<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d6955529389241309188\x26blogName\x3d%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86.%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://thozharmaniyarasan.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com/\x26vt\x3d-8408640130511538487', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

"திருட்டுப் போன காவிரி உரிமையும் திருடர்களுடன் திராவிட அரசியல் உறவும்"---- ஐயா பெ. மணியரசன், தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

Wednesday, August 30, 2023


 திருட்டுப் போன காவிரி உரிமையும்

திருடர்களுடன் திராவிட அரசியல் உறவும்
=================================
ஐயா பெ. மணியரசன்,
தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
=================================


காவிரி டெல்டாவில் நடப்பாண்டு ஐந்து இலட்சம் ஏக்கருக்கு மேல் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டது. தண்ணீரின்றி 3½ இலட்சம் ஏக்கர் பயிர்கள் காய்ந்து சருகாகிக் கொண்டிருக்கின்றன. மேலும் 16½ இலட்சம் ஏக்கரில் சம்பாவும், தாளடியும் சாகுபடி செய்ய வேண்டியுள்ளது. இதன் கதி என்ன என்ற வினாக்குறி உழவர்களின் கண்முன்னே ஒரு தூக்குக் கயிறு போல் தொங்குகிறது!

ஒப்புக்கு உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போட்டுவிட்டு, ஒய்யார வசனம் பேசித்திரிகிறார் தமிழ்நாட்டு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்! அதைக் கூட பேசுவதில்லை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்! தமிழினத்தைப் பகை இனமாகப் பார்க்கும் கர்நாடகக் காங்கிரசு - பா.ச.க. உள்ளிட்ட கட்சியினர் கன்னட இனவெறியர்கள்! இவர்கள், திமுக ஆட்சியாளர்களின் திராவிடச் சகோதரர்கள்.

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் கர்நாடக ஆளுங்கட்சியான காங்கிரசின் உறவோடு, தலைமை அமைச்சர் அல்லது முக்கியமான துறைகளில் ஒன்றிய அமைச்சர்கள் பதவிகளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் மு.க. ஸ்டாலின்! காவிரி உழவர்களுக்காகக் கன்னடத் திராவிடரை, காங்கிரசுத் தோழமையரைப் பகைத்துக் கொள்ள முடியுமா? முடியாது. ஒப்புக்கு உச்சநீதிமன்றத்தில் வழக்குப் போட்டு ஒதுங்கிக் கொள்வதே உயரிய இராசதந்திரம் என்று முடிவு செய்தது திமுக ஆட்சி!

உச்சநீதிமன்றம் கேட்டதற்காகக் காவிரி மேலாண்மை ஆணையம் 29.8.2023 அன்றுகூடி, “கர்நாடகம் 29.8.2023 லிருந்து 12.9.2023 வரை 15 நாட்களுக்கு 1 நொடிக்கு 5000 கனஅடி காவிரி நீர் தமிழ்நாட்டிற்குத் திறந்து விடவேண்டும் என்று கூறியது. தமிழ் நாட்டு அதிகாரிகள் ஆணையக் கூட்டத்தில் வைத்த கோரிக்கை 1 நொடிக்கு 24000 கன அடி வீதம் 15 நாட்களுக்குக் கர்நாடகம் திறக்க வேண்டும் என்பதாகும். கர்நாடமோ 1 நொடிக்கு 3000 கனஅடிக்கு மேல் திறக்க முடியாது என்று அக்கூட்டத்தில் கூறியது. கர்நாடகத்தின் கபினி, ஹேமாவதி, ஹேரங்கி ஆகிய அணைகளில் 90 விழுக்காட்டுக்கு மேல் தண்ணீர் உள்ளது. ரி.ஸி. சாகரில் 80 விழுக்காடு தண்ணீர் உள்ளது. பற்றாக்குறை அங்கு இல்லை.

இதற்கிடையே அமைச்சர் துரைமுருகன் 29.8.2023 அன்று செய்தியாளர்களுக்குக் கொடுத்த செவ்வியில், காவிரி ஆணையம் ”மந்தமாக (lethargic) செயல்படுகிறது” என்று நேசமுறையில் விமரிசனம் செய்துள்ளார். நடுநிலை தவறி, நயவஞ்சகமாகச் செயல்படுகிறார் காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் சௌமித்திர குமார் ஹல்தர்! இதற்கு முன் நடந்த 22 ஆணையக் கூட்டங்களிலும் அவர் அறிவித்த தண்ணீரைத் திறந்துவிடக் கர்நாடகம் மறுத்துவிட்டது. அந்த விதிமீறல் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை ஹல்தர். ஆணையம் கூறிய முடிவைக் கர்நாடகம் செயல்படுத்தவில்லை என்றால், உடனடியாக இந்திய அரசைத் தலையிடச் செய்து, அம்முடிவை நிறைவேற்ற வேண்டும் என்று 16.2.2018 அன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் உள்ளது. (VIII. If the Board (Authority) finds that either Government of the party States namely Tamil Nadu, Kerala, Karnataka and Union Territory of Pondicherry do not co-operate in implementing the decision/direction of the Tribunal, it can seek the help of the Central Government. XIIV. If any delay/shortfall is caused in release of water on account of default of any party State, the Board (Authority) shall take appropriate action to make good the deficiency by subsequently deducting indented releases of the party State)

காவிரித் தீர்ப்பாயம் தனது இறுதித் தீர்ப்பில் விதித்த இந்த வழிமுறையை அப்படியே ஏற்றுக் கொண்டது, உச்ச நீதிமன்றம் தனது 16.2.2018 தீர்ப்பில். துரைமுருகன் ஹல்தரோடும் கர்நாடகத்தோடும் கொஞ்சுகிறார்!

செய்தியாளர் : கர்நாடகத்திடம் ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் பெறுவதில் பிரச்சினை ஏற்படுகிறதே?

துரைமுருகன் : பருவமழை பொய்த்துப் போனால் எல்லா இடங்களிலும் தண்ணீர் குறைந்து போய்விடும். தண்ணீர் அதிகமாக இருக்கிறபோது மாதம் எவ்வளவு தண்ணீர் கொடுக்க வேண்டும் என்ற கணக்குப்டி கொடுத்திருக்கிறார்கள். தண்ணீர் குறைந்து போனால், இருக்கிற தண்ணீரை முன்விகித அடிப்படையில் பங்கிட வேண்டும் என்று சொல்கிறோம். (தினத்தந்தி 30.8.2023).

கர்நாடகம் தனது அணைகளில் தேக்க முடியாத வெள்ள நீரைத்தான் வேறு வழியில்லாமல் திறந்து விட்டிருக்கிறது. ஒருபோதும் தீர்ப்புப்படி தண்ணீரைத் திறந்து விட்டதில்லை. பற்றாக்குறை காலத்தில் விகிதாச்சாரப்படி பகிர்ந்து கர்நாடகம் தண்ணீர் தர உச்சநீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. (28. In case the yield is less in a distress year, the allocated shares shall be proportionately released amongst the States of Kerala, Karnataka, Tamilnadu, and Union Territory of Pondicherry by the Regulatory Authority - Vol.V Page 212). ஒரு தடவை கூட இதை எடுத்துக் காட்டி அதிமுக அரசோ, திமுக அரசோ கர்நாடகத்திடம் வாதாடித் தண்ணீர் பெற்றதில்லை.

உச்ச நீதிமன்றம் 16.2.2018 அன்று வழங்கிய தீர்ப்பில் மாநிலங்களுக்கிடையே பகிரும் தண்ணீர் அளவை மாற்றியது. ஆனால், தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பில் கூறிய நடைமுறைச் செயல்திட்டங்கள் அனைத்தும் செல்லும் என்று கூறி தனது தீர்ப்பில் இணைத்துக் கொண்டது. அதில் வால்யூம் ஐந்தில் பத்தி 25 லிருந்து பத்தி 32 வரை கூறியுள்ள வழிகாட்டல்கள் மிகமிகச் சிறப்பானவை. சில ஆண்டுகளில் பருவமழை தொடங்குவது தாமதமாகலாம், அப்பொழுதும் சூன் மாதம் தொடங்க வேண்டிய வேளாண்மைப் பணிகள் பாதிக்கப்படக்கூடாது. அதை ஈடுகட்டும் வகையில் முந்தைய தண்ணீர் ஆண்டின் கடைசி மாதமான மே மாதம் காவிரியின் மேல்பாசனப் பகுதியில் உள்ள (கர்நாடகம்) நீர்த்தேக்கங்களில் தண்ணீரைச் சேமித்து வைத்திருக்க வேண்டும் என்று பத்தி 29 கூறுகிறது.

அதன்பிறகு உள்ள பத்திகளிலும் பற்றாக்குறை ஆண்டுகளில் தண்ணீரை விகிதாச்சாரப்படி பகிர்ந்து கொள்வதற்கு உள்ள வழிமுறைகளைக் கூறியுள்ளது. அத்துடன் மிகமிக முக்கியமாக காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் அதன் ஒழுங்காற்றுக் குழு ஆகியவை அடிக்கடி கர்நாடகத்திலும் தமிழ்நாட்டிலும் கள ஆய்வு செய்து மழையளவு, தண்ணீர் வரத்து, இவ்விரு மாநிலங்களில் உள்ள தண்ணீர் இருப்பு முதலியற்றைக் கணக்கிட்டு, கர்நாடகம் எவ்வளவு தண்ணீரைத் திறந்து விட வேண்டும் என்று தானே முடிவுசெய்து உத்திரவிட வேண்டும் என்றும் கூறியுள்ளது.

ஒரு மாதத்திற்குரிய நீரை அந்த மாதத்திற்குள் பல தவணைகளில் பிரித்துத் தர வேண்டும் என்றும் ஆணை யிட்டுள்ளது. இந்தப் பணிகளைக் காவிரி மேலாண்மை ஆணையமும், காவிரி ஒழுங்காற்றுக் குழுவும் அவ்வப்போது களத்தில் இறங்கி ஆய்வு செய்து செயல்படுத்தியதே இல்லை. ஏன்? ஏனெனில் கர்நாடகம் அதை விரும்பவில்லை. கர்நாடகத்தின் கைப்பாவைகளாகிவிட்ட காவிரி மேலாண்மை ஆணையமும் காவிரி ஒழுங்காற்றுக் குழுவும் அவ்வாறு செயல்படுவதில்லை. மேற்கண்ட நடைமுறைகளைச் செயல்படுத்தத் தமிழ்நாடு அரசும் முற்படுவதில்லை. தமிழ்நாட்டின் எதிர்க்கட்சியாக இருக்கும்போதும் திமுகவும் அதிமுகவும் காவிரி உரிமையைத் தக்கவைக்க களப்போராட்டங்களும், கருத்துப் போராட்டங்களும் நடத்துவதில்லை.

உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பில் உள்ள மேற்கண்ட பற்றாக் குறைக் காலப் பகிர்வுத் திட்டம் உள்ளிட்ட நடைமுறைச் செயல்திட்டங்கள் துரைமுருகனுக்கும் ஸ்டாலினுக்கும் தெரியாமல் இருக்கலாம். ஏனெனில் அவர்களுக்குக் காவிரிச் சிக்லில் அக்கறை இல்லை. ஆனால், தொடர்புடைய அதிகாரிகளுக்கும், வல்லுநருக்கும் தெரியாதா? நமது காவிரி உரிமை மீட்புக்குழு ஒவ்வொரு தடவையும் பற்றாக்குறைப் பகிர்வுத்திட்டப்படி தண்ணீரைக் கேளுங்கள் என்று வலியுறுத்தி வந்துள்ளதே!

காவிரி ஒழுங்காற்றுக் குழு - 10.08.2023 அன்று கூடி, கர்நாடகம் தமிழ்நாட்டிற்கு இன்றிலிருந்து 15 நாட்களுக்கு, நொடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கூறியது. மறுநாள் 11.08.2023 அன்று காவிரி மேலாண்மை ஆணையக் கூட்ட முடிவில் அதன் ஆணையர் எஸ்.கே. ஹல்தர், கர்நாடகம் தமிழ்நாட்டிற்கு - நொடிக்கு 10 ஆயிரம் கன அடி 15 நாட்களுக்குத் திறந்துவிட வேண்டும் என்று மாற்றி ஆணையிட்டார். ஆணைகள் எதையும் செயல்படுத்தவில்லை கர்நாடகம்!

இதே ஹல்தர் 29.08.2023 அன்று கர்நாடகம் நொடிக்கு 5 ஆயிரம் கன அடி 12.09.2023 வரைத் திறந்துவிட வேண்டும் என்று ஆணையிட்டுள்ளார். இதையும் செயல்படுத்த முடியாது என்று மறுத்துவிட்டது கர்நாடகம்!

தமிழ்நாட்டு அரசியலின் யோக்கியதை இவர்கள் எல்லோருக்கும் தெரிகிறது.

இந்நிலை தொடர்ந்தால் இன்னும் சில நாட்களில், மேட்டூர் அணை மூடப்படும் அபாயம் உள்ளது. திறப்பு விழாவுக்கு வந்து கவர்ச்சி காட்டிய முதல்வர் ஸ்டாலின் மதகு மூடு விழாவுக்கும் வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

தமிழர்களுக்கு எதிரான கன்னட இனவெறி; இந்திய ஆட்சியாளர்களின் தமிழினப் புறக்கணிப்பு, திராவிட அரசியல் வாதிகளின் கன்னட சகோதரப் பாசம் மற்றும் பதவி, பணவேட்டை அரசியல் ஆகியவற்றால்தான் சட்ட உரிமையுள்ள காவிரி நீர் தமிழ்நாட்டிற்கு வராமல் தடுக்கப்பட்டிருக்கிறது. கர்நாடகம் துணிச்சலாக காவிரி நீரைக் களவாடிக் கொள்கிறது.

தமிழ்நாட்டில் 22 மாவட்டங்களின் குடிநீராகவும் 13 மாவட்டங்களின் பாசன நீராகவும் உள்ள காவிரி நீர் நமக்கு உயிர் நீராகும். நம் உயிரைக்காக்க முயல்வதுபோல் காவிரியை மீட்க களமிறங்கி மக்கள் திரள் போராட்டங்கள் நடத்துவோம்.

=================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
================================= 

Labels: , , ,

0கருத்துக்கள்:

Post a Comment

<< முகப்பு பக்கம்


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்