<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d6955529389241309188\x26blogName\x3d%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86.%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://thozharmaniyarasan.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com/\x26vt\x3d-8408640130511538487', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' இந்தியாவின் இந்த உளவியல்தான் முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குக் காரணம்! -- தோழர் பெ. மணியரசன்

Friday, May 19, 2017


======================================
'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி'
இந்தியாவின் இந்த உளவியல்தான்
முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குக் காரணம்!
======================================
தோழர் பெ. மணியரசன்,
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்.
======================================

எட்டாண்டுகள் கடந்து விட்டதாக எண்ணத்தில் பதிவில்லை. நேற்று நடந்தது போல் நெஞ்செங்கும் காயங்கள்! முள்ளிவாய்க்கால் – தமிழினம் முழுமைக்குமான ஈகத்திருத்தலம்; வீரச் செங்களம்! 

தமிழீழ விடுதலைப்போரில் – முள்ளிவாய்க்கால் மண்ணில், சிங்கள எதிரியின் கொத்துக் குண்டுகளுக்கும் சுடுகலன்களுக்கும் பலியான இலட்சக்கணக்கான தமிழீழத் தமிழ் மக்களுக்கும், விடுதலைப் புலி வீரர்களுக்கும் தளபதிகளுக்கும் எட்டாமாண்டு நினைவு நாளில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் வீரவணக்கம் தெரிவித்துக் கொள்கிறது! 

எட்டுக்கோடித் தமிழர்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்தும், ஈழத்தில் நடந்த தமிழின அழிப்புப் போரைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. போர் நிறுத்தம் வலியுறுத்தி, தழல் ஈகி முத்துக்குமார் தொடங்கி பதினெட்டுப் பேர் அடுத்தடுத்து தழல் ஈகம் செய்து உயிரை மாய்த்துக் கொண்ட போதும், சிங்கள அரசு நடத்திய தமிழின அழிப்புப் போரை நிறுத்த முடியவில்லை.

காரணம், இன அழிப்புப் போர் எதிர்ப்புப் போராட்டங்கள் தமிழ்நாட்டில் இன்னும் முழு வீச்சில் நடந்திருக்க வேண்டும்; இன அழிப்புப் போரில் பல்வேறு வடிவங்களில் பங்கு கொண்ட இந்திய அரசின் அலுவலகங்கள், நிறுவனங்கள் தமிழ்நாட்டில் செயல்படாதவாறு பல நாட்கள் தடுத்திருக்க வேண்டும். இது ஏன் இயலாமற் போயிற்று?

இந்திய ஆளும் வர்க்கக் கட்சிகளான காங்கிரசு, பா.ச.க. ஆகியவற்றுடன் தோழமை உறவு கொண்டு, இந்திய அரசுக்குக் கங்காணி வேலை பார்க்கும் கழகங்கள்தான், தமிழ்நாட்டில் பெரும்பான்மை மக்களின் பிரதிநிதிகள்! அவை ஒப்புக்குப் போர் நிறுத்தக் கோரிக்கை எழுப்பி, பாசாங்கு நடவடிக்கைகள் சில எடுத்தன! உண்மையான வேகத்தில், உணர்ச்சியில் வெகுமக்களை அக்கழகங்கள் போர் நிறுத்தக் களத்தில் இறக்கவில்லை!

தமிழின அழிப்புப் போரில், சிங்கள அரசுக்குத் துணையாகப் பெரும் பங்காற்றிய இந்திய அரசு, போரின் முடிவுக்குப் பின் சிங்கள இனவெறி அரசையும், ஆட்சியாளர்களையும், படைகளையும் பன்னாட்டு விசாரணை வளையத்திலிருந்து தப்பிக்க வைக்கப் பன்னாட்டு அரங்கில் தனது எல்லா வகை ஆற்றல்களையும் பயன்படுத்துகிறது. 

தனி ஈழம் அமைந்திடவோ அல்லது இனப்படுகொலைக் குற்றவாளிகளான சிங்கள அரசுத் தரப்பினரைத் தண்டிக்கவோ, ஒருக்காலும் இந்தியா ஒப்புக் கொள்ளாது என்ற உண்மையை தமிழ்நாட்டுத் தமிழர்களும், தமிழீழத் தமிழர்களும் உள்ளதை உள்ளபடி புரிந்து கொள்ள வேண்டும். 

முள்ளிவாய்க்கால் ஈகியர்க்கு வீரவணக்கம் செலுத்தும் நேரத்தில் உள்ளதை உள்ளபடி புரிந்து கொள்ளும் நேர்மையும், கூர்மையும் மிகமிக முக்கியம்! பாசாங்குகள், பகட்டுகள், நேர்மையற்ற பக்கச் சார்புகள், அறியாமை ஆகியவை கூடாது! 

இந்திய அரசு, தமிழ்நாட்டில் தமிழினத்தை நடத்தும் பகைப் போக்கின் நீட்சிதான், இறையாண்மையுள்ள தமிழீழம் அமையாமல் தடுக்கும் சூழ்ச்சி! 

காவிரி உரிமை, முல்லைப் பெரியாறு அணை உரிமை போன்றவற்றில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளைச் செயல்படுத்த மறுக்கும் இந்திய ஆட்சியாளர்களின் அதே உளவியல்தான், ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் சிங்கள அரசுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட மனித உரிமைக் குற்ற விசாரணையைச் செயல்படவிடாமல் தடுக்கிறது. அவர்களுக்குச் சிங்களன் - பங்காளி! தமிழன் – பகையாளி! 

காவிரி உரிமை, கடலில் தமிழ்நாட்டு மீனவர்களுக்குள்ள மீன்பிடி உரிமை போன்றவற்றிற்கும் தமிழ் ஈழத் தமிழர்கள் குரல் கொடுக்க வேண்டும்!

தமிழ்நாட்டுத் தமிழர்களும் தமிழீழத் தமிழர்களும் தங்களின் பொது எதிரிகளுக்கு எதிராக ஒருங்கிணைந்து போராட வேண்டும் என்ற உணர்வை முள்ளிவாய்க்கால் ஈகியர் நாளில் மேலும் வீறு பெறச் செய்வோம்!

Labels: ,

இரசினிகாந்த், அசீத், விசால் நடிகர்களை ஓரங்கட்டுங்கள்! - இந்தியன், திராவிடன் “இனப்பெயரை” நீக்குங்கள்! -- தோழர் பெ. மணியரசன்

Thursday, May 18, 2017

======================================
இரசினிகாந்த், அசீத், விசால் நடிகர்களை 
ஓரங்கட்டுங்கள்! - இந்தியன், திராவிடன் 
“இனப்பெயரை” நீக்குங்கள்!
======================================
தோழர் பெ. மணியரசன்,
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்.
======================================

தமிழ்நாட்டு அரசியலுக்குத் தலைமை தாங்க வருமாறு கன்னட நாட்டு நடிகர் இரசினிகாந்தை அழைக்கும் அளவிற்குத் தமிழ் இனத்தில் ஒரு சாரார் தரம் தாழ்ந்து தன்மானம் குறைந்து போனதற்குக் காரணமானவர்கள் யார்? 

தமிழின அடையாளத்தை மறைத்து, திராவிட அயல் இன அடையாளத்தைத் தமிழர்கள் மீது திணித்த திராவிடச் சந்தர்ப்பவாதிகளும், இந்தியன் என்ற வடநாட்டு இனப்பெயரைத் தமிழர் தலையில் சுமத்திய வடநாட்டுத் தாசர்களான காங்கிரசு, கம்யூனிஸ்ட்டு, பா.ச.க. கட்சிகளைச் சேர்ந்தவர்களுமே காரணம் ஆவர்!

குறிப்பாக, ஒற்றை அதிகாரத் தலைவரை உருவாக்கிக் கொண்டு - அவரை கடவுளாக அல்லது கடவுளுக்கும் மேலானவராக சித்தரித்து, மாயாசாலம் காட்டி, மக்களின் தன்மதிப்பையும், தன்முயற்சியையும் சிதைத்து, அவதாரத் தலைவரைத் தேடும் அவலத்தை வெகுமக்கள் உளவியலில் பதித்துவிட்டன தி.மு.க. – அ.தி.மு.க. கட்சிகள்!

மற்ற மாநிலங்களில் திரைக் கதாநாயகர்களுக்கு அரசியல் தலைமை கிடைப்பதில்லை. திரைப்படத்தில் நடித்துப் பெற்ற பிரபலத்தைப் பயன்படுத்தி அரசியல் தலைமை ஏற்க முனைந்த அமிதாப்பச்சனை இந்தி வட்டார மக்கள் புறக்கணித்தனர்; ஆந்திராவில் நடிகர் சிரஞ்சீவியின் அரசியல் கடையை மூடச் செய்தனர் தெலுங்கர்கள்; ஏற்கெனவே கேரளாவில் அரசியல் கட்சி தொடங்கிய நடிகர் பிரேம் நசீர் கட்சியைக் கலைக்கச் செய்தனர் மலையாளிகள்! ஆந்திரப்பிரதேசத்தில் என்.டி. இராமாராவின் அரசியல் வாழ்வையும் அரைகுறையாக முடித்து வைத்தனர் தெலுங்கு மக்கள்!

தமிழ்நாட்டில் மட்டும் கன்னடர் இரசினிகாந்த், மலையாள அசீத், தெலுங்கர் விசால் ஆகிய அயல் இன நடிகர்கள் அரசியல் தலைவர்களாகித் தமிழர்களை ஆளத் துடிப்பதேன்? ஏமாளித் தமிழர்கள் அவர்களை அரசியலுக்கு அழைப்பதேன்?

ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் தமிழ்த் திரைப்படங்கள் ஓடுகின்றன. தமிழின நடிகர்களான சத்தியராசு, விசய், சூரியா போன்றோரை அம்மாநிலங்களில் அரசியலுக்குத் தலைமை தாங்க அழைக்கிறார்களா? இல்லை! அந்த மொழிப்படங்களில் தமிழர்களைக் கதாநாயகர் அளவுக்கு வளர விட்டார்களா? இல்லை! இந்த நான்கு மாநிலங்களிலும், வட மாநிலங்களிலும் தமிழர்களை அரசியல் தலைவர்களாக வளர விட்டார்களா? மாநில அளவில் தொழிற்சங்கத் தலைவர்களாகவாவது வளர விட்டார்களா? இல்லை! 

தைப்புரட்சியில் “தமிழன்டா” என்ற பதாகையை ஏந்திய இலட்சோப இலட்சம் தமிழின இளையோரே, உங்களில் தகுதிமிக்கோரிடமிருந்தும், அனுபவம் - இலட்சியக் கூர்மை - நேர்மை ஆகிய பண்புகளைக் கொண்ட தமிழின மூத்தோரிடம் இருந்தும்தான் தமழர்களுக்கு புதிய தலைமைகள் உருவாக வேண்டும்.

தமிழின அடையாளத்தை மறைத்து, திராவிடன், இந்தியன் என்ற அயல் இன அடையாளங்களைத் திணிக்கும் அரசியல்வாதிகளைப் புறந்தள்ளுங்கள்! இரசினிகாந்த் போன்ற அயல் இன நடிகர்களை ஓரங்கட்டுங்கள்! 

Labels:

இரசினிகாந்தை அரசியலுக்கு அழைப்போரும் அதை ஆதரிப்போரும் தமிழினத்துரோகிககள் ஆவர்! -- தோழர் பெ. மணியரசன்

Tuesday, May 16, 2017

===================================
இரசினிகாந்தை அரசியலுக்கு
அழைப்போரும் அதை ஆதரிப்போரும் 
தமிழினத்துரோகிககள் ஆவர்!
===================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
தோழர் பெ. மணியரசன் அறிக்கை!
===================================

இரசினிகாந்த் வழக்கம்போல் “அரசியலுக்கு வந்தாலும் வருவேன்” என்று கூறி தம் இரசிகர்களுக்குக் குச்சிமிட்டாய் கொடுத்துள்ளார். 

தமிழ்நாட்டில் அவரின் இரசிகர்கள், இரசினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று பெருங்குரல் எழுப்புகிறார்கள். இப்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், பா.ச.க.வின் தமிழிசை, தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாரின் ஆகியோரும் இரசினிகாந்த் அரசியலில் ஈடுபடுவதை வரவேற்பதாகக் கூறியுள்ளார்கள்.

தமிழ்நாட்டு அரசியலில் ஈடுபடவோ அல்லது தனிக்கட்சித் தொடங்கவோ இரசினிகாந்துக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதை அவர்கள் சொல்ல வேண்டும்; என்னென்ன தகுதிகள் இல்லை என்பதை நான் சொல்கிறேன். 

முதல் தகுதியின்மை அவர் கன்னடக்காரர் என்பது. இரண்டாவது, தகுதியின்மை தனக்கு வாழ்வளித்த தமிழர்களுக்கு நன்றி விசுவாசத்துடன் அவர் நடந்து கொள்ளாதவர் என்பது! 

காவிரிச்சிக்கலை சாக்காக வைத்துக் கர்நாடகத்தில் கன்னட வெறியர்கள் தமிழர்களை இனப்படுகொலை செய்தபோது, தமிழர்களைத் தாக்கியபோது, தமிழர் வீடுகளை, வணிக நிறுவனங்களை எரித்த போது, சூறையாடிய போது, தமிழ்த்திரைப்படங்கள் ஓடாமல் தடுத்தபோது, நடுநிலையில் நின்று, அந்த அட்டூழியங்களை – வெறியாட்டங்களை இரசினிகாந்த் கண்டிக்கவில்லை.

காவிரி உரிமைக்காக இயக்குநர் பாரதிராசா தலைமையில் தமிழ்த்திரைக் கலைஞர்கள் நெய்வேலியில் ஆர்ப்பாட்டம் நடத்தியபோது, அதைச் சீர்குலைக்க சதி செய்தவர். 

அண்மையில் அநீதியாக கன்னடர்கள் தமிழர் சத்தியராசு நடித்த “பாகுபலி-2” படத்தைக் கர்நாடகத்தில் திரையிடத் தடை விதித்தார்கள். ஒன்பதாண்டுகளுக்கு முன் காவிரிச் சிக்கலில் கன்னடர் செய்த அட்டூழியங்களை சத்தியராசு கண்டித்தார் என்பதற்காக – இப்பொழுது தடை விதித்தார்கள். தமிழர் சத்தியராசு வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டபின்தான், “பாகுபலி-2” படத்தைக் கர்நாடகத்தில் அனுமதித்தனர். அச்சிக்கலில் தலையிட்டு ஒரு சமரசத் தீர்வு காண இரசினி முன்வராமல் தந்திரமாக ஒதுங்கிக் கொண்டார். 

காவிரிச் சிக்கலில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து, கன்னடர்கள் தமிழர்களைத் தாக்கி அட்டூழியம் புரியும்போது, அதைத் கண்டித்ததில்லை. சட்டப்படி தமிழ்நாட்டிற்குரிய காவிரி உரிமையைத் தடுக்காதீர்கள் என்று இரசினிகாந்த் தம் கன்னட உடன்பிறப்புகளுக்கு வேண்டுகோள் விட்டதுமில்லை. 

இரசினிகாந்த் தமிழ்நாட்டு அரசியலில் செல்வாக்குப் பெற்றுவிட்டால், காவிரி உரிமையைத் தமிழர்கள் நிரந்தரமாக மறந்துவிட வேண்டியதுதான்! தமிழ்நாடு கர்நாடகத்தின் காலனியாக மாற்றப்படும்!

இரசினிகாந்த் தாய்மொழி எதுவாக இருந்தாலும் அவர் கன்னடநாட்டைச் சேர்ந்தவர். கன்னட இனப்பற்றுடன் தமிழ்நாட்டில் வாழ்பவர்! தமிழர் உரிமைகளுக்குத் துரோகம் செய்பவர். 

இரசினிகாந்தைத் தமிழ்நாட்டில் “அரசியல் வணிகம்” செய்ய அழைப்பவர்களும், அவரின் அரசியல் நுழைவை ஆதரிப்பவர்களும் தமிழர்களுக்குத் துரோகம் செய்பவர்களே!

தமிழின இளைஞர்கள் ஆண்களும் பெண்களும் எச்சரிக்கையாக விழிப்புடன் செயல்பட்டு இரசினிகாந்த் என்ற நச்சுக்கொடி தமிழ்நாட்டு அரசியலில் படராமல் தடுக்க வேண்டும்! 

Labels:

சித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சும் தமிழர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடமும்! -- தோழர் பெ. மணியரசன்

Monday, May 15, 2017

============================================
சித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சும்
தமிழர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடமும்!
============================================
தோழர் பெ. மணியரசன்,
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்.
============================================

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா நேற்று (14.05.2017), கர்நாடகத்தின் சாம்ராஜ் நகரில் செய்தியாளர்களுக்கு அளித்த செவ்வியில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த மறுத்து தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் திறந்துவிடாத “சாதனை”யை பெருமையுடன் கூறியுள்ளார். 

“காவிரியிலிருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 2,000 கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் பலமுறை ஆணையிட்டும், நான் இதுவரை திறந்துவிடவில்லை. ஏனெனில், நம்மிடம் தண்ணீரில்லை. நாட்டின் உயர்ந்த நீதிமன்றம் தீர்ப்பளித்தாலும் அதைச் செயல்படுத்தவில்லை” என்று கூறியுள்ளார். 

அத்துடன், தன்னுடைய நான்கு ஆண்டுகால ஆட்சியைக் கன்னட இனவெறி அமைப்பான சலுவாளிக் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் பாராட்டியதையும் பெருமையுடன் கூறியுள்ளார். 

தமிழர்களுக்குரிய உரிமையை உச்ச நீதிமன்றம் ஆணையிட்டாலும் செயல்படுத்த மாட்டேன், கன்னட இனவெறியன் வாட்டாள் நாகராஜ் என் ஆட்சியைப் பாராட்டுகிறார் என்று ஒரே செவ்வியில் கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறுவதன் பொருள் என்ன? 

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் நிலையில், தமிழினப் பகையைக் கக்கி கன்னட இனவெறியைத் தூண்டிவிட்டால், தனக்கு கூடுதலாக வாக்குகள் கிடைக்குமென்று காங்கிரசு முதலமைச்சர் சித்தராமையா கணக்குப் போடுகிறார். கர்நாடகத்தில் கன்னடர்கள் தமிழின எதிர்ப்பு பகை உணர்ச்சியில் இருக்கிறார்கள் என்பதால் வாக்கு வேட்டையாட தமிழினப் பகையை மக்களிடம் வெளிப்படுத்துகிறார் முதலமைச்சர் சித்தராமையா! 

கர்நாடகத்தில் அரசியல் கட்சிகள்தான் இனவெறியைத் தூண்டுகின்றன, மக்களிடம் கன்னட இனவெறியோ தமிழினப் பகை உணர்ச்சியோ இல்லை என்று பேசுவோர், இதிலிருந்தாவது பாடம் கற்க வேண்டும். 

கன்னட இனப்பற்றுடன் முதலமைச்சரோ மக்களோ இருந்தால் அது தவறில்லை! கன்னட இனவெறியுடன் செயல்படுவதுதான் குற்றச்செயல் என்கிறோம்.

காங்கிரசுக்காரரான கர்நாடக முதல்வர் சித்தராமையா பேசுவதுபோல், தமிழ்நாட்டு அரசியலில் கன்னட எதிர்ப்பு பேச வேண்டுமென்று நாம் எதிர்பார்க்கவில்லை. காவிரிச்சிக்கலில் இந்திய அரசு தமிழினத்திற்கு எதிராக இனப்பாகுபாடு காட்டுகிறது என்றும், கர்நாடகத்திலுள்ள காங்கிரசு – பா.ச.க. – மதச்சார்பற்ற சனதா தளம் போன்ற கட்சிகள், கன்னட இனவெறிக் கட்சிகள், தமிழினத்திற்கு எதிராகப் பகை உணர்ச்சியைத் தூண்டிவிடுகின்ற கட்சிகள் என்றும் என்றைக்காவது தமிழ்நாட்டுக் கழகங்கள் பேசியதுண்டா?

நமக்கு ஆசான் போன்றவர்களிடம் பாடம் கற்க வேண்டும். அல்லது நம்முடைய பகைவர்களிடமிருந்து பாடம் கற்க வேண்டும். தி.மு.க. – அ.இ.அ.தி.மு.க. போன்ற இரண்டுங்கெட்டான்களிடம் பாடம் கற்கக் கூடாது. 

அ.இ.அ.தி.மு.க. ஆட்சியாளர்களோ, ஆட்சிக்கு வரத் துடிக்கும் தி.மு.க. தலைமையோ தமிழினத் தற்காப்பு அரசியலை – தமிழின உரிமை மீட்பு அரசியலை முன்வைத்து இயங்குவார்கள் என்று இனியும் எதிர்பார்க்காமல், இளந்தலைமுறையினரும் பட்டறிவு மிக்க மூத்த தலைமுறையினரும் இணைந்து தகுதியான தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுக்க வர வேண்டும் என்ற பாடத்தைத்தான் சித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும். 

Labels: ,


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்