"திருவண்ணாமலையில் வழிபாட்டிற்கு வந்த இளம்பெண்ணைச் சீரழித்த காவல்துறையினர்! இதுதான் திராவிட மாடலா? ---- பெ. மணியரசன், தலைவர் – தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
Thursday, October 9, 2025
திருவண்ணாமலையில் வழிபாட்டிற்கு வந்தஇளம்பெண்ணைச் சீரழித்த காவல்துறையினர்!
இதுதான் திராவிட மாடலா?
====================================
ஐயா பெ. மணியரசன்,
தலைவர் – தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
====================================
ஆட்சியாளர்களைத் தேர்வு செய்யும் அரசியலில் ஒழுக்கக் கேடும் ஊழல் சீரழிவும் மலிந்தால் அந்தச் சமூகமே பாதிக்கப்படும். இந்தக் கணிப்பிற்கான சன்றாகத் திருவண்ணாமலையில் வழிபாட்டிற்கு வந்த பெண்கள் இருவரில் 25 அகவை உடைய திருமணம் ஆகாத இளம்பெண்ணை தமிழ்நாடு அரசின் காவல்துறையில் பணியாற்றும் இரு காவலர்கள் – பின்னிரவு நேரத்தில் ஏமாற்றி, காட்டுக்குள் அழைத்துச் சென்று – பாலியல் வன்கொடுமை செய்து, சித்திரவதை செய்து காமக் களியாட்டம் நடத்தியுள்ளார்கள். அவர்கள் பிடிபட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.
அத்தோடு இந்தக் காமவெறிக் கயவர்களின் வன்செயலை – மறந்துவிட முடியாது. திருவண்ணாமலை கிழக்குக் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் சுரேஷ்ராஜ், சுந்தர் ஆகிய இருவரும் திருவண்ணாமலையில் இரவுக் காவல் பணியில் இருந்துள்ளார்கள். 30.09.2025 அதிகாலை 2.30 மணியளவில் ஆந்திராவிலிருந்து வாழைத்தார் ஏற்றி வந்த சரக்குந்தில் ஒரு வயதான பெண்ணும், அவரது வளர்ப்பு மகளான 19 அகவை இளம்பெண்ணும் வந்திருக்கிறார்கள். அந்த சரக்குந்தின் ஓட்டுநர் அந்த இளம்பெண்ணின் வளர்ப்புத் தாயின் தம்பி!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்குப் போகும் வழியில் இரவுக் காவல் பணியில் இருந்த காவலர்கள் சுரேஷ்குமார், சுந்தர் ஆகிய இருவரும் சரக்குந்தை மறித்து விசாரித்துள்ளார்கள். கோயிலுக்குக் கொண்டு போய் இவர்களை விடப் போகிறேன் என்று ஓட்டுநர் கூறியுள்ளார். நாங்கள் கொண்டு போய் விடுகிறோம், நீ போ என்று சரக்குந்து ஓட்டுநரைப் போகச் சொல்லியிருக்கிறார்கள்.
அதன்பிறகு, அக்காவலர் இருவரும் மேற்படி இரு பெண்களையும் அருகில் காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று இளம்பெண்ணை மாறிமாறி – பாலியல் சித்திரவதை செய்துள்ளனர்.
இச்செய்தி விடிந்ததும் தெரிந்த பின்னர் உள்ளூர்க்காரர்கள் காவல்துறையில் புகார் செய்துள்ளார்கள். காவல்துறை மேலதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, அந்தக் காமவெறிக் காவலர்கள் இருவரையும் சிறையில் தள்ளியுள்ளார்கள். காக்கி உடுப்பில், அலைந்த இந்தக் காமக் கயவர்கள் – தமிழ்நாட்டுச் சமூகம், தமிழ்நாட்டு அரசுத் துறை முதலிய அனைத்தும் எவ்வளவு சீரழிந்து சின்னாபின்னமாகிக் கிடக்கின்றன என்பதற்கு எடுத்துக்காட்டு! அதேபோல், தமிழ்ச் சமூகமும் எவ்வளவு சீரழிவுக்கு உள்ளாகியுள்ளது என்பதற்கும் உரைகல்!
“திராவிட மாடல்” முதலமைச்சர் மு.க. ஸ்டாலினோ, அடிக்கடி இந்தியாவிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலமாகத் தமிழ்நாடு விளங்குகிறது என்று பரப்புரை செய்து வருகிறார். இவரிடம் இட்லரின் கோயபல்சே தோற்று விடுவார்!
இந்த அரசியல் சாடலோடு, நாம் மனநிறைவடையக் கூடாது!
நம் சமூகம் ஏன் இவ்வாறு சீரழிந்து கிடக்கிறது? பொறுக்கித்தனத்தின் புகலிடமாகத் தமிழ்நாட்டுத் தேர்தல் அரசியல் சீரழிந்து கிடக்கிறது. அரசியல் சீரழிந்தால் – ஆட்சியாளர்கள் சீரழிகிறார்கள் என்று பொருள்! அதன்பிறகு, அனைத்தும் சீரழியும். தவறு செய்தால், ஊழல் அரசியல் பிரமுகர்கள் – தலைவர்கள் வழியாகத் தப்பி விடலாம் என்ற தெம்பும் சீரழிவாளர்களை ஊக்கப்படுத்துகிறது.
மக்கள் சார்ந்த இலட்சியம் எதுவும் அற்ற மக்களை ஏமாற்றி வாக்கு வாங்கும் “திறமை”யை மட்டுமே நம்பி – சீரழிந்து கிடக்கிறது தமிழ்நாட்டு அரசியல்! இந்தச் சீரழிவின் சிகரமாகத் திராவிட அரசியல் உள்ளது.
தமிழ்ச் சமூகத்தை மேம்படுத்த – முறைப்படுத்த – உண்மையான இலட்சியத் தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுப்போம்!
=================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
நூல்கள் பெற : www.panmaiveli.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
=================================
Labels: அறிக்கைகள், தமிழ்நாடு காவல்துறை அடக்குமுறை!, திராவிட_மாடல், திராவிடம்

0கருத்துக்கள்:
Post a Comment
<< முகப்பு பக்கம்