபட வேண்டும்.

மறுமலர்ச்சிக் காலம்
தமிழர் மறுமலர்ச்சி வள்ளலாரிடமிருந்து தொடங்குகிறது. எதுவுமே திடீரென்று தான் தோன்றியாகத் தோன்றுவதில்லை. அதற்கு முன்னர் அந்த மாற்றத்திற்கான சிறுசிறு கூறுகள் முளை விட்டிருக்கும். எல்லாவற்றிலும் பன்மை இருக்கிறது. அணுவுக்குள்ளும் பன்மை இருக்கிறது. எனவே, வள்ளலார்க்கு முன்பு மறுமலர்ச்சிக்கான கூறுகள் சிறுசிறு வடிவில் தோன்றின. வள்ளலாரிடம் ஓரளவு வளர்ச்சி பெற்ற வடிவம் பெற்றது தமிழர் மறுமலர்ச்சி!

வர்ணாசிரம எதிர்ப்பு - பார்ப்பனிய எதிர்ப்பு - சாதி எதிர்ப்பு - மனிதநேய ஒருமைப்பாடு - உயிர்நேயம் -  மக்கள் மொழியில் கவிதை-அழகுடன் செய்யுள்கள் என்பன வள்ளலார் மறுமலர்ச்சிப் பங்களிப்பின் சாரம்.
“வேதாகமங்கள் என்று வீண்வாதம் ஆடுகின்றீர்
வேதாகமத்தின் விளைவறியீர் - சூதாக
சொன்னவலால் உண்மைவெளி தோன்ற
 உரைத்தலிலை
என்ன பயனோ இவை’’
என்று கேட்டார் வள்ளலார்.
“சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே
சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே
ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்
அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ கலவே”
என்று பாடி சாதி, சமயச் சழக்குகளை விட்டு வெளியேறுவீர் என்று இடித்துரைத்தார் வள்ளலார்.

புலால் உண்ணாமை என்ற ஒரு நிபந்தனை மட்டும் போட்டுவிட்டு, மற்ற எந்த வேறுபாடும் இன்றி ஆண், பெண், சாதி, சமயம், மதம் கடந்து அனைவரும் உறுப்பி னராகக் கூடிய ஒரு சோசலிச (நிகரமை) சங்கமாக சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை நிறுவினார். உருவ வணக் கத்தைத் தவிர்த்து ஒளி வணக்கத்தைப் பரப்பினார்.

19 ஆம் நூற்றாண்டில் சென்னை லௌகீக சங்கம் ((Secular Society)) என்ற பெயரில் பகுத்தறிவு இயக்கம் நடத்திய கற்றறிவாளர்கள் மற்றும் அத்திப்பாக்கம் வெங்கடாசல நாயக்கர் போன்றவர்கள் தமிழர் மறுமலர்ச்சியின் முன்னோடிகள்.

அயோத்திதாசப் பண்டிதர் பவுத்தத்தில் நின்று ஒரு பைசாத் தமிழன், தமிழன் என்ற பெயர்களில் இதழ் நடத்தி சாதி, சமய பேதங்களை, ஒடுக்குமுறைகளைச் சாடினார். தமிழர்களின் வரலாற்றுப் பெருமிதங்களை, தமிழர் அறத்தைப் போற்றினார்.

இந்த மரபின் அடுத்த பாய்ச்சலாகத்தான் பிராமண குலத்தில் பிறந்த பாரதியே “பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே“ என்று பாடினார். பாரதியாரும் தமிழர் மறுமலர்ச்சிப் பாவலர்தாம்.
மறைமலை அடிகளார் சமரச சுத்த சன்மார்க்க சங்கம் என்பதைத் தனித் தமிழில் பொதுநிலைக் கழகம் என்று பெயர் மாற்றி நடத்தினார். 1916-இல் தனித்தமிழ் இயக்கம் நிறுவினார். தமிழில் சமற்கிருதம் உள்ளிட்ட பிறமொழி கலக்காமல் - தூயதமிழில் பேசுவது, எழுதுவது என்பதுடன், குடும்ப மற்றும் கோயில் சடங்குகளைப் பார்ப்பனப் புரோகிதரை நீக்கித் தமிழரைக் கொண்டு நடத்த வேண்டும் என்ற சீர்திருத்தத்தையும் பரப்பினார். “சாதி வேற்றுமையும் போலிச் சைவரும்’’ என்று நூல் எழுதி சாதி வேறுபாட்டை எதிர்த்தார்.
இவ்வாறு ஆன்மிக வழிப்பட்டும் பகுத்தறிவு வழிபட்டும்  வளர்ந்த தமிழர் மறுமலர்ச்சிக்கு 20 ஆம் நூற்றாண்டில்  அரசியல் தளத்தில் இயங்கும் வாய்ப்பு வந்தது.

அரசியல் தளம் இரு அரங்குகளில் செயல்பட்டது. ஒன்று வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்த இந்திய விடுதலை அரசியல்; இன்னொன்று பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு, இடஒதுக்கீடு - சமூகநீதி, பகுத்தறிவு, இந்திய எதிர்ப்பு, பெண்ணுரிமை முதலிய கூறுகளைக் கொண்ட சுயமரியாதை - திராவிட இன அரசியல்.

இந்திய விடுதலை இயக்கத்தால் ஈர்க்கப்பட்டவர் அண்ணல்தங்கோ. இந்திய விடுதலை சார்ந்த போராட்டங்கள் பலவற்றில் கலந்து கொண்டு ஐந்து முறை இந்தியாவின் பல்வேறு சிறைகளில் இருந்தவர் அவர்.
வெள்ளை ஏகாதிபத்தியத்தை விரட்டி அடிக்கும் விடுதலைப் போராட்டம் முற்போக்கானது, தேவையா னது. ஆனால் அந்த விடுதலைப் போராட்டத்தின் ஊடாக - வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல், பாரதமாதா, வேதகாலப் பாரதப் பெருமை போன்ற ஆரியப் பார்ப்பனியப் பெருமிதங்களைத் திணித்தனர். இந்திய தேசியம் -- இந்தியன் என்ற புனைவுகளை விடுதலைப் போராட்டத்தில் கலந்து விட்டனர்.

அண்ணல்தங்கோ அவர்களுக்கு இந்த பாரதமாதா பசனை - இந்தித் திணிப்பு - தமிழின மறைப்பு போன்றவை நெருடலாக இருந்தன. அண்ணல்தங்கோ மட்டுமல்ல, விடுதலைப் போராட்ட ஈர்ப்பால் காங்கிரசிலிருந்த திரு.வி.க., நாவலர் சோமசுந்தர பாரதியார் போன்ற தமிழறிஞர்கள் பலர்க்கும் பாரதமாதா பசனை, இந்தித் திணிப்பு, பார்ப்பனிய மேலாதிக்கம் போன்றவை ஒவ்வாமல் போயிற்று.

பெரும்பாவலர் பாரதியார் ஒருபக்கம் விதிவிதியே தமிழச்சாதியை என்செய நினைத்தாய் என்று பாடினார். செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே என்று பாடினார். இன்னொரு பக்கம் பாரதமாதா புகழும் பாடினார். ஆரியப் பெருமிதங்களையும் பாடினார். செப்புமொழி பதினெட்டுடையாள் ஆனால் சிந்தை ஒன்றுடையாள் என்று பாரத தேசியத்தை புகழ்ந்து பாடல்கள் யாத்தார்.
இந்தியா ஒரு தேசமல்ல. இந்தியாவில் பல தேசங்கள் இருக்கின்றன. வெள்ளை ஏகாதிபத்தியம் தனது நிர்வாக வசதிக்காக - இந்தியத் துணைக் கண்டத்தை ஒற்றை நாடாக்கி ஆட்சி செய்தது. காங்கிரசார் இந்திய தேசத் தந்தை என்று காந்தியைச் சொல்கிறார்கள். உண்மையான இந்தியத் தந்தை இராபர்ட் கிளைவ்தான்! பீரங்கியாலும் துப்பாக்கி யாலும் மண்ணுக்குரிய மன்னர்களைக் கொன்றும் வென்றும் இந்தியாவை நிர்மானித்ததில் இராபர்ட் கிளைவின் பீரங்கிக்குப் பெரும் பங்குண்டு!

காங்கிரசில் இருந்தாலும் சேரன்மாதேவி குரு குலத்தில் பார்ப்பன மாணவர்களுக்கு தனிப்பந்தி - தனி உணவு, பார்ப்பனரல்லாதார்க்குத் தனி உணவு --தனிப் பந்தி என வ.வே.சு. அய்யர் கடைபிடித்த வர்ணாசிரம வாதத்தை எதிர்த்த போராட்டத்தில் அண்ணல்தங்கோ கலந்து கொண்டார். தமது திருமணத்தில் 1927-இல் பார்ப்பனப் புரோகிதரைப் புறக்கணித்துத் தாமே தலைமை தாங்கி சீர்திருத்தத் திருமணம் செய்து கொண்டார். தூயதமிழில் பேசுவது எழுதுவது - பா இயற்றுவது என்ற பயிற்சி கொண்டார்.
தமிழ் மொழி, தமிழினம் ஆகியவற்றைப் பின்னுக் குத் தள்ளி மறைத்து, ஆரியப் பார்ப்பனியம், சமற் கிருதம், இந்தி, வடவர்கள் ஆகியோரை மேலாதிக் கத்தில் வைத்த காங்கிரசிலிருந்து வெளியேறத் தருணம் பார்த்துக் கொண்டிருந்தார் அண்ணல் தங்கோ. காங்கிரசுக் கட்சிக்குள் முரண்பாடுகள் முற்றியபின், அதைவிட்டு வெளியேறினார்.

பெரியாருடன் இணைந்து - சுயமரியாதை - இயக்கம் நீதிக்கட்சி செயல்பாடுகளில் தீவிரமாகப் பங்கேற்றார். பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு - சாதி ஒழிப்பு - பகுத்தறிவு  - பெண்ணுரிமை போன்ற முற்போக்கான பெரியார் கொள்கைகளில் அண்ணல்தங்கோ அவர்களுக்கு முழு ஈடுபாடு ஏற்பட்டது. ஆனால் பெரியார் “திராவிடர்’’ என்று ஓர் இனப்பெயரைத் திணித்தது அண்ணலுக்கு முரண்பாடாக இருந்தது.

தமிழினத்திற்கு வரலாறு விட்ட சாபம் போலும்! முற்போக்கு இலட்சியங்களுடன் தமிழின மறுப்பு -- தமிழ்மொழி மறைப்புக் கொள்கைகளும் சேர்ந்தே வந்தன. வெள்ளை ஏகாதிபத்தியத்தை விரட்டுதல் என்ற முற்போக்குக் கொள்கையுடன் பார்ப்பனியம், பாரததேசியம் என்பவை இணைந்து வந்தன. பார்ப்பன எதிர்ப்பு, பாரத தேசிய எதிர்ப்பு, பகுத்தறிவு என்ற முற்போக்குக் கொள்கைகளுடன் வந்த சுயமரியாதை இயக்கம், “திராவிடர்” என்ற தமிழின மறுப்புக் கொள்கையுடன் சேர்ந்து வந்தது. தமிழின மறுப்புமின்றி, தமிழ்மொழி எதிர்ப்பையும் பெரியார் மேற்கொண்டிருந்தார். தமிழ் காட்டுமிராண்டி மொழி என்றார்.

தமிழர் மறுமலர்ச்சி இவ்வாறாகக் காங்கிர சாராலும், திராவிட இயக்கத்தாராலும் முடமாக் கப்பட்ட காலுடன்தான் முன்னேறியது!
பெரியாரும் அண்ணாவும் ஒத்துக் கொண்டு 1944-இல்தான் சேலம் மாநாட்டில் நீதிக்கட்சிக்குத் திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றினார்கள். என்றாலும் பெரியார் 1939-லேயே திராவிடர் என்ற திரிபுப் பெயரை தமிழர்களுக்குச் சூட்ட முன்வந்தார்.

1939-இல் நீதிக்கட்சியின் தலைவரானார் பெரியார். 1938-இல் தமிழ்நாடு தமிழர்க்கே என்ற பெரியார் 1939-இல் திராவிடநாடு திராவிடர்க்கே என்றார். இதில் அண்ணல் தங்கோவுக்கு உடன்பாடில்லை.
1940-ஆம் ஆண்டு திருவாரூரில் நடந்த நீதிக்கட்சி மாநாட்டில், 1941-இல் புதிதாக எடுக்கவுள்ள மக்கள் தொகைக் கணக்கில் தமிழ்நாட்டு மக்கள் தங்களை இந்தியர் என்று பதிவு செய்யக்கூடாது என்று கேட்டுக் கொள்ளும் ஒரு தீர்மானத்தை அண்ணல்தங்கோ முன்மொழிய வேண்டும் என்பது ஏற்பாடு. “தமிழர்” என்று பதிவு செய்ய வேண்டும் என்பது அண்ணல் தங்கோவின் விருப்பம். பெரியாரும் அண்ணாவும் “திராவிடர்’’ என்று பதிவு செய்ய வேண்டும் என்று எழுதி வைத்திருந்தனர். தீர்மானத்தை மேடையில் படிக்கும்போதுதான் அண்ணலுக்கு இது தெரிகிறது.
தீர்மானத்தைப் படித்து முடித்தபின் “தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் தங்களைத் தமிழர்கள் என்று பதிவு செய்க - பிறமொழியினர் திராவிடர் என்று பதிவு செய்து கொள்க’’ என்று கூறி விட்டு, இறங்கிவிட்டதாக அண்ணல்தங்கோ கூறுகிறார்.

1944 சேலம் மாநாட்டில் இறுதிக்கும் இறுதியாக அதிகாரப்பூர்வமாக திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றப்படும்போது, கி.ஆ.பெ. போன்ற தலைவர் களுடன் அண்ணல்தங்கோவும் “தமிழர் கழகம்’’ என்று பெயர் சூட்ட வலியுறுத்திப் போராடினார். ஆனால் பெரியாரும் அண்ணாவும் திராவிடர் கழகம் என்று மாற்றினார்கள். வெறுப்புற்று, அங்கிருந்தும் வெளியேற வேண்டிய நிலை அண்ணல்தங்கோவுக்கு ஏற்பட்டது. பின்னர் முத்தமிழ்க்காவலர், “தமிழர் கழகம்” தொடங்கி னார்.

கற்றறிந்த சான்றோர்களே, கற்றுவரும் இளைஞர் களே, தமிழர் மறுமலர்ச்சி - அதன் முழு வேகத்தில் முன்னேறாமல் முட்டுக்கட்டை போட்டவைதான் இந்தியத் தேசியமும் திராவிட இனவாதமும்! நாவலர் சோமசுந்தர பாரதியார், கி.ஆ.பெ. விசுவநாதம், அண்ணல்தங்கோ ஆகியோரின் அரசியல் வாழ்விலி ருந்து நாம் பாடம் பெற வேண்டும். அவர்கள் பட்ட பாட்டிலிருந்து நாம் படிப்பினை கற்க வேண்டும்.

பாவேந்தர் பாரதிதாசன் நடைமுறையில் மிகச் சிறந்த தமிழ்த்தேசியப் பாவலர்! ஆனால் பெரியார் மயக்கத்தில் ஆழ்ந்து திராவிடத்தை ஆதரித்து வந்தார். ஆனால் கடைசி காலத்தில் பாவேந்தர் திராவிட மயக்கத்தை விட்டொழித்தார் என்று அண்ணல் தங்கோ வாழ்க்கை வரலாற்று நூலில் அருட்செல்வன் ஒரு நிகழ்வை சுட்டிக் காட்டியுள்ளார்.
சென்னை தியாகராயர் நகர் இராமன் தெருவில் பாவேந்தர் வாழ்ந்து வந்த காலம். ஒருநாள் அண்ணல் தங்கோ, நண்பர் இராம. தமிழ்ச் செல்வனுடன் பாவேந்தர் வீட்டுக்கு போகிறார். அப்போது வரவேற்க வாசலில் வந்த பாவேந்தர் அண்ணல்தங்கோவைக் கட்டித் தழுவி, முத்தமிட்டு,“வா, அண்ணல்! பெரியாரும் அண்ணாத்துரையும் இல்லாத ஊருக்கு (திராவிட நாடு) வழிகாட்டி விட்டார்கள். தமிழினத்தைத் திசை திருப்பி விட்டார்கள். ஆனால் இறுதியில் உன்றன் தனித் தமிழ்நாடு குறிக்கோள் வெற்றி பெறும். அன்று தமிழகம் உன்னை நினைக்கும்” என்று கூறினார் என்று அந்நூலில் குறிப்பிடப் பட்டுள்ளது.

இந்தியத்தாலும் திராவிடத்தாலும் முடமாக்கப் பட்ட தமிழர் மறுமலர்ச்சி இன்று தமிழ்த்தேசியமாய் எழுந்துள்ளது! இந்தியப் பகைத் தேசியத்தையும், திராவிடத் திரிபுத் துரோகத்தையும் ஒருசேர முறியடித்து - தமிழ்த்தேசியத்தை வளர்த்தால் அதுவே அண்ணல் தங்கோ அவர்களுக்குத் தமிழினம் செய்யும் நன்றிக் கடனாகும்.

அந்தக் காலத்திலேயே தமிழர் அறத்தை -- திருவள்ளுவர் அறம் என்ற பெயரில் அண்ணல்தங்கோ வலியுறுத்தினார். மனிதர்கள் அனைவரும் சமம்; தமிழர்கள் அனைவரும் சமம்; இன்ப துன்பங்களைப் பிறருடன் சமமாகப் பகிர்ந்து கொள்வது; மன அழுக்குகளைக் களைந்து அன்றாடம் மனத்தைத் தூய்மைப்படுத்திக் கொள்வது - ஆகியவைதாம் தமிழர் அறத்தின் சாரம்!
தமிழர் அறம் ஏற்றுக் கொள்ளப்பட்டால், “எஞ்சாதிக்கு இவர் சாதி இழிவென்று சண்டையிட்டுப் பஞ்சாகி போனாரடி சகியே” என்று பாவேந்தர் வேதனைப்பட்ட நிலை இன்று புத்துயிர் பெற்றிருக்காது. அந்த அவலம் தொடராது.

தமிழர் அறத்தின் மீது நிற்கும் தமிழ்த்தேசியத்தைப் பரப்புவோம். அண்ணல்தங்கோ உள்ளிட்ட தமிழர் மறுமலர்ச்சி நாயகர்களின் இலட்சியங்களைச் செயல்படுத்துவோம்!
இவ்வாறு தோழர் பெ. மணியரசன் பேசினார்.

(இக்கட்டுரை, தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2016 மே 1 இதழில் வெளியானது.)

Labels: ,

"பெரிய சாதிவாதத்தின் பின்விளைவுகள் என்ன?"-- தோழர் பெ.மணியரசன் கட்டுரை.

"பெரிய சாதிவாதத்தின் பின்விளைவுகள் என்ன?"
-- தோழர் பெ.மணியரசன் கட்டுரை.

சாதி மோதலைத் தவிர்ப்பதற்காகக் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடப் போவதில்லை என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளரும் மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளரு மான திரு. வைகோ அவர்கள் 25.04.2016 அன்று கோவில்பட்டியில் அறிவித்தார். கோவில்பட்டி தொகுதியில் மட்டுமின்றி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் வேறு எந்தத் தொகுதியிலும் போட்டியிடப் போவதில்லை என்றும் அறிவித்தார்.

கோவில்பட்டி அருகே உள்ள திட்டங்குளத்தில் 24.04.2016 ஞாயிறன்று தேர்தல் பரப்புரைக்கு வைகோ போனார். அங்குள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டுப் பரப்புரையைத் தொடங்கலாம் என்று திட்டமிட்டு சிலையை நோக்கிப் போனபோது, ஏற்கெனவே அங்கு கூடியிருந்த சுமார் 50 பேர், வைகோ தேவர் சிலைக்கு மாலை அணிவிக்கக் கூடாது என்று எதிர்த்து முழக்க மிட்டுள்ளார்கள்.

குறிப்பாக உடுமலைப்பேட்டையில் தேவர் வகுப்பைச் சேர்ந்த கவுசல்யா என்ற பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டதற்காக ஒடுக்கப்பட்ட வகுப்பு இளைஞர் சங்கர், பெண் வீட்டுத் தரப்பினரால் படுகொலை செய்யப்பட்டார். அந்த சாதிவெறிப் படுகொலையை வைகோ கண்டித்தது தவறு என்றும், வெட்டுக் காயம்பட்டு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த கவுசல்யாவை போய்ப் பார்த்து வைகோ ஆறுதல் சொன்னது தவறு என்றும் அந்த இளைஞர்கள் முழக்கமிட்டு, அப்படிப் பட்ட “குற்றங்களைச்’’ செய்துவிட்டு, தேவர் சிலைக்கு மாலை போட உனக்கு என்ன அருகதை இருக்கிறது என்று கேள்விகள் எழுப்பி, வைகோவைத் தடுத்துள்ளார்கள்.

அதே கோவில்பட்டி தொகுதியில் போட்டி யிடும் தி.மு.க. வேட்பாளர் தேவர் வகுப்பைச் சேர்ந்தவர் என்றும், அவர் வைகோவின் நாயக்கர் வகுப்பு வாக்குகள் இத்தொகுதியில் 52 ஆயிரம் என்றும் தமது சமூக வாக்குகள் 70 ஆயிரம் என்றும், எனவே தாம் வெற்றி பெறுவது உறுதி என்றும் ஏற்கெனவே கூறியுள்ளார். அதைத் தி.மு.க. கண்டிக்க வில்லை என்றும் வைகோ குற்றம் சாட்டுகிறார்.

தேவர் வகுப்பைச் சேர்ந்த அந்த சில இளைஞர்கள் வைகோவை அவமானப்படுத்துவ தாக நினைத்துக் கொண்டு முத்துராமலிங்கத் தேவரை மிகவும் கொடூரமான சாதி வெறியர் போல் சித்தரித்து விட்டார்கள். முத்துராமலிங்கத் தேவர்க்கு பரந்துபட்ட அனைத்து மக்களுக்கான அரசியல் செயல்களம் இருந்தது. அனைத்து சாதி மக்களின் வாக்குகளை மிகுதியாக வாங்கி நாடாளுமன்ற -- சட்டமன்றத் தேர்தல்களில் வென்றவர் அவர்.
இமானுவேல் சேகரனார் கொலை _ அதற்கு முன்னும் பின்னும் நடந்த சாதிக் கலவரங்கள் ஆகியவற்றில் முத்துராமலிங்கத் தேவர்க்குக் கறை உண்டு. ஆனால் முத்துராமலிங்கத் தேவர் வாழ்க்கை வரலாறு அத்துடன் சுருங்கிவிடவில்லை. பொது சமூகத்தளமும் அரசியல் பங்களிப்பும் இருந்தன.
சங்கர் கொலையைக் கண்டித்த வைகோவுக்குத் தேவர் சிலைக்கு மாலை அணிவிக்கத் தகுதி இல்லை என்று, எந்த அடிப்படையில் திட்டங்குள இளை ஞர்கள் முடிவுக்கு வந்தார்கள்?இந்த இளைஞர்களைப் போன்றவர்கள் முத்துராமலிங்கருக்கு தன்சாதி அடையாளத்தை மட்டும் பொருத்துவது சரியா? அந்தச் சமூகச் சான்றோர் சிந்திக்க வேண்டும். வ.உ.சி., காமராசர் போன்ற தலைவர்களைக் கூட சாதிச் சிமிழுக்குள் அடைக்கின்றனர்.

தேவர் சமூகத்திற்கென்று இயக்கங்கள் வைத்திருப் போர், அந்த இளைஞர்களின் தவறான செயலை ஏன் கண்டிக்கவில்லை? சாதி வெறியர்கள் சிலரால் தவறாக வழி நடத்தப்படும் அந்த இளைஞர்களுக்கு அறிவுரை சொல்ல வேண்டிய பொறுப்பு அவர்களுக்கில்லையா?

தமிழ்நாட்டில் அதிக மக்கள் தொகை கொண்ட சாதிகளைச் சேர்ந்த மக்களுக்குக் கூடுதல் பொறுப்புணர்ச்சியும் கூடுதல் சமூக அக்கறையும் வேண்டும். ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டின் சமூக நல்லிணக்கம், சமூக முன்னேற்றம் ஆகியவை பற்றி சிந்திக்க வேண்டிய, - அதற்காக செயல்பட வேண்டிய கூடுதல் பொறுப்புணர்ச்சி அவர்களுக்கு இருக்கிறது. ஆனால் சாதியைப் பயன்படுத்திப் பலனடைய வேண்டும் என்று கருதுகிற தன்னலத் தனிநபர்கள், சாதி உணர்ச்சியைத் தூண்டி, - கூடுதல் மக்கள் தொகையைத் தங்கள் ஆதாயத்திற்குப் பயன்படுத்திக் கொள்ள முனைகிறார்கள்.

அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட சாதிகளில் தமிழ்நாடு தழுவிய அளவில் பரவலாக - நிரந்து எல்லாப் பகுதியிலும் உள்ள சாதி எதுவுமில்லை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு மண்டலத்தில் அடர்த்தியாக உள்ளது. எனவே சாதியை முதன்மைப்படுத்தி, அனைத்துத் தமிழ்நாட்டிற்கும் தலைமை தாங்கும் அரசியல் தலைமை இங்கு உருவாகிட வாய்ப்பில்லை.
அடர்த்தியாக மக்கள் தொகை கொண்ட சாதிகளிலிருந்து, அனைத்துத் தமிழ்நாட்டிற்குமான தலைமை உருவாக முடியும்! எப்போது? அனைத்து மக்களுக்குமான இலட்சியங்கள், முற்போக்கான கொள்கைகள், அனைத்து மக்களையும் தம் மக்களாகக் கருதும் மனப்பக்குவம் இவையெல்லாம் இருந்தால் பெரிய எண்ணிக்கை கொண்ட சாதியிலிருந்தும் தமிழ்நாட்டுத் தலைமை உருவாகலாம்; சிறிய எண்ணிக்கை கொண்ட சாதியிலிருந்தும் தமிழ்நாட்டுத் தலைமை உருவாகலாம்.

மண்டல வாரியாக அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட சாதி சமூகங்கள் பல இருக்கின்றன. அவற்றுள் சிலவற்றை மட்டும் பார்ப்போம். வன்னியர், கொங்குவேளாளர், முக்குலத்தோர். இம்மக்கள் அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க., காங்கிரசு, கம்யூனிஸ்ட்டுகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளில் இருக்கிறார்கள். குறிப்பிட்ட சாதியை அடித்தளமாகக் கொண்டு இயங்கும் அரசியல் கட்சிகளிலும், சாதி அமைப்புகளிலும் இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டின் நிலைமை என்னவென்று பார்க்க வேண்டும். ஒரு சாதியை மட்டும் அடித்தளமாகக் கொண்டு இயங்கும் அரசியல் கட்சி- சட்டப்பேரவையில் பெரும்பான்மை இடங்களைப் பெறவே முடியாது. மண்டல வாரியாக அடர்த்தியாக உள்ள சாதிகள் -- ஒன்றின் தலைமையை இன்னொன்று ஏற்காது. இவை தங்களுக்குள் ஒரு கூட்டமைப்பை உருவாக்கிக் கொள்ளவே முடியாது. ஏனெனில், சாதி உளவியல் என்பது உயர்வு - தாழ்வு வேறுபாட்டைக் கொண்டது. மாநில அதிகாரத்திற்கான போட்டியில் ஒன்றை ஒன்று வீழ்த்தவே முனையும்.

1990களில் மருத்துவர் இராமதாசு தாழ்த்தப் பட்டோர் + பிற்படுத்தப்பட்டோர் + சிறுபான்மையினர் ((SC + BC + Minorities)) கூட்டமைப்பை உருவாக்கி, தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளை அகற்றி ஆட்சியைப் பிடிப்போம் என்றார். அவ்வாறான கூட்டமைப்பு உருவாகவே இல்லை.

கடந்த சில ஆண்டுகளாக - தாழ்த்தப்பட்டோர் தவிர்த்த இதர சாதிகளின் கூட்டமைப்பை, “நாடகக் காதலுக்கு எதிராக’’ அமைக்கிறேன் என்றார். அப்படி ஒரு கூட்டமைப்பை உருவாக்கினார். அதில் வன்னியர் களைத் தவிர மற்ற சாதியினர் பெயருக்குப் பிரதிநிதி களாக இருந்தார்களே தவிர, அவரவர் சாதியினரைக் கணிசமாக உறுப்பினர்களாகக் கொண்டவர்கள் அல்லர்.
மேலே கூறப்பட்ட மண்டலவாரியாக அடர்த்தியாக உள்ள மூன்று சாதிகளைத் தவிர்த்த மற்ற அடர்த்தி யாக உள்ள சாதிகள், -அடர்த்தி குறைவாக உள்ள சாதிகள் ஆகியவையும் சாதி அடிப்படையிலான கூட்டமைப்பில் -கணிசமான பிரதிநிதித்துவத்தோடு ஒரு போதும் இணைந்தது கிடையாது. ஏனெனில் சாதி என்பது பிறப்பிலேயே பிரிவினை கொண்டது, உயர்வு தாழ்வு கற்பிப்பது; சாதிக் கலப்புத் திருமண உறவை- அதாவது குடும்ப உறவைத் தடுக்கும் உளவியல் கொண்டது.

ஒரு சாதி அடையாளத்தோடு உருவாகும் அரசியல் தலைவரை, பிற சாதிகள் தங்கள் தலைவராக - ஏற்கவே மாட்டா. தங்கள் நண்பராக ஏற்பார்கள்; தங்கள் தலைவராக ஏற்க மாட்டார்கள். எனவே மண்டல வாரியாகப் பெரும் எண்ணிக்கையில் உள்ள ஒரு சாதியின் அடையாளத்தோடு உருவாகும் தலைவர் ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டின் அரசியல் தலைவராக ஏற்பிசைவு பெற வாய்ப்பில்லை. கூட்டணி ஆட்சி உருவாகும் நிலை ஏற்பட்டால்கூட வலுவான ஒரு சாதித் தலைவர் முதலமைச்சராகி விடாமல் பார்த்துக் கொள்வதில், பிற வலுவான சாதித் தலைவர் களும் இதர சாதித் தலைவர்களும் கவனமாக இருப்பார்கள்.

இதனால் என்ன நிலை உருவாகும்? தங்கள் சாதிக்கு சலுகைகள் காட்டும் பொதுவான அரசியல் கட்சி ஒன்றின் _ பிற சாதியில் பிறந்த தலைவரைச் சார்ந்து இயங்கும் நிலைமையே வலுவான சாதிகளுக்குரிய நிரந்தர உத்தியாகிவிடும்.
அ.இ.அ.தி.மு.க., தி.மு.க. போன்ற அரசியல் கட்சித் தலைமைகள் அந்தந்த வட்டாரத்தில் அடர்த்தி யாய் உள்ள அந்த சாதிகளைச் சேர்ந்த பிரமுகர்களுக்கு, ஒன்றியம், மாவட்டம், சட்டப்பேரவை உறுப் பினர், நாடாளுமன்ற உறுப்பினர் அமைச்சர் போன்ற பதவி களைக் கொடுத்துவிட்டு, தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த அரசியல் அதிகாரப் பதவியைத் தங்கள் கைக்குள் வைத்துக் கொள்ளும்.

தி.மு.க. தலைமை எப்போதும் கலைஞர் கருணாநிதி குடும்பத்திற் குரியதாக இருக்கும். அ.இ.அ.தி.மு.க. தலைமை என்பது செயலலிதா வுக்குப் பிறகு, வலுவான ஒரு சாதிப் பிரதிநிதிக்குப் போகும் போது இதர வலுவான சாதிப் பிரதி நிதிகள் கலகம் செய்வார்கள். வலு வான தமிழ்ச்சாதிகளுக்கு அப்பால் வேறு சாதிகளிலிருந்து புதிய அரசியல் தலைமைகள் உருவாக லாம்.
மாவட்டம், ஒன்றியம், ச.ம.உ., நா.ம.உ., அமைச்சர்கள் என்ற அளவில் மட்டுமே தமிழ்நாட்டின் வலுவான சாதிப் பிரமுகர்கள் உயர முடியும், ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டுத் தலைமைக்கு வர வாய்ப்பில்லை என்பது பழைய வரலாற்றுச் செய்தி ஒன்றை நினைவூட்டுகிறது.

மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட நாயக்க மன்னர்களே தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த அதிகாரம் படைத்தவர்களாகவும் அவர்களுக்குக் கீழே பதினைந்து ஊர், இருபது ஊர்களுக்குப் பாளையக் காரர்களாக இருந்தவர்களே நம் பாராட்டுக்குரிய மண்ணின் மக்களாகிய பூலித்தேவன், வேலுநாச்சியார், இராமநாதபுரம் சேதுபதி போன்றவர்கள் என்பதும் பழைய வரலாறு; மீண்டும் சனநாயக அரசியலிலும் அது தொடரும்.
சோழர்களும் பாண்டியர்களும் தங்களுக்குள் சண்டையிட்டு ஒருவரை ஒருவர் அழித்துக் கொண்ட போதுதான் தில்லியிலிருந்து மாலிக்காபூர் வர வழைக்கப்பட்டான். அவன் தமிழ் நாட்டை அழித்தான். அதன்பிறகு மதுரையில் அயல்நாட்டுச் சுல்தான் கள் ஆட்சி ஏற்பட்டது. அதன்பிறகு ஆந்திராவிலிருந்துநாயக்க மன்னர்கள் வந்து மதுரையைப் பிடித்தார்கள். தமிழ்நாட்டைப் பிடித்தார்கள்.

அதன்பிறகுதான் பார்ப்பனியம் தமிழ்நாட்டில்முழுவீச்சில் கோலோச்சியது. நாயக்கர் ஆட்சி ,- வெள்ளையர் ஆட்சி, - பிறகு இந்திய விடுதலை என்பது வரைக்கும் தமிழ் நாட்டின் சமூக நிலை என்ன?
தமிழ்ச் சாதிகள் அனைத்தும் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தின் கீழும், நாயக்கர்கள், நாயுடுக்கள்,- ரெட்டி யார்கள்ஆதிக்கத்தின் கீழும் இருந்தன. நில உடைமையும் பெரிதும் அவர்க ளிடமே இருந்தது. அடுத்த நிலையில், தமிழர்களில் சைவப் பிள்ளைமார், முதலியார், நாட்டுக் கோட்டைச் செட்டியார்கள்! பொருளாதார நிலையில இவர்களுக்குக் கீழ்தான் வலுவான சாதிகளான வன்னியர், கொங்கு வேளாளர், முக்குலத்தோர் இருந்தனர்.
இந்த வலுவான சாதிகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஜமீன்கள் இருந்தன. அவையும் தங்களுக்கு மேலே உள்ள ஆட்சியாளர்களுக்குப் பாதுகாப்புப் பணி செய்பவையாகவே இருந்தன. மற்றபடி இச்சமூகங்களைச் சேர்ந்த வெகுமக்கள் கடும் உழைப்பாளிகளாகவே வாழ்ந்தனர்.

இன்றைய நிலையில் பார்ப்பனர், நாயக்கர், நாயுடு, ரெட்டியார் முதலிய வகுப்புகளைச் சேர்ந்த மக்களை நாம் அயலவர் என்று பார்க்கவில்லை. அவர்களுக் கெதிரான பாகுபாடு எதையும் நாம் பேசவில்லை. அவர்களும் தமிழ்நாட்டு மக்களே, தமிழ்த்தேசிய மக்களே என்றுதான் பார்க்கிறோம். இன்றைக்கு எழுந்துள்ள சாதிச் சிக்கல்களைப் போக்குவதற்காக வரலாற்றுச் செய்திகளைச் சொல்கிறோம்.

நம் சாதி பெரிய எண்ணிக்கை கொண்ட சாதி, நம் ஆள் வலிமையை வைத்து, நாம் நினைத்ததை சாதித்துக் கொள்ள முடியும் என்று கருதும் நண்பர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். 1952-லிருந்து அப்படி என்ன அரசியல் துறையில் சாதித்து விட்டீர்கள்? வட்டார, மாவட்ட அரசியல் பிரமுகர்களாக இருந்து - அவற்றின் வழி சில பலன்களை அடைந்திருக்கலாம்.
ஆனால் ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு அரசியல் தலைமைக்கு ஏன் வர முடியவில்லை என்று சிந்தி யுங்கள். நேர்வழியில் - மக்களுக்கான இலட்சியங்களோடு - ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு அரசியல் தலைமைக்கு வர வேண்டும் என்று சிந்தியுங்கள்.

ஆள் வலிமை அல்ல, அறிவு வலிமை வரலாற்றின் போக்கைத் தீர்மானிக்கிறது. அறத்தின் வலிமையே நிரந்தரப் பலன்கள் தரும்.
தருமபுரி நாயக்கன்கொட்டாய் தாழ்த்தப்பட்ட வகுப்பு இளவரசன் -- வன்னியர் வகுப்பு திவ்வியா காதல் திருமணம் -- பெரும் கலகமாக _- தாழ்த்தப்பட்டோர் வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்ட அவலமாக வெடித்தது.
அடுத்து, திருச்செங்கோட்டில் தாழ்த்தப்பட்ட வகுப்பு கோகுல்ராஜ் -- கொங்கு வேளாளர் வகுப்பைச் சேர்ந்த சுவாதி காதல். கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டார்.

உடுமலைப்பேட்டையில் தாழ்த்தப்பட்ட வகுப்பு சங்கர் -- தேவர் வகுப்பு கவுசல்யா திருமணம். சங்கர் கொலை செய்யப்பட்டார்.
மேற்படி மூன்று வலுவான பிற்படுத்தப்பட்ட வகுப்பு சாதிகளில் உள்ள கற்றறிவாளர் மற்றும் விழிப்புணர்ச்சி பெற்ற மக்கள் சிந்திக்க வேண்டும்.
பார்ப்பன வகுப்புப் பெண்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பு இளைஞர்களைக் காதலித்துத் திருமணம் செய்து கொள்ளவில்லையா? பல திருமணங்கள் நடந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
சைவப் பிள்ளைமார், முதலியார், நாயக்கர், நாயுடு, செட்டியார் வீட்டுப் பெண்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பு இளைஞர்களைக் காதலித்துத் திருமணம் செய்து கொள்ளவில்லையா? பல திருமணங்கள் நடந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்ச் சாதிகளில் இதர பல சாதிகளிலும், இதேபோல் கலப்புத் திருமணங்கள் நடக்கின்றன. அங்கெல்லாம் கொலைகள் இல்லை; வீடுகள் கொளுத்தப்படவில்லை. இந்தக் கலப்புத் திருமணங்க ளால் மேற்படி சாதிகள் எல்லாம் அழிந்து விட்டனவா? இல்லை.
வன்னியர்,- கொங்கு, வேளாளர் - முக்குலத்தோர் வகுப்புகளில் மட்டும் ஏன் இப்படி காதல் திருமணங் களால், கொலைக்களங்கள் உருவாக வேண்டும்? அதனால் அந்தப் பெண்களின் குடும்பங்கள் அழிகின்றனவே அதைக் கவனித்தீர்களா?

இந்த மூன்று பெரிய சாதிகளும் - அமைதியான வாழ்க்கையை இழந்து எந்நேரமும் பதற்றத்திலேயே இருந்தால் அவர்கள் பிள்ளைகளின் முன்னேற்றம் எல்லாத் துறையிலும் பாதிக்கப்படாதா?
பள்ளிக் கூடங்களில், கல்லூரிகளில் இந்தப் பிள்ளைகள் அமைதியாகப் படிக்க முடிகிறதா? கைகளில் சாதிக் கயிறுகள் கட்டிக் கொண்டு, எந்நேரமும் அந்த இளம் பிஞ்சுகள் சாதி உணர்விலும் -குறிப்பாகத் தாழ்த்தப்பட்ட மாணவர்களுடன் பகை உணர்ச்சியுடனும் நடந்து கொள்வது அவர்களின் படிப்பைப் பாதிக்காதா? இப்படிப் பாதிக்கப்பட்ட மாணவர்கள் - நாளைக்கு தமிழ்நாட்டில் அமைதியாகக் கற்கும் இதர சாதி மாணவர்களோடு எல்லாத் துறையிலும் போட்டி போட முடியுமா? இதன் எதிர் வினையாகத் தாழ்த்தப்பட்ட மாணவர்களும் தங்கள் கைகளில் கயிறு கட்டிக் கொண்டு எதிர் முகாமாகச் செயல்படுகிறார்கள். மேலும் பதற்றம் இருதரப் பினர்க்கும் கூடுதலாகிறது.

மீண்டும் சொல்கிறோம்; ஆள் எண்ணிக்கை அதிகாரத்தைக் கொடுப்பதில்லை. அறிவுக் கூர்மையே அதிகாரத்தைக் கொடுக்கிறது. பிறரை ஆதிக்கம் செய்யும் அதிகாரம், வேறொரு சூழலில் அடுத்தவர் அதிகாரத்திற் குக் கீழ்படிய வைக்கும். பிறரைத் தம்மவர் போல் கருதும் அறம் சார்ந்த அதிகாரமே நிலைக்கும்; அனைவர் நன்மைக்கும் உகந்தது.
வலுவான சாதிகளைத் தங்கள் அதிகாரத்தின் கீழ் வைத்துக் கொண்டு அரசியல் நடந்தும் அ.தி.மு.க., தி.மு.க. தலைமைகளின் சூழ்ச்சிகளைப் புரிந்து கொள்ளுங்கள். இந்த சாதிகளில் சிலர் செய்யும் தவறுகளைக் கண்டித்துத் திருத்த இத்தலைமைகள் முன்வருவ தில்லை. சாதிச் சண்டைகள் நிகழ்ந்தால் நல்லது; இரண்டு பக்கமும் தங்கள் ஆட்கள் மூலம் ஆதரவு பெறலாம் என்று கருதுகின்றன.

நாய்க்கன்கொட்டாய் - தீ வைப்புக் கொடுமைகளைத் தி.மு.க. தலைமையும் அ.தி.மு.க. தலைமையும் கண்டிக்க வில்லை.
கோகுல்ராஜ் கொலையைத் தி.மு.க. தலைமையும் அ.தி.மு.க. தலைமையும் கண்டிக்கவில்லை. சங்கர் படுகொலையை ஸ்டாலின் கண்டித்தார். கருணாநிதி கண்டிக்கவில்லை. செயலலிதா கண்டிக்கவில்லை. கடலூர் மாவட்டம் சேசசமுத்திரத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் தேர் கொளுத்தப்பட்டதை தி.மு.க. தலைமையும் கண்டிக்கவில்லை; அ.தி.மு.க. தலைமையும் கண்டிக் கவில்லை. இப்படி எத்தனையோ நிகழ்வுகளைக் கூறலாம்.
தன் குழந்தை தவறு செய்தால், அதைக் கண்டிப்பவர் தானே உண்மையான தாய். நல்ல தாய். தன் நண்பன் தவறு செய்தால் அவனைக் கண்டித்துத் திருத்துபவன் தானே உண்மையான நண்பன்; நல்ல நண்பன்.
தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் நம் மக்களுக்குக் தாயாக இல்லை; ஐஸ்கிரீம் கொடுத்துப் பிள்ளை பிடிப்பவனாக இருக்கின்றன. அவை நம் மக்களுக்கு நல்ல நண்பனாக இல்லை; தங்களது கொள்ளை வாணிகத்திற்குக் கூட்டாளி சேர்ப்பவையாக இருக்கின்றன.

பெரிய சாதிகளைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் தங்கள் கைகளில் கயிறுக் கட்டிக் கொள்ளும் பழக்கம், - சக மாணவர்களை சாதி கேட்கும் பழக்கம் எந்த உளவியலில் வந்தன? தாங்கள் மேலாதிக்கம் செய்யப் பிறந்தவர்கள், தாழ்த்தப்பட்ட சாதிகளையும் - பிற பிற்படுத்தப்பட்ட சிறுபான்மைச் சாதிகளையும் சேர்ந்தவர்கள் தங்கள் ஆதிக்கத்தை ஏற்க வேண்டியவர்களே அல்லாமல் தங்களோடு சமமாகப் பழக உரிமை படைத்தவர்கள் அல்லர் என்ற உளவியல் தானே அது!

இவ்வாறான சாதி உணர்வு மிகுந்தவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவார்களா? சமூகத்தில் நிலவும் அறிவுப் போட்டியில் வெல்வார்களா? எண்ணிப் பார்க்க வேண்டும்.
இன்றைக்கு வளர்ந்துள்ள உற்பத்திக் கருவிகளும், மிக வேகமாக வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பப் புரட்சியும் பிறப்பு அடிப்படையில் ஒருவரை இன்னொருவருக்குக் கீழ்ப்படிதல் உள்ளவராய் வைத்திருக்காது. இது நிலகிழமைக் காலமல்ல!

படித்தவர்கள், பட்டம் பெற்றவர்கள் 90 இலட்சம் பேர் தமிழ்நாட்டில் வேலையின்றி வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளார்கள். படிப்புக் கேற்ற வேலையில்லாமல் குறைந்த கூலிக்கு வேலை பார்க்கும் உயர் கல்வி கற்றோர் இலட்சோப இலட்சம் பேர் இருக்கிறார்கள். இவர்களில் பெரிய சாதிகளைச் சேர்ந்தோர் பெரிய எண்ணிக்கையில் பாதிக்கப் பட்டுள்ளனர். வாழ்வுரிமைக்கான இதைப் பற்றி யெல்லாம் கவலைப்படாமல் சாதி உணர்வில் இளைஞர்களை ஆழ்த்துவது, அவர்களை மட்டுமல்ல, தமிழ்ச் சமூகத்தையே, சீர்குலைத்துவிடும்!

சாதி கூடாது என்கிறோம்; ஆனால் அதை அவசர அவசரமாகக் காலாவதி ஆக்கிட முடியாது என்பதையும் அறிவோம். இப்பொழுது உடனடித் தேவை என்ன? சாதியின் பெயரால் ஆதிக்கம் செலுத்துவது, மற்றவர்களின் குடியியல் உரிமைகளைப் பறிப்பது, சனநாயக உரிமைகளைத் தடுப்பது, சாதி கடந்த விருப்பத் திருமணங்களை எதிர்ப்பது போன்றவை கூடவே கூடாது.

பெரியசாதி ஆதிக்கவாதத்தின் பின் விளைவுகளை அருள்கூர்ந்து எண்ணிப் பாருங்கள். உங்களின் வாரிசுகளும் அடுத்த தலைமுறையினரும், இந்தப் போட்டி உலகில் அமைதியாள - முன்னேற்றமான வாழ்வு வாழ வேண்டும்; - அதற்கான தகுதிகளையும்- உளவியல் பண்புகளையும் அவர்கள் பெற வேண்டும். சாதி உணர்வைத் தூண்டிவிட்டு, குட்டித் தலைவர்களாக, வட்டாரத் தலைவர்களாக, அரசியல் கட்சிகளிடம் பேரம் பேசும் ஆற்றல் பெற்றவர்களாக வளர்த்திடத் தந்திரம் செய்யும் தன்னலவாதிகளின் வலைகளில் சிக்காதீர்கள்.

தமிழ்ச் சாதிகள் அனைத்தும் ஒற்றைத் தமிழினத் தின் பிரிவுகள்தாம். நம் அனைவர்க்கும் தாய்மொழி தமிழ்! யாதும் ஊரே யாவரும் கேளிர் (உறவினர்) என்றோர் நம் முன்னோர். பிறப்பொக்கும் எல்லா உயிரும் சமம் என்ற தமிழினப் பேராசான் வள்ளுவரிலிருந்து வள்ளலார் வரை அனைவரும் நம்மினத்தின் முன்னோர்கள்!

இந்த மரபில் வந்த நாம், தமிழர் ஒற்றுமை வளர்ப்போம்; தமிழர் அறம் காப்போம்.

(இக்கட்டுரை, தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2016 மே 1 இதழில் வெளியானது.)

Labels: ,


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்