<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d6955529389241309188\x26blogName\x3d%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86.%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://thozharmaniyarasan.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com/\x26vt\x3d-8408640130511538487', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>
Tuesday, August 1, 2023


 *ஆரிய மனுவின் திராவிடமே திமுகவின் ஆயுதமாம்! அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகிறார்*

=======================================
ஐயா *பெ. மணியரசன்*,
தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
=======================================


ஆளுநர் ஆர்.எஸ்.எஸ். இரவியின் காலனியாதிக்கக் கலாட்டாக்களைக் கண்டிக்க வந்த அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள், திராவிடத்தின் “சிறப்புகளை“ வர்ணித்துள்ளார்.

ஆளுநர் இரவியை நீக்க வேண்டும்; அடுத்து ஆளுநர் பதவியையே நீக்க வேண்டும் என்பது தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் கோரிக்கையாகும்.

“இரவியை நீக்க வேண்டும்“ என்பதோடு திமுக நிறுத்திக் கொள்கிறது. இப்போது அதுவும் வேண்டாம், இரவி இருந்து எங்களுக்கு எதிராகப் பேசினால் எங்கள் கழகத்திற்கும் அரசுக்கும் ஆதரவு மேலும்மேலும் பெருகும் என்று தமது அறிக்கையில் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். அவரது 31.7.2023 நாளிட்ட அறிக்கையை அதே நாளில் தமிழ்நாடு அரசின் மக்கள் செய்தித் தொடர்புத்துறை வெளியிட்டது.

இரவியை எதிர்ப்பது போல் காட்டிக் கொண்டு, இரவியை நீக்க வேண்டாம் என்று கோருவது நையாண்டி விமர்சனமா அல்லது திரைமறைவு சரணாகதியா என்பது புரியவில்லை. அது போகட்டும்!

இந்தச் சந்தடியில் திராவிடப் புராணத்திற்குப் புத்துயிர் ஊட்டும் வேலையிலும் இறங்கியுள்ளார் தங்கம் தென்னரசு. திராவிடத்தைத் திணிப்பதன் நோக்கம், தமிழை, தமிழனை மறைப்பது; ஆந்திரம், கர்நாடகம், கேரளம் முதலியவற்றின் கலப்படச் சரக்கை விற்பது என்பதே!.

”திராவிடம்’ என்ற சொல் ஒரு காலத்தில் இடத்தின் பெயராக, இனத்தின் பெயராக, மொழியின் பெயராக இருந்தது. இன்று அது அரசியல் கோட்பாட்டின் பெயராக இருக்கிறது” என்று கூறியுள்ளார். இன்று ஏன் ”திராவிடம்” இடத்தின் பெயராக, இனத்தின் பெயராக, மொழியின் பெயராக இல்லை? ஆந்திரம், கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு சேர்ந்தது திராவிடம் என்று சொன்னால், தெலுங்கர்களும், கன்னடர்களும், மலையாளிகளும், திமுக தலைமையின் செவிப்பறை கிழியும் அளவிற்கு எதிர்ப்புக் கூச்சல் எழுப்புவார்கள்.

தமிழ்நாட்டிலும் பழைய காலம் இல்லை! “திராவிடம் என்று சொல்லாதே, தமிழினத்தை மறைக்காதே”, “திராவிடம் என்று சொல்லாதே, தாய்த் தமிழைக் கொல்லாதே!“ என்றெல்லாம் முழங்கும் தமிழ்த்தேசியர்கள் வலுவாக வளர்ந்து விட்டார்கள்! எனவே, திராவிட முகத்திரையை பழங்காலம் போல் விற்க முடியவில்லை.
திராவிடம் என்பது அரசியல் கோட்பாட்டு வடிவம் என்கிறார் அமைச்சர்! திராவிடம் அந்தரங்கத்தில் தமிழ் இனச் சிதைப்பு, தமிழ்மொழி மறைப்பு, தமிழர் தாயக மறுப்பு என்பதைத் தமிழர்கள் கண்டு கொண்டார்கள்.
திராவிடத்தின் பிதாமகர் பெரியார், ”திராவிடர்” என்ற செயற்கை இனப் பெயரை ஏன் கண்டடைந்தார் என்ற உண்மையை அவரே போட்டு உடைத்துவிட்டார். சென்னை மாகாணத்தில் தமிழர்கள் மட்டுமா வாழ்கிறார்கள்? தெலுங்கர், கன்னடர், மலையாளிகள் வாழ்கிறார்கள்! அவர்களுக்கும் தாயகம் தமிழ்நாடு. அவர்களின் இன அடிடையாளங்களையும் கொண்டதாக ஒரு பொதுவான இனப் பெயர் வேண்டும்; நாட்டுப் பெயர் வேண்டும்; அதற்கு விசயநகர நாயக்கர் ஆட்சியில் தெலுங்கு பிராமணர்கள் தமிழ்நாட்டில் பிரபலப்படுத்திய ”திராவிட” என்ற சொல்லை எடுத்துக் கொள்ளலாம் என்று பெரியார் முடிவு செய்துவிட்டார். இதோ அவரே கூறுகிறார்:

“தென்னிந்தியப் பெருங்குடி மக்களுக்கு இலட்சியச் சொல் ஒன்றில்லாமல் இருப்பது பெருங்கேடு. இந்தக் காரணத்தாலேயும் (பார்ப்பனர்) ”அல்லதார்” என்ற பட்டம் நமக்குக் கூடாது என்பதாலேயும், நாமெல்லாம் ஒரு கூட்டிற்குள் வரவேண்டும் என்பதாலேயும் ஒரு குறிச்சொல் தேவை; மிகமிகத் தேவை. இதைப் பலநாட்களாகக் கூறிவருகிறேன்.

“நாம் இந்தியர்“ என்பதை மறுக்கிறபடியாலும், இன உணர்ச்சியும், எழுச்சியும் பெற வேண்டுவதாலும் “திராவிடர்” என்னும் பெயரைக் கொண்டோம்.”
.........

“திராவிடச் சமுதாயம் என்று நம்மைக் கூறிக் கொள்ளவே கஷ்டமாயிருக்கும்போது தமிழர் என்று எல்லாரையும் ஒற்றுமையாக்க முயற்சி எடுத்தால் கஷ்டங்கள் அதிகமாகும். இங்கேயே பாருங்கள்! (சேலம் செவ்வாய்ப்பேட்டை பொதுக் கூட்டத்தில்-16.1.1944 அன்று பேசியது – பெ.ம.) கண்ணப்பர் தெலுங்கர், நான் கன்னடியன், தோழர் அண்ணாதுரை தமிழர். இனி எங்களுக்குள் ஆயிரம் சாதிப்பிரிவுகள். எனவே திராவிடச் சமுதாயத்தினர்கள் நாம், நம்நாடு திராவிட நாடு என்று வரையறுத்துக் கொள்வதில் இவர்களுக்கு ஆட்சேபனை இருக்காது.”
-பெரியார் ஈ.வே.ரா. சிந்தனைகள் -1, பதிப்பாசிரியர் வே. ஆனைமுத்து, முதற்பதிப்பு-1974. பக்கம் 543-550.

இம்முதல் தொகுப்பில் 543-550 பக்கங்களில் இன்னும்பல செய்திகள் திராவிடம்பற்றி இருக்கின்றன. இவை 1944-ஆம் ஆண்டு விருதுநகர், கும்பகோணம், சேலம் செவ்வாய்ப்பேட்டை, லால்குடி ஆகிய ஊர்களில் பெரியார் பேசியவை!

திராவிடம் என்ற சொல் எந்தக் காலத்திலும் தமிழ் இனத்தைக் குறிக்கப் பயன்பட்ட சொல் அன்று. நம்முடைய சங்க இலக்கியங்களிலும், காப்பிய இலக்கியங்களிலும், பக்தி இலக்கியங்களிலும் தமிழ், தமிழர், தமிழ்நாடு, தமிழகம் என்ற சொற்களே பயன்படுத்தப்பட்டுள்ளன. திராவிட என்ற சொல் விசய நகரத் தெலுங்கள் ஆட்சியில் பரப்பப்பட்டது. அக்காலத்தில், 18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தாயுமானவர் அவர்கள் நையாண்டியாக எழுதிய மெய்யியல் பாடலில் ”திராவிட” என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார். அப்போதும் அவர் தமிழ்வேறு, திராவிடம் வேறு என்று பிரித்துத்தான் பாடியுள்ளார்.

இது என்றால் அது என்பர்; அது என்றால் இது என்பர் என்று குதர்க்கம் செய்வோரை நையாண்டி செய்து தாயுமானவர் எழுதிய பாடல் இது:

”நவிலுவேன்; வடமொழியிலே
வல்லானொருத்தன் வரவும் திராவிடத்திலே
வந்ததா விவகரிப்பேன்
வல்ல தமிழறிஞர் வரின் அங்கனே வடமொழியின்
வசனங்கள் சிறிது புகல்வேன்”
- தாயுமானவர்

நீதிக் கட்சித் தவைர் பிட்டி தியாகராயர் திராவிடம் பேசியதாகக் கூறுகிறார், தங்கம் தென்னரசு. 1916-இல் அமைக்கப்பட்ட நீதிக் கட்சியின் அசல் பெயர் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் (South Indian Liberal Federation) என்பதாகும். திராவிடர் சங்கம் அல்ல!

நீதிக் கட்சித் தலைவர்கள் 1916-இல் கூடி அமைப்பை உருவாக்கியபோது வெளியிட்ட அறிக்கையின் பெயர் பிராமணரல்லாதார் கொள்கை அறிக்கை – Non Brahmins Manifesto என்பதாகும். அந்த அறிக்கையில் ஒரு இடத்தில்கூடத் ”திராவிட” என்ற சொல் காணப்படவில்லை. தமிழ் நாட்டைச் சேர்ந்த தெலுங்கர், கன்னடர் சிலர் திணித்த சொல்தான் ”திராவிட” என்பது. அத்திணிப்பின் ஆசானும் தலைமகனும் கன்னடத்தைத் தாய் மொழியாகக் கொண்ட பெரியாரே ஆவார்!

திராவிடம் என்ற அரசியல் கோட்பாட்டு வடிவம் என்பது பண்டித அயோத்திதாசர், பிட்டி தியாகராயர், டாக்டர் நடேசனார், டி.எம். நாயர், பெரியார், இரட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா, அண்ணா, பாரதிதாசன், கலைஞர் போன்றவர்களால் கடந்த நூறு ஆண்டுகளாக வளர்த்தெடுக்கப்பட்டது என்கிறார் தங்கம் தென்னரசு.

பிட்டி தியாகராயர் ”திராவிடம்” என்பதை அரசியல் கோட்பாட்டு வடிவமாகப் பார்த்தார் என்று கூறுவதற்குச் சான்றுகள் இல்லை. அயல் மொழியினரால் பரப்பப்பட்டிருந்த திராவிட என்ற சொல்லை – நடைமுறைப் பழக்கத்தின் அடிப்படையில் மட்டுமே பயன்படுத்தியவர்கள் அயோத்திதாசர், தாத்தா இரட்டைமலை சீனிவாசன், எம்.சி. ராஜா போன்ற தலைவர்கள்! அயோத்திதாசர் பின்னர் திராவிடர் என்பதைக் கைவிட்டு தமிழர் என்ற சொல்லைப் பயன்படுத்தினார். தமிழன் என்ற பெயரில் இதழ் நடத்தினார்.

பெரியாரின் பேச்சைக் கேட்டு இடைக்காலத்தில் திராவிடர் என்பதைப் பரப்பினார் பாவேந்தர் பாரதிதாசன்; அதற்காக வாதிட்டார். பின்னர் பாவேந்தரிடம் மாற்றம் வந்து தமிழ், தமிழர், தமிழ்நாடு என்பவற்றை மட்டுமே பயன்படுத்தினார். திராவிடத்தைக் கையாளவில்லை. பழைய கவிதைகளை மறுபதிப்புச் செய்யும்போது திராவிடநாடு, திராவிடர் என்று இருந்த சொற்களையெல்லாம், தமிழகம், தமிழ்நாடு, தமிழர் என்று மாற்றினார் என்று பாவேந்தர் ஆய்வாளர் இரா. இளவரசு அவர்கள் என்னிடம் நேரில் குறிப்பிட்டார். அவ்வாறு மாற்றப்பட்ட பாடல்கள் சிலவற்றையும் சொன்னார். அவர் வாழ்ந்த காலத்திலேயே அவர் கூறிய செய்திகளை “திராவிடம் தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா, வழிமாற்றியதா?” என்ற எனது நூலில் நான் குறிப்பிட்டேன்.

பெரியார், அண்ணா, கலைஞர் மூவரும் திராவிடத்தைத் திணிப்பதில், பரப்புவதில் திட்டமிட்டுச் செயல்பட்டார்கள்! இம்மூவரையும் விஞ்சும் அளவிற்கு இப்போது மு.க. ஸ்டாலின் திராவிடத்திணிப்பில் – தமிழ் மறைப்பில் தீவிரமாக உள்ளார் என்பது உண்மை!

திராவிடம் என்பது தனித்துவமான தத்துவம் என்பது போல் அமைச்சர் தங்கம் தென்னரசு புகழ்வது அவருக்கு அழகல்ல. ‘நல்ல தமிழ் உணர்வாளர், தமிழர்களின் பழம் பெருமைகளைத் தொல்லியல் துறை வழியாக மீட்பதில் ஆர்வம் உள்ளவர்’ என்று அறியப்பட்ட அவர், திராவிடத் திரிபைப் புகழ்வது சரியல்ல.

திராவிட மாடல் ஆட்சியின் அனைத்துச் சட்டமும் திட்டமும் அனைத்து மக்களுக்கும் பொதுவானது. யாரையும் பாகுபடுத்திப் பார்ப்பதில்லை என்கிறார் தென்னரசு. இவ்வாறான அறிக்கை எல்லாக்கட்சியும் வெளியிடுவதுதானே! இதில் தனித்த திராவிடத் தத்துவம் என்ன இருக்கிறது?

கடைசியில் திராவிடம் என்பதற்கு மனுதர்ம நூலில் சான்று காட்டுகிறார் தங்கம் தென்னரசு, சங்கத் தமிழ்நூல்களில், காப்பியங்களில், பக்தி இலக்கியங்களில் – தமிழில் - இருந்து சான்று காட்ட முடியாமல், - யாரையோ “திராவிட“ என்று மனு சொன்னதை கால்டுவெல் சான்று காட்டியதைப்போல், - அந்த மனுவையே சான்று காட்டுகிறார் தங்கம் தென்னரசு! திராவிட வாதம் என்பது மனுவாதத்தில் தனது கால்களைப் பதித்துள்ளது!

ஆரியரில் – சீரழிந்துபோன பல பிரினர் பெயர்களை கூறும்போது “திராவிட” என்ற பிரிவினரையும் கூறுகிறார் மனு! ஆரிய வர்ணத்தாரில் பிராமண, சத்திரிய, வைசிய பிரிவுகளில் உள்ளோர், வர்ணம் மாறி பாலுறவு கொண்டு பிறந்தவர்களின் பட்டியலை 10-ஆவது அத்தியாயத்தில் 33-ஆம் சூத்திரத்தில் பட்டியலிடுகிறார் மனு. அப்பட்டியலில், பௌண்ட்ரகாஷ், சௌட்ர த்ரவிடா, காம்போஜா யவநா, ஷகா, பாரதா, பஹ்ளவாஷ், சீநா, கிராதா, தரதா, கஷா என்போர். இவர்கள் சூத்திரர்கள்! ஆரிய இனத்துக்குள் ஏற்பட்ட சீரழிவுகளில் உருவானோரில் திராவிடர்கள் இருக்கிறார்கள் என்று மனு சொன்னால் தமிழர்களுக்கும் அதற்கும் என்ன உறவு இருக்கிறது? ஸ்ரீ ஆனந்த நாச்சியரம்மா உரையுடன் அவரால் பதிப்பிக்கப்பட்ட மனுநீதி என்னும் மனுதர்ம சாஸ்திரத்திலிருந்து (ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ், சென்னை 35) மேற்படி சூத்திரத்தையும் அதன் விளக்கத்தையும் எடுத்தேன்.

மொழி ஆய்வையும் இன ஆய்வையும் சான்றுகளுடன் ஒருங்கிணைக்கத் தெரியாத கால்டுவெல், மேற்படி மனுதர்ம சூத்திரத்தை மேற்கோள் காட்டித்தான் தமிழர்களுக்கு முந்தி திராவிட இனம் இருந்தது என்று கற்பனைக் கயிறு திரித்தார்!

மனுதர்மத்தைச் சான்று காட்டிச் சொல்வது தமிழின ஆய்வாக ஒருபோதும் இருக்காது! அது திராவிடத் தீவிரவாதிகளின் ஆய்வாகத்தான் இருக்கும்.

தமிழர்களே! நாம் பாசகவின் ஆரியத்துவா பாசிசத்தை முழுமையாக எதிர்க்க வேண்டும். ஆனால், அதேவேளை தமிழினத்தைச் சிதைக்கும் திராவிடத் திணிப்பை ஒரு போதும் ஏற்கக் கூடாது.

திராவிடம் என்பது கொச்சைச் சொல் என்பதைத் தங்கம் தென்னரசு ஏற்றுக் கொள்கிறார். தமிழர்களைக் கொச்சைப் படுத்துவதற்குப் பயன்படுத்திய ”திராவிடம்” என்ற சொல்லையே அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தியது திராவிட இயக்கம் என்கிறார். அப்படி என்றால், தமிழர்களைச் சூத்திரர்கள், மிலேச்சர்கள் என்று இழிவாக ஆரியவாதிகள் பயன்படுத்திய சொற்களை அப்படியே ஏற்கலாமா? ஆரியக் கொச்சை மொழிகள்தான் திராவிடத்தின் ஆணிவேர்! ஏனெனில் திராவிடத்திற்கென தனிமொழி, தனி இலக்கியம், தனித்தாயகம் எதுவும் இல்லை!

”தமிழ் என்பதை உச்சரிக்க முடியாதவர்கள், திரமிள எனத் திரிபாக அழைத்தார்கள். எனவே, தமிழ் என்பதும் திராவிடம் என்பதும் ஒன்றுதான்” என்கிறார் அமைச்சர் தங்கம் தென்னரசு. தமிழை உச்சரிக்கத் தெரியாத அயலார் திரமிள, திராவிட என்று உச்சரித்தால் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட நாம் ஏன் அப்படி உச்சரிக்க வேண்டும். ஆங்கிலேயன் தஞ்சாவூரை உச்சரிக்கத் தெரியாமல் ’டேஞ்சூர்’ என்றான். இன்று நாமும் தஞ்சாவூரை டெஞ்சூர் என்றுதான் சொல்ல வேண்டுமா? தமிழே திராவிடம் ஆனது என்னும் திரிபு வாதத்தைத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஏற்கவில்லை.

“கடந்த அரை நூற்றாண்டாக அரசியல் களத்தில் துடைத்தெறியப்பட்ட ஆரிய அரசியல் சக்திகள், தங்களது சாயம்போன சனாதனப் புத்தகங்களுக்கு ஆர்.என். ரவியை வைத்துப் புதிய பொழிப்புரை எழுத வைத்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று தங்கம் தென்னரசு தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். கடந்த 50 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் துடைத்தெறியப்பட்ட ஆரிய அரசியல் சக்திகள் யார்? காங்கிரசு ஆட்சிதானே துடைத்தெறியப்பட்டது! காங்கிரசு ஆரிய அரசியல் சக்தி என்பதில் தமிழ்த்தேசியப் பேரியக்கத்துக்கு மாற்றுக் கருத்தில்லை. அந்த ஆரிய சக்தியான காங்கிரசுடன்தானே தொடர்ந்து கூட்டணி வைத்துள்ளது திமுக! காங்கிரசுத் தலைமையில் ஆரியத்தை எதிர்க்கிறோம் என்று கூறுவது கபடநாடகம் இல்லையா? ‘நரியோடு நட்பு வைத்துக் கொண்டே ஆடுகளை பாதுகாக்கிறோம்’ என்பது போல் இல்லையா?

அரை நூற்றாண்டாகத் துடைத்து எறியப்பட்ட அரசியல் சக்திகள் என்று பிராமணர்களை மட்டும் கூறியதாகப் பொருள் கொள்ள வேண்டும் என்று திராவிடத்தார் சிலர் வாதிடக் கூடும். அப்படியென்றால், பிராமணர்களைப் பெயர் சொல்லி விமர்சிக்கத் திமுக தலைவர்களுக்கு இவ்வளவு அச்சம் ஏன்? இது என்ன பிராமணிய எதிர்ப்பு? தமிழ்த்தேசியர்களாகிய நாங்கள் பிராமணர்களை, பிராமணியத்தைப் பெயர் சொல்லித்தான் விமர்சிக்கிறோம்! பிராமணிய ஆதிக்கத்தின் ஒருகரு இரட்டையர்தான் காங்கிரசும் பாசகவும் என்கிறோம்!

பெரியாரே பிராமணியக் கட்சியான காங்கிரசின் ஆட்சியை 1954-இல் இருந்து 1967 வரை ஆதரித்து, திமுகவை முதல் எதிரியாக எதிர்த்து வந்தார்! காங்கிரசு 1967-இல் தோற்று திமுக வென்றபின்தான் திமுகவை ஆதரிக்கத் தொடங்கினார். ஆரியத்தின் அடுத்த வீட்டுப் பங்காளிதான் திராவிடம் என்பதைத் தமிழர்கள் அடையாளம் காண வேண்டும்.

ஆரியம் உருவாக்கிய சொல்தான் திராவிடம். திராவிடத்தைப் புறக்ணிப்போம். தமிழ், தமிழர், தமிழ்நாடு எனக் குழப்பமில்லாமல் முழங்குவோம்!

நாள்: 2.8.2023

=================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
=================================

Labels: , , ,

0கருத்துக்கள்:

Post a Comment

<< முகப்பு பக்கம்


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்