<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/6955529389241309188?origin\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

"மே நாள்: சிந்தனைப் புரட்சிக்குத் திசை காட்டட்டும்" --- ஐயா பெ. மணியரசன் தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

Wednesday, April 30, 2025


மே நாள்:
சிந்தனைப் புரட்சிக்குத்
திசை காட்டட்டும்
=====================================================
ஐயா பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
===================================

மே நாள் என்பது தொழிலாளர் நாள் மட்டுமல்ல - சாரத்தில் மனிதத்தின் நாள்! உழைக்கும் விலங்குகளுக்குக் கூட ஓய்வு கொடுத்த - பணவேட்டையாடிகள் - உழைக்கும் மனிதர்களுக்கு ஓய்வு கொடுக்க மறுத்தார்கள்!

ஓய்வு கோராத எந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டபின் - உழைப்பாளர்களுக்குக் கூடுதலாக ஓய்வு கிடைத்திருக்க வேண்டும்! மனித மனத்தில் தெய்வமும் உண்டு சாத்தானும் உண்டு என்பர்! அதாவது, மனித உள்ளத்தில் அறமும் உண்டு, அறக்கேடும் உண்டு. களைத்துப் போகாத எந்திரங்களைப் போலவே மனிதர்களும் உழைக்க வேண்டும் என்று கட்டளை இட்டார்கள். ஒரு நாளில் பதினெட்டு மணி நேரம்கூட வேலை வாங்கினார்கள்!

தீங்குகள் தொடரும்போது தீர்வுகள் வெடித்தெழும்! உழைப்புக்கு மனித நேயமுள்ள நேரவரம்பு கோரினார்கள் தொழிலாளர்கள்! பலநாடுகளில் இக்கோரிக்கை தன்னெழுச்சியாய்ப் பற்றிப் படர்ந்தது.

பன்னாட்டு தொழிலாளர் பேராயம் (The International Workers’ Congress) மாநாடு 1889-இல் பாரீசில் நடந்தபோது, தொழிலாளர்கள், நிகரமையர்கள் (Socialists) மார்சியக் கட்சியினர் முதலியோரைக் கொண்ட இரண்டாவது பன்னாட்டு மையத்தை (அகிலத்தை) அமைத்தனர். அது தொழிலாளர்களின் வேலை நேரம் ஒரு நாளைக்கு எட்டு மணிநேரமாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை வடித்து. அதற்காக பன்னாட்டளவில் மாபெரும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவது என்று முடிவு செய்தது. அப்போது, மே மாதம் முதல் நாளில் இந்த ஆர்ப்பாட்டங்களை நடத்தலாம் என்று முடிவு செய்தார்கள். மே 1 ஐத் தேர்ந்தடுத்த காரணம் இதுதான்:

அமெரிக்கக் கூட்டரசுத் தொழிலாளர்கள் (American Federation of Labour) என்ற யு.ஏஸ்.ஏ நாட்டுத் தொழிலாளர் அமைப்பு ஏற்கெனவே 1886 மே 1-ஆம் நாளில் தொடங்கி, தொடர்ந்து வட அமெரிக்க சிகாகோவில் ஹே மார்க்கெட் பகுதியில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வந்தது.

4.5.1886 அன்று அமெரிக்க அரசின் காவல் துறையினர் ஆர்பாட்டக்கார்கள் பலரை அடித்து படுகாயப்படுத்தி கலைத்தனர். அப்போராட்டத்தின் அமைப்பாளர்களாக விளங்கிய 3 தொழிலாளர் தலைவர்கள் உட்பட 8 பேரை சிறையிலடைத்து தூக்கில் போட்டார்கள். அந்த 3 தலைவர்களின் பெயர்களும் இன்றும் ஒளிவீசி உலகெங்கும் பரவுகின்றது. அவர்கள், ஆகஸ்ட் ஸபைஸ், ஆல்பர்ட் பார்சன், சாமுவேல் ஃபீல்டென்! அதன்பிறகு உலகெங்கும் 8 மணி நேர வேலை கோரும் போராட்டம் மேலும் வீச்சுப் பெற்றது.

எனவே, அந்த 1886 மே 1-ஆம் நாளைத் தொழிலாளர் உரிமைப் போராட்ட நாளாக 1889-இல் பாரிசில் கூடிய பன்னாட்டுப் பேராயம் அறிவித்தது.
இந்த மே 1 உழைப்பாளர் நாளை இந்தியாவில் முதல் முதலாகக் கொண்டாடிய இடம் சென்னை கடற்கரை! முன்னெடுத்தவர் தென்னாட்டின் முதல் பொதுவுடைமையாளர் - சிந்தனைச்சிற்பி சிங்காரவேலர்! சென்னையில் மெரினா கடற்கரையில் காலையிலும் திருவான்மியூர் கடற்கரையில் மாலையிலும் கொண்டாடினர். எம்.பி.எஸ். வேலாயுதம், சுப்பிரமணிய சிவா போன்ற துடிப்பு மிக்க விடுதலைப் போராட்ட வீரர்கள் இந்த மே நாள் கூட்டங்களில் உரையாற்றினர்.

இந்த இடத்தில் இன்னொரு முதன்மை நிகழ்வையும் நினைத்துப் பார்க்க வேண்டும். இந்தியாவிலேயே, வெற்றிகரமான தொழிலாளர் வேலை நிறுத்தம் நடத்தி, சம்பள உயர்வும், வேலை நேரக் குறைப்பும் முதல்முதலாக சாதித்த இடம் தூத்துக்குடி! முன்னெடுத்துத் தலைமை தாங்கியவர் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார்! ஆண்டு 1906! தொழிற்சாலை கோரல் மில்ஸ் நூற்பாலை.

அடுத்து முதல் முதலாக முறைப்படி ஒருங்கிணைக்கப்பட்ட தொழிற்சங்கம் நிறுவப்பட்ட மண்ணும் இ்நதியாவிலேயே தமிழ் மண்ணே! சென்னை பின்னி ஆலைத் தொழிலாளர்களை மையப்படுத்தி இச்சங்கம் தொடங்கப்பட்டது. “சென்னை தொழிலாளர் சங்கம் (Madras Labour Union)! ஆண்டு 1918. இதன் முகாமையான நிறுவனர்கள் நடேச முதலியார் (நீதிக்கட்சி மூலவர்களில் ஒருவர்), திரு.வி. கலியாண சுந்தரனார்! சர்க்கரைச் செட்டியார் ஆகியோர்!

உழைக்கும் மக்களுக்கான முதல் புரட்சி - நிகரமைப் புரட்சி 1917 இரசியப் புரட்சி! அதை வரவேற்று, பூரித்து மனித சமத்துவம் - சனநாயகம் இரண்டையும் முதன்மைப்படுத்தி கவிதை யாத்தவர் பெரும் பாவலர் பாரதியார்!

“ஆகாவென்று எழுந்தது பார் யுகப்புரட்சி!
கொடுங்கோலன் அலறி வீழந்தான்!”

“குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு
மேன்மையுறக் குடிமை நீதி”

என்று இரசியப் புரட்சியை பாடிப் பரவசப்பாட்டார் பாரதியார்!

பாவேந்தர் பாரதிதாசன் பிற்காலத்தில்

“ஆர்த்திடும் எந்திரக் கூட்டங்களே உங்கள்
ஆதி அந்தம் சொல்லவோ நீங்கள்
ஊர்த்தொழிலாளர் உழைத்த உழைப்பினில்
உதித்ததும் மெய்யல்லவோ?”

“கூழுக்குப் பற்பலர் வாடவும் சிற்சிலர்
கொள்ளையடிப்பதும் நீதியோ - புலி
வாழ்வதுதான் எந்தத் தேதியோ?” என்று கேட்டார்.

“எல்லார்க்கும் எல்லாமும் என்றிருப்பதான
இடம் நோக்கி நகர்கின்றது இந்த வையம்” என்றார்!

இன்று தமிழ்நாட்டின் நிலை என்ன?

‘மே நாளுக்கு விடுமுறை அறிவித்தது கலைஞர் ஆட்சி, மே நாள் பூங்கா அமைத்தது எங்கள் ஆட்சியில்தான்‘ என்று பெருமை பேசிக் கொண்டுள்ள தி.மு.க. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் “தொழிலாளர்களின் வேலை நேரம் 8 மணி என்பதை 12 மணி என்று, - 50 % உயர்த்தி, சட்டம் செய்தார். அரிவாள் - சுத்தியல் கொடி போட்டுக் கொண்டு, உதய சூரியனுக்கு விசுவாசம் காட்டி, சில தொகுதிகள் பெறும் கம்யூனிஸ்ட்டுக் கட்சிகள் உட்பட பல்வேறு தொழிலாளர் அமைப்புகளும் மனித உரிமையாளர்களும் எதிர்ப்புத் தெரிவித்தவுடன், அச்சட்டத்தைக் கைவிட்டதாக அறிவித்தார்.

ஆனால், நடைமுறையில் தொழிற்சாலை முதலாளிகள் தொழிலாளர்களிடம் 12 மணி நேரம் வேலை வாங்குவதைத் தி.மு.க. ஆட்சி உறுதிப்படுத்துகிறது. கடந்த ஆண்டு சென்னை - காஞ்சிக் கிடையே செயல்படும் தென்கொரிய சாம்சங் தொழிற்சாலைத் தொழிலாளர்கள், தாங்கள் 11 மணி முதல் 12 மணிநேரம் வரை வேலை வாங்கப்படுவதாகவும், தங்களுக்கு தொழிற்சங்கம் வைத்துக் கொள்ளும் உரிமை மறுக்கப்படுவதாகவும் கூறி, 8 மணிநேரம் வேலை; தொழிற்சங்கம் வைத்துக் கொள்ள உரிமை கோரி சனநாயக வடிவில் போராடினர். அதை சி.பி.எம். தொழிற்சங்கம் வெளியிலிருந்து வழிநடத்தியது. தி.மு.க. ஸ்டாலின் ஆட்சி முழுக்கமுழுக்க சாம்சங் முதலாளிகளையே ஆதரித்து 8 மணி நேர வேலைக்கு ஆதரவு கொடுக்கவில்லை.

“தொழிலாளர்களுக்கு உற்ற தோழன் தி.மு.க.வே” என்று தி.மு.க. ஒரு காலத்தில் முழங்கியது. அப்போது அண்ணா சொன்னார், “மாஸ்கோவிற்குப் போவேன், மாலங்கோவைப் பார்ப்பேன், நான்தான் உண்மையான கம்யூனிஸ்ட் என்பேன். இரசியா எங்களை ஆதரிக்கும்” என்றார். காங்கிரசு பேசுது சனநாயக சோசலிசம். அது முதலாளிகளின் சோசலிசம். கழகம் பேசுவது விஞ்ஞான சோசலிசம், காரல் மார்க்சின் சோசலிசம். என்று பேசினார் எழுதினார். எந்த முழக்கத்திற்கு மக்களிடம் ஆதரவு சந்தை அதிகமாக இருக்கிறதோ அதைக் களவாடிமக்களிடம் முழங்குவது தி.மு.க.வின் பரம்பரை உத்தி! கருணாநிதியும் இதையேதான் செய்தார்.

கம்யூனிஸ்ட்டுகளும் தி.மு.க.வின் வாக்குச் சந்தை உத்திக்கு 50 விழுக்காடு வந்துவிட்டார்கள். குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நாடாளுமன்ற, சட்ட மன்ற, உள்ளாட்சித் தேர்தல்களை உதயசூரியனுக்குக் கீழ் இணைந்து சந்திக்க வேண்டிய நிலையில் இருக்கும் சி.பி.எம். கட்சி, சாம்சங் தொழிலாளர்களுக்கு இரண்டகம் செய்து, ஆலை நிர்வாகத்துடன் ஒத்துழைத்து, மு.க. ஸ்டாலினுக்குச் “சலாம்” போட்டது!

தமிழ்நாட்டில் வெளிநாடுகளுக்குச் சென்று விருந்து வைத்து முதலாளிகளை அழைத்து வருவதில் எடப்பாடி பழனிச்சாமிக்கும் (அ.தி.மு.க.) மு.க. ஸ்டாலினுக்கும் (தி.மு.க.) இடையே “ஆரோக்கியமான” போட்டி நடந்து கொண்டிருக்கிறது.

தொழிற்சாலைகளிலும் அரசு அலுவலகங்களிலும் அடிமாட்டுக் கூலிக்கு தற்காலிக, ஒப்பந்த தொழிலாளிகளையே - ஊழியர்களையே இந்திய - தமிழ்நாடு ஆட்சியாளர்களும் முதலாளிகளும் அமர்த்துகிறார்கள். தொழிற்சங்கங்கள் அந்த வரம்புக்குள் செயல்பட்டுக்கொண்டுள்ளன.

இந்த ஆண்டு (2025 மே 1) மே நாளுக்குத் தமிழ்நாட்டு நாளேடுகள் சிறப்புக் கட்டுரைகள் எதுவும் வெளியிடவில்லை.

நூற்றாண்டைக் கொண்டாடும் இந்திய கம்யூனிஸ்ட்டுகள் - எண்பத்தைந்து ஆண்டுகளாகத் தொடர்சியாகச் செயல்பட்டுவரும் கம்யூனிஸ்ட்டுக் கட்சிகள், வேறெந்த அமைப்பையும் விட அதிகமாக ஈகம் செய்துள்ளன; மக்களுக்ககாகப் போராடியுள்ளன. ஆனால், அக்கட்சிகளுக்கு உரிய வளர்ச்சி இல்லை. எனவே, இந்திய ஏகாதிபத்தியவாத கட்சியான காங்கிரசு, பதவி - பணம் - விளம்பர வேட்டைக் கட்சிகளாக உள்ள தி.மு.க.- அ.தி.மு.க. போன்ற கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து சிறுத்துப் போகின்றன!

காரல்மார்க்ஸ், லெனின் போன்றவர்கள் மாமேதைகள்தாம்; ஆனால் அகநிலை விருப்பத்திற்கு அதிகமாக உள்ளாகிக் கற்பனை முடிவுகளையும் தங்கள் ஆய்வில் கலந்தார்கள். ஒரே ஒரு எடுத்துக்காட்டை மட்டும் இங்கு பார்க்கலாம்.

தொழிலாளிகள் வர்க்கம் - இயல்பிலேயே புரட்சிகரமானது. அதுவே தலைமை தாங்கி நிகரமை (சோசலிச) புரட்சியை நடத்தும் என்று வரையறுத்துக் கூறினார்கள். (இதில் லெனினுக்கு சிறு வேறுபாடு உண்டு). ஆனால், உலகில் எங்காவது தொழிலாளி வர்க்கம் நிகரமைப் புரட்சியையோ, நாட்டு விடுதலைப் புரட்சியையோ, சனநாயகப் பாதுகாப்பு அல்லது சனநாயக மீட்புப் புரட்சியையோ முன்னெடுத்தது உண்டா? இல்லை! பல வர்க்கங்களில் உள்ள சனநாயக ஆற்றல்கள், புரட்சியாளர்கள் முன்னெடுத்துத் தலைமை தாங்கித்தான் - உழவர்கள் தொழிலாளர்கள், மற்றுமுள்ள மக்கள் பிரிவினர் ஆதரவைப் பெற்று நிகரமைப் புரட்சியோ, அல்லது மக்கள் சனநாயகப் புரட்சியோ, நாட்டு விடுதலைப் புரட்சியோ நடந்துள்ளன. எடுத்துக் காட்டு இரசியா, சீனா, வியட்நாம் போன்ற நாடுகளின் புரட்சிகள்).

தமிழ்நாட்டை எடுத்துக் கொள்வோம். தமிழினச் சிக்கலை முன்னெடுத்த தி.க., தி.மு.க. போன்ற கட்சிகள்தாம் கிடுகிடுவென வளர்ந்தன. (ஈ.வெ.ரா - சூதாகத் திராவிடத்தை திணித்தாலும், தமிழிர்கள் அதைத் “தமிழர் ஆரியர்”, “தமிழ்நாடு எதிர் இந்திய ஏகாதிபத்தியவாதம்” என்றே புரிந்து கொண்டனர்.)

இந்தியா என்பது ஒரு தேசமல்ல; பல தேசங்களைக் கொண்ட ஒரு நிர்வாகம் என்ற சமூக - அரசியல் உண்மையைக் கூட மறுத்து, ஆரிய-இந்தி ஏகாதிபத்தியவாதிகளான காங்கிரசுத் தலைவர்கள் திணித்த “இந்திய தேசியத்தை” இன்றுவரை ஏற்றுக் கொண்டுள்ளவர்கள் இங்குள்ள கம்யூனிஸ்ட்டுகள்! பல தேசிய இன நாடுகள் கூட்டரசுகள் ஒரே நாட்டில் வாழ லெனின் வழிகாட்டினார். அதை ஏற்க மறுத்தவர்கள் இந்திய கம்யூனிஸ்ட்டுகள்!

அரசியல் சீரழிவு அனைத்துச் சீரழிவுகளையும் மக்களிடம் விதைக்கும். அதனால்தான், “அரசன் எவ்வழி மக்கள் அவ்வழி“ என்றனர் நம் முன்னோர். தி.மு.க.-அ.தி.மு.க. உள்ளிட்ட பல கட்சிகளுக்கு மக்களுக்கான இலட்சியம் எதுவும் இல்லை! பதவி-பணம்-விளம்பரம் இம் மூன்றுமே இவற்றின் இலட்சியம்! சீரழிந்த ஊழல் தலைவர்கள் மக்களிடமும் சீரழிவை - ஊழலை விதைத்து வளர்ப்பர். அப்போதுதான் அவர்கள் தலைமையும், அவர்கள் குடும்பத்தார் தலைமையும் நீடிக்க முடியும், தொடர முடியும்!

தமிழ்த்தேசியர்கள், மே நாளைப் போற்ற வேண்டும். உழைப்பாளர் உரிமைகளை மீட்க வேண்டும், பாதுகாக்க வேண்டும். ஆனால், இங்கு ஏற்கெனவே உள்ள கம்யூனிஸ்ட்டுக் கட்சிகளைப் பின்பற்றக் கூடாது. மனித சமநிலைக்கு முன்னுரிமை கொடுப்போம். உழைக்கும் மக்கள் உரிமைக்கு முதலிடம் கொடுப்போம்.

அனைவர்க்கும் மே நாள் வாழ்த்துகள்!
===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam


ஊடகம் : www.kannottam.com

இணையம் : www.tamizhdesiyam.com

சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam

காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

==============================


 

Labels: , ,

"2025-2026 கல்வியாண்டில் மருத்துவம் - பொறியியல் கல்வி அனைத்துப் பிரிவுகளும் தமிழ்வழியில் வேண்டும்! சித்த மருத்துவம் தமிழில்தான் வேண்டும்!" ----- பெ. மணியரசன் தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

Monday, April 28, 2025


2025-2026 கல்வியாண்டில்

மருத்துவம் - பொறியியல் கல்வி அனைத்துப் பிரிவுகளும்
தமிழ்வழியில் வேண்டும்!
சித்த மருத்துவம் தமிழில்தான் வேண்டும்!
=================================================
பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்
==========================

தமிழ் மொழிக் கல்வி, தமிழ்வழிக் கல்வி (Thamizh Medium) என்ற இரண்டும், ஆங்கிலேயர் ஆட்சியிலும், அடுத்து காங்கிரசின் மாநில ஆட்சியிலும் பெற்றிருந்த இடத்தை, பின்னர் இழந்து விட்டன. ஒன்றாம் வகுப்பிலிருந்து பதினோராம் வகுப்பு வரை (அப்போதைய எஸ்.எஸ்.எல்.சி) அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளிலும் மொழிப்பாடமாகவும் மற்ற பாடங்களுக்கான பயிற்று மொழியாகவும் தமிழ் இருந்தது.

ஆனால், தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிகளில் மழலையர் பள்ளி, தொடக்க மற்றும் மேல் நிலைப் பள்ளிகளில் 1-ஆம் வகுப்பு முதல் +2 வரை ஆங்கிலம் கட்டாய மொழிப்பாடமாகவும், முழுமையான பயிற்று மொழியாகவும் உள்ளது. அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளிலும், அதே நிலை! இவையன்றி, இந்திய அரசின் பாடத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் செயல்படும் பல்லாயிரக் கணக்கான தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் இந்தி, சமற்கிருதம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிப் பாடத்திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. இவற்றில் சமற்கிருதத்திற்கு மாற்றாக தமிழ் மொழிப்பாடம் இருக்கலாம், இல்லாமலும் சமற்கிருதம், பிரஞ்சு போன்ற வேறு மொழிப்பாடம் இருக்கலாம். தனியார் மழலையர் பள்ளிகளில் தமிழ் வாடை அடித்தால் தரக்குறைவு என்று முழுவதும் ஆங்கில - இந்தி மயமாகிவிட்ட பள்ளிகள் ஏராளம்! இப்பள்ளிகள் பலவற்றில் தமிழில் பேசினால் - ஆசிரியர் கேட்ட வினாவுக்குத் தமிழில் விடை அளித்தால், மாணர்கள் அபராதம் செலுத்த வேண்டும்.

இந்தி, சமற்கிருத ஆதிக்கங்களை எதிர்த்து, தமிழ் மொழிப் பெருமையைப் பேசி, எழுதி வளர்ந்த தி.மு.க. அதிலிருந்து பிரிந்த அ.தி.மு.க. - கட்சிகளின் மாநில ஆட்சிகளில் தமிழ் இவ்வாறு வீழ்த்தப்பட்டது - புறந்தள்ளப்பட்டது ஏன்?

அண்மையில் தமிழ்நாட்டிற்கு வந்த பா.ச.க. ஆட்சியின் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் தமிழ்நாட்டில் மருத்துவக்கல்லூரிகளில் தமிழ் வழிக் கல்வியை ஏன் செயல்படுத்தவில்லை என்று தி.மு.க. ஆட்சியைப் பார்த்து வினா எழுப்பினார்கள். தீவிர இந்தித் திணிப்பாளர்களான அவர்கள் இப்படிக் கேட்கிறார்கள்! இதற்குரிய விடையை தி.மு.க. ஆட்சி அளிக்கவில்லை.

மகாராஷ்டிரத்தின் பா.ச.க. முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், வரும் கல்வியாண்டில் இருந்து அம்மாநிலத்தில் மருத்துவக் கல்லூரிகளில் மராத்தி மொழி வகுப்புகள் தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தாய்மொழிப் பற்றும் தாய் மொழிக் கல்வியும் உயர்ந்துவரும் நிலையில் தமிழ்நாட்டில் தாய்மொழியான தமிழ் சீரழிகிறது.

தமிழ்நாட்டு மக்களில் மிகப் பெரும் பாலோர்க்குத் தமிழ்நாட்டில் உரியவாறு நிரந்தர வேலைவாய்ப்புகள் பெருக்கப்படாத அவலம் தொடர்வதால், அந்தப் பீதியில் ஆங்கிலம் படித்து அயல் மாநிலங்களில், அயல் நாடுகளில், தமிழ்நாட்டுத் தனியார் துறைகளிலாவது வேலை கிடைக்க வேண்டும் என்ற பதற்றத்தில் தங்கள் பிள்ளைகளை ஆங்கில வழி வகுப்புகளில் சேர்க்கிறார்கள் பெற்றோர்கள்! அதேபோல், இந்தி கற்பித்திட சி.பி.எஸ்.இ. தனியார் பள்ளிகளில் கொள்ளைக் கட்டணம் கொடுத்து படிக்க வைக்கிறார்கள்.

இதே அயல்மொழி அடிமை மோகத்தில் தங்கள் பிள்ளைகளுக்கு - ஆண்-பெண் அனைவர்க்கும் சமற்கிருத, இந்திப் பெயர்களைச் சூட்டுகிறார்கள் பெற்றோர்கள். தமிழர் தாய்மொழியும், தமிழ் இனமும் ஒரே நேரத்தில் சீரழியும் அவலம் தொடர்கிறது.

தமிழ் அறிஞர்கள் - தமிழ்ச் சான்றோர்கள் பலர் - தமிழுக்கும் தமிழர்க்கும் ஏற்பட்டுள்ள சீரழிவுகளைக் கண்டு நெஞ்சு பொறுக்காமல் தவிக்கிறார்கள். தமிழ்நாட்டு ஆட்சியாளர்களுக்கு மீணடும்மீண்டும் அற வழியில் - அன்பு வழியில் கோரிக்கை வைக்கிறார்கள்.

அண்மையில், தஞ்சை மாவட்டம் புட்பம் கல்லூரி மேனாள் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பா. இறையரசன் ஐயா அவர்கள் தலைமையில் தமிழறிஞர்களும், சான்றோர்களும் தமிழ்நாடு உயர்கல்வி அமைச்சர் மாண்புமிகு கோவி. செழியன் அவர்களைச் சந்தித்து, தமிழ் வழிக் கல்விக்காக கோரிக்கை விண்ணப்பம் கொடுத்துள்ளார்கள். “தமிழ் எழுச்சிப் பேரவை” என்ற பொது அமைப்பின் சார்பில் கொடுத்துள்ளார்கள்.

அக்கோரிக்கைகள்:

2025-2026 கல்வியாண்டில் தமிழ்நாடு முழுவதும் உள்ள மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரிகளில் தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்ட வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும். இப்போது, ஆங்கில வழியில் இவ்விரு படிப்புகளிலும் உள்ள பிரிவுகள் அனைத்தும் தமிழ் வழியிலும் இருக்க வேண்டும்.
மேற்படி தமிழ் வழி மருத்துவ, பொறியியல் படிப்புகளுக்கு மாணவர்கள் தேர்வு செய்வதில் 50 விழுக்காடு இடங்கள் மேல் நிலைப் பள்ளி வரை, தமிழ் வழியில் படித்த மாணவ - மாணவியர்க்கு ஒதுக்கீடு செய்து வழங்க வேண்டும்.
தமிழ் வழியில் மருத்துவம், பொறியியல் படிக்க முன்வரும் மாணவ - மாணவியர்க்கு 50 விழுக்காடு கட்டணச் சலுகை வழங்கவேண்டும். தனியார் கல்லூரிகளில் இக்கட்டணச் சலுகையை அரசு தன் பொறுப்பில் ஏற்றாவது வழங்க வேண்டும்.
அரசு வேலைகளில் 50 விழுக்காடு வேலைகள் தமிழ்வழியில் மருத்துவம் பொறியியல் படித்த மாணவ - மாணவியர்க்கு ஒதுக்க வேண்டும்.
இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரீசியஸ், கனடா உள்ளிட்ட தமிழ் ஆட்சி மொழியாகவும் கல்வி மொழியாகவும் உள்ள நாடுகளில் தமிழ்நாட்டில் தமிழ்வழியில் பயின்ற மருத்தவர்களுக்கும் பொறியாளர்களுக்கும் வேலை கிடைக்கும் வாய்ப்புகளை, - அந்நாடுகளின் அரசுகளுடன் தமிழ்நாடு அரசு பேசி, இந்திய அரசின் ஒப்புதலையும் பெற்று - உருவாக்க வேண்டும்.
இந்தியாவில், தமிழ்நாட்டில் தமிழர்கள் நடத்தும் தனியார் நிறுவனங்களிலும் தமிழ்வழியில் கற்றோர்க்கு முன்னுரிமை கொடுத்து அவர்களை வேலையில் சேர்க்க வேண்டும்.
தமிழ் சித்த மருத்துவத்தை ஆங்கில வழியில் கற்பித்து ஆயுஷ் - ஆயுர் வேதம் என்ற சமற்கிருத மயமாக்கலை இந்திய அரசு கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும்.
தமிழ் சித்த மருத்துவத்திற்கு தமிழ்நாடு அரசு உடனடியாக தனி பல்கலைக்கழகம் தொடங்க வேண்டும்.

தமிழ் சான்றோர்களின் மேற்கண்ட கோரிக்கைகள், தமிழ்நாட்டில் அனைத்துப் பிரிவு தமிழ்த்தேசியர்கள், தமிழ்மொழி, இன உணர்வாளர்கள், மண்ணின் மக்கள் அனைவரின் கோரிக்கைகளும் ஆகும்!

தி.மு.க. ஆட்சி தனது ஐந்தாண்டை நிறைவு செய்யும் நிலையில், 2025-26 ஆண்டில், இக்கோரிகைகளை நிறைவேற்றி, தமிழ் - தமிழர் - தமிழ்நாடு காப்புக்குத் தக்க பணிகளை நிறைவேற்றித் தருமாறு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைக் கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

பெ. மணியரசன்
தஞ்சாவூர்,

==============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam

ஊடகம் : www.kannottam.com

இணையம் : www.tamizhdesiyam.com

சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam

காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

============================== 

Labels: , , , , ,

"காஞ்சி சங்கர மடத்தின் இளம் பீடாதிபதியாக, தெலுங்கு திராவிட பிராமணர் கணேச சர்மா திராவிட் நியமனம்!-- பல் இளிக்கிறது பகுத்தறிவுத் திராவிடம்! ----- ஐயா பெ. மணியரசன், தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

Saturday, April 26, 2025


காஞ்சி சங்கர மடத்தின் இளம் பீடாதிபதியாக,

தெலுங்கு திராவிட பிராமணர்
கணேச சர்மா திராவிட் நியமனம்!
====================================
பல் இளிக்கிறது பகுத்தறிவுத் திராவிடம்!
====================================
ஐயா பெ. மணியரசன்,
தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
====================================


“தமிழன் என்றால்” எனக்கும் தாய்மொழி தமிழ்தான் என்று கூறிக்கொண்டு பிராமணர்களும் தங்களைத் தமிழர்கள் என்று நம்மோடு சேர்ந்து நம்மைக் குழப்பிவிடுவார்கள். ஆனால், “திராவிடர்” என்றால் பிராமணர்கள் அந்த இனப் பெயரை ஏற்க மாட்டார்கள். எனவே, தன்மானமுள்ளவர்கள் தங்களைத் திராவிடர்கள்” என்று கூறிக் கொள்ள வேண்டும், தமிழர் என்று கூறிக் கொள்ளக் கூடாது!”

மேற்கண்ட இனக் கண்டுபிடிப்பைச் செய்தவர் ஈ.வெ.இராமசாமி அவர்கள். தமிழர்களாகிய நாம் என்றைக்குமே நம்மைத் திராவிடர்கள் என்று சொல்லிக் கொண்டதில்லை. பிராமணர்கள்தாம் தங்களைத் திராவிடர்கள் என்று கூறிக் கொள்வர்.

பல சான்றுகளுடன் ஈ.வெ.ரா. வின் திராவிடத் திணிப்பை மறுத்தோம். உடனே மாநிட இயல் ஆராய்ச்சி - இன - மொழியியல் ஆராய்ச்சிகளில் உலக வல்லுநர்களில் முக்கியமானவர்களாகத் “திகழும்” ஈ.வெ.ரா. வின் தமிழ்நாட்டுத் திராவிடர்கள் நம்மைப் பார்ப்பன முகவர்கள் என்று பரிகசித்தார்கள்.

நாங்கள் `மட்டைப் பந்து வீரர் - ராகுல் திராவிட் பிராமணர்தான்; மயிலாப்பூர் சமற்கிருதக் கல்லூரிப் பேராசிரியர் மணி திராவிட் பிராமணர்தாம்; 20-ஆம் நூற்றாண்டுக்கு முன் எந்தத் தமிழன் பெயரிலும் “திராவிட” ஒட்டுண்ணி ஒட்டி இருக்காது` என்று எல்வளவோ தருக்கம் செய்தோம்! ஈ.வெ.ரா. - கருணாநிதி பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சியாளர்களோ நம்மைத்தான் கேலி செய்தார்கள். ஒரு காலத்தில், திராவிட இனவாதத்தை மறுத்த பேராசிரியர் த. செயராமன் அவர்கள் எமது தமிழர் கண்ணோட்டம் இதழில் பிரித்தானியக் கலைக் களஞ்சியத்திலிருந்து எடுத்து, “தென்னிந்தியப் பிராமணர்கள்தாம் “திராவிடர்கள்”; இப்போது மற்றவர்களும் சூட்டிக் கொள்ளும் அவலம் வந்துள்ளது” என்று கூறிய பகுதியையும் எடுத்துப் போட்டு விவாதம் செய்தோம்!

ஈ.வெ.ரா.வாதிகள் புகழும் பேரா. தொ. பரமசிவன் அவர்கள் ஒரு கட்டுரையில் “தென்னாடு வந்து குடியேறிய பிராமணர்களுக்குப் “பஞ்ச திராவிடர்கள்” என்று பெயர் எனக் கூறி இருந்ததை எடுத்துப் போட்டோம். ஆனால், ஈ.வெ.ரா - கருணாநிதி உயராய்வு மைய இரசிகர்கள் எதையும் சட்டை செய்யவில்லை! மயிலாப்பூர் பிராமணர் எஸ்.வி. சேகர், தி.மு.க. மேடையிலேயே ஏறி, நானும் பிராமணர்தான், நானும் திராவிடன்தான் என்று வெளிப்படையாகக் கூறினார். அப்போதும் இவர்களுக்கு உரைக்கவில்லை!

இன்று (26.4.2025) “இந்து தமிழ்திசை” நாளேடு போட்டுள்ள செய்தியைப் பாருங்கள்!

“காஞ்சி காமகோடி பீடத்தின் 71-வது பீடாதிபதியாக ஸ்ரீகணேச சர்மா திராவிட் நியமனம்!”

உள்ளே படித்தால்தான் கணேச சர்மா திராவிடர், ஆந்திர - தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர் என்று தெரிகிறது.

ஈ.வெ.ரா. - கருணாநிதி சூட்சுமம் புரிகிறதா, தமிழர்களே?

தமிழ்நாட்டில் வாழும் பலகோடி தமிழர்களாகிய மண்ணின் மக்கள் உளவியல் அளவில் தங்களை இரண்டாம் தரக் குடிமக்களாக உணர வேண்டும். தமிழ்நாட்டில் கர்நாடகத்திலிருந்தும் ஆந்திரத்திலிருந்தும் குடியேறிய கன்னட தெலுங்கர்களின் வாரிசுகள் தமிழ் மண்ணின் முதல்தரக் குடிமக்களாக உளவியல் ஊக்கம் பெற வேண்டும். இதுதான் ஈ.வெ.ரா. - கருணாநிதியின் சூழ்ச்சி!

இதுதான் இன்றும் திராவிடத்தை வலியுறுத்தும் தலைவர்களின் இனச் சூழ்ச்சி! உலகின் முதல் செம்மொழியான தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழர்களே, உங்கள் தாய் மண்ணிலேயே உங்கள் இனத்தை இழிவுபடுத்தி, திராவிடத்தை உங்கள் தலையில் கட்டும் சூழ்ச்சியாளர்களை அடையாளம் காணுங்கள்! அசல் தமிழ் இனத்தில் பிறந்து ஆந்திர-கர்நாடக- மலையாளத் திராவிடத்திற்குக் காவல்காரர்களாகப் பணிபுரியும் கருங்காலிகளையும் அடையாளம் கண்டு கொள்ளுங்கள்!

இதையும் படியுங்கள்!

வரலாற்று வழியில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் குடியேறி வாழ்ந்து கொண்டிருக்கும் தெலுங்கு, கன்னடம், மராத்தி, சௌராட்டிரம், உருது முதலியவற்றைத் தாய்மொழியாகக் கொண்டுள்ள மக்களை நமது தமிழ்த்தேசியம் அயலாராகக் கருதவில்லை. மண்ணின் மக்களாக ஏற்கிறோம்; மதிக்கிறோம்! மரபுவழியில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு உள்ள உரிமை அவர்களுக்கும் உண்டு!

அதே வேளை, தமிழ்நாட்டின் ஆட்சி மொழி - கல்வி மொழி தமிழ் மட்டுமே! இரண்டாவது மொழிப் பாடமாக மட்டும் ஆங்கிலம் நீடிக்கலாம். தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளைக் கற்க விரும்புவோர்கள் கற்க வசதிசெய்து தரப்படும். ஆனால், அவை தமிழ்நாட்டின் ஆட்சி மொழியாக - கல்வி மொழியாக ஆக முடியாது. ஆந்திர, கர்நாடக, கேரள மாநில மாநிலங்களில் காலம் காலமாக கோடிக்கணக்கான தமிழர்கள் வாழ்கிறார்கள். அவர்களுக்கு அங்கெல்லாம் தாய்மொழி உரிமை எதுவும் இல்லை!

பேரன்புடையீர்!

காஞ்சி சங்கரமடத்தின் வாரிசாகத் தெலுங்கு பிராமணர் அமர்த்தப்படப் போகும் அறிவிப்பில், அவர் பெயருடன் திராவிடம் ஒட்டி இருப்பதை நேற்றே தம் முகநூலில் வெளிப்படுத்தினார் நம் மதுரைத் தோழர் கதிர்நிலவன்.

ஆரியரின் அடுத்த வீட்டுப் பங்காளிகள் “திராவிடர்கள்” என நாம் தொடர்ந்து சொல்லி வருகிறோம். அது உண்மைதான் என்பதற்கு காஞ்சி சங்கர மடமும் ஒரு சான்று!

நாள் : 26.04.2025

================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
================================

Labels: , , ,


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்