<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d6955529389241309188\x26blogName\x3d%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86.%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://thozharmaniyarasan.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com/\x26vt\x3d-8408640130511538487', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

"காவிரி உரிமையை திமுகவும் அதிமுகவும் காக்காது! மக்கள் களம் இறங்கி மீட்க வேண்டும்!" --- "ஐயா" பெ. மணியரசன், ஒருங்கிணைப்பாளர், காவிரி உரிமை மீட்புக் குழு.

Thursday, September 14, 2023


காவிரி உரிமையை திமுகவும் அதிமுகவும் காக்காது!

மக்கள் களம் இறங்கி மீட்க வேண்டும்!

========================================
"ஐயா" பெ. மணியரசன்,
ஒருங்கிணைப்பாளர், காவிரி உரிமை மீட்புக் குழு.
========================================

கர்நாடகம் சட்டவிரோதமாக தமிழ்நாட்டுக்குரிய காவிரி நீரைத் தடுத்து வைத்துக் கொண்டதால், மூன்றரை இலட்சம் ஏக்கர் குறுவைப் பயிர் காய்ந்து அழிந்துவிட்டது. மிச்சம் உள்ள இரண்டு இலட்சம் குறுவைப பயிரைப் பாதுகாக்க வேண்டியுள்ளது. அத்துடன் 12 இலட்சம் ஏக்கரில் ஒரு போக சம்பா சாகுபடி தொடங்க வேண்டியுள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 44 அடிக்குக் கீழே வந்துவிட்டது. கர்நாடக அரசோ கொஞ்ச நஞ்சம் திறந்துவிட்ட தண்ணீரையும் முற்றிலுமாக மதகை மூடித் தடுத்துவிட்டது.

இந்நிலையில், 12.9.2023 அன்று கூடிய காவிரி ஒழுங்காற்றுக் குழு ஒரு நொடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் அடுத்த 15 நாட்களுக்கு தொடர்ந்து காவிரியில் கர்நாடகம் தமிழ்நாட்டுக்குத் திறந்துவிட வேண்டும் என்று கட்டளை இட்டுள்ளது. இதனை செயல்படுத்த முடியாது என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவும், நீர்வளத்துறை அமைச்சர் டி.கே. சிவகுமாரும் வெளிப்படையாக செய்தியாளர்களிடம் 13.9.2023 அன்று அறிவித்துவிட்டார்கள்.

இது குறித்து தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களிடம் 13.9.2023 அன்று செய்தியாளர்கள் கேட்டபோது, உச்ச நீதிமன்றத்தில் 21.9.2023 அன்று முறையிட்டு உரிய தண்ணீர் கோருவோம் என்று கூறியுள்ளார். உச்ச நீதிமன்றமோ, காயும் பயிரின் உயிர்காக்கும் அவசரத் தேவையைக் கருத்தில் கொள்ளாமல், தமிழ்நாடு அரசு 12.8.2023 அன்று தாக்கல் செய்த காவிரி நீர் கோரும் மனுவை 25.8.2023 அன்று விசாரணைக்கு எடுத்து, முடிவேதும் சொல்லாமல் வாய்தா போட்டுக் கொண்டே வருகிறது. 39 நாள் கழித்து 21.9.2023 அன்று தீர்ப்பு வருமா என்பது ஐயம்.

இப்பொழுதும், உச்ச நீதிமன்றத்தை எதிர்பார்த்துக் காத்திருப்போம் என்று தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் சொல்வது, வேளாண்மைக்கும் குடிநீருக்கும் காவிரியை நம்பியுள்ள மூன்றரைக் கோடி மக்களை வஞ்சிக்கும் செயலாகும்.

கர்நாடகத்தில், கடந்த ஆகஸ்ட்டில் இருந்து இன்றுவரை இரண்டு முறை அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ஆட்சியாளர்கள் கூட்டி, தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டுத் தண்ணீர்கூடத் தரக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்கள். 13.9.2023 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, “தமிழ்நாட்டின் திமுகவோடு காங்கிரஸ் கட்சி அரசியல் கூட்டணி சேர்ந்திருப்பது வேறு செய்தி. காவிரி நீர் சிக்கலில், கூட்டணி அரசியல் தலையிட அனுமதிக்க மாட்டோம். தாயகம், தண்ணீர், மொழி, எல்லை ஆகியவற்றில் அரசியல் மோதல் எதுவும் கர்நாடகத்துக்குள் எப்போதும் வராது. நாங்கள் ஒன்றுபட்டு இருக்கிறோம். தலைமை அமைச்சர் நரேந்திர மோடியைச் சந்தித்து எங்களது நிலைபாட்டை வலியுறுத்துவோம்” என்று கூறினார்.

செய்தியாளர்கள் இதைச் சுட்டிக்காட்டி தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டுவீர்களா என்று துரைமுருகனிடம் கேட்டபோது, இப்போது அதெல்லாம் தேவையில்லை. 21.9.2023 அன்று உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு அதுபற்றி யோசிக்கலாம் என்று கூறியுள்ளார்.

மேட்டூர் அணையில் 13.9.2023-ஆம் நாள் அளவின்படி 14.27 டிஎம்சி தண்ணீர்தான் உள்ளது. மேட்டூர் அணையில் நிரந்தரமாக தேக்கி வைக்கப்பட வேண்டிய நீர் இருப்பு குறைந்தபட்சம் 7 டிஎம்சியாவது இருக்க வேண்டும். கர்நாடகம் தண்ணீர் திறந்துவிடுவதை முற்றிலும் நிறுத்திவிட்ட இந்நிலை தொடர்ந்தால், இன்னும் சில நாட்களில் மேட்டூர் அணையை மூடவேண்டி வரும். அதன்பிறகு குறுவை பாதிப்பு மட்டும் அல்ல, ஒரு போக சம்பா, தாளடி முதலிய நெல் சாகுபடிகளும், கரும்பு, வாழை, பருத்தி, பயறு வகைகள் போன்ற சாகுபடிகளும் முற்றிலும் பாதிக்கப்படும். அடுத்து, 22 மாவட்டங்களில் குடிநீர்ச் சிக்கலும் ஏற்படும்.

இவ்வளவு அபாயம் இருக்கும் பொழுது, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அசட்டையாக, அலட்சியமாக காவிரிச் சிக்கல் குறித்து பேசிக் கொண்டுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களோ காவிரிச் சிக்கலைப் பேசுவதைத் தவிர்த்து ஒதுங்கிக் கொள்கிறார்.

இதுவரை ஜூன் 1-லிருந்து கர்நாடகம் தமிழ்நாட்டிற்கு 99 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட்டிருக்க வேண்டும். ஆனால், அது திறந்துவிட்டிருப்பதோ 37 டிஎம்சி மட்டுமே. இவ்வளவு அவலம், சோகம் நடந்து கொண்டிருக்கும்போது, தமிழ்நாடு முதலமைச்சர், நீர்வளத்துறை அமைச்சர் மனங்களில் கொஞ்சம் கூட பதற்றம் இல்லை. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அன்றாடம் அனைத்திந்திய அரசியலை அலசிக் கொண்டிருக்கிறார். இண்டியா கூட்டணியின் பிரச்சார பீரங்கியாகப் பேசி வருகிறார். தமிழ்நாட்டிற்குரிய காவிரி நீர்பற்றிப் பேசினால், அனைத்திந்தியத் தலைவராக வளர்த்துவரும் தனது பிம்பம் பாதிக்கப்படுமோ என்று அச்சப்படுகிறார் போலும். அண்மையில் தஞ்சை - திருவாரூர் - நாகை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் பல்வேறு நிகழ்வுகளில் 2 நாள் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் காவிரி தண்ணீர் பற்றி எதுவும் பேசவில்லை.

ஆனால் இண்டியா கூட்டணிக்குத் தலைமை தாங்கும் காங்கிரசின் கர்நாடக ஆட்சி, அரசியல் கூட்டணி பற்றிக் கவலைப்படபாமல், சட்டப்படியான தமிழ்நாட்டுக்குரிய தண்ணீரைத் தடுத்து கன்னட இனவாத அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறது. 12.9.2023 அன்று ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அதன் தலைவர் வினீத் குப்தா ஒரு நொடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் கர்நாடகம் தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறோம் என்று கூறியுள்ளார். ”இது பரிந்துரை (recommendation) அல்ல, கட்டளை (direction)” என்று தெளிவாகக் கூறியுள்ளார் (The Hindu, 13.9.2023). காவிரி ஒழுங்காற்றுக் குழு கூறியுள்ளது கட்டளை அல்ல, வெறும் பரிந்துரைதான் என்று 13.9.2023 அன்று திரித்துப் பேசியிருக்கிறார் கர்நாடக காங்கிரஸ் முதலமைச்சர். இதற்குக் கூட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டாமா?

உச்ச நீதிமன்றத்தை மட்டுமே நாடுவோம் என்று திமுக ஆட்சியாளர்கள் அடம்பிடிப்பதன் சூட்சுமம் என்ன? உச்ச நீதிமன்றம் 16.2.2018 அன்று வழங்கிய காவிரிச் வழக்கு இறுதித் தீர்ப்பில், காவிரி மேலாண்மை ஆணையத்துக்குள்ள அதிகாரத்தைக் கூறிவிட்டு, காவிரி மேலாண்மை ஆணையத்தின் கட்டளையை, தொடர்புடைய ஏதாவது ஒரு மாநிலம் செயல்படுத்தவில்லை என்றால், அதைச் செயல்படுத்துமாறு ஆணையம் இந்திய அரசைக் கோர வேண்டும், இந்திய அரசு அதைச் செயல்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளது. (உச்ச நீதிமன்றத் தீர்ப்பு செயலாக்கப் பகுதி VIII) காவிரி ஆணையத்தின் தலைவராக உள்ள சௌமித்ர குமார் ஹல்தர் நடுநிலை தவறிய மனிதர் என்று காவிரி உரிமை மீட்புக் குழு பலதடவை குற்றம் சாட்டியுள்ளது. அவர் தனது உத்தரவைக் கர்நாடகம் மீறும்போது அதைச் செயல்படுத்திட இந்திய அரசின் அதிகாரத்தை நாட வேண்டும். ஆனால் அவர் நாட மாட்டார். அதே வேளை, தமிழ்நாடு முதலமைச்சரும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்துவிட இந்திய அரசு போர்க்கால அடிப்படையில் தலையிட வேண்டும் என்று உரியவாறு ஏன் வலியுறுத்தக் கூடாது? பொது மக்கள் மனு கொடுப்பது போல் தலைமை அமைச்சர் நரேந்திர மோடியிடம் தமிழ்நாடு முதலமைச்சரும் நீர்வளத்துறை அமைச்சரும் சம்பிரதாயத்துக்கு மனு கொடுத்து விட்டு ஒதுங்கிக் கொண்டது ஏன்?

நரேந்திர மோடி இதில் தலையிடாமல் ஒதுங்கிக் கொண்டிருக்கும் போது, தமிழ்நாட்டில் அனைத்துக்கட்சிக் கூட்டத்தை நடத்தி, அதில் வலிமையான தீர்மானம் நிறைவேற்றி, தலைமை அமைச்சர் தலையிட வேண்டும் என்று கோரியிருக்கவேண்டும். அனைத்துக் கட்சி குழுவினரை புதுதில்லி அழைத்துச் சென்று தலைமை அமைச்சரைச் சந்தித்துப் பேசியிருக்க வேண்டும். இவற்றையெல்லாம் செய்யவில்லையே ஏன்? தண்ணீரைத் திறந்துவிடாமல் வைத்திருக்கும் கர்நாடக முதலமைச்சர், தில்லி சென்று தலைமை அமைச்சரைச் சந்திப்போம் என்கிறார்.

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, 13.9.2023 அன்று பெங்களூரில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது பருவமழை பொய்த்து கர்நாட அணைகளில் போதிய தண்ணீர் இல்லாத போது அந்நிலையில் காவிரி நீரை எப்படிப் பகிர்ந்து கொள்வது என்பதற்கு வழிகாட்டல் நெறிமுறைகள் வகுக்கப்படவில்லை என்று தவறான செய்தியை வெளியிட்டார். அதற்குக் கூட தமிழ்நாடு முதலமைச்சர் பதில் சொல்லவில்லை. காவிரிச் சிக்கலில் உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்பில் வால்யூம் V பக்கம் 212 (Vol. V Page 212 Point 28) பின்வருமாறு கூறுகிறது:

“பருவமழை தவறி பற்றாக்குறை ஏற்படும் ஆண்டில், வழக்கமான நீர்ப்பெருக்கம் குறைந்து போயிருந்தால் அதை விகிதாச்சார அடிப்படையில் கேரளம், கர்நாடகம், தமிழ்நாடு, மற்றும் புதுச்சேரி ஒன்றியப் பகுதி ஆகியவற்றுக்கு காவிரி ஒழுங்கு முறை ஆணையம் பகிர்ந்து தர வேண்டும்”.

அதாவது மேற்படி நான்கு மாநிலங்களிலும், பல வழிகளில், ஓர் ஆண்டின் சராசரி நீர்ப்பெருக்கம் 740 டிஎம்சி என்று காவிரித் தீர்ப்பாயம் கூறியதை உச்ச நீதிமன்றம் அப்படியே ஏற்றுக்கொண்டது. இதில் கர்நாடகம், தமிழ்நாடு உள்ளிட்ட நான்கு மாநிலங்களின் சராசரி நீர்ப்பெருக்கம், முதலியவை குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த சராசரியை விட கர்நாடக நீர்ப்பெருக்கம் குறைந்திருந்தால், அது எத்தனை விழுக்காட்டு விகிதம் குறைந்திருக்கிதோ அத்தனை விழுக்காட்டு விகிதத்திற்கு ஏற்ப தமிழ்நாட்டுக்குத் திறந்து விட வேண்டிய தண்ணீரைக் குறைத்துக் கொண்டு திறந்துவிட வேண்டும். இவ்வாறு உச்சநீதிமன்றத் தீர்ப்பு வழிகாட்டியிருக்கும்போது பற்றாக்குறை கால பகிர்வு விகிதம் தீர்ப்பில் சொல்லப்படவில்லை என்று முற்றிலும் தவறான செய்தியை கர்நாடக முதல்வர் சொல்கிறார். அதற்குக் கூட தமிழ்நாட்டு முதல்வர் ஏன் எதிர்வினை ஆற்றவில்லை?

தமிழ்நாட்டு மக்களை மயக்கி, வசப்படுத்திக் கொள்ளலாம் என்ற நிலையில் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக முன்னாள் ஆளுங்கட்சியும் இந்நாள் எதிர்க்கட்சியுமான அஇஅதிமுக காவிரிச் சிக்கலில் பெருமளவுக்கு தமிழ்நாட்டு உழவர்களும், மக்களும் வஞ்சிக்கப்பட்டிருக்கும்போது அதை எதிர்த்து ஏன் போராடவில்லை? காவிரியை மையப்படுத்தி கடுமையான விவாதங்களைக் கூட அரசியல் அரங்கில் அஇஅதிமுக எழுப்பவில்லையே!

தமிழ்நாட்டு மக்களும் உழவர்களும் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியும், ஆண்ட கட்சியும் தமிழ்நாட்டு மக்களை எளிதாக வசப்படுத்திக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றன. கர்நாடகத்திலோ, போதிய தண்ணீர் அவர்களது அணைகளில் இருந்தபோதும், மிகமிக அற்ப சொற்பமாக 5 ஆயிரம் கன அடிதண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று ஆணையமும், ஒழுங்காற்றுக் குழுவும் சொன்னதை எதிர்த்து உழவர்களும், மக்களும் பரவலாக பற்பல வடிவங்களில் போராடி வருகிறார்கள். நாமோ சிற்சில அடையாளப் போராட்டங்களை அங்கங்கே நடத்துவதோடு நின்று கொள்கிறோம். பெரும் பெரும் அரசியல் கட்சிகள் இவற்றைக் கையிலெடுப்பதில்லை.

காவிரியில் நாம் இழந்திருப்பது ஏராளம். 1984 வரை ஓராண்டுக்கு சராசரியாக 362 டிஎம்சி தண்ணீர் கர்நாடகத்திலிருந்து தமிழ்நாடு பெற்று வந்தது என்று பொதுப்பணித்துறையின் அதிகாரப்பூர்வ ஆவணம் கூறுகிறது. இப்போது வெறும் 177.25 டிஎம்சி தண்ணீரையும் திறந்துவிட மறுக்கிறார்கள். ஏன்? தமிழ்நாட்டு அரசியலின் தகுதியை கன்னடர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்கள்தான் சரியாகப் புரிந்து கொள்ளாமல் இருக்கிறோம். ஆட்சியாளர்களையும், ஆகப் பெரும் கட்சிகளையும் எதிர்பார்க்காமல் நம்முடைய வாழ்வுரிமை, வேளாண்மை, குடிநீர் ஆகியவற்றைக் காப்பாற்ற நாம் போராட வேண்டும். பெருந்திரள் களப் போராட்டங்கள் தமிழ்நாடெங்கும் பரவினால் ஒழிய கர்நாடகமும் இந்திய அரசும் நீதிக்குத் தலைவணங்காது. நாம் நமது வாழ்வுரிமையைக் காக்கக் களம் இறங்க வேண்டும்.

==========================
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
==========================
பேச: 98419 49462, 94432 74002
==========================
Fb.com/KaveriUrimai
www.kaveriurimai.com
==========================

Labels: , , ,

0கருத்துக்கள்:

Post a Comment

<< முகப்பு பக்கம்


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்