"திருத்துறைப்பூண்டி-பாங்கல் தோழர் இரா கோவிந்தசாமி அவர்கள் மறைவு பெரும் துயரம் அளிக்கிறது!" --- தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் இரங்கல்!
Thursday, July 18, 2024
திருத்துறைப்பூண்டி-பாங்கல் தோழர்இரா கோவிந்தசாமி அவர்கள் மறைவு பெரும் துயரம் அளிக்கிறது!
================================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் இரங்கல்!
============================
இரா. கோ. என்றும் ஆர்.ஜி. என்றும் தோழர்களாலும் நண்பர்களாலும் அன்புடன் அழைக்கப்பட்ட தோழர் இரா. கோவிந்தசாமி (அகவை 84) அவர்கள் உடல்நலக் குறைவால் இன்று (18.7.2024) பிற்பகல் காலமாமானார் என்ற செய்தி பெருந்துயரம் அளிக்கிறது.
கடந்த இரண்டு மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தோழர் இரா.கோ. அவர்களை சென்னைக்கு அழைத்துச் சென்று மகன் சதீஷூம் மகள் மங்களகிரிஜாவும் சிகிச்சை அளித்தும் பாதுகாத்தும், பின்னர் இளைய மகள் நளின்-மருமகன் சேகர் பராமரிப்பில் சிதம்பரத்தில் சிகிச்சை அளித்தும் பலன் இன்றி இயற்கை எய்திவிட்டார்.
நானும் தோழர் கி.வெங்கட்ராமன் அவர்களும் சிபிஎம் கட்சியில் முழுநேரமாகச் செயலாற்றியபோது, மார்க்சிய அரசியல் புரிதலின் அடிப்படையில் எங்களுக்குத் தோழர் இரா.கோ. அவர்களுடன் நெருக்கமான தோழமை ஏற்பட்டது.
ஒருங்கிணைந்திருந்த இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சியில் தமது கம்யூனிசப் பயணத்தைத் தொடங்கிய இரா.கோ., 1964-இல் சிபிஎம் தலைவர்களோடு இணைந்து அக்கட்சியில் பணியாற்றினார். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் ஒன்பது செயற்குழு உறுப்பினர்களில் ஒருவராகச் செயல்பட்டார் இரா.கோ. அவர்கள்! அச் செயற்குழுவில் நானும் செயல்பட்டேன். அங்கும் அவரது மார்க்சியப்பார்வைக்கு ஏற்ற செயல்பாடுகளில்லை; தேடலுக்குத் தீர்வு கிடைக்கவில்லை.
தேசிய இனச்சிக்கல், பிராமணிய ஆதிக்க எதிர்ப்பு, சந்தர்ப்பவாதத் தேர்தல் கூட்டணி எதிர்ப்பு போன்ற மாற்றுச் சிந்தனைகளை முன்வைத்து நாங்கள் தனிக்கட்சி தொடங்க முடிவு செய்தபோது திருத்துறைப்பூண்டியில் பொறியாளர் தோழர் வி. இராமதாசு அவர்களும், தோழர் இரா.கோ. அவர்களும் தனிக்கட்சிக்கு வலுவான பங்களிப்புகளை வழங்கினர். எளிமையும் மார்க்சிய உறுதியும் கொண்டவர் தோழர் இரா.கோ. அவர்கள்.
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தால், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு போன்ற பொறுப்புகளில் இருந்து செயல்பட்டார்.
தமிழ்த்சேியப் பேரியக்கத்தின் சில நிலைபாடுகளில் தோழர் இரா.கோ. முரண்பட்டு, பிரிந்து தனிக்கட்சியில் செயல்பட்டார். அந்த நிலையிலும் எங்களிடையே தோழமை உறவும் பாசமும் வற்றாமல் இருந்தது. அவரது மறைவு எமக்குப் பெருந்துயரம் அளிக்கிறது.
நாளை (19.7.2024 அன்று) பாங்கலில் இறுதி நிகழ்வுகள் நடைபெற உள்ளன.
தோழர் இரா.கோ. அவர்களின் மறைவுக்குத் துயரத்தையும், குடும்பத்தார்க்கு ஆறுதலையும் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.
-
பெ. மணியரசன்
தலைவர்
தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
நாள்: 18-7-2024
Labels: அறிக்கைகள், இரங்கல்