<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/6955529389241309188?origin\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

*கமலஹாசன் உறவாகப் பேசியதைத் தவறாகத் திரித்து,* வன்முறையைத் தூண்டும் கன்னடர்களைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் செய்வீர்!* ---- ஐயா பெ.மணியரசன் தலைவர் தமிழ்த்தேசியப் பேரியக்கம்

Tuesday, May 27, 2025

*கமலஹாசன் உறவாகப் பேசியதைத் தவறாகத் திரித்து,*
வன்முறையைத் தூண்டும் கன்னடர்களைக் கண்டித்து
ஆர்ப்பாட்டங்கள் செய்வீர்!*
==============================
ஐயா பெ. மணியரசன்
தலைவர்
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
நாள்: 28.5.2025
========================


கடந்த 24.5.2025 அன்று சென்னையில் நடந்த “தக் லைஃப்” திரைப்பட இசை வெளியீட்டு விழாவில், அத்திரைப்படத்தில் நடித்த கன்னட நடிகர் சிவராஜ் குமாரைப் பாராட்டி கமலஹாசன் பேசினார். அப்போது, சிவராஜ் குமாரை உடன்பிறப்பு என்று உறவும் உரிமையும் கொண்டாடும் வகையில் பேசினார். தமிழிலிருந்து பிறந்தது கன்னடம் என்று கூறி ஒரு குடும்ப உறவை வெளிப்படுத்தினார்.

அத்துடன் சிவராஜ்குமாருக்கு நான் சித்தப்பா என்றும் கூறினார்
ஆனால், உறவு நோக்கத்தில் புகழ்ந்து பேசிய கமலஹாசன் கன்னடத்தை இழிவுபடுத்திப் பேசிவிட்டார் என்று கர்நாடகத்தில் கன்னட இனத் தீவிரவாத அமைப்புகள் பெங்களூரிலும் மற்ற இடங்களிலும் கமலஹாசன் திரைப்படச் சுவரொட்டிகளைக் கிழிப்பது, தமிழர்களுக்கு எதிரான கண்டன முழக்கங்கள் எழுப்புவது, ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது என்று தமிழ் - தமிழர் எதிர்ப்புகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த கன்னடத் தீவிரவாதப் போராட்டங்களை ஆதரிப்பது போல் கர்நாடகத்தின் காங்கிரசு முதலமைச்சர் சித்தராமையா, “கமலஹாசன் பேசியது தவறு; கன்னடத்தின் தொன்மை அறியாமல் பேசியுள்ளார். அவர் பேச்சு வலியை ஏற்படுத்தத்தான் செய்யும்” என்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் கர்நாடக மாநிலத் தலைவர் பி ஒய் விஜயேந்திரா கமலஹாசனைக் கண்டித்ததுடன், அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கூறினார். அத்துடன் கன்னடத் தீவிரவாதிகளின் தமிழர் எதிர்ப்புப் போராட்டங்களை ஆதரிக்கும் வகையில் பேசினார்.
தமிழ்நாட்டில் உள்ள பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான தமிழிசை சௌந்தரராசன் கமலஹாசனைக் கண்டித்துள்ளார். பிறந்த இனத்துக்குத் துரோகம் செய்து ஆதாயம் தேடும் அரசியல்வாதிகளின் அணிவரிசையில் தமிழிசை முன்வரிசையில் உள்ளார்.
கடந்த காலங்களில், காவிரிச் சிக்கலில் கன்னட இன வெறியர்கள் கர்நாடகத் தமிழர்களுக்கு எதிராக நடத்திய வன்முறைகளை எண்ணிப் பார்க்கும்போது, இப்போதும் அதே போல் கர்நாடகம் வாழ் தமிழர்களுக்கு கன்னட வெறியர்களால் பேரழிவுகள் நேருமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.
1991-இல் காவிரித் தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தீர்ப்பு - இறுதித் தீர்ப்பு போல் - செயல்பாட்டு அதிகாரம் படைத்தது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்புரைத்ததற்காக, அதை எதிர்த்து கர்நாடகத்தில் முழு அடைப்பு நடத்தினார்கள். அப்போது கன்னட இனவெறியர்கள் கர்நாடகம் வாழ் தமிழர்களை இனப்படுகொலை செய்தனர். கர்நாடகம் வாழ் தமிழர்களின் வீடுகள் - வணிக நிறுவனங்கள் முதலியவற்றைச் சூறையாடினர்; தீ வைத்து எரித்துச் சாம்பலாக்கினர்.

இதற்காக யாரும் கர்நாடகத்தில் தண்டிக்கப்படவில்லை.
அடுத்து 2016-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் - காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க வேண்டும் என்று ஆணையிட்டது. அதை எதிர்த்து, பெங்களூரில், தமிழ்நாட்டைச் சேர்ந்த KPN பேருந்து நிறுவனத்தின் சொகுசு ஆம்னி பேருந்துகள், சரக்குந்துகள் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட ஊர்திகளை எரித்துச் சாம்பலாக்கினர்.
கர்நாடகத்தில் படித்துக்கொண்டிருந்த தமிழின மாணவர் - தமிழ்நாட்டைச் சேர்ந்த சரக்குந்து ஓட்டுநர் எனக் கண்ணில்பட்ட தமிழரையெல்லாம் அடித்து மண்டியிடச் செய்து, “காவிரி கர்நாடகத்திற்கே சொந்தம்” என்று சொல்லவைத்து காணொலி எடுத்து கன்னடர்கள் பரப்பியதைப் பார்த்தோம். இவர்கள் மீதெல்லாம் எந்த நடவடிக்கையும் கர்நாடக ஆட்சியாளர்கள் எடுக்கவில்லை.
எனவே, இப்போது கமலஹாசன் பேச்சைத் - தவறாகச் சித்தரித்து - தமிழின எதிர்ப்புப் போராட்டம் நடத்தும் கன்னடனர்களை காங்கிரசு, பா.ஜ.க. உள்ளிட்ட பெரிய கட்சிகளே ஆதரித்து வருகின்றன.

கடந்த காலங்களில் கர்நாடகத் தமிழர்களை அனாதைகளாக விட்டு விட்டன தமிழ்நாட்டுக் கட்சிகள். இந்த முறை அப்படி நடக்க விடக்கூடாது. தமிழர் தற்காப்புணர்ச்சி தமிழ்நாட்டுத் தமிழர்களிடையே வளர்ந்துவரும் காலம் இது.
கமலஹாசன் பேச்சைத் தவறாகத் திரித்து, கண்டனப் போராட்டம் நடத்திவரும் கன்னடத் தீவிரவாதிகள் கடந்த காலம்போல் இப்போதும் கர்நாடகத் தமிழர்களைத் தாக்காமல் பாதுகாக்க தமிழ்நாட்டில் தமிழர்கள் ஜனநாயகப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

தமிழ்த்தேசியப் பேரியக்கம் 29.5.2025 முதல் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். தஞ்சை தலைமை அஞ்சலகம் அருகே 29.5.2025 மாலை 4 மணிக்கு தமிழர் எதிர்ப்பைத் தூண்டிவிடும் கன்னடர்களைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும்!

===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
============================== 
 

Labels: ,

"உயர் அதிகாரி உ. சகாயம் உயிருக்கே பாதுகாப்பு இல்லையா....?. மற்றவர்களின் கதி என்ன...? ----- ஐயா பெ‌ .மணியரசன் தலைவர் ,தமிழ்த் தேசியப் பேரியக்கம்

Sunday, May 11, 2025


*உயர் அதிகாரி

உ. சகாயம் உயிருக்கே பாதுகாப்பு* *இல்லையா ?*
*மற்றவர்களின் கதி என்ன?*
*கண்டன அறிக்கை!*
===============================
ஐயா பெ‌ .மணியரசன்
தலைவர் ,தமிழ்த் தேசியப் பேரியக்கம்
==================

மதுரை மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றிய போது மதுரை அரிட்டாப்பட்டி வட்டாரத்திலும் அதனை அடுத்துள்ள பகுதிகளிலும் ஒரு லட்சத்து பதினோராயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கனிமவளக் கொள்ளை நடைபெற இருந்ததை தடுத்து நிறுத்திய வரலாற்று சாதனையாளர், கறைபடியாத கைகளுக்குச் சொந்தக்காரர் ,முன்னாள் இந்திய ஆட்சிப் பணி அதிகாரி
உ. சகாயம் அவர்கள். அவருடைய நேர்மையையும் அவரின் சேவையின் தேவையையும் உணர்ந்த உயர்நீதிமன்றம், பணி ஓய்வுக்குபின் அவரை கனிமவளக் கொள்ளை விசாரணை ஆணையத்தின் தலைவராக அமர்த்தியது.

கனிமக் கொள்ளையர்களால் அவரின் உயிருக்கு தீங்கு நேரக்கூடிய நிலைமைகள் இருந்ததால் அவருக்குக் காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

பணி ஓய்வுக் காலத்தில் மதுரையில் நடைபெற்று வரும் கனிமக் கொள்ளை வழக்குகளில் சாட்சி சொல்ல வந்தால்- "தீர்த்துக் கட்டி விடுவோம் "என்று சமூக விரோதிகள் அவரைப் பல வடிவங்களில் மிரட்டி வருகிறார்கள்.

மேற்படி ஆபத்தை அரசுக்கு அவர் சுட்டிக் காட்டிய பின்னரும் இப்போது உள்ள திமுக ஆட்சி அவருக்குப் பாதுகாப்பு வழங்க முன்வரவில்லை.

சென்னை உயர்நீதிமன்றத்
தலைமை நீதிபதிக்கும் பாதுகாப்பு கோரி ஐயா சகாயம் அவர்கள் விண்ணப்பம் போட்டு உள்ளார்.
அண்மையில் மதுரை நீதிமன்றம் சாட்சி விசாரணைக்கு சகாயம் அவர்களை அழைத்த போது, எனக்குப் பாதுகாப்புக் கொடுத்தால் நீதிமன்றம் வர முடியும்" என்று நீதிமன்றத்திற்குத் தெரிவித்துவிட்டார். அதன் பிறகு வீட்டில் இருந்தவாறே காணொலி மூலம் நீதிமன்ற விசாரணையில் பங்கேற்குமாறு சகாயம் அவர்களுக்கு நீதிமன்றம் வாய்ப்பு கொடுத்தது.
அத்துடன் தமிழ்நாடு அரசு சகாயம் அவர்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கவில்லை என்றால் இந்திய அரசு பாதுகாப்புக் கொடுக்குமாறு ஆணையிடுவோம் என்று மதுரை நீதிமன்றம் கூறியுள்ளது.

நேர்மை தவறி நடுநிலை தவறி தமிழ்நாடு அரசு செயல்படுகிறது என்பதற்கு இதைவிட வேறென்ன சான்று வேண்டும் ?

இவ்வாறான அணுகுமுறையைத் தமிழ்நாடு அரசு கொண்டிருப்பதால் தான், தமிழ்நாட்டில் கனிமக் கொள்ளைகளைக் தடுத்த13 பேர் சரக்குந்து ஏற்றப்பட்டு ,கொல்லப்பட்டார்கள் என்று ஒரு கணக்கை அண்மையில் சமூக செயல்பாட்டாளர்கள் வெளியிட்டுள்ளார்கள்.
கடந்த 17.01 2025 அன்று புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஜெகபரலி என்ற சமூகச் செயல்பாட்டாளர் , கல்குவாரி கொள்ளையர்களால் சரக்குந்து ஏற்றிக் கொல்லப்பட்டார் என்ற செய்தி பல வகைச் சான்றுகளோடு பேசப்பட்டு வருகிறது .
நாடறிந்த நேர்மையான அதிகாரியும் முன்னாள் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவருமான ஐயா உ. சகாயம் அவர்களின் உயிருக்கு பாதுகாப்பு வழங்க அரசு முன்வரவில்லை என்றால் மற்றவர்களின் கதி என்ன என்று கேள்வி எழுகிறது.

*எனவே தமிழ்நாடு அரசு உடனடியாக ஐயா உ.சகாயம் அவர்கட்கு ஆயுதம் ஏந்திய 24 மணி நேரக் காவலர்கள் இருவரைப் பாதுகாப்பிற்கு நிரந்தரமாக அமர்த்துமாறு தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறன்.*

*பெ.மணியரசன்*
(12.05.2025)

===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
============================== 

Labels: , ,

"பிற்காலச் சோழர்கள் தலைநகர் தஞ்சையில் தற்கால வரலாறு படைக்க வாரீர்!" ------ தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் பேரழைப்பு!

Thursday, May 8, 2025


பிற்காலச் சோழர்கள் தலைநகர் தஞ்சையில்

தற்கால வரலாறு படைக்க வாரீர்!
===================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
ஐயா பெ. மணியரசன் பேரழைப்பு!
===================================


என்னரும் தமிழர்களே!

இந்தியாவின் தனித்தன்மைகள் இரண்டு! ஒன்று பிறப்பால் உயர்வுதாழ்வு கற்பிக்கும் வர்ண-சாதிப் பிரிவுகள்! அவற்றின் வழியாகப் பல்வேறு வடிவங்களில் தொடரும் ஒடுக்குமுறைகள், பாதிப்புகள்! இரண்டு, பல்வேறு தேசிய இனங்கள் – அவற்றின் தாய்மொழிகள் – அவற்றின் மரபுவழித் தாயகங்கள் என்ற பன்முகத்தன்மை! இம்மொழி – இன – தாயகங்கள் மீது இந்தியும் சமற்கிருதமும் நடத்தும் ஆக்கிரமிப்புகள் – ஆதிக்கங்கள்! பாரத மாதா பஜனைகளால் இவற்றை மறைக்க முடியவில்லை! மறுக்க முடியவில்லை! அதேபோல், இந்தி – குசராத்தி மண்டலப் பெரு முதலாளிகள் நடத்தும் பொரு ளாதார வேட்டைகளையும் “இந்திய தேசிய”ப் புகழ்ச்சிகளால் மறைக்க முடியவில்லை!

தமிழ்நாட்டில் 85 ஆண்டுகளாக ஜெபிக்கப்படும் “திராவிட மந்திரமும்” இந்நோய்களுக்கு இன்று வரை தீர்வு காணவில்லை!

இந்திக்காரர்களின் இணைபிரியாக் கூட்டாளிகள் என்று கருதப்பட்ட மராட்டியர்களிடையே கூட இந்தி எதிர்ப்பும், மாநில உரிமைக் கோரிக்கையும் எழுச்சி பெற்றுள்ளன. அம்மாநில பாசக முதலமைச்சர் பட்னாவிஸ் “மகாராஷ்டிராவில் இந்தி கட்டாய மொழிப் பாடமல்ல, விருப்பப்பாடம்தான்” என்று அறிவிக்கிறார்! இந்தி மாநிலங்களில் கூட சமூக நீதிக் கோரிக்கைகள் இந்திய ஆட்சியாளர்களுக்கு எதிராகக் கிளம்புகின்றன! மாநிலக் கட்சிகள் இந்தியாவில் அதிகரித்துவிட்டன!

உச்ச நீதிமன்றமே இந்திய ஆட்சியாளர்களின் – அவர்களின் தமிழ்நாட்டுத் தளபதியான ஆளுநர் இரவியின் எதேச்சாதிகாரத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், அவர் ஆண்டுக்கணக்கில் முடக்கி வைத்திருந்த தமிழ் நாடு சட்டப் பேரவை நிறைவேற்றிய பத்து சட்ட முன்வரைவுகளுக்கு (மசோதாக்களுக்கு) கடந்த 8.4.2025 அன்று அரசமைப்புச்சட்ட ஏற்பிசைவு கொடுத்துத் தீர்ப்பளித்தது! அதற்கான அதிகாரத்தை அரசமைப்புச் சட்ட உறுப்பு 142 உச்ச நீதிமன்றத்திற்கு வழங்குகிறது. ஆனால், குடியரசுத் துணைத்தலைவர் ஜெகதீப் தங்கரிலிருந்து தமிழ் நாட்டு பா.ச.க.வினர் வரை துடிக்கின்றனர். உச்ச நீதிமன்றத்தைக் கைக்குள் அடக்கி வைக்க உத்திகள் வகுக்கின்றனர்!

கருணாநிதி முதல்வராக இருந்தபோது மாநில அதிகாரங்களை மீட்க 1969-இல் அமைத்த இராசமன்னார் குழு வழங்கிய பரிந்துரைகளை அவரே “பட்டினி போட்டு” சாகடித்தார்! அவரது தனயன் - இப்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின் - தமிழ்நாட்டு உரிமைகளை மீட்கப் புதிதாக உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் குழு அமைத்துள்ளார்!

இந்தப் பின்னணியில்தான், தமிழ்த்தேசியப் பேரியக்கம் தஞ்சையில் 10.5.2025 காரி (சனி)க் கிழமை “கூட்டரசுக் கோட்பாடு மாநாடு” (Conference on Federal State) நடத்துகிறது!

நாம் முன்வைக்கும் தீர்வு
----------------------------------
முதலில், உள்ளதை உள்ளபடி பார்க்கும் மனம் வேண்டும். கற்பனைக்கேற்ப கதை புனையக் கூடாது! இந்திய மண்டலத்தில் இருந்த மன்னர்களை – தளபதிகளை – வீர்ர்களை - மக்களைக் கொன்றும் சிறையில் அடைத்தும் புதிய நாட்டை ஆங்கிலேய வணிகர்கள் 18 ஆம் நூற்றாண்டில் உண்டாக்கினர். அவர்களின் பிரிட்டன் நாடாளுமன்றம் 1773-ஆம் ஆண்டு இந்திய ஒழுங்குமுறைச் சட்டம் (India Regulating Act – 1773) இயற்றி தனது மேற்பார்வையில் இந்தியாவை வைத்தது. “இந்தியா” என்ற பெயர், இலண்டனில் பதிவு செய்யப்பட்ட வெள்ளைக்கார ஈஸ்ட் இந்தியா கம்பெனி (East India Company) என்ற பெயரில் இருந்து எடுக்கப்பட்டது.

இந்திய விடுதலைப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கிய காங்கிரசுக் கட்சியின் தலைமையில் இந்தி மண்டலத்தாரும், ஆரிய பிராமணர்களும், ஆரிய வைசியரும் இருந்தனர்! ஆங்கிலேய இந்தியாவில், மொழி – இன வழி மாநில அமைப்புகள் கோரி அனைத்திந்திய காங்கிரசு மாநாடுகளில் தீர்மானங்கள் போட்டனர். ஆங்கிலேய அரசு மொழி – இன வழி மாநிலங்கள் அமைக்க மறுத்தது.

இந்நிலையில் 1924 பெல்காம் ஏ.ஐ.சி.சி. மாநாட்டுத் தீர்மானப்படி காங்கிரசுக் கட்சி தனது மாநிலக் கமிட்டிகளை மொழி – இன அடிப்படையில் மாற்றி அமைத்தது. அதையொட்டி, அப்போதே அமைக்கப்பட்டதுதான் தமிழ்நாடு காங்கிரசுக் கமிட்டி! ஆந்திரப்பிரதேச காங்கிரசுக் கமிட்டியும் தனியே அமைக்கப்பட்டது. அப்போது இவ்விரு பகுதிகளும் சென்னை மாகாணத்தில் இருந்தன!

ஆனால், 1947-இல் இந்தியா விடுதலை பெற்று, அதன் அதிகாரம் காங்கிரசு கையில் வந்தபின், மொழிவழி மாநிலம் அமைக்க மறுத்தார் பண்டித நேரு! ஆந்திர மாநிலத்திற்காக உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்தார் பொட்டி சிறீராமலு! அப்போது போராடிய ஆந்திர மக்கள் மீது காங்கிரசு ஆட்சி துப்பாக்கிச் சூடு நடத்தியது. அதில், 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் ஆந்திர மாநிலத்தை 1953-இல் பெற்றனர்! பின்னர் இந்தியா முழுவதும் மொழி – இன வழி மாநிலங்கள் உருவாயின!

சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என்று பெயர் மாற்ற வலியுறுத்தி உண்ணாப்போராட்டம் நடத்திய சங்கரலிங்கனார் கோரிக்கையை ஏற்க மறுத்து அவரை சாகவிட்டது காங்கிரசு ஆட்சி.

1919, 1935 ஆண்டுகளில் ஆங்கிலேய அரசு இயற்றிய சட்டங்களின்படி, மாநில அரசுகளுக்குக் கிடைத்த அதிகாரங்களில் பலவற்றை விடுதலை பெற்ற இந்தியாவில் காங்கிரசு ஆட்சி பறித்தது.

சனநாயகத்தின் குரல் வளையை நெரித்து, சர்வாதிகாரத்தை “நெருக்கடி நிலை” என்ற செயற்கைப் பெயரில் திணித்த இந்திரா காந்தி, 42-வது அரசமைப்புச் சட்ட திருத்தம் என்ற பெயரில், மாநில மக்களின் பல உரிமைகளைப் பறித்தார். வெள்ளையர் ஆட்சிகாலத்திலிருந்து மாநில அதிகாரப் பட்டியலில் இருந்த கல்வியை இந்திய அரசின் மேலாதிக்கமுள்ள பொதுப் பட்டியலுக்கு 1976-இல் மாற்றினார்.

சோனியா காந்தி – கருணாநிதி (காங்கிரசு – தி.மு.க.) கூட்டணி, 2004-இல் இருந்து 2014 வரை நடத்திய இந்திய ஆட்சியில், வெள்ளையர் ஆட்சிகாலமான 1937-இல் இருந்து மாநில அரசிடமிருந்த விற்பனை வரிவசூல் உரிமையைப் பறித்து, சரக்கு சேவை வரிக்குள் (GST) திணித்து இந்திய அரசு அதிகாரத்திற்கு மாற்றினர். மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் மாநில அரசுக்கிருந்த உரிமையைப் பறித்து, இந்திய அரசு நடத்தும் நுழைவுத் தேர்வான “நீட்” ஐத் திணித்தனர். பின்னர் இவற்றையெல்லாம் தீவிரமாகச் செயல்படுத்தியது காங்கிரசின் அரசியல் தம்பியான பா.ச.க. ஆட்சி!

இந்திய அரசின் காவல்துறை (CBI), மாநில அரசுகளின் அனுமதி இல்லாமல், மாநிலங்களில் எந்தக் குற்ற வழக்கிலும் ஈடுபடக்கூடாது என்று இருந்த தடையை நீக்கி, மாநில அரசின் அனுமதி பெறாமல் நுழைந்து கைது செய்து வழக்கு நடத்தும் அதிகாரம் கொண்ட தேசியப் புலனாய்வு முகமை (NIA) என்ற அமைப்பை உருவாக்கியது காங்கிரசு-தி.மு.க. கூட்டணி ஆட்சி.

தமிழ்நாட்டு வயல்களில் என்ன நெல் விதைப்பது, அதற்கு என்ன விலை வைப்பது என்பது எல்லாம் புதுதில்லி ஆதிக்கத்திற்குப் போய்விட்டன.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு களின், மேலதிகார எசமானர்களாக நியமன அதிகாரிகளான ஆளுநர்கள் செயல்பட, இந்திய அரசமைப்புச் சட்ட உறுப்புகள் 153, 154 தொடங்கி பல விதிகள் இருக்கின்றன! இப்போது பா.ச.க. அரசு அந்த ஆளுநர் ஆதிக்கத்தைத் தீவிரப்படுத்தி உள்ளது.

மேலும், இந்தி, சமற்கிருதத் திணிப்புகள் தமிழ்நாட்டில் தீவிரம் பெற்றுள்ளன. அதற் காகவே சி.பி.எஸ்.இ. பள்ளிகள் ஏராளமாகத் திறக்கப்படுகின்றன. இந்திய அரசுத் திட் டங்கள் – சட்டங்கள் அனைத்தும் இந்தி – சமற்கிருதப் பெயர்களில் வருகின்றன. தமிழ் புறக்கணிக்கப்படுகிறது. புதிய கல்விக் கொள்கை இந்தியைக் கட்டாயமாக்கி உள்ளது.

தமிழ்நாட்டையே மூன்று ஒன்றியப் பிரதேசங் களாகப் பிரித்துச் சிதைத்து விடும் திட்டம் ஆர்.எஸ்.எஸ். வசம் உள்ளது. அப்படி நடந்தால் “எங்களுக்கு மூன்று முதலமைச்சர்கள் கிடைப்பார்கள்” என்று திராவிட முகாம் குதூகலிக்கும்!

இந்த நிலையில், தமிழ்நாட்டைக் காக்க – தமிழ்நாட்டிற்குரிய தேசிய இன உரிமைகளை மீட்க, வழிவகைகள் ஆராயும் நோக்கில், தஞ்சை யில் இந்தக் “கூட்டரசுக் கோட்பாடு” மாநாடு 10.5.2025 அன்று முழுநாள் நிகழ்வாக நடக்கிறது!

முற்பகல் இலக்கியக் கருத்தரங்கில், “தமிழர் தொன்மையும், வன்மையும்” என்ற தலைப்பில் பேரா. முனைவர் கோ. தெய்வநாயகம் அவர்களும், “தமிழ் - தமிழர் மறுமலர்ச்சியில் மதுரை (1901), கரந்தை (1911) தமிழ்ச்சங்கங்கள்” என்ற தலைப்பில் பேரா. முனைவர் மு. இளமுருகன் அவர்களும், “தமிழர் ஆன்மிக மொழி தமிழே” என்ற தலைப்பில் வடகுரு மடாதிபதி குச்சனூர்க் கிழார் அவர்களும், “தமிழ் மன்னர்களின் நிலதான அறமும் – அவதூறுகளும்” என்ற தலைப்பில் ஆய்வுச் செம்மல் இரா. மன்னர் மன்னன் அவர்களும் உரையாற்றுகின்றனர்.

மாலை நடைபெறும் கூட்டரசுக் கருத்தரங்கில் “வரிவிதித்து வசூலித்தல்” என்ற தலைப்பில் த.தே,பே. துணைப் பொதுச் செயலாளர் க. அருணபாரதி அவர்களும், “ஆட்சி மொழி” என்ற தலைப்பில் நாம்தமிழர் கட்சியின் இளை ஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் இடும் பாவனம் கார்த்திக் அவர்களும், “உள்ளாட்சியில் தன்னாட்சி” என்ற தலைப்பில் “தன்னாட்சி” அமைப்பின் துணைத் தலைவர் நந்தகுமார் சிவா அவர்களும், “உண்மையான கூட்டரசில் ஆளுநர் பதவி உண்டா?” என்ற தலைப்பில் வழக்கறிஞர் மு. செந்தமிழ்ச் செல்வி அவர்களும் உரையாற்றுகின்றனர்.

தமிழர்கள் வெளிநாடுகளில் இருந்து முதலில் சிந்துச் சமவெளிக்கும், அங்கிருந்து தமிழ் நாட்டிற்கும் குடியேறிய வந்தேறிகள் என்று ஆர். பாலகிருஷ்ணன் எழுதியுள்ள “சிந்துவிலிருந்து வைகை வரை” என்ற நூலுக்கு மறுப்பாகவும், சிந்துவெளி மற்றும் குமரிக் கண்ட தமிழர் குறித்த முழு ஆய்வாகவும் தக்கார் ம.சோ. விக்டர் அவர்கள் எழுதியுள்ள “பஃறுளியிலிருந்து சிந்துவரை” என்ற நூல் இம் மாநாட்டில் வெளியிடப்படுகிறது.

“தமிழ் மேல் ஆணை” என்ற தலைப்பில் பாவலர் கவிபாஸ்கர் தலைமையில் ஆற்றல்மிகு பாவலர்களின் பாவரங்கம், தமிழர் மரபுக்கலை விற்பன்னர்களின் நாட்டுப்புற இசை, மள்ளர் கம்பம் முதலிய நிகழ்வுகளும் இடம்பெறுகின்றன. என்னரும் தமிழர்களே! வாருங்கள் தஞ்சைக்கு!

எந்தத் தஞ்சைக்கு? பிற்காலச் சோழ மன்னர்கள் தங்கள் பேரரசைக் கூட்டரசாக நிர்வகித்த தஞ்சைக்கு! பிற்காலச் சோழர்கள் வரலாற்றை ஆய்வு செய்த ஜப்பான் நாட்டு அறிஞர் நொபுரு கராசிமா, “சோழப் பேரரசர்கள் ஒற்றை அதிகார மைய ஆட்சியை நடத்தவில்லை. சிற்றரசுகளுக்கு முழு அதிகாரம் கொடுத்து ஒரு கூட்டரசை (Segmentary State) நடத்தினர்” என்று பதிவு செய்துள்ளார்.

சோழர்கள் கூட்டரசுக்கு மட்டும் முன்னோடிகள் அல்லர்; உள்ளாட்சி – ஊராட்சி சனநாயகத்திற்கும் முன்னோடிகள்! சோழர்கள் ஆட்சியில் குடவோலை முறை மூலம் ஊராட்சி நிர்வாகிகளைத் தேர்வு செய்தனர் ஊர்மக்கள்!

அப்படிப்பட்ட தஞ்சை மண்ணுக்கு – தமிழ் மண்ணுக்கு வாருங்கள்! தமிழ் நாட்டு உரிமைகளை மீட்டெடுக்க, கூட்டரசுக் கோரிக்கைகளை வகுப்போம்! .

===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
==============================

Labels: , , , ,

"கூட்டரசு மாநாட்டிற்குக் கொள்கைப் பிடிப்பால் கூட்டெழுச்சி!" ---- பெ. மணியரசன் தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்

Wednesday, May 7, 2025


கூட்டரசு மாநாட்டிற்குக்

கொள்கைப் பிடிப்பால் கூட்டெழுச்சி!
==================================================
பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=====================================================


தஞ்சையில் 10-5-2025 அன்று நடைபெற உள்ள “கூட்டரசுக் கோட்பாடு” சிறப்பு மாநாடு பெருமளவில் தமிழ் நாட்டுத் தமிழர்களின் - பன்னாட்டுத் தமிழர்களின் - கவனத்தை ஈர்த்திருக்கிறது.

இவ்வாறு இம் மாநாட்டுச் செய்தி பரவி இருப்பதற்கு முதன்மையான காரணங்கள் இரண்டு:
ஒன்று, பன்னாட்டுத் தமிழர்களின் தலைமைத் தாயகமாக விளங்கக்கூடிய தமிழ்நாட்டில் - தமிழ், தமிழினம், தமிழர் தாயகம் இம் மூன்றின் உரிமைகளும் பறிக்கப்பட்டும் , சீரழிக்கப்பட்டும், சிதைக்கப்பட்டும் கிடக்கும் அவலம்!

இன்னொன்று, இம்மாநாட்டை முன்னெடுத்த தமிழ்த்தேசியப் பேரியக்கத்தினரும், தோழமை இயக்கங்களைச் சேர்ந்தோரும், இவர்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட இன உணர்வாளர்களும் அவரவர் பங்கிற்கு இம்மாநாட்டுச் செய்திகளையும், இதன் தேவையையும் பரப்பி வரும் பாங்கும், அக்கறையும்!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள், பொறுப்பாளர்கள் தமிழ்நாடு தழுவிய அளவில், அங்கங்கே தன்னெழுச்சியாக மாநாட்டுப் பணிகள் ஆற்றிவருகிறார்கள்! மாநாட்டிற்குத் திரளாகத் தமிழின உணர்வாளர்களை - ஆண்கள் - பெண்கள் - இளையோர் - முதியோர் என அனைத்துத் தரப்பினரையும் அழைத்துவர முயற்சிகள் எடுத்து வருகிறார்கள்.

எண்ணிப்பாருங்கள்! எவ்வளவு பெரும் கட்சியாக இருந்தாலும் வாடகை உந்துகளில் வாடகைக்கு மக்களை ஏற்றி வரும் காலம் இது!
உண்மையான ஓர் இலட்சியம் மக்களின் மனதைக் கவ்விவிட்டால், அது சிந்தனை வடிவம் கடந்து, மக்கள் ஆற்றலாய் பருண்மை வடிவில் பாய்ச்சல் கொள்ளும் என்பார் காரல் மார்க்ஸ்!
அப்படித்தான், தமிழ்த்தேசியம் என்ற சிந்தனை தமிழர்களின் வடிவில் மனித ஆற்றலாக வெளிப்படுகிறது!
தமிழ்த்தேசியம் வேறு, தமிழன், தமிழச்சி வேறல்ல; பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் குருதியில், தமிழர் மனத்தில் எழுந்தது தமிழ்த்தேசியம்!
தமிழ்நாடு, தமிழகம் என்று சங்க இலக்கியங்கள், பரிபாடல், புறநானூறு, அகநானூறு போன்றவை கூறுகின்றன!

அப்போதென்ன ஒற்றைத் தமிழ் அரசா தமிழ்நாடு முழுமைக்கும் நிலவியது? இல்லை! மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே “தேசம் (Nation) “வரையறுத்த மூதறிஞர்கள் தமிழர்கள்! தமிழ் பேசப்படாத அயல் நாடுகளையும், அதனதன் பெயரில் தேசம் என்றார்கள்! அவற்றை தமிழ் பேசப்படாத “மொழி பெயர் தேயம்” - அயல்தேசம் என்று ஏற்றவர்கள் தமிழர்கள்!

நம்முடைய முதல் தமிழ்த்தேசியக் காப்பியம், சிலப்பதிகாரம்! நம்முதல் தமிழ்த்தேசியப் பாவலர் இளங்கோவடிகள்! அவர் வாழ்ந்த காலத்தில் தமிழ் மன்னர்களான சேர - சோழ - பாண்டியர்கள் கூடிக் குலாவிக் கொண்டா இருந்தார்கள்? முரண்பாடுகள், முனுமுனுப்புகள், மோதல்கள் கொண்ட தனித்தனி தமிழ் அரசுகள் சேர - சோழ - பாண்டிய அரசுகள்! அவர்கள் சேர்ந்திருந்த காலம் மிகச் சிறிது!
மூன்று தமிழ் அரசுகளையும் இணக்கமாக ஒன்றிணைத்து, மூன்று நாட்டையும் சமமாகப் பாராட்டி சிலப்பதிகாரம் என்ற காப்பியம் வடித்தார் - நம் தமிழ்த்தேசியப் பெரும்பாவலர் - பிறப்பால் இளவரசர் - இளங்கோவடிகள்!

“இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய”வர் இளங்கோவடிகள்!
எந்திர முதலாளிகள் சந்தையில் உருவாக்கியதே “தேசியம்” என்று மாரக்சிய அறிஞர்கள் கூறியது தமிழ் இனத்திற்குப் பொருந்தாது!
“தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற தாயென்று கும்பிடடி பாப்பா” என்றார் பாரதியார்!
“இனத்தைச் செய்தது மொழிதான் - இனத்தின் மனத்தைச் செய்தது மொழிதான்” என்று மிகச் சரியாகச் சொன்னார் பாவேந்தர் பாரதிதாசன்!
மொழி-இனம்-தாயகம் மூன்றும் இயற்கையின் படைப்பு; வரலாற்றின் வடிவமைப்பு!

இந்த வரையறுப்பு எத்தனை இனங்களுக்குப் பொருந்துகிறது என்று சிலர் கேட்கக் கூடும்!
“எங்களுக்குப் பொருந்துகிறது; நாங்கள் மிடுக்கோடு, கம்பீரமாகச் சொல்கிறோம்” என்று கூறுங்கள் தமிழ்ப் பிள்ளைகளே!

இந்த வரையறை மற்ற இனங்களுக்குப் பொருந்தவில்லை என்றால் அவர்கள் மாற்றாக ஒன்றைக் கூறிக் கொள்ளட்டும். தமிழர்கள் மற்ற இனங்களைக் குறைவாக - இழிவாகப் பேசுவதில்லை! எங்களை இழிவுபடுத்தியோரை ஒருவேளை எங்களவர்களும் இழிவு படுத்தியிருக்கலாம்! நாம் மற்ற இனங்களை ஒரு போதும் குறைவாகக் கூறுவதில்லை.
காலங்காலமாகத் தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் - பிற மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட - மக்களை நாம் அயலாராகக் கருதவில்லை. அவர்களும் மண்ணின் மக்களே! ஆந்திராவில், தெலுங்கானாவில் தெலுங்கு தேசியம், கர்நாடகாவில் கன்னட தேசியம், கேரளத்தில் மலையாள தேசியம் மேலாண்மை செலுத்துவது போல் தமிழ்நாட்டில் தமிழ்த்தேசியம் தலைமை தாங்க வேண்டும் என்கிறோம். தமிழ்த்தேசியம் அனைவரையும் அரவணக்கும்! அதே வேளை, அயலாருக்கு அடிமையாவதை வெறுக்கும்!

*அன்பான தமிழர்களே!*
===========================

தஞ்சை மாநாட்டிற்கு ஊர்திகளில் வரும்போது கவனமாக வாருங்கள். நாம் ஊர்திகளில் வருவது பயணமே தவிர, பந்தயம் அல்ல!
கவனத்துடன் வாருங்கள்.

8.5.2025 அன்புடன்,
*(பெ.மணியரசன்)*

*நிகழ்வுகள்*
=============
மாநாடு காலை 9.00 மணிக்கு, தமிழ்த்தேசியப் பேரியக்கக் கொடியை செயற்குழு உறுப்பினர் தோழர் பழ. இராசேந்திரன் ஏற்றி வைப்பதுடன் தொடங்குகிறது.
சிறப்பான இரு கருத்தரங்குகள்
“தமிழர் தொன்மையும் வன்மையும்” என்ற தலைப்பில் ஆய்வறிஞர், முனைவர் கோ. தெய்வநாயகம் பேசுகிறார். “தமிழ் - தமிழர் மறுமலர்ச்சியில் தமிழ்ச் சங்கங்களின் - மதுரை (1901), கரந்தை (1911) – பங்களிப்பு” என்ற தலைப்பில் பேராசிரியர் முனைவர் மு. இளமுருகன் உரையாற்றுகிறார். “தமிழர் ஆன்மிகமொழி தமிழே” என்ற தலைப்பில் வடகுரு மடாதிபதி குச்சனூர் கிழார் பேசுகிறார். “தமிழ் மன்னர்களின் நிலதான அறமும் - அவதூறும்” என்ற தலைப்பில் தமிழிய வரலாற்று ஆய்வாளர் இரா. மன்னர் மன்னன் பேசுகிறார்!
“தமிழ் மேல் ஆணை” என்ற தலைப்பில் நடைபெறும் பாவரங்கு திரைப் பாவலர் கவிபாஸ்கர் தலைமையில் நடைபெறுகிறது. பாவலர்கள் மூ.த. கவித்துவன், நா. இராசாரகுநாதன், முழுநிலவன், பிரகாசுபாரதி ஆகிய பாவலர்கள் பாவீச்சு தருகிறார்கள்.
புயல் கிளப்பும் புதுநூல் வெளியீடு
ஆய்வாளர் தக்கார் ம.சோ.விக்டர் அவர்கள் எழுதியுள்ள “பஃறுளி முதல் சிந்து வரை” (ஆர். பாலகிருஷ்ணன் இ.ஆ.ப. வின் சிந்தரிவிலிருந்து வைகைவரை நூலுக்கு மறுப்பு) என்ற புத்தம் புது நூல் வெளியிடப்படுகிறது.
இந்நூலை ராவணா வலையொலி நிறுவனர், திரு. ஏகலைவன் அவர்கள் வெளியிடுகிறார்.
அடுத்து “கூட்டரசுக் கருத்தரங்கம்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் துணைப் பொதுச் செயலாளர் தோழர் க. அருணபாரதி - “வரிவிதித்து வசூலித்தல்” என்ற தலைப்பில் பேசுகிறார். “ஆட்சி மொழி” என்ற தலைப்பில் நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் தம்பி இடும்பாவனம் கார்த்தி பேசுகிறார். “உள்ளாட்சியில் தன்னாட்சி” என்ற தலைப்பில் இத்துறையில் களச் செயல்பாட்டாளராகத் திகழும் தன்னாட்சி அமைப்பின் துணைத் தலைவர் நந்தகுமார் சிவா பேசுகிறார். “கூட்டரசில் ஆளுநர் பதவி” என்ற நெருக்கடியான தலைப்பில் மகளிர் ஆயப் பொதுச் செயலாளர், வழக்கறிஞர் மு. செந்தமிழ்ச்செல்வி பேசுகிறார். த.தே.பே. பூதலூர் ஒன்றியச் செயலாளர் தோழர் பி. தென்னவன் நெறியாள்கை செய்கிறார்.
மிகமிக முகாமையான பல தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன.

*நிறைவரங்கம்!*
================
மாநாட்டின் நிறைவரங்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் எழுச்சி நாயகர் செந்தமிழன் சீமான் அவர்களும், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச் செயலாளர் விடிவெள்ளிச் சிந்தனையாளர் கி. வெங்கட்ராமன் அவர்களும், நானும் (தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன்) பேசுகிறோம்.
தமிழர் வரலாற்றுக் கண்காட்சி, தமிழ்த்தேசியப் பேரியக்க வரலாற்றுக் கண்காட்சி என இரு கண்காட்சி அரங்குகள் திறக்கப்படுகின்றன. பன்மைவெளி புத்தக விற்பனை அரங்கம் செயல்படுகிறது.
சிலம்பாட்டம், மல்லர் கம்பம், மரபு இசை முதலிய கலைநிகழ்ச்சிகள் மேடையில் களைகட்ட உள்ளன!
பன்முகச் செழிப்போடு, கூட்டரசுச் சிறப்பு மாநாடு நடைபெறுகிறது.
வாருங்கள் தமிழர்களே!

===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam

ஊடகம் : www.kannottam.com

இணையம் : www.tamizhdesiyam.com

சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam

காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

==============================

Labels: , , , ,


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்