<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/6955529389241309188?origin\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

"*இந்துக்கள் அல்லாதோர் கோயிலுக்குள்* *செல்லத் தடை” – தீர்ப்பு இந்துக்களையும் தடுக்கும்!*" --- தெய்வத் தமிழப் பேரவை ஒருங்கிணைப்பாளர் *பெ.மணியரசன்* அறிக்கை!

Wednesday, January 31, 2024

*இந்துக்கள் அல்லாதோர் கோயிலுக்குள்*

*செல்லத் தடை” – தீர்ப்பு இந்துக்களையும் தடுக்கும்!*
===========================================
தெய்வத் தமிழப் பேரவை ஒருங்கிணைப்பாளர்
*பெ.மணியரசன்* அறிக்கை!
===========================================

சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வு நீதிபதி ஸ்ரீமதி அவர்கள், 30.01.2024 அன்று அளித்த தீர்ப்பில், இந்துக் கோயில்களின் ஆகமப்படி ஆச்சார அனுஷ்டானங்களைக் கடை பிடிக்காதவர்களைக் கோயில் கொடி மரத்துக்கு அப்பால் – கோயிலுக்குள் அனுமதிக்கக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. இது இந்து அல்லாத பிற மதத்தவரின் உரிமையை மட்டுமின்றி இந்துக்களின் உரிமையையும் பறிப்பதாக உள்ளது.

ஸ்ரீமதி அளித்த தீர்ப்பின்படி, குறிப்பிட்ட கோயிலின் ஆகமப்படி ஆச்சார அனுஷ்டானங்களைக் கடை பிடிக்காதவர்களைக் அக்கோயிலின் கொடிமரத்துக்கு அப்பால் செல்ல அனுமதிக்கக் கூடாது. இதனால் இந்து அல்லாதவர்கள் மட்டுமின்றி இந்துக்களே கோயிலுக்குள் சென்று வழிபட முடியாத நிலை ஏற்படும்.

கோயிலுக்குள் ஒருவர் நுழையும் போதே அவர் இந்துதானா என்பதைக் கணக்கெடுக்கப் பதிவு முறை வந்து விடும். அடுத்து அவர் இந்துவாக இருந்தாலும் அந்தக் குறிப்பிட்ட கோயிலுக்குரிய ஆகமப்படியான ஆச்சார அனுஷ்டானங்கள், வழிபாட்டுச் சின்னங்கள், உடைகள் அணிந்து வந்திருக்கிறார்களா என்பதையும் ஆய்வு செய்து, இவை அனைத்தும் ஒத்து வந்தால்தான் அவர்களைக் கோயிலுக்குள் அனுமதிக்க முடியும். குறிப்பாக ஒரு வைணவக் கோயிலுக்குள் வழிபாட்டுக்குப் போகின்றவர் நாமம்(திருமண்) நெற்றியில் போடாமல் திருநீறு பூசியிருந்தால் – அவரை அனுமதிக்க முடியாது. அடுத்து இந்து மதத்தைச் சேர்ந்த வெகுமக்களுக்கு அவர்கள் வழக்கமாக வழிபடச் செல்லும் கோயில் எந்த ஆகமத்தை சேர்ந்தது அதற்குரிய அடையாளச் சின்னங்கள் என்ன என்பதும் தெரியாது. சிவநெறியாளர்கள், திருமால் நெறியாளர்கள் எல்லோர்க்கும் திருநீறு அணிவது பொதுப் பழக்கமாக இருக்கிறது.
அடுத்து, கோயிலில் போய் மூலவரை வழிபட்டுத் திருநீறு பூசிக் கொள்ளலாம் என்று போகின்றோர் ஏராளம். அவர்களையும் தடுக்கக் கூடிய அபாயம் நீதிபதியின் தீர்புரையில் உள்ளது. திருநீறு பூசிக் கொள்ளாமலேயே இறைவனை வணங்கும் வழக்கமும் இந்துக்களில் சில பிரிவார்க்கு உண்டு.

தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான திருக்கோயில்கள் தமிழர்களின் வரலாற்றுப் பெட்டகங்களாகவும் இருக்கின்றன. இந்நோக்கிலும் திருக்கோயிலுக்கு வருவோர் உண்டு.

இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலும் மாபெரும் வடிவங்களிலும் கலையழகு மற்றும் பொறியியல் நேர்த்தியுடன் உள்ள கோயில்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கின்றன. தஞ்சைப் பெரிய கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில் போன்ற பல கோயில்களுக்கு வெளிநாட்டினர் வந்து பார்த்து வியக்கின்றனர். நீதிபதி ஸ்ரீமதியின் தீர்ப்பு, தமிழ்நாட்டு திருக்கோயில்களின் புகழ் உலகெங்கும் பரவாமல் தடுத்துவிடும்.

நீதிபதி தமது தீர்ப்பில், திருக்கோயில்கள் சுற்றுலா மையங்கள் அல்ல என்று கூறியுள்ளார். தமிழ்நாட்டு திருக்கோயில்கள் வழிபாட்டுத் தலங்களாவும் வரலாற்றைத் தெரிந்து கொள்ள விரும்புவோரின் வரலாற்று சின்னங்களாகவும் இருக்கின்றன. குழந்தைகளோடு குடும்பமே அமர்ந்து உரையாடிக் களித்து, மனக் கவலையை இறக்கி வைக்கும் இடங்களாகவும் இருக்கின்றன. அரசர்கள் காலத்தில் ஆட்சி நிர்வாக மையமாகவும் திருக்கோயில்கள் விளங்கின. தஞ்சைப் பெருவுடையார் திருக்கோயிலே இதற்குச் சான்று.

இந்து அல்லாத பிற மதங்களின் வழிபாட்டுத் தலங்கள் பிற்காலத்தவை! அவை வழிபாட்டை மட்டுமே கொண்டவை. அவர்களின் வழிபாட்டு தலங்களுக்குள் இந்துக்கள் செல்ல தடை இல்லை. தமிழ்நாட்டு இந்துக் கோயில்கள் தொன்மையானவை; வரலாற்றுக் களஞ்சியங்கள்!

நீதிபதி ஸ்ரீமதி அவர்களின் தீர்ப்பு இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகளை முடக்குவதாக உள்ளது. அர்ச்சகர்கள் மற்றும் அவர்களைச் சேர்ந்த வகுப்பாரின் ஆதிக்கத்தின் கீழ் திருக்கோயில்களின் செயல்பாடுகளைக் கொண்டுவரும் தன்மையில் உள்ளது.

கண்ணியமான உடை உடுத்தி, செருப்பணியாமல் கோயிலுக்குள் செல்ல வேண்டும் என்ற கட்டுப்பாடு தேவை. வழிபாடு செய்யாதவர்களும் கண்ணியத்துடன், கட்டுப்பாட்டுடன் கோயிலுக்குச் சென்று வர இப்போதுள்ள அனுமதி தொடர வேண்டும். இந்துக்கள் அல்லாதவர்கள் உள்ளே வரக்கூடாது என்று எச்சரிக்கைப் பலகையோ, கணக்குப் பதிவோ கூடாது.

உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் நீதிபதி ஸ்ரீமதி தீர்ப்பை இரத்துச் செய்யக் கோரி முழுவீச்சில் சட்ட நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைத் தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
================================
தெய்வத் தமிழ்ப் பேரவை
================================
 

Labels: , ,

"நிதிஷ்குமார் கூட்டணி மாற்றம்” நாளேடுகள் கொடுத்த தலைப்புகளில் நாம் கற்க வேண்டியவை !" --- பெ. மணியரசன் தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்

Monday, January 29, 2024



நிதிஷ்குமார் கூட்டணி மாற்றம்”
நாளேடுகள் கொடுத்த தலைப்புகளில் நாம் கற்க வேண்டியவை !
==================================================
பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்
==================================================

ஐக்கிய சனதாதளக் கட்சியின் தலைவரும் பீகாரின் முதலமைச்சருமான நிதிஷ்குமார் 28.01.2024 காலை முதலமைச்சர் பதவியிலிருந்து விலகி அதே நாள் மாலை மீண்டும் முதலமைச்சராகப் பதவி ஏற்றுக் கொண்டார்.
பீகார் ஆளுநர் இராசேந்திர அர்லேகர் பதவி ஏற்பு உறுதிமொழிச் சடங்கு செய்து வைத்தார். காங்கிரசோடு இந்தியாக் கூட்டணியில் உறுப்பு வகித்து பா.ச.க. வை எதிர்த்து வந்தவர், ஒரே நாளில் இந்தியாக் கூட்டணியை விட்டு விலகி பா.ச.க. வோடு கூட்டணி சேர்ந்து பீகாரின் முதலமைச்சராகப் பதவி ஏற்றுள்ளார்.

கூட்டணி மாறுவதற்குக் கூச்சப்படாத பச்சோந்தித் தலைவர் நிதிஷ்குமார். பதினெட்டு மாதங்களுக்கு முன் பா.ச.க.கூட்டணியில் சேர்ந்து பீகார் முதலமைச்சர் ஆனார். 2015 ஆம் ஆண்டிலிருந்து இப்போது வரை ஐந்து முறை கூட்டணியை மாற்றியுள்ளார். இந்தியாக் கூட்டணித் தலைவராக வேண்டும் என்றும் இந்தியத் தலைமை அமைச்சர் வேட்பாளராகத் தன்னை இந்தியாக் கூட்டணி முன்னிறுத்த வேண்டும் என்றும் கூச்சநாச்சமின்றி வெளிப்படையாக – வேட்கை மிகுதியோடு பேசி வந்தார். அந்த வாய்ப்பு தனக்குக் கிடைக்காது என்று தெரிந்தவுடன் இந்தியாக் கூட்டணியைப் பழிவாங்குவதற்காக பாசகவுடன் கூட்டணி வைத்து முதலமைச்சராகப் பதவி ஏற்றுக் கொண்டுள்ளார்.
பீகாரின் மொத்த சட்டப் பேரவை உறுப்பினர்கள் 243. இதில் லாலுபிரசாத்தின் ராஷ்டிரிய சனதா தளம் 79, பா.ச.க. 78, நிதிஷ்குமாரின் ஐக்கிய சனதா தளம் 45, காங்கிரசு 19, மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்-12, மார்க்சிஸ்ட் – கம்யூனிஸ்ட் -2 , சிபிஐ -2, இந்துஸ்தானி அசாம் மோர்ச்சா -4, ஏ.ஐ.எம்.எம். -1, தற்சார்பு (சுயேச்சை) – 1 உறுப்பினர்கள்.

இது பற்றி இங்கு நாம் பேசுவதற்கான முதன்மைக் காரணம் இந்தச் செய்தியை தமிழ்நாட்டு ஏடுகள் என்னென்ன தலைப்புகளில் போட்டுள்ளன. ஆங்கில ஏடுகள் என்னென்ன தலைப்புகளில் போட்டுள்ளன என்பதை ஒப்பிட்டுக் காட்டுவதுதான்.
பதவிக்காகக் கூட்டணி மாறிக் கொண்டே இருக்கும் பண்பு கெட்ட பச்சோந்தியான நிதிஷ்குமாரின் சிறுமையைத் தலைப்பிலேயே ஆங்கில ஏடுகள் சுட்டிக் காட்டுகின்றன. தமிழ் நாளேடுகளோ பொத்தாம் பொதுவில் ஒரு செய்தியாகத் தலைப்பு கொடுத்துள்ளன.
”பீகார் அரசியலில் அதிரடித் திருப்பம், காலையில் ராஜினாமா, மாலையில் பதவியேற்பு. நிதிஷ்குமார் மீண்டும் முதல் மந்திரி ஆனார்".
-தினத்தந்தி 29.01.2024
"பா.ச.க. ஆதரவுடன் நிதிஷ் மீண்டும் முதல்வர்”
-தினமணி 29.01.2024
"முதல்வராக 9ஆவது முறை பதவியேற்றார் நிதிஷ்குமார்.
"பீகாரில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி"
-இந்து தமிழ் 29.01.2024

ஆங்கில இந்து ( The Hindu) எப்படிப் போட்டிருக்கிறது?
தலைப்புச் செய்தியில்,
"Nithish switches sides yet again, takes oath as CM"
(நிதிஷ் திடுமென மறுபடியும் அணி மாறினார். முதல்வராக உறுதி ஏற்றார். )
அடிக்கடி தப்பிலித் தனமாகக் கூட்டணி மாறும் நிதிஷின் கெட்ட பண்பை குட்டிச் சொல்லும் முறையில் தலைப்பு போட்டது ஆங்கில இந்து.
ஆனால் அதே Hinduவின் நிறுவனத்தைச் சேர்ந்த இந்து தமிழ் திசை ஏடு
”பீகாரில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி" என்று பொத்தாம் பொதுவில் தலைப்பு போடுகிறது.
தினத் தந்தி, ”அதிரடித் திருப்பம் – காலையில் ராஜினாமா மாலையில் பதவி ஏற்பு ” என்று அதிசயச் செய்தி போல் தலைப்பு போடுகிறது. ” பாஜக ஆதரவுடன் நிதிஷ் மீண்டும் முதல்வர்” என்று நேற்று நடந்த தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் நிதிஷ்“ வெற்றி பெற்றது போல் போடுகிறது.

ஆங்கில நாளிதழ் Hindustan Times, “Nithish Kumar flip flops again, drumps RJD to join BJP led NDA.
(நிதிஷ்குமார் நொடித்துத் தள்ளாட்டம் ஆர்ஜேடியைப் பள்ளத்தில் தள்ளிவிட்டார்.பாசகவின் என்டிஏவில் சேர்ந்தார்.)
Deccan Herald
Nithish kumar’s Political oscillations put a pendulum to shame.”
(நிதிஷ்குமாரின் அரசியல் ஊசலாட்டம் வெட்ககரமாக உள்ளது.)

விழிப்புணர்ச்சி ஊட்ட வேண்டாமா?
================================
பதவி வெறி நோக்கில் அடிக்கடி அணி மாறும் தன்னல அரசியல்வாதிகளின் குட்டிக் கரணச் செய்திகளைப் போடும் போது திறனாய்வோடு, மென்மையான கண்டனத்தோடு தலைப்புக் கொடுக்கும் பாங்கு ஆங்கில ஏடுகளில் இருக்கிறது. தமிழ் நாளேடுகள் பொத்தாம் பொதுவில் செய்தி போடுவது வாசகர்களிடையே விழிப்புணர்ச்சியை உண்டாக்காது.
நாடறிந்த அசிங்கத்திற்குக் கூட நடுநிலையோடு தலைப்புக் கொடுக்கிறோம் என்று கூறினால் அது தப்பித்தல்வாதம். சமூகப் பொறுப்பற்ற தன்மை. வாசகர்கள் விழிப்போடு செய்திகளைப் பார்க்க வேண்டும்.

===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
=================================
 

Labels:


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்